இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-11-03-2011

11-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

 
அடுத்த ஊழல்..!

2 ஜி ஸ்பெக்ட்ரம், சேட்டிலைட் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கிய விவகாரத்தில் பல லட்சம் கோடி ஊழல் நடந்து நாடே பரபரத்துக் கிடக்கும் இந்த சூழலில், அதே தொலைத் தொடர்புத் துறையில் மேலும் ஒரு புதிய ஊழல் கிளம்பியுள்ளது. மத்திய அரசின் டெலிபோன் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் நடந்துள்ள முறைகேடுதான் அது.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் வைமேக்ஸ் எனும் பிராட்பாண்ட் வயர்லெஸ் சேவையை பெருநகரங்களில் வழங்க தனியார் நிறுவனங்களை ஏஜெண்டுகளாக நியமித்தது. நாடு முழுவதும் 4 நிறுவனங்கள் ஏஜெண்டுகளாக நியமிக்கப்பட்டன.


அவை பிராட்பாண்ட் வயர்லெஸ் சேவையை வழங்குவதுடன் 50 ஆயிரம் பி.எஸ்.என்.எல். கோபுரம் மற்றும் 20 ஆயிரம் வளாகங்கள் அமைக்கும் பணியையும் சேர்த்து செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இந்த நிறுவனங்களிடம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் நுழைவு கட்டணம் எதுவும் வாங்கவில்லை. மேலும் வருடாந்திர லாப பங்குகளையும் பெறவில்லை. அதே நேரத்தில் இந்த சேவை பணிக்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம் மத்திய அரசுக்கு ரூ.8 ஆயிரம் கோடி நுழைவு கட்டணமாக செலுத்தி உள்ளது.

அந்த கட்டணத்தைக்கூட ஏஜெண்டுகளிடம் இருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெறவில்லை. இந்த ஒதுக்கீடும் வெளிப்படையாகவோ அல்லது ஏலம் மூலமோ நடக்கவில்லை. ஒதுக்கீட்டை பெற்றதற்கு பிறகு அந்த நிறுவனங்கள் தங்கள் பங்குகளை அதிக தொகைக்கு விற்று பெரிய அளவில் லாபம் சம்பாதித்து உள்ளன.

எனவே இதில் முறைகேடு நடத்திருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் இது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி மத்திய தொலை தொடர்பு அமைச்சர் கபில்சிபல் தொலைத் தொடர்புத் துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் போல இந்த விவகாரமும் பெரிய அளவில் வெடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த முறைகேடு நடந்த காலகட்டத்திலும் ஆ ராசாதான் துறையின் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றியும் மேலும் தகவல்கள் கிடைத்தால் இன்னும் கொஞ்சம் வயிறு எரியலாம். அது கிடைக்கின்றவரையில் கொஞ்சம் நிம்மதியாகவும் இருக்கலாம்..!

 
காதல் மன்னன் ஜியோனா சானா..!

அவனவன் ஒரு கல்யாணம் செஞ்சுட்டே வீட்டுக்குப் போறதா? வேண்டாமா? என்று யோசித்து நடுரோட்டில் நிற்கிறார். இங்கே நமது ஆள் ஒருத்தர் 39 மனைவிகளுடனும் ஜெகஜோதியாக வாழ்ந்து வருகிறார் என்றால் நம்மால் பொறாமைப்படத்தான் முடிகிறது..!


வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்ற, "இளைஞர்'தான், 39 மனைவிகளுடன், பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இத்தனை மனைவிகளின் மூலம் 94 குழந்தைகளை பெற்றுள்ளார். தற்போது இவர் வீட்டில், 14 மருமகள்களும், 33 பேரக் குழந்தைகளும் உள்ளனர். தனது பெரிய குடும்பத்தை பராமரிப்பதற்காக, தனது சொந்த கிராமத்தில், 100 அறைகள் கொண்ட ஒரு மாளிகையை அவர் கட்டினார்.

இந்நிலையில், தனது குடும்பத்தினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பி தனது அடுத்த திருமணத்திற்காக பெண் பார்க்கும் படலத்தையும் துவக்கியுள்ளார் ஜியானோ.  "நான் கடவுளின் சிறப்புக் குழந்தை. அதனால்தான், என்னை கவனித்துக் கொள்வதற்காக கடவுள் எனக்கு ஏராளமான சொந்தங்களை கொடுத்துள்ளார். நான், 39 மனைவிகளின் கணவன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரன்' என்கிறார் "காதல் மன்னன்' ஜியோனா சானா.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய மக்கள் அனைவரும் ஒன்றே என்கிறது. ஆனால் இங்கே ஒரு தனி மனிதர் ஏதோ நிலம், வீடு வாங்குவதைப் போல மனைவிகளை வாங்கி திருமணப் பந்தத்தில் சுழன்று வருகிறார். இதையெல்லாம் எந்தச் சட்டமும் கேள்வி கேட்காது..! யாராவது ஒரு மனைவி புகார் கொடுத்தால் மட்டுமே அந்த ஆண் மீது வழக்கு, கைது தொடரும் என்றால், இதுவே ஆணாதிக்கமில்லையா..? அப்படியானால் நமது அரசியல் சட்டமே அப்படித்தானா..? பின்பு எப்படி இது தாய் நாடாகும்..! இனிமேல் இந்தியாவை தந்தை நாடு என்றே இனிமேல் அழைக்கலாம்...

67 வயதான ஜியோனா சானா, இப்போது உள்ளூர் பெண்களை தவிர்த்து, அமெரிக்கா சென்று, அங்கு ஒரு பெண்ணை பார்த்து மணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளாராம். மவனே அமெரிக்க பொண்ணா வேணும்.. போய்யா போ.. உனக்கு அழிவு காலம் அங்கதான்னு இருந்தா யாரால தடுக்க முடியும்..! எல்லாம் ஈஸ்வரன் செயல்..!

 
சித்ரவதை செய்த ராணுவ வீரர்களுக்கு தண்டனை..!

பிரிவினைவாதிகளை சித்திரவதைக்குட்படுத்திய காரணத்திற்காக 3 இந்தோனேசிய இராணுவ வீரர்களுக்கு 10 மாத சிறைத் தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தோனேசியாவின் பபுவா தீவின் கிழக்கு பகுதிகளில் இடம் பெற்றதாகக் கூறப்படும் அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.

பல மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த வீடியோ காட்சிகள் நியூயார்க்கில் இருக்கும் ஒரு மனித உரிமை கண்காணிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டது. இத்தீர்ப்பானது நியாயமானதெனவும் இதனை அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.



நம் நாட்டிலும் ராணுவம் இருக்கிறது. தீவிரவாதிகளை பிடிக்கிறோம் என்ற பெயருடன் அப்பாவிகளை கொலை செய்வது காஷ்மீரில் இருந்து ஆந்திரா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத், மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என்று பல இடங்களிலும் நடந்துதான் வருகிறது. ஆனாலும் ஒரு ராணுவ வீரர்கூட இந்தியாவில் இதுவரையிலும் தண்டிக்கப்பட்டதில்லை.. இந்த லட்சணத்தில் இந்தியாதான் உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடாம். வெட்கக்கேடு..!

 
மாமனுக்கு கிடைத்த மரியாதை..!

அடக்குமுறை ஒரு அளவுதான். அதுவும் எல்லை தாண்டினால் அடங்கியிருப்பவர்கள் பொங்கி எழத்தான் செய்வார்கள். ஏதோ ஒரு பிரச்சினை.. தனது மாமனாருடன் மனஸ்தாபத்தில் இருந்த ஒரு பெண்மணி அவருடனான தனது பிரச்சினையைத் தீர்த்துக் கொண்ட விதத்தைப் பார்த்தால் ஏதோ நீண்ட கால பகை போல் தெரிகிறது..! பகையும் தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்..



 
யாழ்ப்பாணத்தில் பெருகி வரும் கற்பழிப்புகள்..!

எல்லாம் முடிந்தது. இனிமேல் சொர்க்கம்தான் என்று தமிழர்களில் சிலராலேயே கொண்டாடப்பட்ட ஒரு வருட காலத்திலேயே ஈழத்தில் நடந்திருக்கும் கலாச்சாரச் சீர்கேடுகள் அதிர்ச்சியடைய வைக்கிறது.

இதுவரையில் இல்லாத சில விஷயங்களை புலிகள் இல்லாதிருக்கும் இந்த நிலையில் நாம் அறியும் இந்த நேரத்தில்தான் அவர்களையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.


சென்ற டிசம்பர் 31-வரையான காலப் பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும், 247 வயது குறைந்த (18 வயதின் கீழ்) கர்ப்பங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன  14 பேர் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கின்றனர். 13 தற்கொலை முயற்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இப்படியொரு புள்ளி விபரத்தை யாழ்ப்பாண மாவட்ட அரசப் பிரதிநிதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்..! ஒரு வருடத்திற்கு முன்புவரையிலும் கேள்விப்படாத ஒன்றை அடுத்த ஆண்டிலேயே சந்திக்க நேர்வது நமது துரதிருஷ்டம்தான்.

இளைய சமுதாயத்தினர் அதனைத் தேடித்தான் போவார்கள். ஆனால் சட்டமும், ஒழுங்கும், முறையான அரசுகளும், பாசமான குடும்பமும் சேர்ந்திருந்தால் இந்தச் சீர்கேடுகளை வராமல் தடுக்க முடியும்..! இதுவரையில் தடுத்து வைத்திருந்த புலிகள் என்ற அரசாங்கத்தை இழந்துவிட்ட துடிப்பில் இளஞ்சிறார்கள் இந்த விஷயத்தில் இவ்வளவு பாய்ச்சல் காட்டி வருவது வருத்தத்திற்குரியது..!

இந்த எண்ணிக்கை இனி வருடாவருடம் உயரத்தான் போகிறது.. இது உயர்ந்தால்தான் சிங்கள இனத்திற்குக் கொண்டாட்டமாக இருக்கும். இந்த விஷயத்தில் சிங்கள இனத்திற்கு ஒரு சவாலாக தமிழினம் உருவெடுக்க வாய்ப்புள்ளது என்பதற்கு அச்சாரம்தான் இந்தப் புள்ளி விவரங்கள்..!

ஈழத்து மக்கள் புரிந்து கொண்டால் நலம்..!

 
லிபியா அதிபர் கடாபியின் நர்ஸம்மா தப்பினார்..!

சொந்த நாட்டு மக்கள் மீதே விமானக் குண்டுகளை வீசி படுகொலை செய்து வரும் ஜெனரல் முகமது கடாபியை உலகத்தின் அத்தனை நாடுகளும் கண்டித்தாகிவிட்டது. ஆனாலும் மனிதர் பதவியிறங்குவதாக இல்லை. எல்லா அரசியல்வியாதிகளையும் பிடித்த வியாதி இவரையும் பிடித்து ஆட்டி வைக்கிறது.

40 வருடங்களாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ராஜ வாழ்க்கையை வாழ்ந்துவிட்ட ஒருவரை ஒரே நாளில் அனைத்தையும் துறந்து வீட்டுக்குப் போடான்னு சொன்னால் அவரால் எப்படி போக முடியும்..?

கடாபியின் பெண் நண்பியாகவும், கள்ளக் காதலியாகவும், சின்ன வீடாகவும் உருவகப்படுத்தப்பட்ட உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கலான்டிஸ்கா என்ற பெண் நர்ஸ் எப்போது நாடு திரும்புவார்..? வருவாரா? மாட்டாரா? அல்லது கடாபியுடன் வேறு நாட்டுக்குத் தப்பியோடுவாரா என்றெல்லாம் அமெரிக்க பத்திரிகைகள் பத்தி, பத்தியாக எழுதி வைத்ததுதான் இந்த நேரத்திலும் நடந்த காமெடி..!


இந்த கலான்டிஸ்காதான் கடாபியை சில வருடங்களாக தனி அக்கறையுடன் கவனித்து வந்தவர். கடாபி எங்கு சென்றாலும் உடன் சென்று வந்த இவரை, வழக்கம்போல அமெரிக்க பத்திரிகைகள் கடாபியின் சின்ன வீடு என்றே சொல்லி எழுதி வந்தன. கடாபி இதையெல்லாம் இதுவரையில் பொருட்படுத்தாமலேயே இருந்து வந்திருக்கிறார்.

இப்போது கடாபியின் இருக்கையே ஆட்டம் கண்டுவிட்ட நிலையில்  கலான்டிஸ்கா சத்தம் போடாமல் தனது சொந்த நாடான உக்ரைன் நாட்டிற்கே திரும்பிவிட்டாராம்..! கடாபிக்கு பி.பி. மட்டும் அவ்வப்போது கூடும், குறையும். அதனை கவனித்துக் கொள்வதுதான் தனது வேலையாக இருந்தது என்று இப்போது உக்ரைன் பத்திரிகைகளிடம் சொல்லியிருக்கிறார் கலான்டிஸ்கா..! ஆனால் வழக்கம்போல அமெரிக்க பத்திரிகைகள் கடாபி சுருட்டி வைத்திருக்கும் சொத்துக்களில் பாதி இந்த கலான்டிஸ்காவின் கைகளில்தான் உள்ளது என்று புலனாய்ந்து எழுதத் துவங்கிவிட்டார்கள். பத்திரிகைகளுக்கு இருந்தாலும் பிரச்சினை.. இல்லைன்னாலும் பிரச்சினைதான்..!

 
பெங்களூர் கல்யாணக் கலாட்டா..!

பெங்களூர் ராஜாஜி நகரில் சென்ற மாதம் நடைபெறவிருந்த ஒரு கல்யாணம், கலாட்டா கல்யாணமாக உருவெடுத்து ஒரு சாவும் நிகழ்ந்து சோகத்தைத் தழுவியுள்ளது.

டாக்டர் அமித் என்பவருக்கும் டாக்டர் ஸ்வேதா என்பவருக்கும் திருமணம். மாப்பிள்ளை வீட்டார் முடிந்தவரையில் பணத்தை கறந்திருக்கிறார்கள். பெண் வீட்டாரும் முனங்கிக் கொண்டே முடிந்தவரையிலும் அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

வரதட்சணையாக 5 லட்சம் ரூபாய், சீர், செனத்திகள், தங்க நகைகள், கார், பீரோ, கட்டில், மெத்தை, லொட்டு, லொசுக்கு என்று அத்தனையையும் வாரி, வாரி வழங்கியிருக்கிறார்கள்.

ஆனாலும் மாப்பிள்ளை வீட்டாருக்கு முறுக்கு குறையவில்லை. அது சரியில்லை.. இது சரியில்லை என்றெல்லாம் சொன்னவர்கள் கடைசியாக திருமணத்திற்கு முதல் நாள் இரவில் மண்டபத்தில் தங்கியிருந்தபோது தங்களது கோர முகத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

“இரவில் ஏசி சரியாக வேலை செய்யவில்லை. எங்களுக்குத் தூக்கமில்லை.. என்ன எழவு ஏற்பாடு செஞ்சிருக்கீங்க” என்று திருமண நாளன்று காலையில் கரித்துக் கொட்டியிருக்கிறார்கள். முகூர்த்த நேரத்தில் மணப்பெண் மேடையில் காத்திருக்க தங்களது அறைக்குள் இருந்து கொண்டு வெளியே வர மறுத்து வம்படி செய்திருக்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார்.

தொகுதியின் எம்.எல்.ஏ.வும் திருமணத்திற்கு விருந்தினராக வந்திருந்ததால் அவரும் தன்னால் முடிந்த அளவுக்கு பஞ்சாயத்து செய்து வைத்திருக்கிறார். மாமியாரையும், மாப்பிள்ளையும் கஷ்டப்பட்டு மேடைக்கு அழைத்து வந்து அவர்களது காலில்கூட விழுந்து பார்த்திருக்கிறார்கள். ஜம்பமாக “நீங்கள் எங்களை அவமானப்படுத்திவிட்டீர்கள்..” என்று குற்றம் சொல்லிவிட்டு அம்மாவும், மகனும் மீண்டும் அறைக்குள் போய் முடங்கிவிட்டார்களாம்..

பெண் வீட்டார் போலீஸுக்கு தகவல் சொல்ல.. அவர்கள் வந்தும் அதே நிலைமைதான். கல்யாணத்தை எப்படியாவது முடித்து வைக்கலாம் என்று நினைத்த போலீஸாருக்கே மாப்பிள்ளை வீட்டார் தண்ணி காட்ட.. பொறுத்தது போதுமடா என்று பொங்கியெழுந்த பெண் வீட்டார் மாமியார், மாப்பிள்ளை, அவரது உடன் பிறந்தவர்களுக்கு அவர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாதபடிக்கு தர்ம அடி கொடுத்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.



இத்தனைக்கும் மாப்பிள்ளைக்காரன் டாக்டருக்கு படித்திருக்கிறான். என்னத்த படிச்சு என்ன புண்ணியம்..? மனுஷத்தனத்தையும் கொஞ்சம் படிச்சிட்டுத்தான் வர்றது..?

 
தெலுங்கு சினிமாவின் புராண கிக்..!

தெலுங்கு சினிமாக்காரர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள்.. எந்த மாதிரியான சரக்கைக் கொடுத்தால் ரசிகர்களுக்கு எந்த மாதிரியான கிக் ஏறும் என்பதை தெள்ளத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

மிகச் சமீபத்தில் தொல்லைக்காட்சியில் பார்த்த ஒரு தெலுங்கு படத்தில் வந்த சீன்தான் இது..! முதல் தடவை பார்த்தபோதே பகீரென்றது..! பின்பு மறுபடியும் யூடியூபில் தேடி பார்த்தபோது கதையின் முழு பரிமாணமும் புரிந்தது.. வாழ்க தெலுங்கு திரையுலக சிற்பிகள்..



இதே கதையோடு ஒரு புராணக் கதையும் அட்டாச் ஆகியிருக்கிறதே..? எவ்வளவு யோசித்தும் அந்தக் கதையும், மாந்தர்களும் என் நினைவுக்கு வரவில்லை. யாருக்காவது தோன்றினால் சொல்லுங்கள்..!

 
'யுத்தம் செய்' ரீமேக்கா..? டப்பிங்கா..?

“யுத்தம் செய்' படம் 'memories of murder' என்ற கொரியப் படத்தின் ரீமேக் என்று கூட சொல்ல முடியாது.  'memories of murder'-ஐ டப்பிங் செய்த படம் 'யுத்தம் செய்........................”

மிஷ்கின் உடனான தனது யுத்தத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்திருக்கும் சாருநிவேதிதா போகிற போக்கில் சொல்லியிருப்பதுதான் மேலே சொல்லப்பட்டிருக்கும் வாசகங்கள்..!

இரண்டு திரைப்படங்களையும் பார்த்த அன்பர்களுக்கு சட்டென புரிந்திருக்கும் இது எவ்வளவு பெரிய பொய் என்று..!

'யுத்தம் செய்' படத்தின் ஒரு காட்சிகூட அந்தக் கொரிய படத்தில் இருந்து சுடப்படவில்லை என்பது படத்தைப் பார்த்தவர்களுக்கு நன்கு தெரியும். படத்தின் அடிப்படையான மர்மமான முறையில் கொலை செய்வது மட்டுமே ஒன்றுபோல் உள்ளது. இது அத்தனை திகில் படங்களிலும் இருக்கக் கூடிய ஒன்றுதான். இதில் ஒன்றும் தவறில்லையே..?

தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு படைப்பை நிராகரிப்பது எழுத்தாளர்களுக்கு அழகல்ல..! அதுவும் எழுத்துலகத் தளபதியாக தன்னைத்தானே அமர்த்திக் கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சாரு, இப்படி அண்டப்புளுகு புளுகினால் அவரது எழுத்துப் படையில் ஆட்கள் எப்படி சேர்வார்கள்..? அவருடைய நலம் விரும்பிகள் அவரிடம் இதனை பக்குவமாக எடுத்துச் சொன்னால் தமிழ் எழுத்துலகத்திற்கு நலமாக இருக்கும்..!

 
பார்த்ததில் பிடித்தது..!
 

 
படித்ததில் பிடித்தது..!

வசனகர்த்தா இளங்கோவன் அந்தக் கால சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர். கண்ணகி, சக்கரவர்த்தித் திருமகன் போன்ற படங்களால் பெரும் புகழ் பெற்றவர். அவர் ஒரு நாள் எம்.ஆர்.ராதாவைத் தேடி வந்தார். ராதாவிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்.


மறுநாள் காலை. ராதா தன் வீட்டில் இருந்து படப்பிடிப்புக்குக் கிளம்பும்போது, மேக்கப்மேன் கஜபதியை அழைத்தார். ஒரு பெரிய தொகையை அவரிடம் கொடுத்து “இதைக் கொண்டு போய் இளங்கோவனிடம் கொடுத்திட்டு வா” என்றார்.

கஜபதி பணத்துடன் கிளம்பும்போது ராதா என்ன நினைத்தாரோ, சட்டென்று அவரைக் கூப்பிட்டு, “உனக்கு இளங்கோவன் அறிமுகம் உண்டா..?” என்று கேட்டார். “தெரியும்ண்ணே.. ஏற்கெனவே அவர் வசனம் எழுதிய ஒரு படத்துல நானும் வேலை செஞ்சிருக்கேன். அப்போது அவருடன் பழக்கம்..” என்றார் கஜபதி.

“அப்போ இங்க வா..” என்று அவரை அழைத்த ராதா, “அந்தப் பணத்தை இப்படிக் கொடு” என்றார். பணத்தை வாங்கி தனது கார் டிரைவரிடம் கொடுத்து “நீ இதைக் கொண்டு போய் இளங்கோவனிடம் கொடுத்துட்டு வா..” என்று சொல்லியனுப்பினார்.

கஜபதிக்கு சுருக்கென்றது. நம்மிடம் கொடுத்த பணத்தை வாங்கி, டிரைவரிடம் கொடுத்தனுப்புகிறாரே.. நம் மீது இவருக்கு நம்பிக்கை இல்லையோ என்று எண்ணி வருந்தினார்.

ஸ்டூடியோவில் படப்பிடிப்பின் இடைவேளையில் ராதாவிடம், “என்ன அண்ணே.. பணத்தை என்னை நம்பிக் கொடுக்கப் பயப்படுறீங்களே..” என்று வருந்திச் சொன்னார் கஜபதி.

அதற்கு ராதா, “உன் மேல் நம்பிக்கை இல்லாம ஆளை மாத்தலே.. இளங்கோவன் நல்லா வாழ்ந்த ஆளு.. இன்னிக்கு வறுமைல கஷ்டப்படுறாரு. தன்னோட கஷ்டத்தையெல்லாம் என்கிட்ட சொன்னாரு. அவரோட கஷ்டம் வேற யாருக்கும் தெரிஞ்சா அது அவருக்குக் கவுரவக் குறைச்சல். நீ இளங்கோவனுடன் பழக்கம் உள்ளவன்னு சொல்ற.. உன்கிட்ட பணத்தைக் கொடுத்தனுப்பினா.. அவரு அடடா.. நாம உதவி கேட்டு வாங்குற விஷயம், இவனுக்குக்கூட தெரிஞ்சு போச்சே.. எல்லாரிடமும் சொல்லி விடுவானேன்னு வருத்தப்படுவாரு.. அதனாலதான் ரெண்டாம் பேருக்குத் தெரியாம அவருக்கு உதவி பண்ணணும்னு அவருக்கு முன்ன பின்ன தெரியாத ஆள் மூலமா கொடுத்தனுப்பினேன்.. நீ அவசரப்பட்டு என்னைத் தப்பா நினைச்சுட்ட..” என்றார்.

ராதா சினிமாவில்தான் வில்லன். நிஜ வாழ்க்கையில் நாயகன்..!

- 'நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் எழுத்தும், பேச்சும்' நூலில் இருந்து..!

38 comments:

bandhu said...

நல்ல தொகுப்பு. பெயரை Full-Meals என்று மாற்றுங்கள்!

அகில் பூங்குன்றன் said...

me the first

அகில் பூங்குன்றன் said...

செம டிபன்ங்க.. ரொம்ப நாளைக்கு அப்புறம் .. வாரவாரம் போட முடியாத..

செங்கோவி said...

எம்.ராதா மேட்டர் சூப்பர்ணா!

pichaikaaran said...

மிஷ்கின் இனிமேலாவது சொந்த சிந்தனையை பயன்படுத்தி படம் எடுக்க வேண்டும் . இதை உங்களை போன்றோர் அவரிடம் சொல்ல வேண்டும் . இல்லையேல் கமலைபோல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகி விடுவார் . அல்ட்டிமேட் ரைட்டர் சாரு தனிப்பட்ட பிரச்னைக்காக படத்தை திட்டுபவர் அல்லர் . நான் கடவுளில் ஜெயமோகனையே பாராட்டியவர் அவர் . ஆனால் யுத்தம் செய் பாராட்டவே முடியாத காப்பி படம்

நையாண்டி நைனா said...

/*இதே கதையோடு ஒரு புராணக் கதையும் அட்டாச் ஆகியிருக்கிறதே..? எவ்வளவு யோசித்தும் அந்தக் கதையும், மாந்தர்களும் என் நினைவுக்கு வரவில்லை. யாருக்காவது தோன்றினால் சொல்லுங்கள்..!*/

பதிவிரதை அனுசுயா (பெயர் சரியாக தெரியவில்லை, ஆனால் ஒரு முனிவரின் மனைவி) மும்மூர்த்திகள் அவரிடம் வந்து, ஆடைஇல்லாமல் வந்து உணவு பரிமாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்க அவர் தன் பதிவிரதா தன்மையினால் அவர்களை குழந்தைகளாக்கி அமுது படைப்பார். அந்த கதை தான் அது...

pichaikaaran said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் விருந்து சூப்பர்ணே . நல்ல சாப்பாட்டில் சிறிய முடிகிடப்பது போல , ப்ளூ பிலிம் இயக்குனர் மிஷ்கின் பற்றிய செய்தி இருந்தது. நோ பிராப்ளம் . முடியை தூக்கி எறிந்து விட்டு , சாப்பிட்டோம் . அடிக்கடி சாப்பாடு போடுங்கள்

Arun Ambie said...

நல்ல தொகுப்பு. M.R.ராதா விஷயம் சூப்பர்

உண்மைத்தமிழன் said...

[[[bandhu said...

நல்ல தொகுப்பு. பெயரை Full-Meals என்று மாற்றுங்கள்!]]]

சின்னச் சின்ன மேட்டர்கள்தான்.. அதுனாலதான் டிபன்னு பேர் வைச்சிருக்கேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...

me the first]]]

நோ.. ஒரே நேரத்துல ரெண்டு பேர் முயற்சி செஞ்சிருக்கீங்க.. பரவாயில்லை. அடுத்த முறை ஜெயிப்பீர்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...
செம டிபன்ங்க.. ரொம்ப நாளைக்கு அப்புறம். வாரவாரம் போட முடியாத.]]]

வாராவாரம்ன்னா மேட்டர் கிடைக்க கஷ்டமா இருக்கு..! எதாவது சிக்கினாத்தான போட முடியும்..! இனிமேல் பார்ப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...

எம்.ராதா மேட்டர் சூப்பர்ணா!]]]

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர் ராதா..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

மிஷ்கின் இனிமேலாவது சொந்த சிந்தனையை பயன்படுத்தி படம் எடுக்க வேண்டும். இதை உங்களை போன்றோர் அவரிடம் சொல்ல வேண்டும். இல்லையேல் கமலைபோல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகி விடுவார். அல்ட்டிமேட் ரைட்டர் சாரு தனிப்பட்ட பிரச்னைக்காக படத்தை திட்டுபவர் அல்லர். நான் கடவுளில் ஜெயமோகனையே பாராட்டியவர் அவர். ஆனால் யுத்தம் செய் பாராட்டவே முடியாத காப்பி படம்]]]

பார்வை.. குருவுக்காக மறுபடியும் பொய் சொல்லாதீர்கள்..!

அந்தக் கொரிய படத்தைப் பார்த்துவிட்டு பின்பு வந்து பேசுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[நையாண்டி நைனா said...

/*இதே கதையோடு ஒரு புராணக் கதையும் அட்டாச் ஆகியிருக்கிறதே..? எவ்வளவு யோசித்தும் அந்தக் கதையும், மாந்தர்களும் என் நினைவுக்கு வரவில்லை. யாருக்காவது தோன்றினால் சொல்லுங்கள்..!*/

பதிவிரதை அனுசுயா (பெயர் சரியாக தெரியவில்லை, ஆனால் ஒரு முனிவரின் மனைவி) மும்மூர்த்திகள் அவரிடம் வந்து, ஆடை இல்லாமல் வந்து உணவு பரிமாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்க அவர் தன் பதிவிரதா தன்மையினால் அவர்களை குழந்தைகளாக்கி அமுது படைப்பார். அந்தக் கதைதான் அது.]]]

நைனா.. கரீக்ட்டு.. ஈஸியா சொல்லிக்கிட்டப்பா..! இது மாதிரி கதைன்னா விரல் நுனில வைச்சிருக்க போலிருக்கு.. நல்லாயிரு..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் விருந்து சூப்பர்ணே. நல்ல சாப்பாட்டில் சிறிய முடி கிடப்பது போல, ப்ளூ பிலிம் இயக்குனர் மிஷ்கின் பற்றிய செய்தி இருந்தது. நோ பிராப்ளம். முடியை தூக்கி எறிந்து விட்டு, சாப்பிட்டோம். அடிக்கடி சாப்பாடு போடுங்கள்]]]

மிஷ்கின் ப்ளூபிலிம் டைரக்டர்ன்னா உங்க ஆளு மட்டும் என்ன ரைட்டராம்..?

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...

நல்ல தொகுப்பு. M.R.ராதா விஷயம் சூப்பர்.]]]

நன்றி அருண். அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

Ponchandar said...

இரவு 1:14 - க்கு போஸ்ட் செய்து இருக்கிறீர்கள்... ப்ரேக்Faஸ்ட்-ன்னு எடுத்துகறதா....சப்பர் ன்னு எடுத்துகிறதா ???? டிபன் சுவையாகவே இருந்தது

Unknown said...

அனைத்து தகவல்களும் அருமை அண்ணே...

dondu(#11168674346665545885) said...

அனுசூயா மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கி அவர்களுக்கு தாய்ப்பாலூட்டுகிறாள் என்பதுதான் ஒரிஜினல் கதை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_10.html
சிபிஎம் ஐ கழற்றி விடுகிறார் ஜெயலலிதா

உண்மைத்தமிழன் said...

[[[Ponchandar said...

இரவு 1:14-க்கு போஸ்ட் செய்து இருக்கிறீர்கள். ப்ரேக்Faஸ்ட்-ன்னு எடுத்துகறதா. சப்பர்ன்னு எடுத்துகிறதா? டிபன் சுவையாகவே இருந்தது.]]]

நள்ளிரவு விருந்தாக எடுத்துக் கொள்ளுங்கள் பொன்சுந்தர்..!

உண்மைத்தமிழன் said...

[[[இரவு வானம் said...
அனைத்து தகவல்களும் அருமை அண்ணே.]]]

நன்றி தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[dondu(#11168674346665545885) said

அனுசூயா மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கி அவர்களுக்கு தாய்ப் பாலூட்டுகிறாள் என்பதுதான் ஒரிஜினல் கதை.

அன்புடன்,
டோண்டு ராகவன்]]]

தகவலுக்கு மிக்க நன்றிகள் ஸார்..

உண்மைத்தமிழன் said...

[[[நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_10.html

சி.பி.எம்.ஐ கழற்றி விடுகிறார் ஜெயலலிதா.]]]

நடக்காதுன்னு நினைக்கிறேன்..!

raja said...

போய்யா போ.. உனக்கு அழிவு காலம் அங்கதான்னு இருந்தா யாரால தடுக்க முடியும்..! எல்லாம் ஈஸ்வரன் செயல்..!
..........லைட்டா தீயிற வாசனை வருதே....

Rafeek said...

"மிஷ்கின் ப்ளூபிலிம் டைரக்டர்ன்னா உங்க ஆளு மட்டும் என்ன ரைட்டராம்..?"

...அது!!!அரசியல்வியாதிகளைவிட மோசமாக தன் நிலைப்பாடை மாற்றி கொள்பவரும் கூட.. கெளதம் மேனனை புகழ்ந்த ஒரே வாரத்தில்.. மிக மோசமாக திட்ட அவரால் மட்டுமே முடியும்.

உண்மைத்தமிழன் said...

[[[நிலவு said...

ஷோபா சக்தியின் தூற்று.காம் - பகுதி 4 க்கு எதிராக‌ ! -

http://powrnamy.blogspot.com/2011/03/4.html]]]

நிலவு நண்பரே.!

ஏன் இந்தக் கொலை வெறி..?

உண்மைத்தமிழன் said...

[[[raja said...

போய்யா போ.. உனக்கு அழிவு காலம் அங்கதான்னு இருந்தா யாரால தடுக்க முடியும்..! எல்லாம் ஈஸ்வரன் செயல்..!

..........லைட்டா தீயிற வாசனை வருதே....]]]

ஹி.. ஹி.. இதையெல்லாம் கண்டுக்கப்படாது..!

உண்மைத்தமிழன் said...

[[[Rafeek said...

"மிஷ்கின் ப்ளூபிலிம் டைரக்டர்ன்னா உங்க ஆளு மட்டும் என்ன ரைட்டராம்..?"

அது!!!அரசியல்வியாதிகளைவிட மோசமாக தன் நிலைப்பாடை மாற்றி கொள்பவரும்கூட. கெளதம் மேனனை புகழ்ந்த ஒரே வாரத்தில்.. மிக மோசமாக திட்ட அவரால் மட்டுமே முடியும்.]]]

இவரை மாதிரியானவர்களை வைத்துத்தான் தமிழ் இலக்கியச் சூழலை கணிக்க வேண்டியிருப்பதுதான் நமது சோகம்..!

ராஜ நடராஜன் said...

//எல்லாம் முடிந்தது. இனிமேல் சொர்க்கம்தான் என்று தமிழர்களில் சிலராலேயே கொண்டாடப்பட்ட ஒரு வருட காலத்திலேயே ஈழத்தில் நடந்திருக்கும் கலாச்சாரச் சீர்கேடுகள் அதிர்ச்சியடைய வைக்கிறது.//

சொல்வதற்கு வார்த்தையில்லை:(

ராஜ நடராஜன் said...

//40 வருடங்களாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ராஜ வாழ்க்கையை வாழ்ந்துவிட்ட ஒருவரை ஒரே நாளில் அனைத்தையும் துறந்து வீட்டுக்குப் போடான்னு சொன்னால் அவரால் எப்படி போக முடியும்..?//

ஏன்? துனிசியாவின் அலி அமைதியாகப் போகவில்லை?ஹோஸ்னி முபாரக் கொஞ்சம் பிகு பண்ணிகிட்டு போகவில்லை? வில்லனை சேர்த்துக்கொள்ள எந்த வளைகுடா நாடும் தயாராயில்லை என்கிற மாதிரியான குணம் கடாபிக்கு.இல்லைன்னா எனக்கு கிடைக்காதது எவனுக்குமில்லையென்று ஒரு உள்நாட்டுப் போரை உருவாக்கி மக்களுக்கு துயரம் விளைவிப்பானா கடாபி?

ராஜ நடராஜன் said...

எம்.ஆர்.ராதா பதிவின் உச்சம்!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//எல்லாம் முடிந்தது. இனிமேல் சொர்க்கம்தான் என்று தமிழர்களில் சிலராலேயே கொண்டாடப்பட்ட ஒரு வருட காலத்திலேயே ஈழத்தில் நடந்திருக்கும் கலாச்சாரச் சீர்கேடுகள் அதிர்ச்சியடைய வைக்கிறது.//

சொல்வதற்கு வார்த்தையில்லை:(]]]

வேறென்ன சொல்வது ஸார்? இதுவரைக்கும் நடக்காத விஷயங்கள் இப்போது நடக்க ஆரம்பித்துள்ளன என்றால் இதுவரையில் இருந்தவர்களை கும்பிடத்தானே தோன்றுகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//40 வருடங்களாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ராஜ வாழ்க்கையை வாழ்ந்துவிட்ட ஒருவரை ஒரே நாளில் அனைத்தையும் துறந்து வீட்டுக்குப் போடான்னு சொன்னால் அவரால் எப்படி போக முடியும்..?//

ஏன்? துனிசியாவின் அலி அமைதியாகப் போகவில்லை? ஹோஸ்னி முபாரக் கொஞ்சம் பிகு பண்ணிகிட்டு போகவில்லை? வில்லனை சேர்த்துக் கொள்ள எந்த வளைகுடா நாடும் தயாராயில்லை என்கிற மாதிரியான குணம் கடாபிக்கு. இல்லைன்னா எனக்கு கிடைக்காதது எவனுக்குமில்லையென்று ஒரு உள்நாட்டுப் போரை உருவாக்கி மக்களுக்கு துயரம் விளைவிப்பானா கடாபி?]]]

ம்.. இதை கடாபிக்கு அனுப்பி வைக்கிறேன். பதில் வந்தவுடன் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

எம்.ஆர்.ராதா பதிவின் உச்சம்!]]]

நன்றிகள் ஸார்..!

Toto said...

இந்த சீன்லாம் த‌மிழ்ல‌ எப்ப‌வோ வ‌ந்தாச்சே.. ஆனா என்ன‌ அதுல‌யும் தெலுங்கு ந‌டிகை தான் ந‌டிச்சிருப்பாங்க‌.. அனுசூயா வேட‌த்தில‌ ப‌ழைய‌ ந‌டிகை ஜெய‌ப்ப்ர‌பா [ நாடோடிக‌ள்ல‌ எம்.பியா வ‌ருவாங்க‌ளே ! ] .. ப‌ட‌ம் பிள்ளையார்னு நென‌க்கிறேன் :)

-roughnot.blogspot.com

உண்மைத்தமிழன் said...

[[[Toto said...
இந்த சீன்லாம் த‌மிழ்ல‌ எப்ப‌வோ வ‌ந்தாச்சே. ஆனா என்ன‌ அதுல‌யும் தெலுங்கு ந‌டிகைதான் ந‌டிச்சிருப்பாங்க‌. அனுசூயா வேட‌த்தில‌ ப‌ழைய‌ ந‌டிகை ஜெய‌ப்ப்ர‌பா [நாடோடிக‌ள்ல‌ எம்.பியா வ‌ருவாங்க‌ளே!] ப‌ட‌ம் பிள்ளையார்னு நென‌க்கிறேன் :)]]]

புது நியூஸா இருக்கே.. பிள்ளையார் படம் நான் பார்க்கவில்லை. பை தி பை.. நடிகை மந்த்ரா என்னும் ராசி, தெலுங்கு நடிகை இல்லை. தமிழ் நடிகைதான்..!

ஜெயப்ரபா இல்லை.. ஜெயப்பிரதா..!

- roughnot.blogspot.com]]]

உண்மைத்தமிழன் said...

[[[Cinema 4thwall said...

சார்.. நான் சொன்ன‌து ஜெய‌ப்ர‌பாவைதான்..

http://popcorn.oneindia.in/profile_photos/jayaprabha-22097.jpg]]]

ஓ.. உறுதியான தகவலுக்கு நன்றி.. நான் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை.. இந்த ஜெயப்ரபாவையும் இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். அதனால்தான் இந்தக் குழப்பம்..!