மனிதன் - சினிமா விமர்சனம்

30-04-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ரெட்ஜெயன்ட் மூவிஸ் வரலாற்றிலும், உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான, தமிழ்ச் சினிமாவின் வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் படமும் இதுதான்..!
"முந்தைய ‘மனிதன்’ திரைப்படம் ரஜினியின் திரைப்பட வாழ்க்கை கேரியரில் ஒரு வெற்றிப் படமாகவும் அமைந்திருந்ததால் அந்த ‘மனிதன்’ என்ற டைட்டிலின் கவுரவம் குறையாமல்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம்…" என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார் தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின். இதனை செய்தும் காட்டியிருக்கிறார். அந்த வகையில் அவருக்கு நமது நன்றி..!
இந்தியாவில் ஏழைக்கு ஒரு நீதி.. பணக்காரர்களுக்கு ஒரு நீதி என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். அந்த உண்மைக்கு இன்னுமொரு உதாரணம் இந்த ‘மனிதன்’ திரைப்படம்.

2013 மார்ச் 15-ம் தேதியன்று ஹிந்தியில் ரிலீஸாகி இந்தியாவெங்கும் பெரும் வெற்றி பெற்ற ‘ஜாலி எல்.எல்.பி’ என்கிற ஹிந்தி திரைப்படத்தின் தமிழாக்கம்தான் இது. இதுவும் ஒரு உண்மைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான்.
டெல்லி சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. படித்துக் கொண்டிருந்தவர் பிரியதர்ஷினி மட்டூ. அதே கல்லூரியில் படித்து வந்த சந்தோஷ் குமார் சிங், பிரியதர்ஷினிக்கு பல்வேறு வகைகளில் பாலியல் தொந்தரவினை செய்து வந்துள்ளார். இது குறித்து டெல்லி போலீஸில் பல முறை பிரியதர்ஷினி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை.
கடைசியில் 1996 ஜனவரி 23-ம் தேதி பிரியதர்ஷினியை அவரது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலையும் செய்துவிட்டார் சந்தோஷ் குமார் சிங். இந்த சந்தோஷின் தந்தை ஜெ.பி.சிங் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி. புதுவை மாநிலத்தில் போலீஸ் ஐ.ஜி.யாக பணி புரிந்து கொண்டிருந்தவர்.
இந்தச் செல்வாக்கால் வழக்கு டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும்போது சாட்சியங்களை முன் நிறுத்தாமல்.. ஏனோதானோ என்ற அரசுத் தரப்பு வக்கீலும் வாதாட.. கடைசியாக சந்தோஷின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கும், தீர்ப்பும் இந்தியாவெங்கும் எதிரொலித்தது. மீடியாக்கள் தினம்தோறும் இது குறித்து செய்திகளை வெளியிட.. வழக்கு சி.பி.ஐ.யின் கைக்கு சென்றது. சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அந்த அப்பீலில் இந்த வழக்குக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து 42 நாட்கள் தொடர்ச்சியாக விசாரித்த டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதிகள் சந்தோஷ் குமாருக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். இதை எதிர்த்து சந்தோஷ் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய.. அங்கே அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இப்போது டெல்லி திஹார் ஜெயிலில் கம்பியெண்ணி கொண்டிருக்கிறார் சந்தோஷ் குமார் சிங்.
இந்தச் சட்டப் போராட்டத்தை முன் நிறுத்திதான் இந்த ‘ஜாலி எல்.எல்.பி.’ படம் உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 13 ஆண்டு காலம் கழித்து அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்திய படம் என்றாலும் இந்திய நீதித் துறையிலும், காவல்துறையிலும் புரையோடியிருக்கும் ஊழல், லஞ்சம் என்ற விஷக் கிருமிகளை வெளிப்படுத்தியதால் இந்தப் படம் இந்தியாவெங்கும் சக்கைப் போடு போட்டது. இந்தப் படத்தை தமிழாக்கம் செய்ய நினைத்த தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நமது நன்றிகள்..
இதேபோல் மணப்பாறையில் ஒரு டாக்டர் தம்பதிகள் தங்களுடைய மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்தபோது தங்களுடைய மகனையும் அருகில் இருக்க வைத்து அவனுக்கு ஆபரேஷன் செய்வது எப்படி என்று சொல்ல கொடுத்து.. அவனையே ஆபரேஷன் செய்ய வைத்து.. இதனை ஒரு பெரிய சாதனையாக்க முயன்ற கதை நாம் அனைவரும் அறிந்ததே.. அந்தக் கதையும் இந்தப் படத்தில் இணைக்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தம்தான்..!
உதயநிதி பொள்ளாச்சியில் வக்கீல் தொழில் செய்து வருகிறார். ஆனால் அதிகம் பிரபலமாகவில்லை. ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணுவாக கிடைத்த இந்த டாக்டர் கேஸிலும் சரியாக வாதாட முடியாமல் திணற, குற்றவாளிக்கு ஜாமீன் கிடைக்காமல் போகிறது.
கூடவே ஹன்ஸிகாவையும் காதலித்துக் கொண்டிருக்கிறார். தான் ஒரு வழக்கிலாவது ஜெயித்த பின்பு ஹன்ஸிகாவின் அப்பாவிடம் வந்து பெண் கேட்பதாக சொல்கிறார். ஆனால் அதற்கான வாய்ப்பே வராமல் போக.. ஒரு நாள் ஹன்ஸிகாவே ‘நீ எதற்கும் லாயக்கில்லை’ என்று சொல்லிவிட பெரிதும் மனம் புண்படுகிறார்.
உடனேயே சென்னைக்கு கிளம்பி வருகிறார் உதயநிதி. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தாய் மாமனான விவேக் வழக்கறிஞராக இருக்கிறார். அவருடன் சேர்ந்து தானும் பெரிய வக்கீலாக வேண்டும் என்ற நினைப்புடன் சென்னையில் கால் வைக்கிறார் உதயநிதி.
ஆனால் இங்கேயோ விவேக்கே உயர்நீதிமன்ற வளாகத்தில் ஊறுகாய் பாட்டிலை விற்று வருகிறார். அவருக்கே கேஸ்கள் கிடைக்கவில்லை. இப்போதும் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் நாம் பார்க்க்க் கூடிய காட்சி வக்கீல்கள் கேஸ் தேடி அலைவதைத்தான். இதேபோல் அலைந்து, திரிந்து பார்க்கிறார் உதயநிதி. கேஸ் கிடைப்பதாக இல்லை.
இங்கு வந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. வீட்டு வாடகை தர முடியவில்லையே என்றெல்லாம் நினைத்து வருத்தத்தில் இருக்கிறார். அப்போதுதான் சுப்ரீம் கோர்ட் வக்கீலான ஆதிசேஷன், ஒரு வழக்கில் ஆஜராக சென்னை வருவது தெரிகிறது. அந்த வழக்கு பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்கிறார் உதய்.
பிரபல தொழிலதிபரான ராகுல், ஒரு இரவு நேரத்தில் ஓவர் ஸ்பீடில் செல்லும்போது அவரது கார் விபத்துக்குள்ளாகி அருகில் இருக்கும் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருப்பவர்கள் மீது ஏறி இறங்கி நிற்கிறது. இந்த விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட 4 பேர் ஸ்தலத்திலேயே இறந்து போகிறார்கள்.
இந்த வழக்கில் உடனடியாக களத்தில் குதித்த தொழிலதிபர் குடும்பம், தங்களது மகனை பத்திரமாக மீட்கிறது. வழக்கு நீதீமன்றத்திற்கு வருகிறது. வழக்கில் சாட்சிகளே இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள் போலீஸார். நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் எந்தக் குறுக்குக் கேள்வியும் கேட்காமல் அமைதியாகிறார்.  ராகுல் தரப்பு வக்கீலோ ஏதோ ஒரு லாரி மோதியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், ராகுல் இந்த வழக்கில் குற்றவாளியல்ல.. அந்த வழியாக அவரும் காரில் வந்தார்.. சம்பவத்தை பார்த்துவிட்டு காரை நிறுத்தி விசாரித்திருக்கிறார். இதுதான் அவர் செய்த தவறு என்றும் வாதிடுகிறார்.. அரசுத் தரப்பு வக்கீல் வாயே திறக்காத்தால் ராகுலுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகிறது.
இந்தச் செய்தியை கூர்ந்து படித்த உதயநிதிக்கு சட்டென ஒரு எண்ணம் தோன்ற.. பொதுநலன் கருதி ராகுல் வழக்கில் செஷன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்புக்கெதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்கிறார். ஆதிசேஷன் மீண்டும் இந்த வழக்குக்காக ஆஜராக வருகிறார்.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் நீதிபதி ராதாரவி அடுத்தக் கட்ட விசாரணையின்போது சாட்சிகள், ஆதாரங்களை கொடுக்கும்படி உதயநிதியிடம் சொல்கிறார். இந்த நேரத்தில் இந்த வழக்கை நேரில் பார்த்த சாட்சி நான்தான் என்று சொல்லி கேரளாவில் இருந்து மது என்பவர் உதயநிதியிடம் வந்து சொல்கிறார். உடனேயே சந்தோஷமாகும் உதயநிதி, மதுவை வைத்தே இந்த வழக்கை நடத்த முடிவெடுக்கிறார்.
நாளை நீதிமன்றத்தில் வழக்கு வரவிருக்கும் சூழலில் முதல் நாள் உதயநிதியை சந்திக்கும் மது, நாளைய கோர்ட் விசாரணையில் தான் ராகுலை பார்க்கவில்லை என்று சொல்லப் போவதாகவும் இதற்காக ஆதிசேஷன் தரப்பில் தனக்கு பணம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இதில் ஒரு பங்கை உதயநிதிக்கு தருவதாகவும் சொல்கிறார்.
எதிர்பாராமல் பணம் கிடைக்கிறதே என்றெண்ணிய உதயநிதி தான் ஆதிசேஷனிடம் மேலும் பேசி கூடுதல் தொகையை வாங்குவதாக மதுவிடம் சொல்கிறார். ஆனால் மதுவோ, தனக்கும் இந்த வழக்கிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும், தன்னை இப்படி சொல்ல வைத்த்தே ஆதிசேஷன்தான் என்கிற உண்மையைச் சொல்கிறார். உதயநிதிக்கு அட்வான்ஸ் லஞ்சத் தொகையாக ஐம்பதாயிரத்தைக் கொடுத்துவிட்டுப் போகிறார் மது.
மறுநாள் நீதிமன்றத்தில் ராகுலை பார்க்கும் மது தான் பார்த்தது இவரில்லை என்று சொல்லிவிட.. இதற்கு உதயநிதியும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் இருக்கிறார்.  விசாரணை மறுபடியும் ஒத்தி வைக்கப்படுகிறது.
இதையறிந்த ஹன்ஸிகா உதயநிதியை திட்டித் தீர்க்கிறார். “லஞ்சம் வாங்கி பிழைக்கும் நீயெல்லாம் ஒரு மனுஷனா..?” என்று கேள்வியெழுப்ப.. அது உதயநிதிக்கு சுரீரென்கிறது. தன்னுடைய தவறை உணர்கிறார். அதே நேரம் ராகுல் ஏற்கெனவே ஒரு இளம் பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிட்டு அந்த வழக்கில் இருந்து தப்பித்திருப்பதும் தெரிய வர.. இந்த வழக்கில் இனிமேல் உண்மையாக செயல்பட்டு ராகுலுக்கு தண்டனை வாங்கித் தருவதாக முடிவெடுக்கிறார்.
இந்த முடிவை எப்படி செய்து காட்டுகிறார் என்பதுதான் இந்த ‘மனிதன்’ படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை.
இதேபோன்ற கதை தமிழ்நாட்டில், சென்னையிலும் நடந்தேறியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே ஒரு வெளிநாட்டு காரை வேகமாக ஓட்டி வந்த சென்னையின் புகழ் பெற்ற அகர்வால் குடும்பத்து பேரன் காரை பிளாட்பாரத்திலும் ஓட்டிவிட.. அந்த விபத்தில் 3 பேர் அந்த இடத்திலேயே மரணமடைந்தார்கள்.
இந்தியாவெங்கும் சங்கிலி தொடர்போல பல வியாபார நிறுவனங்களை நடத்திவரும் மிகப் பெரிய கோடீஸ்வர குடும்பத்தின் பிளஸ் டூ படிக்கும் பேரனான அந்த அகர்வாலை போலீஸ் கைது செய்து அந்த நள்ளிரவிலேயே ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்தது. தமிழ்நாடு போலீஸ் இல்லையா..? அதனால் மரியாதையாக தங்களது போலீஸ் ஜீப்பிலேயே அந்தப் பையனை அவர்களது வீட்டிற்கு கொண்டு போய்விட்டுவிட்டு வந்தார்கள்.
பின்பு இறந்தவர்களின் உறவினர்களிடத்தில் பேசி “ஒரு நஷ்டஈட்டுத் தொகையை பெற்றுத் தருகிறோம்.. சாட்சி சொல்லாமல் போய்விடுங்கள்..” என்று பஞ்சாயத்து பேசி ஒரு தொகையை வாங்கி சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கும், இந்த பஞ்சாயத்துக்காக தங்களுக்கென்று ஒரு பெரும் தொகையையும் பெற்றுக் கொண்டு அந்தக் கொலை குற்றவாளியான அகர்வாலை பத்திரமாக கொல்கத்தாவுக்கே அனுப்பி வைத்தது சென்னை மாநகர காவல்துறை. எவ்வளவு பெருமையான விஷயம்.? அந்த வழக்கு என்ன ஆனது என்று இப்போதுவரையிலும் யாருக்கும் தெரியாது..!
இதேபோல் இந்தியாவின் திரையுலக சூப்பர் ஸ்டார்களின் ஒருவரான சல்மான்கான் நள்ளிரவில் குடி போதையில் காரை ஓட்டி பிளாட்பாரத்தில் இருந்த 2 பேரை படுகொலை செய்தார். ஆனாலும் பல ஆண்டுகள் வழக்கினை நடத்தி.. சட்டத்தின் சந்து பொந்துகளையெல்லாம் தேடிப் பிடித்து கடைசியில் தான் குற்றவாளி இல்லை என்ற தீர்ப்பினை எழுதி வாங்கிக் கொண்டு இப்போதும் ஜாம், ஜாமென்று சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தச் சம்பவங்களையெல்லாம் மனதில் வைத்திருக்கும் இன்றைய தமிழக மக்கள் இந்தப் படத்தை நிச்சயம் விரும்பிப் பார்ப்பார்கள். படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்டே கதாபாத்திர தேர்வுகள்தான். ஹிந்தி படத்தில் ஸ்வரூப் சுக்லா நீதிபதியாகவும், பொம்மன் இரானி வக்கீலாகவும் நடித்திருப்பார்கள்.. அத்தனை சுவையான வாதங்களும், ஆக்ரோஷமான நடிப்பையும் கொட்டியிருந்தார்கள் இருவரும்.
இதே கேரக்டர் ஸ்கெட்ச்சில் தமிழுக்கு மிக மிக பொருத்தமாக ராதாரவியும், பிரகாஷ்ராஜும் அந்தந்த கேரக்டர்களாகவே வாழ்ந்து படத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.
நீதிமன்றக் காட்சிகளில் பேசப்பட்ட வசனங்களை தனக்கே உரித்தான பாணியில் உச்சரித்து அதன் மூலமாக அந்த வசனங்களுக்கே உயிருட்டீயிருக்கிறார் ஆதிசேஷனாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ். ‘சிட் டவுன்’ என்கிற வார்த்தையை பலவிதங்களில் பிரயோகப்படுத்தி தனது கோபத்தை வெளிப்படுத்தும், அந்தக் காட்சியில் அவரது நடிப்பை பார்க்க வேண்டுமே.. சிம்ப்ளி சூப்பர் ஸார்..
இதேபோல் இவருக்கு இணையாக தனது அழுத்தமான, ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பால் அனைவரையும் கவர்ந்துவிட்டார் ராதாரவி. முதலில் சாதாரண வழக்காக இதனை எடுத்துக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டவர், ஆதிசேஷனிடம் வீடு வாங்கும் விஷயத்தையும் பேசிவிடுவதால் ஒருவேளை இவரும் அவர் கூட்டாளியாகிவிடுவாரோ என்கிற பதைபதைப்புக்கு நம்மை ஆளாக்குகிறார்.
பின்பு உதயநிதி “இதுவரைக்கும் இதை விளையாட்டா நினைச்சேன்.. ஆனால் இப்போ இந்த வழக்கை உண்மையா நடத்தப் போறேன் ஸார்..” என்று தன்னிடம் சொன்னவுடன் தானும் மனம் மாறும் காட்சியில் யதார்த்தமான நடிப்பைக் கொட்டியிருக்கிறார் ராதாரவி.
கோப ஆவேசத்தில் கையில் இருக்கும் பேப்பர் வெயிட்டைத் தூக்கிக் காட்டி “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன.. நடக்குறதே வேற..” என்று எச்சரிக்கும் வேகமும்.. அதேபோல் அடுத்த நொடியே, “அவருக்கு காபி வேணாமாம்…” என்று பிரகாஷ் ராஜ் ஆங்கிலத்தில் சொன்னதை தமிழாக்கம் செய்து தனது உதவியாளரிடம் சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கும் வேகத்திலும் கைதட்டல்கள் மொத்த்த்தையும் வாங்கிக் கொண்டார் நடிகவேளின் புதல்வர் இளையவேள்.
இந்தப் படத்தின் ஒரிஜினலில் நீதிபதியாக நடித்த ஸ்வரூப் சுக்லா அந்த நடிப்புக்காகவே அந்தாண்டுக்கான சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருந்தார். இந்த முறை ராதாரவிக்கு அது கிடைத்தால் சந்தோஷம்தான். நிச்சயம் தகுதியான விருதாகத்தான் இருக்கும்..!
உதயநிதி இந்தப் படத்தில்தான் முதல்முறையாக நடிப்பு என்று சொல்லும் அளவுக்கு வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். தன்னை அவமானப்படுத்துகிறார்கள் என்பது தெரியாமலேயே மாமனார் அண்ட் கோ.விடம் அவமானப்பட்டுவிட்டு பின்பு ஹன்ஸிகா அதனைச் சுட்டிக் காட்டியவுடன் உண்மையை உணர்ந்து வெட்கப்படுகின்ற காட்சியில் உண்மையாகவே அச்ச்ச்சோ என்கிற உணர்வை வரவழைத்திருக்கிறார். வெல்டன் ஸார்..
பிரகாஷ்ராஜ் போன்ற நடிப்பு பிசாசுகளின் முன்பாக உதயநிதியெல்லாம் சின்ன கொசுவாகத்தான் தெரிகிறார். ஆனால் அந்த கேரக்டர் நமக்குப் பிடித்தமானதாக இருப்பதால் எல்லாவற்றையும் கடந்து அவரை பெரிதும் ரசிக்க முடிந்திருக்கிறது.. ‘கெத்து’ என்று சொல்லப்படும் ஹீரோயிஸத்தை மட்டும் கொஞ்சம் கற்றுக் கொண்டால் அடுத்தடுத்த படங்களில் நன்றாகவே இருக்கும்.
ஹன்ஸிகா வழக்கம்போல.. பாடல் காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும், உதயநிதிக்கு வார்த்தைகளில் சூடு ஏற்றும் இரண்டு காட்சிகளில் மனதைத் தொடும் அளவுக்கு கொஞ்சமேனும் நடித்திருக்கிறார். அவரது அழகை காட்டுவதில் ஒளிப்பதிவாளர் மதி ஏனோ தவறிவிட்டார். அவர் வரும் அனைத்து காட்சிகளிலுமே மங்கலாகவே தெரிந்தார் ஹன்ஸிகா. என்ன ஆச்சோ..?
விவேக், செல் முருகன் காமெடியில் கொஞ்சம் கொஞ்சம் சிரிக்கவும் முடிந்த்து. சங்கிலி முருகன் உதயநிதியின் கன்னத்தில் அறைந்து தனது கோபத்தைக் காட்டும் காட்சியில் அவரையும் ரசிக்க முடிந்திருக்கிறது. ராகுலின் தாத்தாவாக நடித்திருக்கும் அந்தப் பெரியவர் காட்டும் ஆக்ரோஷமும், இதைப் பார்த்து பிரகாஷ்ராஜ் மிரள்வதும்.. இயக்குநரின் இயக்கத் திறமைக்கு இதுவும் ஒரு சான்று.
கோர்ட் காட்சிகளின் வேகத்திற்கு எந்தத் தடைக்கல்லும் போடாத அளவுக்கு படத்தொகுப்பாளர் கச்சிதமாக நறுக்கியிருக்கிறார். படத்தின் பிற்பாதியில் இருக்கும் நீதிமன்றக் காட்சிகள்தான் படத்தின் உயிர்நாடியே.. இது எந்தவிதத்திலும் பாதிக்காத அளவுக்கு படத்தொகுப்பாளர் கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது..
படத்தின் இன்னொரு மிகப் பெரிய பலம் வசனங்கள்தான். எழுத்தாளர் அஜயன் பாலா சித்தார்த்தின் வசனங்கள் பிரகாஷ்ராஜுக்கும், ராதாரவிக்கும் மிகப் பொருத்தமாக இருக்கிறது. ஆங்காங்கே கோர்ட் நடைமுறை வார்த்தைகளுடன் ஆங்கிலக் கலப்பு அதிகமாக இருந்தாலும் அது படத்தைப் பாதிக்காத வண்ணம் கையாண்டிருக்கிறார்கள். இயக்குநருக்குக் கிடைத்த மிகப் பெரிய உதவி வசனகர்த்தாவின் எழுத்தாற்றல்தான்..!
படத்தின் மிகப் பெரிய பலவீனமே பாடல் காட்சிகள்தான். இது மாதிரியான மக்கள் பிரச்சினைகளை முன் வைக்கும் படங்களுக்கு பாடல் காட்சிகளே தேவையில்லை எனலாம். இந்தப் படத்தில் பாடல்களே இல்லாமல் இருந்திருந்தால்கூட நன்றாகத்தான் இருந்திருக்கும். அதிலும் சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் கேட்கும் ரகமில்லை. பின்னணி இசையும் அசத்தலாக இல்லை. மாறாக கொஞ்சம் தொந்தரவைத்தான் கொடுத்தது. தவிர்த்திருக்கலாம்..!
நீதிமன்றங்களில் நியாயம் கிடைக்கும் என்று கோடிக்கணக்கானோர் காத்திருக்கும் சூழலில் பணக்காரர்களுக்கு மட்டும் மிக எளிதாக அவர்களும் விரும்பும் நீதி அவர்களாலேயே வாங்கப்படுகிறது என்பதை நினைக்கும்போது நீதிமன்றத்தில் நீதி தேவதையின் கண்களில் கட்டப்பட்டிருக்கும் துணி நிரந்தரமானதுதான். அதனை நீதிமன்றம்கூட களையவில்லை என்கிற உண்மைதான் புலனாகிறது.
இது போன்ற திரைப்படங்கள் பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஊட்டக் கூடியவை. நீதியும், சட்டமும் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் செல்வதும். இருப்பதும்தான் உண்மையான ஜனநாயகம். அது நமது நாட்டிற்கு எப்போது கிடைக்கும் என்பதுதான் இத்திரைப்படம் நமக்குள் எழுப்பியிருக்கும் கேள்வி..!
‘மனிதன்’ அனைவரும் நிச்சயம் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம். மிஸ் பண்ணிராதீங்க..!

சொத்துக் குவிப்பில் கருணாநிதியையும் மிஞ்சிய ஜெயலலிதா..!

25-04-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வேட்பு மனு தாக்கல் துவங்கிவிட்டது. போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களுடன் அவரவர் சொத்துப் பட்டியலையும் சேர்த்து வழங்கி வருகிறார்கள்.

இந்த வகையில் சென்ற 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஆத்தா, தாத்தா இருவரின் சொத்துப் பட்டியலும் "கருணாநிதியை மிஞ்சிய ஜெயலலிதா" என்கிற இந்தப் பதிவில் உள்ளது. அதனை முதலில் படித்துக் கொள்ளவும்.

இதன் பின்பு இந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலின்போது அவர்கள் தாக்கல் செய்திருக்கும் சொத்துப் பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்..!



தமிழக சட்டப் பேரவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் சென்னை ராதாகிருஷ்ணா நகரில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

அந்த வேட்பு மனுவில் ஜெயலலிதாவிற்கு 118 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கு சொத்து மதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் அசையும் சொத்துகள் ரூ. 41. 63 கோடி எனவும், அசையா சொத்துக்கள் ரூ. 76. 95 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வேட்பு மனுவில் ஜெயலலிதாவிற்கு ரூ. 2.04 கோடி கடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அசையும் சொத்தின் மதிப்பு ரூ.41 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரத்து 395. அசையா சொத்தின் தற்போதைய மதிப்பு (போயஸ் கார்டன், மந்தைவெளி, தேனாம்பேட்டை, ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ள வணிக கட்டிங்கள், ஐதராபாத், காஞ்சீபுரத்தில் உள்ள விவசாய நிலங்கள் உள்பட) ரூ.72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190. அசையும் மற்றும் அசையா சொத்தின் மதிப்பு சேர்த்து ரூ.113 கோடியே 73 லட்சத்து 38 ஆயிரத்து 585 ஆகும்.

கையிருப்பு ரூ.41 ஆயிரம். 25 வங்கிகளில் டெபாசிட் தொகை ரூ.10 கோடியே 63 லட்சத்து 83 ஆயிரத்து 945. இதில், வழக்கில் முடக்கப்பட்ட தொகை ரூ.2 கோடியே 47 லட்சத்து 74 ஆயிரத்து 945. 5 நிறுவனங்களில் பங்கு முதலீடுகள் ரூ.27 கோடியே 44 லட்சத்து 55 ஆயிரத்து 450.
முடக்கப்பட்ட தங்கம் 21,280.300 கிராம். வெள்ளி பொருட்கள் 1250 கிலோ. இதில், ஒரு கிலோ 25 ஆயிரம் மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் ரூ.3 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம். வங்கி கடன் ரூ.2 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 987.

ஜெயலலிதா கொடுத்துள்ள சொத்து மதிப்பில் 2 டோயோட்டா கார், 1980-ம் ஆண்டு அம்பாசிடர் கார், 1990-ம் ஆண்டு காண்டாஸாசா கார் என மொத்தம் உள்ள 9 கார்களின் மதிப்பு ரூ.42 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இதில் அவர் குறிப்பிட்டுள்ள 1980 மாடல் அம்பாசிடர் காரை கடந்த 35 ஆண்டுகளாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா சென்ற 2015-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செயதபோது தனக்கு 117 கோடியே 13 லட்சத்து 89 ஆயிரத்து 637 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக ஜெயலலிதா. அதற்குப் பின்னர் கடந்த 11 மாதங்களில் அவரது சொத்து மதிப்பு 1 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 138 ரூபாய் அதிகரித்துள்ளது.

அதே சமயம் போன  2011 பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தனக்கு 51 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்திருருந்தார். அப்படிப் பார்த்தால் கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 67 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

இதேபோல் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் திருவாரூர் சட்டசபை தொகுதியில் போடடியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவோடு, பிரமாண பத்திரமும் தாக்கல் செய்துள்ளார். 

அதில் தனது பெயரிலும், தனது மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள் பெயரிலும் உள்ள சொத்து மதிப்புகளை குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தாக்கல் செய்த சொத்துப் பட்டியலில் அசையும் சொத்துகள் 13 கோடியே 42 லட்சத்து 51 ஆயிரத்து 536 ரூபாய் என்றும், அசையா சொத்துகள் எதுவும் இல்லை என்றும், வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனையவற்றில் இருந்து பெறப்பட்ட கடன்கள் ஏதும் இல்லை என்றும் கையில் உள்ள ரொக்கம் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தனது பெயரில் வீடு, வாகனங்கள் எதுவும் இல்லை எனவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

மனைவி தயாளு அம்மாள் பெயரில் கையில் உள்ள ரொக்கம் 10 ஆயிரம் என்றும், அசையும் சொத்தின் மதிப்பு 7 கோடியே 44 லட்சத்து 7 ஆயிரத்து 178 என்றும், அசையா சொத்தின் மதிப்பு 8 லட்சத்து 3 ஆயிரம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனையவற்றில் இருந்து பெறப்பட்ட கடன்கள் ஏதும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

துணைவியார் ராசாத்தி அம்மாள் பெயரில் கையில் உள்ள ரொக்கம் 56,850 ரூபாய் என்றும், அசையும் சொத்து 37 கோடியே 90 லட்சத்து 43 ஆயிரத்து 862 என்றும், அசையா சொத்துகளின் மதிப்பு 4 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு ராஜாத்தி அம்மாளுக்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய  கடனாக 11 கோடியே 94 லட்சத்து 37 ஆயிரத்து 427 ரூபாய் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பெருமூச்சு விடுவதைத் தவிர நம்மால் வேறொன்றும் செய்ய முடியாது..!

என்னுள் ஆயிரம் - சினிமா விமர்சனம்

25-04-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடிகர் டெல்லி கணேஷின் மகன் மஹா ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம் இது. இந்தப் படத்தை டெல்லி கணேஷே தயாரித்திருக்கிறார்.
“படத்தில் பணியாற்றிய யாருக்கும் ஒரு பைசாகூட பாக்கியில்லை. இந்தப் படத்தைத் தயாரிக்கும் பணம் முழுக்க, முழுக்க எனது சொந்தப் பணம். எனவே படம் ஓடவில்லையென்றால்கூட எனக்குக் கவலையில்லை. நான் மட்டுமேதான் இதில் பாதிக்கப்படுவேன். அதுகூட என் மகனைப் பெற்ற கடமைக்கு அவனுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க ஆன செலவாக இதனை எடுத்துக் கொள்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் பல புதியவர்களை இந்த்த் தமிழ்த் திரையுலகத்திற்கு நான் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அந்த ஒரு பெருமையே எனக்கு போதும்…” என்று இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பட்டவர்த்தனமாகத் தெரிவித்தார் டெல்லி கணேஷ்.
சொன்னதுபோலவே செய்திருக்கிறார். இப்போதும் டெல்லி கணேஷ் பெருமிதப்பட்டுக் கொள்ளலாம். சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவாளர், சண்டை பயிற்சியாளர் என்று இந்தப் படத்தின் மூலம் வெளியில் வந்திருக்கும் புதியவர்கள் அனைவருமே சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். தங்களது திறமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்..

அசோக் என்கிற மஹா ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் பாரில் சப்ளையர். சென்னையில் ஒண்டுக் குடித்தன வீட்டில் குடியிருக்கிறார். அப்பா, அம்மா இல்லை. கிட்டத்தட்ட அனாதை.
ஒரு நாள் இரவில் பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் அவளது அழகில் மயங்குகிறார். அதே நேரம் ஆர்த்தி என்கிற அந்தப் பெண்ணும் திருமணமாகி தனது கணவன் அமெரிக்கா போய்விட்டதை நினைத்து ஏக்கத்தில் இருப்பவர்.  ஒரு ஸ்பரிசத்திற்கு ஏங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு இடியின் சப்த்த்தில் இருவரும் நெருங்கி நிற்க.. தொடுதலும், படரலும் தொடர.. அவளைப் பின் தொடர்ந்து அவளது வீட்டுக்கே சென்று விடுகிறான் மஹா. அங்கே இள வயதின் மயக்கத்தில் இருவருமே விரும்பி உறவு கொள்கிறார்கள். மறுநாள் காலை தூக்கம் கலைந்து தப்பித்தோம்,, பிழைத்தோம் என்ற நிலையில் வீடு வந்து சேர்கிறார் மஹா. இந்தச் சம்பவம் அவனுக்குள் ஒரு உறுத்தலாகவே இருந்து வருகிறது.
இதே நேரம் ஹீரோயின் சுஹாசினி என்னும் மெரீனா மைக்கேலை பார்த்து ஜொள்ளாகிறார் ஹீரோ. அவள் பின்பாகவே நடந்து, அலைந்து, திரிந்து, ஓடி ஒரு வழியாக தனது காதலைச் சொல்கிறார். அவரும் ஏற்றுக் கொள்ள காதல் அலைபாய்கிறது.
இந்த நேரத்தில ஆர்த்தி,. சுஹாசினியின் வீட்டுக்கு எதிர் பிளாட்டிலேயே குடி வருகிறாள். இதையறிந்து ஹீரோ பரபரப்பாகிறார். இனிமேல் எப்படி சுஹாசினியின் வீட்டுக்கு வந்து செல்வது என்று யோசிக்கிறார்.
இதற்கிடையில் சுஹாசினியின் வீட்டில் அவளது பெற்றோர் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் துவங்க.. இந்த இக்கட்டில் இருந்து தப்பிக்க நினைத்து ஓடிப் போலாமா என்று கேட்டு ஹீரோவை தயார் செய்கிறாள் சுஹாசினி.
அதே நேரம் 2 வருடங்களுக்கு முன்பு தற்செயலாக சுடுகாட்டில், சுடுகாட்டு வாட்ச்மேன் தன்னால் இறந்து போனதை நினைத்து இன்னமும் வருத்தப்படுகிறான் ஹீரோ. அதே நேரம் ஆர்த்தியுடனான அந்த ஒரு நாள் தொடர்பும் அவனது மனதை அரித்துக் கொண்டேயிருக்கிறது.
சுஹாசினியுடன் ஓடிப் போகும் நாளைக்கு முதல் நாள் இந்தப் பாவத்திற்காக சர்ச்சுக்கு சென்று பாவ மன்னிப்பு கேட்டு தனது மன பாரத்தை இறக்கிவைத்துவிட்டு செல்வதாக தனது நண்பனிடம் சொல்லிவிட்டு சர்ச்சுக்குள் செல்கிறார் ஹீரோ.
அங்கே நடக்கும் ஒரு அசம்பாவிதம் அனைத்து விஷயங்களையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட அடுத்து என்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையிலும், அழுத்தமான தனது இயக்கத்திலும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ண குமார்.
ஹீரோ மற்றும் இரண்டு ஹீரோயின்களும் அறிமுகங்கள்தான். ஆனால் படத்தில் அப்படி தெரியவில்லை. ஆர்த்தியாக நடித்திருக்கும் ஸ்ருதியுகல் கண்ணைக் கவரும் வண்ணத்தில் இருக்கிறார். அந்த மழைக் காட்சியில் இவரது நடிப்பு படம் பார்ப்பவர்களையும் சேர்த்தே உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது. அந்த அளவுக்கு உண்மைத்தனத்தை அந்தக் காட்சியில் இயக்குநர் கொண்டு வந்திருக்கிறார்.
விடிற்காலையில் காலிங்பெல் சப்தம் கேட்டு எழுந்து தன் நிலை உணர்ந்து அவர் படும் பதட்டம்.. அதிர்ச்சியை தனது கண்களில் காட்டியிருக்கும் அந்தப் படபடப்பு எல்லாமே சிம்ப்ளி சூப்பர்ப்..! தமிழுக்கு நல்லதொரு ஹீரோயின் கிடைச்சிருக்காங்கப்பா..!
இன்னொரு ஹீரோயினாக சுஹாசினியாக நடித்த மரீனா மைக்கேல். மிக இயல்பாக இவரிடத்தில் வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர். வசனங்கள் மிக எளிமையாக.. இன்றைய இளைஞர்களையும் கவரும்வகையில் வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டாக இருப்பதால் இவர் பேசும் வசனங்களை பெரிதும் ரசிக்க முடிந்திருக்கிறது. ஆனாலும் பின்னணியில் பிராம்ட்டரில் வசனத்தை சொல்லி உதவியிருப்பதுபோல தெரிகிறது. அத்தனை தாமதமாக வசனங்களை டெலிவரி செய்திருக்கிறார்கள் சில இடங்களில்.. தவிர்த்திருக்கலாம்..! ஒரு பாடலின் லீடாக “உன் உதட்டில் இருக்கும் ரேகைகளையெல்லாம் எண்றதுக்கு ஒரு வருஷம் ஆகும்..” என்று ஹீரோ சொல்லும் காட்சியில் கவிதைத்தனம் சொட்டியிருக்கிறது.
மஹா முதல் படம் போலவே தெரியாத அளவுக்குத்தான் நடித்திருக்கிறார். இயக்குநரின் இயக்கத் திறமையினால் நடிப்பு, முக பாவனைகள்.. வசன உச்சரிப்பு, சண்டை காட்சிகள் என்று அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார் மஹா. அதிலும் கடைசி காட்சியில் தன்னைச் சுட்டுக் கொல்ல முயலும் வின்சென்ட் அசோகனிடம் “கொல்ல வேண்டாம்.. கைது செய்யுங்கள்…” என்று சைகையிலேயே சொல்லும் காட்சியில் நிஜமாகவே உருகவும் வைத்திருக்கிறார். வாழ்த்துகள் மஹா..!
“இயக்குதல் என்றால் என்ன..?” என்று கேட்டவர்களுக்கு இந்தப் படத்தில் அஸிஸ்டெண்ட் கமிஷனரான வின்சென்ட் அசோகன், ஹீரோவின் நண்பனை விசாரணை செய்யும் அந்த ஒரேயொரு காட்சியை மட்டும் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும். வின்சென்ட் அசோகனின் இதுவரையிலான நடிப்பின் சாயல்கூட இல்லாமல் புதிய வின்சென்ட்டை அந்தக் காட்சியில் காட்டியிருக்கிறார் இயக்குநர். வின்சென்ட்டுக்கும் நமது வாழ்த்துகள்.
கோபி சுந்தரின் இசையில் வரும் பாடல்களும் படத்திற்கு மிகப் பெரிய வேகத் தடையாக இருக்கின்றன. அதிலும் பாடல்கள் எல்லாம் பிட்டு, பிட்டாக அவ்வப்போது ஒலித்துக் கொண்டேயிருப்பதெல்லாம் இந்தக் காலத்தில் பார்க்கக் கூடியதா..? ஆனால், பாடல் காட்சிகளை படமாக்கியவிதம் அற்புதம் என்பதால்தான் பாடல் காட்சிகளின்போது யாரும் எழுந்து வெளியில் போகாமல் இருந்தார்கள்.
ஒளிப்பதிவாளரும், படத் தொகுப்பாளரும் கண்டிப்பாக பாராட்டத்தக்கவர்கள். முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு படத்தில் சிறப்பானதாக இருக்கிறது. அதேபோல் படத்தொகுப்பாளரும் பல காட்சிகளை அடுத்தடுத்த காட்சிகளின் லீடிங்காகவே வருவதைப் போல தொகுத்திருப்பது ரசனைக்குரியதாக இருந்தது. படத்தொகுப்பாளரின் உதவியில்லாமல் படம் இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்காது என்பது உண்மை.
எல்லாம் இருந்தும்.. எல்லாம் இருந்தும்.. ஏதோ ஒன்று குறைகிறதே என்பார்களே.. அது இந்தப் படத்திற்கும் பொருந்தும்..!
முதற்பாதியில் கதை எதை நோக்கிப் போகிறது என்பதே புரியாமலேயே அமர்ந்திருப்பது மகா கொடுமை. ஆனால் இயக்குநர் தனது இயக்கத் திறமையால்தான் படத்தைக் கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறார் என்பது படம் முடிந்த பின்புதான் நமக்குப் புரிந்தது.
ஆர்த்தியின் கதையை ஏன்.. எதற்காக இதில் வைத்திருக்கிறார்கள் என்பதே புரியவில்லை. ஹீரோவின் மனசாட்சியை வருத்தும் செயலாக சுடுகாட்டு சாவு ஒன்றையே வைத்திருக்கலாம். ஆர்த்தியின் கதை, படத்தின் தன்மையையே மாற்றிவிட்டது. படத்தின் பிற்பாதி கதை ஆர்த்தி-சுஹாசினி-ஹீரோ மூவரின் சந்திப்பில் ஏற்படும் பிரச்சனையாகப் போகிறது என்று நினைத்திருந்த நேரத்தில் திடீரென்று சுடுகாட்டு பிரச்சனையைக் காட்டி போக்குக் காட்டிவிட்டார் இயக்குநர். அதுகூட எந்தவொரு காரணமும் இல்லாமல் திடீரென்று “தனக்கு மனச்சஞ்சலம்…” என்கிறார் ஹீரோ.. இது சட்டென்று ஏற்கக் கூடியதாக இல்லையே..?
வின்சென்ட் அசோகனுக்கு ஒரு முன்னோட்டம் கொடுக்க வேண்டும் என்பதற்காக நடு இரவில் ஒரு என்கவுண்ட்டர் நடப்பதாக காட்சி வைத்திருக்கிறார் இயக்குநர். இத்தனை பேர் நடுத் தெருவில் நிற்கும்போது.. இவர்களைத் தாண்டி போய் கொலை செய்துவிட்டு வழியில் நிற்பவர்களைக் கண்டுகொள்ளாமல் திரும்பிப் போகும் போலீஸை உலகத்தில் எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா..? இயக்குநரின் சொதப்பல் திரைக்கதையில் இதுவும் ஒன்று..
படத்தின் திரைக்கதையாக்கத்திற்கு எத்தனையோ வழிகள் இருந்தும், அதைப் பற்றி யோசிக்காமல் தான் நினைத்ததையே எடுத்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர். கொஞ்சம் டிஸ்கஷன் நாட்களைக் கூட்டியிருக்கலாம் இயக்குநரே..?!
திரைக்கதையில் சில மாற்றங்களை மட்டும் செய்திருந்தால் இந்தப் படம் நிச்சயம் இதைவிடவும் அதிகமாகவும் பேசப்பட்டிருக்கும். ஜஸ்ட் மிஸ்ஸிங்.. ஆனாலும் இந்தப் படத்தின் இயக்குநர் வரும் காலங்களில் குறிப்பிடத்தக்க இயக்குநராக வருவார் என்பதில் சந்தேகமில்லை. இயக்குநர் கிருஷ்ண குமார் அடுத்தடுத்த படங்களில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறோம்..!

வெற்றிவேல் சினிமா விமர்சனம்

25-04-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சசிகுமாரின் படத்தில் என்ன இருக்கும்..? காதல், நட்பு.. காதலை சேர்த்து வைப்பது.. அல்லது நட்புக்காக அடிவாங்குவது.. மறைமுகமாக சாதீய பிரச்சினையைத் தொடுவது.. இதுதானே..? இது அத்தனையையும் அப்படியே வைத்துக் கொண்டு புதிய பெயரில் வந்திருக்கிறார்  இந்த ‘வெற்றிவேல்’.



கதை 20 வருடங்களுக்கு முன்பு துவங்குகிறது. மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக இப்போது இருப்பவர் பிரபு. அடுத்தத் தேர்தலுக்கு நாள் குறித்துவிட்டார்கள்.  எப்போதும் பிரபுவின் குடும்பத்தினரே பரம்பரை, பரம்பரையாக அங்கே தலைவர் பதவியில் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் தன் கணவர் தலைவர் பதவிக்கு நிற்க விரும்புவதாக வாயும், வயிறுமாக இருக்கும் பிரபுவின் தங்கை விஜி, அண்ணனிடம் வந்து கேட்கிறார்.
மாற்றாந்தாய்க்கு பிறந்த தங்கையாக இருந்தாலும் விஜி மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அண்ணன் பிரபு, சட்டென பாசம் மேலிட இதற்கு ஒத்துக் கொள்கிறார். ஆனால் இதற்குப் பிறகு ஊர்க்கார்ர்கள் பிரபுவிடம் “இது தவறு..” என்கிறார்கள். “நீங்கன்னா ஊர்க்காரங்க ஓட்டுப் போடுவாங்க. உங்க மச்சான் அசலூர்.. அவருக்கு எப்படி போடுவாங்க..? அதோட ஜெயிச்ச பின்னாடி அவர் அவங்க ஊர்க்காரங்களோட ஒட்டிக்கிட்டா நம்ம ஊர் கவுரவம் என்னாகுறது..?” என்று தூண்டில் போட.. பிரபு தங்கைக்கு கொடுத்த வாக்கை மீறி தேர்தலில் நிற்க முடிவு செய்கிறார். இதற்கு மச்சானும் உடன்பட மறுத்து எதிர்த்து நிற்கிறார். தேர்தலில் பிரபு வெற்றி பெற அன்றைக்கே விஜியின் கணவன் தற்கொலை செய்து இறந்து போகிறார்.
கோடி துணியெடுத்துக் கொண்டு தங்கை கணவரின் இறப்புக்கு துக்கம் விசாரிக்க வரும் பிரபுவை தடுக்கும் விஜி, கண்ணகிபோல் பிரபு குடும்பத்துக்கு சாபம் விடுகிறார். “இதேபோல் உன் குடும்பத்தை நடுத்தெருவுக்குக் கொண்டு வராமல்விட மாட்டேன்..” என்று சவால் விடுகிறார்.
தொடர்ந்து இப்போதைய காலக்கட்டத்தில் திரைக்கதை நகர்கிறது. பிரபுவுக்கு ஒரே மகள்.. வர்ஷா. கல்லூரியில் படிக்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் வேறு ஊரைச் சேர்ந்த ஆனந்தை காதலிக்கிறார். ஆனந்தின் சொந்த அண்ணன் வெற்றிவேல் என்னும் சசிகுமார். சசிகுமார் ஊருக்குள் உரக்கடை வைத்து நடத்துகிறார். இவரும் ஒரு பேருந்து பயணத்தில் சந்தித்த மியா ஜார்ஜை பார்த்தவுடன் காதலிக்கத் துவங்குகிறார். சில, பல சினிமாத்தனமான தொடர் முயற்சிகளுக்குப் பின்னர் மியாவுடனான காதல் ஓகே ஆகும் சூழல் வருகிறது. இந்த நேரத்தில் கதை வேறு பக்கம் திசை திரும்புகிறது.
பிரபுவின் தங்கை விஜியின் மகனுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார்கள். இந்தத் திருமண நிச்சயத்தில் கலந்து கொள்ள பிரபு சென்றபோது அவரை அவமானப்படுத்தி பேசி திருப்பியனுப்புகிறார் விஜி. இதனால் கோபமடையும் பிரபு, அந்தக் கல்யாணத்திற்கு முன்பாகவே தனது மகள் கல்யாணத்தை நடத்தத் திட்டமிடுகிறார்.
இந்த்த் தகவலை தனது காதலன் ஆனந்துக்கு பாஸ் செய்கிறார் வர்ஷா. ஆனந்த் தன் அண்ணன் சசிகுமாரிடம் இது பற்றிச் சொல்ல.. பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி.. காதலர்களை சேர்த்து வைப்பதுதான் என்று நினைக்கும் ச்சிகுமார்.. வர்ஷாவை கடத்திக் கொண்டு வர ஏற்பாடு செய்கிறார். இதற்காக ‘நாடோடிகள்’ படத்தின் ‘சம்போ சிவசம்போ’ டீமை ஏற்பாடு செய்கிறார்.
எல்லாம் தயாராக இருந்தும் கடத்தும்போது பெண்ணை மாற்றிக் கடத்திக் கொண்டு வந்து விடுகிறார்கள்.  இவர்கள் கடத்தி வந்த பெண் விஜியின் மகன் திருமணம் செய்யவிருந்த மணமகளான நிகிலா. இன்னும் 3 நாளில் கல்யாணம்.. அதற்குள் பெண் ஓடிப் போய்விட்டாளே என்கிற அவமானத்தில் இந்தப் பெண்ணின் அப்பா தற்கொலை செய்து கொள்ள..
விஷயமறிந்து நிகிலாவை அவளது வீட்டில் விடுவதற்காக போன சசிகுமாரை அந்த ஊர்க்கார்ர்கள் அடித்துவிரட்டுகின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் தானே விருப்பப்பட்டுதான் சசிகுமாருடன் சென்றதாக அந்தப் பெண் சொன்னதால் வழக்கில்லாமல் போகிறது.
ஊருக்கும் போக முடியாமல் தனியே இருக்கும் நிகிலாவை பார்த்து உருகும் சசிகுமார் அந்த இடத்திலேயே அவள் கழுத்தில் தாலியைக் கட்டி மனைவியாக்கி வீட்டுக்கு அழைத்து வருகிறார். சசிகுமாரின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தாலும், பின்பு சமரசமாகிறார்கள்.
இதற்கிடையில் தனது மகளைத்தான் கடத்த வந்தார்கள் என்பதே தெரியாமல் பிரபு, சசிகுமாரின் அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். தனது மகனுக்காக பெண் கேட்டு வரும் அப்பா இளவரசுவிடம் ஜாதிப் பிரச்சனையைக் காட்டி பெண் தர மறுக்கிறார். “இனி வர்ஷா விஷயத்தில் யாரும் தலையிடக் கூடாது. அந்தப் பெண்ணு எங்கேயிருந்தாலும் நல்லாயிருக்கட்டும்..” என்று இளவரசு சொன்னாலும் தனது காதலை மறக்க முடியாமல் தவிக்கிறார் ஆனந்த்.
காதலர்களை சேர்த்து வைப்பதேயே குறிக்கோளாக கொண்டிருக்கும் சசிகுமாரின் கேரக்டர் ஸ்கெட்ச், அப்படியே சும்மா விட்டிருமா என்ன..? சசிகுமார் என்னும் வெற்றிவேல் காதலர்களை எப்படி சேர்த்து வைக்கிறார் என்பதுதான் திரைக்கதை.
வழக்கமாக இரு வேறு சாதிகளுக்கிடையேயான பிரச்சினையைத்தான் தொட்டுப் பேசுவார்கள் சினிமாக்காரர்கள். ஆனால் இதில் கொஞ்சம் வித்தியாசமாக மதுக்கூர், நாட்டுச் சாலை ஆகிய இரண்டு ஊர்களில் வசிக்கும் ஒரே ஜாதிக்குள் இருக்கும் இருவேறு பிரிவுகளிடையேயான பிரச்சினையை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள்.
இளவரசு தனது மகனுக்கு பெண் கேட்டு பிரபுவிடம் பேசும்போது பிரபு சொல்லும் வசனங்கள்தான் தமிழகத்தில் இன்றைய யதார்த்த நிலைமை. ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் செய்ய பெற்றோர்கள் சம்மதித்தாலும், அவர்கள் சார்ந்த சமூகம் அனுமதிப்பதில்லை. உறவினர்களும், சுற்றத்தாரும் தங்களை ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்று சிலர் பயப்படுகிறார்கள். பல அரசியல்வாதிகள் தங்களுக்கு தேர்தலில் ஓட்டு கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து சாகிறார்கள். சாதி என்னும் பிடிமானம்தான் ஒவ்வொரு சமூகத்தையும் இறுகப் பிடித்திருக்கும் சனியன் என்பதை பிரபுவின் கேரக்டர் ஸ்கெட்ச் மூலமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
தனது மகளின் காதல் பற்றி தெரிந்ததும் மாப்பிள்ளையின் அப்பா திருமண பந்தத்தை முறித்துக் கொள்கிறார். இதன் பின்புகூட பிரபுவுக்கு தனது மகளின் காதலை வாழ வைப்போம் என்கிற எண்ணம் வரவில்லை. மாறாக தன்னை அவமானப்படுத்திய தங்கையின் வீட்டிலேயே தனது மகளை அனுப்பி வாழ வைக்கலாம் என்று எண்ணுகிறார். இப்போதும் அவரது சாதிய மனோபாவம் அவரை கீழே இறங்கி செல்ல மறுக்கிறது.
தனது தங்கை தன்னை பழி வாங்கத்தான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டாள் என்கிற உண்மை பிரபுவுக்கு தெரிந்தவுடன்.. அந்த நிமிடமே மனம் மாறி மகளின் காதலுக்கு ஓகே சொல்வதுதான் படத்தின் மிகப் பெரிய டர்னிங் பாயிண்ட்.
படத்தின் முற்பாதியின் துவக்கத்தில் சசிகுமாரின் காதல் ஓகே ஆகும்வரையிலும் படம் மெதுவான ஓட்டம்தான். படத்தின் பிற்பாதியில் சசிகுமாரின் மென்மையான குடும்ப கதை.. அவரும், அவரது மனைவியும் சூழலுக்குக் காத்திருக்கும் நேரம்.. இது பற்றி திரைக்கதையெல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கடைசியாக குட்டி, குட்டியாக காட்சிக்கு காட்சி டிவிஸ்ட் வைத்து விளையாடியிருக்கும் இயக்குநரின் திரைக்கதையாக்கம்தான், படத்தை பொறுமையாக கடைசிவரையில் பார்க்க வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
சசிகுமார் என்னும் வெற்றிவேலை ஹீரோவாக காட்ட வேண்டும் என்பதால் வலிந்து திணிக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியும், அந்தக் காட்சியிலும் கொலை செய்யாமல் மன்னிப்பளிப்பதுதான் சிறந்த தண்டனை என்பதை சொல்லியிருக்கும்விதமும் ரசனைக்குரியது.
படத்தின் மிகப் பெரிய டிராஜடி.. தம்பி ராமையாவின் ‘உவ்வே’ காமெடிதான். இந்தக் காமெடியை அவ்வப்போது ஆளாளுக்கு தம்பி ராமையாவிடம் “வீட்டுக்குப் போனாலும் சும்மாதான இருக்கப் போற..?” என்று பேசியே வெறுப்பேற்றுவதெல்லாம் இந்தப் படத்தின் தன்மையைக் குறைக்கும் காட்சிகள்.. கடைசிவரையிலும் தம்பி ராமையாவின் மனைவி யார் என்று முகத்தைக் காட்டாமலேயே மறைத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை..
படத்தில் முதல் ஸ்கோர் பிரபுவின் தங்கையாக நடித்திருக்கும் விஜி சந்திரசேகர்தான். தனது கணவருக்காக விட்டுக் கொடுக்கும்படி பிரபுவிடம் அமைதியாக கேட்டுவிட்டுச் செல்வதும்.. பின்பு கணவரின் உடலை பார்க்க வரும் பிரபுவிடம் சீறித் தள்ளவதுமான முதல் 10 நிமிடங்களிலேயே படத்தின் கனத்தை தன் மீது ஏற்றிக் கொண்டிருக்கிறார். இவருடைய உடல் மொழியும், தீர்க்கமான வசன உச்சரிப்பும் இவர் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளிலுமே இவரை தனித்துவமாகக் காட்டுகிறது.
மகனும் தற்கொலைக்கு முயலும்போது அனைவரையும் அறையிலிருந்து வெளியேற்றிவிட்டு.. தனது கணவன் எப்படி செத்தான் என்ற கதையைச் சொல்லி மகனை வெறியேற்றுகிறார். இப்படியும் சில அம்மாக்கள் நாட்டில் இருப்பதால்தான் சில, பல கொலைகள் நடக்கின்றன என்பது உண்மைதான்.
வெற்றிவேலான சசிகுமாருக்கு ரொமான்ஸ் மட்டுமே வரவில்லையென்றாலும் மற்றவையெல்லாம் தானாகவே வந்து சேர்ந்திருக்கிறது. சோகக் காட்சிகளில் மனிதர் தலையைக் குனிந்து அமைதியாகப் பேசியே ஜெயித்துவிடுகிறார். மனைவி நிகிலாவை சட்டென திருமணம் செய்து அழைத்து வந்த குற்றவுணர்விலேயே சுற்றி வருவதும்.. இதற்கு அவ்வப்போது அவர் சொல்லும் சரியான விளக்கங்களும் பெண் ரசிகைகளை நிச்சயம் கவரும்..!
மியா ஜார்ஜையும் சசிகுமாரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது முடியாமல்தான் இருந்தது. ஆனால் படத்தில் முடிந்திருக்கிறது. சின்னக் கேரக்டர்தான் என்றாலும் வரும் காட்சிகளிலெல்லாம் வல்ல தேசத்தை பாராட்டும்படியாகவே நடித்திருக்கிறார் மியா. உடன் நடித்திருக்கும் மற்ற இரண்டு நடிகையரான வர்ஷாவும், நிகிலாவும்கூட நன்றாகவே நடித்திருக்கிறார்கள். அதிலும் நிகிலாவின் மெளனமான பார்வை.. அமைதியான பேச்சு.. என்று நடிப்பில் ஒரு படி மேலே போய் ஸ்கோர் செய்திருக்கிறார்.
எல்லார் வீட்டிலும் நடப்பதுபோல அம்மா பிள்ளை.. அப்பாவிடம் பேச ஒரு இடைத்தரகர் என்று இந்தக் கதையிலும் ரேணுகாவைச் சுற்றி நகர்கிறது வெற்றிவேலின் குடும்பக் கதை. ரேணுகாவின் குளோஸ் அப் சிரிப்பில் கதையையே நகர்த்திவிடலாமே..?
தம்பி ராமையாவின் நடிப்பும் படத்திற்குக் கிடைத்த ஒரு பிளஸ்.. அவர் சம்பந்தப்பட்ட திரைக்கதைதான் ஏற்க முடியாதது என்றாலும், மனிதர் எந்த வேடம் கொடுத்தாலும் பின்னுகிறார். மியாவை பார்க்க ஜமீன்தார் தோரணையில் அவர் கல்லூரிக்குள் நடந்து வரும் காட்சியும், செல்போனில் தான் ஜமீன்தார் என்பதையே மறந்து போய் டெய்லர் கதையைப் பேசி சமாளிக்கும் நேரமும் தியேட்டர் அதிர்ந்த கைதட்டல் கிடைத்தது.. பாராட்டுக்கள் ஸார்..
‘ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது’ மெட்டில் ஒரு பாடலுக்கு இசையமைத்து அந்தப் பாடலையும் கேட்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். கதிரின் ஒளிப்பதிவு படம் முழுவதிலும் வியாபித்திருக்கிறது. வயக்காடுகள்.. பச்சை பசேல் புல்வெளிகள்.. இதற்கு நடுவில் மியாவைக் காட்டியிருக்கும் அழகுக்கு ஒரு ஷொட்டு..!
அண்ணன் சசிகுமார் அடுத்தப் படத்தில் இந்தக் கதைக் களனைவிட்டு வெளியில் வந்து படம் செய்தால் நன்றாக இருக்கும். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் அவருக்கும் நல்லதல்ல.. அவரது ரசிகர்களுக்கும் ஏற்புடையதல்ல..!
வெற்றிவேல் பார்க்க முடிகிற படம்தான்..! 



தெறி - சினிமா விமர்சனம்

15-04-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ் சினிமாவின் இளைய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான இளைய தளபதி விஜய் நடித்திருக்கும் 59-வது படம் இது. ‘ராஜாராணி’ என்கிற ஒரேயொரு சூப்பர் ஹிட் படத்தின் மூலமே ஒரே நாளில் உச்சாணிக் கொம்புக்கு போன இயக்குநர் அட்லீயின் இரண்டாவது படம்..
விஜய் கடைசியாக நடித்த ‘புலி’ படம் சரியாகப் போகவில்லை என்பதால் இந்தப் படத்தை பேண்டசி இல்லாமல் அதே நேரம் குழந்தைகளை மையப்படுத்தி அவர்களை கவரும்விதத்தில் கதை, திரைக்கதை எழுதி உருவாக்கியிருக்கிறார்கள். குடும்பத்தோடு பார்க்கக் கூடிய வகையில் வந்திருக்கும் விஜய் பட லிஸ்ட்டில் இதுவும் இடம் பிடித்திருக்கிறது.

கேரளாவில் தனது மகள் நைனிகாவுடன் அமைதியாக வாழ்க்கை நடத்தி வருகிறார் ஜோஸப் குருவில்லா என்னும் விஜய். மகள் நைனிகா யு.கே.ஜி. படிக்கிறாள். விஜய் அந்த ஊரிலேயே பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்குத் துணையாக இருப்பவர் மொட்டை ராஜேந்திரன். நைனிகாவின் டீச்சர் எமி ஜாக்சன். இவர்கள் மூவருக்கும் அறிமுகமாகிறது.
இந்த நேரத்தில் சர்ச்சுக்கு சென்றிருக்கும்போது ஒரு ரவுடி எமி ஜாக்சனுடன் வம்புக்கு போக எமி அவனை அடித்துவிடுகிறார். மறுநாளே எமியும், நைனிகாவும் விபத்துக்குள்ளாகிறார்கள். முந்தின நாள் தான் அடித்த ரவுடிதான் இப்போது தங்களை ஆள் வைத்து கொல்லப் பார்த்ததாக எமி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார்.
இதைக் கேட்டு பதறும் விஜய் சட்டென்று போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகாரை வாபஸ் வாங்குகிறார். இந்த நேரத்தில் அங்கே வரும் ஒரு போலீஸ் உயரதிகாரி விஜயை “விஜய்குமார் ஐ.பி.எஸ்.” என்று கூப்பிட.. விஜய் தான் அவனில்லை என்று சொல்கிறார். ஆனால் அந்த போலீஸ் அதிகாரிக்கு விஜய் மீது சந்தேகம் வருகிறது. இதே சந்தேகம் எமிக்கும் வந்துவிட்டது.
ஆனாலும் புகார் கொடுத்துவிட்டதையே மரியாதைக் குறைவாக எடுத்துக் கொள்ளும் அந்த ரவுடிக் கும்பல் இரவு நேரத்தில் விஜய்யின் வீடு புகுந்து அவரைத் தாக்க முயல.. விஜய் அவர்களைப் பின்னியெடுக்கிறார்.
இந்த நேரத்தில் எமி கூகிளாண்டவர் துணையுடன் விஜய்குமார் ஐபிஎஸ்ஸின் ஜாதகத்தையே தோண்டி எடுத்து படித்துவிட்டு அவசரமாக விஜய்யை சந்திக்க ஓடி வருகிறார். இதற்கு மேலும் மறைத்து பலனில்லை என்பதால் விஜய் தன் முன் கதைச் சுருக்கத்தைச் சொல்கிறார்.
நேர்மையான போலீஸ் அதிகாரியான விஜய்குமார் ராதிகாவுக்கு ஒரே மகன். திருமணத்திற்காக பல பெண்களை பார்த்தும் இன்னமும் யாரையும் தேர்வு செய்யாமல் டபாய்க்கிறார் விஜய்.
ரோட்டில் சிறுவர்களை பிச்சையெடுக்க வைத்து காசு சம்பாதிக்கும சில ரவுடிகளை அடித்து உதைத்து ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கிறார் விஜய். அங்கே அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஹீரோயின் சமந்தாவுடன் விஜய்க்கு பழக்கமாகி இது காதலாகிறது. இந்தக் காதல் திருமணத்தில் முடியும் நிலையில் இருக்கிறது.
இந்த நேரத்தில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் 3 நாட்களாக காணவில்லை என்று புகார் வர இதனை தானே விசாரிக்கிறார் விஜய். முடிவில் அந்தப் பெண்ணை குற்றுயிரும், குலையிருமாக ஓரிடத்தில் கண்டுபிடிக்கிறார்கள். அந்தப் பெண்ணிடம் வாங்கப்படும் மரண வாக்குமூலத்தின்படி அந்தக் குற்றத்தை செய்திருப்பவர் அமைச்சர் வானமாமலை என்னும் மகேந்திரனின் மகன் என்று தெரிய வருகிறது.
மகேந்திரனோ தன் மகன் 3 நாட்களாக காணவில்லை என்றும் அவனைத் தேடி கண்டுபிடித்து ஒப்படைக்கும்படி விஜய்யிடமே சொல்கிறார். ஆனால் விஜய் மிக கோபப்பட்டு மகேந்திரனின் மகனை ரகசியமாக கொலை செய்துவிடுகிறார். ஆனால் அவரது போதாத நேரம்.. ஒரு கெத்தாக இருக்கட்டுமே என்று நினைத்து நான்தான் அந்தக் கொலையை செய்தேன் என்று மகேந்திரனிடமே சொல்லிவிடுகிறார்.
இதனால் கோபப்படும் மகேந்திரன் விஜய்யையும், சமந்தா குடும்பத்தினரையும் கொலை செய்ய முயற்சிக்கிறார். இதில் தப்பிக்கும் விஜய் மகேந்திரனுக்கு எச்சரிக்கை கொடுக்கிறார். இதை பெரிய அவமானமாக கருதும் மகேந்திரன் “விஜய்க்கு சாகுறதுக்கும் மேலான ஒரு தண்டனையை கொடுக்கணும்…” என்று கர்ஜிக்கிறார்.
இடையில் விஜய்க்கும், சமந்தாவுக்கும் திருமணமாகி பெண் குழந்தை பிறக்கிறது. அவள் 6 மாத குழந்தையாக இருக்கும்போது ஒரு நாள் வீட்டுற்குள் ரவுடிகளுடன் வரும் மகேந்திரன் சமந்தாவையும், ராதிகாவையும் கொலை செய்துவிட்டு விஜய்யை துப்பாக்கியால் சுட்டுவிட்டு “முடிந்தால் தப்பித்துக் கொள்…” என்று சொல்லிவிட்டுப் போகிறார். சமந்தா தனது குழந்தையையும், விஜய்யையும் காப்பாற்றி தனது உயிரை விடுகிறார். அந்த வீடும் சமையல் கேஸ் லீக்கில் வெடித்துச் சிதறுகிறது. ஆனால் விஜய் தனது குழந்தையுடன் தப்பிக்கிறார். இருந்தாலும் அந்த தீவிபத்தில் விஜய் இறந்துவிட்டதாகவே போலீஸ் டிபார்ட்மெண்ட் இப்போதுவரையிலும் நினைத்து வருகிறது.
அங்கிருந்து தப்பித்த விஜய் கேரளாவுக்கு வந்து இப்போது அமைதியாக பேக்கரி ஓனராக வாழ்ந்து வருகிறார். இதை எமி ஜாக்சனிடம் விஜய் சொல்கிறார். அதே நேரம் விஜய்யின் புகைப்படத்தை பார்த்துவிட்டு அவர் உயிருடன் இருப்பதை அறியும் மகேந்திரன் விஜய்யை கொலை செய்யப் போவதாக சூளுரைக்கிறார்.
அடுத்து என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் பார்க்கலாமே..?
விஜய்யின் இந்த திடீர் மாற்றம் வரவேற்கத்தக்கதுதான். எப்போதும் தனது ரசிகர்களை மகிழ்விப்பது மட்டுமே தனது நோக்கம் என்று இருந்தவர், இன்றைக்கு அதற்கு அடுத்தக் கட்டத்தை நோக்கி பாய்ந்திருக்கிறார். குழந்தைகளை கவர்ந்து அதன் மூலமாக ஒட்டு மொத்த குடும்பத்தினரையும் ஈர்ப்பதுதான் தனது பாணி என்பதை இந்தப் படத்தின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.
விஜய்யின் அறிமுக்க் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த ஸ்டைலிஸ் அலப்பறைகளுக்கு அளவே இல்லை. அதிலும் கிளாஸ் ரூமில் ரவுடிகளுக்கு கேள்வி கேட்டே சுளுக்கெடுக்கும் காட்சியில் கைதட்டல்கள் நிற்கவே நிற்காது.  இது மட்டுமில்லை.. பாடல் காட்சிகளிலும் சமந்தாவுடனான காதல் காட்சிகளிலும் தனது டிரேட் மார்க் ஸ்டைலுடன் விஜய்யின் லுக் அசத்தல்..
நடிப்பில் படத்திற்குப் படம் தேறுவதை போலவே இந்தப் படத்திலும் அவர் கண் கலங்கிய காட்சிகளிலெல்லாம் ரசிகர்களும் உச்சுக் கொட்டுகிறார்கள். அவரது அளவு கடந்த பிள்ளை பாசம்.. ‘பேபி’, ‘பேபி’ என்று தந்தையும், மகளும் ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளும் அந்தப் பாசமும் நேசமும் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
கிளைமாக்ஸில் அவருடைய அதகள ஸ்டண்ட் காட்சிகளும், நடனக் காட்சிகளில் காட்டியிருக்கும் ஸ்பீடான ஸ்டெப்ஸுகளும் விஜய்யை நடனத்தில் அடித்துக் கொள்ள இப்போவும் கோடம்பாக்கத்தில் ஆளில்லை என்பதையே காட்டுகிறது.
விஜய்க்கு பின்பு பெரிய அளவுக்கு ஸ்கோர் செய்திருப்பது குழந்தை நட்சத்திரமான நைனிகாதான். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பதை போலவே நடிப்பு, டயலாக் டெலிவரி… ‘ஸாரி கேளு’ என்று ரவுடியிடம் தெனாவெட்டாக பேசும்விதம்.. மகேந்திரன் ‘ஸாரி சொல்ல மாட்டேன்’ என்று சொன்னவுடன் ‘ச்சீ போ’ என்று கோபத்துடன் விலகும் நடிப்பு என்று நைனிகா சின்ன மீனாவை அப்படியே ஞாபகப்படுத்தியிருக்கிறார். காலம் இவர் ஹீரோயினாக நடிக்கும் படத்தையும் நம்மை விமர்சனம் எழுத வைக்கும் என்று நம்புவோமாக..!
பாரதிராஜா நடித்திருக்க வேண்டிய வில்லன் கேரக்டர் மகேந்திரனுக்குக் கிடைத்திருக்கிறது. தனது அரசியல்தனம் வாய்ந்த குணத்துடன் அவர் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த்து. கைகளை ஆட்டி ஆட்டி அவர் பேசும் ஸ்டைலும், டயலாக் டெலிவரியும் மகேந்திரன் என்றொரு நடிகரையும் நமக்குக் கொடுத்திருக்கிறது. அண்ணன் தொடர்ந்தும் நடிக்கலாம்.
எமிக்கு அதிகம் வேலையில்லை. ஆனால் டீச்சர் கேரக்டருக்கு பொருத்தமாக்த்தான் இருக்கிறார். இவருடனான டூயட் பாடலை நேரமில்லாத காரணத்தினால் சேர்க்காமல் கடைசி டைட்டிலின்போது பிட்டாக சேர்த்திருக்கிறார்கள். ஆனால் சமந்தா.. வெரி க்யூட்.. குழந்தைத்தனம் இன்னமும் அவரது முகத்தில் இருந்து மறையவில்லை. அதிகமான குளோஸப் காட்சிகளில் அவரது நடிப்பை வெகுவாக ரசிக்க முடிகிறது. விஜய்யுடன் அறிமுகமாகும் காட்சிகளில் வேகமாக கேள்வியைக் கேட்டுவிட்டு பின்பு பதிலைக் கேட்டு கோபத்துடன் டிஞ்சர் பஞ்சை அடியாட்களின் முகத்தில் வைத்து தேய்க்கும் கோபத்தை ரசிக்க முடிகிறது. ஆட்டோவில் போனவர் சட்டென்று இறங்கி திரும்பி வந்து விஜய்யைக் கட்டிப் பிடித்து ‘ஐ லவ் யூ’ சொல்லி ஒரு டூயட்டுக்கு வழி வகுத்தாலும் அந்தக் காட்சி உயிர்ப்புடன் இருக்கிறது.
ரெஸ்ட்டாரெண்ட்டில் சமந்தாவின் அப்பாவை பார்க்க வந்த விஜய், சமந்தாவுடனான தனது காதல், கல்யாணம், குடும்பம், அன்பு, பண்பு, பாசம், மருமகனின் கடமை.. இதையெல்லாம் விலாவாரியாக எடுத்துரைப்பது டச்சிங்கான காட்சி. இந்தக் காட்சியை தினசரி 2 வேளை அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பினால் மருமகன்களுக்கு ஒரு பாடமாகவும், மாமனார்களுக்கு ஒரு கருத்தாகவும் இருக்கும்..!
படத்தின் இடைவேளை பிளாக்கில் மொட்டை ராஜேந்திரன் சொல்லும் ஒரு டயலாக்குதான் படத்தின் டர்னிங் பாயிண்ட். அதையும் கனகச்சிதமாக ராஜேந்திரன் சொல்லும் ஸ்டைலே தனி. அதற்கு விஜய்யின் கவுண்ட்டர் பாயிண்ட் அட்டாக்கும் படத்தின் முற்பாதியை சூப்பர் என்று சொல்ல வைத்திருக்கிறது.
மேலும் ராதிகா சரத்குமார், சுனைனா, கரிகாலனாக நடித்தவர்.. காளி வெங்கட், டி.ஜி.பி.யாக வரும் பிரபு, மகேந்திரனின் நண்பனாக வந்திருக்கும் இயக்குநர் அழகம் பெருமாள் என்று அனைவருமே நடிப்பில் குறை வைக்காமல் நடித்திருக்கிறார்கள். கடைசியான டிவிஸ்ட்டு சற்றும் எதிர்பாராத்து.. ஆனால் லாஜிக் மீறல்தான்..
ஒரு மினிஸ்டரின் மகனை கொலை செய்துவிட்டேன் என்று ஒரு டெபுடி கமிஷனர் அவரிடமே சொல்வதெல்லாம் எந்த அளவுக்கான ஹீரோயிஸம் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். ஆனால் அப்படிச் சொல்வதில் லாஜிக் இல்லை என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு சாதாரண வட்டச் செயலாளர் நினைத்தாலே இன்றைக்கு ஒரு கமிஷனரையே மாற்றிவிட முடியும். அப்படித்தான் இப்போதைய நமது அரசியல் உலகம் இருக்கிறது. அப்படியிருக்க.. ஹீரோ அத்தனை தெனாவெட்டாக “நான்தான் கொலை செஞ்சேன்.. உன்னால என்ன பண்ண முடியும்..?” என்று கேட்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தானே இயக்குநர் ஸார்..!?
வில்லன்களுக்கு ‘வானமாமலை’, ‘கரிகாலன்’ என்று பெயர் வைத்துவிட்டு, மற்ற கேரக்டர்களுக்கு விஜய்குமார், தர்மேஷ்வர், மித்ரா, நிவேதிதா என்று மாடர்னாக பெயர் வைத்திருப்பதன் உள்ளர்த்தம் புரியவில்லை. எந்தக் காரணமும் இல்லை என்றால் சந்தோஷம்தான். அதேபோல் ஒரு காட்சியில் “நாட்டுக்காக போராடியவர்களில் காணாமல் போன லிஸ்ட்டில் நேதாஜி இல்லையா..?” என்று சொல்லி அடுத்து பிரபாகரன் பெயரைச் சொல்லப் போய் நிறுத்திக் கொண்டு முன்னெச்சரிக்கை முத்தண்ணாவாக இருந்த இயக்குநர் அட்லீக்கு நமது பாராட்டுக்கள்.
தனது 50-வது படம் என்பதால் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கொஞ்சம் முனைப்புடன்தான் இசையமைத்திருக்கிறார். ஈனா மீனா டீக்கா பாடல் காட்சியில் ஒரு குடும்ப குதூகுலத்தையே கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு பாடலும் உறுதுணையாக இருக்கிறது. பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘தாய்மை’ பாடல் உள்ளத்தை உருக வைத்திருக்கிறது. ‘ஜித்து ஜில்லாடி’யும், ‘செல்லக்குட்டி’யும் விஜய்யின் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. பின்னணி இசையில் அதிகம் ஆதிக்கம் செலுத்தாமல் வசனங்களை கேட்கும் அளவுக்கு விட்டுவைத்ததற்கு இசையமைப்பாளருக்கு நமது நன்றி.
ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவுதான் படம் முழுவதிலும் நம்மை விஜய்யுடன் கூடவே பயணிக்க வைத்திருக்கிறது. கேரளப் பகுதிகள்.. பாடல் காட்சிகளில் காட்டியிருக்கும் செட்டுகள்.. பாடல் காட்சிகளின் நடனங்கள்.. சென்னை என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் நடக்கும் சண்டை காட்சிகள்.. சமந்தாவின் அழகு முகம்.. அவருடைய சின்னச் சின்ன முக பாவனைகளின் அழகு.. விஜய்யின் அழகு மிளிரும் வீடு.. பாடல் காட்சிகளில் போட்டிருந்த செட்டிங்குகள்.. என்று பலவற்றிலும் ஒளிப்பதிவாளர் தனது முத்திரையை ஆழமாகப் பதித்திருக்கிறார். இத்தனை பணம் செலவழித்து எடுக்கும் படத்திற்குரிய மரியாதையை ஒளிப்பதிவாளரும் செய்திருக்கிறார். பாராட்டுக்கள்..
முந்தைய படமான ராஜாராணியில்கூட குடும்பத்தின் ஒற்றுமை.. அன்பு பாசத்தை பகிர்தல் என்பதையெல்லாம் கோனார் நோட்ஸ்போல கிளாஸ் எடுத்துச் சொன்ன இயக்குநர் அட்லீ இந்தப் படத்தில் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கச் சொல்லி பெற்றவர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். இதுதான் இந்தப் படம் சொல்லும் பாடம்..!
இதைப் புரிந்து கொண்டால் நன்மை நமக்கு..! இல்லாவிட்டால் நமது வாழ்க்கையே தெறித்துவிடும்..!
தெறி – பார்க்க வேண்டிய படம்தான்..!