பாகுபலி-2 - சினிமா விமர்சனம்

30-04-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அர்கா மீடியா வொர்க்ஸ் சார்பில் சோபு எர்லகட்டா, பிரசாத் தேவிநேனி ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது இந்தப் படம்.
பிரபாஸ், ராணா இருவரும் ஹீரோக்களாக நடிக்க அனுஷ்கா, தமன்னா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும் சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோகிணி மற்றும் பல கலைஞர்களும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கே.கே.செந்தில்குமார், படத் தொகுப்பு – கோடகிரி வெங்கடேஸ்வர ராவ், இசை – மரகதமணி, வி.எஃப்.எக்ஸ் – ஆர்.சி.கமலக்கண்ணன், ஒலிக்கலவை – பி.எம்.சதீஷ், சண்டை பயிற்சி – கிங் சாலமன், லீ விட்டாக்கர், கேச்சா கம்பாக்டீ, நடன இயக்கம் – பிரேம் ரக்சித், ஷங்கர், உடைகள் – ரமா ராஜமெளலி, பிரசாந்தி பிடிபைர்நேனி, வசனம் – கார்க்கி, கதை – வி.விஜேயந்திர பிரசாத், தயாரிப்பு – ஷோபு எர்லகட்டா, பிரசாத் தேவிநேனி, விநியோகஸ்தர் – எஸ்.என்.ராஜராஜன், திரைக்கதை, இயக்கம் – எஸ்.எஸ்.ராஜமெளலி.

முதல் பாகத்தில் தேவசேனாவை மீட்டுச் சென்ற மகன் பிரபாஸை கொல்ல வந்த ராணாவின் மகனை பிரபாஸ் கொலை செய்ய.. அவனுடன் வந்திருந்த கட்டப்பா பிரபாஸை பார்த்தவுடன் பாகுபலி என்று அதிர்ந்து, அவரது பிறந்த கதையைச் சொல்கிறார். முதல் பாகத்தின் விமர்சனம் இங்கேhttp://www.tamilcinetalk.com/bahubali-movie-reviews/ இருக்கிறது. இதன் பிற்பகுதியில்தான் இந்த இரண்டாம் பாகத்தின் கதையும் துவங்குகிறது.
ராஜாமாதா சிவகாமி தேவி வாக்களித்தபடி காக்கதீயர்களின் அரசனான காலகேயனை வீழ்த்தியதற்கு பரிசாக அமரேந்திர பாகுபலியை மகிழ்மதியின் மன்னனாக ஆக்குவதாக அறிவித்திருக்கிறாள். இதற்கான பட்டாபிஷேக நாள் மிக நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் ராணா என்னும் பல்வாள் தேவனின் தந்தையான நாசர் அமரேந்திர பாகுபலி அரசனாவது குறித்து தனது அதிருப்தியை தெரிவிக்கிறார். சிவகாமி இருக்கும்வரையிலும் ராணா அரசனாக முடியாது என்பதால் சிவகாமியை கொலை செய்துவிடலாம் என்றுகூட கோபப்படுகிறார். ஆனால் ராணா அதை மறுக்கிறார். “பொறுத்திருந்துதான் காரியத்தைச் சாதிக்க வேண்டும்…” என்கிறார்.
இந்த நேரத்தில் பாகுபலியை அழைக்கும் சிவகாமி, அவரை நாடு முழுவதும் திக்விஜயம் செய்து வரும்படி பணிக்கிறாள். துணைக்குக் கட்டப்பாவையும் அழைத்துச் செல்ல ஆணையிடுகிறாள்.
இருவரும் இப்படி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும்போது எல்லை தாண்டிய நிலையில் குந்தள தேசத்தின் ஒரு பகுதிக்குள் நுழைகிறார்கள். அங்கே திருடர்கள் தொல்லை அதிகமாகியிருக்கிறது. திருடர்களை பிடிக்க தனது படை வீர்ர்களுடன் வருகிறார் குந்தள தேசத்தின் யுவராணியும், பட்டத்து இளவரசியுமான தேவசேனா என்னும் அனுஷ்கா.
அனுஷ்காவுக்கு துணையாக பாகுபலியும், சத்யராஜும் சேர்ந்து சண்டையிட்டு அந்தத் திருடர்களை பிடிக்கின்றனர். சிலரை கொல்கின்றனர். ஆனால் இது எதுவுமே அனுஷ்காவுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார் பாகுபலி. ஆண் வீரர்களையும் மிஞ்சும்வகையில் சண்டையிடும் அனுஷ்காவின் வாள் வீச்சு வித்தையிலும், அழகில் மயங்கும் பாகுபலி, அனுஷ்காவுடன் செல்ல விருப்பப்படுகிறார்.
அரசனின் ஆணைப்படியே கட்டப்பாவும் துணைக்கு செல்ல.. இருவரும் குந்தள தேசத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள். அங்கே அனுஷ்காவின் அரண்மனையில் தாங்கள் யார் என்பதை சொல்லாமலேயே ஏதாவது வேலை கொடுத்து காப்பாற்றும்படி வேண்டிக் கொள்கிறார்கள்.
இதே சமயம் இவர்கள் இருவரும் குந்தள தேசத்தில் இருப்பதையறியும் ராணாவின் ஒற்றன் ராணாவிடம் விஷயத்தைச் சொல்கிறான். கூடவே அனுஷ்காவின் அழகை பற்றிச் சொல்லி அவரது கோட்டோவியத்தையும் காட்டுகிறான். அனுஷ்காவின் ஓவியத்தைப் பார்த்த உடனேயே சொக்கிப் போகும் ராணா தான் மணந்தால் அனுஷ்காவைத்தான் என்பதை தனது தாயிடம் சொல்கிறார்.
பாகுபலியும், கட்டப்பாவும் குந்தள தேசத்தில் இருப்பதையும் பாகுபலி அனுஷ்காவை காதலித்து வருவதையும் அறியாத ராஜமாதா சிவகாமி, அனுஷ்காவை தனது மகன் ராணாவுக்கு பெண் கேட்டு பொன்னும், பொருளும் கொடுத்து செய்தி அனுப்புகிறாள்.
இதனை பார்த்து கோபப்படும் அனுஷ்கா பதில் மடலில் கோபமாகவும், அவமானகரமாகவும் எழுதி வந்தவர்களை திருப்பியனுப்புகிறாள். இதனால் வெகுண்டெழும் சிவகாமி, அனுஷ்காவை சிறை பிடித்து வருமாறு பாகுபலிக்கு செய்தியனுப்பச் சொல்கிறாள்.
இந்த சம்பவங்களுக்கிடையில் குந்தள தேசத்தின் பெரும் தலைவலியாய் இருக்கும் திருடர்கள் கூட்டம் அரண்மனையை முற்றுகையிட பாகுபலியும், கட்டப்பாவும் கூட்டணி வைத்து சண்டையிட்டு அனைவரையும் தீர்த்துக்கட்டிவிட்டு குந்தள தேசத்து அரச குடும்பத்தினரை காப்பாற்றுகிறார்கள்.
இப்போது மகிழ்மதியின் அரசன் பாகுபலிதான் பிரபாஸ் என்பதையறியும் அனுஷ்கா நிஜமாகவே அவரை காதலிக்கிறார். அந்த நேரத்தில்தான் சிவகாமியின் செய்தி புறா மூலமாக அவருக்குத் தெரிய வருகிறது. தனது தாயின் பேச்சை மறுக்காத பாகுபலி அனுஷ்காவை மகிழ்நதி தேசத்திற்கு தன்னுடன் வரும்படி அழைக்கிறார். அனுஷ்கா தயங்குகிறார்.
ஆனால் அனுஷ்காவின் கவுரவத்திற்கும், பெருமைக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாமல் தான் காப்பதாகச் சொல்கிறார் பாகுபலி. இதனை நம்பும் அனுஷ்கா அவருடன் மகிழ்மதிக்கு வருகிறாள்.
தன்னை தேடி வரும் மருமகளை ஏற்கும் சிவகாமி தனது மகன் ராணாவுக்குத்தான் அவளை பேசியிருப்பதாகச் சொல்ல பாகுபலி, அனுஷ்கா இருவருமே அதிர்ச்சியாகிறார்கள். அனுஷ்கா இதனை ஏற்க மறுத்து தான் பாகுபலியைத்தான் விரும்பியதாகச் சொல்ல.. சிவகாமியும், ராணாவும் ஏமாற்றமடைகிறார்கள்.
இந்தக் குழப்பத்தினால் மகிழ்மதியின் அரியணையா, அல்லது தேவசேனாவா என்று இரண்டில் ஒன்றை தேர்வு செய்யும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார் பாகுபலி. அவர் தேவசேனாவை மணப்பதில் உறுதியாக இருக்க.. சிவகாமி சட்டென்று தனது முடிவையும் மாற்றிக் கொண்டு ராணாவை மகிழ்மதியின் அரசனாக்குவதாக அறிவிக்கிறார். சேனாதிபதியாக பாகுபலியை நியமிக்கிறார்.
பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. ராணா அரசனாகவும், பாகுபலி சேனாதிபதியாகவும் பதவியேற்கிறார்கள். ஆனால் பெருவாரியான மக்களின் ஆதரவு பாகுபலிக்கே இருக்கிறது. இதனை நேரிலேயே பார்த்து சிவகாமியும், ராணாவும், நாசரும் அதிர்ச்சியடைகிறார்கள்.
தொடர்ந்து பாகுபலி-அனுஷ்கா திருமணமும் நடந்தேறுகிறது. அனுஷ்கா கர்ப்பமுற.. அவளது சீமந்த விழாவுக்கு வந்த அரசர் ராணா, அன்றைய தினமே.. அப்பொழுதே பாகுபலியை சேனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதாகச் சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியாகிறார் அனுஷ்கா. இதற்காக சிவகாமியிடம் நியாயம் கேட்கிறாள். ஆனால் சிவகாமி பதில் எதுவும் சொல்லாமல் போகிறார்.
இதையடுத்து கோவிலுக்கு வரும் அனுஷ்காவிடம் புதிய சேனாதிபதி அத்துமீறி நடந்து கொள்ள முயல அவனது கைகளை கத்தியால் வெட்டுகிறார் அனுஷ்கா. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு அவைக்கு இழுத்து வரப்படுகிறார். அங்கே ஓடி வரும் பாகுபலி தனது மனைவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்த சேனாதிபதியை தனது வாளால் வெட்டி படுகொலை செய்கிறார்.
இதனால் அரச விதிப்படி பாகுபலியையும், அனுஷ்காவையும் அரண்மனையைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடுகிறார் சிவகாமி. இதனை ஏற்றுக் கொண்டு பாகுபலியும், அனுஷ்காவும் அரண்மனையைவிட்டு வெளியேறி ஊருக்குள் ஒதுக்கப்புறமாக மக்களோடு மக்களாக வாழ்கிறார்கள்.
இருந்தும் பாகுபலிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு குறையாமல் இருப்பதை பார்க்கும் நாசர், ராணாவுக்கு தூபம் மேல் தூபம் போட.. எப்படியாவது பாகுபலியை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள்.
இதற்கு அடிமை வம்சத்தின் தலைவனான கட்டப்பாவை பயன்படுத்துகிறார்கள். ஒரு நாடகத்தை நடத்தி சிவகாமியின் வாயாலேயே பாகுபலியை கொலை செய்யும்படி கட்டப்பாவை தூண்டுகிறார்கள்.  இதன் பின் விளைவால் பாகுபலியை கட்டப்பா கொலை செய்கிறார்.
இதன் பின்னர் என்ன நடந்தது..? அமரேந்திர பாகுபலியின் மரணத்திற்காக மகன் மகேந்திர பாகுபலி பழி வாங்கினாரா..? அது எப்படி நடந்தது என்பதுதான் இரண்டாம் பாதியின் கதை..!
அமரேந்திர பாகுபலியாகவும், மகேந்திர பாகுபலியாகவும் நடித்திருக்கும் பிரபாஸ் தனது கட்டழகிலும், கம்பீரத்திலும், சண்டை பயிற்சியிலும் திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்திருக்கிறார். ஒரு அரசனுக்குரிய தோற்றமும், செயலும், வேகமும், விவேகமும், ஈர்ப்பும் அவரிடத்தில் இருப்பதே இந்தப் படத்தின் முதல் வெற்றி எனலாம்.
தாய்க்கு அடங்கிய பிள்ளையாக ஒரு பார்வை, பேச்சு.. தேவசேனாவின் காதலில் விழுந்த பின்பு அதே தாய் கற்றுக் கொடுத்த வாய்மை, நேர்மை, சத்ரியனின் கடமை ஆகியவைகளை நினைத்துப் பார்த்து பேசும் பாங்கு.. தனது மனைவியைத் தொட்டுவிட்ட சேனாதிபதியை வாள் வீசி கொல்லும் கோபம்.. மகேந்திர பாகுபலியாக தனது தாயின் சபதத்தை முடித்துக் கொடுக்க அவர் நடித்திருக்கும் சண்டை காட்சிகள் என்று எதை சொல்வது.. எதை விடுவது என்றே தெரியவில்லை.
பிரபாஸ் என்ற மாபெரும் கலைஞனின் நடிப்பை இந்திய திரையுலக ரசிகர்கள் இன்றைக்கு பார்த்தார்கள். கொண்டாடுகிறார்கள் என்பதுதான் உண்மை.  தெலுங்கு மட்டுமில்லாமல் ‘பாகுபலி’ படம் எந்தெந்த மொழிகளிலெல்லாம் வெளியானதோ அனைத்து மொழி ரசிகர்களாலும் பிரபாஸ் இனிமேல் கொண்டாடப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.
முதல் பாகத்தில் அழுக்கு உடையில், முதிய தோற்றத்தில் பார்க்கவே விருப்பமில்லாத தோரணையில் இருந்த தேவசேனா என்னும் அனுஷ்கா இந்தப் பாகத்தில் வட்டிக்கும், முதுலுக்குமாக சேர்த்து வைத்து நடித்திருக்கிறார்.
இத்தனை அழகா இந்த யுவராணி என்று ராணாவும், பாகுபலியும் மட்டும் கேட்கவில்லை.. ரசிகர்களும்தான் கேட்டிருக்கிறார்கள். அறிமுக்க் காட்சியிலேயே வாள் வீச்சு வீராங்கனையாக தோன்றி, சண்டையிட்டு தான் வேற மாதிரியான ஹீரோயின் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் அனுஷ்கா.
பாடல் காட்சிகளில் இயற்கையை அள்ளிக் கொடுத்த கேமிராவின் துணையோடு இவரது அழகை பிரதானமாக்கி ஸ்கிரீனை அழகும், அற்புதமுமான ஓவியத்தை போலாக்கியிருக்கிறார்கள். பெண் கேட்டு செய்தியனுப்பிய விதம் கண்டு கோபப்படும் அனுஷ்கா.. தனது கணவரை சேனாதிபதி பதவியிலிருந்து நீக்கியதாக ராணா சொன்னவுடன் வெகுண்டெழும் அனுஷ்கா.. தனது மகனிடம் பல்வாழ் தேவனை தான் இதுவரையில் பொறுக்கி வைத்திருக்கும் விறகடுப்பில் எரிக்க வேண்டும் என்ற தனது சபத்த்தை நிறைவேற்றச் சொல்வது என்று தனது பங்களிப்பை இந்த பாகத்தில் குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
ராஜாமாதா சிவகாமியான ரம்யா கிருஷ்ணனுக்கு முதல் பாகத்தைவிடவும் இதில் அதிகமான காட்சிகள். நிரம்ப அழகுற நடித்திருக்கிறார். தனது மகன்களுக்கிடையேயான போட்டியை உணரும் தருணம்.. கணவர் இடித்துரைப்பதை ஏற்க முடியாத கவலை.. கோபத்தில் அரசனை மாற்றியதாகச் சொல்லி “இதுவே சாசனம்” என்று ஆங்காரமாக சொல்லும்விதம்.. எல்லாவற்றிலும் ராஜமாதா சிவகாமியாகவே நம் கண்களுக்குத் தெரிந்திருக்கிறார்.
தமன்னாவுக்கு இந்தப் பாகத்தில் சில காட்சிகள்தான்.. சில சீக்வென்ஸ்களில் மட்டுமே தென்படுகிறார். இறுதியில் அவரே ராணியாகவும் காட்சி தருகிறார். அவ்வளவுதான். முதல் பாகத்தில்தான் அத்தனையையும் காட்டிவிட்டாரே.. பின்பு வேறென்ன இருக்கு…? இதில் காட்டுவதற்கு என்று நினைத்துக் கொள்வோம்..!
நாசரின் பண்பட்ட நடிப்பும் குறிப்பிடத்தக்கது. எகத்தாளம், ஆணவம், அகம்பாவம் மூன்றையும கலந்து கட்டி அவர் ராணாவிடம் பேசும் பேச்சே இதற்கு சாட்சி. “நாய் வருது…” என்று அலட்சியமாக கட்டப்பாவை வரவேற்பதும், “நான் நாய்ல்ல.. அதான் மோப்பம் பிடித்தேன்…” என்று கட்டப்பாவின் அலட்சிய வசனத்தை எதிர்கொள்ளும்விதமும், திட்டம் போட்டு தேவசேனாவின் மாமனை அரண்மணைக்குள் அழைத்து கொலை செய்யும் குரூரத்தையும் பக்கவாக செய்து காண்பித்திருக்கிறார் நாசர்.
கட்டப்பா என்னும் சத்யராஜால்தான் இன்றைக்கு இந்தப் படம் கர்நாடகாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அத்தனை உணர்ச்சிக் குவியல் நடிப்புக்கு மத்தியில் ஒரு பெண் செய்திருக்க வேண்டிய மனதைத் தொடும் ஈர்ப்பையும், கண் கலங்க வைக்கும் நெகிழ்ச்சியையும் கட்டப்பாவே செய்து காண்பித்திருக்கிறார்.
பாகுபலியை தப்பித்துப் போக பல முறை செய்தும் போகாமல் விடுவதால், வேறு வழியில்லாமல் ராஜமாதா உத்தரவால் பாகுபலியை கொலை செய்துவிட்டு அதற்காக கண்ணீர்விட்டு அழும் கட்டப்பாவால்தான், அந்தக் காட்சியே உணர்ச்சிப்பூர்வமானது என்பதில் சந்தேகமில்லை.
இவர்களுக்கு பின்பு படத்தில் நடித்திருக்கும் அனைத்து துணை கதாபாத்திரங்களில் ஒருவர்கூட சோடை போகவில்லை. அத்தனை பேரும் மிக அழுத்தமாக நடித்திருக்கிறார்கள். அல்லது நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். அத்தனை புகழும் இந்தியாவின் இமாலய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலிக்கே..!
இந்த அம்புலிமாமா கதைக்கேற்றவாறு உணர்ச்சிகரமான வசனங்களும் சேர்ந்தே படத்திற்கு ஒரு மிகப் பெரிய பங்களிப்பை செய்திருக்கின்றன.
இன்றைய அரசியல்வியாதிகளுக்கும் பொருந்தக் கூடிய “திக் விஜயத்தினால் அரசர்களுக்கு என்ன நன்மை..?” என்ற கேள்விக்கு ராஜாமாதா சொல்லும் “மக்களின் சுக துக்கங்களை மன்னனும், கடவுளும் கண்டுணர வேண்டும், கண்கூட கண்டால்தான் அவர்கள் குறை தீர்க்க முடியும்..” என்ற வசனம் அது அரசர்களின் கடமை என்பதையும் சேர்த்தே உணர்த்தியிருக்கிறது.
கதைக்குள் ஒரு உள் கதையாக அனுஷ்காவுக்காக காத்திருக்கும் தாய் மாமனுக்குள் பொதிந்திருக்கும் வீரத்தனத்தை பிரபாஸ் வெளிக்கொணரும் திரைக்கதையும் பாராட்டுக்குரியது. அவருக்காகவே சொல்லப்பட்ட வசனமான “ஒரு கோழை வீரனாக… காலம் அவனுக்கு ஒரு முறையாவது வாய்ப்பளிக்கும்..” என்பது நிதர்சனமானது.
“பாகுபலியை கொல்வது அப்படியொன்றும் எளிதல்ல..” என்ற நாசரின் எச்சரிக்கைக்கு ராணா சொல்லும் பதிலே “சூரியன் என்றும் மேற்கில் உதிப்பதில்லை. ஆனால் கிழக்கில் சூரியனை புதைக்கலாம்..” என்பது..  
“ஒரு தீயவனின் சத்தத்தைவிட ஒரு நல்லவனின் மவுனம் நாட்டுக்கு தீமை..” என்பது ராஜாமாதா சிவகாமியை நோக்கி தேவசேனா வீசும் அம்பு..
இப்படி பல வசனங்களாலேயே படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார்கள். வசனகர்த்தாவான மதன் கார்க்கிக்கு இந்தப் படம் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம்.
 ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு திறனை எழுத வார்த்தைகளில்லை. அரண்மனை, ஆறு, அருவி, பள்ளம், மேடு, போர்க்களம், கொத்தளம் என்று அத்தனை பிரம்மாண்டத்தையும் தனது கேமிராவில் முழுங்கிவிட்டு எதையெல்லாம் காட்டினால், எப்படியெல்லாம் காட்டினால் ரசிகர்கள்  பிரமிப்பார்களோ அப்படியெல்லாம் செய்து காட்டியிருக்கிறார் செந்தில்குமார்.
நரகாசுரன் விழாவுக்காக சிவகாமி தீச்சட்டி ஏந்திச் செல்வது, ராணா அரசனாக பதவியேற்கும் விழா, குந்தள தேசத்தின் அரண்மனை, அங்கே நடக்கும் சண்டை காட்சிகள், அனுஷ்காவை அழைத்து வரும் நதி பயணம், அந்த பிரம்மாண்டமான யானை சிலை, இறுதியான போர்க்களக் காட்சிகள், மகிழ்மதி அரசவை காட்சிகள், இறுதியான போர்க்களக் காட்சிகள், ராணாவின் சிலை உடைவது.. மாடுகளின் கொம்பில் தீ பிடித்துள்ள நிலையில் அவைகள் ஓடி வருவது.. திருடர்களை கொல்ல அணையை உடைப்பது.. என்று காட்சிக்கு காட்சி கேமிரா காட்டியிருக்கும் பிரம்மாண்டத்தை எடுத்துச் சொன்னால் நேரம் போதாது..
கலை இயக்குநருக்கு நிச்சயமாக அடுத்த வருட தேசிய விருது கிடைக்கும் என்று உறுதியாய் நம்பலாம். அந்த அளவுக்கு தத்ரூபமாக அரண்மனை, சிலைகள், கட்டிடங்கள் என்று அனைத்தையும் தத்ரூபமாக படைத்திருக்கிறார். ராணாவின் சிலை, விநாயகர் சிலை, தேர், யானைகளின் வடிவமைப்பு, போர்க்கள தளவாடங்கள், போர்த் தந்திர பயிற்சிகள் என்று அத்தனையிலும் கலை இயக்குநரின் பங்களிப்பு பெரியது. பாராட்டுக்கள் ஸார்..
சண்டை பயிற்சியாளர்களான கிங் சாலமன், லீ விட்டகர், கேச்சே கம்பேக்டி என்ற மூவரின் அர்ப்பணிப்பில் சண்டை காட்சிகளில் தெறிக்கும் ரத்தமும், ஆக்ரோஷமும், புதிய தொழில் நுட்பமும் ரசிகர்களை சீட்டு நுனிக்கே வரவழைத்திருக்கிறது. அதிகப்படியான ரத்தம் சிந்தியிருக்கிறது என்றாலும் அந்தக் கால போர்க்களத்தை நேரடியாக இருப்பதுபோல் காட்ட வேண்டுமெனில் இது தவிர்க்க முடியாத செயல்தான்..!
எந்தக் காட்சி கிராபிக்ஸ், எது நிஜம் என்பதே கண்டறிய முடியாதவகையிலேயே கிராபிக்ஸ் வல்லுநர்கள் படத்திற்காக உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. சண்டை காட்சிகளில் அந்த வலுவான ஆயுதங்களின் உதவியால் ராணாவும், பாகுபலியும் மோதிக் கொள்ளும் காட்சிகளில் இருக்கும் வேகம் பிரமிப்பூட்டுகிறது. 
உடை வடிவமைப்பாளர்களான ரமா ராஜமெளலியும், பிரசாந்தியும் இன்னொரு பக்கம் இந்தப் படத்தின் கலர்புல் தோற்றத்திற்குக் காரணமாகியிருக்கிறார்கள். ஆள் பாதி ஆடை பாதி என்பார்களே அது போலவே அனுஷ்காவின் அழகை இன்னமும் பேரழகாக கூட்டியிருக்கிறது அவர் அணிந்திருந்த ஆடை, அணிகலன்கள்.. பாடல் காட்சிகளில் பிரபாஸ்-அனுஷ்கா ஜோடியின் பொருத்தமே உடைகளில்தான் பொதிந்திருக்கிறது.
இத்தனை பேரின் ஆடைகளை கச்சிதமாக வடிவமைத்து, அந்தக் கால எபெக்ட்டை கொண்டு வர தீவிரமாக உழைத்திருக்கும் இரண்டு பெண் கலைஞர்களுக்கும் நமது வாழ்த்துகள்..!
மரகதமணியின் இசையில் பாடல்களைவிடவும் அதை படமாக்கியவிதம்தான் அழகு. தேவசேனா பாகுபலிக்காக பாடும் பாடல் அழகு. பின்னணி இசையும் கதைக்கு பொருத்தமாக அமைந்து, கதையை அழகாக நகர்த்தி செல்ல பலமாக அமைந்திருக்கிறது. கட்டப்பா பாகுபலியை கொலை செய்யும் காட்சியின் பின்னணி இசை வழக்கமான சோக இசையோ அல்லது டிவி இசையோ இல்லாமல் புதுமையான இசையை கொடுத்திருக்கிறார் மரகதமணி.
படத் தொகுப்பாளரான கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவின் பணிச் சுமை எத்தகையதாக இருந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது. கிட்டத்தட்ட மூன்றரை மணி நேர தொகுப்பாக இருந்த படத்தை படத்தின் தன்மை கெடாமலும், கதை, திரைக்கதை சுவாரஸ்யத்துடனும் சுருக்கி தொகுத்தளித்திருக்கிறார்.
படத்தின் பிரதான அம்சமான போர்க்களக் காட்சிகளையும், சண்டை காட்சிகளையும் அதன் ஆவேசம் குறையாமலும், பிரமிப்பு மாறாமலும் இருக்கும்வகையில் தொகுத்துள்ளார். இவரது சிறப்பான சேவைக்கு நமது பாராட்டுக்கள்..!
படத்தை அத்தனை நுணுக்கமாக கவனித்து, கவனித்து படமாக்கியிருக்கிறார் ராஜமெளலி. நாசர், ராணா பேச்சில் இருக்கும் தந்திரம்.. அரசவையில் பாகுபலியை மென்மேலும் பேசவிட்டு சிவகாமிக்கு கோபத்தை வரவழைக்கும்வரையில் நாசரை பேசவிடாமல் தடுக்கும் ராணா, சமயம் கிடைத்து அவரை பேச வைப்பது.. இதனாலேயே அரச பதவி தனக்குக் கிடைக்கும்படியாக ராணா பார்த்துக் கொள்வது.. ராணாவின் பட்டாபிஷேகம் அன்று ‘பாகுபலி’ என்ற பெயர் ஒலித்தவுடன் மக்களிடையே எழும் கரகோஷமும், கூச்சலும், கொண்டாட்டமும், இதைப் பார்த்து ராணாவின் காதோரம் வழியும் குபீர் வியர்வை.. அவருடைய குடை சாயப் போவதை போன்ற அர்த்தத்தில் குடை சாயப் போக.. அதை பாகுபலி தன் கையால் பிடித்து நிறுத்தி வைப்பது.. அரசருக்குரிய அரியணையில் அமர்ந்தவுடன் தன்னுடைய நீண்ட நாள் ஆசை என்கிறவகையில் அந்த சிம்மாசனத்தை கண் விரியும் ஆச்சரியத்துடன் தடவிக் கொடுக்கும் ராணாவின் அந்த சிங்கிள் ஷாட்.. பாகுபலி, அனுஷ்காவை குந்தள தேசத்தில் இருந்து அழைத்து வருகையில் நதிக்கரையோரம் இருக்கும் மிக பிரமாண்டமான யானையின் சிலையில் அரச கொடிகள் உடைபட்டு இரண்டாக உடைவது.. இப்படி பல குறியீடுகளையும் உள்ளடக்கி எதிலும் சோடை போகவில்லை இந்த இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறது இந்தப் படம்.
இந்திய சினிமாவில் இனிமேல் இதுபோல் ஒரு படத்தை எடுக்க முடியுமா என்பது நிச்சயமாக சந்தேகம்தான். அரசர்கள் காலத்து கதை, அதில் பேண்டசி இருக்கிறது.. காதலும் இருக்கிறது.. போர்களும் இருக்கின்றன. ஆனால் இவைகளை இணைக்கும் சுவாரஸ்யமான திரைக்கதையும் இருக்கிறது. உணர்வைத் தூண்டும் வல்லமை படைத்த வசனங்களும் இருக்கின்றன. கண்ணுக்குக் குளிர்ச்சியான வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது. அதிரடியான சண்டை காட்சிகள்.. மெய்சிலிர்க்கவைக்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது.
சிற்சில லாஜிக் எல்லை மீறல்கள், கதாபாத்திரங்களின் குணாதிசய மாற்றங்கள், கால மாற்றத்திற்குள் வராத சில வசனங்கள்.. என்று மிகச் சில குறைகள் இருப்பினும் இதையெல்லாம் தேடிப் பார்த்து, மிகவும் யோசித்துதான் அறிய முடிகிறது. அந்த அளவுக்கு ரசிகனை மெஸ்மரிஸம் செய்திருக்கும் இயக்குநரின் இயக்கத் திறமைக்கு ஒரு ‘ஜே’ போடுவோம்..!
சிறுவர் முதல் பெரியவர்வரையிலும் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒரு சேர திருப்திபடுத்தி வெளியில் அனுப்பும் ஒரு திரைப்படமாக இது வந்திருப்பதில்தான் இயக்குநர் ராஜமெளலி பெரும் வெற்றியடைந்திருக்கிறார்.
சரித்திர கதையென்றாலும் அதிலும் கமர்ஷியலுக்குண்டான அம்சங்களையும் பொருத்தி அனைவரும் ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
ஒரு படத்தின் அனைத்து விஷயங்களையும் இயக்குநரே முடிவு செய்கிறார் என்பதால் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இந்தியாவின் தலை சிறந்த இயக்குநர் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
இந்தப் படம் உலக சினிமா ரசிகர்கள் உட்பட அனைத்து வகையான திரைப்பட ரசிகர்களும் பார்த்து மகிழ வேண்டிய, கற்க வேண்டிய ஒரு திரைப்பாடம் என்பதில் நமக்கு சந்தேகமில்லை..!
பாகுபலி – 2 – பிரம்மாண்டத்தின் உச்சம்..!

இலை - சினிமா விமர்சனம்

22-04-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை லீஃப்  புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் பினிஷ் ராஜ் இயக்கியுள்ளார்.
இதில் ஸ்வாதி நாராயணன் நாயகியாக நடித்துள்ளார். எதிர் நாயகனாக சுஜீத் ஸ்டெபானோஸ் நடித்துள்ளார். கன்னட நடிகர் கிங் மோகன். மலையாள நடிகை ஸ்ரீதேவி, ஷைன் குருக்கள், விஜு பிரகாஷ், கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம்.  காவ்யா ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு – சந்தோஷ் அஞ்சல்,  இசை – விஷ்ணு வி.திவாகரன்,  வசனம் – ஆர்.வேலுமணி, கலை – ஜைபின்  ஜெஸ்மஸ், படத் தொகுப்பு – டிஜோ ஜோசப்,  நிர்வாகத் தயாரிப்பு – ஷோபன் குமார், தயாரிப்பு மேற்பார்வை – உன்னி கிருஷ்ணன். தயாரிப்பு லீஃப் புரொடக்ஷன்ஸ்  இண்டர் நேஷனல். 

நம் நாட்டில் எல்லாப் போட்டிகளிலும் ஆண்கள் சாதாரண ஓட்டமே  ஓடுகிறார்கள். ஆனால் பெண்கள் பல தடைகளைத் தாண்டித்தான் ஒட வேண்டியிருக்கிறது. ஒரு துறை என்றில்லை… பல துறைகளிலும் பெண்கள் பல்வேறு  தடைகளை, இடையூறுகளை, இடர்ப்பாடுகளைத் தாண்டித்தான் மேலே வர வேண்டியிருக்கிறது.
அதேசமயம் சமீப காலங்களில்  பள்ளித் தேர்வுகளில் பெண்களே எப்போதும் அதிக மதிப்பெண்களை பெறுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் அதைச் சாதிக்க அவர்கள் படும்பாடு, சந்திக்கும் வலிகள் யாருக்கும் தெரிவதில்லை.
அப்படி ஒரு பெண் கல்வியில் சாதிக்கத் துடித்து அதற்காக தனக்கு விதிக்கப்பட்ட தடைகளைத் தாண்டி, எவ்வளவு போராட்டங்களைச் சந்தித்து ஜெயிக்கிறாள் என்பதைச் சொல்லும் படம்தான்  இந்த ‘இலை’ திரைப்படம்.
தமிழக – கேரள எல்லையில் இருக்கும் திருநெல்லி என்னும் கிராமம்தான் படத்தின் கதைக் களம். ஊர் முழுவதும் விவசாயம்தான். பெண்கள் அதிகமாக படித்ததில்லை. படிக்க வைக்கப்பட்டதுமில்லை.
ஹீரோயினான ‘இலை’ என்னும் ஸ்வாதி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது அப்பாவான ‘கிங்’ மோகன், தனது மகள் ‘இலை’ படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் ‘இலை’யின் அம்மா இதை எதிர்க்கிறார். சீக்கிரமாக ‘இலை’யை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்.
‘இலை’க்கு பின்பு எட்டு வயதில் ஒரு பையனும், கைக்குழந்தையும் இருப்பதால் வீட்டு வேலைகளைக் கவனிப்பதில் மிகவும் சிரமப்படுகிறார் ‘இலை’யின் தாய். இந்தச் சூழலில் அக்கம் பக்கத்தினர், சொந்த அம்மா, மாமா என்று பலரது எதிர்ப்புகளையும் மீறி படித்து வருகிறார் ‘இலை’.
இந்த நிலையில் ஊர்ப் பண்ணையாரின் மகளும், ‘இலை’யும் ஒரே வகுப்பில்தான் படித்து வருகிறார்கள். பண்ணையாரின் மகளுக்கு படிப்பு ஏறவில்லை. இதனால் ‘இலை’ மீது வன்முத்துடன் இருக்கிறாள் பண்ணையாரின் மகள். தனது மகளின் கோபத்தை அறிந்த பண்ணையார், ‘இலை’யை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிடாமல் தடுக்க ஒரு திட்டம் தீட்டுகிறார்.
இதன்படி ஒரு விடியற்காலை பொழுதில் வயல்காட்டிற்கு தண்ணீர் பாய்ச்ச செல்லும் ‘இலை’யின் அப்பாவை மனநோயாளியான தனது தம்பியை வைத்து கடுமையாகத் தாக்கி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார் பண்ணையார். இதனால் கடைசி பரீட்சையான சமூக அறிவியல் தேர்வுக்கு எழுத செல்ல முடியாத நிலைமை ‘இலை’க்கு ஏற்படுகிறது.
ஒரு பக்கம் பால் கறந்து கடைக்கு கொண்டு போய் கொடுக்க வேண்டும். கைக்குழந்தையை கவனிக்க வேண்டும். தம்பிக்கு சாப்பாடு சமைத்துக் கொடுக்க வேண்டும்.. கோழிகளுக்கு தீவனம் கொடுக்க வேண்டும். அவைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.. இப்படி ஒரு கிராமத்து வீட்டில் என்னென்ன வேலைகள் இருக்குமோ அது அத்தனையையும் இப்போது ‘இலை’ செய்தாக வேண்டிய கட்டாயம்..!
படிப்பா..? வீடா..? என்கிற பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறாள் ‘இலை’. கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் படம்.
‘இலை’யாக நடித்திருக்கும் ஸ்வாதிதான் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார். நிஜத்தில் கல்லூரி படிப்பை முடித்து ஆயுர்வேத மருத்துவராக இருக்கிறார். ஆனால் பத்தாம் வகுப்பு மாணவிக்கான கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கேரளத்தின் அழகு முகத்திலும், நடிப்பு அனைத்து அவயங்களிலும் தென்படுகிறது.
கடைசி பரீட்சை நாளன்று அவர் படும்பாடுதான் மொத்தப் படமே..! அந்த நாளில் அடுத்தடுத்து வரும் சோதனைகளைத் தாண்டிக் கொண்டு அவர் ஓடும் ஓட்டமும், நடிப்பும் ‘பாவம்டா சாமி’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
‘இப்படியொரு பொண்ணுக்கு ஏண்டா இப்படியொரு சோதனை’ என்று கடவுளை நிந்திக்க வைத்திருக்கிறது இடைவேளைக்கு பின்னான காட்சிகள் அனைத்தும்..! அப்படியொரு நடிப்பை காட்டியிருக்கிறார் ஸ்வாதி. குச்சுப்புடி டான்ஸரும்கூட என்பதால் நடிப்பு சொல்லித் தர தேவையில்லை. 
வெற்று காலுடன் வயக்காடு, மேடு, பள்ளம், காடு, பாறை என்று அனைத்து இடங்களையும் ரவுண்ட்டித்தது போல அவர் ஓடும் ஓட்டமும், படும்பாடும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திழுத்திருக்கிறது.
இவருக்கு பின்பு ஸ்கோர் செய்திருப்பவர் இவருடைய அம்மாவாக நடித்திருப்பவர்தான். வீட்டில் தனக்கிருக்கும் வேலைகளுக்காகவே மகளின் படிப்பை பாதியில் நிறுத்த எண்ணும் அவரது நோக்கத்தை இன்னொரு பக்கம் பார்த்தால் சரியென்றுதான் சொல்லத் தோன்றும். பெரிய மகள் பத்தாம் வகுப்பு படிக்க.. கைக்குழந்தையுடன் அவர் படும் அவஸ்தைக்கு ஸ்வாதியின் அப்பாவும் ஒரு காரணம்தானே..? இந்த வகையில் பார்த்தால் படம் இரு தரப்பு வாதங்களையுமே எடுத்துரைக்கிறது.
ஸ்வாதி அன்றைய நாளின் பரபரப்பு அலைச்சல்களுக்கிடையே “ஐயோ.. இத்தனை வேலையா..? இத்தனை நாளா அம்மா எப்படி ஒத்தை ஆளா இதைச் செஞ்சாங்க…?” என்று அவரே தனக்குத்தானே கேட்டுக் கொள்ளும் அந்த ஒரு வசனமும் படத்தில் மிக, மிக முக்கியமானது.
ஸ்வாதியின் தம்பியாக நடித்த பையன், அப்பாவாக நடித்தவர்.. தாய் மாமனாக நடித்த சுஜீத், பழங்காலத்து பண்ணையாரை ஞாபகப்படுத்திய நடிகர்.. இவர்களுடன் நடிப்பில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த மலையாள நடிகையான கனகதாராவும் தனது சிறப்பான நடிப்பைக் காட்டியிருக்கிறார்.
பத்தாம் வகுப்பு படிக்கும் வயதில் இருக்கும் நாயகியான ‘இலை’ என்னும் ஸ்வாதிக்கு அந்த வயதுக்கேற்ற அறிவும், பக்குவம் மட்டுமே இருப்பதால், அவர் செய்ததெல்லாம் சரியே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது..!
ஸ்வாதியின் வீட்டில் நடக்கும் அந்த அமங்கலம் எதிர்பாராதது.. நாம் ஒன்றை எதிர்பார்க்க அங்கே வேறொன்றை திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். ஆனால் நாட்டு குண்டு சின்னப் பெண்ணின் கையில் கிடைப்பதும்.. பட்டப் பகலில் சிம்னி விளக்கு எரிவது என்பதெல்லாம் நம்மை ஏமாற்றும் திரைக்கதை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
மலையும், மலை சார்ந்த பகுதியும்தான் கதைக் களன் என்பதால் ஒளிப்பதிவாளருக்கு வேலை மிக எளிதாகிவிட்டது. ஷாட் பை ஷாட் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகளையே படம் பிடித்திருக்கிறார். பாடல் காட்சிகள் இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் ஒரு பாராட்டுக்கள்..!
பாடல்கள் கேட்கும் ரகம். அதே சமயம் பின்னணி இசையில் கொஞ்சம் அதிகப்படியானதைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.  ஒலியைக் குறைத்திருக்கலாம்.
இடைவேளைக்கு பின்பு கைக்குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு ஸ்வாதி ஊருக்குள் ஓடி, ஓடி வரும் காட்சிகளில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். இந்தக் காட்சிகளில் நிறையவே எடிட் செய்து அதற்குப் பதிலாக கூடுதல் காட்சிகளை கிரியேட் செய்து வைத்திருந்தால் படத்தின் கதைக்கு இன்னமும் கூடுதல் வலு சேர்த்திருக்கும். அந்தக் காட்சிகள் ஓரளவுக்கு மேல் திகட்டிவிட்டன..!
கணவரையும் இழந்துவிட்ட நிலையில் தனது மகளையாவது படிக்க வைத்து கணவரின் விருப்பதை நிறைவேற்ற அந்தத் தாய் எடுக்கும் முடிவுதான் படத்தின் ஹைலைட்.  இதுதான் படம் சொல்லும் நீதி..!
எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய… இன்றைய இந்தியச் சமூகத்திற்கு அத்தியாவசியமான கதையாக இந்தப் படத்தை எடுத்திருப்பதால், சினிமா ரசிகர்கள், விரும்பிகள் அனைவரும் இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்..!

கடம்பன் - சினிமா விமர்சனம்

18-04-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இது இவரது 89-வது தயாரிப்பாகும். நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறது.
படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும் கேத்தரின் தெரஸா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் முருகதாஸ், சூப்பர் சுப்ராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தி, எத்திராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – S.R.சதீஷ் குமார், இசை – யுவன்சங்கர் ராஜா, படத் தொகுப்பு – தேவ், கலை – A.R.மோகன், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், பாடல்கள் – யுகபாரதி, நடனம் – ராஜு சுந்தரம், ஷோபி, இணைத் தயாரிப்பு – B.சுரேஷ், B.ஜீவன், ஜித்தன் ரமேஷ், ஜீவா, தயாரிப்பு  – ஆர்.பி.சௌத்ரி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ராகவா.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் கடம்பவனம் என்னும் மலைக் கிராம்ம்தான் படத்தின் கதைக் களம். அங்கே வாழும் மண்ணின் மைந்தனான ஆர்யா எதற்கும் பயப்படாத ஆனால் மண் மணம் மாறாத, பாசம் கொண்ட மனிதன்.
அதே ஊரில் வசிக்கும் ராஜசிம்மனின் தங்கையான கேத்தரின், ஆர்யாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். முதலில் இதனை ஏற்காக ஆர்யா பின்பு தனக்கும் ஒரு துணை வேண்டுமே என்பதற்காக கேத்தரினின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.
இந்த நேரத்தில் பிரபலமான கார்ப்பரேட் நிறுவனமான ஒரு சிமெண்ட் நிறுவனம், தனது சிமெண்ட் தயாரிப்புக்கான தாதுப் பொருள்கள் இயற்கையாக எங்கே கிடைக்கிறது என்பதை தேடுகிறது. அவர்களது பார்வையில் இந்தக் கடம்ப வனம் கிராமம் சிக்குகிறது.
அங்கேயுள்ள மக்கள் மொத்த பேரையும் மலையில் இருந்து கீழே இறக்கிவிட்டால் அந்த இடத்தில் இருக்கும் இயற்கை வளங்களை அள்ளலாம் என்று திட்டம் தீட்டுகிறார் சிமெண்ட் நிறுவனத்தின் அதிபரான ராணா.
அந்தப் பகுதி வனத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள்.. அரசு அதிகாரிகள் என்று அனைவருமே அந்த கார்ப்பரேட் நிறுவனம் அள்ளி வீசும் காசுக்காக அடிபணிந்து போக.. மலைவாழ் மக்கள் கிராமத்தைவிட்டு வெளியேற மறுக்கிறார்கள். அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். பலிக்கவில்லை. வேறு வழியில்லாமல் சூழ்ச்சியால் மக்களை வெல்ல நினைக்கிறார் தீப்ராஜ் ராணா.
ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தி இருவரையும் சமூக சேவகர்கள் என்ற போர்வையில் கடம்பவனத்திற்கு அனுப்பி வைக்கிறார். அவர்கள் வந்து கிராம மக்களை மூளை சலவை செய்கிறார்கள். மலையடிவார ஊருக்கு மக்களை அழைத்து வந்து அங்கேயிருக்கும் சொகுசு வாழ்க்கையை அவர்களுக்குக் காட்டி “இதேபோன்ற வாழ்க்கையை நீங்கள் ஏன் அனுபவிக்கக் கூடாது…” என்று தூபம் போடுகிறார்கள்.
ஆனால் கடைசி நேரத்தில் முழித்துக் கொள்ளும் ஆர்யா, இது பற்றி தனது மக்களுக்கு எடுத்துரைக்க.. ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தியின் சூழ்ச்சி தோல்வியடைகிறது. இதையடுத்து காவல்துறையை வைத்து அடக்குமுறையை ஏவுகிறார்கள். இதனால் அந்தக் கிராமத்து மக்கள் பெரிதும் பாதிப்படைய.. சிலர் இறந்தும் போகிறார்கள்.
அந்த ஒரே இரவில் அந்த ஊர் மக்கள் துரத்தப்பட்டு.. அவர்களது இருப்பிடங்கள் இடிக்கப்பட்டு, குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டு.. ஊரே துடைத்து எடுக்கப்படுகிறது. மறுநாளே கனிம வளங்களை தோண்டியெடுக்கும் வேலைகள் மும்முரமாக நடைபெறுகிறது.
தாக்குதலினால் மக்களை பிரிந்து அல்லாடும் ஆர்யா.. சில நாட்களுக்கு பிறகு தனது குடும்பத்தையும், மக்களையும் சந்திக்கிறார். திரும்பவும் தனது ஊரான கடம்பவனத்தை எப்பாடுபட்டாவது தான் கைப்பற்றுவேன் என்கிறார். இதனை எப்படி அவர் சாதிக்கிறார் என்பதுதான் படத்தின் பிற்பாதியின் திரைக்கதை.
இதற்கு முன்பு திரைக்கு வந்த காடு சார்ந்த படங்களின் பாதிப்பு, இந்தப் படத்திலும் இருப்பதால் கதை எந்தவிதத்திலும் பார்வையாளனை கவரவில்லை என்பது இந்தப் படத்திற்கு நேர்ந்த சோகம்.
ஆர்யா மிகக் கடினமாக உழைத்திருக்கிறார். தனது முறுக்கேறிய உடல் வாகுக்காக அவர் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார் என்பதை உணர முடிகிறது. படத்திலும் அதனை காட்டியிருக்கிறார். தேனெடுக்க அத்தனை உச்சியில் இருந்து கீழே குதித்து, அபாயகரமான ஷாட்டுகளிலும் நடித்திருக்கிறார்.
சண்டை காட்சிகள் அனைத்துமே ரியலிஸமாக இருப்பதை போலவே படமாக்கியிருப்பதால் ஆர்யாவின் பங்களிப்பு இதில் அதிகம்தான். இத்தனை செய்தும் எல்லாம் விழலுக்கு இழைத்த நீராகிவிட்டதுதான் கொடுமையான விஷயம்.
கேத்தரின் தெரசா இந்தப் படத்தில் தான் எப்படி நடிக்க ஒப்புக் கொண்டோம் என்பதே தெரியாமல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து யோசித்துக் கொண்டிருந்ததாக ஆர்யா பேசியிருந்தார். ஆனால் கேத்தரினுக்கு இதுவொரு நல்ல அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.
படம் முழுக்க செருப்புகூட அணியாமல் அந்தக் காட்டுப் பகுதியில் ஓடியாடி நடித்திருக்கிறார். இவருடைய முதல் அறிமுக ஷாட்டே அழகு. ஒளிப்பதிவாளரின் திறமையினால் கேத்தரினை எத்தனை அழகாக காட்ட முடியுமோ அப்படி காட்டியிருக்கிறார்கள். ஆனால் நேட்டிவிட்டி என்ற ஒரு விஷயம் இருப்பதை மறந்துவிட்டதால், அந்தக் காட்டுவாசி பெண்ணாக அவரை நினைக்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை.
சாதாரணமான தரையில் இருக்கும் மனிதர்கள் பற்றிய படங்களில் இருக்கும் அதே கேரக்டர் ஸ்கெட்ச்சை மூட நாகரிகம் இன்னமும் தொடாத இந்த மக்களிடத்திலும் இருக்கிறது என்பது காட்டியிருப்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆர்யாவை காதலிப்பதாகச் சொல்லி விரட்டும் கேத்தரினின் திரைக்கதை இதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.
முருகதாஸ், ஜானகி குடும்பக் கதை ஏற்கெனவே ‘புலி முருகன்’ என்ற மலையாளப் படத்தில் வந்த கதை. அதில் லால் அனாசயம் செய்திருப்பார். இதிலும் அந்தக் கதையை அப்படியே வைத்திருக்கிறார்கள். சிந்தனை திறன் கோ இன்சிடென்ட்ஸ் போலிருக்கிறது.
மற்றபடி மூப்பனாக நடித்த சூப்பர் சுப்பராயன், கேத்தரினின் அண்ணனாக நடித்த ராஜசிம்மன், அம்மாவாக நடித்த எலிசபெத், ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தி அருண் என்று பலரும் தங்களது கேரக்டர்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ராஜசிம்மனின் கடைசி கட்ட பல்டி எதிர்பாராதது.
இத்தனை மெகா பட்ஜெட் படத்திற்கேற்றபடியான தொழில் நுட்பக் கலைஞர்களும் படத்தில் இணைந்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் அழகான ஒளிப்பதிவுதான் ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கும் ஆறுதலான விஷயம்.
முதல் காட்சியிலேயே ஆர்யா தேனெடுக்க அந்த மலையுச்சியில் இருந்து கீழே குதிக்கும் காட்சியும், அதைத் தொடர்ந்த காட்சிகளுமே படத்தின் பிரம்மாண்டத்தை சொல்லாமல் சொல்லிவிட்டன. அழகான கிராமத்து குடியிருப்புகள்.. நீர் வீழ்ச்சியின் பிரம்மாண்டம், கேத்தரினின் அழகு.. பாடல் காட்சிகளை படமாக்கியவிதம்.. இறுதியான சண்டை காட்சிகளை படமாக்கிய கஷ்டம்.. எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒளிப்பதிவாளர் சதீஷ்குமாருக்கு மிகப் பெரிய ரோஜா பூ மாலையை காணிக்கையாக்க வேண்டியிருக்கிறது. வாழ்த்துகள் ஸார்..
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ‘ஒத்த பார்வையில்’ கேட்கவும், பார்க்கவும் சிறப்பு. ‘உச்சிமலை அழகு’ காடுகளின் அழகையும், கிராம மக்களின் வாழ்க்கையையும் காட்டியது. ‘சாமக் கோடங்கி’ தூங்கி வழிந்து கொண்டிருந்த ரசிகர்களைத் தட்டியெழுப்பி பார்க்க வைத்தது. ‘ஆகாத காலம்’ சோகத்தைப் பிழிந்தெடுத்த்து. ‘இளரத்தம் சூடேற’ அடுத்தது என்ன என்பதற்கான ‘ஹிப்’பை ஏற்றிவிட்டது.. ஆனால் பின்னணி இசையில்தான் காதைக் கிழித்துவிட்டார் யுவன்.
படத் தொகுப்பாளர் கொஞ்சம் கருணை வைத்து கிளைமாக்ஸில் கை வைத்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும். இத்தனை நீண்ட பரபரப்பான சண்டை காட்சியில் யதார்த்தம் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு இருந்ததால், அதனை குறைவுபடுத்தியிருந்தால் கொஞ்சம் நிறைவாகவே இருந்திருக்கும்..!
இத்தனை நடிகர், நடிகைகளையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் கஷ்டப்படுத்தி எடுத்திருக்கும் இந்தப் படம், அதற்கான முழு தகுதியுடைய கதையுடன் வெளிவரவில்லை என்பதுதான் சோகமான விஷயம்.
முந்தைய ஷாட்வரையிலும் சிரித்த முகத்துடன் பேசிக் கொண்டிருந்த ஆர்யா, ஒரேயொரு விஷயத்தைக் கேட்டவுடன் பட்டென்று பொங்கியெழுந்து “எங்க ஊரை நாங்களே காப்பாத்திக்கிறோம்…” என்று போர்க்குரல் கொடுப்பதெல்லாம் திரைக்கதையின் ஓட்டையைத்தான் காண்பிக்கிறது.
இந்த மண்ணைவிட்டு அகல மாட்டோம் என்று கிராம மக்கள் சொல்வதையும், இதற்காக வில்லன் அனுப்பி வைக்கும் ஆட்கள் செய்யும் ரவுடித்தனத்தையும் சரியாக படம் பிடித்துக் காட்டியிருக்க வேண்டிய இயக்குநர் கோட்டைவிட்டிருப்பது வருத்தப்படக் கூடிய விஷயம்.
அந்தக் காட்டுக்குள் வில்லன்கள் கையில் மெஷின் கன்னோடு வந்து நிற்பதை பார்த்த மாத்திரத்திலேயே தியேட்டரில் சிரிப்பலைகள் எழும்புகின்றன, இயக்குநர் எத்தனை வெள்ளந்தியாக இருந்திருக்கிறார் என்று..!? ஹீரோ ஆர்யா எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறாரே.. அவராவது அட்வைஸ் செய்திருக்கக் கூடாதா..? கிளைமாக்ஸே சொதப்பலாகியிருப்பதால் படம் எந்தவொரு பாதிப்பையும் ரசிகனுக்குள் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.
“நிரம்பப் கஷ்டப்பட்டு தாய்லாந்துவரையிலும் சென்று கிளைமாக்ஸில் 100 யானைகளை வைத்து படமாக்கினோம்…” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார்கள். ஆனால் அந்த அளவுக்கான காட்சிகள் படத்தில் இல்லை என்பது அதிர்ச்சியான விஷயம். 100 யானைகள் கொண்ட பிரம்மாண்டத்தை படத்தில் எதிர்பார்த்து காத்திருந்தபோது ஏமாற்றமே மிஞ்சியது. இதை சி.ஜி.யிலேயே செய்திருக்கலாமே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
படத்திற்கு அதிக செலவு செய்வது முக்கியமல்ல. எந்தக் கதைக்காக செய்கிறோம் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இனிமேல் ஆர்யா இதனைக் கவனித்தில் கொண்டு படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்..!
கடம்பன் – பெருத்த ஏமாற்றம்..!

ப.பாண்டி - சினிமா விமர்சனம்

18-04-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடிகர் தனுஷ் தானே தயாரித்து, இயக்குநராகவும், நடிகராகவும் களமிறங்கும் இந்த  ‘ப.பாண்டி’ படத்தில் ராஜ்கிரண்  ஹீரோவாக நடிக்க ஜோடியாக  ரேவதி நடித்துள்ளார்.
இவர்களுடன்  பிரசன்னா, சாயாசிங், வித்யுலேகா ராமன், ரின்ஸன், தீனா(அறிமுகம்), ஆடுகளம் நரேன், பாஸ்கர், மாஸ்டர் எம்.பி.ராகவன், பேபி சவி ஷர்மா, சென்ராயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
சிறப்பு தோற்றத்தில் மடோனா செபாஸ்டியனும், நட்புக்காக இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், பாலாஜி மோகன், நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு – தனுஷ், ஒளிப்பதிவு – ரா.வேல்ராஜ், இசை – ஷான் ரோல்டான், பாடல்கள் – தனுஷ், செல்வராகவன் மற்றும் ராஜூ முருகன், நிர்வாக தயாரிப்பு – எஸ். வினோத் குமார், படத்தொகுப்பு – ஜி.கே. பிரசன்னா, நடனம் – பாபா பாஸ்கர், சண்டைப்பயிற்சி – சில்வா, ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மது. 

சினிமாவில் சண்டை பயிற்சியாளராகப் பணியாற்றி தற்போது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றிருக்கும் ராஜ்கிரண் தனது மகன் பிரசன்னா, மருமகள் சாயாசிங் மற்றும் பேரன், பேத்தியுடன் இருக்கிறார்.
தினப்பொழுதுக்கு ஓய்வில் இல்லாமல் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார். அந்த ஏரியாவில் மிகப் பிரபலமானவராகவும் இருக்கிறார். ஏதாவது தவறுகள் நடந்தால் உடனேயே தட்டிக் கேட்கும் தைரியம் மிக்கவராகவும் இருக்கிறார்.
ஆனால் இவரது மகன் பிரசன்னா தான் உண்டு தன் வேலையுண்டு என்றே இருக்க நினைக்கிறார். தலைமுறை இடைவெளியும் இதனுடன் சேர்ந்து கொள்ள.. அப்பனுக்கும், மகனுக்கும் இடையில் எப்போதும் ஒரு பனிப்போர்.
ஏரியாவில் கஞ்சா விற்பவர்களை பற்றி போலீஸில் புகார் கொடுக்கிறார் ராஜ்கிரண். போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்த கான்ஸ்டபிள்கள் பிரசன்னாவை மிரட்ட.. ராஜ்கிரணை கடிந்து கொள்கிறார் பிரசன்னா. மகனின் பேச்சுக்காக ஸ்டேஷனுக்குச் சென்று தனது புகார் மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டு திரும்புகிறார்.
இதற்கிடையில் ராஜ்கிரணுக்கு ஒரு திரைப்படத்தில் சண்டை காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் சக்ஸ்ஸ்புல்லாக நடித்துக் காட்டுகிறார். வெகு நாட்களுக்கு பிறகு ஸ்டூடியோவில் தனக்குக் கிடைத்த மரியாதையை நினைத்து பூரிப்போடு வீடு திரும்புவரின் கண்ணில் மறுபடியும் அந்த கஞ்சா பார்ட்டிகள் சிக்கிவிட.. அவர்களை தூக்கிப் போட்டு மிதித்துவிடுகிறார்.
இந்தக் கேஸ் போலீஸுக்கு போக.. பிரசன்னா அப்பாவை எதிர்த்து கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறார். இதனால் வேதனைப்படும் ராஜ்கிரண், சட்டென எழுந்த கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
கண் போன போக்கில் போனவர் ஒரு இடத்தில் தன் வயதையொத்த நபர்களின் கூட்டத்தை பார்த்து அவர்களிடம் பேசுகிறார். அவர்கள் அவரது வாழ்க்கைக் கதையை கேட்கிறார்கள். தன்னுடைய முதல் காதலை பற்றி அவர்களிடத்தில் சொல்கிறார் ராஜ்கிரண்.
“இப்போ அவளை பார்க்கத்தான் போறியா..?” என்று ஒருவர் கேட்க.. “இதுவரைக்கும் அந்த எண்ணம் இல்லை. இப்போ வந்திருச்சு..” என்கிறார் ராஜ்கிரண். முகநூல் மூலமாக அவரது காதலியைத் தேடிக் கண்டுபிடிக்கும் அந்தக் கூட்டம், அவருடைய காதலி ஹைதராபாத்தில் இருப்பதாகச்  சொல்கிறார். உடனேயே அவரைத் தேடி ஹைதராபாத்திற்கு தனது பைக்கிலேயே பறக்கிறார் ராஜ்கிரண்.
இன்னொரு பக்கம் அப்பாவை காணாமல் பிரசன்னா பதறுகிறார். போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். நாலாபுறமும் தேடி வருகிறார். இந்த இக்கட்டில் ராஜ்கிரண் ஹைதராபாத்தில் தனது காதலியை கண்டுபிடித்தாரா இல்லையா..? என்ன ஆனது..? திரும்பவும் குடும்பத்துடன் வந்து சேர்ந்தாரா என்பதுதான் இந்தச் சுவையான திரைப்படத்தின் கதை.
இப்படியொரு குடும்பக் கதையை பார்த்து எத்தனை நாட்களாகிவிட்டது..? தனுஷ் தனது முதல் கதையை இப்படி தேர்வு செய்வார் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அதோடு இயக்கத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
முதலில் கதாபாத்திரங்களின் தேர்வுக்காகவே தனுஷை வெகுவாகப் பாராட்ட வேண்டும். ஆளுமை தன்மையுடனும், பாசத்துடனும், நேசத்துடனும், கண்டிப்புடனும் இருக்க வேண்டிய ஒரு தகப்பனாக ராஜ்கிரணின் நடிப்பு அற்புதம்.. தனது பேரன், பேத்திகளின் பாசத்திற்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டிய சூழல்.. பையனிடம் திட்டுவாங்கிவிட்டு பேரப் பிள்ளைகளிடம் அதற்காக பல்பு வாங்குவது.. பக்கத்து வீட்டு பையனுக்கு முதல் நாள் அட்வைஸ் செய்து, மறுநாள் அவனுடனேயே அமர்ந்து தண்ணியடிக்கும் காட்சியில் கொஞ்சம் காமெடியையும் சேர்த்தே தந்திருக்கிறார்.
தன்னை நோக்கிப் பாய்ந்த வார்த்தைத் தோட்டாக்களை தேக்கி வைத்திருந்து, ஒரு நாள் பிரசன்னாவிடம் திருப்பித் தரும் காட்சியில் ராஜ்கிரண் கைதட்டல்களை அள்ளியிருக்கிறார். தனுஷிடம் இப்படியொரு இயக்கத் திறமையை எதிர்பார்க்கவில்லை என்பதற்கு முதல் அச்சாரத்தை இந்த ஒரு காட்சியே விதைத்தது என்றால் அது மிகையில்லை.
ரேவதியை முதன்முதலில் பார்த்தவுடன் அவர் காட்டும் பரவசம்.. ரேவதியின் தொடுதலில் ஏற்படும் கிளர்ச்சி.. பேச்சில் காட்டும் நெருக்கத்தால் ஏற்படும் மன நிம்மதி.. விசாரிப்பில் விளையும் அன்பும், பாசமும்.. இப்படி அனைத்தையும் அந்த ஒரு பாடல் காட்சியிலேயே காட்டியிருக்கிறார் ராஜ்கிரண்.
தனது மனைவியின் இழப்பை நினைக்காதவரையும் நினைக்க வைக்கும் அளவுக்கான சம்பவங்கள் வீட்டில் நடந்துவிட அதை நினைத்து வருந்துகிறவரை சமாதானப்படுத்தும் பேரன், பேத்திகளிடம் அவர் பேசும்விதமும், நடந்து கொள்ளும்விதமும் ஒரு சாதாரண தாத்தாவைத்தான் காட்டுகிறது.
இறுதியில் ரேவதியிடம் பிரியாவிடை பெற்றுவிட்டு திரும்பிப் பார்க்காமலேயே ஒரு குறியீடாக டாட்டா காட்டிவிட்டு செல்கின்ற உடல் மொழியிலும்கூட ஒரு சபாஷ் போட வைத்திருக்கிறார் ராஜ்கிரண்.
ரேவதியை பார்த்து மிக நீண்ட நாட்களாகிவிட்டது. அந்த வயதுக்கேற்ற பக்குவமான நடிப்பைக் காட்டியிருக்கிறார். ராஜ்கிரணை பார்த்தவுடன் அவருக்குள் ஏற்படும் ஒரு ஜெர்க்கை முகத்தில் காட்டும் அந்த நொடியில் ரேவதியை அனைவருக்குமே பிடித்துவிடுகிறது.
இறுதியில் தன்னிடமிருந்த ராஜ்கிரணின் புகைப்படத்தை அவரிடம் கொடுத்துவிட்டு,  தான் எழுதிய கடைசியான காதல் கடித்த்தை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு கண்ணீர் மல்க விடை கொடுக்கும் காட்சி ஒரு காதல் கவிதை. அந்தக் கவிதையிலேயே ஒரு கவிதையாய் நிற்கிறார் ரேவதி.
சின்ன வயது ராஜ்கிரண் கேரக்டர்களில் வரும் தனுஷும், மடோனா செபாஸ்டியனும் சரியான தேர்வு. மடோனாவுக்கு நம்ம ஊர் பொண்ணு கேரக்டர் சற்றே ஒத்து வரவில்லை என்றாலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். தனுஷுக்காகவே சண்டை காட்சியை வைத்திருந்தாலும் அது திணிக்கப்பட்டதாகவே தெரியவில்லை.
அந்தக் கிராமத்து போர்ஷனை வழவழவென இழுக்காமல் ரத்தினச் சுருக்கமாக அதே சமயம் அழகாக சுருக்கியிருக்கிறார்கள். கடைசியில் தன்னிடம் வரும் மடோனாவின் தம்பியைத் தூக்கிக் கொள்ளும் தனுஷின் செயலிலேயே அவருடைய பரிதவிப்பு தெரிகிறது. ஏ கிளாஸ் நடிப்புய்யா..!
பிரசன்னாவுக்கு இது மிக முக்கியமான படமாக இருக்கும். தந்தையைப் பற்றியே தான் எண்ணவில்லை என்பதை புரிந்து கொண்டு கடைசியாக குமுறி அழும் அந்த அப்பாவியின் நிலைமையில்தான் இன்றைக்கு பாதி இளைஞர்கள் நாட்டில் உள்ளனர். இந்தக் கேரக்டர் இல்லாத தெருக்களும், ஊர்களும் இந்தியாவிலேயே இருக்க முடியாது. மிகச் சிறப்பான கேரக்டர் ஸ்கெட்ச் இது.
மற்றும் மடோனாவின் அப்பாவாக நடித்திருக்கும் ‘ஆடுகளம்’ நரேன், லொட லொட வாயுடன் தனுஷின் முறைப்பெண்ணாக நடித்திருக்கும் வித்யுத்லேகா, திவ்யதர்ஷிணி என்று இந்தக் கோஷ்டியும் சிறப்பாகவே தங்களது கேரக்டரை செய்திருக்கிறார்கள்.
இதேபோல் இவரது மனைவியாக நடித்திருக்கும் சாயா சிங், பேரன் பேத்தியாக நடித்திருக்கும் குழந்தைகளுடன் பக்கத்து வீட்டுப் பையனாக நடித்திருப்பவன்கூட தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
இடையில் ஒரேயொரு காட்சியென்றாலும் கெளதம் வாசுதேவ் மேனனும், ரோபோ சங்கரும் கலக்கியிருக்கிறார்கள். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!
வேல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். இயக்குநருக்கான பாதி சுமைகளை ஒளிப்பதிவாளரே தூக்கி சுமந்திருப்பது தெரிகிறது. எப்போதும்போல இந்தப் படத்திலும் ஒரேயொரு காட்சியில் தலையைக் காட்டி படம் ஹிட்டாக தானும் ஒரு காரணமாகியிருக்கிறார் வேல்ராஜ்.
ஷான் ரோல்டனின் இசையில் ‘வெண் பனி மலரே’ பாடல் ஓகே.. அதேபோல் தனுஷ்-மடோனாவின் ‘பார்த்தேன்’ மெலடியான காதல் பாடலும் கேட்க இனிமை. இதைவிட பின்னணி இசையில் அடக்கி வாசித்து, சில இடங்களில் மெளனித்து படத்தை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.
தனுஷின் இயக்கத் திறமையுடன், திரைக்கதை அமைத்திருக்கும் பாங்கும் சேர்ந்து அவரை இன்னொரு சகலகலாவல்லவராக காட்டுகிறது.
ராஜ்கிரண் ஒரு படத்தின் சண்டை காட்சியில் நடித்துவிட்டு மிகப் பெருமையாக பலரது பாராட்டுக்களையும் பெற்றுவிட்டு வீடு திரும்பும்போதுதான் அந்த கஞ்சா பார்ட்டிகளுடன் சண்டைக்கு போகிறார். அது அப்போதைய அவரது மனநிலையைக் காட்டுகிறது. இவ்வளவு யதார்த்தமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார் தனுஷ்.
அப்பாவித்தனத்தோடு “என்ன இத்தனை வயசாகியும்.. ஒரு முடி கூட நரைக்கலை..?” என்று கேட்க. “அங்க மட்டும் என்ன வாழுதாம்..?” என்ற ரேவதியின் கேள்விக்கு.. “சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலுக்காக…” என்று பதில் சொல்ல.. “சால்ட் இருக்கு.. பெப்பர் எங்க..?” என்று ரேவதியின் அடுத்தக் கேள்விக்கு அசடு வழிவதுமாக வசனத்தாலேயே காட்சிகளை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் தனுஷ்.
அந்த ஒரே நாளிலேயே ராஜ்கிரணுடன் ஊர் சுற்றும் ரேவதி மிக எளிதாக அவருடன் நெருங்கிப் பழகுவதும், தன்னுடைய மகள், பேத்தி வீட்டில் காத்திருப்பதை எளிதாகச் சொல்லிவிட்டு போக.. சட்டென்று அதை ஏற்காத ஆண் மனம் பேதலித்துப் போய் இருப்பதை அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
“நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்கள்ல.. போ.. போய் சீக்கிரமா தூங்கு…” என்று மகள் திவ்யதர்ஷினி சொல்லிவிட்டுப் போனவுடன் ரேவதி தான் அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்து ஸ்டைலாக இரண்டு ஸ்டெப்புகள் வைத்துவிட்டு மீண்டும் நடக்கிறார் பாருங்கள். அங்கேயிருக்கிறது இயக்குநரின் இயக்கத் திறமை.. வெல்டன் தனுஷ்..!
“என் மனசுல நீ இப்பவும் இருக்கியா?” என்ற ஒற்றைக் கேள்வியைப் பிடித்துக் கொண்டு நள்ளிரவிலும் ரேவதியின் வீட்டுக்கு வந்து கேட்பதும்.. அதைத் தொடர்ந்து நடக்கும் வார்த்தை விளையாட்டுக்களில் படத்தை மிக, மிக ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் தனுஷ்.
இறுதியில் இருவருமே தங்களிடமிருக்கும் அந்த ரகசிய ஆயுதத்தை பரிமாறிக் கொண்டு நட்புக்கு அச்சாரம் போட்டு, உறவுக்கு ‘தடா’ போடுவதை போல வைக்கப்பட்டிருக்கும் அந்தக் காட்சிதான் படத்தின் மிகப் பெரிய ஹைலைட்.
படம் பார்த்த அனைவருக்குமே பிடித்தமான காட்சியாகவும், படத்தின் கதைக்கும், இக்காலத்திய சமூகச் சூழலுக்கும் இது மிகப் பொருத்தமானதாகவும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
கொஞ்சம் தப்பினாலும் அது மறுமணம் விஷயத்தில் தவறாகிவிடும் என்பதுபோல் இருந்தாலும், “அது தேவையில்லை.. இப்போது போலவே இருப்போம்.. தவறுக்கு வருந்தி வந்து நிற்கும் மகனை புறந்தள்ள அப்பனுக்கு மனமில்லை. ஒரு குடும்பம் மறுபடியும் சேர்ந்திருக்கும் நேரத்தில் அதைப் பிரிக்க தனக்கும் விருப்பமில்லை என்று ரேவதியின் ஒதுங்கலுமான திரைக்கதை அமைப்புகள்தான் படத்தின் பிளஸ் பாயிண்ட்டுகள்..!
படத்தின் ஒரேயொரு மைனஸ்.. ஹைதராபாத் மாலில் நடக்கும் சண்டை காட்சிதான். அது மட்டும்தான் வலிந்து திணிக்கப்பட்டது போன்ற உணர்வை கொடுத்ததோடு இல்லாமல், இதற்கு ரேவதி கொடுக்கும் முன்னோட்டமும் தேவையற்றது என்றும் சொல்லத் தோன்றுகிறது.
வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு. அதிலும் வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் நடை பிணங்களாகத்தான் வாழ்வார்கள். இந்தியா போன்ற குடும்ப உறவு முறையை அதிகம் பேணும் சமூகத்தில் வயதானவர்கள் ஒதுக்கப்படுதலும், அடக்கப்படுதலும்தான் அவர்களால் அதிகம் தாங்க முடியாத விஷயமாக இருக்கிறது.
வீட்டில் அவர்களுக்கென்று இருக்கும் உரிமைகள் கொஞ்சம், கொஞ்சமாக காணாமல் போய் கடைசியில் அவர்களே வீட்டுக்கு தேவையில்லாத ஒரு பண்டமாக கருதப்படும்போதுதான் தாங்கள் இத்தனை நாட்கள் பிள்ளைகளை வளர்த்தது எதற்கு என்று யோசிக்கிறார்கள். யோசித்த பின் எடுக்கும் விளைவுகள் இப்படி ராஜ்கிரண் செய்யும் செயலில் போய்தான் முடியும்..!
இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தங்களது வீட்டில் இருக்கும் பெரியவர்களின் குறைகளை கேட்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக தோன்றியிருக்கும். இதுதான் இந்தப் படம் சொல்லும் நீதி..!
இயக்குநர் தனுஷுக்கும், அவரது குழுவினருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!
ப.பாண்டி – அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்..!