அச்சமின்றி - சினிமா விமர்சனம்

30-12-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இப்போதெல்லாம் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் எத்தனை பேர் என்கிற கணக்கெடுப்புக்கு பதிலாக, எத்தனை பேர் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள்..? எந்தப் பள்ளி மாணவர் முதலிடம்..? பாட வாரியாக எந்தப் பள்ளி அதிக முதல் மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறது..? எந்தப் பள்ளியின் மாணவர்கள் தொடர்ச்சியாக ஸ்டேட் ரேங்க் எடுத்து வருகிறார்கள்..? என்கிற புள்ளி விவரங்கள்தான் அதிகமாக மீடியா உலகத்தில் அலசப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவே சமீப காலமாக பல பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கு நிறைய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு வருகிறது. பல பள்ளிகளில் 9-ம் வகுப்பிலேயே 10-ம் வகுப்பு பாடங்களை சொல்லித் தருகிறார்கள். இன்னும் சில பள்ளிகளில் 9-ம் வகுப்பில் சரியாக படிக்காதவர்களை அப்படியே பெயில் ஆக்குகிறார்கள். மேலும் பல பள்ளிகளில் 11-ம் வகுப்புக்கு மாணவர்களை தேர்வு செய்வதற்கே நுழைவுத் தேர்வு நடத்துகிறார்கள்.
10-ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களை, பல தனியார் பள்ளிகள் ஆசை காட்டி இழுத்துச் சென்று தங்களது பள்ளியில் சேர்த்து அவர்களை படிக்க வைத்து.. பன்னிரெண்டாம் வகுப்பில் அவர்களது உதவியால் கிடைக்கும் நற்பெயரை வைத்து மற்ற மாணவர்களின் படிப்பு கட்டணத்தை லட்சத்தில் உயர்த்தி கோடி, கோடியாக சம்பாதித்து வருகின்றன.
இன்னும் சில பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்வுக்கு கண்காணிப்பாளராக வரும் ஆசிரியர்களை கைக்குள் போட்டுக் கொண்டு, தங்களது பள்ளி மாணவர்களுக்கு பிட்டுக்களை வகுப்பிலேயே கொடுத்து, அவர்களை எழுத வைத்து பாஸ் செய்ய வைக்கின்றன. 
சென்ற ப்ளஸ்டூ பொதுத் தேர்தலின்போது தேர்வுத் தாளை முன்கூட்டியே வெளியிட்டது.. தேர்வு அறையில் ஆன்ஸர் பேப்பர்களை விநியோகித்தது என்று பல தில்லுமுல்லு வேலைகளை செய்த திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளில் அதிரடி சோதனை நடத்திய கையோடு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக பள்ளிக் கல்வித் துறை மிரட்டியது. அவ்வளவுதான். அந்த மிரட்டல் அதோடு நின்று போனது. காரணம் யாருக்குமே தெரியாது..! இதில் பெரும் ஊழலும், லஞ்சமும் விளையாடியிருப்பதை நம்மால் உணர முடிகிறது.
அப்படி கல்வித் துறையில் இன்றைக்கும் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு ஊழலை, வெளிச்சம் போட்டுக் காட்டும் கதைதான் இந்த ‘அச்சமின்றி’ திரைப்படம்.

ஹீரோ விஜய் வசந்த் ஒரு பக்கா லோக்கல் பிக்பாக்கெட் ரவுடி. தன்னுடன் கருணாஸ், தேவதர்ஷிணி ஆகியோரை கூட்டணி வைத்துக் கொண்டு பஸ்களில் பிக்பாக்கெட் அடித்து பொழுதைக் கழிப்பவர். இவருக்குள்ளும் ஒரு காதல் பொங்கி வழிகிறது. பேருந்தில் பார்த்த மலர் என்னும் சிருஷ்டி டாங்கேயை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். அவரது காதலுக்கு இவரது பிக்பாக்கெட் டீமே விழுந்து, விழுந்து வேலை செய்கிறது.
ஒரு சந்தர்ப்பத்தில் விஜய் வசந்திடம் இருக்கும் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் பர்ஸை பார்த்துவிட்டு விஜய் வசந்த், போலீஸ் என்று நினைக்கும் சிருஷ்டி டாங்கே உண்மையாகவே விஜய் வசந்தை காதலிக்கத் துவங்குகிறார்.
இன்னொரு பக்கம் அந்தப் பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்கு புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்கிறார் சமுத்திரக்கனி. என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். இவருக்கு லஞ்சம் வாங்குவது.. ஊழலில் ஈடுபடுவது.. திருட்டுக்கு துணை போவது இதெல்லாம் சுத்தமாக பிடிக்காது.
இந்த நேரத்தில் இவரது கல்லூரி கால காதலியும், வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியுமான வித்யாவை சந்திக்கிறார். வித்யாவின் தம்பி தான் படித்த பள்ளிக்கூடத்தில் ஏதோ பிரச்சினை என்று தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனால் வித்யாவின் தாய், தந்தை இருவரும் தொடர்ந்து இறந்துவிட்டதையும் கேட்டு அதிர்ச்சியாகிறார் சமுத்திரக்கனி.
தான் அப்போது பார்த்த அதே வித்யா இப்போது தனி மரமாக இருப்பதை உணர்ந்த சமுத்திரக்கனிக்கு இப்போது வித்யா மீது ஒரு பரிவு ஏற்படுகிறது. கான்ஸ்டபிள் கும்கி அஸ்வின் அந்தப் பரிவை பேசி பேசியே காதலாக்கிவிடுகிறார்.
இந்த நேரத்தில் திடீரென்று ஒரு விபத்தில் வித்யா இறந்து போகிறார். வித்யாவின் இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னால் அவர் பயன்படுத்திய ஸ்கூட்டருக்கு அபாரதத் தொகை கட்டச் சொல்லி போக்குவரத்து போலீஸிடமிருந்து தகவல் வருகிறது.
இதனையறியும் சமுத்திரக்கனி, வித்யா இறந்த நேரத்திற்கு பின்பே அவரது ஸ்கூட்டர் போக்குவரத்து போலீஸால் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதை கண்டறிகிறார். இதில் ஏதோ சூது இருப்பதை உணர்ந்தவர் அதைக் கண்டுபிடிக்க முயல்கிறார்.
டோல்கேட்டில் இருக்கும் சி.சி.டிவி கேமிராவில் பார்க்கும்போது வித்யாவின் ஸ்கூட்டரை யாரோ ஒரு ஆள் தள்ளி வருவதைப் பார்க்கிறார். இதை வைத்து போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர், வித்யா இறந்த நேரத்தைத் தவறாகக் குறித்துக் கொடுத்திருப்பதை உணர்கிறார்.
இதே நேரம் சிருஷ்டி டாங்கேயின் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியின் 10-ம் வகுப்பு படிக்கும் பெண், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பூச்சி மருந்தை குடித்து மருத்துவமனையில் சீரியஸாக சேர்க்கப்படுகிறார். இதையறியும் சிருஷ்டி டாங்கே மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கிறார்.
இந்த மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த விவகாரம் கல்வியமைச்சரின் பி.ஏ.வுக்கு தெரிய வர.. அவர் தனது அடியாட்களுடன் சிருஷ்டி டாங்கேவின் வீட்டுக்கு வந்து அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்.
அவர்களிடமிருந்து தப்பிக்கும் சிருஷ்டி டாங்கே போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் செய்ய வருகிறார். ஸ்டேஷனில் இருக்கும் இன்ஸ்பெக்டரான பரத் ரெட்டி சிருஷ்டியிடம் “இது பெரிய கேஸா இருக்கு. வாங்க.. போலீஸ் கமிஷனர்கிட்ட போய் புகார் கொடுக்கலாம்…” என்று சொல்லி அவரை போலீஸ் ஜீப்பில் அழைத்து வருகிறார்.
இதே நேரம் கோவிலுக்கு வந்திருக்கும் விஜய் வசந்த், அந்த ஏரியாவின் பெரிய ரவுடியான ஆர்.கே.வின் பர்ஸை அபேஸாக்குகிறார். தனது பர்ஸ் பறி போனதை உணர்ந்த ஆர்.கே. பிக்பாக்கெட் அடித்த விஜய் வசந்தை தனது அடியாட்களை வைத்துத் தூக்கி வருகிறார்.
பர்ஸை தேடி தருகிறேன் என்று சொல்லி ஆர்.கே.வின் அடியாட்களுக்கு போக்குக் காட்டி அவர்களிடமிருந்து தப்பிக்கிறார் விஜய் வசந்த். வழியில் போலீஸ் ஜீப் வர.. அதில் வாலண்டியராக சிக்கிக் கொள்கிறார். அந்த ஜீப்பில்தான் சிருஷ்டியும் இருக்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் “என்னாச்சு..?” என்று கேட்டுக் கொள்கிறார்கள்.
சமுத்திரக்கனி பரத் ரெட்டிக்கு போன் செய்து வித்யா இறப்பு சம்பந்தமாக ஒரு க்ளூ கிடைத்திருப்பதாகவும் உடனேயே அவரை கிளம்பி வரும்படிச் சொல்ல பரத் ரெட்டி பாதி வழியிலேயே இறங்கிக் கொண்டு சிருஷ்டியை போலீஸ் கமிஷனர் அலுவலகம் செல்லும்படி சொல்லிவிட்டு சமுத்திரக்கனியை தேடி செல்கிறார்.
சமுத்திரக்கனி போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டரின் வீட்டுக்குச் சென்று பொய் சொன்னதற்காக அவரைத் தாக்குகிறார். அந்த நேரத்தில் அங்கே வரும் பரத்ரெட்டி.. அந்த டாக்டரை தன்னுடைய துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அந்தப் பழியை சமுத்திரக்கனி மீது சுமத்தி, உடனேயே மீடியாவை அழைத்து அவர்கள் முன் சமுத்திரக்கனியை காட்டிவிடுகிறார்.
இன்னொரு பக்கம் விஜய் வசந்தையும், சிருஷ்டியையும் அமைச்சர் பி.ஏ.வின் அடியாட்களிடத்தில் ஒப்படைக்கிறார்கள் போலீஸார். அங்கே விஜய் வசந்த் கடுமையாக சண்டையிட்டு சிருஷ்டியையும் காப்பாற்றிவிட்டு ஆர்.கே.வின் பர்ஸை வைத்திருக்கும் கருணாஸை தேடி காஞ்சிபுரம் அருகேயிருக்கும் ஒரு ஊருக்குச் செல்கிறார்.
இன்னொரு பக்கம் சமுத்திரக்கனியை என்கவுண்ட்டரில் போடும்படி கல்வியமைச்சரின் பி.ஏ. பரத் ரெட்டியை முடுக்கிவிடுகிறார். பரத் ரெட்டியும் இதற்காக திட்டம் தீட்டுகிறார். அந்த திட்டத்தை சமுத்திரக்கனி முறியடித்து அவரிடமிருந்து தப்பித்துச் செல்கிறார்.
விஜய் வசந்தும், சிருஷ்டியும் காஞ்சிபுரம் கல்யாணத்திற்கு வர.. அங்கே கல்வி அமைச்சரும் வருவதை தெரிந்து அவரிடத்தில் இது பற்றி புகார் தெரிவிக்கலாம் என்று நினைக்கிறார்கள். அந்த நேரத்தில் அமைச்சருடன் அவரது பி.ஏ.வும் உடன் இருக்க.. அதை சிருஷ்டி பார்த்துவிட்டு விஜய் வசந்திடம் சொல்ல.. இருவரும் இங்கேயிருந்தும் தப்பிக்கிறார்கள்.
சிருஷ்டியை கொலை செய்ய முயற்சிப்பது கல்வியமைச்சரின் பி.ஏ. இதே பி.ஏ.தான் வித்யாவின் கொலைக்கான காரணத்தை கண்டறிய நினைக்கும் சமுத்திரக்கனியையும் கொலை செய்ய முயல்கிறார். இதற்கென்ன காரணம்..? சிருஷ்டி டாங்கேவின் புகார் பின்னணி, வித்யாவின் கொலைக்கான பின்னணி என்ன என்பதெல்லாம் படம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்..!
‘என்னமோ நடக்குது’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அதே கூட்டணியோடு மீண்டும் இணைந்திருக்கிறார் விஜய் வசந்த். தன்னைப் பற்றி பெரிய அளவுக்கு நினைக்காமல் தனக்கு எது வருமோ, அதையே செய்துவிடலாம் என்கிற சின்ன தன்னம்பிக்கையோடு இந்த இரண்டாவது படத்தையும் தயாரித்திருக்கிறார். பாராட்டுக்கள்.
சாதாரண மக்களுக்குப் பிடித்தது போன்ற முகம்.. மிகச் சரளமான நடிப்பு. டைமிங்கை தவறவிடாமல் பேசும் டயலாக்குகள்.. ஆக்சன் காட்சிகளுக்கேற்ற வேகம்.. கொஞ்சம், கொஞ்சம் நடனம்.. நகைச்சுவையை வரவைக்கும் அளவுக்கான நடிப்புத் திறன்.. இதையெல்லாம் இயக்குநரின் அருமையான இயக்கத்தினால் வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் வசந்த். இப்படியே உதயநிதி ஸ்டாலின், விஜய் ஆண்ட்டனி, விஜய் சேதுபதி வரிசையில் இவரும் இடம் பிடித்து தனக்கு பொருத்தமான கேரக்டர்களை மட்டுமே செய்தால் எல்லாம் சுபமே.
கன்னக்குழி என்ற அழகை வைத்தே அசத்தி வருகிறார் அழகி சிருஷ்டி டாங்கே. பிக்பாக்கெட்காரனை போலீஸ் என்று அப்பாவியாய் நம்பி இவர் பேசும் பல வசனங்கள் பல இடங்களில் சிரிப்பை வரவழைத்திருக்கின்றன. கிளாமரை காட்டாவிட்டால் தமிழில் காலம் தள்ளுவது முடியாது என்பதை உணர்ந்து பாடல் காட்சிகளில் தாராளமயக் கொள்கையை அமல்படுத்தியிருக்கிறார் சிருஷ்டி. இயக்குநரும் இவரை மிகச் சரியாகவே பயன்படுத்தியிருக்கிறார்.
சமுத்திரக்கனிதான் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார். என்கவுண்ட்டர் ஸ்பெஷலிட்டுதான் என்றாலும் அவருக்குள் இருக்கும் மனிதாபிமானத்தை உணர்த்தும் காட்சி அந்த போலீஸ் சீருடைக்கே பெருமை தருவது போலிருக்கிறது.
வித்யாவின் மீதான காதலை மீண்டும் உணரும் தருணம்.. வித்யாவின் மரணச் செய்தி கேட்டு கலங்குவது.. தன்னை திட்டமிட்டு சிக்க வைத்தவர்களை வரிசையாக நொங்கி எடுப்பது என்று ஆக்சன் காட்சிகளில் கடைசிவரையிலும் விஜய் வசந்துக்கு இணையாகவே நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி.
இவர்கள் அனைவரையும்விடவும் கலக்கியிருப்பர்கள் இருவர். கல்வித் தாயாக நடித்திருக்கும் ராஜலட்சுமி என்னும் சரண்யா பொன்வண்ணனும், கல்வி அமைச்சராக நடித்திருக்கும் ராதாரவியும்தான்.
சரண்யாவுக்கு இது முற்றிலும் வேறுபட்ட கேரக்டர். இதுவரையிலும் அன்பான அம்மா.. பொறுப்பான மனைவி கேரக்டர்களிலேயே நடித்திருந்தவர் இப்போதுதான் முதல் முறையாக வில்லி வேடத்தை ஏற்றிருக்கிறார். சிரித்துப் பேசியே கழுத்தில் கயிற்றை இறுக்கும் அவரது குணாதிசயத்திற்கு அவரது சிரிப்பே ஒரு அருமருந்தாக இருக்கிறது. செம நடிப்பு..
இவரும் ராதாரவியும் மோதிக் கொள்ளும் காட்சி இந்தாண்டுக்கான டாப் டென் வரிசையில் இடம் பிடிக்க வேண்டிய காட்சி என்றே சொல்ல வேண்டும். ராதாரவியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. எந்த இடத்தில் வசனத்தை ஏற்ற வேண்டுமோ அங்கே ஏற்றி.. எங்கே குறைக்க வேண்டுமோ அதை குறைத்து.. தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சை உணர்ந்து நடித்திருக்கிறார். பெர்பெக்ட் ஆக்சன் எனலாம்.
சில காட்சிகளே வந்தாலும் பிக்பாக்கெட் கும்பலான தேவதர்ஷிணியும், கருணாஸும் சிரிக்க வைத்திருக்கிறார்கள். வித்யா அழகோ அழகு. ஏன் இவருக்கு தொடர்ந்து படங்கள் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. அவருடைய சைகை பாஷை நடிப்பும் மனதைத் தொடுகிறது.
இது போன்ற அரசியல் பேசும் படங்களுக்கு தேவையான வசனத்தை கொடுத்திருக்கிறார் வசனகர்த்தா ஆர்.ராதாகிருஷ்ணன். கடைசி காட்சியில் நீதிமன்றத்தில் அரசுப் பள்ளிகளின் லட்சணம், தனியார் பள்ளிகள் செய்யும் அராஜகம். அரசுகளின் பாராமுகம்.. இவைகளையெல்லாம் ஆள் ஆளுக்கு விளாசும் காட்சிகளில் வசனங்களே கைதட்டலைக் குவிக்கின்றன. பாராட்டுக்கள் ராதாகிருஷ்ணன்.
ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் குறைவில்லை. படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவீனின் தொகுப்புக்கு மிகப் பெரிய சல்யூட். நிறைய இண்ட்டர்கட் காட்சிகள் இருப்பதால் எதுவும் ஜெர்க் ஆகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனாலேயே படம் இடைவேளைக்கு பின்பு விறுவிறுப்பாகச் செல்கிறது.
பிரேம்ஜியின் இசையில் ‘அச்சமின்றி’, ‘காசு கைல’, ‘பாப்பா’ பாப்பா’, ‘உன்னை பார்த்தால்’ பாடல்கள் கேட்க வைக்கின்றன. ‘உன்னைப் பார்த்தால்’ பாடல் தவறான இடத்தில் இடம் பெற்றிருக்கிறது. படம் ஒரு டெம்போ ஏறியிருக்கும்போது இந்தப் பாடல் அந்த டென்ஷனை குறைப்பதால், இதனை நீக்கியிருக்கலாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் பி.ராஜபாண்டிக்கு ஒரு பெரும் பாராட்டு. இப்போதைய தமிழகத்திற்கு மிகத் தேவையான ஒரு கருத்தை இந்த கமர்ஷியல் படம் மூலமாகச் சொல்லியிருக்கிறார். தன்னால் முடிந்த அளவுக்கான இறுக்கமான இயக்கத்தினால்தான் படத்தை கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
ஆனாலும் சில லாஜிக் மீறல்களும் இல்லாமல் இல்லை. படத்தின் துவக்கத்தில் மாவட்ட ஆட்சியாளர் ‘தலைவாசல்’ விஜய்யை குண்டு வைத்து கொலை செய்யும் ராதாரவி, கடைசியில் கோர்ட்டில் வந்து நீதி, நேர்மை, நியாயம், தர்மம் பற்றியெல்லாம் பேசுவதும்.. அவரை நல்லவராகிவிடுவதும் முரண்பாடாக இருக்கிறதே இயக்குநரே..!?
என்னதான் பிக்பாக்கெட்டுகளிடம் மாமூல் வாங்கி ஒத்துழைப்பு கொடுக்கும் போலீஸாக இருந்தாலும் ஸ்டேஷனுக்குள்ளேயே அவர்களை அழைத்து வந்து அவர்களுடன் சீட்டு விளையாடும் அளவுக்கு நெருக்கத்தைக் காட்டுவது அப்படியொன்றும் இயல்பாக இல்லையே இயக்குநர் ஸார்..?
சமுத்திரக்கனியை கொலை வழக்கில் சிக்க வைத்து கைது செய்யும் பரத் ரெட்டி அந்த இடத்தில் அத்தனை மீடியாக்களை அந்த நேரத்தில் கொண்டு வந்து வைப்பதும்.. ஒரு அமைச்சரின் பி.ஏ. இந்த கேஸுக்காக ஒரு பெண்ணை வீடு தேடி வந்து தாக்குவதும்.. கொஞ்சம் ஓவரான திரைக்கதையாகத்தான் தோன்றுகிறது..!
இதேபோல் சரண்யாவின் சொத்துப் பட்டியலை பி.ஏ.விடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ராதாரவி.. அதற்கு அடிபோடுவது போல சரண்யாவை அழைத்து மிரட்டுவதும்.. பதிலுக்கு சரண்யா அவரின் பி.ஏ.வை வைத்து ராதாரவிக்கே ஸ்கெட்ச் போடுவதும் திடுக்கிடும் திருப்பமாக இருக்கலாம். ஆனால் இது ஈபிள் டவருக்கு ஒப்பான லாஜிக் மீறல் திரைக்கதையாகும்.
மற்றபடி ஒரு கமர்ஷியல் பொழுது போக்கு படத்தில் கூடுமானவரையிலும் படம் பார்க்கும் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை கொடுக்கும்வகையில் காட்சிகளை வைத்து.. அவர்களுக்கும் புரியும்வகையில் எளிய வசனங்களையும் வைத்து.. அரசுகளின் கடமையை வரையறுத்துக் கொடுத்திருக்கும் இந்தப் படத்தின் இயக்குநரை நாம் பெரிதும் பாராட்டுகிறோம்..!

துருவங்கள் பதினாறு - சினிமா விமர்சனம்

30-12-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2013-ம் ஆண்டு நவம்பர் கடைசியில் ‘விடியும் முன்’ என்றொரு படம் வெளிவந்து அந்த வருடத்திய சிறந்த படங்களின் லிஸ்ட்டில் இடம் பிடித்தது. அப்படியொரு சிறப்பான படம் அது.
அதேபோலத்தான் இந்த 2016 டிசம்பர் இறுதியில் வந்திருக்கும் இந்த ‘துருவங்கள் பதினாறு’ படமும் பெரும் பெயரைப் பெற்றிருக்கிறது.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் இரவு நேரத்தில் ஒரு கொலையும், அதைத் தொடர்ந்து ஒரு வீட்டில் இளம் பெண் காணாமல் போன விஷயமும், அந்த வீட்டில் படிந்திருக்கும் ரத்தக் கறைப் பற்றியும் புகார் வருகிறது. அந்தப் பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டரான ரகுமான் இந்தக் கேஸை விசாரிக்கத் துவங்குகிறார்.
விசாரிக்க.. விசாரிக்க.. அந்தக் கொலை சம்பவம் பற்றியும், இளம் பெண் காணாமல் போன விஷயமும் வேறு வேறு வடிவங்களில் போய்க் கொண்டேயிருக்க கடைசியாக ரகுமானே விபத்துக்குள்ளாகி போலீஸ் வேலையில் இருந்தே விலக வேண்டி வருகிறது.
போலீஸ் வேலையை இழந்து ஊட்டியில் ஓய்வில் இருக்கும் அவரை இப்போது தேடி வரும் ஒரு இளைஞன், அந்தக் கதையை முழுவதுமாகச் சொல்லும்படி வற்புறுத்துகிறான். இப்போது ரகுமான் அந்தக் கதையைச் சொல்லத் துவங்க.. அது அவ்வப்போது வேறு வேறு கிளைக் கதைகளுடன் செல்ல..
இறுதியில் யார்தான் அந்தக் கொலையாளி..? ஏன் இது நடந்தது..? எப்படி நடந்தது..? ரகுமானின் இப்போதைய நிலைமைக்கு யார் காரணம்..? என்பதை யாருமே யூகிக்க முடியாத திரைக்கதையில் மிக அழகாக இயக்கித் தந்திருக்கிறார் 23 வயதே நிரம்பிய இளம் பொறியியல் பட்டதாரியான அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன்.
படத்தில் அத்தனை காட்சிகளிலும் இயக்கம் சிறப்பாக இருப்பதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம். நடிகர்கள் அனைவரும் யதார்த்தமாக மிக இயல்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
ரகுமானுக்கு நிச்சயம் இந்தப் படம் ஒரு பெரிய பெயரை பெற்றுத் தரப் போகிறது. அந்த அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஊட்டி காட்சிகளில் அவருடைய ஒவ்வொரு ஆக்சனும் ஒரு நடிப்பு என்றே சொல்ல்லாம்.
ஒரே நேரத்தில் அங்குமிங்கும் நடந்தபடியே ரகுமான் பேசுவதும்.. அப்படி பேசும்போதே நான்கு பேரிடம் அவ்வப்போது பதில் சொல்லி அவர்களை அனுப்பி வைப்பதுமாக இயக்கத்தில் அழகைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இவர் மட்டுமில்லாமல் படத்தில் இடம் பெற்றிருக்கும் அத்தனை நடிகர், நடிகைகளையும் கச்சிதமாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். டெல்லி கணேஷ் ஒரேயொரு காட்சியில் வந்தாலும் மிக இயல்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் பார்வையாளர்களின் மனதில் ஒரு பாரத்தை சுமத்துகிறார் டெல்லி கணேஷ். உபயம் இயக்குநர்தான்.
கெளதம் என்கிற அந்த போலீஸ் கான்ஸ்டபிள் பயமே இல்லாமல் இன்ஸ்பெக்டரிடம் உரையாடுவதும்.. தனது சந்தேகத்தை தெரிவிப்பதும்.. காட்சிகளை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறது.
அந்த மூன்று இளைஞர்கள், ராஜனாக நடித்த பிரதீப், கிருஷாக நடித்த வினோத் வர்மா, பேப்பர் போடும் ஷரத்குமார் ஆகியோரும் கவனத்தை ஈர்க்கிறார்கள். மிக அழகியாக யாஷிகாவும், யதார்த்தமான அழகியாக அஞ்சனாவும் சில காட்சிகளே வந்தாலும் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.
சுஜீத் சாரங்கின் ஒளிப்பதிவும், ஜித் சாரங்கின் படத் தொகுப்பும் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம் எனலாம். படமே பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் நடக்கிறது என்றாலும் அதனை படமாக்கியவிதமும்.. மழை காட்சிகளை திரையில் காண்பித்திருக்கும்விதமும், பல காட்சிகளில் கேமிராவின் கோணமும் இது ஹாலிவுட் படமோ என்று நினைக்கத் தோன்றியிருக்கிறது. அந்த இரவு நேரக் காட்சிகளுக்குப் பிறகு மறுநாள் இரவில் நடக்கும் கார் சேஸிங் காட்சியிலும் கேமிராவின் பங்களிப்பு பெரியது.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை எந்த உறுத்தலும் இல்லாமல் படத்தினை தொடர்ந்து பார்க்க உதவியிருக்கிறது. மழை காட்சிகளில் ஒரு சின்ன சப்தம்கூட கவனத்தை திசை திருப்பிவிடும் என்பதால் அவற்றை கவனமாகவே பதிவு செய்திருக்கிறார்.
முன் பின்னான காட்சிகளை தொகுத்து அளித்திருப்பதால் எந்த இடத்திலும் பார்வையாளன் குழப்பமாகிவிடக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு படத்தொகுப்பினை செய்திருக்கிறார்கள்.  கொஞ்சமும் சொதப்பினாலும் படமே கோவிந்தா என்கிற நிலைமையில் எடிட்டரின் பணிதான் இயக்குநரை காப்பாற்றியிருக்கிறது.
எந்தவித லாஜிக் மீறல்களையும் பார்வையாளன் கண்டறியக் கூடாது என்பதற்காக மிகப் பெரிய அளவில் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர்.
அப்போதுதான் புதிதாக அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கிறார் ரகுமான். வீட்டில் லேண்ட்லைன் போன் இருக்கிறது. ஆனால் நம்பர் இன்னும் யாருக்குமே தெரியாது. அவருடைய செல்போன் அந்த நாள் இரவில் தெரியாமல் போலீஸ் ஸ்டேஷனிலேயே வைக்கப்பட்டது. அதனை சார்ஜ் போட்டும் ஏறாமல் போய்.. மாலையில்தான் அதையும் பார்த்து வேறொரு பிளக்கில் சொருகி சார்ஜ் போடப்படுகிறது.
போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வெள்ளை நிறக் கார் வந்து நிற்பது.. ரகுமான் வீட்டு வாசலில் வந்து காத்திருப்பது.. பத்து மிஸ்டு கால் கொடுத்த பின்பு, ரகுமான் திரும்பி போன் செய்யும்போது அந்த போன் சுவிட்ச் ஆப் ஆகியிருப்பது.  
போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு புதிய கான்ஸ்டபிள்களால் சில பிரச்சனைகள் ஏற்படுவது. அவர்களே க்ளூவையும் கொடுப்பது.. எல்லாவற்றையும் சந்தேகி என்பதுபோல எதற்கும் இருக்கட்டும் என்று நினைத்து ரகுமான் ஹேண்டி கேமிராவை பறிமுதல் செய்து வருவது.. அதன் மூலமாக ஒரு க்ளூ கிடைத்து திரைக்கதை விரிவடைவது.
அந்த மூன்று இளைஞர்களில் கோபக்காரனுக்கு “ஸார்” போட்டு பேச வேண்டும் என்று உணர்த்துவது.. ரோட்டில் பார்க்கும் மனோவை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டு மாரிமுத்துவின் வீட்டுக்கு வந்து அமைதியாக அவரை மிரட்டி விஷயத்தை வாங்குவது..
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல கெளதமின் இன்றைய நிலைமை.. அதை அவர் தெரிவிக்கும் முறை.. கடைசியாக ரகுமானுக்கும், அந்தக் கொலையாளிக்குமான உறவு.. அதன் பின் நடக்கும் அந்தக் கோரச் சம்பவம் என்று அனைத்துமே கச்சிதமாக அமைக்கப்பட்ட திரைக்கதையாக இருக்கிறது.
இருந்தும் ரகுமான் மருத்துவமனையில் இருந்து உயிருடன் திரும்பும்போது அவருக்கு டிரைவராக இருந்த கெளதமின் அன்றைய நிலைமையைப் பற்றி அவர் ஏன் கவலைப்படவில்லை…? ஐந்தாண்டுகளாக கோமாவில் இருந்திருக்கிறார் கெளதம். இது பற்றி டிபார்ட்மெண்ட் மூலமாக ரகுமானுக்கு நிச்சயமாக தெரிந்திருக்குமே..! இல்லையெனில் ரகுமான் விசாரித்திருக்க வேண்டுமே..? இந்த ஒரு கேள்விக்கு மட்டும் இயக்குநர் பதில் சொல்லவில்லை என்பதுதான் படத்தில் இருக்கும் ஒரேயொரு குறை..!
பாதி, பாதி கதைகளாக சொல்லப்பட்டாலும் யார்தான் கொலையாளி.. அவன் இப்போது எங்கே இருக்கிறான் என்கிற தேடலை ரசிகனுக்குள் புகுத்தியிருக்கிறார் இயக்குநர். இதிலேயே அவர் ஜெயித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
திரைக்கதையும், இயக்கமும்தான் படத்திற்கு மிகப் பெரிய பலம். ஒரு கிரைம், திரில்லர் படத்தின் திரைக்கதை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணத்தைக் கொடுத்திருக்கிறது.
இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ரகுமானையே படம் சுற்றிச் சுற்றி வந்தாலும், படத்தின் திரைக்கதை ஒரு போலீஸ் விசாரணை எப்படியிருக்க வேண்டும் என்பதை சொல்லிக்காட்டும் விதமாகவும் இருப்பது சுவையான விஷயம்.
அதேபோல் தனக்குக் கீழேயிருக்கும் அதிகாரிகளிடத்தில் எப்படி பேச வேண்டும்..? எப்படி நடத்த வேண்டும் என்று சொல்லிக் காட்டியிருப்பதும், குற்றஞ்சாட்டப்பவர்களை எப்படி விசாரிக்க வேண்டும் என்பதற்கும் மிகப் பெரிய உதாரணமாகியிருக்கிறது இந்தப் படத்தின் திரைக்கதை. காவல்துறையினர் மிஸ் பண்ணக் கூடாத படமும்கூட..!
ஒரு நிமிடம்.. ஒரு நொடி செல்போனை பார்க்க தலையைக் குனிந்தால்கூட இந்தப் படத்தின் கதை புரியாமலேயே போய்விட வாய்ப்புண்டு. அப்படியொரு இக்கட்டான சூழலை தியேட்டருக்கு வரும் ரசிகனுக்குக் கொடுத்திருக்கிறார் இந்த இயக்குநர். இதுவே அவரது திறமைக்குச் சான்று.
இந்தப் படம் நிச்சயமாக உங்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அவசியம் பார்க்க வேண்டிய படம்..! மிஸ் பண்ணிராதீங்க..!

பலே வெள்ளையத்தேவா - சினிமா விமர்சனம்

25-12-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எந்த முன்னுரையும் இல்லாமல் நேரடியாக கதைக்குள் போவோம்..!

போஸ்ட் மாஸ்டரான ரோகிணி தனக்குக் கிடைத்த மாற்றல் உத்தரவினால் தனது மகன் சசிகுமாருடன் மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் வழுதூருக்கு வருகிறார். அங்கேயிருக்கும் ‘செல்பி’ காத்தாயி என்னும் கோவை சரளா-சங்கிலி முருகன் தம்பதியினருக்கு சொந்தமான வீட்டில் குடியேறுகிறார்.
வரும்போதே டிஷ் ஆண்ட்டனாவை கொண்டு வருகிறார். ரோகிணியின் அப்பா சதாசர்வகாலமும் டிவி பார்க்கும் பழக்கமுள்ளவர். அவருக்காகவே அந்த வீட்டில் எப்போதும் டிவி ஓடிக் கொண்டேயிருக்கிறது. அதே ஊரில் வசிக்கும் வளவன், கேபிள் டிவி நடத்துகிறார். அந்த ஊரில் யார் டிஷ் ஆண்ட்டனா வைத்தாலும் அவர்களை பயமுறுத்தியோ, அடித்தோ டிஷ்ஷை தூக்க வைத்துவிட்டு தன்னிடம் கேபிள்  கனெக்ஷன் வாங்க வைத்துவிடுவார். இவருக்கு அந்த ஊர்ப் பஞ்சாயத்து தலைவரும் ஆதரவாக இருக்கிறார்.
அதே ஊரில் வசிக்கும் கறிக்கடை பாயான பாலாசிங்கின் மகள் தான்யா. இவரைப் பார்த்தவுடன் வழக்கமான ஹீரோக்கள் போலவே காதல் கொள்கிறார் சசிகுமார். தான்யா முதலில் மறுத்தாலும் பின்பு காதலுக்கு ஒத்துக் கொள்கிறார்.
இந்த நேரத்தில் டிஷ் ஆண்ட்டனா விஷயத்திற்காக ரோகிணியை தனது வீட்டிற்கு அழைத்து, அவரை அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறார் ஊர்த் தலைவர். அதோடு ரோகிணி வீட்டிற்கும் வந்து யாருக்கும் தெரியமால் டிஷ் ஆண்ட்டனாவை தூக்கிச் செல்கிறார்கள் அவருடைய ஆட்கள்.
இதனால் கோபப்படும் ரோகிணி, சசிகுமாரிடம் அவர்களை அடிக்கச் சொல்கிறார். தாய் சொல்லே மந்திரமாக வாழும் சசிகுமாரும் அவர்களை வெளுத்து வாங்குகிறார். இது போலீஸ் கேஸாகிவிட சிறைக்குச் செல்கிறார் சசிகுமார். இதனால் அரசு வேலைக்காக காத்திருந்த சசிகுமாரின் வேலைக்கான கனவு ஆசை நிராசையாகிறது.
ஜெயிலிலிருந்து வெளியே வரும் சசிகுமார் இனிமேல் வளவனை தான் ஆட்டம் காண வைக்கிறேன் என்று அவனிடமே சவால் விடுகிறார். அப்படியென்ன செய்து சாதிக்கிறார் என்பதும், தான்யா, சசிகுமாரின் காதல் என்னவாகிறது என்பதும்தான் இடைவேளைக்கு பின்னான கதை..!
சின்னக் கதை. அதற்கு பொட்டு வைத்து, பூ வைத்து அழகு பார்ப்பதைவிட்டுவிட்டு, எத்தனை அலங்கோலமாக எடுக்க முடியுமோ அத்தனையையும் செய்திருக்கிறார் இயக்குநர்.
இந்தக் கதைக்குள்ளும் ஒரு அழகான, சுவையான கதைக் கரு ஒன்று உள்ளது. தான்யாவின் அப்பா பல ஊர்களில் சீட்டுப் பிடிப்பதாகச் சொல்லி பணத்தை வசூல் செய்துவிட்டு, கலெக்சன் நிறைய கைக்கு கிடைத்தவுடன் அந்த ஊரைவிட்டு ஓடி வந்து வேறொரு ஊரில் செட்டிலாகும் குணமுள்ளவர்.
இப்போது இந்த ஊருக்கே, வேறொரு ஊரில் அடித்த பணத்துடன் வந்துதான் டேரா போட்டிருக்கிறார். கூடவே இதே ஊரிலேயே சீட்டும் பிடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்தத் தொழிலையும் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த ஒரு கருவை வைத்தே திரைக்கதையை அமைத்திருந்தால் சுவையாக இருந்திருக்கும். வேறொரு திரைக்கதையும் இவர்களுக்கு கிடைத்திருக்கும். இதை கோட்டைவிட்டுவிட்டு ஒரு சாதாரண டிஷ் ஆண்ட்டனா, கேபிள் டிவி மோதலையே மையமாக வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். இதனால் படத்தில் சுவாரஸ்யமே இல்லாமல் சப்பென்று உள்ளது.
இடைவேளை பிளாக்கில் தான்யாவின் அப்பாவின் தில்லுமுல்லுகள் தெரிய வர.. இரண்டாம் பாதியில் அதைத் தீர்த்து வைக்கும் வேலையில் ஹீரோ இறங்கி, அந்தக் குடும்பத்தினரின் நன்மதிப்பைப் பெற்று.. தான்யாவின் அப்பாவுக்கு நல்லவனாக வாழ்வதில் இருக்கும் சுகத்தை உணர்த்தி நல்லவிதமாக படத்தை முடித்திருக்கலாமே..?!
படத்தில் அனைத்து கேரக்டர்களுமே லூஸுத்தனமாக இருப்பது இன்னும் கொடூரமாக இருக்கிறது. முக்கியமாக கோவை சரளா. ஆச்சி மனோரமாவுக்கு பின்பு நடிப்பில் சிகரம் தொடுபவர் கோவை சரளாதான். அதில் சந்தேகமேயில்லை. ஆனால் அதற்காக வடிவேலு பாணியில் பக்கம், பக்கமான வசனங்களை கொடுத்து பேச வைத்தால் எப்படிங்கோ..?
ஒரு பொறுப்பான பாட்டியாக இருக்க வேண்டியவரை பத்தாம்பசலியை போல காட்டியிருக்கிறார் இயக்குநர். மார்க்கெட்டிங் ஆட்களை அவர் வேலை வாங்கும் விதம் ஒன்றுபோதும் இதைச் சொல்வதற்கு.. மேலும் தான்யா கேட்டார் என்று சொல்லி சசிகுமாரிடம் நகைகள், ஒட்டியாணம், கொலுசு, என்று அனைத்தையும் தனக்கென்று வாங்கி அணிவதெல்லாம் ஒரு பாட்டி செய்யக் கூடிய வேலையா இயக்குநரே..?
சங்கிலிமுருகன் கேரக்டர் ஸ்கெட்ச்சும் இப்படித்தான் இருக்கிறது. அவரை சகட்டுமேனிக்கு அனைவருமே ‘டேய்’ போட்டுத்தான் பேசுகிறார்கள். இது என்ன மாதிரியான நாகரிகம் என்று தெரியவில்லை. வயதான மனுஷனை கிராமப்புறங்களில் ‘யோவ்’ என்பார்கள்.. ‘பெரிசு’ என்பார்கள்.. நாம் பார்த்திருக்கிறோம்.. கேட்டிருக்கிறோம்.. ஆனால் இங்கே எல்லை மாறி கடந்து போயிருக்கிறார்கள்.
வளவனின் மகள் கேரக்டரிலும் இதே போன்ற தவறுகள்.. அந்தப் பெண் பார்ப்போர் அனைவரையும் காதலிப்பார் என்றும், சிரித்துப் பேசுவார் என்றும் சொல்லி.. கடைசியில் அப்பா பார்த்திருக்கும் பையனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, கேபிள் டிவியில் வேலை செய்யும் பையனை காதலிப்பதாகச் சொல்ல.. அவருக்கு கோவை சரளா கோஷ்டி கல்யாணம் செய்து வைத்து அனுப்புவதெல்லாம் சின்னப்புள்ளத்தனமாக இருக்கிறது..!
தான்யாவை காதலில் விழ வைக்க சாமியாரிணி பெண்ணிடம் சசிகுமாரை அழைத்துப் போகிறார் கோவை சரளா. அந்த சாமியாரிணி சொல்லும் ஐடியா ‘உவ்வே’ ரகம். எப்படித்தான் இயக்குநர் இப்படியெல்லாம் யோசித்தாரோ தெரியவில்லை..!
இதைவிட பெரிய கொடுமை.. ஹீரோயின் தான்யாவின் அம்மா புகைப்படத்தை வைத்து இயக்குநர் செய்திருக்கும் காமெடி. ஹீரோயின் ஓடி வருவதை போன்ற காட்சிகூட ஓகே. ஆனால் அடுத்த ஷாட்டில் ஹீரோயினின் அம்மாவும் சசிகுமாரை நோக்கி அத்தனை ஆசையாய் ஓடி வருவதை போல காட்டினால் எப்படிங்கோ..? சசிகுமார் முழுமையாக கதை, திரைக்கதையை கேட்டுத்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை. அத்தனை சொதப்பலாக இருக்கிறது திரைக்கதை..!
அவ்வளவு நேரமும் மகளின் காதலுக்கு எதிர்ப்பாக இருக்கும் அம்மா, திடீரென்று எப்படி கணவரை எதிர்த்து பேசுகிறார்..? மகளின் காதலுக்கு எப்படி துணை போகிறார்..? பாலாசிங் ஏன் இப்படி எதற்கெடுத்தாலும் அரிவாளை கையில் தூக்கிக் கொண்டு சண்டைக்கு வருகிறார்..? இதெல்லாம் ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கும் அளவு கடந்த சோதனை என்றே சொல்லலாம்.
படத்தில் மெச்சத்தகுந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் ரோகிணி. அடுத்தது ஹீரோயின் தான்யா. ரோகிணியின் நடிப்பிலேயே சசிகுமார் போடும் சண்டை நியாயப்படுத்தப்படுகிறது. அத்தனை ஆண்கள் முன்னிலையில்.. அதுவுன் தன் மகன் வயதையொத்த பையன்களே தன்னை சீண்டிப் பார்க்கும்விதமாக பேசுவதைக் கேட்டு அவமானப்பட்டு வந்தவர்.. தன் வீட்டிலேயே கை வைத்துவிட்டதை பார்த்து பொங்கி வந்த கோபத்தில் “சக்தி.. அடிடா அவனை…” என்று ஒவ்வொருவரையும் கை காட்டி அடிக்க வைப்பதை காட்சி முடிந்த பிறகே இது சரியா என்று யோசிக்க தோன்றியது. அந்த அளவுக்கு ரோகிணியின் பாடி லாங்குவேஜும், அதற்கேற்ற அவரது குரல்வாகும், நடிப்பும் நம்மைக் கவர்ந்திழுக்கிறது.
புதுமுகம் தான்யா பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரனின் மகள் வயிற்றுப் பேத்தி. சேலையில் பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கிறார். நடிப்பும் வருகிறது. முதல் படம் போலவே இல்லை. இவருக்கு டப்பிங் கொடுத்தவருக்கு மிகப் பெரிய பாராட்டு. எந்தவொரு சின்க் மிஸ்ஸிங்கும் இல்லாமல் கச்சிதமாக இருக்கிறது இவரது வாய்ஸ். நடிப்பிலும் செல்வி தான்யா குறை வைக்கவில்லை. இப்போது கோடம்பாக்கத்தில் இவர் மாதிரியான உண்மையான அக்மார்க் தமிழ் நடிகைகளுக்கு டிமாண்ட்டாக இருக்கிறது. இவர் அந்தக் குறையைத் தீர்த்து வைப்பார் என்று நம்பலாம்..!
கோவை சரளாவும், சங்கிலி முருகனும் ஒருமித்த தம்பதிகளாக வாழ்கிறார்கள் என்று நினைத்தால் கோவை சரளா பேசும் பல பேச்சுக்கள் அந்த நினைப்பையெல்லாம் குழி தோண்டி புதைத்துவிட்டது. தன்னை மலடி என்று சொல்லிவிட்டானே என்று அழுது புலம்பும் காட்சி மட்டுமே அவருக்கானது. மற்றவையெல்லாம் வீணானது.
ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவு அற்புதம். அத்தனை அழகாக அந்தக் கிராமத்தை படம் பிடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் கடும் உழைப்பை காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்பது அவைகளை பார்க்கும்போதே தெரிகிறது. வெல்டன் ஸார்..
தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் இருக்கின்றன. ஒலிக்கின்றன. ஆனால் மீண்டும், மீண்டும் கேட்க வைக்கவில்லை. பின்னணி இசையில் மட்டும் அழுத்தாமல் விட்டு வைத்திருப்பதால் பிடிக்கிறது..!
கலை இயக்குநர் மாயாண்டி, சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன், படத் தொகுப்பாளரான பிரவீன் ஆண்டனி ஆகியோரையும் பாராட்ட வேண்டும். அவரவர் பணியை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். வளவன் கோஷ்டியினரை சசிகுமார் பொளந்து எடுக்கும் அந்தக் காட்சியில் சண்டை பயிற்சியும், படத் தொகுப்பும் அத்தனை பிரமாதம்.
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜி தனது தம்பியான வெள்ளையத்தேவனாக நடித்த ஜெமினிகணேசனை ஒரு காட்சியில் ‘பலே வெள்ளையத் தேவா’ என்று பலமாகப் பாராட்டுவார். அந்த ஒரு வார்த்தையைக் கச்சிதமாகப் பிடித்துக் கொண்டு அதையே கேட்ச்சிங்கான தலைப்பாகவும் வைத்துக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
சசிகுமாரின் கேரக்டர் பெயர் ‘சக்திவேல்’. இதில் வெள்ளையத் தேவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. இடையிடையே சங்கிலிமுருகன் மட்டுமே அந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி சசிகுமாரை தூண்டிவிடுகிறார். அவ்வளவுதான்..!
ஏற்கெனவே தொடர்ச்சியாக முக்குலத்தோர் புகழ் பாடும் கேரக்டர்களையும், கதைகளையுமே தனக்கான கதைக்களமாக கொண்டிருக்கும் சசிகுமார் இந்த முறையும் அதையே பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய படங்களை பார்ப்பவர்கள் பெரும்பாலானோர் முக்குலத்தோர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் என்று நினைக்கிறார் போலும்..! சரி.. நமக்கென்ன..?
முதல் 20 நிமிடத்தில் படம் நன்றாகவே போய்க் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று தான்யாவை பார்த்தவுடன் விமல் போலவும், ஜெய் போலவும் தன்னை நினைத்துக் கொண்டு தலையை அசைத்து ஜொள்ளுவிட்டு தான் தான்யாவை பாலோ செய்வதாகச் சொல்லும் அந்தக் காட்சியில் படுத்த படம் அதன் பின் கடைசிவரையிலும் எழவேயில்லை..!
சசிகுமாருக்கு இதெல்லாம் தேவையே இல்லை.. அவருக்கான இடம் ஒன்று தனியே காத்திருக்கிறது. விமல், ஜெய், சிவகார்த்திகேயன் கதைகளில் அவர் நடிக்க நினைப்பது அவருடைய கேரியரை அவரே அழித்துக் கொள்வது போலத்தான்..! ‘சுப்ரமணியபுரம்’, ‘தாரை தப்பட்டை’, ‘கிடாரி’ போன்ற படங்களின் கதைகளே அவருக்கானது. யாராவது அவருக்கு எடுத்துச் சொன்னால் தேவலை..!
எதுவும் சொல்வதற்கில்லை..!

கத்தி சண்டை - சினிமா விமர்சனம்

25-12-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபாலின் தயாரிப்பில் விஷால் – தமன்னா ஜோடியுடன் வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரிச்சர்டு எம்.நாதன், இசை – ‘ஹிப் ஹாப்’ தமிழா, படத் தொகுப்பு – ஆர்.கே.செல்வா, எழுத்து, இயக்கம்- இயக்குநர் சுராஜ்.

கண்டெய்னர் லாரி ஒன்றில் 300 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கடத்தப்பட்டு வருகிறது. அதனை டெபுடி கமிஷனரான ஜெகபதி பாபு விரட்டிப் பிடிக்கிறார். பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்துவிட்டு, கடத்தி வந்த தருண் அரோராவை ஜெயிலில் தள்ளுகிறார். ஆனால் கருவூலத்தில் வெறும் 50 கோடிதான் பிடிப்பட்டதாக கணக்குக் காட்டப்படுகிறது.
இந்த நேரத்தில் ஜெகபதி பாபுவின் தங்கையான திவ்யா என்னும் தமன்னாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார் விஷால். ஏன், எதற்கு, யார், எவர், தன்னை அவருக்கு எப்படி தெரியும் என்கிற எந்தக் கேள்வியும் கேட்காமல் விஷாலின் காதலுக்கு தூது சென்று அவ்வப்போது தர்ம அடியும் வாங்கி காதலை சேர்த்து வைக்கிறார் லோக்கல் ரவுடியாக தன்னை நினைத்துக் கொள்ளும் சூரி.
விஷால் தமன்னாவை காதலிப்பது அறிந்து விஷாலை ஆள் வைத்து மிரட்டிப் பார்க்கிறார் ஜெகபதி பாபு. விஷால் மசியாமல் போக.. போலீஸை வைத்து தூக்கி வந்து அடித்து உதைக்கிறார். ஆனாலும் தன் காதலில் விஷால் உறுதியாக இருக்க.. தானும் அந்தக் காதலுக்கு ஓகே சொல்கிறார் ஜெகபதி பாபு.
இந்த நேரத்தில் சிறையில் இருந்தபடியே ஜெகபதி பாபுவை போட்டுத் தள்ள உத்தரவிடுகிறார் தருண் அரோரா. இது தெரிந்து ஜெகபதி பாபு சுதாரிப்பதற்குள் அவரையே கடத்துகிறார்கள் தருணின் ஆட்கள். பணத்தைக் கொடுத்துவிட்டால் ஆளைவிட்டுவிடுவதாகச் சொல்ல.. விஷாலிடம் தான் சுருட்டிய பணத்தை வீட்டில் வைத்திருக்கும் இடத்தைச் சொல்லி அதை எடுத்து வந்து கொடுக்கும்படி கேட்கிறார் ஜெகபதி பாபு.
விஷாலும் பணத்தை எடுத்துக் கொண்டு போனவர்.. அங்கே அடிதடியில் இறங்கி பணத்தைக் கொடுக்காமலேயே ஜெகபதி பாபுவை மீட்டுக் கொண்டு வருகிறார். ஆனால் வீட்டுக்கு வந்தவுடன் மற்றொரு டிவிஸ்ட்.. தான் சிபிஐ ஆபீஸர் அர்ஜூன் ராமகிருஷ்ணா என்றும், ஜெகபதி பாபு கண்டெய்னரில் அடித்த பணத்தை கண்டுபிடிக்கத்தான் இப்படி அவருடைய தங்கை தமன்னாவை காதலிப்பதுபோல் நடிப்பதாகச் சொல்லிவிட்டு வீட்டையே சுத்தமாக சுரண்டியெடுத்து மொத்தப் பணத்தையும் சுருட்டிக் கொண்டு போகிறார் விஷால்.
அவர் போன பின்பு ஜாமீனில் வெளியே வரும் தருண் அரோரா நேராக ஜெகபதி பாபுவை தேடி வருகிறார். அங்கே நடந்த கதையைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியானவர், விஷாலின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு விஷால் தன்னுடன் சிறையில் இருந்தவர் என்றும், அவர் சி.பி.ஐ. அதிகாரி இல்லையென்றும் சொல்ல.. ஜெகபதி பாபுவுக்கு வெறியேறுகிறது. இருவரும் சேர்ந்து விஷாலை தேடிப் பிடிக்கிறார்கள்.
விஷாலை விரட்டிச் செல்லும்போது சாலை விபத்து ஏற்படுகிறது. விஷால் அந்த விபத்தில் சிக்கி தலையில் காயமடைகிறார். சிகிச்சையில் விஷாலுக்கு முந்தைய சம்பவங்கள் அனைத்துமே மறந்துவிட்டதாக மருத்துவர் சொல்கிறார்.
இப்போது விஷாலை தங்களது கஸ்ட்டிக்கு எடுத்துச் செல்லும் ஜெகபதி பாபு, தருண் கோஷ்டி இப்போது விஷாலுக்கு மனநல மருத்துவம் அளிக்க டெல்லியில் இருந்து டாக்டர் பூத்ரி என்னும் வடிவேலுவை வரவழைக்கிறார்கள். அவர் மூலமாக விஷாலை குணப்படுத்த முயல்கிறார்கள்.
அவர்களின் இந்த வேலை முடிந்ததா..? விஷாலுக்கு மனநலம் திரும்பியதா..? அவரது காதல் என்னவானது..? அந்த கன்டெய்னர் பணம் என்னவானது..? யாரிடம் இருக்கிறது என்பதையெல்லாம் பொறுமையிருந்தால் தியேட்டருக்குச் சென்று படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இயக்குநர் சுராஜுக்கு என்னாச்சு என்று தெரியவில்லை. எத்தனையோ நல்ல காமெடி படங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் இதில் காமெடி என்கிற பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளை திரையில் பார்த்து நிச்சயமாக அவரே சிரித்திருக்க மாட்டார்.
சூரி முற்பாதியில் சில இடங்களில் சற்றே நகைக்க வைத்தாலும், வடிவேலும் இந்த லிஸ்ட்டில் இடம் பிடித்திருப்பது சற்றே வருத்தப்பட வைக்கிறது. தமன்னா, விஷால் இருவருக்கும் இடையே ஓடி, ஓடி சமாதானம் செய்யும் ஒரு காட்சியில் மட்டுமே வடிவேலு பழைய பன்னீர்செல்வமாகத் தெரிந்தார். மற்றபடி அவரையும் ஓரம்கட்டியிருக்கிறார் இயக்குநர்.
யார்.. என்ன படித்திருக்கிறார்..? என்ன பெயர்..? குடும்பம் என்ன..? என்ன வேலை செய்கிறார்..? இது எதையுமே தெரிந்து கொள்ளாமல் இந்தக் காலத்து பொண்ணுகள் யாராவது காதலிப்பார்களா..? அதுவும் காவல்துறையில் துணை கமிஷனரின் தங்கையாக இருப்பவர் எத்தனை சுதாரிப்பாக இருப்பார்..? இப்படி திரைக்கதையில் நிறைய ஓட்டைகளை பரப்பி வைத்திருக்கிறார் இயக்குநர் சுராஜ்.
சூரி போர்ஷனில் முற்பிறவி கதையைப் பரப்பி அதை நம்ப வைக்க விஷாலும், சூரி ஆட்களும் செய்யும் செட்டப் வேலைகள் கடுப்பைத்தான் கிளப்புகின்றன. அரதப் பழசான திரைக்கதை. சூரி, பெண் வேடத்தில் செய்யும் அலப்பறை மட்டுமே கொஞ்சம் ரசிக்கும்படி இருந்தது.
வடிவேலு போர்ஷனில் முதல் ஷாட்டில் இருந்து கடைசிவரையிலும் நான்ஸ்டாப்பாக பேசிக் கொண்டே வருகிறார் வடிவேலு. சிகிச்சையின்போது தமன்னாவை வரவழைத்து விஷாலுடன் பழக விடும் திட்டத்தில் அவர்களிடம் மாட்டிக் கொண்டு வடிவேலு படும் பாட்டில்தான் கொஞ்சமேனும் சிரிக்க வைத்திருக்கிறார் வடிவேலு. ரொம்ப எதிர்பார்த்து போய் ஏமாந்துட்டோம்..!
விஷாலுக்கு மட்டுமே பொருத்தமான கேரக்டர். அவர் தெலுங்குலகத்திற்கும் சேர்த்தே தன்னை ஒரு காரசாரமான பக்கா மசாலா ஹீரோவாக காட்டிக் கொள்ள முனைகிறார். இடையில் ‘பாண்டிய நாடு’ மாதிரியான அருமையான படத்தைக் கொடுத்தாலும் கமர்ஷியல் கம்மர்கட் வேண்டும் என்று நினைத்து இது மாதிரியான கதைகளில் அவர் மாட்டிக் கொள்வதுதான் நமக்குக் கடுப்பாக இருக்கிறது.
தமன்னாவை கவர்ச்சி ஊறுகாயாகவே காண்பித்திருக்கிறார்கள். படம் முழுவதிலும் பெரும்பாலான காட்சிகளில் தொடை தெரியும் அளவுக்கு டிரவுசர் அணிந்து சிக்கனமாக தயாரிப்பாளருக்கு அதிகம் செலவு வைக்காமல் நடித்திருக்கிறார். ஆனால் நடிப்பென்று பார்த்தால் படத்தில் உருப்படியாய் நடித்திருப்பது இவர் மட்டுமே..!
விஷாலை அடித்து நொறுக்கியதை அறிந்து கோபத்துடன் தனது அண்ணன் ஜெகபதியிடம் வந்து பொங்கும் தமன்னாவிடம் ஜெகபதி பாபு, “ச்சும்மா உன்னை நிசமாவே காதலிக்கிறானா, இல்லையான்னு செக் பண்ணத்தான் அப்படி செய்தேன்…” என்றவுடன் சட்டென்று அமைதிப் பூங்காவாக தனது முகத்தைக் கொண்டு போகிறாரே.. அந்த ஒரு காட்சியிலேயே தமன்னா எங்கயோ போய்விட்டார்..!
பாடல் காட்சியில் கவர்ச்சி ப்ளஸ் கிறக்கம்.. காதல் காட்சிகளில் இப்படியொரு காதலி அமையக் கூடாதா என்கிற ஏக்கம்.. விஷாலை முழுமையாக நம்பி அவர் பின்னாலேயே போகும் காட்சியில் ‘ஐயோ பாவம்.. இப்படி பச்சைப்புள்ளையா இருக்கே?’ என்கிற பச்சாபதம் அனைத்தையும் ரசிகனுக்குள் தனது நடிப்பால் புகுத்தியிருக்கிறார் தமன்னா..
ஜெகபதி பாபு தெலுங்கில் முன்னாள் ஹீரோ. இப்போது குணச்சித்திர நடிகர்.. கேரக்டருக்கேற்ற நடிப்பைக் காட்டியிருக்கிறார். தருண் அரோரா வில்லனாக காட்சியளிக்கிறார். வடிவேலுவின் கூட்டாளிகளாக வரும் பாலாஜி, பாவா லட்சுமணன், ஆர்த்தி மூவரின் கூட்டணியும் அவ்வப்போது சிரிக்க வைத்திருக்கிறது.
ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் குறைவில்லை. வெளிநாட்டு லொகேஷன்களையும், பாடல் காட்சிகள், சண்டை காட்சிகளையும் அழகுற படமாக்கியிருக்கிறார்கள். ‘ஹிப் ஹாப்’ தமிழாவின் இசையில் ‘நான் கொஞ்சம் கருப்பு’தான் பாடல் மட்டுமே கேட்க நன்றாக இருக்கிறது. ‘இதயம் இதயம்’ மற்றும் ‘எல்லாமே காசு’ பாடல்களை காட்சிகளாக மட்டுமே பார்த்துக் கொள்ளலாம். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் அடக்கம் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..!
நிறைய தமிழ்ப் படங்களின் கதை, திரைக்கதையில் இருந்து ஒவ்வொரு காட்சியாக உருவியெடுத்ததுபோல இருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதையில் ஒரு சில இடங்களில் ‘அட’ என்றும் புருவத்தை உயர்த்தவும் வைத்திருக்கிறார் இயக்குநர் என்பதை மறுப்பதற்கில்லை.
விஷால் திடீரென்று தான் ஒரு சி.பி.ஐ. ஆபீஸர் என்று சொல்லி அதிர்ச்சியூட்டும் காட்சியும், தருண் அரோரா விஷால் தன்னோடு ஜெயிலில் உடன் இருந்தவன் என்று சொல்கிற காட்சியும் இதற்கு உதாரணங்கள். கூடவே விஷாலை ரிசார்ட்டில் ஜெகபதி வந்து சந்திக்கும் காட்சியும் எதிர்பாராததுதான்.
கண்டெய்னரை கடத்தி வந்த வில்லன் தருண் அரோரா இப்போது சிறையில் விசாரணை கைதியாகத்தான் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் தண்டனை கைதிகளுக்கான உடையை அணிந்திருக்கிறார். “என்னுடைய ஜாமீன் மனு என்னாச்சு?” என்று அவரே தன்னைப் பார்க்க வரும் ஆளிடம் கேட்கிறார்.
விசாரணை கைதிகளுக்கு தண்டனை கைதிகளை போல வெள்ளை யூனிபார்மையும், நம்பரையும் தர மாட்டார்கள் என்பது சென்னையில் இருந்து எங்கயோ இருக்கும் அத்திப்பட்டியில் இருப்பவனுக்குக்கூட தெரியும்.
காலம் காலமாக பத்திரிகையாளர்கள் இதை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனை கைதிகளுக்கான வித்தியாசத்தை உணர்ந்து கேரக்டர்களுக்கான உடைகளை பொருத்துங்கள் என்று.. யார் கேட்பது..? இந்த 2017-லிலும் இப்படிச் செய்தால் எப்படி..?
‘கத்தி’ படத்தின் கதையைப் போலவே ‘ராபின்ஹூட்’ பாணியில் விஷால் நடத்தியிருக்கும் இந்த கரன்சி கடத்தலின் உண்மையான காரணம் என்னவோ நியாயமானதுதான். எம்.எல்.ஏ.வும், எம்.பி.யும் சேர்ந்து மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்க அவர்களிடத்தில் கொள்ளையடித்து தன் ஊரை வளமிக்கதாக உருவெடுத்திருக்கும் விஷாலின் அந்தச் செயல் பாராட்டுக்குரியதுதான்.. அரசுகளும், ஆட்சிகளும் மக்களுக்காக உழைக்கவில்லையென்றால் மக்களே அதைக் கையில் எடுப்பதில் தப்பில்லைதான். இதைத்தான் படத்தின் இறுதியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுராஜ்.
இதெல்லாம் சரிதான். ஆனால் அந்த ஊர் இப்படி கொஞ்சம், கொஞ்சமாக இப்படி டெவலப் ஆகி வருவது தொகுதியின் எம்.பி.க்கும், எம்.எல்.ஏ.வுக்கும் தெரியவே தெரியாதா..? எப்படி தெரியாமல் போனது..? ஆளும் கட்சிக்காரர்களுக்குத் தெரியாமல் எந்த ஊரில் இது போன்ற நலத் திட்டங்கள் செயல் வடிவம் பெறும்..? “இப்படியெல்லாம் லாஜிக் பார்த்தால் நாங்க எப்படிய்யா படம் எடுக்கிறது…?” என்று இயக்குநர் புலம்புவார் என்பதால் இதோடு இதனை விட்டுவிடுவோம்..!
சுராஜின் முந்தைய வெற்றி பெற்ற காமெடி படங்களை நினைவில் கொண்டு படத்தில் போய் உட்கார்ந்தால் உங்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும். ‘பாண்டிய நாடு’ தந்த விஷால் என்று நினைத்து தியேட்டருக்குள் போனால் உதையே கிடைக்கும்..! பின்பு எப்படித்தான் போவது என்கிறீர்களா..?
தெரியலையே..?