அதே கண்கள் - சினிமா விமர்சனம்

27-01-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
கலையரசன் கதாநாயகனாகவும், ஜனனி ஐயர், ஷிவதா நாயர் இருவரும் நாயகிகளாகவும் நடிக்க, பால சரவணன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், ‘ஊமை விழிகள்’ படத்தின் இயக்குநரான அரவிந்தராஜ், இந்தப் படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் அபிஷேக், சஞ்சய், லிங்கா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சண்டை பயிற்சி – ஹரி தினேஷ், கலை – விஜய் ஆதிநாதன், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், ஒளிப்பதிவு – ரவிவர்மன் நீலமேகம், இசை – ஜிப்ரான், பாடல்கள் – உமாதேவி, பார்வதி, படத் தொகுப்பு – லியோ ஜான்பால், வசனம் – முகில், கதை, திரைக்கதை, ரோகின் வெங்கடேசன், முகில், தயாரிப்பாளர் – C.V.குமார், இயக்கம் – ரோகின் வெங்கடேசன். இவர் இயக்குநர் விஷ்ணுவர்த்தனிடம் இணை இயக்குநராகப் பயின்றவர்.
1967-ம் ஆண்டு ஏவி.எம். தயாரிப்பில் ரவிச்சந்திரன், காஞ்சனா நடிப்பில் ஜாவர் சீதாராமனின் கதை வசனத்தில் ஏ.சி.திருலோகசந்தரின் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘அதே கண்கள்’.
சஸ்பென்ஸ், திரில்லர் டைப் படங்கள் அதிகமாக தமிழில் வராத அந்தக் காலத்தில் வெளியான இந்தப் படம், ஏவி.எம்.மிற்கு மிகப் பெரிய லாபத்தையும், தமிழ்ச் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம் என்பதையும் பெற்றுக் கொடுத்த்து.
அதே பெயரில் வெளிவந்திருக்கும் இந்தப் படமும் இந்தாண்டின் துவக்கத்தில் வந்திருக்கும் வெற்றிப் படம் என்பதோடு தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு பெருமைமிக்க படம் என்கிற பெயரையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

ஹீரோ கலையரசன் கண் பார்வையற்றவர். தனது 15-வது வயதில் ஏற்பட்ட திடீர் காய்ச்சலினால் கண் பார்வையை இழந்தவர். அப்படியே சோர்ந்துவிடாமல் மேலும், மேலும் படித்து முன்னேறி இப்போது இரவு நேர ரெஸ்ட்டாரெண்ட்டை சொந்தமாக நடத்தி வருகிறார்.
இவரது நீண்ட நாள் தோழி ஜனனி ஐயர். குடும்ப நண்பி. இவர் கலையரசனை ஒரு தலையாக காதலித்து வருகிறார். ஆனால் இதற்கு மறுப்பும் சொல்லாமல் சம்மதமும் தெரிவிக்காமல் இருக்கிறார் கலை. இவரது அம்மாவிற்கு கலையரசனுக்கும், ஜன்னிக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் கலையரசன் சம்மதம் சொல்லாததால் அது இழுபறியில் உள்ளது.
இந்த நேரத்தில் ஒரு நாள் இரவில் கடையைப் பூட்டிவிட்ட நேரத்தில் கலையரசனுக்கு அறிமுகமாகிறார் ஷிவதா. தெருவோரத்தில் ஒரு பெரியவர் பசியினால் வாடுவதாகவும், அவருக்குக் கொடுப்பதற்கு ஏதாவது உணவு இருக்கிறதா என்று பரிவோடு கேட்கிறார் ஷிவதா.
ஷிவதாவின் கனிவான பேச்சு.. மரியாதையான நடத்தை கலைக்கு ஒரு புதிய உணர்வை அவருக்குள் தோற்றுவிக்கிறது. இதன் பின்னர் ஷிவதா தினம், தினம் அங்கே வருகிறார். அவருக்காக மிச்சமிருக்கும் உணவுகளை எடுத்துக் கொடுக்கிறார் கலை. இருவரும் பழகத் துவங்க.. அது கலைக்கு மட்டும் காதலாக உருவெடுக்கிறது.
தன் காதலை வெளிப்படுத்த கலை காத்திருக்கும் அந்த நாளில் ஷிவதா கண்களில் கண்ணீருடன் அவரைத் தேடி வருகிறார். தனது அக்காவின் திருமணத்திற்காக வாங்கிய கடனைக் கட்டாததால் கடன்காரர்கள் தங்களை மிரட்டுவதாகவும், வீட்டுக்கு வந்து தங்களை கேவலமாகப் பேசுவதாகவும் சொல்லி அழுகிறார்.
இவரது பேச்சில் மனமிறங்கிய கலை, தான் அந்தப் பணத்தைக் கொடுத்து உதவுவதாகச் சொல்கிறார். ஷிவதா சந்தோஷமாக திரும்பிச் செல்கிறார். அடுத்த சிறிது நேரத்திலேயே கலையரசன் ஒரு சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.
இந்த விபத்தினால் அதிர்ஷ்டவசமாக அவருடைய கண் விழிப் படலம் மீண்டும் செயல்படத் துவங்க இன்னொரு ஆபரேஷனை செய்து கண் பார்வையைப் பெறுகிறார் கலை. இந்த நேரத்தில் ஷிவதாவை நினைத்து ஏங்குகிறார் கலை.
ஷிவதாவும் தன்னைத் தேடி வரவில்லை என்பதால் அவருக்கு என்ன ஆனதோ என்று கவலைப்படுகிறார் கலை. போலீஸிடம் புகார் கொடுக்காமல் தேடுகிறார். ஷிவதா கிடைக்காத வருத்தத்தில் இருக்கும் கலையரசனிடம் அவருடைய அம்மா இதகமாகப் பதமாகப் பேச கலையரசன் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். உடனேயே ஜனனிக்கும், கலையரசனுக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து நிச்சயத்தார்த்தமும் முடிகிறது.
இந்த நேரத்தில் ஷிவதாவின் அப்பா கலையைத் தேடி வந்து தனக்குக் கடன் கொடுத்தவர்கள் ஷிவதாவை கடத்தி வைத்திருப்பதாகச் சொல்லி அழுகிறார். இதனால் தன் வீட்டில் இருந்த நகைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் ஷிவதாவை காப்பாற்ற முனைகிறார் கலை.
அங்கே நடக்கும் களேபரத்தில் ஷிவதாவின் அப்பா குண்ட்டிபட்டு கீழே விழுக.. கலையும் தாக்கப்படுகிறார். இது வெளியில் தெரிந்தால் ஷிவதாவின் அப்பா சாவுக்கு தான் காரணமாகிவிடுவோமே என்றெண்ணி இதனை மூடி மறைக்கிறார் கலை.
இதையறியும் ஜனனி கலையுடனான திருமண நிச்சயத்தார்த்தத்தை முறித்துக் கொண்டு போய்விடுகிறார். ஆனாலும் கலையரசனுக்குள் ஷிவதாவை கண்டறிய வேண்டும் என்கிற ஆசை நெருப்பாய் எரிகிறது. இந்த நேரத்தில் கன்னியாகுமரியில் நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் ஷிவதாவின் அப்பா இறந்து போயிருப்பதை டிவிக்களில் பார்க்கிறார் கலை.
உடனேயே கன்னியாகுமரிக்கு ஓடுகிறார் கலை. அங்கே கான்ஸ்டபிளாக இருக்கும் பால சரவணனின் துணையுடன் அந்த வழக்கைத் துப்புத் துலக்க முயல்கிறார். இறுதியில் அவருடைய ஷிவதாவை அவர் கண்டறிந்தாரா? இல்லையா? என்பதுதான் இந்த சஸ்பென்ஸ், திரில்லர் படத்தின் சுவையான திரைக்கதை.
‘தெகிடி’ என்னும் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த பாணியிலேயே இந்தப் படத்தையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் சி.வி.குமார். அவருக்கு எங்களது நன்றி.
ஒரு சுவையான சஸ்பென்ஸ், திரில்லருக்கு என்ன தேவையோ அதை மிகச் சரியாக 2 மணி நேரப் படத்தில் கலவையாக கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரோஹன் வெங்கடேசன். இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் பாசறையில் இருந்து வெளியில் வந்தவர் என்பதால் நிறைய தொழில் நுட்ப வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை ஹை ஸ்டைலிஷாக கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள் இயக்குநரே..!
கண் பார்வையற்றவராக வரும் நேரங்களில்தான் கலையரசனின் நடிப்பு மிகவும் ரசிக்க வைக்கிறது. மிகக் குறைவான நேரமே அந்த கேரக்டர் என்றாலும் கலையரசனுக்கு இது மிகவும் முக்கியமான படம்தான்.
ஜன்னி ஐயர் வழக்கம் போல ஒரு காதலியாக நடித்திருக்கிறார். நிச்சயத்தார்த்தம் முடிந்த நிலையிலும் ஷிவதாவை தேடி சென்று அடி வாங்கி பரிதாபமாக வந்த கலையரசனிடம் ஆவேசமாகப் பேசி தனது கல்யாணத்தை தானே ரத்து செய்துவிட்டு போகும் வேகத்தில் மனதைத் தொட்டுள்ளார்.
அதேபோல் மனம் கேட்காமல் திரும்பவும் கன்னியாகுமரிக்கு வந்து கலையரசனுடன் இணைந்து துப்பு துலக்கும பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது சுகம். வெல்டன்.
படத்தின் மிக முக்கிய தூண் வில்லியாக நடித்திருக்கும் ஷிவதா நாயர்தான். இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் நமக்கு தெரியும் முன்பாக இவரா இப்படி என்று கேட்கும் அளவுக்கு ஒரு சராசரி காதலியாக, மகளாக.. அப்பாவியாய் அப்படியொரு நடிப்பைக் கொட்டியிருக்கிறார்.
அதற்கு நேர்மாறாக வில்லி கேரக்டரில் வரும்போது பதைபதைக்க வைக்கிறார். ஹோட்டலில் புதிய ஏமாளியிடத்தில் கண்ணீர் விட்டு அழுது பேசும்போது நொடிக்கொரு முறை தனது குணாதிசயத்தை மாற்றி, மாற்றிக் காட்டி அப்ளாஸ் வாங்குகிறார்.
நகைக் கடை காட்சி சில நிமிடங்களே என்றாலும் அதில் அப்படியொரு நடிப்பு. தன் வாழ்க்கையின் போக்கை மாற்றிய விஷயத்தை கோபத்துடன் சொல்லி தனக்குத்தானே அனுதாபம் தேடிக் கொள்ளும் காட்சியிலும், அப்பனும், மகனும் தனக்குத் தெரியாமல் ஏதோ சதி வேலை செய்திருப்பதை அறிந்து அதனை கண்டறிய காரை ஓட்டிக் கொண்டே அவர் செய்யும் வில்லத்தனத்திலும் சபாஷ் போட வைத்திருக்கிறார்.  
குளோஸப் காட்சிகளில் அப்படியொரு அழகு. தமிழ் இயக்குநர்கள் இவரை இன்னும் நல்லவிதமாக பயன்படுத்தலாமே..? நடிகைகளே இல்லை என்று தமிழே தெரியாதவர்களை வைத்துக் கொண்டு மல்லுக்கட்டுவதைவிடவும், இவர் மாதிரியான நடிகைகளை நடிக்க வைத்தால், இயக்குநர்களுக்கான வேலையை இவர்களே பெரிதும் குறைத்து வைப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
தனக்கு மிகப் பெரிய பெயர் கிடைக்கப் போகிறது.. பாராட்டு கிடைக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பில் வழக்கிற்கு பெரிதும் உதவும் பால சரவணனின் நடிப்பும், டைமிங் காமெடியும் படத்தின் பிற்பாதியை மேலும் சுவாரஸ்யமாக்கியிருக்கின்றன.
ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவு பலே ரகம். முதல் காட்சியில் இருந்து முடிவுவரையிலும் இமை கொட்டாமல் ஸ்கிரீனை பார்க்க வைக்கிறது. பாராட்டுக்கள். காதைக் கிழிக்கும் இசையெல்லாம் இல்லாமல் இதமாக, மெல்லியதாக இசையமைத்து தந்திருக்கும் ஜிப்ரானுக்கும் ஒரு நன்றி..! பாடல்கள் தேவைப்படாத படம் என்பதால் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமில்லை. ஆனாலும் ஷிவதா வரும் காட்சிகளில் பின்னணியில் ஒலிக்கும் தீம் மியூஸிக் பரபரக்க வைத்திருக்கிறது எனலாம்.
படத் தொகுப்பாளர் லியோ ஜான் பாலின் உதவியால் படத்தின் வேகம் குறையாமல் பரபரப்பின் வீச்சு குறையாமல் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இறுதிக் காட்சியில் கண் பார்வையற்று இருந்தபோது கலையரசனுக்கு பெரிதும் உதவிய நுண்புலன்களின் உதவியோடு அவர் சண்டையிடுவதும், ஷிவதா நாயரின் சண்டை காட்சிகளும் எதிர்பாராதது. ஆனாலும் ரசிக்க வைத்திருக்கிறது.
சின்ன பட்ஜெட்டில் அனைவரையும் திருப்திபடுத்தும்வண்ணம் சிறந்த கதை, திரைக்கதை, இயக்கத்தோடு வந்திருக்கும் இந்தப் படம் இந்தாண்டின் முதல் வெற்றிப் படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த அதே கண்களை காணவும் கண்கள் கோடி வேண்டும். பார்க்கத் தவறாதீர்கள்..! 

ஜல்லிக்கட்டுக்குத் தடை - வழக்கு கடந்து வந்த பாதை..!

20-01-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



கடந்த 2006-ல் இருந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். 

இந்த வழக்கு கடந்த வந்த பாதையை பார்ப்போம்.

2004-ம் ஆண்டு விலங்குகள் நல வாரியம், ரேக்ளா ரேஸை தடை செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த நீதியரசர் இப்ராஹிம் கலிபுல்லா, "அது பாரம்பரியமான விழா. அதைத் தடை செய்ய முடியாது..." என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்தார்.

2005-ல் ஜல்லிக்கட்டில் பலியான ஒருவரின் தந்தை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடுத்தார். 

2006-மார்ச் 29-ல் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து துணைத் தலைவரான கே.முனுசாமி தேவர் என்பவர் ரேக்ளா ரேஸ் நடத்த வேண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்கிறார். 

இந்த இரண்டு ரிட் மனுக்களும் நீதிபதி பானுமதி முன்பு விசாரணைக்கு வந்தன. கோரிக்கையோ ‘ரேக்ளா ரேஸை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்பது. ஆனால் நீதிபதி பானுமதியோ, சம்பந்தமே இல்லாமல் ‘ரேக்ளா ரேஸ் பந்தயங்களை எப்படி அனுமதிக்கலாம்...? இதில் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன. விலங்குகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் சட்டத்திற்கு எதிரானது இந்தப் போட்டிகள். எனவே ரேக்ளா ரேஸ், எருது ஓட்டப் பந்தயம் மற்றும் ஜல்லிக் கட்டு ஆகியவற்றை தடை செய்வதாக’ திடீரென்று அறிவித்தார்.

இது விலங்குகள் நல ஆர்வலர்களே எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி. ஏனென்றால் விலங்கு நல அமைப்புகள் ஏற்கனவே எடுத்த பல்வேறு முயற்சிகள் பலனளிக்காதபோது, இது எதிர்பாராமல் அவர்களுக்கு கிடைத்த பரிசு.

2007-ஜனவரியில் இது தொடர்பாக நடைபெற்ற அப்பீல் மனுவில் நீதிபதிகள் எலிபி தர்மாராவ், ஜனார்த்தன ராஜா அடங்கிய அமர்வு, நீதிபதி பானுமதியின் தீர்ப்புக்கு தடை விதித்து அந்த ஆண்டு மட்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதித்தது. 

இந்த வழக்கின் மேல்முறையீட்டின்போதுதான் விலங்குகள் நல வாரியம்(AWBI ) இந்த வழக்கில் தலையிட்டு உள்ளே நுழைந்தது. 

2007-மார்ச் - இதே உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதி பானுமதியின் தீர்ப்பை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறது. கிராம விளையாட்டுக்களை முழுமையாகத் தடை செய்ய முடியாது. ஆனால் நெறிமுறைப்படுத்தலாம் என்று கூறி இதற்காக ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் இயற்றுமாறு மாநில அரசுக்கு உத்தரவிடுகிறது.

2007 - ஜூலை - 9 - இந்தத் தீர்ப்பை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் ஜல்லிக்கட்டு பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

2007 - ஜூலை 27-ல் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

2007-ல் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. 

2008 - ஜனவரி - காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் மேலும் பல நிபந்தனைகளோடு ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது.

2008-ல் மேனகா காந்தி தொடுத்த இன்னொரு பொது நலன் வழக்கினால் ஜல்லிக்கட்டிற்கு உச்சநீதிமன்றம் மீண்டும் தடை விதித்தது. ‘வேண்டுமானால் ரேக்ளா ரேஸ் நடத்திக் கொள்ளுங்கள்’ என்று பெருந்தன்மையுடன் அனுமதிக்கிறார்கள்.

2009-ல் தி.மு.க. அரசு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தை இயற்றுகிறது.

2009-ல் தமிழக அரசு அளித்த உறுதிமொழி மற்றும் தமிழக சட்டசபையில் இயற்றிய ஒழுங்கு முறை சட்டத்தை ஏற்று ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தற்காலிகமாக அனுமதியளித்தது.

2010 - நவம்பர் 25-ல் உச்சநீதிமன்றம் மீண்டும் ஒரு இடைக்கால ஆணையைப் பிறப்பித்தது. இதன்படி, “காளைகள் இந்திய விலங்குகள் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். விலங்குகள் நல வாரியத்தின் இரண்டு பிரதிநிதிகள் ஜல்லிக்கட்டை கண்காணிக்க வேண்டும். கால்நடை மருத்துவர்கள் குழு காளைகளை பரிசோதித்து சான்றிதழ் வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் 2 லட்சம் முதல் 5 லட்சம்வரையிலும் வைப்புத் தொகை செலுத்த வேண்டும்...” என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

2011 ஜனவரியில் கூடுதல் நிபந்தனைகள் மற்றும் புதிய வரைமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2011 ஏப்ரல் மாதம் விலங்குகளை மையமாக வைத்து நடத்தும் விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்தது.

2011 - ஜூலை - நடிகை ஹேமமாலினி ‘காளைகளை காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்’ என்று அப்போதைய சுற்றுச் சூழல் துறை அமைச்சரான ஜெய்ராம் ரமேஷுக்கு ஒரு கடிதம் எழுதினார். இதனை பல விலங்குரிமை பிரபலங்களும் ஆதரித்தார்கள்.

2011 - ஜூலை 11 - நடிகை ஹேமமாலினியின் கடிதத்தைத் தொடர்ந்து மிருக வதைச் சட்டம் 1960-ன் கீழ் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, குரங்கு போன்ற விலங்குகளோடு ஆறாவதாக காளையையும் காட்சிப் பொருளாக வைத்து, வித்தை காட்டுவதை மத்திய அரசு தடை செய்து அரசாணை பிறப்பித்தது.

(இதே ஆண்டுதான் நடிகை ஹேமமாலினிக்கு PETA PERSON OF THE YEAR விருதும் அளிக்கப்பட்டது. சென்ற ஆண்டு நடிகை சன்னி லியோனிக்கு இந்த விருது அளிக்கப்பட்டது என்பது உப தகவல்.)

2012 - ஜனவரி - ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி விலங்குகள் நல வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

2012 - ஜனவரி - மதுரை, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அனுமதி வழங்கியது. 

2013 - ஜனவரி - ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடையில்லை என்றும், போட்டிகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை உத்தரவிட்டது.

2013 -ஜனவரி - இந்த உத்தரவை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது. 

2014 பிப்ரவரி - ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தடை கோரி விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்த இந்த ஜல்லிக்கட்டு வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றும்படி உச்சநீதிமன்றமே உத்தரவிட்டது.

2014 மே 7-ல் - சிவில் வழக்கு எண் 5387 2014, SLP எண் 11686 2007 ரிட் மனு 145, மற்றும் 2011 மனுதாரர்கள் விலங்கு நல வாரியம், மற்றும் நாகராஜா மற்றும் சிலர் மீதான வழக்கில் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் பினாகி சந்திரகோஸ் அடங்கிய உச்சநீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், தி.மு.க. அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு முறைப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்து, ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக தடையும் விதித்து 102 பக்க தீர்ப்பினை வழங்கியது.

(அந்தாண்டு இறுதியில் நீதிபதி ராதாகிருஷ்ணனுக்கு பீட்டா அமைப்பு 2014-ம் ஆண்டின் சிறந்த மனிதர் என்ற விருதினை  வழங்கியது என்பது வேறு விஷயம்.) 

அதில், 2011-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி  மத்திய சுற்று சூழல் துறை அமைச்சரான ஜெயராம் ரமேஷ் பீட்டா மற்றும் விலங்கு நல வாரிய அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து காளையை வன விலங்கு காட்சி பட்டியலில் சேர்த்து வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு, மேலும் 2013-ல் விலங்கு நல வாரிய அமைப்பை சேர்ந்த மணிலால், மற்றும் அபிஷேக், மாவட்ட ஆட்சியாளர் முன்னிலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் நீதிமன்ற ஆணை மீறப்பட்டு காளைகளை துன்புறுத்திய புகைப்படம், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்பது உறுதியாகிறது. 

இதனை நீதிமன்றம் அனுமதிக்காது என்று கூறி ஜல்லிக்கட்டு, ரேக்ளா ஓட்டப் பந்தயம் போன்ற விளையாட்டுகள் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுவதாகத அறிவித்தது. அது குற்றமாகவும் கருதப்பட்டு தீர்ப்பு வழங்கியது.

மேலும் இந்தக் காட்சிப்படுத்தும் பட்டியலில் மாற்றமோ, திருத்தமோ செய்ய விரும்பினால் மத்திய அரசும், விலங்குகள் நல வாரியமும் பீட்டா அமைப்பை கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2014 - மே 19 - ஜல்லிக்கட்டு மீதான இந்தத் தடையை நீக்கக் கோரி தமிழக அரசு மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

2016 - ஜனவரி 7 - தமிழக அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலால் தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசு, காளையை காட்சிப்படுத்தப்பட்ட வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்கியதாக அறிவித்ததோடு, ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்றும் அறிவித்தது. மேலும், ஜல்லிக்கட்டு, மற்றும் காளை தொடர்புடைய விளையாட்டுகள் அனைத்தும் மாநில அரசின் விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

2016 - ஜனவரி 12 - மத்திய அரசின் இந்த ஆணைக்கு, உடனடியாக பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியத்தின் தலைவரான என்.ஜி.ஜெயசிம்மா ஆகியோர் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இடைக்கால தடை வாங்கினார்கள். 

மத்திய அரசு இந்த விஷயத்தில் விலங்குகள் நல வாரியத்தை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்பதால் இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாமல், “மத்திய அரசு காளையை நீக்க விரும்பினால் விலங்குகள் நல வாரியத்தோடு கலந்து பேசி அனுமதி பெற்ற பின்னர் அதனை நீக்கம் செய்யலாம்...” என்று தனது இடைக்காலத் தீர்ப்பில் கூறியது.

இந்த வழக்கு விசாரணைக்காக மத்திய அரசிடம் அனுமதி கோராமல், தன்னிச்சையாக உச்ச நீதிமன்றத்தை அணுகியதற்காக விலங்கு நல வாரியத்தின் தலைவர் ராம் மெஹர் கார்ப்பிற்கு 2016 மார்ச் 28-ம் தேதியன்று மத்திய அமைச்சரவையில் இருந்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில் அவர் சென்ற 2016 டிசம்பர் மாதம் பதவி விலகிவிட்டார்.  ஆனாலும் மத்திய அரசு விளக்கம் கேட்ட கடிதத்தையும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டுத்தான் ஓடியிருக்கிறார்.

இந்த நீதிமன்றத் தடைக்கு சில நாட்களுக்கு முன்பாக 2015 டிசம்பர் 15-ம் தேதி  ஜல்லிக்கட்டை தடை செய்த விலங்குகள் வாரியத்தின் தலைவரான என்.ஜி.ஜெயசிம்மாவுக்கு தனது ஆதரவுக் கடிதத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுதியனுப்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2016 - நவம்பர் 16 - தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

2017 - ஜனவரி 12 - விரைவில் தீர்ப்பு வழங்குமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

2017 - ஜனவரி 18 - இளைஞர்களின் போராட்டத்தைச் சுட்டிக் காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு குறிப்பிட்டபோது, இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் நாங்கள் தலையிட முடியாது என்று கை விரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

2017 - ஜனவரி - 19 -தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்கள் குறித்து வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ராஜா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தபோது, “சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுங்கள்...” என்று கை காட்டியது உச்சநீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக ஜல்லிக்கட்டு என்பது இயல்பிலேயே “மிருக வதையுடன் கூடிய ஒரு விளையாட்டுதான்...” என்று தீர்ப்பளித்து விட்டது. ‘மிருக வதை’ என்கிற பெயரில்தான் முன்பு நீதிபதி பானுமதியும் இதைத் தடை செய்தார். 

எனவே இப்போது இதை எதிர்கொள்ள வேண்டுமென்றால் அவசர சட்டத்தின் வழியாகத்தான் செய்ய வேண்டும். 

சரி.., அதை யார் பிறப்பிக்க வேண்டும்..? 

மிருகவதை தடுப்பு சட்டம் மத்திய சட்டம் என்பதால் மத்திய அரசுதான் பிறப்பிக்க வேண்டும். அதுதான் உடனடியானதும் எளிதானதும்கூட. ஆனால், அது தனியாக ஒரு சட்டமாக அல்லாமல் (தமிழக அரசு இயற்றிய தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் போல அல்லாமல் ) மிருக வதை தடுப்பு சட்டத்தையே திருத்த வேண்டும். 
எப்படி செய்வது..? 

எது எல்லாம் வதை (Cruelty) என்று சொல்லும் மிருகவதை தடுப்புச் சட்டம், அதற்கு விதிவிலக்குகளும் கொடுத்துள்ளது.

11. (3) Nothing in this section shall apply to -
(a) the dehorning of cattle, or the castration or branding or nose roping of any animal in the prescribed manner, or
(b) the destruction of stray dogs in lethal chambers 20 [by such other methods as may be prescribed] or
(c) the extermination or destruction of any animal under the authority of any law for the time being in force; or
(d) any matter dealt with in Chapter I V ; or
(e) the commission or omission of any act in the course of the destruction or the preparation for destruction of any animal as food for mankind unless such destruction or preparation was accompanied by the infliction of unnecessary pain or suffering.
-----

28. Saving as respects manner of killing prescribed by religion : Nothing contained in this Act shall render it an offence to kill any animal in a manner required by the
religion of any community.

அதாவது காளைகளின் கொம்பை நீக்குவது, நாய்களைப் பிடித்து அவற்றுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்வது, தெரு நாய்களை கொல்வது, உணவிற்காக கொல்வது, மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்துவது அல்லது மத நம்பிக்கைகளுக்காக பலியிடுவது இவையெல்லாம் மிருக வதையில் வராது. எனவே இந்த விதிவிலக்கு பட்டியலில் ஜல்லிக்கட்டையும் சேர்க்க வேண்டும். இதைத்தான் மத்திய அரசு போன வருடம் செய்திருக்க வேண்டும். 

ஆனால், அதை விட்டுவிட்டு தூக்கி எறியக் கூடிய ஒரு சொதப்பலான அறிவிக்கையை பா.ஜ.க. வெளியிட்டுவிட்டு, நாங்கள் நடவடிக்கை எடுத்துவிட்டோம் என்று சொல்லி தப்பித்தது. 

2014-ம் ஆண்டு வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் operative portion இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

....77 (1) We declare that the rights guaranteed to the Bulls under Sections 3 and 11 of PCA Act read with Articles 51A(g) & (h) are cannot be taken away or curtailed, except
under Sections 11(3) and 28 of PCA Act...

அதாவது மிருகங்களுக்கான உரிமைகள், சட்டப் பிரிவுகள் 11(3) மற்றும் 28-ஐ தவிர வேறு எந்த விதத்திலும் பறிக்கப்பட முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டது. எனவே ஜல்லிக்கட்டை இந்த பிரிவுகளில் சேர்ப்பதுதான் உடனடியாக நாம் செய்ய வேண்டிய செயல். 

சரி, அப்படியே சேர்த்தாலும் அது இந்த மிருகவதை சட்டத்தின் நோக்கத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது என்று விலங்கு நல ஆர்வலர்கள் நிதிமன்றதை அணுகலாம். ஆனால், இவ்வளவு பெரிய மக்கள் போராட்டத்திற்கு பிறகு நீதிமன்றம் அவ்வாறு சொல்லாது என்பதே நிதர்சனம்.

மத்திய அரசுக்கு இதைவிட எளிதான வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா என்று தெரியவில்லை. 

கடைசியாக நடந்த விசாரணையில் தமிழக அரசு காளைகளை விலங்குகள் நலப் பட்டியலில் சேர்த்தது தவறு என்றும், அதை நீக்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறது.

ஆனால் விலங்குகள் நல வாரியமும், பீட்டா அமைப்பும் இதைக் கடுமையாக எதிர்த்துள்ளன. “ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் காளைகளை இவர்கள் கொடுமைப்படுத்துகிறார்கள். அதனால் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கக் கூடாது...” என்று இந்த இரண்டு அமைப்பினரும் சொல்லியிருக்கிறார்கள்.

மத்திய அரசோ “காட்சிப்படுத்தப்பட வேண்டிய பட்டியலில் இருந்து காளைகளுக்கு விலக்களித்தது சரிதான். ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரியமான, கலாச்சாரத் தொடர்புடைய விளையாட்டு. அது தொடர வேண்டும் என்பதே எங்களது விருப்பம்...” என்றே சொல்லியிருக்கிறது..!

ஜல்லிக்கட்டை தடை செய்த பெருமை காங்கிரஸ் அரசையே சாரும். அதில் அங்கம் வகித்த கட்சிகள் தி.மு.க மற்றும் பா.ம.க , ஆதரவளித்தது விடுதலை சிறுத்தைகள்.

ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட முதல் காரணம், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஜெயராம் ரமேஷ்தான். அவர் அந்தப் பட்டியலில் காளையை சேர்க்காமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்த நிலைமை வந்திருக்காது.

அதே சமயம் 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டை தடை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் என்கிற தமிழரும் ஒருவர் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதிசயத்திலும் அதிசயமாக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சாமி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி இந்த வழக்கில் தானும் ஒரு மனுதாரராகச் சேர்ந்துள்ளார்.  

அவரது 72 பக்க மனுவில் ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் காலம், காலமாக நடந்ததற்கான தகுந்த ஆதாரங்கள், இலக்கிய ஆதாரங்கள், புராண ஆதாரங்கள், சரித்திர ஆதாரங்கள், மற்றும் கால்நடைகளுக்கும் தமிழக மக்களுக்கும் உள்ள கலாச்சார தொடர்பு, நாட்டு விலங்கின தொடர்பு போன்றவைகளை மிக கவனமாக தொகுத்து கொடுத்துள்ளார் என்று பீட்டா அமைப்பை சேந்த ஒருவர் தொலைக்காட்சி விவாதத்தில் குறிப்பிட்டார்.

இந்த ஜல்லிக்கட்டு விழா, சமயம் சார்ந்த விழா என்ற அடிப்படைவாதத்தை உச்சநீதிமன்றத்தில் இதுவரையிலும் யாரும் முன் வைக்கவில்லை என்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள். இந்த வாதம் சட்டத்தின் முன் பலமான வாதம் என்று தெரிந்தும், இதை மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞர்கள் செய்யாததுதான் தீர்ப்பை தமிழகத்திற்கு எதிராக கொண்டு வந்திருக்கிறது என்கிறார்கள் சிலர்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம், பீட்டா மற்றும் சில விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்திருந்தனர். இதில் சிலரது சார்பாக அன்றைய காலகட்டத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர்தான் தற்போதைய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி. 

அதாவது தற்போதய மோடி அரசின் தலைமை வழக்கறிஞர். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜல்லிக்கட்டு கூடாது.. அதற்கு தடை வேண்டும்’ என்று கேட்டு உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆகவே அந்த முகுல் ரோத்தகி, எப்படி தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அரசின் சார்பாக ஆஜராகி வாதிட்டார் என்று தெரியவில்லை..

மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து நிச்சயம் பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்துக்குப் போகும். அப்போது மத்திய அரசும் நீதிமன்றத்தில் வந்து நிற்கும். அந்த கட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை ஆதரித்துதான் மத்திய அரசின் வழக்கறிஞர் வாதாட வேண்டியிருக்கும்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்த ஒரு வழக்கறிஞர், பின்னர் அதற்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்து வாதாட முடியாது. அப்படியென்றால் வேறு மூத்த வழக்கறிஞர்களை வைத்து மத்திய அரசு, தற்போது தமிழக அரசு கொண்டு வந்திருக்கும்  அவசர சட்டத்தைக் காப்பாற்ற வாதாட வேண்டியிருக்கும். 

'கடந்த இரண்டு நாட்களாக ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கே அவசர சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது என்று திரும்ப, திரும்ப முகுல் ரோத்தகி கூறுவதற்கு இதுதான் காரணம் என்கிறார்கள் சில வழக்கறிஞர்கள்.

இப்போது தீர்ப்பு தயாராக இருக்கிறது. ஒரு வாரம் கழித்து சொல்லப் போகிறார்கள். அதற்குள்ளாக இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு முடிந்துவிடும்.

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு நமக்குச் சாதகமாக வந்தால் ‘வெற்றி நமதே’ என்று சொல்லி பெருமைப்படலாம்.

தீர்ப்பு நமக்கு பாதகமாக வந்தால், மறுபடியும் இதேபோல் தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை..!

அதற்குள்ளாக மாநில அரசு அறிவிக்கவுள்ள சட்டத்தை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கியும், வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில் ஜல்லிக்கட்டினை சேர்த்தும் நடைமுறைப்படுத்தினால் உச்சநீதிமன்றம் இதனை கேள்வி கேட்கவே முடியாது..!

இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுக்கப் போகும், இந்த இரண்டு விஷயங்களும்தான் இந்தப் பிரச்சினையை நிரந்தரமான ஒரு முடிவுக்குக் கொண்டு வரும். 

காத்திருப்போம்..!

குறிப்பு : பல்வேறு தளங்களில் இருந்து தொகுத்து வழங்கப்பட்டது.


கோடிட்ட இடங்களை நிரப்புக - சினிமா விமர்சனம்

15-01-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

Reel Estate Company LLB மற்றும் Bioscope Film Framers என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபனும் நடித்துள்ளார். நடிகர் சிம்ரனும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
இசை – சத்யா, ஒளிப்பதிவு – அர்ஜூன் ஜெனா. படத் தொகுப்பு – ஆர்.சுதர்சன். எழுத்து, இயக்கம் – ஆர்.பார்த்திபன்.
‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தின் வெற்றி கொடுத்த தைரியத்தில், வித்தியாசமான கதைக்களத்தில் என்ன கொடுத்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்துவிட்டார் பார்த்திபன்.

ஒரு டிராவல்ஸ் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் பார்த்திபன். ரியல் எஸ்டேட் பிஸினஸும் சைடாக நடத்தி வருகிறார். காசு விஷயத்தில் கெட்டி. பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பவர். செல்போனை டாப்அப் செய்யக்கூட நினைக்காமல் டிராவல்ஸ் வண்டி வேண்டுமென்றால் அதற்கான எண்ணாக டிராவல்ஸ் கம்பெனியின் உரிமையாளரின் நம்பரை கொடுக்கும் அளவுக்கு சமர்த்தர். அதே சமயம் படு கஞ்சர் என்று உடன் வேலை செய்பவர்களால் அழைக்கப்படுபவர். விபத்தொன்றில் சிக்கியதால் காலில் ஊனம் ஏற்பட்டதால் சற்று விந்தி, விந்திதான் நடப்பார்.
லண்டனில் இருந்து ஒரு மிகப் பெரிய பார்ட்டியான கெவின் என்பவர் வருகிறார் என்றும், அவரை அழைத்துச் சென்று பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்து உபசரிக்க வேண்டும் என்று டிராவல்ஸ் ஓனர் சொல்கிறார். சரியென்று விமான நிலையம் சென்று கெவினை பிக்கப் செய்கிறார் பார்த்திபன்.
கெவின் என்னும் சாந்தனு சென்னையில் ஒரு பெரிய இடத்தை விலைக்கு வாங்கும் முயற்சிக்காக வந்திருக்கிறார். இங்கே சில நாட்கள் தங்கப் போகிறார். தனக்கு ஹோம்லியான இடம் வேண்டும் என்று பீல் செய்கிறார் சாந்தனு. அதற்குத் தகுந்தாற்போல் ஒரு வீடு இருப்பதாகச் சொல்லி ஒரு புத்தம் புதிய பங்களாவுக்கு அவரை அழைத்துச் செல்கிறார் பார்த்திபன்.
அந்த வீட்டைப் பார்க்கும் சாந்தனுவுக்கு வீடு பிடித்துப் போகவே அங்கேயே தங்குவதற்கு ஒத்துக் கொள்கிறார். அதே வீட்டில் வேலை பார்க்கும் பார்வதி நாயரை பார்த்தவுடன் சாந்தனுவுக்குப் பிடிக்கிறது. பார்வதி மீது மோகம் கொள்ளும் அளவுக்கு பார்வதியின் நடவடிக்கைகளும் அமைய, நிஜமாகவே சாந்தனுவுக்கு பார்வதி மீது ஒரு கண் விழுகிறது.
இந்த நேரத்தில்தான் பார்வதி தன் மனைவி என்கிறார் பார்த்திபன். இதனை எதிர்பார்க்காத சாந்தனு அதிர்ச்சியானாலும் சமாளித்துக் கொள்கிறார். ஆனாலும் இலை மறைவு காயாக, பார்வதி மீதான மோகம் சாந்தனுவுக்குள் கூடிக் கொண்டே போகிறது.
பார்த்திபன் ஒரு விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட உடல் பாதிப்பால் அவரால் இனிமேல் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாத நிலைமையில் இருக்கிறார். இதையும் சாந்தனுவிடம் சொல்கிறார்.
தொடர்ந்து பார்வதிக்கு டென்ஷனான நேரங்களிலெல்லாம் வலிப்பு நோய் வரத் துவங்குகிறது. இந்த நோய்க்கான காரணம் பார்வதிக்கு கணவனிடமிருந்து ‘எதுவும்’ கிடைக்காததுதான் என்று மருத்துவர் சொல்கிறார். இதையறியும் சாந்தனுவுக்கு பார்வதி மீது பரிதாபம் ஏற்படுகிறது.
இந்த நேரத்தில் ஒரு நாள் பார்வதியை சாந்தனு கட்டிப் பிடிக்க.. பார்வதி கோபப்பட்டு சாந்தனுவைக் கண்டிக்கிறார். தொடர்ந்து திடீரென்று பார்வதிக்கு வலிப்பு நோய் வந்துவிட.. அந்த நேரத்தில் சாந்தனு பார்வதிக்கு பெரிதும் உதவி செய்கிறார். அந்த உதவியின் தொடர்ச்சி அவர்களிடையே உடல் உறவுவரையிலும் கொண்டு போய்விடுகிறது. இதனை பார்த்திபனுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள் இருவரும். சாந்தனுவும் அந்த வீட்டில் இருந்து வெளியேறி ஹோட்டலுக்கு வந்து குடியேறுகிறார்.
அடுத்து தான் சென்னைக்கு வந்த வேலையான மிகப் பெரிய இடத்தை விலை பேசும் சாந்தனுவுக்கு புரோக்கராக நடுவில் இருந்து அந்தப் பிரச்சினையை முடித்துக் கொடுக்கிறார் பார்த்திபன். இதற்காக பார்த்திபனுக்கு புரோக்கர் கமிஷனாக மிகப் பெரிய தொகை கிடைக்கிறது. “இதனை வைத்து 4, 5 கார்களை வாங்கி வாடகைக்கு விட்டு பிழைத்துக் கொள்வேன்…” என்கிறார் பார்த்திபன். சாந்தனுவோ, லண்டனுக்கு பார்வதியையும் அழைத்துச் செல்ல நினைக்கிறார். அதற்கான சூழல் வருமென்று நம்புகிறார்.
இறுதியில் என்ன ஆனது..? சாந்தனு தான் நினைத்தபடியே பார்வதியை அழைத்துச் சென்றாரா..? பார்த்திபன் கதி என்ன..? என்பதெல்லாம் திரையில் பார்க்க வேண்டிய விஷயங்கள்.
இந்தப் படத்தின் கடைசி 10 நிமிட கிளைமாக்ஸ் டிவிஸ்ட்டுக்காக இந்தப் படத்தின் மொத்தக் கதையையும் சொல்லிவிட முடியாமல் இருப்பதுதான் படத்தின் புதுமை. ஆனால் படத்தின் கதை சொல்லக் கூடாத கதை மட்டுமல்ல.. தொடக் கூடாத கதையும்கூடத்தான்.
என்னதான் கதை என்றால்கூட இந்த உறவு முறை காதலை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அனைவருமே முகம் சுழிப்பார்கள். இப்படி முகம் சுழிக்க வைக்கக்கூடிய அளவுக்கான ஒரு கதையை, இப்படி துணிச்சலாக வைத்திருக்கும் பார்த்திபனை பாராட்டவும் மனசில்லை.
நிஜமாகவே அந்த வீட்டில் வேலை செய்யும் ஒரு பணிப்பெண்ணாகவே பார்வதியின் கேரக்டர் ஸ்கெட்ச்சை வைத்திருக்கலாம். அல்லது வேறு யாரோ ஒருவர் என்றாவது சொல்லியிருக்கலாம். பார்த்திபனின் பணம் சம்பாதிக்கும் வெறி அளவிட முடியாதது என்பதற்காக அவருடைய கேரக்டரை இந்த அளவுக்கு கீழேயிறக்கியிருக்க வேண்டுமா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
திரைக்கதையின் போக்கில் போகப் போக.. ஒரு இயல்புத் தன்மையுடன் கதை நகர்வதைப் பார்க்கும்போதே வயிற்றுக்குள் கலவரத்தை உண்டு செய்கிறது. இந்த உணர்வை தோற்றவித்திருப்பது பார்த்திபனின் அழகான இயக்கம்.
ஒவ்வொரு வசனத்திலும் ஒரு அர்த்தம்.. ஏனோதானோவென்று ஒரு வசனம்கூட படத்தில் இடம் பெறவில்லை. அத்தனைக்கும் ஒரு காரணமிருக்கிறது. ச்சும்மாவே மேடைப் பேச்சில் சிலேடையில் பின்னுவார் பார்த்திபன். படத்தில் வாய்ப்பு கிடைத்தால் ச்சும்மா விடுவாரா என்ன…? இங்கே ஒரு கோலாட்டமே ஆடியிருக்கிறார் பார்த்திபன். பாராட்டுக்கள் ஸார்..!
பார்வதி மீதான சாந்தனுவின் மோகம் மெல்ல மெல்ல காமமாக மாறுகின்றவிதமும், அந்தக் காமம் கடைசியில் காதலாக உருமாறும்விதமும் பார்த்திபனின் டச்சோடு சொல்லப்பட்டிருக்கிறது. திரைக்கதை யுக்திகளின் மூலமே முறைகேடான காதலை நியாயப்படுத்த முனைந்திருக்கிறார் பார்த்திபன். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
நடிப்பென்று பார்த்தால் சாந்தனுவுக்கு முதல் படம் இதுதான் என்று உறுதியாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு அழுத்தமாக அவரை நடிக்க வைத்திருக்கிறார் பார்த்திபன். அவர் மட்டுமல்ல.. பார்வதி நாயருக்கும்கூடத்தான். இவர் அப்படியொன்றும் அழகியல்ல. குளோஸப் காட்சிகளில் கேமிராவுக்கு ஒத்து வராத முகம்தான்.. ஆனாலும் நடிப்பில் பிழிந்தெடுத்திருக்கிறார். நடிப்பென்றெ தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார் என்றால் இதற்கு முழு முதற் காரணம் இயக்குநர்தான். பார்வதியின் நிஜமான கேரக்டரில்கூட ஒரு உண்மைத்தன்மை தெரிகிறது..
சாந்தனு நன்கு நடனமாடுகிறார். விஜய் அளவுக்கு வேகமான ஸ்டெப்புகள் அனாசயமாக வருகிறது. நடிப்பிலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார். பார்வதியை நிஜமான பேயாக நினைத்து அவர் பயப்படும் காட்சிகளில் நிஜமாகவே நம்மையும் சேர்த்தே கலவரப்படுத்தியிருக்கிறார்.
அழுத்தமான வசன உச்சரிப்பு, குளோஸப் காட்சிகளில் தெரியும் முக பாவனைகள்.. செமத்தியான நடனம்.. என பலவித்த்திலும் ஒரு ரியல் ஹீரோவுக்கான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார் சாந்தனு. இனிமேல் இதைவிட கனமான கதாபாத்திரங்களை இவரால் செய்ய முடியும் என்கிற தன்னம்பிக்கையை இயக்குநர்களுக்குக் கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள்..!
‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தின் ராசியினால் தம்பி ராமையாவும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். ‘மறதி’ என்னும் தேசிய வியாதியை தனக்குள் வைத்துக் கொண்டு பல மறதிகளால் வாழ்க்கையைத் தொலைத்து, வேலையையும் தொலைத்து கடைசியாக பார்த்திபனிடம் வடிவேலுக்கு அடுத்து மாத்து வாங்கும் வேலையைச் செய்து உச்சு கொட்ட வைத்திருக்கிறார் தம்பி ராமையா. சிம்ரனுக்கு வயதாகிவிட்டதை உணர்த்தும் கேரக்டர். பெரிதாகச் சொல்ல ஏதுமில்லை. 
அர்ஜுன் ஜனாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். படத் தொகுப்பாளரும் தனது பணியை பார்த்திபன் பாணியில் செய்திருக்கிறார். சத்யாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். ‘டமுக்காட்டலாம் டமுக்காட்டலாம்’ பாடல் மட்டுமே கேட்க முடிகிறது. பார்க்கவும் முடிந்திருக்கிறது.
படத்தில் மொத்தமே 6 பெரிய கேரக்டர்கள்தான். தன்னுடைய பாணியிலேயே அனைவரையும் நகர்த்திச் சென்று கடைசியில் ‘நச்’சென்று படத்தை முடித்திருக்கிறார் பார்த்திபன். ஆனால் நமக்குத்தான் கடைசியாக என்ன சொல்வது என்று தெரியவில்லை.
கோடிட்ட இடங்களை நிரப்புக – நிரப்பலாம்தான். ஆனால் எதனை வைத்து என்றுதான் தெரியவில்லை.

பைரவா - சினிமா விமர்சனம்

13-01-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த ‘பைரவா’ படத்தை விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரித்திருக்கிறார்.
விஜய், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில்,  ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமையா, சரத் லோகிதாஸ்வா, சதிஷ், அபர்னா  வினோத், சிஜு ரோசலின், பாப்ரிகோஷ்,  மைம்கோபி, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சுகுமார், படத் தொகுப்பு – பிரவீண், இசை – சந்தோஷ் நாராயணன், பாடல்கள் – வைரமுத்து, கலை இயக்கம் – பிரபாகரன், சண்டை பயிற்சி   –  அனல் அரசு, நடனம்  _  தினேஷ், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹமது. தயாரிப்பு மேற்பார்வை – தாண்டவ கிருஷ்ணன் & உதயகுமார், முதன்மை தயாரிப்பு நிர்வாகி – குமரன், தலைமை நிர்வாகி – ரவிச்சந்திரன்.

அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், சொந்த ஊர் என்று எந்த பின்னணியும் இல்லாமல் சென்னையில் ஒரு மேன்ஷனில் சதீஷுடன் குடியிருக்கிறார் விஜய்.
ICIC என்னும் வங்கியில் வாராக் கடனை வசூலிக்கும் வேலை பார்த்து வருகிறார். வங்கியின் மேனேஜரான ஒய்.ஜி.மகேந்திரன், தொகுதி எம்.எல்.ஏ.வின் சிபாரிசில் தண்ணீர் லாரி வாங்க மைம் கோபிக்கு 24 லட்சம் ரூபாயை கடனாக தந்திருக்கிறார். ஆனால் அந்தக் கடனுக்கு இன்றுவரையிலும் மைம் கோபி வட்டிகூட கட்டவில்லை என்பதால் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பிரச்சினையாகிறது.
ஒய்.ஜி.மகேந்திரன் மைம் கோபியை நச்சரிக்க.. அவரோ தான் கடன் தொகைக்கு பிணையாக கொடுத்த இடத்தின் பத்திரங்களோடு வந்தால் கடன் தொகையை மொத்தமாக செட்டில் செய்வதாகச் சொல்கிறார். அதை நம்பி செல்லும் ஒய்.ஜி.மகேந்திராவை ஏமாற்றி பத்திரங்களை பிடுங்கிக் கொண்டு அடித்து, அவமானப்படுத்தி அனுப்புகிறார் மைம் கோபி.
இதனை விஜய்யிடம் சொல்லும் ஒய்.ஜி.மகேந்திரன் அந்தத் தொகையை வசூலித்து தரும்படி கேட்கிறார். விஜய்யு மைம் கோபி அண்ட் கோ-விடம் அவர்கள் ஒய்.ஜி.மகேந்திரனிடம் விளையாடியதுபோலவே விளையாடி பணத்தை மொத்தமாகப் பெற்று வந்து கொடுக்கிறார்.
அடுத்த மாதமே ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுக்குத் திருமணம் நடக்கிறது. அத்திருமணத்திற்கு மணமகளின் நண்பியான மலர்விழி என்னும் கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலியிலிருந்து வருகிறார். அவருக்கு திடீரென்று ஏற்பட்ட ஒரு இடையூறில் இருந்து காப்பாற்றி மண்டபத்திற்கு அழைத்து வருகிறார் விஜய்.
கீர்த்தியைப் பார்த்தவுடன் காதலாகி டூயட்டும் பாடுகிறார் விஜய். ஊர் திரும்ப நினைக்கும் கீர்த்தியை, மத்திய அமைச்சரின் மகன் பார்க்க வரும்போது ஒரு மர்ம கும்பல் அவனை வெட்டுகிறது. இதனை விஜய் பார்த்துவிடுகிறார்.
தொடர்ந்து அவர்களிடமிருந்து தப்பித்து கோயம்பேட்டுக்கு பஸ் ஏற செல்கிறார் கீர்த்தி சுரேஷ். கும்பலும் அவரைத் துரத்த.. விஜய்யும் பின் தொடர்கிறார். அங்கே மத்திய அமைச்சரே நேரில் வந்து கீர்த்தியை மிரட்டி அவரை கொலை செய்ய முயலும்போது ஒரு போன் கால் வருகிறது.
அந்த போனில் பேசியவுடன் மத்திய அமைச்சரே பயந்து போய் பேசாமல் போய்விட விஜய் கீர்த்தியைப் பற்றி விசாரிக்கிறார். இப்போது கீர்த்தி தனது வாழ்க்கைக் கதையை பிளாஷ்பேக்கில் சொல்கிறார்.
பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் கிடைத்தும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத்தால் கன்னியாகுமரி அருகேயிருக்கும் பி.கே. மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார் கீர்த்தி. அதே கல்லூரியில் கேரளாவைச் சேர்ந்த அபர்ணா வினோத்தும் சேர்கிறார். நன்கொடையாக 24 லட்சங்களை கொட்டித்தான் இருவரும் சேர்க்கப்படுகிறார்கள்.
கல்லூரியில் அடிப்படை வசதியே இல்லாமல் இருப்பதும், நோயாளிகள் வராமல் இருப்பதும், ஒரு மருத்துவக் கல்லூரிக்கான தகுதியே இல்லாமல் இந்தக் கல்லூரி இருப்பதும் கல்லூரியில் சேர்ந்த பிறகே அனைவருக்கும் தெரிய வருகிறது.
இது குறித்து மீடியாக்களில் செய்தி பரவ.. இந்திய மருத்துவ கவுன்சிலில் இருந்து சோதனைக்காக வந்து கல்லூரியின் வண்டவாளங்களை தெரிந்து கொள்கின்றனர் கவுன்சிலின் உறுப்பினர்கள். ஆனால் அவர்களுக்கு இருந்த ஒரு வீக்னெஸ்ஸை பயன்படுத்தி கல்லூரிக்கு அனுமதி பெற முயல்கிறார் கல்லூரியின் நிறுவனரான ஜெகபதி பாபு.
இதற்காக பொய் சொல்லி அபர்ணா வினோத்தை கல்லூரி ஹாஸ்டலில் இருந்து நடு இரவில் அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் மறுநாள் காலையே ஆற்றங்கரையோரம் அபர்ணா வினோத் கொலையாகிக் கிடக்கிறார். ஆனால் இதனை தற்கொலை என்று சொல்லி மூடி மறைக்க முயல்கிறார் ஜெகபதி பாபு.
அபர்ணா வினோத்தின் பெற்றோர் துணையுடன் இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த வழக்கில் கூடிய சீக்கிரம் ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அந்த ரவுடிகள்தான் இப்போது என்னை எங்கே போனாலும் பாலோ செய்து வருவதாகச் விஜய்யிடம் சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இதைக் கேட்டு கோபப்படும் விஜய் திருநெல்வேலிக்கே நேரில் வந்து ஜெகபதிபாபுவுக்கு தண்ணி காட்டுவதாக அவரிடமே சொல்லிவிட்டு திருநெல்வேலிக்கு புறப்புடுகிறார். சொன்னதை செய்து காண்பித்தாரா..? இல்லையா..? ஜெகபதிபாபு என்ன ஆனார் என்பதெல்லாம் இடைவேளைக்கு பின்னான கதை..!
விஜய் தன் ரசிகர்களுக்கு குறை வைக்காமல் தனது பணியை நிறைவு செய்திருக்கிறார். பன்ச் வசனங்கள் பேசுவதைக்கூட கொஞ்சம் அடக்கிக் கொண்டு படத்துக்கான முத்திரை வசனங்களைத்தான் அதிகம் பேசியிருக்கிறார். “சிறப்பு.. மிகவும் சிறப்பு..”, “என்கிட்ட ஒரு கெட்டப் பழக்கம் இருக்கு. சொன்ன வார்த்தையை காப்பாத்துவேன்னு..”, “நான் மட்டும் வரேன்.. தனியா..” போன்ற வசனங்கள் சிச்சுவேஷனுக்கு ஏற்றதுதான் என்றாலும் அவருடைய ரசிகர்களுக்கு இதன் அர்த்தம் நன்கு புரியும்..!
புதிய ஹேர்ஸ்டைல் பழைய விஜய்யின் அழகை குறைப்பதுபோல இருந்தாலும், நடனம், சண்டை காட்சிகளில் குறைவில்லாமல் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். முதல் சண்டை காட்சியை வித்தியாசமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுத்திருப்பதால் பெரிதும் ரசிக்க முடிகிறது.
கீர்த்தி சுரேஷிடம் ரொமான்ஸுக்கான காட்சிகள் குறைவு என்றாலும், நிறைவாக வீட்டு வாசலில் மெளத் மெளனிங்கில் பேசும் காட்சிகள் கலகலப்பு.. சதீஷுடன் வார்த்தை விளையாட்டு  காமெடியில் கலகலப்பூட்டியிருக்கிறார். நடன காட்சிகளில் இன்னமும் இளமை துள்ளல் விஜய்க்கு மட்டுமே இருக்கிறது.
கீர்த்தி சுரேஷுக்கு இந்தப் படத்தில் நடிக்கவும் மிகப் பெரிய அளவில் ஸ்கோப் உள்ளது. ஆனாலும் அடிக்கடி இந்தப் படம் விஜய் படம் என்பது ஞாபகப்படுத்தப்பட்டு வருவதால் இவரது நடிப்பின் மீதான ஆர்வம் போய், விஜய்யின் ரியாக்ஷன் மேலேயே கண்ணாக இருப்பதால் ரசிகர்களுக்கு பெரிய ஈர்ப்பில்லை போலும். ஆனாலும், கீர்த்தி பெஸ்ட்டாகவே நடித்திருக்கிறார்.
வில்லன் ஜெகபதி பாபு வில்லத்தனத்தில் விஜய்க்கு சவாலே விடுகிறார். செய்த கொடுமைகளை “நான் செய்த மாதிரியும்…” என்று இழுத்து, இழுத்து பேசுவதும்.. ஒவ்வொரு முறையும் விஜய் அண்ட் கோ-வை ஏமாற்றும் வேலை செய்தும் இறுதியில் திரைப்படத்தின் கதைப்படி தோற்பதுமாக இவருடைய நடிப்பில் குறையில்லை. சரியான வில்லன் என்று சொல்ல வைத்திருக்கிறார்.
இவருக்கே வில்லனாகியிருக்கிறார் டேனியல் பாலாஜி. தனது மனைவி மீதிருக்கும் பாசத்திற்கு மட்டும் குறுக்கே யார் வராமலும் பார்த்துக் கொள்பவர்.. இவரது மனைவி இறந்தபோது ஜெகபதி பாபு நைட்ரஸ் ஆக்சைடின் பயனாய் சிரித்துக் கொண்டே வருவதும்.. தொடர்ந்து விஜய்யின் அன்புப் பிடியில் சிக்கி கடைசியாய் பரிதாபமாய் உயிரைவிடுவதுமாக தனது நடிப்பை நிறைவு செய்திருக்கிறார்.
புளிப்பாகாத நகைச்சுவைக்கு சதீஷ், ஒரேயொரு காட்சியில் மட்டுமே தன்னை நிரூபித்திருக்கும் தம்பி ராமையா, சில காட்சிகளுக்கு மட்டும் ஸ்ரீமன், நகைச்சுவை என்கிற பெயரில் ஏதும் இல்லாமல் நடித்திருக்கும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என சிலவைகள் அல்லவையாகவே இருக்கின்றன.
ஒய்.ஜி.மகேந்திரன், ஹரீஷ் உத்தமன், அபர்ணா வினோத், சிஜா ரோஸ் ஆகியோர்தான் திரைக்கதை நகர்வதற்கு பெரிதும் உதவிகரமாக இருந்திருக்கிறார்கள். சிஜா ரோஸே ஒரு கதாநாயகிதான். இவர் ஏன் இப்படி சைடு கேரக்டரில் நடிக்க வருகிறார் என்று தெரியவில்லை.
மைனா சுகுமாரின் ஒளிப்பதிவில் குறைவில்லை. விஜய், கீர்த்தி, சிஜா ரோஸ் என்று மூன்று அழகர்களையுமே இன்னும் மிக அழகாகக் காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளில் நடன அமைப்பு மற்றும் உடை வடிவமைப்பின் மூலம் கீர்த்திக்கு மேலும் புதிய ரசிகர்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது இந்தப் படம்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘வரலாம் வா பைரவா’ பாடலும், ‘பப்பரப்பா’ பாடலும் ஓகே ரகம்.. ‘வரலாம் வா’ பாடல் தீம் மியூஸிக்காக பல இடங்களில் சிதறி, சிதறி ஒளிபரப்பாகி விஜய் ரசிகர்களை மட்டுமே சந்தோஷப்படுத்தியிருக்கிறது. இறுதி பாடலில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் செம்ம ஆட்டம் ஆடியிருக்கிறார்கள். இவர்களை சிறப்பாக ஆட வைத்த நடன இயக்குநர் தினேஷுக்கு ஒரு ஷொட்டு.
‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலமாக விஜய்யுடன் இணைந்திருக்கிறார் இயக்குநர் பரதன். சமூக நோக்கத்தை அடிப்படையாக வைத்துதான் தனது அடுத்தடுத்த படங்கள் வெளியாக வேண்டும் என்கிற கொள்கையை ‘கத்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கையில் எடுத்திருக்கிறார் விஜய்.
அதன்படியே இந்தப் படமும் உருவாகியிருக்கிறது. மருத்துவக் கல்வியை கூறு போட்டு விற்கும் வியாபார முதலைகளை அம்பலப்படுத்தும் திரைக்கதையை அழுத்தமாகவும், அதே சமயம் அதற்கு உறுதுணையாக வீரியமிக்க வசனங்களின் மூலமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குர் பரதன். குறிப்பாக விஜய் பேசும் வசனங்கள், கோர்ட் காட்சிகள் ஆகியவை ரசிக்க வைக்கிறது.
கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளிக் குழந்தைகள் பலியான சம்பவம், கள்ளக்குறிச்சியில் சித்த மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற முறைகேடுகளால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள்.. டி.டி.நாயுடுவின் மருத்துவக் கல்லூரியில் நடந்த முறைகேடுகள்.. என்று இதுவரையிலும் நடைபெற்ற பல அநியாயங்களையும் வசனங்களின் மூலமாக வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இப்போதெல்லாம் ‘கல்வித் தந்தை’ என்று தங்களை தாங்களே சொல்லிக் கொள்பவர்களெல்லாம் முன்னாளில் பெரிய ரவுடியாகவும், திருடனாகவும்தான் இருந்திருக்கிறார்கள். முன்பு முகமூடி போட்டு கொள்ளையடித்தவர்கள்.. இப்போது முகமூடி போடாமலேயே கல்வி நிறுவனங்களை வைத்து நடத்தி கொள்ளையடித்து வருகிறார்கள்.
‘ஒன்றாம் வகுப்பில் பிள்ளைகளை சேர்க்கும்போதே அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் சிறந்தவர்கள்தானா என்று தேடிப் பார்க்கும் நாம், மருத்துவம் சொல்லிக் கொடுக்கும் கல்லூரிகளை நடத்தக் கூடியவர்கள் அதற்குத் தகுதியானவர்கள்தானா என்பதை ஏன் பார்ப்பதில்லை?’ என்ற மில்லியன் டாலர் கேள்வியை கேட்டிருக்கிறார் இயக்குநர் பரதன். பாராட்டுக்கள்ண்ணே..!
ஆனால் திரைக்கதைதான் ‘கத்தி’ படத்திற்கு முந்தைய விஜய் படங்களை ஞாபகப்படுத்துகிறது. பழைய டெம்ப்ளேட் திரைக்கதையில் இருந்து மாறுபட்டு தொடர்ச்சியாக 4 படங்களை கொடுத்திருக்கும் விஜய்.. மீண்டும் பழைய திரைக்கதைக்கே போயிருப்பது பெரிய வருத்தமான விஷயம்..!
அப்படியிருந்தும் சில திரைக்கதை டிவிஸ்ட்டுகள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. நான் கடவுள் ராஜேந்திரனிடமிருந்து தப்பிக்க பக்கத்து மொட்டை மாடியில் இருந்து வீடியோ எடுப்பதாகச் சொல்லி மாட்டிவிடுவது.. ஜெகபதி பாபுவின் வீட்டில் வருமான வரித்துறை என்கிற பெயரில் சோதனையிட்டு பணம், நகைகளை கொள்ளையடிப்பது.. ஜெகபதி பாபுவை பாராட்டி போஸ்டர்களை அச்சிட்டு ஒட்டி அவரை குழப்பமாக்குவது.. சிஜா ரோஸி, ஹரீஷ் உத்தமன் சம்பந்தப்பட்ட காட்சிகள்.. டேனியல் பாலாஜியின் கேரக்டர் ஸ்கெட்ச்.. நீதிமன்றத்தில் இருந்த தன்னை பெட்ரோல் ஊற்றி எரிக்க திட்டம் தீட்டும் ஜெகபதி பாபுவின் ஆட்களுக்கு விஜய் தண்ணி காட்டுவது.. பிரதமரை கொலை செய்யப் போவதாக ஜெகபதி பாபு மீது பழியைப் போட்டு விஜய் செய்யும் டிராமா.. இப்படி சில காட்சிகளில் லாஜிக்கையும் மீறி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
ஆனால் முற்பாதியில் தேவையில்லாத பல காட்சிகள் ஆங்காங்கே வருவது படத்தின் வேகத்திற்கு பெரும் தடையாக உள்ளது. முதல் பாதியில் வரும் அந்த நீண்ட பிளாஸ்பேக் காட்சிகளை இன்னமும் அதிகமாக நறுக்கியிருக்கலாம்.
கீர்த்தி பிளாஷ்பேக் சொல்லும் காட்சிகளை கோயம்பேடு பேருந்து நிலையம் இல்லாமல், வேறு எங்காவது வைத்திருந்தால் கொஞ்சம் நம்பகத் தன்மையுடன் இருந்திருக்கும். இவ்வளவு நேரமாக அந்த ஒரே இடத்துல இருந்தே கதை சொன்னால் எப்படிங்கோ இயக்குநரே..?
படத்தில் 25 நிமிட காட்சிகளை நீக்கினால்தான் இந்தப் படம் கிரிப்பாக ஒரு பரபரப்புத் தன்மையுடன் இருக்கும்.
‘பைரவா’ விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்..!

பச்சைக்கிளி பரிமளா - சினிமா விமர்சனம்

12-01-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சேது மீடியாஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.கே.மூர்த்தி இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இதில் தாமோதரன், கார்த்திக், சக்தி, காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – ஜெ.இ.கிறிஸ்டோபர், இசை – குபேரன், படத் தொகுப்பு – வைகை ராஜா. எழுத்து, இயக்கம் – மதுபாலன்.
இந்தப் படத்தின் டைட்டிலை பார்த்தவுடனேயே, டைட்டிலேயே பிட்டு படம் என்று உணரக் கூடிய படங்களை இப்பவும் தயாரிக்கிறார்களா என்று ஆச்சரியம்தான் வந்தது.
ஏனெனில் இது போன்ற படங்களை திரையிடும் தியேட்டர்கள் தமிழ்நாட்டில் அதிகம் போனால் 30 தியேட்டர்கள்தான் இருக்கும். இருந்த தியேட்டர்களெல்லாம் இடிக்கப்பட்டுவிட்டன. அல்லது மாற்றப்பட்டுவிட்டன.
இப்போது இருக்கின்றவைகளில் கிடைக்கும் கலெக்ஷன் மொத்தத்தையும் கைக்குட்டையிலேயே சேகரிக்கலாம். அந்த அளவுக்குத்தான் இருக்கும். இருந்தும், எப்படி இவ்வளவு தைரியமாக இந்த மாதிரியான படத்தை எடுக்க தயாரிப்பாளர் முனைந்து முன் வந்தார் என்று தெரியவில்லை.
சரி.. அது எதற்கு நமக்கு..? கதை என்னவென்று பார்ப்போம்.

தாமோதரன், கார்த்திக் உட்பட நான்கு பேர் இணை பிரியாத நண்பர்கள். இதில் கார்த்திக்கும், இன்னும் இரண்டு நண்பர்களும் தாமோதரனை பார்க்க ஊருக்கு வருகிறார்கள். அங்கே தாமோதரன் தனது மாடர்ன் கேர்ளுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்.
“வாழ்ந்தால் இப்படியொரு மாடர்ன் கேர்ளுடன்தான் வாழ வேண்டும். இல்லாமல் சுத்தப் பட்டிக்காடுகளை கட்டிக் கொண்டு மாரடிப்பதற்கு சாகலாம்…” என்று இவர்களது மனதிலும் நஞ்சை கலக்குகிறார் தாமோதரன். இது கார்த்திக்கின் மனதையும் கெடுக்கிறது.
அவரும் தனக்குப் பெண் பார்க்கப் போகுமிடத்தில் மாடர்னான பெண்ணா என்று பார்க்கிறார். ஆனால் பெண்ணோ அப்படியல்ல என்று தெரிந்தாலும், அப்பா, அம்மா பேச்சுக்காக சரியென்று சம்மதிக்கிறார்.
இருவருக்கும் திருமணம் முடிகிறது. சென்னைக்கு குடி வருகிறார்கள். வந்த வேகத்திலேயே தனது புது மனைவியை மாடர்ன் கேர்ளாக்கி பார்த்து அகமகிழ்கிறார் கார்த்திக். புதிய மனைவியும் புதிதாக தனக்குக் கிடைத்திருக்கும் ஆடைகள் தனது அழகைக் கூட்டியிருக்கிறது என்று எண்ணி மேலும், மேலும் மாடர்ன் பெண்ணாகும் ஆர்வத்தில் இருக்கிறார்.
அதே நேரம் திடீரென்று தாமோதரனை பார்க்கிறார் கார்த்திக். இப்போது தாமோதரன் குடித்துவிட்டு ரோட்டோரமாக அலங்கோலமான நிலையில் கிடக்கிறார். தனது நண்பனை உயிர்த்தெழ வைத்து விஷயத்தை என்னவென்று கேட்க.. அவரோ தனது வாழ்க்கையே பறி போய்விட்டதாக புலம்பித் தள்ளுகிறார்.
தனது மாடர்ன் மனைவியான மீரா தனக்குத் துரோகம் செய்துவிட்டு தனது இன்னொரு நண்பனோடு ஓடிப் போய்விட்டதாகவும், இதனால் தான் மிகப் பெரிய மனத் துயரத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்.
அந்த ஓடிப் போன மனைவியான மீராவை மீண்டும் ஒரு கோவில் வாசலில் பார்த்து அவளது காலில் விழுந்து கதறியழுது திரும்பி அழைக்கிறார் தாமோதரன். அப்போதும் மீரா அவரை உதாசீனப்படுத்திவிட்டுப் போக இப்போது மதுவே துணை என்றிருக்கிறார் தாமோதரன்.
தாமோதரனின் நிலைமையை புரிந்து கொண்ட கார்த்திக் தனது நிலைமையை எண்ணிப் பார்க்கிறார். இப்போதும் அவரது வீட்டிற்கு வந்து செல்லும் கார்த்திக்கின் நண்பனிடம் கார்த்திக்கின் மனைவி சிரித்துப் பேசுவதும்,தொட்டுப் பேசுவதும் கார்த்திக்கை அசைத்துப் பார்க்கிறது.
இந்த நேரத்தில் தாமோதரனை ஒரு விபச்சாரத் தரகர் பரிமளா என்னும் விலைமாதுவிடம் அழைத்துப் போகிறார். இந்த பரிமளா என்னும் விலைமாது காசுக்காக தொழிலில் இருந்தாலும் அதிலும் ஒரு ஒழுங்கு முறை இருக்க வேண்டுமென்று நினைக்கக் கூடியவர்.
இவரிடம் ஒரு முறை ஒரு கஸ்டமர் வருகிறார். அதுதான் அவருக்கு முதல் அனுபவம். வீட்டிற்கு மூத்த மகன். இவருக்குக் கீழ் தங்கைகளும், தம்பியும் உண்டு. மாதச் சம்பளம் 6000 ரூபாய். ஆனால் பரிமளாவுக்காக 2000 ரூபாயை செலவழிக்கத் தயாராகியிருக்கிறார்.
பரிமளா இவரிடம் பக்குவமாக யதார்த்த நிலைமையை எடுத்துச் சொல்லி.. “அரை மணி நேர சுகத்துக்காக 2000 ரூபாயை செலவழிப்பது நியாயமா..? உன் ஒருத்தன் சம்பாதித்தியத்தை நம்பி உன் குடும்பமே உக்காந்திருக்கே.. அதை யோசித்துப் பார்த்தியா..?” என்று அன்பாகச் சொல்லி அவனை திருப்பியனுப்புகிறாள்.
இந்த அளவுக்கு நல்லவளாக இருக்கும் பரிமளாவிடம் வரும் தாமோதரன் அந்த வீட்டிலேயே குடிபோதையில் வாந்தியெடுக்கிறான். போதையில் புலம்புகிறான். மயங்கி விழுகிறான். மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும்போதுதான் முந்தின இரவில் அங்கே நடந்ததெல்லாம் அவனுக்குத் தெரிய வர பெரிதும் வெட்கப்படுகிறான்.
தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பரிமளாவிடம் வந்து மன்னிப்பு கேட்கிறான் தாமோதரன். அவனுடைய சோகக் கதையைக் கேட்டுவிட்டு தன்னுடைய சோகக் கதையைச் சொல்கிறாள் பச்சைக்கிளி பரிமளா.
பரிமளாவின் கணவன் அவனின் மகனுக்கு 1 வயது இருக்கும்போதே வேறொரு பெண்ணுடன் ஓடிப் போய்விடுகிறான். இதனால் தனி மரமாகிறாள் பரிமளா. தனது பையனுடன் தானே வேலை செய்து சம்பாதித்து தனியே வாழ்ந்து வருகிறாள்.
பையனுக்கு 5 வயதாகும்போது ஓடிப் போன புருஷன் ஒரு நாள் இரவில் திரும்பவும் வருகிறான். தான் இனிமேல் அவளுடன்தான் இருக்கப் போகிறேன் என்கிறான். பரிமளாவும் அதை உண்மை என்று நம்பி அவனைத் தங்க வைக்கிறாள். பரிமளாவிடம் இரவு ‘வேட்கை’யை முடித்துக் கொண்ட அவளது கணவன், காலையில் சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப்பாகுகிறான். கூடவே பரிமளா அத்தனை நாட்கள் சேமித்து வைத்திருந்த பணத்தையும், நகைகளையும் எடுத்துக் கொண்டே ஓடிவிடுகிறான்.
இதனால் வேறு வழியில்லாமல்தான் இந்தத் தொழிலுக்கு தான் வந்ததாகச் சொல்கிறாள் பரிமளா.  இந்தச் சோக்க் கதையைக் கேட்கும் தாமோதரன், “என் மனைவி என்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டாள். உன் புருஷனோ உன்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டான். நாம் இருவருமே ஏமாற்றப்பட்டிருக்கிறோம். ஆனால் எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது. உன் பொறுமையும், சகிப்புத்தன்மையும், அன்பும், பண்பும், பாசமும், நேசமும் எனக்குத் தேவையாய் இருக்கிறது. நாம் ஏன் இணைந்து வாழக் கூடாது…?” என்று கேட்கிறான். இதற்கு பரிமளாவும் ஒப்புக் கொள்ள.. இந்தக் குடும்பம் ஒன்று சேர்கிறது.
இன்னொரு பக்கம் கார்த்திக்கின் மனைவியை அவனுடைய நண்பன் நிஜமாகவே கவர்ந்து செல்கிறான். ஒரு கடிதத்தை எழுதிவைத்துவிட்டு கணவனின் நண்பனுடன் ஓடுகிறாள் மனைவி. அந்த நண்பனோ ஓடி வரும் நண்பனின் மனைவியை ஒரு நாள் இரவு மட்டும் அனுபவித்துவிட்டு கையில் சில ஆயிரம் ரூபாய்களை கொடுத்துவிட்டு திரும்பிச் செல்லும்படி சொல்ல அவள் அதிர்ச்சியாகிறாள்.
தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்து அவள் கதறியழுக.. நண்பன் தப்பியோடுகிறான். தன் வாழ்க்கையை தானே தொலைத்துவிட்டனே என்றெண்ணி அழுதபடியே அவள் சாலையில் செல்ல.. அவளுக்கு எதிர்ச் சாலையில் பைக்கில் பரிமளாவும், தாமோதரனும், பிள்ளையும் சந்தோஷமாகச் செல்கிறார்கள்.
“நாகரிக மனைவி வேண்டும் என்று ஆசைப்பட்டு உங்களது வாழ்க்கையைத் தொலைக்காதீர்கள்…” என்ற எழுத்துப் பிழையுடன் கூடிய அட்வைஸோடு படம் முடிவடைகிறது.
சோம்பியான ஒளிப்பதிவு.. அனைவரின் சுமாரான நடிப்பு.. சொதப்பலான இயக்கம் என்று அனைத்திலும் ஓட்டை, ஓட்டையாக வைத்துக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
அனைவருமே புதுமுகங்கள் என்பதால் அவர்களால் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார்கள். பரிமளாவாக நடித்திருக்கும் சக்திஸ்ரீதான் பிரதான கதாபாத்திரத்தை செய்திருக்கிறார். விலைமாது கேரக்டர் என்பதால் படம் முழுவதும் அபாயகரமான கவர்ச்சி தோற்றத்திலேயே வலம் வந்திருக்கிறார்.
சீன் பை சீன் கவர்ச்சிதான் முக்கியம் என்பதால் திரைக்கதையில்கூட அதற்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். மீராவின் மாடர்ன் கேர்ள் உடையில்கூட குனிய வைத்து, நிமிர வைத்து.. ஓட வைத்து.. கேமிராவுக்கே எய்ட்ஸ் வரும் அளவுக்கு படமாக்கியிருக்கிறார்கள்.
அதேபோல் முதலில் கிராமத்துப் பெண்ணாகவும், பின்பு மாடர்ன் கேர்ளாகவும் மாறும் காயத்ரி நிஜமாகவே அழகிதான். நல்ல தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால்கூட மின்னுவார். இப்படி இவர்கள் கையில் சிக்கி சின்னாப்பின்னமாகிவிட்டார்..! இவரும் தன்னால் முடிந்த அளவுக்கு ‘காட்டி’யிருக்கிறார்.
திரைக்கதையில்கூட காமெடி என்கிற பெயரில் காம நெடியை வீசியிருக்கிறார்கள். கதாநாயகிகள்தான் என்றில்லாமல் காயத்ரியின் அம்மாவையும் கவர்ச்சி காட்ட வைத்திருப்பதுதான் கொடுமை.
உறவுக்கு வர தயங்கும் மனைவியை ஒத்துழைக்க வைக்க மயக்கப் பொடியை கலந்து கொடுத்து காரியத்தை முடிக்க நினைக்கும் கார்த்திக்.. அந்த மயக்க மருந்தை கார்த்திக்கின் தாய், தனது கணவனுக்குக் கொடுத்துவிட.. அடுத்து நடக்கும் அசம்பாவித காட்சியில் கார்த்திக்கின் தாய், தந்தையும் ஆடும் ஆட்டம் எதிர்பாராதது.
இதைவிட காமெடியாக அடுத்த நாள் காலையில் கார்த்திக்கின் தாய், தந்தையர் படுத்திருந்த கட்டிலின் கால் உடைந்து போய் கிடக்க.. புதிய கட்டில் காலை வாங்கி வந்து அதை தச்சு செய்யும் தந்தையும், அதனை பார்த்து ஏக்கப் பெருமூச்சுவிடும் மகன் கார்த்திக்கும்.. இதைப் பார்த்து வெட்கப்படும் தாயையும் ஒரு சேர ஸ்கிரீனில் பார்த்தபோது இயக்குநரின் ரசனையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை..!
குபேரனின் இசையில் 2 பாடல்கள் கேட்கும்படியாகத்தான் இருந்தது. ஆனால் சின்ன பட்ஜெட் என்பதால் மற்ற தொழில் நுட்பப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டதால் பின்னணி இசை கடாமுடாவாகத்தான் இருந்தது.  
ஒளிப்பதிவாளர் என்ன வேலை செய்திருக்கிறார் என்றே தெரியவில்லை. படுக்கையறை காட்சிகளில்கூட லைட்டிங்க்ஸை காணோம். இது போன்ற படங்களை திரையிடும் மோசமான தியேட்டர்களில் புரொஜெக்சனே மோசமாகத்தான் இருக்கும். அதைவிட மோசமாக ஒளிப்பதிவு இருந்தால் எப்படியிருக்கும்..? அப்படித்தான் இருந்தது படத்தின் ஒளிப்பதிவின் தரம்.
வருமான வரித்துறைக்கு கணக்குக் காட்டாமல் மறைத்து வைத்திருந்த கருப்புப் பணத்தில் எடுக்கப்பட்ட படமாக இது இருக்கலாம். தமிழகத்திலேயே வெறும் 10 தியேட்டர்களில் வெளியாகி தியேட்டர் வாடகையைக்கூட வசூலிக்காமல் படம் நேற்றைக்குத் தூக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறோம்..!
ஆனாலும் படத்தின் இயக்குநருக்கு டைட்டிலில் தனது பெயர் இயக்குநர் என்று பதிவாகியிருப்பதை பார்த்து நிச்சயம் சந்தோஷம் கிடைத்திருக்கும்..!
இந்த ஒரு திருப்தியோட அவர் எங்கேயிருந்தாலும் நல்லாயிருக்கட்டும்..!