காத்தாடி - சினிமா விமர்சனம்

27-02-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கேலக்ஸி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
படத்தில் புதுமுகமான அவிஷேக் கார்த்திக் ஹீரோவாகவும், தன்ஷிகா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள்.
மேலும் வி.எஸ்.ராகவன், சம்பத், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், டேனியல், பேபி சாதன்யா, மனோபாலா, லொள்ளு சபா மனோகர், காளி வெங்கட், கோட்டா சீனிவாசராவ், மதுமிதா, பசங்க சிவகுமார், ஜெய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஜெமின் ஜோம், இசை – பவன் – தீபன், படத் தொகுப்பு – விஜய் வேலுகுட்டி, தயாரிப்பு நிறுவனம் – கேலக்ஸி பிக்சர்ஸ், தயாரிப்பாளர் – ஸ்ரீனிவாஸ் சம்பந்தம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கல்யாண்.

சின்னச் சின்ன திருட்டுக்களை செய்து வரும் சக்தி என்னும் அவிஷேக்கும், துப்பாக்கி என்னும் டேனியலும் மிக நெருங்கிய நண்பர்கள். பெரிய அளவில் காசு சேர்த்துவிட்டு வெளிநாட்டுக்கு போய் பிழைக்கலாம் என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள்.
சின்னச் சின்னதாக திருடினால் பெரிய அளவுக்கு காசு சேர்க்க முடியாது என்பதால் பெரிய திருட்டுக்கு அச்சாரம் போடுகிறார்கள். பணம் லம்ப்பாக கிடைக்க வேண்டுமென்றால் குழந்தைகளைக் கடத்தலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.
இவர்கள் முடிவெடுத்த நேரத்தில் அவர்களின் கண் பார்வையில் குழந்தை சாதன்யா சிக்குகிறாள். சம்பத் தன்னுடைய காரில் சாதன்யாவை விட்டுவிட்டு நண்பரின் வீட்டுக்குள் போகும்போது சாதன்யாவை கடத்திச் செல்கிறார்கள் அவிஷேக்கும், டேனியலும்.
சாதன்யாவை பத்திரமாக தங்க வைத்துவிட்டு சம்பத்திற்கு போன் செய்து கடத்தி வந்ததை மட்டும் சொல்கிறார்கள். ஆனால் அன்றைய இரவிலேயே போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் இருந்த தன்ஷிகாவிடம் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரிஜினல் போலீஸ் என்று தன்ஷிகாவை அவர்கள் நினைக்க தன்ஷிகாவோ சூழ்நிலைக்காக போலீஸ் டிரெஸ்ஸை போட்டிருப்பது தெரிய வருகிறது.
குழந்தை சாதன்யா கடத்தி வரப்பட்டிருக்கும் செய்தியைக் கேட்ட தன்ஷிகா இவர்களது முட்டாள்தனத்தைப் பார்த்து இந்தக் கடத்தல் நாடகத்தே தானே டேக் ஓவர் செய்கிறார். சம்பத்திற்கு போன் செய்து சாதன்யாவிற்காக 50 லட்சம் ரூபாய் பேரம் பேசுகிறார்.
ஆனால் இன்னொரு டிவிஸ்ட்டாக குழந்தை சாதன்யா தன்னை சம்பத்திடம் ஒப்படைக்க வேண்டாம். நான் உங்களுடனேயே இருந்து கொள்கிறேன் என்கிறாள். அதிர்ச்சியைடயும் இந்தக் கடத்தல் கூட்டணி சாதன்யாவிடம் காரணத்தைக் கேட்க அவள் ஒரு அதிர்ச்சிகரமான கதையைச் சொல்கிறாள்.
இடையில் இவர்களது செல்போன் டவர்களை வைத்து சம்பத்தின் ஆட்கள் இவர்களை குறி வைத்து வந்து தாக்குகிறார்கள். அப்போதைக்கு தப்பித்தாலும் சம்பத்தின் ஆட்கள் துரத்திக் கொண்டேயிருக்கிறார்கள். முடிவு என்னாகிறது என்பதுதான் இந்தக் காத்தாடி படத்தின் சுவையான திரைக்கதை.
இந்தப் படத்தை எந்த மொழியில் வேண்டுமானாலும் உருவாக்கி வெளியிடலாம். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய கதையம்சம் கொண்டது.
முதல் காட்சியில் புகைப்படக் கலைஞரின் பார்வையில் படத்தைத் துவக்கி கடைசியாக அதன்டன் தொடர்புடைய ஒரு காட்சியில் வந்து முடிவது படத்தின் சிறப்பு. அந்தச் சின்ன காட்சி படத்தின் இறுதியில் ரசிகனுக்கு ஒரு ஜெர்க்கை கொடுத்திருக்க வேண்டும். அது இல்லாததுதான் படத்திற்குக் கிடைத்த பின்னடைவு.
குலேபகாவலி படத்தை இயக்கி கல்யாண்தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தில் இருந்த அதிகப்படியான காமெடிகள் இதில் குறைவு என்பதுதான் ஒரேயொரு பெரும் குறை.
ஸ்ரீதேவியின் தம்பியான அவிஷேக்குதான் ஹீரோவாக சக்தி என்னும் கேரக்டரில் நடித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் நடிக்க வைக்கப்பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கும், திரைக்கதைக்கும் பொருத்தமாகத்தான் இருக்கிறார். புதுமுகம் மாதிரியே தெரியவில்லை என்பது மட்டும் உண்மை.
டேனியலுக்கு ஈடு கொடுக்கும்வகையில் டயலாக் டெலிவரி செய்திருக்கிறார். அதிலும் நகைச்சுவை நடிப்பும் அவருக்கு வந்திருக்கிறது. நடிப்புக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அது இயல்பாகவே அவருக்குக் கிடைத்திருக்கலாம். இன்னும் பல படங்களில் அவர் தன் நடிப்புத் திறமையைக் காட்ட வாழ்த்துகிறோம்.
டேனியல்தான் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார். படத்தின் கடைசிவரையிலும் அவரது காமெடி கலந்த காட்சிகள்தான் படத்தை போரடிக்காமல் கொண்டு போக உதவியிருக்கிறது. கடத்தல் தொகையாக எவ்வளவு கேட்கலாம் என்று அவர்களுக்குள் பேசும் காட்சிகளும், தன்ஷிகாவிடம் இது தொடர்பாக பேசி தங்களது அறிவை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் கலகலப்பு..! டேனியலின் பிளாஷ்பேக் கதை இன்னமும் காமெடி. அவர் சிறு வயதில் யாரை முறை சொல்லி அழைக்கிறாரோ அவர்களெல்லாம் செத்துப் போவார்கள் என்ற திரைக்கதையை காமெடியாகவே படமாக்கியிருக்கிறார்கள். டேனியலுக்கு மற்றுமொரு பெயர் சொல்லும் படம் இது.
தன்ஷிகாவுக்கும் ஒரு பின்னணி கதையுண்டு. அதையும் ரொம்பவே காட்டாமல் லைட்டாக காட்டி முடித்திருப்பதால் அவரது கேரக்டர் ஸ்கெட்ச்  மீது ஆர்வமோ, ஈர்ப்போ வரவில்லை. அவரது கேரக்டரின் திடீர் மாற்றம் திகைப்பைத் தந்தாலும் சுவாரஸ்யத்தை தரவில்லை. படத்தில் ஒரு பெண் கேரக்டரும் இருந்தால் நலம் என்பதாலேயே அவர் வைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது. தன்ஷிகாவை பார்த்த பின்புதான் குழந்தை சாதன்யா தன் கதையைச் சொல்கிறாள் என்பது டச்சிங்கான திரைக்கதை.
வில்லன்களில் ஒருவரான ஜான் விஜய், பெரிய வில்லன் சம்பத், இவர்களது கூட்டாளிகள், கூடுதலாக காளி வெங்கட்டின் பங்களிப்பும் படத்திற்கு வலுவூட்டியிருக்கிறது. காளி வெங்கட்டிற்குக் கிடைத்த கேரக்டர் ஸ்கெட்ச்சும், தன் பெண்ணின் சிகிச்சைக்காகும் செலவுக்காக காத்திருக்கும் அவருக்கு கடைசியாக மார்ச்சுவரியில் கிடைக்கும் பலனும் எதிர்பாராதது. இதேபோலத்தான் சாதன்யாவின் அம்மாவை யாருடைய கார் மோதியது என்று தெரிய வருவது.. இப்படி அனைத்து கேரக்டர்களுக்குமான தொடர்புகளை லாஜில் மீறலே இல்லாமல் அழகாக கோர்த்திருக்கிறார் இயக்குநர் கல்யாண்.
ஆர்.பவன் இசையில் ‘வாமா வாமா’ பாடலும், ‘அடடா’ பாடலும் கேட்கும் ரகம். பாடல் காட்சிகளில் சுவையில்லை என்பதால் அதிகம் கவரவில்லை.
ஜெமின் ஜோமினின் ஒளிப்பதிவும், படத் தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டியின் வேலையும் இந்தச் சின்னப் படத்திற்கு கச்சிதம்தான். சேஸிங் காட்சிகளுக்கேற்ற படம் என்பதால் அதற்கான திரைக்கதைகள் இருந்தும் இயக்குநர் அதனை பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை.
இது போன்ற தேடுதல் வேட்டை போன்ற படங்களில் இருக்க வேண்டிய பரபரவென்ற திரைக்கதை இந்தப் படத்தில் முழுமையாக இல்லாதது படத்தின் மிகப் பெரிய குறை. அதேபோல் சென்னை வாழ் தமிழை டேனியலும், அவிஷேக்கும் கொத்துப் புரோட்டோ போடுவதும் ஒரு கட்டத்தில் சலிப்பாக்கிவிட்டது. இனிமேலாவது தமிழகம் முழுவதுக்குமான தமிழை பயன்படுத்துங்கள் இயக்குநர்களே..!
இன்னும் கொஞ்சம் அழகாக உருவாக்கியிருந்தால் மிக, மிக உயரே பறந்திருக்கும் இந்தக் காத்தாடி..!

மெர்லின் - சினிமா விமர்சனம்

26-02-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜே.எஸ்.பி.பிலிம்ஸ் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் ஜே.எஸ்.பி.சதீஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இதில் விஷ்ணுபிரியன் ஹீரோவாக நடித்திருக்கிறார். அஸ்வினி ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். நட்புக்காக ‘அட்டக்கத்தி’ தினேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தி்ல் நடித்துள்ளார்.
மேலும்,  ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘லொல்லு சபா’ ஜீவா, சிங்கம் புலி, மனோபாலா, தங்கர்பச்சான், மு.களஞ்சியம், ரிஷா, ‘நான் மகான் அல்ல’ ராமச்சந்திரன், ஆதவன், ‘கயல்’ தேவராஜ், வினோத், ஆதித்யா, கம்பம் மீனா, வீர சந்தானம், வைசாலி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு- முத்துக்குமரன், படத் தொகுப்பு – சாமுவேல், இசை – கணேஷ் ராகவேந்திரா, கலை –  ந.கருப்பையா, பாடல் – யுகபாரதி, சாவி, கு.கார்த்திக், வ.கீரா, பாடகர்கள் – மரண கானா ‘விஜி’, சைந்தவி, பிரியங்கா, கணேஷ் ராகவேந்திரா, குரு, முருகதாஸ், டிசைன் – இ.எல்.சிகா, ஒப்பனை – பழனி, சண்டை – ‘Fire ‘ கார்த்தி, நடனம்- சங்கர், உடை – வரதன், தயாரிப்பு நிர்வாகம் – சங்கர், மக்கள் தொடர்பு – இரா. குமரேசன், இணை தயாரிப்பு – J.பாலாஜி, தயாரிப்பு – J.சதீஷ்குமார், எழுத்து, இயக்கம் – வ.கீரா.

சென்னையின் ஒண்டுக் குடித்தனங்களில் வசிக்கும் கோடம்பாக்கத்தில் தானும் ஒரு மெகா இயக்குநராகலாம் என்கிற கனவில் இருக்கும் உதவி இயக்குநர்தான் வெற்றி என்னும் விஷ்ணுப்பிரியன்.
அவரது அறையில் எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருந்து  கொண்டேயிருக்கும். படம் இயக்கும் முயற்சியில் இருக்கிற வெற்றிக்கு நடிகர் தினேஷிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. கதையை கேட்ட தினேஷ் முழுக் கதையையும் ஒரு வாரத்திற்குள் சொல்ல வேண்டும் என நாள் குறித்துச் சொல்கிறார்.
ஒரு வாரத்திற்குள் கதை சொல்வதற்காக தன் அறையில் மும்முரமாக கதை எழுத ஆரம்பிக்கிறார் வெற்றி. ஆனால் அவரது அறைக்கு வந்து போகும் நண்பர்களின் தொந்தரவால், அவரால் கதையை எழுத முடியவில்லை. நண்பர்கள் வரவை குறைக்கவும், கதையை எழுதி முடிக்கவும் வெற்றி பல வகைகளிலும் முயன்று தோற்றுப் போகிறார்.
இதனால் தான் குடியிருக்கும் வீட்டில் ஒரு கன்னிப் பேய் இருப்பதாக பொய்யான கதையை தனது நண்பர்களிடத்தில் சொல்கிறார் இயக்குநர் வெற்றி.  அதோடு அந்த பேய்க் கதையை வீட்டின் கீழே இருக்கும் வயதான பாட்டிதான் தன்னிடம் சொன்னதாகவும், பேய் பற்றிய உண்மையை சொல்லிவிட்டதால் எந்த நேரமும் தான் அந்த பேயால் கொல்லப்படலாம் எனவும் சொல்லி அவர்களை பயமுறுத்துகிறார்.
இந்த நிலையில் கீழ் வீட்டில் இருந்த பாட்டி திடீரென இறந்து போக பேய் கதையைக் கேட்ட நண்பர்கள் அதிர்ச்சியடைந்து வெற்றியின் வீட்டுப் பக்கம் வருவதையே நிறுத்தி விடுகிறார்கள்.  ஆனால், இதற்குப் பின்னர் திடீர் திருப்பமாக உண்மையிலேயே வெற்றியை ஒரு பெண் பேய் துரத்துகிறது. அவர் பொய்யாக புனைந்த கதையே உண்மையாக நடக்க துவங்குகிறது.
படத்தின் கதையைச் சொல்லி படத்திற்கு ஓகே வாங்கி அடுத்த வாரம் ஷூட்டிங் என்கிற நிலையில் அந்த வீட்டில் பேய் அவர் பின்னாலேயே வந்து தொந்தரவு செய்கிறது.. இதனால் வெற்றிக்கு திடீரென்று மனநலம் பாதிக்கிறது.
அவரது பெற்றோர் சென்னைக்கு வந்து வெற்றியை தங்களது ஊருக்கே அழைத்துப் போகிறார்கள். கிராமத்தில் வெற்றிக்குப் பிடித்த பேயை விரட்ட அனைத்து முயற்சிகளையும் அவர்களது குடும்பத்தினர் செய்கிறார்கள்..!
உண்மையிலேயே அந்த வீட்டில் பேய் இருக்கிறதா… அந்த பேய் யார்… வெற்றியின் இயக்குநர் கனவு என்னவானது.. என்பதுதான் இந்தப் படத்தின் விரிவான திரைக்கதை.
‘மை’ படத்தில் பிரமாதமாக நடித்திருந்த விஷ்ணுபிரியன்தான் இந்தப் படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார். துணை இயக்குநர்.. வாய்ப்பு தேடும் இயக்குநர்.. தயாரிப்பாளரிடத்தில் பிடிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும் என்கிற பக்குவமாக அந்தக் கேரக்டரை செய்திருக்கிறார்.
தான் கதை எழுதிக் கொண்டிருக்கும்போது தொந்திரவு செய்யும் நண்பர்களை விரட்டுவதற்காக ஒரு பேய்க் கதையை பொய்யாக சொல்லப் போய்.. அது நிஜ பேயோ என்று படம் பார்க்கும் ரசிகர்களையும் நம்பும் அளவுக்கு நடித்திருக்கிறார். இவருக்கும் பேய் பிடித்தாற்போல் ஆகிவிட அந்த நிலைமையில் தனது நடிப்பில் குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
இவருடைய நண்பராக நடித்திருக்கும் லொள்ளு சபா ஜீவாவும், ஆடுகளம் முருகதாஸும்தான் படத்தின் முற்பாதியில் இருக்கும் காமெடிக்கு பொறுப்பாளர்கள். முருகதாஸை வெறுப்பேற்ற பெண் குரலில் பேசி அவரை நம்ப வைக்கும் ஜீவாவின் சேட்டை கொஞ்சம் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் பிற்பாதியில் வரும் அஸ்வினியின் காதல் கதைதான் படத்தின் அடிநாதம். இந்தக் காதலை படமாக்கியிருக்கும்விதமும் அருமை. உண்மையாக இந்தக் காதல் கதையேயே முழுமையான படமாக ஆக்கியிருக்கலாம். அத்தனை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ஏன் இதற்குள் ஒரு பேய்க் கதையைத் திணித்தார்கள் என்று தெரியவில்லை..!
ரிஷாவின் கேரக்டர் ஸ்கெட்ச் என்ன மாதிரி என்றே தெரியவில்லை. கணவர் இல்லை என்பதால் கணவரின் நண்பர்களுடன் வந்து தங்கிக் கொள்வார் என்றெல்லாம் காட்சிகள் வைப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.
படத்தின் துவக்கத்தில் ஒரு பேய்க் கதையின் உருவாக்கமாக வரும் நிலத்தில் தண்ணீர் இறைக்கும்போது வரும் முனி பேய்க் கதை மிக சுவாரசியம். அதையும் பேய்த்தனமாக, பயப்படும்படியாகத்தான் படமாக்கியிருக்கிறார். ஆனால் அதுவே எடுக்கப்படப் போகும் கதையாகிவிடவே சப்பென்றாகிவிட்டது.
பேய்க் கதையை யோசித்து, யோசித்து கொஞ்சம், கொஞ்மாக விஷ்ணு மனநலம் பாதிக்கப்படுவதைக் காட்டிவிட்டு சட்டென்று அதனை குணப்படுத்தும் பிரச்சினைகளுக்குள் போய்விட்டார்கள். பேய்க்கான தீர்வு கடைசிவரையிலும் கிடைக்காமல் போய் அதுவே பொய்யான பேய் என்பதும் கிளைமாக்ஸில் தெரிய வர.. படம் பார்க்கும் ஆடியன்ஸ்கள் தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறை.. குழப்பத்தில் ஒரு குழப்பமாய் படத்தின் பிற்பாதியில் வரும் பல காட்சிகள் அமைந்திருக்கின்றன. இதுவே படம் பற்றிய மவுத் டாக் வெளியில் பரவாததற்கு காரணம்..!
கணேஷ் ராகவேந்திராவின் இசையில் ‘வந்தனம், வந்தனம்’ பாடலும், ‘ஆகாய நிலவே’ பாடலும் கேட்கும் ரகம். படத்தின் பிற்பாதியில் கொஞ்சம் மூச்சுவிட வைத்தது பாடல் காட்சிகள்தான்..!
ஒளிப்பதிவாளர் முத்துக்குமரனின் கேமிராவுக்கு நிறைய வேலைகள் கொடுத்திருந்தாலும் பட்ஜெட் பற்றாக்குறையில் சிக்கனமாக படத்தை எடுத்திருப்பது தெரிகிறது. நிலத்தில் தண்ணீர் இறைக்கும்போது வரும் முனி பேய் சம்பந்தமான காட்சிகளை அழகாகக் பதிவாக்கியிருக்கிறார்கள்.
அதேபோல் வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளில் கேமிரா சுழன்றிருக்கிறது. கொஞ்சம், கொஞ்சம் அலுப்புத் தட்டினாலும் போரடிக்காமல் செல்ல காட்சியின் கோணங்கள்தான் உதவியிருக்கின்றன.
நூற்றுக்கணக்கான பேய் படங்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. முந்தைய பேய்ப் படத்தைவிடவும் அதிகமான மிரட்டலையும், தரத்தையும் அளித்தால்தான் அடுத்த பேய்ப் படம் வெற்றி பெற முடியும்..!
இந்தப் படம் இதுவரையிலும் வந்த பேய்ப் படங்களில் 10-வது பேய்ப் படம் போலத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது வருத்தமான செய்தி..!
அடுத்து பேய்ப் படங்களை இயக்கவிருக்கும் இயக்குநர்கள் இந்தப் படத்தைப் பார்த்து சுதாரித்துக் கொள்வது நலம்..!

கேணி - சினிமா விமர்சனம்

26-02-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் இருவரும் இந்தப் படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாரித்துள்ளனர்.
பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனு ஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – நெளஷாத் ஷெரிப், இசை – எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை – சாம் சி.எஸ்., படத் தொகுப்பு – ராஜா முகம்மது, வசனம் – தாஸ் ராம்பாலா, பாடல்கள் – பழனிபாரதி, நடனம் – தினேஷ், கதை, திரைக்கதை, இயக்கம் – எம்.ஏ.நிஷாத், தயாரிப்பு – சஜீவ் பீ.கே., ஆன் சஜீவ். 
முழுக்க முழுக்க கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, தற்போது இந்த தேசத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது.

மூன்று தனியார் டிவி சேனல்களில் மக்களுக்காக உழைத்த ஒரு தனி மனித ஆளுமையைத் தேடியலைகிறார்கள். அப்படியொரு கதையை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மூன்று பேர் தேடுகிறார்கள். அவர்களிடத்தில் அந்தக் கதையின் நாயகி யார் என்பது மூன்று நபர்களால் ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாமலேயே சொல்லப்படுகிறது.
இந்த மூன்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் அந்தக் குறிப்பிட்ட நபரைப் பார்த்து அவரைப் பற்றிய செய்திகளை அறிந்து அதனை செய்தியாக்குவதற்காக சென்னையில் இருந்து கிளம்பி வருகிறார்கள். இவர்கள் மூவருக்குமே அவர்கள் தேடி வருவது ஒரே ஆளைத்தான் என்பது தெரியாது என்பதுதான் இதில் விசேஷமே..!
இவர்கள் தேடி வரும் அந்த ஆளுமை இந்திரா. சாதாரண குடும்பப் பெண்மணி. அவருக்கு ஒரு சோகமான பின்னணி கதை உண்டு.
இந்திரா என்னும் ஜெயப்பிரதாவின் கணவர் ஜான் மேத்யூ கேரளாவில் கனிம வளத் துறையில் உயரதிகாரியாக இருக்கிறார். அங்கே அரசியல்வாதிகள் கேட்டதை போல ஒரு முறைகேட்டை செய்ய மறுத்ததினால் அவருடைய அலுவலக  பெண் ஊழியராலேயே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி ஜெயிலுக்குப் போகிறார்.
ஜாமீனில் வெளிவந்த அவருக்கு மேலும் சோதனைகள் தொடர்கின்றன. அவரைச் சந்திக்க வந்த அவருடைய குடும்ப நண்பர் தேடப்படும் மாவோயிஸ்ட் என்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக திரும்பவும் கைது செய்யப்பட்டு அவசரக் காலச் சட்டத்தின் கீழ் சிறையில் வைக்கப்படுகிறார்.
இந்த வழக்கில் ஜாமீன் கிடைப்பது கஷ்டம் என்பதால் தனது மனைவி ஜெயப்பிரதாவை தமிழக எல்லையில் இருக்கும் புளியன் மலை என்ற தனது சொந்தக் கிராமத்திற்கு போகச் சொல்கிறார் ஜான் மேத்யூ. ஆனால் போக மறுக்கிறார் ஜெயப்பிரதா.
இதே நேரம் மாவோயிஸ்ட் என்கிற பெயரில் ஒரு இளைஞனும் கைது செய்யப்படுகிறான். அவனது மனைவியான பார்வதி நம்பியாரின் அழகில் மயங்கிய அந்த ஊர் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு வந்து ஜொள்ளுவிடுகிறார். பேரனின் மனைவியைக் காப்பாற நினைக்கிறார் அந்த இளைஞனின் தாத்தா.
இந்த இரண்டு வழக்குகளுக்கும் ஒரே வக்கீல்தான் என்பதால் ஜெயப்பிரதாவும், பார்வதி நம்பியாரும் சந்திக்கிறார்கள். ஜெயப்பிரதா தனது கணவரை சிறையில் சந்தித்தபோது அவர் திடீரென்று மாரடைப்பால் காலமாகிறார். இனிமேலும் இந்த ஊரில் இருப்பது தேவையில்லாதது என்பதால் தன் கணவர் விருப்பப்படியே அவரது சொந்த ஊரான புளியன் மலைக்குச் செல்ல நினைக்கிறார் ஜெயப்பிரதா.
அந்த நேரத்தில் தனது பேத்தியையும் உடன் அழைத்துச் செல்லும்படி தாத்தா கேட்டுக் கொள்ள பார்வதியையும் அழைத்துக் கொண்டு புளியன் மலைக்கு வருகிறார் ஜெயப்பிரதா.
அங்கே அவரது வீடு இருக்கும் பகுதி தமிழகத்திலும், அவருக்குச் சொந்தமான வற்றாத தண்ணீரைக் கொண்டிருக்கும் கேணி கேரளப் பகுதியிலும் இருக்கிறது.
அந்த ஊரில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். தண்ணீர் அதிகமாக குடிக்காததால் அந்த ஊரில் இருக்கும் சின்னப் பிள்ளைகளுக்கு உடம்பெல்லாம் எரியும் ஒருவிதமான நோய் ஏற்பட்டிருக்கிறது. அதே ஊரிலேயே வசிக்கும் அனுஹாசனின் பையனுக்கும் அந்த நோய் பீடிக்கிறது. இதனால் அவஸ்தைப்படும் அனுஹாசன் அந்த தண்ணீர்ப் பிரச்சினையோடு தனது மகனின் நோய்ப் பிரச்சினையையும் தீர்க்க படாதபாடுபடுகிறார்.
வற்றாத தண்ணீர் ஜெயப்பிரதாவின் கிணற்றில் இருப்பதால் அங்கே தண்ணீர் எடுக்க முயலும் கிராமத்து மக்களை கேரளத்து அரசியல்வாதிகள் தடுக்கிறார்கள். ஜெயப்பிரதாவுக்கே தண்ணீர் இல்லை என்கிறார்கள். ஊர்ப் பெரியவரான சக்திவேல் என்னும் பார்த்திபனின் உதவியோடு அப்போதைக்கு அந்தப் பிரச்சினையை சமாளிக்கிறார் ஜெயப்பிரதா.
இதற்கிடையில் குமரி மாவட்ட கலெக்டரான ரேவதியை சந்தித்து தனது நிலையை எடுத்துச் சொல்கிறார் ஜெயப்பிரதா. ஆனால் ரேவதியோ அந்தக் கிணறு இருக்கும் பகுதி கேரளாவுக்கு போய்விட்டதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்கிறார். கேரளப் பகுதி கலெக்டரோ, “ஒரு சொட்டுத் தண்ணீரைகூட தமிழகத்துப் பகுதி மக்களுக்குத் தர முடியாது…” என்கிறார்.
இதனால் வேறு வழியில்லாமல் நீதிமன்றத்திற்குச் செல்கிறார் ஜெயப்பிரதா. கேரளத்து நீதிமன்றமோ “ஜெயப்பிரதா தண்ணீரை எடுக்கலாம். ஆனால் அதனை கேரளப் பகுதியில்தான் பயன்படுத்த வேண்டு்ம்…” என்று வினோதமான தீர்ப்பை வழங்குகிறது. இதனால் கிணற்றின் அருகேயே குடிசை போட்டு அதில் தண்ணீரை புழங்கி வருகிறார் ஜெயப்பிரதா.
இன்னொரு பக்கம் புளியன் மலை கிராமத்து மக்களை அங்கேயிருந்து விரட்டியடித்து அந்த இடத்தில் பேக்டரி கட்ட தமிழகத்து அமைச்சர் திட்டமிடுகிறார். இதற்காக சட்டமன்ற உறுப்பினருடன் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார். ஆனால் ஊர்ப் பஞ்சாயத்து தலைவரான பார்த்திபன் இதை எதிர்க்கிறார்.
இன்னொரு பக்கம் கேரளத்து அரசியல்வாதிகளும் அந்தக் கிணற்றை மூடிவிட்டு அந்த இடத்தை ஜெயப்பிரதாவிடமிருந்து கைப்பற்ற இன்னொரு பக்கம் திட்டம் தீட்டுகிறார்கள்.
புளியன் மலை கிராமத்து மக்களோட அரசு அதிகாரம், அதிகாரத் தரகர்கள், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரத சதித்திட்டம் தெரியாமல் தண்ணீரைத் தேடி நாயாய், பேயாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஜெயப்பிரதாவோ எப்படியாவது தனது கிணற்றில் இருந்து ஊர் மக்களுக்கு தண்ணீரைக் கொடுத்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார்.
முடிவு என்ன ஆகிறது என்பதுதான் இந்தக் கேணி படத்தின் திரைக்கதை.
1952-ம் ஆண்டு மொழி வாரி மாகாணங்கள் பிரிப்பின் அடிப்படையில் சென்னை ராஜதாணியின் கீழ் இருந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா பகுதிகள் தனித்தனி மாநிலங்களாக உருவெடுத்தன.
இருந்தாலும் இவற்றின் எல்லை பிரச்சினைகள் தீர்க்க முடியாதபடியிருந்தன. தமிழக கேரள எல்லையில் குமுளி அருகேயிருந்த வண்டி பெரியாறு, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகம் கேட்டது. இந்தப் பகுதியில்தான் இடுக்கி மாவட்டமும், முல்லை பெரியாறு அணையும் இருந்தது. முல்லை பெரியாறு அணைதான் தென் தமிழகத்தை வாழ வைத்துக் கொண்டிருந்த அணைக்கட்டு. முல்லை பெரியாறு அணையின் தண்ணீரால் அதிகமாக செழித்துக் கொண்டிருந்தது தமிழகம்தான். இந்த உரிமையோடு இந்தப் பகுதிகள் கேட்கப்பட்டன.
ஆனால் அப்போதைய மத்திய அரசின் ஓர வஞ்சனையால் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டதால் தேக்கடிகூட தமிழகத்தின் கையைவிட்டுப் போய்விட்டது. இந்த இணைப்பை அப்போதைய தமிழகத்து தலைவர்கள் புரிந்து கொண்டு செயல்படுத்தியிருந்தால், இந்நேரம் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை இருக்கவே இருக்காது..!
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகம் கைப்பற்றினாலும் இதன் கூடவே இருந்த நெய்யாற்றின்கரை பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன. கோவை அருகில் இருக்கும் ஊட்டி, கூடலூரை கூட மலையாளிகள் கேட்டார்கள். ஆனால் அந்தப் பகுதி மக்களின் கடும் எதிர்ப்பால் மட்டுமே அது தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
இதேபோல் ஆந்திராவுடனான எல்லை பிரச்சினையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் கடுமையான போராட்டத்தின் விளைவாகத்தான் சித்தூர் மாவட்டம் நம் கையைவிட்டுப் போனாலும் திருத்தணி தமிழகத்தோடு சேர்க்கப்பட்டது.
இப்படி மாகாணப் பிரிப்பிலேயே தமிழகம் வஞ்சிக்கப்பட்டது என்பது உண்மை. அந்த உண்மைக் கதையில் கொஞ்சம் கற்பனையைக் கலந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இந்தியாவின் பேரழகியான ஜெயப்பிரதா இந்திரா என்னும் மையக் கதாபாத்திரத்தைத் தாங்கி நடித்திருக்கிறார். என்றாலும், படத்தில் நாயகி போல் நடித்திருப்பது அனுஹாசன்தான்.
அவர்களது குடும்பத்திற்கே உரித்தான நடிப்பும், அந்தக் குரலும் அவருக்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது. தாமதமாக ஓட்டி வரும் தண்ணீர் லாரிக்காரனை பார்த்து சவுண்டுவிடும் அந்த உதார் ராணி ஸ்டைலில் கலக்குகிறார் அனுஹாசன்.
தனது மகனுக்காக தண்ணீரைத் தேடியலையும் காட்சியில் அவர் காட்டியிருக்கும் நடிப்பில் சிறிதும் குறைவில்லை. ஒரு மத்திய தர வயதுடைய தாய் எப்படியிருப்பாரோ அதை அப்படியே கண் முன்னே காட்டியிருக்கிறார் அனுஹாசன். இன்னமும் சிறப்பான முறையில் இயக்கம் செய்திருந்தால் அனுஹாசனின் நடிப்பு மேலும் வெளிப்பட்டிருக்கும்.
ஜெயப்பிரதாவுக்கு அமைதியான வேடம். ஒரேயொரு காட்சியில் மட்டுமே அமைச்சரிடம் கோபாவேசமாக பேசுகிறார். மற்றபடி அவருடைய பேச்சும், நடத்தையும், ஆக்சன்களும் சாந்த சொரூபியாகவே இருக்கின்றன. வயது ஒரு அழகியை எப்படி ஈவிரக்கமில்லாமல் அழித்திருக்கிறது என்பதற்கு ஜெயப்பிரதாவின் இந்த அழகே சாட்சி..!
நக்கல் மன்னன் பார்த்திபன் அந்த ஊர்ப் பஞ்சாயத்து தலைவராக வருகிறார். சில சில பன்ச் டயலாக்குகளையும், பாண்டி என்று தமிழகத்து மக்களை கிண்டல் செய்யும் கேரளத்தவர்களை வார்த்தைகளால் துவம்சம் செய்திருக்கிறார். டீக்கடை நாயரை ஊரைவிட்டு காலி செய்யச் சொல்லுமிடத்தில் நாயர்களின் வரலாற்றையே சொல்லி கம்பீரமான இந்தியனாகிறார் பார்த்திபன்.
பார்வதி நம்பியாருக்கு சின்ன வேடம்தான். சில வசனங்கள்தான் என்பதால் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை. கலெக்டர் ரேவதி, அமைச்சர் தலைவாசல் விஜய்யுடன் பேசும்போது மட்டும் மிளிர்கிறார். நீதிபதியான ரேகா மிக இயல்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். ரேகா பேசும் சில வசனங்களால் கோர்ட் நடைமுறைகள் மிக எளிய முறையில் விளக்கப்பட்டிருக்கின்றன.
ஜெயப்பிரதாவின் கணவராக நடித்திருக்கும் ஜான் மேத்யூ, டீக்கடை நாயர், அவரது கடையில் அலப்பறை செய்து கொண்டிருக்கும் சாம்ஸ்.. இந்த அக்கப்போரில் அவ்வப்போது கலந்து கொள்ளும் ‘பிளாக்’ பாண்டி என்று பலரும் படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். டீக்கடை காட்சிகளை கொஞ்சம் நறுக்கியிருந்தால் தேவலை.
நீதிமன்றக் காட்சிகளில் நாசர் பேசும் பல வசனங்களும், எதிர் வழக்கறிஞரின் வாதங்களும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. ‘தண்ணீர், தாகம் இது இரண்டுமே மனிதர்களின் இயற்கையான பிரச்சினை. இதனை தேசம், மாநிலமாய் பார்க்காமல் தீர்த்து வைக்க வேண்டியது மனிதப் பண்பு’ என்று நாசர் சொல்லுமிடத்தில் வசனகர்த்தாவுக்கு ஒரு சபாஷ் போடலாம்..!
பட்டப் பகலிலேயே இளநீரில் கட்டிங்கை கலந்து குடித்துவிட்டு அலப்பறை செய்யும் எம்.எஸ்.பாஸ்கர், கேரளாவில் இருந்து வரும்போது  கள்ளு ஒரு பாட்டிலை கொண்டு வரும்படி கேட்பதெல்லாம் டூ மச்சாக இல்லையா..? தமிழகத்து டிவிக்காரங்களையே அமோகமாக வாரிவிட்டிருக்கிறார் இயக்குநர்..!
கேணியின் பாதுகாப்புக்காக வந்திருக்கும் இடத்தில் தமிழகத்து போலீஸ்காரரின் பாட்டில் பார்ட்டிக்கு கேரளத்து போலீஸ்காரர் காட்டும் ரியாக்ஷனும் நடிப்பும் சற்றே காமெடியை வரவழைத்திருக்கிறது. இதற்கு மட்டும் கேரள போலீஸ்காரர் தண்ணீர் எடுக்க சம்மதிப்பதுபோல காட்சியமைத்திருப்பது இயக்குநரின் தைரியத்தைக் காட்டுகிறது.
முழுக்க, முழுக்க கேரளாவிலேயே ஷூட் செய்திருப்பதால் காட்சிகள் திரையில் தோன்றும் அழகுக்கு குறைவில்லாமல்தான் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் நெளஷத்தின் கழுகுப் பார்வையில் வறண்ட பாலைவனப் பகுதியையும் இன்னொரு பக்கம் செழுமையாக இருக்கும் பகுதியையும் ஒரு சேர காட்டியிருக்கிறார்கள்.
50-களை கடந்த நடிகர், நடிகையரே அதிகம் பேர் படத்தில் நடித்திருப்பதால் அவர்களின் அழகுக்குப் பங்கம் வராதவகையில் குளோஸப் காட்சிகளை அமைத்து அவர்களையும் காப்பாற்றி நம்மையும் காப்பாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றிகள்..!
‘தளபதி’ படத்திற்கு பிறகு ‘கானக் குரலோன்’ கே.ஜே.ஜேசுதாஸும், ‘பாடும் நிலா’ எஸ்.பி.பியும் “அய்யா சாமி நாமளொண்ணே சாமி” என்ற பாடலை படத்தின் விளம்பரத்திற்காக பாடிக் கொடுத்திருக்கிறார்கள். பாடலும், பாடல் காட்சியும் அருமை. நடனம் அதைவிட அழகு..!
‘கலையும் மேகமே’, ‘வெந்திடும் பூமி’ என்று மேலும் இரண்டு பாடல்களையும் அழகாக மெட்டமைத்து இசைத்திருக்கிறார் ஜெயச்சந்திரன். பாடல்கள் தரும் சோகத்தைவிடவும் காட்சிகள் தரும் சோகம்தான் அதிகமாக இருந்திருக்க வேண்டும். அது இங்கே மிஸ்ஸிங்..!
மூன்று தொலைக்காட்சியினரும் தேடி வரும் அளவுக்கு இந்திரா என்னும் அந்தக் கேரக்டர் மிகப் பெரிய சேவையைச் செய்திருக்க வேண்டும். ஆனால் படத்தில் காட்டப்பட்டது அந்த அளவுக்கு இல்லை என்பதுதான் சோகமான விஷயம்.
படம் முழுவதும் மெதுவாக, அமைதியாக, சாந்த சொரூபியாகவே அலைந்து திரியும் இந்திராவுக்கு உதவி செய்ய அந்த ஊர் ஆண்கள்கூட போகவில்லை. அவராகவே பத்திரப் பதிவு அலுவலகம், கலெக்டர் அலுவலகம், கோர்ட் என்று அனைத்திற்கும் நாயாய் அலைகிறார். ஆனால் அவருடைய இந்த நடிப்பு எதுவும் படம் பார்க்கும் ரசிகனிடத்தில் ஒரு பரிதாப உணர்வையோ, போராட்ட காட்சியையோ உருவாக்கவில்லை என்பது மட்டும் திண்ணம்.
மந்திரியின் காரை வழிமறித்து தங்களது ஊருக்கு தண்ணீர் கேட்கிறார்கள் மக்கள். அந்த நேரத்தில் மட்டுமே பொங்கி எழுந்த கண்ணாம்பாவாக பேசுகிறார் இந்திரா. இந்த ஒரு காட்சியே இவருக்கான பெருமைக்கு போதுமானதா என்பதை இயக்குநர் யோசித்திருக்க வேண்டும்..!
இந்திராவின் கேரக்டர் ஸ்கெட்ச்சை இன்னமும் வலுவானதாக மாற்றியிருந்தால் படம் இன்னமும் ஈர்ப்பாக இருந்திருக்கும்..! அவரது முன் கதைச் சுருக்கம்கூட தேவையில்லாதது. கணவர், ஜெயில் என்கிற விஷயமே இல்லாமல் முழுக்க, முழுக்க கேணியைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருந்தால் படம் இதைவிட சிறப்பானதாக இருந்திருக்கும்..!
சாதாரணமாக இப்போதும் கேரளத்து நாயர்கள் தமிழகத்துக்குள் வந்து டீக்கடை வைத்தும், வேலை பார்த்தும், தமிழகத்து பெண்களும், ஆண்களும் கேரளத்து தோட்டங்களில் கூலி வேலைக்குப் போய்விட்டு இரவில் தமிழகத்தில் இருக்கும் தங்களது வீட்டுக்குள் வருவதுமாக இருக்கும்போது “தண்ணீர் மட்டும் அள்ளக் கூடாது…” என்று சொல்ல முடியுமா..? இந்த மிகப் பெரிய லாஜிக் எல்லை மீறலை இயக்குநர் ஏன் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டார் என்று தெரியவில்லை..! அதிலும் நீதிமன்றத்தில் அப்படியொரு கேணத்தனமான தீர்ப்பு வரும் என்று யாருமே நம்பிவிட மாட்டார்கள்.
ஆனால் இயக்குநர் இப்போது தமிழகம், மற்றும் கேரளாவில் நடைபெற்றுவரும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை மறைமுகமாக வைத்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் என்றால் இது நிச்சயமாக பாராட்டத்தக்கதுதான்.
இ்ப்போது முல்லை பெரியாறு அணை கேரளாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அது முன்பு சென்னை ராஜதானியாக இருந்தபோது தமிழகத்துக்குள் இருந்த பகுதிதான். இப்போது பிரிந்தாலும் அதில் தண்ணீர் கேட்க தமிழகத்து முழு உரிமையுண்டு என்று இயக்குநர் சொல்கிறார் என்றால் நிச்சயமாக நாம் இதனை இரு கரம் கூப்பி வரவேற்போம்..!

நாகேஷ் திரையரங்கம் - சினிமா விமர்சனம்

20-02-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

டிரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் ராஜேந்திர M.ராஜன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
‘நெடுஞ்சாலை’ ஆரி இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆஷ்னா சவேரி ஹீரோயினாக நடித்துள்ளார்.
மேலும், காளி வெங்கட், மாசூம் சங்கர், எம்.ஜி.ஆர். லதா,  சித்தாரா,  அபிலாஷ்,  அதுல்யா  ரவி, அனில் முரளி, மனோபாலா, சித்ரா லட்சுமணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – நௌஷத், இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத் தொகுப்பு – தேவராஜ், கலை – ராமலிங்கம்,  பாடல்கள் – தாமரை,  உமாதேவி,  முருகன் மந்திரம்,  வேல்முருகன்,  ஜெகன் சேட்,  சண்டை பயிற்சி – ஸ்டன்னர் ஷாம், நடனம் – ராபர்ட், பாம்பே பாஸ்கர், ஆடைகள் – முகமது சுபீர், ஆடை வடிவமைப்பு – சோபியா சௌரிராஜன்,  தினேஷ், VFX – ட்ராட்ஸ்கி மருது, மக்கள் தொடர்பு – வின்சன்.
‘அகடம்’ என்ற திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து, கின்னஸ் சாதனை புரிந்த, இயக்குநர் இசாக் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

நாயகன் ஆரி வீட்டுக்கு மூத்தப் பையன். வீட்டு புரோக்கர் வேலை பார்த்து வருகிறார். அதில் வருமானமே இல்லாமல் இருந்தாலும், ஆரியின் தம்பி ஐ.டி. கம்பெனியில் வேலை பார்ப்பதால் அதை வைத்து குடும்பத்தை ஓட்டுகிறார் தாய் சித்தாரா. இவர்களுக்கு வாய் பேச முடியாத டீன் ஏஜ் தங்கையும் உண்டு.
நிரந்தரமான வேலையோ, வெளியில் பெருமையாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கான வேலையோ ஆரிக்கு இல்லாதபோதும், அவரது அம்மா அவருக்குத் திருமணம் செய்துவைக்க திட்டமிடுகிறார்.
ஆஷ்னா சாவேரியை பெண் பார்க்க வருகிறார் ஆரி. வந்த இடத்தில் ஆஷ்னாவின் அழகு அவரை வெகுவாக கவர்ந்துவிட பெண்ணை பிடித்துவிட்டதாகச் சொல்கிறார் ஆரி. ஆனால் இருவரும் தனிமையில் பேசும்போது தான் வீட்டு புரோக்கர் வேலை பார்ப்பதாகச் சொல்லிவிடுகிறார் ஆரி.
ஆனால் ஆஷ்னாவோ கட்டினால் ஐ.டி. மாப்பிள்ளையைத்தான் கட்டுவேன் என்று தீர்மானமாக இருப்பதால் இது செட்டாகாது என்று சொல்லி ஆரியை திருப்பியனுப்புகிறார்.
ஆரி புரோக்கர் வேலையைவிட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்கிறார். ஆனால் அந்த நேர்முகத் தேர்வில் ஆஷ்னாவும் வந்து குழப்படி செய்ய ஆரிக்கு வேலை பறி போகிறது. ஆரிக்கு பதிலாக அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார் ஆஷ்னா.
அந்த நிறுவனத்தில் தயாரான ஆங்கில புத்தகங்களை ரோடு, ரோடாக அலைந்து விற்பனை செய்கிறார். ஆனால் முடிந்தபாடில்லை. ஒரு நாள் பூங்கா ஒன்றில் இந்த விற்பனை வேலையை ஆஷ்னா செய்யும்போது அவரை பார்த்துவிடுகிறார் ஆரி.
ஆஷ்னாவின் மீது பரிதாபப்பட்டு அந்தப் புத்தகங்களை விற்பனை செய்ய உதவுகிறார் ஆரி. இந்த பரஸ்பர உதவுதலில் ஆரியின் நல்ல மனது ஆஷ்னாவுக்கு புரிய.. சினிமாத்தனமான காதல் துவங்குகிறது.
இடையில் ஆரியின் தங்கையான அதுல்யா ஒரு பையனை காதலிக்கிறார். விஷயம் தெரிந்து ஆரியே பெண் பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்கிறார். வந்தவர்கள் தங்களது மூத்த மருமகள்கள் இருவரும் தலா 150 பவுன் நகையுடன் வந்ததால் அதுல்யாவுக்கும் 150 பவுன் நகை போட்டால் திருமணத்திற்கு சம்மதம் என்கிறார்கள்.
இப்போது 150 பவுன் நகைக்கு எங்கே போவது என்று குடும்பத்தில் குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. தம்பியோ தன்னால் 40 பவுனுக்கு மேல் செய்து தர முடியாது என்கிறார். இ்ப்போது அம்மா சித்தாரா ஒரு நிலப் பத்திரத்தை ஆரியின் கையில் கொடுத்து இந்த இடம் நம்முடையதுதான். ரொம்ப நாளாக பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. எப்படியாவது இதை விற்றுவிட்டு பணத்தை வாங்கி வரும்படி ஆரியிடம் சொல்கிறார்.
அந்தப் பத்திரம் காட்டும் இடம் ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு பாழடைந்த சினிமா தியேட்டர். ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற பெயரில் இருக்கும் அந்தத் தியேட்டரை தனது நண்பனான காளி வெங்கட்டுடன் வந்து பார்க்கும் ஆரி.. அங்கேயே இருந்து தியேட்டர் இருக்கும் நிலத்தை எப்படியாவது விற்றுவிட நினைக்கிறார்.
ஆனால் அந்த கட்டிடத்திற்குள் இருக்கும் ஒரு பெண் பேய் இவர்களை வைத்து தன்னைக் கொலை செய்தவர்களை பழி வாங்க நினைக்கிறது.
தூக்கத்தில் ஆரிக்கு ஒரு கெட்ட கனவு வருகிறது. அதில் சில கொலைகள் நடப்பதாகத் தெரிகின்றன. உண்மையில் மறுநாள் பத்திரிகைகளில் அந்த கொலைச் செய்தியும் வந்திருக்கிறது. ஆக, தன்னைச் சுற்றி ஏதோ ஒரு மர்மம் இருப்பதையறியும் ஆரி அது என்ன என்பதைக் கண்டறிய முனைகிறார்.
இதற்கிடையில் அந்த இடத்தை வாங்க வரும் அனைவருமே திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடிக்கிறார்கள். பேய் இருக்கா இல்லையா.. தன் கனவில் வரும் கொலைகளுக்குக் காரணம் என்ன.. பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முனைகிறார் ஆரி.
அவரால் இதையெல்லாம் செய்ய முடிந்ததா என்பதுதான் இந்த நாகேஷ் திரையரங்கத்தின் திரைக்கதை.
ஒரு அழகான காதல் கதையாகப் போயிருக்க வேண்டிய திரைப்படம் வழியில் திசை மாறி பேய்க் காதலாக உருவமாறிவிட்டது.
பேய்ப் படங்களை டஜன் கணக்கில் பார்த்து, பார்த்து சலித்தாகிவிட்டதால் இந்தப் படம் ஏதாவது கூடுதல் திகிலையோ அல்லது புதுவித பயமுறுத்தலையோ கொடுக்கும் என்று எதிர்பார்த்தால் நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது..!  இடையிடையே டிவிஸ்ட்டாக வரும் திரைக்கதைகள் மட்டுமே படத்தில் இருக்கும் ஆறுதல் களம்.
அனாதைகளான சிறுவர், சிறுமிகளை கடத்தி வைத்து மருத்துவ ரீதியான சோதனைகளுக்கு அவர்களை ஆட்படுத்தும் உலகளாவிய எலி பரிசோதனை கொடுமையை இந்தப் படத்திலும் தோலுரித்திருக்கிறார் இயக்குநர் இசாக்.
ஆரி இன்னும் கொஞ்சம் நடிக்க வேண்டியது இருக்கிறது என்பதைக் காட்டுகிறது இத்திரைப்படம். ஆஷ்னாவிடம் மொட்டை மாடியில் பேசுகின்ற காட்சியில் மட்டுமே ரசிக்க வைத்திருக்கிறார். மற்றபடி பேய்க்கு பயந்து போய் ஓடும் காட்சிகளிலும், அது தொடர்பான மற்றவைகளிலும் எப்போதும்போலத்தான் இருந்திருக்கிறார் ஆரி.
காளி வெங்கட் தனது வீட்டில் மனைவியுடன் கூட முற்படாத தனது சோகக் கதையைச் சொல்லும் காட்சிகளெல்லாம் லாஜிக்படி நம்பவே முடியாததுதான் என்றாலும் அதையும் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்கள். ஆணி அடிப்பது என்கிற வார்த்தைக்கு இன்றைய கணவர்மார்கள் மத்தியில் இப்படியும் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் இந்தப் படத்தைப் பார்த்து கற்றுக் கொண்டுள்ளது. இதற்காக இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
ஆஷ்னா சாவேரி குளோஸப்பில் மிகவும் சின்னப் பொண்ணாக இருக்கிறார். சிரிக்கிறார். ஆனால் நடித்திருக்கிறார். ஐடி பையன்தான் வேண்டும் என்று ஆரியிடம் வாதாடும் காட்சியில் இயக்குநரையும் மீறி நடித்திருப்பது போல தெரிகிறது.
அதுல்யாவுக்கு வாய் பேச முடியாத ஒரு நங்கை வேடம். கொஞ்சமான காட்சிகளில் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். சித்தாரா ரொம்ப நாட்கள் கழித்து அம்மா கேரக்டரில்..! முகத்தில் இருக்கும் பருவைக்கூட வயதையொத்து பொருந்துகிறது என்றெண்ணி விட்டுவிட்டார்கள் போலும்.. ஆனால் அதற்கடுத்து சில காட்சிகளில் அது மேக்கப்பில் காணாமல் போயிருப்பதையும் ஒளிப்பதிவாளர் எப்படி கவனிக்காமல் போனார் என்று தெரியவில்லை. மனோபாலாவின் அந்த இண்டர்வியூ காட்சி ஒரு லக லக..!
இடையில் பேய்ப் பெண்ணாக வரும் மசூம் சங்கருக்கு ஒரு அழகான கேரக்டர். குழந்தைகளுக்கு நேரும் கொடுமைகளை கண்டு பிடித்து பரிதாபமாய் இறந்து போகிறார். ஆனால் அந்தக் கொடுமையைச் செய்தவர்களைத்தான் பேயாய் பழி வாங்குகிறார் என்பதை அவ்வப்போது திரைக்கதையில் கொஞ்சம், கொஞ்சமாக சொல்லியிருப்பது படத்தை ரசிக்க வைத்திருக்கிறது.
இவர்களது பாதுகாவலராக நடித்திருக்கும் லதாவுக்கு சின்ன ரோல்தான் என்றாலும் கவனிக்க வைத்திருக்கிறார். பத்து ரூபாய் மருத்துவர் என்று அவர் சொல்லும் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் நம்மை பெரிதும் கவர்கிறது..!
யோகி தேவராஜ் உண்மையைச் சொல்லும் சாமியார் கதாபாத்திரத்திலும், மலையாள நடிகர்  அனில் முரளி பேயிடம் அடிபட்டு ரத்தம் கக்கும் கேரக்டரிலும் நடித்திருக்கிறார்கள்.
நெளஷத்தின் கேமிரா இடைவேளைக்கு பின்புதான் ரங்கராட்டினமாக சுற்றியிருக்கிறது. நல்லா இருந்த தியேட்டரை குப்பைக் கூளமாக்கி படமாக்கியிருக்கிறார்கள். பேய் தொடர்பான காட்சிகளில் தங்களுடைய பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் முடிந்த அளவுக்கு பயமுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் அதிகப்படியாக ஈர்க்கவில்லை என்பதுதான் உண்மை.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ‘கண்கள் ரெண்டும்’ டூயட் பாடல் அழகு. கேட்க இனிமை. ‘வாடி வாடி’ பாடல் செம குத்தாக குத்தியிருக்கிறார் இசையமைப்பாளர். ‘உங்க அப்பாக்கிட்ட பேசலை; அம்மாக்கிட்ட பேசலை’ என்று தத்துவ முத்துக்களை வைத்து ஒரு பாடலும் ஒலித்தது. பாடல்களைவிடவும் பின்னணி இசைதான் குறிப்பிட்டுச் சொல்லும்படியிருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவுக்கு இதற்காக ஒரு சிறப்புப் பாராட்டு.!
தேவராஜின் படத் தொகுப்பில் இடைவேளைக்கு பின்னான காட்சிகளை பயமுறுத்தலோடு தொகுத்திருக்கிறார்கள். ஆஷ்னா பேயாக வந்து செல்லும் காட்சிகளையும், ஆரி பேயாக உருவெடுக்கும் காட்சிகளையும் குழப்பமே இல்லாமல் தெளிவாக பதிவாக்கியிருக்கிறார் படத் தொகுப்பாளர்.
இதனாலேயே ஆரி இதற்கு அடுத்தக் காட்சியில் தன்னை வைத்து பேய் ஆடும் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல தான் தற்கொலை செய்து கொள்ள முயலும் காட்சி ரசிகர்களுக்கு மிக எளிதாகப் புரிகிறது..!
பேய்ப் படங்களில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினையே முந்தைய பேய்ப் படங்களைவிடவும் இது சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான். இல்லையெனில் முந்தைய பேய்ப் படங்களின் சிறப்புக்களுடனேயே இதுவும் இருந்தாக வேண்டும் என்பதுதான்..!
பேய்களை ரசிகர்கள்விட்டாலும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் விட மாட்டார்கள் போலிருக்கிறது..! இத்தோடு பேயை டைவர்ஸ் செய்தால் தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு மிகவும் நல்லது..!
படம் மருத்துவ விழிப்புணர்வு உள்ளிட்ட சிலவற்றை உண்மையாய் பேசியிருந்தாலும் “காதல் திருமணமாகவே இருந்தாலும் 150 பவுன் நகையைக் கொடுத்தாவது திருமணம் செய்ய வேண்டும்” என்கிற கருத்தாக்கத்தை முன் வைப்பதாக இருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது. இயக்குநர் இசாக் இதனை மனதில் வைத்து திரைக்கதையை கொஞ்சம் மாற்றியிருக்கலாம்..!
இந்த ‘நாகேஷ் திரையரங்க’த்தை தைரியமாக ஒரு முறை பார்க்கலாம்…!