மெட்ராஸ் - சினிமா விமர்சனம்

30-09-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பயமாக இருக்கிறது தமிழ்ச் சினிமா செல்லும் பாதை.. யதார்த்தத்தை சொல்கிறேன் என்று சொல்லி இன்றைய இளைய சமுதாயத்தை திசை திருப்பும் பணிகள்தான் இப்போது நடைபெற்று வருகின்றன.

‘சுப்ரமணியபுரம்’ படத்தின் கிளைமாக்ஸில் தியேட்டரில் எழுந்த அப்ளாஸை நினைத்தபோதே வயிற்றை கலக்கியது. அதன் பாதிப்பை இப்போதும் தமிழகம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறது.. சினிமாவால் சமூகம் கெடவில்லை என்று சினிமாக்காரர்கள் சொன்னாலும் உண்மை வேறு.. இளைய சமூகத்தினருக்கு உத்வேகத்தைக் கொடுப்பதற்கு, இன்றைக்கு சினிமா ஹீரோக்களைவிட வேறு ஆட்கள் யாருமில்லை.



இந்த ‘மெட்ராஸ்’ திரைப்படம் வடசென்னைவாழ் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லியிருப்பதாக பலரும் எழுதி வந்தாலும், இதன் போதை இனி வரும் இளைஞர்களையும் நிச்சயம் பாதிக்கும். அந்த அளவுக்கு உண்மைத்தனத்துடன் மிகச் சிறப்பான இயக்கத்துடனும் வெளிவந்திருக்கிறது.

சென்னையிலேயே வடசென்னைதான் ரவுடிகள் அதிகம் வாழும் பகுதி என்று போலீஸ் ரிக்கார்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையான மெட்ராஸ்வாசிகள் இங்கேதான் தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்திருக்கிறார்கள்.. வாழ்கிறார்கள் என்பதுதான் உண்மை.. வடசென்னையில் பிராமணர்கள் குறைந்த சதவிகிதம்பேர்தான் இருப்பார்கள்.. அவர்களைத் தவிர எல்லா தரப்பு மக்களும் அதிகமாக இருக்கிறார்கள்.  

தமிழ்நாட்டில் சினிமாவிற்கு முன்பேயே சமூகத்தை அதிகம் பாதிப்படையச் செய்திருப்பது அரசியல்தான்.. இந்த அரசியலால் குடும்பத்தை இழந்தவர்கள்.. வாழ்க்கையை இழந்தவர்கள் லட்சணக்கணக்கில் தமிழகம் முழுவதும் இருக்கிறார்கள். குடியைவிட அதிக போதை தரும் அதிகார போதையை நாடி அலையும் அரசியல்வாதிகள் கொலைகளுக்கு அஞ்சுவதே இல்லை. தங்களது அதிகாரமென்னும் சாட்டை எப்போதும் தங்களது கைகளில் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். நினைப்பார்கள்.. அப்படியொரு அரசியல் அதிகாரப் போட்டியினால் சிக்கிச் சீரழியும் இரண்டு நண்பர்களின் கதைதான் இந்த ‘மெட்ராஸ்’.

வடசென்னை பகுதியில்  இதுவரையில் நடந்த அரசியல் படுகொலைகளில் மிக முக்கியமானவை நமக்குத் தெரிந்தது இரண்டுதான். இரண்டுமே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர்களை காவு வாங்கியது. ஒருவர் ஏழுமலை. அக்கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்தவர். ஒரு நாள் மாலை ராயபுரத்தில் எப்போதும்போல தனது நண்பரின் சைக்கிள் கடையில் அமர்ந்து சாவகாசமாக பேசிக் கொண்டிருந்தவரை கும்பலாக வந்த ஒரு டீம் பொலி போட்டுவிட்டுப் போனது..

இந்த ஸ்கெட்ச் போலீஸுக்கு முன்கூட்டியே தெரிந்ததுதான் என்று கொலைக்கு பின்பு பரவலாகப் பேசப்பட்டது. காரணம் மிக முக்கியமானது. அதிகாரப் போட்டி. அப்போது தி.மு.க.வில் இருந்து ம.தி.மு.க. உருவாகியிருந்த காலம். வடசென்னையில் தங்களது ஆதிக்கம் உள்ள பகுதிகளில் புதிதாக ம.தி.மு.க. கொடிகள் பறப்பதை எதிரணியும் விரும்பவில்லை.. ஏற்கெனவே துறைமுகம் பகுதியில் காண்ட்ராக்ட் எடுக்கும் வேலைகளில் ஏழுமலை தலையிட்டு தனக்கு சாதகமாகவே ஆக்கிக் கொள்வதால் கோபத்தில் இருந்த கும்பலை.. அரசியல் லாபியும் ஏற்றிவிட.. ஏழுமலை கொலையானார். பாவம்.. அப்போது அவரது பையன் கைக்குழந்தை.. 

இரண்டாவது கொலை அதே கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த துறைமுகம் சிவா. விடியற்காலையிலேயே எழுந்து ரவுண்ட்ஸுக்கு போகும் பழக்கமுள்ள சிவா.. துறைமுகம் பகுதியில் ஒரு தெரு வழியாக தனது டாடா சுமோ காரில் வந்தபோது அந்தத் தெருவில் இரண்டு புறமும் கார்களை கொண்டு வந்து நிறுத்தி வெளியேற விடாமல் தடுத்துவிட்டு.. சாவகாசமாக நடந்து சென்று சிவாவை வெட்டி கொன்றார்கள். தன்னை நோக்கி சாவு வருவதை சில நிமிடங்கள் அனுபவித்து, உணர்ந்து பின்பு செத்து போனார் சிவா.. பரிதாபமான முடிவு. இதுவும் அதிகாரப் போட்டிதான்..

தங்களைத் தவிர வேறு யாரும் வடசென்னை பகுதியில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக் கூடாது என்று நினைத்த வேற்று கட்சிக்காரர்களின் தூண்டுதலில் கூலிப்படையினர் இந்தக் கொலை நடந்ததாகச் சொன்னார்கள்.. ஆனால் துறைமுகத்திற்குள் கான்ட்ராக்ட் எடுப்பதில் நடந்த பிரச்சனையினால்தான் இந்தக் கொலை என்று போலீஸ் சொன்னது.. 

இப்போதுவரையிலும் வடசென்னை அரசியல்வாதிகள் தனியாக எங்கேயும் செல்ல மாட்டார்கள்.. ஆள், ஆளுக்கு டாடா சுமோ கார்களில் அடியாட்களுடன் பவனி வருவார்கள்.. இது போலீஸுக்கும் தெரியும்.. அவர்களே “சூதானமா இருந்துக்குங்க ஸார்...” என்று எச்சரிக்கை செய்துதான் வருகிறார்கள்.

இந்த ‘அதிகாரம்’ என்கிற வார்த்தை எப்படியெல்லாம், எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்தப் படத்தின் அடையாளக் குறீயீடாகவே இருக்கும் ஒரு பெரிய சுவர் சொல்கிறது.. அந்தச் சுவரில் யாருடைய கட்சியின் சின்னத்தை வரைவது என்பதுதான்  படத்தின் மையக்கரு. இந்தச் சுவரை கையகப்படுத்த நினைத்து இரு தரப்பு கட்சியினருக்கும் இடையில் நடந்த வெட்டுக் குத்து, கொலைகளையெல்லாம் சொல்லிவிட்டுத்தான் படமே துவங்குகிறது..!

வடசென்னை பகுதியில் முக்கால்வாசி மக்கள் சராசரிக்கும் கீழான நிலையில் அன்றாட தொழிலாளர்கள்தான்.. இதில் பாதி பேர் மீனவர்கள். மீதி பேர் துறைமுகத் தொழிலாளர்கள்.. அந்த ஒரு தலைமுறையில் இருந்துதான் அடுத்த மூன்று தலைமுறையும் உருவாகி இன்றைக்கு அங்கேயிருந்தும் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் டைட்டல் பார்க்வரைக்கும் சென்றிருக்கிறார்கள்..!

இடிந்து விழுக்க் கூடிய வீடுகளை நீங்கள் பார்க்க வேண்டுமெனில் உடனேயே வடசென்னைக்கு போகலாம்.. அங்கே அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். காலத்தில் அந்தப் பகுதி மக்கள் வாழ்ந்த குடிசைப் பகுதிகளை அகற்றி அவர்களுக்காக்க் கட்டிக் கொடுக்கப்பட்ட ஹவுஸிங் போர்டு குடியிருப்புகள் பலவும் இப்போதும் சரியான பராமரிப்பின்றி எலும்பும், தோலுமாக காட்சியளிக்கின்றன.. ஆனால் வீடுகளின் வெளிப்புறம்தான் இப்படி..

வீட்டிற்குள்ளே தரையெல்லாம் மார்பிள் போட்டு.. பாலீஷ் போட்டு.. உட்புறத்தை கச்சிதமாக மாற்றியிருக்கிறார்கள் பலரும். இதனால்தான் அந்த வீடுகளைவிட்டு வெளியேற மறுக்கிறார்கள். இத்தனைக்கும் பெரும்பாலான வீடுகள் ஒற்றை படுக்கையறை வீடுகள்தான்.. குடும்பம் பெரிதானால்கூட வேறொரு குடியிருப்பில் இதே போல வீடு வாங்கியோ அல்லது வாடகைக்கோ குடியிருக்கிறார்கள்.. ஆனால் வடசென்னையை காலி செய்வதில்லை.

இது போன்ற வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருக்கும் ஒரு மிகப் பெரிய சுவர்தான் பிரச்சினைக்குரிய களம். இந்தச் சுவற்றை தற்போது தன் கையில் வைத்திருப்பவர் ஒரு அரசியல் கட்சி பிரமுகரான நந்தகுமார். இவர் இந்தச் சுவர் பிரச்சினையால் கொல்லப்பட்ட தனது தந்தை ஜெயபாலனின் உருவப் படத்தை அந்தச் சுவரில் இப்போது வரைந்து வைத்திருக்கிறார். எதிர்க்கட்சியினர் இந்தச் சுவரை கைப்பற்ற நினைத்திருப்பதை அறிந்து அந்தச் சுவரை தொட்டால் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடும் என்ற மூட நம்பிக்கையை வளர்த்து அந்தச் சுவரின் அருகேயே வேல்கம்புகளை நட்டு ஒரு கோவில் ஸ்தலம் போலவும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.. 

இந்தச் சுவர் பிரச்சினையால் தன்னுடைய தந்தையை இழந்த எதிரணியைச் சேர்ந்த மாரி, இந்தச் சுவரை கைப்பற்றும் எண்ணத்துடன் அந்த ஏரியாவில் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நெருங்கிய நண்பன், கட்சியின் தொண்டன் அன்பு. இந்த அன்புவின் மிக நெருங்கிய தோஸ்த்துதான் நமது ஹீரோ கார்த்தி என்ற காளி.

இந்த அன்புவுக்கு திருமணமாகி ஒரு சின்னப் பையனும் இருக்கிறான். ஆனால் வெறித்தனமான மாரியின் அடிமை. தேர்தல் வருகிறது.. அட்வான்ஸாக சுவரை இடம் பிடிக்கும் வேலையில் ஈடுபடுகிறான் அன்பு. அப்போது அவனுக்குள் உறுத்தலாக இருப்பது அந்த சுவர்தான். அதை எப்படியாவது கைப்பற்றி தனது கட்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறான்.. இதை மாரியும் ஆமோதித்து ஏற்றி விடுகிறான்..

அந்தச் சுவரை தனது கட்சியின் புக்கிங் லிஸ்ட்டில் சேர்த்து சுவரிலும் எழுதி விடுகிறான். எதிர்பார்த்ததுபோலவே பிரச்சினை வெடிக்கிறது.. அன்புவுக்கு உதவி செய்யப் போன காளி, தனது துடுக்குத்தனத்தால் அரசியலென்றால் என்னவென்று அறியாதவனாக இருப்பதால் கை நீட்டி விடுகிறான். இது கொலை முயற்சியாக போய் முடிய.. எதிரணி பட்டாக்கத்திகளை தூக்குகிறது.. இந்தத் தாக்குதலில் காளி ஒருவனை பொலி போட.. போலீஸ் தேடுகிறது..

அன்புவும், காளியும் கோர்ட்டில் சரணடைய வந்தபோது காளியின் பெயர் எஃப்.ஐ.ஆரில் இல்லாததால் அவனைத் தவிர்த்துவிட்டு அன்பு மட்டுமே சரண்டராகிறார். ஆனால் அடுத்த அரைமணி நேரத்தில் அங்கே வரும் எதிரிகளால் அவன் கொல்லப்பட.. காளி தனித்துவிடப்படுகிறான். இதுவரைக்கும் இந்த திட்டத்தில் காளியும் இருக்கிறான் என்பதை ஊகிக்காத எதிரணியினரை சமாளித்து இறந்து தனது உயிர் நண்பனின் சபதத்தை நிறைவேற்றுகிறான் காளி. அது எப்படி என்பதுதான் இடைவேளைக்கு பிந்தைய கதை..

நிச்சயம் கார்த்தி இந்தப் படத்தை ஒத்துக் கொண்டதற்கு இப்போது சந்தோஷப்பட்டுக் கொள்வாரென்று நினைக்கிறேன்.. முழுக்க முழுக்க பக்கா லோக்கல் பையனாக இயல்பு மாறி நடிப்பதென்பது மிகச் சிரமமான விஷயம்.. ஏற்கெனவே கார்த்தி ஐடி பையனை போலவே இருக்கிறார். இந்தப் படத்திலும் வேலை அதுதான்.. ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் லோக்கலாகிறார்.

ஆனால் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் சில இடங்களில் நமக்கே வெறுப்பேற்றுகிறது.. தேவையே இல்லாமல் அடிக்கடி கோப்ப்படுவதும்.. “பாரு மச்சான் பேசிக்கிட்டேயிருக்கான்...”  என்றெல்லாம் அடிக்கடி சொல்லி இவர் அடிக்கப் பாய்வதும், அடிப்பதும், இதனால் விளையும் பிரச்சினைகளுமாய் கதை செல்ல.. கார்த்தி கேரக்டர் மீதே ஒருவித எரிச்சல் வருவதை தவிர்க்க முடியவில்லை.. ஏன் இந்தக் காரணமில்லாத கோபம்..? யாராவது எதிர்த்து பேசினால் கோபம் வந்துவிடுமா..? ஏன் வரணும்..? அப்படியென்ன அவங்க அப்பாடக்கரா..? கொஞ்சம் யோசித்தால் இயக்குநர் நம்மை மயக்கத்தில் ஆழ்த்தியிருப்பது புரியும்..!

ஒரு ஐடி துறையில் வேலை பார்க்கும் பையன்.. இப்படியா சிச்சுவேஷன் புரியாதவராக இருப்பார்..? “நான்தான் கொலை செய்தேன்.. ஆகவே நான்தான் சரண்டராவேன்..” என்று அடம் பிடிக்கும் கார்த்தியை நினைத்து இப்படித்தான் கேட்க தோன்றுகிறது.. சட்டென்று விட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாமே என்று நினைத்தால் அது நட்புக்காக என்று அந்தக் காட்சியில் மட்டுமே சொல்கிறார். இதற்கு பின்புதான் அன்பு மீதான அவரது ஆழமான நட்பை அடிக்கடி வசனங்களில் சொல்லிக் கொண்டே வருகிறார்.. ஏற்கத்தான் முடியவில்லை..

கார்த்தியின் கேரியரில் நிச்சயம் இது முக்கியமான படம்தான்.. காதலிப்பதா வேண்டாமா என்கிற முதல் பாதி குழப்பம் ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் நான் முக்கியமா.. அன்பு முக்கியமா என்று ஹீரோயின் எழுப்பும் கேள்வி ஒரு பக்கம்.. இரண்டுக்குமிடையில் அல்லல்படும் அந்த இளவயது காளியை அனைவருக்கும் பிடிக்கிறது..  ஆனாலும் காதலித்த பெண்ணை கரம் பிடிக்கத் தயாராக இருக்கும் சூழலிலும் அவருக்குள் ஏன் அந்த கொலை வெறி திரும்பத் திரும்ப வருகிறது..? தேவைதானா அது..?

பாடல் காட்சிகள்.. கேத்தரினை லுக் விட்டு பின்னாலேயே அலையும் காட்சிகள்.. அரசியல் களத்தில் கோப்ப்படும் காட்சிகள்.. தன் வீட்டில் அம்மாவுடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் என்று அனைத்திலும் அண்ணன் கார்த்தி புதிதாகவே நடித்திருக்கிறார்.. வாழ்க..!

அன்பு, ரித்விகா இரண்டு ஜோடிகளையும் பிடிக்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள்.. காதலித்து கல்யாணம் செய்தவர்களின் ஊடலில் இருக்கும் கோபமும், வருத்தமும் ரசிகர்களை நிச்சயம் ஏங்க வைத்திருக்கும்.. ரித்விகாவின் ஒவ்வொரு ஆக்சனும் கவனித்து பதிவாக்கப்பட்டிருக்கிறது. இதுதான் அந்த கேரக்டரின் வெற்றி. கடைசியில் மாரியின் முகத்தில் பெயிண்ட்டை ஊற்றுகின்ற காட்சிக்கு தியேட்டரில் கைதட்டல்களே கிடைக்கிறது என்றால் அது ரித்விகாவால்தான்..!

கேத்தரின் தெரசா.. முகத்தில் பேபியாகவே இருக்கிறார்.. கவனிக்கவில்லை என்று நினைத்தால் சட்டென்று “என்னை கல்யாணம் செஞ்சுக்குறியா?” என்று வழக்கமான ஹீரோயின்போலவே கேட்கிறார்.. இதனாலேயே இந்தக் காதல் ஒட்டவில்லை.. ஆனால் அந்த ரொமான்ஸ் துரத்தல்களை ரசனையுடன் படமாக்கியிருக்கிறார்.. 

“யாருய்யா அந்த ஜானி...?” என்று கேட்க வைத்திருக்கிறார் இந்த நபர்.. இவர் பேசும் பாதி வசனங்கள் சத்தியமாக யாருக்குமே புரிந்திருக்காது.. ஆனால் அந்த டயலாக் மாடுலேஷனே ரசிக்க வைக்கிறது.. யதார்த்தமான பேச்சு.. “ஒரே குத்துல சொருகிருவான்.. அப்படியே ரெண்டு திருப்பு.. அவ்ளோதான்.. எடுத்துக்கின்னு போயிக்கின்னே இருப்பான்.. உசுரு இருக்க சான்ஸே இல்லை...” என்கிறார்கள் இவரது கத்திக்குத்து பராக்கிரமத்தை பற்றி.. போலீஸ் அடியில் இப்படி கிராக்காகிவிட்டதாக போகிற போக்கில் சொல்வதால் அவர் மீதான அனுதாபம் ஏதும் வரவில்லை. ஆனால் காமெடி மட்டுமே வந்தது.. போலீஸ் அடி எப்படியிருக்கும் என்பதை அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்..

நந்தகுமார், மாரி, ஜெயபாலன் என்று அரசியல் களம் புகுந்த நடிகர்கள் அளவுக்கேற்றாற்போல் நடித்திருக்கிறார்கள். இதில் நந்தகுமாரைவிடவும் மாரிதான் ரசிக்க வைத்திருக்கிறார். தேன் தடவிய பேச்சு.. தட்டிக் கொடுக்கும் பாணி.. எதிரியை ஊடுறுவி பார்க்கும் பார்வை.. என்று அனைத்திலும் பத்து விரல்களிலும் விஷம் தடவி கட்டியணைக்கும் வில்லத்தனத்தை கடைசிவரையிலும் கொண்டு சென்றிருக்கிறார். 

கடுகடு அம்மாவாக சற்றும் எதிர்பார்க்காத கேரக்டரில் ‘என்னுயிர்த் தோழன்’ ரமா. மகனுக்கு பார்த்த பெண்களையெல்லாம் ஏதாவது சொல்லி தட்டிவிடும் அவர் என்னதான் கடைசியாக சொல்ல வருகிறார் என்பதை சொல்லாமலேயே கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். கார்த்தியின் பாட்டி அவ்வப்போது காசுக்கு அடிபோட்டு பேசும் காட்சிகள் மிக யதார்த்தம்.  

“நெரிசலான ஹவுஸிங் போர்டு குடியிருப்புகள்.. எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் வாசல்கள்.. தெருவுக்குத் தெரு இருக்கும் கேரம் போர்டுகள்.. குழாயடி சண்டைகள்.. கால்பந்து பிரச்சினைகள்.. நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது.. அரசியல் கைத்தடிகளின் அலசல்கள்.. முரட்டு மக்களாய் தெரிந்தாலும் அவர்களுக்கிடையில் இருக்கும் ஒருவித பாசம்.. கானா பாடல்கள்.. மரணத்திலும் வாழ்க்கைத் த்த்துவத்தை ஒலிக்கும் பாடல்கள்.. ஒரு வீட்டு சாவு, அனைத்து வீட்டு சாவு போன்ற பிரமையை ஏற்படுத்துவது..” என்று இது போன்ற ஒரு சூழலை இதற்கு முன்பு பார்த்திராதவர்களுக்கு ஒரு புதிய படைப்பை செய்நேர்த்தியோடு பார்க்கும் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது..

ஜி.முரளியின் ஒளிப்பதிவில் அந்தப் பகுதியையே கலர், கலராகக் காட்டியிருக்கிறார்.. அந்தச் சுவரை விதவிதமான கோணங்களில் காண்பித்து இந்தச் சின்ன, சாதாரண சுவத்துக்குத்தான் இத்தனை அக்கப்போரா என்று ஒரு நொடி நம்மை சிந்திக்கவும் வைத்திருக்கிறார். வெறுமனே இருக்கும் கால்பந்து மைதானத்தைக்கூட ஒரு அழகுணர்ச்சியோடு காட்டியிருக்கிறார். கேத்தரின் தெரசாவுக்கு பெரிய லக்.. முரளியின் ஒளிப்பதிவில் மிளிர்கிறார்.. பாடல் காட்சிகளிள் வழக்கம் போலவே.. கபிலனின் ‘ஆகாயம் தீப்பிடிச்சா…’ பாடலும், கானாபாலாவின் ‘காகிதக் கப்பல்…’, ‘இறந்திடவா…’ பாடல்களும் புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கின்றன. பின்னணி இசையிலும் அடித்து ஆடியிருக்கிறார். சுவரை காட்டும்போதெல்லாம் ஒரு திகிலைக் கூட்டி இறக்கி.. ஒருவித பய உணர்வை கடைசிவரையிலும் கொண்டு போயிருக்கிறார்.

சண்டை காட்சிகள் தத்ரூபம்.. இதற்காக எத்தனை மெனக்கெட்டிருக்கிறார்கள்..? கிளைமாக்ஸ் சண்டை இதில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.. இது போன்ற படங்களில் எடிட்டரின் பணி மிக முக்கியமானது. பிரவீனின் எடிட்டிங் கத்திரிக்க வேண்டியதையெல்லாம் கத்தரித்திருக்கிறது.. இயக்குநர்தான் காட்சிப்படுத்தலில் நம்மை வயிறு கலங்க வைத்திருக்கிறார்.. நீளமான காட்சிகள் நிறையவே படத்தில் இருக்கின்றன.. வசனங்களின் வேகத்தில் சிலவைகள் அழுத்தமாக பதிவாகாமல் போனது வருந்தத்தக்கதே..

இது போன்ற அடிதடி, கமர்ஷியல் படங்களை உண்மைத்தனத்துடன் எடுப்பதுதான் மிக ஆபத்தானது.. ஏனெனில் வருகின்ற பார்வையாளரை அது கட்டிப்போட்டு அவர்களுக்குள் இருக்கும் மிருகத்தைத் தூண்டிவிட்டுவிடும். இந்தப் படம் அந்த ஆபத்தைச் செய்யக் கூடிய படமாகவும் இருப்பதுதான் நமக்குக் கவலையைத் தருகிறது.. இறுதியில் செய்த கொலைகள் பற்றிய குற்றவுணர்வுகூட இல்லாமல் படத்தின் ஹீரோ இருப்பது அவரது ரசிகர்களுக்கு வேண்டுமானால் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் படத்தின் கதைக்கு அது பொருத்தமாக இல்லை.. இதேபோல எதற்காகவும் கொலைகள் செய்யலாம் என்று ஆதரிக்கும் படங்கள் வந்து கொண்டேயிருப்பதும் தமிழ்த் திரையுலகத்திற்கு நல்லதல்ல.

இன்னொரு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.. இத்திரைப்படம் ஒரு தலித்திய திரைப்படம் என்று சிலர் குறிப்பிட்டதை படத்தின் இயக்குநர் ரஞ்சித்தும் ஆமோதித்திருப்பது வருந்தத்தக்கது. மதம், ஜாதி, மொழி, இனம் இவற்றுக்கு அப்பாற்றப்பட்டது சினிமா துறை. இப்போதுவரையிலும் இப்படித்தான்..!

இந்தக் கதை அரசியல் களம் சார்ந்ததுதான் என்றாலும் இது தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள் பற்றிய கதை என்றெல்லாம் முகமூடி போடுவது எதிர்கால தமிழ்ச் சினிமாவுக்கும் நல்லதல்ல. படத்தில் பாடல்களை எழுதிய அனைவருமே தலித்துகள் என்கிறார்கள். இதனால் சினிமா துறைக்கு என்ன பயன்..? யார் எழுதினால்தான் என்ன..? தலித்தோ, கவுண்டர்களோ.. அனைவரும் இங்கே கலைஞர்கள் மட்டுமே.. இப்படி கலைஞர்களை இன ரீதியாகவோ, ஜாதி ரீதியாகவோ பிரித்துப் பார்க்கும் பழக்கம் உருவானால் வரும் காலத்தில் மாதத்திற்கு ஒரு ஜாதிக்கார படம் வந்து தமிழ்த் திரையையும் அழித்துவிடும். இதுவொரு அரசியல் பின்புலத்தைக் கொண்ட சிறப்பான இயக்கத்துடன் வந்திருக்கும் கமர்ஷியல் படம் என்று சொல்வதுதான் சாலச் சிறந்தது..! 

தமிழ்ச் சினிமாவில் அரசியல் தொடர்பான படங்களில் இந்த ‘மெட்ராஸும்’ ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. ‘அட்டக்கத்தி’யுடன் நின்று  போகாத தனது தனித்துவமான இயக்கத்தை இந்த ‘மெட்ராஸிலும்’ செய்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். இவருக்கும் படத்தில் பணியாற்றிவர்களுக்கும், நடித்தவர்களுக்கும் எமது பாராட்டுக்கள்..!


ஜெயலலிதாவிற்கு தண்டனை போதாது - 7 வருடங்கள் கொடுத்திருக்க வேண்டும்..!

27-09-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதன்முதலாக ஒரு திரைப்பட நடிகர் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான்.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமரர் எம்.ஜி.ஆர்.தான் அந்தச் சாதனையைச் செய்தவர்.

இப்போது அவருடைய கட்சியைச் சேர்ந்த ஒரு நடிகைதான் முதல்வராகி, ஊழல் குற்றச்சாட்டினால் நீதிமன்றத்தினால் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஜெயிலுக்குள் போன அசிங்கமும் நடந்திருக்கிறது..! இதனால் கேவலப்பட்டு போயிருப்பது எம்.ஜி.ஆர். துவக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்..!




அமரர் எம்.ஜி.ஆர். தன் அரசியல் வாழ்க்கையில் செய்த ஒரே தவறு ஜெயலலிதாவை கட்சியில் சேர்த்ததுதான். இந்த உண்மையை அவரும் தனது கடைசி காலத்தில் உணர்ந்துதான் இருந்தார். ஆனால் அதற்குள் நிலைமை அவருடைய கையை மீறியும் போய்விட்டது.  இதற்கு மேல் நடந்ததெல்லாம் காலத்தின் கொடூரம்..!

1991-1996-ம் ஆண்டுவரையிலும் ஒரு விபத்தின் காரணமாய் ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா. தனக்கு இரண்டாண்டுகளாக வருமானமே இல்லை என்று வருமானவரித் துறையினரிடம் மனு தாக்கல் செய்தார். அந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் முடிவில் மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றதாக சொன்னவர் இந்த வழக்கில் சிக்கி 66 கோடி ரூபாய் அளவுக்கான சொத்துக்களை வாரிக் குவித்திருந்ததை கேள்விப்பட்டபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது..

ஏதோ சுப்பிரமணிய சாமியின் புண்ணியத்தால்.. ஜெயலலிதா-சுவாமி இருவரின் ஈகோத்தனத்தால் தமிழ்நாட்டுக்கு விளைந்த ஒரேயொரு நன்மை இந்த வழக்கு மட்டுமே.. 

2001-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதாவின் முறைகேடான செயல்பாட்டினால் இந்த வழக்கு புதைகுழிக்கு போய்க் கொண்டிருப்பதை அறிந்த பின்புதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இந்த வழக்கை பெங்களூருக்கு மாற்றச் செய்தார். இந்த நேரத்தில் பேராசிரியருக்கு நமது நன்றிகள்..! 

இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்யவும், வழக்கை நடத்தவிடாமலும்.. இழுத்தடித்துப் பார்த்த ஜெயலலிதாவால்தான், இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நீண்டு வந்தது.

இந்த்த் தீர்ப்பினால் அவரது அரசியல் எதிரிகள் என்று சொல்லப்படும் யாருமே மகிழப் போவதில்லை. "எப்படி இருந்த கட்சியை இப்படி பேசும்படி செய்துவிட்டார்களே..." என்று அவர்களுக்கே சற்று விசனம்தான்.. “முதன்முதலாக ஒரு முதலமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற மாநிலம் எது..?” என்று வரும் காலங்களில் இந்தியாவில் நடக்கப் போகும் அனைத்துவகை போட்டி தேர்வுகளில் கேள்வி கேட்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் பெயரும் நாறிவிட்டதில் வேறு சிலருக்கு வருத்தம்.. 

நிச்சயமாக இந்த வழக்கின் முடிவு குறித்து சந்தோஷப்படுபவர்கள் ஜெயல்லிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களும்.. அவரால் பாதிக்கப்பட்டவர்களும்தான்.. 

இந்தத் தீர்ப்பே மென்மையானது.. எப்போதும் அரசியல்வியாதிகளாலேயே அரசியல் சட்டம் திருத்தப்படுவதால் அவர்களுக்கேற்றாற்போலவே இந்த ஊழல் தடுப்புச் சட்டத்தையும் திருத்தி வைத்திருக்கிறார்கள்.. 300 ரூபாய் பறித்த வழக்கிற்கே இப்போதெல்லாம் 4 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படுகிறது. காரணம் கேட்டால், “அப்போதுதான் அவன் பெரிய குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டான்...” என்பார்கள். ஆனால் இந்த 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பிற்கும் அதே நான்காண்டுகள்தானா..?

அதிலும் இவர்களுக்கு ஒரு விதிவிலக்காம்.. அரசியல்வியாதிகளுக்குக் கிடைக்கும் தண்டனைகள் இரண்டாண்டுகளுக்குள் இருந்தால் கோர்ட்டில் விலக்குப் பெற்று அரசியலில் நீடிக்கலாம்.. பதவியில் இருக்கலாம்.. தண்டனை காலம் முடிந்தவுடனேயே மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம் என்பதெல்லாம் அரசியல்வியாதிகள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக தாங்களே போட்டுக் கொண்ட விதிமுறைகள்தான்..!

இந்த நாட்டை பிடித்த மிகப் பெரிய சனியனே இப்போதைக்கு ஊழல்தான்.. மதவாதமெல்லாம் இதற்கு பின்புதான்.. இந்த ஊழல் விவகாரத்தில்தான் மதம், ஜாதியையெல்லாம் கடந்து அனைத்து அயோக்கியர்களும் ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்திருக்கிறார்கள்.

'ஒரு நாள் சிறை தண்டனை பெற்றால்கூட.. ஒரு ரூபாய் வருமானத்திற்கு அதிகமாகச் சேர்த்திருந்தால்கூட அவர்கள் வாழ்நாள் முழுவதும் அரசியலில் ஈடுபடவே முடியாது' என்று நியாயமான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்.. 

'ஒரு லட்சம் ரூபாய்க்குள் ஊழல் செய்தால் பத்தாண்டு கால தண்டனை'யும், 'அதற்கும் மேலே என்றால் ஆயுள் தண்டனை' என்று அமல்படுத்தினால்தான், இந்த நாட்டில் கொஞ்சமாவது அரசியல்வியாதிகளும், அதிகார வர்க்கமும் அடங்குவார்கள்.. இப்படி ஆள், ஆளுக்கு ஒரு கோஷ்டி அரசியல் நடத்திக் கொண்டு இவர்களுக்காகவே சட்டத்தை வளைத்துக் கொண்டு அவ்வப்போது தங்களுடைய சுய லாபத்திற்காக சட்டத் திருத்தங்களை செய்வதெல்லாம் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிதான்.

ஜெயலலிதாவுக்குக் கிடைத்திருக்கும் இந்தத் தண்டனை நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் தண்டனையை நான் கூடுதலாக எதிர்பார்த்தேன். குறைவு என்பதுதான் எனது கருத்து. இந்த ஊழல் குற்றச்சாட்டில் அதிகபட்ச தண்டனையான 7 வருடங்களையே கொடுத்திருக்கலாம். 100 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்காவிட்டால் 1 வருடம் கூடுதலாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் பேத்தலான தீர்ப்பு.. 100 கோடி பெரிசா.. ஒரு வருஷம் பெரிசான்னு கேட்டா.. “100 கோடிதான்” என்பார்கள் அரசியல்வியாதிகள். "இந்த ஒரு வருஷத்தையும் ஆஸ்பத்திரி பெட்லேயே ஏ.ஸி. ரூம்ல படுத்து கழிச்சிட்டா போவுது.. ஆனா அந்த 100 கோடியை எப்படி திரும்ப வந்து சம்பாதிக்க முடியும்..?" இப்படி இவர்கள் யோசிக்க மாட்டார்களா..? 1995-ல் சசிகலா அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டபோது, கோமாவில் இருப்பது போல டிராமா போட்டு நடிக்கலையா..? 

பரவாயில்லை.. இந்த அளவுக்கு இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, துணிச்சலுடன் தீர்ப்பை வழங்கியிருக்கும் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா அவர்களுக்கு எனது நன்றி. தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் அவர் என்றென்றும் நினைவு கூறப்படுவார்.. 

ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சென்னைக்கு வந்தாலும் தினமும் தனது அடிமையான பினாமி முதலமைச்சருக்கு நேரடி உத்தரவு மட்டுமே இட முடியும்.. ஆட்சியை மறைமுகமாக நடத்தலாம். ஆனால் வெளிச்சத்திற்கு வர முடியாது. 

2016-க்குள்ளாக கர்நாடக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தனது வழக்கை முடித்து நிரபராதி என்று வந்தால்தான் அடுத்த்த் தேர்தல் பிரச்சாரத்திற்கே வர முடியும். இல்லையெனில் எப்போது உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கி... அதன் பிறகு இவர் ஜெயிலுக்குள் போய் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியில் வந்து வீட்டில் இருந்தபடியே கட்சியின் மறைமுகத் தலைவராகச் செயல்பட்டு அடுத்த ஆறு ஆண்டு கால 'வனவாச'த்தைக் கழித்துவிட்டு அவர் அரசியலுக்கு திரும்பி வருவதற்குள் இங்கே என்ன நடக்குமென்று யாருக்குத் தெரியும்..?

இந்த வழக்கில் இப்படிப்பட்ட தீர்ப்பு வந்தமைக்கு  மத்தியில் இருக்கும் பாரதிய ஜனதா தலைமையிலான கட்சியும் ஒரு காரணம் என்கிறார்கள். ஆனால் மைக்கேல் டி குன்ஹா அப்படிப்பட்டவரல்ல என்றுதான் கர்நாடக மாநில மீடியாக்களும் சொல்கின்றன. இந்த விஷயத்தில் பா.ஜ.க., ஜெயலலிதாவுக்கு உதவவில்லை என்றாலும், இனிமேல் நிச்சயம் உதவி செய்யத்தான் போகிறது.. 

தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு பெரிய திராவிட கட்சிகளை ஒழித்துக் கட்டினால்தான் தேசிய கட்சிகள் தலையெடுக்க முடியும் என்று காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சியின் முக்கியத் தலைவர்களின் எண்ணமாக இருக்கிறது என்பது உண்மையாகவே இருக்கலாம். 

இதனால்தான் 2-ஜி வழக்கை அம்பலப்படுத்தி கூட்டணி கட்சி.. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் கட்சி என்றுகூட பாராமல் தன் தலையில் தானே மண்ணையள்ளி போட்டுக் கொண்டது காங்கிரஸ்.. அது நினைத்தது போலவே தமிழகத்தில் தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் இருந்து விலக்கியதில் பெரும் பங்கு 2-ஜிக்கே உண்டு. இப்போது பா.ஜ.க.வின் முறை..

முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங், சுஷ்மா சுவராஜ் என்று முந்தைய நண்பர்களுடன் இப்போது தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் போய்விட.. அவரால் தன்னுடைய ஈகோத்தனத்தைவிட்டுக் கொடுக்காமல் பேரம் பேச முடியவில்லை.. 

தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட அன்றைக்கு தன்னை சந்தித்த மத்திய சட்ட அமைச்சரிடம் என்ன பேசினாரோ தெரியாது.. ஆனால் அதற்கான சாதகமான விளைவுகள் 'நமோ நாராயணனிடம்' இருந்து வராததால் தூத்துக்குடி பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தவுடன் எடுத்த எடுப்பிலேயே பா.ஜ.க.வை விளாசித் தள்ளினார் ஜெயலலிதா.

இன்றைக்கு நமது 'நமோ நாராயணன்' அமெரிக்கா சென்றிருக்கும்வேளையில் ஜெயல்லிதா ஜெயிலுக்குள் குடி புகுந்திருக்கிறார். காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் ஜெயலலிதா எதிர்பார்த்ததெல்லாம் இனிமேல் கிடைக்குமா என்கிற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும்,  இனி வரும் காலங்களில் அவர் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. இந்த இரு கட்சிகளுடன் வேண்டாவெறுப்பாக கூட்டணி வைக்க வேண்டி வரும் என்றே நம்புகிறேன்..! இதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள்.. 

திராவிடக் கட்சிகளை விரட்டிவிட்டால் ஆட்சியைப் பிடித்தவிடலாம் என்று காவிகளும், காங்கிரஸும் திட்டம் போட்டாலும் ஜெயலலிதாவும், கருணாநிதியும், ஸ்டாலினும், வைகோவும் உள்ளவரையில் அது நடக்காது.. கூட்டணியில் இரண்டாமிடம் மட்டுமே கிடைக்க சாத்தியங்கள் உண்டு. 

எப்படியிருந்தாலும் எந்தக் காலத்திலும் எனக்கு யாருமே தேவையில்லை என்று சொன்ன, நினைத்த ஜெயலலிதா இப்போது இந்த இரு தேசியக் கட்சிகளில் ஏதாவது ஒன்றை காக்கா பிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவருடைய வலையில் எந்தக் காக்கா விழும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!

மைந்தன் - சினிமா விமர்சனம்

25-09-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதுவொரு மலேசிய தமிழக கூட்டு தயாரிப்பு. ஹீரோவாக நடித்தவர்தான் படத்தை இயக்கியிருக்கிறார். மலேசியாவில் பிரசித்தி பெற்ற நிறுவனமான ஆஸ்ட்ரோவுடன் இணைந்து  டத்தோ சாகுல் ஹமீது மற்றும் புவனேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அசப்பில் அந்தக் கால அருண்பாண்டியன் போலவே இருக்கிறார் ஹீரோ குமரேசன். முதல் காதல் தோல்வியால் தினமும் குடியும், குடித்தனமுமாக இருக்கிறார் ஹீரோ. வீட்டில் எந்தப் பக்கம் பார்த்தாலும் பீர் பாட்டில்கள்தான்..
இவர் ஒரு நாள் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரில் பர்ச்சேஸ் செய்து கொண்டிருக்கும்போது வெளியில் நிற்கும் அவரது காருக்குள் அனுமந்தன் என்னும் சிறுவன் வந்து ஒளிந்து கொள்கிறான். அவனை கண்டுபிடிக்கும் அவனை விரட்டியவர்கள் குமரேசனின் காரையும் சேர்த்தே கடத்திக் கொண்டு போக.. குமரேசன் பின்னாலேயே விரட்டுகிறார். ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு அவர்கள் ஓடிப் போக.. காரின் பின் சீட்டில் அந்த சிறுவன் அனுமந்தன் மட்டும் இருக்கிறான்.
அவன் யார் என்ன என்று தெரியவில்லை என்றாலும் அவனை அனுப்பிவிட உத்தேசிக்கிறான் குமரேசன். ஆனால் அனுமந்தன் போகாமல்.. போவதற்கு இடமில்லாமல்.. இங்கேயே வேலையாள் மாதிரி இருக்கிறேன் என்கிறான். குமரேசன் வேண்டா வெறுப்பாக சரி என்று சொல்ல.. தங்கிவிடுகிறான்.
அனுமந்தனின் கதை பரிதாபமானது. உதயகுமார் என்பவன் சிறுவர்கள் காப்பகம் என்ற பெயரில் ஒரு அனாதை விடுதியை நடத்தி வருகிறான். அதில் அனுமந்தன் வயதையொத்த சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்களை பகல் நேரத்தில் பிச்சையெடுக்க வைத்து தன் பிழைப்பை ஓட்டுகிறான் உதயகுமார். சில நேரங்களில் வெளிநாட்டுக்கும் அவர்களை அனுப்பி வைக்கிறான். இந்த காப்பகத்தில் இருந்துதான் அனுமந்தன் தப்பித்திருக்கிறான்.
அனுமந்தன் தப்பித்த்தால் கோபமான உதயகுமார் எப்படியாவது அனுமந்தனை கொண்டு வாருங்கள் என்று தன் கைத்தடிகளுக்கு உத்தரவிடுகிறான். அவனது உத்தரவின்பேரில் அவன் இப்போது எங்கேயிருக்கிறான் என்பதை துப்பறிந்து அங்கே வருகிறது கணவன்-மனைவி என்ற அந்த டீம். அவர்கள் குமரேசன் தனது காரின் மீது தீராத காதல் கொண்டவன் என்பதை உணர்ந்து காரை பணயம் வைத்து அனுமந்தனை கேட்கிறார்கள்.
கார் மீதான ஆசை காரணமாக குமரேசன் அனுமந்தனைவிட்டுவிட அவர்கள் அவனை கூட்டிக் கொண்டு கிளம்புகிறார்கள். தனது காரில் அவர்களை பின் தொடரப் போகும் நேரத்தில் குமரேசனின் கார் விபத்துக்குள்ளாகிறது.. எப்படியாவது அனுமந்தனை மீட்க வேண்டுமே என்றெண்ணிய குமரேசனின் கண்ணில் படுகிறார் இரண்டாவது ஹீரோயின் புன்னகை பூ கீதா.
தனது காரில் ஏறப் போகும் நிலையில் இருக்க.. அந்தக் காரில் வலுக்கட்டாயமாக கீதாவையும் ஏற்றிக் கொண்டு பறக்கிறார் குமரேசன். ஆனாலும் அனுமந்தனை கண்டுபிடிக்க முடியவில்லை. நடுரோட்டில் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று வரும் ஒருவன் அந்தக் காரையே லவட்டிக் கொண்டு போக.. இருவரும் காடுகளுக்குள்ளேயே நடந்து, நடந்து வருகிறார்கள்.
இப்போது குமரேசன் தனது முதல் காதல் கதையைச் சொல்கிறான். அந்தச் சோகத்தில் இருப்பதால் இன்னொரு காதல் தனது வாழ்க்கையில் வரவேயில்லை என்கிறான். அவனை மனதுக்குள் காதலிக்கிறார் கீதா.  இப்போது அனுமந்தனை தேடி குமரேசன் போக.. கூட துணைக்கும் தானும் வருவதாகச் சொல்லி கீதாவும் செல்கிறார். இருவரும் அவனை மீட்டார்களா என்பதுதான் மீதமான கதை..!
இப்படி நகரப் பின்னணியுடன் எடுக்கப்படும் ஒரு தமிழ்ப் படத்தில் வழக்கமாகக்
கொஞ்சமாகத்தான்  தமிழில் பேசுவார்கள், பெரும்பாலான வசனங்கள் ஆங்கிலத்தில்தான்
இருக்கும். ஆனால், இந்த மைந்தன் படத்தில் கொஞ்சமாக ஆங்கில வசனங்களும்,
சரளமாக அதிக அளவில் தமிழ் வசனங்களும் இடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.
குமரேசன் பல படங்களில் நடித்த அனுபவசாலிபோல நடித்திருக்கிறார். ஸ்பீடான டயலாக் டெலிவரியுடன் அவருடைய வேகமான நடையும், ஸ்டைலும் பார்க்க ரசிக்க வைக்கிறது..! கேமிராவுக்கான முகம் இல்லாவிட்டாலும், தமிழ்ச் சினிமாவில் வரும் ஒரு ரவுடி ஹீரோவுக்கான கெத்தும், முகவெட்டும் அச்சு அசலாக இருக்கிறது.. இங்கே வந்தால் நிச்சயம் தேறிவிடுவார்.. காதல் காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும்கூட ரசிக்க வைத்திருக்கிறார்..
ஹீரோயின் ஷைலா நாயர்.. அதிகம் வேலையில்லை என்றாலும் நடுரோட்டில் வைத்து தனது காதலை புரபோஸ் செய்யும் அந்தக் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார் ஹீரோயின். இவரது பரிதாப முடிவால் ஹீரோவின் மாறுதல் எதிர்பார்த்ததுதான் என்றாலும் தமிழ்ச் சினிமா அளவுக்கு இல்லை என்பதால் ஒரு நன்றி..!
பட்டியல் படத்தின் தயாரிப்பாளரான புன்னகை பூ கீதா இரண்டாவது ஹீரோயினாக நடித்திருக்கிறார். சிறப்பான இயக்கத்தினால் அளவான நடிப்பையும், அதே சமயம் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். முதலில் ஹீரோவுடன் ஏற்படும் மோதலும்.. பின்பு அவருடனேயே இருக்க வேண்டிய சூழலை ஏற்றுக் கொண்டு கடுகடு முகத்தோடு அவருடன் அடிக்கடி மோதுவதிலும் இவரை ரசிக்க முடிகிறது.. இத்தனை நடிப்பையும் வைத்துக் கொண்டு ஏன் தயாரிப்பாளராகவே இருக்கிறார்..?
மற்றபடி அனுமந்தனாக நடித்த சிறுவனையும் பாராட்ட வேண்டும்.. பாடல் காட்சிகளில்கூட லிப்ஸ் மூவ்மெண்ட் மாறாமல் கச்சிதமாக பாடியிருக்கிறார். ஓகே.. இவனை கடத்த வரும் கணவன்-மனைவி தம்பதியரில் அந்த மனைவிக்கு ஒரு பிரமாதமான எதிர்காலம் இருக்கும்போல தெரிகிறது. நல்ல நடிப்பு.. சில காட்சிகளில் வந்தாலும் நன்றாகவே நடித்திருக்கிறார்.
கார் சேஸிங் காட்சிகளை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளும் அப்படியே.
குமரேசனும், அனுமந்தனு பாடும் பாடல் காட்சியில் நிறைய தன்னம்பிக்கை அளிக்கும் வரிகள், யதார்த்தத்தைச் சொல்லும் வரிகள் என்று ரசிக்கும்படி எழுதியிருக்கிறார்கள். “துடுப்பில்லாத படகு எப்படி கரையைச் சேரும்..” என்று குமரேசன் பாட, “பாதிக் கடல் தாண்டிய பிறகு எதற்கு இனி தயக்கம்..?” என்று ஹனுமந்தன் பதிலடி கொடுக்கிறான். “வதவதன்னு பெற்றுப் போட்ட பெற்றோர்களால்தானே நீ அனாதை ஆனாய்…” என்று குமரேசன் பாட, “பாவம் விஞ்ஞான வளர்ச்சியை அறியாதவர்களைக் குறை சொல்லி என்ன பயன்..?” என்று ஹனுமந்தன் கேட்க… இசையின் ஒலியைக் குறைத்து பாடல் வரிகளை கேட்க வைத்த இசையமைப்பாளர்  மான்ஷெர்சிங்கிற்கு நமது வாழ்த்துகள்.
மலேசியாவில் முதன்முறையாக மூன்று கோடிகளுக்கு மேல் வசூலை வாரிக் குவித்த படமாம். சிறப்பான இயக்கத்தினால் ஒரு முறை பார்க்கலாம் என்று சொல்ல வைத்திருக்கிறார் மலேசிய ஹீரோ கம் இயக்குநர் குமரேசன்..
பாராட்டுக்களும், வாழ்த்துகளும் இயக்குநருக்கு..! 

தமிழ்ச்செல்வனும் 50 KM கலைச்செல்வியும் - சினிமா விமர்சனம்

24-09-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதுவுமொரு வழக்கமான ரவுடிகளின் வாழ்க்கைக் கதைதான்..!
ராணிப்பேட்டைதான் கதையின் களம். தமிழ்ச்செல்வன் என்ற படத்தின் ஹீரோ ஒரு வாடகை கொலையாளி. காசி என்னும் பெரிய தாதாவிடம் வேலை செய்கிறார். அவர் கை காட்டினால் இவர் செய்து முடிப்பார். கொடுக்கின்ற கூலியை வாங்கி பிழைப்பை ஓட்டுகிறார்.
அதே ராணிப்பேட்டையைச் சேர்ந்த கலைச்செல்வி ஒரு நர்ஸ். காஞ்சிபுரத்தில் ஒரு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிகிறார். இவரது தோழி செல்போன் கடையில் ரீசார்ஜ் செய்ய போகும்போது செல்போனை மறந்து அங்கேயே வைத்துவிட்டு போகிறாள். அதே கடைக்கு அந்த நேரத்தில் வருகிறார்கள் ஹீரோவும் அவனது நண்பர்களும். செல் ரீசார்ஜ் செய்துவிட்டு போகும்போது அந்த செல்போனையும் லவட்டிக் கொண்டு போகிறான் ஹீரோவின் ஒரு அல்லக்கை.
போன் காணாமல் போய் பதறுகிறாள் தோழி. இந்த நேரத்தில் தோழிக்கு போன் செய்யும் கலைச்செல்வி மறுமுனையில் தமிழ்ச்செல்வனுடன் பேசுகிறாள். அந்த போன் தனது தோழியுடையது என்றும் அவளிடம் தயவு செய்து ஒப்படைத்துவிடும்படியும் சொல்கிறாள். அவளது அன்பான குரலுக்கு கட்டப்பட்டு மறுநாள் அந்தத் தோழியின் வீடு தேடி சென்று செல்போனை திருப்பிக் கொடுக்கிறார் ஹீரோ. அப்போது ஹீரோயினுக்கு தேங்க்ஸ் சொல்ல தோழி அவசரப்பட.. தன்னுடைய போனை கொடுத்து பேசச் சொல்கிறான் ஹீரோ. தோழியும் பேசிவிட.. இப்போது ஹீரோயினின் செல்போன் எண், ஹீரோவின் போனில் பதிவாகியிருக்கிறது.
ஹீரோவிடம் மறுபடியும் போன் செய்து பேசுகிறாள் ஹீரோயின். அதே தோழி ஒரு காதல் பிரச்சினையில் சிக்கியிருப்தாகவும் எப்படியாவது அவளது காதலை சேர்த்து வைக்கும்படியும் கேட்கிறாள். அவளது விருப்பத்திற்காக அந்தத் தோழியையும், அவளது காதலனையும் பைக் சேஸிங்.. கார் ரேஸிங்குடனான காட்சிகளுக்கு பிறகு சுடுகாட்டில் தாலியை கட்ட வைத்து தம்பதிகளாக்குகிறான் ஹீரோ.
இப்போது ஹீரோயினுக்கு ஹீரோ மீது மகத்தான காதல் பிறந்துவிட்டது. இதுவரையில் அவர்கள் இருவரும் நேருக்கு நேர் பார்க்காமல் இருக்கிறார்கள். தன்னுடைய பிறந்த நாளில் அவனிடத்தில் தன்னுடைய காதலைச் சொல்ல்லாம் என்று காதலி காத்திருக்கிறாள்.
இந்த நேரத்தில்தான் காசி அடுத்த அஸைன்மெண்ட்டை ஹீரோவிடம் சொல்கிறான். காஞ்சிபுரம் சென்று ஒரு பெண்ணை கொலை செய்ய வேண்டும் என்கிறான். ஹீரோ தனது காதல் விஷயத்தைச் சொல்லி தயங்க.. “பரவாயில்லை. இதுதான் கடைசி.. கைல லம்ப்பா பெரிய தொகை கிடைக்கும். அதை வைச்சு வாழ்க்கைல செட்டிலாயிரலாம்..” என்று ஏத்திவிட.. ஹீரோவும் தான் கொலை செய்ய வேண்டிய பெண்ணைத் தேடி காஞ்சிபுரம் செல்கிறார்.
அந்தப் பெண் காஞ்சிபுரத்தில் இருந்து திடீரென்று திருச்சி சென்றுவிட்டதாக செய்தி வர அங்கேயும் செல்கிறார் ஹீரோ. இந்த நேரத்தில் காசிக்கு ஹீரோ கொலை செய்யப் போகும் பெண் அவனது காதலிதான் என்று தெரிய வர அதிர்ச்சியாகிறான். உடனேயே கொலைக்கு ஆர்டர் கொடுத்தவரிடம் சென்று வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு இந்த அஸைண்மெண்ட்டில் இருந்து விலகிக் கொள்கிறான்.
மேலும் ஹீரோவை தேடி காசியும் திருச்சிக்கு பயணமாக.. அங்கே ஹீரோ ஹீரோயினை தேடிக் கொண்டிருக்க.. இறுதியில் ஹீரோ, ஹீரோயினை கண்டுபிடித்தாரா..?  அவளை கொலை செய்தானா? அவள்தான் தன்னுடைய காதலி என்பதை ஹீரோ அறிந்தானா? ஹீரோயினை கொலை செய்ய காரணம் என்ன…? என்பதையெல்லாம் கொஞ்சம் விறுவிறுப்பாகவே எடுத்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
ஹீரோ தமிழ்ச்செல்வனாக ராஜேஷ் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். படம் முழுக்க ஒரே ஆக்சன்தான். சிரிப்புக்கும் அதேதான்.. கோபத்திற்கும் அதேதான்.. ரவுடி என்பதற்கான பாடி லாங்குவேஜ்கூட இவரிடத்தில் இல்லை. பின்ன எப்படி ரவுடியாக இவரை ஒத்துக் கொள்வது.. நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான் என்கிற கதையாக படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார். ஒருவேளை இது அவரது சொந்தப் படமோ..?
ஹீரோயின் கலை அனாமிகா. புதுமுகம்தான்.. அமைதியான, கொஞ்சம் அழகான, கேமிராவுக்கு பொருத்தமான முகம்.. முதல் பாதியில் வசனங்களை கடித்துத் துப்பி கஷ்டப்பட்டு உச்சரித்திருக்கிறார். ஏனென்றுதான் தெரியவில்லை.. பாவம் டப்பிங் பேசியவர்.. எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாரோ..? கிளைமாக்ஸ் காட்சியில் அசத்திவிட்டார்.. அந்த கதறல், படம் முடிந்து வெளியேறும்போதும் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.. அப்படியொரு நடிப்பு..  பாராட்டுக்கள்..!
காசியாக நடித்திருக்கும் ராம்ஸ் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் கூடிய வில்லனாக நடித்திருக்கிறார். கலைச்செல்வியால் பாதிக்கப்படும் அந்த மருத்துவமனை எபிசோடை தமிழ்ப் படத்தில் வைப்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும். இதற்காகவே இயக்குநர் பாண்டியனுக்கு தனி ஷொட்டு.. மருத்துவமனையின் உரிமையாளராக வரும் அசோக் பாண்டியன் எப்படி இதில் நடிக்க ஒத்துக் கொண்டாரோ தெரியவில்லை. ஆனாலும் அழுத்தமான நடிப்புதான்..!
விறுவிறுப்பான கதைதான்.. ஆனால்  சிறிய நடிகர்கள்.. நடிக்கத் தெரியாத ஹீரோ.. லோ பட்ஜெட் என்பதால் ஒரே லொகேஷனில் பல காட்சிகளின் ஷாட்டுகளை எடுத்திருக்கிறார்கள். ஒரே மாதிரியான காட்சியமைப்புகளால் போரடிக்கிறது.. திரைக்கதையில் முற்பாதியில் வேகம் இல்லை.. பிற்பாதியில் வேகத்தைக் கூட்டினாலும் அழுத்தமான இயக்கம் இல்லாமல் வண்டி தடுமாறுகிறது. நடித்த மற்ற கேரக்டர்கள் பேசும் வசனங்களே பிசிறு தட்டுகின்றன.. ஒளிப்பதிவு சுமார்.. இசையமைப்பு அதைவிட சுமார்.. பாடல் காட்சிகளை எடுக்கிறேன் என்று எந்தவித ஈர்ப்புமில்லாமல் எடுத்திருக்கிறார் இயக்குநர்.
ஒரேயொரு மாபெரும் லாஜிக் குறையைச் சொன்னாலே இயக்குநரின் அலட்சியம் நமக்குத் தெரிந்துவிடும். கலைச்செல்வியின் புகைப்படத்தை ஹீரோவிடம் தருகிறார் காசி. அதுவொரு பத்திரிகையில் இருந்து கத்தரித்த புகைப்படம். அதில் வேறெந்த விவரமும் இல்லை. மொட்டையாக வெறுமனே போட்டோவை மட்டும் போடும் பத்திரிகைகள் எங்கே இருக்கின்றன..? அதில் ஏதாவது எழுதியிருக்க வேண்டாமா..? இதைக் கூடவா உதவி இயக்குநர்கள் கவனிக்காமல் இருந்தார்கள்..?
ஹீரோவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதுதான் திரைக்கதையில் இயக்குநருக்கு மிகப் பெரிய உதவியைச் செய்திருக்கிறது..
“ஹீரோயின் கடைசியாக தனது காதலனுக்கு தன்னுடைய புகைப்படத்தை அனுப்பி கொள்கிறேன் என்று கெஞ்சிவிட்டு அதை செய்துவிட்டு அப்பிராணியாக பரலோகம் போய்ச் சேர்ந்த பின்பு தனது செல்போனை எடுத்து ஆன் செய்து அந்தப் புகைப்படத்தை  அதிர்ச்சியாகி அழுகும் ஹீரோ” என இந்த ஒரு காட்சியை வைத்தே மிகப் பெரிய லெவலுக்கு படத்தைக் கொண்டு போயிருக்கலாம்.
சின்ன பட்ஜெட்.. சின்ன நடிகர்கள்.. ஒரு அளவுக்கு மட்டுமே திறமையான இயக்குநர்.. இவர்களை வைத்து இப்படித்தான் எடுக்க முடியும். தன்னால் முடிந்ததை எடுத்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர் பி.பாண்டியன்.
தயாரிப்பாளர்தான் பாவம்..!

ஆள் - சினிமா விமர்சனம்

22-09-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இப்போதைய காலத்திற்கேற்ற கதைதான்.. 2008-ம் ஆண்டு ராஜீவ் கண்டல்வால் நடிப்பில் ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் வெளிவந்த ஹிந்தி படம் ‘ஆமிர்’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘ஆள்’ திரைப்படம்.


படத்தின் ஹீரோவான அமீர் சென்னைக்காரர். அப்பாவை இழந்தவர். அம்மா, தங்கை, தம்பி சென்னையில் இருக்கிறார்கள். இவர் மட்டும் சிக்கிமில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். நல்ல சம்பளம் என்பதால் அங்கு சென்றிருக்கிறார். இன்னும் ஒரு வருடம் பணியாற்றி கொஞ்சம் காசு சேர்த்துவிட்டு ஊர்ப்பக்கம் வந்துவிடலாம் என்ற ஐடியாவில் இருக்கிறார். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது அவரது காதலி மீனாட்சிதான்..
ஒரு நாள் கல்லூரியில் ரிஸ்வான் என்றொரு முஸ்லீம் மாணவனை சக மாணவர்கள் தாக்குகிறார்கள். அவர்களைத் தடுத்து ரிஸ்வானை காப்பாற்றுகிறார் அமீர். தான் முஸ்லீம் என்பதாலேயே தன்னை அடிக்கடி கிண்டல் செய்கிறார்கள் என்றும், அடிக்கிறார்கள் என்றும் குறைபட்டுக் கொள்கிறார் ரிஸ்வான்.
அமீர் அவருக்கு ஆறுதல் சொல்லி அவரை தன்னுடனேயே வந்து தங்கிக் கொள்ளும்படி கேட்கிறார். ரிஸ்வானும் அவருடைய அறைக்கே வந்து தங்கிவிடுகிறார். திடீரென்று அவரது காதலி மீனாட்சி அமீருக்கு போன் செய்து தனது தந்தைக்கு தங்களது காதல் விவகாரம் தெரிந்துவிட்டது எனவும், ஆகையால் உடனடியாக கிளம்பி சென்னைக்கு வரும்படியும் சொல்கிறார்.
திருமண விஷயம் என்பதால் உடனேயே கிளம்பி சென்னைக்கு வருகிறார் அமீர். சென்னை விமான நிலையத்தில் அவர் எதிர்பாராத நிலையில் அவரது சொந்த செல்போன் சார்ஜ் இல்லாமல் இருக்க.. எங்கிருந்தோ டூவீலரில் வரும் ஒரு ஹெல்மெட் முகம் ஒரு செல்போனை அமீரின் கையில் தூக்கியெறிந்து “போன் பேசு” என்கிறது..
அமீர் குழப்பத்துடன் போனில் பேசத் துவங்க.. சட்டென வந்து நிற்கும் அம்பாசிடருக்கு அவரது உடமைகள் மாற்றப்படுகின்றன. வண்டி ஓடத் துவங்கியதால் வேறு வழியில்லாமல் அந்த செல்போனில் பேச வேண்டியிருக்கிறது அமீருக்கு.. முதலில் யார், என்ன என்று புரியாமல் முழிக்கும் அமீருக்கு போகப் போக அது தீவிரவாதத்துக்கு துணை போகும் செயல் என்று புரிய.. அவர்களிடமிருந்து அவர் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!
லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்குமளவுக்கு படத்தில் மிகப் பெரிய லாஜிக் ஓட்டை.. அம்மா, அப்பா, தம்பி, தங்கை குடும்ப பாசத்தை வைத்து இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஓட்டுவது..? ஒரு நிமிடம் அப்படியே போலீஸ் ஸ்டேஷனுக்குள் போயிருந்தாலே வேலை முடிந்துவிடும்.. சிக்கிம்வரைக்கும் போய் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருப்பவருக்கு, இப்படியொரு இக்கட்டான நிலைமையைச் சமாளிக்கவா தெரியாது..?
திரைக்கதை ஆசிரியர் தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஹீரோவை இழுத்திருக்கிறார். இதனால் பாதி படத்திலேயே நம்பகத் தன்மை போய் ஹீரோ மீது எரிச்சல்தான் வருகிறது.. எதற்கு இத்தனை அல்லல்..? அவர்கள் கண்ணில் படாமல் போலீஸுக்கு போயிருக்கலாமே என்றுகூட தோன்றுகிறது..! எல்லாம் கதை செய்த மாயம்..!
அமீராக விதார்த். தனியொரு ஆளாக இந்தப் படத்தைத் தன் தோள் மீது சுமந்திருக்கிறார். இதுவரையிலும் ‘மைனா’வை தவிர மற்ற படங்களிலெல்லாம் கஷ்டப்படாமல் வசனம் பேசியே நடித்திருக்கும் விதார்த் இதில் ‘மைனா’வையும் தாண்டி கடுமையாக உழைத்திருக்கிறார். பணம் அடங்கிய பெட்டியை சிலர் பறித்துக் கொண்டு ஓடும்போது துரத்தும் ஓட்டமும்.. லாரி டயருக்குள் சிக்கிக் கொண்டு அவர் கதறும் கதறலும் சில நொடிகள் அந்த கேரக்டரின் மீதான அனுதாபத்தை நமக்குள் ஏற்படுத்தியதென்னவோ உண்மைதான்..!
கிளைமாக்ஸில் நிறைவாகவே நடித்திருக்கிறார் விதார்த். இப்படியொரு கிளைமாக்ஸில் நடிக்கவும் ஒரு ஹீரோவுக்கு தைரியம் வேண்டும். இதற்காகவே விதார்த்துக்கு நமது பாராட்டுக்கள்..!
ஹீரோயினுக்கு பெரிய அளவுக்கான ஸ்கோப் இல்லை. டூயட்டில் ஆடியிருக்கிறார். சில துக்கடா காட்சிகளில் வந்து போகிறார். அவ்வளவுதான்.. வில்லனாக தயாரிப்பாளர் விடியல் ராஜூவே நடித்திருக்கிறார். அடிக்கடி ஒரே போஸில்.. ஒரே மாதிரியான மாடுலேஷனில் அவர் பேசுவது எரிச்சலைத்தான் தருகிறது. ஆனாலும் வசனங்கள் ஈட்டியாய் பாய்கிறது..!
இந்த நாட்டில் முஸ்லீமை இந்தியனாக பார்க்கவிடாமல் செய்வது எது என்பதற்கான காரணத்தை இந்தப் படத்தில் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். நிச்சயமாக இதில் வரும் வில்லன் மாதிரியான தீவிரவாத நபர்களால்தான் முஸ்லீம் மக்களுக்கே பிரச்சினை..! ‘ஜிகாத்’.. ‘புனிதப்போர்’ என்பதற்கான விளக்கத்தை அவர்கள் சொல்லும்போது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் யோசித்தால் மடத்தனமாக இருக்கிறது..!
“பாகிஸ்தானுக்கு போன் செய்த ஒரே காரணதுக்காக உன்னை போலீஸ் துரத்துதுன்னா நம்ம நிலைமையே நீயே யோசித்து பார்…” என்கிறது டயலாக். இந்த சிச்சுவேஷனை உருவாக்கியதே அந்த வில்லன்தான் என்பதை மட்டும் மறைக்கிறார். ஆக, குற்றங்கள் உருவாக்கப்பட்ட பின்பு.. அது நியாயப்படுத்தப்படுவதுதான் ‘ஜிகாத்’ எனப்படும் ‘புனிதப்போரின்’ முதல் படியாகத் தெரிகிறது..
இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் ரணமானது.. இதனாலேயே மலேசியா மற்றும் அரபு நாடுகளில் இந்தப் படம் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் ஒருபோதும் கொலைகளை ஆதரிக்கவில்லை என்று அமீர் சொன்னாலும், ‘இஸ்லாத்தை பரப்புவதற்காக அது ஆதரிக்கிறது’ என்று வில்லன் சொல்வதே உலகம் முழுவதிலும் இருக்கும் தீவிரவாதத்தின் காரணத்தை புரிய வைக்கிறது..!
கேமிராமேன் உதயகுமாருக்கு நமது பாராட்டுக்கள். நிறைய உழைத்திருக்கிறார். இயக்குநர், ஹீரோ, ஒளிப்பதிவாளர் மூவருமே படம் முழுக்க ஓடியிருக்கிறார்கள். ஜோகன் என்பவர் இசையமைத்திருக்கிறாராம். டைட்டிலில் பார்த்தோம். இயக்குநர் அரவிந்த் கிருஷ்ணா ஒரு திரில்லர் படத்தை கொடுக்க முனைந்திருக்கிறார். முதல் பாதி கொஞ்சம் சலிப்பாகவும், இரண்டாம் பாதியில் மட்டுமே விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்கள். இதனால் பாதி வெற்றிதான் கிடைத்திருக்கிறது.. அடுத்த படைப்புகளில் முழு வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

அரண்மனை - சினிமா விமர்சனம்

20-09-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
அக்மார்க் சுந்தர் சி. படம்தான்.. பெரிய அளவுக்கு மனதைத் தொடும் கதையையோ, திரையுலகத்தை புரட்டிப் போடும் படைப்புகளையே திரையில் காட்ட வேண்டும் என்றில்லாமல், தியேட்டருக்கு வரும் ரசிகர்களை அவர்களது கவலை மறந்து சிரிக்க வைத்து அனுப்ப வேண்டும் என்பதில் மட்டும் தீவிரமாக இருப்பவர் இயக்குநர் சுந்தர் சி.
இதுவரையிலான சுந்தர் சி.யின் படங்கள் அனைத்துமே இப்படித்தான். ‘அன்பே சிவம்’ தவிர. அது கமல்ஹாசனின் படம் என்பதால் இதில் சேர்க்க வேண்டாம். முன்பே பேசப்பட்ட கதை.. எழுதப்பட்ட கதை.. சொல்லப்பட்ட கதை என்றாலும் அதனை புதுவிதமாக இன்றைய ரசிகர்களும் பார்ப்பதுபோல தனது இயக்கத் திறமையால் வெற்றியாக்கிவிடுவார். இதுதான் சுந்தர் சி. இந்தப் படமும் அவரைப் பொறுத்தளவில் வெற்றி படம்தான்..!

‘ஆயிரம் ஜென்மங்கள்’ டைப் கதை இது.. பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் தங்களது அரண்மனை போன்ற பூர்வீக வீட்டை விற்பனை செய்வதற்காக அந்தக் குடும்பத்து வாரிசுகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த அரண்மனைக்கு வருகிறார்கள். வந்த இடத்தில் ஒரு பெண் பேய் அந்த வீட்டில் இருப்பது தெரிய வருகிறது.. அந்த பேயினால் அந்த வீட்டுடன் தொடர்புடைய 3 பேர் இறந்துபோகிறார்கள்.
அந்தக் குடும்பத்தின் ஆண் வாரிசுகளில் ஒருவரான வினய்யின் மனைவி ஆண்ட்ரியாவின் உடம்பில் புகுந்து கொள்ளும் ஆவி… அந்த உடலிலேயே நிரந்தரமாக தங்கிவிட முயற்சிக்க.. இதனைத் தெரிந்து கொண்ட ஆண்ட்ரியாவின் அண்ணன் சுந்தர் சி, அந்தப் பேயை எப்படி விரட்டுகிறார் என்பதுதான் சுருக்கப்பட்ட கதை..!
நிறைய நட்சத்திரப் பட்டாளங்கள்.. வரிசையாக வந்து கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் இத்தனை பேரையும் கட்டி மேய்த்து.. ஒவ்வொருவருக்கும் சரியான அளவுக்கு வாய்ப்புகள் கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார் என்றால் அது சுந்தர் சி-யின் சிறப்பான இயக்கத்தினால்தான்..!
கவர்ச்சிக்கு ராய் லட்சுமி.. பாந்தமாக ஹன்ஸிகா மோத்வானி, பயமுறுத்த ஆண்ட்ரியா என்று மூன்று ஹீரோயின்களுக்கும் சம அளவில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதிக ஸ்கோர் செய்திருப்பது ஆண்ட்ரியாதான்.. அவரை பேயாக கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆனால் அதைத்தான் திரையில் வெற்றிகரமாக செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர்.
ராய் லட்சுமி உடற்பயிற்சி செய்யும் ஒரு காட்சியே அவரை படத்தில் கொண்டு வந்ததற்கான காரணத்தைச் சொல்லிவிட்டது.. இதேபோல் ஆண்ட்ரியா படுக்கையில் ஒன் சைடு போஸீல் படுத்தபடியே வினய்யை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காட்சியில் ராய் லட்சுமியைவிடவும் ஒருபடி மேலே போய்விட்டார். கமர்ஷியல் பட இயக்குநர்களுக்கு இந்தக் காட்சிகளில் ஒரு பாடமே எடுத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.
சந்தானம் அண்ட் கோ-வின் அட்டகாசம் படம் முழுக்க நிரவி தொய்வு ஏற்படாமல் கலகலப்பை கூட்டியிருக்கிறது. சந்தானம் இன்னமும் கேரக்டர்களை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை போலும்.. என்னதான் கருத்து சுதந்திரம் என்றாலும் “சாப்பிட என்ன இருக்கு..?” என்ற சுந்தர் சி-யின் கேள்விக்கு “குஷ்பு இட்லி இருக்கு.. சாப்பிடுறீங்களா..?” என்று சந்தானம் சொல்வதெல்லாம், உங்களுக்கே ஓவரா தெரியலியா சுந்தர் ஸார்..? இதை வைச்சே இனிமே எல்லாரும் சகட்டுமேனிக்கு கிண்டல் செய்யப் போறாங்க..!
ராய் லட்சுமியின் படுக்கையறையில் சந்தானமும், சுந்தர் சி-யும் செய்யும் லூட்டிகளெல்லாம் அக்மார்க் அவருக்கே உரித்தானவை. ஏற்கெனவே அவருடைய படங்களிலேயே பல முறை பார்த்ததுதான். ஹீரோயின்கள்தான் மாறியிருந்தார்கள். இப்போது ராய் லட்சுமி என்றாலும், இது நிச்சயம் ‘உவ்வே’ ரகம்தான்..!
இந்த கலகலப்பு போதாதென்று கோவை சரளாவும், மனோபாலாவும் அடிக்கும் கூத்துகள்.. ஒரு சம்பவத்தில் தலையில் அடிபட்டு மண்டை குழம்பி போய் 25 வருஷத்துக்கு முந்திய காலத்திற்கு போய்விடும் மனோபாலா, தனது மனைவியை தனது காதலியென்றும், தான் இன்னமும் அந்த வீட்டு வேலைக்காரன் என்றும் நினைத்து கொடுக்கும் அளப்பறையில் வயிறு வலிக்கிறது.. இதற்கு கோவை சரளா கொடுக்கும் ரியாக்சன்கள்தான் அசத்தல்.. நிச்சயம் கோவை சரளாவுக்கு மாற்று ஆள் இப்போதைக்கு தமிழ்ச் சினிமாவில் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்..!
ஹன்ஸிகாவின் கதை கச்சிதமாக மிகப் பொருத்தமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஹன்ஸிகாவின் அறிமுகக் காட்சியே எதிர்பாராதது.. விட்டுவிட்டு சொல்லப்பட்டிருந்தாலும் அதில் இருக்கும் உண்மைத்தன்மையினால் ஹன்ஸிகா என்னும் பேய் இருப்பதாக நம்மை நம்ப வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் சுந்தர் சி-யின் படங்களிலேயே இதுவரையில் இல்லாத அளவுக்கு இந்தப் படத்தில் ஹன்ஸிகாவின் டயலாக் டெலிவரியும், டப்பிங் வாய்ஸும் ஒத்துப் போகவில்லை. பல இடங்களில் டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் அழுத்தமாகப் பேசுகிறார். ஹன்ஸிகாவோ மிக சாதாரணமாக உதட்டை அசைக்கிறார்.. எங்கிட்டோ மிஸ்ஸாயிருச்சு போல..!
சித்ரா லட்சுமணன் மற்றும் கோவை சரளா, மனோபாலாவை முதலிலேயே பிளாஷ்பேக்கில் பிளாக் அண்ட் ஒயிட்டில் காட்டும் காட்சி ரசனையானது.. 25 வருடங்களில் எல்லாம் மறந்து ‘மாமா-மச்சான்’ என்று கொஞ்சுவதும்.. பின்பு மழை கழன்ற நிலையில் கோவை சரளாவை காதலிப்பதாகச் சொல்ல சித்ரா லட்சுமணன் அதை எதிர்த்து அடிக்கப் பாய்வதும் அந்த நேரத்தில் சூழலை மறந்து சிரிக்க வைக்கிறது.. “வேற ஏதாவது யோசிங்கப்பா..” என்று சித்ரா லட்சுமணன் சொல்ல.. “இப்படிச் சொன்னா நீங்க யோசிக்க வேணாம்ல்ல..” என்று திருப்பியடிப்பதுதான் இந்தப் படத்திலேயே சந்தானத்தின் டீஸண்ட்டான டயலாக்.
‘காதல்’ தண்டபாணி, சரவணன், இயக்குநர் சந்தானபாரதி, மேஜர் கெளதம், கோட்டா சீனிவாசராவ் என்று பெரிய புள்ளிகளும் வந்து வந்து செல்கிறார்கள். வினய்தான் ஹீரோ மாதிரியென்றாலும் டூயட்டுகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை..
கிராபிக்ஸ், அனிமேஷன் மற்றும் தொழில் நுட்பங்களின் உதவியுடன் பேய் தொடர்பான காட்சிகளும், சண்டை காட்சிகளும் பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளன. தெலுங்கு படங்களில்தான் இது போன்ற ஆக்ரோஷமான காட்சிகளை பார்த்திருக்கிறோம்.. மிதமிஞ்சிய செலவில்தான் படம் முடிந்திருக்கும்போல தெரிகிறது..!
2012-ம் ஆண்டு லட்சுமி மஞ்சு தயாரிப்பில் பாலகிருஷ்ணா, மனோஜ் மஞ்சு நடிப்பில் சேகர் ராஜா என்பவர் இயக்கிய ‘uu kodathara? Ulikki Padathara?’ என்ற தெலுங்கு படம் ரிலீஸானது. இந்தப் படமே தமிழில் ‘கந்தர்வ கோட்டை’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது.
இந்தப் படத்திற்காக ஆந்திராவில் கோதாவரி ஆற்றங்கரையில் போடப்பட்ட பிரமாண்டமான அரண்மனை செட்டில்தான் இந்தப் படமும் எடுக்கப்பட்டிருக்கிறது.. கலை இயக்குநருக்கு நிறைய வேலைகள் கொடுத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவுக்கேற்றபடியே கலை பொருட்களை தேடி தேடி வைத்திருக்கிறார்கள் போலும். கலை இயக்குநருக்கு நமது வாழ்த்துகள்..!
பேய் படம் என்று வந்த பிறகு சமரசம் செய்து கொள்ளாமல் நிசமாகவே பயமறுத்தியிருக்கிறார் இயக்குநர். கோட்டா சீனிவாசராவ் டிரெயினில் இருந்து கீழே இறங்கும் அதே நேரத்தில் அரண்மனை திறக்கப்படுவதில் துவங்கி.. இறுதியில் ஆண்ட்ரியா வானத்தில் பறந்த நிலையில்.. அவரைவிட்டு ஹன்ஸிகா விடைபெற்றுச் செல்ல.. ஆண்ட்ரியா ஆற்றில் விழும் காட்சிவரையிலும் எதிலும் குறை வைக்கவில்லை இயக்குநர். நிறைவான இயக்கம்..! இதில் இருக்கும் சில சஸ்பென்ஸ்களே மேலும் படத்தைக் காப்பாற்றும் என்பதால் அதைச் சொல்லப் போவதில்லை..
ஆஸ்தான ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமாருடன் கூட்டணி அமைத்து காட்சிக்கு காட்சி பிரமாதப்படுத்தியிருக்கிறார். அரண்மனை முழுவதும் சிவப்பு வெளிச்சம்தான்.. ஆண்ட்ரியாவை அடிக்கடி குளோஸப்பில் காட்டி பயமுறுத்தியதில் பளீச்சென்று தெரிகிறது தரமான ஒளிப்பதிவு..! திகில் படங்களுக்கு இதுதானே முதல் தேவை..!
பரத்வாஜின் இசையில் ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா’ என்ற பாடலும் ‘சொன்னது சொன்னது’ பாடலும் முணுமுணுக்க வைக்கிறது..  ‘பலே பாண்டியா’ ஸ்டைல் பாடலின் மேக்கிங் திரும்பத் திரும்ப எத்தனையோ படங்களில் வந்தாலும் ரசிக்கும்படியாக வந்தால் ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்வார்கள்.. முதல் பாடலில் பின்னணியில் ஆடியிருக்கும் கூட்டத்தை பார்த்தால் இதுக்கே காசு காலியாகியிருக்கும்போல தெரிகிறது. அத்தனை ரிச்னெஸ்..! இறுதியில் வரும் அம்மன் பாடல் சிச்சுவேஷனுக்கு ஏற்ற பாடல். பி அண்ட் சி பெண் ரசிகர்களை நிச்சயம் இந்தப் பாடல் உசுப்பிவிடத்தான் போகிறது..!
சந்தானத்தின் பாட்டி கதை.. அந்தச் சின்னக் குழந்தைக்கு மட்டும் தெரியும்படியான பேய் கதை.. 3 பேரின் மரணத்தில் இருக்கும் மர்மம்.. ஆண்ட்ரியாவுக்குள் ஹன்ஸிகா புகுந்த பின்பு நடக்கும் சம்பவங்கள். வீட்டுக்குள் பேயினால் நடக்கும் திகில் சம்பவங்கள்.. இடைவேளைக்கு பின்பு திரைக்கதையின் வேகத்தினால் கூடும் பரபரப்பு.. காமெடி கலாட்டாக்கள் என்று எல்லாமும் சேர்ந்து படத்தை பார்க்க வைத்திருக்கிறது. நிச்சயம் ஓடவும் வைக்கும் என்று நம்புகிறோம்..!
இது சாதா பேய் இல்லை.. அரண்மனை பேய் என்பதால் அதிகமாகவே ரசிகர்கள் எதிர்பார்த்து வரலாம்..! எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்யும்..!

ஆடாம ஜெயிச்சோமடா சினிமா விமர்சனம்

20-09-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தியாவில் ஒரு மதமாகவே பரவியிருக்கும் கிரிக்கெட் மோகத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் குறுக்குவழி வெளியானதில் இருந்தே கிரிக்கெட் மீதான மோகம் நாட்டில் குறைந்து கொண்டே போகிறது. அந்த கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் என்கிற ஒரு விஷயத்தை மையக் கருத்தாக எடுத்துக் கொண்டு தன்னுடைய நடிகர், நடிகைகளை வைத்துக் கொண்டு ஒரு பரபரப்பான இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் ஆடியிருக்கிறார் இயக்குநர் பத்ரி.

கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் விஷயங்கள் மீடியாக்களில் லீக்கானதால் இது தொடர்பாக நிறைய பேரை கைது செய்த சென்னை போலீஸுக்கு இந்தக் கூட்டணியின் தலைவன் ஆல்பர்ட்டை மட்டும் கைது செய்ய முடியவில்லை. ஆல்பர்ட் யாரென்றே தெரியவில்லை. வெறும் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது என்றாலும், இந்த வழக்கில் தீவிர விசாரணை செய்ய வேண்டும் என்று சென்னை கமிஷனரான கே.எஸ்.ரவிக்குமார் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்.
கருணாகரன் ஒரு கால் டாக்சி டிரைவர். ஒரு நாள் இவரது காரில் பயணமாகிறார் தயாளன் என்னும் மேட்ச் பிக்ஸிங் புக்கி. இந்த புக்கி கொஞ்சம் அப்படி இப்படி பார்ட்டியும்கூட.. வண்டியை கொஞ்சம் தள்ளி நிறுத்தியதால் கண்டுபிடிக்க முடியாமல் தனது பை, செல்போனை டிரைவர் திருடிச் சென்றுவிட்டதாக கருணா மீது போலீஸில் புகார் கொடுக்கிறார் தயாளன்.
ஆனால் கால்டாக்சி அலுவலகத்தின் உதவியால் கருணாவை கண்டுபிடிக்கிறார். இருவரும் மறுபடியும் ராசியாக.. தயாளனுக்கு அன்றைய இரவுவரையிலும் டிரைவர் பணியாற்றுகிறார் கருணாகரன். கருணாவுக்கு இருக்கும் பணத்தேவையை அறிந்த தயாளன் தான் அதற்கு உதவி செய்வதாகவும் மறுநாள் ஹோட்டலுக்கு வரும்படியும் சொல்லிவிட்டுப் போகிறார்..
மறுநாள் கருணாகரன் ஹோட்டலுக்கு போக.. அங்கே தயாளன் மர்டர்.. போலீஸ் கருணாவை வளைத்துப் பிடிக்க அதற்குள்ளாக மும்பை போலீஸ் வேடத்தில் நரேன் அண்ட் கோ கருணாவை இழுத்துக் கொண்டு போய் விசாரிக்கிறது.. இப்போதுதான் தயாளனின் உண்மை முகம் கருணாகரனுக்கு தெரிகிறது.
தயாளன் கிரிக்கெட் புக்கி என்பது போலீஸுக்குத் தெரிய.. கேஸ் சிக்கலாகிறது.. இந்த நேரத்தில் நரேன் கும்பலிடமிருந்து தப்பித்த கருணாகரன் அதிர்ஷ்டவசமாக கமிஷனர் ஆபீஸுக்கு வந்து நிற்க.. போலீஸுக்கு அல்வா கிடைப்பது போலாகிறது.. கருணாவை தேடி மும்பை போலீஸ் நரேனும் வந்து அங்கேயே வந்து சேர.. அவர்களையும் தூக்குகிறது போலீஸ்..
இப்போது அந்த ஆல்பர்ட் யார் என்பதை கண்டறிவதுதான் போலீஸின் முதல் வேலையாக இருக்கிறது.. கருணா தயாளனை தான் கொலை செய்யவில்லை என்கிறார். நரேன் தனக்கும் மேட்ச் பிக்ஸிங்கிற்கும் சம்பந்தமில்லை என்கிறார்.. போலீஸ் நம்ப மறுக்கிறது..!  தயாளனை கொலை செய்தது யார்..? அந்த ஆல்பர்ட் யார்..? கடைசியில் எப்படி அது நிரூபணமாகிறது என்பதை மிக சுவாரஸ்யமாக எடுத்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர் பத்ரி.
மேன் ஆஃப் தி மேட்ச் விருது கண்டிப்பாக சிம்ஹாவுக்குத்தான்.. மனுஷன் வருகின்ற காட்சிகளிலெல்லாம் பவுண்டரியும், சிக்ஸருமாக  அடித்துத் தள்ளியிருக்கிறார். புத்திசாலி போலீஸாக தன்னை நினைக்கும் ஒவ்வொரு முறையும், ஏதாவது ஒரு சொதப்பலாகிவிட அதற்கு அவர் காட்டும் ரியாக்சன்கள் அனைத்தும் சிரிக்க வைப்பவை..
தயாளனின் டைரி என்று சொல்லி ஒரு டைரியைக் காட்டி அதில் இருக்கும் காட்சிகளை சீனாக தொகுத்து இடையிடையே ரவிக்குமாரால் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் தொடரும் அந்தக் காட்சிகள் செம பரபரப்பு. இதைவிட அந்த டைரி தன்னுடையது என்று சொல்லி நடிகர் சேஷு வந்து நிற்கும் காட்சியும், இதற்கு சிம்ஹா நெளியும், நெளிப்பும் ஆஹா.. ஓஹோதான்.. உம்மணாமூஞ்சிகளையும் சிரிக்க வைத்திருக்கிறார். இதேபோல் டெல்லி போலீஸ் என்று தெரியாமல் அஸிஸ்டெண்ட் கமிஷனர் மீது கை வைத்துவிட்டு பின்பு ஸாரி ஸார் என்று அசடு வழிய நிற்கும் காட்சியையும் மறக்க முடியாதது.. இவருடைய ஸ்டண்ட் காட்சிகளை நடத்திவிட்டு பின்பு அதன் எதிர் விளைவுகளை ரவிக்குமார் விவரிக்கும்போது.. செம செம..
கருணாகரன் அமைதியாக அவ்வப்போது அடிக்கும் சிங்கிள் டிஜிட் விட்டுகளும் படத்தை சுவாரஸ்யப்படுத்தியிருக்கின்றன. அவருடைய காதல் எபிசோட் மிக இனிமையான, இளமையான ஸ்டோரி.. எந்தவித குழப்பமும் இல்லாமல் வரும் காதலும்.. அது கல்யாணத்தில் முடிந்து மறுபடியும் அனர்த்தம் ஆரம்பிக்கும்விதமும் மிக யதார்த்தம். இடைவேளைக்கு பின்பு வரும் அந்த டூயட்டுதான் படத்தின் வேகத்திற்கு கொஞ்சூண்டு தடையாக இருந்தது. அந்தப் பாடலை நீக்கியிருக்கலாம்..!
சிம்ஹாவுக்கு சரியான ஜோடி கே.எஸ்.ரவிக்குமார். இவர் சும்மாவே நல்லவனா.. கெட்டவனா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வசனங்களை பேசுவார். இதிலும் அப்படியே.. சிம்ஹாவை வாரு வாருவென்று வாருவதில் ரவிக்குமார் காணாமல் போய் உண்மையான ஏதோவொரு போலீஸ் ஆபீஸர்தான் நினைவுக்கு வருகிறார்.. இடம் மாறி உட்கார்ந்துவிட்டு இருவரும் பேசுகின்ற அந்த காட்சியை அவ்வளவு சுவாரஸ்யமாக எடுத்திருக்கிறார் இயக்குநர்.. அனைத்து பாராட்டுக்களும் இயக்குநருக்கே..!
நரேன் இந்தப் படத்தில் நடிக்க முன் வந்திருப்பதை பெரிய விஷயம்தான். ஏனெனில் அவரைவிட ஜூனியரான சிம்ஹா கையால் அடி வாங்குவதுபோல நடிப்பதென்றால் மிகப் பெரிய மனசு வேணும்.. நரேன் ஸாருக்கு அது வாய்த்திருக்கிறது.. வழக்கம்போலவே நடித்திருக்கிறார். சூறாவளி ஹீரோவை வைத்து படமெடுத்து அவர் படும் கஷ்டத்தை வசனத்தாலயே சொல்லி சிரிக்க வைத்திருக்கிறார்.
உம்மணாமூஞ்சி பைனான்ஸியர் ஆளவந்தாராக ராதாரவி. சூறாவளி படத்தின் டிரெயிலர் பார்த்துவிட்டு இவர் காட்டும் எக்ஸ்பிரஸன்கள் அனைத்தும் தியேட்டர் ஆடியன்ஸுடையது. முக பாவனையிலேயே நடிப்பைக் காட்டி அந்தக் காட்சியை ரசிக்க வைத்திருக்கிறார் இளையவேள்.
தயாளனாக பாலாஜி.. தனது நடிப்பு கேரியரில் மிக முக்கியமான படமாக இதனை அவர் சொல்லலாம். இவர்தான் படத்தின் முதுகெலும்பு.. இவரை வைத்துதான் படத்தின் கதையை ஓடுகிறது.. last supper மாதிரி அந்த கடைசி சிரிப்பு கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.. சேட்டின் மனைவியிடமிருந்து ஊக்கை வாங்கி ‘அந்த’ இடத்தில் சொருகிவிட்டு அவர் கிளம்பும்போதே அவரது கேரக்டர் ஸ்கெட்ச் தெளிவாகிறது..! வெல்டன் பாலாஜி ஸார்..!
விஜயலட்சுமி சாதாரண ஹீரோயின்தான்.. ஆனால் கிளைமாக்ஸில் இவரால்தான் கருணாகரன் மட்டுமல்ல படமே தப்பிக்கிறது.. பாடல் காட்சிகளில் வழக்கமான ஹீரோயின்போல இருக்கிறார். அப்படியிருந்தும் இவருக்கு படங்கள் கிடைக்காதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
படத்தில் மிக முக்கியமான ஒரு சமூக விஷயத்தை அக்கறையுடன் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பத்ரி. விஜயலட்சுமி தனது காதலர் கருணாகரனிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். அது வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியான ஒரு பாத்ரூம். அந்தக் காட்சியை படமாக்கியவிதத்திலும், விஜயலட்சுமியின் மிக யதார்த்தமான நடிப்பிலும் அந்தக் காட்சியின் உண்மைத்தனத்தை உணர முடிந்த்து.. அந்த ஸ்டோர் ரூம் போன்ற வீடுகளில் வசித்த கொடூரத்தை அனுபவித்தவர்கள் நிச்சயம் இந்தக் காட்சியை ரசிப்பார்கள். கோடிக்கணக்கணக்கான இந்தியப் பெண்களின் மனதில் ஒளிந்திருக்கும் ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் பதிவு செய்திருப்பதற்காக இயக்குநருக்கு ஒரு அன்பான ஷொட்டு..!
ஷீன் ரோல்டன் பின்னணி இசையை பல இடங்களில் கேட்காமல் வைத்து காட்சிகளை  ரசிக்க வைத்திருக்கிறார். இதுக்காகவே அவருக்கு ஒரு ‘ஓ’ போடணும்..! பாடல்கள் பரவாயில்லை ரகம்.. அதை யாரு கேட்டா என்கிற நிலைமைதான் படத்துல.. அடுத்தது என்ன.. அடுத்தது என்ன..? என்கிற ஒரு திரில்லர் மனநிலைக்கு சிம்ஹாவும், கருணாவும் கொண்டு வந்துவிட.. இதையெல்லாம் யார் கேட்டா..?
வசனங்கள் படத்தின் இன்னொரு பலம். கிரிக்கெட் பற்றி நன்கு தெரிந்தவரை எழுத வைத்தால்தான் சரியாக இருக்கும் என்றெண்ணி நடிகர் மிர்ச்சி சிவாவை எழுத வைத்திருக்கிறார் இயக்குநர் பத்ரி. சிவாவும் கிரிக்கெட் ஊழல் பற்றி தயாளன் மூலமாக ஒரு சின்ன காட்சி மூலம் விளக்குவது சாதாரண ரசிகனுக்குக்கூட நச் என்று புரிந்திருக்கும்..! சில இடங்களில் வசனங்கள் எல்லை மீறிச் சென்றிருக்கின்றன என்பதையும் கூறத்தான் வேண்டும்.. தவிர்த்திருக்கலாம்..!
சீரியஸ் படங்களை இயக்குவது சுலபம்.. ஆனால் காமெடிதான் மகா கஷ்டம்.. காமெடி நடிகர்களையே வைத்து எடுத்தாலும் மிகச் சரியான இயக்கமும், எடிட்டிங்கும் சேர்ந்தால்தான் அதில் காமெடியே உருவாகும். எடிட்டர் கே.ஜே.வெங்கட்ரமணனின் படத்தொகுப்பு வேலைக்கு மிகப் பெரிய சல்யூட்.
கிளைமாக்ஸில் தயாளனை கொலை செய்தது யார் என்பதுதான் மிகப் பெரிய சஸ்பென்ஸ். அதனை படத்தை பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.. அவசியம் பார்க்க வேண்டிய படமும்கூட.. இது போன்ற படங்களை பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக சினிமா பார்க்கும் ஆர்வம் தொடர்ந்து கூடும் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. அந்த வரிசையில் இயக்குநர் பத்ரிக்கு நிச்சயமாக நன்றி சொல்ல வேண்டும்..!
வாழ்க வளர்க..!
அவசியம் பாருங்கள் மக்களே..!

பர்மா - சினிமா விமர்சனம்

14-09-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சின்ன கதை. அதனால் 98 நிமிடங்களில் படத்தை முடித்திருக்கிறார்கள். இதுவே மிகப் பெரிய பின்னடைவாகவும் இருக்கிறது..!

கார் வாங்க கடன் கொடுக்கும் தொழிலைச் செய்து வருகிறார் கோத்ரா சேட்டுவான அதுல் குல்கர்னி. ஒழுங்காக தவணை செலுத்தாதவர்களின் கார்களை பின் தொடர்ந்து சென்று வேறொரு சாவியை வைத்து எடுத்து வர ஒரு டீமை வைத்திருக்கிறார். அவர் குணாவாகிய சம்பத். இந்த சம்பத்தும் இதில் நேரடியாக இறங்குவதில்லை. இவரும் தனக்குக் கீழ் இரண்டு பேரை வேலைக்கு வைத்திருக்கிறார். ஒருவர் பரமானந்தம் என்கிற பர்மா. இன்னொருவர் பூமர்.
அப்போதுவரையிலும் அதுல் குல்கர்னிக்கும் ஹீரோ பர்மாவுக்கும் நேரடி தொடர்பில்லை.. சம்பத் தங்களுக்கு சொற்பத் தொகையாக வெறும் 100 ரூபாயைக் கொடுத்து ஆயிரத்தில் சம்பாதிப்பதை தெரிந்து கொண்ட ஹீரோ பர்மா கோபப்பட்டு,  சம்பத்தை ஒரு திருட்டுக் காரில் போக வைத்து போலீஸில் மாட்ட வைக்கிறார்.
இந்த வழக்கில் சம்பத்திற்கு ஒரு வருட கால சிறை தண்டனை கிடைக்கிறது. இந்த இடைவெளியில் சம்பத்தின் போஸ்ட் பர்மாவுக்குக் கிடைக்கிறது. அதுல் குல்கர்னியிடம் வேலைக்குச் சேர்ந்து தனது தோழன் பூமரின் உதவியுடன்  கச்சிதமாக வேலையை முடித்து கணிசமான தொகையைப் பெற்று ஜாலியாக இருக்கிறார் பர்மா.
இவருக்குள்ளும் ஒரு காதல்.. தற்போதைய தமிழ்ச் சினிமா டிரெண்ட்படி ரவுடிகளைத்தானே ஹீரோயின்கள் காதலிக்கிறார்கள். அப்படித்தான் ரேஷ்மி மேன்ன் ஹீரோ பர்மாவை லவ்வுகிறார். தன்னுடைய பிறந்த நாளன்று தான் பர்மாவை காதலிப்பதாக தன் அப்பாவிடம சொல்கிறார் ரேஷ்மி. பதிலுக்கு அப்பா செவிட்டில் அறைந்து வீட்டைவிட்டு அனுப்புகிறார்.. ரேஷ்மி நேராக பர்மாவிடம் வந்து அவனை அதே செவிட்டில் அறைந்துகாட்டிவிட்டு காதலன் வீட்டிலேயே ஐக்கியமாகிறார்.
இப்போது சம்பத்தும் ஜெயிலில் இருந்து விடுதலையாகிறார். பர்மாவை நேரில் சந்தித்தும் மோதலை வளர்க்காமல் காலம் எதிர்பார்த்து காத்திருக்க முடிவு செய்கிறார். இந்த நேரத்தில் அதுல் குல்கர்னி 28 கார்களின் லிஸ்ட்டுகளை கொடுத்து அவைகளை கடத்தி வரும்படியான ஒரு அஸைன்மெண்ட்டை பர்மாவிடம் தருகிறார்.
குல்கர்னி சொல்லியபடியே அதைச் செய்யும் பர்மாவுக்கு அவன் 28-வது காரை கடத்தும்போது விதி விளையாடுகிறது.. கார் திடீரென்று காணாமல் போக.. குல்கர்னி அதை நம்ப மறுக்கிறார். விலையுயர்ந்த ஆடி கார் என்பதால் பர்மா காரை கடத்தி வைத்துக் கொண்டு ஏமாற்றுவதாகச் சொன்னவர்.. பர்மாவின் காதலியை தன் வசம் வைத்துக் கொண்டு காரை கொடுத்து காதலியை கூட்டிட்டுப் போ என்று டீல் பேசுகிறார்.
பர்மா, காரை மீட்டானா..? அல்லது காதலியை மீட்டானா என்பதுதான் மிச்சம் மீதி கதை..!
இது போன்ற திரில்லர், சேஸிங் கதைகளில் கேரக்டர்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சுகள் பலமாக இருக்க வேண்டும். இல்லாவிடில் கதையோடும், கேரக்டர்களோடும் ஒன்ற முடியாது.. தன்னை ஒரு வருடம் ஜெயிலில் இருக்க வைத்தவனை வெளியில் வந்தவுடன் ஒண்ணுமே செய்யாமல் சம்பத் வேடிக்கை பார்ப்பது போன்ற இந்தத் திரைக்கதையில் வலுவில்லை.. இதில் மட்டுமில்லை.. சம்பத் இந்தப் படத்தில் எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. கடைசியாக போலீஸில் மாட்டுவதுகூட திரும்பவும் ஒரு காமெடியாகத்தான் பதிவாகிறதே தவிர உணர்ச்சிப்பூர்வமாக இல்லை..!
இப்போது இது போன்ற சம்பவங்களை கார் திருட்டு என்றே வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. கார்களுக்கு தவணை கட்டாவிட்டால் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி கோர்ட் மூலமாகத்தான் கார்களை பறிமுதலோ, முடக்கவோ செய்ய வேண்டும் என்று தீர்ப்பாகி பல வருடங்களாகிவிட்டது.. ஆனாலும் இது தெரியாமல் சில பைனான்ஸியர்கள் லோக்கல் போலீஸாரை சரிக்கட்டி இத்தொழிலை செய்து வருகிறார்கள் என்பதும் உண்மைதான். இந்தப் படத்தில் அந்த லோக்கல் போலீஸையும் காட்டவில்லை. அவர்களுக்கும் கோத்ரா சேட்டுவுக்கும் உள்ள தொடர்பும் எதுவுமில்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ஏடிஎம்-களில் பணம் நிரப்பப் போகும் வேனை கொள்ளையடிக்கும் அந்தக் கும்பலின் செயல்பாடுகளில் ஒரு குறையும் இல்லை.. நீட்டான திரைக்கதை அது.. ஆடி கார் கொள்ளைக்கு பின்பு.. அந்தக் காரை மடக்க பர்மா போடும் திட்டமும்.. அதற்குப் பின் அடுத்தடுத்து வரும் டிவிஸ்ட்டுகளும் செமத்தியாக படமாக்கப்பட்டுள்ளன.
காதலனுடனேயே தங்கிவிடும் ஹீரோயினும் இந்தக் கொள்ளைக்கு கூட்டு சேர்கிறார் என்பதெல்லாம் கொஞ்சம் டூ மச்சான கற்பனை.. அந்த அளவுக்குப் படித்த பெண் இது போன்ற செயல்களில் ஈடுபடுவாரா என்பதை கொஞ்சம் யோசித்திருக்கலாம். என்னதான் காதலன் என்றாலும் இதெப்படி..?
இடைவேளைக்கு பின்னான திரைக்கதை விறுவிறுப்பாகவே இருந்தாலும் கேரக்டர்களுக்குள் தொடர்பில்லாமல் ஏதோ வந்தோம்.. போனோம்.. என்று இருப்பதால் ஒரு முழுமையான கிரைம் திரில்லர் படமாக இல்லாமல் போய்விட்டது..!
ஹீரோ மைக்கேல்.. மிகப் பெரிய சுமையை அவர் தோளில் சுமத்திவிட்டது போல தெரிகிறது. இன்னமும் நான்கைந்து படங்களில் நடித்த பின்பு இது போன்ற கேரக்டரில் அவர் வந்திருக்கலாம்.. சம்பத்தாவது கலர், கலர் சட்டைகளிலும், ஆக்சன்களிலும் தன்னை நிரூபிக்கிறார். ஹீரோவுக்குத்தான் இதில் பஞ்சம்..
இதுக்கெதற்கு அதுல் குல்கர்னி..? மும்பையில் இருந்து இவரை வரவழைத்த செலவிற்கு இங்கேயே இருப்பவர்களை போட்டிருக்கலாம்.. ஆனாலும் குல்கர்னியின் நடிப்பு வித்தியாசம் ஸ்கிரீனில் தெளிவாகத் தெரிகிறது.. இல்லையென்று மறுக்கவில்லை.. ஆனால் இது படத்தின் பிரமோஷனுக்கு உதவலையே..?
ஹீரோயின் ரேஷ்மி மேனன்.. ச்சும்மா வருகிறார்.. இருக்கிறார்.. செல்கிறார்.. ஆடியிருக்கிறார். அவ்வளவுதான்.. ஹீரோயினுக்கென்றே இருக்கும் வசனங்கள்கூட இவருக்கில்லை என்பதுதான் சோகமானதுதான்..!
பூமராக நடித்திருக்கும் கார்த்திக் சுபாஷ் அவ்வப்போது மென்மையாக சிரிக்க வைத்திருக்கிறார். படம் முழுவதும் வந்திருக்கும் அவருக்கு மட்டும் இந்தப் படம் மிக முக்கியமான படம்தான்..!
கனி என்ற அந்தக் கொள்ளைக்கூட்ட பெண்மணியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.. கேரளாவில் நாடக மேடைகளில் மிக பிரபலமானவராம்.. அதுதான் ஒவ்வொரு ஷாட்டிலும் நடிப்பு முதிர்ச்சி அவரது முகத்தில் தெரிந்தது..!
படத்தின் மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவு. யுவனின் அட்டகாசமான ஒளிப்பதிவில் முதல் பிரேமில் இருந்து கடைசிவரையிலும் கண்ணை அகட்டவில்லை.. அற்புதம்.. சின்ன சின்ன இடங்களாக இருந்தும் அத்தனையிலும் காட்சிக்கு காட்சிக்கு கலர் மாற்றி பிரமாதப்படுத்தியிருக்கிறார். காட்சிகளை காட்டுவதிலும் அசத்தியிருக்கிறார். முதல் காட்சியில் ஒரு கார் வந்து கொண்டிருப்பதை ஏரியல் வியூவாக காற்றாடிக்கு மேலாக சென்று காட்டுவாரே.. அசத்தல்..
பாடல் காட்சிகளும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய தடை. பாடல்களே இல்லாமல் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கூடுதல் காட்சிகளை அமைத்து.. 120 நிமிடங்களுக்காச்சும் கொண்டு போயிருக்கலாம். நிறைய நேரமிருந்தும் காட்சிகளை அமைக்கும் சூழல்கள் இருந்தும் இயக்குநர் தரணிதரன் ஏன் இதைச் செய்யவில்லை என்பதுதான் புரியவில்லை.
தயாரிப்பாளர் சி.வி.குமார் மிக புத்திசாலி. இப்படியெல்லாம் ஆகும் என்று தெரிந்துதான் அவர் ரிலீஸ் செய்வதில் இருந்து ஜகா வாங்கி தப்பித்துவிட்டார் போலும்..!
இயக்குநர் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் முழுமையான ஒரு ஆங்கில திரில்லர் படம் பார்த்த அனுபவத்தைக் கொடுத்திருக்கும்..!

சிகரம் தொடு - சினிமா விமர்சனம்

14-09-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


நேர்மையான போலீஸ் அதிகாரியான சத்யராஜ் ஒரு கலவரத்தின்போது அரிவாளால் வெட்டப்பட்டு தனது ஒரு காலை இழக்கிறார். இப்போது குற்ற ஆவணக் காப்பகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது ஒரே மகன் விக்ரம் பிரபு. இவரை எப்படியாவது தன்னை போலவே ஒரு சிறந்த போலீஸ் ஆபிஸராக உருவாக்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார் சத்யராஜ்.
ஆனால் மகன் விக்ரம்பிரபுவுக்கோ ஏதாவது ஒரு வங்கியில் தலைவர் பதவிவரையிலும் எட்டிப் பிடித்துவிட வேண்டும் என்று மனம் நிறைய ஆசை. ஆனாலும் அப்பாவை இப்போதைக்கு ஏமாற்ற விரும்பாமல் ஜிம்முக்கெல்லாம் போய் உடம்பை டிரெயின் செய்து வருகிறார்.
இந்த நேரத்தில் பக்கத்து வீட்டு தாத்தா வட நாட்டு சுற்றுலாவுக்கு போகும்போது துணைக்கு விக்ரம் பிரபுவையும் அழைத்துச் செல்கிறார். அப்போது அதே டூரில் வரும் ஹீரோயின் மோனலை பார்த்தவுடன் பிரபுவுக்கு காதல் பிறக்கிறது.. துவக்கத்தில் வரும் ஒரு சின்ன சண்டைக்கு பின்பு, சமாதானக் கொடியையெல்லாம் பறக்கவிட்டு கடைசியில் அது காதலில் போய் முடிகிறது.
மோனலுக்கு போலீஸ் வேலையே பிடிக்காது.. போலீஸ் மாப்பிள்ளையே வேண்டாம் என்று நினைப்பவர். தானும் போலீஸ் வேலைக்கு போகப் போவதில்லை.. ஆக இந்த காதல் கன்பார்ம் என்று நினைத்து விக்ரம் பிரபு மகிழ்ச்சியிருக்கும் இருக்கும் நேரத்தில் போலீஸ் வேலை கன்பார்மாகி டிரெயினிங்கிற்கு அழைப்பு கடிதம் வருகிறது..
மோனலிடம் பொய் சொல்லிவிட்டு டிரெயினிங்கிற்கு செல்கிறார். எப்பாடுபட்டாவது நிறைய சொதப்பல்களில் ஈடுபட்டால் தன்னை வெளியே அனுப்பி விடுவார்கள் என்று நினைக்கிறார் பிரபு. ஆனால் காலேஜ் பிரின்ஸிபால் மோனலின் அப்பா என்பது பின்புதான் பிரபுவுக்கே தெரிகிறது..
“1 மாசம் டைம் தரேன்.. ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல டிரெயினிங் எஸ்.ஐ.யா சேர்ந்து வேலைய பாரு.. ஒரு மாசம் கழிச்சும் வேலை பிடிக்கலைன்னா சொல்லு.. நான் உன்னை விட்டுடறேன். என் பொண்ணையும் உனக்குக் கட்டித் தரேன்…” என்கிறார் மோனலின் அப்பா.
அவர் சொல்படியே ஒட்டேரி காவல் நிலையத்தில் பயிற்சி எஸ்.ஐ.யாக சேர்கிறார் பிரபு. அப்போதுதான் சென்னையின் புறநகர்ப் பகுதிகளின் ஏடிஎம்களில் போலி கார்டுகளை பயன்படுத்தி பணம் கொள்ளையடிப்பது அதிகமாகி வருகிறது.
சரியாக ஒரு மாதம் முடிய இருக்கும் நாளில் அந்தக் கொள்ளையர்கள் சத்யராஜின் கண் பார்வையில் படுகிறார்கள். அவர்களுடன் சண்டையிட்டு பக்கத்தில் இருப்பவர்கள் துணையுடன் அவர்களைப் பிடிக்கிறார் சத்யராஜ்.
இப்போது இவர்களை விசாரிக்க வேண்டிய பொறுப்பும், காலையில் கோர்ட்டுக்கு அழைத்துப் போய் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் பிரபுவுக்கு இருக்க.. இன்னொரு பக்கம் வழக்கமான சினிமா ஹீரோயினை போல மோனல் “சினிமா தியேட்டருக்கு வர முடியுமா? முடியாதா?” என்று வெறுப்பேற்றுகிறார்.
பிரபு காதலியைத் தேடி சினிமாவுக்குச் செல்ல.. இங்கே கிடைத்த சந்தர்ப்பத்தில் குற்றவாளிகள் இருவரும் தப்பித்துச் செல்கிறார்கள். போகும்போது சத்யராஜ் எதேச்சையாக அங்கே வந்துவிட அவரை சுட்டுவிட்டு தப்பிக்கிறார்கள்..
இப்போது பிரபுவின் மன நிலைமை மாறுகிறது.. போலீஸ் வேலையே வேண்டாம் என்பவர் தன்னுடைய தந்தையை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களை பிடிக்க வேண்டி வெறியாகிறார். பிடித்தாரா..? இல்லையா..? எப்படி பிடித்தார் என்பதுதான் இந்த திரில்லர் கதையின் முடிவு.
‘அரிமா நம்பி’யின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றிப் படம் விக்ரம் பிரபுவிற்கு.. நடிப்பும் கொஞ்சம் கூடியிருக்கிறது..! இன்னமும் டயலாக் டெலிவரியை மட்டும் ஷார்ப்பாக்கிக் கொண்டால் போதும்.. பிரபுவிட்ட இடத்தை இந்த இளைய பிரபு தொடரலாம்..!
வெகு நாட்களுக்கு பிறகு சத்யராஜுக்கு ஒரு சிறப்பான வேடம்.. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பேசும்போதே தனது கேரக்டர் ஸ்கெட்ச்சை வெளிப்படுத்தும் விதமாக பொறுப்பாக பேசும்விதமும், தனது மகன் மீது அவர் வைத்திருக்கும் அந்த பாசத்தையும், நம்பிக்கையையும் காட்டும்விதமும் அழகாக பதிவாகியிருக்கிறது..!
மோனல் கஜ்ஜார்.. ஒரு பக்கம் பார்த்தால் பிடிக்காததுபோலத்தான் தோன்றுகிறது.. ‘டக்கு டக்கு’ பாடலின்போது மட்டும் பிடித்திருக்கிறது. அதிகமான, அழுத்தமான காட்சிகள் இல்லை என்பதால் நிறைய ஸ்கோர் செய்யவில்லை.
இவர்களையும் தாண்டி பாராட்டுக்குரியவர் மோனலின் தந்தையாக போலீஸ் டிரெயினிங் காலேஜ் பிரின்ஸிபாலாக நடித்திருப்பவர். அழுத்தம், திருத்தமாக வசனங்களை உச்சரித்து அதற்கேற்ற மரியாதையையும் கொடுத்து அவர் வருகின்ற காட்சிகளை அழுத்தமாக கவனிக்க வைத்திருக்கிறார்.. நன்று..!
ஏடிஎம் கொள்ளை எப்படி நடக்கிறது என்பதை இன்றைக்கு தமிழகமே இந்த ஒரு திரைப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு டீடெயிலாக இறங்கி அடித்திருக்கிறார் இயக்குநர் கெளரவ். “ஆறு மாதங்களாக ரிசர்ச் செய்துதான் இதன் கதையையும், திரைக்கதையையும் தயார் செய்தேன்…” என்றார் இயக்குநர். பாராட்டுக்கள்.
ஏடிஎம் கார்டை பயன்படுத்துபவர்கள் ஒரு முறையாவது பாஸ்வேர்டை மாத்திரலாமா என்று யோசிக்கும் அளவுக்கு காட்சிகளை தந்திருக்கிறார். திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல இதுவும் வேறு வேறு வடிவத்தில் வரத்தான் செய்யும்.
கிளைமாக்ஸில் வேகம் கூடி எப்படித்தான் பிடிக்கப் போகிறார்கள் என்கிற ஒரு ஆர்வத்தை உருவாக்கியதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் கெளரவ். அந்த திரில்லிங் அனுபவம் நிசமாகவே தியேட்டரில் கிடைத்தது.
இத்தனை பெரிய கேஸ் என்று தெரிந்தும் காதலி அழைக்கிறாள் என்று சொல்லி சினிமா தியேட்டருக்கு போகும்போதே பிரபு மீது ஒரு பார்வையாளர்களுக்கு ஒருவித கடுப்பு வருகிறது.. அதை சரி செய்யும்விதமாக சத்யராஜ் மருத்துவமனையில் இருக்கும்போது “இனி நீ என்ன சொன்னாலும் நான் அதை ஒத்துக்குறேன்…” என்று சொல்லி சமாளித்திருக்கிறார் இயக்குநர்.
ஆனால் நிறைய இடங்களில் லாஜிக் இடிக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.. இத்தனை மாதங்களாக  தேடி வரும் கொள்ளையர்களை அவ்வளவு அலட்சியமாக லாக்கப்பில் சும்மாவே அமர வைத்துவிடுவார்களா..? போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டமே இந்நேரம் அந்த ஸ்டேஷனை மொய்த்திருக்காதா..? போலீஸ் கமிஷனர் வெறுமனே போனில் பேசி பாராட்டுகிறார் என்பதோடு கதையை முடித்துவிட்டார் இயக்குநர்.
போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே துப்பாக்கிச் சூடு எனில் போலீஸ் உயரதிகாரிகளும் சும்மா விட்டுவிடுவார்களா..? தனியே பயிற்சி எஸ்.ஐ.யை மட்டுமே இந்த கேஸை ஹேண்டில் செய்ய அனுமதிப்பார்களா..? ஆள் யாரென்று தெரிந்தவுடன் அவர்களே போயிருக்க மாட்டார்கள்..?
ஒட்டு மொத்த போலீஸ் டீமையும் களத்தில் குதிக்க வைத்து ஒரு நிமிடத்தில் பிடிக்க வேண்டியதை ஹீரோயிஸ கதை என்பதால் ஹீரோவுக்காக காத்திருந்து அவருடைய இன்ஸ்ட்ரக்சன்படியே நடந்து பிடிப்பதுபோல ஆக்கியிருக்கிறார்கள் என்று தியேட்டரில் இருந்து சிறிய முணுமுணுப்பு எழத்தான் செய்தது.. வழக்கம்போல இதை இயக்குநருக்கு பாஸ் செய்துவிடுவோம்.. இதில் கதைதான் ஹீரோ.. ஹீரோ இல்லை என்பதை இயக்குநர் ஏன் கடைசியில் மறந்து போனார்..?
விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு கச்சிதம்.. இதைவிட பிரவினின் எடிட்டிங் மகா கச்சிதம். படத்தின் பிற்பாதியில் எடிட்டரின் உதவியால் படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்கள்.. இமானின்  இசையில் ‘டக்கு டக்கு’, ‘சீனு சீனு’ பாடல்கள் ஓகே ரகம். பாடல்களைவிடவும் படமாக்கியவிதமும் அழகாகவும், அருமையாகவும் இருக்கிறது. ‘அன்புள்ள அப்பா’ பாடல் எதிர்பாராத ஒன்று..! அந்த இடத்தில் பாடல் தேவையா ஸார்..?
தனக்கென்று வந்த பின்புதான் ஒவ்வொருத்தனும் பொது நலத்தை பற்றி சந்திக்கிறான் என்பதை இந்த பிரபு கேரக்டர் மூலமாக இயக்குநர் மறைமுகமாக நமக்கு உணர்த்தியிருக்கிறார். நன்றி..!
சில விதிமீறல்கள் இருப்பினும் தியேட்டருக்குள் இருக்கும்போது அது பற்றியே நினைக்க வைக்காமல், திரையை மட்டுமே பார்க்க வைத்து அனுப்பிய இயக்குநரின் இயக்கத் திறமைக்கு நமது பாராட்டுக்கள்..!
‘சிகரம் தொடு’ ஒரு சிறந்த முயற்சி.