போடா போடி - சினிமா விமர்சனம்

15-11-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


சிம்பு என்றாலே விளக்கெண்ணெய் குடித்தாற்போல் முகத்தைச் சுழிப்பது பொதுவான ரசிகர்களின் வழக்கம். சிம்புவுக்கு மட்டும்தான் அவரது ரசிகர்களைத் தவிர மற்ற நடிகர்களின் ரசிகர்களின் பேராதரவு கிடைப்பதில்லை.. இதனால்தான் அவரும் தனக்குப் பிடித்த நடிகர் ‘தல’தான் என்று பல முறை சொல்லிச் சொல்லி ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்..!

ஆனால் படங்கள்தான் தாறுமாறாக வந்து கொண்டிருக்கின்றன.. கடைசியாக வந்த ‘ஒஸ்தி’ படத்தினால் அதன் தயாரிப்பாளர்கள், தியேட்டர்காரர்களுக்கு இன்னமும் கிஸ்தி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த ‘போடா போடி’ திரைக்கு வருமா வராதா என்ற சந்தேகம் நமக்கு மட்டுமல்ல.. இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கே இருந்து வந்திருக்கிறது..! கடைசியில் வழக்கம்போல எல்லா தரப்பு பஞ்சாயத்துக்களையும் சந்தித்துவிட்டே சந்திக்கு வந்திருக்கிறது இந்தப் படம்.

என்ன சொல்ல..? ராமராஜன் படங்களில்தான் கடைசியாக பார்த்தது... இது போன்ற ஆணாதிக்க வெறியை..! தமிழ், தமிழ்க் கலாச்சாரம், பெண், தாலி, புருஷன் என்று அக்மார்க் பி கிரேடு கதையை அப்படியே லண்டனுக்குக் கொண்டு சென்று அதனுடன் லவ்வையும் திணித்து கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அலட்சியமாக ஒரு படத்தைத் தயாரித்துத் தந்திருக்கும் இந்த்த் தைரியம் தமிழ்ச் சினிமாவில் சிம்புவைத் தவிர வேறு யாருக்கும் வராதுதான்..!



வரலட்சுமி ஒரு டான்ஸர். டான்ஸ் என்றால் உயிராக இருப்பவர். இவருடைய வாழ்க்கையில் திடீரென்று குறுக்கிடுகிறார் சிம்பு.. சிம்புவின் பொய்யான அலட்டல்களை உண்மை என்று நம்பி ஐ லவ் யூ சொல்லிவிடுகிறார் வரலட்சுமி. உடனேயே ஏத்துக்குறது ஆம்பளைத்தனம் இல்லியேன்னு கொஞ்சம் சுத்த விட்டுட்டு அப்புறமா இவரும் ஏத்துக்குறாரு.. கல்யாணமும் செஞ்சுக்குறாங்க.. இப்பவும் வரு, டான்ஸை விடலை.. இது சிம்புவுக்கு பிடிக்கலை. புள்ளை பொறந்துட்டா டான்ஸ் ஆட முடியாதுன்னு  வீணாப் போன சித்தப்பன் கணேஷ் பத்த வைக்க.. அந்த வேலையையும் செஞ்சு முடிக்கிறார் சிம்பு.. குழந்தையும் பிறக்கிறது. இப்போது சிம்புவின் இந்த தில்லாலங்கடி வேலை வருவுக்கு தெரிய வர.. அவர் கோபிக்கிறார். அந்த நேரத்தில் நடந்த ஒரு விபத்தில் குழந்தை உயிரிழக்க.. இருவரும் தற்காலிகமாக பிரிகிறார்கள்.

வரு டான்ஸில் மூழ்கிப் போய் வாழ்க்கையை மறந்து போய் இருக்க.. சிம்புவால் முடியவில்லை. மீண்டும் வருவை தேடிச் சென்று அழைக்கிறார். வருவும் வருகிறார். சில கண்டிஷன்களோடு.. தன்னுடைய நீண்ட நாள் கனவான டான்ஸ் போட்டியில் ஜெயிக்கணும்ன்னு நினைச்சு பல முயற்சிகள் செஞ்சுக்கிட்டிருக்காரு வரு.. அதுலேயும் அவ்வப்போது மண்ணையள்ளிப் போட்டு கெடுக்குறாரு சிம்பு.. கடைசியா அந்தப் போட்டில வரு கலந்துக்கிட்டா மட்டுமே தன்னோட இருப்பாங்கன்றதால சிம்புவும் கூட சேர்ந்து டான்ஸ் ஆடுறாரு.. ஜெயிக்கிறாங்க..! கடைசி சீன்ல இன்னமும் 14 ஆட்டம் இருக்குன்னு வரு சொல்ல.. இனிமே எப்படி சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்ன்னுட்டு பெட்ரூம் கதவைச் சாத்தி நம்மளை வீட்டுக்கு அனுப்பிர்றாரு சிம்பு.. இம்புட்டுத்தான் கதை..!

சிம்பு தோன்றும் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் காட்சிக்கு காட்சி, ஷாட்டுக்கு ஷாட் அவர்தான் தோன்றுகிறார்.. அவரேதான் அதிகம் பேசுகிறார். சில இடங்களில் மாடுலேஷனிலேயே சிரிப்பை வரவழைத்திருக்கிறார். உடன் இருக்கும் சித்தப்பா கணேஷை பல இடங்களில் வாரி விடுவது குபீர் சிரிப்பு ரகம்..! நன்றாகவே டான்ஸ் ஆடுகிறார்.. அவ்வப்போது பன்ச் டயலாக்கும் அடிக்கிறார். தமிழ் கலாச்சாரம் பத்தி கிளாஸ் எடுக்கிறார். “பொண்ணை கட்டிப் பிடிக்கிறவன்.. முத்தம் கொடுக்கிறவனையெல்லாம் செருப்பாலேயே அடிக்கணும்”னு சிம்புவே சொல்றதுதான் ரொம்ப ரொம்பக் கொடுமை.. இதைக் கேட்பாரே இல்லையா..?

நாமெல்லாம் தமிழர்கள்.. தமிழ்க் கலாச்சாரப்படி வாழணும்ன்னு நமக்கே அட்வைஸ் பண்றாரு.. பொண்டாட்டி காலைல எந்திரிச்சவுடனேயே புருஷன் காலை தொட்டுக் கும்பிடணும்ன்னு மணாளனே மங்கையின் பாக்கியம் காலத்துக்கே கூட்டிட்டுப் போயிட்டாரு..! என்னாச்சுன்னு தெரியலை.. ஒருவேளை தமிழகத்து பெண்கள் மத்தில தனக்கு நல்ல பேரு கிடைக்கணும்ன்னு சொல்லி முயற்சி பண்றாரோ..? என்ன செஞ்சாலும் சரி.. இந்தப் படம் கடைசிவரையிலும் ஆணாதிக்கத்தனத்தை போதிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை..!

வரலட்சுமி பாலே நடனத்தை முறைப்படி பயின்றவர்.. அனைத்து வகை நடனங்களும் அத்துப்படியாம். அதனாலேயே நடனக் காட்சிகளில் பிசகில்லாமல் ஆடியிருக்கிறார்.. இறுதியில் குத்துப் பாட்டிலும் அவரைக் களத்தில் இறக்கி ஆட விட்டிருக்கிறார்கள். சிம்பு படத்துல இது கூட இல்லைன்னாத்தான் பிரச்சினை..! வரலட்சுமியின் குரல் வித்தியாசமாக இருந்தாலும் ஆம்பளை குரல் போல இருப்பது கேட்க முடியவில்லை.. கொஞ்சம்ன்னாலும் பரவாயில்லை. படம் முழுக்கன்னா எப்படிங்க..? நடிப்பு..! ம்.. பரவாயில்லை ரகம்தான்.. காதலைத் தவிர மற்றதெல்லாம் வந்திருக்கிறது.. இயக்கம் செய்தவரிடம் திறமை இல்லாததால், இவரிடமிருந்து சரியான முறையில் நடிப்பை வெளிவர வைக்க முடியவில்லை என்றே நினைக்கிறேன்..!

42 வயசானதால் ஷோபனா அம்மா கேரக்டருக்கு பிரமோஷன் வாங்கியிருக்கிறார். இவரும் நடனம் தெரிந்தவர் என்பதால்தான் கேரக்டருக்கு செலக்ட் செய்தார்களாம்.. ஆனால் நடனம்தான் இல்லை..! இவருடைய பேவரிட்டான கண்களைக்கூட சரியாகப் பயன்படுத்தத் தெரியாத இந்த இயக்குநரை என்னவென்று சொல்ல.. வேஸ்ட்டாகிவிட்டது..!

இசையமைத்திருப்பவர் தரண்.. என்னால் நம்பவே முடியவில்லை. பாடல்களை வெளியிட்ட சோனி நிறுவனம் இரண்டாம் கட்டமாக மீண்டும் ஆர்டர் கொடுத்திருக்கிறதாம்..! அவ்வளவு டிமாண்டா..? அல்லது விளம்பரமா..? பல்லே சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு லவ் பண்ணலாமா? வேண்டாமா? என்ற வார்த்தையை மாத்தி மாத்திப் போட்டு பாடிக் கொல்லும் சிம்புவை நான் மன்னிக்கவே மாட்டேன்.. முடியலை.. ஆனா இந்தப் பாட்டு யூ டியூப்ல ரொம்பவே சக்ஸஸ்..!

விக்னேஷ் சிவன் என்னும் புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். கல்யாணத்திற்காக தனது லட்சியத்தை இழக்க வேண்டுமா என்கிற ஒரு பெண்ணின் கதையாக சொல்ல வந்தவர், இடையில் கதாநாயகன் சிம்பு நுழைந்ததால், கதையைக் கோட்டைவிட்டுவிட்டு, திரைக்கதையையும் அநியாயத்திற்கு போண்டியாக்கிவிட்டார்..!

மீண்டும் மீண்டும் சிம்புவே வந்து வந்து பேசிக் கொண்டிருப்பதால் ஒரு அளவுக்கு மேல் ரசிக்க முடியவில்லை.. போதும்டா.. ஆளை விடுங்கடா என்று சொல்லும் அளவுக்கு சிம்பு மேல் வெறுப்பை கொண்டு வந்திருக்கிறார்கள்..! இது சிம்புவே வரவழைத்ததா என்றும் தெரியவில்லை..! சிம்புவின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் இது போன்ற ஒருவனின் கதை இது என்று சொல்லாமல், அவரே அப்படித்தான் என்பதாகவே கதை கொண்டு செல்லப்பட்டிருப்பதால் இடைவேளைக்கு பின்பு கதை எங்கே போகிறது என்றே தெரியவில்லை..!? கிளைமாக்ஸும் இன்னமும் கதை இருக்கிறது என்பது போல் முடித்திருக்க.. ஆளை விட்டால் போதும் என்ற மனப்பிராந்தியம்தான் ஏற்பட்டது..!

இப்படியெல்லாம் நாட்டின் சிச்சுவேஷன் தெரியாமல், ஹீரோத்தனத்தை உயர்த்துவதற்காகவே படமெடுப்பது தயாரிப்பாளரை பாழும் கிணற்றில் தள்ளுவதற்குச் சமம். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், வாரி, வாரி வழங்கியிருக்கிறார்கள் என்பதை படத்தின் ரிச்னெஸே சொல்கிறது..! பாடல் காட்சிகளுக்கு செட்டிங்க்ஸையே  டி.ஆர். படம் போல செய்திருக்கிறார்கள்..! ஏதோ போட்ட முதலீடாச்சும் இந்தத் தயாரிப்பாளருக்கு கிடைக்க வேண்டும் என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

துப்பாக்கி - சினிமா விமர்சனம்

14-11-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த ஆண்டின் இறுதியில் வந்திருக்கும் இன்னுமொரு வெற்றிப் படம். ஏழாம் அறிவில் விட்ட பெயரை இதில் மீண்டும் பெற்றிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஒரு மூட்டை லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அதனை யோசிக்க வைக்காமல் கொண்டு சென்ற திரைக்கதையினால் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் தியேட்டர்களில் உச்சத்திற்குச் சென்றுள்ளது..! வெல்டன் துப்பாக்கி டீம்..!

முதல் பாராட்டு விஜய்க்குத்தான்.. எத்தனையோ நல்ல கேரக்டர்களை தனது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொல்லி நிராகரித்தவர். 'தூள்' படத்தில் இவரே நடித்திருக்கலாம். 'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே', 'முகமூடி'யிலும் நடித்திருக்கலாம்.. தனக்கான வேடமில்லை என்று தவிர்த்திருக்கிறார். ஆனால் நடித்திருந்தால் விஜய்யின் கேரியருக்கு மிக முக்கியமான படங்களாக இவைகள் இருந்திருக்கலாம். இந்தப் படத்திலும் நடிக்காமல் போயிருந்தால் விஜய்க்குத்தான் நஷ்டமாகியிருக்கும்.. நல்லவேளை.. ஒத்துக் கொண்டு நடித்தமைக்கு முதல் வாழ்த்துகள் அவருக்கே..!


 

ராணுவத்தில் இருந்து விடுமுறைக்காக மும்பை வரும் ஜெகதீஷ் என்னும் கேப்டனான விஜய், பேருந்தில் குண்டு வைத்த தீவிரவாதியை தப்ப விட்டு அவனது அப்போதைய திட்டத்தை மொத்தமாக அழிக்கிறார். இதனால் வெகுண்டெழும் ஒரிஜினல் சூத்ரதாரி மும்பைக்கே பறந்து வந்து விஜய்யை தீர்த்துக் கட்டப் பார்க்க.. சூப்பர் ஹீரோ விஜய் எப்படி அவரை முறியடித்தார் என்பதுதான் இந்த 2.55 நிமிட படத்தின் கதைச் சுருக்கம்..!

முதல் அரை மணி நேரம் காஜல் அகர்வாலே நம்மைக் கட்டிப் போடுகிறார். அடுத்து விஜய் துப்பாக்கியை கையில் தூக்கிய நொடியில் இருந்து இறுதிவரையிலும் நம்மை அசையாமல் பார்த்துக் கொண்டவர் திரைக்கதை ஆசிரியரான ஏ.ஆர்.முருகதாஸ்தான்..! பாராட்டுக்கள்..!

விஜய்யின் பெர்பார்மென்ஸ் பல இடங்களில் இயக்குநரால் பளீச்சென்று இருக்கிறது..! என்னதான் நடிப்பு இருந்தாலும் வெளிக் கொணருவது இயக்குநர்கள்தானே..!? காஜல் அகர்வாலுடனான காதல் காட்சிகளில் விஜய் பழைய கில்லி காலத்துக்கே போனதுபோல் தோன்றுகிறது..! போட்டு வாங்குவதுபோல் சிகரெட் பழக்கம், குடிப் பழக்கத்தை காஜலிடம் கேட்டு அவர் மூலமாகவே தெரிந்து கொள்வதும்.. காதலை சி்ன்னப்புள்ளத்தனமாக வெளிப்படுத்துவதும் பார்க்கவே க்யூட்டாக இருந்தது..!

கேப்டன் விஜய்யாகவும் பரபரப்பாக பம்பரம் ஆடியிருக்கிறார்.. தீவிரவாதி மருத்துவமனையில் இருந்து  தப்பித்து ஓடும்போது கூடவே இவரும் ஓடியபடியே போடும் சண்டைக் காட்சியில் விஜய்யின் ஸ்டைல் ரசிக்க வைக்கிறது..! தங்கைகளை கடத்தியிருக்கும் தளபதி வில்லனிடம் கையை கன்னத்தில் வைத்து சொடக்குப் போட்டுவிட்டு சண்டைக்கு வரும் காட்சியில் பிரிவியூ தியேட்டரே அதிர்ந்தது..! ஐ ஆம் வெயிட்டிங் என்ற காட்சியில் இத்தனை அழுத்தம்  இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.. இறுதியில் வில்லனிடம் தப்பித்து ஓடும் திட்டத்தோடு அவனை ஏத்திவிடும் விதமாக பேசும் பேச்சில் மாடுலேஷன் விஜய் ரசிகர்களுக்கு செமத்தியான தீனி..! அதுதான் நடக்கப் போகிறது என்று தெரிந்தாலும், அதையும் ரசிக்கும்படியாகவே கொடுத்திருக்கிறார் இயக்குநர்..!

காஜல் வரும் காட்சிகளிலெல்லாம் ஸ்கிரீனே அழகாய் இருக்கிறது.. அண்டார்டிகா, கூகிள் பாடல் காட்சிகளில் அவருடைய நடனம் இளசுகளை ஆட்டம் போடத்தான வைக்கிறது.. அம்மணியின் இந்த தாளம் தப்பாத ஸ்டெப்புகள் தமிழ்ச் சினிமாவி்ல இன்னும் கொஞ்சம் கூடினால் அனுஷ்காவையும் ஓரம்கட்டலாம்..! கோபத்தில் சிந்திச் சிதறும் அந்த திண்டுக்கல் மலைக்கோட்டை போன்ற மூக்கின் மீதான குளோஸப் காட்சிகளெல்லாம் காஜலின் ஸ்பெஷலாட்டி.. “அந்த மேட்டர் பொண்ணே உன்னை வேணாம்னு சொல்லிருச்சே..” என்று சொல்லிக் காட்டி சிரிக்கும்போது காஜலின் சிரிப்பே ஆயிரம் முத்துக்களை சிந்துகிறது..! இறுதியில் நிச்சயத்தார்த்தத்தை நிறுத்திக் கொள்ளும்படி விஜய் சொல்லும் காட்சியில் இந்த ஐஸ்கிரீம் பெண்ணை கண்ணீர் விட வைத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நமது வன்மையான கண்டனங்கள்..! காஜலைத் தவிர்த்து விஜய்யின் தங்கையாக வருபவரும், ஜெயராம் அழைத்து வரும் மேட்டர் பொண்ணுமே, கேமிராவுக்கு அழகாக இருக்கிறார்கள்..! 

ஜெயராம் சம்பந்தப்பட்ட காட்சியின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று ஊகிக்க முடியாமல் கொண்டு போயிருப்பது குட்..! ஆனாலும் இவ்வளவு நீளம் தேவையில்லாதது.. இதனை சற்றுக் குறைத்திருக்கலாம்..! அல்லது முற்றிலுமாகவே நீக்கியிருக்கலாம்..! சத்யன் பரவாயில்லை.. “ஏண்டா உங்க வீட்ல கப்போர்ட்ல வேற எதையும் வைக்க மாட்டீங்களா..?” என்ற அவரது இடித்தலும் நன்று..! ஆனால் இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சில்தான் ஆயிரமாயிரம் லாஜிக் ஓட்டைகள்.. அதனாலென்ன பரவாயில்லை.. வடிவேலுவையோ, விவேக்கையோ வைத்திருந்தால் கூடுதலாக காட்சிகள் வைக்க வேண்டியிருந்திருக்கும். அவர்களுக்கும் போலீஸ் டிரெஸ் சூட்டாகியிருக்காது.. வேறு வழியில்லை..!

எழுதி இயக்கியிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு பின்பு அடுத்து பாராட்டுக்குரியவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான்.. பின்னணி இசையில் விளையாடியிருக்கிறார்.. காஜலை பெண் பார்க்க வரும் காட்சியில் அவரது இசையே தனி கேரக்டராகவே இசைக்கிறது.. கேட்கவே ரம்மியமாக இருந்தது.. மருத்துவமனை சண்டை காட்சி.. நாயுடன் ஓடும்போது திடுக்கென்று காட்சி  மாற்றத்தில் வரும் இசை.. காஜலுடனான லவ் பிரேக்கிங் காட்சிகள்.. மெயின் வில்லனின் வீட்டில் டிவி பார்க்கும்போது வரும் பின்னணி... குண்டு வெடிப்பின் கோரங்களைக் காட்டும் இசை.. இது போன்ற படங்களில் பின்னணி இசையும் மிக முக்கியம் என்பதை உணர்ந்து செய்திருக்கிறார் இயக்குநர்.. காட்சிகளோடு ஒன்ற வைப்பதில் இந்த இசையும் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறது..! வாழ்த்துகள் ஹாரிஸ் ஸார்..!

ராணுவம், கேப்டன், ராணுவ நுண்ணறிவுப் பிரிவில் ஒரு ஆபீஸர் என்று விஜய்க்கு மகுடங்கள் சூட்டி களத்தில் இறக்கிவிட்டிருந்தாலும், இத்தனை கொலைகள் நடந்தும் மும்பை போலீஸ் அடக்கமாக இருந்திருக்கும் என்று சொல்லியிருப்பது மகா அபத்தம்..! அதிலும் சத்யன் தீவிரவாதிகளை பற்றி விஜய்யிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது பத்து முழம் பூவை காதில் சுற்றுவதற்குச் சமம்..! இப்படி ஒரு சப் இன்ஸ்பெக்டர் இருந்தால் பதவியிறக்கம்தான் கிடைக்குமே ஒழிய, பதவி உயர்வு கிடைக்காது..!

12 தீவிரவாதிகள் கொலை.. ஒரு கூடுதல் கண்காணிப்பாளர் கொலை.. அடுத்தடுத்து ராணுவ வீரர்கள் கொலை.. என்ன செய்யும் மும்பை..? போலீஸோடு இணைந்தே இதனைச் செய்வது போல காட்டியிருந்தாலும் கொஞ்சம் ஒத்துக் கொள்ளலாம்..! விஜய் ரசிகர்கள் தரும் காசு அளவுக்கு மும்பை போலீஸின் வருகை திரைக்கதையில் அழுத்தம் தராது என்று இயக்குநர் நினைத்திருக்கலாம்..! இது ச்சும்மா.. முழுக்க முழுக்க எண்ட்டர்டெயின்மெண்ட் என்று சொல்லியிருந்தால் இதையெல்லாம் கேட்காமலேயே இருந்திருக்கலாம்..!

படத்தின் முடிவில் “அனைத்து ராணுவத்தினருக்கும் இந்தப் படம் சமர்ப்பணம்” என்று டைட்டில் கார்டு போட்டு படத்தை ரொம்பவே சீரியஸாக்கிவிட்டார்கள்..! இதைப் பார்த்து யாராவது ஒரு முன்னாள் ராணுவத்தினர் கேஸ் போடாமல் இருந்தாலே பெரிய விஷயம். நேற்றைக்கு படத்தின் முதல் காட்சி முடிந்தவுடனேயே ஒரு இஸ்லாமிய அமைப்பு படத்தில் இஸ்லாமியர்களையே தீவிரவாதிகளாக உருவகம் செய்திருப்பதாகச் சொல்லி விஜய் வீட்டு முன் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துவிட்டது.. என்ன செய்வது..? 

இந்து தீவிரவாதிகளைவிடவும், இஸ்லாமிய தீவிரவாதிகளை பற்றி படமெடுப்பது இந்தியாவில் சுலபம் என்பது சினிமா இயக்குநர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் தைரியமாக எடுக்கிறார்கள்..! இதற்கு இயக்குநரின் பதில், “தொடர் குண்டு வெடிப்புகளில் இஸ்லாமிய தீவிரவாதம்தானே முன்னிலை வகிக்கிறது..” என்பதாகவே இருக்கும் என்பது உறுதி..!

ஆனால், இந்து தீவிரவாதம் பற்றி படமெடுத்து தான் கஷ்டப்பட விரும்பவில்லை என்பதை மறைமுகமாக இயக்குநர் இப்படி ஒத்துக் கொண்டு போவதை நாமும் கனத்த மனதோடு பார்த்துக் கொண்டிருப்போம்..! வேறு வழியில்லை..!
 

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-05-11-12

05-10-2012

என் இனிய தமிழ் மக்களே..!


எழுத நேரம் இருந்தும், அளவிட முடியாத சோம்பேறித்தனத்தினாலும், அதிகரித்து வரும் இணைய தேடல்களினாலும் இட்லி-தோசை பதிவுகளை எழுத முடியாமல் இருந்தேன்.. இப்போது தவிர்க்க இயலாமல் மீண்டும் துவக்குகிறேன்..!

துர்ப்பாக்கிய மரணம்

சென்ற மாதம் சென்னையில் காலமான ஒரு சினிமா பிரமுகரின் மரணம் தற்கொலையாம்..! எத்தனையோ வருடங்கள் பிஸியாக ஒர்க் செய்துவிட்டு கடைசியாக கிடைத்த வேலைக்கு, மாதச் சம்பளத்தில்கூட வேலை பார்த்திருக்கிறார்.. வீட்டில் அவரது மகனுடன் நடந்த சின்ன வாக்குவாதத்தினால் கோபப்பட்டு விஷத்தை அருந்தியிருக்கிறார். அவர் வாந்தி எடுப்பதை பார்த்து மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கேதான் விஷமருந்தியது தெரிந்திருக்கிறது. “ஏதோ கோபத்தில் குடிச்சிட்டேன். காப்பாத்திருங்க..” என்று மருத்துவர்களிடம் கேட்டிருக்கிறார்..! முயற்சி செய்தும் முடியவில்லை.. முறையாக போலீஸ் விசாரணைக்கு பின்பு போஸ்ட் மார்ட்டம் செய்து உடல் கிடைத்தாலும், சினிமா துறையினருக்கு மட்டும் அது தெரிவிக்கப்படவில்லை..

“சினிமாக்காரன் தூங்கும்போது காலை ஆட்டிக்கிட்டே தூங்கணும்.. இல்லேன்னா செத்துட்டான்னு மாலையை வாங்கிப் போட்டிருவாங்க”ன்னு சொல்வாங்க.. ஆனால் இங்கே இறந்து போன இவருக்காக அஞ்சலி செலுத்த பிரபலங்கள் யாருமே வரவில்லை..! இவர் உச்சத்தில் இருந்த காலத்தில் இவர் உதவி இயக்குநர்களிடம் நடந்து கொண்ட முறையினால் வளர்ந்து வந்திருக்கும் அந்த இயக்குநர்களும் இவரை கண்டு கொள்ளாமல்விட, இவருடைய நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்களுமே இவரது போக்கால் வெறுப்படைந்து ஒதுங்கி போய்விட்டார்கள்..!

இத்தனையாண்டு காலம் திரையுலகில் இருந்து தனது குடும்பத்தை மட்டுமே கரை சேர்த்த புண்ணியத்தோடு போய்ச் சேர்ந்துவிட்டார்..! இருக்கும்போது ஆடக் கூடாது என்று சொல்வது இதனால்தான்..!

சலவை நிலா - இளைய நிலாவாக மாறிய மர்மம்..!


கவிப்பேரரசு பற்றி பல இயக்குநர்கள் பலவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்போது இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனும்  அவர் பங்குக்கு ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் இடம் பெற்ற ‘இளைய நிலா பொழிகிறது’ பாடலை முதலில்  ‘சலவை நிலா பொழிகிறது’ என்றுதான் வைரமுத்து எழுதிக் கொடுத்தாராம்..

அந்தச் ‘சலவை’ என்ற வார்த்தை நன்றாக இல்லை. அதற்குப் பதிலாக வேறு வார்த்தையை போடும்படி ஆர்.சுந்தர்ராஜன் வற்புறுத்தியும் கவிஞர் ஏற்கவில்லையாம்.. பதிலுக்கு, “உங்களைவிட அறிவாளிகள் நிறைய பேர் தமிழ்நாட்டுல இருக்காங்க..” என்று பதில் சொன்னாராம்.. “இருக்கலாம் ஸார்.. ஆனா எனக்கே அது என்னன்னு புரியலையே..? அப்புறம் எப்படி நான் மத்தவங்களுக்கு புரிய வைக்கிறது..?” என்று சண்டையிட்டாராம் ஆர்.சுந்தர்ராஜன்.

இளையராஜாவும் ஆர்.சுந்தர்ராஜனை அழைத்து, “இது உனக்கு முதல் படம்.. ரொம்ப திமிரா இருக்காத.. கொஞ்சம் விட்டுக் கொடுத்து போ.. கவிஞர் சொன்ன மாதிரியே இருக்கட்டும்..” என்று அட்வைஸ் செய்திருக்கிறார். “இல்ல ஸார்.. என் படத்துல என் ஹீரோயினை பாடாய்ப்படுத்தி அடிச்சு, துவைச்சு காயப் போட்ட மாதிரி காட்டப் போறேன்.. அதுக்கு முன்னாடியே இப்படி ‘சலவை’ன்னு போட்டா நல்லாயிருக்காது ஸார்..” என்றிருக்கிறார். “சரி.. கதைக்கு தேவையில்லைன்னா நீ எப்படி வேண்ணாலும் மாத்திக்க..” என்று இளையராஜா ஓகே சொன்ன பின்புதான் ‘சலவை நிலா’-‘இளைய நிலா’வாக மாறியதாம்..!

கவிப்பேரரசுவின் இந்த விட்டுக் கொடுக்காத தன்மை இண்டஸ்ட்ரீ முழுக்கத் தெரிந்ததுதான். இதனால்தானோ என்னவோ அவரை எப்படியாவது கீழேயிறக்கிவிட வேண்டும் என்ற எண்ணமும் நிறைய பேருக்கு இருக்கு போலிருக்கு..! இயக்குநர் அமீர் ஒரு நிகழ்ச்சியில் மதன் கார்க்கியை மேடையில் வைத்துக் கொண்டே, “எப்பவுமே வைரமுத்துதான் உச்சத்துல இருக்காரு.. அவரை யாராச்சும் கீழே இறக்கி விடுவாங்களான்னு நானும் பார்த்துக்கிட்டேயிருக்கேன். யாராலும் முடியலை.. மதன் கார்க்கியாச்சும் அதைச் செஞ்சா நல்லாயிருக்கும்”ன்னாரு.. மதன் கார்க்கியால் சிரிக்க மட்டுமே முடிந்தது..!

அது போகட்டும்..  “சலவை நிலா”வுக்கு என்ன அர்த்தம்..?

பிரபாகரன் படத்தைத் தடுக்கும் சென்சார் போர்டு..!

‘ஈழம்’, ‘பிரபாகரன்’ என்ற வார்த்தைகளை எப்பாடுபட்டாவது மக்களிடமிருந்து மறைத்துவிட வேண்டும் என்று இந்திய ஏகாதிபத்தியம் அரும்பாடுபட்டு வருவதாக வைகோவில் இருந்து சீமான்வரையிலும் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். கேட்பதற்கு ஆரம்பத்தில் அலுப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை..!

இகோர் இயக்கியிருக்கும் ‘தேன்கூடு’ படத்தின் டைட்டிலில் ‘த’ என்ற எழுத்துக்குப் பதிலாக தமிழ் ஈழ வரைபடத்தை டிஸைனாக வரைந்திருந்தார்கள். அதனைத் தூக்கினால்தான் டிரெயிலருக்கே அனுமதி என்று மறுதலித்திருக்கிறார்கள் சென்சார் போர்டில் இருந்த இந்திய அடிமைகள்..! அதேபோல் பிரபாகரன் பற்றி பேசியிருந்த வசனங்களையும் காட்சிகளையும், புகைப்படங்களையும் நீக்கிவிட்டு வந்தால் டிரெயிலர் பற்றி யோசிப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். செலவு செய்தாகிவிட்டது.. வேறு வழியில்லை என்ற நிலையில் அவர்களுக்கிணங்கிய நிலையில்தான் சென்சார் சர்டிபிகேட் பெறப்பட்டு டிரெயிலர் வெளியாகியுள்ளது..!

இது இப்படியிருக்க.. இந்தப் படத்தைப் பற்றிப் பேச சீமான், இயக்குநர் புகழேந்தி, அமீர், கவிஞர் காசி ஆனந்தன், புலமைப்பித்தன் போன்றோரெல்லாம் வந்திருந்தது சரி.. எதற்கு தமிழச்சி தங்கபாண்டியன்..? இவரை மேடையில் வைத்துக் கொண்டே முள்ளிவாய்க்கால் போர் பற்றியும், நாம் எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருந்தோமே என்று புகழேந்தியும், சீமானும் பேசியதுதான் முரண்..!

இந்தப் படத்திற்கு இப்படியென்றால் ‘கள்ளத்துப்பாக்கி’ படத்தின் டைட்டிலில் பிரபாகரனின் படத்தை தைரியமாக வைத்திருக்கிறார்கள்.. சென்சாரும் வாங்கிவிட்டார்கள். அது எப்படி..? அப்பீலுக்கு போனால் ஓகே.. போகவில்லையெனில் கட்டா..? அப்போ சென்னை சென்சார் போர்டுக்கு ஒரு  விதிமுறை.. டெல்லி சென்சார் போர்டுக்கு ஒரு விதிமுறையா..? அட என்னங்கடா உங்களோட இந்திய தேசியம்..?

மோதத் துடிக்கும் தங்கர்பச்சான்..!

அடிக்கிற காத்துல அம்மியே பறக்கும்போது, அது பூவாவே இருந்தாலும் நிக்க முடியுமா..? தங்கர்பச்சானை நோக்கி திரையுலகப் பிரமுகர்கள் முணுமுணுக்கும் கேள்வி இது..! வரிசையாக ‘18 வயசு’, ‘தாண்டவம்’, ‘மாற்றான்’னு மாத்து வாங்கிட்டு கடுப்புல இருக்கும் தியேட்டர்காரர்கள், ‘துப்பாக்கி’யின் வருகைக்காக ஆவலோட காத்திருக்காங்க.. இது ஓடினாத்தான் இந்தப் படங்கள்ல விட்டதை இந்த வருஷத்துல அவங்களால எடுக்க முடியும்ன்ற நிலைமைல இருக்காங்க..

620-க்கும் அதிகமான தியேட்டர்களில் துப்பாக்கியை ரிலீஸ் செய்யக் காத்திருக்கிறார்கள்.  ஏற்கெனவே ஜெமினி லேப்புடன் நடந்த அக்கப்போர் அடிதடியாகி, தாணு ஸாரின் ‘ராசி’ இந்தப் படத்திலும் ஒர்க்அவுட்டான நிலையில்.. எப்படியாச்சும் படத்தை ஹிட்டாக்கிவிட அவரும் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலைமையில் தனது அம்மாவின் கைப்பைசியையும் தீபாவளிக்கே தரை இறக்கியிருக்கிறார் தங்கர்பச்சான்.. முந்தாநாள் வரையிலும் 60-க்கும் குறைவான தியேட்டர்களே கிடைத்திருக்கின்றன.. இதையே சொல்லிச் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறார்..

“யார் இவரை தீபாவளிக்கு கொண்டு வரச் சொன்னது..?” என்கிறார்கள் திரையுலகப் பிரமுகர்கள்.. கொஞ்சம் நிறுத்தி வெளியிடலாமே என்றால் தங்கர் முடியாது என்கிறாராம். அப்போ அனுபவி என்று கை கழுவிவிட்டார்கள்..!  ‘துப்பாக்கி’யுடன் சிம்புவின் ‘போடா போடி’யும் களத்திற்கு வருகிறது.. அதுவும் மிச்சம் மீதி தியேட்டரை சாப்பிட்டிருக்கும்..! ‘கள்ளத்துப்பாக்கி’, ‘துப்பாக்கி’யுடன் போட்டி போடுவது தவிர்க்க முடியாதது.. ஒத்துக் கொள்ளலாம்.. ஆனால் ‘அம்மாவின் கைப்பேசி’ எதற்கு..? கொஞ்சம் பின்னாடி ரிலீஸ் செய்யக் கூடாதா..? தங்கர் யோசிக்கட்டும்..!

இயக்குநர்கள் சங்கமே ஆஜர்

சென்ற மாசம், விட்டனே பார் என்று அடித்துக் கொண்ட சினிமா இயக்குநர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் ‘கள்ளத்துப்பாக்கி’ படத்தின் ஆடியோ ரிலீஸுக்கு ஒட்டு மொத்தமாக திரண்டு வந்து ஆச்சரியப்படுத்தினார்கள்..!

படத்தின் டிரெயிலரை பார்க்கும்போதே பயமாக இருந்தது. அதீத வன்முறை..! ‘ஏ’ சர்டிபிகேட்டுதான் வாங்கியிருக்கிறார்கள். ‘யு’ வாங்கியிருந்தால் சேனல் ரைட்ஸிலாவது பணம் கிடைக்குமே என்றால், “கதை இப்படித்தான் ஸார்..” என்கிறார் இயக்குநர். செலவு செய்ய தயாரிப்பாளர் கிடைத்துவிட்டால் என்ன வேண்ணாலும்தான் செய்யலாமே..?

ஏ.வெங்கடேஷ் பேசும்போது அவருடன் பேசிய நண்பரொருவர் இயக்குநர் ஜனநாதனை ஏதோ நன்கு தெரிந்தவர் போல பேசி, “ஜனநாதன் கப்பல் கேப்டன்..” என்று திடமாகச் சொன்னாராம்..! ஏ.வெங்கடேஷே அந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.ஸ்டான்லியிடம் இது உண்மையா என்று கேட்டதாகச் சொன்னபோது கூட்டம் கலகலத்தது..! சினிமாக்காரர்களைவிடவும் அதிகமாக ‘கதை’ சொல்பவர்கள் வெளியில்தான் இருக்கிறார்கள் போலிருக்கிறது..!

டைட்டிலில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், என்று காட்டியவர்கள் அடுத்து அஜீத்தை மட்டும் காட்டிவிட்டு விஜய்யை கைவிட்டுவிட்டார்கள். ஏன் என்று கேட்டதற்கு “அவ்ளோதான் ஸார் ஆர்ட்டிஸ்ட்டுகள். அதுனாலதான் விஜய்யை காட்ட முடியலை..” என்றார் தயாரிப்பாளர் ரவிதேவன்.. நாமும் நம்புவோமாக..!

பீட்சாவின் வெற்றி

ஒரேயொரு படம்தான்.. படத்தின் இயக்குநர் யார் என்று இந்தியாவே விசாரித்து வருகிறது.. கார்த்திக் சுப்புராஜ் தனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பையே நல்லவிதமாகப் பயன்படுத்திக் கொண்டுவிட்டார்.. படமும் நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது..! பல ஊர்களிலும் புதிதாக வாங்கித் திரையிட்டிருக்கிறார்களாம்..! தெலுங்கு, கன்னடம், இந்தி மொழியாக்கம் பற்றிய பேச்சுக்கள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன..! இது போல் அனைத்து புதுமுக இயக்குநர்களும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற்றால் திரையுலகம் நிச்சயமாக பிழைக்கும்..!

மேடை படத்தின் அறிமுகம்

ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், கே.பாக்யராஜ், பிரகாஷ்ராஜ் போன்றவர்களின் கெட்டப்பில் மேடை நாடகங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்தவர்களை வைத்து “மேடை” என்றொரு திரைப்படத்தை தயாரித்து முடித்திருக்கிறார்கள்.  ஹீரோயின் வழக்கம்போல புதுமுகம்..!

இப்பல்லாம் ரொம்ப சிம்பிளா ஆடியோ ரிலீஸ் செய்யணும்னா ஏவி.எம். ஏசி தியேட்டரைவிட்டா வேற இடமே இல்லை..! ஆனா இந்த இடத்துல நிகழ்ச்சிகளை பார்க்கவும் ஒரு கொடுப்பினை வேணும்..! எப்பவுமே உக்கார இடம் கிடைக்காது.. ஏசி வேலை செய்யாது.. படம் தெளிவாத் தெரியாது.. இத்தனை இருந்தும் வெறும் 3000 ரூபாய்க்கு கிடைக்கறதால சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் இங்கேயே நிகழ்ச்சிகளை வைத்து வெறுப்பேத்துறாங்க..

இந்தப் பட நிகழ்ச்சி முடிஞ்ச பின்னாடி கொட்டுற மழைல, ராத்திரி எட்டு மணிக்கு சட்டுன்னு அங்கேயே “இங்கிவனை யான் பெறவே..” என்ற டைட்டிலில் ஒரு புதுப்படத்துக்கும் பூஜையை போட்டு ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்ச அந்தத் தயாரிப்பாளரை எப்படி வேண்ணாலும் பாராட்டலாம்.. பொழைச்சுக்குவாரு..!

பார்த்ததில் பிடித்தது
 

படித்ததில் பிடித்தது

மக்கள் திலகத்திற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்காக திரைப்படக் கலைஞர்கள் பாராட்டு விழா எடுத்தனர். இப்போது நேரு ஸ்டேடியம் இருக்குமிடம் அப்போது காலி இடமாக இருந்தது. அங்குதான் பாராட்டு விழா நடந்த்து. பிரமாண்டமான அரங்கம் அமைத்து அந்த விழா நடந்தது.

பாரதிராஜா, பாக்யராஜ். டி.ராஜேந்தர் என்று மக்கள் திலகம் மீது மரியாதை கொண்ட அனைவரும் வந்து மனதார வாழ்த்தினர். நடிகை ரேவதி உட்பட பலர் நடனம் ஆடினார்கள்.

இந்த விழா நடப்பதற்கு இரண்டு தினங்கள் முன்பு அடையாறு பார்க் ஷெரட்டன் ஓட்டலில் சின்ன விழா நடந்தது. அங்கேயும் திரை பிரபலங்கள் குவிந்திருந்தார்கள். மக்கள் திலகம் அப்போது முதல்வர் என்பதால் அவர் வர மாட்டார் என்ற நினைப்பில் நான், ஜெய்சங்கர் உட்பட சிலர் டிரிங்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

திடீரென்று மக்கள் திலகம் வந்துவிட்டார். அப்போது இலங்கை பிரச்சினை உச்சத்தில் இருந்த்தால் அவர் கருப்பு உடையில் வந்திருந்தார். அவர் வந்ததும் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த டிரிங்ஸை மறைத்துவிட்டோம். நான் அவசரம், அவசரமாக ஓட்டல் ஊழியரிடம் சென்று டூத் பேஸ்ட்டு வாங்கி பல் துலக்கிவிட்டு வந்து மக்கள் திலகத்திற்கு வணக்கம் வைத்தேன்.

“எப்படியிருக்கு சினிமா..?” என்று கேட்டார் மக்கள் திலகம்.

“நல்லாயில்லை..” என்றேன்..

“ஏன்..” என்றார்.

“நீங்கதான் சி.எம். ஆகிட்டீங்களே ஸார்..” சிரித்துக் கொண்டே என் தோளில் கை போட்டார்.

பல் துலக்காததால் மது வாடை பிடிக்கும் என்பதாலும், அது மக்கள் திலகத்திற்குப் பிடிக்காது என்பதால் தூரத்திலேயே நின்று கொண்டிருந்தார் நடிகர் ஜெய்சங்கர்.

மக்கள் திலகம் சில கலைஞர்களுடன் தோளில் கை போட்டுக் கொண்டு போஸ் கொடுத்தார். நான் படம் பிடித்தேன். அப்போது டைரக்டர் பாலு மகேந்திரா மக்கள் திலகம் தோள் மீது கை போட்டுவிட்டார். அவர் தோளில் கை போட்ட அடுத்த நிமிடமே பட்டென்று மக்கள் திலகம் அவரது கையைத் தட்டிவிட்டார். அவசரத்தில் அதையும் நான் படம் பிடித்துவிட்டேன். மக்கள் திலகம் இதைக் கவனித்துவிட்டார்.

“நடிகை ஷோபா, பாலுமகேந்திராவில் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்று பேசப்பட்ட நேரம் அது. முதல்வர் என்பதால் வழக்கில் இருந்து தப்பிக்க மக்கள் திலகத்திற்கு நெருக்கமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்வதற்காக அப்படி தோளில் கை போட்டு படம் பார்க்கப் பார்த்திருக்கிறார் பாலுமகேந்திரா..” என்று முணுமுணுத்தார்கள். “பெருந்தன்மையாக எல்லோருடைய தோளிலும் முதல்வர் கை போடுகிறார். இதற்காக அவர் தோளிலேயே கை போடலாமா..?” என்று சிலர் சிடுசிடுத்துக் கொண்டிருந்தார்கள்.

விழா நடந்த அன்று இரவு 11 மணிக்கு நான் வீட்டிற்கு வந்தேன். கொஞ்ச நேரத்தில் கதவு தட்டும் சப்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது வாசலில் ஜேப்பியார் நின்று கொண்டிருந்தார்.

“என்ன ஸார்.. எம்.ஜி.ஆர்., நெகடிவ் ரோலை எல்லாம் வாங்கிட்டு வரச் சொன்னாரா..? என்று கேட்டேன். “அதெப்படி இவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க..?” என்றார் ஜேப்பியார். “இத்தனை வருஷமா அவர்கூட இருந்திருக்கேன். இது தெரியாதா ஸார் எனக்கு..? பாலுமகேந்திரா தோளில் கை போட்டதும் நான் படம் எடுத்ததை மக்கள் திலகம் பார்த்துவிட்டார். நிச்சயம் பிலிம் ரோலை வாங்கிக் கொள்வார்ன்னு தெரியும்..” என்று சொல்லிவிட்டு பிலிம் ரோலை ஜேப்பியாரிடம் கொடுத்தேன்.

அதை வாங்கிக் கொண்டதும், “தலைவர் கொடுக்கச் சொன்னார்..” என்று சொல்லி ஒரு கவரைக் கொடுத்தார் ஜேப்பியார். பிரித்துப் பார்த்தேன். அதில் நூறு ரூபாய் நோட்டுக்கள் பத்து இருந்தன.

நன்றி :

“தரணி கண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர்.”
எழுதியவர் : புகைப்படக் கலைஞர் திரு.ஏ.சங்கர்ராவ்
நக்கீரன் வெளியீடு
பக்கங்கள் : 264
விலை : ரூ.150


கட்டற்ற சுதந்திரம் - நொறுங்கிப் போன கனவு..!

04-10-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


“இதற்கு மேலும் இதனைப் பற்றி எழுதாமல் போனால், நாளைக்கு நீயே ‘உள்ள’ போனீன்னா, ஒரு ஈ, காக்கா கூட உன்னை பார்க்க புழலுக்கு வராது..” என்று ஒரு நண்பர் எச்சரித்ததால், இந்த விஷயத்தில் சற்றே தாமதமான பதிவு இது. தோழர்கள் பெரிதும் மன்னிக்கவும்.

கட்டற்ற சுதந்திரம் என்று பூரிப்பில் இருந்த இணையத்தள மேய்வாளர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறது இந்தப் பிரச்சினை.. கைது அளவுக்குப் போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. யார் மீது தவறு என்று இந்தப் பிரச்சினையில் அனைத்து வகை பட்டிமன்றங்களையும் படித்து, படித்து மிகவும் டயர்டாகிவிட்டது..! இந்த வழக்கின் கைது, சட்டங்கள் பற்றிய விஷயங்களைப் படித்தபோது இதே போன்று என்னையவே கைது செய்ய அனைத்துவகை சட்ட ஆதாரங்களும் என் தளத்திலேயே இருக்கும் உண்மை எனக்கும் இப்போதுதான் புரிந்தது. புகார் கொடுக்க வேண்டிய ‘ஆத்தா’வுக்கும், ‘தாத்தா’வுக்கும் நான் ஒரு கொசு, என்பதால் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். இதுதான் உண்மை.

இதன் மூலம் அறிவது என்னவெனில் அடுத்தவரின் மூக்கு நுனியைத் தொடுவதுவரைதான் உனக்குள்ள பேச்சுரிமை என்று நமது புளுத்துப் போன அரசியல் சட்டம் தெளிவாகச் சொல்கிறது. ஒருவரின் வார்த்தை மற்றவருக்கு கடும் மன உளைச்சலைத் தருகிறது என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் அது எந்த வகையான மன உளைச்சல் என்பதை கனம் கோர்ட்டார்தான் முடிவு செய்வார்களாம்.. நடவடிக்கைகளில் கைதும் செய்யலாம் என்பதும் சட்டம் கொடுத்திருக்கும் வசதி.. இதில் நாம் என்ன செய்வது..?

கைதுகள் அதிகார வர்க்கத்திற்குத்தான் அடி பணியும் என்பது நன்கு தெரிந்த விஷயம்தான் என்பதால் இதில் எனக்கொன்றும் ஆச்சரியமில்லை..! தோழர் சவுக்கு சங்கரை, தாத்தாவின் ஆட்சியில் ஜாபர்சேட்டின் தூண்டுதலினால் உண்மையே இல்லாத வழிப்பறி கேஸில் பிடித்து உள்ளே வைத்தார்கள்.  அதுதான் இணைய எழுத்தாளர்களின் மீதான முதல் தாக்குதல் என்று நினைக்கிறேன்..  அந்தக் கேஸ் பொய்யானது என்று சொல்லி சமீபத்தில்தான் தீர்ப்பாகி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் சங்கர்..! அப்போது நம்மில் எத்தனை பேர் பொங்கி எழுந்தோம் என்பதை இப்போது கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்..!

இந்தக் கைது விவகாரத்தில் சட்டம் அதிகாரம் படைத்தவர்களுக்காக வளைந்து கொடுத்திருக்கிற அதேசமயம், கைதும் சட்டவிரோதமாக நடத்தப்படவில்லை.. ஆனால் வேகமாக, முக்கியத்துவம் வாய்ந்த கைதாகவே நடத்தப்பட்டிருக்கிறது..! கைது நடவடிக்கையின்போது ஒரு துணை கமிஷனரே சரவணக்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்றிருக்கிறார். இதிலிருந்தே போலீஸ் இதற்குக் கொடுத்த முக்கியத்துவம் நமக்குப் புரிகிறது.. இருவரும் இப்போது ஜாமீனில் வெளியில் வந்துவிட்டாலும், இவர்கள் கைதுக்கான முக்கியக் காரணம் சின்மயி மீதான வார்த்தைத் தாக்குதல் மட்டுமில்லை.. ஆத்தாவைப் பற்றி ராஜன் எழுதிய ஒரு சின்ன ட்வீட்டுதான் மிகப் பெரிய காரணம் என்று நான் நினைக்கிறேன்..! ஒருவரைவிட்டுவிட்டு மற்றவரை கைது செய்தால் பிரச்சினையாகும் என்பதால் இதில் சரவணக்குமாரும் மாட்டிக் கொண்டுவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்..!

ராஜனின் திருமணத்திற்கு நானும் சென்றிருந்தேன். பல முறை போனிலும் பேசியிருக்கிறேன்.. அவருடைய பல ட்வீட்டுகளை, கிண்டல்தான் என்றாலும், அத்துமீறிய ட்வீட்டுகள் என்று அவருக்கு ட்வீட்டரிலேயே சொல்லியிருக்கிறேன். “இது ரத்த பூமிண்ணே..” என்று அவரும் திருப்பி பதிலும் சொல்லியிருக்கிறார். சொல்லிக் காட்ட இது நேரமில்லை என்றாலும், அவருடைய சில டிவீட்டூகள் புகார்தாரர்களை காயப்படுத்தியிருக்கிறது என்பது மட்டுமே உண்மை. இதனால்தான் நம் அன்புத் தம்பி என்றாலும் அவருக்கு முழுமையான ஆதரவளிக்க முடியவில்லை. உற்றார், உறவினர் கைது செய்யப்பட்டால் எந்த வழக்காக இருந்தாலும் நமக்கு ஒரு பாசம் வருமே.. அது போன்றுதான் இப்போதும் ராஜன் மீதும், சரவணக்குமார் மீதும்.. பெரிதும் வருந்துகிறேன்.. நடந்திருக்கவே கூடாது.. நடந்துவிட்டது.. இனி நாம் ஜாக்கிரதையாகவே இருப்போம்..!

சின்மயியின் ட்வீட்டுகளும் நமக்கு மன உளைச்சலைத் தருகின்றன என்று நாம் புகார் கொடுத்தாலும், நமக்குத் தெரிந்த காவல் துறையின் உயரதிகாரி யாரும் இல்லாததால் அந்த வழக்கில் நிச்சயம் கைது எதுவும் இருக்காது..! நடக்காது..! இந்தக் கேடு கெட்ட இந்தியாவில் நாம் வாழும் சூழலில், இதனுடைய முரணான அரசியல் சாக்கடைகளையும் நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை.. சின்மயி நம்மைப் பற்றி தனிப்பட்ட முறையில் தாக்குதல் கொடுக்காதவரையிலும், நாம் பதில் நடவடிக்கையை எதிர்த் தரப்பினரை கைது அளவுக்குக் கொண்டு செல்லவும் முடியாது..! இப்போதாவது நாம் செய்த தவறென்ன என்பதைப் புரிந்து கொண்டு அதனை மாற்று வழியில் சந்திக்க முற்படுவோம்..!