ஒரு அரசியல்வியாதியினால் ஒரு மிடில் கிளாஸ் மாதவனுக்கு நேர்ந்த கதி..!

03-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'மிடில் கிளாஸ் மாதவன்கள்' என்று எள்ளி நகையாடப்படும் நடுத்தர வர்க்கம் அதிகார வர்க்கத்தையும், அரசியல்வியாதிகளையும் எதிர்த்து போராட ஒரே ஒரு வழிதான் உண்டு. அது நேர்மையாக சட்டப் புத்தகங்கள் வழியாகச் செய்யப்படும் நீதி கேட்டல். ஆனால் இதுகூட அவ்வளவு சுலபமில்லை..! சட்டம்கூட அதிகார வர்க்கத்தினருக்கும், அரசியல்வியாதிகளுக்கு மட்டுமே வளைந்து கொடுக்கிறது என்பதை பல உதாரணங்களில் நீங்கள் படித்திருப்பீர்கள். இந்தக் கதையும் அதே போன்றதுதான்.!

சமீபத்தில் வழக்கறிஞரும், நடிகருமான கராத்தே வெங்கடேசனை சந்திக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது அவர் அறிமுகப்படுத்தி வைத்த நபர்தான் திரு.சுந்தர்ராஜன். சென்னை, மேற்கு மாம்பலத்தில்  அரசுடமையாக்கப்பட்ட வங்கியொன்றில் கேஷியராகப் பணியாற்றி வருகிறார்.

இவருடைய வீடு சைதாப்பேட்டையில் உள்ளது. சொந்த ஊர் திண்டுக்கல். நம்ம ஊராச்சே என்று நெருங்கி விசாரித்தபோது அவர் வெங்கடேசனை சந்திக்க வந்த ஒரு அப்பாவி புகார்தாரர் என்பது தெரிந்தது. மேலும் நெருக்கி விசாரித்தபோது வக்கீல் வெங்கேடசனை பார்க்க வந்த சோகக் கதையும் தெரித்தது..! நிசமாகவே சோகம்தான்..! இது நடந்தது 2006-ம் வருடம்..!

சைதாப்பேட்டையில் சுந்தர்ராஜன் வசித்து வந்த குடியிருப்பின் மாடியில் இன்னுமொரு பிளாட்டும் இவருக்குச் சொந்தமாக இருந்துவந்தது. அந்த மாடி பிளாட் வீட்டை மட்டும் விற்றுவிடலாம் என்றெண்ணி அதற்கேற்ற ஆட்களைத் தேடியிருக்கிறார். அப்படி வந்து சிக்கியவர்தான் மாரியப்பன். சென்னையில் அரசு டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் இவர். சுந்தர்ராஜனின் வீட்டை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கிறார் மாரியப்பன்.

இவர் தி.மு.க.காரர் என்பது தெரிந்திருந்தும், அரசியல்வியாதிகளில் ஒருவர்தான் என்று தெரிந்திருந்தும் டீலிங் பேசியிருக்கிறார் சுந்தர்ராஜன். இதற்கான ஒரே காரணம் இந்த மாரியப்பனும் திண்டுக்கல்காரர்தான்.. ஒரே ஊர்க்காரர்தானே.. பிரச்சினையிருக்காது என்று நினைத்துவிட்டார் இந்த அப்பாவி..!

அது சிங்கிள் பெட்ரூம் வீடு.. சிறிய வீடு என்பதாலும் வீட்டின் மதிப்பு 11 லட்சம் ரூபாய் என்று 2006, ஜூன் மாதம் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதில் ஒன்றரை லட்சம் ரூபாயை முன் பணமாகவும் கொடுத்துவிட்டார் மாரியப்பன். அதன் பின்பு மிக விரைவில் மீதித் தொகையையும் தந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். இந்த நேரத்தில் மாரியப்பனும், அவரது மனைவியும் அடிக்கடி இவரது வீட்டிற்கு வந்து சென்றதில், சுந்தர்ராஜனுக்கும் அவர்கள் மீது நல்ல நம்பிக்கை வந்துவிட்டது.

ஒரு நாள் சுந்தர்ராஜனும், அவரது மனைவியும் வெளியூர் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் மாரியப்பன் அங்கே வந்திருக்கிறார். தான் அவருடைய வீட்டை வாங்க வேண்டி வங்கியில் கடன் கேட்டிருப்பதாகவும், கடன் கொடுக்க வேண்டிய மேனேஜரும், வங்கி அதிகாரிகளும் வீட்டைப் பார்த்த பின்புதான் கடனை வழங்க முடியும் என்று சொல்லிவிட்டதால் நாளை அவர்களை அழைத்து வருவதாகச் சொல்லியிருக்கிறார்..!

சுந்தர்ராஜனோ தான் இப்போது அவசரமாக வெளியூர் செல்வதால் தான் வந்த பின்பு அவர்களை வரச் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் மாரியப்பனோ, “வங்கி அதிகாரிகளை அவர்கள் சொல்லும் நாட்களில்தான் அழைத்த வர முடியும். இல்லையெனில் பணம் கிடைக்காது. உங்களுக்கும் சிரமமாகிவிடும். எனக்கும் பணம் புரட்டச் சிக்கலாகிவிடும்” என்று கெஞ்சியிருக்கிறார்.

சரி.. இத்தனை நாட்கள் பழகியிருக்காரே.. நல்லவராகத் தெரிகிறாரே என்கிற எண்ணத்தில் சுந்தர்ராஜன் எடுத்த அந்த ஒரே ஒரு நிமிட முடிவுதான், இன்றுவரையிலும் அவரையும், அவரது குடும்பத்தினரையும் நிம்மதி இழக்கச் செய்திருக்கிறது.

மேல் வீட்டுச் சாவியை எடுத்து மாரியப்பனின் கையில் கொடுத்து, “நாங்கள் ஊருக்குப் போகிறோம். நீங்க பேங்க் மேனேஜரை கூட்டிட்டு வந்து வீட்டைச் சுத்திக் காட்டிட்டு போயிருங்க. நான் ஊர்ல இருந்து வந்ததும் உங்ககிட்ட வந்து சாவியை வாங்கிக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

மாரியப்பன் பக்காவான முன் ஏற்பாட்டுடன்தான் செயல்பட்டிருக்கிறார் என்பது இந்த அப்பாவி மிடில் கிளாஸுக்கு புரியவில்லை. ஊருக்குப் போய் திரும்பி வந்த சுந்தர்ராஜனின் குடும்பத்தினரை குடியிருப்பில் இருந்த மாரியப்பனின் மனைவியே, “வாங்க.. வாங்க.. எப்ப வந்தீங்க..?” என்று மிக கேஷுவலாக வரவேற்றிருக்கிறார்.

தூக்கிவாரிப் போட்டிருக்கிறது சுந்தர்ராஜனின் குடும்பத்தினருக்கு.. மற்றக் குடித்தனக்காரர்கள் விஷயத்தைச் சொன்னவுடன் அவருக்கு நெஞ்சு வலி வராத குறைதான்.. விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சுந்தர்ராஜனின் மாடி பிளாட்டில், மாரியப்பன் தனது குடும்பத்தோடும், அனைத்து தட்டு முட்டுச் சாமான்களோடும்  குடியேறியிருந்தார்.

சாவி கொடுத்தது சுந்தர்ராஜன் என்பதோடு, “எனது வீட்டை இவர் வாங்கியுள்ளார்” என்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் ஏற்கெனவே அறிமுகப்படுத்தி வைத்திருந்ததால், எந்த எதிர்ப்பும் இல்லாமல் குடியேறியிருக்கிறார் மாரியப்பன்..! இந்தச் சம்பவம் நடந்தது 2006 அக்டோபர் மாதம்..!

செய்தி கேட்டு சுந்தர்ராஜன் பதற்றத்தோடு விளக்கம் கேட்க, மாரியப்பனோ கொஞ்சமும் டென்ஷன் படாமல் “உள்ள வாங்க.. உக்காந்து பேசுவோம்..” என்று தனது புதிய வீட்டில் அமர வைத்து தான் ஏதோ சைதாப்பேட்டை தொகுதிக்கே ஜனாதிபதி என்பது போன்ற தோரணையை மாற்றிப் பேசியிருக்கிறார்.

“பேங்க் மேனேஜர் வர்றதுக்கு முன்னாடியே பேங்க்ல இருந்த புரோக்கர்கள்கிட்ட கேட்டேன். அவங்க நீங்க அந்த வீட்லயே குடியிருக்குற மாதிரி சீன் போட்டீங்கன்னாகூட போதும்.. லோன் வாங்கித் தர்றதுக்கு நான் கியாரண்டின்னு சொன்னாங்க. அதான் ராத்திரியோட ராத்திரியா குடி வந்தி்ட்டேன்..” என்று சொல்லியிருக்கிறார்.

அவருடைய பேச்சை ஏற்கவும் முடியாமல், விரட்டவும் முடியாமல் தவித்துப் போயிருக்கிறார்கள் சுந்தர்ராஜனும், அவரது மனைவியும்.. “இன்னும் கொஞ்ச நாள்ல பேங்க் லோன் வந்திரும்.. வந்தவுடனேயே செட்டில் செஞ்சிர்றேன்..” என்று சொன்ன மாரியப்பன் ஒரு மாதம், இரண்டு, மூன்று, நான்கு மாதங்கள் ஆகியும் பணம் தராமல் போகவே சுந்தர்ராஜன் திருப்பித் திருப்பிக் கேட்டிருக்கிறார்.

இப்போது பக்கா அரசியல்வியாதியாக தன்னைக் காட்டிக் கொண்ட மாரியப்பன் “எனக்கு எப்போ வசதிப்படுதோ, அப்பத்தான் தர முடியும்.. நீ எவன்கிட்ட வேண்ணாலும் போய்ச் சொல்லிக்க..?” என்று எகத்தாளமாகச் சொல்லியிருக்கிறார். இதற்கு மேல் அவரை குடியிருக்க விடுவது ஆபத்து என்று உணர்ந்த சுந்தர்ராஜன், வக்கீல் வெங்கடேசனை அணுகியிருக்கிறார்.

வக்கீல் வெங்கடேசனின் ஆலோசனையின்பேரில் சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்திருக்கிறார் சுந்தர்ராஜன். போலீஸ் மாரியப்பனை போனில் விசாரணைக்கு அழைத்தபோது மாரியப்பன் தான் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனில் வேலையில் இருப்பதாகவும், ஆளும் கட்சியின் தொழிற்சங்கத்தில் முக்கியப் பிரமுகர் என்றும் சொல்லியிருக்கிறார்.

இதன் பின்பு விசாரணையே மாறிப் போயிருக்கிறது. “நாளைக்கு வாங்க.. சாயந்தரம் வாங்க.. ராத்திரி வாங்க..” என்று ஸ்டேஷனில் அலைக்கழித்திருக்கிறார் இன்ஸ்பெக்டர். வக்கீல் மூலமாக மீண்டும், மீண்டும் பிரஷ்ஷர் செய்தவுடன் ஒரு நாள் இரு தரப்பையும் அழைத்து விசாரித்திருக்கிறார் இன்ஸ்பெக்டர். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது திண்டுக்கல் மாவட்ட அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமாரே இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து, மாரியப்பனுக்காக பரிந்துரை செய்திருக்கிறார்.

இதற்குப் பின்பு இன்ஸ்பெக்டர் வெளிப்படையாக வக்கீல் வெங்கடேசனிடமே, “ஸார்.. அமைச்சரோட மகனே போன் செஞ்சு சொல்றாரு.. நான் அவர் பேச்சைத்தான் கேட்க முடியும்.. என்னால எதுவும் செய்ய முடியாது.. நீங்க கோர்ட்ல போய் பார்த்துக்குங்க..” என்று சொல்லியிருக்கிறார். எவ்வளவோ மன்றாடியிருக்கிறார்கள் வக்கீலும், சுந்தர்ராஜனும். “மினிஸ்டர் மகன் சொல்றதைத்தான் நான் கேக்க முடியும்.. என்னால ஒண்ணும் செய்ய முடியாது. நீங்க யார்கிட்ட வேண்ணாலும்போய் கம்ப்ளையிண்ட் பண்ணிக்குங்க..” என்று எகத்தாளமாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசியிருக்கிறார் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்.  “மாரியப்பன் என் வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக சுந்தர்ராஜன் கொடுக்கும் புகாரை ஏற்றுக் கொண்டு ரசீதாவது கொடுங்கள். நாங்கள் கோர்ட்டிற்குச் செல்கிறோம்..” என்று இவர்களும் வாதாடியிருக்கிறார்கள்.

“ஸாரி.. அதுவும் தர முடியாது. இது விஷயமா எந்த புகாரையும் நான் வாங்க மாட்டேன்..” என்று இன்ஸ்பெக்டர் அடியோடு மறுத்துவிட அடுத்து போலீஸ் உயரதிகாரிகளை அணுகியிருக்கிறார் சுந்தர்ராஜன். ஏ.சி., டி.சி., கமிஷனர் என்று உயரதிகாரிகளிடம் புகார் செய்திருக்கிறார் சுந்தர்ராஜன். கமிஷனர் ஆபீஸில் இருந்து ஸ்டேஷனுக்கு கடிதம் வந்தவுடன் ச்சும்மா கண் துடைப்புக்காக  ஒரு நாள் மட்டும் அழைத்து விசாரித்துவிட்டு “ஒன்றும் பிரச்சினையில்லை..” என்று அந்தப் புகாரிலேயே எழுதியனுப்பியிருக்கிறார்கள் ஸ்டேஷனின் காவலர்கள்.

இனி இவர்களை நம்பிப் பயனில்லை என்பதால் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடுத்திருக்கிறார் வெங்கடேசன். என்னவென்று தெரியுமா..? இந்த வழக்கில் நாங்கள் அளித்த மனுவை ஏற்றுக் கொண்டு குற்ற வழக்கு எண்ணை பதிவு செய்து, மேல் விசாரணையை போலீஸார் நடத்த வேண்டும் என்று கோரியிருக்கிறார் வக்கீல் வெங்கடேசன்.

அரசியல்வியாதிகளுக்கு எதிரான புகார்களை போலீஸார் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே  நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டியிருக்கிறது.. இதுதான் தற்போதைய நிஜமான தமிழகத்து நிலைமை.

நீதிமன்றத்தில்தான் முதல் கட்ட நீதி இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அந்த ஜட்ஜ்மெண்ட் காப்பியோடு ஸ்டேஷனுக்குள் நுழைந்த சுந்தர்ராஜனுக்கு செமத்தியான மண்டகப்படியாம்..!

“என்னைக் கேக்காம.. என்னை மதிக்காம.. என்கிட்ட ஒரு வார்த்தைகூட சொல்லாம.. நீ கோர்ட்டுக்கு போனீல்ல.. இனி நான் இது பத்தி ஒரு ஸ்டெப்கூட எடுக்க மாட்டேன். இந்தாய்யா.. இந்தாள் மனுவை வாங்கிட்டு நம்பர் போட்டு அனுப்பி வை.. அவ்ளோதான்.. எனக்கு எப்போ தோணுதோ அப்போ கேஸை விசாரிக்கிறேன். இப்ப எனக்கு நேரமில்லை. நீ கிளம்பு..” என்று அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மிக பொறுப்பாக பதில் சொல்லியனுப்பிருக்கிறார்..!

மீண்டும், மீண்டு்ம் ஸ்டேஷனுக்கு அலைந்தும் “மாரியப்பன் வரலை.. அவர் வக்கீல் வரலை.. இப்போ எங்களுக்கு நேரமில்லை.. அதான் பணம் கொடுத்துட்டேன்னு அவர் சொல்றாரே.. இல்லைன்னா நீ ஆதாரம் காமி..” என்றெல்லாம் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்தபடியே இருந்திருக்கிறார் இன்ஸ்பெக்டர்.

இனியும் காத்திருந்து புண்ணியமில்லை என்று நினைத்து கடைசியில் வேறு வழியில்லாமல் மாரியப்பன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சுந்தர்ராஜன்.. உடனடியாக மாரியப்பனை தனது வீட்டில் இருந்து வெளியேற்றும்படி அவர் கேட்ட கோரிக்கையைக் குலைப்பதற்கு போலியான ஒரு ஆவணத்தினை மாரியப்பன் தரப்பு அப்போது கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறது.

என்றைக்கோ ஒரு நாள் இரண்டு தரப்பிற்கும் இடையில் பஞ்சாயத்து நடந்ததாகவும், அதன் முடிவில் சுந்தர்ராஜன் கேட்ட தொகையை மாரியப்பன் நான்கு பேர் சாட்சியாக ரொக்கப் பணமாகக் கொடுத்துவிட்டதாகவும் “இந்தப் பிரச்சினை இத்தோடு முடிந்தது.. பணம் முழுவதையும் பெற்றுக் கொண்டேன். இனி இந்த வீடு மாரியப்பனுக்கே சொந்தம். நான் ஒரு வாரத்தில் மாரியப்பன் பெயரில் வீட்டை மாற்றிக் எழுதிக் கொடுத்துவிடுவேன்..” என்று சுந்தர்ராஜன் தனது கைப்பட கையொப்பமிட்டு எழுதிக் கொடுத்ததைப் போன்ற ஒரு பத்திர நகலை கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறது மாரியப்பன் தரப்பு..!

“இது போன்ற ஒரு சம்பவம் நடக்கவேயில்லை..” என்று சொல்கிறார்கள் வக்கீல் வெங்கடேசனும், சுந்தர்ராஜனும். “என்னிடம் இவர் வந்த பின்பு என்னைக் கேட்காமல் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இவரும் என்னைக் கலந்தாலோசிக்காமல் எங்கேயும் இது போன்ற பஞ்சாயத்துக்களுக்குப் போகவில்லை. நானும் செல்லவில்லை. அவர்கள் தாக்கல் செய்த அந்த பத்திரம்கூட மூலப் பிரதியில்லை. ஜெராக்ஸ் நகலைத்தான் சப்மிட் செய்திருக்கிறார்கள். அதன் ஒரிஜினலை கொடுங்கள் என்று நான் கோர்ட்டில் கேட்டதற்கு அது தொலைந்துவிட்டது. தேடிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். இதனாலேயே கோர்ட் உடனடியாக மாரியப்பனை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கவில்லை.

அந்த ஆதாரமே போலியானது என்று சொல்லி நாங்கள் மேலும் ஒரு வாதத்தை வைத்திருக்கிறோம். அதன் ஒரிஜினலையும், கையொப்பத்தையும் சரி பார்க்க நீதிமன்றம் ஆணையிடக் கேட்டிருக்கிறோம். அதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாய்தா கேட்டிருக்கிறார்கள். இப்படியே ஒவ்வொரு முறையும் தொடர்ந்து வாய்தா மேல் வாய்தாவை போட்டு இழுத்தடிக்கிறார்கள். நாங்கள் வாதாட தயாராக இருந்தும், அவர்கள்தான் வருவதே இல்லை..” என்று சொல்லி வருத்தப்பட்டார் வக்கீல் வெங்கடேசன்.

இதில் மாரியப்பனோ, “கட்சிக்காரனையே எதிர்த்துட்டீல்ல.. என்னையவே போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துட்டீல்ல.. நீ இன்னும் 20 வருஷமானாலும் என்கிட்ட காசு வாங்கிக்க மாட்ட.. நான் இந்த வீட்லதான் இருப்பேன். உனக்குப் பணமும் தர மாட்டேன். உன்னால முடிஞ்சா என்னைய வெளியேத்திக்க..” என்று சுந்தர்ராஜனிடம் சவாலே விட்டிருக்கிறாராம்..!

இதில் ஒரு சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் உண்டு. அது என்னவெனில் சுந்தர்ராஜனின் மனைவி, தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் திரு.என்.வரதராஜனின் உடன் பிறந்த சகோதரியின் மகள். அவரிடமும் இதற்காக உதவி கேட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அவரும் “என் பெயரை எங்கே வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்.. முதல்வரிடம் என் பெயரைச் சொல்லியே புகார் கொடு” என்று சொல்லியிருக்கிறார். அதையும் செய்துவிட்டார்கள். பலனில்லை. மாவட்ட அமைச்சர் ஐ.பெரியசாமியிடமும் புகார் செய்திருக்கிறார்கள். “பையன்கிட்ட பேசுங்க..” என்று சொல்லியிருக்கிறார். செந்தில்குமாரிடம் புகார் செய்ய அலைந்திருக்கிறார்கள். இன்றுவரையில் அவரைச் சந்திக்கவே முடியவில்லையாம்..!

சென்னையில் உள்ள லோக்கல் கட்சிக்காரர்களோ, “மாரியப்பனோட சமரசமா போயிருங்க. அவர் கேக்குற காசை கொடுத்திட்டீங்கன்னா.. அவர் கிளம்பிருவாருல்ல..” என்கிறார்கள். சரி.. பட்டது பட்டாச்சு.. போய்த் தொலையுது என்ற எண்ணத்தில் “வாங்கிய ஒன்றரை லட்சம் ரூபாயோடு கூடுதலாக இன்னும் ஒரு ஒன்றரை லட்சத்தை தண்டத்துக்குக் கொடுக்கிறோம். பெற்றுக் கொண்டு வெளியேறச் சொல்லுங்கள்..” என்றும் சொல்லிப் பார்த்திருக்கிறார் சுந்தர்ராஜன்.

இப்போது மாரியப்பனுக்கு ஈகோவாகிவிட்டதாம். “கட்சிக்காரனின் பவர் என்னன்னு உனக்குத் தெரியலய்யா..! அதைக் காட்டாம நான் விடப் போறதில்லை.. உன் காசு எனக்குத் தேவையில்லை. நானும் வீட்டைக் காலி செய்ய மாட்டேன்.” என்று சொல்லிவிட்டாராம்..!

மொத்தத்தில், சட்டம், நீதி, நேர்மை, நாணயம் என்பதையெல்லாம் சுந்தர்ராஜன் போன்ற இந்த மிடில் கிளாஸ் ஆசாமிகள் இந்த நாட்டில் எதிர்பார்ப்பதே தவறு என்பதைத்தான் இந்த வழக்கு நமக்கு உணர்த்துகிறது..!

இதனைப் படிக்கின்ற பதிவர்கள், இதனையொரு முன் அனுபவமாக எடுத்துக் கொண்டு இது போன்ற விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன்..! நான்கு பேரின் துணையில்லாமல் இது போன்ற பெரிய விஷயங்களில் இறங்க வேண்டாம். வீடு வாங்கல், விற்றல் என்றால்கூட கூடுதலாக செலவானாலும் பரவாயில்லை என்று எப்போதும் ஒரு வழக்கறிஞரின் துணையோடு எதையும் பேசி முடிப்பது நமக்கு நல்லது..!

நெருங்கிய நட்பாக இருந்தாலும், தெரிந்தவர்களாக இருந்தாலும் சில விஷயங்களில் உறுதியாக இருக்க வேண்டும். சுந்தர்ராஜன் அந்த ஒரு நிமிடத்தில் சாவியை மட்டும் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்தக் கொடுமையை அவர் தவிர்த்திருக்க முடியும்.. ஏதோ நம்பிவிட்டார். இப்போது அதன் விளைவை அவர் அனுபவிக்கிறார்..!

வழக்கு இப்போதும் கோர்ட்டில் நிற்கிறது. நின்று கொண்டேயிருக்கிறது. வழக்கு முடிய எப்படியும் இன்னமும் பத்தாண்டுகளுக்கு மேல் ஆகும். இப்போது மாரியப்பன் தாக்கல் செய்திருக்கும் எதிர் மனுவில் தான் முழுப் பணத்தையும் கொடுத்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். அவர் சமர்ப்பித்த ஆவணம் போலியானது என்று நிரூபித்து ஜெயிக்க வேண்டியது இந்த சுந்தர்ராஜனின் கடமை. அதுவரையில் அந்த வீட்டை சுந்தர்ராஜன் விற்க முடியாது. மாரியப்பனை வெளியேற்றவும் முடியாது. இந்நேரம் அந்த வீட்டை வாடகைக்காவது விட்டிருந்தால் அதன் மூலம் கிடைக்க வேண்டிய  தொகையாவது, சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கு மிஞ்சியிருக்கும்..! இப்போது எல்லாம் வீணாகிப் போயிருக்கிறது..!

ஏமாற்றப்பட்ட சுந்தர்ராஜனின் குடும்பத்தினர் இந்த விஷயத்தினால் பாதிக்கப்பட்டு எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை அன்றைய நேரடி பேச்சில் நான் அறிந்து கொண்டேன். கொடுமையாகத்தான் உள்ளது..!

“நல்லா தூங்கி ஆறு வருஷமாச்சு ஸார்.. மாசத்துல எத்தனை நாள்தான் லீவு போடுறது..? பேங்க் வேலையையும் ஒழுங்கா செய்ய முடியலை.. வீட்டுக்குப் போனா அங்கேயும் நிம்மதி இல்லை.. என் குடும்பத்துல இருந்த சந்தோஷம்.. அன்னிக்கு ஒரே நாள்ல போயிருச்சு ஸார்.. அடுத்து என்ன செய்யறதுன்னு தெரியலை..?

கேஸ் வரும்போதெல்லாம் பேங்க்ல பெர்மிஷன் போட்டுக்கிட்டு ஓடுறேன். இல்லைன்னா லீவு போடுறேன்.. அங்கேயும் பிரச்சினை.. எத்தனை வாய்தாக்கள்.. எத்தனை அழைப்புகள்.. ஆனா அந்த ஆளு எந்தக் கவலையும் இல்லாம நிம்மதியா இருக்கானே ஸார்..? டெய்லி கட்சிக்காரர்களைக் கூப்பிட்டு வீட்டுல கூட்டம் போடுறான் ஸார்.. நிறைய கட்சிக்காரங்க வந்து போறதால பிளாட்டுல எனக்கு ஆதரவா இருந்தவங்களும், இப்போ பயந்து போய் கண்டுக்க மாட்டேன்றாங்க.. நான் என்ன சார் பாவம் செஞ்சேன்..? எனக்கேன் ஸார் இந்தத் தண்டனை..?” என்று வெளியில் அழுகாமலேயே மனதுக்குள் அழுதபடியே சொன்னார்..!

இப்படி ஒரு பதிவு போடுவதைத் தவிர என்னாலும் அவருக்கு வேறு எந்த உதவியையும் செய்ய முடியவில்லை..!  வெறுமனே காமன்மேன், காமன்மேன் என்று சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளது..? இவனுக்கு என்றைக்கு ரோஷம் வந்து பொங்கி எழுகிறானோ, அதுவரையில் இந்த அரசியல்வியாதிகள் இப்படி ஆட்டம் போடத்தான் செய்வார்கள்..!

சுந்தர்ராஜனுக்காக பெரிதும் வருந்துகிறேன்..!

101 comments:

sundarmeenakshi said...

மாரியப்பன் weekness iruukkum adha pathu thoduna sari padum.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கொடுமை அண்ணா. இவங்களை என்ன பண்றது?

Paleo God said...

இதுதாண்ணே பகுத்தறிவு!

ramalingam said...

கண்டிப்பாக ஆட்சி மாற்றம் தேவை. இல்லை என்றால் மக்கள் தலையில் முக்காடுதான்.

Sankar Gurusamy said...

Very SAD to hear the incident. But this is the reality in our Democracy. Only GOD can give them punishment. No point in believing in the Police or Judicial system.

:-(

Paleo God said...

கண்டிப்பாக ஆட்சி மாற்றம் தேவை// அப்பயும் வேற எவனாவது வரத்தாங்க செய்வான். மக்கள்தான் மாறனும். ’தட்டி’க்கேட்டாலே இவர்களெல்லாம் காணாமல் போய்விடுவார்கள்! இன்று எகிப்து முதல் அதுதான் ஆரம்பித்திருக்கிறது!

jinathvijay said...

அம்மா ஆட்சியில் அல்லக்கை எல்லாம் ஆட முடியாது... அவங்க மந்திரியே ஆட முடியாது...

karthi said...

anna,

Really hard to digest .God only save him.

I had a experience with police .A close friend of mine ( we shared the room for 6 yrs ) taken my lap top and i gone to vadapalani police station .
The experience , i met at police station....

Joseph said...

//ramalingam said...

கண்டிப்பாக ஆட்சி மாற்றம் தேவை. இல்லை என்றால் மக்கள் தலையில் முக்காடுதான். //

என்னாது ஆட்சிமாற்றம் வந்தா எல்லாம் சரியாயிருமா? இப்ப திமுக அப்டின்னு இருக்க இடத்துல எல்லாம் அதிமுக அப்டின்னு போடுங்க, ஆட்சி மாறுனா அதான் நடக்கும்.

pichaikaaran said...

வேதனையாக இருக்கிறது

Prakash said...

Unmai Anna,

Pls write about Amerthanjan Pain Palm Owner’s Bungalow that was taken by JJ & Sasi in similar way.

BADRINATH said...

சுந்தர்ராஜன் பயப்பட மாட்டார்னா, ஏதாவது கம்யூனிஸ்ட் கட்சி உதவியுடன் நீங்க எழுதியதையே ஒரு போஸ்ட்ராவோ பிட் நோட்டீசாவோ அடித்து சைதாப்பேட்டையில் எல்லாருக்கும் கொடுக்கச் சொல்லுங்க... நீதிமன்றம் காவல் நிலையம் சரியில்லை என்றால் மக்கள் மன்றேமே ஒரே வழி
கந்தசாமி

Ramachandranusha said...

அட பாவமே :-(

துளசி கோபால் said...

அட ராமா!!!!!!!!!!!! இப்படி எல்லாமா கட்சிக்காரனுங்க ஏமாத்தறானுங்க:(

உடன்பிறப்புக்கு ஒரு கடிதம் போடச் சொல்லுங்க.

நெஞ்சுக்கே நீதி சொன்னவர் மாவேலி ஆட்சி நடத்தறாரே!

raja said...

சுந்தர் ராஜன் குடும்பத்தில் நிச்சியம் யாராவது ஒருவர் படிக்காமல் இருப்பார்.. அவரை வைத்து.. ஒரு நல்ல துப்பாக்கி வாங்கி.. மாரியப்பனை போட்டு தள்ள சொல்லுங்கள்.. இந்திய மற்றும் தமிழ் சமுகத்தில் நீதி நியாய மற்றும் சட்டப்படி மயிர்பிடுங்கி தனங்களுக்கு ஒரு மரியாதையும் இல்லை. நம் மனசாட்சியின் எல்லையே. நமது நியாய தர்மங்கள் ஓர் அளவுதான் நாம் எல்லாவற்றையும் தாங்கி கொள்ளமுடியும். நமது அப்பாவித்தனத்தை பயன்படுத்துகிற ஒருவன் இந்த உலகில் வாழ வேண்டிய அவசியமே இல்லை.

நிலவு said...

போலீசுக்கு ஒரு நியாயம் - பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நியாயமா ? http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_02.html

ராஜ நடராஜன் said...

உங்க பதிவால் சுந்தரராஜனுக்கு புதிய வழிகள் திறக்குமா என பார்க்கலாம்.

Unknown said...

உங்களுக்கு என் சல்யூட்.....

G.Ganapathi said...

அண்ணா நாம ஒட்டு மொத்தமா எத்தனை பதிவர்கள் இருப்போம் சென்னைல மட்டும் ?.. எல்லாரையும் ஒரு நாள் சந்திக்கலாம் பதிவு போடுவது உடன் நமது வேலை முடிந்து விட்டது என்று எத்தனை நாளைக்கு இருப்பது ?.. கொஞ்சம் இறங்கியும் வேலை செய்யலாம் ... தேர்தல் நேரமும் கூட ஆகவே உடனடி கவனிப்பு இருக்கும் ... ஒரு சிறிய அளவில் ஒன்று திரண்டு பாதிக்க பட்ட சுந்தரராஜனின் குடும்பத்தாரையும் இணைத்து கொண்டு ஜெய டிவி நாளிதழ்கள் , வார புலானய்வு !!! பத்திரிகைகள் தேவை பட்டால் ஆங்கில தொலைகாட்சிகளையும் இணைத்து அறிவிக்க படாத கண்டன ஊர்வலம் கருணாநிதியின் வீட்டில் நுழையும் போராட்டத்தை நடத்தலாம் .. இப்போதைக்கு அவர்களால் அடக்குமுறையை ஏவ முடியாது என்பது என் எண்ணம் ... இந்தனை போல மொள்ள மாறி கேப்ப மாறி அரசியல் வாதிகள் பிச்சைகார அரசு அலுவலர்கள் காவல் காக்க சொன்னால் கக்கூஸ் கழுவ தயாராய் இருக்கும் அந்த ஆய்வாளர் போல ஆட்களை சமுதாயத்தில் அம்பல படுத்தவும் அவர்களின் செயல்களை தோலுரிக்கவும் இணைய பதிவர்களால் முடியும் என்பதை காட்டலாம் .. அணியாக செயல்படுவோம் அநியாயத்தை தட்டி கேப்போம் நான் தயார் நீங்க ?..

podang_maan said...

//அரசியல்வியாதிகளுக்கு எதிரான புகார்களை போலீஸார் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டியிருக்கிறது.. இதுதான் தற்போதைய நிஜமான தமிழகத்து நிலைமை.

Read more: http://truetamilans.blogspot.com/2011/03/blog-post_03.html#ixzz1FXrxPR00
//

அப்போ இந்தியாவுல மத்த இடமெல்லாம் நல்லத்தேன் இருக்கு போல....

podang_maan said...

//கேஸ் வரும்போதெல்லாம் பேங்க்ல பெர்மிஷன் போட்டுக்கிட்டு ஓடுறேன். இல்லைன்னா லீவு போடுறேன்.. அங்கேயும் பிரச்சினை.. எத்தனை வாய்தாக்கள்.. எத்தனை அழைப்புகள்.. ஆனா அந்த ஆளு எந்தக் கவலையும் இல்லாம நிம்மதியா இருக்கானே ஸார்..? டெய்லி கட்சிக்காரர்களைக் கூப்பிட்டு வீட்டுல கூட்டம் போடுறான் ஸார்.. நிறைய கட்சிக்காரங்க வந்து போறதால பிளாட்டுல எனக்கு ஆதரவா இருந்தவங்களும், இப்போ பயந்து போய் கண்டுக்க மாட்டேன்றாங்க.. நான் என்ன சார் பாவம் செஞ்சேன்..? எனக்கேன் ஸார் இந்தத் தண்டனை..?” என்று வெளியில் அழுகாமலேயே மனதுக்குள் அழுதபடியே சொன்னார்..!

இப்படி ஒரு பதிவு போடுவதைத் தவிர என்னாலும் அவருக்கு வேறு எந்த உதவியையும் செய்ய முடியவில்லை..! வெறுமனே காமன்மேன், காமன்மேன் என்று சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளது..? இவனுக்கு என்றைக்கு ரோஷம் வந்து பொங்கி எழுகிறானோ, அதுவரையில் இந்த அரசியல்வியாதிகள் இப்படி ஆட்டம் போடத்தான் செய்வார்கள்..!

சுந்தர்ராஜனுக்காக பெரிதும் வருந்துகிறேன்..!

Read more: http://truetamilans.blogspot.com/2011/03/blog-post_03.html#ixzz1FXsiSm9B
//

என்ன உண்மைத் தமிழன் அண்ணே, காமன்மேன் ரோசம் வந்து பொங்கியெழனும்னு சொல்லிட்டு அடுத்த வரிலேயே மிகவும் வருந்துகிறேன்னு ஜகா வாங்கிட்டீங்க? ஓ.. ஒருவேளை நீங்க காமன் மேன் இல்லையோ?

middleclassmadhavi said...

பெயரினால் கவரப்பட்டு உள்ளே வந்தேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது. நல்ல பாடம்.

சுந்தர்ராஜனுக்கு இந்தத் தேர்தல் வந்தாவது தீர்வு கொடுத்தால் சரி!

செங்கோவி said...

அந்த அப்பாவி மனிதருக்காக மிகவும் வருத்தப்படுகிறேன்..பிரபல இதழ்களில் செய்தி வரவழைக்க முடியாதா..லோக்கல் எதிர்க்கட்சி ஆட்கள் என்ன செய்கிறார்கள்..

Sarif said...

ரொம்ப வருத்தமாக இருக்கிறது,என்ன பண்றது சார்..நம்மளால முடிந்தது அவ்வளவு தான்.
கடவுளோட வீட்டுக்கே இந்த நாட்டுல பாதுகாப்பு இல்லை.சாதாரண மனுஷன் என்ன பண்ண முடியும். இந்த நாட்டோட நீதிமன்றங்களையும்,அரசியல்வியாதிங்களையும் நினைச்சா ரொம்ப கவலையாயிருக்கு. நாமெல்லாம் நடக்கிறதை சகிச்சுகிட்டு இந்த கேவலப்பட்ட நாட்டுல வாழனும்,இல்லை நாக்கைப் பிடிங்கிட்டு சாகணும். இவ்ளோ காலமா இருந்த பாபர் மசுதியையே அதை இடிச்சவங்களுக்கு கொடுத்துட்டாங்க. சிங்கள் பெட்ரூம் வீட்டை விட்டு வைப்பாங்கன்னு நினைக்கிறிங்க.எல்லாத்துக்கும் அந்த கடவுள் தான் சார் பதில் சொல்லணும்.என்ன சொல்லுறீங்க?

ஜீவன்சிவம் said...

அரசன் எவ்வழியோ அவன் அடிவருடிகளும் அவ்வழி தான்..பாதிக்கபடுவதேன்னமோ நம்மை போன்ற சாமானியர்கள் தான்

நிலவு said...

நானும் என்னமோ ஏதோன்னு பயந்துட்டன். கிணத்த கண்டா படுபாவிப் பசங்க காணாம அடிச்சிட்டாங்களோன்னு. அது சரி. சுந்தர்ராஜனுக்கு ரோசம் இருக்குல்லா. இதோ அறிவாலயம் இருக்கு போய் அங்கே தீக்குளிக்க சொல்லிருக்கலாம்லா. திண்டுக்கல் காரங்களுக்கு பூட்டு போட நாங்களாங்க சொல்லித் தரணும்

அக்கப்போரு said...

ம்ம்ம் கொடுமை வேறு என்ன செய்வது. எப்படியும் தேர்தல் நேரத்தில் இலவசங்கள் மட்டும் தான் வாமக்கு ஞ்பகம் வரும்...

Ganpat said...

இந்த விஷயத்தில் யாரும் எதுவும் செய்யமுடியாது என்பது நிதர்சனமான உண்மை.இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.ரவுடிகள் பொறுக்கிகளை விட மோசமானவர்கள்,
ஆபத்தானவர்கள், அரசியல்வாதிகளும்,
காவல்துறையினரும்...
புதுபேட்டைபடம் பார்க்கவில்லை?அதுதான் உண்மை
சுந்தராஜன் வீடு யானை வாயில் போன கரும்புதான்!

geethappriyan said...

அண்ணே
உங்களுக்கு ஈரோடு மாவட்ட முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலராகவும் தமிழக அரசின் முன்னாள் கைத்தறி துறை அமைச்சருமாக பதவிவகித்து வந்த என்.கே.கே.பி.ராஜாவை தெரிந்திருக்கும், ஈரோடு அருகே உள்ள பெருந்துறையை சேர்ந்த சிவபாலன் என்னும் விவசாயியின் மெயின் ரோட்டை ஒட்டிய பெரிய விவசாய நிலத்தையும் ஏக்கர் கணக்கான தென்னந்தோப்பையும் அபகரிக்க, அவரின் மொத்த குடுமபத்தையும் அடியாட்களை விட்டு கடத்தி, சிறைவைத்து அவரின் வயதான மாமனாரையும் அடித்தே கொன்ற ஒரு மாபாதகர். அந்த வழக்கை பத்திரிக்கைகள் சடுதியில் மறந்திருக்கலாம், ஆனால் என்றாவது சத்தியம் ஜெயிக்கும் என்றிருக்கும் பொது மக்கள் மறந்திருக்க முடியாது,

மண்ணாசைக்கு அந்த கட்சி இந்த கட்சி என எந்த கட்சியும் விதி விலக்கல்ல, அரசியல்வாதிகள் எப்போது நம் நிலத்தை [என ஒன்று இருந்தால்] இதுபோல அடித்து பிடுங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நிலத்தை ஃப்ளாட்டை கொடுத்துவிட்டால் உயிராவது மிஞ்சும்.
இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளை சுந்தர்ராஜன் போன்ற காமென்மேன்கள் பகைத்துக்கொண்டால் மேலே சொன்ன சம்பவம் போல கொலை செய்தாலும் செய்துவிடுவார்கள். கிராதகர்கள்,இதில் மந்திரியும் ஒன்றுதான் வட்டம் மாவட்டம்,அல்லக்கைகளும் ஒன்றுதான்.ஈசிமனி செய்ய அலையும் பணப்பேய்கள்.

reno85 said...

உண்மைத்தமிழன் அவர்களே
இதெல்லாம் பார்க்கும் போது யுத்தம் செய் படத்தில் வருவது போன்று
"ஏன்டா கொஞ்சூண்டு அறிவு இருக்கிற நீயே இப்படி பண்ணும்போது நாங்கல்லாம் எவ்ளோ பண்ணலாம்"
அதனால இவங்கள திருப்பி அடிக்கணும்.
அதுவும் ஓட விட்டு அடிக்கணும்..
ஆனா எப்போன்னு தான் தெரியல

bandhu said...

நீங்கள் செய்வது ஒரு நல்ல தொடக்கம். இதை ஊதி ஊதி எல்லோரும் பெரிதாக்க வேண்டும். பின்னர் இதை எதிர்கட்சி பத்திரிக்கைகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மாரியப்பன் பெயரை எவ்வளவு நாறடிக்க வேண்டுமோ அவ்வளவு நாறடிக்க வேண்டும். அப்போது தான், கட்சிக்கு அவர் ஒரு லயபிலிட்டி என்ற எண்ணம் தோன்றும். கட்சியின் சப்போர்ட் இல்லையேல் அவர் ஒரு செல்லாக்காசு. அதுவரை ஓயக்கூடாது!

ராமுடு said...

Have n't he put any agreement? We should be careful when dealing with property (especially with crapped politicians). No other way than killing that bastard..

நீச்சல்காரன் said...

வருத்தமான விஷயம்.
திரு.சுந்தரராஜன் அவர்கள் அதே வீட்டை வேறு பெரிய கட்சிக்காரருக்கு விற்க முனையலாம். வல்லவனுக்கு வல்லவன் உண்டு உலகிலே!

Arun Ambie said...

ஓ.பன்னீர்செல்வத்தைப் பார்த்துப் பேசலாம். கொஞ்சம் நியாயமாக இருக்கும் மனிதர். ஆவன செய்வார். முடிந்தால் ஜெயலலிதாவை சந்தித்துப் புகார் கொடுக்கச் சொல்லுங்கள். தேர்தல் நேரம் என்பதால் நடவடிக்கை இருக்கும். கம்யூனிஸ்டுகள் கண்டிப்பாக உதவுவார்கள். நீங்கள் பிரபல பத்திரிகைகளில் இச்செய்தியைக் கொண்டுவர முயலுங்களேன்!

ரிஷி said...

Dear Mr. Chief Minister

I am bringing this news and information to your kind attention. We do not know how much persons are there in Tamilnadu like Sundarrajan refered in this article.

Please investigate and take immediate action against the culprits. The culprit Mariappan refered in this article, is misusing your name and fame, your Party's name and fame for his illegal and arrogant activities.

I hope you will definitely make a decision in this regard. The action not only be taken on Mariappan.. it should be extended to the culprits in the Police station and your Ministry also.

If justice can not be given to Mr. Sunderrajan, THEN YOU CAN APPLY YOUR SHIT ON YOUR FACE and also you can ask others who are involved and agreed with this cheating TO DO THE SAME.

ரிஷி said...

///நிலவு said...

நானும் என்னமோ ஏதோன்னு பயந்துட்டன். கிணத்த கண்டா படுபாவிப் பசங்க காணாம அடிச்சிட்டாங்களோன்னு. அது சரி. சுந்தர்ராஜனுக்கு ரோசம் இருக்குல்லா. இதோ அறிவாலயம் இருக்கு போய் அங்கே தீக்குளிக்க சொல்லிருக்கலாம்லா. திண்டுக்கல் காரங்களுக்கு பூட்டு போட நாங்களாங்க சொல்லித் தரணும்///


நிலவு, உங்களுக்கு இது போன்ற நிலை நேர்ந்திருந்தால் இதைப் போன்றதொரு முடிவை எடுத்திருப்பீர்களா??

ரிஷி said...

///Joseph said...

//ramalingam said...

கண்டிப்பாக ஆட்சி மாற்றம் தேவை. இல்லை என்றால் மக்கள் தலையில் முக்காடுதான். //

என்னாது ஆட்சிமாற்றம் வந்தா எல்லாம் சரியாயிருமா? இப்ப திமுக அப்டின்னு இருக்க இடத்துல எல்லாம் அதிமுக அப்டின்னு போடுங்க, ஆட்சி மாறுனா அதான் நடக்கும்.///

ஆட்சி மாறினாலும் எதுவும் நடக்காது. அதுவே உண்மை. ஒருவேளை பத்து வருடம் வழக்கு நடந்து சுந்தரராஜன் பக்கமாக தீர்ப்பு வந்தாலும், இத்தனை நாள் பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கேட்க மற்றுமொரு வழக்கைத்தானே போட்டாக வேண்டும்?? இதற்குப் பதில் அந்த மாரியப்பனையே போட்டால்தான் என்ன??

கே.ஜே.அசோக்குமார் said...

This government should go, this is the only solution.

Sivakumar said...

நல்ல எண்ணம் உள்ள ரிச் மேன்களும் சேர்ந்து பொங்கினால் நன்றாக இருக்கும்!

Ponchandar said...

தைரியமாக ப்ரஸ் & மீடியா-களுக்கு எடுத்துச் சென்றால் பலன் கிடைக்கலாம். மே மாதத்துக்கு அப்புறம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அவர் வீடு அவருக்கே கிடைக்க வேண்டுகிறேன்

krishna said...

இப்படி எல்லாம் பண்ணினா பரம்பரைக்கு இந்த பாவம் அவர் குடும்பத்தை சும்மா விடாது,,, என்னதான் பகுத்தறிவுன்னு சும்மா பூச்சா காட்டுற ஆளா இருந்தாலும் ஒரு குடும்பத்தோட நியாயமான நிம்மதியை கெடுத்தவன் வாழ்ந்ததா சரித்திரமே இல்ல... நிச்சயம் ஒருநாள் அவர் கிட்ட மன்னிப்பு கேட்டு ஓடத்தான் போறாரு...

ammarajam said...

Dear Unmaitamilan,

Thanks for posting this kind of eye opeining issues which is very much needed for a general public.

Regards,

Amarnath Santh

R.Gopi said...

தலைவா...

இது போல் எத்தனையோ சுந்தர்ராஜன்கள் இது போல் அயோக்கிய அரசியல்வியாதிகளால் ஏமாற்றப்பட்டு அலைக்கழிக்க பட்டிருக்கிறார்கள்.. நீங்கள் சொன்னதன் மூலம் மற்றுமொரு ஏமாளியை பற்றி அறிகிறோம்...

“தல” அவர் ரேஞ்சுக்கு லட்சகணக்கான கோடிகளில் திருடுகிறார் என்றால், அவரின் அல்லக்கைகள் அவர்கள் வசதிக்கு ஏற்றார்ப்போல் இது போல் திருடுகிறார்கள்...

இந்த “திருக்குவளை தீயசக்தி” மற்றும் உடன்பிறப்பு கும்பலை விரட்டியடிப்போம்...

ஏதிலி... said...

சமூக-சட்ட விரோத சக்திகளின் கட்டற்ற அராசகங்கள், சட்ட-அரசியல் அமைப்புகளைப் பொத்தாம் பொதுவாக நம்பிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண குடிமகனுக்கு எண்ணற்ற அனுபவங்களையும் அரசியல் அறிவையும் அதிர்ச்சியோடு அன்றாடம் கலந்து கொடுத்துக் கொண்டுதானிருக்கிறது. சமூக அரங்கில் தொலைவிலோ அருகாமையிலோ கண் முன்னோ அதிகாரம் படைத்தவர்களால் நிகழ்த்தப்படும் அராசகத்துக்கோ அநீதிக்கோ எதிராக அதிகாரம் ஏதுமற்ற ஒரு சாமானியன் என்ன செய்துவிட முடிகிறது? எதிராகக்கூட வேண்டாம், தனது கையறு நிலையை வெளியே சொல்லவாவது முடிவதுண்டா? அன்றாடம் செய்தித்தாள்களில் இதுபோல் நூறு செய்திகள். அவற்றை திரு.சுந்தர்ராசன் படித்துமிருக்கலாம் படிக்காமலுமிருக்கலாம். ஆனால், அவரது வயதுக்கேற்ற உலக அனுபவத்திலிருந்தும் மற்றவர்களுக்குக் கிடைத்த பாடங்களிலிருந்தும் அவர் கற்றுக் கொண்டது என்ன? எங்கோ யாருக்கோ நடக்கும்போது காற்று வெளியில் புத்திமதி என்ற பெயரில் சொற்களைச் சிதறவிடுவதும், 'இதுகூடத் தெரியாதா?!' என்று நக்கலடிப்பதும், அதிகபட்சம் 'உச்' கொட்டிவிட்டு "மனிதாபிமானி" என்ற பட்டப் பெயரோடு இடத்தைக் காலி செய்வதும் சர்வ சாதாரணமானதாக ஆகிவிட்டது. அடுத்தவனின் தோலை உறித்தெடுக்கும் அதிகாரத்தின் பிரம்புக் குச்சி தன்னை நோக்கித் திரும்பாது என்று நம்புவதின் பின்னிருக்கும் உளவியல் என்னவாக இருக்கும்? அவன் துரதிருஷ்டசாலி; நான் அதிருஷ்டசாலி. அடுத்தவனின் அலறலைக் கேட்டு முகத்தைத் திருப்பிக் கொள்ளும் அதிருஷ்டசாலி, பிறிதொரு கணத்தில் தன் அலறலுக்கு யாரும் முகம் காட்டவில்லையே என துரதிருஷ்டசாலியாகப் புலம்புகிறான். அட... சமூக அநீதிகளுக்கெதிராகக் கொதித்து புரட்சி செய்யப் புறப்பட வேண்டாம், குறைந்தபட்சம் தனது உடமைகளை- சொந்தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவாவது இந்தக் கேடு கெட்ட சமூகத்தை சற்று உற்றுப் பார்க்கக் கூடாதா? ஒரு உதாரணத்துக்கு அரசு ஊழியர்களை எடுத்துக் கொள்வோம். "நான் அரசு ஊழியன். என்னை எவன் என்ன செய்துவிட முடியும்? என் வாழ்க்கைக்கும் பாதுகாப்புக்கும் வாழ்நாள் முழுவதும் total guarantee. I'm settled. என் தலைவிதி இப்படி. தகுதிக்கும் திறமைக்கும் வேலை கிடைக்காதவனைப் பற்றி நான் சொல்ல என்ன இருக்கிறது?! அவன் விதி அப்படி " - இந்த அகம்பாவப் போக்கும் பொறுப்பற்றதனமும் மெல்ல மெல்ல தலைக்கேறி அலுவல் தொடர்பாகத் தன்னிடம் அணுகும் சாமானியர்களைக் கூட மனிதனாகவே மதிக்க முடியாத உச்ச நிலைக்கு அரசு ஊழியர்களைக் கொண்டு செல்வதில்லையா? "நானெல்லாம் அப்படியில்லை. சுத்தமானவன்" என்று 'மெடல்' குத்திக் கொள்பவர்கள், மேற்சொன்னபடியான தனது சக நண்பர்களிடம் சுத்தத்துக்காகப் போராடியதுண்டா? அரசு மருத்துவமனைகளில் கையில் மருந்துச் சீட்டுடன் நிற்கும் படிப்பறிவற்ற தாய்- ரேஷன் அட்டையைப் புதுப்பிக்க 101 வது தடவையாக க்யூவில் பசிக் களைப்புடன் நிற்கும் அனாதை மூதாட்டி- தாலுக்காபீசில் எந்த டேபிளுக்குப் போவதென யாரிடம் கேட்டாலும் பதில் தெரியாமலேயே திணறிக் கொண்டும், தனது தற்குறித்தனத்துக்காக நொந்து கொண்டும், இதுமாதிரி ஒரு ஆபீசராகாமல் வேலை தேடிக் கொண்டிருக்கும் 'வெட்டிப் பய'லான தன் மகன் மீதான எரிச்சலோடும் ஊடாடும் பாமரர்கள்-ஜப்தி செய்யவரும் வங்கி அதிகாரிகளின் காலில் விழுந்து கதறும் கைநாட்டு விவசாயிகள்...
ஆம், அரசியல்வாதிகளைவிட அரசு ஊழியர்கள்/அதிகாரிகளைக் கண்டுதான் கால் நடுங்குகிறார்கள் எம் மக்கள். அதேபோல் க்யூவில் கால் நடுங்கும் ஆதிக்க சாதிக்காரர் தன் ஊரில் படித்த தலித்தை "முழுக்கால் சட்ட போட்டா பழக்க வழக்கம் மாறிடுமாடா கீழ்சாதி நாயே" என்று கறுவுகிறார்.
ஆம்... இங்கு யாரும் அப்பாவியில்லை. எல்லோருமே தனக்குக் கீழேயிருப்பவர்களிடம் அடக்குமுறையாளர்களாகவும் தனக்கு மேலேயிருப்பவர்களிடம் அடங்கிப் போகிறவர்களாகவுமே நீடித்து வருகிறார்கள். தனக்கு சனநாயகத்தை விரும்புகிற ஒருவன் தனக்குக் கீழிருப்பவனாகத் தான் கருதிக் கொண்டிருப்பவனுக்கு சனநாயகத்தை வழங்குபவனாகவும் மாறவேண்டும். இல்லாவிட்டால் அவனவன் தனித்தனியாக அடித்துக் கொள்ளலாம்; அவனவன் தனித்தனியாக அழுது கொள்ளாலாம்.
இவரது குறித்த பிரச்சனைக்கு... அரசியல் சார்பற்ற-தெளிவான சிந்தனையுள்ள-மன உறுதியும் போராட்ட குணமும் உள்ள- காசுக்கு அடிபணியாத- பேரம் பேசாத, சென்னையில் செயல்பட்டுவரும் "மனித உரிமைப் பாதுகாப்பு மைய"மே உதவ முடியும் என உறுதியாக நம்புகிறேன். சட்ட வழியில் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியான அம்பலப்படுத்தல்களே பிரச்சனைக்குத் தீர்வாகும்.
உறுதியாக மனம் தளராமல் அவ்வமைப்பின் பொறுப்பாளர்களை அணுகவும்.

Unknown said...

கடவுளே இவங்கள என்ன செய்யமுடியும் .. இவங்கள நடு ரோட்ல வச்சி சுடனும்.

sarvieanny said...

thaniyae poradina tholvethan ketum................kuttama seyal patalam....

ஆளவந்தான் said...

மாரியப்பனின் புகைப்ப்டத்தையும் அவன் முகவரி உட்பட முழுவிபரத்தையும் இங்கே தெரிவிக்கலாமே..

Trails of a Traveler said...

Too bad!

Ram

ராகின் said...

http://rktimes.blogspot.com/2007/10/blog-post_3609.html

அல்லக்கைகள் நம்ம வீட்டுலயும் குடிசையை போட்டார்கள். பயந்திருந்தால் வேலைக்கு ஆகாது..எதுத்து நின்னு சவுண்டு விட்டா, வாலை பின்னாடி சுருட்டிக்கிட்டு ஓடுற பீ தின்ற உயிரினம் இதெல்லாம்.. அனுபவத்தில் சொல்கிறேன், நீங்கள் எல்லோரும் சுந்தர்ராஜனின் வாழ்க்கையை ஒரு நாள் வாழ்ந்து பார்க்க வேண்டும். ஒரு அயோக்கியனை மாடியில் வைத்து கொண்டு செலவிடும் ஒவ்வொரு மணித்துளியின் நரக வேதனைக்கு ஈடான துயரம் வேறில்லை..

Arunkumar said...

hi friends,
join and against all politicizations.
any one create one web site.

thanks
arun

உண்மைத்தமிழன் said...

[[[sundarmeenakshi said...

மாரியப்பன் weekness iruukkum adha pathu thoduna sari padum.]]]

சினிமா கதை மாதிரி ஐடியா கொடுக்குறீங்களே ஸார்.. சுந்தர்ராஜனுக்கு இதையெல்லாம் செய்யத் தெரிஞ்சிருந்தா இப்படியிருப்பாரா..?

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கொடுமை அண்ணா. இவங்களை என்ன பண்றது?]]]

என்ன செய்யறது..? அரசியலைவிட்டே ஒதுக்கணும்.. இவர் சார்ந்த கட்சியையும் ஒதுக்கணும்..! அவ்வளவுதான் நம்மளால செய்ய முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

இதுதாண்ணே பகுத்தறிவு!]]]

கரீக்ட்டு. பகுத்தறிவு சிங்கங்கள் கற்றுத் தந்த பாடம் இதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[ramalingam said...
கண்டிப்பாக ஆட்சி மாற்றம் தேவை. இல்லை என்றால் மக்கள் தலையில் முக்காடுதான்.]]]

இதனை அப்படியே அக்கம்பக்கத்துல சொல்லி வையுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Sankar Gurusamy said...
Very SAD to hear the incident. But this is the reality in our Democracy. Only GOD can give them punishment. No point in believing in the Police or Judicial system.

:-(]]]

சட்டமும், நீதியும் சாதாரண மனிதர்களுக்கு உதவாதபோது நாம் யாரைக் குற்றம் சொல்லி என்ன புண்ணியம்..?

உண்மைத்தமிழன் said...

[[[jinathvijay said...
அம்மா ஆட்சியில் அல்லக்கை எல்லாம் ஆட முடியாது. அவங்க மந்திரியே ஆட முடியாது.]]]

அம்மா மட்டும்தான் ஆடுவாங்கன்னு கடைசியா சொல்லியிருக்கணும் விஜய்..!

உண்மைத்தமிழன் said...

[[[karthi said...
anna, Really hard to digest. God only save him. I had a experience with police. A close friend of mine ( we shared the room for 6 yrs ) taken my lap top and i gone to vadapalani police station.
The experience, i met at police station.]]]

வெரி ஸாரி.. இதுதான் உண்மையான ஜனநாயக நாடாம்..! வெட்கம்.. கேவலமா இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[Joseph said...

//ramalingam said...

கண்டிப்பாக ஆட்சி மாற்றம் தேவை. இல்லை என்றால் மக்கள் தலையில் முக்காடுதான். //

என்னாது ஆட்சிமாற்றம் வந்தா எல்லாம் சரியாயிருமா? இப்ப திமுக அப்டின்னு இருக்க இடத்துல எல்லாம் அதிமுக அப்டின்னு போடுங்க, ஆட்சி மாறுனா அதான் நடக்கும்.]]]

கண்டிப்பா இதே மாரியப்பனால இன்னொரு சுந்தர்ராஜனுக்கு எந்த பாதிப்பும் வராதுல்லையா..? அதுக்காகவாவது இவர்களை வீட்டுக்கு அனுப்பித்தான் ஆகணும்.. அடுத்த ஆட்சியில் அம்மா மட்டும்தான் ஆடுவாங்க.. அவங்களை நாம அடுத்தத் தேர்தல்ல தூக்கிரலாம்..! இதைத்தான் செய்ய முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

வேதனையாக இருக்கிறது.]]]

வெறுப்பாகவும் உள்ளது பார்வை..!

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...

Unmai Anna, Pls write about Amerthanjan Pain Palm Owner’s Bungalow that was taken by JJ & Sasi in similar way.]]]

கண்டிப்பா எழுதுறேன்..! தேடிப் பார்க்குறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[BADRINATH said...
சுந்தர்ராஜன் பயப்பட மாட்டார்னா, ஏதாவது கம்யூனிஸ்ட் கட்சி உதவியுடன் நீங்க எழுதியதையே ஒரு போஸ்ட்ராவோ பிட் நோட்டீசாவோ அடித்து சைதாப்பேட்டையில் எல்லாருக்கும் கொடுக்கச் சொல்லுங்க. நீதிமன்றம் காவல் நிலையம் சரியில்லை என்றால் மக்கள் மன்றேமே ஒரே வழி
கந்தசாமி]]]

கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களே முனைந்தால் இதில் தீர்வு காணலாம். அவர்களுடைய கட்சி மரியாதை உதவி செய்யத் தடுக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[Ramachandranusha said...

அட பாவமே :-(]]]

என்ன செய்யறதும்மா.. அப்பாவிகள் இப்படி வதைப்பட வேண்டுமென்பதுதான் நமது இந்திய ஜனநாயகத்தின் விருப்பம்..!

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...

அட ராமா!!!!!!!!!!!! இப்படி எல்லாமா கட்சிக்காரனுங்க ஏமாத்தறானுங்க:(
உடன்பிறப்புக்கு ஒரு கடிதம் போடச் சொல்லுங்க. நெஞ்சுக்கே நீதி சொன்னவர் மாவேலி ஆட்சி நடத்தறாரே!]]]

அவர் நெஞ்சுக்கு நீதின்னு சொன்னது ச்சும்மா தமாஷுக்கு.. அதைப் போய் நீங்க உண்மைன்னு நம்புறீங்களே ரீச்சர்..!

உண்மைத்தமிழன் said...

[[[raja said...

சுந்தர்ராஜன் குடும்பத்தில் நிச்சியம் யாராவது ஒருவர் படிக்காமல் இருப்பார். அவரை வைத்து ஒரு நல்ல துப்பாக்கி வாங்கி.. மாரியப்பனை போட்டு தள்ள சொல்லுங்கள். இந்திய மற்றும் தமிழ் சமுகத்தில் நீதி நியாய மற்றும் சட்டப்படி மயிர் பிடுங்கிதனங்களுக்கு ஒரு மரியாதையும் இல்லை. நம் மனசாட்சியின் எல்லையே. நமது நியாய தர்மங்கள் ஓர் அளவுதான் நாம் எல்லாவற்றையும் தாங்கி கொள்ளமுடியும். நமது அப்பாவித்தனத்தை பயன்படுத்துகிற ஒருவன் இந்த உலகில் வாழ வேண்டிய அவசியமே இல்லை.]]]

சரி.. அதுக்கெதுக்கு படிக்காதவன் தேவை.. சுந்தர்ராஜனே செஞ்சிரலாமே..? அவர் ஜெயிலுக்குப் போயிட்டா அவர் குடும்பத்தை யார் கவனிக்கிறது..? வேற வழியில்லை இவர்களைச் சட்டப்படிதான் எதிர்கொண்டாக வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[நிலவு said...

போலீசுக்கு ஒரு நியாயம் - பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நியாயமா ? http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_02.html]]]

வந்து படிக்கிறேன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

உங்க பதிவால் சுந்தரராஜனுக்கு புதிய வழிகள் திறக்குமா என பார்க்கலாம்.]]]

திறக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...

உங்களுக்கு என் சல்யூட்.]]]

எதுக்குண்ணே..? என் காதுக்கு வந்த செய்தியை மத்தவங்களுக்கும் ஒரு எச்சரிக்கையா இருக்கட்டுமேன்னு சொல்லிட்டேன்.. அவ்ளோதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[G.Ganapathi said...

அண்ணா நாம ஒட்டு மொத்தமா எத்தனை பதிவர்கள் இருப்போம் சென்னைல மட்டும்? எல்லாரையும் ஒரு நாள் சந்திக்கலாம் பதிவு போடுவது உடன் நமது வேலை முடிந்து விட்டது என்று எத்தனை நாளைக்கு இருப்பது? கொஞ்சம் இறங்கியும் வேலை செய்யலாம். தேர்தல் நேரமும்கூட ஆகவே உடனடி கவனிப்பு இருக்கும். ஒரு சிறிய அளவில் ஒன்று திரண்டு பாதிக்கபட்ட சுந்தரராஜனின் குடும்பத்தாரையும் இணைத்து கொண்டு ஜெய டிவி நாளிதழ்கள், வார புலானய்வு!!! பத்திரிகைகள் தேவைபட்டால் ஆங்கில தொலைகாட்சிகளையும் இணைத்து அறிவிக்க படாத கண்டன ஊர்வலம் கருணாநிதியின் வீட்டில் நுழையும் போராட்டத்தை நடத்தலாம். இப்போதைக்கு அவர்களால் அடக்குமுறையை ஏவ முடியாது என்பது என் எண்ணம். இந்தனை போல மொள்ள மாறி கேப்ப மாறி அரசியல்வாதிகள் பிச்சைகார அரசு அலுவலர்கள் காவல் காக்க சொன்னால் கக்கூஸ் கழுவ தயாராய் இருக்கும் அந்த ஆய்வாளர் போல ஆட்களை சமுதாயத்தில் அம்பல படுத்தவும் அவர்களின் செயல்களை தோலுரிக்கவும் இணைய பதிவர்களால் முடியும் என்பதை காட்டலாம். அணியாக செயல்படுவோம் அநியாயத்தை தட்டி கேப்போம் நான் தயார் நீங்க?]]]

நானும் தயார்.. ஆட்கள்தான் வர வேண்டுமே..? இந்த வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டபடியால் இனிமேல் காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். மாரியப்பனாக வீட்டைக் காலி செய்து கொடுத்துவிட்டு ஏதாவது சமரசத்திற்கு முன் வந்து செய்தால்தான் உண்டு..!

உண்மைத்தமிழன் said...

[[[vinodh said...

//அரசியல்வியாதிகளுக்கு எதிரான புகார்களை போலீஸார் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டியிருக்கிறது.. இதுதான் தற்போதைய நிஜமான தமிழகத்து நிலைமை.
Read more: http://truetamilans.blogspot.com/2011/03/blog-post_03.html#ixzz1FXrxPR00//

அப்போ இந்தியாவுல மத்த இடமெல்லாம் நல்லத்தேன் இருக்கு போல.]]]

எல்லா இடத்திலும் இப்படித்தான். ஆளும் கட்சியை எதிர்த்தால் உமக்கு பரலோகம் நிச்சயம்..!

உண்மைத்தமிழன் said...

[[[vinodh said...

என்ன உண்மைத் தமிழன் அண்ணே, காமன்மேன் ரோசம் வந்து பொங்கியெழனும்னு சொல்லிட்டு அடுத்த வரிலேயே மிகவும் வருந்துகிறேன்னு ஜகா வாங்கிட்டீங்க? ஓ ஒருவேளை நீங்க காமன்மேன் இல்லையோ?]]]

பொங்கி எழத்தான் உங்களை அழைத்திருக்கிறேன். கை கோர்க்க வாருங்கள்.. சேர்ந்து செய்வோம்..! நீங்களும் உங்களுடைய தளத்தில் இதனை ஒரு செய்தியாக வெளியிட்டு உதவுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[middleclassmadhavi said...

பெயரினால் கவரப்பட்டு உள்ளே வந்தேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது. நல்ல பாடம். சுந்தர்ராஜனுக்கு இந்தத் தேர்தல் வந்தாவது தீர்வு கொடுத்தால் சரி!]]]

தி.மு.க. தோற்றால் சுந்தர்ராஜனுக்கு ஏதாவது மாற்றம் கிடைத்தாலும் கிடைக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...

அந்த அப்பாவி மனிதருக்காக மிகவும் வருத்தப்படுகிறேன். பிரபல இதழ்களில் செய்தி வரவழைக்க முடியாதா. லோக்கல் எதிர்க்கட்சி ஆட்கள் என்ன செய்கிறார்கள்..]]]

எல்லா பத்திரிகையிலேயும் சொல்லியாச்சு. கோர்ட்டு, கேஸெல்லாம் நமக்கு வேண்டாம்னு சொல்றாங்க.. லோக்கல் எதிர்க்கட்சிக்காரங்க இது மாதிரி சில விஷயத்துல கண்டும் காணாததுபோலத்தான் இருப்பார்கள்..

உண்மைத்தமிழன் said...

[[[Sarif said...

ரொம்ப வருத்தமாக இருக்கிறது, என்ன பண்றது சார்..நம்மளால முடிந்தது அவ்வளவுதான்.
கடவுளோட வீட்டுக்கே இந்த நாட்டுல பாதுகாப்பு இல்லை. சாதாரண மனுஷன் என்ன பண்ண முடியும். இந்த நாட்டோட நீதிமன்றங்களையும், அரசியல்வியாதிங்களையும் நினைச்சா ரொம்ப கவலையாயிருக்கு. நாமெல்லாம் நடக்கிறதை சகிச்சுகிட்டு இந்த கேவலப்பட்ட நாட்டுல வாழனும், இல்லை நாக்கைப் பிடிங்கிட்டு சாகணும். இவ்ளோ காலமா இருந்த பாபர் மசுதியையே அதை இடிச்சவங்களுக்கு கொடுத்துட்டாங்க. சிங்கள் பெட்ரூம் வீட்டை விட்டு வைப்பாங்கன்னு நினைக்கிறிங்க. எல்லாத்துக்கும் அந்த கடவுள்தான் சார் பதில் சொல்லணும். என்ன சொல்லுறீங்க?]]]

கடைசியாக அவனிடம் முறையிடுவதைத் தவிர சுந்தர்ராஜனால் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜீவன்சிவம் said...

அரசன் எவ்வழியோ அவன் அடிவருடிகளும் அவ்வழிதான். பாதிக்கபடுவதேன்னமோ நம்மை போன்ற சாமானியர்கள்தான்]]]

உண்மை.. தலையே திருடுபவர்கள் கூட்டமாக இருக்கும்போது வால் மட்டும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லைதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[நிலவு said...
நானும் என்னமோ ஏதோன்னு பயந்துட்டன். கிணத்த கண்டா படுபாவிப் பசங்க காணாம அடிச்சிட்டாங்களோன்னு. அது சரி. சுந்தர்ராஜனுக்கு ரோசம் இருக்குல்லா. இதோ அறிவாலயம் இருக்கு போய் அங்கே தீக்குளிக்க சொல்லிருக்கலாம்லா. திண்டுக்கல்காரங்களுக்கு பூட்டு போட நாங்களாங்க சொல்லித் தரணும்.]]]

நிலவு.. அப்பாவிகள் தங்களுக்கு எதிரான கொடுமைகளுக்காக தாங்களே தீக்குளித்துச் சாக வேண்டும் என்பதுதான் உங்களது நீதியா..?

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை ராஜா said...
ம்ம்ம் கொடுமை வேறு என்ன செய்வது. எப்படியும் தேர்தல் நேரத்தில் இலவசங்கள் மட்டும்தான் வாமக்கு ஞ்பகம் வரும்.]]]

மக்கள் இந்த முறை விழித்துக் கொள்ளவில்லையெனில் தொலைந்ததுதான். வார்டுக்கு ஒரு சுந்தர்ராஜன்கள் உருவாக்கப்படுவார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[Ganpat said...

இந்த விஷயத்தில் யாரும் எதுவும் செய்ய முடியாது என்பது நிதர்சனமான உண்மை. இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. ரவுடிகள் பொறுக்கிகளை விட மோசமானவர்கள்,
ஆபத்தானவர்கள், அரசியல்வாதிகளும்,
காவல்துறையினரும்...
புதுபேட்டை படம் பார்க்கவில்லை? அதுதான் உண்மை
சுந்தராஜன் வீடு யானை வாயில் போன கரும்புதான்!]]]

இப்படியே இது தொடர்ந்தால் அடுத்து பல அப்பாவிகள் பாதிக்கப்படுவார்களே..!

உண்மைத்தமிழன் said...

[[[|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

அண்ணே உங்களுக்கு ஈரோடு மாவட்ட முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலராகவும் தமிழக அரசின் முன்னாள் கைத்தறி துறை அமைச்சருமாக பதவி வகித்து வந்த என்.கே.கே.பி.ராஜாவை தெரிந்திருக்கும், ஈரோடு அருகே உள்ள பெருந்துறையை சேர்ந்த சிவபாலன் என்னும் விவசாயியின் மெயின் ரோட்டை ஒட்டிய பெரிய விவசாய நிலத்தையும் ஏக்கர் கணக்கான தென்னந்தோப்பையும் அபகரிக்க, அவரின் மொத்த குடுமபத்தையும் அடியாட்களை விட்டு கடத்தி, சிறைவைத்து அவரின் வயதான மாமனாரையும் அடித்தே கொன்ற ஒரு மாபாதகர். அந்த வழக்கை பத்திரிக்கைகள் சடுதியில் மறந்திருக்கலாம், ஆனால் என்றாவது சத்தியம் ஜெயிக்கும் என்றிருக்கும் பொது மக்கள் மறந்திருக்க முடியாது,

மண்ணாசைக்கு அந்த கட்சி இந்த கட்சி என எந்த கட்சியும் விதி விலக்கல்ல, அரசியல்வாதிகள் எப்போது நம் நிலத்தை [என ஒன்று இருந்தால்] இதுபோல அடித்து பிடுங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நிலத்தை ஃப்ளாட்டை கொடுத்துவிட்டால் உயிராவது மிஞ்சும்.

இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளை சுந்தர்ராஜன் போன்ற காமென்மேன்கள் பகைத்துக் கொண்டால் மேலே சொன்ன சம்பவம் போல கொலை செய்தாலும் செய்துவிடுவார்கள். கிராதகர்கள், இதில் மந்திரியும் ஒன்றுதான் வட்டம் மாவட்டம், அல்லக்கைகளும் ஒன்றுதான். ஈசிமனி செய்ய அலையும் பணப் பேய்கள்.]]]

இவர்களை ஒழித்துக் கட்டத்தான் வரும் தேர்தலை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேறு வழியில்லை நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[reno85 said...
உண்மைத்தமிழன் அவர்களே
இதெல்லாம் பார்க்கும்போது யுத்தம் செய் படத்தில் வருவது போன்று
"ஏன்டா கொஞ்சூண்டு அறிவு இருக்கிற நீயே இப்படி பண்ணும்போது நாங்கல்லாம் எவ்ளோ பண்ணலாம்"
அதனால இவங்கள திருப்பி அடிக்கணும். அதுவும் ஓட விட்டு அடிக்கணும். ஆனா எப்போன்னுதான் தெரியல.]]]

அப்படியும் ஒரு காலம் நிச்சயமா வரத்தான் போகுது.. அன்னிக்கு வைச்சுக்குவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[bandhu said...

நீங்கள் செய்வது ஒரு நல்ல தொடக்கம். இதை ஊதி ஊதி எல்லோரும் பெரிதாக்க வேண்டும். பின்னர் இதை எதிர்கட்சி பத்திரிக்கைகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மாரியப்பன் பெயரை எவ்வளவு நாறடிக்க வேண்டுமோ அவ்வளவு நாறடிக்க வேண்டும். அப்போது தான், கட்சிக்கு அவர் ஒரு லயபிலிட்டி என்ற எண்ணம் தோன்றும். கட்சியின் சப்போர்ட் இல்லையேல் அவர் ஒரு செல்லாக் காசு. அதுவரை ஓயக் கூடாது!]]]

கட்சியின் தலைமையும் அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது நண்பரே.. கடைசியையும் ஒழிக்க வேண்டும். மாரியப்பனைப் போன்ற கிரிமினல்களையும் ஒழித்தாக வேண்டும்.

உண்மைத்தமிழன் said...

[[[ராமுடு said...
Have n't he put any agreement? We should be careful when dealing with property (especially with crapped politicians). No other way than killing that bastard.]]]

கட்சிக்காரர்.. தவறு செய்ய மாட்டார் என்று நினைத்துவிட்டாராம் சுந்தர்ராஜன்.. இது எப்படி இருக்கு..? இவ்ளோ அப்பாவியா ஸார் நீங்கன்னுகூட கேட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[நீச்சல்காரன் said...
வருத்தமான விஷயம்.
திரு.சுந்தரராஜன் அவர்கள் அதே வீட்டை வேறு பெரிய கட்சிக்காரருக்கு விற்க முனையலாம். வல்லவனுக்கு வல்லவன் உண்டு உலகிலே!]]]

யார் வாங்குவா..? இப்போதைக்கு தி.மு.க. ஆளும் கட்சி என்பதால் யாரும் மோத முன் வர மாட்டார்கள்..! ஆட்சி மாறினால் ஏதாவது நடக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...

ஓ.பன்னீர்செல்வத்தைப் பார்த்துப் பேசலாம். கொஞ்சம் நியாயமாக இருக்கும் மனிதர். ஆவன செய்வார். முடிந்தால் ஜெயலலிதாவை சந்தித்துப் புகார் கொடுக்கச் சொல்லுங்கள். தேர்தல் நேரம் என்பதால் நடவடிக்கை இருக்கும். கம்யூனிஸ்டுகள் கண்டிப்பாக உதவுவார்கள். நீங்கள் பிரபல பத்திரிகைகளில் இச்செய்தியைக் கொண்டு வர முயலுங்களேன்!]]]

பத்திரிகைகளின் கவனத்துக்குக் கொண்டு வரத்தான் முயற்சி செய்து வருகிறேன். இப்போது தேர்தல் நேரம் என்பதால் அது தொடர்பான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதுதான் சிக்கல்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

Dear Mr. Chief Minister I am bringing this news and information to your kind attention. We do not know how much persons are there in Tamilnadu like Sundarrajan refered in this article.

Please investigate and take immediate action against the culprits. The culprit Mariappan refered in this article, is misusing your name and fame, your Party's name and fame for his illegal and arrogant activities.

I hope you will definitely make a decision in this regard. The action not only be taken on Mariappan.. it should be extended to the culprits in the Police station and your Ministry also.

If justice can not be given to Mr. Sunderrajan, THEN YOU CAN APPLY YOUR SHIT ON YOUR FACE and also you can ask others who are involved and agreed with this cheating TO DO THE SAME.]]]

நன்றி ரிஷி..

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

//நிலவு said...

நானும் என்னமோ ஏதோன்னு பயந்துட்டன். கிணத்த கண்டா படுபாவிப் பசங்க காணாம அடிச்சிட்டாங்களோன்னு. அது சரி. சுந்தர்ராஜனுக்கு ரோசம் இருக்குல்லா. இதோ அறிவாலயம் இருக்கு போய் அங்கே தீக்குளிக்க சொல்லிருக்கலாம்லா. திண்டுக்கல் காரங்களுக்கு பூட்டு போட நாங்களாங்க சொல்லித் தரணும்///

நிலவு, உங்களுக்கு இது போன்ற நிலை நேர்ந்திருந்தால் இதைப் போன்றதொரு முடிவை எடுத்திருப்பீர்களா??]]]

சரியான கேள்விதான்..! எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

என்னாது ஆட்சிமாற்றம் வந்தா எல்லாம் சரியாயிருமா? இப்ப திமுக அப்டின்னு இருக்க இடத்துல எல்லாம் அதிமுக அப்டின்னு போடுங்க, ஆட்சி மாறுனா அதான் நடக்கும்.///

ஆட்சி மாறினாலும் எதுவும் நடக்காது. அதுவே உண்மை. ஒருவேளை பத்து வருடம் வழக்கு நடந்து சுந்தரராஜன் பக்கமாக தீர்ப்பு வந்தாலும், இத்தனை நாள் பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கேட்க மற்றுமொரு வழக்கைத்தானே போட்டாக வேண்டும்?? இதற்குப் பதில் அந்த மாரியப்பனையே போட்டால்தான் என்ன??]]]

ஒரு கொலைக்கு பரிகாரம் இன்னொரு கொலைதானா ரிஷி..?

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஜே.அசோக்குமார் said...
This government should go, this is the only solution.]]]

அகற்றப்பட வேண்டிய அரசு இது..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...
நல்ல எண்ணம் உள்ள ரிச்மேன்களும் சேர்ந்து பொங்கினால் நன்றாக இருக்கும்!]]]

நீங்களும் உங்களது தளத்தில் இது பற்றி எழுதலாமே சிவா..!

உண்மைத்தமிழன் said...

[ட[[Ponchandar said...

தைரியமாக ப்ரஸ் & மீடியா-களுக்கு எடுத்துச் சென்றால் பலன் கிடைக்கலாம். மே மாதத்துக்கு அப்புறம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அவர் வீடு அவருக்கே கிடைக்க வேண்டுகிறேன்.]]]

ஆட்சி மாற்றம் நடந்து மாரியப்பன் மீது நடவடிக்கை எடுத்தால் சுந்தர்ராஜனுக்கு பரிகாரம் கிடைக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[krishna said...
இப்படி எல்லாம் பண்ணினா பரம்பரைக்கு இந்த பாவம் அவர் குடும்பத்தை சும்மா விடாது. என்னதான் பகுத்தறிவுன்னு சும்மா பூச்சா காட்டுற ஆளா இருந்தாலும் ஒரு குடும்பத்தோட நியாயமான நிம்மதியை கெடுத்தவன் வாழ்ந்ததா சரித்திரமே இல்ல. நிச்சயம் ஒருநாள் அவர் கிட்ட மன்னிப்பு கேட்டு ஓடத்தான் போறாரு.]]]

இதுதான் நம்மைப் போன்ற காமன்மேன்களின் காமனான நம்பிக்கை..!

உண்மைத்தமிழன் said...

[[[amarmuamar said...

Dear Unmaitamilan,

Thanks for posting this kind of eye opeining issues which is very much needed for a general public.

Regards,

Amarnath Santh]]]

நன்றி குமார்..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

தலைவா இது போல் எத்தனையோ சுந்தர்ராஜன்கள் இது போல் அயோக்கிய அரசியல்வியாதிகளால் ஏமாற்றப்பட்டு அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் சொன்னதன் மூலம் மற்றுமொரு ஏமாளியை பற்றி அறிகிறோம்...

“தல” அவர் ரேஞ்சுக்கு லட்சகணக்கான கோடிகளில் திருடுகிறார் என்றால், அவரின் அல்லக்கைகள் அவர்கள் வசதிக்கு ஏற்றார்ப்போல் இது போல் திருடுகிறார்கள்...

இந்த “திருக்குவளை தீயசக்தி” மற்றும் உடன்பிறப்பு கும்பலை விரட்டியடிப்போம்]]]

தேர்தல் களமே இதற்குச் சரியான ஒரு தீர்வு.. எப்படியாவது விரட்டியடிப்போம்..!

உண்மைத்தமிழன் said...

தோழர் ஏதிலி..

தங்களுடைய ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி..

மனித உரிமை பாதுகாப்பு மையத்தை அணுக நானும் அவரிடம் பேசுகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Suresh Kumar P said...
கடவுளே இவங்கள என்ன செய்ய முடியும். இவங்கள நடு ரோட்ல வச்சி சுடனும்.]]]

இப்படித்தான் ஆத்திரமும், கோபமும், வெறியும் உண்டாகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[sarvieanny said...
thaniyae poradina tholvethan ketum. kuttama seyal patalam.]]]

அவருக்கு வேண்டிய நீதியை இனிமேல் நீதிமன்றம்தான் வழங்க வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[ஆளவந்தான் said...
மாரியப்பனின் புகைப்ப்டத்தையும் அவன் முகவரி உட்பட முழு விபரத்தையும் இங்கே தெரிவிக்கலாமே..]]]

விரைவில் தெரிவிக்கிறேன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ram said...

Too bad!

Ram]]]

உங்களுடைய கோபத்தைக் காட்ட தேர்தல் களமே சரியான வழி.. மறந்து விடாதீர்கள் ராம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராகின் said...

http://rktimes.blogspot.com/2007/10/blog-post_3609.html

அல்லக்கைகள் நம்ம வீட்டுலயும் குடிசையை போட்டார்கள். பயந்திருந்தால் வேலைக்கு ஆகாது. எதுத்து நின்னு சவுண்டு விட்டா, வாலை பின்னாடி சுருட்டிக்கிட்டு ஓடுற பீ தின்ற உயிரினம் இதெல்லாம். அனுபவத்தில் சொல்கிறேன், நீங்கள் எல்லோரும் சுந்தர்ராஜனின் வாழ்க்கையை ஒரு நாள் வாழ்ந்து பார்க்க வேண்டும். ஒரு அயோக்கியனை மாடியில் வைத்து கொண்டு செலவிடும் ஒவ்வொரு மணித்துளியின் நரக வேதனைக்கு ஈடான துயரம் வேறில்லை.]]]

அந்த அனுபவம் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை பதிவு..!

உண்மைத்தமிழன் said...

[[[Arunkumar said...

hi friends,
join and against all politicizations.
any one create one web site.

thanks
arun]]]

அப்படி எழுதினால்தான் நடக்கும் போலிருக்கிறது..! இதையும் செய்து விடுவோம்..!

Kannan said...

பேசாம, நம்ம எங்கிட்டாவது ஒரு வெளி நாட்டுல பிறந்து இருக்கலாம்...விதி யாரை விட்டது!!!

உண்மைத்தமிழன் said...

[[[Kannan said...
பேசாம, நம்ம எங்கிட்டாவது ஒரு வெளிநாட்டுல பிறந்து இருக்கலாம். விதி யாரை விட்டது!!!]]]

இது போன்ற வருத்தம் தோய்ந்த எண்ணம் முக்கால்வாசி இந்தியர்களிடத்தில் உள்ளது..!