இன்னார்க்கு இன்னாரென்று - சினிமா விமர்சனம்

29-07-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சினிமா துறையில் நுழைந்து தங்களது திறமையை வைத்து சாதிக்க வேண்டும் என்று நினைத்து படமெடுப்பவர்கள் ஒரு பக்கம்.. தங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து நாமளும் ஒரு ஹீரோவா நடிச்சுக் காட்டிரணும் என்கிற ஒரு அம்சத் திட்டத்தோட கோடம்பாக்கத்துல கால் வைக்குறவங்களும் இன்னொரு பக்கம் நிறைய வந்துக்கிட்டேயிருக்காங்க. அதுல ஒருத்தர்தான் இந்தப் படத்தோட ஹீரோன்னு நினைக்கிறேன்..!

சொந்தக் கிராமத்தில் ஹோட்டல் தொழில் செய்து வருகிறார் ஹீரோ. அதே ஊரில் இருக்கும் தன் மாமன் மகளை சிறு வயதிலிருந்தே காதலித்தும் வருகிறார்.  ஹீரோயினும் இவரை காதலிக்கிறார். மாமன் அந்த ஊரின் பண்ணையார்(எத்தனை வருஷமாச்சு இப்படியொரு டயலாக்கை கேட்டு?)
இவர்களின் காதல் ஹீரோவின் அப்பாவுக்கு தெரிஞ்சு வேண்டாம் என்று சொல்லி தடுக்கிறார். ஆனால் ஹீரோ கேட்கவில்லை.. ஹீரோயினின் அண்ணன் ஹீரோவை தேடி வந்தவன், வந்த இடத்தில் ஹீரோவின் அப்பாவை ஆத்திரத்தில் அடித்து உதைத்து விடுகிறான். இந்த அதிர்ச்சியிலேயே ஹீரோவின் அப்பா விஜய் கிருஷ்ணராஜ் இறந்துவிடுகிறார்.
இதற்கு நீதி கேட்டு பண்ணையாரிடம் செல்கிறார் ஹீரோ. பண்ணையாரோ முப்பது நாள்ல ஒரு கோடி ரூபாயை சம்பாதிச்சி கொண்டு வா.. என் பொண்ணை தரேன் என்கிறார். அப்பாவை கொலை செய்ததெல்லாம் இப்போது நினைவுக்கு வராமல் போய், இதோ ஒரு மாசத்துல ஒரு கோடியோட வரேன் மாமா என்று சொல்லி பட்டணத்துக்கு வண்டியேறுகிறார் ஹீரோ.
சென்னையில் ஈசிஆர் ரோட்டில் ஹோட்டல் வைத்திருக்கும் தனது சித்தப்பா அனுமோகனிடம் வந்து சரணடைகிறார் ஹீரோ. சித்தப்பனுக்கே அவரோட அண்ணன் செத்தது தெரியாதாம்.. ஹீரோ சொல்லித்தான் தெரியுதாம்.. கதை இப்படி போகுது..!
கடையில் தங்கியிருக்கும் நேரத்தில் சூப்பரா இட்லி சுடுகிறார் ஹீரோ. இதை சாப்பிட்டுவிட்டு போகும் இன்னொரு ஹீரோயின் தனது அப்பாவிடம் வந்து சொல்ல அவரும் வந்து சாப்பிட்டுவிட்டு ஹீரோவை தான் துவக்கவிருக்கும் புதிய கடையில் மாஸ்டராக வந்து வேலைக்கு சேரும்படி கேட்கிறார். ஹீரோவும் சரி என்று சம்மதிக்க..
அண்ணாமலை படக் கதையாக 20 நாட்களில் ஹோட்டல் பெரிசாகி.. வசூல் கொட்டோ கொட்டோவென்று கொட்டி.. ஒரு கோடி ரூபாயை அந்த ஹோட்டல் முதலாளியிடமிருந்து பரிசாக பெறுகிறார் ஹீரோ.. அதை வாங்கிக் கொண்டு சித்தப்பாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு ஓடுகிறார் ஹீரோ.
ஆனால் அங்கே ஹீரோயினுக்கு கல்யாணமாகி சென்னைக்கு போய்விட்ட தகவல் கிடைக்க சென்னைக்கே ஓடி வருகிறார்கள். வந்த இடத்தில் இன்னொரு டிவிஸ்ட்டு.. புது மாப்பிள்ளையை யாரோ கொலை செய்துவிட்டார்கள் என்பது.. தனது காதலி விதவைக் கோலத்தில் இருப்பதை பார்த்து வருத்தப்படுகிறார் ஹீரோ.
இப்போது ஹோட்டல்கார்ரின் மகளான ஹீரோயின் ஹீரோவை தான் மணக்க விரும்புவதாக தனது தந்தையிடம் கூற அவரும் சித்தப்பாவிடம சொல்லி ஹீரோவிடம் பேச்ச் சொல்கிறார். ஹீரோவோ தான் பழைய காதலியையே மணக்கவிருப்பதாகச் சொல்ல கதை திசை மாறுகிறது..
அடுத்தடுத்த காட்சிகளில் யார், யாரை கல்யாணம் செய்யப் போகிறார்கள் என்பதை சஸ்பென்ஸோடு சொல்ல நினைத்து குழப்பு, குழப்பென்று குழப்பியெடுத்து கிளைமாக்ஸை முடித்திருக்கிறார்கள்.
அறிமுக நாயகனின் பெயர் சிலம்பரசன். ஒருத்தரையே சமாளிக்க முடியலை.. அதுக்குள்ள இன்னொருத்தர் அதே பெயர்ல.(போட்டோவையும் நல்லா பார்த்துக்குங்க..) தன்னால் முடிந்த அளவுக்கு கஷ்டப்பட்டு நடிச்சிருக்காரு. சொந்தப் படம் போலிருக்கு. அதான் ஹீரோயிஸத்தை ஓரளவுக்கு மேல விளக்க முடியாத அளவுக்கு அவரோட நடிப்பு இருக்கிறதால எமோஷனல் காட்சிகளையெல்லாம் அதிகமா வைக்காம முடிச்சிருக்காங்க.. ஆனாலும் வசனம்தான் ஒட்டாமலேயே தனி ரூட்ல போய்க்கிட்டேயிருக்கு..
பண்ணையாரின் மகளாக நாயகி அஞ்சனா நடித்திருக்கிறார். கிராமத்து பெண் வேடத்துக்கு ஓகே.. ஏதோ சுமாருக்கு நடிப்பு வருகிறது.. இன்னொரு ஹீரோயின் ஸ்டெபி.. குளோஸப்பில் பார்க்கவே முடியவில்லை.. ஆனாலும் கேமிராமேன் அண்ணனின் உதவியுடன் கொஞ்சம் பயமுறுத்தாமல் காட்டியிருக்கிறார்கள்.. இந்தப் பெண்ணின் நடிப்பும் பரவாயில்லை ரகம்..
அப்பாவாக விஜய் கிருஷ்ணராஜ்.. பண்ணையாராக சந்தானபாரதி..  சித்தப்பாவாக அனுமோகன்…  சென்னை ஹோட்டல் அதிபராக ஆர்.என்.ஆர். மனோகர் என்று இயக்குநர்களாக பிடித்துப் போட்டு வேலை வாங்கியிருக்கிறார். இதில் அனுமோகனின் பங்களிப்பு பெரிது.. இடைவேளைக்கு பின்பு அவரால்தான் கொஞ்ச நேரமாவது உட்கார முடிந்தது.. இதுவே மிகப் பெரிய சாதனைதான்..
தைரியம் இருந்தால் முழு படத்தையும் பார்த்துவிட்டு வந்து பின்னூட்டம் போடுங்கள்..!

இருக்கு ஆனா இல்ல - சினிமா விமர்சனம்

29-07-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1990-ல் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான டெமிமூர் நடித்த ‘ghost’ ஆங்கில படத்தில் இடம் பெற்ற ‘பேய் ஒருவரின் கண்களுக்கு மட்டும் தெரிவது’ என்ற ஒரு சுவாரஸ்யத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு அதில் புதிய திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஐ,டி. நிறுவனத்தில் பணிபுரியும் நாயகன் விவாந்த். இவருடைய நண்பன் ஆதவன். இவர்களுடன் கதாநாயகி மனிஷாஸ்ரீயும் அதே கம்பெனியில்தான் வேலை பார்த்து வருகிறார்.
சுவாரஸ்யமே இல்லாத வாழ்க்கையை வாழும் விரக்தியில் தினமும் குடியும், கும்மாளமுமாக இருக்கிறார் ஹீரோ. ஒரு நாள் விவாந்த் மது அருந்திவிட்டு வீடு திரும்பும்போது விபத்து ஏற்படுகிறது. ஹீரோவின் பைக்குடன் மோதிய ஒரு ஆட்டோவில் இன்னொரு ஹீரோயின் ஈடன் இறந்து கிடக்கிறார்.
உடனேயே தனது நண்பன் ஆதவனுக்கு போன் செய்து என்ன செய்வது என்று கேட்கிறார் ஹீரோ. உடனேயே அங்கேயிருந்து தப்பித்து போயிரு என்கிறான் நண்பன். அப்படியே சத்தமில்லாமல் வீட்டுக்கு வந்து படுக்கிறான் ஹீரோ. ஆனால் பின்னாலேயே ஸ்பாட்டில் இறந்து போன ஈடனின் ஆவியும் அந்த வீட்டில் குடியேறுகிறது..
யாரோ வீட்டில் நடமாடுகிறார்கள் என்று தெரிந்து பயப்படுகிறார் ஹீரோ. நண்பனிடம் சொல்கிறார். நண்பன் இல்லை என்கிறான். ஹீரோவை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான். அந்த மனநல மருத்துவரான ஒய்.ஜி.மகேந்திரனோ, “பேய் இருக்கிறதெல்லாம் உண்மைதான். நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து போகின்ற ஆன்மாக்கள் பேயாக நம் கூடவேதான் இருக்கும்” என்று அவர் பங்குக்கு கொஞ்சம் பயமுறுத்துகிறார்.
கடைசியில் பேய் ஹீரோவின் கண்களுக்கு மட்டும் புலப்படுகிறது.. தான்தான் அந்த விபத்தில் இறந்து போன பெண் என்கிறது பேய். தான் யார் என்பதை கண்டுபிடித்துக் கொடுத்தால்தான் அந்த வீட்டைவிட்டு போவேன் என்று அடம்பிடிக்கிறது பேய்.
அந்தப் பேயை துரத்த பல்வேறு வழிகளையும் கையாள்கிறான் ஹீரோ. பலிக்கவில்லை. “அந்த பேயின் ஆசையை நிறைவேற்றி வைத்தால்தான் பேய் அவனைவிட்டு விலகும்…” என்று மருத்துவர் அறிவுரை சொல்ல.. பேய் யாரென்று கண்டறிய போலீஸ் ஸ்டேஷன், ஆஸ்பத்திரி என்று அலைகிறான்.
அப்போது, அந்த விபத்தில் இறந்து போன ஈடனின் உடன் பிறந்த சகோதரியும் அதே மருத்துவமனையில் கோமா நிலையில் இருப்பதை கண்டறிகிறார்கள். தனது தாயையும் பேய் கண்டுபிடித்துவிட அவர்களது வீட்டில் கொண்டு போய் பேயை விட்டுவிட்டு வருகிறான் ஹீரோ.
ஈடனின் தாய் மருத்துவமனையில் இருக்கும் தனது இன்னொரு மகளை மீட்க பெரும் முயற்சி செய்து வருவதை அறிந்து அவர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறான் ஹீரோ. இதற்காக கம்பெனியில் இருந்து அமெரிக்காவுக்கு போகும் வாய்ப்பைக்கூட நிராகரிக்கிறான் ஹீரோ.
இடையில் பேய் அந்த மருத்துவமனை மருத்துவர் தன்னுடைய அக்காவுக்கு ரகசியமான முறையில் ஊசி போடுவதாக வந்து புலம்புகிறாள். இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் ஹீரோ ஒய்.ஜி.மகேந்திரனிடம் சென்று அந்த மருந்து பற்றி எடுத்துச் சொல்ல.. அவர் அதைப் பார்த்துவிட்டு.. இந்த மருந்தை தொடர்ந்து செலுத்தினால் நோயாளி கோமா நிலையிலேதான் இருப்பான். சுயநினைவு திரும்பாது. அந்தப் பெண்ணுக்கு நினைவு திரும்பாலேயே இருக்க ஏதோ செய்கிறார் அந்த மருத்துவர் என்று சந்தேகத்தைக் கிளப்புகிறார்.
பேயும் ஹீரோவும் அந்த மருத்துவரை பாலோ செய்ய.. அவர் ஒரு பெரிய பிராடு வேலையைச் செய்வது இவர்களுக்குத் தெரிய வருகிறது. ஒரு மிகப் பெரிய பணக்காரருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால் மருத்துவமனையில் இருக்கும் ஈடனின் சகோதரியை கொலை செய்துவிட்டு அவளுடைய இதயத்தை எடுத்து அந்தப் பணக்காரருக்கு பொருத்த திட்டம் தீட்டுவதை கண்டறிகிறார்கள்.
இந்த்த் திட்டத்தை ஹீரோவும், நண்பனும், பேயும் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதுதான் மிச்சம் மீதி கதை..!
நாயகன் விவாந்த் டிவி தொடர்களில் நடித்த அனுபவத்துடன் அழுத்தமாக நடித்திருக்கிறார். சில இடங்களில் புதுமுகம் என்பதே தெரியவில்லை. பண்பட்ட நடிப்பு தெரிகிறது. இன்னமும் நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்தால் நல்லது.. சில இடங்களில் நடிகர் ஜெய் போலவே தெரிகிறார். நடித்திருக்கிறார்.
ஹீரோயின் ஈடன் படம் முழுக்க பேயாக வருவதால் ஒரே காஸ்ட்யூம்தான்.. ஆனாலும் அதில்கூட அழகாக இருக்கிறார். பேய் என்பதால் காதல் காட்சிகளும் இல்லாமல், கண்ணீர்க் காட்சிகளும் இல்லாமல் நடுவாந்திரமாக திரைக்கதை இருப்பதால் இதில் அதிகம் திறமை காட்ட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம்.. ஆனாலும் இவருடைய கண்கள் ஏதோ சொல்ல வருகிறது..
ஆதவன் முழு நீள காமெடியனாக வந்து போகிறார். மனிஷாஸ்ரீ என்ற இன்னொரு ஹீரோயின் ஒரு சில காட்சிகளே வந்து செல்கிறார். முதலில் டாஸ்மாக்கில் அறிமுகமாகும் ஒய்.ஜி.மகேந்திரனின் காட்சிகள் ரசிக்கத்தக்கவை. மனோதத்துவ மருத்துவர்கள் தோற்றத்திலும் அப்படியே இருப்பார்கள் என்பதை இயக்குநர் காட்டியிருப்பது கொஞ்சம் வித்தியாசம்தான்.
இது போன்ற படங்களுக்கு பின்னணி இசையின் உதவிதான் மிகப் பெரிய உதவியாக இருக்க வேண்டும். இதில் கொஞ்சமே உதவி செய்திருக்கிறார் இசையமைப்பாளர்.. ஒரு பயமுறுத்துதல்கூட இல்லாமல் பேயை காட்டியிருப்பது இந்தப் படமாகத்தான் இருக்கும்.. இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்..!
சஸ்பென்ஸ், திரில்லர் படத்திற்கு அவசியமான தேவை வேகவேகமாகச் செல்லும் திரைக்கதைதான். ஆனால் இதில் அதுதான் இல்லை.. இயக்கத்தை இன்னமும் கொஞ்சம் கிரிப்பாக செய்திருந்தால் யாவரும் நலம் அளவுக்கு பேசப்பட்டிருக்கும்.. அந்த திரில்லர் திரைக்கதையில் இருக்கும் ஓட்டையினால் இரண்டாம் பாதியில் வேகம் கூடவே இல்லை.. படமும் நீளமா இருக்கேப்பா என்கிற உணர்வை தோற்றுவித்து அலுப்பைக் கொடுத்துவிட்டது..!
ஆனாலும் ஒரு முறை ரசிக்கலாம்..!

சதுரங்க வேட்டை - சினிமா விமர்சனம்

26-07-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக திடீரென்று ஊர், ஊருக்கு ஒரு அடகு கடைகளும், பர்னிச்சர் கடைகளும் முளைத்தன. மாதாமாதம் பணம் கட்டினால் வருடக் கடைசியில் அவர்கள் கட்டிய தொகையையும் தாண்டி 24 சதவிகதம் வட்டியோடு ஏதாவது ஒரு பொருளை கடையில் இருந்து அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள்..
நம்ம மக்கள் ஓசியில் பினாயிலை கொடுத்தாலும் வாங்குபவர்கள்.. விடுவார்களா..? பணத்தைக் கட்டி குவித்தார்கள்.. அந்த கடைக்காரர்களும் வருடக் கடைசியில் ஒரு நாள் இரவில் கடையையே காலி செய்துவிட்டு ஓடினார்கள்.. இப்படி பல ஊர்களிலும் இப்படியொரு பர்னிச்சர் கடை, அடகு கடைகள் முளைத்து மக்களை ஏமாற்றின..
பல பத்திரிகைகள் இதனைப் பற்றி எழுதியும் மக்கள் ஏமாறுவதை நிறுத்தியபாடில்லை.. ஏமாறுபவன் மாறினால் ஒழிய ஏமாத்துறவன் நிறுத்த மாட்டான் என்பதை போல அதற்கடுத்து பலவித மோசடிகளில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்களே ஈடுபட்டு நம் மானம் காத்தார்கள்..
அந்த மோசடி தமிழர்களில் ஒரு கூட்டத்தைத்தான் இந்தப் படத்தில் உரித்துக் காட்டியிருக்கிறார்கள்.

முதலில் மண்ணுள்ளி பாம்பை 2 கோடி ரூபாய் மதிப்புள்ள விஷமுள்ள பாம்பு என்றும், வீரிய சக்தி கொண்டது என்பதால் வெளிநாட்டில் இதற்கு செம கிராக்கி என்றும் சொல்லி இளவரசுவிடம் பணம் பறிக்கிறார்கள்.. அடுத்து எம்.எல்.எம். கம்பெனியை துவக்கி கலெக்சனோடு எஸ்கேப்பாகிறார்கள்..
போலீஸில் பிடிபட்டு புகைப்படத்தின் மூலம் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏற…. தமிழகம் முழுவதிலும் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து இவரது விதவிதமான கெட்டப்புகள்.. பெயர்களுடன் வீரப் பிரதாபங்கள் தெரிய வர.. போலீஸ் கோர்ட் கஸ்ட்டியில் எடுத்து வெளுத்து எடுக்கிறது.. பணத்தை மட்டும் சொல்ல மறுக்கிறார் ஹீரோ..
ஆனால் வெளியில் இருக்கும் கூட்டாளி உதவியோடு அதே பணத்தை வைத்து குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பை வாங்கிவிட்டு வெளியில் வருகிறார் ஹீரோ. ஆனால் ஏற்கெனவே ஹீரோவால் ஈமு கோழி திட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒருவன் வேறொரு அடியாள் டீமை அணுக.. அவர்கள் ஹீரோவை அமுக்கி அடித்து உதைக்கிறார்கள்..
அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்து தப்பிக்க நினைக்க.. அதுவரையில் ஹீரோவுடன் இருந்தவர்கள் அந்தப் பணத்துடன் எஸ்கேப்பாகுகிறார்கள்.. இப்போது ஹீரோவுக்கு வாயே மூலதனம்.. அதை வைத்து அந்த அடியாள் கும்பலையே வளைத்துவிடுகிறார்..
கும்பகோணத்தில் ஒரு நகைக்கடையில் ஆடி மாத தள்ளுபடி.. காலையில் முதலில் வருபவர்களுக்கே தங்கம் பாதி விலை என்று அறிவித்து பணத்தை அமுக்கித் தப்பிக்கிறார்கள். இவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்து அடுத்த திட்டமாக இளவரசுவிடமே இவர்களை அனுப்பி போலீஸில் சிக்க வைத்துவிடுகிறார் ஹீரோ.
கண் போன போக்கில் போனவர் திருப்பூர் வந்து சேர.. அங்கே இவரை அடையாளம் தெரிந்தவர்கள் புரட்டியெடுக்க.. ஏற்கெனவே எம்.எல்.எம். நிறுவனத்தில் பணியாற்றிய ஹீரோயினை பார்த்து இவரை காப்பாற்றி தன்னுடன் வைத்துக் கொள்கிறார். இவர்களுக்குள் காதலும் வளர்ந்துவிட.. திருமணமும் செய்து கொள்கிறார்கள்.. அமைதியாக வாழ்க்கை போய்க் கொண்டிருக்க.. அப்படியே இருந்துவிட முடியுமா..? செய்த பாவம் ச்சும்மா விடாதே..?
ஒரு கட்டத்தில் அந்த அடியாள் கும்பலுக்கு ஹீரோ இருக்குமிடம் தெரிய வர.. அங்கே வந்து ஆளை அழைத்துச் செல்கிறார்கள்.. இப்போதும் அவர்களுக்கு 5 கோடி பிராஜெக்ட் என்று வாயாலேயே முழம் போட்டு மதுரைக்கு அழைத்துச் செல்கிறார். மதுரையில் பெரிய கிரானைட் பிஸினஸ்மேனை மடக்கி.. அவரிடத்தில் போலி இரிடியத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்கிறார்..
இந்தத் திட்டம் பலித்தாலும் பலிக்காவிட்டாலும் ஹீரோவை உயிருடன்விடக் கூடாது என்று அடியாள் கூட்டமும் காத்திருக்க.. ஹீரோ எப்படி தப்பிக்கிறார்..? கடைசியில் என்னவாகிறார் என்பதுதான் கதை..!
கத்தி எடுத்தவன் கத்தியால்தான சாவான்.. திருடன் கடைசியில் தண்டனையை அனுபவிக்கத்தான் செய்வான் என்பது போன்ற உண்மைகளையெல்லாம் மறைமுகமாக சொல்லி படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்..
படத்தின் மிகப் பெரிய பரபரப்புக்கும், தேடலுக்கும் காரணமே மிக ஆச்சரியமான வகையில்  எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளும், ஹீரோவாக நடித்திருக்கும் நட்ராஜின் அசத்தல் நடிப்பும்தான்..!
தனது உடல் மொழியை லாவகமாகப் பயன்படுத்தி நட்ராஜ் பேசுகின்ற ஒவ்வொரு டயலாக்கும் கேட்போரை மதிமயங்கச் செய்யக் கூடியவை.. எம்.எல்.எம். கூட்டத்தில் அவர் பேசுகின்ற பேச்சு “தேவனாகிய இயேசு உங்களை அழைக்கிறார்” கூட்டத்தில் பிரசங்கம் செய்வார்களே.. அதற்கு சமமானது.. மெஸ்மரிஸத்தை கண்களாலும், பேச்சாலும் வைத்திருந்து படத்திற்கு மிகப் பொருத்தமான ஹீரோவாக்கி வெற்றி பெற்றிருக்கிறார் நட்ராஜ்.. வாழ்த்துகள் ஸார்..!
படத்தின் மிகப் பெரிய பலமே வசனங்கள்தான்.
"உலகத்துல எல்லாமே இருந்தும், உங்களுக்குனு எதுவுமே இல்லைனு இருந்திருக்கீங்களா..?"
"நான் யாரையும் ஏமாத்தலை, ஏமாறத் தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தேன்.."
"இளைய தளபதி விஜய்னு பேர் வைப்போமா...?"
"மதுரைக்காரன் என்னைக்குடா கட்டிங்கோட நிறுத்தியிருக்கான்?" 
"ஒருத்தன் உன்னை ஏமாத்திட்டா அவனை பலி வாங்கனும்ன்னு நினைக்காத, அவனை குருவா நினைச்சுக்கோ... ஏன்னா அவன் உனக்கு பணம் சம்பாதிக்க சொல்லி கொடுத்துருக்கான்."
"நாமல்லாம் முதலாளி ஆக விரும்புற கம்யூனிஸ்ட்.."
"உனக்கு மட்டும் புரிஞ்சிட்டா, நான் வேற ஐடியா யோசிக்கணும்?"
"பாம்புக்கு 200 மொழி தெரியும்.."
"கருணையை வைச்சு பணம் சம்பாதிக்கணும்."
"அஞ்சு வருசத்துல தமிழ்நாடை சிங்கப்பூரா மாத்துறேன்னு சொல்லிட்டு போறாங்க... ஆனா அஞ்சு வருசமா தமிழ்நாடு தமிழ்நாடவேதான் இருக்கு. மாத்துறேன் சொன்னவன் ஏமாற்றுக்காரன்தானே... அவன் மேலே யாரு கேஸ் போடுவா.?"
"நாளைக்குச் சம்பாதிக்க முடியாதுனு நினைக்கிறவன்தான் சேர்த்து வைப்பான். நான் ஏன் சேர்த்து வைக்கணும்..?"
"குற்றவுணர்ச்சி இல்லாம செய்யுற எதுவுமே தப்பில்லை"
"ஓருத்தன ஏமாத்துனும்ன்னா அவன் ஆசைய நாம தூண்டி விட்டாலே போதும்."
"ஒரு பொய்யுல சில உண்மைகளும் கலந்திருக்கணும். அப்போதான் அது பொய்யுன்னு யாருக்கும் தெரியாது..!"
"வாழ்க்கையே அன்பை பகிர்ந்துக்கிறதுக்கும் பரிமாறிக்கிறதுக்கும்தாண்ணே.."
இப்படி வசனத்தாலேயே ஆடியன்ஸை உச்சுக் கொட்ட வைத்து, ரசிக்க வைத்து இறுதிவரையில் அந்த டெம்போ குறையாமல் கொண்டு சென்றிருக்கும் அறிமுக இயக்குநர் வினோத்திற்கு நமது வாழ்த்துகள்..!
இது மட்டுமா..? இவர்கள் ஆடும் சதுரங்க வேட்டைகளுக்கு பெயர் சூட்டி அழைத்திருக்கும் புதிய ஸ்டைலும் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. ‘செட்டியாரும் டபுள் டக்கரும்’, ‘MLM’, ‘பணம் அச்சடித்த ஆயுதம்’, ‘புதிய பயணம்’, ‘சதுரங்க வேட்டை ஆரம்பம்’ இப்படித்தான் சப்-டைட்டில்கள் அசத்தியிருக்கின்றன.
அந்த அடியாள் கூட்டத்தின் தலைவனாக வருபவன் தூய தமிழில் பேசுபவனாக காட்டியிருப்பதில் ஏதும் அரசியல் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. இந்தப் படம் எடுக்கப்பட்ட பின்புதான் விற்பனைக்காக திருப்பதி பிரதர்ஸின் பார்வைக்கே வந்திருக்கிறது.. ஸோ.. கதை, திரைக்கதையில் அவர்கள் தலையிட வாய்ப்பே இல்லை..
ஆனாலும் அந்த தூய தமிழ் கேரக்டர் ஸ்கெட்ச்சே சில இடங்களில் இடிக்கிறது.. “தூய தமிழில் பேசு…” என்று அடியாளிடம் பேசிவிட்டு அந்தத் தலைவன் போனில் ஆங்கிலத்தில் பேசுகிறான்.. என்ன முரண்பாடு..? இது போல் அவ்வப்போது இவரது பேச்சில் ஆங்கில கலப்போடுதான் இருக்கிறது.. சிற்சில இடங்களில் அந்த இடத்தின் சிச்சுவேஷன் சிரிப்புக்காக வேண்டித்தான் அந்த கேரக்டர் தூய தமிழில் பேசியிருக்கிறார் என்பதை நாம் புரிந்தாக வேண்டும்..!
ஹீரோயின் இஷாரா சொந்தக் குரலில் பேசியிருக்கிறாராம். ஒரு குழந்தை போல பேசியிருக்கிறார்.. இவரது வாய்ஸை வைத்தே எம்.எல்.எம். டீமுக்கு ஆள் சேர்க்கும் அந்த டெக்னிக் சூப்பர்..
காதல்வயப்பட்டு.. கல்யாணம் செய்து கொண்டு.. கணவரை சந்தேகமும் பட்டு.. கடைசியாக அவரை பிரிந்த ஏக்கத்தில் பாடல் காட்சிகளில் இவர் காட்டியிருக்கும் எக்ஸ்பிரஷன்கள் இன்னமும் நான்கைந்து படங்களுக்கு இந்த ஹீரோயின் அவசியம் தேவைப்படுவார் என்பதையே உணர்த்துகிறது..!
இளவரசு, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், பொன்வண்ணன் என்று முக்கிய கதாபாத்திரங்கள் அளவோடு நடித்திருக்கிறார்கள்.. சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.. பொன்வண்ணன் பேசும் அந்த குறிப்பிட்ட டயலாக் அருமை.. அதனை ஹீரோ பின்னாளில் நினைத்துப் பார்க்கும் காட்சியும் செம குறியீடுதான்..!
இயக்கத்திலேயே அசத்திவிட்டதால் திரைக்கதையின் ஓட்டத்தில் நாமளும் ஓட முடிந்த்து.. இதற்கு பின்னணி இசையும் துணை நின்றிருக்கிறது.. பாடல் காட்சிகளின் மாண்டேஜ் ஷாட்டுகள் அனைத்தும் லட்டு, லட்டாக கிடைத்திருக்க பாடல்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாமே என்றுதான் தோன்றுகிறது..!
“நீ எத்தனை பாவம் வேண்ணாலும் செஞ்சுக்கிட்டே இரு.. ஆண்டவன் முதல்ல உன்னை ஒண்ணும் செய்ய மாட்டான்.. ஆனா நீ என்னைக்கு உன்னோட ஆட்டத்தை நிறுத்திட்டு போதும்.. ரெஸ்ட்டு எடுப்போம்னு ஒதுங்கும்போதுதான் ஆண்டவன், அவனோட ஆட்டத்தை ஆரம்பிப்பான்..” – இது மகாபாரதத்தில் வரும்  ஒரு வசனம்.. இது இந்தப் படத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறது..!
படத்தின் மிகப் பெரிய சறுக்கலே.. கிளைமாக்ஸ்தான்.. அதுவரையிலும் பணம்தான்.. பணம்தான் முக்கியம்.. பணம்தான் எல்லாமே என்கிற கொள்கையில் இருக்கும் ஹீரோவுக்கு நண்பர்களின் துரோகம்.. ஏற்கெனவே ஏமாற்றப்பட்டவன் கொடுத்த பதிலடி.. பொதுமக்களிடமிருந்து கிடைத்த மரியாதை.. இதெல்லாம் ஒன்று சேர்ந்து அவனது மனநிலையை மாற்றிவிடுகிறது என்பதை அழுத்தமாகச் சொல்லவில்லை..
இப்படியொரு நிலைமையில் சட்டென்று கூட்டாளிகளுக்காக மனம் மாறி மீண்டும் ஒரு கொள்ளையில் ஈடுபடச் செல்வதும் அந்த கேரக்டரை சிதைத்துவிட்டது.. கிளைமாக்ஸில் இப்படித்தான் இருக்கும் என்று முன்பே யூகித்திருந்தாலும்.. படம் நல்லவிதமாக முடிந்துவிட்டதில் இயக்குநருக்கு திருப்தி.. ஆனால் படத்தின் ஒட்டு மொத்த தன்மைக்கு அது விரோதமாக போய்விட்டது..!
ஒரு நீண்ட எண்ட்டெர்டெயின்மெண்ட்டுக்கு கியாரண்டி கொடுப்பதால் இந்தப் படம் நிச்சயமாக ஹிட்டாகும் என்பதில் சந்தேகமில்லை..!
புதுமுக இயக்குநர் வினோத் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!
படத்தின் டைட்டில் கார்டில் “Our sincere Thanks to ஜி. நாகராஜன், எழுத்தாளர்” என தெரிவித்ததற்கு என்ன காரணம்ன்னு தெரியலையே..?

வேலையில்லா பட்டதாரி - சினிமா விமர்சனம்

21-07-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறார் தனுஷ். பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் எழுத்து, இயக்கத்தை நம்பி நடிக்க ஒத்துக் கொண்ட அந்த முதல் முயற்சிக்கே அவரை பாராட்ட வேண்டும்.. தமிழகம் முழுவதிலும் முதல் 3 நாட்களுக்கு தியேட்டர்கள் ஹவுஸ்புல் என்று கணக்கு காட்டுகின்றன இந்த நிமிடம்வரையிலும்.. ஆச்சரியமாக இருக்கிறது..!

சிவில் என்ஜீனியரிங் படித்துவிட்டு தான் படித்த வேலைக்குத்தான் போக வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் வீட்டில் தண்டச் சோறு பெயரையும் வாங்கிக் கொண்டு உலா வருகிறார் தனுஷ். அவ்வப்போது வீட்டு வேலையையும் செய்கிறார். வழக்கமான அப்பா.. வழக்கமான அம்மா.. கூடுதலாக தனுஷைவிட 3 வயது குறைந்த தம்பி.. அவன் ஐடி கம்பெனியில் பெரிய வேலைக்குப் போய் காரே வாங்கி விடுகிறான்.. வேலைக்கு போகக் கூடாது என்றில்லை.. ஆனால் தனக்குப் பிடித்த சிவில் என்ஜீனீயரிங் வேலைக்கு மட்டுமே போக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் தனுஷ்.
இந்த லட்சியத்தை அடையும் நோக்கில் வீட்டில் தண்டச்சோறு என்று திட்டுக்களை வாங்கினாலும் சகித்துக் கொள்கிறார். இந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் “ச்சும்மா சினிமா ஹீரோயின் மாதிரியான பொண்ணு…” என்று அம்மா சரண்யாவாலேயே பாராட்டப்படும் அமலாபால் புதிதாக குடி வருகிறார். ஒரு குடிவேளையில் அவருடன் சந்திப்பு நிகழ்ந்து பின்பு அது சட்டென்று மாறிய வானிலையாக காதலாக உருவெடுக்க இந்த டிராக் தனியாக போய்க் கொண்டிருக்கிறது..
அமலாபாலுடன் ஒரு இனிய பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் அம்மா சரண்யாவுக்கு திடீர் நெஞ்சு வலி வர.. தொடர்ச்சியாக போன் கால்கள் வெட்டி ஆபீஸர் மகனுக்கு வருகிறது. அவர்தான் காதல் வேலையில் தீவிரமாக இருக்கிறாரே.. போனை எடுக்காமல்விட.. இங்கே அம்மா தவறிப் போகிறார்.. அப்பா கத்துகிறார்.. தம்பி கதறுகிறான். இவருக்கு ஒரு அழுகையும் வரவில்லை..
இந்த நேரத்தில் திடீர் திருப்பமாக சரண்யாவினால் உயிர் கிடைத்த(இதை காட்சியின் மூலமாக அமைத்திருக்கலாம்) இன்னொரு ஹீரோயின் சுரபியின் தந்தை வீடு தேடி வந்து “என்ன உதவின்னாலும் தயங்காமல் கேளுங்க.. செஞ்சு தர்றேன்…” என்று சொல்லிவிட்டுப் போகிறார். சுரபியும் பின்னொரு நாளில் தனுஷை தேடி வந்து தன்னுடைய தந்தையும் ஒரு பில்டிங் கன்ஸ்டரக்சன் கம்பெனிதான் வைச்சிருக்கார் என்று சொல்ல.. வேலை கேட்டுச் செல்கிறார் தனுஷ். வேலை பிடிக்கிறது. அங்கேயே அமர்ந்துவிடுகிறார்..
குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்படும் வீடுகளை கட்ட டெண்டர் எடுக்கிறார் சுரபியின் அப்பா. இதில் குறைந்த தொகையில் தனுஷ் தலைமையில் டெண்டர் கேட்க. கிடைக்கிறது.. டெண்டர் கிடைக்காத கோபத்தில் போட்டி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் இளைய வாரிசு அடிதடியில் இறங்க.. தனுஷ் அதனை எதிர்த்து களம் இறங்குகிறார். இறுதியில் என்னாகிறது என்பதுதான் படம்..!
இது முழுக்க முழுக்க தனுஷ் படம்தான்.. தனுஷின் நடிப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.. காட்சிக்கு காட்சி அசத்தியிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமையன்று கடைக்கு அனுப்புகிறார்களே என்று சீறுகின்ற காட்சி.. “கறில கை வை.. பேசிக்கிறேன்..” என்று தம்பியை குதறிவிட்டுச் செல்வது.. அப்பாவின் அனைத்துவித திட்டுதல்களுக்கும், அம்மாவிடம் பாந்தமாக கேள்வி கேட்கும் பாணி.. அமலாபால் சொல்லும் காதல் கணைகளைக்கூட புரிந்து கொள்ளாத நிலையில் பேசுவது.. “அவனுக்கு மட்டும் கார்த்திக்குன்னு ஹீரோ பேரு.. எனக்கு மட்டும் ரகுவரன்னு வில்லன் பேரு…” என்று அம்மாவிடம் சீறுவது.. சிகரெட் பிடித்துவிட்டு அப்பாவிடம் சிக்கும் காட்சியில் பட்டு, பட்டென்று நறுக்குத் தெரித்தாற்போல் பேசும் தனுஷை பிடிக்காதவர்களே நிச்சயம் இருக்க முடியாது.. இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டு இந்த படத்தின் ஹீரோ ரகுவரன்.. அதனால்தான் இந்தப் படத்தின் வெற்றி முதல் காட்சியிலேயே உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது..!
வில்லனிடம் பேசும் ஸ்டைல்.. அந்த நீளமான வசனத்தை ஒரே ஷாட்டில் பேசி அசத்தியிருக்கும்விதம்.. கிளைமாக்ஸில் யாருமே எதிர்பார்க்காத ஒரு டிவிஸ்ட்டாக வில்லனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு கட்டிடத் திறப்பு விழாவுக்கு வருவது என்று திரைக்கதையும், இயக்கமும் அவருக்குத் துணை நிற்க தனுஷ் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்.
இரண்டாவதாக பாராட்ட வேண்டுமெனில் அது சரண்யாவுக்குத்தான்.. இப்படியொரு அம்மாதான் உலகத்தில் அதிகம் பேர் இருக்கிறார்கள். பையன் குடித்துவிட்டு வந்துவிட்டான் என்று தெரிந்து அப்பாவுக்குத் தெரியாமல் தூங்க வைக்கும் படும் பதட்டம்.. மறுநாள் காலையில் அப்பாவை ஆபீஸிற்கு அனுப்பிவிட்டு விளக்கமாத்தை எடுத்து நாலு சாத்து சாத்தும் அம்மா என்று சரண்யா தன் பங்கை நிறைவாகவே செய்திருக்கிறார்..
பொருத்தமே இல்லாத ஜோடிதான்.. ஆனால் சமுத்திரக்கனியின் நடிப்பு பெஸ்ட்டோ பெஸ்ட்டு.. அண்ணன் டயலாக் டெலிவரியில் பின்னுகிறார்.. மைண்ட் வாய்ஸில் பேசுவது போல சன்னமான குரலில் அவ்வப்போது ஹாலில் இருந்து அவர் பேசும் வசனங்கள்தான் தியேட்டரை அதிர வைக்கின்றன. சரண்யா இறந்தவுடன் தனுஷ் மீது கோபம் கொண்டு அவர் செய்யும் அந்த ஆக்சன்.. தத்ரூபம்.. ஆனால் அடுத்த முறையும் சரண்யாவுடன் ஜோடியாக நடிக்க வேண்டாம்.. அக்கா தம்பி மாதிரியிருக்கு..! ப்ளீஸ்..!
கொஞ்சமும் வேலையே இல்லாமல் ச்சும்மா ஹீரோயின் என்ற பேருக்காக வந்து செல்கிறார் அமலாபால்.. ஆனால் அழகு கண்களில் சொக்கிக் கிடக்கிறது.. நடிப்பும் மிளிர்கிறது..! எல்லாமே ஒரு சில காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலுமே தொலைந்து போய்விட்டது..
இடைவேளைக்கு பின்பு வரும் விவேக்கின் போர்ஷன் மிக முக்கியம்தான்.. தனுஷுக்கு விவேக்தான் மிக பொருத்தமான காமெடி ஜோடியாக இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.. ஆனாலும் இந்தப் படத்துக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல் இதிலும் மனைவியை சந்தேகப்படும் அந்த காமெடி தேவைதானா..? வேறு எதையாவது யோசித்திருக்கலாம்.. பேஸ்புக்கை கலாய்க்கலாம் என்றெண்ணி கடைசியாக அவரவர் மனைவியை சந்தேகப்படும்படியாக பார்க்க வைக்கும் லெவலுக்கு கொண்டு போயிருக்கிறார்கள்.. ம்ஹூம்.. இதனை முற்றிலும் மாற்றியிருக்க வேண்டும்.
முதல் பாடலில் இருந்து கடைசிவரையிலும் டிரம்ஸை போட்டு அடி, அடியென்று அடித்து நம் காதைக் கிழித்திருக்கிறார் அன்புத் தம்பி அனிருத்.. ஏதோ பாடல்கள்.. எதுவும் நமக்கு மனதில் நிற்கவில்லை.. ஆனால் ஒளிப்பதிவில் குறைவில்லை.. இருந்த இடத்திற்கேற்றாற்போல் கச்சிதமான ஒளிப்பதிவு.. கட்டிடம் கட்டும் இடங்களையெல்லாம் எங்கே தேடிப் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. அழகு மிளிர படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான வேல்ராஜ்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு கேரக்டர் அந்த சின்ன சைக்கிள் பைக்.. அதனை ஒரு குறியீடாகவே வைத்து திரைக்கதை நகர்வது படு சுவாரஸ்யம்.. அமலாபாலை ஏற்றிக் கொண்டு செல்லும்போது இதைத் தாண்டி ஒரு சிறுவன் சைக்கிள் செல்லும்போது தானாகவே வந்துவிட்டது காமெடி.. அந்த பைக் சைக்கிள் கிளை கதைக்கு இயக்குநருக்கு ஒரு சபாஷ்..!
அதிகப்படியான மதுபானம் சம்பந்தப்பட்ட காட்சிகளும், புகைப்பிடிக்கும் காட்சிகளும் இடம் பிடித்திருப்பது மட்டும்தான் இந்தப் படத்தின் மீதான குறைகள்.. அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் சண்டை முடிந்தவுடன் தனுஷ் ஸ்டைலாக சிகரெட் பற்ற வைத்துவிட்டு நடப்பதெல்லாம் கொஞ்சமல்ல ரொம்பவே ஓவர்.. அதை செய்திருக்கவே கூடாது.. படத்தின் தன்மையை அதிகமாக அது பாதித்திருக்கிறது. ஏதோ ஹீரோயிஸ படம் போல இந்தப் படத்தை அடையாளப்படுத்துகிறது அந்தக் காட்சி..
ஒரு பொறியியல் பட்டதாரி.. உண்மையாகவே மிகத் திறமையான முறையில் கொடுத்த பட்ஜெட்டிற்குள் அந்தக் கட்டிடத்தை உருவாக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறான். நியாயமானவன்.. படித்த படிப்புக்கு ஏற்றவன்.. “கொஞ்சம் குறைத்து செய்தால் அது சரிவராது.. கட்டிடம் இடிந்துவிடும்… செய்ய மாட்டேன்…” என்று சொல்லி வரும் வேலையையும் விட்டுவிட்டு வருபவன்.. தங்களை அடிக்க ஆட்களை அனுப்பியவனிடம் திரும்பவும் சண்டைக்கு போகாமல் அவனை வரவழைத்து மன்னிப்பு கேட்க வைப்பதுகூட ஒரு வித்தியாசமான திருப்பம்தான்.. அதுவும் பொறியியல் பட்டதாரிகள் மீதான மதிப்பை கூட்டியது..
இன்றைக்கு உண்மையாகவே இந்தியாவில் உருவாக்கப்பட்ட பொறியியல் பட்டதாரிகளில் 60 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அவர்கள் நினைத்த வேலைகள் கிடைத்துள்ளன. மீதம் பேர் வேறு வேறு துறைகளில்.. வேறு வேறு வேலைகளில் வேறு வழியில்லாமல் ஈடுபட்டிருக்கிறார்கள். அதிகப்படியான மாணவர்களின் வருகை ஒரு பக்கம்.. வேலைகள் குறைவானது இன்னொரு பக்கம்.. இதில் இரண்டுக்கும் நடுவில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது இன்றைய அவல நிலையை ஒரு பாடல் காட்சியிலும், இடைவேளைக்கு பின்பான சில காட்சிகளிலும் அற்புதமாக படமாக்கியிருப்பதன் மூலம் இதன் இயக்குநர் வேல்ராஜ் நிச்சயம் இந்தாண்டு பேசப்படக்கூடிய இயக்குநராக உருமாறுகிறார் என்பதில் சந்தேகமில்லை..
இப்படியொரு துறை சார்ந்த படமாகவும், பொறியியல் பட்டதாரிகளின் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகவும் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த கிளைமாக்ஸில் தனுஷ் ஈடுபடும் சண்டை காட்சியும், புகைப்பிடிக்கும் காட்சியும் இது தமிழ்ச் சினிமா ஹீரோ தனுஷின் படம் என்பதாக போய் முடிந்திருப்பது மிகப் பெரிய துரதிருஷ்டம்..
எப்படியிருந்தாலும் இதுவரையிலான தனுஷின் நடிப்பு கேரியரில் இதுதான் மிகச் சிறந்த படம் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.. இந்தப் பெருமையை அவருக்குக் கொடுத்த அறிமுக இயக்குநர் வேல்ராஜுக்கு நமது இனிய வாழ்த்துகள்..!
வேலையில்லா தமிழர்களுடன், வேலையில் இருக்கும் தமிழர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம் வேலையில்லா பட்டதாரி..!

பப்பாளி - சினிமா விமர்சனம்

15-07-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. ஏதோ ஒரு தலைப்பு வைக்க வேண்டும் என்பதற்காக வைத்துவிட்டார் இயக்குநர் கோவிந்தமூர்த்தி. அவ்வளவுதான்..!

ரோட்டோரத்தில் தள்ளு வண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறார் இளவரசு. இவரது ஒரே மகன்தான் ஹீரோவான செந்தில். இளவரசுவுக்கு ஒரேயொரு நீண்ட நாள் கனவு உண்டு. அதாவது சரவண பவன் மாதிரி அனைத்து வார்டுகளில் ஒரு சங்கிலி தொடர் ஹோட்டல்களை ஆரம்பிக்க வேண்டுமென்று.. அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டுமே..? அவரும், அவரது மனைவியும் மட்டும் நாயாய் உழைக்க..  மகன் மட்டும் வழக்கம்போல ஊரைச் சுற்றுகிறார்.
ஓரிடத்தில் ஹீரோயின் இஷாராவை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். சில, பல மோதல்களுக்கு பிறகு இருவரும் காதலிக்கத் துவங்குகிறார்கள். எப்போதும் ஜாலியாகவே யதார்த்தமாக இருக்கும் செந்திலுக்கு ஐ.ஏ.எஸ்.ஆவது என்பது ஒரு கனவு. ஆனால் அது பற்றி இடைவேளைக்கு முன்பு ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.. இதைப் பற்றி வருங்கால மாமியாரான சரண்யாவிடம் சொல்ல.. அவர் மாப்பிள்ளையையே வேண்டாம் என்கிறார்.
மகள் காரணம் கேட்க.. தன்னுடைய சொந்தக் கதையைச் சொல்கிறார். சரண்யாவும், நரேனும் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ள.. நரேன் சரண்யாவுக்காகவே ஐ.ஏ.எஸ். கனவைத் தொலைத்துவிட்டு மின்சார வாரிய வேலையில் இருப்பதாகவும் இந்தக் குற்றவுணர்ச்சியுடனேயே தான் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார் சரண்யா. அந்தக் குறையைப் போக்கணும்னா என்னைய படிக்க வைங்களேன். நான் ஐ.ஏ.எஸ். ஆகிட்டா உங்களுக்குத் திருப்தியாயிருமே என்று செந்தில் சொக்குப்பொடி போட.. ஓகே என்கிறார்கள் மாமனார் வீட்டில்.
பொறந்த வீட்டிலோ விருதுநகரில் ஒரு ஹோட்டல் ஓனரின் வீட்டில் பெண்ணை பார்த்து நிச்சயம் செய்துவிடுகிறார்கள். இந்த இக்கட்டில் இருந்து தப்பிக்க வேண்டி செந்தில் காதலியின் வீட்டில் சரணடைய, தடாலடியாக சரண்யா அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்.
அப்பனுக்கும் மகனுக்குமான சண்டையில் இடையில் புகும் மாமியார் சரண்யா, தான் செந்திலை எப்படியாவது ஐ.ஏ.எஸ். ஆக்கியே காட்டுகிறேன் என்று சவால்விட்டு மாப்பிள்ளையை கையோடு தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். சொன்னபடி செய்தாரா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!
கதையின் நாயகனாக செந்தில்.. டிவி தொடரில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் என்பதால் இதில் சிரமப்படாமல் நடித்திருக்கிறார். நகைச்சுவையும், ரொமான்ஸும் கை கூடியிருக்கிறது.. இன்னும் நிறைய படங்கள் கிடைத்து நடித்தால் ஒரு லெவலுக்கு வரலாம்..! தன்னுடைய தோல்விகளை நினைத்து ஒவ்வொரு முறையும் சரண்யாவிடம் அழுது வருத்தப்படும் காட்சியில் நமக்கே லேசான சோகத்தை வரவழைத்துவிடுகிறார். இஷாராவிடம் கொஞ்சும்போதும் அப்படியேதான் நினைக்கத் தோன்றுகிறது..
புதிய ஹீரோயின் இஷாரா. ஒருவேளை இவரைத்தான் பப்பாளி என்று சொல்லியிருக்கிறாரோ என்றால் அதுவும் கொஞ்சமும் பொருத்தமில்லை. ஆனால் முகம் மட்டுமே ஏதோவொன்று இவரிடம் இருக்கிறது என்பதைச் சொல்கிறது.. பாடல் காட்சிகளில் கொஞ்சம் கண்ணியம் காத்து, சில காட்சிகளில் அதைக் காற்றில் பறக்கவிட்டும் தனது நடிப்புத் திறமையைக் கொட்டியிருக்கிறார்..
சரண்யா பொன்வண்ணன்.. சொல்லவே வேண்டாம்.. மாமியாராகவும், தாயாகவும் வாழ்ந்தே காட்டியிருக்கிறார். இப்படத்தின் இயக்குநர் வீடு தேடிச் சென்று கதையைச் சொன்னவுடன்.. அப்படியே அந்தக் கதையில் சில, பல மாற்றங்களையும் சரண்யாவே சொல்லியிருக்கிறார். அதையும் இயக்குநர் ஏற்றுக் கொண்டு மாற்றியிருக்கிறார். ஆக.. இந்தப் படத்தின் கதை, திரைக்கதையில் சரண்யா பொன்வண்ணனின் கைவண்ணமும் அடக்கம் என்பதால் அதற்கு தனியாக பாராட்டிவிடுவோம்..
இளவரசுவின் ஆட்டம் பற்றி தனியாகத்தான் சொல்ல வேண்டும்.. மகனது துரோகத்தைத் தாங்க முடியாத சோகம்.. தனது ஹோட்டல் கனவைவிட மகனது ஐ.ஏ.எஸ். கனவு பெரிதல்ல என்று நினைக்கும் சின்னத்தனம்.. இதனால் இவர் செய்யும் காமெடி கலாட்டாக்கள் என்று கொடுத்த வேடத்தை கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
படத்தின் பிற்பாதியில் வரும்போதெல்லாம் சிரிக்க வைத்திருப்பவர் சிங்கம்புலிதான். லோக்கல் கவுன்சிலராக இருக்கும் சிங்கம்புலிக்கு ஹீரோயின் மீது ஒரு கண்.. அவரை காதலிப்பதாக வீடு தேடி வந்து பெண் கேட்டு.. பொண்ணு படிச்சு முடியட்டும் என்று ஹீரோயின் வீட்டில் சொல்லிவிடுவதால் தனது தொகுதிப் பணிகளையெல்லாம் ஒத்திவைத்துவிட்டு ஹீரோயின் பின்னாலேயே சுற்றி வரும் கேரக்டர்..
தனது கைத்தடிகளில் அவ்வப்போது ஹீரோயினின் ஆக்சன்களுக்கு கவுண்டர் கொடுக்கும்விதம் சூப்பர்.. பல இடங்களில் வாய் விட்டுச் சிரிக்க வைத்தது.. தனி ஆவர்த்தனத்தில் வெற்றி பெற்றுவிட்டார் சிங்கம்புலி. இத்தனை அழகாக நடித்தவர் பிரஸ்மீட் நிகழ்ச்சியன்று தனக்கும் தனி போஸ்டர் அடிக்காததால் வர முடியாது என்று தெனாவெட்டாகச் சொல்லி வீட்டிலேயே இருந்துவிட்டதை மன்னிக்கவே முடியாது. இது இப்படியொரு நல்ல வாய்ப்பை கொடுத்த இயக்குநருக்கு இவர் செய்த துரோகம்..!
விஜய் எபிநேசரின் இசையில் 'மனைவி வீட்டில் வாழப் போகும் பையா' என்ற ரீமிக்ஸ் பாடல் ஒன்றுதான் உருப்படி.. மற்றபடி டாஸ்மாக் பாடலும், காதல் பாடல்களும் காலை வாரிவிட்டன. கூடவே இருக்கும் செவ்வாழையாக ஜெகன்.. அவ்வப்போது சிரிக்க வைத்திருக்கிறார். இவரை இன்னும் கொஞ்சும் உருப்படியாய் பயன்படுத்தியிருக்கலாம்..
ஐ.ஏ.எஸ். தேர்வு என்றில்லை.. படிக்க வேண்டும் என்ற ஆர்வமுடைய பிள்ளைகளை படிக்க வையுங்கள் என்கிற தத்துவத்தை முன்னிறுத்தியிருக்கும் படத்தில் பிற்பாதியில் மட்டுமே அழுத்தமான காட்சிகள் இருப்பதும் ஒரு குறை..! இருந்தாலும் இதனை மன்னிக்கலாம்..!
கமர்ஷியல் படம்தான்.. ஆனால் முதலில் மாத்திரையை முழுங்க வைத்து பின்பு மிட்டாய் கொடுக்கும் சாதூர்யத்துடன் செய்திருக்கிறார் இயக்குநர் ஏ.கோவிந்தமூர்த்தி..! பாராட்டுக்கள்..!

‘ஆரண்யகாண்டம்’ படத்திற்கு தேசிய விருதுகள் கிடைத்தது எப்படி..?

15-07-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
2011-ம் ஆண்டு வெளியான ‘ஆரண்யகாண்டம்’ திரைப்படம் இப்போதும் தமிழ்ச் சினிமாவில் மாற்று சினிமாவை விரும்பும் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறது. ‘தமிழ்ச் சினிமாவில் வெளிவந்த முதல் உலக சினிமா இதுதான்’ என்றுகூட பலரும் இணையத்திலும், இதழ்களிலும் எழுதி வருகின்றனர். இருந்தாலும், படம் தியேட்டர்களில் படுதோல்வியைச் சந்தித்தது.

இந்த ‘ஆரண்யகாண்டம்’ திரைப்படம் 2011-ம் ஆண்டிற்கான தேசிய அளவில் ‘சிறந்த அறிமுக இயக்குநர் விருது’, மற்றும் ‘சிறந்த எடிட்டருக்கான விருது’ என்று இரண்டு விருதுகளை மட்டுமே பெற்றிருந்தது. முக்கியமாக அந்த ஆண்டின் தமிழில் மிகச் சிறந்த படத்திற்கான விருதும், நடிகர், நடிகையருக்கான விருதுகளில் எதுவும் அதற்குக் கிடைக்கவில்லை.. மாறாக ‘வாகை சூட வா’ படத்திற்கு சிறந்த தமிழ் சினிமாவுக்கான விருது கிடைத்தது.
ஒருவேளை, அந்த வருடம் இதைவிட சிறந்த படங்கள் வந்திருந்ததோ என்றெண்ணி சினிமா விமர்சகர்களும், ரசிகர்களும் அமைதியாகவே இருக்கிறார்கள்.
ஆனால் நேற்றைக்கு ‘திருடன் போலீஸ்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் வெளியிட்ட ஒரு தகவலைக் கேட்டவுடன் அநியாயமாக ஒரு படம் தன்னுடைய புகழையும், பெயரையும் இழந்திருக்கிறது என்பதுடன் இதற்கு படைப்பாளிகள் சிலரே துணை போயிருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிந்தது..
முதலில் எஸ்.பி.ஜனநாதனின் பேச்சு..
“2011-ம் வருஷத்திய சிறந்த படங்களைத் தேர்வு செய்யும் ஐந்து நீதிபதிகளில் நானும் ஒருவன். அப்போ ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படமும் தேசிய விருதுக்காக வந்திருந்தது. எங்களுக்காக அந்தப் படத்தை போட்டுக் காட்டினாங்க. படம் ஓடிட்டிருக்கும்போதே 4 நீதிபதிகள் படத்தை நிறுத்தச் சொல்லிட்டு, எந்திரிச்சு போயிட்டாங்க..
நீதிபதிகளுக்கு படம் பிடிக்கலைன்னா நிறுத்தலாம்னு ஒரு விதியிருக்கு. ஆனா எந்தவொரு நீதிபதிக்கும் படம் படிச்சிருந்தா அவர் தொடர்ந்து பார்க்கலாம்னு விதி இருக்கு. அதன்படி நான் அந்தப் படத்தை தொடர்ந்து பார்த்தேன். ஆனால் சிறந்த படத்தின் தேர்வுக்காக நான் ஒருவன் மட்டுமே சிபாரிசு செய்ய முடியாது.  மத்தவங்களும் சொல்லணும்.. அதுனால அந்தப் படத்தை சிறந்த படத்தோட லிஸ்ட்ல சேர்க்க முடியலை..
ஆனாலும் இயக்குனர் ஹரிஹரன்கிட்ட நான் பேசுனப்போ, ‘நீங்க எது, எதுல வருதோ அதுக்கு ரெகமண்ட் பண்ணுங்க.. மேல பேசிக்கலாம்’னு சொன்னார். அதுக்கப்புறம்தான் அந்தப் படத்துக்கு இரண்டு பிரிவுகளில் சிபாரிசு செய்யப்பட்டு சிறந்த அறிமுக இயக்குனர் விருதும், சிறந்த எடிட்டர் விருதும் கிடைத்தது. இதுவே எனக்கு கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது..” என்றார்.
என்ன கொடுமைய்யா இது..? படத்தின் துவக்கத்தில் சில நிமிடங்கள் பார்த்துவிட்டு பிடிக்கலைன்னு சொல்லிட்டுப் போவதுதான் நல்ல படைப்பாளிகளின் செயலா..? ஒரு திரைப்படத்தின் ஆக்கம் என்பது ஒரு சில நிமிடங்களில் முடிந்துவிடுவதில்லை என்பது இவர்களுக்கா தெரியாது..? இறுதிவரையில் பார்த்தால்தான் அந்தப் படத்தின் சிறப்புக்களும், தன்மைகளும் புரியும். இப்படி தாங்கள் எப்போதும் எதிர்பார்க்கும் ‘டிரெண்ட்டில்’ படம் இல்லை என்றவுடன் படத்தை நிறுத்திவிட்டு சென்ற நீதிபதிகள், உண்மையிலேயே படைப்பாளிகள்தானா என்று கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது.
இதில் வெட்கப்பட்டு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம்..
இந்த 2011-ம் ஆண்டில் தமிழ், மலையாள மொழிகளில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் Alaknanda Roy(Head), Sashi Paravoor(Director), S.P.Jananathan(Director), T.G.Thyagarajan(Producer), Bela Negi(Film maker and editor) ஆகியோர்தான்..!
இதில் மற்றவர்களை விடுங்கள்.. எஸ்.பி.ஜனநாதனைத் தவிர இன்னொரு தமிழரும் இதில் நீதிபதியாக இருந்திருக்கிறார். அவர் தற்போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் துணைத் தலைவராக இருக்கும் பிரபல தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன்.
எஸ்.பி.ஜனநாதன் சொன்னபடி பார்த்தால் இவரும்தான் படத்தைப் புறக்கணித்து வெளியேறியிருக்கிறார்..
தமிழனுக்கு தமிழனே எதிரி என்பதற்கு இதைவிடவும் சிறந்த உதாரணம் வேண்டுமா..?

ராமானுஜன் - சினிமா விமர்சனம்

15-07-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வாழ்க்கை வரலாற்று கதைகளை படமாக்குவதில் அனுபவம் வாய்ந்த இயக்குநர் ஞானராஜசேகரன் ஆச்சரியமாக யாருமே நினைத்துப் பார்க்காத கணித மேதை ராமானுஜனை செல்லுலாய்ட் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த நல்லெண்ணத்திற்காகவே அவருக்கு ஒரு பாராட்டு..!

1887 டிசம்பர் 22-ம் தேதி ஈரோட்டில் பிறந்த சீனிவாசன் ராமானுஜனின் பால்ய வயதில் இருந்து, 1920 ஏப்ரல் 20-ம் தேதி தன்னுடைய 32-வது வயதில் மரணமடையும் காலம்வரையிலும் நடந்தவைகளை எவ்வளவு சுருக்க வேண்டுமோ அவ்வளவு சுருக்கி தந்திருக்கிறார்.. இதற்காக பலதரப்பட்ட தகவல்களையும் பல இடங்களில் அலைந்து, திரிந்து கண்டறிந்து எழுதியிருக்கிறார் ஞானராஜசேகரன். மறைந்த எழுத்தாளர் ரகமி எழுதிய ராமானுஜன் பற்றிய புத்தகமும் மிகவும் உதவியாக இருந்திருக்கிறது..!
ராமானுஜனாக சாவித்திரி-ஜெமினிகணேசன் தம்பதியரின் பேரன் அபிநயர் நடித்திருக்கிறார். அம்மாவாக சுஹாசினி, அப்பாவாக நிழல்கள் ரவி.. அப்போதைய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்த விலைவாசி மற்றும் குடும்ப நிலவரங்களை ஓரளவுக்கு இந்தப் படத்தில் இந்தக் குடும்பத்தின் மூலம் காட்டியிருக்கிறார் இயக்குநர்..!
மிகவும் பயந்த சுபாவமுடையாவராக.. அதே சமயம் சட்டென்று மனம் உடையும் தன்மை கொண்டவராக இருக்கும் ராமானுஜனா கணிதத்தில் புலியாக இருந்தார்..? ஆச்சரியமாக இருக்கிறது.. கல்லூரி படிப்பில் கோட்டைவிடுகிறார். அழுகிறார். ஸ்காலர்ஷிப் பெறும் போட்டியிலும் கோட்டை விடுகிறார்.. அழுகிறார்.. திருமணத்திற்குப் பிறகும்கூட அழுகிறார். ஆனால் கணிதத்தைவிடவில்லை.. கச்சிதமாக அதன் கூடவே பயணித்திருக்கிறார்.
கணித்த்தில் வழிமுறைகள் இல்லாமல் விடையை சட்டென சொல்லும் வித்தையை வைத்திருக்கும் ராமானுஜன் அதனை வசன வடிவில் வெளிப்படுத்தும் காட்சி கச்சிதம்.. ராமானுஜன் தியரி எனப்படும் அந்த கணித சூத்திரங்களை விரிவாக்கம் செய்து அலசி, ஆராய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணிதத் துறை வல்லுநர்கள் பல ஆண்டுகள் முயற்சி செய்துதான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த எளிய வழிமுறையை நீங்களே சொல்லலாமே என்று கேட்பதற்கு, அந்த நேரத்தில் நான் அடுத்த சூத்திரத்தை ஆராய்ந்து விடுவனே என்று பதில் சொல்கிறார்..  மேதைகளின் பதில் இப்படித்தான் இருக்கும்..!
ராமானுஜன் எப்படியிருந்தார் என்பது தெரியாமல் நாம் அவர் சார்பில் நடித்தவரை எடை போட முடியாது.. அந்த கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்றாற்போல் நடித்திருக்கிறார் என்பதுதான் சரியான பதமாக இருக்க முடியும்..! அக்கால பிராமண பாஷையுடன் அவருடைய அமைதியான நடவடிக்கையும், பேச்சும் அவர் மீது ஒரு பரிதாபத்தை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்துகிறது.
சென்னை துறைமுக அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது கணித சூத்திரத்தை எழுதி வைத்திருந்த 2 பேப்பர்கள் பிரிட்டிஷ் அதிகாரியின் கையில் சிக்கி அவர் கேள்வி கேட்டு.. இவர் தட்டுத் தடுமாறி கண் கலங்கி சமாளிக்கும் இடம் இன்னும் இவரை வைத்து என்னென்ன செய்யப் போகிறார் இயக்குநர் என்ற லேசான கோபத்தைக்கூட ஏற்படுத்தியது..!
லண்டன் சென்ற பின்பு அவருடைய அந்த அமைதியான வாழ்க்கையையும்,  நண்பர் ஹார்டி கொடுக்கும் ஒத்துழைப்பு, ஊக்கத்தில் ராமானுஜனத்தின் கணித சாதனை தொடர்வதையும் கச்சிதமாகக் காட்டியிருக்கிறார்கள்.  மற்றவர்கள் தன்னை கவனிக்கிறார்கள். பரிகாசிக்கிறார்கள் என்கிற உள்ளுணர்வே அவரை ஒரு நோயாளிக்குவதும்.. இந்த மேதையின் சேவை இந்த அளவுக்கே போதும் என்று நினைத்து டிபி நோயுடன் சென்னை திரும்புகின்ற காட்சிகளெல்லாம் கனமானவை.
வழக்கமான டிபிகல் தமிழ்நாட்டு குடும்பம் போல மாமியார், மருமகள் சண்ட.. மருமகளை அருகிலேயே விடாமல் தடுக்கும் மாமியார் என்று குடும்பச் சண்டையையும் பிய்த்து பிய்த்து வைத்திருக்கிறார் இயக்குநர். கணக்கு பண்ணுவது என்பதில் இருக்கும் இரட்டை அர்த்த வசனத்தைக்கூட அதன் அர்த்தம் தெரியாமலேயே சில இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இதுக்குத்தான் சொல்றது கொஞ்சம் கமர்ஷியல் படமும் செய்யணும்னு..!?
நிழல்கள் ரவி, ராதாரவி, மனோபாலா, தலைவாசல் விஜய், சரத்பாபு, ஒய்.ஜி.மகேந்திரன், அப்பாஸ், டெல்லி கணேஷ், மோகன்ராம், டி.பி.கஜேந்திரன் என்று முக்கிய நடிகர்கள் ஓரிரு காட்சிகள் வந்தாலும் படத்தில் இவர்களுடைய பங்களிப்பு முக்கியமானதாகவே இருக்கிறது..!
மனைவியாக நடித்திருக்கும் பாமா.. அந்தச் சின்னப் பொண்ணான கேரக்டருக்கு கச்சிதம்.. கணவர் தன்னிடம் பேசுவதே இல்லை என்ற வருத்தத்தில் இருப்பதும், மாமியார் அவளைத் தடுக்கும்போது வரும் கோபமும் இந்தப் பெண்ணையும் இந்தச் சிக்கலில் போட்டு வாட்டியிருக்கும் காலத்தின் கொடுமையை நினைத்து வையத்தான் தோன்றுகிறது..!
லண்டனில் இருந்து கணவர் எழுதும் கடிதங்கள் கப்பல் மூலமாக வீடுவரைக்கும் வந்தும் மாமியாரால் மறைக்கப்படுவதும், பாமா கணவரை நினைத்து உருகுவதும், அங்கே பதில் கடிதம் வரவில்லையே என்று ராமானுஜன் வருத்தப்படுவதும் டிராஜிடி..! உண்மையில் இந்த கணித மேதைக்கு எதிரிகள் வெளியில் இல்லை.. வீட்டிற்குள்ளேதான்..!
பூஜ்ஜியம் என்கிற ஒரு சின்ன விஷயத்தை 1 என்ற நம்பருக்கு அருகில் போடப் போட.. அது எத்தனை மதிப்பாகிறது என்பதை சொல்வதில் துவங்கும் இந்த ராமானுஜனத்தின் கணித ஆற்றல் லண்டனில் ஹார்டி தனது சக ஆராய்ச்சியாளர்களிடத்தில் ராமானுஜத்தை அறிமுகப்படுத்துவதில்தான் முடிவடைகிறது.. “நான் கணிதப் பேராசிரியராக இருந்து எதையும் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், கணிதத்தில் பல உண்மைகளைக் கண்ட ராமானுஜனைக் கண்டுபிடித்திருக்கிறேன்..!” என்கிறார் ஹார்டி. நச் என்ற வசனம்..!
இவருடைய இறுதி காலமும் இப்படித்தான் இருக்க வேண்டுமா..? பாரதிக்கு எண்ணி எட்டு பேர் என்றார்கள். இவருக்கும் அதே எண்ணிக்கைதான்.. அத்தோடு அந்தக் கால பிராமணர்கள் வழக்கப்படி கடல் கடந்து செல்வது தோஷம் என்று சொல்லி ராமானுஜத்தின் சாவுக்கு காரணம் சொல்லும் அக்கால மனிதர்களை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லையேதான்..! உலகத்துக்கே ஒரு கணித சூத்திரத்தை உருவாக்கிக் கொடுத்த அந்த மேதையின் இறுதிக் காரியம் செய்யக்கூட சொந்த ஜாதியினர் முன் வராமல் வேறு சாதியினர் முன் வந்து செய்திருப்பது வரலாற்று ஆவணம்..!
குறைகளே இல்லாமலெல்லாம் இல்லை.. 1900-களில் எந்தத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் வாத்தியார்களை ஸார் என்று அழைத்தார்கள்..? ராமானுஜன் ஸார் என்று சொல்லி அழைத்துதான் திரையில் அறிமுகமாகிறார். படத்தின் மிகப் பெரிய பலவீனமே ஆங்கிலேயர்களும் தமிழ் பேசியதுதான்.. உண்மையை உள்ளதுபடி சொல்ல வேண்டுமெனில் அதை ஆங்கிலமாகவே வைத்திருந்து சப் டைட்டில் தமிழில் போட்டிருக்கலாம்.. ஆங்கிலேயர்களும் தமிழிலேயே பேசுவதினால் படம் சில நேரங்களில் டப்பிங் சீரியல் போலாகிவிட்டது..!
ரமேஷ் விநாயகத்தின் பின்னணி இசை கொஞ்சமும் சோகத்தைக் கொடுக்கவில்லை. ஏற்கெனவே மெதுவான திரைக்கதை.. நாடகத்தனமான காட்சிகள் என்று போய்க் கொண்டிருக்கும் நிலையில் இசையும் இப்படி சேர்ந்து கொண்டால் என்ன பீலீங் கிடைக்கும்..? ஒளிப்பதிவு ஒன்றுதான் ஆறுதல்.. சன்னி ஜோஸப்புக்கு நமது பாராட்டுக்கள்..!
மிகக் குறைந்த பட்ஜெட்டில் இருக்கின்ற வசதிகளை வைத்து இவ்வளவுதான் எடுக்க முடியும்.. ஏற்கெனவே ‘பாரதி’, ‘பெரியார்’ எடுத்த அனுபவம் இயக்குநருக்கு கை கொடுத்திருக்கிறது. அதிகமாக வெளிப்புறக் காட்சிகளை வைக்காமல், மிக எளிமையாக கதையே பிரதானம் என்றெண்ணி ஒரு படைப்பை தன்னால் முடிந்த அளவுக்கு நேர்மையாக அளித்திருக்கிறார்.
ராமானுஜன், அவரது மனைவி, குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் கொஞ்சம் எடிட்  செய்திருந்தால், இதனை பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்றே சொல்லியிருக்கலாம்..!
நிச்சயமாக இதுவொரு வரலாற்றுப் படைப்புதான்.. தமிழ்ச் சினிமாவில் பத்திரப்படுத்தப்பட வேண்டிய ஒன்று..!

அரிமா நம்பி - சினிமா விமர்சனம்

09-07-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன கதைதான்.. ஆனால் விஷுவலில், புதிய திரைக்கதையில் அசத்தியிருக்கிறார்கள். ஒரு மத்திய அமைச்சரின் வேலைக்கே உலை வைக்கும்விதமான காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை மீட்க வேண்டி ஒரு டிவி சேனல் அதிபரின் மகளைக் கடத்துகிறார்கள். அவளுடைய காதலனான ஹீரோ தற்செயலாக இதில் சம்பந்தப்பட.. கடத்தப்பட்ட காதலியை  எப்படி மீட்கிறான் என்பதுதான் கதை..!
இந்த மெமரி கார்டு, சிம் கார்டு, செல்போன் இவைகளை வைத்து கடந்த சில ஆண்டுகளில் ஹாலிவுட், பாலிவுட், கோடம்பாக்கத்தில் நிறைய கதைகள் வந்துவிட்டன. இருந்தாலும் புத்திசாலித்தனமான வேகமான திரைக்கதையால் இந்தப் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
முதல் காட்சியிலேயே ஒரு கலாச்சாரப் புரட்சியை எடுத்து வைத்திருக்கும் இயக்குநர் இதற்காக பிரஸ்மீட்டில் சொன்ன பதிலை கேட்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.. “பெண்கள் பாருக்கு சென்று குடிப்பது போல காட்சிகள் வைத்திருக்கிறீர்களே.. இது நல்லதா..?” என்ற கேள்விக்கு.. “ஆண்கள் மட்டும் குடிக்கிறார்களே.. பெண்களும் குடிக்கட்டுமே என்பதை சொல்லத்தான் அந்தக் காட்சியை வைத்தேன்..” என்றார் இயக்குநர். வாழ்வாங்கு வாழ்வீர் இயக்குநர் அவர்களே..! பாரில் மட்டுமல்ல.. ஹீரோவை வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கேயும் வோட்கா பாட்டிலை காலி செய்கிறார் ஹீரோயின். தைரியமான கேரக்டர்தான்..
இதற்குப் பின்தான் அதகளம் ஏற்படுகிறது.. ஹீரோயினை கடத்த.. ஹீரோ போலீஸ் ஸ்டேஷனுக்கு போக.. சப்-இன்ஸ்பெக்டர் வந்து தேடிப் பார்க்க.. வீடு கலையாமல் அப்படியே இருக்க.. ஏதோ தவறு இருக்கிறதே என்று ஊகித்து ஹீரோவும், சப்-இன்ஸ்பெக்டரும் ஹீரோயினின் அப்பா வசிக்கும் ஈசிஆர் ரோடு வீட்டுக்குச் சென்று பார்க்க.. அங்கே நடக்கும் துப்பாக்கிச் சூட்டில் ஹீரோயினின் அப்பா சாகிறார். ரோட்டில் நடக்கும் சண்டையில் சப்-இன்ஸ்பெக்டர் இறக்கிறார்.
சாகும் தறுவாயில் அந்த நல்ல சப்-இன்ஸ்பெக்டர்.. “நீ நல்லா ஸ்டண்ட் போடுறப்பா.. இந்தப் பிரச்சினையை இப்படியே விட்ராத.. எப்படியாச்சும் தேடி உண்மையைக் கண்டுபிடி...” என்று சொல்லிவிட்டே சாகிறார்.. இதன் பின்பு ஹீரோ அவர்களைத் தேடி ஓட.. படமும் ரன் வேகத்தில் ஓடுகிறது.. ஆனாலும் அநியாயத்திற்கு லாஜிக் ஓட்டைகள்..!
அந்தப் பகுதி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டுத்தான் கடத்தியிருக்கிறார்கள். அதே சம்பவத்தைப் பற்றி புகார் சொல்ல ஒருவன் வந்திருக்கிறான் என்றால் அந்த இன்ஸ்பெக்டருக்கு ஏதாவது அதிர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டுமா இல்லையா..? ம்ஹூம்.. எரிந்து விழுகிறார் இன்ஸு..
ஒரு மத்திய அமைச்சர் செய்த கொலை அந்த மெமரி கார்டில் பதிவாகியிருக்கிறது. அது தற்செயலாக ஒரு டிவி சேனல் அதிபரின் கையில் சிக்கிவிட்டது. அதை மீட்க போலீஸை அனுப்பி மிரட்டுகிறார்கள். மகளைக் கடத்துகிறார்கள்.. இதெல்லாம் நடக்குற விஷயமா..? மீடியாவை இவ்வளவு எளிதா எடை போட்டுட்டாரே இந்த இயக்குநர்..? ஒரு இன்ஸ்பெக்டர் ஒரு சேனல் அதிபரை நேரில் சந்தித்து மிரட்டுகிறாராம்.. இது எந்த ஊர்ல..? (ஆனாலும் இது போன ஆட்சிக் காலத்தில் சென்னையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் என்று மீடியாவுலகம் இப்போது கிசுகிசுக்கிறது..)
சாகும் நிலையில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஹீரோவிடம், “இதுல ஏதோ மர்மம் இருக்கு.. கண்டுபிடி”ன்னு சொன்னாலும் நம்பலாம்.. “நீ நல்ல சண்டை போடுற.. அவனுக துப்பாக்கிதான் வைச்சிருக்கானுக.. அதுனால உன்னால அவனுகளைத் தோக்கடிக்க முடியும்.. விடாத.. பிடி.”. என்கிறார்.. எதற்கு இந்த உசுப்பேற்றல்..?
ஒரு மத்திய அமைச்சர், மாநில ஆளும் அரசுடன் கூட்டணி கட்சியாகவே இருந்தாலும் அதிகப்பட்சம் என்ன செய்துவிட முடியும்..? மாநிலத்தில் இருக்கும் தன் துறையைத்தான்  கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.. ஆட்டிப் படைக்க முடியும்.. ஆனால், தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மாநில அரசின் உள்துறையை கட்டுப்படுத்துவது போலவும், மாநில போலீஸுக்கே ஆர்டர் போடுவது போலவும் காட்சிகளை வைத்து கொஞ்சம் சிரிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர்.
போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கே நேரில் வரும் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஹீரோவை வடபழனி ஏரியாவில் பார்த்தவுடனேயே கொல்ல உத்தரவிடுகிறார். இவர் உத்தரவை கூடுதல் டிஜிபி ஒருவர் அப்படியே கடமையாற்றுகிறாராம்.. தெலுங்கு கதாசிரியர்கள் மட்டுமே இப்படியெல்லாம் நேக்காக யோசிப்பார்கள்..!
தமிழ்நாட்டில் இதெல்லாம் நடக்குற காரியமா..? ஏற்கெனவே மத்திய அமைச்சர்கள் மூன்று பேர் சிறைக்குள் தள்ளப்பட்ட கதையைத்தான் தமிழகம் சந்தித்திருக்கிறதே..? இயக்குநர் பேப்பரே படிப்பதில்லை போலும்..!
ஹீரோ விக்ரம் பிரபுவிற்கு இது மூன்றாவது படம்.. மனுஷனுக்கு ரொமான்ஸ்தான் வராமல் பாடாய்படுத்துகிறது. ஆனால் ஆக்சனில் பின்னுகிறார்.. போலீஸ் ஸ்டேஷனில் திக்கித் திணறி ஒப்பிக்கும் காட்சியில் நடிப்பை சொல்ல வைத்திருக்கிறார்.. பாரில் நடக்கும் காட்சிகளில் ரொம்ப ரொம்ப சாதாரணமாகத் தோன்றுகிறார். இது போன்ற படங்களின் ஹீரோக்களுக்கு பார்த்தவுடன் ஒரு கவர்ச்சி வேண்டும் என்பார்கள்.. அதுதான் மிஸ்ஸிங்.. மற்றபடி இறுதிவரையில் இவர் ஓடும் ஓட்டத்தினால்தான் படமே இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது..
ஹீரோயின் பிரியா ஆனந்த்.. ரொம்ப தைரியமாக மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடித்திருக்கிறார். அதற்காக ஒரு பாராட்டு. இத்தனை அழகா இவர்..? இதற்கு முன்பு இவர் நடித்த படங்களின் கேமிராமேன்களிடம் கேட்க வேண்டி கேள்வி இது..? வோட்காவை முழுதாக சோடா கலக்காமல் குடிக்க முடிவெடுத்து சொல்லும் காட்சியில் தயக்கமின்று கை தட்ட வைத்தார்.. பாடல் காட்சிகளில் காஸ்ட்யூம்ஸ் பாதி.. மீதியில் கால்வாசியை கேமிராவும் பிடுங்கிக் கொள்ள மிகச் சரியாக இவரது அழகே காட்சியை பரிபூரணமாக்குகிறது..
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது எம்.எஸ்.பாஸ்கரை.. ஒரு இன்வெஸ்டிகேட்டிவ் ஆபீஸர் எப்படி பேச வேண்டும் என்பதற்கு இவர் ஹீரோயினின் அப்பாவிடம் பேசுகின்ற காட்சியே சாட்சி.. மிகவும் யதார்த்தமாக, அடக்கமாக, அமைதியாக வாட்ச்மேனை அதட்டி வேலை வாங்கும்விதமும் அவர் போட்டிருக்கும் காக்கிச் சட்டைக்குப் பொருத்தமானது..! ஒரு சில காட்சிகளே ஆனாலும் மறக்க முடியாத கேரக்டர் பாஸ்கருக்கு..!
தெலுங்கு ஹீரோ சக்கரவர்த்தி வில்லனாக வந்திருக்கிறார்.. ஸ்டைலிஷான நடிப்பு.. ஒரு மத்திய அமைச்சருக்கே உரித்தான பந்தா.. அந்த உடல் மொழி.. எல்லாம் சரி.. ஆனால் “உன்னைப் போல அழகியை நான் பார்த்ததே இல்லை..” என்று லேகா வாஷிங்டனை பார்த்து சொல்கிறார் பாருங்கள்.. அது ஒன்றுதான் சகிக்கவில்லை..! ஐயோடா சாமி..!
கிளைமாக்ஸில் ஏதோ ஒன்று நடக்கிறது என்பதை நமக்கு ஊகிக்கக் கொடுத்துவிட்டு சக்கரவர்த்தியை அம்பவோவென விட்டுவிட்டார் இயக்குநர். அதுவும் டிவியில் லைவ் ரிலே ஆகி.. அந்தக் களபரத்திலும் மனிதரை ரசிக்க முடிந்தது..!
அருள்தாஸ் கச்சிதமான அடியாள் வேடம்.. பணத்தின் தேவை கருதி செல்போனில் நைச்சியமாகப் பேசுவதும்.. வங்கியில் இருந்து துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவுடன் யார்ரா இவன் என்று தன் கையாளிடம் கேட்டுவிட்டு முழிப்பதும் நல்ல காமெடி.. இந்த காட்சியில் இருந்த பரபர திரைக்கதையில் இதனுள் இருந்த மிகப் பெரிய ஓட்டையை மறந்தே போனார்கள் ரசிகர்கள்..
பணத்திற்காகத்தான் இத்தனையும் செய்யும் அருள்தாஸ், அந்தப் பணமே தங்கள் கையைவிட்டுப் போய்விட்டதை உணர்ந்தும் சர்வசாதாரணமாக இருப்பதும்.. லாட்ஜுக்கு திரும்பியவுடன் அடியாளை ஒரு பெண் இழுக்க.. “போறியா.. போ..” என்று ஜாலியாக சிரித்தபடியே சொல்லிவிட்டுப் போவதும் என்னவொரு லாஜிக் ஓட்டை..? எப்படி முடியும் இந்த ரவுடிகளால்..?
இதுவரைக்கும் எத்தனையோ இசையமைப்பாளர்களுக்கு செவிட்ட்டி அடித்திருக்கும் டிரம்ஸ் சிவமணி முதல்முறையாக இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகியிருக்கிறார். முதல் பாடலில் காது கிழிந்தது.. இரண்டாவது பாடலில் அதற்கு நேர் எதிர்.. வார்த்தைகளை வாசிக்கவிட்டு பின்பு மெதுவாக இடையிடையே டிரம்ஸை தடவியிருக்கிறார் சிவமணி.. ஆனால் பின்னணி இசையில் தாலாட்டியிருக்கிறார்.. மெல்லிய இசை.. தேவையான இடத்தில் மட்டுமே டிரம்ஸ்.. வெல்டன் ஸார்..!
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் ஸ்கிரீனைவிட்டு அகலவில்லை கண்கள்.. பெரிய பட்ஜெட்டுதான்.. பெரிய சம்பளம்தான் என்றாலும், இந்த அளவுக்கு குவாலிட்டி கிடைக்குமென்றால் நிச்சயமாக இவரை மாதிரியானவர்களை பயன்படுத்தலாம்..!
ஒரு சினிமாவுக்குத் தேவை தியேட்டருக்குள் இருக்கும் ரசிகனை வேறு எதையும் யோசிக்க வைக்கக் கூடாது என்பதுதான்.. ஆயிரம் குறைகள் இருந்தாலும், படத்தின் செய்நேர்த்தி அனைத்தையும் புறக்கணித்துவிட்டு படத்தை பார்க்கவும் வைத்து, மற்றவர்களிடத்தில் சொல்லவும் வைத்திருக்கிறது..!
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் பிரமாண்டமான செலவிற்கு உரிய மரியாதையை இந்தப் படத்தில் வழங்கியிருக்கிறார் படத்தின் இயக்குநர். அவருக்கு நமது பாராட்டுக்கள்..
ஒரு விறுவிறுப்பான திரில்லரை காண வேண்டுமெனில் அவசியம் இந்தப் படத்தை காணுங்கள்..

என்ன சத்தம் இந்த நேரம் சினிமா விமர்சனம்

03-07-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஹாலிவுட்டின் பரபரப்பு தேடல் தன்மையைக் கொண்ட படங்களைப் பார்த்து பார்த்து அதன் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் இப்படியொரு சினிமாவை தமிழில் படைத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் இயக்கம் பயின்று இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் குரு ரமேஷ்..!
வாய் பேச முடியாத, காது கேளாதோர் பள்ளியில் இருந்து சில குழந்தைகள் மிருக்க் காட்சி சாலைக்கு சுற்றுலா செல்கின்றனர். அன்றைக்கு பார்த்து மலைப்பாம்பு இருக்கும் அறையைப் பூட்ட காவலர் மறந்துவிட.. அது வெளியில் சுதந்திரமாக உலா வருகிறது. இந்த நேரத்தில் 4 குழந்தைகள் அந்தக் காட்டுக்குள் காணாமல் போய்விட.. மிருக்க் காட்சி சாலை காவலர்களும், குழந்தைகளை அழைத்து வந்த டீச்சரும் தேடுகிறார்கள். அவர்கள் கிடைத்தார்களா..? என்னவானது..? என்பதுதான் படத்தின் கதை..!
இந்தப் படத்திற்கு எதற்கு இந்த அபூர்வமான 4 குழந்தைகளை நடிக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை..! ஒரே பிரசவத்தில் பிறந்த அதிதி, அக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி என்ற அந்த 4 குழந்தைகள்தான் இதில் மெயின் கேரக்டர்களை செய்திருக்கிறார்கள். அதிலும் வாய் பேச முடியாத.. காது கேளாத கேரக்டர்கள்.. இந்த கேரக்டர் ஸ்கெட்ச்சையும் இயக்குநர் படத்தில் சரவர பயன்படுத்திக் கொள்ளவில்லை.
படத்தின் துவக்கத்திலேயே குழந்தைகள் பெற்றோர்கள் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போயிருப்பதும், அன்றைக்குத்தான் கடைசியான வழக்கு விசாரணை என்பதையும் சொல்லிவிடுகிறார்கள். அம்மாவும், அப்பாவும் விழுந்தடித்து ஓடிவரும்போதே படத்தின் கிளைமாக்ஸ் என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது..!
கிராபிக்ஸையெல்லாம் தமிழ்ப் படங்களில் கொண்டு வருவதென்றால் அது கடலில் போடும் பெருங்காயம் மாதிரி.. அனகோண்டா சைஸுக்கு ஒரு பாம்பை கிராபிக்ஸில் காட்டுவதற்குள் படாதபாடுபட்டிருக்கிறார்கள்..!
குழந்தைகளை ச்சும்மா வந்து போனதில் இயக்குநருக்கு என்ன திருப்தியோ தெரியவில்லை.. அவர்களுடைய சைகை மொழி சில இடங்களில் அழகாக இருக்கின்றன என்றாலும், தாங்கள் தனித்துவிடப்பட்டிருக்கிறோம் என்ற பய உணர்வே அவர்களிடத்தில் இல்லாமல் இருப்பது, படம் பார்த்தவர்களுக்கே ஏதோ ஒரு படம் பார்த்த உணர்வையே காட்டியது..!
ஒரு சின்ன அழுகை.. ஒரு சின்ன பயம்.. இப்படி எதையுமே காட்டாமல் திரைக்கதையின் ஓட்டத்திற்கேற்ப அங்கிருந்து தப்பிப்பதற்காக அவர்களே செய்கின்ற முனைப்புகளுடன் கதை நகர்வது சின்னப் புள்ளைகளுக்கு ஏற்ற படமாகவே இதனை அடையாளம் காட்டியது..!
இப்படிப்பட்ட கதையில் இந்த மனோபாலா, சிவசங்கர் கதை தேவையா..? இப்படியொரு காமெடி கடத்தல் நாடகத்தினை சலிப்போடு பார்த்து வெறுப்பாகிவிட்டது..! ஒரு போலீஸ் உதவி கமிஷனர் வருகிறார். பின்பு அமைச்சரே தேடி வருகிறார். அவரை வம்பிழுக்கும் ஒரு பெண் பத்திரிகையாளரை “நீ முந்தா நாள் ராத்திரி மகாபலிபுரம் ரோட்டுல ஒரு பையனோட நெருக்கமா கட்டிப்பிடிச்சுட்டு போய் போலீஸ்கிட்ட சிக்கி நல்லவேளையா தப்பிச்சிட்ட.. நீயெல்லாம் என்னைய கிண்டல் செய்றியா..?” என்கிறார் அமைச்சர்..? என்ன கொடுமை சரவணா இது..? இதெல்லாம் இந்தப் படத்துக்குத் தேவைதானா..?
சீரியஸ் நேரங்களில் காமெடி செய்வதை போல சுவாமிநாதன் பிராணிகள் நல வாரியத்தில் இருந்து வந்து “மலைப்பாம்பை கொல்லக் கூடாது..” என்று லெக்சர் அடிப்பதும்.. போலீஸ் கமிஷனரையே உள்ளே விடாமல் அனுமதி மறுப்பது என்பதும் ஏதோ இயக்குநர் இத்தனை நாட்களாக வெளிநாட்டில் வசித்து வந்து இப்போதுதான் தமிழ்நாட்டுக்குள் கால் வைத்திருக்கிறார் போன்ற உணர்வைத்தான் தந்தது..!
அன்றைக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை.. அதற்குள்ள இந்தக் குழந்தைகள் பிரச்சினை என்று திசை திருப்பிய அந்த ஒரு திரைக்கதை மட்டுமே படத்தின் பலம். மதியம் 3 மணிக்கு கல்யாணம் செய்யவிருக்கும் டீச்சர் மாளவிகா.. தந்தைக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து எஸ்கேப்பாக போகும் நேரத்தில் இந்தச் சிக்கல் இவருக்கு..
குழந்தைகளின் அம்மா, அப்பாவாக ‘காதல் மன்னன்’ மானுவும், ‘ஜெயம்’ படத்தின் இயக்குநர் ராஜாவும் நடித்திருக்கிறார்கள். அவ்ளோதான்..! சொல்வதற்கு ஒன்றுமில்லை..! ராஜா இன்னமும் கொஞ்சம் டிரை செய்தால் ‘தம்பி’ போலாகிவிடலாம்..!
ஒரு மயில் தோகையைத் தருவதாகச் சொல்லி வாக்கு கொடுத்துவிட்டு அதை எடுக்க நேரமில்லாமல் தவிக்கும் இமான் அண்ணாச்சி.. தனது காதலிக்கு அன்றைக்கு திருமணம் என்பதால் அதே நேரம் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலை செய்யத் தயாராகியிருக்கும் கார்டு நிதின் சத்யா.. டைவர்ஸ் கிடைத்துவிடும் என்கிற பரபரப்பில் இருக்கும் அம்மா, அப்பா.. இப்படி இவர்களது கதையுடன் துவங்கும் இந்தப் படம் மிருகக் காட்சி சாலைக்குள் வந்தவுடன் வழி தெரியாத மலைப்பாம்பாக மாறிவிடுகிறது..
நிதின் சத்யாவின் சீரியஸே இல்லாத தன்மையும், மாளவிகாவுடன் சேர்ந்து தேடுதல் வேட்டை நடத்தும் காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக எரிச்சலைத்தான் உண்டு செய்கிறது.. தூக்க மாத்திரையை விழுங்கியவுடன் மலைப்பாம்பு சட்டென மயங்கி விழுவதாக அமைத்திருக்கும் திரைக்கதை.. விட்டலாச்சார்யாவையே தோற்கடித்துவிட்டது..
இமான் அண்ணாச்சி சிகரெட் லைட்டரை வைத்து மலைப்பாம்பிடம் இருந்து தப்பிப்பதும் இதே கதைதான்.. கிளைமாக்ஸில் அந்தக் குழந்தைகள் ரெஸ்ட்டாரெண்ட்டை தேடிப் பிடித்து ஓடி வரும் இடம்கூட படத்தை முடிக்கணுமேன்னு இயக்குநர் அவசரப்படுத்தியதால்தான் என்று நினைக்கிறோம்..!
இன்னொருவுலகத்தின் பரவசத்தையும், அடுத்தது என்ன என்ற பரபரப்பையும், குழந்தைகளின் ஆர்வத்தையும், மிருகக் காட்சி சாலையை பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரித்திருக்க வேண்டிய இந்தப் படம், வெறுமனே ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் ஒன்றாக நடித்திருக்கும் முதல் தமிழ்ப் படம் என்கின்ற லிம்கா சாதனையைப் படைத்திருக்கும் ஒரு செயலைத் தவிர வேறெந்த பெருமையையும் பெறவில்லை..!
அந்தக் குழந்தைகளுக்கு எமது வாழ்த்துகள்..!