ஈழத்துச் செய்திகள்..! - 12-11-2010

13-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இறுதிக் கட்டப் போரில் விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்..!

விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுத விபரங்களை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது

தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து இதுவரை 21 நீண்டதூர ஆட்லறிப் பீரங்கிகளும், சுமார் 800 பல்வேறு வகையான மோட்டார்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கைப் படைத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக படை வட்டாரங்களில் இருந்து பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு "ஐலன்ட்" நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

புலிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆட்லறிகள் விபரம் வருமாறு :-

152 மி.மீ ரகத்தைச் சேர்ந்த ஆட்லறிப் பீரங்கிகள் ஆறு.
130 மீ.மீ ஆட்லறிகள் ஒன்பது,
122 மி.மீ ஆட்லறிகள்  ஆறு.
85 மி.மீ ஆட்லறிகள் இரண்டு. 

இவையனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை.

புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார்கள்:-

120 மி.மீ மோட்டார்கள் 57,
82 மி.மீ மோட்டார்கள் 38,
81 மி.மீ மோட்டார்கள் 147,
60 மி.மீ மோட்டார்கள் 487,
கொமாண்டோ மோட்டார்கள் 65

ஆகியனவும் அடங்கியுள்ளன.

அத்துடன், ஆறு குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கிகள் மூன்று, 
பின்னுதைப் பற்ற பீரங்கிகள் 14   ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை சீனத் தயாரிப்பான ஆட்லறிகளும் மோட்டார்களும் என்று புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போர் முடிவுக்கு வந்து 16 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் சிறியளவிலான ஆயுதங்கள் இன்னமும் மீட்கப்பட்டு வருகின்றன. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெரும்பாலான கனரக ஆயுதங்கள் போரின் இறுதி ஐந்து மாதங்களில் ஏ-9 வீதிக்கு கிழக்குப் பக்கத்திலேயே மீட்கப்பட்டன.

இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மீட்கப்பட்ட ஆயுதங்களில்

விமான எதிர்ப்பு ஏவுகணைகள் 21,
தெர்மோபெரிக் ஆயுதங்கள் 55,
40  மி.மீ கிரனேட் செலுத்திகள் 253,
ஏவுகணை செலுத்திகள் 14,
23 மி.மீ பீரங்கிகள் 07,
12.7 மி.மீ கனரகத் துப்பாக்கிகள் 96,
பல நோக்கு இயந்திரத் துப்பாக்கிகள் 273,
ரி 56 துப்பாக்கிகள் 14,232,
ஏ.கே 47 துப்பாக்கிகள் 103,
எம் 16 துப்பாக்கிகள் 63,
குறி பார்த்துச் சுடும் சினப்பர் துப்பாக்கிகள் 34,
9 மி.மீ கைத் துப்பாக்கிகள் 441,
மைக்ரோ கைத்துப்பாக்கிகள் 167,
14.5 மி.மீ இடம் நகர்த்தக் கூடிய விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் 25,
விமான எதிர்ப்பு ஏவுகணை கள் 08,
ரி 55 பிரதான மர் டாங்கி கள் 02,
152 மி.மீ, 130மி.மீ, 122மி.மீ, 120 மி.மீ பீரங்கிக் குண்டுகள் 3964,
விமானக் குண்டுகள் 1143,
கிளைமோர் குண்டுகள் 7069,
கைக்குண்டுகள் 35,315,
வெடிக்க வைக்கும் கருவிகள் 61,788,
புலிகளின் தயாரிப்பு வெடிபொருள்கள் 4517
 

ஆகியனவும் அடங்கியுள்ளன.

இதைவிட புலிகளின் இரகசிய மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் நடவடிக்கைகளுக்கான மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.  இவற்றில்...

167 மைக்ரோ கைத்துப்பாக்கிகளுடன் கூடிய 377 தற்கொலைத் தாக்குதல் அங்கிகள்,
6265 கிலோ எடையுள்ள சி 4 வெடிமருந்து,
188 கிலோ எடையுள்ள ரி.என்.ரி வெடி மருந்து,
3186 கிலோ ஜெலிக் நைற்,
40 தற்கொலை இடுப்புப் பட்டிகள்

உள்ளிட்ட பல பொருள்களும் அடங்கியுள்ளன.

இரண்டு கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 21 துப்பாக்கிகளில் சைலன்சர் பொருத்தப்பட்டிருந்தன.

20 தற்கொலைத் தாக்குதல் படகுகள்,
13 சேதமடைந்த கடற்புலிகளின் படகுகள்,
228 வெளியிணைப்பு இயந்திரங்கள்,
11 இஸ்ரேலிய மினியுசி துப்பாக்கிகள்
உள்ளிட்ட 279 வகையான பொருள்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

சிங்கள ராணுவம் கூட்டிச் சென்ற எங்கள் கணவன்மார்கள் எங்கே..?: யோகி, இரத்தினதுரை மனைவிமார் கதறல்..!

“2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் திகதி வட்டுவாகலில் வைத்து ஏற்றிச் செல்லப்பட்ட எங்கள் கணவன்மாரைப் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில்லை. அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதையாவது வெளிப்படுத்துங்கள்..” என விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களான யோகி மற்றும் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஆகியோரின் மனைவிமார் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னர் சட்சியமளித்துள்ளனர்.

கற்றிந்த பாடங்களுக்கும் நல்லிணக்கணத்திற்குமான ஆணைக் குழுவின் யாழ்.மாவட்டத்திற்கான அமர்வு நேற்று அரியாலை சரஸ்வதி சனசமுக நிலையத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்கையில், “எங்கள் கணவன்மார் மே மாதம் 18-ம் திகதி வட்டுவாகல் பகுதியில் வைத்து ஏற்றிச் செல்லப்பட்டனர். இன்றுவரைக்கும் எந்த முடிவும் கூறப்படவில்லை” என்றனர்.

யோகியின் மனைவி ஜெயவதி சாட்சியமளிக்கையில் “கடந்த மே மாதம் 17-ம் திகதி நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சேர்ந்தோம். 18-ம் திகதி காலை சரணடையுமாறு இராணுவத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எமது கணவர் மற்றும் புதுவை இரத்தினதுரை மற்றும் பேபி சுப்பிரமணியம், லோரன்ஸ் திலகன் ஆகியோர் சென்றிருந்தனர்.


சரணடைந்தவர்கள் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டனர் இன்றுவரைக்கும் அவர்கள் பற்றிய எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை..” என்றார்.

தொடர்ந்து புதுவை இரத்தினதுரையின் மனைவி சிறீரஞ்சனி தனது சாட்சியத்தில் “யோகியுடன் எனது கணவரும் ஏற்றிச் செல்லப்பட்டார். அவர் பற்றிய முடிவுகளும் எனக்குக் கிடைக்கவில்லை. அவர் பற்றிய முடிவுகளையும் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டதுடன் தமது கணவன்மாருடன் சுமார் 6 பேருந்துகளில் ஏற்றப்பட்டவர்களில் ஒருவருடைய விபரங்கள்கூட இன்னமும் வெளியிடப்படவில்லை..” எனவும் தெரிவித்தனர்.

மேலும் “தமது கணவன்மாரை ஜோன்சன் என்கிற பாதிரியாரே சரணடையுமாறு வலியுறுத்தியதாகவும் அவர் பற்றிய தகவல்கூட இன்னும் இல்லை” எனக் கூறினர்.

எனினும் இவ்விடயம் பற்றி தாம் ஆராய்வதாக கூறிய ஆணைக் குழுவின் தலைவர் சி.ஆர்.டீசில்வா “உங்களுடைய கணவன்மார் புலிகளுடன் தொடர்புடையவர்களா..?” என குறுக்குக் கேள்விகளை கேட்டனர்.

மகனை இழந்த தாய் ஈ.பி.டி.பி. கட்சிக்கு எதிராக ஆணைக் குழு முன் சாட்சியம்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி.) முகாமுக்குள் 2006.02.02 அன்று சென்ற எனது மகன் இன்னும் திரும்பி வரவேயில்லை. அவரை அங்கு தேடிச் சென்றபோது தன்னை விரட்டியடித்ததாக நேற்று நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த விதவைத் தாய் ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த கால யுத்த சூழலில் பிள்ளைகளை பறி கொடுத்த தாய்மாரில் ஒருவரான ரங்கநாதன் விசாலாட்சி என்கிற விதவைத் தாய் தேசிய நல்லிணக்க ஆணைக் குழு முன் சாட்சியம் வழங்கியபோது மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு :

சம்பவ தினம் யாழ். நகரப் பகுதிக்கு சென்று வருகின்றேன் என்று சொல்லி சைக்கிளில் புறப்பட்டு சென்ற மகன் திரும்பி வரவே இல்லை. அவர் ஈ.பி.டி.பி முகாமுக்குள் கூட்டிச் செல்லப்பட்டமையை கண்டதாகவும், அவர் திரும்பி வெளியில் வரவே இல்லை என்றும் நான் விசாரித்தபோது நேரில் பார்த்தவர்கள் கூறி இருந்தனர்.

நான் உடனடியாக ஈ.பி.டி.பி முகாமுக்கு சென்று மகனை விசாரித்தபோது என்னை அங்கிருந்து கலைத்து விட்டனர். திருப்பி அனுப்பினர். எனது கணவர் புற்று நோயால் இறந்து விட்டார். இரு பிள்ளைகளில்  மற்றவர் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்.

ஈ.பி.டி.பி முகாமுக்கு பின்னரும் பல தடவைகள் சென்று விசாரித்து இருக்கின்றேன். பலரிடமும் முறையிட்டிருக்கின்றேன். எந்த பலனும் இல்லை. எனவே நீங்கள்தான் எனது மகனை மீட்டுத் தர வேண்டும் என்று அந்த விதவைத் தாய் கண்ணீர் மல்க  தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பு வாகரையில் உயர் பாதுகாப்பு வலயமும் சிங்கள குடியேற்றமும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கே உள்ள கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாகரை பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலயமும் இதற்குள் பாரிய இராணுவ முகாமும் இதனை அண்டிய பிரதேசங்களில் சிங்களவர்களைக் குடியேற்றவும் முயற்சி இடம் பெறுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

தற்போது இந்த பிரதேசத்தில் அதாவது வாகரைக்கு தெற்கே உள்ள காயாங்கேணி மாங்கேணி பனிச்சங்கேணி போன்ற இடங்களில் பிரதான வீதியின் இருமருங்கிலும் படையினரால் வேலி இடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன சுமார் 15 கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட பிரதேசத்தில் கடற்படையினரும் இராணுவத்தினரும் முகாமிடுவதற்கான முன்னேற்பாடுகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளன.

இந்த பிரதேசத்திற்குள் அடங்குகின்ற மாங்கேணி என்ற இடத்தில் அமைந்துள்ள மரமுந்திரிகை கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்காக கட்டுமானப் பொருட்கள் ஏற்கனவே இங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்ததும் அறிவோம்.

இந்த அத்து மீறிய சிங்கள குடியேற்றங்களை உடன் நிறுத்துமாறு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இது விடயமாக பலமுறை பாராளுமன்றத்திலும் உரையாற்றி இருந்தார்கள் இதற்கும் மேலாக இந்தியாவிடமும் இந்த அத்துமீறிய குடியேற்றங்களை உடன் தடுத்து நிறுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும்படி கேட்டிருந்தார்கள் ஆனால் இவைகளால் எந்த பயனும் கிடைக்கவில்லை மாறாக சிங்கள அரசு திட்டமிட்டபடி தனது செயற்பாட்டை தொடர்கின்றதைக் காண்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசம் இயற்கை வளம் நிறைந்த தமிழரின் பூர்வீக பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் எதிர்காலத்தில் இந்த பிரதேசத்தில் தமிழர்கள் வாழ்வார்களா? என்பது கேள்விக்குறியாகவேதான் தென்படுகின்றது.

யாழில் சிங்கள மக்கள் தங்கியுள்ள காணிகளை பலவந்தமாக கைப்பற்ற முயற்சி : திவயின பத்திரிகை தகவல்..!

யாழ். நாவற்குழி பிரதேசத்தில் சிங்கள மக்கள் தங்கியுள்ள காணிகளை பலவந்தமாக கைப்பற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

1983-ம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட சிங்களக் குடும்பங்கள் தற்போது நாவற்குழி பிரதேசத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு தமிழ்க் குடும்பங்கள் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

50 தமிழ் குடும்பங்கள் குறித்த பிரதேசத்திற்கு வந்து தமது காணிகளை கைப்பற்ற முயற்சித்ததாக யாழ்ப்பாண சிங்கள மக்கள் அமைப்பின் தலைவி எச்.கே.கே. குமாரி சகுந்தலா தெரிவித்துள்ளார்.

88 சிங்களக் குடும்பங்கள் நாவற்குழி பிரதேசத்தில் தங்கியிருப்பதாகவும், அடிப்படை வசதிகள் எதுவும் இன்னமும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாவற்குழி பிரதேசத்தில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர்கள் பலவந்தமாக விகாரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர்கள் பலர் கடந்த போயா தினத்தின்போது இரத்மலானையிலுள்ள பௌத்த விகாரையொன்றுக்கு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இரத்மலானை ட்ரை ஸ்டார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்களே அவ்வாறு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தொழில் வழங்குவதாகக் கூறி பெரும் நாடகத்தையே ஆடி, அதன் மூலம் தமிழ் வர்த்தகர்களை தன் கைக்குள் போட்டுக் கொண்ட ட்ரை ஸ்டார் ஆடைத் தொழிற்சாலை வலையமைப்பின் தலைவர் சுதத் தேவபுரவே அதற்கான சூத்திரதாரி என்று தெரிய வருகின்றது.

ட்ரை ஸ்டார் ஆடைத் தொழிற்சாலையே இனத்துவேசத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் என்று பரவலாகத் தெரிந்துள்ள நிலையில், அவரது பலவந்தப்படுத்திய பௌத்த வழிபாடானது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு ஒப்பானது என்று பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தமிழ், முஸ்லிம்களின் கையில் இலங்கையின் ஆடை உற்பத்தித்துறை இருப்பதை கையகப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் ஆசியுடன் ஆடைத் தொழிற்சாலைத் துறையில் குதித்தவர்தான் சுதத் தேவபுர.

அதன்பின் அகில இலங்கை பௌத்த சம்மேளனம் மற்றும் பௌத்த மதத்தின் தீவிரப் போக்குக் கொண்ட அமைப்புக்களில் முக்கிய பதவிகளுக்கு தன் குடும்ப அங்கத்தினர்களை அமர்த்தும் அளவுக்கு அவர் செல்வாக்கானவராக மாறினார்.

அதன் காரணமாக பதவிக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளுடனும் நல்லுறவைப் பேணிக் கொண்டு தமிழ், சிங்கள மக்களுக்கு எதிரான துவேசப் போக்குகளை வெளிப்படுத்தி வருவதில் முன்னின்ற அவர், இலங்கையில் சந்திக்குச் சந்தி புத்தர் சிலைகளை அமைக்கும் கலாசாரத்தின் முன்னோடியும் ஆவார்.

கிழக்கு விடுவிக்கப்பட்ட கையுடன் அங்குள்ள இளைஞர், யுவதிகளுக்குத் தொழில் வாய்ப்பு என்ற போர்வையில் மில்லியன் கணக்கிலான அரச வங்கிகளின் கடனுதவி மற்றும் அரசாங்கத்தின் சலுகைகள் என்பவற்றைப் பயன்படுத்தி திருமலையின் தம்பலகாமம் பகுதியில் தமிழரின் நிலம் கபளீகரம் செய்யப்பட்டு கிழக்கிலங்கையின் முதலாவது ட்ரை ஸ்டார் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

அதற்கு சற்றுத் தள்ளி அமைந்திருக்கும் தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்தின் உயரத்தைவிட உயரமான இடமொன்றில் புத்தர் சிலையொன்றை நிறுவும் யோசனையொன்றையும் அவர் அக்காலத்தில் ஜனாதிபதியிடம் முன் வைத்திருந்தார். ஆயினும் குறித்த திட்டத்திற்கு சில முக்கியஸ்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் அது ஏற்கப்படவில்லை.

முறிகண்டியில் பௌத்த சிலை அமைப்பதற்கான முழு ஒத்தாசையும் வழங்கியவரும் அவர்தான். இப்படியான இனத்துவேச வரலாறு கொண்ட சுதத் தேவபுரவின் ஆடைத் தொழிற்சாலையின் உற்பத்திகளை தமிழர்கள் மத்தியில் பிரபலப்படுத்தவும், வெளிநாடுகளில் தனக்கான கூடிய சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் அவர் ஆடிய நாடகம்தான் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு ட்ரை ஸ்டார் ஆடைத் தொழிற்சாலை வேலை வாய்ப்பு நாடகமாகும்.

அதனை வைத்து தற்போதைக்கு பல நாடுகளில் அவரது உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் வட-கிழக்கின் பெரும் பரப்பளவிலான காணிகளும் அவரது கம்பெனிக்கு வெகுமதியாக கிடைக்கவுள்ளன என்றும் நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளம் காரணமாக பாராளுமன்றத்திற்கு இரண்டு கோடி நஷ்டம்

கொழும்பில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

அதற்கு மேலதிகமாக பாராளுமன்றத்தின் சூழலில் பொருத்தப்பட்டிருந்த பல கருவிகள் பலத்த சேதத்துக்குள்ளாகியிருப்பதுடன், அவற்றைப் பழுது பார்க்கும்  சாத்தியம் குறித்து இன்னும் எதுவும் கூற முடியாதிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் 16-ம் திகதி பாராளுமன்ற அமர்வு கூடுவதற்கு முன்பாக  சேதங்களைப் புனரமைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அத்துடன் சகதி படிந்துள்ள பாராளுமன்றச் சூழலை சுத்தப்படுத்த விசேட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதை அரசமைப்பில் உறுதி செய்வதே தீர்வுக்கு வழி : பேராசிரியர் சிற்றம்பலம் சாட்சியம்!

வடக்கு கிழக்குத் தமிழர் தாயகம் என்பதை அரசமைப்பில் உறுதி செய்வதன் மூலமே இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று வாழ்நாள் பேராசிரியரும், தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார்.

யாழ். செயலகத்தில் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழு முன் பேராசிரியர் சிற்றம்பலம், பேராசிரியர் ரத்தினஜீவன் கூல், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை  ஆகியோர் நேற்று சாட்சியம் அளித்தனர்.

பேராசிரியர் சிற்றம்பலத்தின் காரசாரமான சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மத்தியில் தேசிய இனத்துடன் அதிகாரப் பரவலாக்கி மாநிலத்தில் சுயாட்சிகொண்ட சமஷ்டி அரசமைப்பை உருவாக்குவதன் மூலமே இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண முடியும்.

கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட அரசமைப்புக்கள் மூலம் எல்லா நன்மைகளையும் சிங்கள மக்கள் மட்டுமே அனுபவித்தனர். ஆனால் தமிழ் மக்கள் தமது தாயகத்தில் தமது அபிலாஷைகளை எட்டாத நிலையில் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டனர்.

1987-ல் செய்து கொள்ளப்பட்ட இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முக்கிய ஒப்பந்தத்தின் கீழ் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

அவ்வாறு வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதை அரசமைப்பில் உறுதி செய்து கொண்டு வரப்படும் தீர்வு மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றார் அவர்.

பேராசிரியர் ரத்தினஜீவன் கூல் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வாக அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதான நியாயமான தீர்வொன்றை அரசாங்கம் முன் வைக்க வேண்டும் என்பதுடன் அதற்கு காலம் தாழ்த்தவும் கூடாது” என்று பேராசிரியர் ரத்தினஜீவன் கூல் வலியுறுத்தியுள்ளார்.

அங்கு சாட்சியமளித்த பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரும் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க சென்றிருந்த போதும் நேரமின்மை காரணமாக நேற்று அவரது சாட்சியம் பதியப்படவில்லை. அவர் இன்று சாட்சியமளிக்கவுள்ளார்.

பெரும்பாலும் அவர் அரசாங்கம் ஏற்கெனவே தயாரித்துக் கொடுத்த அறிக்கையை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவர் போன்று அரசுக்கு சார்பான முறையில் சாட்சியமளிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் அல்லது ரூபவாஹினியில் செயற்பாட்டுப் பணிப்பாளர் எனப்படும் வேர்க்கிங் டிரெக்டர் பதவிக்கு தற்போது தயா மாஸ்டர் பெயர் அடிபடுகின்றது. மிக விரைவில் அவருக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்தவுடன் அவர் அப்பதவியில் நியமிக்கப்படவுள்ளார்.

மீண்டும் ஆயுதப் போராட்டம் ஏற்படலாம்: யாழில் சி.வி.கே. சாட்சியம்

யுத்தம் முடிவடைந்துள்ள போதும் தமிழ் மக்கள் அபிலாசைகள் முடிவு பெறவில்லை. சாத்வீக வழியில் அதனை பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். இல்லையேல் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் வருவதை எவராலும் தடுக்கமுடியாது என நல்லிணக்க ஆணைக் குழு முன் சி.வி.கே.சிவஞானம் அளித்த சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும்; நல்லிணக்க ஆணைக் குழுவின் சாட்சிய பதிவுகள் இன்று மாலை யாழ்ப்பாண செயலகத்தில் இடம் பெற்றன. இதன்போது பலரும் சாட்சியமளித்தனர். அத்துடன்,  அமெரிக்க தூதரக அதிகாரியும் பார்வையாளராக இருந்தார் 

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜன்கூல், பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் சிற்றம்பலம், முன்னாள் மாநகர ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம் போன்றோர் சாட்சியமளித்தனர்.

இதன்போது கருத்துரைத்த ராஜன் கூல், தாம் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக தெரிவு செய்யப்பட்டதும் பின்னர் அதற்கு எதிராக நடந்த விடயங்களையும் எடுத்துரைத்தார்

நோர்வே ஏற்பாட்டிலான பேச்சுவார்த்தையின்போது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பக்கசார்பான விடயங்கள் இடம் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

பாலசுந்தரம்பிள்ளையும், சிற்றம்பலமும் கடந்த கால கசப்பான நிகழ்வுகளை பற்றி பேசினர்

சி.வி.கே.சிவஞானம் கருத்துரைக்கையில் யுத்தம் முடிவடைந்துள்ளபோதும் தமிழ் மக்கள் அபிலாசைகள் முடிவு பெறவில்லை. சாத்வீக வழியில் அதனை பெற்றுக் கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். இல்லையேல் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வருவதை எவராலும் தடுக்க முடியாது எனக் குறிப்பிட்டார்

அடிப்படையான கட்டுமானப் பணிகளை செய்வதன் மூலம் தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு முடிவை எட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

உதயன் பத்திரிகையின் ஆசிரியர் கானமயில்நாதன் சாட்சியமளித்தார். அவர் கடந்த காலத்தில் ஊடகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை உட்பட்ட ஊடகங்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை ஆணைக் குழுவின் முன்னால் தெரிவித்தார்.

யாழ்ப்பாண செயலகத்தில் இடம் பெற்ற சாட்சிய நிகழ்வை அடுத்து குருநகரில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. அங்கு பலர் சாட்சியமளித்தனர்.

அனைவருமே தமது உறவுகள் காணாமல் போனமையும் கைது செய்யப்பட்டமையும் அதன் பின்னர் காணாமல் போனமையும் மற்றும் கடத்தப்பட்டமையும் குறித்த முறைப்பாடுகளை சாட்சியங்களாக தெரிவித்தனர்

இதேவேளை இன்றைய சாட்சிய நிகழ்வின் அமெரிக்க தூதரகத்தின் செயலக மட்ட அதிகாரி ஒருவரும் தூதரகத்தின் தமிழ் அதிகாரியான பத்மினியும் பார்வையாளர்களாக பங்கேற்றமை முக்கிய அம்சமாக இருந்தது.

7 கோடி ரூபா வங்கிக் கொள்ளை - இராணுவத்திலிருந்து தப்பியோடிய சிப்பாய்களுக்குத் தொடர்பு

ஏழு கோடி ரூபா வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்களுக்கு தொடர்பு இருப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எச்.எஸ்.பி.சீ வங்கியின் டெலர் இயந்திரங்களுக்கு பணம் போடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ஏழு கோடி ரூபா பணம் களனி பிரதேசத்தில் கொள்ளையிடப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் எனவும், இன்னும் இரண்டு பேரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தை இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் ஒருவர் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழுவினர் கொள்ளை, கொலை மற்றும் கப்பம் பெறல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

விசேட அதிரடிப் படையினரால் ஐந்து பொதுமக்கள் மன்னாரில் கைது

விசேட அதிரடிப் படையினர், மன்னாரில் கடந்த வியாழக்கிழமையன்று பிற்பகல் 3 மணியளவில் ஆசிரியர் ஒருவர் உட்பட 5 பேரை கைதுசெய்துள்ளனர்.

இவர்களில் இருவர் குடும்பஸ்தர்கள். மூவர் இளைஞர்களாவர். இவர்கள் ஐவரும் மன்னார் பேசாலை பிரதேசத்தில் வைத்து தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தியா அருள்சீலன் மிரிந்தா, செபஸ்டியன் சீலன் குரூஸ், செபஸ்டியன் ஜெனிபர் குரூஸ், சேவியர் பெனோ பென்டியோ மற்றும் சந்தியாகோ மாசன்ட் குரூஸ் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

இந்த நிலையில் இவர்கள் ஐவரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு அவர்களின் வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர்.

யாழ். அரச அதிபரின் செயற்பாடுகள், தமிழ் மக்கள் மத்தியில் மதிப்பை குறைத்துள்ளது

யாழ்ப்பாணத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழு மேற்கொண்டு வரும் சாட்சியங்களின்போது யாழ்ப்பாண அரசாங்க அதிபரும் பார்வையாளராக சமுகம் அளிப்பது சாட்சியாளர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

தமது கடமைகளை விட்டுவிட்டு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் நல்லிணக்க சாட்சியங்களில் பங்கேற்று வருகின்றார். அத்துடன் நல்லிணக்க குழுவுக்காக பரிந்து பேசும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

எனவே நல்லிணக்கக் குழு முன்னிலையில் தமது ஆதங்கத்தை தெரிவிக்க வேண்டும் என வருகின்றவர்கள்கூட, சில விடயங்களை தெரிவிக்காமல் விடுவதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மட்டக்களப்பு, வவுனியா போன்ற இடங்களில் இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக் குழுவின் சாட்சியங்களின் போது அங்குள்ள அரசாங்க அதிபர்கள் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை என யாழ்ப்பாண செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

அத்துடன், அண்மையில் இமெல்டா சுகுமார், கொழும்பில் வைத்து நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில் அளித்த சாட்சியங்களும் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

யுத்தக் காலத்தில் அவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து மதிப்பை அந்த சாட்சியம் குறைத்து விட்டதாகவே கருதப்படுகிறது.

10 comments:

பிரபல பதிவர் said...

me first

பிரபல பதிவர் said...

me second

பிரபல பதிவர் said...

me third

பிரபல பதிவர் said...

me third

பிரபல பதிவர் said...

4

பிரபல பதிவர் said...

5

pichaikaaran said...

me 7th

pichaikaaran said...

"sivakasi maappillai said...
me first"

ரொம்ப பெருமைப்படாதீங்க.. இதுல நீங்க ஃபர்ஸ்டா இருக்கலாம்..

இன்னொரு சவாலுக்கு ரெடியா?

மனிதகுலத்துக்கு எதிராகவும், பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாகவும் அண்ண்ன் எழுதிய பதிவுக்கு, நூறாவது மைன்ஸ் ஓட்டு யார் போடுவது... ?
சவாலுக்கு ரெடியா ?

உண்மைத்தமிழன் said...

சிவகாசி மாப்பிள்ளை..

ஏன் இந்தக் கொலை வெறி..?

எனக்கும், உங்களுக்கும் ஒண்ணுமில்லையே..?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
"sivakasi maappillai said...
me first"
ரொம்ப பெருமைப்படாதீங்க.. இதுல நீங்க ஃபர்ஸ்டா இருக்கலாம்..
இன்னொரு சவாலுக்கு ரெடியா?
மனித குலத்துக்கு எதிராகவும், பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாகவும் அண்ண்ன் எழுதிய பதிவுக்கு, நூறாவது மைன்ஸ் ஓட்டு யார் போடுவது...? சவாலுக்கு ரெடியா?]]]

பார்வையாளன் ஸார்..

மறுபடியும் அந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள். குற்றவாளி என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த மோகனகிருஷ்ணனுக்கு ஆதரவாக நான் எதையும் எழுதவில்லை. நீதிமன்றம் மூலம்தான் தண்டனை வழங்கப்படுதல் வேண்டும் என்றுதான் எழுதியிருக்கிறேன்.

உங்களுக்கு சிவகாசி மாப்பிள்ளையே பரவாயில்லை..!