தீயோர்கள் விலகி நிற்க - பகை தீர!

நம்மைச் சுற்றி நண்பர்களாக இருந்தவர்கள், நமக்கு விரோதமாக மாறி நமக்குத் தொல்லை தரும் போதும், நம்மை அறியாமல் தீயோரிடம் பழகி அந்த நட்பு விலக முடியாமல் தவிக்கும் போதும், வலிய வந்த விரோதங்கள் தீரவும், கீழ்க்கண்ட பதிகத்தை தினமும் சொல்லி வர அன்னை அருளால் தீயோர் விலகி பகை தீரும். நிம்மதி உண்டாகும்.

வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும்
மருந்தினுக் காவேண் டினும்
மறந்துமோர் பொய்ம்மொழி சொலாமலுந் தீமையாம்
வழியினிற் செல்லாமலும்
விஞ்சுநெஞ் சதனிற் பொறாமைதரி யாமலும்
வீண்வம்பு புரியாமலும் மிக்கபெரி யோர்கள்சொலும் வார்த்தை தள்ளாமலும்
வெகுளியவை கொள்ளா மலும்
தஞ்சமென நின(து) உபய கஞ்சந் துதித்ததிடத்
தமியனுக் கருள் புரிந்து
ஸர்வகா லமுமெனைக் காத்தருள வேண்டினேன்
ஜலக்கயல்கள் விழியை அனைய
வஞ்சியர் செ(வ்) வாய் நிகரும் வாவியாம் பன்மலரும்
வளர்திருக் கடவூரில் வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ்
வாமி! அபிராமி! உமையே!

டிஸ்கி : இது எனது 'மதிப்பிற்குரிய' நண்பர் ஒருவரின் பதிவில் இருந்து 'சுட்டது'.. இனி நிறைய அவரிடமிருந்து 'சுட' வேண்டியுள்ளது. அவ்வளவு கடவுள் பக்தியும், விஷய ஞானமும் உள்ளவர் அவர். நண்பர் இதற்கெல்லாம் கோபித்துக் கொள்ள மாட்டார் என்றே நம்புகிறேன்..

எல்லோரும் ஜோரா கை தட்டுங்க-இறுதி பாகம்

05-07-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே...


திரு.அருண்செளரி 'தினமணி'யில் எழுதி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திருமதி பிரதிபா பாட்டீல் மற்றும் அவரது குடும்பத்தாரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றிய தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி பாகம் இது..

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ரஜனி பாட்டீல் தில்லி செல்கிறார். சோனியாகாந்தியை 2006 ஜனவரியில் சந்திக்கிறார். தனது கணவர் எப்படி கொல்லப்பட்டார்? யாரால் கொல்லப்பட்டார்? ஏன் கொல்லப்பட்டார்..? என்ற தகவல்கள் அனைத்தையும் தெரிவிக்கிறார். கூடவே அகமது படேல், சுஷில்குமார் ஷிண்டே, மார்கரெட் ஆல்வா போன்ற காங்கிரஸ் உயர் தலைவர்களையும் சந்திக்கிறார்.

அவர்கள் யாரும் சுட்டுவிரலைக்கூட ரஜினிக்காக அசைக்கவில்லை. மாறாக, இந்தக் கொலைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் 2 பேர் மீதான முதல் தகவல் அறிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இந்தக் கொலை வழக்கு விசாரணையை முதலில் உள்ளூர் போலீஸாரிடமிருந்து எடுத்து மாநில சி.ஐ.டி. போலீஸாரிடம் ஒப்படைத்து, பின்பு அவர்களிடமிருந்து எடுத்து சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். இந்த வழக்கை ஏற்பது குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்கவே 3 மாதங்கள் ஆனது.

"எங்களுக்கு வேலைப்பளு அதிகம். இந்த வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அல்ல. சர்வதேச அளவில் விசாரிக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை. எனவே எங்களுடைய விசாரணை இதற்குத் தேவையில்லை.." என்று சி.பி.ஐ. பதில் அளித்தது.

வழக்கு விசாரணையை ஊனப்படுத்தவும், தொடர்புடையவர்களைத் தப்ப வைக்கவும் நடந்ததே இந்த நாடகம். ரஜினி பாட்டீல் உயர்நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் பெஞ்சில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார்.

"இந்த வழக்கில் விஷ்ராம் பாட்டீலின் அரசியல் எதிரிகள்தான் இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.." என்று சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ரஜினி பாட்டீலின் குற்றச்சாட்டே அதுதான். 'முக்கிய எதிரிகள்' என்று குறிப்பிடப்படுகிறவர்களைப் போலீஸார் அழைத்து விசாரிக்கவே இல்லை. கைது செய்யப்பட்டவர்களிடமும் இந்தக் கோணத்தில் விசாரணை நடைபெறவில்லை.

ராஜுமாலி, ராஜுசோனாவானே ஆகியோர் 03.01.2006-ல் எழுதிய கடிதத்துக்கும் அந்த அதிகாரி பதில் சொல்லவில்லை. "எங்களை நிர்ப்பந்திக்கிறார்கள். குற்றங்களை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளியுங்கள். இல்லாவிட்டால் விஷ்ராம் பாட்டீலுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் என்று எங்களை மிரட்டுகிறார்கள்.." என்று அந்தக் கடிதத்தில் மராத்தியில் இருவரும் எழுதியிருந்தனர்.

"இந்த வழக்கை விசாரிக்க முடியாது' என்று சி.பி.ஐ. அளித்த பதிலை ஏற்க முடியாது.." என்று நீதிமன்றம் 2007 பிப்ரவரி 23-ல் நிராகரித்தது. "உங்களுடைய பணிப்பளுவும், இந்த வழக்கின் தன்மையும் எங்களுக்குத் தெரியும். இரு தரப்பு வழக்கறிஞர்களின் உதவியோடு ஆவணங்களைப் பரிசீலித்ததில் இது வித்தியாசமான வழக்கு என்பதைப் புரிந்து கொண்டோம். எனவே சி.பி.ஐ. இதை விசாரிப்பதே சரியானது.." என்று நீதிமன்றம் ஆணையிட்டது.

2007 மார்ச் 5-ம் தேதி ரஜினிபாட்டீல் மீண்டும் ஒரு முறை வழக்கு பற்றிய குறிப்புகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதினார். "எனது குடும்பமே கொல்லப்படும் என்று அஞ்சுகிறேன்.." என்றுகூட அதில் குறிப்பிட்டிருந்தார். சோனியாவிடமிருந்து பதிலே வரவில்லை.

பிறகு இதையெல்லாம் மீண்டும் ஒரு முறை தொகுத்து குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கும் மனு செய்தார். அப்படியும் எதுவும் நடைபெறாததால், "பிரதிபா பாட்டீல்தான் மும்பை, தில்லியில் உள்ள தனது அரசியல் செல்வாக்கு காரணமாக தனது அண்ணன் டாக்டர் ஜி.என்.பாட்டீலை கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றி வருகிறார்.." என்று குற்றம்சாட்டினார்.

எதிர் குற்றச்சாட்டு :

"பிரதிபா பாட்டீலுக்கு இணையான தகுதி படைத்த வேட்பாளர் எங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் பாரதீய ஜனதா தவறானப் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது.." என்று காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

பிரதிபா பாட்டீல் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய கட்சிக்காரர்கள் அளித்த பேட்டிகள், வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்திலும், போலீஸாரிடமும், தில்லியிலும், மும்பையிலும் அவர்கள் அளித்த புகார் மனுக்கள் அம்பலப்படுத்துகின்றன. இவை பாரதீய ஜனதாவின் மூளையில் உதித்த கட்டுக்கதைகள் அல்ல. இது பொய்ப் பிரச்சாரம் என்றால், 'ஆஜ்தக்' தொலைக்காட்சி ஒளிபரப்பிய பேட்டி பற்றி என்ன சொல்கிறீர்கள்?

"இத்தனை நாட்கள் விட்டுவிட்டு பிரதிபாவை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த பிறகு ஏன் இதையெல்லாம் சொல்கிறீர்கள்..?" என்பது அவர்களின் அடுத்த கேள்வி.

எல்லா மாநிலங்களிலும் இதைப் போல ஆணவத்தோடு நடந்து கொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களில் எவரும் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறவரோ அல்லது அவருடைய உறவினரோ அல்ல.

எனவே, நாட்டின் உயர் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறவரின் தகுதியை ஆராய்வதிலும், ஆட்சேபணை தெரிவிப்பதிலும் என்ன தவறு? இந்த மோசடிகளை இப்போது அம்பலப்படுத்தாவிட்டால் பிறகு எப்போதுதான் இவை வெளியே வரும்? அதனால் என்ன பலன் இருக்கும்?

சோனியாவுக்கு எதுவுமே தெரியாதா..?

"சோனியாவுக்கு பிரதிபா குறித்து எதுவுமே தெரியாது. அதனால் தேர்வு செய்துவிட்டார்.." என்று மட்டும் கூறாதீர்கள்.

மகாராஷ்டிரத்தில் ஒரு மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ஒரு முறை அல்ல.. மூன்று முறை இருந்தவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அது பற்றி அவருடைய மனைவியும், கட்சித் தலைவர்களும் அலையலையாகத் தலைமைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். பேட்டி தருகிறார்கள். உள்ளூர் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது எதுவுமே தெரியாது என்று சொல்லும் அளவுக்கு இது சகஜமான விஷயமா?

அப்படியானால் சோனியாவுக்கு பிரதிபா குறித்து எல்லாம் தெரிந்துதான் அவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தாரா? ஆமாம்.. அதில் சந்தேகமே வேண்டாம்.

அரசியல் செல்வாக்கு இல்லாத மன்மோகன்சிங்கை பிரதமர் பதவியில் அமர்த்தினார். அவருக்கு அரசியல் சாதூர்யம் இல்லாவிட்டாலும், இன்னும் கறைபடியாத கரத்துக்குச் சொந்தக்காரராகவே இருக்கிறார். நாளையே அவர், சோனியா சொன்னபடி கேட்காமல், சுதந்திரமாகச் செயல்படத் துவங்கிவிட்டால் பிரச்சினையாகிவிடும்.

எனவே காங்கிரஸ் கட்சித் தலைவரின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், குடியரசுத் தலைவராக வருகிறவரும், சொந்தச் செல்வாக்கு இல்லாதவராக இருக்க வேண்டும். அது மட்டும் போதாது.. 'தலைமையின் தயவில்'தான் அவருடைய பதவியே நீடிக்க வேண்டும். இதற்குப் பிரதிபாவைவிட வேறு நல்ல வேட்பாளர் கிடைப்பாரா?

முற்றும்

எல்லோரும் ஜோரா கை தட்டுங்க-பாகம்-4

04-07-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே...


திரு.அருண்செளரி 'தினமணி'யில் எழுதி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திருமதி பிரதிபா பாட்டீல் மற்றும் அவரது குடும்பத்தாரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றிய தொடரின் நான்காம் பாகம் இது..

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

ஒரு கொலை, அதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை!

பிரதிபா முகத்திரையை விலக்கினால்-4


மகளிருக்கு அதிகாரம் வழங்குவதற்காக ஜலகாமில் தொடங்கப்பட்ட கூட்டுறவு வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி மூடப்பட்டது.

வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ரூ.20 கோடியை விழுங்கி ஏப்பம் விட்டதால், சர்க்கரை ஆலை நலிவடைந்து மூடப்பட்டது.

அடுத்த குடியரசுத் தலைவராக வரவிருக்கும் பிரதிபா பாட்டீல் தனது தங்கக் கரங்களில் தொட்டது எல்லாவற்றுக்கும் இதே கதிதான்.

அடுத்து நாம் காணவிருப்பது நாட்டு நலனில், அக்கறை கொண்டு அவர் தொடங்கிய 'ஷ்ரம் சாதனா டிரஸ்ட்' என்பதைப் பற்றியது. இது எதற்காக என்கிறீர்களா? கிராமப்புற இளைஞர்கள் பொறியியல் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டாமா? அதற்காகத்தான்..

இதன் சிறப்புகள் என்னவென்று பார்ப்போம்.

மாணவர்கள் நலனுக்காக ஒரு மருத்துவக் கணக்கு தொடங்கப்பட்டது. அதில் போடப்பட்ட தொகை ஒரு டாக்டருக்குச் சென்றது. இதுவரையில் சரி.. அந்த டாக்டர் யார் தெரியுமா? பிரதிபாவின் சகோதரர் ஜி.என்.பாட்டீல்தான். அந்தக் கணக்கை பிரதிபாவே கையாண்டிருக்கிறார்.

அந்தப் பொறியியல் கல்லூரியின் ஊழியர்கள், அறக்கட்டளையின் இயக்குநர்களுடைய வீடுகளில் வேலை செய்தனர். ஒருவர் மும்பையில் பிரதிபாவின் வீட்டில் வேலை செய்தார்.

கல்லூரிக்காக ஒரு விருந்தினர் இல்லம் கட்டப்பட்டது. பல்கலைக்கழக பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் வந்து தங்குவதற்காக அல்ல. பிரதிபா பாட்டீலின் உறவினர்கள் வந்தால் தங்கி ஓய்வெடுப்பதற்காகத்தான்.

மாணவர்களிடமிருந்து வசூலித்த பணம் விரைவிலேயே மூழ்கப் போகும் சர்க்கரை ஆலைக்குப் போனது.

ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து கட்டாயமாகப் பிடிக்கப்பட்டத் தொகை மூடப்படவிருக்கும் கூட்டுறவு வங்கியில் டெபாசிட்டாகப் போடப்பட்டது. இந்த டெபாஸிட்டுகளைக் கொண்டு பங்கு முதலீட்டாளர்கள் உருவாக்கப்பட்டனர். அவர்கள் பிரதிபா குடும்பத்தினரே திரும்பத் திரும்ப நிர்வாகிகளாக இயக்குநர்கள் தேர்தலில் வெற்றி பெற உதவியாகச் செயல்பட்டனர். ஒன்றை வைத்து ஒன்று.. ஒன்றிலிருந்து மற்றொன்று. அற்புதமான 'சிருஷ்டி ரகசியம்' பிரதிபா குடும்பத்தாருடையது.

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான மத்திய அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி எனது கட்டுரைகளால் நிலைகுலைந்து போயிருக்கிறார். "பிரதிபாவின் புகழைக் கெடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்வதாகக்" குற்றம் சாட்டியிருக்கிறார். "எல்லா அரசியல்வாதிகளுக்குமே உறவினர்களால் இப்படி பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.." என்று உதாரணங்களையும் அடுக்கியிருக்கிறார். "தொலைக்காட்சி நிறுவனங்கள் மட்டும் யோக்கியமா..?" என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அவர் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். அதற்காக குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமா? "எல்லோர் மீதும் நடவடிக்கை எடுங்கள் என்றுதானே கேட்கிறோம். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் விட்டுவைக்காதீர்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே.."

இப்போது ஒரு கொலை தொடர்பான சில பெயர்களையும் தேதிகளையும் பார்ப்போம்.

விஷ்ராம் ஜி.பாட்டீல்

வடக்கு மகாராஷ்டிரா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஜலகாம் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர். 30 ஆண்டுகளாக காங்கிரஸ்காரர். மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஒரு முறை அல்ல.. மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2005 செப்டம்பர் 21-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

ரஜினி பாட்டீல்

அதே கல்லூரியில் மராட்டி மொழி பேராசிரியராகப் பணி புரிகிறார். விஷ்ராம் பாட்டீலின் மனைவி. ஜி.என்.பாட்டீல், உல்லாஸ் பாட்டீல் ஆகியோர்தான் தனது கணவர் கொலையில் சதிகாரர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்.

ஜி.என்.பாட்டீல்

குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பிரதிபா பாட்டீலின் அண்ணன். விஷ்ராம் பாட்டீலை எதிர்த்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றவர்.

உல்லாஸ் பாட்டீல்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். ஜி.என்.பாட்டீலின் நெருங்கிய சகா. விஷ்ராம் பாட்டீலை போட்டியாளராகக் கருதுகிறவர். சுற்று வட்டாரத்தில் 'நன்கு பிரபலமான' பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

ராஜு மாலி, ராஜு சோனேவானே

விஷ்ராம் பாட்டீல் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள். "உண்மையான சதிகாரர்கள் வேறு நபர்கள்.." என்று ஆஜ்தக் தொலைக்காட்சி நிருபரிடம் கேமராவுக்கு முன்னால் சாட்சியம் கூறியவர்கள். "அவர்கள் யார்..?" என்று கேட்டபோது, "ரஜினி யாரைக் குற்றம் சாட்டுகிறாரோ, அவர்கள்தான்.." என்கின்றனர்.

பிறகு 2007, ஏப்ரல் 7-ல் போலீஸ் 'காவலில்' ராஜூமாலி இறந்து விடுகிறார். 2007 ஏப்ரல் 4-ல் ஜலகாமுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வருகின்றனர். இந்த வழக்குத் தொடர்பாக அவர்கள் வந்தது இதுவே முதல் முறை. ஏப்ரல் 7-ம் தேதி ரஜனியிடம் விசாரிக்கின்றனர்.

லீலாதர் நர்கடே, தாமோதர் லோகாண்டோ

விஷ்ராம் பாட்டீல் கொலைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறவர்கள். கொலைக்கு முதல் நாள், கொலை நடந்த நாள், கொலைக்கு மறுநாள் ஆகிய மூன்று நாட்களிலும் இவர்களும் ஜி.என்.பாட்டீலும் தொலைபேசியில் பேசியதாக பதிவாகியிருக்கிறது. இருவரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். நான்கு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களைப் பற்றிய முதல் தகவல் அறிக்கை(FIR) திரும்பப் பெறப்படுகிறது.

மோதல் ஏன்?

மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஜி.என்.பாட்டீல் இருந்தபோது, சுனாமி நிவாரணமாக பொதுமக்களிடமிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் நிதி திரட்டப்பட்டது. அந்தப் பணம் கட்சியிடமும் தரப்படவில்லை. மக்களுக்கும் சென்று சேரவில்லை.

ராஜஸ்தான் ஆளுநராக பிரதிபா பாட்டீல் நியமிக்கப்பட்டதும் அவருக்குப் பாராட்ட விழா நடத்த கட்சித் தொண்டர்கள் மீண்டும் நிதி திரட்டினர். இந்தப் பணமும் எங்கே போனது என்று யாருக்கும் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரிக்குமாறு மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரபாராவுக்கு கட்சித் தொண்டர்கள் புகார் மனுக்களை அனுப்பினர். இந்தத் தொகைகள் குறித்து விசாரிக்குமாறு கோரினர்.

2005 ஆகஸ்ட் 15

மாவட்ட காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த 9 பேர் பத்திரிகைகளுக்கு அறிக்கை தருகின்றனர். ஜி.என்.பாட்டீல் திரட்டிய நிதிக்கு கணக்கும் இல்லை. அது கட்சிக்கும் தரப்படவில்லை என்கின்றனர்.

இந்நிலையில் கட்சியின் மாவட்டத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷ்ராம் பாட்டீல் இந்த நிதி முறைகேடுகள் குறித்தும், உல்லாஸ் பட்டீலின் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறித்தும் விசாரணையைத் தொடங்குகிறார். இந்த இருவரின் முறைகேடுகள் குறித்து கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறார்.

அப்போது அவருக்கு 3 மொட்டைக் கடிதங்கள் வருகின்றன. விஷ்ராமைக் கொல்ல சுபாரி(கூலிப்படை) ஏவப்பட்டிருப்பதாகவும் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் அவை எச்சரிக்கின்றன. ஆனால் விஷ்ராம் பாட்டீல் அதை லட்சியம் செய்யாமல் விசாரணையைத் தொடர்கிறார். பிறகு கொல்லப்படுகிறார். உடனே உள்ளூர் பத்திரிகைகளில் இந்தக் கொலைச் செய்தி குறித்து பக்கம் பக்கமாக அலசப்படுகின்றது. "மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் உள்ள கோஷ்டிப் பூசலே இதற்குக் காரணம்.." என்று எழுதப்படுகிறது.

திடீர் திருப்பம்

பிறகு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். "90 சதவிகித விசாரணை முடிந்துவிட்டது. விரைவிலேயே சதிகாரர்களைப் பிடித்துவிடுவோம்" என்று ரஜினியிடமே போலீஸார் தெரிவிக்கின்றனர். திடீரென்று இதில் திருப்பம் நேரிடுகிறது. விஷ்ராம் பாட்டீலிடம் ராஜு மாலி ரூ.4.5 லட்சம் வாங்கியதாகவும், அதை விஷ்ராம் திருப்பிக் கேட்டதால் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதை ரஜினி பாட்டீல் வன்மையாக மறுக்கிறார். பத்திரிகைகளும் இதில் உள்ள முரண்களைச் சுட்டிக் காட்டுகின்றன. உடனே வழக்கு விசாரணை ஜலகாம் போலீஸிடமிருந்து மாநில சி.ஐ.டி. போலீஸ் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

2005 செப்டம்பர் 27

விசாரணை போகும் திசையைப் பார்த்து அதிர்ச்சியடையும் ரஜினி பாட்டீல் காங்கிஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதுகிறார். "எனது கணவரின் கொலைக்குக் காரணமாக இருந்தவர்கள், போலீஸ் விசாரணையை நடத்தவிடாமல் நெருக்குதல் தருகின்றனர்.." என்று தெரிவிக்கிறார்.

'தேசத்தூது', 'தேசநாடி' ஆகிய உள்ளூர் பத்திரிகைகளும் இந்தக் கொலை பற்றி விசாரித்து ஜி.என்.பாட்டீல் மீது சந்தேகம் தெரிவித்து சில புகைப்பட ஆதாரங்களுடன் எழுதின. பிறகு ரஜினி பாட்டீலும் பல்வேறு ஆதாரங்களுடன் உள்துறை அமைச்சர், உயர் அதிகாரிகள் ஆகியோருக்குக் கடிதங்கள் எழுதினார். ஆனால் எதற்கும் பலனில்லை.

கட்சிக்காரர் கொலை செய்யப்படுகிறார். அதில் சம்பந்தப்பட்டுள்ளவர் யார் என்று தெரிய வருகிறது. அந்த ஆதாரங்களைத் தீர விசாரித்து குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டிய போலீஸார் தயக்கம் காட்டி, வழக்கை மந்த கதியில் நடத்தி திசை திருப்புகின்றனர். இத்தோடு முடியவில்லை.

(இறுதிப் பகுதி விரைவில்)

எல்லோரும் ஜோரா கை தட்டுங்க-பாகம்-3

03-07-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே...


திரு.அருண்செளரி 'தினமணி'யில் எழுதி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திருமதி பிரதிபா பாட்டீல் மற்றும் அவரது குடும்பத்தாரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றிய தொடரின் மூன்றாம் பாகம் இது..

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், "அதிகாரம் பெறும் மகளிருக்கு கணவர் உண்டு.." என்பதை எல்லோருமே மறந்து விடுவதுதான்.

இணையதளத்தில் பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில், 'பிரதிபா, மகிளா சஹகாரி வங்கியின் நிறுவனர், தலைவர்' என்று அவரைக் குறிப்பிட்டுள்ளனர். வங்கி பற்றி அனைவரும் எழுத ஆரம்பித்ததும், "அவருக்கு 1994 முதல் அந்த வங்கியிடுன் தொடர்பு ஏதும் கிடையாது.." என்று திடீரென்று அறிவிக்கின்றனர்.

'ஜலகாம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர்' என்று அவருடைய வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. அந்த ஆலை பற்றி எழுத ஆரம்பித்ததும் அறிவிப்பு வருகிறது, "அவருக்கும், சர்க்கரை ஆலைக்கும் சம்பந்தமே இல்லை.." என்று..

கூட்டுறவு வங்கி, சர்க்கரை ஆலை இரண்டிலிருந்தும் விலகிய பிரதிபா தனது நேரம், உழைப்பு அனைத்தையும் கல்விப் பணிகளிலேயே செலவிட்டிருப்பார் என்று நம்பலாம்.

பிரதிபா பாட்டீலும் அவருடைய குடும்பத்தாரும் சங்கம் வைத்து சில பள்ளிக்கூடங்களை நடத்தினர். அதில் பணியாற்றுகிறவர்கள் நிர்வாகத்தின் மீது மிகுந்த கசப்புணர்வோடு இருக்கின்றனர். அவர்களோடு பணியாற்றிய கிசான்தாகே என்ற ஆசிரியர் எப்படி நடத்தப்பட்டார். அவர் எப்படித் தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை ஆவணங்களோடு அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதற்கெல்லாம் பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத்தும், அவருடைய சகாக்களும்தான் காரணம் என்கின்றனர்.


ஷெகாவத்துகள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் 1977-ல் கிசான் தாகே பணிக்குச் சேர்ந்தார். உதவி ஆசிரியர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டார். ஊதியம் தராமலும், உரிய மரியாதை கொடுக்காமலும் அவமதிக்கப்பட்ட அவர் 1998-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்தார். அதுவன்றி ஒரு பத்திரமும் அவரிடம் இருந்தது. போலீஸார் அவற்றையெல்லாம் கைப்பற்றிக் கொண்டு பிரேதபரிசோதனை நடத்தினர். தேவிசிங்கும் அவருடைய நண்பர்களும் எப்படித் தன்னைச் சிறுமைப்படுத்தினார்கள்? ஊதியம் தராமலும், பள்ளிக்கூடச் சங்கத்துக்குச் சொந்தமான கடன் சங்கத்திலிருந்து, கடன்கூட வாங்க முடியாமலும் எப்படியெல்லாம் அலைக்கழித்தனர் என்றெல்லாம் விவரமாக அதில் எழுதியிருந்தார்.

கிசான்தாகே உயிரோடு இருந்தபோது பட்டத் துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவருடைய மகன், கல்வி உதவித் தொகை பெறுவதற்காக தேர்வெழுத விண்ணப்ப மனுகூட கிடைக்கவொட்டாமல் தடுத்தனர். வேலை பார்த்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாகக்கூறி தொலைதூரத்தில் உள்ள வேறொரு பள்ளிக்கூடத்திற்கு அவரை மாற்றினர். அங்கு ஆசிரியர் வேலையே இல்லை என்றதும், விடுதி மேலாளராக வேலை பார்க்குமாறு கூறினர்.

அமராவதி நகரில் உள்ள சமூக நலத்துறை அதிகாரிக்கு இது பற்றி கடிதம் எழுதினார் தாகே. "ஆசிரியர் பணியிடமே இல்லாத இடத்துக்கு ஒருவரை மாற்றுவது சட்டவிரோதமான செயல்.." என்று சமூக நலத்துறை அதிகாரி 1998, ஜனவரி 27-ல் பள்ளிக்கூட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார். அந்த மாறுதலுக்கு தன்னுடைய ஒப்புதலைத் தர முடியாது என்றும் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு ஊதியம் தருவதை முற்றாக நிறுத்திவிட்டது நிர்வாகம்.

இதற்கிடையே மும்பை உயர்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் 1998, ஜனவரி 19-ல் மனு தாக்கல் செய்தார் தாகே. தன்னைச் சட்டத்துக்குப் புறம்பாக மாற்றியது குறித்து அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார். அவரை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுமாறும் ஊதியம் தருமாறும் 1998 அக்டோபர் 8-ம் தேதி நாகபுரி உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. 1997 ஆகஸ்ட் 25 முதல் அவருக்கு நிலுவை ஊதியத்தையும் தருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டது.

அதன் பிறகும் ஊதியம் பெற அவர் நிர்வாகத்திடம் நடையாய் நடந்தார். இந்தக் கட்டத்தில் அவருடைய உடல் நலிவடைய ஆரம்பித்தது. டாக்டர் அளித்தச் சான்றுடன் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார். அதையும் நிர்வாகம் ஏற்கவில்லை. தாகேயின் பரிதாப நிலை கண்டு சக ஆசிரியர்கள் மிகவும் வருந்தினர். அவர்களால் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.

இதற்கிடையே வீட்டில் உள்ள பண்டம், பாத்திரங்களையும், மனைவியின் நகைகளையும் விற்றுத் தீர்த்துவிட்டதால் இனி வேறு வழியே இல்லை என்ற நிலையில் தற்கொலை முடிவை எடுத்து நிறைவேற்றிவிட்டார் தாகே. தாகேவின் மனைவி மங்கள்பாய் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் பாராமுகமாக இருந்துவிட்டனர்.

மங்கள்பாயின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், தாகேவைச் சிறுமைப்படுத்தியது.. வேலையே இல்லாத இடத்துக்கு மாற்றியது. பிறகு ஊதியம் தராமல் நிறுத்தியது. மருத்துவ விடுப்பைத் தர மறுத்தது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை எதிர்மனுக்கள் மூலம் தாமதம் செய்தது என எல்லாவற்றையும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.

"இதில் முதல் நோக்கில் தவறு யார் மீது என்று தெரிகிறது. போலீஸார் உரிய வகையில் வழக்கைப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.." என்று நீதிமன்றம் ஆணையிட்டது. 2000 அக்டோபர் 6-ம் தேதி அந்த ஆணை வெளியானது. அதற்குள் ஊதியமே இல்லாமல் 3 ஆண்டுகள் தாகேவே இல்லாமல் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த ஆணையையும் எதிர்த்து கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் ஏ.ஏ.நந்தகாவோன்கர் அளித்த தீர்ப்பு பள்ளிக்கூட நிர்வாகத்தை கன்னத்தில் அறைந்தாற்போல இருந்தது. "தேவிசிங் மீதும் அவருடைய சகாக்கள் மீதும் மனுதாரர் செய்த புகார்கள் உண்மையானவை என்பது நடந்த சம்பவங்களிலிருந்தும் கிடைத்துள்ள ஆவணங்களிலிருந்தும் தெரிகிறது. எனவே இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 306, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.." என்று தீர்ப்பளித்தார். அது 2005, ஜூலை 22-ல் வெளியானது.

அதன் பிறகாவது சட்டம் தன் வேலையைச் செய்திருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? குடியரசுத்தலைவர் மாளிகையை அலங்கரிக்கவிருக்கும் இந்த நாட்டின் வருங்கால முதல் குடிமகளின் கணவர், அவ்வளவு லேசுப்பட்ட ஆளா? அந்த ஆணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.

சமூக நலத்துறை அதிகாரி, உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்த நீதிபதியும், கன்னத்தில் அறைந்தாற்போல் ஒரு தீர்ப்பை அளித்தார்.

"இந்தத் தற்கொலை வழக்கில் சந்தர்ப்பச் சாட்சியங்களும், ஆவணங்களும் தற்கொலைக்குத் தூண்டியது யார் என்பதை சந்தேகமற தெரிவிக்கின்றன. அப்படியிருக்க அவர்களுடைய மனுக்கள் பரிசீலனைக்கே ஏற்றவை அல்ல.." என்று கூறி தள்ளுபடி செய்தார். இந்த ஆணை 2007 பிப்ரவரி 7ம் தேதி வெளியானது. தாகே 1998 நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இன்னும் இந்த வழக்கில் விசாரணையே ஆரம்பமாகவில்லை.

ஆதரவற்ற அப்பாவியான தாகே இறந்துவிட்டார்; அநாதையாகிவிட்ட அவருடைய மனைவி மங்கள்பாய் இனி அங்குமிங்கும் அலைய முடியாதபடிக்குச் சோர்ந்துவிட்டார்.

இந்த விஷயத்தில் முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தேவிசிங் ஷெகாவத் குடியரசுத் தலைவர் மாளிகையில் நுழைவதற்குத் தயாராகிவிட்டார். தேவிசிங் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை ஒப்புக் கொள்ள மாட்டீர்களா?


நான்காம் பாகம்

எல்லாரும் ஜோரா கை தட்டுங்க-பாகம்-2

02-07-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

திரு.அருண்செளரி 'தினமணி'யில் எழுதி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திருமதி பிரதிபாட்டீலின் ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றிய தொடரின் இரண்டாம் பாகம் இது..

முதல் பாகம்

"பிரதிபா பாட்டீல் முகத்திரையை விலக்கினால்..."

பிரதிபா மகிளா சஹகாரி வங்கியில் சமூக நீதியை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை ஊழியர்கள் சங்கம் சொல்லியிருப்பது தனிக்கதை.

வங்கியில் ஊழியர்களைச் சேர்ப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நியதிகளைக்கூட வங்கியின் நிர்வாகிகள் கடைப்பிடிக்கவில்லை. இதனால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு உரிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு தரப்படவில்லை. நிர்வாக இயக்குநர்கள் தங்களுடைய உறவினர்களுக்கே அந்த வேலைகளை வழங்கினார்கள்.

"கடனில் வங்கி மூழ்குவதைத் தடுக்க பிரதிபா பாட்டீல் அவருடைய அண்ணன் திலீப்சிங் பாட்டில் மற்றும் பிற உறவினர்களின் சொத்துக்களை அரசு கையகப்படுத்தவேண்டும்..." என்று ஊழியர்கள் சங்கம் தனது மனுவில் கோரியிருந்தது. அவர்களுக்கு எப்படி அவ்வளவு சொத்த குறுகிய காலத்தில் சேர்ந்தது என்று விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தது. மகாராஷ்டிர மாநில அரசின் கூட்டுறவுத் துறையும் இந்த நோக்கில் விசாரணையைத் தொடங்கியது.

அதே சமயத்தில் அந்த வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அனந்த்சிங் பாட்டீல் என்பவர், சங்க லெட்டர் பேடில் பிரதிபா பாட்டீலுக்கு ஒரு கடிதம் எழுதினார். வங்கியின் முறைகேடுகளில் உங்களுக்குப் பங்கு ஏதுமில்லை என்று அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கும் ஒரு படி மேலே போய், சங்கத்தின் சார்பில் பிரதிபாவிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.

பிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்பட்டதை ரிசர்வ் வங்கியும் இதே காலத்தில் விசாரிக்க ஆரம்பித்தது. "பிரதிபாவின் நெருங்கிய உறவினர்கள் வாங்கிய கடன்கள் முறைகேடாக தள்ளுபடி செய்யப்பட்டது உண்மைதான்.." என்று தனது ரகசிய அறிக்கையில் 2002 ஜூன்-18-ல் அது குறிப்பிட்டது.

"பிரதிபாவின் 3 உறவினர்களின் கடன் ரத்து தொடர்பான குறிப்பிட குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க உண்மைதான்..." என்று அது தனது அறிக்கையில் பதிவு செய்தது. கடன்களை ரத்து செய்வதை பரிசீலிப்பதற்கென்றே ரிசர்வ் வங்கியில் இருக்கும் உதவி துணை மேலாளரை, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி அணுகி ஒப்புதல் பெறவில்லை என்பதையும் ரிசர்வ் வங்கி சுட்டிக் காட்டியிருக்கிறது.

ஊழியர் சங்கங்களின் புகார் மனுக்கள் கூட்டுறவுத் துறை, ரிசர்வ் வங்கி, மத்திய மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு மட்டும் அல்லாமல் பிரதிபாவுக்கே அனுப்பப்பட்டுள்ளன.

ஊழியர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் ஆகியோர் 2002 மார்ச் 13-ல் அனுப்பியுள்ள கடிதத்தில் பிரதிபாவின் அண்ணன் திலீப்சிங் பாட்டீல் வங்கியின் தொலைபேசியை சொந்தப் பயன்பாட்டுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

வங்கியின் 224672 என்ற எண்ணுள்ள தொலைபேசியை அவர் தன்னுடைய வீட்டில் வைத்துக் கொண்டு பங்கு பரிவர்த்தனை தொடர்பான வியாபார விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். அவற்றுக்கான டெலிபோன் கட்டணம் ரூ.20 லட்சம். அந்த தொலைபேசியிலிருந்து மும்பையில் உள்ள பங்குத் தரகர்களுடன் பேசியிருப்பதை தொலைபேசி பில் தெரிவிக்கிறது.

இந்த ஆவணங்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஆனால் தொலைபேசியைத் தவறாகப் பயன்படுத்தியதை மறைக்க முடியவில்லை. வங்கியின் நிர்வாக அதிகாரியாக ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட அமோல் கைர்னார் இந்த தொலைபேசி பில்லுக்கு விளக்கம் தருமாறு வங்கி மேலாளர் பி.டி.பாட்டீலுக்கு 2003 பிப்ரவரி 1-ம் தேதி எழுதிய கடிதத்தில் கோரியிருக்கிறார்.

பிரதிபா மகிளா சஹகாரி வங்கி, சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அவ்வப்போது முறைகேடாக கடன் வழங்கியிருப்பதையும் ரிசர்வ் வங்கியின் நோட்டீஸ் சுட்டிக் காட்டியிருக்கிறது. இந்தச் சர்க்கரை ஆலைதான் கிராமப்புற இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பிரதிபா பாட்டீல் நிறுவியது. 1999-ல் சோனியா காந்தி இதைத் தொடங்கி வைத்தார்.

பிரதிபா மகிளா சஹகாரி வங்கியைப் போலவே இந்த சர்க்கரை ஆலையும் மூடப்பட்டுவிட்டது. ரூ.20 கோடி மதிப்புக்கு கடனை வாங்கிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் இந்த ஆலை மூடப்பட்டது. ஆனால் அந்த 20 கோடி ரூபாய் மதிப்புக்கு அது எந்த நாளிலும் சர்க்கரையை உற்பத்தி செய்யவே இல்லை என்பதுதான் அதன் சிறப்பு.

சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பங்குகளை வாங்க பிரதிபா மகிளா சஹகாரி வங்கி தகுதியற்றவர்களுக்கெல்லாம் கடன் வழங்கியிருக்கிரது. சர்க்கரை ஆலையும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக பிரதிபாவின் சகோதரர்கள் இப்படி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கடனை அள்ளி வழங்கினார்கள்.

"பொதுமக்கள் தங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்து கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்தால், உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் அதில் புகுந்து கொண்டு ஊழல் செய்யும்பட்சத்தில் மக்கள் யாரைத்தான் நம்புவது.." என்று ஊழியர் சங்கம் கேட்டுள்ளது.

"நீங்கள்தான் இந்தக் கூட்டுறவு வங்கியின் நிறுவனத் தலைவர். ஆனால் சுயலாபத்துக்காக நீங்களே இந்த வங்கியை அழித்துவிட முயற்சிகளைச் செய்து வருகிறீர்கள். 2002 மார்ச்சுக்குள் வங்கியின் நிலைமை மேம்படாவிட்டால் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது.

உங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக வங்கியில் நிகழ்ந்துள்ள ஊழல்களையும், முறைகேட்டையும் வெளியே தெரிய விடாமல் தடுத்துவிட முடியும். உங்களால் எங்களுக்கும், எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே உங்களை நாங்கள் சந்திக்கும்போதே இதைக் குறிப்பால் உணர்த்திவிட்டீர்கள்.

உண்மை வெளி வர வேண்டும் என்பதற்காக எங்களுடைய உயிரை விடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்செயலாகவோ, வேறு வகையிலோ எங்களுக்கோ, எங்கள் குடும்பத்தவருக்கோ ஏதேனும் நேர்ந்துவிட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு..." என்று வங்கி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

கடன் வாங்கிய பெண்கள் யார் என்பதைச் சொல்லிவிட்டோம். பணம் போட்டவர்கள் யார்? அதை அவர்களே பின்வருமாறு வங்கி நிர்வாகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்...
"காய்கறி, பழங்கள் விற்பது, குப்பை பொறுக்குவது போன்ற சிறு வேலைகளைச் செய்யும் ஏழைகளான நாங்கள்தான் நல்ல சேமிப்பாக இருக்கட்டும் என்று உங்கள் வங்கியில் முதலீடு செய்தோம். இப்போது நாங்கள் கேள்விப்படும் விஷயம் எங்களுக்குக் கவலை தருவதாக இருக்கின்றன. ஏழைகளுக்கு உதவத்தான் இந்த வங்கியைத் திறந்திருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தையெல்லாம் இதில் முதலீடு செய்துள்ளோம். எனவே நமது வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததவர்களின் முகவரிகளை வெளியிடுங்கள்.." என்று வங்கியில் பணம் போட்டவர்கள் கோரியுள்ளனர்.

மகளிர் முன்னேற்றத்திற்காகவும், ஊரக வளர்ச்சிக்காகவுமே 24 மணி நேரம் உழைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பிரதிபா பாட்டீல் வகையறா சமூகச் சேவகர்கள் இதற்கு அளித்த பதில்தான் என்ன..?


மூன்றாம் பாகம்