யாருடா மகேஷ் - சினிமா விமர்சனம்

27-04-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்ச் சினிமா போற போக்கைப் பார்த்தால் பயமாகத்தான் இருக்கிறது..! தற்போதைய டிரெண்ட்டுக்கு ஏற்றாற்போல் படமெடுப்பதாக சொல்லி வைத்தாற்போல் அனைவரும் சொன்னாலும், இவர்கள் சொல்லும் டிரெண்டு.. இன்றைய இளைய சமுதாயத்தினர் பற்றிய சினிமாக்காரர்களின் எண்ணமெல்லாம் கோரமாகத்தான் இருக்கிறது.. இந்தப் படமும் அதற்கொரு சாட்சி..!


கல்லூரி படிப்பையே முழுமையாக முடிக்காத ஒருவன் காதல்வயப்பட்டு திருமணம் செய்து கொண்டு, பிள்ளையையும் பெற்றுவிட்ட பின்பும் பொறுப்பு வராமல் தேமே என்று திரிகிறான். அவனுக்கு புத்தி வருவதற்காக மனைவியின் சகோதரரான ஒரு மனநல மருத்துவர் போடும் நாடகம்.. கடைசியில் அந்தக் குடும்பத்தையே பிரிக்க நினைக்கிறது.. அவனது குழந்தை அவனுக்குப் பிறக்கவில்லை.. யாரோ ஒரு மகேஷ் என்பவனுக்கு பிறந்திருக்கிறது என்று மனைவியே சொல்வது போல டிராமா போட.. கணவன் அதை நம்பி ரொம்ப சீரியஸாக அந்த மகேஷை தேடி, தேடி அலைவதுதான் படம்..! ம்ஹும்.. புதிய சிந்தனைகள் தேவைதான்.. ஆனால் அதற்காக இந்த அளவுக்கு இறங்கணுமா என்ன..?

அத்தோடு படம் முழுவதும் விரவியிருக்கும் டபிள், டிரிபிள் மீனிங் டயலாக்குகளை நினைத்தால் இதன் இயக்குநரை உச்சி முகிர்ந்து பாராட்ட தோன்றுகிறது.. எப்படியும் 'ஏ' சர்டிபிகேட்டுதான்.. டிவியில் காட்ட முடியாது.. குழந்தைகளுடன் வர மாட்டார்கள்.. வரிவிலக்கு கிடைக்காது.. எல்லாம் தெரிந்தும் ''ஏ' படம்தான் எடுத்திருக்கிறேன் என்று தைரியமாக இதன் இயக்குநர் சொல்கிறார்.. இதன் பாதிப்பு சத்தியமாக இவருக்கு இல்லை. ஆனால் சினிமாவுலகத்துக்கு நிச்சயமாக கிடைக்கும்..! ஏற்கெனவே சேட்டை படம் பார்த்து பேஸ்த்தடித்துப் போன குடும்பஸ்தர்கள் இன்னும் 3 மாதங்களுக்கு தியேட்டர் பக்கம் வரப் போவதில்லை.. இப்போது இந்தப் படம்.. இதையும் பார்த்துவிட்டு ஓடுபவர்களால் அடுத்து வரவிருக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும்..! இது எங்கே இவர்களுக்குப் புரியப் போகிறது..? 

அப்பாவும், மகனும் ஆபாச படம் பார்க்க அலைவது.. ஹீரோ, ஹீரோயினில் துவங்கி படத்தின் அனைத்து கேரக்டர்களும் ஆளுக்கொரு வசனமாக டபுள் மீனிங்கை அள்ளி வீசியிருக்கிறார்கள்..! வழக்கம்போல கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகளை சம்பந்தப்படுத்தி ஒரு ஆபாச திரைக்கதை..! கல்லூரி ஆசிரியரும் அப்படியே வசனங்களை பேசுகிறாராம்..! ரோபா சங்கர்-அரவாணி சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் தேவைதானா..? யாரைத் திருப்திப்படுத்த இப்படியெல்லாம் சீன் வைக்கிறார்கள்..? இப்படி எடுத்தால் இளைஞர் கூட்டம் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வரும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்..! நல்ல நினைப்புதான்..!

ஹீரோ சந்தீப்.. திரும்பிப் பார்க்க வைக்காத முகம்.. இது மாதிரியான சப்பையான கேரக்டர்களுக்கு தோதானவர்.. உண்மையாகவே நடித்திருக்கிறார் இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் மட்டும்..! மச்சி மச்சி என்று அலையும் ஜெகனின் பல கமெண்ட்டுகள் ஆபாசமாகவே இருந்தாலும் தியேட்டரில் கை தட்டல்கள் ஒலிக்கின்றன. ஆச்சரியமாக இருக்கிறது.. எப்படி ரசிக்கிறார்கள் இதையெல்லாம்..? இவரும், இவரது மனைவியும் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிஜமாகவே நடப்பது போல அழகாக எடுக்கப்பட்டிருக்கிறது..! 

அதேபோல் அந்த டிரெம் செட் மகேஷின் ட்ரூப் ஸாங் சீனும் ரசிக்கும்படியிருந்தது..! சிங்கமுத்து காமெடி வழக்கம்போல வழவழவென்றாலும் அந்த இரவு நேர கல்யாணத்தின்போது தியேட்டரே அதிர்ந்தது..!   சிற்சில இடங்களில் நகைச்சுவையை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதால் இந்த மாதிரியான வசனங்களையும் மீறி ரசிக்க முடிகிறது..!

ஹீரோவுக்கு நேரெதிராக ஹீரோயின் டிம்பிள்.. அழகோ அழகு.. சின்னப் பொண்ணு.. பாடல் காட்சிகளிலும் நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும் வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார்.. காட்டியிருக்கிறார்.. இப்போது வாரத்திற்கு 4 ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள் என்பதால், இப்படி எல்லாவற்றுக்கும் முந்தினால்தான் நிலைக்க முடியுமென்று யாரோ சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போலும்..! 

கோபிசந்தரின் இசையில் பாடல்கள் ஒலித்தன. எதுவும் காதில் விழுகவில்லை.. ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடிய அம்மணியை வலைவீசித் தேட வேண்டும்.. என்னவொரு ஸ்டிரெச்சர்..? எங்கேயிருந்து பிடித்தார்கள் என்று தெரியலையே..? டூயட் பாடல்களைத் தவிர சோகப் பாடல்களில் இசை மட்டுமே பிரதானமாக இருக்க.. பாவம் ஹீரோ.. கத்தி, கத்தி பாடி தன் தொண்டைத் தண்ணியை வற்ற வைத்திருக்கிறார்..!

'நான் ராஜாவாகப் போகிறேன்' படத்தில் ஹீரோயின் சுய இன்பம் அனுபவிப்பதை நுட்பமாண காட்சியாக திணித்திருந்தார்கள். அடுத்தது இந்தப் படம்.. ஏற்கெனவே தெலுங்கில் இதேபோல பல சின்ன ஹீரோக்களும் நடித்துக் காட்டிவிட்டார்கள். இதில் இந்த ஹீரோ..! இது இப்படியே எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை..!

அந்த டிரெயின் காட்சிகள்.. சுவாமிநாதனும், பெண் ஆசிரியையும் சம்பந்தப்பட்ட காட்சிகள்.. டிரெயினில் முதல் இரவு செட்டப்பு.. காண்டம் வாங்கி தயாராவது.. என்றெல்லாம் இன்றைய யூத்துகளுக்கான காட்சிகளாக நினைத்து வைத்திருந்தால்.. ஸாரி.. இதன் இயக்குநர் ரொம்பவே பின்னாளில் கண்டிப்பாக ஃபீல் செய்ய வேண்டி வரும்..!  

கல்லூரி, படிப்பு, காதல், கல்யாணம் என்று வரிசையாக வந்திருக்க வேண்டியதற்கு முன்பேயே காதல், உடல்சுகம், கல்யாணம் என்று மாற்றியெடுத்து கல்லூரியையும், படிப்பையும் அப்படியே அந்தரத்தில் தொங்க விட்டதில் படத்தின் தன்மையே மாறிவிட்டது.. 

காதல், கல்யாணம், சந்தேகம் என்றாவது வந்திருந்தால் ஒரு வழக்கமான சினிமாவாக வந்திருக்கும்.. இப்படி ரெண்டுங்கெட்டானாக எடுத்துத் தொலைத்திருப்பதால் இதனை பிட்டு படமாகவும் பார்க்க முடியவில்லை. தியேட்டரில் தைரியமாக முகத்தைக் காட்டி பார்க்க வேண்டிய சினிமாவாகவும் நினைக்க முடியவில்லை..!  இதன் இயக்குநர் மதன்குமார், அடுத்த படத்தில் தன்னைத் திருத்திக் கொண்டால் திரையுலகத்துக்கு பெரிதும் நல்லது..!

ஒருவர் மீது இருவர் சாய்ந்து - சினிமா விமர்சனம்

26-04-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

விஜய்யை வைச்சு 'லவ் டுடே', 'துள்ளித் திரிந்த காலம்', மாதவன் நடிப்பில் 'ஆர்யா'ன்னு படங்களைக் கொடுத்திட்டு அதுக்கப்புறமா  நீண்ட வருடங்களாக படம் இயக்காமல் இருந்த அண்ணன் பாலசேகரனுக்கு, இப்போதைய டிரெண்டுக்கு ஏற்றாற்போல ஒரு படம் செய்யணும்னு ஆசை.. ஆனா அதுக்காக இந்த அளவுக்கு நம்ம யெங்கர்ஸை கேவலப்படுத்தியிருக்க வேண்டாம்..?


ஒரு பையன் ஒரு பொண்ணை லவ் பண்றான்.. அந்தப் பொண்ணு லவ் ஓகே.. பட் கல்யாணம்ன்னா ஒரு கண்டிஷன்னு சொல்லுது.. என்ன்ன்னு பையன் கேக்குறான். நானும் இன்னொருத்தியும் ரொம்ப திக்கஸ்ட்டு பிரெண்ட்ஸ்.. எந்தக் காலத்துலேயும் நாங்க ரெண்டு பேரும் பிரியக் கூடாதுன்னு நினைச்சுக்கிட்டிருக்கோம். அதுனால நீ எங்க ரெண்டு பேரையுமே கல்யாணம் செஞ்சுக்கணும்னு சொல்றா.. பையன் தப்பிச்சான்னா.. மாட்டினானான்றதுதான் கதை..! வித்தியாசமா இருக்குல்ல..?

ம்ஹும்.. இப்படி வித்தியாசம், வித்தியாசம்ன்னு சொல்லித்தான் கதையை இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்காங்க.. இது இன்னும் எங்க போய் முடியப் போவுதோ தெரியலை..!

பையன் லகுபரன்.. ராட்டினத்துல அறிமுகமானவரு.. ஒரு ஹீரோயின் ஸ்வாதியும் ராட்டினம் அறிமுகம்தான். இன்னொரு ஹீரோயின் சான்யதாரா..! காவி டிரெஸ்ல பழனில லகுபரனை பார்க்கும்போதே ஏதோ காதல் தோல்வி மாதிரியிருக்கேன்னு பாக்யராஜ் கேட்டு அந்த பிளாஷ்பேக்கை ஓப்பன் பண்ற பிளாக் நல்லாவே இருக்கு..  ஸ்வாதி-லகுபரன் காதல் எபிஸோட் மட்டும் படத்துல பார்க்குறதுக்கு சுவாரஸ்யமாயிருக்கு..! வானிலை அறிக்கையை வாசிக்கும் ஸ்வாதியை மழையைக் காணோம்.. வெயிலைக் காணோம்ன்னு வழி மறித்து வம்பு செய்து காதலை வளர்க்கும் லகுபரனின் அந்தக் காதல் முயற்சிகள் முற்பாதியில் ரொம்பவே படத்தை இண்ட்ரஸ்ட்டா கொண்டு போச்சு.. பட்.. அந்த இண்டர்வெல் பிளாக்ல ஸ்வாதி வைச்ச டிவிஸ்ட்டோட திக்குன்னு ஆகியிருச்சு..!

அதுக்கப்புறமா ஹைதராபாத்ல அக்கா வீட்டுக்கு போயிருக்கும் அங்கே வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற சான்யதாராவோட லவ்வாகி கல்யாண மேடைல நிக்கும்போது ஸ்வாதி வந்து கல்யாணத்தை நிறுத்துறதுவரைக்கும்கூட ஓகே.. அதுக்கப்புறம்தான் கதையை எப்படி முடிக்கிறதுன்னு தெரியாம, லைட்டா.. ஏதோ பொண்ணுக சின்னப்புள்ளத்தனமா பேசுதுகு.. நாம பெரியவங்க.. நாமதான் சூதுவாதா சொல்லி சமாளிச்சு அவங்களுக்கு புத்திமதி சொல்லணும்ன்னு அகில உலக அறிவுரை கழகத் தலைவர் விசு அவர்களும், அகில உலக குடும்பஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜும் சேர்ந்து வசனமா பேசி அந்தப் புள்ளைகளுக்கு புத்திமதி சொல்லி முடிச்சு வைக்குறாங்க..!

ஸ்வாதி ராட்டினத்துக்கு இப்போ பரவாயில்லைதான்.. கைப்புள்ள பேரைக் கேட்டு கொதிக்கும்போதுதான் நடிப்பே தெரியுது..! அந்த கைப்புள்ள மேட்டரும் சூப்பருதான்.. இனிமே அந்தப் பொண்ணை எங்க பார்த்துலும் அப்படியே கூப்பிட்டிருவாங்களே..? இடைல இடைல வர்ற சிரிப்பு போலீஸ் ராஜ்கபூரை பார்க்கும்போதுதான் பாலசேகரன் அண்ணனுக்கு எவ்வளவு கற்பனை வறட்சில இருந்தாருன்னு தெரியுது.. இப்படியொரு பொழப்பத்த போலீஸை நீங்க மெட்ராஸ்ல எங்கேயுமே பார்த்திருக்க முடியாது..!

குடித்துவிட்டு ரகளை கேஸ்ல லகுபரனை கோர்ட்டுக்கு கொண்டு வந்தா அவரோ காந்தி ஜெயந்தி அன்னிக்கு பிளாக்ல சரக்கு வித்த கவுன்சிலர், மந்திரி எல்லாரையும் கோர்ட்டுக்கு இழுக்குறாராம்.. இதை நீதிபதி விசு தனது டவாலியிடம் திரும்பி ஏதோ ஒரு டீ போடுன்னு சொல்ற மாதிரி ஜாலியா நோட்டீஸ் அனுப்பச் சொல்றாரு..! மந்திரிவரைக்கும் கோர்ட்டுக்கு வர்றாங்களாம்.. இந்த மொக்கை காமெடி திரைக்கதைக்கு டிவி சீரியல்கள் எவ்வளவோ பெட்டர்..!

சான்யதாரா ஹைதராபாத்தில் இருக்கிறார். அவர்தான் ஸ்வாதியின் பெஸ்ட் பிரெண்ட் என்பது ஏதோ தற்செயலா நடந்த மாதிரியும், ஹீரோயின்ஸ் ரெண்டு பேரும் அதையே சூஸ் பண்ணி பிக்கப் பண்ற மாதிரியும் திரைக்கதையில் இருக்கும் ஓட்டை மிகப் பெரியது..!

வீட்ல தனியா இருக்குற பொண்ணுகூட ஒரு பையனை பார்த்த அதிர்ச்சில கோபப்படும் சான்யாவின் குடும்பத்தினர், ரெண்டு கல்யாணத்துக்கு எப்படி ஒத்துக்கிட்டாங்கன்னும் தெரியலை.. ஏதோ சாதாரணமா குழந்தைத் திருமணம் மாதிரி ஏற்பாடு பண்ணி வைச்சு அதுக்கு ஆளாளுக்கு ஒரு நியாயம் சொல்றதை நினைச்சாத்தான் கொடூரமா இருக்கு..! 

இதுல மணமேடைல ஐயர் மதன்பாப், ஹீரோகிட்ட கொஸ்டீன் மேல கொஸ்டீனா கேக்குறாரு.. "சாந்தி முகூர்த்தமெல்லாம் எப்படி..? இன்னைக்கொண்ணு.. நாளைக்கொண்ணா..? இல்லாட்டி ரெண்டுமே ஒரே நேரத்துலயா..? எப்படி சமாளிப்பேள்..? நோக்கு முன் அனுபவம் இருக்கா..?" - ஓ.. நன்னா இருக்கு டயலாக்ஸ்.. பேஷ்.. பேஷ்..!

கடைசீல அதுவரைக்கும் அவ்வளவு குளோஸான பிரெண்ட்ஸா இருந்தவங்க.. யார் கழுத்துல மொதல்ல தாலி கட்டணும்..? யார்கூட மொதல் சாந்தி முகூர்த்தம்..? யார் எச்சிக்கை..? என்றெல்லாம் பேச்சு வந்தவுடன் மனசு மாறி ஈகோ பெரிசாகி தங்களுக்குள் சண்டை போட்டு திருந்துற மாதிரி சீன்ஸ் வைச்சு.. உஷ்.. அப்பாடா.. சீரியஸ் கதாசிரியர்களெல்லாம் கொஞ்சம் இந்தப் பக்கம் காதை திருப்பினா அவங்களுக்கு நல்லது. இது மாதிரி ஏதாவது சீரியல் கதையை சீரிஸயா எடுங்கப்பா.. வருஷக்கணக்கா ஓடும்..!

ஷிவாவின் இசையில் பாடல்களின் வரிகள் பளீச்சென்று கேட்கிறது.. 1995 பாடல்கள் போல் இருக்கின்றன...! பாடல் காட்சிகளை மட்டும் ரம்மியமாக எடுத்திருக்கிறார்..! இளமை சொட்டுகிறது..! ஆனாலும் கதையில் பருப்பு வேகாததால் இன்னும் 4 பாட்டு வைச்சிருக்கலாமேன்னுதான் தோணுது..!

ஏற்கெனவே தோழியுடன் பிரிவு-தற்கொலைன்னு தினத்தந்தில டெய்லி நியூஸ் வந்துக்கிட்டிருக்கு.. இந்த நேரத்துல இப்படியொரு கோணத்தையும் காட்டிட்டீங்களா.. இனிமேல் இப்படியும் சில செய்திகள் நம்ம காதுக்கு வரத்தான் போகுது.. அந்தப் புண்ணியத்தை அண்ணன் பாலசேகரனே அடையட்டும் என்று வாழ்த்துகிறேன்..!

உதயம் NH4 - சினிமா விமர்சனம்

24-04-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உண்மையா இந்தப் படத்துக்குத்தான் கெளரவம்ன்னு பேரு வைச்சிருக்கணும்.. கெளரவக் கொலைக்கான அத்தனை அம்சங்களும் இந்தப் படத்துல இருக்கு..!




பெரிய அரசியல்வாதி, கோடீஸ்வரரின் மகளான ஹீரோயினை, சாதா ஹீரோ சித்தார்த் லவ் பண்றாரு.. பெங்களூர்ல இருந்து சென்னைக்கு கூட்டிட்டு போயி கல்யாணம் பண்ண பிளான் பண்றாரு.. கோடீஸ்வர அரசியல்வாதி அதனைத் தடுக்க நினைக்கிறாரு.. சித்தார்த் அதனை முறியடிச்சாரா இல்லையான்றதுதான் படம்..! தேசிய நெடுஞ்சாலையில் தென்னக மாநிலங்களை ஒன்றிணைக்கும் 4-வது புறவழிச் சாலையிலேயே படத்தை எடுத்திருப்பதால் இந்தப் பெயராம்..! 

இந்தியால காலேஜ்ல சேர்றதுன்னா 18 வயசு தொடங்கியிருக்கணும்ன்றது உறுதியான ஒரு விஷயம்.. இதை நல்லா ஞாபகத்துல வைச்சுக்குங்க.. இந்தப் படத்துல ஹீரோவும், ஹீரோயினும் காலேஜ் பைனல் இயர் படிக்கிறாங்களாம்.. ஆனா பொண்ணுக்கு இன்னும் 18 வயசு ஆகலையாம்.. ஓடிப் போற மறுநாள்தான் 18 வயசு முடியுதாம்.. அதுனால அதுக்குள்ள அந்தப் பொண்ணை மீட்டிரணும்னு அப்பன்காரன் அவினாஷ் ஒரு மொள்ளமாரி போலீஸ்காரனுக்கு வேலை கொடுக்குறார்.. தனக்கு டிபார்ட்மெண்ட்ல ஒரு சஸ்பெண்ட்ல இருந்து காப்பாத்தினாரேன்னுட்டு எஃப்.ஐ.ஆர்.கூட போடாம காதலர்களை தேடுறாரு போலீஸ் கே.கே.மேனன்.. தேடுறாரு.. தேடிக்கிட்டே இருக்காரு.. இவங்களும் ஓடுறாங்க.. ஓடுறாங்க.. ஓடிக்கிட்டே இருக்காங்க.. இதுதாங்க படம்..!

ஹீரோ சித்தார்த்துக்கு பேக்கிரவுண்ட்டில் என்ன பெரிய சோகம்ன்னு தெரியலை.. படம் முழுக்கவே இறுக்கமாவே வர்றாரு.. போதாக்குறைக்கு வசனம் வேற மணிரத்னம் ஸ்டைல்லயே பேசுறாரு.. இவர் மட்டுமில்ல.. அத்தனை பேருமே இதே ஸ்டைல்ன்றதால படம் முடியறவரைக்கும் யார் இப்போ டயலாக் பேசுறான்னு கண்டுபிடிக்கவே முடியாம, குத்துமதிப்பா புரிஞ்சுக்க வேண்டியிருக்கு..! கோபம் வர்ற சீன்லேயும் அப்படியேதான் இருக்காரு சித்தார்த்.. லவ் மூடுலேயும் அதே மாதிரிதான்.. எப்பத்தான் இவர் வித்தியாசத்தைக் காட்டுவாருன்னு கடைசிவரைக்கும் காத்திருந்து வேஸ்ட்டானதுதான் மிச்சம்..! 

ஹீரோயின் அம்சமான பொண்ணு. பேரு அஷ்ரிதா ஷெட்டியாம். உருவாக்கிய அந்த ஷெட்டிக்கு ஒரு தேங்க்ஸு..! இந்தப் பொண்ணை எதுக்காக லவ் பண்றாரு.. எப்படி லவ் ஆரம்பிக்குதுன்றதையெல்லாம் அப்பப்போ ஆளாளுக்கு வந்து வந்து சொல்லிட்டுப் போறதால அந்த பீலிங்கே வராம கடைசீல தப்பிச்சிருவாங்களான்றது மட்டும்தான் நினைவுல இருந்தது..!

பொண்ணு நல்ல கலரு.. எந்தக் கோணத்துல பார்த்தாலும் கேமிரால பளிச்சுன்னு இருக்கு.. என்ன அடிக்கடி பப்புலேயே சந்திக்கி வைக்கிறதால  கோப்பையும், கையுமா நிக்குற பொண்ணை ஹீரோயினா நினைக்க முடியலை.. பட்.. டூயட்டுகளில் மட்டும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் கைவண்ணத்தில் கண்ணுக்குள் ஊடுறுவுகிறார் அஷ்ரிதா..! 

பெங்களூரில் என்பதாலோ என்னவோ, இவுங்க காதல் வளர்றதே பப்புக்குள்ளதான்னு கதையை கொண்டு போயிருக்காங்க..! அதுலேயும் மங்களூர் பப்புல இந்து தீவிரவாதக் கும்பல்கள் நுழைஞ்சு அதகளம் செஞ்சதையும் இதுல ஒரு காட்சியா வைச்சிருக்காங்க..! அப்போ அந்தக் கும்பலை அனுப்பினதே அவினாஷுன்னுதான் சொல்றாங்க. ஸோ அவினாஷ் இந்தப் படத்தோட கதைப்படி பஜ்ரங்தள் போன்ற இந்து தீவிரவாத அமைப்போட  தலைவராம்..! இவரேதான் ஒரு இடத்துல சொல்றாரு, “என் பொண்ணை மீட்க முடியலைன்னா அவுங்க ரெண்டு பேரையும் போட்டுத் தள்ளிரு.. என் பொண்ணு எனக்கு வேணாம்.. எனக்கு என் கவுரவம்தான் முக்கியம்னு..” - அப்போ தில்லான தலைவருதான்..!

கே.கே.மேனன் சிற்சில ஹிந்தி படங்களில் பார்த்திருக்கிறேன்.. இந்தக் கதைக்கு இவர் எந்த விதத்தில் உதவியிருக்காருன்னு தெரியலை.. தெலுங்குல எடுத்து தமிழ்ல டப்பிங் செஞ்சிருக்கிறதால தமிழ் ரசிகர்கள் இப்போதான் முதல்முறையா இவரை பார்க்குறாங்கன்னு நினைக்கிறேன்.. உண்மையா பிரகாஷ்ராஜ் செஞ்சிருக்க வேண்டிய கேரக்டர்.. தவறி இவர்கிட்ட வந்திருச்சுன்னு நினைக்கிறேன்..!

கை ஒடிஞ்ச நிலைல அரசியல்வாதி அவினாஷுக்காக இந்தக் கேஸ்ல சிரத்தையெடுத்து கடுமையா உழைக்குறாரு.. வீட்ல இருந்து அவரோட காதல் மனைவி மகனோட பேர்த்டே இன்னிக்குன்னு சொல்லி கூப்பிட்டும் கடமை அழைக்கிறதுன்னு சொல்லியே சமாளிக்கிறாரு.. அவங்க ரெண்டு பேரோட செல்போன் பேச்சுலேயே அவங்க குடும்பத்தை பத்தியும், காதலைப் பத்தியும், கல்யாணத்தைப் பத்தியும் சொல்லி.. கிளைமாக்ஸ்ல ஒரு டர்னிங் பாயிண்ட்டை அடிக்க வைச்சிருக்குற திரைக்கதைக்காக வெற்றிமாறனுக்கு ஒரு சபாஷ் போடணும்..!

போலீஸ் கண்ணுலேயே படாமல் தப்பிக்குறதுக்கு நூறு வழியிருந்தும் சினிமாவுக்காக எளிதாகக் கேட்ச்சாகுற மாதிரியான திரைக்கதையையும், கொஞ்சம் கொஞ்சம் சப்பையான காரணத்தைச் சொல்லி மாட்டிக்கிறதும்தான் இந்தப் படத்தோட பேட் மார்க்.. பட்  இதைக்கூட படத்தோட மேக்கிங்குக்காக நாம மன்னிச்சு விட்ரலாம்..! 

கே.கே.மேனன் டிரெயினை பாலோ பண்ணித் துரத்த.. அந்த சேஸிங்கும், அதுக்கப்புறம் ஹீரோயினை சித்தார்த் ரயில்வே டிராக் பக்கத்துல மீட்குற அந்த சேஸிங்கும் பரபரப்புதான்..! இதுல இடைல இடைல குபீர் சிரிப்பை கொடுத்த அந்த சைபர்கிரைம் அப்பாவி கேரக்டரையும் கொஞ்சம் பாராட்டணும்.. “அவன் எதுக்கு ஸார் உங்களுக்கு ஷேவ் பண்ணி விடணும்”ன்ற டயலாக்கை கேட்டு சிரிக்காதவங்களே இருக்க முடியாது..! 

பிற்பாதியில் கொஞ்சம் கொஞ்சம் எடிட்டிங்கில் கையை வைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் இறுக்கம் கிடைச்சிருக்கும். கிஷோரின் எடிட்டிங்கும் இந்தப் படத்துக்கு மிகப் பெரிய பலம்..! முன்பே சொன்னது மாதிரி அப்பன் பெத்த பார்ட்டியா இருந்தாலும், பெங்களூர்லேயே இவங்க கல்யாணம் செஞ்சிட்டாலும் எவனும் கேக்கப் போறதில்லை.. 18 வயசு ஆகிட்டதால எந்த அப்பனும் விட்டு வைக்கப் போறதில்லை..! சென்னைக்கு கூட்டிட்டு வந்தர்றதலேயே கோடீஸ்வர அப்பன்கள் வீட்ல சும்மா உக்கார போறதில்லை.. இப்படி இத்தனை கோணங்கள் இருந்தும், தாங்கள் நினைத்த சேஸிங் திரைக்கதையை வைச்சு ஜெயிக்கணும்னு நினைச்ச இவங்க நினைப்புக்கு ஒரு சல்யூட்.. இதுல முக்கால்வாசி ஜெயிச்சிட்டாங்கன்னே சொல்லலாம்..!

கண்டிப்பா படத்தோட கிளைமாக்ஸ்ல கை தட்டாதவங்க யாரும் தியேட்டர்ல இருக்க முடியாதுன்னு நினைக்கிறேன்..! அப்படியொரு கிளைமாக்ஸ்.. அந்த கிஸ்ஸுக்கு இருக்குற உண்மைத்தனத்துனாலதான் சென்சார்ல அப்படியே விட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்.. அந்தக் காட்சில கே.கே.மேனன் காட்டுற பீலிங்கும் அந்தக் காட்சியோட ஹிட்டுக்கு ஒரு காரணம்..! வெல்டன் இயக்குநர் மணிமாறன்.. முதல் படத்திலேயே குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றியைப் பெற்றிருக்கிறார்.. தொடர்ந்து வித்தியாசமான படங்களை இவர் வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..!

திருமதி தமிழ் - சினிமா விமர்சனம்

21-04-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்..! தமிழ் இலக்கியத்தில் முத்துக் குளித்த அறிவு இருக்கிறது..! கோணல்மானலான முகம் என்றாலும் சீரியஸ் நடிப்பையே காமெடியாக்கி பார்க்கும் பாமர ரசிகர்கள் இருக்கிறார்கள்.. என்ன செய்யலாம்..? “ஒண்ணும் இல்லாத பய..! அவன் மூஞ்சியை பாருங்க.. என் மக முகத்தைப் பாருங்க.. ஏதாச்சும் பொருத்தம் இருக்கா..? ஒட்டுமா..? அவனுக்கெல்லாம் என் பொண்ணை கொடுக்கணுமா..?” என்று அடிவயிற்றில் அடித்துக் கொண்டு சாபமிட்ட மாமியாரின் நினைவுகள் ரொம்பவே தொல்லைபடுத்திவிட்டது மருமகனுக்கு. போதாக்குறைக்கு மச்சுனனும் வேற ரூட்டுல டாப்புக்கு போயிட்டிருக்க.. என்னத்த செஞ்சாவது தன் பெயரை நிலை நாட்ட வேண்டும் என்ற வெறி இயக்குநர் ராஜகுமாரனுக்கு.. அதுக்கு நாமளா கிடைச்சோம்..?



சாம் ஆண்டர்சன், பவர் ஸ்டார் வரிசையில் அடுத்ததாக நம்மைக் குதறியெடுக்க வந்திருக்கிறார் இந்த சோலார் ஸ்டார்..! ஜெயமாலினிகூட தனது ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் வாயில் இவ்வளவு லிப்ஸ்டிக்கை கொட்டியதில்லை..! தேய்த்து எடுத்திருக்கிறார் அண்ணன்..! அண்ணன் பேசும், ஒவ்வொரு வசன உச்சரிப்புக்கும், டப்பிங் இன்சார்ஜ் என்ன பாடுபட்டாரோ தெரியவில்லை..? எதிரில் யாரோ ஒருவர் கையில் ஆசிட் பாட்டிலுடன் நின்று மிரட்டியிருக்கிறார்கள் போலிருக்கிறது.. அவ்வளவு மிரட்சியுடன் பேசி அசத்தியிருக்கிறார்..!

கனல் கண்ணனுக்கு இப்படத்தில்தான் பெண்டு நிமிர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த டெக்னாலஜி மட்டும் இல்லைன்னா அத்தனை பெரிய, சிறிய, புதிய ஹீரோக்களும் வீட்ல உக்காந்து அடிபம்பைத்தான் அடிக்க முடியும் என்பது இதிலும் நிரூபணமாகியுள்ளது. ஆனாலும் அண்ணன் அடிக்கிற ஒவ்வொரு அடியும் இடி மாதிரி விழுகுது..! கம்பிக் கதவைத் திறந்துக்கிட்டு ஸ்டைலா நடந்து வந்து சட்டையை இழுத்துவிட்டுட்டு, ஒரு கட்டையை எடுத்து கோடு போட்டு கிழிச்சிட்டு ஸ்டைலா நிமிர்ந்து பார்க்குற அந்த ஒரு லுக்கே போதும்.. தமிழ்நாடு முழுக்க அண்ணனுக்கு உடனடியா ரசிகர் மன்றம் ஆரம்பிச்சே தீரணும்..!

அண்ணனின் நடிப்பைப் பத்தி சொல்லணும்ன்னா ரெண்டே ரெண்டு ஷாட்டுகளே போதும்.. ஒண்ணு அவரோட அம்மாவான ரோகிணி போட்டோவை பார்த்து அண்ணன் ஜெர்க் ஆகுறது.. இன்னொண்ணு தேவயானிக்குக் கல்யாணம்ன்னு போன்ல சொன்னவுடனேயே அண்ணன் காட்டுற ஆக்சனையெல்லாம் என்னால எப்படி எழுதிக் காட்டுறதுன்னே தெரியலை..! வார்த்தைகளே சிக்க மாட்டேங்குது..!

அண்ணனுக்கு அவரோட திருமதியாரோட 2 டூயட்டும் இருக்கு..! இப்போ அவங்களோட பொண்ணே பாவாடை, தாவணி போட்டிருக்கு.. இந்த வயசுல போயி இந்தம்மா பிளஸ்டூ ஸ்டூடண்டு மாதிரி டிரெஸ் பண்ணிட்டு வந்து “மாமா மாமா”ன்னா தியேட்டர்ல எம்புட்டு பயம் இருக்கும்..? எம்ஜிஆர், ரஜினி ஸ்டைல்ல டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு அண்ணன் ஆடுற டான்ஸும், அக்கா காட்டுற மூவ்மெண்ட்ஸும் நிசமாவே ரெண்டு பேரும் லவ் பண்ணும்போது பண்ண முடியாததையெல்லாம் இப்போ நமக்காக, அவங்க செலவுலேயே செஞ்சு காட்டுறாங்களோன்னு ஒரு பீலிங் வருது..!

இதுல தேவயானிக்கு டபுள் ஆக்ட்டு.. அம்மணிக்கு இது 75-வது படம்கிறதால திரைக்கதைல தேவயானிக்கு சீரியல் டைப்புல பிளாஷ்பேக் கதையெல்லாம் வைச்சு கால் மணி நேரத்துக்கு ஒரு திடுக் திருப்பமா வைச்சு.. எண்ட் கார்டுல ராஜகுமாரனா நடிக்கிறதே தேவயானிதான்னு  திருப்பம் வந்திருமோன்ற அளவுக்குப் பயமுறுத்திட்டாங்க..! இதுல தேவயானியோட அம்மாவா டிவி நடிகை துர்கா. இந்த அநியாயம் ஊருக்கே அடுக்காது..! “பார்வதி போய் உன் புருஷனை சாப்பிட வரச் சொல்லு”ன்னு சின்னப் புள்ளைலேயே  சொல்லிச் சொல்லி பழக்கிட்டாங்களாம்..! இதையும் திரைக்கதைல ஓரமா வைச்சு புல்லரிக்க வைச்சிருக்காரு ராஜகுமாரன்..!

பட்.. படத்தின் ஒன்லைன் நல்ல சப்ஜெக்ட்.. விருப்பமில்லாமல், பலாத்காரமாக, கட்டாயமாக எந்தப் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்காதீர்கள் என்பதுதான் கதை.  இவர்களுடைய வாழ்க்கையில் நடந்த கதையைத்தான் கொஞ்சம் அப்படி, இப்படி சிந்தித்து, இப்படி செயல்படுத்தியிருக்கிறார்கள். 

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், கிறித்துவ மதம் மற்றும், இஸ்லாம் மதங்களில் மணமக்களுக்கு திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா என்று கேட்கப்படுகிறதாம்.. இல்லையெனில் திருமணம் நிறுத்தப்படுகிறதாம்..! ஆனால் இந்து மதத்தில் மட்டுமே மணமகள் மீது கல்யாணம் திணிக்கப்படுகிறது என்று அபாண்டமாக குற்றம் சுமத்தியிருக்கிறார் ராஜகுமாரன்..! இது மட்டுமில்லாமல் கடைசி அரைமணி நேரத்தில் நீதிமன்றத்தில் இந்து மதத்தைக் கொத்து புரோட்டா போட்டுத் தாளித்திருக்கிறார் வசனகர்த்தா ராஜகுமாரன்..! இந்து அமைப்பினர் சீக்கிரமா இந்தப் படத்தைப் பார்த்திட்டு தங்களோட பதிலைச் சொன்னாங்கன்னா பத்திரிகையாளர்களும் சந்தோஷப்படுவோம்..!

‘விதி’ என்ற படத்திற்குப் பின், நீண்ட இடைவெளிக்குப் பின்பு இந்தப் படத்தில்தான் நீதிமன்றக் காட்சிகளில் வசன அனல் தெறிக்கிறது.. அதிலும் தேவயானி பேசும் வசனங்கள் அனைத்தும் டிஆர்பியில் ஹிட்டடிக்கும் சேனல்களின் சீரியல் டயலாக்குகள்..!  ஏற்கெனவே சீரியல்களை பார்த்து பல குடும்பங்கள்ல வெட்டுக் குத்தா போயிக்கிட்டிருக்கு. இதுல இப்போ “அத்தனை குடும்பத்துலேயும் தோண்டித் துருவிப் பார்த்தா இப்படியொரு விஷயமும் நிச்சயம் இருக்கும்”ன்னு தியேட்டருக்கு வர்ற ரசிகர்களின் குடும்பத்துலேயும் குழப்பம் பண்ணி வைச்சிருக்காரு ராஜகுமாரன்..!

கதை என்னன்னு பார்த்தீங்கன்னா..!? 

எடுத்த எடுப்பிலேயே போலீஸ் ஸ்டேஷன்ல குறுக்கும், நெடுக்குமா ரோப் கட்டி பறக்குறாரு ராஜகுமாரன்.. இடைல இடைல கட் டூ ஷாட்டா கீர்த்தி சாவ்லாவுக்கு பிரித்விராஜ்கூட கல்யாணம்..! கல்யாணம் முடிஞ்சு பிருத்விராஜ் வீட்டுக்கு வரும்போது ராஜகுமாரனும் கடல்ல தூக்கிப் போடப்பட்டு சாக்கடைல புரண்ட நிலைமைலேயே அந்த வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு வந்து நிக்குறாரு..! ரெண்டு வீட்டு பால்கனிலேயேும் கீர்த்தியும், ராஜகுமாரனும் ஒருத்தரை மாத்தி ஒருத்தர் புடுங்குற மாதிரி பார்த்துக்கிட்டே இருக்க.. ரமேஷ்கண்ணா பிளாஷ்பேக்கை ஓப்பன் பண்றாரு.. இங்கதான் கதை ஸ்டார்ட் ஆகுதாம்..! 

ராஜகுமாரன் ஒரு வக்கீல். சின்ன வயசுலேயே அம்மா, அப்பா இறந்துட்டதால மாமா, அத்தை அரவணைப்புல வளர்றவரு. இந்த மாமாவோட மகள்தான் ஒரு தேவயானி..!  “மாமா மாமா”ன்னு மாமனைக் கட்டிக்க புள்ளை ரொம்பவே ஆசைப்படுது.. வீட்ல ராஜகுமாரன் ஷேவ் பண்ணி தேவயானி பார்த்ததே இல்லையாம்பா.. அதுக்காகவே ஒரு கிக்கான காட்சியை வேற  வைச்சு டெம்போ ஏத்தியிருக்காங்கப்பா..!  சின்னப் புள்ளைல இருந்தே கட்டிக்கப் போறவாதான்னு நினைப்புல இருந்த ராஜகுமாரன் மனசுல ஒரு லாரி மண்ணையள்ளிப் போடுறாரு மாமா ராதாரவி. சிங்கப்பூர் மாப்ளைக்காரன்கிட்ட தாலியை கொடுத்து தேவயானி கழுத்துல கட்ட வைச்சர்றாரு.. இந்தச் சோகத்தைத் தாங்க முடியாம ஊர்ல இருந்து சென்னைக்கு ஓடி வர்றாரு ராஜகுமாரன்..!

ஏற்கெனவே சென்னைல பிச்சைக்காரனா திரியற அவரோட பிரெண்ட் ரமேஷ்கண்ணாவை பார்க்க வர்றேன்னு போஸ்ட் கார்டுல லெட்டர் போட்டுட்டுத்தான் கிளம்பி வர்றாராம்.. என்னா திரைக்கதை..? அரிசி சோறு கிடைக்கலையேன்னு புகுந்த வீட்ல சண்டை போட்டுக்கிட்டு, பொறந்த வீட்டுக்கு ஆத்தாவைத் தேடி வந்தாளாம் ஒருத்தி.. வழியிலேயே படுக்கிறதுக்கு இடம் தேடி பாயோட அலைஞ்ச ஆத்தாவை பார்த்தாளாம்ன்ற கதையா நடு ரோட்டுல பெட்டி, படுக்கையோட உக்காந்திருக்கிற ரமேஷ்கண்ணாவை பார்த்து அறிமுகத்தை முடிச்சுக்குறாங்க..!

இவங்க ரெண்டு பேரும் வீடு தேடி போகும்போது அன்னிக்குக் காலைல அடிச்ச பிக்பாக்கெட் பர்ஸ்ல இருந்த ராஜகுமாரனின் போட்டோவை பார்த்திட்டு இவன்தான் தன் மகள் கீர்த்தி சாவ்லாவுக்கு மாப்ளைன்னு நம்பி காத்திருக்காராம் இன்னொரு காமெடி மதன்பாப். கரெக்ட்டா அவர் வீட்டு வாசலுக்கே வந்து வீடு கேக்குறாங்க ரெண்டு பேரும். மாப்ளைதான் வந்திருக்காருன்னு சொல்லி ரெண்டு பேரையும் அங்கேயே தங்க வைச்சு உபசரிக்கிறாங்க. வீடு பார்த்துட்டு ஓடிப் போயிரலாம்னு பிளான் பண்ணியும் வீடு கிடைக்காததால, கீர்த்திகூட ஒரு டூயட்ட மட்டும் பாடிட்டு நான் அந்த மாப்ளையில்லைன்னு உண்மையைச் சொல்றாரு ராஜகுமாரன்.

“நம்பிக்கை துரோகம் பண்ணிட்டீங்க... வீட்டைக் காலி பண்ணுங்க”ன்னு கீர்த்தி சொல்லிட்டு அப்பால திரும்பவும் அழுகுது. “என் மனசுல நீங்க மட்டும்தான் இருக்கீங்க”ன்னு.. இங்கதான் ராஜகுமாரனும் தன்னோட பிளாஷ்பேக்கை எடுத்து விடுறாரு..! நடுவுல 4 வருஷத்துக்கு முன்னாலயே போய்ச் சேர்ந்துட்ட மலேசியா வாசுதேவன், தன்னோட மகன் பிருத்விக்கு கீர்த்தியை கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு வர்றாரு.. இதுக்கொரு பின்னணி கதை..! இவங்க காலேஜ் வாசல்ல இருக்குற இடம் மதன் பாப்போடதாம்.. கீர்த்தியை வளைச்சுப் போட்டா இடம் சொந்தமாயிரும் பாருங்க. அதுக்காகத்தான் இந்தக் கல்யாணமாம்..!

கீர்த்திக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை நிறுத்த ராஜகுமாரனும், ரமேஷ்கண்ணாவும் ஐயர்ல ஆரம்பிச்சு சாப்பிட்ட இலையை எடுக்கிறவன்வரைக்கும் போய் பேசுறாங்களாம்.. இந்த ஒரு திரைக்கதைக்கே ராஜகுமாரன் வரும் காலங்களில் இயக்குநர்களிடையே நிச்சயம் பேசப்படுவார்..! எல்லாரும் அது எங்க தொழில்ன்னு கை விரிக்க.. கடைசீல கல்யாணத்தன்னிக்கு கீர்த்தியை சின்னப்புள்ளத்தனமா கடத்திட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வர்றாரு ராஜகுமாரன்.

அங்கே ஒரு மினிஸ்டரே நேர்ல வந்து கீர்த்தியை தூக்கிட்டுப் போக.. ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு மட்டும் சவுண்டு விட்ட இன்ஸ்பெக்டரை நம்பி, கல்யாணத்தை நிறுத்த மண்டபத்துக்கே திரும்பவும் அவருடனேயே போறாரு ராஜகுமாரன். அஞ்சு நிமிஷத்துல மனசு மாறிட்ட இன்ஸ்பெக்டர், இப்போ கல்யாணத்துக்கு ஓகே சொல்ல.. ராஜகுமாரன் முன்னாடியே கீர்த்திக்கு கல்யாணம் நடக்குது.. அதுக்கப்புறமா அவரை தூக்கிட்டு வந்து ஸ்டேஷன்ல வச்சு மிதி மிதின்னு மிதிக்க.. மறுபடியும் நாமளும் மிதி வாங்கிறது தொடருது..!

பால்கனில பசியோட உக்காந்திருக்கிற கீர்த்திக்கு சாப்பாடு கொடுக்க ராஜகுமாரன் செய்ற வேலை இருக்கே..! அப்பா.. முருகா.. இது உனக்கே அடுக்குமாடா..? ஜாக்கிசான் படத்துலகூட இப்படியொரு காட்சியை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க.. என்னவொரு தைரியம்..? என்னவொரு புத்திசாலித்தனம்..? மிரட்டிட்டாருல்ல அண்ணன்..! வீட்ல இருக்குற இரு இரும்பு கொடி மரத்தைப் பிடுங்கி.. அதை ரெண்டு வீட்டு பால்கனிக்கும் இடைல போட்டுட்டு ரெண்டு கைலேயும் சாப்பாடு பார்சலை வைச்சுக்கிட்டு அண்ணன் அந்தரத்துல நடந்து போய் கொடுக்குறாரு பாருங்க.. நிச்சயமா தியேட்டர்ல ஸ்கிரீனையே கிழிக்கிற அளவுக்கு கைதட்டல் கிடைக்கும்னு நம்புறேன்..!

இதுல ஒரு அஞ்சு நிமிஷ ‘நச்’ என்ற கதைன்னா அது சாருஹாசனோட கிளைக்கதைதான். அவருக்கும் ஒரு பிளாஷ்பேக்காம்.. படத்தை ஓட்டுற ஆபரேட்டருக்கு மட்டும்தான்யா இதுல கதை இல்லை.. சாருஹாசன் ஒரு வக்கீல்.. பிளாட்பார ஓரத்துல 25 வருஷமா ஆபீஸ் நடத்திக்கிட்டிருக்காராம். ஏன்னு கேட்டா.. அவரையும் ஒரு பொம்பளை வக்கீலு ஏமாத்திருச்சாம்.. “அவ என்னிக்காச்சும் ஒரு நாள் இந்தப் பக்கம் வருவாள்ல.. அப்ப நான் அவளுக்காக இங்க காத்துக்கிட்டிருக்கேன்னு தெரியும்ல்ல.. தெரிஞ்சுக்கணும்.. அதுக்காகத்தான் ரோட்டுலயே உக்காந்திருக்கேன்..”னு பீலிங்கோட சொல்றாருய்யா பெரிசு.. அவரை ஏமாத்தின பொண்ணு யாருன்னா.., அது ராஜகுமாரனோட அம்மா ரோகிணியாம்.. தலை சுத்துற மாதிரியில்லே.. பொதுவா இந்த மாதிரி நேரத்துல டிவில விளம்பரம் போடுவாங்க.. நமக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லையே.. முருகான்னு தலைல அடிச்சிட்டு சீட்ல கவுந்தடிச்சாச்சு..!

இந்த சாருஹாசனும் ஒரு நாள் பொக்குன்னு போய்ச் சேர.. இன்னொரு தேவயானி அறிமுகம். இவுக பேமஸான வக்கீலாம்.. இந்த சாருஹாசன் இவுககிட்ட ராஜகுமாரன் கேஸ் பத்தி சொல்லியிருந்தாராம்.. அதுனால அவங்க வாலண்டியரா இதுல உள்ளார வர்றாங்களாம்.. நல்லா சொல்றாங்கய்யா டீடெயிலு..! கூட இருந்த அஸிஸ்டெண்ட்டெல்லாம் சீரியலுக்கு கதை எழுதினவங்க போலிருக்கு..! 

அதெப்படி ஒரே மாதிரி 2 பேர் இருக்க முடியும்ன்னு ராஜகுமாரன் கேள்வியெழுப்ப.. தன்னோட அப்பாவோட செட்டப்போட புள்ளை நானுன்னு சொல்றாங்க வக்கீல் தேவயானி. அந்த அப்பா யாருன்னா அது ராஜகுமாரனோட மாமா ராதாரவிதான்.. போச்சுடா.. 4 வருஷத்துக்கு ஓட்ட வேண்டிய சீரியல் கதையை 2 மணி 38 நிமிஷ படத்துல கட் பண்ணி கட் பண்ணி காட்டி முடிச்சிட்டாங்க..!

இடைல ஊர்ல இருந்து ராதாரவி வந்து முதல் தேவயானி மண்ணெண்ணையை ஊத்தி தீக்குளிச்சிட்டதா சொல்லி சொத்தையெல்லாம் ராஜகுமாரன் பேருக்கே எழுதி வைச்சிட்டதா சொல்றாரு..! வக்கீல் தேவயானி கோர்ட்ல கேஸ் போட்டு கீர்த்தியை அவங்க மாமனார் வீட்ல இருந்து பத்திரமா வெளில கொண்டு வந்தாந்து எதிர்த்துவீட்டு ராஜகுமாரன்கிட்டேயே விட்டுர்றாங்க.. வீட்டுக்கு நடுவுல ஒரு கோட்டை போட்டுட்டு அதுக்கப்புறம் அவங்க.. இதுக்கப்புறம் இவுங்கன்னு ஒரு டீசண்ட்டா வாழறாங்களாம்..! 

அதுக்கப்புறம் ஆரம்பிக்குது பெரிய கொடுமை.. கோர்ட், கேஸ், வாய்தா.. வாதம்ன்னு ஆரம்பிச்சு அரை மணி நேரத்துக்கு பக்கம், பக்கமா டயலாக் பேசி கடைசி 5 வருஷமா  தேவயானி சினிமால நடிக்கலீல்ல.. எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சு வெளுத்துக் கட்டுறாங்க.. கூடவே நம்மளையும்தான்.. கீர்த்தி-பிருத்வி கல்யாணத்துக்கு மேளம் அடிச்சுவன்ல இருந்து கேட்டரிங் செஞ்சவன்வரைக்கும் கோர்ட்டுக்கு இழுத்து.. எல்லார்கிட்டேயும் “நீங்க கலந்துக்கிட்ட கல்யாணத்துல பொண்ணுக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு உங்களுக்குத் தெரியுமா.. நீங்க ஏன் கேக்கலை?”ன்னு அந்து போன ரீலாட்டும் இவுக காட்டுற நடிப்பு இருக்கே..!??? இனிமே தமிழ்நாட்டுல எவன் கல்யாணத்துக்கு போனாலும் சரி.. பொண்ணுக்கும், மாப்ளைக்கும் கல்யாணத்துக்கு விருப்பமா இல்லையான்னு கேட்டுட்டு அப்புறமா பந்தில உக்காருங்கப்பா.. இல்லாட்டி நீங்களெல்லாம் மனசாட்சி இல்லாதவங்கன்னு தேவயானியக்கா கனவுல வந்து ஈட்டியை வைச்சு குத்தும்..!

கடைசீல கீர்த்தியோட கல்யாணம் செல்லாதுன்னு சொல்லி தீர்ப்பு வாங்கிர்றாங்க வக்கீல் தேவயானி.. இங்கேயும் ஒரு திடுக் திருப்பமா கோர்ட் கூண்டுல கீர்த்தி மேல எனக்கு லவ்வு இருந்தது உண்மைதான்னு சொன்னது பொய்யுன்னு வெளில வரும்போது சொல்லிட்டு எஸ்கேப்பாகப் பார்க்குறாரு ராஜகுமாரன்..!

விடுவாரா தயாரிப்பாளர் தேவயானி.. இப்படியே விட்டா தியேட்டர்ல பெண்கள் கூட்டமெல்லாம் திட்டிட்டு பக்கத்து வீட்டுக்காரிகளையும் தியேட்டருக்கு வர விடாமல் பண்ணிருவாங்கன்னுட்டு மறுபடியும் பஸ்ல ஊருக்குப் போற ராஜகுமாரன் பக்கத்துலேயே கீர்த்தியையும் உட்கார வைச்சு.. “இனிமேலும் இவங்க லவ் பண்ண டிரை பண்ணுவாங்க”ன்னு சொல்லிட்டு நம்ம குடலை உருவி தொங்க விட்டுட்டு, நம்மளை தூக்கிட்டுப் போய் ஆஸ்பத்திரி வாசல்ல போட்டுட்டு போற மாதிரி விட்டுட்டுப் போயிடறாங்க..! உஷ்.. அப்பா.. இவ்ளோதாம்பா கதை..!

இதுல சப்போர்ட்டிங் ஆக்டர்ஸா நிறைய பேரு வாலண்டியரா வந்து நம்மளை குத்திட்டுப் போறாங்க..! இதுல கஞ்சா கருப்புவோட ஒரு புகார் இருக்கு பாருங்க.. என்னவொரு கிரியேட்டிவிட்டி..? “ஆட்டோன்ற இடத்துல சமாச்சாரம்ன்னு போட்டு எழுதிக்குங்க”ன்னு சொல்லிப்புட்டு அவரும் அவரோட பிரெண்டும்.. “என் பொண்டாட்டியை இவன் வைச்சிருந்தான்.. இவன் பொண்டாட்டியை நான் வைச்சிருந்தேன்”னு சொல்ற கதையை வேற காமெடின்னு எடுத்து வைச்சிருக்காங்க.. யூ டூ ராஜகுமாரன்னு கேட்கத் தோணுது..!

பாடல்கள் மட்டுமே படத்துல இருக்குற ஒரே ஆறுதல். பாட்டு சீன் இல்லை. பாடல்கள் மட்டுமே.. அதிலும் ‘தமிழ் தமிழ்’ என்ற பாடல் கேட்பதற்கு மட்டுமே அழகு.. பார்ப்பதற்கு கொடுமை..! ‘திருக்குறள் இடையழகி’, ‘நாயகன்’, ‘வா வா வெண்ணிலவே’ என்று அனைத்து பாடல்களிலுமே தமிழ் வார்த்தைகள் தெள்ளத் தெளிவாகக் கேட்கிறது.. அண்ணன் எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு ஆளுயுர மாலையைப் போட்டிருங்கப்பா..! ஆனா பாட்டு சீன்ஸையெல்லாம் பார்க்கத்தான் முடியலை..! அத்தனையிலேயும் அண்ணன் காட்டுற ரொமான்ஸை பார்த்தா.. முடியலை.. விட்ருங்கண்ணே..!

எல்லாரும் டிஜிட்டல்ல உலகத் தரத்துல எடுத்துக்கிட்டிருக்கோம்னு ரீல் விடும்போது நம்ம அண்ணன் மட்டும், 1,45,000 அடி பிலிம் ரோல்ல அதுலேயும் ஈஸ்ட்மேன் கலர்ல, நாலரை கோடி செலவுல படத்தை எடுத்திருக்கிறதா பெருமையா வேற சொல்றாரு.. இந்தக் காசுல தேவயானி பேருல இன்னொரு ஸ்டூடியோவே கட்டியிருக்கலாம்.. இல்லாட்டி வசந்த மாளிகையாவது கட்டியிருக்கலாம்.. அந்தக்காதான் பாவம்.. கோலங்கள் சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சு.. அந்த சீரியல் முடிக்கிறதுள்ள 2 புள்ளையையும் பெத்திட்டு.. கோடில சம்பாதிச்சு வைச்சதை எப்படித்தான் இப்படி அழிக்கிறதுக்கு மனசு வந்ததோ தெரியலை..? 

ராஜகுமாரன் இத்தோட தன்னோட நடிப்பு ஆசையை நிறுத்திக்கிட்டா அவருக்கும் நல்லது.. நமக்கும் நல்லது.. இல்லாட்டி தப்பித் தவறி ஏஸி காத்து வாங்கவாச்சும் இப்போ தியேட்டர் பக்கம் வர்றவனும் கடைசீல காணாமப் போயிருவான்..! 

வக்கீல் தேவயானிக்கு அன்பான வேண்டுகோள்..! மேடம்.. நீங்க கோர்ட்ல ஒரு பக்கத்துக்கு அள்ளி வீசினீங்களே..  இந்தியன் பீனல் கோட் செக்சன் நம்பர்களை.. அதே மாதிரி இந்தப் படத்தை பார்க்க வைச்சு.. எங்களை உக்கார வைச்சு கொடுமைப்படுத்தினதுக்காக.. உங்க ரெண்டு பேர் மேலேயும் எந்த செக்சன்ல கேஸ் போடுறதுன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா எங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்..!



கெளரவம் - சினிமா விமர்சனம்

19-04-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

A Film by என்று டைட்டில் கார்டு போடுவதற்குத் தகுதியுள்ள தமிழ் இயக்குநர்களில் ராதாமோகனும் ஒருவர். அந்தப் பெயரை இந்தப் படத்திலும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்..! பிரகாஷ்ராஜின் நிஜமான கேரக்டர் என்னவோ.. எதுவாகவோ இருக்கட்டும்.. ஆனால் ராதாமோகன் என்னும் பொக்கிஷத்தை கண்டெடுத்து அதனை இன்னமும் வீரியம் இழந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்ற வகையில் அண்ணன் பிரகாஷ்ராஜை உச்சி முகிர்ந்து மெச்ச வேண்டும்..! 


தன்னுடன் படித்த சண்முகம் என்ற தனது நண்பனைச் சந்திக்க அவனது ஊருக்குச் செல்கிறார் ஹீரோ அல்லு சிரீஷ். அங்கே அவரைக் காணவில்லை. மாறாக அவரைப் பற்றிய பகீர் செய்திகள்தான் கிடைக்கிறது.. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சண்முகம், அந்த ஊரின் பெரும்புள்ளியான உயர்சாதியைச் சேர்ந்த பிரகாஷ்ராஜின் பெண்ணை காதலித்து அவளை அழைத்துக் கொண்டு ஊரைவிட்டே ஓடிவிட்டதாக முதல் கட்டத் தகவல் கிடைக்கிறது. ஆள் சென்னைக்குத்தான் போனார் என்கிறார்கள்.. எங்கே என்று தெரியவில்லை..!

சண்முகத்தின் தந்தையின் பரிதவிப்புக்காக அவனைத் தேடும் முயற்சியில் ஹீரோ தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். துணைக்கு தன்னுடன் படித்த நண்பனையும் இணைத்துக் கொள்கிறார். தொழிற்சங்கவாதியான செளந்தரபாண்டியனின் மகளான ஹீரோயினும் இந்தக் கூட்டணியில் சேர்கிறார்..! சண்முகத்தின் அண்ணன் மாரியும் இவர்களுக்கு உதவி செய்கிறார். ஒரு கட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்தும் சண்முகத்துடன் படித்த நண்பர்கள், நண்பிகள் அனைவரையும் வரவழைக்கிறார்கள்..! இந்த 50 பேர் கொண்ட இளைஞர்கள் கூட்டம் சண்முகத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறது..! இந்த டீம் சண்முகத்தைக் கண்டுபிடித்ததா..? அவரது கதி என்ன என்பதுதான் இந்தப் படத்தின் மிச்சம் மீதிக் கதை..!

ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த பிரஸ்மீட்டில் “கவுரவக் கொலைகள் நாட்டில் அதிகமாக நடக்க ஆரம்பித்துள்ளன. இது பற்றிய விழிப்புணர்வை இன்றைய சமுதாயத்தினருக்கு கொடுக்கும்வகையில் ஒரு சமூகப் பொறுப்போடு இந்தப் படத்தை உருவாக்கியிருப்பதாகச்” சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார் பிரகாஷ்ராஜ். ஆனால் ‘கவுரவக் கொலை’ என்பதற்கு அவர் சொன்ன ‘பணக்காரன்-ஏழை’ விளக்கம்தான் பத்திரிகையாளர்களுக்கு ஏற்புடையதாகவே இல்லை..! திரும்பத் திரும்ப ‘பணக்காரன்-ஏழை வர்க்க வித்தியாசத்தினால் செய்யப்படும் கொலைதான் கவுரவக் கொலை’ என்று சொல்லியே பிரஸ்மீட்டை முடித்துக் கொண்டார். ஆனால் படத்தைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு இடத்தில்கூட ‘பணக்காரன்-ஏழை’ என்ற வசனமே இல்லை. முழுக்க முழுக்க உயர்சாதி, தாழ்ந்த சாதி பிரச்சினையைத்தான் பேசியிருக்கிறார்கள். படத்தில் சொல்லியிருப்பது சரிதான் என்றாலும், பிரகாஷ்ராஜின் வருமுன்காப்போம் யுக்திதான் சற்று வருத்தப்பட வைக்கிறது. இத்தனை அழகாக படமெடுத்திருப்பவருக்கு ஏன் இந்த பயம்..? அந்த உண்மையை தைரியமாகவே நெஞ்சை நிமிர்த்தி சொல்லியிருக்கலாம்..!

தனி காலனி, இரட்டை டம்ளர்.. செருப்பு அணிய அனுமதியில்லை.. சினிமா தியேட்டரில் பக்கத்தில் அமர அனுமதியில்லை.. இதற்காகவே தாக்கப்படும் மக்கள்.. பரம்பரை பரம்பரையாக கூலி வேலை செய்யும் மக்கள்.. கற்பழிக்கப்படும் கீழ்ச்சாதிப் பெண்கள்.. என்று தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தற்போதும் நடந்து கொண்டிருக்கும் ஜாதி வெறியினை ஜாதிகளின் பெயரைச் சொல்லாமலேயே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்..!

படத்தின் மிகப் பெரிய பலமே வசனம்தான்.. ராதாமோகனின் ஆஸ்தான வசனகர்த்தா விஜியின் நறுக்கலான வசனங்கள் இந்த சாதி பிரச்சினையை மனதுக்குள் கொண்டு போய் நுழைத்து விடுகிறது..! யதார்த்தமாக சொல்லப்படும் வசனங்கள்.. அழுது வடியும் சோகத்துடன் சொல்லப்படுவதைவிடவும் அதிகமாகக் கவனிக்கப்படும் என்பதை ராதாமோகன் உணர்ந்திருக்கிறார் போலும்..!

இரட்டை டம்ளர் முறையை அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே டீக்கடையில் அமர்ந்திருக்கும் உள்ளூர் பெரிசுகள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பற்றிய தங்களுடைய அறிவை வெளிப்படுத்தும் காட்சி ஒரு குறியீடாகவே தெரிகிறது..! “ஊரைச் சுத்தி நாலு சுடுகாடு இருக்கு.. ஊர்ப் போய்ச் சேருங்க தம்பி..” என்று அன்பாக சொல்லியனுப்பும் வசனமும் அந்தக் கிராமத்தின் இன்றைய நிலையை எடுத்துக் காட்டுவதை போலத்தான் சொல்லப்பட்டிருக்கிறது..! “என்ன ஷூவெல்லாம் போட்டிருக்க..?” என்ற கேள்விக்கு.. “இதாவது பரவாயில்லை.. முன்னாடியெல்லாம் செருப்பு போட்டால்ல கட்டி வைச்சு அடிப்பாங்க..” என்கிறார் மாரி..! இன்றைக்கும் ஊருக்குள் செருப்பு அணிய அனுமதியில்லாத ஊர்களும் தமிழ்நாட்டில் உண்டே..! 

புதுமுகம் அல்லு சிரீஷ்.. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தம்பியாம்.. இதுதான் படத்துக்கும் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்.. இந்தக் கேரக்டரில் தமிழின் பெரிய நடிகர்களை வைத்தே எடுக்கப்பட்டிருந்தால் படம் நிச்சயமாக மிகப் பெரிய அளவுக்கு ரீச்சாகியிருக்கும்.. இப்போது படத்திற்கு வரவிருக்கும் எதிர்மறை விமர்சனங்கள், சர்ச்சைகள், எதிர்ப்புகள் இவை மட்டுமே படம் பற்றிய டாக்கை ரசிகர்களிடம் கொண்டு செல்லும் என்றே நினைக்கிறேன்..!

அல்லு சிரீஷ்.. புதுமுகம். முதல் படம் என்பதால் எதுவும் சொல்வதற்கில்லை..! டயலாக் டெலிவரியை மிகச் சரியாகச் செய்திருக்கிறார் என்றாலும் அவருடைய நடிப்புக்கு வேறொரு படம்தான் தீனி போட வேண்டும்..! விஜியின் வசனங்களும், ராதாமோகனின் இயக்கமும் இணைந்து படத்தைக் கொண்டு செல்வதால் நடிகர், நடிகைகள் தனித்து தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்டவர்களுக்கே இந்தக் கதிதான்..! 

ஹிந்தி விக்கி டோனரில் நடித்த யாமி கவுதம் என்னும் புதுமுகம் தமிழுக்கு அறிமுகம். இவர் மாதிரியான முக ஜாடையில் இதுவரையில் 10-க்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார்கள்.. தொழிற்சங்கவாதியான நாசரின் மகளாக ஆக்ட் கொடுத்திருக்கும் இவரது கேரக்டர் படத்துக்காகவே எழுதப்பட்டிருப்பது போல் தெரிகிறது.. இது போன்ற சமூக விழிப்புணர்வுமிக்க படங்களில்கூட காதல் தவிர்க்க முடியாமல் வைக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் தமிழ்ச் சினிமாக்களின் சோகம்..! இதனை இதில் நிச்சயமாகத் தவிர்த்திருக்கலாம்.. ஹீரோ கல்யாணமானவராகவே காட்டியிருக்கலாம்.. தப்பில்லாமல் இருந்திருக்கும்..!

பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார்.. உருக்கமான காட்சிகளெல்லாம் இல்லாமல் பெரிதாக நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் இருப்பதினாலும் அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினின் நடிப்பைக் காணலாம்..! ஆனாலும் கோர்ட் சீனில் அவருடைய பதட்டமில்லாத அந்த சின்ன வாதத்தில் பார்வையாளர்கள் மொத்த பேரையும் இழுத்திருக்கிறார்..  ஹாட்ஸ் ஆஃப் மேடம்..!

கவுரவக் கொலை என்று சொல்லியாகிவிட்டாலும், அந்தக் கொலையின் மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டிய கட்டாயத்தையும் இந்தப் படம் சொல்லியிருப்பதால் இது சஸ்பென்ஸ்-திரில்லர் சினிமாவாகவும் மாறிவிட்டது..!  செல்வியின் தம்பி கேரக்டர்.. ‘இல்லை’ என்ற ஒற்றை வரி வசனம் படத்தின் தன்மையையே இடைவேளைக்கு பின்பு மாற்றும் காட்சி திடுக் திருப்பம்தான்..! அவனுக்குள் இருக்கும் ஓவியத் திறமையே படத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறது..!

காலனிக்குள்ளேயே காவி வேட்டி கட்டிக் கொண்டு திரியும் அந்த சாமி.. கற்பழிக்கப்பட்ட அவமானத்தைச் சுமந்து கொண்டு ஊருக்குள்ளேயே இருக்கும் செல்வி.. எப்போதும் மேல்ஜாதிக்கே ஒத்துப் போகும் போலீஸ் அதிகார வர்க்கம்.. எதையெடுத்தாலும் சென்சிட்டிவ் பிரச்சினை.. பார்த்துப் பேசுங்க என்று அட்வைஸ் செய்யும் அதிகாரிகள்.. என்று சகலத்தையும் கொண்டு வந்து கொடுத்தும் கவுரவக் கொலை செய்யும் ஜாதிக்காரர்களை விளாச வேண்டிய சந்தர்ப்பத்தில், மட்டும் தனது பேனாவுக்கு சென்சார் கொடுத்துவிட்டார் விஜி.. 

பிரகாஷ்ராஜும், அவரது மகனும் மட்டுமே ஒருவர் மாற்றி ஒருவர் இதைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். பிரகாஷ்ராஜின் மனைவி கவுரவக் கொலையை தன் வீட்டுப் பிரச்சினையாக மட்டுமே பேசுகிறார்.. பிரகாஷ்ராஜ் தனது கவுரவத்திற்காக கடைசியில் எடுக்கும் முடிவு எதிர்பார்த்ததுதான் என்பதால் அதில் பீலிங் வராமல் போய்விட்டது..! மாரி தனது காலனி ஆட்களிடம் “எத்தனை நாளைக்கு நாமளே அடி வாங்கிட்டு இருக்குறது.. எப்போ நாம திருப்பிக் கொடுக்கிறது?” என்கிறார். செல்வியை உதாரணப்படுத்தும்போது “ஏன் நீயே கல்யாணம் செஞ்சுக்கலாமே..? ஏன் அதைச் சொல்லலை..?” என்று வசனமெல்லாம் நடந்த கொடூரத்திற்கு மருந்துபோடும் வேலையை மட்டுமே செய்திருக்கிறது..! 

ஜாதி பிரச்சினை எப்படி மெல்ல, மெல்ல ஆரம்பித்து கடைசியில் உச்சத்தை அடையும் என்பதை வேதம் புதிது படத்தில் பாரதிராஜா மிக அழகாக காட்டியிருப்பார். ஊர் கோவில் பிரச்சினை பற்றி பேசி முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் ஆள் ஆளுக்கு ஒரு யோசனையை சொல்லி திசை திருப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவரவர் தங்களுக்கு ஆதாயம் பெறும் நோக்கில் பேசுவதையே சொல்லிக் காண்பித்து அதன் பின்புதான் ஜாதிக்குக் கொண்டு வருவார்.. இதுதான் இப்போது தர்மபுரியிலும் நடந்திருக்கிறது..! கீழ்சாதியினர் தங்களைவிட பொருளாதாரத்தில் உயர்ந்துவிட்டார்களே என்கிற பல வருட வெறியை தர்மபுரி ஜாதி வெறியர்கள் தணித்துக் கொண்டதை பார்க்கும்போது எத்தகைய வன்மம் இன்னமும் நம் மக்களிடையே இருக்கிறது என்பதை நினைத்து பயப்பட வேண்டியிருக்கிறது..! 

பிரகாஷ்ராஜின் முடிவோடு படத்தை முடித்திருக்க வேண்டிய விஷயம் சினிமாவுக்காக சமரசம் செய்யும் நோக்கில், நாயக மனப்பான்மையோடு அந்த கிளைமாக்ஸ் சண்டை காட்சியை தவிர்த்திருக்க வேண்டும்..!  அது ஒரு வணிகச் சினிமா நோக்கில் செய்யப்பட்டதாகவே படத்தின் முடிவைக் காட்டுகிறது..! உண்மையில் இத்தனை மாணவர்களும் இந்தியாவின் பல இடங்களில் இருந்தும் வந்து போராடி உண்மையை  வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டிய நேரத்தில் இந்தச் சண்டை காட்சி தேவையில்லாமல் திசை திருப்பிவிட்டது..! 

அவ்வளவு பெரிய பணக்காரரின் மருமகள், டீச்சர் வேலைக்குச் செல்வது.. பிரகாஷ்ராஜின் மனைவி ஹீரோவிடம் வந்து பேசுவது.. சத்தியம் வாங்குவது.. பழனியை இதில் இழுத்துவிடுவது.. பழனி பற்றி மருமகள், ஹீரோவிடம் வந்து சந்தேகத்துடன் பேசுவது.. நாசரை கடைசிவரையில் எழுந்திருக்கவிடாமல் களத்திற்கு கொண்டு வராமலேயே தடுத்து வைத்தது.. இத்தனை சீரியஸான கதைக் களனில் அவ்வப்போது சில்லறைத்தனமாக நகைச்சுவை என்ற பெயரில் வசனங்களை பேசுவது.. இறுதியில் ஹீரோ, ஹீரோயினிடம் “நம்ம லவ் பண்ணா இந்த ஊர்ல யாராச்சும் எதிர்ப்பாங்களா?” என்று கேட்பது.. இது போன்ற காட்சிகளெல்லாம் சினிமாட்டிக்காக எழுதப்பட்டிருப்பதால் படத்தின் தன்மையை குறைத்தேவிட்டது..!

கிராமங்களில் நடக்கும் ஜாதி பிரச்சினையை அந்தக் களத்திலேயே சந்தித்து போராடி ஜெயித்த இளைஞர்கள் கூட்டம் பற்றிய படம் என்று இப்படத்திற்கு பெயர் வந்திருக்க வேண்டும்.. ஆனால் அதற்குப் பதிலாக மறைக்கப்பட்ட ஒரு உண்மையை துப்பறிந்து வெளிப்படுத்திய இளைஞர் கூட்டத்தின் கதை என்பதாக மாறிவிட்டதுதான் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் துரதிருஷ்டமான  சோகம்..!

எது எப்படியிருந்தாலும், என் உடல் மண்ணுக்கு.. என் உயிர் தமிழுக்கு என்றெல்லாம் வீர வசனம் பேசி கோடிகளில் கல்லா கட்டிக் கொண்டு ஊர் ஊருக்கு ரசிகர் மன்றங்களை வைத்து தங்களுக்குத் தாங்களே பால்குடம் தூக்கி பால் அபிஷேகம் செய்ய வைத்துக் கொண்டு.. நாட்டு நடப்புகளுக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதாக நடித்துக் கொள்ளும் சில, பல நடிப்புத் திலகங்களுக்கு மத்தியில், இந்த அளவுக்காச்சும், ஒரு சிறிய பொறியையாவது கிளப்ப வேண்டும் என்று நினைத்த நடிகர் பிரகாஷ்ராஜுக்கும், தோள் கொடுத்திருக்கும் இயக்குநர் ராதாமோகனுக்கும், வசனகர்த்தா விஜிக்கும், படக் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்..! நன்றிகள்..! 

கண் பேசும் வார்த்தைகள் - சினிமா விமர்சனம்

07-04-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட் பற்றிய உங்களது அனைத்து சந்தேகங்களுக்கும் இந்தப் படத்தில் முழு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். யாருக்காவது சிங்கப்பூரில் செட்டிலாக விருப்பம் இருப்பின் இந்தப் படத்தை அவசியம் பார்க்கவும்..!


உள்ளூரில் பேட்மிட்டன் வீரராக வலம் வரும் செந்திலுக்கு வீட்டில் மரியாதை இல்லை..! ஆனால் விளையாட்டில் பெரும் ஆர்வம்.. எதிர்வீட்டில் குடியிருக்கும் செந்திலின் பெரியப்பா, செந்திலின் அப்பாவையும், அவர் குடும்பத்தையும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் பொழப்பு கெட்ட குடும்பம் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் நேரும் ஒரு அவமானத்தை பார்த்த பின்பு, தான் இனிமேல் உழைத்து சம்பாதித்து தனது குடும்பத்தைக் காப்பாற்றுவது நல்லது என்ற முடிவுக்கு வருகிறார் செந்தில். இதற்காக இவரும் சிங்கப்பூர் பயணமாகிறார் நண்பர் வேல்முருகனுடன்..!

அங்கே நுழைந்தவுடன் எதிர்பார்த்த வேலை இல்லை.. ஆனால் அதிர்ஷ்டம் அழைக்கிறது.. சைட் சூப்பர்வைஸரின் வீட்டில் குக்கிங் உதவியாளராகவும், அவருக்கு தொழில் உதவியாளராகவும் வேலையில் அமர்கிறார் செந்தில். தனது பெரியப்பா மகனை சந்திக்கப் போய் அங்கேயும் ஒரு அவமானத்தை சந்திக்க நேர்கிறது.. “மவனே இதே சிங்கப்பூர்ல நானும் சிட்டிஸனாகி அதுக்கப்புறம் உன்னை வைச்சுக்குறேன்” என்று சவால் விடுகிறார் செந்தில்..!

சிங்கப்பூர் சிட்டிஸனாக பிளான் செய்யும்போது இனியா வந்து மாட்டுகிறார். தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்தாலும் “தான் சிங்கப்பூர் சிட்டிஸன். இங்கே ஒரு துணிக்கடைக்கு ஓனர்..” என்றெல்லாம் பொய் சொல்ல.. இவரை காதலித்து கல்யாணம் செய்ய விரும்பி செந்தில் இவரைப் பின் தொடர்கிறார்.. இந்தக் காதல் ஜெயித்ததா..? செந்தில் சிங்கப்பூர் சிட்டிஸன் ஆனாரா? என்பதுதான் கடைசி கதை..!

முடிந்த அளவுக்கு கதையை நேர்மையாகவே கொண்டு போயிருக்கிறார்கள்..! செந்திலுக்கு ஒரு பேக்கிரவுண்டு கதை.. இனியாவுக்கும் ஒன்று.. என்று இந்த இரண்டுமே லாஜிக் எல்லை மீறாதவை..! பின்னாடியே துரத்தித் துரத்தி சைட் அடிக்கும் செந்திலுக்கு போனில் ஐ லவ் யூ சொல்ல முனையும்போது அது ராங் நம்பராகி தமிழ்நாட்டில் இருக்கும் மாமன், நான் கடவுள் ராஜேந்திரனுக்கு செல்வது மிக சுவாரஸ்யம்..! 
பேட்மிட்டன் பிளேயர் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்டிக் கொண்டு, அதிலேயும் பெரிய லெவலுக்கு வர நினைக்கும்போது காதல் வந்து கெடுத்துவிடுவதை உருக்கமாகவே சொல்லியிருக்கிறார்..! அந்த இறுதிக்கட்ட சிங்கப்பூர் காட்சிகளை படமாக்கியவிதம் நன்றாகவே இருக்கிறது..!

செந்திலை இன்னமும் கொஞ்சம் மோல்டு செய்யலாம்..! அடுத்தடுத்து நல்ல இயக்குநர்களிடத்தில் சிக்கினால் ஒரு ரவுண்டு வரலாம்..! இனியா பொண்ணு.. நிறைய காட்சிகளில் அழுது கொண்டேயிருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை..! ஆனால் பாடல் காட்சிகளில் ரொம்பவே பிடித்திருக்கிறது.. இவரைவிட இவரது தோழியாக வரும் அந்த ஜாங்கிரி பொண்ணு.. செம டைமிங் சென்ஸ் ஆக்ட்டிங்..! எந்த இடத்திலும் சோடை போகவில்லை..  சைட் சூப்பர்வைஸராக வருபவர் திருமணம் மற்றும் உறவுகள் பற்றி கிளாஸ் எடுப்பது ரசனையானது.. மனிதர் நன்றாகவே நடித்திருக்கிறார்.. புதுமுகம் என்கிறார்கள்.. வாழ்த்துகள்..! 

சிங்கப்பூரிலேயே படமாக்கப்பட்டிருந்தாலும், ஒரே பகுதியிலேயே பல காட்சிகள் திரும்பத் திரும்ப வருவதைத் தவிர்த்திருக்கலாம்..! சிங்கப்பூரில் இவ்வளவுதான் இடமா..? இதற்கு முன் வந்த படங்களிலேயே நிறையவற்றை காட்டியிருக்கிறார்களே..? ப்ரியாவைச் சொல்லலாம்..! 

பாடல்கள் ஹூம்.. எழுதியிருக்கிறார்கள்.. இசையமைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான். அவைகள் மனதில் உட்கார்கிறதா என்றெல்லாம் யார் பார்த்தார்கள்..? ஒளிப்பதிவாளர் அதிக சிரமம் எடுக்காமல் படமாக்கியிருக்கிறார்.. ஒரே கோணத்தில் சில காட்சிகள் மீண்டும் மீண்டும் வருகின்றன. தவிர்த்திருக்கலாம்..! இறுதியில் வரும் கடத்தல் சம்பவங்களும்.. ஓட்டமும் ரசிக்க வைக்கிறது என்றாலும், ராஜேந்திரனின் அந்த கிளைமாக்ஸ் டிவிஸ்ட் எதிர்பாராதது..! 

சிறந்த பேட்மிட்டன் பிளேயர்.. சிங்கப்பூருக்காக விளையாடினால் ஈஸியாக சிட்டிஸன் கிடைத்துவிடும் என்பதற்காக இருக்கும்போது காதல் விளையாடி அவரை இங்கே அழைத்து வந்துவிட.. இந்த இடத்தில் இந்தப் படமும் சாதாரண சீரியல் கதை போலாகி கொட்டாவிவிட வைத்துவிட்டது..! அங்கேயே நடப்பதுபோல நிகழ்த்தியிருக்கலாம்.. இருவரின் தவறுகளை, இருவரும் சொன்ன பொய்களை அங்கேயே உதிர்ப்பதைபோல காட்டியிருக்கலாம்தான்..! ஆனாலும் காதல் போராடி ஜெயித்தால்தான் தியேட்டர்களில் வெற்றி கிடைக்கும் என்பதையே அனைத்து இயக்குநர்களும் இன்னமும் நம்பிக் கொண்டிருப்பதால் இவரை மட்டும் குத்தம் சொல்லி புண்ணியமில்லை..!

ஒரு முறை பார்க்க கூடிய படம்தான்..!

அழகன் அழகி - சினிமா விமர்சனம்



07-04-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தச் சினிமாவின் முதல் 10 நிமிட காட்சிகளை பார்க்காதவர்களை கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்ல வேண்டும். சிம்புவின் லன் ஆன்தம் பாடலுக்கு எதிராக பவர் ஸ்டார் என்று காமெடியனை வைத்து பாடவும், ஆடவும் வைத்திருக்கிறோம்.. யூ டியூபில் 4 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அத்தனை சூப்பர் ஹிட்டாகிவிட்டது பாடல். அதேபோல இந்தப் படமும் ஹிட்டாகும் என்று ஒரு நம்பிக்கையோடு சொன்னார் படத்தின் இயக்குநர் நந்தா பெரியசாமி..! அந்த 4 லட்சம் பேரும் இந்தப் படத்தை பார்த்திருந்தால் இந்நேரம் இது சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கும்.. ம்ஹூம்..! ஆசை யாரை விட்டது..?

நந்தா பெரியசாமி.. உண்மையிலேயே பெரிய படிப்பாளி.. இலக்கிய வாசனை உள்ளவர்.. புத்தக விரும்பி.. அவர் மீதான முதல் அபிப்ராயம் மாத்தி யோசியில் டமால் டுமீலானாலும் இதில் கொஞ்சமாவது மீட்டெடுப்பார் என்று நினைத்துதான் போனேன்.. மறுபடியும் கத்தி நம் கழுத்தில்தான்..!



புதுமுக ஹீரோ ஜாக் தனது ஆட்களான சாம்ஸ், ஆர்த்திகணேஷ் சகிதமாக கிராமங்களுக்கு டிவி அவுட்டோர் வேன் மூலமாக வருகிறார். அவருடைய டிவி சேனலில் புதுமையான நிகழ்ச்சியொன்றை செய்ய இருப்பதாகவும், அதில் நடிக்க விருப்பமுள்ளவர்களைத் தேடியே வந்ததாகவும் சொல்லி, தலைக்கு 1500 ரூபாய் வசூலித்து அவர்களை புகைப்படமெடுத்து தள்ளுகிறார்கள்..!

காரைக்குடி அருகே நாட்டரசன்கோட்டை அவர்கள் வரும்போது அந்த ஊரில் ஒரு வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் ஹீரோயின் ஆருஷி இவர்களிடம் சிக்குகிறார். தனது முகம் டிவியில் தெரிய வேண்டும் என்பதற்காக தன்னை தேர்வு செய்யும்படி சொல்கிறார். ஹீரோ ஜாக்கோ, ஹீரோயினை மனதுக்குள் விரும்பி அதை அவரிடம் சொல்லாமலேயே தவிர்த்து வருகிறார்..!

ஹீரோயினை அந்த வீட்டில் இருப்பவரான ஜி.எம்.குமாரின் மகனுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சிகள் நடக்க ஆருஷீயை அழைத்துக் கொண்டு தப்புகிறது டிவி டீம். இன்னொரு பக்கம் இந்த டிவி டீமே டுபாக்கூர் டீம் என்பதை இவர்கள் முன் ஆடிப் பாடி காண்பித்த இன்ஸ்பெக்டர் ரத்தினவேலுக்குத் தெரிய வர.. அவரும் கொலை வெறியோடு இவர்களைத் தேடி வருகிறார். ஜி.எம்.குமாரின் தம்பி ரவி மரியாவும் தனது அடியாட்களுடன் இவர்களைத் துரத்த இறுதியில் இவர்கள் என்னவாகிறார்கள் என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!

தன்னம்பிக்கை உள்ள அனைவருமே அழகனும், அழகியும்தான் என்கிறார் இயக்குநர். இதைச் சொல்லத்தான் இத்தனை ரவுண்டடித்திருக்கிறார். கிராமங்களில் ஆட்களை தேர்வு செய்வதில் காட்டப்படும் கிளிப்பிங்ஸ்களில் ஒன்றிரண்டை தவிர மற்றவைகள் சுவாரஸ்யமே இல்லை..! இதில் பலமாக கத்திரியைப் போட்டிருக்கலாம்..! 

இன்னொரு பெரிய மைனஸ் ஹீரோ ஜாக்கும், ஹீரோயின் ஆருஷியும்.. ஆருஷியின் திக்கித் திணறி பேசும் சின்னத்தனமானப் பேச்சு கொஞ்ச நேரத்திலேயே போரடித்துவிடுகிறது.. ஜாக், டைமிங்காக வசனம் பேசி, நடித்திருந்தாலும் ஏதோ ஒன்று இடிக்கிறது..! முழுமையாக ரசிக்க இயலவில்லை..!

சாம்ஸ் மற்றும் ஆர்த்தி கணேஷின் அலம்பல்களும், அரட்டைகளையும் பார்த்தால் இன்ஸ்பெக்டர் ரத்தினவேலுவின் வெறி சரியானதுதான் என்று தோன்றுகிறது..! சென்னையில் வேலையில் பொறுப்பெடுத்தவர் தனி ஆளாக இவர்களைத் தேடி ஊர், ஊராக அலைவதையும், ரகசியமாக இந்தக் கேஸை டீல் செய்வதாகவும் இவர் சொல்வது இயக்குநர் எழுதிய பயங்கரமான லாஜிக்..! 

பிரபலமான சேனல் ஒன்றின் பெயரை வைத்து ஊர் ஊராகப் போய் தேர்வு நடத்துவது இப்போதெல்லாம் சாத்தியமானதுதானா..? ஒரு நாளில் சென்னைக்கு தெரிந்துவிடாது.. இவ்வளவு பெரிய லாஜிக் ஓட்டையெல்லாம் இருக்கும்போது மற்றதெல்லாம் நமக்கெதுக்கு..? இடைவேளைக்கு பின்புதான் அந்தப் பகுதி டிவி சேனல் ரிப்போர்ட்டருக்கு தகவல் போய் அவர் தலைமைக்குத் தகவல் கொடுத்து அது போலீஸுக்கு போகிறதாம்..! 

இதைவிட கொடுமையான காமெடி.. இந்த டீமை தேவகோட்டை காட்டுக்குள் இருக்கும் தீவிரவாதிகள் சந்திக்கிறார்களாம்.. அவர்களும் ஒரு கதை சொல்கிறார்கள். அவர்களது குடும்பத்தினரை போலீஸார் கொன்றதால் இவர்களும் போலீஸை கொன்றார்களாம்.. இவர்களுடன் ஒரு அம்மாயி.. அந்தம்மாவை பார்த்தவுடன் ஒரு குத்துப் பாட்டு இருக்குன்னு நினைச்சோம்.. அது அப்படியே..!  எதிர்பாராமல் எதிர்பாராத இடத்தில் இருந்து கிடைக்கும் உதவியைப் போல இந்தத் தீவிரவாதிகள் உதவியோடு இந்த டீம் தப்பிப்பதாகவும் சொல்வதெல்லாம் பழம் கதை.. இதுக்குத்தான் இத்தனை பில்டப்பா..!

ஒரேயொரு பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது..! ‘மழைத்துளி நீயே’ என்ற இந்த மெலடி பாடலை படமாக்கியவிதமும் அழகுதான்.. இது ஒன்றுதான் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.. பிரபு தயாளின் ஒளிப்பதிவும் ஓகேதான்..! வேறொன்றுமில்லை..!

இறுதியில் சோகத்தை திணித்து வைத்தால்தான் மக்கள் ரசிப்பார்கள் என்று நினைத்தாரோ என்னவோ..? ஆருஷிக்கு அவ்வளவு பெரிய  சோகத்தைக் கொடுத்து, அதனை சமன்படுத்த நினைக்கும் காட்சியும் நமக்குத்தான் சோதனையாக இருக்கிறது..! தன்னம்பிக்கை உள்ள அனைவருமே அழகன், அழகிதான் என்ற அழகான கான்செப்ட்டை வைத்து எப்படியோ கதை செய்திருக்கலாம்.. நல்லதொரு வாய்ப்பை மிஸ் செய்துவிட்டார் இயக்குநர் நந்தா பெரியசாமி..!

கீரிப்புள்ள - சினிமா விமர்சனம்

07-04-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்த் திரையுலகில் இருக்கும் ஒவ்வொரு அப்பனும், தங்களுடைய பிள்ளைகளும் சினிமாவுலகத்தில் புகழ் பெற வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கவில்லையெனில், தாங்களே படமெடுத்து மகன்களை அறிமுகப்படுத்துகிறார்கள். தலையெழுத்து நன்றாக இருந்தால், அந்த மகன் முன்னேறலாம்.. இல்லாவிடில் இடத்தைக் காலி செய்யலாம்..!

2 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த கிரீப்புள்ளையில் தன் மகன் யுவனை ஹீரோவாக அறிமுகப்படுத்தப் போவதாகச் சொன்னார் அப்பாவும், இயக்குநருமான பெரோஸ்கான். ஆனால் அதற்குள்ளாக சாட்டை படத்தில் வாய்ப்பு கிடைத்து யுவனுக்கு நல்ல பெயர் கிடைத்துவிட.. இன்னும் கொஞ்சம் நாள் கழித்து முதல் படத்தை ரிலீஸ் செய்தால் கொஞ்சம் பெயர் கிடைக்கும் என்ற நப்பாசையில் சமீபத்தில்தான் இதனை திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்..  இதில் அப்பா இயக்குநரின் திறமை அவ்வளவாக குறிப்பிடும்படி இல்லாததாலும் சாட்டையில் கிடைத்த பெயரை இதில் கோட்டைவிட்டுவிட்டார்களே என்று வருத்தப்படுகிறார்கள் யுவனின் அன்பர்கள்..!


நண்பர்களுடன் சேர்ந்து சின்னச் சின்ன திருட்டுக்களைச் செய்து  தப்பித்து வரும் கீரிப்புள்ளையான யுவனுக்கு பள்ளியில் படிக்கும் திஷா மீது காதல்..! திஷாவுக்கு இவரது திருட்டுத்தனமும் தெரியுமாம்.. அப்படியும் காதலாம்..! திருடன், கொள்ளைக்காரன், கொலைகாரன் இவர்களைத்தான் சினிமாவில் காதலிப்பார்கள் என்ற இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்றுபடியான காதல் இவர்களுடையது..!

ஒரு சந்தர்ப்பத்தில் தாதா சரவணனிடமிருந்து இன்னொரு தாதா பெரோஸ்கானை காப்பாற்றுகிறார் யுவன். இதனால் தன்னிடம் எப்போது வேண்டுமானாலும் உதவி கேட்டு வரலாம் என்று சொல்லியிருக்கிறார் பெரோஸ்கான். யுவனின் நண்பனின் அக்கா திருச்சியில் ஒரு வேலைக்காக சென்று லாட்ஜில் தங்கியிருக்க.. அன்றைய இரவில் அந்தப் பகுதி இன்ஸ்பெக்டர் ஒருவனால் கற்பழிக்கப்படுகிறார். சோகம் தாங்காமல் அக்கா தற்கொலை செய்து கொள்ள..! விஷயம் யுவனுக்குத் தெரிய வருகிறது..!

கொதித்தெழும் யுவன் தனது படைகளுடன் சென்று அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை போட்டுத் தள்ளுகிறார். அதே நேரத்தில் திஷாவின் அம்மா அவளுக்கு வேறொரு பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு நாள் குறிக்கிறார். இன்ஸ்பெக்டரை போட்டுத் தள்ளிய இடத்தில் தனது செல்போனை தொலைத்துவிட்ட யுவன், அதனை எடுக்க திரும்பி வரும்போது போலீஸின் கண்ணில்பட்டு எஸ்கேப்பாகுகிறார்..!

காதலி திஷாவை இழுத்துக் கொண்டு ஓடும்போது போகிற வழியில் இருக்கும் ஒரு கோவிலில் தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்கிறார்.. பெரோஸ்கானிடம் அடைக்கலமாகிறார்..! பெரோஸ்கான் ஒரு பக்கம் பாசத்தைக் கொட்டினாலும் திஷாவின் மேல் காமத்துடன் இருக்கிறார். இது தெரியாமல் யுவன் அவருடன் இருக்க.. சரவணன் ஒரு பக்கம் பெரோஸ்கானை போட்டுத் தள்ள முயற்சிக்க.. போலீஸ் இன்னொரு பக்கம் யுவனைத் தேடி வர.. பயங்கர அடிதடி மோதலுடன் படத்தை பயங்கர தலைவலியுடன் முடித்திருக்கிறார்கள்..! போலீஸ் யுவனை மட்டுமே தேடுகிறார்களே ஒழிய, இந்தச் சண்டையில் சாகும் அடியாட்களை பற்றி ம்ஹூம்.. ஒரு கவனிப்பும் இல்லை..! 

முதல் படம் என்பதாலும், இயக்கம் சுமார் என்பதாலும் யுவனின் நடிப்பைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.. ஆனாலும் அப்பனும், புள்ளையும் போடும் சண்டையும், பறந்து பறந்து தாக்கும் காட்சிகளும் ரொம்பவே ஓவர்..! இனி சாட்டை அன்பழகன் போல நல்ல இயக்குநர்களிடத்தில் சிக்கினால் மட்டுமே இவர் பிழைப்பார்..!

திஷா.. சிரிக்க மட்டுமே தெரிகிறது..! டான்ஸ் காட்சிகளில் யுவனைவிட நன்றாகவே ஆடியிருக்கிறார்..! இவருக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைத்தால் அது உலக மகா அதிசயம்தான்..! அந்த லட்சணத்தில்தான் இவரது அழகு ஸ்கிரீனில் காட்டப்பட்டிருக்கிறது..! ம்ஹும்.. ஒளிப்பதிவாளரை என்னவென்று சொல்வது..? எந்தப் பாடலும் மனதில் நிற்கவில்லை..! யுவனும், திஷாவும் அக்கா-தம்பி போல பளீச்சென்று இருக்கும் பாடல் காட்சிகள் காமெடியாகத்தான் இருக்கிறது..!

மகனை புரமோட் செய்வது அப்பாவின் உரிமைதான்..  அதுக்காக இப்படியா..? வேறு யாராவது ஒரு இயக்குநரிடம் கொடுத்து வேறு கதையில் எடுத்துக் கொடுத்திருக்கலாம்.. இத்துடன் பெரோஸ்கான் இந்த முயற்சியைக் கைவிடுவது அவரது மகனது எதிர்காலத்துக்கு நல்லதாகத்தான் இருக்கும்..!



சென்னையில் ஒரு நாள் - சினிமா விமர்சனம்

03-04-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!




ஹிதேந்திரன். வித்தியாசமான இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் நம்மால் மறந்திருக்கவே முடியாது..! அந்தச் சம்பவம் நடக்கும்வரையில் நமக்கு யாரென்று தெரியாத ஹிதேந்திரன், தன் சாவிற்குப் பின்பு ஒரு புதிய விழிப்புணர்வு, தமிழகத்தில் பரவுவதற்கு காரணமாக அமைந்துவிட்டான்..!

2008 செப்டம்பர் 20-ம் தேதியன்று தனது வீட்டருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான் ஹிதேந்திரன். அங்கே அவனது மூளை இறந்துபோய் இருதயம் மட்டுமே துடித்துக் கொண்டிருப்பதாகவும், இனி அவன் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் சொல்லப்பட்டது..! ஹிதேந்திரன் தாய், தந்தை இருவருமே மருத்துவர்கள்தான். சூழ்நிலையை புரிந்து கொண்டார்கள்..! 

உடல் உறுப்பு தானம் என்ற மருத்துவம் சார்ந்த தான விஷயத்தை அவ்வளவாக அறிந்திராத அந்தச் சமயத்தில், தீயில் வெறுமனே வெந்து போய் சாம்பலாகிவிடும் அந்த உடல் உறுப்புகள் இன்னும் பலருக்கும் வாழ்க்கையைக் கொடுக்குமே என்ற எண்ணத்தில் ஹிதேந்திரனை கருணைக் கொலை செய்துவிட்டு அவனது உடல் உறுப்புக்களை தானமாக வழங்க அனுமதி தந்தனர் அவனது பெற்றோர்கள்..!

அதன் பேரில் நல்ல நிலையில் இருந்த ஹிதேந்திரனின் கண்கள், கல்லீரல், இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள் ஆகியவை அகற்றப்பட்டன..! கண்கள் சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கும், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் ஆகியவை ஆயிரம்விளக்கு அப்பலோ மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதயம் மட்டுமே சில மணி நேர இடைவெளியில் வேறு உடலில் பொருத்தப்பட்டாக வேண்டும் என்கிற கட்டாயம் இருந்ததினால், உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராக இருப்பவர்கள் யார் என்று சென்னையில் தேடப்பட்டது. கடைசியாக சென்னை முகப்பேரில் இருக்கும் டாக்டர் செரியரின் இருதய மருத்துவமனையில் இருந்த பெங்களூரைச் சேர்ந்த தமிழ் சிறுமி அபிராமி கண்டறியப்பட்டாள்.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக தயார் நிலையில் இருந்த அபிராமிக்கு ஹிதேந்திரனின் இதயத்தை பொருத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேனாம்பேட்டை அப்பலோவில் ஹிதேந்திரனின் உடலில் இருந்து அகற்றப்படும் இதயத்தை, முகப்பேரில் இருக்கும் செரியனின் மருத்துவமனைக்கு மிக விரைவில் எப்படி கொண்டு போய்ச் சேர்ப்பது என்று யோசித்தார்கள் மருத்துவர்கள்..!

காவல்துறையின் உதவியின்றி இதனை விரைந்து தனியாக செயல்படுத்த முடியாது என்று முடிவு செய்து காவல்துறைக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுடைய உதவியுடன் தேனாம்பேட்டையில் இருந்து முகப்பேர் வழி நெடுகிலும் டிராபிக்கை நிறுத்திவைத்து, 14 கிலோ மீட்டர் தூரத்தை, வெறும் 11 நிமிடங்களில் கடந்து சென்று செரியன் மருத்துவமனையில் இதயத்தை ஒப்படைத்தது காவல்துறை.. அந்தச் சிறுமி அபிராமிக்கு இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு சாதனை படைத்த அந்தச் சம்பவத்தைத்தான் 2011-ம் ஆண்டு மலையாளத்தில் ‘டிராபிக்’ என்ற பெயரில் படமாக எடுத்து சூப்பர் ஹிட்டாக்கினார்கள்..!

முறையாக தமிழில்தான் இதனை முதலில் எடுத்திருக்க வேண்டும். நமது இயக்குநர்களுக்கு இதையெல்லாம் யோசிப்பதற்குக்கூட நேரமில்லாத காரணத்தினால் மலையாளத்தில் எடுத்த டிராபிக்கை தமிழில் ரீமேக் செய்யக்கூட தயங்கினார்கள்.. இப்போது ரேடன் பிக்சர்ஸ் தைரியமாக தனது கம்பெனி பெயரில் தயாரித்திருக்கிறார்கள்..! கூடவே இவர்கள் செய்த ஒரு நல்ல காரியம்.. மலையாள டிராபிக்கில் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஷாகித் காதரையே இயக்க வைத்திருப்பதுதான்..! 

டிவி மீடியா உலகில் தானும் ஒரு பிரபலமான செய்தியாளராக வர பெரும் விருப்பம் கொண்டிருக்கும் கார்த்திக், நடிகர் பிரகாஷ்ராஜை பேட்டியெடுக்க அவசரமாக செல்லும்போது.... நான்கு வாலிபர்கள் காரோட்டி வரும் ஒரு பெண்ணை தங்களது பைக்கில் துரத்தி வர.. அவசரத்தில் அந்தப் பெண் கார்த்திக் மீது மோதிவிட.. நண்பன் சிறு காயத்துடன் தப்பிக்க.. கார்த்திக் மட்டும் தலையில் அடிபட்டு சுயநினைவை இழக்கிறார்.. மூளைச் சாவு என்று மருத்துவமனையில் சொல்கிறார்கள்..!

அதே நாள் நடிகர் பிரகாஷ்ராஜின் மகள் திடீரென்று ஏற்பட்ட இதயக் கோளாறு காரணமாக மருத்துமனையில் சேர்க்கப்பட அந்தப் பெண்ணுக்கு உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம்.. கார்த்திக் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் இதயம் மாற்று தேவை பற்றிய செய்தி வர.. கார்த்திக்கின் அப்பா, அம்மாவிடம் முதலில் அனுமதி கேட்கிறார்கள். மருத்துவரான அவரது அப்பா முதலில் மறுத்தாலும், பின்பு ஒத்துக் கொள்கிறார்..!

இப்போது இருக்கும் ஒரே பிரச்சனை.. ஒய்.எம்.ஆர். ரோட்டில் இருக்கும் குளோபல் மருத்துவமனையில் இருந்து, சிறுமி இருக்கும் வேலூர் மருத்துவமனைக்கு இதயத்தை எப்படி கொண்டு செல்வது என்பதுதான்.. 170 கிலோமீட்டர் தூரத்தை ஒன்றரை மணி நேரத்தில் கடந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தை பார்த்து போலீஸ் கமிஷனர் சரத்குமார் முதலில் தயங்க.. பின்பு விஜயகுமார் போனில் பேசும்.. "இன்னிக்கு நீங்க செய்யப் போற ஒரு விஷயம் நாளைக்கு சரித்திரமா நிக்கப் போகுது.." என்று வார்த்தைகளைக் கேட்டு மனம் மாறி ஒத்துக் கொள்கிறார்..!

தனது குடும்பத் தேவைகளுக்காக கை நீட்டி லஞ்சம் வாங்கி ஆன் தி ஸ்பாட்டிலேயே பிடிபட்டு வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்பு ஒரு அரசியல்வியாதியின் சிபாரிசில் மறுபடியும் வேலையில் சேர்ந்திருக்கும் டிராபிக் கான்ஸ்டபிள் சேரன் இந்த ஓட்டத்தைத் தான் செய்வதாக முன் வருகிறார்..! எப்படி இதனைச் சாதிக்கிறார்கள் என்பதுதான் மிச்ச மீதிக் கதை..!

மலையாள இயக்குநர்.. அதே படத்திற்கு இணை இயக்குநராக மலையாளம், இந்தி இரண்டிலுமே பணியாற்றியவர் என்ற தகுதியில் ஷாகித் அக்தர்.. படத்தின் தன்மை கெடாமல் கடைசிவரையிலும் விறுவிறுப்பு குறையாமலும் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்..! வெல்டன்..!

தான் காதலிக்கும் பெண்ணுடனான தனது உறவை வீட்டாருக்குத் தெரியாமல் வைத்திருந்தும், அந்தப் பெண் மருத்துவமனைக்கு வரும் காட்சியும், ஜெயபிரகாஷ் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து வீட்டுக்கு வரும்படி அழைப்பதும் மனதை ஏதோ ஒன்று செய்தது..! இதயத்தை எடுத்துக் கொண்டு கார் செல்வதும், அது தங்களைக் கடந்து போனதை பார்த்துவிட்டு பெற்றவர்கள் ஒருவருக்கொருவர் அழுது ஆறுதல் சொல்லும் அந்தக் காட்சியும் மனதைவிட்டு இன்னமும் நீங்கவில்லை..! லஷ்மி ராமகிருஷ்ணனும், ஜெயபிரகாஷும் கச்சிதமான நடிப்பைக் காட்டியிருக்கிறார்கள்..!

பிரசன்னா, இனியா, பிரசன்னாவின் நண்பன் கதை ஊகிக்கவே முடியாததுபோல் கொண்டு போயிருப்பதும்,  தன்னை போலீஸ் கண்டுபிடித்துவிட்டதாக தவறாக யூகித்து பிரசன்னா செய்யும் அந்த டைவர்ஸனும், அதனைத் தொடர்ந்த படபடக்கும், தடதடக்கும் காட்சியமைப்புகளும் படத்திற்கு மிகப் பெரிய பலம்.. இடைவேளைக்கு பின்பான அந்த சேஸிங்குதான் பலமே.. தூரத்தைக் குறைத்து கடப்பதற்காக இடையில் வரும் ஒரு ஊருக்குள் நுழைந்து வெளியேறும் சேஸிங்கும், இதற்கு நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் உதவுவது போலவுமான காட்சிகளெல்லாம் சிறந்த திரைக்கதைக்கு ஒரு எடுத்துக்காட்டு..!

நடிகர் பிரகாஷ்ராஜ், இதில் நடிகராகவே வருகிறார்..! பிரமோஷனுக்காக அழைக்க வேண்டி தயாரிப்பாளர்கள் வீட்டு வாசலில் வந்து காத்திருப்பது.. அலட்சியமாக அவர்களைப் புறக்கணித்துவிட்டு செல்லும் பிரகாஷ்ராஜை போலத்தான் நிறைய நடிகர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்..! இயக்குநருக்கு இதற்காகவே ஒரு பாராட்டு..! நடிகர்களின் அலட்டல், பந்தா, தங்களை மிகைப்படுத்தி தாங்களே பேசிக் கொள்வது என்பதையெல்லாம் அவரது ஒரு பேட்டி மூலமாகவே வெளிக்கொணர்ந்திருப்பது ரசிக்கும்படிதான் இருந்தது..!  “அவ பொறந்த நாளாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்று ராதிகா பொறுமுவதும், பிரகாஷ்ராஜ் பதில் சொல்லத் தெரியாமல் நிற்பதும் படத்திற்கு சோகத்தை கூட்டுகிறது..! “நான் யாருன்னு சொன்னியா..? மந்திரிக்கு போனை போடு..” என்று எகத்தாளமிக்க பிரகாஷ்ராஜின் கேரக்டருக்கு மிகக் கச்சிதமான வசனங்கள்..! வசனகர்த்தா அஜயன்பாலாவுக்கு எனது வாழ்த்துகள்..! மனிதர் இதில் தனியே மிளிர்கிறார்..! 

டிராபிக் கான்ஸ்டபிளாக வரும் சேரன் இதில் அளவோடு நடித்திருக்கிறார். ச்சும்மா வந்து நின்னு பார்த்தாலே போதும்.. பேசினாலே போதும் என்று இயக்குநர் சொல்லியிருக்கிறார் போலும்.. இறுதியாக, பணியை நிறைவுடன் செய்து முடித்துவிட்ட திருப்தியில் ஒரு சின்னதாக சிரிப்பு சிரிக்கிறார் பாருங்கள்.. இதுவே போதும்தான்..! இவருக்கு ஜோடி ஆட்டோகிராப் மல்லிகா.. அந்தச் சூழலை திரும்பத் திரும்ப நினைத்துப் பார்ப்பதும், அதற்குப் பின்பு அந்தக் குடியிருப்பில் அவருக்கு கிடைக்கும் மரியாதைக் குறைவை நினைத்துப் பார்த்து வருந்துவதுமான அந்தக் காட்சிகள்தான் சேரனுக்கு மிகப் பெரிய பலம்.. இயக்குநர் கச்சிதமான காட்சிகள் மூலம் இதனை நகர்த்தியிருக்கிறார்..!

படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் ஒளிப்பதிவு நிஜமாகவே மலையாளக் கரையோரம் நடக்கும் கதையாகவே நமக்குக் காட்டியிருக்கிறது..! கார் சேஸிங்கில் பிரசன்னாவின் மிரட்டலுக்குட்பட்டு கார் போகும் திசையையும், வேகத்தையும் பதிவு செய்திருக்கும் விதம், படத்தின் எடிட்டருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் சபாஷ் போடச் சொல்கிறது..! அடுத்தடுத்த சோகக் காட்சிகளையும்,  ஆபரேஷனுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் அந்த பயணக் காட்சிகளில் மிக அழகாக கத்திரி போட்டு ரசிக்க வைத்திருக்கிறார்கள்..! வெல்டன் எடிட்டர்..!

ஒரு சிட்டி போலீஸ் கமிஷனர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் ஒரு சாதாரண டிராபிக் கான்ஸ்டபிள் எப்படி கலந்து கொண்டார் என்பதற்கான காரணங்களை நாம் யூகிக்கவே முடியாத அளவுக்கு அந்தக் காட்சியை ஒரு எதிர்பார்ப்புடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்..! இந்த ஒரு மைனஸை அவருக்காக நாம் விட்டுக் கொடுப்பது படத்திற்கு நாம் கொடுக்கும் பாராட்டாகவே இருக்கட்டும்..!

ஹிதேந்திரனின் மரணம் பற்றிய செய்திக்குப் பிறகு தமிழகத்தில் கொஞ்சமேனும் உடல் உறுப்பு தானங்கள் நடந்திருக்கின்றன.. இப்போது இந்த வெற்றி திரைப்படத்தின் மூலம் இந்த விழிப்புணர்வு இன்னமும் கூடும் என்றே நான் நினைக்கிறேன்..! ஒரு திரைப்படத்தின் மூலம் என்ன செய்ய முடியும் என்பதற்கு இத்திரைப்படத்தை சான்றாகக் கொள்ளலாம்..! 

அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்..! 

கேடி பில்லா கில்லாடி ரங்கா - சினிமா விமர்சனம்

01-04-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பசங்க, வம்சம், மெரீனா என்று வேறு வேறு எளிய கதைகளில் யதார்த்தமான நகைச்சுவையுடன், சுவாரஸ்யமான திரைக்கதையுடன், அழுத்தமான இயக்கத்துடன் நம்மைச் சந்தித்த இயக்குநர் பாண்டிராஜ், தற்போதைய டிரெண்ட்டுக்கு ஏற்றாற்போல் திசைதிரும்பி புல் அண்ட் புல் காமெடி கச்சேரியை கொடுத்திருக்கிறார்..!

இரண்டு மணி 10 நிமிடங்கள் உங்களுக்காக.. அதையும் தாண்டிய கடைசி 10 நிமிடங்கள் எனக்காக இந்தப் படத்துல எடுத்திருக்கிறேன் என்று பேட்டிகளில் கூறிய பாண்டிராஜின் கூற்று சரியானதுதான் என்றாலும், படத்தைக் கொடுத்திருக்கும்விதம் அந்தக் கடைசி பத்து நிமிடத்தை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது என்றுதான் நான் சொல்வேன்..!


இரண்டு வெட்டி ஆபீஸர்கள்.. அரசியலில் நுழைந்து கவுன்சிலராகி பணம் பார்க்க வேண்டும் என்பதே ஆயுட்கால லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள்..! அவர்களது கனவு பலித்ததா இல்லையா என்பதுதான் கதை..! 

இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் அவர்களை பிரதிபலிக்கும் ஹீரோக்களாக சிவகார்த்திகேயன் மற்றும் விமல். சிவகார்த்திகேயனின் அப்பாவான இயக்குநர் மனோஜ்குமார், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்.. விமலின் அப்பாவான டெல்லி கணேஷ் சொத்து சேர்த்து வைத்திருந்தாலும், தன் மகன் சொந்தக் காலில் நின்று வாழ்க்கையில் ஜெயித்துவிட மாட்டானா என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்.. இரண்டு அப்பாக்களின் அறிவுரைகளும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்க.. வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடத்தின் மூலம் இவர்கள் உண்மையை உணர்ந்து வாழ்க்கையைத் துவங்கும்போது இருவரது குடும்பத்திலும் ஏற்படும் இழப்பையும், சோகத்தையும் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்..!

இவர்களுக்குள் ஏற்படும் காதலைக்கூட மிக இயல்பாக ஆரம்பித்துவைத்து படம் முழுக்க வரும் நகைச்சுவையில் இவர்களது காதல் கொடுக்கும் டைமிங்சென்ஸ் காமெடியும் படத்துக்கு மிகப் பெரிய பலம்..! இந்தக் காதல் டிராக்குகள்தான் தியேட்டர்களில் அதிகமாகவே கைதட்டலை வாங்குகின்றன..! விமல்-பிந்து மாதவி ஜோடியைவிடவும் சிவகார்த்திகேயன்-ரெஜினா ஜோடி கொஞ்சம் கூடுதலாகவே ஸ்கோர் செஞ்சிருக்காங்க..!

சிறந்த நடிகையாக தெரிய வேண்டுமெனில் சிறந்த இயக்குநரால் ஆட்டுவிக்கப்பட வேண்டும் என்பது சினிமா நியதி. 'கண்ட நாள் முதல்' படத்தில் கேட்பாரற்று கிடந்த  ரெஜினாவை இப்போது தமிழகமே பாப்பா என்கிறது..! பாண்டிராஜுக்கு நீதான் தேங்க்ஸ் சொல்லணும் பாப்பூ..! தர்மத்தின் தலைவன் ரஜினி ஸ்டைலில் கார்த்திகேயன் செய்யும் அலப்பறைதான் மிக அதிகம்..! டைமிங்சென்ஸ் உள்ள செய்தித் தொகுப்பாளராகவும் வேலை பார்த்த அனுபவம் இருக்க.. ஏற்ற இறக்கத்துடன் எங்கே கடி ஜோக்காக உருமாறுமோ அதே இடத்தில் அதே பாணியில் வசனங்களை பேசியிருக்கிறார் சிவா.. மிகச் சிறந்த தேர்வு இவர்தான்..! 

விமல்.. இனியும் முழித்துக் கொள்ளாவிட்டால் ரொம்பவும் கஷ்டம்தான்..! பிந்துமாதவியிடம் அடி உதை வாங்கிவிட்டு அதனை வெளியில் சொல்லாமல் நாகரிகமாகச் சொல்லி சமாளிக்கின்ற காட்சியில் மட்டுமே இவரை நடிகராகப் பார்க்க முடிந்தது.. இறுதிக் காட்சியில் டெல்லி கணேஷிடம் பேசும்போதுகூடவா அப்படியே இருக்க வேண்டும்..? இது போன்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டேயிருந்தாலும், போகப் போக ரசிகர்களுக்கு போரடித்துவிடும்..!

தனது மூலதனமான கண்ணை வைத்தே சீன் வைத்த பாண்டிராஜுக்கு பிந்துமாதவியும் ஒரு தேங்க்ஸ் சொல்லணும்..! நொடியில் இவர்களது பேச்சும், காதலும் வளர்வதும், அதற்கு கண்ணை வைத்தே கொண்டு சென்றிருக்கும் திரைக்கதையும் சூப்பர்..! இவருடைய குடும்பத்தினரின் கேரக்டர் ஸ்கெட்ச்.. பிந்து மாதவியின் அப்பா போடும் கண்டிஷன்கள்.. அவரது அம்மாவின் பேச்சுக்கள் என்று நகைச்சுவையை கலந்து கட்டியடித்திருக்கிறார் இயக்குநர்..!

வீட்டோடு மாப்ளையாகி வேலை வெட்டியில்லாமல் ஊரைச் சுத்தும் சூரி போன்று நாட்டுல நிறைய பேர் இருக்கத்தான் செய்றாங்க..! எப்போதெல்லாம் விமலும், சிவகார்த்திகேயனும் போரடிக்கத் துவங்குகிறார்களோ அப்போதெல்லாம் சூரிதான் இடையில் புகுந்து நம்மையும் சமாளிக்கிறார்.. அவர்களையும் சமாளிக்கிறார்..! மனைவியிடம் 'வாடா' 'போடா' என்ற பேச்சையும் கேட்டுவிட்டு அப்படியும் கடைசியாய் பணத்தை வாங்கிக் கொண்டே வெளியேறும் அந்தப் ‘பொறுப்பு’ள்ள இளைஞன் கேரக்டராகவே இருந்து காட்டியிருக்கிறார் சூரி...!  

இவ்வளவு சிறந்த நகைச்சுவை வசனங்களை எழுதும் திறமையுள்ள பாண்டிராஜ் இதனை தேக்கிவைத்துவிடாமல் மீண்டும் தனது நகைச்சுவை ராஜபாட்டையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றே விரும்புகிறேன்.. இதன் உச்சக்கட்ட காமெடி, ஓட்டு எண்ணிக்கை அன்று நடக்கும் அடிதடி காட்சிதான்..! இதைக்கூட இவ்வளவு நகைச்சுவையாக எடுக்க முடியுமா என்று ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்..!

எப்போதெல்லாம் இளைஞர்கள் தியேட்டர்களில் சோர்வடைவார்களோ அந்தந்த இடங்களில் எல்லாம் அவர்களுக்காகவே ஸ்பெஷல் பூஸ்ட்டாக காமெடி வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார்..! பாராட்டுக்கள்..! இதேபோல் பிந்து மாதவியும், விமலும் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள முனையும் காட்சிகளெல்லாம் வயிறே புண்ணாகிவிட்டது..! எப்படிங்கய்யா இப்படியெல்லாம் ஐடியா வருது..?

மானம், ரோஷம், வெக்கமெல்லாம் நண்பர்களுக்குள் பார்க்கவே கூடாது என்று    ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டதால் எந்தவொரு லாஜிக்கையும் நாமும் பார்க்காமலேயே இருக்கலாம்..! இறுதிக் காட்சியில் மனோஜ்குமாரின் அந்த விபரீத முடிவும், அதன் உண்மைத்தன்மை பற்றி பின்பு  விவரிக்கும் காட்சியும் நூறு சீரியல்களுக்கு சமம்.. 500 எபிசோட்களில் சொல்லி முடிக்க வேண்டிய கதையை கடைசி 10 நிமிடங்களில் மட்டுமே சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர்..!

அரசியல் காட்சிகளில் இத்தனை அழுத்தமாக கூட்டத்தைக் கூட்டி படத்தைக் கொடுத்திருக்கும் பாண்டிராஜின் சிரத்தையை பாராட்டத்தான் வேண்டும்..! வனவாசத்தில் வரும் ஒரு காட்சியை இதில் நைஸாக புகுத்தியிருக்கும் பாண்டிராஜுக்கு எனது பாராட்டுக்கள்..! கவுன்சிலராக பிளான்போட்டு ஒவ்வொரு ஓட்டாக கவர் செய்யும் அந்த நகைச்சுவைகள் ரொம்பவே சுவாரஸ்யம்.. இவர்கள் கொடுத்த பில்டப்பை பார்த்தபோது நிஜமாகவே ஜெயித்துவிடுவார்களோ என்ற எண்ணத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது..! விழுந்தது வெறும் 31 ஓட்டுகள் என்பதையும், அதற்கு விமல் கொடுக்கும் சமாதானத்தையும் இப்போது நினைத்தாலும்..????? 

கேர்லெஸ்ஸாக வேட்பாளர் விண்ணப்பத்தை பதிவு செய்திருப்பது.. இதனைத் தெரிந்துகூட விமல் முகத்தில் தெரியும் அந்த சாந்த சொரூபம்.. அதைவிட அதிர்ச்சி..! வேட்பாளர் பரிசீலனையில் வேட்பாளர் உடன் இருக்க வேண்டு்ம் என்பதுகூடவா இவர்களுக்குத் தெரியாது..! நினைத்த மாத்திரத்தில் டாஸ்மாக்கில் பழைய பாட்டில்களை விமல் அண்ட் கோ கையகப்படுத்துவது என்பதெல்லாம் படத்திற்காக திணிக்கப்பட்ட அவசர கதைகள் என்று தெரிவதால் மன்னிக்கலாம்..!

எல்லாம் சரிதான்.. ஆனால் எனக்குள் இந்தப் படம் கொடுத்த ஒரு ஏமாற்றமும் மிகப் பெரியது.. இன்றைய இளைய சமுதாயத்தில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களே மது அருந்துவது பரவி வரும் வேளையில் இப்படி நிமிடத்துக்கு நிமிடம் தண்ணியடிப்பது போன்ற காட்சிகளை வைத்திருக்கத்தான் வேண்டுமா..? அது அவசியம்தானா..? ஏதோ ஒரு காட்சி.. இரண்டு காட்சியென்றால் ஓகே.. படம் முழுவதிலும் அப்படியே என்றால், படம் பார்க்கும் சிறார்களுக்கு இதெல்லாம் சகஜம்தானே என்ற எண்ணமும் வந்துவிடாதா..? கடைசியாக டைட்டில்போடும்போது பாண்டிராஜும் சேர்ந்து தண்ணியடிப்பதுபோல காட்சிகள் வர.. ரொம்பவே வெறுத்துப் போனேன்..! இவ்வளவு சிறந்த நகைச்சுவைப் படத்திற்கு விழுந்த திருஷ்டிப் பொட்டுவை போல இந்தக் காட்சியும் அமைந்துவிட்டது..! 

குடியினால் வரும் தீமைகள் பற்றி இரண்டு அப்பன்களுமே படத்தில் பேசவில்லை.. சொல்லவில்லை.. இயக்குநரும் சொல்லவில்லை.. ஆக, குடியை நியாயப்படுத்தும்விதமாக அமைந்துவிட்டது இப்படம்..! இத்தனை குடிகார காட்சிகளைக் கொண்ட இப்படத்திற்கு நியாயமாக ‘ஏ’ சர்டிபிகேட்டுதான் கொடுத்திருக்க வேண்டும்.. ஆனால் ‘யு’ கொடுத்து புண்ணியத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறது சென்சார் போர்டு..! இதற்கு இந்த போர்டு இருந்தாலென்ன..? இல்லாமலேயே போனால்தான் என்ன..?