ஓடு.. ஓடு.. ஓடிக் கொண்டேயிரு..! Some One to Run With (Mishehu Laruz Lto) இஸ்ரேல் திரைப்பட விமர்சனம்!

20-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சமுதாயத்தின் கடைக்கோடியில் வாழும் விளிம்பு நிலை மாந்தர்களின் வாழ்க்கை பற்றி சமீபமாக பல திரைப்படங்களில் பார்த்தாகிவிட்டது. மலையாளத்தில் நான் பார்த்த சில திரைப்படங்களும், தமிழில் முதன் முதலில் ஒரு அதிர்ச்சியைத் தந்த 'பசி' திரைப்படமும் எனது பருவ வயதில் பார்த்ததினால் அப்போதைக்கு எந்தப் பாதிப்பையும் தரவில்லை.

ஆனால் உலக சினிமா பற்றிய புரிதல்களும், ஆவல்களும் மேலோங்கியிருக்கும் இப்போதைய காலத்தில் பல்வேறு மொழித் திரைப்படங்களில் இவர்கள் பற்றிய பல சிறப்பான பதிவுகளைப் பார்த்தாகிவிட்டது. அந்த வரிசையில் சமீபத்தில் பார்த்த இந்த இஸ்ரேலிய திரைப்படமும் ஒன்று.


இஸ்ரேலிய எழுத்தாளர் டேவிட் கிராஸ்மேனின் புகழ் பெற்றக் கதையாம் இத்திரைப்படம். கதையின் பெயரும், திரைப்படத்தின் பெயரும் ஒன்றுதான்..

தனது குடும்பத்தாரிடமிருந்து பிரிந்து தனது துணையாக டிங்கோ என்ற நாயுடனுமும், தனது உயிருக்கு உயிரான கிடாருடனும் ஜெருசேலம் நகரில் சுற்றி வரும் தமர் என்கிற 16 வயது பெண்ணின் கதைதான் இந்தத் திரைப்படம்.

புராதனமான, பழமையான ஜெருசேலம் நகரம் தனக்குள் எத்தனையோ கதைகளையும், புனிதத்தையும் கொண்டிருந்தாலும் அங்கு வாழும் ஏழை மாந்தர்களின் கதையில் நிச்சயம் புனிதமில்லை. மனிதர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ.. வாழ்கிறார்களோ.. ஏழை, பணக்காரன் என்கிற ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் பிரச்சினைகளுக்குப் பஞ்சமில்லை. அவலங்களுக்கும் குறைவில்லை.

இந்தப் பிரச்சினைப் பஞ்சத்தில் சிக்கும் பஞ்சதாரிகளான கீழ்த்தட்டு மக்களில் ஒருத்தியான தமரையும், அவளது நாயையும், அவளைத் தேடியலையும் அஸப் என்கிற இளைஞனையும் சுற்றித்தான் கதை நகர்கிறது.

நகரின் மையச் சதுக்கத்தில் மாலை வேளைகளில் இளசுகள் கைகளில் சிகரெட்டும், பீர் பாட்டிலும், இன்னொரு கையில் இசைக் கருவிகளுமாய் பொழுதைக் கழிக்கின்ற வேளையில் அங்கேயை உண்டு, உறங்கி நாளைக் கடத்துகிறாள் தமர். சோத்துக்காக நான்கு பேர் கூடுகின்ற இடங்களில் தனது இசைத் திறமையைக் காட்டி அவர்களிடமிருந்து பாராட்டாக சில நாணயங்களைப் பெற்றுக் கொண்டு அதிலேயே தானும் உண்டு, தனது நாய்க்கும் உணவளித்து வருகிறாள்.

இந்தச் சூழலில் அந்த நகரின் அண்டர்கிரவுண்ட் தாதா பெஸாவின் ஆட்களிடம் சிக்குகிறாள் தமர். பெஸா நகரின் பல பகுதிகளை குத்தகைக்கு எடுத்து ஆங்காங்கே நன்கு இசைப் பயின்றவர்களை நிற்க வைத்து, பாட வைத்து, இசைக்க வைத்து மக்கள் போடுகின்ற பிச்சைத் தொகையைத் தான் எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு கொஞ்சுண்டு கொடுத்து பிழைத்து வரும் அதிபுத்திசாலி.

இதிலும் ஒரு உள்ளடி வேலையும் உண்டு. அது போதை மருந்தை விற்பனை செய்வது. மருந்தை பொட்டலத்தில் மடித்துத் தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, பணத்தையும் வைத்திருந்தால் விற்பனை செய்வதாகி மாட்டினால் வாழ்க்கையே முடி்ந்துவிடும் என்ற நிலைமை. ஆகவே கில்லாடியான பெஸா தேர்ந்தெடுத்த ஒரு குறுக்கு வழிதான் இந்த இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வழி.

தமர் இசையமைத்தபடியே பாடிக் கொண்டிருக்க.. அவளுடைய தட்டில் கிடக்கும் சில நாணயங்களோடு சில ரூபாய்த் தாள்களும் போடப்படும். போட்டவன் அப்படியே ஓரமாக நடந்து சென்று தமரை அழைத்து வந்தவனின் கையில் இருக்கும் போதை மருந்தை லவட்டிக் கொண்டு செல்வான். பணம் தமரிடம்.. சரக்கு அடியாளிடம்.. மாட்டினால் அவனே பயன்படுத்துவதற்குத்தான் சரக்கு.. தண்டனை கொஞ்சம்தானாம்..! தமரிடம் இருக்கும் பணம் கேள்விக்குறியானால் இது அவளுடைய இசைக்குக் கிடைத்த வெகுமதி. எப்படி ஐடியா..?

இப்படிப்பட்ட இடத்தில் மாட்டிக் கொள்ளும் தமரிடமிருந்து அவளுடைய நாய் பிரிக்கப்படுகிறது. பிரிந்த நாய் தெருவில் அனாதையாகத் திரிய அரசு இயந்திரம் அந்த நாயைப் பிடித்துக் கொட்டடியில் அடைக்கிறது.. கொட்டடியில் அடைக்கப்பட்ட நாயை அதற்குரிய உரிமையாளரிடம் போய் சம்மன் கொடுத்து அவர்களை அழைத்து வரும் சிறு வேலையை தனது கோடைக்கால விடுமுறை சமயத்தில் பகுதி நேர வேலையாக செய்வதற்கு அஸப் என்கிற இளைஞன் முன்வரும்போதுதான் படமே நகரத் துவங்குகிறது.

அந்த நாயின் உரிமையாளரான தமரைத் தேடி அஸப் புறப்பட நாய் தான் எங்கெல்லாம் தமருடன் சுற்றினோமோ அங்கெல்லாம் அஸப்பை அழைத்துச் செல்கிறது.



அப்படி முதலில் ஓரிடத்திற்குப் போக அங்கே போலீஸ் அவனைப் பிடித்து இழுத்துச் செல்கிறது. அப்போதுதான் தெரிகிறது தமர் இருந்தது போதை மருந்து கடத்தும் கும்பலிடம் என்று..!

அவள் கடைசியாக விட்டுச் சென்ற இடத்திலிருந்து போதை மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவும், அவள் அந்த இடத்தில்தான் வசித்து வந்ததையும் தாங்கள் கண்டறிந்ததாகவும் போலீஸ் சொல்ல.. அஸப் தன்னிடம் கொடுக்கப்பட்ட தமருக்கான சம்மனை காட்டி போலீஸிடமிருந்து தப்பிக்கிறான்.

ஆனாலும் தேடுதல் படலத்தை அவன் கைவிடவில்லை. ஒரு ஆர்வம்.. என்னதான் இருக்குன்னு பார்த்திருவோமே என்ற அந்தப் பிராயத்துக்கே உரித்தான குணத்தினால் உந்தப்பட்டு நாயின் இழுவைக்கெல்லாம் உடன் ஓடுகிறான்.

இப்போது நாய் ஒரு இடத்திற்குக் கொண்டு போய்விட.. அங்கே இருப்பவர்கள் தமரை சமீப காலமாக தாங்கள் பார்க்கவில்லை என்கிறார்கள். அங்கே அருகில் இருந்த நீச்சல் குளம் அவன் கண்ணைக் கவர.. குளத்தில் குளிக்கும்போது அவனைப் பின் தொடர்ந்து பெஸாவின் ஆட்கள் வருகிறார்கள். அவர்களுக்கு அடையாளம் காட்டுவது டிங்கோதான்..

அஸப்பினை புரட்டி எடுத்துவிட்டு நாயை இழுத்துக் கொண்டு போகும்போது அஸப்பிடம் பேசிய ஒரு லோக்கல் ரவுடி தனது துப்பாக்கியை வைத்து மிரட்டி அவர்களிடமிருந்து அஸப்பையும், நாயையும் காப்பாற்றுகிறான்.

இப்படியொரு அடிதடி, தாக்குதலுடன் இந்த வேலையைச் செய்ய வேண்டுமா என்று அஸப்பின் நெருங்கிய உறவினர் கேட்டு அவனை அவனது அப்பா, அம்மாவிடம் திருப்பியனுப்பும் முயற்சியையும் மேற்கொள்கிறார். ஆனால் அஸப் இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்.

இப்படி அவனுக்குள் ஏற்படும் தேடுதல் வேட்கையின் அடுத்தக் கட்டமாக டிங்கோ, அஸப்பினை வழக்கமாக தமர் தனது கிடாரின் தந்திகளை வாங்கும் கடைக்கு அழைத்துச் செல்கிறது. அங்கே கடைக்காரரோ கதவைத் திறக்க மறுத்து அடம்பிடிக்கிறார். ஆனாலும் அஸப் சண்டையிட்டு உள்ளே சென்றவன் அவரிடம் பேச அவர் தமரின் மீது அக்கறை கொண்ட தியோடரா என்கிற அவளுடைய உறவுக்காரப் பெண்மணியைப் போய்ப் பார்க்கச் சொல்கிறார்.

இவர்கள் பேசுவதையும் பெஸாவின் அடியாட்கள் பார்த்துவிட அங்கேயும் ஓட்டம்.. கடைசியாக தியோடராவின் உதவியால் அஸப் தமரைக் கண்டுபிடிக்கிறான். ஆனால் தமரோ முதலில் அஸப்பும் பெஸாவின் கூட்டாளியோ என்று நினைத்து அவனைத் தாக்கிவிடுகிறாள். பின்பு உண்மை தெரிந்து வருத்தப்படுகிறாள்.

இப்போது தமருடன் இருக்கும் அவளுடைய அண்ணன் போதை மருந்துக்கு அடிமையானவன். அது கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதால் அந்த குகை போன்ற இடத்தில் தன்னை மறந்து கத்திக் கூப்பாடு போடுகிறான். தமர் இதனையும் தாங்கிக் கொண்டு தனது அண்ணனுக்காகவே தான் இப்போதைக்கு மறைந்து வாழ்வதாகச் சொல்கிறாள்.

அஸப்பால் இப்படியொரு பெண்ணை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. பார்த்த சில மணி நேரத்திலேயே தன்னை மறக்கிறான். காதல் கொள்கிறான். அன்றிரவு அங்கேயே தங்குகிறான். ஆனால் பின் தொடர்ந்து வந்த பெஸாவின் அடியாட்கள் சூழ்ந்துவிடுகிறார்கள். மறுபடியும் தமரையும், அவளது அண்ணனையும் கொண்டு போக முயல.. தியோடரின் முயற்சியால் காவல்துறை அங்கே திடுதிப்பென்று வந்து சுற்றி வளைக்க.. இவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். கதை சுபமாகிறது.

ஆனால் எடுத்தவிதம்..?

முதலில் நாயும், அஸப்பும் ஓடுவதில் துவங்குகிறது. அதன் பின் அவர்கள் ஓரிடத்திற்குச் செல்வதற்கு முன் அந்த இடத்திற்கு தமர் ஏன் வந்தாள் என்பது பிளாஷ்பேக்கில் சொல்லப்படுகிறது. இப்படி படம் முழுவதுமே பிளாஷ்பேக், தேடுதல், தேடுதல்-பிளாஷ்பேக் என்று ஓடுவதால் விறுவிறுப்புக்குக் குறைவில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் Oded Davidoff.

தமராக நடித்த Bar Belfer தனது வயதை மீறிய பாத்திரத்தை செய்திருக்கிறார்.


பெஸாவின் இருப்பிடத்தில் அவளுடன் ரூம்மேட்டாக இருக்கும் பெண்ணின் கதையும் உடன் சேர்ந்தே வருகிறது.


பெஸாவின் இருப்பிடத்தில் அவர்களை அவன் பயன்படுத்தும் முறை..
அடிபணியாதவர்களுக்கு போதை மருந்தை கொடுத்து அடிமையாக்குவது, சிலரை வேண்டுமென்றே காவல்துறையிடம் போட்டுக் கொடுத்து உள்ளே தள்ளுவது என்று நமது அனைத்து உள்மனது ஆபாசங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது படம்.


காவல்துறையும், குற்றவாளிகளும் கை கோர்த்துச் செயல்படுவது ஏதோ நம் நாட்டில்தான் என்றில்லை.. உலகம் முழுக்கவே உலகமயமாக்கப்பட்ட ஜனநாயக கொள்கைகளில் அதுவும் ஒன்றுதான்.. எல்லா நாட்டிலுமே இந்தப் பிரச்சினை இருக்கிறது.

இந்த பெஸாவின் இருப்பிடத்தில்தான் தமர் தனது தொலைந்து போன அண்ணனைக் கண்டுபிடிக்கிறாள். அதுவும் அவன் போதை மருந்துக்கு அடிமையான சூழலில்தான் பார்க்கிறாள். தனது நாயை அவனிடம் அனுப்பி அவனைப் பார்க்க வைக்கும் காட்சி மனதை நெகிழ வைத்தது.

கட்டிப் பிடித்து கதறுவது, மெல்ல மெல்ல பின்னணி இசையின் ஒலியை உயர்த்தி உணர்ச்சியைத் தூண்டுவது என்ற வழக்கமான விஷயங்களே இல்லாமல் மிக இயல்பான நடிப்பும், காட்சியமைப்பும் இந்தக் காட்சியில் பார்வையாளர்களை உறைய வைத்தது.

பெஸாவின் இருப்பிடத்தில் இருந்து தினமும் வேனில் அழைத்துச் செல்லப்படும் இசைக்கலைஞர்கள் நகரின் பல இடங்களிலும் அடியாட்களுடன் ஆங்காங்கே நிறுத்தப்படுவார்கள். இவர்களுடைய இசை அங்கே சுற்றுலாவாக வரும் பயணிகளைக் கவர.. அவர்கள் போடும் தட்சணையையும், இந்த இசைக்கலைஞர்கள் தப்பிக்க முயல்கிறார்களா என்பதையும் கண்காணித்தபடியே இருக்கிறார்கள் அடியாட்கள்.

இந்த அடியாட்களிடமிருந்துதான் தனது அண்ணனைக் காப்பாற்றுகிறாள் தமர். தியோடராவுக்கு கடைக்காரர் மூலம் தகவல் சொல்லித் தயாராக காத்திருக்க வைத்து.. அவள் தப்பிக்கும் அந்தச் சில நிமிடங்கள் பதை, பதைக்க வைத்தன.


இசை சம்பந்தப்பட்டத் திரைப்படம் என்பதால் இஸ்ரேலிய இசைத் தொகுப்புகள் பலவும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன. கிடார் என்பதாலேயே அதிகமான இசை இருக்குமே என்று நானும்தான் நினைத்து ஏமாந்து போனேன். கிடார் இசையையும் மென்மையாகக் கையாண்டு, பாடலுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

இத்திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் 11 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 3 விருதுகளைப் பெற்றுள்ளது. 2006-ம் ஆண்டு ஜெருசலேம் திரைப்பட விழாவில் துவக்கப் படமாக காட்டப்பட்டுள்ளது. அதே விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருது, அஸப்பாக நடித்த Yonaton-Bar-or-க்குக் கிடைத்துள்ளது.


மியாமி சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது தமராக நடித்த Bar Belferக்குக் கிடைத்துள்ளது.

மனித வாழ்வில் இளம் வயது என்பதே சாகசம் செய்யக்கூடிய காலக்கட்டம். அதிலும் ஒருவன் தனது வாழ்வையே பயணம் வைத்து செய்து முடிக்கின்றபோது நாமெல்லாம் இதில் ஒரு கால்வாசியையைவாவது தொட்டிருக்கோமா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அதே சமயத்தில் இது போன்ற திரைப்படக் கதைகள் ஏன் நம்மிடையே உருவாவதில்லை என்பதையும் நாம் யோசிக்கத்தான் வேண்டும்..

பார்க்கத் தவறிவிடாதீர்கள்..!

11 comments:

butterfly Surya said...

'Me the First"

படம் பார்க்கும் போதும் பதிவை படிக்கும் போதும் நமக்கே மூச்சு இறைக்க வைத்த படம்.


மேலே சொன்ன First ... நீங்க முந்திட்டிங்களே.. என் சான்ஸ் போச்சே.. ( வடை போச்சே)

ங்கொய்யா..!! said...

Well ! !

Thamiz Priyan said...

நல்ல விமர்சனம்!
Mishehu larutz ito???

பாலா said...

உஷ்.. ப்பா...சாமி.... படிக்கறவங்க எல்லாம்... ஓடு.. ஒடு.. ஓடிக்கொண்டேயிரு-ன்னு சொல்ல போறாங்க தல..! :-)

ரெண்டு விசயத்தை கவனிச்சீங்கன்னா... ரொம்ப நல்லா இருக்குன்னு நினைக்கிறேன்.

1. படத்தோட முழுக்கதையையும் சீன்.. சீனா.. சொல்லாமல் இருக்க முயற்ச்சிப்பது.

2. ஆங்க்கில டப்பிங் பட ரேஞ்சிற்கு தலைப்பு கொடுக்காமல், படத்தலைப்பை மட்டும் கொடுப்பது.

இதுமாதிரியான... தலைப்புகள், நல்ல படங்களை... அவமதிப்பதுபோல எனக்கு ஒரு ஃபீலிங். இப்படி சொல்லிட்டானேன்னு நீங்க ஃபீல் ஆய்டாதீங்க. :-)

உண்மைத்தமிழன் said...

//வண்ணத்துபூச்சியார் said...
'Me the First" படம் பார்க்கும் போதும் பதிவை படிக்கும் போதும் நமக்கே மூச்சு இறைக்க வைத்த படம்.
மேலே சொன்ன First ... நீங்க முந்திட்டிங்களே.. என் சான்ஸ் போச்சே.. ( வடை போச்சே)//

இப்படியெல்லாம் அழுகக் கூடாது பூச்சியாரே.. தாங்களும் எழுத வேண்டும்.. தங்களுடைய பார்வையில் எப்படியிருக்கிறது என்பதைக் காண நானும் ஆவலோடு இருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

//நமிதா...! said...
Well ! !//

நமிதா கண்ணு.. யாரும்மா நீயி..! புதுசா..

ஜெயலலிதான்ற பேர்லகூட எழுதுற போலிருக்கு.. ஒரு இடத்துல பார்த்தேன்..!

வில்லங்கம் இல்லாம இருந்தா சரி..!

உண்மைத்தமிழன் said...

//தமிழ் பிரியன் said...
நல்ல விமர்சனம்!
Mishehu larutz ito???//

நன்றி தமிழ்பிரியன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

//ஹாலிவுட் பாலா said...
உஷ்.. ப்பா...சாமி.... படிக்கறவங்க எல்லாம்... ஓடு.. ஒடு.. ஓடிக்கொண்டேயிரு-ன்னு சொல்ல போறாங்க தல..! :-)

ரெண்டு விசயத்தை கவனிச்சீங்கன்னா... ரொம்ப நல்லா இருக்குன்னு நினைக்கிறேன்.

1. படத்தோட முழுக் கதையையும் சீன்.. சீனா.. சொல்லாமல் இருக்க முயற்ச்சிப்பது.
2. ஆங்க்கில டப்பிங் பட ரேஞ்சிற்கு தலைப்பு கொடுக்காமல், படத் தலைப்பை மட்டும் கொடுப்பது.

இது மாதிரியான... தலைப்புகள், நல்ல படங்களை... அவமதிப்பதுபோல எனக்கு ஒரு ஃபீலிங். இப்படி சொல்லிட்டானேன்னு நீங்க ஃபீல் ஆய்டாதீங்க. :-)//

முயற்சி பண்றேன் பாலா! தலைப்பு கவர்கிற மாதிரியிருக்கணும்ன்றது என்னோட அபிப்பிராயம்..

தலைப்புனால படத்தோட உள்ளடக்கத்தை நான் ஒரு போதும் குறைத்து மதிப்பிடுவது கிடையாது.. அது வேறு..

வருகைக்கு நன்றி பாலா..! எங்க என் வீட்டுப் பக்கம் வர்றதுக்கெல்லாம் நேரமிருக்கா..!

benza said...

உங்களது ஆழமான விமர்சனங்களை படித்தாலே போதும் --- படம் பார்த்ததற்கு சமன் --- நன்றி

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
உங்களது ஆழமான விமர்சனங்களை படித்தாலே போதும் --- படம் பார்த்ததற்கு சமன் --- நன்றி//

கருத்துக்கு நன்றி பென்ஸ் ஸார்..!

abeer ahmed said...

See who owns voodooprojects.org or any other website:
http://whois.domaintasks.com/voodooprojects.org