கருப்பம்பட்டி - சினிமா விமர்சனம்

21-03-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தான் பிறந்து வளர்ந்த கருப்பம்பட்டி என்ற ஊரையும், தந்தையையும், உற்றார் உறவினரையும் உதாசீனப்படுத்திவிட்டு பாரீஸில் போய் செட்டிலாகுகிறார் அப்பா அஜ்மல். ஆனால் அங்கே அவரது வாழ்க்கை சின்னாப்பின்னமாகிவிட.. உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை தான் அனாதையாக சாகப் போகிறோம் என்று யோசித்த கணத்தில் அவருக்குத் தோன்ற.. தனது மகன் அஜ்மலை கருப்பம்பட்டிக்கு அனுப்பி தனது உறவினர்களுடன் சேர்த்து வைக்க முனைகிறார். இதனை மகன் அஜ்மல் செய்து முடித்தாரா இல்லையா என்பதுதான் கதை..!


கதை பாரீஸில் ஆரம்பித்து பாரீஸிலேயே முடிவடைகிறது.. இடையிடையே மகன் அஜ்மல் அப்பா அஜ்மலின் வாழ்க்கைக் கதையைக் கூற அது 1980-களின் வாழ்க்கையைக் காட்டுகிறது..! உறவினர்களே பிடிக்காத சூழலில் வாழும் அஜ்மல், கல்லூரிக்கு வந்தவுடன் எப்படி தன்னை மாற்றிக் கொள்கிறார் என்பதையும், தனது பெற்றோர்களையே வேலைக்காரர்கள் என்று சொல்லும் அளவுக்கு நாகரிகம் பார்க்கத் துவங்குகிறார் என்பதையும் அழுத்தமாகவே இயக்குநர் சொல்லியிருக்கிறார்..!

கல்லூரி கலாட்டாக்களில் கொஞ்சம் கொஞ்சம் சிரிப்பலை வருகிறது.. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஸ்டைலில் ஹாஸ்டல் வார்டனாக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் உடல் மொழியும், டயலாக் டெலிவரியும் எப்போதும் போலவே..! கல்லூரி ராகிங்குகளை இந்த அளவுக்கு காட்டியிருக்க வேண்டாம்.. அப்போதைய காலக்கட்டத்தில் இந்த அளவுக்கா இருந்தது என்பதையும் இயக்குநர் கொஞ்சம் யோசித்திருக்கலாம்..!

மகா கோபக்காரனான அஜ்மலின் கோப நடிப்புதான் ரொம்பவே ஓவர்.. கோபத்தைக் காட்ட முகத்தை இத்தனை அஷ்டகோணலாக்கித்தான் நடிப்பை கொட்ட வேண்டுமா..? அஞ்சாதேயில் இவர்தான் நடித்திருந்தாரா..? அப்பா அஜ்மலைவிடவும், மகன் அஜ்மல் பரவாயில்லை.. கொஞ்சம் நிதானமாகவே நடிப்பைக் கொட்டியிருக்கிறார்.. ஹீரோயின் என்ற பெண்ணிடம் காதல் கதைகளைச் சொல்லி அசடு வழிவதில் அவர் நன்றாகவே நடித்திருந்தாலும் நமக்குத்தான் மகா போரடிக்கிறது..!

என்னதான் சொந்தங்களை அழைக்க வேண்டும் என்று நினைத்தாலும், அதற்காக இப்படியா ஒரு பொய்யைச் சொல்வது..? இது அந்த பில்கேட்ஸுக்கே அடுக்காது.. இதையும் நம்பி அந்தக் கூட்டம் வருது பாருங்க.. அங்கதான் இயக்குநர் நிக்குறாரு.. தியேட்டர் ரசிகர்களும் இதை உட்கார்ந்து பார்க்கத்தான போறாங்க.. அதுனால இயக்குநர் தைரியமா லாஜிக் உதைக்குதேன்னெல்லாம் யோசிக்காம வைச்சிருக்காரு..!

இடைவேளைக்கு பின்பு ஜெகனும், Sreenath-ம் கொஞ்சம் கொஞ்சம் நெளிய வைக்காமல் படத்தை பார்க்க வைத்தார்கள்.. ஹீரோயின்தான் மகா சொதப்பல்.. எந்த ஆங்கிளில் பார்த்தாலும் ஹீரோயினுக்கான அறிகுறிகளே இல்லை.. எப்படிய்யா செலக்ட் பண்ணினாங்க..? அப்புறம் எங்க நடிப்பை பத்தி யோசிக்கிறது..? ஆனாலும் கல்லூரியில் சாந்தியாக வரும் ஹீரோயினின் ஒருதலைராகம் கெட்டப்பும், அந்த மருளும் கண்களும் ஏதோ பார்க்க வைக்குது..!

அப்பா அஜ்மல் போலவே அச்சு அசலாக இருப்பவரை தாத்தாவால் அடையாளம் காண முடியவில்லையாம்.. அதைவிடக் கொடுமை.. மிகச் சரியாக அவரிடமே போய் தான் இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு கட்டியணைத்துக் கொள்வதுதான்.. திரைக்கதைக்காக ரொம்ப மெனக்கெடல இயக்குநர்.. போதும் என்ற அளவுக்கு மட்டுமே யோசித்திருக்கிறார் போலும்..! ஷங்கரிடம் பயின்றவராம் இந்தப் படத்தின் இயக்குநர் பிரபுராஜசோழன்..!

அஜ்மல் யார் என்று தெரியாமலேயே பில்கேட்ஸ் பெயரைச் சொன்னவுடனேயே அத்தனை பேரும் ஓடோடி வந்து ஒட்டிக் கொள்வதாகச் சொல்லியிருப்பது கொஞ்சம் ஓவரான பூச்சுற்றல்..! கிளைமாக்ஸ் அதைவிட.. இதுவரையிலும் வந்த குடும்பக் கதைகளின் அதே டெம்ப்ளேட் பாணி..! இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்துபோனதால் இடைவேளைக்கு பின்பு கொட்டாவி, கொட்டாவியாக வந்ததுதான் மிச்சம்..!

இதிலும் ஒரு காமெடி.. அஜ்மலின் விசா காலம் முடிந்து போனதால் உடனேயே அவரை திரும்பவும் பாரீஸுக்கு போகும்படி இமிக்ரேஷன் டிபார்ட்மெண்ட் ஆபீஸர்  கருப்பம்பட்டிக்கே நேரில் வந்து சொல்வதுதான்.. ஒருவேளை இயக்குநர் இத்தனை நாட்கள் வெளிநாட்டில் இருந்திருப்பாரோ..?

அதிலும் கதையை முடித்து வைப்பதற்காக படாரென்று ஹீரோயினிடம் என் மருமவனை கட்டிக்கிறியா..? என் தம்பியை கட்டிக்கிறியா என்று ஹீரோயினை அத்தனை பேரும் மொய்த்து எடுப்பார்கள்.. பாருங்கள்.. சூப்பர்.. இதுக்கு மேல ஒரு நல்ல திடுக் திடுக் கிளைமாக்ஸை கண்டே பிடிக்க முடியாது..!

கண்ணனின் இசையில் பப்பிலஹரி பாடிய டிஸ்கோ பாடலும், அதனைப் படமாக்கியவிதமும் சூப்பர்..! மிகச் சிறப்பான நடனம். அதேபோல் கருப்பம்பட்டி பாடலையும் அதன் நேட்டிவிட்டி மாறாமல் சிறந்த நடனத்தோடு எடுத்திருக்கிறார்கள்..!  அந்த ஜல்லிக்கட்டு காட்சி, அது தொடர்பான சண்டைக் காட்சிகளெல்லாம் ரொம்பவே இழுவை..! கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்..! 

பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேர வேண்டும். எங்கேயிருந்தாலும் உற்றார், உறவினர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான்.. ஆனால் அப்பா அஜ்மல் எதற்காக உறவினர்களை, ஊரை, பெற்றோரை அவமதிக்கிறார் என்பதற்கான சரியான காரணமில்லாமல், அவர் சிட்டி வாலிபனாக மட்டுமே வளர விரும்புகிறார் என்று சொல்லி முடித்திருக்கிறார்கள். அவருடைய திருமண வாழ்க்கை பாரீஸில் முடிந்து போனதை மட்டும் வைத்து திருந்துவதாகச் சொல்லியதும் கொஞ்சம் சறுக்கல்தான்..! 

கதைகளை நிறையே சலித்துச் சலித்து செலக்ட் செய்துதான் நடிக்கிறேன் என்கிறார் அஜ்மல்.. இந்தக் கதையும் அப்படித்தானோ..? பாவம் அஜ்மல்.. தமிழ்ச் சினிமாக்களை அதிகம் பார்த்ததில்லை போலும்.. ஓகே.. எடுத்தவரையிலும், நடித்தவரையிலும் ஒரு முறை பார்க்கலாம்தான்..! அப்படியொன்றும் மோசமில்லை..! 

வத்திக்குச்சி - சினிமா விமர்சனம்

16-03-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பிரமாண்டமான 20th Century Fox-ன் இந்திய சார்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸின் இரண்டாவது தமிழ் தயாரிப்பு..! இந்த நிறுவனத்தின் தற்போதைய காப்பாளர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்தான் என்பதால், தனது தம்பி திலீபனை ஹீரோவாக வைத்து, பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தனது பேனரில் சுலபமாக ஒரு படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்..! 


ஹீரோ சந்தர்ப்பவசத்தால் யாருக்கோ உதவிகளைச் செய்யப் போய், அதனால் பாதிக்கப்படும் மூன்று பேர் ஹீரோவை கொலை செய்ய முயற்சிக்க.. அவர்களிடமிருந்து ஹீரோ எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதைச்சுருக்கம்..!

திலீபன் என்னும் சக்தி ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். காஞ்சிபுரம் சமத்துவபுரத்தில் தனது வீட்டிற்கு அருகிலேயே குடியிருக்கும் அஞ்சலியை ஒன் சைடாக லவ்விக் கொண்டிருக்கிறார்..! தனது தங்கை பிறந்த நாளுக்காக அனாதை குழந்தைகளை அழைத்துக் கொண்டு பார்ட்டிக்கு போகிறார்கள் திலீபனின் குடும்பத்தினர். ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு வெளியே வரும் திலீபனின் கழுத்தில் கத்தியை வைத்து பணத்தைப் பறித்துச் செல்கிறார்கள் சம்பத்தின் அடியாட்கள். 

அது திலீபனின் அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் என்பதாலும், தனது தந்தை மீதிருந்த மதிப்பினாலும் எப்படியாவது அந்தப் பணத்தை திரும்பவும் பெற்றுவிடத் துடிக்கிறார் திலீபன். இதற்காக ஜிம்முக்கு போய் உடம்பை தேத்தி.. சண்டைப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு சம்பத்தின் அடியாட்களுடன் மோதுகிறார். அவர்களை வீழ்த்திவிட்டு சம்பத்திடமே மோதி பணத்தை பிடுங்கிச் செல்கிறார். இது ஒன்றினாலேயே தனது வாழ்க்கையை இழந்து தவிக்கும் சம்பத், திலீபனை கொலை செய்யத் துடியாய் துடிக்கிறார்..!

வருமான வரித் துறை அதிகாரியை கொலை செய்ய முயற்சிக்கும் நகைக்கடை அதிபரான ஜெயப்பிரகாஷின் பிளானை ஒட்டுக் கேட்ட நிலையில் அதனை தானே முறியடிக்கிறார் திலீபன். இதனால் ஜெயப்பிரகாஷுக்கு திலீபன் மேல் கொலை வெறி..!

அதே சமத்துவபுரத்திலேயே குடியிருக்கும் ஜெகன், ஒரு பெரிய புள்ளியின் மகனைக் கடத்தி பணம் வசூலிக்கத் திட்டமிடுகிறான். அதற்கு தடையாக திலீபன் இருப்பதை அறிந்து அவனை முதலில் போட்டுத் தள்ள திட்டமிடுகிறான்.. 

இப்படி மூலைக்கு ஒருவராக திலீபனை கொல்ல தயாராக இருக்க.. மூவரிடமும் எப்படித் தப்பிக்கிறான் என்பதை கொஞ்சம், கொஞ்சம் சுவாரஸ்யமாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர்..!

பிளாஷ்பேக் உத்திகளை பயன்படுத்தியவிதம் சஸ்பென்ஸாகவும், எதிர்பார்ப்பை கூட்டியதாகவும் இருந்தாலும், படத்தின் முக்கியமான காட்சிகளில் இருக்கும் லாஜிக் ஓட்டைகள் இவ்வளவுதானா என்று அந்த சஸ்பென்ஸை உதறித் தள்ளுகின்றன..!

ஒரே மாதத்தில் யாராவது இப்படி ஜிம்முக்கு போய் உடம்பை தேத்த முடியுமா..?  சண்டைப் பயிற்சிகளை கத்துக்க முடியுமா..? அதிலும் இப்படத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சிகள் எல்லாமே படு பயங்கரமானவை. அலாக்காக தூக்கி வீசுவதுதான் அனைத்து சண்டைகளிலும் இடம் பெற்றுள்ளது.. இந்த அளவுக்கு தாக்குதல் கடுமையாக இருக்குமெனில் ஹீரோவால் எப்படி இதனை ஒரு மாதத்தில்..?  

அடுத்தது ஒரு பெரிய மர்டர் அஸைண்ட்மெண்ட்..! இப்படியா டீக்கடை முன்பாக ஊருக்கே கேட்கும்படியாக சத்தமாக பேசுவான்.. “நாளை மறுநாள் காலைல 11 மணிக்கு அவனை போடுறேண்ணே..” என்று அலட்சியமாக பேசுவதைக் கேட்டுவிட்டுத்தான் திலீபன் அங்கே செல்கிறாராம்..! என்ன விந்தை இது..? இப்படியெல்லாம் பப்ளிக்கா சைக்கிள் செயின் திருடன்கூட பேச மாட்டான்னு இயக்குநருக்கு தெரியாதா?

ஒரு அரசு குடியிருப்பு. அங்கேயிருக்கும் அம்மன் கோவிலில் விழா.. வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் திலீபனை நோக்கி துப்பாக்கிக் குண்டுகள் பாய்கின்றன.. திலீபன் எப்படியோ தப்பி வெளியேறும்போது அடிதடி துவங்குகிறது.. அவ்வளவு பெரிய கோவில் திருவிழாவுக்கு ஒரு போலீஸ்கூடவா வந்திருக்க மாட்டாங்க..? தெருவிலேயே துப்பாக்கிக் குண்டுகள் பாய்கின்றன.. சிதறுகின்றன.. துப்பாக்கியின் ஓனர் மிகச் சரியாக அந்த இடத்திற்கு வந்து தனது துப்பாக்கியை பிடுங்கிச் செல்கிறானாம்.. அடுத்த நாள் சென்னையே அமைதியாக இருக்கிறதாம்..! நோ போலீஸ்.. நோ கேஸ்..! நோ பீலிங்..!

துப்பாக்கி கேட்டு வந்த ரவுடியை சுட்டுத் தள்ளுகிறான் ஜெகன்.. அவன் பாடியை அப்படியே போட்டுவிட்டுத்தான் தப்பிக்கிறார்கள். போலீஸ் தேடவில்லையாம்.. அத்தோடு அந்தக் கேஸையும் இழுத்து மூடிவிட்டார்களா என்ன..? 

ஜெகனிடம் இருந்து தப்பித்து மிகச் சரியாக ரவிமரியாவிடம் சிக்குகிறார் திலீபன். அவனிடத்தில் “அவுட்டோருக்கு கொண்டு போய் போட்டிரு..” என்கிறார் ஒரு இன்ஸ்பெக்டர். இவருக்கு இன்ஸ்ட்ரக்ஷன் ஜெயப்பிரகாஷாம்..! துரிதமான திரைக்கதை. மிக வேகமாகச் செல்கிறது..!

ரவி மரியா ஆட்களிடம் இருந்து தப்பித்து அரை மணி நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்து உடம்பை தேற்றிக் கொண்டாராம் திலீபன்..! ரோட்டோரக் கடையில் இட்லி சாப்பிட்டும், பள்ளிக்கூட மைதானத்தில் தண்டால் எடுத்தும் புஷ்டியை வலுவாக்கிக் கொண்டாராம் ஹீரோ..! டூவீலரில் இருந்து இறங்கி ஓடும்போது எதிர்த்தாற்போல் போக்குவரத்து போலீஸார் 2 பேர் நின்று கொண்டிருந்தார்கள் என்பதையும் இயக்குநர் மறந்துவிட்டார். அவர்களிடத்தில் போய் புலம்பியிருந்தால் கேஸே முடிஞ்சிருக்குமே..?

வெள்ளியங்கிரி மலையில் திலீபனை போட்டுத் தள்ள.. சம்பத் முயற்சி செய்ய.. திலீபன் ஒரு ஹீரோ என்ன செய்வாரோ அதையே செய்துவிட்டு தப்பிச் செல்கிறார். சர்வசாதாரணமாக எனக்கு எதுவுமே தெரியாது என்று போனிலேயே போலீஸிடம் சாதிக்கிறாராம்..!  அப்பாடா.. இதுக்கு மேலேயும் யாரும் யோசிக்க முடியாது கண்ணுகளா..!!!

படத்தின் சுவாரஸ்யம் ரவுடி ராக்காயி அஞ்சலியுடனான காதல் போர்ஷனும், இங்கிலீஷ் கோச்சிங் கிளாஸ் பகுதிகளும், ஜெகன் அண்ட் கோ-வின் பிளான் அண்ட் சொதப்பல்ஸும்தான்..! அஞ்சலியை மிகச் சரியாகவே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இந்த மாதிரி தெனாவெட்டு மூஞ்சியை யாருக்குத்தான் பிடிக்காது..? அதுலேயும் இங்கிலீஷ் கோச்சிங் கிளாஸில் படித்துவிட்டு அதுக்குவிடும் அலப்பறை கொஞ்சம் சிரிக்க வைக்கிறது..! தான் அவனைக் காதலிக்கவே இல்லை என்பதை திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு திலீபனை காதலிக்கத் துவங்கும் சீன்களெல்லாம் ஏ ஒன்.. அஞ்சலிக்காகவே திரும்பத் திரும்பப் பார்க்கலாம் இந்தக் காட்சிகளை மட்டும்..!

திலீபன், ஏ.ஆர்.முருகதாஸின் தம்பியாம்.. பார்த்தால் அப்படி தெரியவில்லை. ஒருவேளை ஒண்ணுவிட்ட தம்பியாகக் கூட இருக்கலாம்.. ரொம்ப மோசமில்லை.. ஷேர் ஆட்டோ டிரைவர் கேரக்டருக்கு பொருத்தமானவர்தான்.. மனிதருக்கு ஆக்சன் நன்கு வருகிறது.. ஆனால் காமெடியும், நடிப்பும்தான் வருமா என்று தெரியவில்லை. இன்னும் 2, 3 படங்கள்வரையிலும் காத்திருந்துவிட்டுத்தான் சொல்ல வேண்டும்..! 
சிற்சில இடங்களில் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.. 14 இட்லியை ஒரே தட்டில் போட்டு ஒரு சொம்பு சாம்பாரையும் மொத்தமாக ஊற்றி சாப்பிடும் இந்த சாப்பாட்டு ராமன், எந்த அடியையும் தாங்குவான்.. எது மாதிரியும் அடிப்பான்னு முன்னாடியே இதை வைச்சுத்தான் சொல்றாங்க..!

சரண்யா தனது மகனின் காதலை அறிந்து கொண்டு “அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுடா..” என்று சொல்லி அதற்குச் சொல்லும் காரணங்கள் சிரிக்க வைக்கின்றன.. கவர்ன்மெண்ட்டு வேலையை ஏதோ ஜனாதிபதி லெவலுக்கு ஒப்பிட்டுப் பேசிவிட்டு, அஞ்சலியின் அம்மா மாதந்தோறும் பெரிய லிஸ்ட்டா போட்டு சாமான் வாங்கிட்டுப் போகுது. “அது நமக்கு சரிப்பட்டு வராதுடா தங்கம்” என்று சொல்லும் அக்மார்க் டிபிகல் அம்மா.. வெல்டன் தாயி..!

முதல் தர நடிப்பாளர்ன்னு பார்த்தா அது சம்பத்துதான்.. டயலாக் டெலிவரியில் மனுஷன் பின்றாருய்யா..! இவரும் திலீபனிடம் அடி வாங்கினதை பார்த்தே அவரோட அடியாட்களெல்லாம் அவரைவிட்டு விலகி ஓடினாங்கன்னு ஒரு மொன்னை திரைக்கதையை வைச்சு இவரை  மாடிவீட்டு ஏழையாக்கினது காமெடிதான்னாலும், அதுக்கப்புறம் சம்பத் காட்டும் அந்த கோப வெறி.. நமக்குத்தான் பயத்தை ஊட்டுகிறது..!

ஏதோ பிக்னிக் போயிட்டு வர்ற மாதிரி “ஜெயிலுக்கு போறேன்.. வக்கீல்கிட்ட பேசிட்டேன்.. இன்ஸ்பெக்டரும் ஓகே சொல்லிட்டாரு.. செலவுக்கு பணம் கொடுத்து விட்டிருக்கேன். வாங்கிக்க.. ஜெயில் பக்கம் வந்திராத.. ஒரு மாசத்துல வெளில வந்திருவேன்..” என்றெல்லாம் யதார்த்தவாத பிளான் செய்யும் சம்பத்தின் கதை வெகு சுவாரஸ்யம்..! இவருக்கு ஜோடியாக ஈடு கொடுத்து அலப்பறை செய்திருக்கிறார் ரவி மரியா. 

குருதேவின் ஒளிப்பதிவு படத்தின் கதைக்கேற்ப தனலாய் கொதிக்கிறது.. படம் முழுக்கவே அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளும், பொறி கிளப்பும் ஆக்ஷன்களுமாக இருக்க அதற்கேற்றாற்போல வெறித்தனமாக வெள்ளையடித்த எபெக்ட்டை கடைசிவரையிலும் காட்டியிருக்கிறது..! எடிட்டிங்குதான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது..! துப்பாக்கிக்காக நடக்கும் சண்டை.. வீட்டுக்குள் நடக்கும் சண்டைகள்.. அடுத்தடுத்து திலீபன் தப்பிக்கும் காட்சிகள் என்று பலவற்றில் எடிட்டிங் வித்தைகளே படத்தை ஈர்க்க வைக்கின்றன..!

கிப்ரான் இசையாம்.. டைட்டிலில் பார்த்தேன்.. ஏதோ வார்த்தைகளை போட்டு பாடல்களை நிரப்பியிருக்கிறார்கள். எதுவும் மனசில் நிற்கவில்லை.. பின்னணி இசை மட்டுமே ஒன்றிரண்டு இடங்களில் தடதடக்க வைத்தது..! 

ஆயிரம் லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் கதையில் அழுத்தமும், இயக்கமும் இருந்தால் நிச்சயம் அந்தப் படம் வெற்றிதான்.. உதாரணம் துப்பாக்கி.. இதில் இந்த இரண்டுமே இல்லாது போனதாலும், புதுமுக நடிகரின் அவ்வளவாக ஈர்ப்பில்லாத நடிப்பும் சேர்ந்து படத்தை ஓஹோவென்று சொல்லவிடாமல் தடுக்கிறது..! அதற்காக ஆஹாவென்றும் சொல்ல முடியாது.. ஏதோ ஜஸ்ட் டைம் பாஸ்..! 

நம்ம அஞ்சலியை பார்க்கணும்னா போயிட்டு வாங்க..!


பரதேசி - சினிமா விமர்சனம்

16-03-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இது மாதிரியொரு சினிமாவை இயக்கித் தர பாலாவால் மட்டுமே முடியும்..! மனித மனங்களின் ஆசை, விருப்பு, வெறுப்பு, கோபம், பொறாமை, குரோதம், காமம் என்று அனைத்தையும் கலந்து கட்டியடிப்பதில் பாலாவுக்கு நிகர் பாலாதான்..! அவருடைய ஆறாவது படைப்பான இதுவே, அவர் பெற்றெடுத்த பிள்ளைகளில் மிகச் சிறப்பானது என்பதில் ஐயமில்லை..!

1939-களில் நடந்த கதையை இத்தனையாண்டுகள் கழித்து செய்வதற்கே ஒரு தைரியம் வேண்டும்.. அதன் நேர்த்தியை, களத்தை, கதையை சிறிதும் கெடாமல், முடிந்தவரையிலும் ருசிக்க வைக்கும் பண்டத்தை போல சுவைபட கொடுப்பதும் ஒரு படைப்பாளியின் திறமை.. பாலா மட்டுமே தனிப்பட்ட குணத்தில் சினிமாவுலகத்தில் பெரும் சர்ச்சையான மனிதராக இருந்தாலும், பத்திரிகையாளர்களால்கூட பெரிதும் மதிக்கத்தக்க இயக்குநராகவே இருக்கிறார்.. இப்போது இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார்..!

ஆங்கிலத்தில் பி.எச்.டேனியல் எழுதி ‘ரெட் டீ’ என்ற பெயரில் வெளிவந்து, தமிழில் 'எரியும் பனிக்காடு' என்ற பெயரில் இரா.முருகவேலால் மொழி பெயர்க்கப்பட்ட இக்கதை இத்தனை நேர்த்தியாக நெய்யப்பட்டு வெளிவரும் என்று நூலாசிரியர்களே நினைத்திருக்க மாட்டார்கள்.. இன்று காலையில் இருந்தே இந்த ‘எரியும் பனிக்காடு’ நூல் இணைய உலகில் அதிகம் பேசப்பட்டு வருகிறது..! அதன் ஆசிரியருக்கு வாழ்த்துகள்..!


1939-களில் தென்தமிழ்நாட்டில் நெல்லை சீமையோரமாக இருக்கும் சாலூர் கிராமத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைக் கதை..!  நிஜமாகவே ரத்தமும், சதையுமாகவே சொல்லப்பட்டிருக்கிறது..! முதல் பகுதியில் எத்தனை சந்தோஷமாக வாழ்ந்த அந்த மக்கள், இரண்டாம் பகுதியில் ஆங்கிலேயரின் அடிமைத்தனத்தில் சிக்கி எப்படி தங்களது வாழ்க்கையை தொலைத்தார்கள் என்பதை உருக்கத்துடன் உருக்கியிருக்கிறார் பாலா..!

கிடைக்கின்ற கூலியையும், தானியங்களையும் வைத்து வாழ்ந்து வரும் மக்களிடையே அதிகப் பணம் என்ற ஆசை காட்டி இழுக்கிறார் கங்காணி.. தங்களது சொந்த மண்ணைவிட்டு போக வேண்டிய வருத்தம் இருந்தாலும், பஞ்சம் பொழைக்க போய்த்தானே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சொர்க்க பூமிக்கு பயணமாகிறார்கள் மக்கள்..! 

48 நாட்கள் நடை பயணத்திற்குப் பின்பு கேரள எல்லையில் இருக்கும் அந்த எஸ்டேட்டுக்குள் போன பின்புதான் தெரிகிறது அது அவர்களுக்கு நரகம் என்று..! அடியாட்களின் மிரட்டல்கள், அடி, உதை.. எஸ்டேட் ஓனரின் பாலியல் வேட்கைக்கு பெண்கள் பலியாவது..! தப்பித்துப் போக பார்த்தால் கெண்டைக்கால் நரம்பை கட் செய்வது..! கூலிப் பணத்தில் காந்தி கணக்கு எழுதி பணத்தைக் குறைவாகக் கொடுப்பது.. நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் கடுமையான வேலை என்று தாங்கள் கொண்டு வந்த சந்தோஷத்தை அங்கே ஒரே நாளில் இழக்கிறார்கள் அந்த அப்பாவி மக்கள்..! 

நமது ஹீரோ ராசா என்னும் ஒட்டு பொறுக்கியாக கிண்டலுடன் அழைக்கப்படும் ரெண்டுங்கெட்டான் மனதுடன் இருக்கும் கேரக்டர் அதர்வா..!  ஊரில் இருக்கும்போதே வேதிகா என்னும் அங்கம்மாவுடன் காதல்.. அது ஒரு எல்லை மீறியதாகவும் இருக்க… அதர்வா எஸ்டேட்டுக்கு கிளம்பி வந்தவுடன் அங்கே அங்கம்மாவின் வயிற்றில் பிள்ளை..!  4 ஆண்டுகள் கழித்தும் ஊருக்குச் செல்ல வழியில்லாமல் மீண்டும் அடிமைத்தனம்..! இன்னும் 2 ஆண்டுகள் கழித்தும் போக முடியாமல் தவிக்கும்போது அந்த கிளைமாக்ஸ்..! அடிவயிற்றில் ‘ஐயோ’ என்னும் ஒரு உணர்வை ஒரு நொடியில் கொண்டு வந்து காண்பித்துவிட்டார் பாலா..! 

முதல் பாதியில் படம் ரன் வேகத்தில் பறக்கிறது..! இறந்து கொண்டிருப்பவரின் கை உயரத் தொடங்கியபோதுதான் ‘ஓ இடைவேளையா’ என்ற எண்ணமே வந்தது.. இத்தனையாண்டுகள் கழித்து இப்படியொரு சிச்சுவேஷன்.. இடைவேளைக்கு பின்பும் சற்றும் செல்பேசியைத் துழாவ விடாமல் வைத்த கண் பார்க்காமல் திரையை பார்க்க வைக்கிறார் இயக்குநர் பாலா..!  வெறித்தனமான இயக்குநர் என்றே பெயரெடுத்திருக்கும் பாலா, இதில் தனது பெயரை இன்னமும் அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார்.. டைட்டிலில் ஆரம்பிக்கும் அவரது தனித்துவம், இறுதிவரையிலும் தொடர்கிறது.. இந்தக் காட்சியை முன்னமேயே இந்தப் படத்தில் பார்த்தோமே என்கிற எண்ணம் ஒரு காட்சியில்கூட மனதில் தோன்றவில்லை..! 

தனது வாழ்க்கை கேலிக்குரியதாக இருக்கிறது என்பதைக்கூட புரிந்து கொள்ளாத ஒரு கேரக்டர் அதர்வாவுக்கு.. இனிமேல் அவரிடம் இருக்கும் மிச்ச சொச்சத்தைத்தான் அடுத்தடுத்த படங்களில் அவர் காட்ட வேண்டும்..! ‘ஒட்டுப் பொறுக்கி’ என்றவுடன் வரும் கோபம்.. தனக்கு சோறு கிடைக்கவில்லை என்ற கோபத்தில் ‘ராசா கெளம்பிட்டாரு’ என்று ஆற்றாமையுடன் கிளம்புவது.. ‘எதுக்கு ராசா அடிக்குறீக?’ என்று அப்பாவியாய் கேட்டு உதை வாங்கத் துவங்கும் அதர்வாதான் பிற்பாதியில் படத்தினை தன் தோளில் சுமக்கிறார்..! இறுதியில் “நியாயமாரே..” என்ற உச்சியில் அமர்ந்து கூக்குரலிடும் காட்சியில் நமக்கே கண் கலங்குகிறது.. இங்கேதான் ஒரு இயக்குநரை நடிகன் ஜெயித்திருக்கிறான். நிச்சயம் அதர்வா மிகச் சிறந்த நடிகராக மேலும் வருவார்..!

வேதிகாவைவிடவும், தன்ஷிகா எனக்குப் பிடித்தமானவராக இருக்கிறார்..! அந்தச் சிடுசிடுப்பு.. கோபம்.. எரிச்சல்.. கருத்தக்கன்னி மீதான பரிவு.. ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னைத் தானே திட்டுக் கொள்வது.. அங்கம்மாளின் நிலைமைக்கு அதர்வாவை திட்டுவது..! தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவனை.. ‘இருடி வர்றேன்.. உன்னைத் தேடி வந்து வைச்சுக்குறேன்’ என்ற ஆத்திரம் தீர கிளம்பும் அந்த பெண்மையே ரொம்பவே ரசிக்க முடிகிறது..! அவருடைய முடிவு, படத்திலேயே மிகப் பெரிய இழப்பு..! 

வேதிகா, கண்களை மட்டுமே நம்பி முற்பாதியில் நடித்திருக்கிறார். இறுதிக் காட்சியில்.. அதுதான் நடிப்பு..! அதர்வாவை அவர் கிண்டல் செய்கிறாரா.. அல்லது சீரியஸாக காதலிக்கிறாரா என்பதையே கொஞ்சம் நாமளே சிந்தித்துத் தெரிந்து கொள்ளட்டும் என்ற பாணியில் இருக்கும் திரைக்கதையால் அதர்வாவின் மேல் அச்சச்சோ உணர்வு பார்வையாளர்களுக்கு அதிகரிக்கத்தான் செய்கிறது..!

கொஞ்ச நேரமே வந்தாலும் ஐஸலக்கா பாடவும், ஆடவும் வைக்கிறார் கவிஞர் விக்கிரமாதித்யன்..! இவர்களையும் தாண்டி நடிப்பில் ஜெயித்திருப்பவர் அதர்வாவின் பாட்டியாக வரும் கச்சம்மாள்.. மனுஷி பின்னி எடுத்திருக்கிறார்..! வெகு இயல்பான நடிப்பு.. இந்த வயதில்.. இவரிடம் போய் எப்படி கதையையையும், திரைக்கதையையும், வசனத்தையும் சொல்லி நடிக்க வைத்தார்கள் என்பதே புரியவில்லை.. கிழவியின் பெர்பார்மென்ஸை பார்த்தால் 100 படங்களில் நடித்தவர் போல இருக்கிறார்..!  

அண்ணன் ராதாரவி அவசியம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.. தமிழ்த் திரைப்படங்களில் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வரப் போவதாக ரொம்ப நாளாகவே சொல்லி வருகிறார்.. அது மாதிரியான ஒரு விதிமுறை சுத்த ஹம்பக் என்று இந்தப் படமே அடித்துச் சொல்கிறது.. இதில் நடித்தவர்களில் 10 பேரை தவிர மீதி அத்தனை பேருமே அந்தப் பகுதி மக்கள்தான்.. புதிய நடிகர், நடிகைகள்.. ஆனால் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.. நடித்திருக்கிறார்கள்.. அத்தனையும் தத்ரூபம்..! இது போன்ற விதிமுறையெல்லாம் இப்போதைய காலக்கட்டத்தில் வேலைக்கு உதவாது என்பதை நடிகர் சங்க நிர்வாகிகள் புரிந்து கொள்ள வேண்டும்..!

எத்தனை கடின உழைப்பு உழைத்திருக்கிறார்கள் என்பதை படத்தைப் பார்த்தாலே புரிகிறது..! சாலூர் கிராமத்தை செட் போட்டு அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். கொஞ்சமேனும் சூரிய ஒளி படும்படியும், அதிகப்படியாக காடுகள் சூழவே இருப்பது போலவும் அமைத்திருப்பது மிகப் பொருத்தம்.. கலை இயக்குநருக்குத்தான் இந்தப் படத்தில் அதிக வேலை..! அற்புதமாக செய்திருக்கிறார் புதுமுக கலை இயக்குநர் சி.எஸ்.பாலச்சந்தர்..!

எந்த இடத்திலும் கலைத்துறையில் தவறுகள் நடந்துவிடாமல் இருக்க மிகவும் கவனத்துடனேயே செய்திருக்கிறார்..! மஞ்சள் கலர் போஸ்ட் கார்டு மேட்டர் மட்டுமே தவறாக படுவதாக பரவலான குற்றச்சாட்டு.. சரி.. போகட்டும்.. விட்டுவிடுவோம்.. இது போன்ற பீரியட் பிலிம் என்றாலே அப்போதைய கலாச்சாரத்தையும் காண்பித்தாக வேண்டும்..! அதுவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.. இல்லாவிடில் அதுவே படத்தில் காமெடியாகிவிடும்..!

ஆண்டான்-அடிமை கலாச்சாரம் அப்போதே நமது சமூகத்தில் புரையோடியிருப்பதை இதிலும் தொட்டுக் காண்பித்திருக்கிறார் பாலா..! கங்காணி கூலியாட்களை மிரட்டுகிறான்.. கங்காணியை ஆங்கிலேயே துரை சவட்டி சவட்டி அடிக்கிறான்.. ஆங்கிலேயனின் அடிமைப்படும் தமிழனே இன்னொரு தமிழனை துன்புறுத்துகிறான்.. ஏன் கொலையே செய்கிறான்.. இங்கே உணர்வற்ற ஜனங்களையும், கல்வியறிவற்ற நிலையில் இருந்த மக்களையும்தான் குறிப்பிட்டிருக்கிறார்..!

தேயிலைத் தோட்டத்தில் மர்ம நோயால் கொத்து, கொத்தாக சாவுகள் நடக்கும்போது ஆங்கிலேய துரைமார்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் பேச்சுக்களும், அதில் ஒருவரின் ஆங்கிலேய மனைவி, காந்தியை உயர்வாகப் பேசுவதும் அவர்களை நியாயவாதிகளாக காட்டுவதற்குப் பயன்பட்டாலும், அந்த ஆங்கிலேயே துரை செய்யும் செயல்களெல்லாம் மனிதத்தன்மையில்லாதது என்பதால் அதுவே அர்த்தமற்றதாகிவிட்டது..!

தேயிலைத் தோட்டத்தின் பிரமாண்டம்.. அட்டைகள் காலில் ஒட்டிக் கொண்டு உறிஞ்சியெடுக்கும் பயங்கரம்.. சின்னப் பிள்ளைகள்கூட இந்த அடிமைத்தனத்தில் மாட்டிக் கொண்டு சித்ரவதைப்படுவது என்று நம் மனதை ஆய்ந்து வைக்கும் காட்சிகள் நிறையவே இருக்கின்றன.. 

கங்காணியாக இயக்குநர் ஜெர்ரி நடித்திருக்கிறார்..! கொள்ளை நோய்க்கு மருத்துவம் செய்ய வரும் டாக்டர் பரிசுத்தமாக நடன இயக்குநர் சிவசங்கர்..! வெள்ளையாக இருந்தவரை கருப்பாக்கி நடிப்பை மட்டும் கச்சிதமாக வாங்கியிருக்கிறார் பாலா..! அத்தோடு அவர் ஆடும் அந்த நடனமும், பாடல் காட்சிகளும் அருமை..!

மதுரை வீரனையும், குல தெய்வத்தையும் வணங்கிக் கொண்டிருந்த தமிழர்களை எப்படி மதமாற்றம் செய்து கிறித்தவர்களாக ஆக்கினார்கள் என்பதை பாலா எடுத்துக் காட்டியிருக்கும் இந்த விஷயம் அடுத்து தமிழகத்தின் சர்ச்சையான விஷயமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..! சிவசங்கரும், அவருடைய மனைவியும் சேர்ந்து நோயாளிகளுக்கு முதலில் சிலுவை போட சொல்லிக் கொடுத்து பின்பே சிகிச்சையளிப்பது, மதம் எந்த அளவுக்கு அப்போதே நம்மிடம் திணிக்கப்பட்டது என்பதை இந்த ஒரு படத்தின் மூலம் மட்டுமே பதிவாகியுள்ளது..!

ஜி.வி.பிரகாஷ்குமார் என்னும் இசையமைப்பாளர் இந்த படத்தில்தான் அறிமுகமாகியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.. டைட்டில் காட்சிகளில் தொடங்கி படத்தின் இறுதிவரையிலும் தேவையான இடங்களில் ஆர்ப்பரித்தும், அடங்கியும், அட்டகாசம் செய்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார். உண்மையாகவே ரீரெக்கார்டிங்கில் பின்னியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..! 

பாத யாத்திரையின்போது ஒலிக்கும் பாடல் உருக வைக்க.. சிவசங்கர் பாடும் பாடல் கொஞ்சம் காமெடியையும், சீரியஸையும் ஒன்றாகவே சேர்த்து தருகிறது..! கங்காணியை முதன்முதலாக அறிமுகம் செய்யும் காட்சியையும், தேயிலைத் தோட்டத்தின் பரப்பை ஏரியல் வியூவில் காட்டும் காட்சியிலும், அதர்வா தப்பிப் போகும் காட்சியிலும் ஜி.வி.பிரகாஷின் இசைதான் படபடக்க வைக்கிறது..! ஆனாலும் சிற்சில இடங்களில் பின்னணி இசையைக் குறைத்திருந்தால் சில நல்ல வசனங்கள் நன்றாகவே நமது காதுகளுக்குக் கேட்டிருக்கும்..!

மொத்தப் படத்தையும் எடுத்து முடித்துவிட்டு காட்சிகளை போட்டுக் காண்பித்துவிட்டு அதன் பின்புதான் பாடல்களை எழுதி இசையமைத்தார்களாம்.. என்னவொரு மேஜிக்..? காட்சிகளுக்கேற்ற பாடல்களை உணர்ச்சிகரமான வார்த்தைகளுடன் வழங்கியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து..! அவருடைய ஒரு பாடலிலேயே அவர்களது வாழ்க்கைக் கதையைச் சொல்லிவிட்டார்..! அங்கம்மாள்-அதர்வா மாண்டேஜ் ஷாட்டுகளை வைத்தே  காதல் பாடல் காட்சியை எழுதி வாங்கியிருக்கும் பாலா நிச்சயம் ஒரு டெர்ரரிஸ்ட்டுதான்..! 

முதல்தரமான இலக்கியவாதிகளின் லிஸ்ட்டில் இருக்கும் நாஞ்சில் நாடனின் வசனம்..! நெல்லை சீமை வசனங்கள் அதிகம் புரியும்படியாகவே இருந்தது..! கங்காணியின் பேச்சை பார்த்து பெண்கள் அதிசயிப்பது..! காசு பணம் வந்தால் பெண்களைகூட சேர்த்துக்குங்க என்ற கங்காணியின் பேச்சு.. “நியாயமாரே..” என்ற அதர்வாவின் கெஞ்சல்..! கச்சம்மாள் பாட்டியின் அத்தனை பேச்சுக்களும் என்று.. அனைத்தும் ரசனையானது..!

செழியனின் ஒளிப்பதிவில் குறையில்லை.. சாலூர் கிராம கெட்டப்பும், தேயிலைத் தோட்ட கெட்டப்பும் ஆக இரண்டுக்கும் வித்தியாசம் தெரியுமளவுக்கு முதல் தர ஒளிப்பதிவை தந்திருக்கிறார் செழியன்..! மக்கள் பாத யாத்திரையாக தேயிலைத் தோட்டம் நோக்கி நடப்பதை அவர் எடுத்துக் காட்டியிருக்கும் விதமே பாவத்தை வரவழைக்கிறது..! கேமிராவும் ஒரு நடிகர் என்பதை இந்தப் படமும் உணர்த்தியிருக்கிறது..! 

முதல் பாதியின் அசுர வேகத்திற்கும், இரண்டாம் பாதியின் சோகத்திற்கும் கிஷோரின் எடிட்டிங் பணி மிக முக்கியமானது..! எந்த இடத்திலும் ஜெர்க் ஆகாமலும், திசை திரும்பாமலும் படத்தினை இறுதிவரையில் அதன் டெம்போ குறையாமல் கொண்டு சென்றிருக்கிறார் கிஷோர்..! பாராட்டுக்கள்..!

ஊர்க் கல்யாணத்தை டமாரம் அடித்து தெரியப்படுத்தும்போது அதர்வாவையே கிண்டலடிக்கும் மக்கள்.. அரிசியை போட்டுவிட்டு அலுத்துக் கொள்ளும் பெண்கள்.. பெரியப்பா எங்கே என்று அதர்வா தேடித் தேடிக் களைத்துப் போவது.. பெரியப்பாவின் மனைவி கல்யாணம் நிக்கக் கூடாது என்பதற்காக புருஷன் செத்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று தடுப்பது..! ஆனாலும் விஷயம் தெரிந்து பெரியவர்கள் அழுது கொண்டே வாழ்த்துவது.. தாலி கட்டிய கல்யாணம் முடிந்த உடனேயே குல தெய்வத்திடம் வழிபாடு நடத்துவது.. பந்திக்கு முந்தும் காட்சிகளில் கூட ஆண்களுக்கு பின்பே பெண்கள் சாப்பிட அமர்வது.. பெரியவர்களுக்கு ஆண்களும், மற்றவர்களுக்கு பெண்களும் பரிமாறுவது..! விறகை வெட்டச் சொல்லிவிட்டு பின்பு கூலி மறுக்கும் கடைக்காரன்.. தன்னை பெயர் சொல்லி அழைத்தான் என்பதற்காக அதர்வாவை போட்டு புரட்டி எடுப்பது.. “ஊர்ல பிச்சையெடுக்கிறவனுக்கு என் பொண்ணு கேக்குதா..?” என்று அப்போதே நம்மிடையே இருந்த பிரிவினையையும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருந்த கவுரவத் தன்மையை குறை சொல்லாமல் சொல்லியிருப்பது.. என்று இயக்கத்திலும், திரைக்கதையிலும் அக்காலக் கட்ட வாழ்க்கை முறையை தெளிவுபடுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலா..!

“கூலி கொடுங்க ஐயா..” என்று அதர்வா கெஞ்சிக் கொண்டிருக்கும்போதுதான் கங்காணி அதர்வாவை முதன்முதலாக அடையாளம் காண்கிறார்..! தன் முன்னால் அடிமை போல் உட்கார்ந்திருப்பவனிடம் ஊர்ப் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு கங்காணி சிரிக்கும் சிரிப்புதான் லேட்டஸ்ட் வீடியோவில் பாலா சிரித்த சிரிப்பு என்று நினைக்கிறேன்..! இதுதான் படத்தின் முக்கிய திருப்பமே..! இவன் ஒருவனே அந்த ஊரின் நிலைக்கு எடுத்துக்காட்டு என்று நினைத்துவிட்டார் என்பதை ஒரு நொடியில் காட்டிவிட்டார் இயக்குநர்..!

கங்காணி என்பவர்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த மேனேஜர்கள்.. அவ்வப்போது பல்வேறு ஊர்களுக்கும் வந்து இந்த புள்ளை பிடிக்கும் வேலையைச் செய்கிறார்கள். இவர்களை மக்களுக்கு அப்போதே நன்கு அறிமுகமாகி தெரிந்துதான் இருக்கிறது என்பதை பல இடங்களில் வசனத்தின் மூலமாகக் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர்..! இல்லாவிடில் கடைக்காரர்,  “போ.. கங்காணி கூப்பிடுறார்..” என்று அறிமுகம் காட்டாமலேயே சொல்ல முடியுமா..?

சமீபத்தில் வெளியான வீடியோவை பார்த்துவிட்டு பாலாவை டெர்ரரிஸ்ட் என்றவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்..! காட்சிகளை இயக்குநர் சொல்லித் தரும்போது இதைத்தான் செய்வார்கள்..! அது டம்மி குச்சி என்பது அனைவருக்குமே தெரியும்.. அனைத்து படங்களிலும், அனைத்து இயக்குநர்களும் செய்யும் செயல்தான் இது.. இதுவே இப்படியென்றால் பருத்தி வீரனில் பொன்வண்ணன், பிரியாமணி குடையால் சாத்துகின்ற காட்சியை என்னவென்று சொல்வீர்கள்.. அது 15 டேக்குகள் எடுக்கப்பட்டதாம்..! நம்ப முடிகிறதா..?

இப்போது இந்த டீஸரை வெளிடாமல் இருந்திருந்தால் வெறுமனே படத்தில் அந்தக் காட்சியை பார்த்துவிட்டு நாம் மெளனமாக போயிருப்போம்.. இயக்குநர் சொல்லிக் கொடுப்பதை பார்த்தவுடன்தான் அனைவருக்கும் இது கொடூரமாகத் தெரிகிறது..! சினிமாவாக வெண் திரையில் பார்த்தால்..? ரசிகர்கள்தான் யோசிக்க வேண்டும்..!

பாலா படம் என்றாலே சோகத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும் என்பது நாம் அறிந்ததே..! ஆனால் இதில் அவர் காட்டியிருக்கும் உச்சக்கட்ட சோகம் ஒவ்வொரு சினிமா ரசிகனையும் கண் கலங்க வைத்துவிட்டது.. ‘சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ படங்களில் இருந்த அதே சோகத்துடன் கூடுதலாக ஏதோவொரு மன அழுத்தமும் இந்தப் படத்தின் மூலமாக கிடைக்கிறது. இதனாலேயே சொல்கிறேன் இதுவரை வந்த பாலாவின் படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்று..!!!

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வரலாறு இத்தனை கொடூரமாக இருந்தது என்பதை தமிழ்ச் சமூகம் இந்தப் படத்தின் மூலமாகத்தான் அறியும் என்று நினைக்கிறேன்.  அந்த முன்னோர்களுக்கு எனது நன்றிகள்..! நான் அருந்தும் ஒவ்வொரு துளி தேநீரிலும் எனது முன்னோர்களின் ரத்தமும் கலந்திருக்கிறது என்பதை நான் இந்தப் படத்தின் மூலமாக அறிகிறேன்.. அறிய வைத்த பாலாவுக்கு எனது இதயங்கனிந்த நன்றி..!  

தி.மு.க.வுக்கு கடைசி சான்ஸ்..!


13-03-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று தாங்கள் நடத்திய பந்த் வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக டெசோ அமைப்பு கூறியிருக்கிறது..! லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் காவல்துறை மற்றும் அரசு இயந்திரங்களின் உதவியால் அடக்கப்பட்டு முடக்கப்பட்டுவிட்டது.. அதையும் மீறி இப்போதும் பல இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரதம் நடத்தி வருகிறார்கள்.. இவைகளை எந்த வகைகளில் முடித்து வைக்கலாம் என்று யோசித்து வருகிறது ஆத்தாவின் தற்கொலைப் படையான போலீஸ்..! 

‘ஈழத்தாய்’ என்று வாய் கூசாமல் மேடையில் முழங்கியதைக் கேட்டு கடைவாய்ப்பல் தெரியும் அளவுக்கு தனது புன்னகையைச் சிந்திய அதே தாய்தான், இன்றைக்கு தனது ஏவல் படையினரை வைத்து இந்த உண்ணாவிரத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.. சட்டப் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை மற்றும் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானம் நிறைவேற்றினார்.. இலங்கைக்கு எதிராகவே பேசினார்.. ராஜபக்சேவை கண்டித்தார்.. எதிர்ப்பாளர்களே அகமகிழ்ந்தார்கள்.. ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை மன்னிக்கும் விவகாரத்தில் அந்தர்பல்டி அடித்தார்..! 

‘இலங்கை பிரச்சினை இந்த அளவுக்கு தீவிரமாக கருணாநிதியே காரணம்’ என்கிறார் ஜெயலலிதா..  ஆனால் கருணாநிதியால் பதிலுக்கு ஜெயலலிதாதான் எல்லாத்துக்கும் காரணம் என்று குற்றம்சாட்ட முடியவில்லை..! காரணம், கடைசியாக போர் நடந்த காலக்கட்டத்தில் மத்திய ஆளும் காங்கிரஸ் அரசுக்கு முட்டுக்கட்டை கொடுத்து அவர்களை ஆட்சிப் பொறுப்பில் நிறுத்தியிருந்தது தி.மு.க.தான்.. தி.மு.க. நினைத்திருந்தால் போரின் துவக்கத்திலேயே எப்பாடுபட்டாவது போரை நிறுத்தியிருக்கலாம்.. இல்லாவிடில் ஆட்சியில் இருந்து விலகிவிடுவோம் என்று மிரட்டியாவது அந்தக் கடைசிக்கட்ட ஈழப் போரை நிறுத்தியிருக்க வேண்டும்..! 

காங்கிரஸ் அவ்வளவு சீக்கிரமாக ஆட்சிக் கட்டிலில் இருந்து இறங்க முயலாது.. அதனால் ஒருவேளை இவர்களது மிரட்டலுக்கு அவர்கள் பயப்பட வேண்டிய கட்டாயம் வந்திருக்கும்..! ஆனால் கடைசிவரையில் சீரியல்களே தோற்றுவிடும் அளவுக்கு சீன்களை போட்டு முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு தானே ஒரு காரணகர்த்தாகவாகவும் ஆகிவிட்டார் கருணாநிதி..! 

இப்போதும் அதே கொலைகார காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து அவர்களது ஆட்சியில் வெட்கமில்லாமல் பங்கெடுத்து வருகிறது தி.மு.க. அதே தி.மு.க.தான் இன்றைக்கு பந்த்தையும் நடத்துகிறது.. யாரை எதிர்த்து. எதற்காக நடத்துகிறோம் என்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமல்.. கொஞ்சமும் கூச்ச நாச்சமும் இல்லாமல் இன்றைக்கு தி.மு.க. தலைவர்கள் ‘வெற்றி’, ‘வெற்றி’ என்று கூக்குரலிடுவதைக் கேட்கும்போது நமக்கு வாய்த்த தறுதலைகளை நினைத்து நாம் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை..!

மத்தியில் ஆளும் அரசின் ஒரு அங்கமாக இருந்து கொண்டே அதே மத்திய அரசை வலியுறுத்தியும், கண்டித்தும் போராட்டம் நடத்துவது என்பது வேடிக்கையாக இல்லை...?! ஆனால் வருடக்கணக்காக இது போன்ற கண் துடைப்பு நாடகங்களை நடத்தியே பழகிப் போய்விட்டதால் தி.மு.க.வினருக்கு இதுவொரு வாடிக்கையாகிவிட்டது..!

மாணவர்கள் உண்மையாக அறிவாலயத்தை எதிர்த்து, தி.மு.க.வை எதிர்த்துதான் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும்.. மத்தியில் ஆளும் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று தி.மு.க.வைக் கண்டித்துதான் போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டும்.. லயோலா மாணவர்களின் போராட்டக் களத்தை திசை திருப்ப டெசோ அபிமானிகள் மேற்கொண்ட முயற்சிகளைப் பார்க்கும்போதும் ஒரு விஷயம் தெளிவாகிறது.. எந்தப் போராட்டமாக இருந்தாலும் “தாங்கள்தான் முன்னால் நிற்போம்.. நீங்களெல்லாம் எங்களுக்கு வால்தான் பிடிக்க வேண்டும்..” என்கிற அரசியல் தலைகளின் ஆணவம்தான் அது..! முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தின்போதே திருமாவின் கட்சிக்காரர்கள்தான் மாணவர்களை அடித்து, விரட்டி கூட்டத்தை சிதைத்து ஊர்வலத்தை இழுத்துக் கொண்டு போனார்கள்..! அதை அவர்களால் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது..! 

உண்ணாவிரதம் என்பதே ஒருவகையில் பிளாக்மெயில்தான்..! இதனை உலகம் முழுவதுமே கடைபிடித்திருக்கிறார்கள்..! காந்தியார் எத்தனை முறை உண்ணாவிரதம் இருந்து அஹிம்சை வடிவத்திற்கு உயிர் கொடுத்தார் என்று தெரியவில்லை.. அதனால் இது அஹிம்சை வழியாகிவிட்டது.. அந்த வழியை இன்றைக்கும் புத்தகங்களில் மிகச் சிறப்பாக எழுதி, அதையே படிக்கச் சொல்லிவிட்டு, இன்று ஏதேனும் ஒரு கோரிக்கைக்காக அதனைக் கையில் எடுத்தால் சட்டம் ஒழுங்கு கெடுகிறது என்று சொல்லி கைது செய்து உள்ளே வைக்கிறார்கள்..! இந்தக் கேவலங்கெட்ட இந்திய அரசியல்வியாதிகளுக்கு பிரிட்டிஷ்காரனே பரவாயில்லை போலிருக்கே..!?

உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களிடத்தில் போய் “இது வேலைக்கு ஆகாது.. நாம் மத்திய அரசைத்தான் எதிர்க்க வேண்டும்.. ஐ.நா.வைத்தான் மிரட்ட வேண்டும்..” என்றெல்லாம் கதை விட்டிருக்கிறார் திருமா. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அவங்களோட கூட்டணில நாம ஏன் இருக்கணும்ன்னு தன்னோட மனசாட்சியிடம் கேட்கவே மாட்டாரா திருமா..? இப்பவும்.. இவ்வளவு தூரம் நடந்த பின்பும், “நாங்கள் மத்தியில் கூட்டணியில் இருப்பதா வேண்டாம் என்பதை பரிசீலனை செய்ய வேண்டிவரும்..” என்று கிச்சு கிச்சு மூட்டுகிறார்.. வெட்கங்கெட்ட அரசியல்..!

இவர் வானளாவப் புகழும் பிரபாகரனின் உயிரைப் பறித்துக் கொண்ட அதே ராஜபக்சேவை நேரில் சென்று சந்தித்து அளவளாவிவிட்டு,  “கண்டனம் தெரிவிக்கவே நான் சென்று வந்தேன்..” என்று கூசாமல் சொன்னபோதே, திருமா இந்திய அரசியலில் பாஸ் மார்க் செய்துவிட்டார் என்பது புரிந்துவிட்டது..!  பிரபாகரனின் தாய் மற்றும் தந்தையர் இறந்தபோது மத்திய அரசில் தனக்கிருக்கும் செல்வாக்கின் மூலமாக விசா பெற்று அங்கே சென்றபோதே அவர் தமிழகத்து அரசியலில் தனியிடத்தைப் பிடித்த இதையும் ஒரு படிக்கல்லாகப் பயன்படுத்துகிறார் என்பதும் புரிந்துவிட்டது.. இது புரிந்துதான் வைகோ தலைமையினர் அவரிடமிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள் போலும்..!

இதில் கொஞ்சம் வித்தியாசமானவர் செந்தமிழன் சீமான்..! எங்கு பார்த்தாலும் கை முஷ்டியை காட்டி ஜெயிப்போம் என்று சொல்லிவரும் அண்ணன், இன்றுவரையிலும் எங்கேயிருக்கிறார் என்று தெரியவில்லை.. மாணவர்களை தூக்கிச் சென்று மருத்துவமனையில் வைத்ததை  கண்டித்துகூட அறிக்கை விடவில்லை என்றால் அண்ணனின் தைரியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்..! ஆத்தாவிடம் அடுத்த கூட்டணிக்கு சீமான் தயாராகிறாரோ..? என்ன எழவோ..? 

ஆத்தாவை சொல்லவே வேண்டாம்.. முழு ஓய்வில் இருக்கிறார்.. புதிய அமைச்சர்கள் வேலைகளை சரியாகச் செய்கிறார்களா என்று தனது உளவுத் துறை போலீஸை அனுப்பி தினமும் ரிப்போர்ட் பெற்று தனது அரசு கடமையைச் செய்து வருகிறாராம்.. தான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே அமைதியாகிவிடும் என்று அடிக்கடி சொல்லி வரும் ஆத்தா, அதற்கேற்றாற்போன்ற சூழ்நிலையை உருவாக்கவே தனது ஏவல் படையை பயன்படுத்துகிறார்.. இப்போதும் மாணவர்களை அடக்கி ஒடுக்கி வைத்து எப்படியாவது அமைதிப் பூங்கா என்ற பெயரைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்..! 

அதே சமயம் பெங்களூர் கோர்ட் வழக்கில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று சகல வழிகளையும் யோசித்து அனைத்து வழிகளையும் திறந்தே வைக்கிறார் என்பதும் புரிகிறது..! ஒரு பக்கம் மத்திய அரசைத் திட்டுவது.. இன்னொரு பக்கம் அவர்களுக்கு மறைமுகமாக உதவிகள் செய்வது.. இன்னொரு பக்கம் அரசியல் களத்தில் காய்களை நகர்த்த ஈழத்து பிரச்சினையை பயன்படுத்துவது என்று அனைத்தையும் சப்தமில்லாமல் செய்து வருகிறார் இந்த ஈழத்து தாய்.. 

உண்மையாக இவர்தான் ஈழத்துத் தாய் என்றால் இவர்தானே இந்த உண்ணாவிரதத்திற்கு முன்னால் நின்றிருக்க வேண்டும்..! காவிரி பிரச்சினைக்காக இவர்பாட்டுக்கு மெரீனா பீச்சில் கேரவன் வேனை பக்கத்தில் நிறுத்திக் கொண்டு உண்ணாவிரதம் இருந்தபோது அது தவறான வழிமுறையாக இவருக்குத் தோன்றவில்லையா..? இப்போது ஈழப் பிரச்சினைக்காக அதனை மற்றவர்கள் பின்பற்றக்கூடாதா..? என்ன எழவு அறிவுடா இவங்களுக்கு இருக்கு..? 

ஒரு இனமே பாதி அழிந்துவிட்டது.. மிச்சத்தில் பாதி உள்நாட்டிலும் பாதி வெளி நாட்டிலும் இருக்கிறது.. உள் நாட்டில் இருக்கும் இனத்தில் பாதிப் பேருக்கு கல்வி அறிவே கொடுக்கப்படவில்லை என்னும் உண்மையை நமது அரசியல்வாதிகள் எப்போதுதான் உணர்வார்கள்..? ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை முதலில் அழிக்க வேண்டும் என்பார்கள். இன்றைக்கு அதனைக் கச்சிதமாகச் செய்திருக்கும் சிங்கள அரசு கூடுதலாக நமது தொப்புள் கொடி சொந்தங்களின் மூன்றாம் தலைமுறைக்கு செய்திருக்கும் மிகப் பெரிய கொடுமையே அவர்களுக்கான கல்வியை மறுத்திருப்பதுதான்..! 

இத்தனையாண்டு கால ஈழத்து வரலாற்றில்  புலிகள் தந்த பள்ளிக்கூட வாய்ப்புகளை மட்டுமே பெற்றிருக்கும் அந்தத் தலைமுறையும், அதற்கடுத்த தலைமுறையும் நமது பிள்ளைகள் அனுபவிக்கும் கல்வியின் ஒரு பகுதியையாவது தொட்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்..! இப்படியொரு இனத்தையே கற்காலத்தில் பின்னோக்கித் தள்ளியிருக்கும் சூழலில் எப்பாடுபட்டாவது மிக விரைவில் அவர்களை சுதந்திர தனி ஈழத்தில் அமர்த்த நினைக்காத இந்திய, தமிழக அரசுகளை நினைத்தால் இங்கேயும் ஒரு பிரபாகரன் வரக் கூடாதா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது..!

எத்தனையோ ஈழத்துத் தமிழர்கள் பல வெளிநாடுகளில் என்னென்னமோ அடிமைத்தனமான வேலைகளைச் செய்து தங்களது வயிற்றை நிரப்பி.. சொல்ல முடியாத துயரங்களை சந்தித்துவிட்டு.. தாங்கள் இறப்பதற்குள் தங்களது தாய் மண்ணைத் தொட்டுவிட வேண்டும் என்ற நினைப்போடு ஒவ்வொரு நாளையும் கடந்து வரும்வேளையில்.. அவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலையும், ஆதரவையும் தர வேண்டிய தமிழகம் தங்களது சுயலாபத்துக்காக அவர்களைப் பயன்படுத்திக் கொள்வது கேவலத்திலும் மகா கேவலம்..!

தனி ஈழம் தவிர வேறு எதுவும் இனிமேல் பலனளிக்காது.. தமிழர்களும், சிங்களவர்களும் ஒரே சகோதரர்களாக வாழ முடியாத சூழலை அங்கேயிருக்கும் அரசியல்வியாதிகள் உருவாக்கிவிட்டார்கள் என்பதை உலக சமுதாயத்திற்கு தகுந்த முறையில் எடுத்துக் கூற வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உண்டு. ஐ.நா. மூலமாகவே இலங்கைக்கு கடும் நெருக்கடி கொடுத்து நிச்சயம் முடிந்தால்.. தனி ஈழத்தைச் சாதிக்கலாம்..! ஆனால் அதற்கு தமிழர்களை சொந்தங்களாக கருதும் மத்திய அரசு முதலில் தேவை.. இப்போது இருப்பவர்களை அந்த நிலைமைக்குக் கொண்டு வர எம்.பி.க்கள் என்னும் துருப்புச் சீட்டுக்களை கையில் வைத்திருக்கும் தி.மு.க.தான் முன்வர வேண்டும்..! 

தனது குடும்பத்தினருக்கு இந்த அமைச்சுப் பதவிதான் வேண்டும்.. இல்லையெனில் பதவியே ஏற்க மாட்டார்கள் என்றெல்லாம் மிரட்டத் தெரிந்த தாத்தாவுக்கு.. தனி ஈழத்துக்கு ஆதரவு கொடுக்கவில்லையென்றால், தங்களுடைய ஆதரவும் இல்லை என்று சொல்ல மட்டும் தைரியம் ஏன் வரவில்லை..? மகாபாராத திருதராஷ்டினைவிட மோசமாக குடும்பப் பாசத்தில் சிக்குண்டவராக இருக்கும் இவரை நினைத்தால் ஒரு பக்கம் பாவமாகவும் இருக்கிறது.. இன்னொரு பக்கம் கோப வெறியும் வருகிறது..!

தனது பிள்ளைகளின் பணத்தாசை.. குடும்பத்தாரின் அதிகார வெறி.. கட்சியினரின் ஆட்சி வேட்கை.. இதையெல்லாம் தாண்டி இவரால் தற்சமயத்துக்கு வேறு எதையும் யோசிக்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை..! தன் காலம் எப்படி போனாலும் போகட்டும் என்ற நினைப்போடு முடிந்தவரையில் பிள்ளைகளை அனுசரித்து போவதே தனக்கு நல்லது என்று நினைத்து காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்..! 

உலகம் முழுவதிலும் இருக்கும் ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் இப்போது இவர் ஒருவரே.. கருணாவைவிடவும், டக்ளஸை விடவும் மிகப் பெரிய துரோகியாகிவிட்டார்..! ஜெயலலிதாவை இந்த லிஸ்ட்டில்கூட சேர்க்காமல் இருக்க ஆரம்பத்திலேயே பழகிவிட்ட ஈழத்து மக்கள், கருணாநிதியை மன்னிக்கத் தயாராக இல்லை என்பதை அவர் ஏன் இன்னமும் உணரவில்லை என்பதும் தெரியவில்லை..!

இப்போதும் கெட்டுவிடவில்லை.. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியைவிட்டு விலகிவிட இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன்.. இருக்கின்ற கொஞ்ச நஞ்ச பெயரைக் காப்பாற்றிக் கொள்ள இதனைத் தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை தனி ஈழத்துக்கு ஆதரவு என்கிற நிலையை எடுக்க வைத்தாலே ஈழத் தமிழர்கள் தி.மு.க.வையும் கருணாநிதியையும் ஏறெடுத்து பார்ப்பார்கள். நிச்சயம் கையெடுத்து வணங்குவார்கள்..! 


ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம்

10-03-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உக்கார வைச்சு கொல்றதை அனுபவிக்கணுமன்னா இந்தப் படத்தை நீங்க அவசியம் பார்க்கணும்..! சினிமாவுலகில் நேரம் காலம் தெரியாமல் உழைக்கும் உழைப்பாளியென பெயர் எடுத்திருக்கும், நடிகர் விஜய்யின் ஆஸ்தான பி.ஆர்.ஓ., பி.டி.செல்வக்குமார் முதன் முறையாக இயக்கியிருக்கும் படம் இது..! இவர் ஏற்கெனவே ‘பந்தா பரமசிவம்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார்.. காமெடின்னா அண்ணனுக்கு ரொம்பவே பிடிக்குமாம்..! அதனாலேயே முதல் இயக்கத்திற்கு காமெடியை கையில் எடுத்திருக்கிறார்..! ஆனால் இறுதிவரையில் லேசான கிச்சுகிச்சு மூட்டல்களைத் தவிர, வேறு எந்த வகையிலும் சிரிப்பலை தியேட்டரில் இல்லை..!


கல்யாணமாகி அவஸ்தைப்படும் 3 இளைஞர்கள் அந்த வாழ்க்கையில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒன்று சேர்கிறார்கள்.. 4-வது நண்பனின் கல்யாணத்திற்காக பெங்களூர் வந்தவர்கள் அங்கே தங்களது 5-வது நண்பனையும் சந்தித்து அவன் மூலமாக சொகுசாக வாழ்கிறார்கள்.  லஷ்மிராயை பார்த்து ஆள், ஆளுக்கு ஜொள்ளுவிட்டு நெருங்குகிறார்கள். கடைசியாக லஷ்மிராய் தனது வில்லத்தனத்தைக் காட்ட அடி, உதை வாங்கிவிட்டு மீண்டும் தத்தமது மனைவிகளிடமே வந்து சரணடைகிறார்கள்..! இவ்வளவுதான் கதை..! இதுக்கு ஏன் இத்தனை சுத்தல்..?

‘பவர் ஸ்டார்’ டைட்டில் காட்சியில் ஆடியிருக்கிறார். இதுக்காகவே கூட்டம் அள்ளிக்கிட்டு வரும்ன்னு நினைச்சுட்டாங்க போலிருக்கு..! படத்தை துவக்கி வைப்பதும், முடித்து வைப்பதும் இவரே..! வினய்க்கு குண்டான மனைவி.. சத்யனுக்கு அடிமையாக நடத்தும் மனைவியும், மாமியாரும்.. அரவிந்த் ஆகாஷுக்கு மனைவியால் கூட்டுக் குடும்பத்தில் குழப்பம்.. இதில் வித்தியாசமாக பிரேம்ஜிக்கு தனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் டீச்சர்கள் மீதுதான் லவ்வு.(வெளங்கிரும் தமிழ்ச் சினிமா)  லஷ்மிராய்க்கு தன்னிடம் ஜொள்ளுவிடும் ஆண்களிடம் கொள்ளையடிக்கும் குணம்.. இத்தனையையும் ஒன்று சேர்த்து தன்னால் முடிந்த அளவுக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்..!

இருப்பதிலேயே கொஞ்சமாவது நடித்திருப்பவர் சத்யன்தான்..! மனைவி, மாமியாரிடம் மாட்டிக் கொண்டு இவர் படும் அல்லல்கள்.. கொஞ்சமேனும் உதட்டைப் பிரிக்க வைக்கிறது.. பிற்பாதியிலும் இவர் மட்டுமே கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்..! Do what I say என்பதையே சொல்லிச் சொல்லி டார்ச்சர் செய்யும் மாமியாராக மந்த்ரா..! எப்படியோ இருந்து.. இப்போது மறுபடியும் ‘சிக்’ லெவலுக்கு வந்திருக்கிறார்.. ஆனாலும் இவர் மாதிரியான ஹீரோயின்களுக்கு மாமியார் வேடம் கொடுத்து ரிட்டையர்ட்மெண்ட் அளிக்கும் கோடம்பாக்கத்து இயக்குநர்களுக்கு எனது  கண்டனங்கள்..! இதில் கராத்தேயில் பிளாக் பெல்ட் என்று சொல்லி சண்டை காட்சி வேறு..!? 

சத்யன் கதை சொல்கிறார்.. பின்பு வினய் கதை சொல்கிறார்.. பின்பு அரவிந்த் ஆகாஷ் கதை சொல்கிறார்.. இதற்குப் பின்பு மூவரும் பெங்களூர் சென்று பிரேம்ஜியை சந்திக்கிறார்கள். அவரும் ஒரு கதை சொல்கிறார்.. இப்படியே கதை, கதையாகவே போய்க் கொண்டிருக்க முற்பாதியிலேயே படம் வெகுவாக போரடித்துவிடுகிறது..! 

சத்யனி்ன் கதையாவது பரவாயில்லை.. சத்யனின் நடிப்பால் கொஞ்சம் பார்க்க முடிகிறது. அரவிந்த் ஆகாஷ், வினய் கதைகள் செம போர்.. ‘நாயகனை’ இமிடேட் செய்து லொள்ளு சபா காட்சிகளை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி காட்சிகளையும் காப்பியடித்து எடுப்பது..? ‘நாயகன்’ மட்டும் வழக்கம்போல ஓகே..!

இளையராஜாவை எந்த இடத்திலும் தவற விட முடியாது என்பது உண்மைதான் போலும்.. இசையமைப்பாளர் கே-யால் முடியாததை இளையராஜா இதில் நிரப்பியிருக்கிறார்..! நிரோஷா கேரக்டரில் சோனாவை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ பாடல் காட்சியும், பிரேம்ஜியுடனான லவ்வும் உவ்வே..!  இப்படி டீச்சரை லவ் பண்ணலாம்ன்னு வசனத்திலேயே சொல்லிக் கொண்டு போய், நாட்டில் அது நிறையவே நடக்கப் போகிறது..! இதுக்கும் ஒரு பஞ்சாயத்து சீக்கிரமா வரும்ன்னு நினைக்கிறேன்..!

இடைவேளைக்கு பின்புதான் லஷ்மிராயே கண்ணில் படுகிறார்.. சப்போர்ட்டிங் கேரக்டரையே ஹீரோயினாக்கியிருக்காங்க..! ஒரு பாடலுக்கு தனது பேவரிட் ஸ்டைலில் ஆடியிருக்கிறார்.. இன்னும் காட்ட வேண்டியது எதுவுமில்லை என்பதால் அடுத்து நடிப்பில் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.. கிளைமாக்ஸில் பில்லா-2 நயன்தாரா போல் டிரெஸ்ஸில் கவர்ச்சி காட்ட முயன்றிருக்கிறார்.. ஆனால் கவட்டைக்கால் நடையைப் போல் நடந்து அத்தனையும் வேஸ்ட்டு..!

‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்க’த்தில் தனது பெயரை வலுவாக பதிவு செய்த சாம்ஸுக்கு இதில் கொஞ்சமாக நடிக்கத்தான் வாய்ப்பு..! காமெடியில் பேசப் பேசத்தான் காமெடி வரும் என்பார்கள்.. அப்படியே இடைவேளைக்கு பின்பு கொஞ்சமாவது டயலாக் டெலிவரியில் காமெடியை கொண்டு வரவே முயற்சி செய்திருக்கிறார்கள். இதில் மனோபாலாவும் அவரது மனைவியும் வேறு லூட்டி அடித்திருக்கிறார்கள். வெண்ணிற ஆடை மூர்த்தி இல்லாத குறையை நிவர்த்தி செய்திருக்கிறார் மனோபாலா..! அவருடைய மனைவியை வைத்து நடத்தும் காமெடியெல்லாம் டூ மச்சு..! பிளாக் காமெடி படம்ன்னா இப்படித்தான் என்றால்.. ஐயா.. சாமி ஆளை விடுங்கப்பூ..!

‘வா மச்சி’ பாடல் ஏற்கெனவே பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகிவிட்டது.. இசையமைப்பாளர் கே-வுக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது.. இதுபோல் படத்திற்கு ஒரு பாடலை ஹிட் செய்தாலே இப்போதைக்கு போதும்..!  விஜய்யின் பி.ஆர்.ஓ.வாக இருந்து கொண்டு இந்தப் படத்தில் தல அஜீத்தையும், ரஜினியையும், விக்ரமையும் வாரியிருக்கிறார் செல்வக்குமார்.. காமெடிதான் என்றாலும் கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது..! அதிகம் அடிபட்டிருப்பது அஜீத்துதான்.. அஜீத் இந்தப் படத்தை பார்க்காமல் இருப்பாராக..!

கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்து கதையை உருப்பேற்றியிருக்கலாம்..! கதையை மட்டும் கொடுத்துவிட்டு தயாரிப்பை மட்டுமே செய்திருக்கலாம் செல்வக்குமார் அண்ணன்.. காமெடியெல்லாம் அதுக்காகவே உள்ள இயக்குநர்களுக்குத்தான் வரும்.. அதுவொரு வகை கலை.. எல்லோராலும் பண்ண முடியாது..! நகைச்சுவைக்கான அத்தனை வாய்ப்புகள் திரைக்கதையில் இருந்தும் சிரிப்பே வரவில்லையெனில் யாருடைய குற்றம்..? 

இதில் அடுத்த பாகமும் வரப் போவதாக வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார்கள்..! அதிலாவது சிரிக்க வைப்பார்களா என்று பார்ப்போம்..!


சுண்டாட்டம் - சினிமா விமர்சனம்..!

09-03-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கேரம் போர்டு விளையாட்டை மேலும் பரப்புரை செய்யும் விதமாக இப்படம் இருக்கும்ன்னு இயக்குநர் பிரம்மா சொன்னாரு.. ஆனால் படமோ கேரம் போர்டு விளையாடினால் சாவு வருமென்று சொல்கிறது..!

கேரம் போர்டு விளையாட்டில் தொடர்ந்து தோல்வியடையும் ஒரு முழு லூஸு, தனது தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் விளையாட்டில் கில்லியான ஹீரோவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறான். முடிவில் யார் ஜெயித்தது என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் இயக்குநர் பிரம்மாதான் இந்தப் படத்தின் இயக்குநர்..! கேரம் போர்டு, லவ்வு இரண்டையும் தொடர்ந்து கொண்டு சென்றதில் கேரம் போர்டு பின்னுக்குத் தள்ளப்பட்டு.. காதலும், துரோகமும், பொறாமையும் அதிகமாகி படத்தை சராசரியான படமாகவே ஆக்கிவிட்டது..!


புதுமுகம் இர்பான்.. ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்தவர்.. ரொம்பச் சின்ன வயதாக இருக்கிறார்.. இவருக்குள்ளும் ஒரு காதல் வருவதைப் போல சொல்வதும்.. அந்தக் காதல் பில்டப் ஆகின்ற சில நிமிடங்களும் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை..! வழக்கம்போலான அம்மாக்களை போல “குடிச்சியா..? எத்தனை பீர்.. ஒண்ணா, ரெண்டா? மூணா? உனக்கு சாப்பாடு இல்லை” என்று குடிப்பதை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அம்மாக்களை உருவகப்படுத்துவதில்தான் இந்த இயக்குநர்களுக்கு எத்தனை ஆர்வம்..?  படத்தைப் பார்க்கும் அத்தனை பிள்ளைகளும் தங்களது அம்மாக்கள் இப்படித்தான் தங்களிடம் பிரெண்ட்லியாக இருக்க வேண்டும் என்று நினைத்துவிட மாட்டார்களா..? 

ஹீரோயின் அருந்ததி.. தீயாக இருக்கிறார். நடிப்பதற்கு நிறைய ஸ்கோப்கள் இருந்தும் இயக்குநர் அனுமதிக்காததால் அடக்கி வாசித்திருக்கிறார்..! இன்னும் நேரமும், இடமும் நிறைய இருக்கிறது.. முயன்றால் நிச்சயம் மேலே வரலாம்..!

பொறுப்பற்ற பையன்.. முழு ஆதரவளிக்கும் அம்மா.. போட்டுக் கொடுக்கும் தங்கச்சி என்று அக்மார்க் மிடில் கிளாஸ் பேமிலியை காட்டியிருக்கிறார் இயக்குநர். இதற்கொரு பாராட்டு அவருக்கு.. ஹீரோவின் தங்கச்சி தன் அண்ணனின் குணமறிந்து ஹீரோயினை எச்சரிப்பதும், அவர்களது காதலை கட் செய்யத் துடிப்பதும் உள்ளபடி பார்த்தால் நியாயம்தான்..! அதெப்படி இப்படி வெட்டியாக ஊரைச் சுற்றும் ஹீரோக்களை பார்த்தவுடனேயே ஹீரோயின்களுக்கு காதல் வந்துவிடுகிறது..? 

சினிமா தியேட்டரில் எடை பார்க்கும் மிஷினில் தேவதை வருவாள் என்ற கார்டு கையில் கிடைத்தவுடன் காதில் பூச்சுற்றி ஹீரோயினை அடையாளப்படுத்துவது செம காமெடிதான்.. நானும்தான் எத்தனை முறை எடை பார்த்திருக்கிறேன்.. ஒரு முறைகூட இப்படியொரு கார்டு வந்ததில்லையே.. ஏன்..?!!

நரேனின் கேரக்டர் வந்த பின்புதான் கதையே சூடு பிடிக்கிறது..! வெளிநாடு கிளம்ப தயாரான சூழலில் கேரம் போர்டு விளையாட்டில் போய் வகையமாக மாட்டிக் கொள்வதும்.. அந்த அடிதடி சிச்சுவேஷனும் திரைக்கதையில் வேகத்தைக் கூட்டியிருக்கிறது.. ரவுடிகளிடமிருந்து தப்பிக்க முயன்று கடைசியாக நரேனிடமே சென்று மாட்டிக் கொள்வதும்.. தூக்குடா என்று சொன்னவுடன் தூக்கிக் கொண்டு கிளப்புக்கே வந்து நிற்கும் காட்சியும் செம ஸ்பீடு..!

உயிருக்குயிரான ஸ்டிக்கரை பணயமாக வைத்துத் தோல்வியடைந்து அதனை வெறுப்பாகக் கொடுத்துவிட்டுச் செல்லும் வில்லனின் நடிப்பும் குறிப்பிடத்தக்கதுதான்.. அதே ஸ்டிக்கரை திருப்பிக் கொடுத்துவிட்டு ஹீரோ சண்டையை நிறுத்தும்படி சொல்வதும், பேசுவதும் ஓகேதான்..

நரேனுக்கு முன்பு செல்லப் பிள்ளையாக இருந்த அந்த வில்லனின் கேரக்டர் ஸ்கெட்ச்சும், மாடுலேஷனும் வித்தியாசமாக கவர்கிறது.. அதிகம் போதை மனிதனை முட்டாளாக்கும் என்பதை போல இவரது கேரக்டர் இறுதியில் செய்யும் அந்தக் கொலை.. பதைபதைக்கத்தான் செய்தது..!

நரேனை போட்டுத் தள்ள பாயின் ஆட்கள் முயல்வதும்.. இதற்கு நரேனின் ஆளே துணை போவதுமான அந்த போர்ஷன் மிகக் கச்சிதமாக எடுத்திருக்கிறார்கள். இதற்கு எடிட்டரின் துணை நிறையவே கிடைத்திருக்கிறது..! அந்தச் சதியை கடைசி நிமிடத்தில் கண்டறியும் நரேனையும், அடுத்த ஷாட்டில் துரோகியை நெற்றிப்பொட்டில் சுட்டு காலி செய்துவிட்டு அமைதியாக காரில் செல்லும் நரேனின் ஆக்ட்டிங்கும் மிகையில்லை..! வெல்டன் ஸார்..!

மரண கானா விஜியின் அந்தப் பாடலும் அதற்கான ஆட்டமும் அட என்று ஆச்சரியப்பட வைத்தது.. இந்த வருட குத்துப் பாட்டு லிஸ்ட்டில் முதலிடத்தைப் பிடிக்கும் என்றே நம்புகிறேன்..!

இந்தப் படத்திற்கு யு-ஏ கொடுத்திருக்கிறார்கள். எதற்கு என்றுதான் தெரியவில்லை. நியாயப்படி பார்த்தால் ஏ-தான் கொடுத்திருக்க வேண்டும்..! அளவுக்கதிகமான சிகரெட் பயன்படுத்துதல்.. எக்ஸ்ட்ரா போனஸாக கஞ்சா புகைத்தல்.. கொலைகள் என்று ரவுண்டு கட்டியிருக்க இதற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என்று புரியவில்லை..! சென்சார் போர்டை புரிஞ்சுக்கவே முடியலப்பா..!

பிரம்மாவுக்கு இது முதல் படம். படத்தில் ஒரு சில விஷயங்களில் கச்சிதமாக இயக்கத்தைச் செய்திருக்கிறார் என்பது உண்மை..! கேரம் போர்டை பலவித கோணங்களில் காட்சிப்படுத்திய அதே நேரத்தில் கேரம் போர்டின் டெக்னிக்கல் மேட்டர்களை ச்சுத்தமாக லூஸில் விட்டுவிட்டு அடிதடி, வெட்டுக் குத்து, கொலை என்று பாதையை திசை திருப்பியதால் வழக்கமான மசாலா படமாகவே இது ஆகிவிட்டது..!

விளையாட்டின் மீது ஆர்வமாக இருக்க வேண்டும் என்ற கருத்தைச் சொல்லி சென்ற ஆண்டே ‘விளையாட வா’ என்றொரு படம் வெளிவந்திருந்தது.. அதில் இந்த அளவுக்கு கச்சிதமான இயக்கம் இல்லை.. ஆனால் கதை இருந்தது.. இதில் அந்தக் கதையில் மட்டும் ஓட்டை.. ஆனால் இயக்கம் 75 சதவிகிதம் கச்சிதம்..! 

அடுத்தடுத்த படங்களில் பிரம்மா நம்மை இன்னமும் கவர்கின்றவிதத்தில் படங்களை கொடுப்பார் என்றே நம்புகிறேன்..!

மதில் மேல் பூனை..! - சினிமா விமர்சனம்

08-03-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்சார் போர்டெல்லாம் எதுக்கு..? தேவையே இல்லை என்கிற கருத்து உள்ளவர்களெல்லாம் இந்தப் படத்தை அவசியம் தத்தமது குடும்பத்துடன் பார்த்துவிட்டு வந்து கருத்துச் சொல்லவும்..! இந்த அளவுக்கு கெடுபிடித்தனம் காட்டியும், இப்படியெல்லாம் படம் எடுத்துக் காட்டும் சிலர், சென்சார் போர்டு என்ற அமைப்பே இல்லையென்றால் இன்னும் எப்படியெல்லாம் எடுத்துக் காட்டுவார்களோ..? 

கவிதைத்தனமான தலைப்பை வைத்துக் கொண்டு அதி தீவிரமான சைக்கோ படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.. ஒரு 'ஏ' அல்ல.. 'டிரிபுள் ஏ' கொடுக்கப்பட வேண்டும் இந்தப் படத்திற்கு.. பெரியவர்களே பொறுமையாக உட்கார முடியாத அளவுக்கு எடுத்திருக்கும் இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்த்தால் என்னவாகுமோ..?


பள்ளிப் பருவத்தில் உடன் படிக்கும் மாணவியால் பாதிக்கப்படும் 4 பேர், அந்த மாணவி பெரியவளாகி திருமணம் செய்து கணவனோடு ஊருக்குத் திரும்பி வரும்போது அவளையும், அவளது கணவனையும் கடத்திச் சென்று குரூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ய முயற்சிப்பதுதான் கதை..! 

சினிமா பார்த்துதான் மாணவர்களும், மாணவிகளும் கெட்டுப் போகிறார்கள் என்கிற எதிர்ப்பாளர்களுக்கு 10 கிலோ உரமூட்டும் அளவுக்கு பள்ளிக்கூட காட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.  வீட்டிலேயே சிகரெட் பிடிக்கும் அப்பனை பார்த்து சிகரெட் பிடிக்க ஆசைப்படும் மகன்.. ஐயர் வீடென்ற போதிலும், பக்திப் பாடலை போட்டுவிட்டு டிவியில் எஃப் டிவி பார்க்கும் ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து ஒரு மகன்.. சித்தி கொடுமையினால் தினம் தினம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு மகன்.. இவர்களோடு பள்ளியிலேயே திருட்டுத்தனத்தை செய்யத் துணியும் 2 மகன்கள்.. என்று இந்த 5 தலைமகன்களின் அலப்பறைகளை மாணவ, மாணவிகள் பார்த்தால், இதன் பாதிப்பு நிச்சயமாக அவர்களிடத்தில் தென்படும் என்பது உறுதி..!

இவர்களது வகுப்புக்கு புதிதாக வரும் திவ்யா என்ற மாணவியிடம் ஐயர் பையன் நெருங்கிப் பழக, இதன் தாக்கம் மற்றவர்களையும் பாதிக்கிறதாம்.. படிக்கிறதைத் தவிர மத்ததையெல்லாம் செய்யும் இவர்களுக்கு படிப்பு ஒரு விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் இவர்களோடு சுற்றினாலும் ஐயர் பையன் மட்டும் நன்கு படித்து முதல் மார்க் வாங்குகிறானாம். படத்துக்குப் படம் மைண்ட் வாய்ஸிலேயே பாராட்டைப் பெறும் தம்பி இராமையா என்னும் வாத்தியார், “இவன் மூத்திரத்தை குடிங்கடா..” என்று வகுப்பறையிலேயே அன்பாக போதிக்க. இதில் கடுப்பான பெயிலான மாணவர்கள், ஐயர் பையனை அரை நிர்வாணக் கோலமாக்கி தங்களது கோபத்தைக் காட்டுகின்றனர்.

இந்த விவகாரம் திவ்யா மூலமாக தலைமை ஆசிரியருக்குப் போக.. அவர் மேற்படி மாணவர்களை முக்கால் நிர்வாணமாக்கி மைதானத்தில் மண்டி போட வைக்கிறார். இதில் பெருத்த அவமானத்தை சந்திக்கும் விஜய் என்னும் ஒரு மாணவன், ஐயர் மாணவனை செங்கல் சூளையில் வைத்து உயிரோடு கொளுத்துகிறான்..!  பின்பு நடக்கும் போலீஸ் விசாரணையின்போது திவ்யா இவர்களைக் காட்டிக் கொடுக்க சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். அங்கே நடைபெறும் ஒரு மோதலில் விஜய் ஒரு கண்ணில் பார்வையை இழக்கிறான்.  போதாத்துக்கு அங்கே இருக்கும் வார்டனால் வன்புணர்ச்சியும் செய்யப்படுகிறான். இதனாலேயே அவன் மனம் மிருகத்தனமாக மாறி திவ்யாவை பழி வாங்கியே தீருவதாக சபதமெடுத்து திரிகிறானாம். இவனோடு சேர்ந்து மற்றவர்களின் படிப்பும், வாழ்க்கையும் வீணாகி தண்ணி, தம், பொண்ணு என்று அலைகிறார்கள் திவ்யா வரும்வரையிலும்..!

குலதெய்வ வழிபாட்டுக்காக புதுமணத் தம்பதிகளாக கோவிலுக்கு வருபவர்களை துரத்தும் இடைவேளைக்கு பின்னான காட்சிகளில் இருந்து சீனுக்கு சீன் ரத்தம் தெறிக்கிறது..! கை முறிக்கப்படுகிறது.. கால் ஒடிக்கப்படுகிறது.. கை விரல்கள் துண்டாக்கப்படுகிறது..! நெஞ்சு கத்தியால் குத்தப்படுகிறது..! இத்தனையையும் தாங்கிக் கொண்டு ஹீரோ விஜய் வசந்த் இறுதிவரையிலும் போராடி அவர்களை கொல்கிறார் என்பதே எவ்வளவு பெரிய விஷயம்..?! ஹீரோவையும், ஹீரோயினையும் உயிரோடு கொளுத்தும்போது அவர்கள் தப்பிக்க போகும்போது விஜய்வசந்த் வீசும் பெட்ரோல் குண்டு அவர்களைத் தாக்குகிறது. எரியும் தீயை அணைத்துவிட்டு மேலும் மேலும் ஓடி வருதையெல்லாம் பார்க்கும்போது நாமெல்லாம் எந்த லட்சணத்தில் நமது ரசிப்புத் தன்மையை வைத்திருக்கிறோம் என்று பெருமையாகவே இருக்கிறது..!

விரட்டல், துரத்தல்.. என்று போய்க் கொண்டிருக்க.. இடையில் போலீஸ் வேறு இவர்களின் பின்னால் வந்து பக்கத்தில் வந்தும் திடீரென்று ரூட் மாறிச் சென்றுவிட்டார்களோ என்னவோ.. கடைசிவரையிலும் வரவேயில்லை..!  அச்சன்கோவில் காட்டுக்குள் ஏழாம் அறிவு சூர்யாவை போல ஒரு ஜடாமுடி சாமி.. கம்பு, சிலம்பமெல்லாம் சூப்பரா ஆடுறாரு.. கதாநாயகி அவரிடம் அபயம் தேட.. குங்பூ ஸ்டைலில் அவர் ஒரு பத்து நிமிஷம் இவர்களுடன் சண்டைபோட்டு கடைசியில் வேல்கம்பால் குத்துப் பட்டு சாகிறார். இவருடன் இருக்கும் ஒரு 6 வயது சிறுமியும் இவர்களை எதிர்த்து கடைசியில் உயிரை விடுகிறாள்..! அப்படியும் வெறித்தனம் அடங்காமல் துரத்தியிருக்கிறார் இயக்குநர்..!

காட்டுக்குள் துரத்தத் துவங்கி, பின்பு சோளக்காடு, கரும்புக் காடு என்றெல்லாம் பரந்து விரிந்து இறுதி யுத்தம் ஆற்று மணலில் நடக்கிறது..! 
இடைவேளைக்கு பின்பு போகும் இந்த ரத்தவெறியான திரைக்கதையைப் பார்த்து “எப்படா முடிப்பீங்க.. சீக்கிரமா அவங்களை கொன்னுட்டாச்சும் எங்களை விட்ருங்கப்பா..” என்று ஜனங்களை புலம்ப வைத்திருக்கிறார்கள்.. முடியலை..! இத்தனை வன்முறையும், குரூரமும், இரத்தச் சகதியும் கொண்ட கதை தேவைதானா..? இந்த மண்ணில் எடுப்பதற்குக் கதையா இல்லை..? ஏன் இந்த கந்தரக்கோலம்..?

இடைவேளைக்கு முன்பான  ஹீரோ-ஹீரோயின் லவ் சப்ஜெக்ட்டே பார்ப்பதற்கு அழகாகத்தான் இருந்தது.. அதையே இன்னும் கொஞ்சம் பில்டப்புடன் கொண்டு போயிருக்கலாம்..! இரண்டு மணி நேரம் 40 நிமிடங்களில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களில் இவர்கள் காட்டும் இரத்த வெறியினால் அந்த அழகான காதல் கதை இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது..!

படத்தின் ஹீரோ விஜய்வசந்த்.. இதில் நடிப்பதற்குக் கொஞ்சம் ஸ்கோப் இருக்கிறது..! ஆனால் வித்தியாசம் ஏதுமில்லை.. இந்தப் படம் ரிலீஸாகும் இதே நாளில் வேறொரு புதிய படத்திற்கு பூஜையும் போட்டுவிட்டார்கள். காசு இருக்கும்போது என்ன கவலை..? விபா என்னும் புதுமுகம் ஹீரோயின்.. இதில் அறிமுகம் என்றாலும், இதற்கு முன்பே நான் வெளியாகிவிட்டது..! காதல் காட்சிகளிலும், பாடல்களிலும் அழகாக மிளிர்கிறார்.. கோபப்படும்போது நடிப்பும் தெரிகிறது..! ஒரு புதுமுகமாக இருந்தும் இந்த துரத்தல் காட்சிகளிலெல்லாம் கஷ்டப்பட்டு நடித்திருப்பதை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது..! வெல்டன் விபா..!

பாடல் காட்சிகள் என்று நொள்ளையாக ஒன்று.. பாடல்களே காதில் விழுகவில்லை.. மூக்கால் பாடியிருக்கும் பாடகர்கள்.. சேஸிங்கின்போது பேக்கிரவுண்டில் ஒலிக்கும் சம்போ சிவ சம்போ பாடல் என்று பற்றாக்குறையாகவே இசை இம்சித்திருக்கிறது..!

இந்தப் படத்தையெல்லாம் தியேட்டரில் பார்க்கும் அப்பாவி பொதுஜனம் அடுத்த 3 மாதங்களுக்கு தியேட்டர் பக்கம் வரவே மாட்டான் என்பது உறுதி.. இதனாலேயே பாதிக்கப்படப்போவது சின்ன பட்ஜெட் படங்களும், திரைப்படத் துறையும்தான்.. ஒருவரின் தவறுகளால் அத்துறையே எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதற்கு இப்படமே சாட்சியாக இருக்கும்..! முன்னர் 'நடுநசி நாய்களில்' இப்படித்தான் நம்மைக் குதறியெடுத்தார்கள். இப்போது இது..!

போவதும் போகாத்தும் உங்களுடைய விருப்பம்..!

ஆண்டவப் பெருமாள் - சினிமா விமர்சனம்

06-03-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கமான கதைதான்.. வேலை வெட்டியில்லாத ஒருவன், பார்த்தவுடன் காதலாக ஒருத்தியை பின் தொடர, அவள் கிடைக்காமல் வேறொருவனுடன் திருமணமாகும் நாளில் அவளுக்கு உதவி செய்யப் போய் என்னாகிறான் என்பதுதான் கதை..!

ஒரு ஹீரோ.. அவனுக்கு உதவும் வெட்டியான அல்லக்கைகள்.. பொறுப்பான அப்பா.. ஊரில் பார்க்கும் பெண்களையெல்லாம் மோகிக்கும் ரவுடி.. அவனது தாதா அண்ணன்.. இப்படியே துண்டு துண்டான காட்சிகள் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருக்கிறது..!


ஹீரோ சிவன் ஏற்கெனவே 2 படங்களில் நடித்தவர்தான்.. இருந்தும் இன்னமும் திரைக்கு பொருத்தமானவராக இல்லை..! இப்போதெல்லாம் நம்ம ஹீரோக்களுக்கு நடிப்பெல்லாம் தேவையே இல்லை என்றாகிவிட்டது..!  சண்டை காட்சிகள் வந்தால் கோபமாக பேச வேண்டும்.. ஹீரோயினை பார்த்து லவ்வும்போது கொஞ்சம் காதலுடன் பார்க்க வேண்டும்.. டான்ஸ் தெரிந்தால் ஆடலாம்.. இல்லையேல் அப்படியே விட்டுவிடலாம்.. மாண்டேஜ் காட்சிகளாக வைத்து ஒப்பேற்றி விடலாம் என்பதுதான் சூட்சுமம்..! இதுவும் இந்தப் படத்தில் அப்படியே நடந்திருக்கிறது..!

படம் துவங்கியபோது அங்கீதாவாக இருந்த ஹீரோயினின் பெயர் படம் முடிவடையும்போது இடென் என்று மாறியிருக்கிறது.. அவ்வளவுதான்..! கொஞ்சம் வித்தியாசமான முகம்..! இந்தப் படத்தில் கொஞ்சமாவது நடித்திருக்கிறார் என்பதே ஆறுதலான விஷயம். 

லொள்ளு சபா ஜீவாதான் அல்லக்கை பிரெண்ட்.. அவருடைய டூவீலர் ஒர்க்ஷாப்புதான் ஹீரோவுக்கு மண்டபம்.. அங்கேயிருந்துதான் கல்லூரிக்கு போய்வரும் ஹீரோயினை சைட் அடிக்கிறாராம்..! அந்தக் காதல் காட்சிகள் மட்டுமே கொஞ்ச நேரத்துக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது..!

சிவன் அங்கீதாவிடம் முதன்முதலில் பேசத் துவங்க. அவர் தெலுங்கில் பேசி குழப்பிவிட.. மீண்டும் இவர் போய் தெலுங்கு கற்றுக் கொண்டு வந்து அதில் ஆரம்பிக்க.. ஹீரோயின் தமிழில் அள்ளிவிட.. இந்தக் கலாட்டாவை ரசிக்க முடிகிறது.. அதேபோல் சிவனும், ஜீவாவும் ஹீரோயினின் வீட்டிற்குள் நுழைந்து அவரது பொருட்களை களவாட முயலும் அந்தக் காட்சியையும் ரசிக்கும்படியே எடுத்திருக்கிறார்கள்..!

பாலுமகேந்திராவின் படைப்புகளில் தனி முத்திரை பதித்திருந்த ரிஷி சமீப காலங்களில் வில்லனாகவே நடித்துக் கொண்டிருக்கிறார்..  இதிலும் அப்படியே..! ஆனால் அதுக்காக மருந்துக்குக்கூட அந்த ஊரில் போலீஸ் என்ற ஒரு ஜீவன்களே இல்லை என்பதுபோல் திரைக்கதை எழுதியிருப்பது அநியாயமான பூச்சுற்றல்.. இத்தனை கொலைகள்.. அடிதடி.. கற்பழிப்புகளுக்கு பின்பும் போலீஸை காட்டலைன்னா டூரிங் தியேட்டர்ல சுண்டல் விக்கிறவன்கூட சிரிப்பான்னு இயக்குநருக்கு ஏன் தோணலை..?

கிளைமாக்ஸிற்கான முடிச்சை மிக அழகாக போட்டிருக்கிறார் இயக்குநர். கடைசியாக வைத்திருக்கும் ஒரு டிவிஸ்ட்டும் ஓகேதான்..! ஆனாலும் அது அரதப்பழசு..! ரோபின் சாமுவேலின் ஒளிப்பதிவில் டாஸ்மாக் கடை பாட்டு காட்சியை மட்டும் பரபரப்பாக எடுத்திருக்கிறார்கள்.. பாடல் காட்சிகளில் கொஞ்சமேனும் ஹீரோயினின் அழகை காட்டுவார்களே என்று ஜொள்ளுவிடுபவர்களுக்கு படு ஏமாற்றம்..! ரவிச்சந்திரன் என்ற புதுமுகம் இசை. ஏதோ இருக்கு.. பின்னணி இசையில் காதைக் கிழிக்கும் சவுண்ட்டை போட்டு நம்மை ஒரு வழி பண்ணியிருக்கிறார்கள்..! வழக்கம்போல குத்துப் பாடல் மட்டுமே கேட்கும்படி இருந்த்து..! 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங்கும் செய்து இயக்கியிருக்கிறார் டைரக்டர் ப்ரியன். தன்னை ஏற்காத காதலியின் திருமணத்திற்கு உதவி செய்யப் போய் உபத்திரவமாகிறார் ஹீரோ என்ற இரண்டு வரி லைனை வைத்துக் கொண்டு முடிந்த அளவுக்கு தன் கையில் கொடுக்கப்பட்ட ஹீரோவை வைத்தும், கொடுத்த வசதிகளைக் கொண்டும் ஏதோ எடுத்துக் கொடுத்திருக்கிறார்..! இவரையும் குத்தம் சொல்லி புண்ணியமில்லை..! ஒரு லோ பட்ஜெட் படம் எப்படியிருக்குமோ அப்படியே இருக்கிறது..! பிரியனுக்கு அடுத்த படமாவது பெரிய அளவுக்கு வெற்றிப் படமாக அமையட்டும்..!


இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-05-03-2013

05-03-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடலூர் மணியின் வீரமரணம்..!

தற்கொலை என்பது ஒரு மனிதன் தனக்குத்தானே செய்து கொள்ளும் அநீதி.. ஆனால் அதே சமயம் அந்த அநீதியினால்தான் ஒரு நீதியை உருவாக்க கூடுமெனில் அதைச் செய்பவன் தியாகி..! இதனால்தான் தியாகி சங்கரலிங்கனாரும், முத்துக்குமாரும், செங்கொடியும் இன்றளவும் பேசப்படுகிறார்கள்..! இப்போது கடலூரைச் சேர்ந்த தோழர் மணி மத்திய, மாநில அரசுகளை உலுக்குவதற்காக தன்னுயிரைத் தியாகம் செய்திருக்கிறார்..! 


வெட்கம் மானமில்லாத எருமை மாட்டுத் தோலை பூண்டிருக்கும் நமது அரசியல்வியாதிகள் இதற்கெல்லாம் மயங்குபவர்களில்லை..! அவர்கள் வீட்டில் எழவு நடந்தால் மட்டுமே சாவு என்ற ஒன்றே இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் அதிசய பிறவிகள் அவர்கள்..! 

இந்த மரணமும், வழக்கம்போல ஈழத்திற்கான உயிரிழப்புகளில் ஒன்றாக சேர்ந்துவிடும்..! நமது எதிரிகள் மனிதத்தன்மையோடு, அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்களாக இருந்தால் நாம் நமது உயிரை பணயம் வைக்கலாம்..! அவர்களே கொடுங்கோலர்களாக இருக்கும்போது நமது உயிரை மாய்த்து வெறுமனே வெளிச்சம் காட்டிவிட்டு சட்டென்று அணைந்து போவதற்கு நமது உயிரை இழக்கக் கூடாது..! போதும்.. இந்த உயிரிழப்பு.. இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்களேன்..!


மீண்டு வந்தார் ஜெகதி..!

எதிரிகள் என்று நினைக்கப்படுபவர்களுக்குக்கூட இந்தக் கொடுமை நடக்கவே கூடாது..! 11 மாதங்களுக்கு முன்பாக ஒரு விடியற்காலையில் கோழிக்கோடு அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட சாவின் விளிம்புவரை சென்று வந்திருக்கும் மலையாள நகைச்சுவை நடிக மன்னன் ஜெகதி குமார் நேற்று முன்தினம்தான் வீடு திரும்பியிருக்கிறார் வெறும் உயிருள்ள உடலாக..!


அவருடைய உடல் செயல்பாடுகள் இன்னமும் முழுமையாக தேறவில்லை என்கிறார்கள். சக்கர நாற்காலியில் பொம்மை போல் அமர்ந்திருக்கும் இந்தக் கோலத்தைப் பார்க்கவும் முடியவில்லை..  அவர் இப்படி மெளனமாக மைக்குகள் முன்னால் அமர்ந்திருப்பது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்..! எதிரில் இருந்த பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு கொண்டாரா..? அல்லது தன்னுடைய நிலைமையை புரிந்துதான் இருக்கிறாரா என்பதே புரியவில்லை..! இன்னமும் சரளமான பேச்சு வரவில்லையாம்..! மனுஷனுக்கு பலமே அவருடைய பலவித மாடுலேஷன்கள்தான்..! இன்றைய அவரது மெளனம் என்னைப் போன்ற அவரது அதி தீவிர ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை..!


'அம்மா' அமைப்பில் திலகனுடன் பிரச்சினை வந்தபோது திலகன், “விஷமான மனிதர்” என்று வர்ணித்திருந்த நெடுமுடி வேணு மீதான சர்ச்சையில் தலையிட்டு திலகனிடம் உரிமையாக சண்டையிட்டவர்.. நெடுமுடி வேணுவுக்கு மிகப் பெரிய சப்போர்ட் செய்து பேசியிருந்தார்.. நகைச்சுவையில் இவர் கட்டாத வேடமே இல்லை என்றாலும் பொது மேடைகளிலும், விழாக்களிலும் மிக சீரியஸாகவே பேசுவாராம்..! “அதான் சினிமால்ல காமெடியா பேசுறோம்ல்ல.. போதாதா..? இங்கேயும் அப்படித்தான் பேசணுமா?” என்று கேட்பாராம்..! 

ஒரு கற்பழிப்பு வழக்கில் சிக்கி அவரது பெயர் டேமேஜ் ஆன போதிலும், கேரள திரைப்பட உலகம் இன்றுவரையிலும் அதனை நம்பவில்லை.. அந்த நேரத்தில் அவருக்கு முழு சப்போர்ட் செய்திருந்தார்கள்..! அந்தச் சம்பவம் நடந்தபோது ஜெகதி, சுவிட்சர்லாந்தில் இருந்தார் என்று பல சினிமாக்காரர்கள்தான்  அடித்துச் சொல்லியிருந்தார்கள்..!

அதற்குப் பின்தான் மேலும், மேலும் சினிமாவில வெறியாக நடிக்கத் துவங்கி ஒரு வருடத்தில் வெளியாகும் மலையாளப் படங்களில் 95 சதவிகிதப் படங்களில் இவர் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.. அந்த உழைப்போ என்னவோ இன்றைக்கு அவரை நிரந்தரமாக இப்படி படுக்க வைத்துவிட்டது..!  அண்ணன் உடல் நலம் தேறி மீண்டு வர என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!


பாலச்சந்திரன் என்னும் மகன்..!

பிரபாகரனின் மகன் என்ற ஒரேயொரு காரணத்துக்காகவே கொல்லப்பட்டிருக்கிறார் சிறுவன் பாலச்சந்திரன்..! 10-க்கும் மேற்பட்ட நாடுகள் கூட்டணி அமைத்து திட்டமிட்ட கொலைக்களனுக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டது உலக வரலாற்றில் ஒரு கறுப்புச் சம்பவம்.. அத்தனையையும் செய்துவிட்டு உதவிய நாடுகளெல்லாம் இப்போது தங்களது கைகளைக் கழுவிக் கொண்டு தப்பித்துவிட்டன..! 


இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்தே.. நடக்கட்டும் என்று எதிர்பார்த்தே காத்திருந்த அமெரிக்காவும், ஐ.நா.வும்.. இப்போது வந்து குரல் எழுப்பி விசாரிக்க வேண்டும் என்கிறார்கள்.. அன்றைய நிலைமையில் நாள்தோறும் எத்தனையோ கூப்பாடுகள்.. கதறல்கள்.. வேண்டுகோள்கள்.. என்று அத்தனையையும் காதில் வாங்கிக் கொள்ளாத இந்த உலக அரசியல் காவாலித்தனம்.. இன்றைக்கு தாங்கள் யோக்கியம் என்பதை போல வேஷம் போட்டு மனித உரிமை ஆணையத்தில் விசாரிக்க வேண்டும் என்கிறது..! அத்தனையும் நடிப்பு..! 

ராஜபக்சே என்னும் இரண்டாவது ஹிட்லரின் கதை முடியும்வரையிலும் தமிழ் ஈழத்தின் புதிய நம்பிக்கைக்கான வழி பிறக்கவே வாய்ப்பில்லை..!


ஒரே படத்தில் அனைத்தும் காலி..!

கடல் படத்தின் தோல்வி மணிரத்னத்தை ரொம்பவே அசைத்துப் பார்த்துவிட்டது.. ராவணன் தோல்வியை அவர் புரிந்து ஏற்றுக்கொண்டாலும், அப்போதே விநியோகஸ்தர்களின் பலத்தை புரிந்து கொண்டு அப்படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்று 60 சதவிகித பணத்தைத் திருப்பிக் கொடுத்து சமாளித்தார். இப்போது ‘கடல்’ படத்தை தானே தனியே தயாரித்து தியேட்டர்களை புக் செய்தோ அல்லது விநியோகஸ்தர்களிடம் பேசியோ சமாளிக்க முடியாது என்று நினைத்துதான் ஜெமினியை கூட்டணி சேர்த்து தயாரித்து முடித்தார்.


தயாரிப்புச் செலவை ஜெமினியிடம் இருந்து வாங்கிக் கொண்டு அவர்களிடமே மொத்த விநியோகத்தையும் விட்டுவிட.. இப்போது விநியோகஸ்தர்கள் ஜெமினி லேப்பை முற்றுகையிட்டுள்ளார்கள்.. ஏற்கெனவே 'துப்பாக்கி' பட விஷயத்தில் கடைசி நேரத்தில் சிக்கலுக்குள்ளாகி எஸ்.ஏ.சி.யின் ஆதரவாளர்கள் ஜெமினி லேப்பின் கண்ணாடி கதவுகளை உடைத்தெறியும் அளவுக்கு பிரச்சினை போனது.. இந்த முறை எதுக்கு வம்பு என்று சொல்லி போலீஸை கூப்பிட்டு காவல் காக்க வைத்திருக்கிறார்கள்..!

மீடியம் பட்ஜெட் படங்களை அவ்வப்போது வாங்கி வெளியிட்டுக் கொண்டிருந்த மன்னன் பிலிம்ஸ், இந்த கடல் படத்தினால் மொத்தமாக முழுகிப் போயுள்ளது.. மொத்தம் இவர்களுக்கு மட்டுமே 17 கோடி நஷ்டம் என்கிறார்கள்..! இதில் சென்னை, திருச்சி, கோவை ஏரியாக்களை வாங்கிய லிங்குசாமியின் நஷ்டம் 6 கோடியை விட்டுவிட்டு பார்த்தால் 11 கோடி ஸ்வாகா..! 

ஏதோ ஒருவர் இருவர்தான் இது போல் சின்ன பட்ஜெட் படங்களுக்கு காவலனாக வருகிறார்கள். அவர்களையும் இப்படி ஒரே படத்தில் அழித்தால் எப்படி..? 


கே.பி. வீட்டு வாட்ச்மேன் படத்தின் ஹீரோ..!

முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்றாலும், கிடைக்கக் கூடியதை வேண்டி உழைத்தால் நிச்சயம் அடையலாம் என்பதற்கு இந்த அஸ்வின் பாலாஜியும் ஒரு உதாரணம்..!


இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் வீட்டில் வாட்ச்மேனாக இருந்தவர்..! ச்சும்மா இருக்கும் நேரத்தில் எல்லாம் பேப்பரும், பேனாவுமாக இருப்பார்.. கவிதைகள், கதைகளாக எழுதித் தள்ளிக் கொண்டிருந்தார்..! எப்படியாவது சினிமா துறையில் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தோடு கே.பி. வீட்டிற்கு வருபவர்களிடம் அனுசரனையாக பழகிக் கொண்டிருந்தார்..!

கே.பி. தனது வீட்டை இடித்து மாற்றி அமைக்க முடிவெடுத்தபோது சட்டென்று ஒரு நாள் வேலை போனது.. ஆனாலும் அதுவும் நல்லதாகி அடுத்து கமல்ஹாசனின் அலுவலகத்தில் வாட்ச்மேனாக வேலைக்குப் போனார்.. அங்கேயும் 2 வருடங்கள் கழித்துவிட்டு இறுதியாக ஒரு முடிவோடு கோடம்பாக்கத்தில் கால் வைத்து இன்றைக்கு ஒரு ஹீரோவாகவே வந்துவிட்டார்..! வரவிருக்கும் ‘கல்லாப்பெட்டி’ என்னும் படத்தில் அஸ்வின் பாலாஜிதான் ஹீரோ..! எப்பேர்ப்பட்ட வளர்ச்சி இது..!? ரொம்பவே பெருமையாக இருந்தது அஸ்வினை பார்க்க..!


கடுமையான காய்ச்சல்.. மூட்டு வலி இருந்தபோதிலும் அறிமுகப்படுத்தி வைக்க கே.பி.யே நேரில் வந்ததிலும் அஸ்வினுக்கு மிகப் பெரிய பெருமை..! வாழ்த்துகள் அஸ்வின்.. நல்லபடியா முன்னேறி வாங்க..!


பெரியவர் சசிபெருமாளின் போராட்டம்..!

மதுக் கடைகளை மூடும்படி மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி பூட்டு போடும் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார். அடுத்து வைகோ தனது பேவரைட் போராட்டமான நடை போராட்டத்தை துவக்கி நடத்தி வருகிறார். சசிபெருமாள் என்னும் காந்தியவாதி கடந்த ஜனவரி 30-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்து நேற்றுதான் கைவிட்டிருக்கிறார். இனிமேல் சாத்வீகமான வழிகளில் தனது மது எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் சொல்லியிருக்கிறார்.. இடையில் அவரைத் தூக்கி புழல் சிறையில் வைத்தபோதும் போராட்டத்தைக் கைவிடாமல்.. மெரீனா பீச்சில் இருந்து விரட்டியடிக்கப்பட்டபோதும் கைவிடாமல்.. நெல்லை ஜெபமணி வீட்டில் உண்ணாவிரத்த்தைத் தொடர்ந்த அவரது மன உறுதிக்கு சல்யூட் செய்ய வேண்டும்..!


வைகோவின் நடை யாத்திரை மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிதான் என்பது அவர் தனது வீட்டுக்கு பக்கத்தில் நடந்து வந்ததினால்தான் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கே தெரிகிறது என்னும்போது இந்தப் பெரியவரின் நிலைமை இந்தம்மாவுக்கு தெரியவா போகிறது..?

ச்சும்மா போகிற போக்கில் சரி.. நீக்கிரலாம் என்று சொல்வதற்கு அதென்ன அடுத்தவன் வீட்டுக் காசா..? சொந்த வீட்டுக்கே அதுனாலதான் கோடிகள்ல காசு கொட்டுது.. அதை வைச்சுத்தான் அடுத்த எலெக்சனை சமாளிக்கணும்..! சொந்த பந்தங்களுக்கு அள்ளிக் கொடுக்கணும்..! கட்சிக்குச் செலவழிக்கணும்..! இன்னும் நிறைய இருக்கே.. அந்தத் தொழிலையே மூடுங்கன்னா சொன்னா எப்படி..?  டாஸ்மாக் மூலமாக யார் செத்தாலும் ஜெயலலிதாவுக்கும் கவலையில்லை..! செத்தவன் கொடுத்த காசில்தான் மத்தவர்களுக்கு அரிசி கொடுக்க முடிகிறது என்பார்..! அரிசி வாங்குபவர்கள் அமைதியாக இருக்கும்வரையிலும் இதற்கொரு தீர்வு வராது..!

நாளைய பொழுதுகளில் நாத்திகம், ஆத்திகம் போல்.. குடிகாரர்கள்.. குடியை வெறுப்பவர்கள் என்ற குழுக்களிடையே முட்டல், மோதல் நடக்கலாம்.. நடக்க வேண்டும்.. குடிகார கூமூட்டைகள் சமூக நலன் கருதியாவது தங்களது கொள்கையைக் கைவிடுவது அவர்களுக்கும் நல்லது.. அவர்தம் குடும்பத்தினருக்கும் நல்லது..!


பாக்யராஜின் லொள்ளு..!

அவரும் எவ்வளவு நாளைக்குத்தான் பொறுப்பாரு..! ஏதோ பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நண்பர்கள் கூப்பிட்டால் ஓகே.. ஏதோ முருங்கைக்காய்  வியாபாரி மாதிரி அவரை டீஸ் பண்ணினா கோபம் வராதா என்ன..? வந்திருச்சு பாக்யராஜுக்கு..!  சொன்னது நிகழ்ச்சியின் தொகுப்பாளினி..! 


தான் மைக்கை பிடித்ததும் தொகுப்பாளினியோட வயசு என்னன்னு கேட்டாரு பாக்யராஜ். அந்தப் பொண்ணு சொல்ல மாட்டேன்றுச்சு.. கல்யாணமாயிருச்சான்னு கேட்டாரு.. அதையும் சொல்ல மாட்டேன்றுச்சு.. “இல்ல.. முருங்கைக்காயை பத்தியே பேசிக்கிட்டிருக்கீங்க.. உங்களுக்குக் கல்யாணம் ஆயிருந்தா பிரச்சினை இல்லை.. விட்ரலாம்.. அது உங்க பாடு.. உங்க வீட்டுக்காரர் பாடு..! ஆகலைன்னா நமக்குத் தோதுபடும்ன்னா கொஞ்சம் உங்களோட பேசிப் பார்க்கலாம்னுதான் கேட்டேன்..” என்று ஒரு போடு போட.. பாவம் சன் டிவி சினிமா நிகழ்ச்சி தொகுப்பாளினியான அர்ச்சனாவின் முகம் பேயறைந்தது போலானது..! இனி ஜென்மத்திற்கும் தன் வீட்டில்கூட முருங்கைக்காயை தொட மாட்டார் என்றே நினைக்கிறேன்..!

சாதுவான முயலையும் முள்ளங்கியினால் பிராண்டினால் அதுவும் கடிக்கத்தானே செய்யும்..! 


மயிரிழையில் தப்பிய தலைவர்..!

துப்பாக்கிய தூக்கினா மட்டும் போதாது.. கரெக்ட்டா சுடணும்.. இது இந்தப் பயபுள்ளைக்குத் தெரியலை போலிருக்கு..


பல்கேரியால எதிர்க்கட்சித் தலைவரான அஹமத் டோகன் என்பவர் ஒரு மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு நபர் மேடையேறி அவரை துப்பாக்கியால் சுட முயன்று  சொதப்பிவிட்டார். ஆள், ஆளாக்கு மேடையிலேயே அந்த துப்பாக்கி வீரனை பிரித்து மேய்ந்துவிட்டார்கள்..! நம்மூருக்கு வந்து கொஞ்சம் டிரெயினிங் எடுத்துட்டு போலாமே..? 


விஸ்வரூப கலெக்சன்..!

விஸ்வரூபம் நிசமாகவே விஸ்வரூபமெடுத்து ஒட்டு மொத்த வசூலாக 200 கோடியைத் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது.. இந்தச் சாதனைக்கு முழு முதற் காரணம் இஸ்லாமிய அமைப்புகளும், தமிழக அரசும்தான் என்பதில் சந்தேகமில்லை..! ஆபத்திலும் ஒரு நன்மையுண்டு என்பார்கள். அது கமல் விஷயத்தில் பொருத்தமாகவே நடந்தேறியுள்ளது..! 


Complete Box Office Report : Vishwaroopam 

Viswaroopam 1st (first) Day box office total Collections: 8.35 Crores

Viswaroopam 2nd (second) Day box office Collections: 9.10 Crores

Viswaroopam 3rd (third) Day box office Collections: 8.56 Crores

Viswaroopam 4th (fourth) day (four days) box office collections: 6.23 crores

Viswaroopam 5th (fifth) day (5 days) box office collection: 7.10 crores

Viswaroopam 6th (sixth) day (6 days) box office collections: 7.65 crores

Viswaroopam 7th day (7 days) box office collections: 7.28 crores

Viswaroopam 8th day (8 days) box office collections: 7.05 crores

Viswaroopam 9th day (9 days) box office collections: 7.35 crores

Viswaroopam 10th day (10 days) box office collections: 8.70 crores

Viswaroopam 11th day (11 days) box office collection: 8.10 crores

Viswaroopam 12th day (12 days) box office collections: 7.23 crores

Viswaroopam 13th day (13 days) box office collection: 5.90 crores

Viswaroopam 14th day (14 days) box office collections: 8.36 crores

Viswaroopam 15th day (15 days) box office collections: 9.15 crores

Viswaroopam 16th day (16 days) box office collections: 9.28 crores

Viswaroopam 17th day (17 days) box office collections: 9.02 crores

Viswaroopam 18th day (18 days) box office collections: 8.40 crores

Viswaroopam 19th day (19 days) box office collections: 6.28 crores

Viswaroopam 20th day (20 days) box office collections: 6.03 crores

Viswaroopam 21st day (21 days) box office collections: 5.75 crores

Viswaroopam 22nd day (22 days) box office collections: 5.20 crores

Viswaroopam 23rd day (23 days) box office collections: 5.35 crores

Viswaroopam 24th day (24 days) box office collections: 5.42 crores

Viswaroopam 25th day (25 days) box office collections: 4.80 crores

Collections till Date: 181.81 Crores

இது பிப்ரவரி 20-வரைக்குமான கணக்கு மட்டுமே..!

இனி கமல் தன் வீட்டைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.. போதுமான அளவுக்கு பணம் கிடைத்துவிட்டது.. இனி இதனைப் பத்திரப்படுத்திக் கொண்டு, தன்னை வைத்து படமெடுக்கக் காத்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடித்தால் அவர்களும் கொஞ்சம் வாழ்த்துவார்கள்..! 

ஹாலிவுட் போகட்டும்.. ஆனால் அங்கேயே குடியிருந்துவிடக் கூடாது.. கமலின் வேகத்தைப் பார்த்தால் அடுத்து ஆஸ்கர் விருது பெற்றுவிட்டுத்தான் தமிழகத்தின் கால் வைக்க வேண்டும் என்கிற வெறியில் இருப்பதுபோல் தெரிகிறது..! தமிழ் ரசிகர்கள் கொடுத்த பாராட்டுக்களை விடவா அவருக்கு ஆஸ்கர் இப்போது பெரிதாகிவிட்டது..?


இன்னொரு விஷயம். விஸ்வரூப சர்ச்சை விவகாரம் நடந்து கொண்டிருந்தபோது நடிகை ஆண்ட்ரியா தனது பேஸ்புக் பக்கத்தில் கமலுக்கு ஆதரவான செய்திகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார். ஜெயலலிதா விஸ்வரூபம் பற்றி பேட்டியளித்த உடனேயே ஆண்ட்ரியா ஜெயலலிதாவை England prime Minister என்று கிண்டல் செய்து பல செய்திகளை போட்டுக் கொண்டே வந்தார்..! கடுமையான தாக்குதல்கள்..! 

அட.. வேறு எந்த சினிமாக்காரனுக்கும் வராத கோபம், இந்த அம்மணிக்கு வந்திருக்கேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன்.. இப்போ போய் பார்த்தா ஒரேயொரு செய்தியைத் தவிர மீதியையெல்லாம் தூக்கிட்டாங்க.. சரி.. போகட்டும்.. அவங்களும் தமிழ்நாட்டுல வாழ வேண்டாமா..?


அமீரின் குற்றச்சாட்டு..!

‘ஆதிபகவன்’ படத்துக்கு ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்தது பற்றி இப்போதுவரையிலும் அமீர் கோபத்துடன்தான் இருக்கிறார்..! ஏற்கெனவே பல ‘ஏ’ படங்களுக்கு ‘யு’ சர்டிபிகேட் கொடுத்திருந்த சூழலில், தன்னுடைய படத்துக்கு கொஞ்சம் பிரச்சனையைக் கொடுத்துவிட்டார்களே என்ற கோபத்தில் பேசிவிட்டார் அமீர்..!

கடந்த காலங்களில் ‘கந்தசாமி’, ‘நடுநசி நாய்கள்’ போன்ற படங்களுக்கெல்லாம் ‘யு’ சர்டிபிகேட் கொடுத்து தனது நடுநிலைமையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது சென்சார் போர்டு..! இப்போதுதான்  கொஞ்சம் முனைப்போடு சர்டிபிகேட்டுகளை ஒழுங்குபடுத்தியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்..!


‘ஆதிபகவன்’ நிச்சயம் ‘ஏ’ சர்டிபிகேட்டுக்குரிய படம்தான்.. இதில் சந்தேகமில்லை.. அதீத வன்முறையும், ஆயுதங்களை பயன்படுத்தும் முறையும், ரத்தம் தெறிக்கும் காட்சிகளும், அதிகப்படியான புகைப்பிடிக்கும் காட்சிகளும் இருக்கின்றவரையில் இவை போன்ற படங்களுக்கு ‘ஏ’ சர்டிபிகேட்டுதான் கொடுக்க வேண்டும்..! 

இந்தப் படத்துக்கு சென்சாரில் எழுப்பப்பட்ட ஆட்சேபணைகளும், கொடுத்த கத்திரிகளும் கீழே..!

1 Mute the following words: (Reel 3) (a) ‘Fucking’ which occurs twice. (b) ‘Bastard’. - (Sound muted)

2 Delete the dialogue ‘I have used German, Russian, Thailand all countries’. (Reel 3) - Deleted: & Replaced with appd. dialogue)

3 The title ‘Ammerin Aadhibaghavan’ should be changed in such a way that it denotes two different characters.(instead of ‘Aadhibhagavan’ which implies God’s name) (I.e. - ‘AMMERIN AADHI - BHAGAVAN) Changed as AMEERIN AADHI -BHAGAVAN.

4 The name of the heroine ‘Kaali’ should be changed. (Changed as Rani.)

5 Mute the following words: (Reel 2) (a) ‘Lanja kodukka’. (b) ‘Bitch’. (c) ‘Mayiru’. (d) ‘Martini’. (e) ‘Anaadhai naaye’. (f) The word ‘Ottikittu’ in the dialogue ‘Osiyiliye ottikittu poyidalaamnu’ which sounds like ‘Othukittu’.(a) & (c) Sound muted.(b),(d)(e)& (f) Deleted & Replaced with appd. words.

6 A disclaimer explaining that the intent of the film is not to hurt the sentiments of any particular religion/caste should be kept in Bold Letters in TAMIL at the beginning of the film. Also insert the disclaimer stating that the story and the characters portrayed in the film are fictitious and the incidents are only imaginary. INSERTED.

7 (a) a strong editorial justification explaining the necessity of the display of the tobacco products or their use in the film, to the Central Board of Film Certification; (b) anti-tobacco health spots, of minimum thirty seconds duration each at the beginning and middle of the films and television programmes. - INSERTED:

8 Replace the words ‘Un Bhagavaanai’ with ‘Un aalai’ in the dialogue ‘Nee mudhalla naragathukkup povanum, un bhagavaanai pinnala anuppi vaikkiren’. (Reel 8) - Replaced.

9 Reduce to a flash the shot of blood oozing from Kaali’s mouth. (Reel 8) - Reduced.

10 The Producer/Applicant should give a letter/undertaking stating that the Arabic words/sentences used in the film does not denigrate any religious sentiments of people. Undertaking Letter given.

11 Mute the following words: (Reel 7) (a) Bastard. Sound muted. (b) Maadharchod. Deleted & Replaced with ‘Haram hum simhare’.

12 Delete the scene of burning of a passport. (Reel 7) Deleted.

13 Replace the words ‘Bhagavaanaiyum kaaliyaiyum’ by ‘Avanga rendu peraiyum’ in the dialogue ‘Bhagavaanaiyum kaaliyaiyum en kaiyaala naane ponamaakkanum’. (Reel 7) Replaced:

14 Mute the following words: (Reel 6) (a) ‘Nottu, Nottittu, Notturadha, Oththa’. (b) ‘Baapuji’ which occurs four times. Sound muted. (Baapuji replaced with Bisakai)

15 Delete the scene of Bhagavan pouring liquor on the currency notes and burning it.(Reel 6) Deleted & Replaced with C.S.Bhagsvan.

16 Delete the word ‘Bhagavan’ in the dialogue ‘Bhagavan veliyila varuvaan seththum povaan’. (Reel 6) Sound muted.

17 Mute the words ‘Maadharchod’ and ‘Bastard’, wherever it occurs. (Reel 5) Sound muted.

18 Delete the word ‘Bhagavaan’ in the dialogue ‘Bhagavaan always likes red wine’.(Reel 5) Deleted & Replaced with ‘Romeo always.)

19 Mute the word ‘Dharavi’. (Reel 5) Sound muted.

20 Distort the liquor label wherever it occurs in the film. (Reel 4) - Deleted: & Distorted for same duration.

21 Reduce to a flash the scene of a person being burnt alive. (Reel 4) - Reduced.

22 Mute the words ‘Fuck’ and ‘Maadharchod’, wherever it occurs. (Reel 4) Deleted & Replaced with micaner.

23 Delete the lyric lines ‘Mukthikkum bakthikkum nee kooruda’ from the song ‘Yei salaamey’. And change the saffron colour costume into some other colour which has no relevance to any religion. (Reel 2) (Lyric lines replaced with appd. words and colour changed for same duration)

24. NOC should be obtained from AWBI for using animals in the film. - NOC Submitted.

இப்போது குத்துப் பாடல்கள் இருந்தாலே ‘ஏ’ சர்டிபிகேட் கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதுவும் வரவேற்கத்தக்கதுதான்..! இப்படி செய்தாலாவது நம்ம சினிமாக்காரர்கள் அந்தக் கர்மத்தை விட்டுத் தொலைக்கிறார்களா என்று பார்ப்போம்..!


ஆர்.பி.ராஜநாயகத்தின் நேரு பற்றிய கட்டுரை


அண்ணன் ஆர்.பி.ராஜநாயகத்தின் இந்தக் கட்டுரையைப் படித்தவுடன் நமது ஆட்சியாளர்கள் மீது வழக்கம்போல கோபம் கொப்பளிக்கிறது..! காந்தி தாத்தா, நேரு மாமா என்றெல்லாம் புகழ்ந்து, புகழ்ந்து சொல்லிக் கொடுக்கும் நமது கல்வி அமைப்புகள் இவர்களைப் பற்றிய இது போன்ற உண்மைச் செய்திகளை எப்போதுதான் சொல்லிக் கொடுப்பார்கள்..?


பள்ளியில் வேண்டாம்.. அட்லீஸ்ட் கல்லூரியிலாவது இது போன்ற விமர்சனங்களை முன் வைத்து ஒரு பாடமாக சொல்லித் தரலாமே..? காங்கிரஸுக்கு மாற்றுக் கருத்தே இருக்கவே கூடாது என்பதற்கு மாநில ஆளும் அரசுகளும் உடந்தையாகிப் போவது விந்தையாக இருக்கிறது..!


ரஜினியிடம் தேவர் அறிமுகமான  கதை..!

‘அறியாதவன் புரியாதவன்’ படத்தின் விழாவுக்கு வந்த கே.பாக்யராஜ் சின்னப்பா தேவர் பற்றிச் சொன்ன சில விஷயங்கள் சுவாரஸ்யமாகவே இருந்தன..!

அப்போது கலைஞானம் தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் பணியாற்றி வந்தாராம்.. திடீரென்று ரஜினியை வைத்து ‘பைரவி’ படத்தை தயாரிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டவுடன் தேவர் எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தாராம்..! “என்கிட்ட தொண்டை கிழிய கத்தி கத்தி சம்பாதிச்சு வைச்சிருக்குற.. அழிச்சிராதடா.. அந்தப் பையன் முகத்தைப் பாரு.. எவனாவது தியேட்டருக்கு வருவானா..? டேய் தூயவா.. நீயாவது அவன்கிட்ட சொல்லுடா.. கஷ்டப்பட்டு சம்பாதிச்சது..”  என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தியிருக்கிறார்.. 


கலைஞானம் எதற்கும் மசியவில்லையாம்.. படத்தை எடுத்து முடித்து வெளியிட்டிருக்கிறார். படம் சக்கைப் போடு போட்டிருக்கிறது..! தேவர் கலைஞானத்தை பார்த்து வியந்திருக்கிறார்..! அடுத்து ரஜினியும் தனது நடிப்பு கேரியரில் உயர்ந்து கொண்டேயிருந்திருக்கிறார்.


இதற்குப் பின்பு ஒரு நாள் கலைஞானத்தை அழைத்த தேவர்.. “ஏம்ப்பா அந்தப் பையனுக்கு(ரஜினிக்கு) நம்ம கம்பெனியை பத்தி தெரியும்ல்ல.. கொஞ்சம் சொல்லி வைக்கலாம்ல்ல.. ஏன்னா நீதான அவனை முதன்முதல்லா ஹீரோவா வைச்சு படமெடுத்திருக்குற.. என்னைப் பத்தியும் கொஞ்சம் சொல்லேன்..” என்று நைச்சியமாக பேசித்தான், கலைஞானம் மூலமாகவே ரஜினியிடம் அறிமுகமானாராம்..! 

இதே மேடையில் ஆர்.வி.உதயகுமார் சொன்ன இன்னொரு விஷயமும் முக்கியமானது.. ‘தேவர் மகன்’ படத்தின் கதை கலைஞானத்துடையதாம். அவர் சொன்ன, “ஒரு ஊர்ல கோவில் வருஷக்கணக்கா பூட்டிக் கிடக்குது.. வெளியூர்ல படிச்ச ஊர்த்தலைக்கட்டு குடும்பத்து பையன் ஊருக்குத் திரும்பி வந்து அந்தக் கோயிலை திறக்கப் பாடுபடுறான். ஊரே ரெண்டாகுது.. எப்படிச் சமாளிச்சு கோவிலைத் திறக்கிறான்றதுதான் கதை..” - இந்த கதைச் சுருக்கத்தை வைத்துக் கொண்டுதான் கமல் விரிவாக திரைக்கதை அமைத்து எடுத்ததாகச் சொன்னார் உதயகுமார்..! இதைக் கேட்டால் கங்கைஅமரன் எந்த அளவுக்குக் கொதிப்பாரோ தெரியவில்லை..?


அசத்தல் குறும்படம்

பேஸ்புக்கில் சமீபத்தில் நண்பர் ஒருவர் பதிந்திருந்த வீடியோ இது..! 1994-ம் வருடம் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற ஜெர்மன் படம் இது..! 

கருப்பர்கள் மீதான வெறுப்புணர்வை கக்கும் ஒரு வெள்ளைத் தோல் மூதாட்டியின் அர்ச்சனைகளைப் பொறுத்துக் கொண்டு கடைசியில், “இந்தப் பேருந்தில் நீயும் நானும் ஒண்ணுதான்.. வெறும் பயணிகள் மட்டுமே..” என்ற இறுதி பன்ச் அட்டகாசம்..! 

பயணிகளின் சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்கள்.. அந்த மூதாட்டியின் கள்ளமில்லாத நடிப்பு.. எதிர்கொள்ளும் அந்தக் நடிப்புக் கருவாயனின் அலட்சியம்.. இறுதியில் டிக்கெட்டை காட்டிவிட்டு அவர் காட்டும் புன்சிரிப்பு..! ஓராயிரம் அர்த்தங்கள்..! வாவ்..!




பார்த்ததில் பிடித்தது..!





படித்ததில் பிடித்தது..!


‘ராயல் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வந்தது. படம் எதுவும் இல்லாமல் வெறுமனே வீட்டில் இருந்த நடிகர் சரவணன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக இந்தப் படத்தில் நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக ரவளி நடித்திருந்தார். வி.கே.ராமசாமி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்த படப்பிடிப்பின்போதுதான் எனக்கே தெரிய வந்தது.. இயக்குநர் ராஜேஷ்வர்மா வி.கே.ராமசாமியின் நெருங்கிய உறவினர் என்ற விஷயம்.

படப்பிடிப்பின்போது படு உற்சாகமாக இருப்பார் ராஜேஷ்வர்மா. இந்தப் படம் முடிவடைந்ததும் இன்னொரு கதையை இயக்கவிருக்கிறேன். அதில் கதாநாயகனாக நடிக்கப் போகிறவர் விஜயகாந்த். அவருக்கு இரட்டை வேடம். இதுவரை அவர் இப்படியொரு கதையில் நடித்ததே இல்லை. மிகச் சிறந்த படமாக அது வரும். அதற்குப் பிறகு வேறொரு படத்தை இயக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அந்தக் கதைக்குப் பொருத்தமாக இருக்கக் கூடியவர் விக்ரம்தான். அஜீத்திற்கு ஏற்ற ஒரு கதையையும் தயார் பண்ணி வைத்திருக்கிறேன்..” என்றார் என்னிடம். அவர் சொன்ன விஷயங்கள் எதுவுமே நடைமுறையில் சாத்தியமில்லாதவை என்று எனக்கு நன்கு தெரியும்.

எனினும் அதைச் சொல்லி அவருடைய ஆர்வத்தை ஏன் குறைக்க வேண்டும் என்று நினைத்து வாயை மூடிக் கொண்டேன். இத்தனை வருடங்கள் படத்துறையில் வலம் வந்தும், நடைமுறை சிந்தனையே இல்லாமல் இருக்கிறாரே ராஜேஷ்வர்மா என்று அப்போது நான் நினைத்துக் கொள்வேன்.

‘ராயல் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துவிட்டது. அந்தச் சூழ்நிலையில் ராஜேஷ்வர்மாவிற்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஒரு மாத காலம் படுத்த படுக்கையாக இருந்தார். எய்ட்ஸ் நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். எங்கிருந்து அவருக்கு அந்த நோய் வந்ததோ தெரியவில்லை. ஒரு மாத காலம் நோயின் பிடியில் சிக்கிக் கிடந்த ராஜேஷ்வர்மா ஒரு நாள் இந்த உலகத்தைவிட்டே போய்விட்டார். 

அவர் மரணத்தைத் தழுவிய அதே நாளில் ‘ராயல் பேமிலி’ படத்தின் இசையமைப்பாளர் கிறிஸ்டி, கிண்டிக்கு அருகே நடந்த சாலை விபத்தில் மரணமடைந்ததும் ஒரு எதிர்பாராத கொடூர ஒற்றுமை என்றே சொல்ல வேண்டும். ராயல் பேமிலி முதல் பிரதி தயாராகி பல வருடங்கள் கடந்துவிட்டன. எனினும் வியாபாரம் ஆகாமல் இன்றுவரையில் அந்தப் படம் திரைக்கு வரவே இல்லை..!

நன்றி : கனவு ராஜாக்கள்
ஆசிரியர் : சுரா
சுரா பதிப்பகம் வெளியீடு