குன்ஹா தீர்ப்பு விவரம் - 7 - "முதலமைச்சருக்கு கொடுக்கப்படும் அன்பளிப்பும் லஞ்சம்தான்...!"

25-10-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜெயலலிதா, தனக்கு பிறந்த நாள் பரிசாக 2 கோடியே 92 லட்சத்து 52 ஆயிரத்து 71 ரூபாய் வந்தது என்றும், அதை முறைகேடான வழியில் தான் சம்பாதிக்கவில்லை என்றும் இந்த வழக்கில் குறிப்பிட்டார். ஆனால், பொது ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் எல்லா அன்பளிப்பும் லஞ்சம்தான். அதுவும் ஊழல் கணக்கில்தான் சேர்க்கப்படும் என்று நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தனது தீர்ப்பில் எடுத்துக்காட்டி உள்ளார்.



 பரிசாக வந்தது எவ்வளவு?

''ஜெயலலிதா தரப்பு இந்த நீதிமன்றத்தில் எடுத்து வைக்கும் வாதம் என்னவென்றால், 'ஜெயலலிதா அவருடைய 44-வது பிறந்த நாளை, 1992-ம் வருடம், பிப்ரவரி 24-ம் தேதி கொண்டாடினார். ஜெயலலிதா மீது அன்பும் மரியாதையும் வைத்துள்ள அவருடைய கட்சித் தொண்டர்கள், பிறந்தநாள் பரிசாக ஏராளமான பொருள்களை வழங்கினார்கள். அவர்களில் பலர், பிறந்த நாள் பரிசாக ஜெயலலிதாவுக்கு லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்தனர். சிலர் ரொக்கமாக கொடுத்தனர். சிலர் செக் மற்றும் டி.டி-யாகக் கொடுத்தனர். அந்த வகையில் 2 கோடியே 15 லட்சத்து 12 ரூபாய் ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது. அதுபோல, வெளிநாட்டில் வசித்த ஒருவர் ஜெயலலிதாவுக்கு 77 லட்சத்து 52 ஆயிரத்து 59 ரூபாய்க்கான டி.டி-யை பிறந்தநாள் பரிசாக அனுப்பி இருந்தார். 

ஜெயலலிதா, 1992-93-ம் ஆண்டு வருமான வரி மற்றும் சொத்துக் கணக்கை தாக்கல் செய்தபோது, இந்த விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட வருமானவரித் துறை அதிகாரிகள், வெளிநாட்டில் இருந்து வந்த பணத்துக்கும், பரிசாகக் கிடைத்த தொகைக்கும் தனியாக வரி விதித்தனர். அதையும் ஜெயலலிதா சரியாகக் கட்டி உள்ளார். ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் குற்றம் சாட்டி உள்ளது’ என்பதுதான்.

இதை நிரூபிக்க ஜெயலலிதாவின் வழக்கறிஞர், இந்த வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவிடம் நடத்திய குறுக்கு விசாரணையில் பதிவு செய்யப்பட்ட விவரங்களைக் கோடிட்டுக் காட்டி உள்ளார். 

மேலும், 'தமிழக அரசியலில் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் தாங்கள் சார்ந்த கட்சியின் தலைவருடைய பிறந்தநாளுக்கு பலவிதமான பரிசுகளை, பொருள்களாகவும் பணமாகவும் கொடுப்பது வழக்கம். அதன்படி ஜெயலலிதாவுக்கும் கொடுக்கப்பட்டது. அதை 75 சாட்சிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். 112 ஆவணங்கள் இதற்கு ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன’ என்று தன்னுடைய வாதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

'அமெரிக்க டாலரில் டி.டி-யாக வந்த 77 லட்சத்து 52 ஆயிரத்து 591 ரூபாய், 1992-93-ம் ஆண்டு தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதுபோல, அதே ஆண்டில் சசிகலாவுக்கு அமெரிக்க டாலரில் டி.டி-யாக கிடைத்த 51 லட்சத்து 47 ஆயிரத்து 951 ரூபாய் பற்றியும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது’ என்றும் வாதிட்டுள்ளார்.

உளுந்தூர்பேட்டை மணிராஜ்!

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர், தன்னுடைய வாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில் சாட்சிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளார். ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாக சாட்சி சொன்ன, மணிராஜ், 'நான் ஒரு வழக்கறிஞர். உளுந்தூர்பேட்டையில் வசித்து வருகிறேன். 1992-ம் ஆண்டில் இருந்து தென்னாற்காடு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளராக இருக்கிறேன். எங்கள் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவின் பிறந்த நாளை நாங்கள் ஒவ்வொரு வருடமும் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். அவருடைய 44-வது பிறந்த நாளையும் சிறப்பாகக் கொண்டாட நினைத்து, அதற்காக நான் பொறுப்பு வகிக்கும் இளைஞரணி உறுப்பினர்கள் 110 பேர்களிடம் பணம் வசூல் செய்து, அதில் வந்த 1 லட்சத்து 65 ஆயிரத்து 200 ரூபாயைக் கொடுத்தேன். அந்தத் தொகையை ஜெயலலிதாவின் பெயரில் டி.டி-யாக எடுத்தேன்’ என்று சொல்லி உள்ளார்.

மணிராஜ் சொன்ன சாட்சியம் உண்மைதான் என்று கோதண்டபாணி, சுந்தரபாண்டியன் என்ற இரண்டு சாட்சிகள் உறுதி செய்துள்ளனர். இவர்களில் கோதண்டபாணி 1,500 ரூபாயையும், சுந்தரபாண்டியன் 2,000 ரூபாயையும் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக, மணிராஜிடம் கொடுத்ததாகவும் சொல்லி உள்ளனர்.

விழுப்புரம் இந்தியன் வங்கி!

ஜெயலலிதா தரப்பின் மற்றொரு சாட்சி, ஆர்.பி.பரமேஸ்வரன். இவர் 2 லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாயைத் தன்னுடைய கட்சிக்காரர்களிடம் இருந்து வசூலித்து, அதை டி.டி-யாக மாற்றி ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்பளிப்பாகக் கொடுத்ததாகக் கூறி உள்ளார். இவரிடம் பணம் கொடுத்த அ.தி.மு.க தொண்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் பி.எம்.எஸ்.மணி ஆகியோர் இதை உறுதிப்படுத்தி உள்ளனர். இவர்கள் தங்கள் பங்காக முறையே 3,000 மற்றும் 1,000 ரூபாயைக் கொடுத்ததாகவும், இதற்காக, கட்சிக் கூட்டம் போடப்பட்டு, அதில் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு பரிசளிக்க வசூல் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு சாட்சி அ.தி.மு.க தொண்டர் டி.கே.மூர்த்தி. இவர் தன்னுடைய கட்சிக்காரர்களிடம் இருந்து பணம் வசூலித்து, 2 லட்சத்து 96 ஆயிரத்து 800 ரூபாய் கொடுத்ததாகச் சொல்லி உள்ளார். இதை, தங்கராஜ், ராமச்சந்திரன் என்ற சாட்சிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும், வசூல் தொகையை டி.கே.மூர்த்தியும் தங்கராஜும் சேர்ந்து இந்தியன் வங்கியினுடைய விழுப்புரம் கிளையில் டி.டி எடுத்ததாகவும் சொல்லி உள்ளனர். ஆனால், அதற்கான ரசீது நகல் தற்போது தங்களிடம் இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

சேலம் நடேசன்!

சேலம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் நடேசனும், தன்னுடைய அணி சார்பில், ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும், தன்னுடைய கட்சித் தொண்டர்களிடம் பணம் வசூல் செய்து 3 லட்சத்து 42 ஆயிரத்து 300 ரூபாய்க்கு சேலம் இந்தியன் வங்கியில் டி.டி எடுத்து ஜெயலலிதாவுக்கு அனுப்பியதாகவும் சொல்லி உள்ளார்.



தகவல் தர முடியாத ஆடிட்டர்!

ஜெயலலிதா தரப்பின் தற்காப்பு சாட்சி ஆடிட்டர் சண்முகம், பாரா 48-ல், ''ஜெயலலிதாவின் 44-வது பிறந்த நாளுக்கு வரைவோலை மூலமாக 2 கோடியே 15 லட்சத்து 12 ரூபாய் அவருடைய கட்சித் தொண்டர்கள் வகையில் வந்தது'' என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும், வெளிநாட்டில் இருந்து, 77 லட்சத்து 52 ஆயிரத்து 591 ரூபாய் கிடைத்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். இவற்றை எல்லாம் ஜெயலலிதா தன்னுடைய வருமானவரிக் கணக்கில் முறையாகக் காட்டி உள்ளதாகவும் கூறி உள்ளார். 

இந்த சாட்சிகள் அத்தனை பேரும் மேலும் ஒரு விஷயத்தையும் நீதிமன்றத்துக்கு தெளிவுபடுத்தி உள்ளனர். அது என்னவென்றால், ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக பணம் வசூல் செய்து அனுப்ப வேண்டும் என்று, தங்கள் கட்சியின் தலைமையிடம் இருந்தோ அல்லது மாவட்டத் தலைமையிடம் இருந்தோ எந்த உத்தரவும் வரவில்லை. இதையெல்லாம் ஜெயலலிதாவின் மீது உள்ள மரியாதை மற்றும் அன்பின் காரணமாக தாங்களே செய்ததாகவும் சொல்லி உள்ளனர்.

ஆனால், ஆடிட்டர் சண்முகத்தை அரசுத் தரப்பு குறுக்கு விசாரணை செய்தபோது, 1991-92 முதல் 1995-96 வரை ஜெயலலிதாவுக்கு வருமானவரிக் கணக்குகளை சண்முகம் தாக்கல் செய்யவில்லை. மாறாக, ஆடிட்டர் ராஜசேகர் என்பவர்தான் தாக்கல் செய்தார் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதனால், இந்த வழக்கில் சர்ச்சைக்குரிய வருடமாக சேர்க்கப்பட்டுள்ள 1991 முதல் 96 வரையில் ஜெயலலிதாவின் சொத்துகள் பற்றியோ, அப்போது அவருக்கு வந்த வருமானம் பற்றியோ ஆடிட்டர் சண்முகத்தால் சரியான தகவல்களை நீதிமன்றத்துக்குக் கொடுக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த அன்பளிப்புகள் விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வரலாம். தற்போது, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் 2145-வது ஆவணத்தின்படி, ஜெயலலிதா 1987-88 முதல் 1992-93 வரையிலான வருமானவரிக் கணக்கை, 1992-ம் ஆண்டு நவம்பர் மாதம் மொத்தமாக தாக்கல் செய்துள்ளார். அப்படி தாக்கல் செய்த ஆவணங்களில், எந்த இடத்திலும் தனக்குப் பிறந்த நாள் பரிசாக டி.டி-க்களாக கோடிக்கணக்கில் பணம் வந்தது என்ற விவரத்தை சொல்லவில்லை.

அண்ணாநகர் மதுரா வங்கி!

அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து, 1991-ம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கை தாக்கல் செய்யும்போது, '1990-க்குப் பிறகு தங்க வைர ஆபரணங்களின் விலை, சந்தையில் இயல்பாகக் கூடியுள்ளது. மேலும், நான் 1990-க்கான வருமானவரியைத் தாக்கல் செய்தபோது, எனக்கு அன்பளிப்பாக தங்க வைர ஆபரணங்கள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் நிறையக் கிடைத்தன. மேலும், அண்ணாநகரில் உள்ள மதுரா வங்கியின் சேமிப்புக் கணக்கு எண்.5158-ல் தனக்கு அன்பளிப்புகளாக செக் மற்றும் டி.டி-யில் பணம் வந்துள்ளன. எனவே, அதற்கான மதிப்பு அறிக்கையை தற்போது தாக்கல் செய்கிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அதுபோல், 18.03.1994 அன்று வருமானவரித்துறைக்கு எழுதிய கடிதத்தில், ''தனக்கு அன்பளிப்புகளாக ரொக்கப் பணம், டி.டி மற்றும் தங்க வைர ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் போன்றவை வெவ்வேறு எண்ணிக்கையில் வெவ்வேறு ஆண்டுகளில் கிடைத்தன என்றும் கூறி உள்ளார்.

நகைகள்... நகைகள்... நகைகள்!

இதில் இருந்து என்ன தெரியவருகிறது என்றால், 1992-நவம்பரில் மொத்தமாக தாக்கல் செய்த வருமானவரிக் கணக்குகளில், பிறந்த நாள் அன்பளிப்புகள் பற்றி ஜெயலலிதா குறிப்பிடவில்லை. ஆனால், அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து தனக்குப் பிறந்த நாள் அன்பளிப்புகள் கிடைத்தன என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அப்போதும்கூட எந்தப் பிறந்த நாளில் எவ்வளவு அன்பளிப்புகள் கிடைத்தன. அதற்கு முந்தைய பிறந்த நாட்களில் கிடைத்தது எவ்வளவு, அதற்கடுத்து வந்த பிறந்த நாட்களில் கிடைத்த அன்பளிப்புகள் எவ்வளவு என்பது பற்றிய விவரங்களை ஜெயலலிதா தெளிவாகக் குறிப்பிடவில்லை. 

1991-ல் தொடங்கி முதல் மூன்று ஆண்டுகளில் அன்பளிப்புகளாகக் கிடைத்தவை எல்லாம் நகைகள்... நகைகள்... நகைகள்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதில் ரொக்கமாகக் கிடைத்தவை என்று எதுவும் காட்டப்படவில்லை. காசோலை கணக்குகளும் இல்லை.. வரைவோலை கணக்குகளும் இல்லை. ஆனால், அதன் பிறகு பல வருடங்கள் கழித்து முந்தைய ஆண்டுகளுக்கான சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது, தனக்கு அன்பளிப்புகளாக செக், டி.டி மற்றும் ரொக்கமாகப் பணம் வந்தது என்று ஜெயலலிதா சொல்கிறார். 

இந்த வருமானங்களை, வருமானவரித்துறை ஆணையர், அவர்களுடைய சட்டப்படி, எந்த வழியில் வந்தது என்று தெரியாத வருமானம் என பதிவு செய்து வைத்துள்ளனர். இதை எதிர்த்துக்கூட ஜெயலலிதா, தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதுவும் இப்போதுவரை நிலுவையில் உள்ளது. 

இதுபோல், ஒரு பொது ஊழியர் தன்னுடைய வருமானத்துக்கு அதிகமாகத் தன்னிடம் இருக்கும் சொத்துகளை அன்பளிப்புகளாக வந்தவை என்று சொன்னால், அதை ஏற்றுக்கொண்டு அந்த வருமானத்தை நியாயமான வழியில் சம்பாதித்த வருமானமாகக் கருத முடியாது.

எது உண்மையான வருமானம்...?

மத்தியப் பிரதேச மாநில அரசு - அவாத் கிஷோர் குப்தா வழக்கின் தீர்ப்பு இதற்குச் சிறந்த உதாரணமாக உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பில், 'பொது ஊழியரின் தகுதிப்படி, அவருடைய வருமானம் என்பது அவரது அலுவலகத்தின் மூலம் வரும் ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை மட்டுமே. 
அந்த அளவுகோலை மீறி, ஒரு பொது ஊழியரின் கையில் இருக்கும் மற்ற வருமானங்களைச் சரியான வருமானமாகக் கொள்ள முடியாது. எதிர்பாராமல் ஒருவருக்குக் கிடைக்கும் பணம், ஊழல்கள் மூலம் வரும் லாபங்கள், குற்றங்கள் அல்லது முறைகேடான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் ஆதாயங்கள் போன்றவற்றை நல்ல வருமானமாகக் கருத முடியாது.

அதன்படி பார்த்தால், இரண்டு கோடிக்கும் அதிகமான பணமும், வெளிநாட்டில் இருந்து வந்த 77 லட்சத்தையும் தனக்கு பிறந்த நாள் அன்பளிப்பாகக் கிடைத்ததாக ஜெயலலிதா கூறுவதை ஏற்கமுடியாது. 

இவை எல்லாம் அவர் முதலமைச்சராக இருந்ததால்தான் அவருக்கு வந்துள்ளன. அவர் அந்தப் பதவியில் இல்லாதபோது இந்த அன்பளிப்புகள் அவருக்கு வந்ததா..? இல்லையே. ஜெய​லலிதாவின் கட்சித் தொண்டர்கள், அவரிடம் அன்பைப் பெறுவதற்கும் கட்சியில் அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் இவ்வளவு பெரிய தொகையை பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தார்கள் என்றால், அதற்குப் பிறகு வந்த பிறந்த நாட்களின்போது, அவர்கள் ஏன் இவ்வளவு அன்பளிப்புகளைக் கொடுக்கவில்லை?

'அன்பளிப்புகளுக்கும் தடை!’

ஆனாலும், ஜெயலலிதாவின் கட்சிக்காரர்கள் ஜெயலலிதாவுக்கு அன்பளிப்புகளை கொடுத்தது உண்மை என்று சொல்லி, அதற்கான ஆதாரங்களை கொடுத்துள்ளனர். அந்த ஆதாரங்களில் சில ஓட்டைகள் இருந்தாலும் அவற்றை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. 

ஆனால், முதலமைச்சராக இருப்பவர் அன்பளிப்புகளை வாங்கி, அவற்றைத் தனது உரிமையாக்கிக் கொள்வது ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி தவறாக இருக்கும்போது, அவருடைய கட்சிக்காரர்கள் அன்பளிப்புகளை நாங்கள்தான் கொடுத்தோம் என்று சொல்லும் சாட்சியால் என்ன பயன்..?

இதை உச்ச நீதிமன்றம் தெளிவாக வரையறுத்துச் சொல்லி உள்ளது. 'பொது ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது எப்படி தடை செய்யப்பட்டுள்ளதோ, அதுபோல் அன்பளிப்புகள் வாங்குவதும் தடை செய்யப்படுகிறது. 

ஏனென்றால், பொது ஊழியராக இருப்பவர் அன்பளிப்புகளை பெற்று கொள்ளலாம் என்று சொல்லிவிட்டால், லஞ்சம் வாங்குவதற்கு சட்டம் உருவாக்கி வைத்துள்ள தடைகளை 'அன்பளிப்பு' என்ற வழியில் எளிமையாகக் கடந்துவிடுவார்கள். அதனால், லஞ்சம் வாங்க விதிக்கப்பட்டுள்ள தடையும், அதற்கான தண்டனையும் அர்த்தமற்றதாகிவிடும். 

அதனால்தான், லஞ்சம் பெறுவதும் லஞ்சம் கொடுப்பதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 161 மற்றும் 165 சட்டப்படி குற்றமாக்கப்பட்டு உள்ளது. ஏனென்றால், வாங்குவது மட்டுமல்ல, லஞ்சம் கொடுக்க முன் வருவதும், அரசு இயந்திரத்தின் சீரான போக்கை பழுதடையச் செய்துவிடும். 

எனவேதான், ஒருவர் பொது ஊழியருக்கு லஞ்சம் கொடுப்பதும், அதை பொது ஊழியர் பெற்றுக் கொள்வதும் என்ற இரண்டுமே குற்றமாகிறது. மேலும் இந்திய தண்டனைச் சட்டம், 161 மற்றும் 165-ல் பிரிவு எஸ்.5 ஊழலற்ற அரசு நிர்வாகத்தையும் பொது ஊழியரின் பொது வாழ்வின் துய்மையையும் உறுதி செய்கிறது. 

எனவே, பரிசுப் பொருள்களாக வந்திருந்தாலும், அவற்றுக்குச் சரியான ஆதாரங்கள் இருந்தாலும்கூட , அவற்றை ஜெயலலிதா பெற்று தனது உடைமையாக்கிக்கொண்டது ஊழல் தடுப்புச் சட்டப்படி குற்றம்தான்!''

- என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹைதராபாத் திராட்சைத் தோட்ட வருமானம் பற்றி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்  அடுத்த இதழில்...

- ஜோ.ஸ்டாலின்

நன்றி : ஜூனியர்விகடன் 

பூஜை சினிமா விமர்சனம்

24-10-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வரும் காலத்தில் டிஜிட்டல் கேமிரா இல்லாமல் செல்போனிலேயே படம் எடுக்கும் காலம் வந்தாலும் வரலாம். ஆனால் ஹரி தனது படத்தில் அரிவாள், கத்தி இல்லாமல் படமெடுக்க மாட்டார் என்று பதினெட்டுப்பட்டி கருப்பசாமி மீது சத்தியம் செய்து சொல்லலாம்..!

வழக்கமான ஹரி படம்தான்.. ஒரு பாடல்.. தொடர்ந்து காமெடி.. சண்டை.. ரொமான்ஸ்.. பாடல்.. காமெடி.. சண்டை.. ரொமான்ஸ்.. என்று ஒரு வட்டமாகவே படம் செல்கிறது..! யார் மாறினாலும் தான் மாறுவதற்குத் தயாராக இல்லை என்று மீண்டுமொரு முறை சொல்லியிருக்கிறார் ஹரி.
கோயம்புத்தூர் மார்க்கெட்டில் வட்டிக்கு பணம் கொடுக்கும் பிஸினஸை செய்து வருகிறார் ஹரி. இவருடைய துணைக்கு சூரியும் மணிகண்டனும். அதே ஊரில் இருக்கும் மிகப் பெரிய பைனான்ஸ் கம்பெனியான அன்னம் பைனான்ஸின் உரிமையாளர் அன்னதாண்டவம்.. வெளியில்தான் பைனான்ஸ் கம்பெனி. உள்ளுக்குள் ஒரு தாதா. அடியாட்களை வைத்து கமுக்கமாக ஆளை போட்டுத் தள்ளும் தொழிலைச் செய்து வருகிறார்.
மால் ஒன்றில் ஹீரோயின் ஸ்ருதிஹாசனை பார்க்கிறார் விஷால். பார்த்தவுடன் காதல் தொற்றிக் கொள்கிறது.. வழக்கம்போல மோதலில் துவக்குகிறார்கள்.. பின்பு உண்மை தெரிந்து நட்பாகிறார்கள்.. ‘கிராவிட்டி’ சினிமா பார்க்கச் செல்கிறார்கள் இருவரும். அதே நேரம் அதே தியேட்டரில் படம் பார்க்கவரும் அடிஷனல் எஸ்.பி.யான சத்யராஜை போட்டுத் தள்ள ஆட்களை அனுப்பியிருக்கிறான் அன்னதாண்டவம்.
இது தியேட்டருக்கு வெளியில் இருக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் தெரிய வர, அவரது அழைப்பின் பேரில் தியேட்டரைவிட்டு வெளியே வரும் விஷால், சத்யராஜை தாக்க ரவுடிகள் வருவதை பார்த்து அவர்களை அடித்து உழைத்து சத்யராஜையும், அவர் மனைவியையும் காப்பாற்றுகிறார். ஆனால் சத்யராஜின் கண்ணில் படாமல் எஸ்கேப்பாகிறார்.
வில்லன் அன்னதாண்டவம் யார் அந்த ஹீரோ என்று ஒரு பக்கம் தேடுகிறார். தன்னைக் காப்பாற்றிய வல்லவன் யார் என்று சத்யராஜும் ஒரு பக்கம் தேடுகிறார். இந்த நேரத்தில் தன்னுடைய காதலை ஸ்ருதிஹாசனிடம் சொல்கிறார் விஷால். “உன் ஸ்டேட்டஸ் என்ன.. என் ஸ்டேட்டஸ் என்ன..?” என்று ஸ்ருதி கேட்டுவிட விஷால் மூட் அவுட்.
இந்த நேரத்தில் விஷால் யாரென்று சூரியே சொல்கிறார். ஊரிலேயே மிகப் பெரிய நிறுவனமான கோவை குரூப்ஸின் மூத்தவரின் மகன் விஷால். வீட்டில் அத்தை மகளின் திருமணத்திற்கு முதல் நாள் ஒரு சம்பவம் நடந்துவிட.. அதில் தெரியாத்தனமாக மாட்டிக் கொண்ட விஷாலை அவரது அம்மா ராதிகா அடித்து வீட்டை விட்டு வெளியேற்றிவிடுகிறார். அதனால் இங்கே கோவை மார்க்கெட்டுக்கு வந்து பைனான்ஸ் பிஸினஸ் செய்கிறாராம்..!
இப்போது கட் செய்தால் விஷாலின் குல தெய்வக் கோவிலுக்காக விஷால் குடும்பத்தினர் கொடுத்திருந்த கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வில்லன் அன்னதாண்டவம் ஆட்டைய போட பார்க்கிறார். இதனைத் தடுத்து முறைப்படி அந்த நிலத்தை கோவிலுக்கே எழுதி வைக்கிறார்கள் விஷாலின் குடும்பத்தினர்.
இந்த நேரத்தில் விஷாலை தேடி வரும் ஸ்ருதிக்கு விஷால் யாரென்பது தெரிய வர உள்ளம் உருகுகிறது.. காதல் தானாய் பிறக்கிறது.. அங்கே கிராமத்தில் கோவிலின் புதிய அறங்காவலாக பதவியேற்க வந்த சித்தப்பா ஜெயபிரகாஷை ஆள் வைத்து அடித்து அவமானப்படுத்துகிறார் வில்லன் அன்னதாண்டவம்.
இதனால் கோபப்படும் ராதிகா தனது மகன் விஷாலை போனில் அழைத்து “சித்தப்பனை அடிச்சவனை கையை ஒடிச்சிட்டு வாடா…” என்கிறார். மகனும் சொன்னதை செய்துவிட்டு வருகிறார். ஆனால் போன வேகத்தில் மெயின் வில்லன் அன்னதாண்டவத்தையும் புரட்டியெடுத்துவிட்டு வந்திருக்கிறார்.
வில்லனும் கொதிக்க.. விஷால் அவனைவிட கொதிக்கிறார். ஊரில் வைத்து வெளுத்தது போதாதென்று பொள்ளாச்சியில் நடுரோட்டில் வைத்தும் வில்லனை அடித்து உதைக்கிறார். இதை பேருந்தில் பயணம் செய்யும் ஸ்ருதி வீடியோ எடுத்து தோழிக்கு அனுப்ப… அவள் “அதை யூடியூபில் போட்டுவிட லட்சம் பேர் பார்த்து மகிழ்கிறார்கள். தன் மானம், மரியாதை போச்சே என்று வெறியாகிறார் வில்லன்.
இனி விஷாலின் குடும்பத்தை அழிப்பதுதான் தனது முதல் வேலை என்கிறார். நான் இருக்குறவரைக்கும் அது நடக்காதுடா என்கிறார் விஷால். ஏதாச்சும் நடந்துச்சா..? விஷால் என்ன செஞ்சாருன்றதுதான் இடைவேளைக்கு பின்னான சவால் விட்ட காட்சிகள்.. இதைத் தெரிஞ்சுக்கணும்னா தியேட்டருக்கு போயே பார்த்துக்குங்களேன்..!
பொள்ளாச்சி, அவினாசி, கோயம்புத்தூர், கிராமம் என்று நான்கு புறமும் சர்.. சர்ரென்று பறக்கின்றன கார்களும், ஜீப்புகளும்.. விஷாலின் கட்டுமஸ்தான உடம்பினால் அடிதடி காட்சிகளில் லாஜிக்கையெல்லாம் பார்க்கவே தேவையில்லை என்றாகிவிட்டது.. படம் மொத்தமுமே பரபர.. சரசரவென ஓடுவதால் எதையும் உள்ளே யோசிக்கவும் நேரமில்லை. ஒரு லாஜிக் மறைவதற்குள் அடுத்த லாஜிக் வந்துவிடுகிறதா.. அதான் எல்லாமே மறந்து போச்சுன்னுதான் சொல்லணும்..!
விஷால் பறந்து பறந்து அடிக்கிறார்.. ஸ்ருதிஹாசனை கொஞ்சுகிறார். கெஞ்சுகிறார்.. சூரியை மிரட்டுகிறார்.. வில்லனிடம் கோபப்படுகிறார். சத்யராஜிடம் சோகப்படுகிறார். அம்மா ராதிகாவை பார்த்தவுடன் கண்ணீர் விடுகிறார். அவர் என்ன செய்தாலும் நமக்கு எதுவும் ஆகவில்லை என்பதுதான் உண்மை..!
ஆட்களை பறக்க வைத்தது போதாதென்று கார்களையும், ஜீப்புகளையுமே பறக்க விட்டிருக்கிறார் இயக்குநர். சண்டை காட்சிகளுக்குத்தான் பட்ஜெட் கூடியிருக்குமென்று நினைக்கிறோம்.
ஸ்ருதிஹாசனின் உடைகள் சிக்கென்று இருக்கின்றன. அழகு கூடிக் கொண்டே செல்கிறது.. ‘வாசு’, ‘வாசு’ என்று அவர் அழைக்கையில் காதுக்கு இனிமையாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தக் குரல்..? லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இதே குரல்தான்.. ஒரு புல் பாட்டிலை ராவா அடிச்சிட்டு பேசுற மாதிரியிருக்கும் இந்தக் குரல் அந்த அழகான முகத்திற்கு கொஞ்சமும் தோதாக இல்லை. ஸ்ருதி கொஞ்சம் கோபித்துக் கொள்ளாமல் அடுத்த படத்தில் இருந்து இரவல் குரல் வைத்துக் கொள்வது நலம்..!
டபுள் மீனிங்கெல்லாம் கேட்டு ரொம்ப நாளாச்சுன்னு ஒரேயொரு டயலாக்கை அதுவும் அம்மா, அப்பாவிடம் ஸ்ருதி பேசுவதுபோல காட்டியிருக்கிறார்கள். நல்ல முன்னேற்றம்..!
நடிகர் சங்க தேர்தலை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நடத்திவிடலாம் என்று நினைக்குமளவுக்கு நட்சத்திரப் பட்டாளத்தை குவித்திருக்கிறார் ஹரி. அத்தனை பேருக்கும் ஒரு அளவுக்கான காட்சிகளை கொடுத்திருக்கிறார். ரேணுகா அந்த ஒரேயொரு காட்சியிலேயே ஸ்கோர் செய்துவிட்டார். சித்தாரா, கவுசல்யா என்று ஓல்டு இஸ் கோல்டு பார்ட்டிகள்.. ஆனால் ஸ்கோர் ஏதும் இல்லை..
ஆனாலும் வன்முறையை குடும்பமே தூண்டிவிடும் வசனங்களை இந்தப் படத்துலதான்யா அதிகமாக கேட்டிருக்கோம்.. குடும்பத்தில் ஒருத்தர் பாக்கியில்லாமல் அனைத்து பெண்களும் “வெட்டிட்டு வா.. குத்திட்டு வா…” என்கிறார்கள். என்ன கொடுமை சரவணா இது..?
இன்னொரு பக்கம் ஆண்ட்ரியா.. ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியிருக்கிறார். ஆடுகின்ற 4 நிமிடங்களுமே தன்னைத் தவிர வேறு யாரையும் பார்க்கக் கூடாது என்பதற்காகவே ‘ஆட்டம் காட்டியிருக்கும்’ ஆண்ட்ரியாவுக்கு ஒரு ஷொட்டு..! ஆனால் பாட்டுதான் ஒரே மெட்டு..!
இன்றைய தமிழ்ச் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் ஜோடிக்கு இருக்கும் டிமாண்டை பயன்படுத்தி இந்தப் படத்தில் ஒரு புதிய ஜோடியை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஹரி. சூரி-பிளாக் பாண்டி காமெடி ரசிக்கும்படிதான் இருக்கிறது. கூடவே  இதையே தொடர்ந்தால் அவர்களுக்கும் நல்லது. தமிழ்ச் சினிமாவுக்கும் நல்லதுதான்..!
சத்யராஜ், ஐஸ்வர்யா ஜோடிக்கு அதிக வேலையில்லை. ஆனால் சத்யராஜின் அந்த  போலீஸ் டிரெஸ்ஸும், ஆக்சனும்.. அன்னதாண்டவத்திடம் வந்து எச்சரிக்கை செய்யும் காட்சியும் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது..!
நினைத்த நேரத்திற்கெல்லாம் பாடல்கள்.. வெளிநாட்டு லொகேஷன்கள்.. கேட்டு கேட்டு சலித்த மெட்டுக்களாக இருந்தாலும் கேட்க வைத்த வரிகள்.. தலைவலி வராத சண்டை காட்சிகள்.. வேகமான இயக்கத்திறு ஈடு கொடுத்திருக்கும் பிரியனின் கேமிரா.. கொஞ்சம் சஸ்பென்ஸ் கலந்த பீகார் மாநில காட்சிகள்.. லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு இருக்கும் பல காட்சிகள்.. இதையெல்லாம் தாண்டித்தான் இப்படியொரு விறுவிறு சுறுசுறு படத்தை வழங்கியிருக்கிறார் இயக்குநர் ஹரி.
விஷாலுக்கு இதற்கு முந்தைய இரண்டு படங்களும் வெற்றி பெற்றாலும் பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள்.. ‘பாண்டிய நாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’ படங்களில் விஷால் தனித்து தெரிந்தது அதன் கதை மற்றும் சிறந்த இயக்கத்தினால்தான்.
கமர்ஷியல் படங்கள் தேவைதான். ஆனால் மேற்சொன்ன இரண்டு படங்களை போன்ற அழுத்தமான மனதைத் தொடும் கதையுடனும், சிறப்பான இயக்கத்துடன் வந்தால்தான் அந்த கமர்ஷியலுக்கே ஒரு மரியாதை..!
‘பூஜை’ இன்னமும் சரியான ஒரு கதையுடன் வந்திருந்தால் ‘பாதபூஜை’யே செய்திருக்கலாம்..!

கத்தி - சினிமா விமர்சனம்

22-10-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தியாவில் தினம் தோறும் நடைபெறும் தற்கொலைகளில் பெரும்பாலானது விவசாயிகளின் தற்கொலை என்கிறது புள்ளி விவரங்கள். கடந்த 15 ஆண்டுகளில் மக்களின் உணவு பழக்க முறை மாறிவிட்டது ஒரு புறமிருந்தாலும், விவசாயத் துறை பின்னோக்கி போக ஆரம்பித்திருப்பதை அதி நவீன அரசியல்வியாதிகளாய் மாறிப் போன நமது ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.. 

இல்லாவிடில் உள்நாட்டு கோதுமை உற்பத்தியை குறைத்துவிட்டு வெளிநாட்டில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்வார்களா..? உள்நாட்டில் தயாராகும் சர்க்கரைக்கான லெவி கொள்முதல் விலையைக் குறைத்துவிட்டு, வெளிநாட்டில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்வார்களா..? ஊழலும், லஞ்சமும் ஒரு பக்கம் விவசாய விளைபொருட்களுக்கான விலையைக் குறைத்து மதிப்பிட வைத்தது ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் அதிகரித்து வரும் நகர்ப்புறங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு அவையெல்லாம் குடியிருப்புகளாக மாறிவிட்டன.

இத்தனையையும் மீறி விவசாயத்தைத் தவிர தனக்கு வேறெதுவும் தெரியாது என்று சொல்லும் இந்திய விவசாயிகள், விவசாயத் தொழிலில் இறங்கினால் அவர்களுக்கு இயற்கையும் கை கொடுக்கவில்லை.. மழையே இல்லாமல்.. தண்ணீர் பாசனமே இல்லாமல் எந்த பயிரையும் சாகுபடி செய்ய முடியாமல்.. வருடந்தோறும் அதிகரித்துவரும் பருவ மழை பொய்த்தலில் விவசாயத் தொழில் அடியோடு நாசமான நிலைமையில் இருக்கிறது..

மூன்றாம் உலகப் போரென்று ஒன்று மூண்டால் அது நிச்சயம் பெட்ரோலுக்காக இருக்கலாம்.. அல்லது தண்ணீருக்காக இருக்கலாம் என்று இப்போதே அறிவியல் ஆய்வாளர்கள் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகிறார்கள்.. 

கேரளாவில் கோக் நிறுவனம் தனது கிளையை நிறுவியபோது அது ஒரு நாளைக்கு 10000 காலன் தண்ணீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் மட்டும் குறைந்து, விவசாயத்தை பாதிக்கும் என்று சொல்லி கேரள மக்கள் போராடி அந்த கோக் ஆலையை துரத்தினார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில்.. நெல்லை அருகேயிருக்கும் கோக் நிறுவனம் இன்றைக்கும் பல ஆயிரம் காலன் தண்ணீரை தினந்தோறும் உறிஞ்சியெடுத்து அதனை கோக் குளிர்பானமாக்கி நம்மிடமே விற்று பணம் சம்பாதித்து வருகிறது.. இத்தனை வறட்சியிலும் தண்ணீர் இருக்கும் ஏரியாவாக பார்த்து அது ஆலை அமைத்திருக்கிறது எனில் அந்த கார்பரேட் நிறுவனத்தின் செல்வாக்கையும், புத்திசாலித்தனத்தையும் நம்மால் உணர முடிகிறது..!



அது போன்று அதே நெல்லை மாவட்டத்தில் தென்னூத்து என்ற கிராமத்தில் இருக்கும் நீராதாரத்தை அறிந்து கொண்டு அங்கே குளிர்பான ஆலை அமைக்க ஒரு கார்பரேட் நிறுவனம் முயற்சிக்கிறது.. இதனை படத்தின் ஹீரோ எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் இந்தக் கத்தி படத்தின் கதை..!

இரட்டை வேடத்தில் கச்சிதமாக  பொருந்தியிருக்கிறார் விஜய். ஒருவர் ஜீவானந்தம். எம்.எஸ்.ஸி. ஹைட்ராலஜி படித்த சமூகப் போராளி. பொருத்தமான பெயர்.. இன்னொருவர் வழிப்பறி திருடன் கதிரேசன். இந்தக் கதிரேசன் கொல்கத்தா ஜெயிலில் இருந்து தப்பித்து சென்னைக்கு ஓடி வருகிறார். வந்த இடத்தில் ஜீவானந்தம் துப்பாக்கியால் சுடப்படுவதை பார்க்கிறார். அவரைக் காப்பாற்றும் நேரத்தில் கதிரேசனை தேடி மேற்கு வங்காள போலீஸ் சென்னைக்கு வந்துவிட.. அவர்களை ஏமாற்ற வேண்டி ஆஸ்பத்திரியில் இருக்கும் ஜீவானந்தத்தை கதிரேசன் போல செட்டப் செய்துவிட்டு தப்பிக்கிறார்.

ஆனால் அடுத்த நாளே ஜீவா நடத்தி வரும் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் சிக்கிக் கொள்கிறார். அடுத்தடுத்து போனஸாக எதற்கென்று தெரியாமலேயே லட்சம், கோடி என்று கைக்குக் கிடைக்க இதையெல்லாம் சுருட்டிவிட்டு ஓடிப் போகலாம் என்று பிளான் செய்கிறார். ஆனால் சரியான சமயத்தில் அந்த ஜீவானந்தத்தின் உண்மை முகம்.. இந்த கதிரேசனுக்குத் தெரிய வர.. கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறார். வாங்கிய பணத்தை வில்லனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு தப்பித்து போக நினைக்கையில் முதியோர் இல்லத்தில் இருந்த பெரியவர்களை வில்லனின் அடியாட்கள் அடித்த்தை பார்த்துவிட்டு சட்டென்று மனம் மாறி தான் இனிமேல் ஜீவானந்தமாக நடித்து நியாயத்தை நிலை நாட்ட முடிவெடுக்கிறார். இதை எப்படி செய்கிறார் என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!

மிகச் சாதாரணமாக அறிமுகமாகிறார் விஜய். எந்த பில்டப்பும் இல்லாமல் இருக்கும் இந்த அறிமுகமே ஆச்சரியம்தான்.. பெரிய இயக்குநர்களின் படங்களில் மட்டுமே இது சாத்தியம்..! முற்பாதியில் தென்னூத்து கிராமத்துக் கதை வரும்வரையிலும் காட்சிகளெல்லாம் எங்கோ இழுத்துக் கொண்டு போகின்றன.. பார்த்தவுடன் காதல் என்கிறவகையில் சமந்தாவை பார்த்தவுடன் காதலிக்கிறார். சட்டென்று பாடல்கள்.. அரைலூஸுத்தனமான ரொமான்ஸ் காட்சிகள்.. பணத்துக்காக எதையும் செய்வார் என்பதையே சொல்லும்விதமான திரைக்கதை.. இப்படியே போய் அந்த தென்னூத்து கிராமத்துக் காட்சிகள் திரையிடும்வரையிலும் கொண்டு போயிருக்கிறார்கள். 

தென்னூத்து கிராமம் பற்றிய தொகுப்புரையை மிக அழகாக படமாக்கியிருக்கிறார்கள். உள்ளத்தைத் தொடுகிறது.. அந்த இடைவேளை பிரேக்கில் சதீஷிடம் பாட்சா பாணியில் ‘பெட்டியை தூக்கி உள்ள வை’ என்கிறார்.. திரும்பவும் துப்பாக்கி ஸ்டைல் டயலாக்.. ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என்கிறார். 

இதற்கு பிறகுதான் அடுத்தக் கட்ட பரபரப்பு..! மீடியாக்களை வாரி வதைத்திருக்கிறார் முருகதாஸ்.. ஒவ்வொரு பத்திரிகையும் எந்த மாதிரி செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை அந்தந்த பத்திரிகைகளில் வேலை பார்ப்பவர்களே சொல்வது போலவும், டிவி சேனல்கள் எதற்கெல்லாம் கேமிராவை தூக்கிக் கொண்டு வருவார்கள் என்பதையும் வெளிப்படையாகச் சொல்லி மீடியாக்களை இந்த ஒரேயொரு படத்திலேயே அநியாயத்திற்கு முறைத்துக் கொண்டுள்ளார் இயக்குநர் முருகதாஸ். ஏனென்று தெரியவில்லை..

ஆனால் உண்மையில் மீடியாக்கள் முன்பு போல இல்லை. போட்டிகள் அதிகமாகிவிட்டதால் எங்கடா நியூஸ் கிடைக்குது என்று தேடி தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். ‘புதிய தலைமுறை’ சேனல் வந்த பிறகு அனைத்து சேனல்களின் பிரசண்டேஷனும் மாறியிருக்கிறது. மக்களுடைய பிரச்சினைகளை அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்றெல்லாம் தினந்தோறும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் இது போன்ற பிரச்சினைகளெல்லாம் இப்போது பத்திரிகைகளிலும், டிவிக்களிலும் சொல்லப்பட்டும், விவாதிக்கப்பட்டும்தான் வருகிறது.. இயக்குநர் முருகதாஸுக்கு மீடியாக்கள் மீது என்ன கோபமா தெரியவில்லை..!

படத்தின் இறுதியில் விஜய் பேசும் அந்த 10 நிமிட வசனங்களை கிளிப்பிங்ஸாக கொடுத்தால் நிச்சயமாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் இதுதான் இந்த வாரத்திய ஹாட்டஸ்ட் நியூஸாக இருக்கும்.. ஆனால் தங்களை பற்றிய கமெண்ட்டுகளை நிச்சயம் நீக்கிவிட்டுத்தான் ஒளிபரப்புவார்கள். பரவாயில்லை.. மிச்சம் இருக்கிறதே..?

“5000 கோடி கடனை வாங்கிய பீர் கம்பெனி அதிபர் கடனை கட்ட முடியலைன்னு கூலா சொல்லிட்டு உயிரோட இருக்கார்.. ஆனா 5000 ரூபா கடன் வாங்கிய விவசாயி அதுக்கான வட்டி மேல வட்டி சேர்ந்து கட்ட முடியாததால தற்கொலை செஞ்சுக்குறான்.. இதுதான இந்த நாட்டுல நடக்குது..” என்கிறார் இயக்குநர் முருகதாஸ்..

2-ஜி வழக்கையும் விடவில்லை.. “தண்ணியெல்லாம் ஒரு பிரச்சினையா..?” என்று ஒரு நிருபர் கேட்க.. அதற்கு “2-ஜின்றது அலைக்கற்றை.. காற்றில் இருந்து பவரை எடுத்து பயன்படுத்தும் அந்த தொழில் நுட்பத்துலதான இத்தனை கோடி ரூபாய் ஊழல் செஞ்சிருக்காங்க..” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். 

முருகதாஸே, 2-ஜி கேஸில் ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லிவிட்டதால் அவரையும் நமது கூட்டாளியாக்க எதிரணி இனி முயலலாம். ஊழல் இல்லை என்று சொல்பவர்கள் இயக்குநர் முருகதாஸிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கலாம்..!

“தாமிரபரணி ஆற்றில் கோகோகோலா நிறுவனம் இன்னமும் தண்ணீரை உறிஞ்சி எடுப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்...?” என்கிறார் முருகதாஸ். இந்த வசனத்தை பேசியிருப்பது விஜய். ஆனால் இதே விஜய்யே அந்த நிறுவனம் தமிழகத்தில் கால் பதித்தபோது கோடிகளை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு கோகோகோலா குளிர்பானத்தின் விளம்பர ஏஜென்டாக இருந்தார் என்பதையும் நாம் மறக்கக் கூடாது..!

விஜய்க்காக பல லாஜிக் எல்லை மீறல்களையும் வைத்துக் கொண்டு இந்தப் படத்தை கமர்ஷியல் படம் போலவும் மாற்றியிருக்கிறார் முருகதாஸ். சிறைச்சாலையில் ஒரு கைதி தப்பியோடிய வழியைக் கண்டறிய இன்னொரு கைதியிடம் ஆலோசனை கேட்கிறார்களாம் சிறைத்துறை அதிகாரிகள். அவரும் அதற்கு உடன்பட்டு வழி காட்டுகிறாராம். அவரையும் சிறையில் இருந்து வெளியேற அனுமதித்து அவருடனேயே ஓடிச் சென்று ஓடியவனை பிடிக்கிறார்களாம். இந்தக் களேபரத்தில் விஜய் தப்பிக்கிறாராம்.. இப்படியொரு ஸ்டோரியை நம்ப முடிகிறதா..? 

முதலில் சிறைத்துறை அதிகாரிகளிடம் துப்பாக்கி இருக்குமா..? ஒரு கைதியை ஆவணம் இல்லாமல் வெளியில் அழைத்துச் செல்ல முடியுமா..? காவல்துறையில் புகார் செய்யாமல் இவர்களே தேட முடியுமா..? ம்ஹூம்.. இதைவிட கொடுமை.. கொல்கத்தா மத்திய சிறை அதிகாரிகளே தமிழ் பேசுவதுதான். அவர்களை வங்க மொழியில் பேசவிட்டு சப் டைட்டிலாக தமிழில் வசனங்களை போட்டிருக்கலாம்..!
கொல்கத்தாவில் இருந்து தப்பித்து மறுநாள் காலையிலேயே சென்னை வந்துவிட்டார் விஜய். வந்தவுடன் சதீஷிடம் இருந்து பணத்தைச் சுட்டுவிட்டு அந்தக் காசில் “பேஸ்ட், பிரஷ், சோப்பு வாங்கிட்டு வரேன்...” என்கிறார்.. என்னே கொடுமை இது..? 

கதிரேசன், ஜீவானந்தமாக மாறும் சூழலை மெல்ல மெல்ல வெகு இயல்பாக மாற்றி நம்மை நம்ப வைத்திருக்கிறார். இது நிச்சயம் சூப்பர்தான்.. எந்த இடத்திலும் இடறல் இல்லை.. திரைக்கதையில் குழப்பமில்லாமல் கொண்டு போயிருக்கிறார். 

தென்னூத்து கிராமத்தில் நடப்பதும் சமீபத்தில் நடந்த கதையாகத்தான் இருக்கிறது. முந்தின தினம் இரவில் இறந்தவர்களின் கை விரல்களில் விரல் ரேகைக்கான மையின் அடையாளம் இருக்கிறது. இது ஒன்றே போதுமா.. நிலத்தை பதிவு செய்தாகிவிட்டது என்பதைக் காட்டுவதற்கு..? இப்போதெல்லாம் ரிஜிஸ்தரர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்றுதான் பதிவு செய்தாக வேண்டும்.. ரேகை பதிய வேண்டும்..

அதுவும் விஜய் யார், யாருடைய நிலத்திலெல்லாம் நீராதாரம் செல்கிறது என்று சோதனை செய்து சொல்கிறாரோ அந்தப் பெயர்களையெல்லாம் அந்த நேரத்திலேயே அருகிலுக்கும் புரொபஸர் ஒருவர் செல்போன் மெஸேஜில் வில்லனுக்கு பாஸ் செய்ய.. அடுத்த நொடியே அவர்களைத் தேடிப் பிடித்து கொலை செய்கிறார்கள் வில்லனின் ஆட்கள். அந்தச் சோதனை செய்து கொண்டிருக்கும்போதே விஜய்யை தேடி வந்து சம்பந்தப்பட்ட விவசாயிகள் கொலையானதையும் சொல்கிறார்கள்.. ம்ஹூம்.. இயக்குநர் முருகதாஸ் இன்னும் கொஞ்சம் திரைக்கதையை செப்பன்னிட்டிருக்கலாம்..!

விவசாயிகள் 6 பேர் எடுக்கும் அந்த பகீர் முடிவுக்கு ‘நாட்டு மக்களுக்கு தங்கள் மீது கவனமில்லை.. மீடியாக்கள் தங்களது பிரச்சனையை காது கொடுத்து கேட்கவில்லை’ என்பதையே காரணமாகச் சொல்கிறார்கள். கொஞ்சம் சின்னப்புள்ளத்தனமாக இருக்கிறது. இப்போதெல்லாம் சின்ன சின்ன பிரச்சினைக்கெல்லாம் நீதிமன்றங்களுக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள்.. கதையில் ஒரு அழுத்தம் வேண்டும் என்பதற்காகவும், நம் கண்கள் சில நொடிகள் கலங்க வேண்டும் என்பதற்காகவும் வலுக்கட்டாயமாக அவர்களை பலி கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஆனாலும் இந்தக் காட்சியை படமாக்கியவிதம் சூப்பர்..!

நீதிபதிகளே லஞ்சம் வாங்குகிறார்கள் என்கிற குற்றச்சாட்டெல்லாம் இப்போதும் நடப்பதுதான். வெளிப்படையாக பேசப்பட்டும் வருகிறது. சரிதான்.. ஆனால் அதற்காக விசாரணை கமிஷன் நீதிபதியை விஜய் மிரட்டுவதெல்லாம் டூ மச்சாக இருக்கிறது.. ஆனால் வில்லன்-நீதிபதி சந்திப்பின்போது விஜய் போன் செய்து பேசுவது படு திறமையான திரைக்கதையாகவும், டிவிஸ்ட்டாகவும் இருக்கிறது. ரசிக்க முடிந்தது.. 

வெளிநாடுகளில் இருப்பவர்களின் உண்மையான சர்டிபிகேட்டுகளை வைத்து கோர்ட்டில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருப்பதை முறியடிக்க வேறு ஐடியாக்களா கிடைக்கவில்லை..? “வெளிநாட்டில் இருந்து கொண்டு அவர்களால் எப்படி இந்த வழக்கு விசாரணையை அறிந்திருக்க முடியும்..? முடிந்தால் அவர்களை நேரில் வரச் சொல்லுங்கள்..” என்றெல்லாம் எதிர் மனுக்களை தாக்கல் செய்திருந்தாலே போதுமே..? 

இப்படி செய்தால் இயக்குநர் முருகதாஸின் புத்திசாலி மூளையை தமிழகத்து மக்கள் எப்படி அறிவது..? செம பிரில்லியண்ட் டிவிஸ்ட்டு அது..! “தண்ணியை பிளாக் செய்.. சென்னைல இருக்கிறவன் ரெண்டு நாள் தண்ணியில்லாமல் சாகட்டும். அப்பத்தான் நம்மள பத்தி கவலைப்படுவான்..” என்கிற இயக்குநர் முருகதாஸின் அந்த எண்ணம் இதுவரையிலும் திரையில் காணாதது..!

இதற்கான திட்டம் போடுவதும்.. திட்டத்தைச் செயல்படுத்துவதும்.. இதற்கடுத்த காட்சிகளும் பரபரவென்று திரையில் ஓடுகின்றன. ஒரு மாபெரும் குடியிருப்பில் தண்ணிக்காக மக்கள் காலி குடங்களுடன் அடித்துக் கொள்ளும் அந்த ஏரியல் வியூ காட்சியே, இயக்குநர் முருகதாஸின் இயக்கத் திறமைக்கு ஒரு சான்று..!

சென்னைவாசிகளுக்கே இந்தப் படத்தைப் பார்த்துதான் தங்களுக்கு நீராதாரம் தரும் ஏரிகளைப் பற்றி தெரியுமென்று நினைக்கிறேன். ஆனால் இந்தப் போராட்டத்தின் விளைவால் நீதிமன்றத்தில் தீர்ப்பு எந்தவிதத்தில் மாறியது என்பது மட்டும் புரியவே இல்லை..! மக்கள் வெளியில் பேசுவதையும், மீடியாக்கள் எழுதுவதையும் வைத்து நீதிமன்றங்கள் சந்தேகப்படும். வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றும். ஆனால் இது போன்ற கொள்கை முடிவெடுக்கும் விஷயத்தில் அதுவும் அந்த 2500 பட்டதாரிகளின் ஆவணங்கள் பொய் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவர்களது வாதம், கடைசி நாளில் எப்படி இருந்தது என்பதையும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்..!

மேற்கு வங்க போலீஸாரும் தமிழ்நாட்டிற்கு தங்களது போலீஸ் டிரெஸ்ஸோடயே வந்து கதிரேசனை தமிழில் பேசி தேடுவதும்.. இறுதியில் அவரை அழைத்துச் செல்வதுமான காட்சிகளெல்லாம் போலீஸுக்கே சிரிப்பை கொடுக்கும்..!

இதில் இடம் பெற்றிருக்கும் சண்டை காட்சிகள் அவரது ரசிகர்களை திருப்திபடுத்தவே வைக்கப்பட்டிருக்கிறது.. நம்புவது போலவும் இல்லை.. காசை போடுவாராம்.. சுவிட்ச்சை ஆஃப் செய்வாராம். கிடைத்த இடைவெளியில் இவர் அடிப்பாராம்.. மறுபடியும் இது தொடருமாம்.. இப்படியே இந்த 2014-லிலும் ஏமாற்றினால் எப்படி..? கிளைமாக்ஸ் சண்டை காட்சியிலும் குறைந்தபட்ச உண்மைத்தன்மை இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்..!  ‘காதலுக்கு மரியாதை’, ‘நினைத்தேன் வந்தாய்’ போல சண்டை காட்சிகள் இல்லாமல், காதல் காட்சிகளை மட்டுமே வைத்து படத்தை நகர்த்தியிருக்கலாம்..!

நடிப்பைப் பொறுத்தவரையில் விஜய்யை குறையே சொல்ல முடியாது.. ஜீவானந்தத்தைவிடவும் அதிகக் காட்சிகளில் வரும் கதிரேசன்தான் கவர்கிறார்.. முதல் காட்சியில் சமந்தாவை பார்த்தவுடன் ஜொள்ளுவிட்டு பின்னாலேயே அலையும் காட்சியில் துவங்கி, காதல் காட்சிகளில் மட்டும் இன்னமும் உதடு பிரிக்காமலேயே பேசுவதைத்தான் ஏற்க முடியவில்லை..

ஆனால் கிளைமாக்ஸில் மொத்த மீடியாக்களுக்கும் பேட்டி கொடுக்கையில் என்னா பேச்சு..? உணர்ச்சிகரமாக இருந்தது..! சில, சில இடங்களில் தனது வழக்கமான மேனரிஸத்தையும், ஸ்டைல்களையும் அமைத்து இந்தப் படம் வெற்றிப் படமாக அமைவதற்காக அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார் விஜய். பாராட்டுக்கள். வாழ்த்துகள்..! விஜய்க்கு சோகக் காட்சிகளில் நடிப்பே வராது என்று சொல்பவர்களுக்கு வில்லனின் கம்பெனி தனது வேலையை நிலத்தில் துவங்கியவுடன் ஏமாற்றப்பட்டோம் என்று தெரிந்து அவர் கதறியழுகும் அந்தக் காட்சியில் ரசிகர்களின் கண்களிலும் சட்டென பொங்கி வரும் கண்ணீரே பதில்  சொல்லும்..!

வில்லனாக நடித்திருக்கும் நீல் நிதின் முகேஷ்தான் படத்தில் அடுத்த ஹீரோ என்பது போல நடித்திருக்கிறார். சமந்தா சிரிக்கும்போது கொள்ளை அழகுதான்.. உயரம் குறைவு.. எடை குறைவு.. ஆனால் அழகு கூடுதல் என்கிற நிலையில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம்தான்.. பாடல் காட்சிகளில் விஜய்க்கு ஈக்குவலாகவே ஆடியிருக்கிறார். ஆனால் வசனங்கள் குறைவுதான்.. கொஞ்சமே ஆனாலும் நிறைவாய் செய்திருக்கிறார்.

‘செல்பி புள்ளை’ பாடலின் இசையும், பாடலும், ஆட்டமும் அவரது ரசிகர்களுக்கு புல்லரிப்பை கொடுத்திருக்கும்..! பின்னணி இசையில் அனிருத்தின் இசை முதன்முதலாக நம்மை ரசிக்க வைத்திருக்கிறது.. ‘கத்தி’ தீம் மியூஸிக்கும் சூப்பர்.. ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளில் மட்டும் கலர் கலராக காட்டி கண்ணைக் கட்டியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகள்.. சண்டை காட்சிகள்.. பாடல் காட்சிகளில் கேமிராமேனின் பங்களிப்பு நிறைய..! பாராட்டுக்கள் ஸார்..! 

முதலில் இது போன்ற தேசிய பிரச்சினைகளை விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து எடுக்கவே கூடாது. எடுத்தால் இப்படித்தான் இடையிடையே டூயட்டுகள், கன்றாவி காமெடிகள்.. அடிதடிகள்.. அனல் பறக்கும் சண்டை காட்சிகள்.. பஞ்ச் வசனங்களை வைத்து படத்தின் தன்மையை நாமே மாற்றிவிட வேண்டியிருக்கும்..! இதைத்தான் இயக்குநர் முருகதாஸ் இதில் செய்திருக்கிறார்.

சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் இந்தாண்டுக்கான தேசிய விருதினை பெறும் தகுதியுள்ள கதை இது. ஆனால் விஜய் போன்ற பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகருக்கான கதையாக இதனை மாற்றியதால் அந்தப் பெருமையை படம் இழந்துவிட்டது என்பதுதான் வருத்தமான செய்தி..! இந்தப் படம் அதிக நாள் ஓடினால் சிறந்த ஜனரஞ்சமான திரைப்படம் என்ற பிரிவில் விருது பெற வாய்ப்புண்டு..!

ஏதோவொரு கமர்ஷியல் படத்தில் நடித்தோம் என்றில்லாமல் நாட்டுக்குத் தேவையான ஒரு மெஸேஜை தாங்கிய ஒரு படத்தில் நடித்திருக்கிறோம் என்பதில் நடிகர் விஜய் நிச்சயம் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்..!

படத்தில் கார்பரேட் நிறுவனங்களை புரட்டியெடுத்திருக்கும் இயக்குநர் முருகதாஸ், இந்தப் படத்தைத் தயாரித்திருப்பதே ஒரு மல்டி நேஷனல் கார்பரேட் நிறுவனம்தான் என்பதை எப்படி மறந்தார்..? 

பலவித சர்ச்சைகளுடன் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான லைகா நிறுவனமே, ஈழத்தில் பல லட்சம் மக்களை கொலை செய்த ஒரு கொடுமையான போருக்கு இப்போதுவரையிலும் வக்காலத்து வாங்குகிறது; துணை நின்றது; நிற்கிறது என்கிற உண்மையை உணர்ந்தும், இந்த நிறுவனத்தை கடைசிவரையிலும் விட்டுக் கொடுக்காமல் படத்தை இயக்கி, வெளியிட உதவியிருக்கும் இயக்குநர் முருகதாஸ் இந்தப் படத்தில் தான் சொல்லியிருக்கும் கருத்துரிமை ‘இது நான் பின்பற்றுவதற்காக இல்லை’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்..!  

அதேபோல், நீராதாரத்தைத் திருடி விவசாயத்தை அடியோடு அழிக்க முன் வந்த அந்த நிறுவனத்தை போலவே, இந்தக் ‘கத்தி’ படமும் ஒரு ஊரில் இருக்கும் அனைத்து தியேட்டர்களையும் பிடித்துக் கொண்டு, இந்த வருடம் தயாரிக்கப்பட்டு இன்னமும் வெளியாகாமல் இருக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு வசூல் கிடைக்கக் கூடிய இந்தத் தீபாவளி பண்டிகை நாளில் தியேட்டர்கள் கிடைக்காமல் செய்ததை இயக்குநர் முருகதாஸ் உணர்வாரா..? சின்ன பட்ஜெட், மீடியம் பட்ஜெட் படங்களை நசுக்கி வரும் இந்த பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் சினிமா கார்பரேட்டுகளை என்ன செய்வது என்று அடுத்தப் படத்தில் இயக்குநர் முருகதாஸ் நமக்குச் சொல்வார் என்று நம்புவோமாக..!

மற்றபடி படத்தைப் பொறுத்தவரையிலும் இந்தக் ‘கத்தி’ பளபளப்பானதுதான்..!

நடராசன் மூலமாக இவ்வளவு நகைகள் கிடைத்திருக்குமா? – குன்ஹா தீர்ப்பு விபரம் – 6

20-10-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நீதிபதி குன்ஹா வழங்கிய பரபரப்பான தீர்ப்பின் தொடர்ச்சி…

சசிகலா 1990-91-ம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கை 1993-ம் ஆண்டு தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் தன்னிடம் தங்க வைர ஆபரணங்களின் மதிப்பு 12 லட்சத்து 95 ஆயிரத்து 704 ரூபாயும் 5 கிலோ வெள்ளிப் பொருட்களின் மதிப்பு 27 ஆயிரத்து 468 ரூபாய் என்றும் கணக்குக் காட்டியுள்ளார்.

ஆனால், 1991-92-ம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கை அவர் தாக்கல் செய்தபோது, தன்னிடம் இருக்கும் தங்க வைர ஆபரணங்களின் மதிப்பு ஒரு கோடியே 10 லட்சத்து 13 ஆயிரத்து 946 ரூபாய் என்றும் வெள்ளிப் பொருள்களின் மதிப்பு 70 லட்சத்து 61 ஆயிரத்து 400 ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



ஒரு வருடத்துக்குள் சசிகலாவுக்கு 1 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 174 ரூபாய்க்கு தங்க, வைர ஆபரணங்கள் உயர்ந்துள்ளன.

ஜெயலலிதா, சசிகலா தரப்பில் இதற்குக் காரணமாக, 1991-ம் ஆண்டில் இருந்து 1992-ம் ஆண்டுக்குள் தங்க வைர ஆபரணங்களின் விலை கூடியதாகவும் மேலும் அந்தக் காலத்தில் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்கள், வாள்கள், கேடயங்கள் போன்றவை அன்பளிப்புகளாகவும் பரிசுகளாகவும் தங்களுக்குக் கிடைத்தன என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இடத்தை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும். 1991-ம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தபோது, அவர்களுக்கு வராத பரிசுப் பொருள்கள், 1991-க்குப் பிறகுதான் வந்திருக்கின்றன என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், நகைகளை மதிப்பிட்ட சுங்கத் துறை அதிகாரி வாசுதேவன் அந்தத் துறையில் நிபுணத்துவம் குறைந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் நகைகளின் மதிப்புகளைத் தவறாகக் கணக்கிட்டு அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளதாகத் தன்னுடைய வாதத்தில் சொல்கிறார்.

ஆனால், வாசுதேவன் 10 ஆண்டுகள் இந்தத் துறையில் அனுபவம் வாய்ந்தவர் என்பது அரசுத் தரப்பாலும் சுங்கத் துறையின் மூலமும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜெயலலிதா, சசிகலாவிடம் இருந்த நகைகளை மதிப்பீடு செய்தபோது, அதற்கு மெட்லர் எலெக்ட்ரானிக் என்ற பிரத்தியேக தராசை வாசுதேவன் பயன்படுத்தியிருக்கிறார்.

எடை போடுவதற்கு முன்பு, தராசின் இரண்டு பக்கங்களும் சரியான அளவில் நின்றதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அதை ஊழல் தடுப்பு அதிகாரி நல்லம்ம நாயுடு, ஜெயலலிதா தரப்பில் இருந்த பாஸ்கரன், வழக்கறிஞர்கள் சேகர் மற்றும் சந்திரசேகர், கலெக்டர்(சிறப்பு) கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜெயலலிதாவின் அத்தை ஆகியோர் ஒப்புக்கொண்டு உள்ளனர்.

மேலும், நகைகளின் தரத்தை அறிய, பொற்கொல்லர்கள் பயன்படுத்தும் உரைகல்லை வாசுதேவன் பயன்படுத்தியுள்ளார். வைரங்களின் தரத்தை 10 S என்ற லென்ஸைப் பயன்படுத்தி கணக்கிட்டுள்ளார். அவருடைய மதிப்பீட்டின்படி, அந்த வைரங்கள் 4-சி எடை கொண்டவை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், அந்த வைரங்களில் தீட்டப்பட்டு இருந்த பட்டைகள், அதன் தூய தன்மை, வைரங்களின் நிறம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டுதான் வாசுதேவன் அவற்றின் மதிப்பைக் கணக்கிட்டுள்ளார். அப்படி அவர் கணக்கிட்டதன்படி, ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடை அளவு 23 கிலோ 113 கிராம் என்பது தெரியவந்தது.

அதன்விலை அன்றைய தேதியில் 91 லட்சத்து 57 ஆயிரத்து 253 ரூபாய். வைரத்தின் விலை அன்றைய தேதியில் இரண்டு கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 790 ரூபாய். மொத்தமாக தங்க வைர ஆபரணங்களின் மதிப்பு 3 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரத்து 43 ரூபாய் என்று கணக்கிட்டுள்ளார்.

இது தவிர்த்து போயஸ் கார்டன், வீட்டில் நடத்திய சோதனையில் 42 நகைப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டு, அவற்றிலும் நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அதில் சில பெட்டிகளில் கைக்கடிகாரங்களும், மற்றவற்றில் 131 நகைகளும் இருந்தன.

அதன் எடை 4 கிலோ 475 கிராம். அதன் மதிப்பு அன்றைய விலையில் 17 லட்சத்து 37 ஆயிரத்து 266 ரூபாய். வைரம் பதிக்கப்பட்ட தங்கக் கம்மல் விலை 47 லட்சத்து 61 ஆயிரத்து 816 ரூபாய் என்று கணக்கிட்டுள்ளார். அதேசமயம், குறுக்கு விசாரணையில், வாசுதேவன் மதிப்பீட்டாளர் மட்டும்தான் என்பதும் விலை நிர்ணயம் செய்யும் வேலையில் அவருக்கு அனுபவம் இல்லை என்பதும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாசுதேவன் எடை போட்ட நகைகளுக்கு விலையைக் கணக்கிடும்போது, 1996-ம் ஆண்டு விலையில் அவற்றைக் கணக்கிட்டு உள்ளார் என்பதும் தெரியவருகிறது. எனவே, வாசுதேவன், கணக்கிட்ட எடையை மட்டும் நாம் எடுத்துக்கொள்ளலாம். விலையின் மதிப்பீட்டில் குளறுபடி உள்ளதால், அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், தன்னுடைய வாதத்தில், ‘அரசுத் தரப்பு பட்டியலிட்டு உள்ள நகைகளில், வரிசை எண் 284 மற்றும் 285-ல் உள்ள நகைகள், முதலமைச்சர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே ஜெயலலிதாவிடம் இருந்தவை’ என்றும் ‘அவற்றையும் அரசுத் தரப்பு சேர்த்து சொத்து மதிப்பைக் கணக்கிட்டு குற்றம்சாட்டுகிறது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த இடத்தில் நாம் கவனமாக ஆதாரங்களைப் பரிசீலித்து முடிவுக்கு வர வேண்டும்.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில், அவர் 1965-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வருமானவரி மற்றும் சொத்துவரி செலுத்தி வந்துள்ளார். 1987-ம் ஆண்டில் இருந்து 1990 வரையிலான கணக்குகளை அவர் 1992-ம் ஆண்டு செலுத்தியுள்ளார். அப்போது அவரிடம் இருந்த நகைளை கீர்த்திலால் காளிதாஸ் அண்ட் கம்பெனியைச் சேர்ந்த சுப்புராஜ், சாந்தகுமார் ஆகியோர் மதிப்பிட்டுக் கொடுத்துள்ளனர்.

அந்த மதிப்பீட்டில் 7,040 கிராம் வைரம் இடம்பெற்றுள்ளது. இதைத்தான் அவர் பதவிக்கு வருவதற்கு முன்பே அவரிடம் இருந்த வைரங்களாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார் குறிப்பிடுகிறார். ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், 1987-ல் இருந்து அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான வருமானவரியை மொத்தமாக 1992-ல் தாக்கல் செய்துள்ளார்.

1992-ம் ஆண்டுக்கான வருமானவரியை 1993-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி செலுத்தி உள்ளார். அடுத்தடுத்த ஆண்டுகளில் செய்யப்பட்ட இந்த வருமானவரி கணக்குத் தாக்கலில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

அது பற்றி வருமானவரித் துறை கேள்வி எழுப்பியபோது, ஓர் ஆண்டில் தங்க வைர ஆபரணங்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டதாகவும், மேலும், தங்களுக்கு இந்தக் காலத்தில் அதிக எண்ணிக்கையில் பரிசுப் பொருள்கள் கிடைத்ததாகவும் காரணம் சொல்லியுள்ளனர்.

இதையடுத்து வருமானவரித் துறை உதவி ஆணையர், ‘கடந்த ஆண்டில் உங்களுக்கு அன்பளிப்பாக 19 புதிய ஆபரணங்கள் கிடைத்துள்ளன என்றும் அவற்றின் எடை 7,040 கிராம் என்றும் 101.49 சி எடையுள்ள வைரங்களும் கிடைத்துள்ளன என்றும் சொல்லியுள்ளீர்கள். ஆனால், அவற்றை முறையாகப் பட்டியல் இடவில்லை’ என்று சொல்லி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தெளிவாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் பரிசுப் பொருள்கள் மற்றும் புதிய நகைகள் 1992-க்குப் பிறகே வந்துள்ளன என்பதும் நிரூபணமாகிறது.

மேலும், கீர்த்திலால் காளிதாஸ் அண்ட் கம்பெனி நிர்வாகி சாந்தகுமாரின் சாட்சியத்தில் இருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால், 1992-ம் ஆண்டில்தான் ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் நகைகளைத் தரம் பிரிப்பதற்காக இவர்களை அழைத்துள்ளனர்.

இவர்களிடம் கிலோ கணக்கில் நகைகளை மட்டும் கொடுத்து, எந்தெந்த நகைகள் 1987, 1988, 1989, 1990 ஆகிய ஆண்டுகளில் வாங்கப்பட்டவை என்ற விவரங்களை ஆண்டுவாரியாக சசிகலாவே சொல்லி உள்ளார். ஆனால், அவை எல்லாம் உண்மையிலேயே அந்த ஆண்டுகளில்தான் வாங்கப்பட்டவை என்பதற்கான ரசீதுகள் சாந்தகுமாரிடம் காட்டப்படவில்லை. அவற்றை நீதிமன்றத்திலும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. ஒருவேளை 1992-க்கு முன்பே முறையாக ஒவ்வோர் ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்து, அவற்றில் அந்த நகைகளை ஜெயலலிதா கணக்குக் காண்பித்து இருந்தால், அதுவாவது நம்பும்படியாக இருந்திருக்கும்.

ஆனால், அவசர அவசரமாக 1992-ல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான வருமானவரியைத் தாக்கல் செய்து, அவற்றில் நகைகளைப் பிரித்துக் காண்பித்து இருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. மேலும், அவற்றின் தரத்தை தற்போது மதிப்பிடுவது வருமானம் மற்றும் சொத்து வரி செலுத்துவதற்காக மட்டுமே என்று சசிகலா, சாந்தகுமாரிடம் கூறியுள்ளார்.

இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால், 1991-க்குப் பிறகு அவர்களிடம் குவிந்த நகைகளை பழைய தேதியிட்டுக் கணக்குக் காட்டி வருமான வரியைத் தாக்கல் செய்துள்ளனர். அப்படி வரி கட்டியதால் மட்டுமே ஒரு வருமானம் நல்ல வழியில் வந்த வருமானமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வருமானம் எந்த வழியில் வந்தது என்பதை ‘பொது ஊழியர்’ சொல்லியாக வேண்டும். ஆனால், இவ்வளவு ஆயிரக்கணக்கான கிலோ தங்கமும் வைரமும் தனது வீட்டுக்கு எப்படி வந்தது என்பதை ஜெயலலிதாவால் கடைசிவரை சொல்லவே முடியவில்லை. இவை அனைத்தும் சசிகலாவின் பெயரில் இருப்பதை மூத்த வழக்கறிஞர் பி.குமார் நமக்கு நினைவூட்டுகிறார்.

அப்படியானால் சசிகலாவுக்கு இவ்வளவு நகைகள் எப்படி வந்தன? அவர் அதை நிரூபிக்க வேண்டும் அல்லவா? அவர் இந்த நகைகளை எங்கு வாங்கினார்? எப்படி வாங்கினார்? எந்தத் தேதியில் வாங்கினார்? என்ற விவரங்களையும் சொல்ல முடியவில்லை. ஆனால், சசிகலாவின் பெயரில் நகை மதிப்பீட்டு அறிக்கையை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு தயாரித்து வைத்துள்ளனர். ஒருவேளை அவர் வாங்கவில்லை என்றாலும், அவர் கணவர் நடராசன் மூலமாக இவ்வளவு நகைகள் அவருக்குக் கிடைத்திருக்குமா என்றால், அதற்கும் வாய்ப்பே இல்லை என்பதை அரசுத் தரப்பு சரியாக நிரூபித்துள்ளது.

ஏனென்றால், 1991-ம் ஆண்டு வரை அவருடைய கணவர் ஓர் அரசு ஊழியராகத்தான் இருந்துள்ளார். ஒரு ஸ்கூட்டர் வாங்குவதற்கே அரசாங்கத்திடம் இருந்து 3,000 ரூபாய் முன்பணமாக அவர் பெற்றுள்ளார். எனவே, அவர் மூலமாக இவ்வளவு நகைகள் வந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த ஆதாரங்களின் மூலம் தங்கமும் வைரமும் ஜெயலலிதாவால் சசிகலாவின் பெயரில் வாங்கிக் குவிக்கப்பட்டன என்பதை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது. ஆனால், இதை மறுப்பதற்கு ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரிடமும் ஆதாரங்கள் இல்லை. எனவே, குற்றச்சாட்டு நிரூபணமாகிறது.

நீதிமன்றம் போட்டுக் காட்டிய கணக்கு

வாசுதேவனுடைய மதிப்பீட்டில் குளறுபடி இருப்பதாலும், சாந்தகுமாரின் மதிப்பீடு முன்தேதியிட்டு நடந்திருப்பதாலும், நகைகளின் எடைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அவற்றின் விலையை இந்த நீதிமன்றமே தீர்மானிக்கிறது.

ஜெயலலிதாவிடம் இருந்து அரசுத் தரப்பு கைப்பற்றிய நகையின் எடை 27 ஆயிரத்து 588 கிராம். ஆனால், அதில் ஜெயலலிதா பதவிக்கு வருவதற்கு முன்பே அவரிடம் இருந்த நகைகளாக, தற்காப்புச் சாட்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அளவு 7 ஆயிரத்து 40 கிராம். எனவே, அவற்றை இந்த வழக்கில் இருந்து தள்ளுபடி செய்துவிடுகிறேன்.

அப்படிச் செய்தால், மீதம் இருக்கும் 20 ஆயிரத்து 548 கிராம் எடை தங்கம், ஜெயலலிதாவின் பதவிக் காலத்தில் சம்பாதித்தவை என்றாகிறது. இதற்கு விலையாக, ஜெயலலிதா தரப்பு மற்றும் அரசுத் தரப்பு என இருவருமே ஏற்றுக்கொண்ட, 1992-ம் ஆண்டின் தங்க விலை நிலவரப்படி கணக்கிடுவது என்று நீதிமன்றம் முடிவு செய்கிறது.

அதன்படி, அந்தக் காலத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 334 ரூபாயாக இருந்துள்ளது. அப்படியானால் ஒரு கிராம் தங்கத்தின் விலை 433 ரூபாய் 40 பைசாவாகிறது. அந்த விலையில் 20 ஆயிரத்து 548 கிராம் தங்கத்தைக் கணக்கீடு செய்தால், 20548ஜ்433.4=8905503.20 என்ற விலை வருகிறது.

மேலும், ஜெயலலிதாவிடம் இருந்த வைரங்களின் மதிப்பு 1 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 820 ரூபாய் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. அந்தத் தொகையை தங்க நகையின் மதிப்போடு சேர்த்துக் கணக்கிட்டால், 2 கோடியே 51 லட்சத்து 59 ஆயிரத்து 144 ரூபாய் வருகிறது. இத்தனை மதிப்புடைய தங்கத்தாலும் வைரத்தாலும் இழைக்கப்பட்ட நகைகள் அனைத்தும் ஜெயலலிதாவால் முறைகேடான வழியில் சம்பாதிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவிக்கிறது.

அடுத்த இதழிலும் தொடரும்…

நன்றி : ஜூனியர்விகடன்

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு - குன்ஹா தீர்ப்பு விவரம் - 5

18-10-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



ஜெ.வீட்டில் சோதனையில் சிக்கிய நகைகள்

தங்கம், வைர நகைகள் போயஸ் கார்டன் வீட்டில் குவித்து வைக்கப்பட்டு இருந்ததை ஊழல் தடுப்பு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அப்படி கண்டு​பிடிக்கப்பட்ட நகைகளில் ஜெயலலிதா 1991-ம் ஆண்டு பதவிக்கு வருவதற்கு முன் வைத்திருந்தது எவ்வளவு? பதவிக்கு வந்தபிறகு வாங்கிக் குவித்தவை எவ்வளவு? அவற்றின் மதிப்பு என்ன? என்ற விவரங்களை நீதிபதி குன்ஹா தன்னுடைய தீர்ப்பில் அரசுத் தரப்பு சாட்சிகளையும் ஆவணங்களையும் வைத்துத் தெளிவாக நிரூபித்த விதம்... இதோ..!

ஜெ. வீட்டில் 5 நாள்கள் சோதனை!

''ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில், அதிரடி சோதனை நடத்த ஊழல் தடுப்பு போலீஸாருக்கு சென்னை பெருநகர முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 1996, டிசம்பர் 7-ம் தேதி ஊழல் தடுப்பு போலீஸார் நல்லம்ம நாயுடு தலைமையில், ஜெயலலிதாவின் வீட்டுக்குச் சென்றபோது, ஜெயலலிதா வேறு ஒரு வழக்கில் கைதாகி சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, நல்லம்ம நாயுடு உடனடியாக சென்னை மாநகரக் காவல் துறை ஆணையரைச் சந்தித்து, ஜெயலலிதாவைச் சிறையில் சந்திக்க அனுமதி கேட்டார். அவரைச் சிறையில் சந்தித்த நல்லம்ம நாயுடு, போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைக் காட்டி, 'சோதனை நடத்தும்போது உங்கள் தரப்பில் யாராவது இருக்க வேண்டும். அதனால் உங்களுக்கு நம்பிக்கையானவர்களை நியமியுங்கள்’ என்றார். அதன்படி, பாஸ்கரன் மற்றும் விஜயன் என்ற இருவரை ஜெயலலிதா தனது சார்பில் நியமித்தார்.

மதியம் 12.30 மணிக்கு நல்லம்ம நாயுடு தலைமையில் சென்ற ஊழல் தடுப்பு போலீஸார் மற்றும் ஜெயலலிதா சார்பில் நியமிக்கப்பட்ட பாஸ்கரன் மற்றும் விஜயன் ஆகியோர் போயஸ் கார்டன் வீட்டுக்குச் சென்று, இரவு பகலாக 5 நாட்கள் சோதனை நடத்தியுள்ளனர். 




சோதனையின்போது முத்து, பவளம், ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க வைர ஆபரணங்கள் கிலோ கணக்கில் சிக்கின. உடனே, அவற்றை போயஸ் கார்டன் வீட்டில் இருக்கும் இரண்டு அறைகளில் வைத்துப் பூட்டி லஞ்ச ஒழிப்புத் துறை சீல் வைத்தது. அறையின் சாவிகள் ஜெயலலிதா நியமித்த பாஸ்கரனிடமே ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து நல்லம்ம நாயுடு, சுங்கத் துறை கூடுதல் ஆணையரைத் தொடர்புகொண்டு நகைகளை மதிப்பீடு செய்வதற்கு அனுபவம் வாய்ந்த ஒருவரை அனுப்பும்படி கேட்டார். அதன்படி சுங்கத் துறை ஆணையர், தங்கள் துறையில் நகைகளை மதிப்பீடு செய்வதில் 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வாசுதேவன் என்பவரை அனுப்பி வைத்தார். 20-ம் தேதி நகைகளை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, ஊழல் தடுப்பு போலீஸ் அதிகாரி நல்லம்ம நாயுடு, சிறப்பு கலெக்டர் கிருஷ்ண​மூர்த்தி, வழக்கறிஞர் சேகர், சந்திரசேகர், ஜெயலலிதாவின் அத்தை, போலீஸ்காரர்கள் கல்யாண​சுந்தரம், புருஷோத்தமன் மற்றும் நகை மதிப்பீட்​டாளர் வாசுதேவன் ஆகியோர் அங்கு இருந்துள்ளனர். பாஸ்கரன், இவர்கள் முன்னிலையில் அறைகளைத் திறக்க, வாசுதேவன் நகைகளை மதிப்பீடு செய்துள்ளார். மதிப்பீடு செய்யப்பட்ட நகைகளின் எண்ணிக்கை, அவற்றின் எடை ஆகியவற்றை நல்லம்ம நாயுடு தலைமையிலான போலீஸார் பட்டியல் போட்டு மகஜர் தயாரித்துள்ளனர். அதன்பிறகு தங்கம் மற்றும் வைர நகைகளை நந்தனம் கருவூலத்துக்கு எடுத்துச் சென்று உள்ளனர். வெள்ளிப் பாத்திரங்கள் எதை​யும் அவர்கள் எடுக்கவில்லை. அவற்றை பாஸ்கரனிடமே ஒப்படைத்து போயஸ் கார்டன் வீட்டிலேயே வைக்கச் சொல்லிவிட்டனர்.''

மகஜர் விவரம்

''1996, டிசம்பர் 21-ம் தேதியிட்டு தயாரிக்கப்​பட்ட மகஜரில் உள்ள விவரம், '20.12.1996 அன்று மதியம் 3.30 மணியில் இருந்து மறுநாள் காலை 8.30 மணி வரை 36, போயஸ் கார்டன் இல்லத்தில் நகை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. ஜெயலலிதா சார்பில் வி.பாஸ்கரனும் இவற்றைப் பார்வையிட்டார்.

அரசாங்கத்தின் சார்பில் சென்னை மாவட்ட கலெக்டரின் பி.ஏ-வான டி.ஏ.டி.​ஆபிரகாம், நகர நிலச் சீரமைப்புச் சிறப்பு தாசில்தார் பக்கிரிசாமி ஆகியோர் இருந்தனர். நகைகளை மதிப்பீடு செய்தவர் சுங்கத் துறையில் நகை மதிப்பீட்டு வல்லுநராக உள்ள வாசுதேவன். இவர் 1991-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். நீதிமன்ற உத்தரவுப்படி இந்த நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. அந்த மகஜரில் உள்ள விவரங்கள்படி, 468 வகைகளில் அந்த வீட்டில் நகைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அத்துடன், 13 வகையான தங்க நகைகள் 16, செவாலியே சிவாஜி கணேசன், தி.நகர் என்ற முகவரியில் இருந்த வீட்டில் இருந்தும் கைப்பற்றப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தும் சரியானவை என்பதை ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பாஸ்கரனும் அரசுத் தரப்பினரும் கையெழுத்திட்டு உள்ளனர். இதையடுத்து பாஸ்கரனுக்கு ஒப்புகை ரசீதும் கொடுக்கப்பட்டு உள்ளது. மகஜரின்படி 468 விதமான தங்க வைர ஆபரணங்கள் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டவை என்பது உறுதியாகிறது. அவை என்னென்ன நகைகள், அவற்றின் எடை, அதன் விலை மதிப்பு எவ்வளவு என்ற விவரங்கள் பட்டியல் போட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

நகைகள் தன்னுடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டவை என்பதை ஜெயலலிதா தரப்பு மறுக்கவில்லை. ஆனால், போயஸ் கார்டன் மற்றும் சிவாஜி கணேசன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளின் மதிப்பையும் விலையையும் அரசுத் தரப்பு தவறாகக் கணக்கிட்டு உள்ளது என்று வாதிடுகின்றனர். அத்துடன் அரசுத் தரப்பு கைப்பற்றிய 23,113 கிராம் தங்க ஆபரணங்களும் 4,475 கிராம் எடையுள்ள மற்றொரு செட் ஆபரணங்களும் 91-க்கு முன்பாகவே தங்களிடம் இருந்தவை என்று சொல்கிறார்.''



ஜெ.விடம் இருந்த மொத்த நகைகள்

''1991-க்கு முன்பே சசிகலாவிடம் 1,802 கிராம் தங்க ஆபரணங்கள் இருந்தன என்றும் தங்களின் வாதத்தில் குறிப்பிடுகின்றனர். அ.தி.மு.க தொண்டர்களால் நினைவுப் பரிசுகளாக வழங்கப்பட்ட 3,365 கிராம் எடையுள்ள தங்க வாள், கேடயம் போன்றவற்றை தான் சம்பாதித்த சொத்துகளாகக் கருதுவது நியாயமில்லை. அ.தி.மு.க தொண்டர்கள் வழங்கிய அந்த நினைவுப் பரிசுகளைப் பாதுகாப்புக் கருதி தன்னுடைய வீட்டில் வைத்திருந்ததாகவும் ஜெயலலிதா குறிப்பிடுகிறார். மேலும் 'எனது வீட்டிலும் சிவாஜி கணேசன் வீட்டிலும் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளை மதிப்பீடு செய்துள்ள வாசுதேவன், அவற்றை முற்றிலுமாக தவறாக மதிப்பிட்டுள்ளார். ஏனென்றால், அவர் கைப்பற்றிய வருடத்தின் மதிப்பில் நகைகளைக் கணக்கிட்டுள்ளார். ஆனால், அவை எல்லாம் பூர்வீக நகைகள். புதிய மாடல்கள் வரும்போது, அதற்கேற்ப பழைய நகைகளை அழித்து, புதிய டிசைன்களில் செய்வது எங்கள் வழக்கம். பூர்வீக நகைகளைப் புதிய வடிவத்துக்கு மாற்றும்போது அதன் மதிப்பைக் கணக்​கீடுகளில் குறிப்பிடுவது எளிதான காரியம் அல்ல. அதோடு மிக முக்கியமாக 1991-96 வரை பதவியில் இருந்த காலத்தில் புதிய நகைகள் வாங்கியதற்கு ஆதாரமாக எதையும் அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.''

அரசுத் தரப்பு சாட்சியம்

''இந்த இடத்தில் அரசுத் தரப்பு சாட்சி சுப்புராஜ் நீதிமன்றத்தில் சொன்ன விவரங்கள் முக்கியமானவை. இவர் கோவை, ராஜவீதியில் உள்ள கீர்த்திலால் காளிதாஸ் அண்டு கம்பெனியின் மேனேஜராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர். அவர் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில், 'கீர்த்திலால் காளிதாஸ் அண்டு கம்பெனி மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம். அந்த நிறுவனத்தின் நிர்வாகியும் பங்குதாரருமான சாந்தகுமாரும் நானும் சேர்ந்து, 1992-ம் வருடம் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்குச் சென்றோம். நாங்கள் அங்கு சென்ற ஐந்து நிமிடத்தில் சசிகலா வந்தார். எங்கள் முன் 4 டிரேக்களில் தங்க வைர நகைகள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. அந்த நகைகளை மதிப்பீடு செய்து தரவேண்டும் என்று சசிகலா எங்களிடம் கேட்டார். அத்துடன் நகைகள் வாங்கியதற்கான எந்த பில்களும் கிடையாது என்றும் சொன்னார். இதையடுத்து நாங்கள் அந்த நகைகளை மதிப்பீடு செய்து கொடுத்தோம்.

1986-87 காலகட்டத்தில் வாங்கியதாக சசிகலா சொன்ன 19 நகைகளையும், 1987-88 காலத்தில் வாங்கியதாக 44 நகைகளையும், 1988-89-ல் வாங்கியதாகச் சொன்ன 69 நகைகளையும், 1989-90-ல் வாங்கியதாகச் சொன்ன 96 நகைகளையும் எடைபோட்டு ஒரு பேப்பரில் தெளிவாகக் குறித்துக்கொண்டு கோவை திரும்பிவிட்டோம். கோவை வந்தபிறகு, அவற்றுக்கு விலை மதிப்பீடு செய்து அதுபற்றித் தனித்தனியாக நான்கு அறிக்கைகளை கொரியர்மூலம் போயஸ் கார்டன் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைத்தோம். அந்த நான்கு அறிக்கைகளும் சசிகலா பெயரில் வேண்டும் என்று கேட்டதால், அவருடைய பெயருக்கே அறிக்கை கொடுத்தோம். நாங்கள் கணக்கிட்டதில் அந்த நகைகளின் மதிப்பு ஒரு கோடியே 41 லட்சத்து 18 ஆயிரத்து 91 ரூபாய்’ என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த நகை மதிப்பீட்டுக்காகத் தங்களுக்குத் தரவேண்டிய தொகைக்கு நான்கு பில்களையும் அனுப்பியதாகவும், இப்போது வரை அந்தத் தொகை தங்களுக்கு வரவில்லை என்றும் கூறி உள்ளனர்.

மேலும், 'ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட 468 நகைகளில் 29 நகைகளை மட்டும்தான் தங்களால் இப்போது அடையாளம் காணமுடிகிறது. மற்றவை எல்லாம் நாங்கள் பார்க்காத புதிய ரகங்கள்’ என்று சொல்லி உள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள உம்மிடி பங்காரு செட்டி அறக்கட்டளை தங்க நகைக்கடையை நடத்துபவர் ஸ்ரீஹரி. இவர் மற்றொரு அரசுத் தரப்பு சாட்சி. வி.பி.சி.டி. (உம்மிடி பங்காரு செட்டி டிரஸ்ட்) என்று எழுத்துகள் பொறிக்கப்பட்டி​ருக்கும் நகைகள் அனைத்தும் இந்தக் கடையில் இருந்து வாங்கப்பட்டவை. இந்த ஆதாரத்தின்படி ஜெயலலிதா வீட்டில் சோதனையில் கண்டுபிடிக்கப்​பட்ட பல நகைகள் உம்மிடி பங்காரு செட்டி நகைக்கடையில் இருந்து வாங்கியவைதான். 1975-க்குப் பிறகு, ஜெயலலிதா இவரிடமும் நகைகளை வாங்கி வருகிறார் என்று ஸ்ரீஹரி தன்னுடைய சாட்சியில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அவர் சார்பில் ஒருவர் தன்னைத் தொலைபேசியில் அழைத்து, 'முதலமைச்சருக்கு தங்க, வைர ஆபரணங்கள் வேண்டும். கொண்டு வாருங்கள். வாங்கும் நகைகள் அனைத்துக்கும் அவர்கள் பணம் கொடுத்துவிடுவார்கள். ஆனால், பணம் செலுத்தியதற்கான பில்கள் தேவை இல்லை’ என்று சொன்னதாகத் தனது சாட்சியத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், சசிகலாவுக்கு வைர ஒட்டியாணம் செய்து கொடுத்ததையும் அதற்கான தொகையை, தான் பெற்றுக் கொண்டதையும் ஸ்ரீஹரி தனது சாட்சியத்தில் சொல்லி உள்ளார். இவர் ஜெயலலிதாவுக்காக நகைகளை மதிப்பீடு செய்து கொடுத்த சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார். ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட நகைகளில் இவர், தான் பார்த்ததாக 51 நகைகளை அடையாளம் கண்டும் சொல்லி உள்ளார்.

அதன்படி ஸ்ரீஹரி 62 நகைகளை மதிப்பிட்டு சான்றிதழ் கொடுத்துள்ளார். அதன் விலைமதிப்பு ஒரு கோடியே 9 லட்சத்து 8 ஆயிரத்து 206 ரூபாய். மேலும் 1991-ம் ஆண்டு 26 நகைகளை மதிப்பீடு செய்து சான்றிதழ் கொடுத்துள்ளார். அதன் விலைமதிப்பு 19 லட்சத்து 30 ஆயிரத்து 852 ரூபாய். 1992-ம் ஆண்டு 26 நகைகளை மதிப்பீடு செய்து கொடுத்துள்ளார் அதன் விலைமதிப்பு 19 லட்சத்து 30 ஆயிரத்து 852 ரூபாய். அதே வருடம் மார்ச் மாதம் இவர் ஜெயலலிதாவுக்காக மதிப்பீடு செய்து கொடுத்த நகைகளின் மதிப்பு 23 லட்சத்து 90 ஆயிரத்து 58 ரூபாய். இதுபோன்ற மதிப்பீடுகளை அடிப்படையாக வைத்து ஜெயலலிதா 1991-ம் ஆண்டுக்கான சொத்துவரியை தாக்கல் செய்துள்ளார்.''

இதுபோல் பதவிக்கு வந்தபிறகு தாக்கல் செய்த சொத்துவரி ஆதாரங்களின் மூலம் ஜெயலலிதா சிக்கிக் கொண்ட விதம் அடுத்த இதழில்...

- ஜோ.ஸ்டாலின்

நன்றி : ஜூனியர் விகடன்

ஜெயலலிதா-சசிகலா அண்ட் கோ - குவித்த சொத்துக்கள் முழு விபரம்..!

17-10-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருந்த சொத்துக் குவிப்பு பற்றிய முழு பட்டியல் இது :



1    போயஸ் கார்டன், பிளாட் எண் 50, தேனாம்பேட்டை ரூ.1,32,009

2    ஸ்ரீநகர், ஆபீசர் காலனி, ஐதராபாத், ஆந்திரா    ரூ.50,000

3    இரண்டு பார்ம் ஹவுஸ்கள், ரங்காரெட்டி தாலுகா, பஷீராபாத் கிராமம்  மற்றும் ஜெட்டிமெட்லா, ஐதராபாத்    ரூ.1,65,058.50

4    ஆந்திர மாநிலம், மெகால் தாலுகா, பஷீராபாத் கிராமத்தில் 3.15 ஏக்கர் நிலம்    ரூ.13,254.50

5    தமிழகத்தின் செய்யூர் கிராமத்தில் ஜெயலலிதா பெயரில் வேளாண் நிலம்    ரூ.17,060

6    சென்னை பட்டம்மாள் சாலையில் ஜெயலலிதா, சசிகலா பெயரில் கட்டிடம்    ரூ.5,70,039

7    சென்னை சாந்தோமில் சசிகலா பெயரில் ஆர்.ஆர்.பிளாட்ஸ்    ரூ.3,13,530

8    சென்னை அண்ணா சாலையில் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வாங்கிய கட்டிடம்    ரூ.98,904

9    சென்னை நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் 11 கிரவுண்டு நிலம் வாங்கியது.    ரூ.22,10,919

10    சென்னை செயின்ட் மேரிஸ் சாலையில் ஜெயலலிதா பெயரில் 1,206 ச.அடி நிலம்    ரூ.1,05,409

11    சென்னை மவுன்ட் ரோட்டில் 1,856 சதுர அடி நிலம் ஜெயலலிதா பெயரில் பதிவு    ரூ.1,05,409

12    தஞ்சாவூர் மனம்புசாவடியில் 2,400 சதுர அடி நிலம் வாங்கி பதிவு    ரூ. 1,57,125

13    தஞ்சாவூர் நகரில் எச்.டி.சாலையில் 51 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கி பதிவு    ரூ.1,15,315

14    தஞ்சாவூர், எச்.டி. சாலையில் காலி நிலம் வாங்கி பதிவு    ரூ.2,02,778

15    திருச்சி பொன்னகரம், அபிஷேகபுரம் கிராமத்தில் 3,525 சதுர அடி நிலம்    ரூ.5,85,420

16    தஞ்சாவூர் மாவட்டம், சுந்தரகோட்டையில் 3.23 ஏக்கர் தரிசு நிலம் வாங்கி பதிவு    ரூ.75,210

17    சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டையில் 5,658 சதுரஅடி நிலம்    ரூ.5,28,039

18    சென்னை மயிலாப்பூரில் ஜெயலலிதா பெயரில் 1,407 சதுர அடி நிலம் பதிவு    ரூ.10,20,371

19    தஞ்சை மன்னார்குடியில் உள்ள ஹரிதரநதி மேற்கில் 25,035 சதுரஅடி நிலம் வாங்கி சசிகலா பெயரில் பதிவு    ரூ.6,78,000

20    சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டை புனிததாமஸ் கிராமத்தில் 4,664.60 சதுர அடி நிலம் பதிவு    ரூ.15,05,428

21    சென்னை நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் 11 கிரவுண்டு நிலம் வாங்கியது.    ரூ.2,98,144

22    ஆந்திர மாநிலம் செகந்திராபாத் ராதிகா நகரில் 222.92 சதுர அடி மற்றும்  நிலம் டெல்லி திவான்ஹால் பகிரத்பேலஸ்    ரூ.5,57,761

23    சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் டான்சி (பவுண்ட்ரி) நிலம்    ரூ.2,13,68,152

24    தமிழக வீட்டுவசதி கழகம் சார்பில் இளவரசிக்கு வீட்டுமனை ஒதுக்கீடு    ரூ   2,35,813

25    சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் டான்சி (ஒயர்) நிலம்    ரூ.90,17,089

26    சென்னை அபிராமபுரத்தில் நிலம், கட்டிடம்    ரூ.49,02,105

27    சென்னை அடுத்த செய்யூர் கிராமத்தில் 11.07 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு    ரூ.3,18,712

28    சென்னையில் உள்ள மகாசுப்புலட்சுமி திருமண மண்டபம் சுதாகரன் பெயரில் வாங்கி பதிவு செய்யப்பட்டது    ரூ.38,51,000

29    சென்னை நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் ஜம்ஸ்கோர்ட் 1,736 சதுர அடி நிலம் வாங்கியது    ரூ.1,60,572

30    சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கு சசிகலா, சுதாகரன் பங்கு வாங்கிய தொகை    
ரூ.84,21,000

31    வெலகாபுரம் கிராமத்தில் 45.22 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு செய்யப்பட்டது    ரூ.40,25,023.70

32    சென்னை அடுத்த நீலாங்கரையில் 4,802 சதுர அடி நிலம் பதிவு    ரூ.9,60,520

33    சென்னை தி.நகர் பத்மநாப தெருவில் 5,430 சதுர அடி நிலம் பதிவு    ரூ.15,96,150

34    சென்னை அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் இளவரசி பெயரில் 63.94 ஏக்கர் நிலம் பதிவு    ரூ.14,01,600

35    சென்னை அடுத்த செய்யூர் கிராமத்தில் 2.56 ஏக்கர் நிலம் பதிவு    ரூ. 1,23,910

36    வடசென்னையில் 10.7 ஏக்கர் நிலம் பதிவு    ரூ.4,65,000

37    சென்னை டி.டி.கே. சாலையில் 2,150 சதுர அடி நிலம் வாங்கி பதிவு    ரூ.57,00,000

38    சென்னை டிடிகே சாலை ஸ்ரீராம்நகர் மற்றும் ஈஞ்சம்பாக்கத்தில் 1.29 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு    ரூ.6,49,770

39    சென்னை சோழிங்கநல்லூரில் நிலம்    ரூ.3,75,000

40    சென்னை அடையாறில் கட்டிடம் வீடு    ரூ.5,70,200

41    சென்னை பசுல்லா சாலையில்    ரூ.9,30,600

42    சென்னை நுங்கம்பாக்கத்தில் 4,348 சதுர அடி நிலம் வாங்கி பதிவு    ரூ.11,36,024

43    சென்னை அடுத்த சிறுதாவூரில் 3.30 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு    ரூ.93,475 

44    சென்னை வெட்டுவாங்கேணியில் 1 ஏக்கர் நிலம் பதிவு    ரூ.3,63,120

45    சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் 640 சதுர அடி நிலம்    ரூ.2,26,130

46    சென்னை தி.நகர், முருகேஷ் சாலையில் 4,800 சதுர அடி நிலம்    ரூ.33,44,040

47    சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் 900 சதுர அடி நிலம்    ரூ.9,95,670

48    சேரகுளம் மற்றும் வள்ளாகுளம் கிராமத்தில் 53.66 ஏக்கர் நிலம் பதிவு    ரூ.1,21,389

49    கருங்குழிபள்ளம் கிராமத்தில் 16.33 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு    ரூ.6,89,202

50    திருவேங்கடநகர் காலனியில் 520 சதுர அடி வீடு    ரூ.5,75,000

51    வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கத்தில் 37 சென்ட் நிலம் பதிவு    ரூ.1,24,540 

52    சென்னை டிடிகே சாலையில் 733 ச.அடி நிலம்    ரூ.59,28,050

53    சென்னை அடுத்த பையனூர் கிராமத்தில் 22.90 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு    ரூ.16,17,688

54    சென்னை அரும்பாக்கத்தில் 3,197 சதுர அடி நிலம்    ரூ.8,55,150

55    பரமேஸ்வரி நகரில் 4,564 சதுர அடி நிலம்     ரூ.34,20,160

56    சேரகுளம் கிராமத்தில் 144.28 ஏக்கர் நிலம்    ரூ.4,52,844

57    மீராகுளம் கிராமத்தில் 42.31 ஏக்கர் நிலம்    ரூ.95,740

58    வள்ளாகுளம் கிராமத்தில் 34 ஏக்கர் நிலம்    ரூ.78,801

59    சோழிங்கநல்லூர் கிராமத்தில் 50 சென்ட் நிலம்    ரூ.2,86,441

60    ஊத்துக்காடு கிராமத்தில் 27.98 ஏக்கர் நிலம்    ரூ.4,51,980

61    கலவை கிராமத்தில் 6.98 ஏக்கர் நிலம்    ரூ.25,833

62    வள்ளாகுளம் கிராமத்தில் 286 ஏக்கர் நிலம்    ரூ.6,57,169

63    சேரகுளம் கிராமத்தில் 122 ஏக்கர் நிலம் பதிவு     ரூ.4,64,997

64    மீராகுளம் கிராமத்தில் 326.15 ஏக்கர் நிலம்    ரூ.5,61,935

65    சென்னை அபிபுல்லா சாலையில் 4,293 சதுர அடி கட்டிடம்    ரூ.43,56,142

66    சென்னை அபிபுல்லா சாலையில் 3,472 சதுர அடி கட்டிடம்    ரூ.59,96,346

67    சென்னை அடுத்த ஊத்துக்கோட்டையில் 106.69 ஏக்கர் நிலம் பதிவு    ரூ.7,47,698

68    வண்டம்பள்ளியில் 27.57 ஏக்கர் நிலம் பதிவு    ரூ.7,88,076

69    வண்டம்பள்ளியில் ராமராஜ் ஆக்ரோ மில் நிறுவனம் கட்டப்பட்டதின் செலவு    ரூ.14,00,806

70    ராம்ராஜ் ஆக்ரோ மில்ஸ் கட்டுமான பணி    ரூ.57,19,800

71    ராம்ராஜ் ஆக்ரோ நிறுவன எம்.டி. பங்களா மதிப்பு    ரூ.83,41,000

72    சென்னை லஸ் அவென்யூவில் 6,798 சதுர அடி கட்டிடம்    ரூ.65,23,176

73    ராம்ராஜ் ஆக்ரோ நிறுவன பங்கு வாங்கியது    ரூ.18,42,000

74    சென்னை அபிராமபுரத்தில் கட்டிடம் எழுப்பியதற்கு செலவிட்ட தொகை    ரூ.76,00,000

75    கோடநாடு தேயிலை தோட்டம் வாங்கியது    ரூ.7,60,00,000 

76    நீலாங்கரையில் 11 சென்ட் நிலம் பதிவு    ரூ.7,98,945

77    நீலாங்கரையில் 13 சென்ட் நிலம் பதிவு    ரூ.9,49,995

78    அரும்பாக்கம் கிராமத்தில் 3,197 சதுர அடி நிலம்    ரூ.8,55,150

79    தஞ்சாவூர் வ.உ.சி. நகரில் 26,540 சதுர அடி கட்டிடம் வாங்கியது    ரூ.19,03,088

80    ஊத்துக்கோட்டையில் 21.82 ஏக்கர் நிலம்     ரூ.3,13,553

81    வெலகாபுரம் கிராமத்தில் 41.10 ஏக்கர்    ரூ.80,394

82    பையனூர் கிராமத்தில் 4.27 ஏக்கர் நிலம்    ரூ.10,56,880

83    கடலூரில் உள்ள இண்டி-தோஹா கெமிக்கல் நிறுவன கட்டுமான பணிக்கு    ரூ.86,91,000

84    நீலாங்கரையில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு    ரூ.80,75,000

85    நீலாங்கரையில் சசிகலா பெயரில் 11,197 சதுர அடி நிலம் வாங்கப்பட்டது    ரூ.5,72,910

86    பையனூரில் வாங்கிய பங்களா புதுப்பிக்க  செலவு செய்தது    ரூ.1,25,90,261

87    ஈக்காட்டுதாங்கலில் கட்டிடம்    ரூ.2,13,63,457

88    வெட்டுவாங்கேணியில் உள்ள கட்டிட புதுப்பிப்பு பணிக்கு    ரூ.1,52,59,076

89    ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்ட பண்ணை வீட்டில் புதிய கட்டிடம் எழுப்ப    ரூ.6,40,33,901

90    சிறுதாவூர் பங்களா புதுப்பிக்கும் பணிக்கு    ரூ.5,40,52,298

91    சென்னை போயஸ் கார்டன் வீடு புதுப்பிக்க    ரூ.7,24,98,000

92    சென்னை ஸ்ரீராம்நகரில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம் கட்ட    ரூ.29,59,000

93    சோழிங்கநல்லூரில் உள்ள கட்டிடம் புதுப்பிக்க    ரூ.80,36,868

94    சென்னை பட்டம்மாள் சாலையில் உள்ள கட்டிடம் அருகில் புதிய கட்டிடம் கட்டியதற்கு    ரூ.8,00,000

95    சென்னை தி.நகர், பத்மநாப சாலையில் உள்ள நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கு    ரூ.20,43,000

96    சென்னை அண்ணாநகரில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம் அமைக்க    ரூ.24,83,759

97    சென்னை தி.நகர் முருகேசன் சாலையில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம்    ரூ.10,92,828

98    சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் புதிய கட்டிடம் கட்ட    ரூ.53,11,000

99    சென்னை அக்கரையில் புதிய கட்டிடம் அமைக்க    ரூ.20,38,959

100    சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் புதிய கட்டிடம் எழுப்ப    ரூ.39,34,000

101    சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் புதிய கட்டிடம் எழுப்ப    ரூ.14,17,538

102    சேரகுளம் கிராமத்தில் உள்ள ரிவர்வே அக்ரோ பார்ம் கம்பெனி கட்டிடம், மின் இணைப்பு உள்பட கட்டுமான பணிக்கு    
ரூ.7,58,160.50

103    சென்னை அபிராமபுரம், இந்தியன் வங்கியில் இளவரசி, விவேக் பெயரில் உள்ள வங்கி கணக்கில் 30.4.1996 அன்று பேலன்ஸ் 
தொகை    ரூ.2,42,211.50

104    இளவரசி இயக்குனராக இருக்கும் சிக்னோரா பிஸ்னஸ் கம்பெனியின் வங்கி கணக்கில் பேலன்ஸ் 30.4.1996    ரூ.167.20

105    சசிகலா இயக்குனராகவுள்ள பிரஸ் மஸ்ரூம்ஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996     ரூ.771.26

106     இளவரசி இயக்குனராக உள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் கம்பெனி வங்கி பேலன்ஸ் 30.4.1996 அன்று    ரூ.85,342.25

107     வி.என்.சுதாகரன் வங்கி பேலன்ஸ் 30.4.1996 அன்று    ரூ.1,32,221

108     ஜெயலலிதா வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.19,29,561.58

109    இளவரசி வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.3.40,527.95

110    சென்னை மயிலாப்பூரில் உள்ள வங்கியில் ஜெயலலிதா பேலன்ஸ்    ரூ.1,70,570.13

111    சசிகலா இயக்குனராக உள்ள மெடல் கிங் கம்பெனி வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.2,900.28

112     சசிகலா பெயரில் சென்னை மயிலாப்பூரில் உள்ள வங்கியில் பேலன்ஸ் 30.4.1996    ரூ.1,889.28

113    மயிலாப்பூர் கனரா வங்கியில் ஜெயலலிதா, சசிகலா வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.20,79,885.12

114    சென்னை மயிலாப்பூர் கனரா வங்கியில் சசிகலா கணக்கு பேலன்ஸ் 30.4.1996    ரூ.1,095.60

115    சசிகலா இயக்குனராக உள்ள மெடல்கிங் கம்பெனிக்கு கிண்டி கனரா வங்கியில் பேலன்ஸ் 30.4.1996    ரூ.3,17,242.21 

116    சென்னை மயிலாப்பூர் கனரா வங்கியில் சுதாகரன் வங்கி பேலன்ஸ் 30.4.1996.    ரூ.47,453.64

117    சென்னை அண்ணாநகர் சுப்பு லட்சுமி திருமண மண்டபம் வங்கி பேலன்ஸ்    ரூ.3,17,457.64

118    சென்னை மயிலாப்பூர் கனரா வங்கியில் சுதாகரன் வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.61,430

119    ஜெயா பைனான்ஸ் வங்கி பேலன்ஸ்    ரூ.1,760

120    மயிலாப்பூர் கனரா வங்கியில் இளவரசி வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.1,18,198

121    மயிலாப்பூர் கனரா வங்கியில் இளவரசி வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.894.00

122    மயிலாப்பூர் கனரா வங்கியில் சசிகலா வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.560.55

123    மயிலாப்பூர் கனரா வங்கியில் சசிகலா, இளவரசி ஆகியோர் இயக்குனராக உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் வங்கி பேலன்ஸ் 
30.4.1996    ரூ.10,75,335.64

124    மயிலாப்பூர் கனரா வங்கியில் ஜெயலலிதா  சசிகலா ஆகியோர் இயக்குனராக உள்ள சசி என்டர்பிரைசஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996  
  ரூ.4,59,976.22

125    ஜெ ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு அபிராமபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியில் உள்ள பேலன்ஸ் 30.4.1906    ரூ.167.55

126    சூப்பர்-டூப்பர் டி.வி கம்பெனி இயக்குனராக உள்ள சசிகலா, சுதாகரன் இந்தியன் வங்கி கணக்கில் பேலன்ஸ் 30.4.1996    
ரூ.5,46,577.50

127     ஜெ.ஜெ. லீசிங் கம்பெனி வங்கி கணக்கு பேலன்ஸ் 30.4.1996    ரூ.1,838.00

128    ஜெ.எஸ்.ஹவுசிங் வங்கி கணக்கு பேலன்ஸ் 30.4.1996    ரூ.13,671.80

129    கிரீன் பார்ம் ஹவுஸ் வங்கி பேலன்ஸ்    ரூ.146.70

130     ஜெயா கான்ட்ராக்டர் அண்டு பில்டர்ஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.10,891

131    சசி என்டர்பிரைசசின் அபிராமபுரம் இந்தியன் வங்கி பேலன்ஸ் 30.4.1996     ரூ.1,02,490

132    சக்தி கன்ட்ரக்ஷன் கம்பெனியின் இந்தியன் வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.1,02,490

133     கோபால் புரமோட்டர்ஸ் வங்கி பேலன்ஸ்    ரூ.1,02,490.10

134     லட்சுமி கன்ட்ரக்ஷன் வங்கி பேலன்ஸ்    ரூ.1,02,490.18

135    மெடோ அக்ரோ பார்ம் வங்கி பேலன்ஸ்    ரூ.358.70

136    ரிவர்வே அக்ரோ பார்ம் வங்கி பேலன்ஸ்    ரூ.2,916.61

137     அண்ணாநகர் பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் ஜெயலலிதா வங்கி பேலன்ஸ் 30.4.1996     ரூ.2,05,151.06

138    ஜெயலலிதா பேரில் செகந்திராபாத் வங்கியில் பேலன்ஸ்    ரூ.3,84,760.67

139    சசிகலா பெயரில் செகந்திராபாத் வங்கியில் பேலன்ஸ்    ரூ.2,43,000

140    ஜெயலலிதாவுக்கு சொந்தமான டாடா சீரா கார் மதிப்பு    ரூ.4,01,131

141    ஜெயலலிதாவுக்கு சொந்தமான மாருதி-800 கார் மதிப்பு    ரூ.60,435

142    ஜெயலலிதாவுக்கு சொந்தமான மாருதி ஜிஸ்பி கார் மதிப்பு    ரூ.2,03,424.54

143     ஜெயலலிதாவுக்கு சொந்தமான டிரக்ஸ்     ரூ.1,04,000

144     ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான டாடா எஸ்டேட் கார் மதிப்பு    ரூ.4,06,106

145    ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஸ்சுவராஜ் மஸ்தா வாகனம் மதிப்பு    ரூ.1,76,172.60

146    ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு    ரூ.3,85,520

147     ஜெயலலிதாவுக்கு சொந்தமான கண்டசா கார் மதிப்பு    ரூ.2,56,238

148     ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான டாடா மொபைல் வேன்    ரூ.2,81,169

149     ஜெயலலிதா பெயரில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கு வாங்கப்பட்ட டிரக்ஸ் ஜீப்    ரூ.1,04,000

150     சசிகலாவுக்கு சொந்தமான டாடா சீரா கார்    ரூ.3,80,376

151    சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்காக ஜெயலலிதா பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு    ரூ.2,99,845

152     சசிகலா பெயரில் வாங்கியுள்ள டாடா சீரா கார் மதிப்பு    ரூ.5,11,118

153     சசிகலா பெயரில் வாங்கியுள்ள டாடா சீரா கார் மதிப்பு    ரூ.5,11,118

154    சசி என்டர்பிரைசஸ் பெயரில் வாங்கியுள்ள டாடா சுமோ கார் மதிப்பு    ரூ.3,15,537

155    சசி என்டர்பிரைசஸ் பெயரில் வாங்கியுள்ள மாருதி எஸ்டிம் கார் மதிப்பு    ரூ.5,25,132

156     வி.என்.சுதாகரன் பெயரில் வாங்கியுள்ள கார்கோ வாகனம்    ரூ.5,05,009

157    வி.என்.சுதாகரன் பெயரில் வாங்கியுள்ள டிரக்ஸ் ஜீப் மதிப்பு    ரூ.2,96,191.28

158    நமது எம்.ஜி.ஆர். பெயரில் வாங்கியுள்ள பஜாஜ் டெலிவரி வேன் மதிப்பு    ரூ.52,271

159     ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு    ரூ.5,56,999.99

160     ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு    ரூ.5,56,999.99

161    மெட்டல்கிங் நிறுவனம் பெயரில் வாங்கியுள்ள மாருதி கார்    ரூ.2,22,485.19

162    அதிமுக தலைமை கழகம் பெயரில் வாங்கியுள்ள பஜாஜ் டெம்போ ஆம்னி பஸ் மதிப்பு    ரூ.2,03,979

163     ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு    ரூ.5,56,999.99

164    ஜெயா பப்ளிகேஷன் நிறுவன பெயரில் வாங்கியுள்ள மெர்சிடெஸ் பென்ஸ் கார் மதிப்பு    ரூ.9,15,000

165    அதிமுக தலைமை கழகம் பெயரில் வாங்கியுள்ள பஜாஜ் டெம்போ வேன் மதிப்பு    ரூ.2,03,979

166    ஜெயலலிதா பெயரில் கனரா வங்கியில் செய்துள்ள எப்.டி. தொகை    ரூ.16,03,545

167    ஜெயா பப்ளிகேஷன் பெயரில் எப்.டி. தொகை    ரூ.1,49,544

168     ஜெயா பப்ளிகேஷன் பெயரில் எப்.டி தொகை    ரூ.5,00.000

169     சூப்பர்-டூப்பர் டிவி பெயரில் அபிராமபுரம் இந்தியன் வங்கியில் எப்.டி. தொகை    ரூ.5,00.000

170    சூப்பர்-டூப்பர் டிவி பெயரில் அபிராமபுரம் இந்தியன் வங்கியில் எப்.டி. தொகை    ரூ.5,00.000

171    சூப்பர்-டூப்பர் டிவி பெயரில் அபிராமபுரம் இந்தியன் வங்கியில் எப்.டி. தொகை    ரூ.5,00.000

172    கோத்தரி ஓரியண்டல் பைனான்சில் ஜெயலலிதா பெயரில் எப்.டி. தொகை    ரூ.1,00,000

173    அதே தொகை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது    ரூ.1,00,000

174    அதே தொகை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது    ரூ.1,00,000

175     ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை    ரூ.3,00,000

176    ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை    ரூ.30,00,000

177    ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை    ரூ.15,00,000

178     ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 29.1.98    ரூ.5,00,000

179    ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 22.4.1998    ரூ.15,00,000

180    ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 22.4.1998    ரூ.10,00,000

181    ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 19,10.1993    ரூ.2,00,000

182    மெட்ராஸ் ஆக்சிஜன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களில ஜெயலலிதா எப்.டி. தொகை    ரூ.1,00,00,000

183     ஜெயலலிதாவுக்கு சொந்தமான 389 காலணிகளின் மதிப்பு    ரூ.2,00,902.45

184    ஜெயலலிதாவுக்கு சொந்தமான 914 பட்டு சேலைகளின் மதிப்பு    ரூ.61,13,700

185    ஜெயலலிதாவுக்கு சொந்தமான 6,195 பிற சேலைகள் மதிப்பு    ரூ.27,08,720

186    ஜெயலலிதாவுக்கு சொந்தமான 2,140 பழைய சேலைகளின் மதிப்பு    ரூ.4,21,870

187    ஜெயலலிதாவுக்கு சொந்தமான 7 ரிஸ்ட் வாட்ச்கள் மதிப்பு    ரூ.9,03,000

188    ஜெயலலிதாவுக்கு சொந்தமான 91 ரிஸ்ட் வாட்ச்கள் மதிப்பு    ரூ.6,87,350

189     ஜெயலலிதாவுக்கு சொந்தமான 86 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.17,50,031

190    சசிகலாவுக்கு சொந்தமான 62 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.9,38,460

191     ஜெயலலிதாவுக்கு சொந்தமான 26 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.19,30,852.10

192     சசிகலாவுக்கு சொந்தமான 34 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.17,54,868.90

193     ஜெயலலிதாவுக்கு சொந்தமான 41 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.23,90,058.25

194     ஜெயலலிதாவுக்கு சொந்தமான 228 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.1,40,75,958

195    ஜெயலலிதாவுக்கு சொந்தமான 394 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.3,12,67,725

196     ஜெயலலிதாவுக்கு சொந்தமான 1,116 கிலோ வெள்ளி பொருட்களின் மதிப்பு    ரூ,48,80,000

197     சூப்பர்-டூப்பர் டி.வி. நிறுவனத்தின் எலக்ட்ரானிக் காம்ப்ளக்ஸ் மதிப்பு    ரூ.15,75,800

198    மெட்டல்கிங் நிறுவனத்தின் இயந்திர மதிப்பு    ரூ.7,69,000

199     ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் இயந்திரம் கொள்முதல் செய்தது    ரூ.2,16,42,000

200     வி.என்.சுதாகரன், சத்யலட்சுமி நிச்சயதார்த்தத்தின்போது ஜெயலலிதா சார்பில் ரூ.2,95,061.50 மதிப்புள்ள தங்கம் , ரூ.8,99,320.50 மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக வழங்கப்பட்டது அதன் மொத்த மதிப்பு   ரூ.11,94,381.50

201     சென்னை தி.நகர் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 30.4.1996 அன்று ஜெயலலிதாவின் பேலன்ஸ் தொகை    ரூ.21,380

202     ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் வளர்ச்சிக்கு செலவிட்ட தொகை   ரூ.8,60,950

203     சென்னையில் உள்ள ஆர்பிஐயில் ஜெயலலிதா பெயரில் எப்.டி. தொகை    ரூ.1,00,00,000

204    ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக வாங்கிய புதிய வாகனம்    ரூ.32,40,278

205     சசிகலா பெயரில் 30.4.1996ல் சென்ட்ரல் வங்கியில் பேலன்ஸ்    ரூ.17,502.98

206    திருச்சியில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான பொன்நகர் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டதற்கான செலவு    ரூ.6,83,235

207    சென்னை வேலி கார்ட்ன் சாலையில் உள்ள கட்டிடம் புதுப்பிக்க    ரூ.34,46,032

208    செகந்திராபாத்தில் உள்ள கட்டிடம் புதுப்பிக்க ஏற்பட்ட செலவு    ரூ.3,00,000

209    30.4.1996 அன்று நமது எம்.ஜி.ஆர். நிறுவன வங்கி பேலன்ஸ் தொகை    ரூ.5,10,968.16

210    சேரகுளம் கிராமத்தில் வசித்த நாச்சியம்மாளிடம் வாங்கிய நிலம்    ரூ.21,830

211    1993 அக்டோபர் மாதம் இளவரசி,  மாஸ்டர் விவேக், கிருஷ்ண பிரியா ஆகியோர் பெயரில் இந்தியன் வங்கியின் ஜெயராமன் மூலம் கொடுத்து டெபாசிட் செய்யப்பட்டதின் மதிப்பு ரூ.38,421.00 - மொத்தம்  ரூ.66,44,73,573.27

இத்தனை சொத்துக்களையும் பறிமுதல் செய்ய பெங்களூர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.