தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம்

25-08-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மூணு தலைமுறை தாண்டிய பரம்பரை பகையை முடிவுக்குக் கொண்டு வர எதிரி வீட்டுப் பெண்ணைக் காதலித்து கல்யாணம் செய்ய நினைக்கிறாரு ஹீரோ. கல்யாணத்தப்போ நடக்குற கசமுசால பொண்ணோட அப்பன் கொல்லப்பட.. ஹீரோயின், ஹீரோவை தந்திரமா கொல்லப் பார்க்குறா.. பொண்டாட்டி மனசை மாத்தி புருஷனான ஹீரோ உயிரோட இருக்கானா இல்லையான்றதை நீங்க தியேட்டருக்கு போய் படத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்குங்க..!


ஹீரோ இதயக்கனியாக விமல்.. மற்ற படங்களைவிடவும் இதில் ஓரளவு நடிக்கவும் செய்திருக்கிறார். காரணம் இயக்குநராகவும் இருக்கலாம்..! காமெடி படங்களிலேயே நடித்து வருவதால் இதற்கு மேம்பட்ட நடிப்பைக் காட்ட இவருக்கு வாய்ப்புகள் இல்லை என்பதாலும் மனிதர் தப்பித்தே வருகிறார்.. ஆனால் இந்தப் படத்தில் நடனத்திலும் கொஞ்சம் அசத்தியிருக்கிறார்.. ஒரு பாடலின்போது கட்டைகளுக்கு நடுவில் தாளம் தப்பாமல் தொடர்ச்சியாக ஆடியிருப்பதை பார்த்தவுடன் விமல் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் கூடியிருக்கிறது..! இதையே மெயின்டெயின் செய்வார் என்றே எதிர்பார்க்கிறேன்..!

ஹீரோயின் தாமரையாக பிந்துமாதவி. பொண்ணுக்கு கண்ணுதான் பெரிசு.. எப்பவும் முதுகுப் புறத்தை ஓப்பன் பேஜாக வைத்த ஜாக்கெட்டையே அணிந்திருக்கும் பிந்துவுக்கு காமெடிதான் வரலை. ஆனா நடிப்பு வருது. பெரிய அளவுக்கு நடிப்பைக் கொட்டிக் காட்ட  இதில் திரைக்கதை இல்லாததாலும், எப்பவும் முதுகை காட்டிக்கிட்டே இருப்பதாலும் நடிப்பை எதிர்பார்க்கும் அளவுக்கு தமிழகத்து ரசிகர்கள் முட்டாள்களில்லை.. நானும்தான்..!

இவர்கள் இருவரின்  நடிப்புப் பற்றாக்குறையை போக்கியிருக்கிறார்கள் சூரியும், சிங்கம்புலியும்.. சாம்ஸும்.. ரவி மரியாவும்..!  முறைப் பொண்ணு தாமரை தனக்குத்தான்னு தெனாவெட்டா பேசி அது புஸ்ஸாகிப் போன பின்பும் அந்த வீட்டுக்குப் பந்தோபஸ்துக்கு போறேன்னு சொல்லிட்டு வரும் சூரி அண்ட் கோ செய்யும் கலாட்டாவும்.. விமலை தீர்த்துக் கட்ட செய்யும் திட்டம் பணாலாகும் காட்சிகளும் வயிற்றை பதம் பார்க்கின்றன..!

அவ்வப்போது ரவி மரியாவிடம் திட்டங்களைத் தீட்டி கதை சொல்லிவிட்டு பின்பு அது பொசுக்கென்று போன பின்பு ரவியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு பரிதாபமாக நிற்கும் அந்த சில காட்சிகளில் சூரி நம்மிடம் நெருங்கி வருகிறார்.. ஈகோ பார்க்காமல் இது போன்று தொடர்ந்தால் நமக்கும் நல்லதுதான்..!

ரொம்ப நாள் கழித்து வினுசக்கரவர்த்தியை திரையில் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.. உடல் நலக் குறைவையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி நடிக்க வைத்திருக்கும் இயக்குநர் எழிலுக்கு எனது பாராட்டுக்கள்..!

ரவி மரியாவின் நடிப்பு கேரியரில் மிக முக்கியமான படமாக இது மாறிவிட்டது. நிச்சயம் அவரால் மறக்க முடியாது.. அந்த காமெடி கிளைமாக்ஸ் அசத்தல்.. மருதமலை மாமணியே என்று ஆரம்பிக்கும் படம் சியர்ஸ் கேர்ள் ஆட்டத்தோடு முடிவடைகிறது..! ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும் அயிட்டம் கேர்ள்ஸ்களை வைத்து திரைக்கதை அமைத்திருக்கும் உத்தியை ரொம்பவே பாராட்ட வேண்டும்..!

படம் முழுவதுமே ஆங்காங்கே தெளித்துவிடப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள்தான் படத்தை காப்பாற்றி இறுதிவரையிலும் பார்க்க வைக்கின்றன..! முதல் டிவிஸ்ட் முதல் ரீலிலேயே ஆரம்பிக்கிறது..! அடுத்த ரீலில் இன்னொரு டிவிஸ்ட்.. எதிரியின் மகள்தான் தாமரை என்பது தெரியாமலேயே காதலிக்கத் துவங்குகிறார்.. இப்படி அடுத்தடுத்த ரீல்களிலேயே டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டாக நகைச்சுவையுடன் கொண்டு போய் இடைவேளையில் மாமனாரை கொன்றுவிட்டு நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர்..!

இடைவேளைக்கு பின்பு.. பழி வாங்கும் போக்கு.. முதல் இரவு நடக்காமல் போவது.. அதையொட்டிய நகைச்சுவைகள்.. சூரி அண்ட் கோவின் தாக்குதலுக்கு பதிலடி சிங்கமுத்து தரும் கவுண்ட்டர்.. என்று பெரிதாக லாஜிக்கை  யோசிக்கவேவிடாத அளவுக்கு திரைக்கதையை காமெடியாக்கி கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்.

சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவும், நண்பர் கோபிகிருஷ்ணாவின் எடிட்டிங்கும் கச்சிதம்.. ஆனாலும் ஒரேயொரு காட்சியில் இணை இயக்குநர்களின் அலட்சியம் தெரிந்தது.. ஒரு  காட்சியில் விமலின் சட்டையில் மாட்டியிருந்த கூலிங்கிளாஸின் ஒரு லென்ஸ் மட்டும் தவறி கீழே விழுவது அப்பட்டமாகத் தெரிகிறது.. மீண்டும் அடுத்த ஷாட்டில் அந்த லென்ஸை எடுத்து சரியாக மாட்டியிருக்கிறார்கள். அப்போ முன்னாடி எடுத்த ஷாட்டில் தவறு இருக்குன்னு தெரிஞ்சு மறுபடியும் அதை ரீஷூட் செஞ்சிருக்க வேண்டாமா..? என்ன புள்ளைகப்பா இவுங்க..? அந்தக் காட்சியின் வேற ஷாட்டுகள் எடுக்காததால் எடிட்டரால் வேறு ஒன்றும் செய்ய முடியாமல் போயிருக்கிறது..! 

இமானின் இசையில் அம்மாடி அம்மாடி பாடலும் நெலாவட்டம் நெத்தியிலே பாடலும் ஓகேதான்.. அந்த போம் போம் போம் பாடலை நடுவில் இடம் பெற்றிருக்க வேண்டியது.. திரைக்கதையின் வேகத்தைக் குறைப்பதாக படம் பார்த்த பல இயக்குநர்களும் சொன்னதால் அதனை புரோமா ஸாங்காக மாற்றிவிட்டதாகக் கூறினார் இயக்குநர் எழில். ஆனாலும் அதுவும் ரசனையாகத்தான் இருக்கிறது..! 

மனம் கொத்திப் பறவையில் என்ன பாடம் கற்றுக் கொண்டாரோ அதையே இதிலும் பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் எழில். நிச்சயம் படம் அவருக்கும், தயாரிப்பாளருக்கும் தோல்வியைத் தராது என்றே நம்புகிறேன்..!

ஒரு முறை நிச்சயமாக பார்க்கலாம்..!

டிஸ்கி : 

ரொம்ப வருஷத்துக்கப்புறம் மரத்தடி பஞ்சாயத்து இதுலதான் வருது. விமல், தாமரையை தன்னோட சேர்த்து வைக்கச் சொல்லி பிராது கொடுக்குறாரு. அதை விசாரிச்சு பொண்டாட்டியோ வார்த்தைதான் முக்கியம்ன்னு சொல்லி பிந்துவோட விருப்பப்படியே விமலோட அனுப்பி வைக்குறாங்க பஞ்சாயத்துக்காரங்க. அதுல பஞ்சாயத்து பண்ற ரெண்டு நாட்டாமைகளும் நல்லாவே தீர்ப்பு சொல்லி நடிச்சிருக்காங்கப்பா.. எனக்கு இருக்குற ஒரு டவுட்டு.. இவுங்க ஏன் விஜய்க்கும், ஆத்தாவுக்கும் நடுவுல போயி பஞ்சாயத்து பண்ணி வைச்சிருக்கக் கூடாது..? இனிமே வர்ற எல்லா சினிமா பஞ்சாயத்துக்கும் இதே பாணில இவுகளையே உக்கார வைச்சு பஞ்சாயத்து நடத்தினா என்ன..? யோசிங்கப்பா.. யோசிங்க..!

தலைவா - சினிமா விமர்சனம்

23-08-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதியே ஆகணுமான்னு யோசிச்சேன். அதான் எல்லாரும் ஏற்கெனவே கொத்துக் கறி போட்டாச்சே.. நாம வேற அதை செய்யணுமான்னு ரொம்பவே யோசிச்சிங்கு.. ஆனா கடைசீல எழுதி வைச்சுத் தொலைஞ்சா.. நாளைக்கு எனக்கு பின்னாடி வர்ற சந்ததிகளுக்கு பெரிய உதவியா இருக்குமேன்ற பரந்த எண்ணம் என் மனசுல எழுந்ததால இதை எழுதி வைக்கிறேன்..!


எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டரில் செவ்வாய்கிழமை மாலை 7.15 மணி காட்சியே 8.15  மணிக்குத்தான் துவங்கியது.. கட்டுக்கடங்காத வாலிபப் பசங்களின் கூட்டம்.. இதில்  காத்திருந்த நேரத்திலெல்லாம் விஜய்யின் நற்பணி இயக்கத்தினர் முன் கேட்டில் கட்டியிருந்த பேனரில் ஏறி, ஆவின் பால் பாக்கெட்டை கிழித்து தலைவனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.. ரசிகர்களின் கரகோஷம் பக்கத்தில் இருந்த ஐயப்பன் கோவில் மணியையெல்லாம் அமுக்கிவிட்டது..! 

டிக்கெட் விலை 100 ரூபாதான்.. ஒரே விலைதான்.. வேறு எதுவும் இல்லை. அயோக்கியத்தனம்.. இதை எந்தத் தலைவனும் தட்டிக் கேட்க வரலைன்றதை இங்க பதிவு செஞ்சாகணும்.. அன்னிக்குக் காலை ஷோவே லேட்டா போட்டதால ஒரு மணி நேரம் கூடிப் போயிட்டதா தியேட்டர்காரங்க சொல்லிக்கிட்டிருந்தாங்க.. 

வடபழனி ஸ்டேஷன்ல இருந்து வந்திருந்த போலீஸார் எதிரில் இருந்த புதிய ஏஸி ஹோட்டலில் வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு உள்ளே போய் படத்தை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு “இன்னும் 20 நிமிஷம்தானாம்..” என்று வெளியில் வந்து எங்களுக்கே ஜோஸியம் சொன்னார்கள்..

சர்ரென்று ஒரு ஜீப்பில் வந்திறங்கிய இன்ஸ்பெக்ட்டரு, நேரத்தைக் கணக்கிட்டுப் பார்த்து இப்படியே போனா செகண்ட் ஷோ ராத்திரி 12 மணிக்குள்ள போடுவாங்க.. அது முடிய 3 மணி ஆயிருமே.. அதுவரைக்கும் நாம காவல் காக்கணுமா..? நமக்கென்ன வேலை வெட்டியில்லையா..? என்று ஓவராக சிடுசிடுத்தார்.. இந்தக் கோவம் தியேட்டரின் உள்ளே பாஸ் செய்யப்பட இன்ஸ்பெக்டர் மட்டுமே உள்ளே அழைக்கப்பட்டார். 5 நிமிடம் கழித்து கையில் இருந்த வாக்கிடாக்கியில் எதையோ பேசியபடியே சப் இன்ஸ்பெக்டர்களிடத்தில் வந்து தனது இடது கையால் தனது இடது பாக்கெட்டில் இருந்து ஒரு வெள்ளை கவரை எடுத்து அவர்கள் கையில் கமுக்கமாக கொடுத்துவிட்டு வீரமாக நடந்து சென்று ஜீப்பில் ஏறி பறந்தே போனார்.. ராத்திரி 3 மணிவரைக்கும் இருந்தாகணும்னு தியேட்டர்காரங்க “அன்பா” சொல்லிட்டாங்க போலிருக்கு..! நாடுன்னா இப்படீல்ல இருக்கணும்..!

5 மணி ஷோ முடிஞ்சு கூட்டம் வெளியே வர்றதுக்குள்ள நின்ன கூட்டம் உள்ளாற பூந்திருச்சு.. டிக்கெட்டே கிழிக்காம அப்படியே எல்லாரையும் உள்ளார விட்டுட்டாங்க.. ஓடின கூட்டம் கிடைச்ச இடத்துல எல்லாம் உக்காந்திருச்சு.. படம் துவங்குறவரைக்கும் ஒவ்வொரு வரிசைல இருந்து விட்டவிட்டு விசில் சப்தமும், கை தட்டலும், தலைவா குரலும் ஓங்கி ஒலிச்சுக்கிட்டே இருந்துச்சு..!

3 விளம்பரம் போட்டு கடைசியா சென்சார் சர்டிபிகேட் காட்டியவுடன் என் காது மிஷினை கழட்டி பாக்கெட்டில் வைத்துவிட்டேன்.. இரண்டு பக்கத்திலும், முன், பின் பக்கத்திலும் எழுந்த கூச்சலில் 5 டெசிபலாச்சும் காணாமல் போயிருக்கும்.. இப்பவும் ஒய்யுன்னு சவுண்டு வந்துக்கிட்டேயிருக்கு..! இளைய தளபதி டைட்டிலை பார்த்ததும் ஒரு கத்து.. முதுகை காட்டும் அந்த போட்டோவை காட்டியவுடன் ஒரு கத்து.. கூச்சல்கள் தொடர்ந்து கொண்டேயிருக்க என்னைப் போன்ற அப்பாவிகளின் கதறல்களை கேட்க அங்கே ஆட்களே இல்லை..!  விஜய்யின் அறிமுகக் காட்சி வந்தவுடன் தியேட்டரே ஒரு கணம் ஆடிப் போனது.. தலைக்கு மேலே பேப்பர், பேப்பர்களாக பறந்து ஸ்கிரீன் முழுவதும் பேப்பர்களே தெரிந்தன.. அந்த பாடல் காட்சி முழுவதையும் கேக்கவே விடலை.. அப்பாடான்னு கொஞ்சம் வசனம் பேச ஆரம்பிச்சவுடனேயே மறுபடியும் தலைவா.. தலைவான்னு கூப்பாடு..! 

இப்படியே ஆரம்பிச்சு முடிவுவரையிலும் இந்த ரசிகர்களின் அக்கப்போரினால் வசனங்களும் காதில் விழுகாமல், ஏற்கெனவே அடுத்த வரும் சீனை சின்னப் பையனுகளே சொல்லிர்ற மாதிரியிருக்குற திரைக்கதையும் இருந்து தொலைத்ததால்.. என்னமோ விமர்சனம் எழுதற கடமைக்காக உக்காந்து சீட்டைத் தேய்ச்சுட்டு வந்திருக்கேன்..!

கதையென்ன..? அவசியம் சொல்லணுமா..? எல்லாம் நீங்க பார்த்து பார்த்து சலிச்சுப் போன கதைதான்..! மும்பை.. தாராவி.. தமிழர்களுக்கெல்லாம் தலைவன்.. தாராவியை இடிச்சு பிளாட் கட்ட நினைக்கும் கும்பல்.. தடுக்கும் தலைவன்.. தலைவனுக்கு எதிரா அரசியல் சூழ்ச்சி.. தலைவனை பிடிக்க போலீஸ் படை.. தடுக்கும் மக்கள்.. தப்பிக்கும் தலைவன்.. மகனை வைத்து தலைவனை பிடிக்க மகாராஷ்டிராவின் சூப்பர் போலீஸ் பிளான்.. மகன் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு ஹீரோயின் அமலாபாலையும், சுரேஷையும் அனுப்பி தந்திரமா மகனை மும்பைக்கு இழுத்திட்டு வந்து அப்பனை பார்க்க வைக்குறாங்க.. அதே நேரம் அப்பனையும் பிடிச்சர்றாங்க.. (புதிய பறவைக்கு திரைக்கதை, வசனம் எழுதின ஆரூர்தாஸ் இப்பவும் உசிரோடத்தான் இருக்காரு.. ஒரு கேஸ் போடச் சொல்லுவோம்.. ஏதோ நம்மளால முடிஞ்சது..!) இப்பத்தான் டிவிஸ்ட்டு.. அப்பன் குண்டு வெடிப்பில் சாவ.. மகன் திரைக்கதையின் கட்டாயத்தில் தலைவனாகிறான்..

அப்பன் தனது இளைய வயதில் செய்த கொலைக்காக கொலையுண்ட எதிரியின் மகன் வளர்ந்து இந்த அப்பன் தலைவனையும் கொலை செய்யத் துடிக்கிறான். இவன்தான் குண்டு வைத்து அப்பனை கொலை செய்ததாக மகன் தலைவனுக்கும் தெரிய வர.. இவர்களுக்கிடையில் பெரிய சண்டையாம்.. யார் ஜெயிப்பாங்கன்னு எதிரில் டீக்கடை வைச்சிருக்கிறவனுக்குக்கூட தெரியும்.. ஸோ.. இத்தோட போதும்.. நிறுத்திக்குவோம்..!

அப்பன் தலைவனாக சத்யராஜ்.. எகத்தாளமில்லாமல், அடக்கமாக, பாந்தமாக, சாந்தமாக சர்க்கார் பட அமிதாப் வேடத்தில் கச்சிதமாக நாப்பது வார்த்தைகள் டயலாக் பேசி பரிதாபமாக செத்துப் போகிறார்..!  இயக்குநர் விஜய்யின் அனைத்து படங்களிலுமே தவறாமல் இடம் பிடிக்கும் நாசர் இந்தப் படத்திலும் எஸ்.ஏ.சி.யின் பலத்த எதிர்ப்பையும் மீறி இடம் பிடித்திருக்கிறார். தயாரிப்பாளர் சங்கத்தில் எஸ்.ஏ.சி.யின் எதிரணியில் முக்கிய நபராக நாசரின் மனைவி கமீலாதான் இருக்கிறார். அவர் எப்படி நம்ம படத்தில் நடிக்க முடியும் என்று ஒரு நாள் கத்தி ஷூட்டிங்கை நிறுத்தி வைத்திருக்கிறார் எஸ்.ஏ.சி. ஆனாலும் இயக்குநர் விஜய்யின் விடாத கெஞ்சலினால் மனமிறங்கிய நடிகர் விஜய் இதற்கு பச்சைக் கொடி அந்த சின்ன கேரக்டரில் நடித்துக் கொடுத்திருக்கிறார் நாசர். அந்த எதிர்ப்பு கூட இல்லையெனில் படம் முழுக்க வரும் துணை கமிஷனர் சுரேஷின் கேரக்டர் நாசருக்குத்தானாம்..!

விஜய்.. சொல்லவே வேண்டியதில்லை. எந்திரிச்சா கத்துறாங்க.. உக்காந்தா கத்துறாங்க.. டான்ஸ் ஆடினாலும் கத்துறாங்க.. வாயைத் தொறந்து டயலாக் பேசினால்கூட கத்துறாங்கன்னா பார்த்துக்குங்களேன்..! கடைசி பாடலின்போது என் பக்கத்தில் குடும்பத்துடன் வந்து உட்கார்ந்திருந்த ஒரு ஆள் திடீரென்று எழுந்து சென்று ஸ்கீரின் அருகில் ஆட்டம் போடத் துவங்க.. அவருடைய மனைவி பரிதாபமாக எங்களை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்ததை நினைத்தால் பாவமாக இருந்தது..!

விஜய் ரொம்பவே தேறிவிட்டார்.. டயலாக்கை நடிப்போடு சேர்த்தே கொடுக்கிறார்.. சிறப்பாக டான்ஸ் ஆடுகிறார்.. டான்ஸில் இவரை மிஞ்ச இவர் வரிசை நடிகர்கள் வேறு யாருமில்லைதான்.. நடிகர்களில் சிம்ரன் இவர்தான் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்..!

அளவெடுத்து தைத்தாற்போன்ற வெள்ளை சட்டை காஸ்ட்யூமில் பார்க்கவே சின்னப் புள்ளை மாதிரியிருக்காரு.. ஆனாலும் சதக்.. சதக்.. டுமீல்.. டுமீல் கொலைகளையெல்லாம் சர்வ சாதாரணமாகச் செய்கிறார்.. பட்டப் பகல்ல ஷூட்டிங் நடக்கும்போது ஒரு கொலை.. அப்புறம் ஆங்காங்கே போட்டுத் தள்ளிக் கொண்டே போகிறார்..! மும்பை போலீஸ் நம்ம தமிழ்நாட்டு போலீஸைவிட கேவலமா இருக்குன்னு இயக்குநர் விஜய் இது மூலமா தெளிவா சுட்டிக் காட்டியிருக்காரு..!

ஒரு காட்சில பாருங்க.. மராத்தியர்களைத் தவிர மத்தவங்க இருக்கக் கூடாது.. வெளியேறணும்னு சொல்லி ஒரு கூட்டம் கலாட்டாவை ஆரம்பிக்குது.. எங்கிருந்தோ ஓடி வரும் விஜய் கலாட்டா செய்பவர்களை அடித்து உதைத்துவிட்டு ஆசுவாசப்படும்வரையிலும் அவருடைய மூக்குக் கண்ணாடி கீழே விழுகவே இல்லை என்பதை பார்க்கும்போது இயக்குநர் எந்த அளவுக்கு சிரத்தையெடுத்து டைரக்சன் பண்ணியிருக்காருன்னு நினைச்சுப் பாருங்க.. வெல்டன் ஸார்..!

சந்தானம் ஆஸ்திரேலியால இருக்கும்போது வழக்கமான காமெடியன் மாதிரி ஹீரோயினை ஒன் சைடு லவ்வா லவ்வுறார்.. உண்மை தெரிஞ்சதும் விட்டுக் கொடுக்குறார்.. அவ்வப்போது கொஞ்சூண்டு சிரிக்க வைக்குறார். அவ்ளோதான்.. அதுக்காக அமலாபாலை போலீஸ் டிரெஸ்ஸில் பார்த்து விஜயசாந்தி மாதிரின்னு சொல்றதெல்லாம் காமெடி வறட்சியாகிகிட்டே போகுதுன்றதை காட்டுது..!

அமலாபால்.. இந்தப் படத்துக்கு எதுக்கு ஹீரோயின்னு தெரியலை.. சரோஜாதேவிகிட்ட கடைசியா சிவாஜி கேப்பாரு.. “நான் செஞ்ச தப்பை கண்டுபிடிக்க..  உனக்கு காதல்ன்ற புனிதமான விஷயம்தான் கிடைச்சதா..? வேற எதுவும் கிடைக்கலையா..?”ன்னு.. இதுல விஜய் அதையெல்லாம் கேக்கலை.. ஆனா அமலாபாலே வாலண்டியரா வந்து அப்பப்போ விஜய்யை காப்பாத்துறாங்க. கட்டக் கடைசீல அத்தனை அரிவாள் வெட்டுக்களையும் தாங்கி செத்துக் கிடக்குறவங்களை தன் துப்பாக்கியால சுட்டுட்டு தானே சுட்டுக் கொன்னதா சொல்லி விஜய்யை காப்பாத்துறாங்க.. (ஏன் தாயி.. போஸ்ட் மார்ட்டத்துல இந்த அரிவாள் வெட்டு, கத்தி சொருவெல்லாம் கண்டுபிடிக்க மாட்டாங்களா..? அப்போ அதையும் நானே செஞ்சேன்னு சொல்லிருவீங்களா..?) 

சரி விடுங்க.. கதையே 5 படத்துல இருந்து உருவலு.. இந்த ஒரு காட்சி எப்படியிருந்தா நமக்கென்ன..? இசை ஜி.வி.பிரகாஷ்.. தலைவா தலைவா பாடலும், வணக்கம்ண்ணா பாடலும் கேட்கும்படி இருந்தது.. அதையும் பார்க்குற மாதிரி எடுத்திருக்காங்க.. இட்ஸ் ஓகே..!

ஒளிப்பதிவு நீரவ்ஷா.. ஆஸ்திரேலியா மாதிரியான நாட்டு இறக்கிவிட்டா எல்லா ஒளிப்பதிவாளரும் இதைத்தான் செய்வாங்க.. மும்பைக்கு கடலு இருக்கும்போது நமக்கென்ன கவலை..? ராத்திரி எபெக்ட் அதிகம் இல்லாததால வித்தையெல்லாம் காட்டலை.. கொடுத்த சம்பளத்துக்கு ஓகேதான்..!

கிளைமாக்ஸ்ல சத்யராஜோட சால்வையை போர்த்திக்கிட்டு விஜய் நிக்குற சீன்ல மெய் மறந்து போயிட்டாங்க ரசிகர்கள். இனி இந்த சால்வை எப்பவும் விஜய் உடம்புல இருக்கணும்னு அவரோட ரசிகர்கள் நினைப்பாங்க. அவரை வைச்சு அடுத்தடுத்து படம் பண்ணப் போற இயக்குநர்கள்தான் பாவம்.. செத்து சுண்ணாம்பா ஆகப் போறாங்க..!

படத்துல ஒரு சின்ன டயலாக்.. “நாம தப்ப தட்டிக் கேட்க வரலை.. தண்டிக்க வந்திருக்கோம்”ன்னு.. எல்லாரும  கை தட்டுனாங்க.. எனக்கு சிரிப்புதான் வந்துச்சு.. இனிமேலும் எல்லா காலத்திலும் அப்படித்தான் வரும்.. பாவம் விஜய்..! 

படம் விடும்போது மணி ராத்திரி 11.40. செகண்ட் ஷோவுக்கும் அம்புட்டு கூட்டம் நிக்குது..! எப்படியும் 3 மணிக்குத்தான் முடிஞ்சிருக்கும்..! அந்த நேரத்திலும் ஒரு குடிகார ரசிகர் கேட் மீது ஏறி பால் அபிஷேகம் செய்தார்.. இத்தனை ரசிகர்கள் எங்கிருந்துதான் வந்தார்கள்.. எப்படித்தான் உருவாகினார்களோ தெரியவில்லை.. விஜய் தனது இந்தப் படையை நல்லவிதமாக, புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டால் அவருக்கும் நல்லது.. அவருடைய சினிமா கேரியருக்கும் நல்லது..! 

ஆதலால் காதல் செய்வீர் - சினிமா விமர்சனம்

15-08-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'ராஜபாட்டை' என்ற கொடுமையைக் கொடுத்து தனது பெயரைக் கெடுத்துக் கொண்ட இயக்குநர் சுசீந்திரன் மீண்டும் தன் பெயரை இதில் மீட்டெடுத்திருக்கிறார்..!

எங்கு பார்த்தாலும் காதல்.. காதலர்கள்.. காலையில் பார்த்து மாலையில் ஐ லவ் யூ சொல்லி மறுநாளிலேயே கல்யாணம் பற்றிப் பேசும் அளவுக்கு பாஸ்ட் ரைடிங்கில் போய்க் கொண்டிருக்கும், கல்லூரி காதலினால் ஏற்படும் இன்னொரு அவலத்தை தொட்டுக் காண்பித்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்..!


நண்பர்களாக இருக்கும் ஹீரோவும், ஹீரோயினும்..... ஹீரோவின் வழக்கமான 'செத்துருவேன்' என்ற மிரட்டலிலும், செய்து காட்டும் வீரத்திலும் ஈர்க்கப்பட்டு 'ஐ லவ் யூ' சொல்லித் தொலைகிறாள். இந்தக் காதல் இப்போதைய டீன் ஏஜ் காதலை போலவே வேகமாக போய் மகாபலிபுரத்தில் ரூம் போடுவதில் முடிகிறது.. 5 ரூபாய்க்கு சிக்கனப்பட்டு கடைசியில் ‘அது’ ஹீரோயின் வயிற்றில் உதித்தேவிடுகிறது.. கருவைக் கலைக்க அல்லலோ அல்லல்படுகிறார்கள் கல்லூரி மாணவர்களான ஹீரோவும், ஹீரோயினும்..

விஷயம் வீட்டுக்குத் தெரிந்து பஞ்சாயத்து கூடுகிறது.. ஒரு பக்கம் பையனின் அப்பா கல்யாணத்துக்கு சம்மதிப்பதுபோல் நடித்து கம்பி நீட்ட பார்க்கிறார். இன்னொரு பக்கம் பெண்ணின் அப்பா கல்யாணத்திற்காக எதிர்த் தரப்பினர் காலில் விழுகவும் தயாராக இருக்கிறார்.. இடையில் காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோ பிரச்சினை பெற்றவர்களைவிடவும் படு ஸ்பீடாக போய் அவர்களை பிரித்தேவிடுகிறது.. 

உதயமாகும் ஒரு புது ஜீவன் எங்கோ ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்து வர.. இங்கே காதலர்கள் அவரவர் போக்கில் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடர.. அந்த பாவப்பட்ட ஜீவனை அழுக வைத்து, நம்மையும் கண் கலங்க வைத்து இதில் யார் செய்தது சரி.. தவறு.. என்று நம்மையே யோசிக்க வைத்துவிட்டு... இப்போது மதுரையில் விஷாலை வைத்து ‘பாண்டியநாடு’ பட ஷூட்டிங்கில் மும்முரமாக இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்..! வெல்டன் ஸார்…!

ஹீரோ புதுமுகம்.. அப்படி தெரியவில்லை.. அந்தக் கேரக்டருக்கு ஏற்ற தேர்வு.. லேசாக கோக்குமாக்காக இருக்கும் நிலையில் இவனை அழகுப் பெண் காதலிப்பதுதான் விதி என்பதாக வைத்திருக்கிறார் போலும்..! காதலனாக நடிக்க வேண்டிய காட்சியில் நடித்தும், பதற்றத்துடன் அலையும் காட்சிகளிலும் அப்பாவியாய் நடித்தும், தனது அப்பாவை எதிர்த்து தீர்க்கமாக பேசும் காட்சிகளில் இன்றைய இளைய தலையமுறையையும் பார்க்க வைத்திருக்கிறார். 

வழக்கு எண்ணில் நடித்த மனீஷாதான் ஹீரோயின்.. தன்னைத்தான் காதலிக்கிறான் என்று தெரிந்த கணத்தில் இருந்துதான் இந்தப் பெண்ணும் நடித்திருக்கிறது..! ஒரு காட்சியில்கூட இயக்குநர் சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்பதே தெரியவில்லை..! தனது காதலை மறைக்கவும், கர்ப்பத்தை மறைக்கவும் இவர் படும்பாட்டில் நமக்கே சிரிப்பும், சோகமும் சேர்ந்தே வருகிறது..!   படத்தின் துவக்கத்தில் இருந்து கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிவரையிலும் இயக்கத்திற்கு பக்கபலமாக இருக்கும் வசனங்களுக்காக ரகளை செய்த டீன் ஏஜ் கூட்டம் இறுதியில் குழந்தையைக் காட்டியவுடன் கப்சிப்பானதுதான் இயக்கத்தின் சிறப்பு..! 

இன்றைய இன்ஸ்டண்ட் காதல்கள் எப்படி உருவாகிறது என்பதையெல்லாம் முதல் ரீலிலேயே பட்டவர்த்தனமாக காட்டியிருக்கிறார் சுசீந்திரன்.. காதல் ஒரு நேரத்தில் எப்படியெல்லாம் அலைபாய்கிறது. திசை மாறுகிறது என்பதை இதைவிடவும் சமீபத்திய எந்தப் படமும் காட்டியதில்லை.. ஹீரோவின் பிரெண்ட்டாக நடித்தவருக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது..  டைமிங்கில் பின்னியிருக்கிறார்.. காதலர்களுக்காக கூச்சப்படாமல் பேசும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் சூப்பர்.. ஒருவனின் காதலுக்கு சப்போர்ட் செய்யப் போய். அது திசை மாறி உடன் இருக்கும் வேறொருவனை காதலிப்பதாக அந்தப் பெண் சொல்வதும், அதனை அவர்கள் சமாளிப்பதும் ஏக ரகளை..!

காதலருடன் போனில் பேசுவதை சந்தேகப்படக் கூடாது என்பதற்காக ‘அண்ணா’ என்று இழுத்து இழுத்து பேசிவிட்டு வெளியில் வந்து காதலனை திட்டுவது.. வீட்டில் தனித்திருக்க வந்த நிலையில் தெரிந்தவர் வர.. ஹீரோவை போஸ்ட் மேன் கணக்கில் வாசலில் நிற்க வைத்து பேசி சமாளிப்பது.. எப்படியெல்லாம் பொய் சொல்லி காதலர்கள் வெளியில் ஊர் சுற்றுகிறார்கள் என்பதைச் சொல்லியிருப்பது.. எதற்கெல்லாம் காதலர்கள் சண்டையிட்டு சட்டென்று மனம் மாறுகிறார்கள்.. காதல் எப்படியிருந்தால் உருவாகும்.. காதலி யாருக்கெல்லாம் கிடைப்பார்கள் என்கிற சூத்திரத்தையெல்லாம் அக்குவேறு ஆணி வேறாக இதில் கொட்டித் தீர்த்திருக்கிறார் சுசீந்திரன்.. இதில் இவருக்கு பக்க பலமாக வசனம் எழுதியிருக்கும் தம்பி கிளைட்டனுக்கு எனது பாராட்டுக்கள்..! 40 பவுன் நகையை எடுத்திட்டு வந்திருக்கேன் என்பதற்கும், இன்னும் கொஞ்ச நாள்ல அப்பாவாயிருவான் என்ற வசனத்திற்கும் தியேட்டரே அதிர்ந்தது..!

முற்பாதி முழுவதும் ரகளையாக போய்க் கொண்டிருந்த படம் பிற்பாதியில் ஆஸ்பத்திரி, கருக்கலைப்பு, பெற்றோர்களின் சுமை என்று ஏகத்துக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. ஹீரோயினின் அம்மாவாக நடித்திருக்கும் துளசிக்கு இது முக்கியமான படமாக இருக்கும்.. ஹீரோவின் வீடு தேடி வந்து அவர் பேசுகின்ற பேச்சும், நடிப்பும்.. அட்சரச்சுத்தம்.. இந்த ஒரு காட்சியிலேயே ஹீரோவும், ஹீரோயினும் மனசு மாறுகின்ற அந்தத் தருணம் பொய்யில்லாதது.. 

எதற்காகக் காதலிக்கிறோம் என்பது தெரியாமலேயே நிறைய பேர் காதலிக்கிறார்கள் என்பதைத்தான் நமது மெரீனா பீச் காதலர்களின் ‘சேட்டை’ காட்டுகிறது.. அதையேதான் இதிலும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ‘காதல்’ என்பதே கல்யாணத்தின் முதற்படி.. கல்யாணம் பிள்ளை பெற்று வம்ச விருத்தியை செய்வதற்கான முதற்படி.. கல்யாணமும், பிள்ளை பெற்றலும், குடும்ப உறவு வளர்ப்பும் இல்லையெனில் பின்பு எதற்கு காதல்..? அந்தக் காதலை வைத்து என்னதான் செய்வது..?

குடும்பத்துடன் அவசியம் பார்க்க வேண்டிய படம். அதிலும் குறிப்பாக பெற்றோர்கள்..! பிள்ளைகள் வளர்ப்பு என்பதிலும், அவர்களுடைய விஷயத்தில் எந்த அளவுக்கு கண்காணிப்போடு இருத்தல் வேண்டும் என்பதையும் எச்சரிக்கை உணர்வுடன் சொல்லியிருக்கிறார் சுசீந்திரன்..! அதே நேரம் காதலர்களுக்குள் இருக்கும் உறவு எந்த நிலையிலும் ஒரு எல்லையைத் தாண்டக் கூடாது என்பதற்கு இப்படமும் ஒரு சாட்சி.. இவர்கள் இருவரின் தவறுகளால் அப்பாவி அந்தக் குழந்தை என்ன பாவம் செய்தது..? 

திருமணம் என்ற குடும்பப் பந்தம் இருவருக்குமே பாதுகாப்பானது என்பதைவிட அடுத்து வருகின்ற ஜெனரேஷனுக்கு இதுதான் மிக முக்கியம் என்பதை காதலர்கள் மறந்துவிடக் கூடாது.. இந்தப் படம் வரும் நேரம்தான் கோடம்பாக்கத்திற்கு மிகப் பெரிய சோதனை காலமாக இருக்கிறது. அண்ணன் சேரனின் மகள் விஷயத்தில் மீடியாக்கள் கோடம்பாக்கத்தை போட்டு துவைத்து எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்.. 'நீங்கதானே காதலை வளர்த்துவிட்டீங்க.. அனுபவிங்க' என்று சாபம் கொடுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில்.. இப்படியொரு படத்தைக் கொடுத்த இயக்குநர் சுசீந்திரனுக்கு எனது நன்றிகள்..!

இந்தப் படத்தை பார்க்கும் காதலர்களில் ஒரு சிலராவது தங்களை கட்டுக்குள் வைத்துக் கொண்டு வாழ்க்கையை புரிந்து காதலித்தாலே போதும்.. இப்படியொரு நிலைமை வருவதற்கு முன்பாகவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு காதல், கல்யாணம் பற்றி புரிந்து கொள்ள வைத்தாலே.. இந்தப் படத்தின் உண்மையான வெற்றியாக இருக்கும் என்று நினைக்கிறேன்..!

ஆதலால் காதல் செய்வீர் - அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

கஞ்சி குடிச்சே சாவுங்கடா..!

02-08-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


தோழர் பத்ரியின் இந்தப் பதிவை படித்தபோது நானெல்லாம் ஏழ்மையாக இருக்கின்றேனா அல்லது வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கின்றேனா என்கிற சந்தேகமும், வினாவும் எனக்குள்ளேயே எழுகிறது..!

ஓட்ஸ் கஞ்சி குடிப்பதாலேயே தன்னுடைய ஒரு நாள் உணவுத் தேவையை குறைந்தபட்சம் 50-ல் இருந்து அதிகப்பட்சம் 120 ரூபாய்க்குள் முடித்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.. இது அவரைப் பொறுத்தவரையில் சரிதான். ஏனெனில் அவர்தான் மூன்று வேளையும் ஓட்ஸ் கஞ்சியே குடிக்க வேண்டும் என்று நினைக்கிறாரே..!? ஆனால் நாமெல்லாம் அப்படியா..?

எனக்கு ஒரு நாளைக்கு எனக்கு ஆகக் கூடிய உணவுக்கான செலவுகளை பாருங்கள்..!

பேச்சிலர் என்பதால் அதிகம் சமைப்பதில்லை. லீவு நாட்களில் மட்டும் அவ்வப்போது சமையல் உண்டு. எலெக்ட்ரிக் குக்கரில் சாதம் மட்டும் வைத்துவிடுவேன்..! பருப்பு பொடி பாக்கெட் வாங்கி வைத்திருக்கிறேன். நல்லெண்ணெய் உண்டு.. இதனை மிக்ஸ் செய்து முதல் தவணை சோற்றை உள்ளே தள்ளிவிடுவேன். அடுத்த ரவுண்டுக்கு பக்கத்து வீட்டில், கீழ் வீட்டில் டீசண்டான முறையில் பிச்சையெடுத்து வாங்கும் கொஞ்சூண்டு ரசம்.  ஒருவேளை ரசம் இல்லையெனில் தயிர் பாக்கெட்..! இதுதான் அந்த லீவு நாளின் மூணு வேளைக்கும்..! 

ஒரு பாக்கெட் பருப்புப் பொடியின் விலை 18 ரூபாய். அரிசி ஒரு கிலோ 45 ரூபாய். ஏதோ கலரா இருக்கு. நீங்களே பார்த்துக் கொடுங்கன்னு கேட்டுக்குவேன். நமக்கு அரிசில கல்லு பொறுக்கக் கூடத் தெரியாது..! அப்புறம் தயிர் பாக்கெட். 8 ரூபாய். ஒரு பாக்கெட் பருப்புப் பொடி பயன்படுத்துவதைப் பொறுத்து ஒரு வாரத்திற்கும் வரும்.. ஒரு மாதத்திற்கும் வரும்.. தயிர் பாக்கெட் அதிகப்பட்சம் 6 முறைகள் என்றால் 48 ரூபாய்.. ஆக மொத்தம் வீட்டில் சமைத்துச் சாப்பிடும் அதிகப்பட்சம் 6 நாட்களுக்கு மட்டுமே மொத்தம் 119 ரூபாய். 

இனி வெளியில் தின்னு தீர்ப்பதை கணக்கு பார்ப்போம்.. காலையில் ஹோட்டலில் சாப்பிடுவது 2 இட்லி, ஒரு தோசை, ஒரு காபி.. அதிகப்பட்சம் 50 ரூபாய். மதியம் ஐ.டி. ஏழைகள் அதிகமிருக்கும் தரமணி ஏரியாவில் இருக்கும் ஆந்திரா மெஸ் சாப்பாடு.. மதியம் கண்டிப்பாக ஆம்லெட் உண்டு. ஆக அதோடு சேர்த்து 60 ரூபாய். இரவு 3 புரோட்டா 1 ஆம்லெட். அல்லது 3 கல்தோசை 1 ஆம்லெட்.. இதுவும் 50 ரூபாய் வந்துவிடும்.. ஆக.. கடையில் சாப்பிடும் எனது ஒரு நாள் செலவு 160 ரூபாய். 31 நாளில் வீட்டில் சாப்பிடும் 6 நாட்களைக் கழித்து மிச்சமிருக்கும் 25 நாட்களுக்கு இந்தச் செலவு என்றால் ஒரு மாதத்திற்கு கொட்டிக்கிறதுக்காக மட்டுமே நான் செலவழிக்கும் தொகை 4000 ரூபாய். இதில் வீட்டில் சாப்பிடுவதற்கான தொகையையும் சேர்த்தால் 4119. இதன் மூலமாக ஒரு நாளின் எனது தின்னும் செலவு தோராயமாக 132 ரூபாய் வருகிறது..!

பத்ரி சொன்னதுபோல ஓட்ஸ் கஞ்சி உடலுக்கு நல்லது என்றாலும் அதனை செய்து தருவதற்கு அவருக்கு மனைவி இருக்கிறார்.. குடும்பச் சூழல் இருக்கிறது.. அதனால் அவரால் சுருக்கமாக வைத்துக் கொண்டு அனுபவிக்க முடிகிறது.. என்னை போன்ற பேச்சுலர்கள் அல்லது ஓட்ஸ் கஞ்சி பிடிக்காமல் மற்றவைகளை சாப்பிட நினைப்பவர்களின் கதி என்னாவது..? நாங்களெல்லாம் நாட்டில் இருக்கவே கூடாதா என்ன..? 

அரசுகளை நடத்தும் கூமுட்டைகள் என்றைக்காவது சொந்தக் காசில் சாப்பிட்டிருப்பார்களா..? இது போன்ற அரைவேக்காட்டுத்தனமாக ஒரு நாளைக்கு 30 ரூபாய்க்குள் சாப்பிட முடியும் என்று சொல்லும் அறிவாளிகள், சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வந்து எங்களைப் போன்றவர்களுடன் இருந்து சாப்பிட்டுப் பார்க்கலாமே..? 

அரசியலுக்கு வந்ததில் இருந்து கடைசியாக கட்டையில்போய் சுடுகாட்டில் எரியும்வரையில் அரசு செலவிலேயே தின்னுக் கொழுத்த திமிர் பிடித்தவர்கள்தான்... தம் மக்களைப் பற்றி மட்டும் கவலைப்பட்டு நாட்டு மக்களைப் பற்றியே கவலைப்படாமல் எழுதுவதும், பேசுவதுமாக இருக்கிறார்கள். 

6 நாட்களுக்கு 119 ரூபாயில் சாப்பிட முடியுமென்றால் நான் காலம் முழுக்க வெறும் பருப்பு சாதம், தயிர் சாதமே சாப்பிட்டுவிட்டு சாக வேண்டியதுதானே..?  குடும்பத்தை ஏற்படுத்திக் கொண்டு சாப்பிடு.. இன்னமும் குறையும் என்பார்கள்.. குறையவில்லை. ஆனால் குறைத்துக் கொள்கிறார்கள் மக்கள். இதுதான் உண்மை..!

தனி நபர் வருமானம் குறையும்போது ஒவ்வொரு தனி மனிதனும் முதலில் செய்யும் சிக்கன நடவடிக்கையே வெளியில் சாப்பிடுவதை நிறுத்துவது.. காபி குடிப்பதை நிறுத்தவது.. மாலை சிற்றுண்டியை நிறுத்துவதுதான்.. இப்படி தனது சாப்பாட்டு ஆசையைக்கூட நிராசை செய்துவிட்டு சிக்கனம் பிடிக்கிறான் என்பது இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் ஓசியில் தின்னே கொழுத்து போயிருக்கும் அரசியல் அயோக்கியர்களுக்கு புரியாது.. தெரியாது..!

ஒரு வேளைக்கே வெறும் 30 ரூபாயில் சாப்பிட முடியுமென்றால் அனைத்து மக்களும் இப்போது கையேந்தி பவனில்தான் சாப்பிட வேண்டும்.. இப்போதே சரவணபவனில் ஒரு காபி 35 ரூபாய் என்கிறார்கள். ஒரு தோசை 60 ரூபாய் என்கிறார்கள். இதெல்லாம் எதற்காக தெரியுமா..? கொஞ்சம் விலையைக் குறைத்தால் அழுக்கு உடைகளுடன், குளிக்காத உடலுடன், உழைத்த களைப்புடன் உண்மையாகவே மனிதர்களாக வாழும் ஒரு தொழிலாளர் கூட்டமும் சரவண பவனுக்குள் வந்துவிடும். அப்படி வந்துவிட்டால் காசைப் பற்றியே கவலைப்படாமல் பச்சைத் தண்ணிக்குக்கூட கடன் அட்டையை எடுத்து வீசும் ஒரு பணக்காரக் கூட்டம் அசூயைபடும். அதன் பிறகு அவர்கள் சரவண பவனுக்குள் வர மாட்டார்கள். சங்கோஜப்படுவார்கள் என்பதால்தான் பைவ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு அந்த ஹோட்டலில் விலைகள் கூடிக் கொண்டே போகின்றன..

மிடில் கிளாஸ் அம்பிகளும், அண்ணாச்சிகளும் அங்கே போய் தின்பதையே ஒரு கவுரமாக நினைத்து பணத்தைக் கொட்டுகிறார்கள். இது அவர்களைவிட ஏழ்மை நிலையில் இருக்கும் மற்ற மக்களுக்கு அவர்கள் செய்யும் பச்சைத் துரோகம் என்பது மட்டும் அவர்களுக்குப் புரியவில்லை..! அவர்களுக்கு இது ஸ்டேட்டஸ் பிரச்சினை..! ஆனால் இதே பணக்காரக் கூட்டம் செத்துப் போன பிணமாய் சென்னையைச் சுற்றியிருக்கும் எந்தவொரு சுடுகாட்டிற்கு போனாலும், முன்பு எரியூட்டப்பட்ட ஒரு பிச்சைக்காரனின் சாம்பல் ஒட்டியிருக்கும் அதே தகரப் பெட்டியில்தான், இவர்களது சாம்பலும் ஓட்டித்தான் கிடைக்கப் போகிறது என்பதையும் உணர்ந்தவர்களில்லை..!

எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போகுது மேட்டர்.. ரிட்டர்ன் டூ மேட்டர்..!

ஒரு நாளைக்கு 30 ரூபாய்க்கு என்ன சாப்பிட முடியுமாம்..? அரிசி விக்கிற விலைல.. பருப்பு விக்குற விலைல.. எண்ணெய் விக்குற விலைல.. அட.. கிராமப்புறங்களில் அடுப்பூதி சமைக்கும் வீடுகளில்கூட.. ஒரு வீட்டுக்கு 4 பேர் என்று வைத்து கொண்டால்கூட.. மூணு வேளையும் கஞ்சிதான் குடிக்க முடியும்.. இப்போது அரசாங்கமும் இதனைத்தான் சொல்கிறது..! 

வெறும் கஞ்சி குடிச்சாவது வாழுடா.. அது உன் தலைவிதி.. உனக்காச்சும் கஞ்சி கிடைக்குது.. இந்தக் கஞ்சியும் கிடைக்காதவன் நாட்டுல நிறைய பேரு இருக்கான். அவன்தான் எங்களைப் பொறுத்தவரையிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவன் என்கிறார்கள்.. இந்த வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் சத்தியமாக இருக்கத்தான் செய்கிறார்கள். 

அவர்கள்தான் எல்லா ஊரிலும் பிச்சையெடுக்கிறார்கள்.. கோவில் வாசலில் அமர்ந்திருக்கிறார்கள். நடு ரோட்டில் சிக்னல்களில் கைக்குழந்தையோடு வந்து பசிக்குது என்கிறார்கள்..! நடக்க முடியாமல் குண்டி தேய கைகளில் குஷ்டத்துடன் வந்து காசு கொடு என்கிறார்கள்.. இந்த பாவப்பட்டவர்கள்தான் நிசமாகவே கஞ்சிக்கும் வழியில்லாமல் சாகிறார்கள்.. இவர்களுக்குத்தான் இந்த அரசுகள் இப்போது மானியம் வழங்கி அவர்களைக் காப்பாற்றப் போகிறது போலிருக்கு..! மொதல்ல அந்த கஞ்சிக்கு செத்தவங்களுக்கு அடையாள அட்டையைக் கொடுத்திட்டு அப்புறமா அவங்களுக்கான காசை கொடுங்கப்பா.. இல்லைன்னா உங்க அரசியல் கூட்டாளி நாய்களே இதுலேயும் புகுந்து ஆட்டையைப் போட்டுட்டு போயிருவானுக..!

இந்த நாடும், ஆள்பவர்களும் நாசமாப் போய்த் தொலையட்டும்..!