ஜேட்கூடியின் மரணம் சொல்லும் செய்தி..!

23-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

27 வயதான ஜேட் கூடி என்ற பெண் தனது இறப்பை எதிர்பார்த்து சில மாதங்களாகக் காத்திருந்து, இப்போது கர்த்தரின் காலடியை அடைந்துவிட்டார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் 'பிக் பிரதர்' என்கிற ரியலிட்டி ஷோவில் கலந்து கொள்ளாத வரையில் அவர் யாரென்று இந்தியர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்திய திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டியுடன் அந்த ரியலிட்டி ஷோவில் பங்கேற்ற ஜேட்கூடி, ஷில்பாவை இனவெறியோடு திட்டியதால் ஷில்பா கண்ணீர் விட்டு அழுக.. அந்த அழுகையால் தாங்களும் அழுத லண்டன் மாநகர மக்கள் மொத்த ஓட்டையும் ஷில்பாவுக்கே குத்தி அவரை பரிசு மழையில் நனைய வைத்து அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அப்போது நம்மால் கோபமாகப் பார்க்கப்பட்ட அதே ஜேட்கூடிதான் இப்போது நம்மால் பரிதாபகமாப் பார்க்கப்படுகிறார். 27 வயதுதான்.. 5 வயது மற்றும் 4 வயதான இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அம்மா.. பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. சம்பாதிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இந்த நேரத்தில்தான் புற்று நோய் அவரைத் தாக்கியிருக்கிறது.

இந்தியாவில் கலர்ஸ் என்கிற சேனல் நடத்திய பிக் பாஸ் ரியலிட்டி ஷோவில் கலந்து கொள்ள வந்தவருக்கு மும்பையில் நல்ல முறையில் வரவேற்பு கிடைத்தது. நிச்சயம் இந்திய விஜயம் எனக்கொரு திருப்பத்தைத் தரும் என்று அப்போது சொன்னார். அந்தத் திருப்பம் அவருடைய வாழ்க்கையை முடிக்கிற திருப்பம் என்பதை அவரும், மீடியாக்களும் அறிந்திருக்கவில்லை.


ரியலிட்டி ஷோவுக்காக இந்தியா வருவதற்கு முன்பாகவே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் லண்டனிலேயே தகுந்த சிகிச்சையும், உடற்பரிசோதனையும் செய்துவிட்டுத்தான் விமானம் ஏறியிருக்கிறார்.

ரியலிட்டி ஷோவில் ஒரு நாள் ஷில்பாவுக்கு வந்த போன் கால் அவருடைய வாழ்க்கையின் முடிவுரையைச் சொன்னது..

அந்தக் காட்சியை நான் அப்போதே தொலைக்காட்சியில் பார்த்து பேச்சு மூச்சில்லாமல் போனேன். லண்டனில் அவர் செய்துவிட்டு வந்த உடற்பரிசோதனையின் முடிவுகளை அந்த மருத்துவர் தொலைபேசியில் ஜேட்கூடியிடம் சொல்கிறார், "உன்னைத் தாக்கியிருப்பது புற்று நோய். நீ இன்னும் கொஞ்ச நாள்தான் உசிரோட இருக்கப் போற.." - இந்த உண்மையை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்..? அதுவும் அம்மா என்கிற கடமையிருக்கிற ஒரு தாய்க்கு..

ஜேட்கூடி மருத்துவர் சொன்னதைக் கேட்டு கதறி அழுததையும், பின்பு வெளியே வந்து தனது சக போட்டியாளர்களிடம் இதைச் சொல்லி அழுவதையும் பார்த்தபோது பரிதாபமாக இருந்தது.


என்னிடமே இப்போது இந்த வார்த்தையை மருத்துவர் சொன்னால் நான் என்ன ரியாக்ட் செய்வேன் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

மும்பை வந்தபோது புன்சிரிப்போடும், உவகையோடும் வந்த ஜேட்கூடி நாடு திரும்பும்போது இருந்த வேதனையை மறைத்துக் கொண்டு சிரித்தபடியே போஸ் கொடுத்துவிட்டுத்தான் போனார்.

லண்டனில் இதன் பின்புதான் ஒரு பெரிய அலையே அடித்திருக்கிறது. அங்கிருந்த மீடியாக்கள் ஜேட்கூடியின் அன்றைய மெடிக்கல் ரிப்போர்ட் என்று தலைப்பிட்டே செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு போயிருக்கிறது.

இதன் விளைவு என்ன தெரியுமா? லண்டனில் இருக்கின்ற இளம் வயதுப் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜேட்கூடிக்கு வந்திருந்த கர்ப்ப் பை புற்றுநோய்க்கான ஆரம்பக் கட்ட சோதனைகளை தங்களுக்குச் செய்து கொண்டார்களாம்.. இவர்களுடைய இந்த விழிப்புணர்வுக்குக் காரணம் ஜேட்கூடிதான்.. அந்த வகையில் அவர்கள் ஜேட்டுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

நோயோடு போராடிக் கொண்டே சிரித்த முகத்தோடு தினந்தோறும் ஏதாவது ஒரு டிவியிலோ, பத்திரிகையிலோ பேட்டியளித்தவண்ணமே இருந்துள்ளார் ஜேட். அவர் இதன் மூலம் பணம் சம்பாதித்தார் என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள். பத்திரிகைகளும் அவரை வைத்து சம்பாதிக்கத்தானே செய்தன. அவரைப் பற்றியப் பரபரப்புச் செய்திகளை போட்டி போட்டுக் கொண்டு எழுதினார்களே.. சர்க்குலேஷனும், டிவி ரேட்டிங்கும் ஏறாமலா இருந்திருக்கும்..


மேலே சொன்னபடி குடும்பத்தார் சொல்லியும் கேட்காத இளசுகள் நேரில் பார்த்த ஒரு அனுபவம் தந்த பயத்துடன் மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்களே.. இது நல்ல விஷயம்தானே.. ஒன்றும் தவறில்லை.

இந்த நேரத்திலும் அவர் தனக்குள் இருந்த காதலை மறைக்கவில்லை. வெளிப்படையாகச் சொன்னார். அவரைவிட ஆறு வயது குறைந்த Tweed என்கிற இளைஞருடனான அவரது காதல் கல்யாணம் வரைக்கும் சென்றது.. இருக்கப் போவது எத்தனை நாட்கள் என்பது தெரியாத நிலையிலும் தனது குழந்தைகளுக்கென்று ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும், தனது காதலை நிரூபிப்பிதற்காகவும் அவர் எடுத்த கல்யாண முடிவை வாழ்த்தியே ஆக வேண்டும்.

பிப்ரவரி 22-ம் தேதி தனது காதலரைக் கைப்பிடித்தார். நோயின் தாக்கத்தால் தலைமுடியினை இழந்து உடல் தளர்ந்து இருந்த நிலையிலும் அவருடைய உற்சாகம் மாறாத திருமண நடவடிக்கைகளையும், ஓய்வு இல்லாத பேட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளையும் பார்த்தபோது ஆச்சரியம்தான் விளைகிறது.


மரணத்தை இவ்வளவு இலகுவாக வரவேற்கிறாரே.. எளிதாகக் கையாளுகிறாரே என்று ஆச்சரியப்பட்டேன். அவருடைய முன்னாள் காதலரான Jeff Brazier மூலம் பிறந்த தனது 2 பையன்களுக்கும் இந்த மாதம் 7-ம் தேதிதான் கிறிஸ்துவ தேவாலயத்தில் பாப்டிஸம் செய்துவைத்துள்ளார். தாய்க்குரிய தனது கடமைகளை செவ்வனே செய்தே தீர வேண்டும் என்கிற அவரது கடமையுணர்ச்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

நோய் முற்றி படுத்த படுக்கையான பின்பு தான் மருத்துவமனையில் இறக்க விரும்பவில்லை என்று சொல்லி தனது இல்லத்திற்கு வந்து ஒரு அறையில் ஜன்னலோரமாக வானத்தைப் பார்த்தபடியே படுத்திருந்திருக்கிறார். இனிமேல் தன்னை தனது குடும்பத்தினர் தவிர வேறு யாரையும் சந்திக்க அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


இது அத்தனை பேரும் நினைப்பதுதான். தான் நன்றாக இருக்கும்போது பார்த்து ரசித்தவர்கள், தான் துன்பப்படுவதைப் பார்த்து வருத்தப்பட்டுவிடக்கூடாது.. அந்தக் கோலம் அவர்கள் மனதில் நிற்கக்கூடாது என்றுதான் நினைப்பார்கள். அதனைத்தான் இவரும் செய்திருக்கிறார். இதனால் ஜேட் கூடியைப் பார்ப்பதற்காகவே லண்டன் சென்ற ஷில்பா ஷெட்டியால்கூட அவரைப் பார்க்க முடியாமல் போய்விட்டது.

லண்டன் மீடியாக்கள் தினந்தோறும் அவரது உடல் நிலை பற்றிய செய்திகளை அப்டேட் செய்தபடியே இருந்துள்ளன. வீட்டு வாசலில் எந்நேரமும் மீடியாக்கள் நிறுத்தப்பட்டு அவரது மரணச் செய்தி எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கொஞ்சம் சிரிப்பு வந்தாலும், அதிகமான கோபம் வந்தாலும் இது போன்றவற்றை பிரபலப்படுத்தியே ஆக வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன்.

அவர் சும்மா வெறுமனே வயோதிகத்தால் இறக்கவில்லை. கொஞ்சம், கொஞ்சமாக அவரைத் தாக்கிய நோய் அவரைக் கொன்று கொண்டிருக்கிறது. அந்த நோய் பற்றிய அறிவு இந்நேரம் அதைப் பற்றியே கவலைப்படாதவர்களைக்கூடச் சென்றடைந்திருக்கும்..

தனது குழந்தைகளைக்கூட தனது சாவைப் பார்த்துவிடக்கூடாது என்று அவர்களை கூட்டிச் சென்றுவிடச் சொல்லியிருக்கிறார். சாவரசனுடன் ஒரு நீண்ட போராட்டம் நடத்தி ஓய்ந்து போன ஜேட்கூடி, நேற்று நள்ளிரவு 3 மணி 14-வது நிமிடத்தில் தூக்கத்திலேயே இறந்து போயிருக்கிறார்.

இந்த நாளில் வேறொரு விசேஷமும் உண்டு. 'அம்மாக்கள் நாள்' என்று வரலாற்றில் தன்னைப் பெற்றெடுத்தத் தாய்க்குலங்களை நினைத்துப் பார்க்கும் ஒரு நாள்.. இன்றைக்கே இந்தத் தாயின் உயிர் போயிருக்கிறது.. பொருத்தமாகத்தான் உள்ளது..

இவருடைய வாழ்க்கைப் பாதையில் நிறைய கெட்ட சம்பவங்கள் நடந்திருக்கலாம்.. நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்கள் இருந்திருக்கலாம்.. அதெல்லாம் இனிமேல் ஒருபோதும் நமக்குத் தேவையில்லை..

எந்தவொரு நோயும் நாடு, இனம், மொழி, ஜாதி, ஏழை, பணக்காரன் என்று பார்த்து வருவதில்லை.. வந்த பின்பு அது கொடுக்கும் துன்பத்தை அனுபவிப்பவர்களை பாவப்பட்ட மனிதர்கள் என்கிற ஒரேயொரு அமைப்பில்தான் சேர்க்க முடியுமே தவிர.. அவர்களுக்கு வேறு ஒரு அடையாளத்தை நம்மால் உருவாக்க முடியாது..

வலைப்பதிவர்களுக்கு நன்கு தெரியும்.. நமது சக வலைப்பதிவரான அனுராதா அம்மா எத்தனை துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, தான் பட்டத் துன்பங்களை பிறரும்படக்கூடாது என்பதற்காக, அதனை வெளிச்சம் போட்டுக் காட்டி எத்தனை, எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் தனது துன்பங்களை பதிவு செய்து வைத்தாரே.. மறக்க முடியுமா..?

நான் என்னுடைய குடும்பத்தினரிடமும் அந்த நோயைப் பற்றிச் சொல்லி உடல் பரிசோதனை செய்யச் சொன்னேன்.. சிலர் செய்திருக்கிறார்கள். பலர் படித்துவிட்டு அழுதிருக்கிறார்கள். “பாதிதான் சரவணா படிச்சேன்.. படிக்க முடியல சரவணா..” என்று சில அக்காமார்கள் சொன்ன போது நெகிழ்ந்து போனேன்..

இது போன்ற விழிப்புணர்வுகள் நமக்கு மிக மிகத் தேவைகள்.. எவ்வளவுதான் புத்தகங்கள் அறிவைக் கொடுத்தாலும், அனுபவ அறிவைவிட மிகப் பெரிய அறிவு வேறில்லை. அனுபவப்பட்டவர்கள் சொல்லும்போதுதான் அந்த பிரச்சினையின் விஸ்வரூபம் மற்றவர்களுக்குப் புரிகிறது.. ஏற்றுக் கொள்கிறார்கள். தீர்க்க முயல்கிறார்கள்.

முதலில் அனுராதா அம்மா, இப்போது ஜேட்கூடி என்று சிலருக்கு வரக்கூடிய நோய்களைக்கூட தடுக்கும் தெய்வங்களாக மாறியிருக்கிறார்கள்..

நான் ஏன் இதை உருகி, உருகி எழுதுகிறேன் என்றால் இந்தக் கொடுமையை என் கண்ணார நேரில் கண்டவன் நான். எனது தாய் ஜேட்கூடிக்கு வந்த அதே கர்ப்பப் பை புற்றுநோயால்தான் துடிதுடித்து இறந்து போனார்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் நான் எந்த வேலை, வெட்டிக்கும் போகாமல் அவர் பக்கத்திலேயே அமர்ந்து தாதி போல் வேலை செய்து அவருடைய துன்பங்களை பார்த்து, பார்த்து மனம் இறுகிப் போய்விட்டது. "முருகா சீக்கிரமா கூப்பிட்டுக்கக் கூடாதா..?" என்று நானும், எனது தாயும், முருகனை வேண்டாத நாளில்லை. அப்படியும் நேரம் வரவில்லை என்று சொல்லி கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் நாய் படாதபாடு படுத்திய பின்புதான் எனது தாயை அழைத்துக் கொண்டான்.

அந்த அனுபவத்தின் வாயிலாகத்தான் ஜேட்கூடியை நான் பெரிதும் பாராட்டுகிறேன். நோய் வந்ததை மறைத்து வைத்து சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் வெளிப்படையாகச் சொல்லி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் தயார்படுத்திவிட்டு தனது குடும்பத்தினருக்கும் லட்சணக்கணக்கான மக்களின் அனுதாபத்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டு போய்ச் சேர்ந்திருக்கிறார் அந்த புண்ணியவதி..

அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்..

79 comments:

அபி அப்பா said...

என்னத்த சொல்வது சரவணா! நான் ஜேட் கூடி மரணத்துகாக ஒரு கண்ணீர் விட்டது மதியும், நம் அம்மா உன் அம்மா மறைவுக்காக விட்டது அதை விட அதிகம்:-((

லேகா பக்க்ஷே said...

கடந்த சில நாட்களாக ஜெட் கூடி பற்றிய செய்தி எனது அன்றாட செய்திகளில் ஒன்று.
எமது குடும்ப நண்பனின் தாயாரும் இதே போல் நோயால் தாக்கப் பட்டு, "இரண்டு கிழமைகள்" என்று குறிக்கப்பட்ட பின்,பாசமான மகனின் கவனிப்பிலும், கொடுங்கோல் மருமகளின் சதிகளிலும் நான்கு (4) வருடங்கள் போராடியே உயிர் பிரிந்தது.
எல்லோர் ஆத்மாவும் சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.

Subramanian said...

காலம் சென்று கொண்டே இருக்கிறது.
காலன் கொன்று கொண்டே இருக்கிறான்.
இடையில் தவிக்கும் மாந்தர் நாம்
என் செய்வோம் இறைவா.

மக்களுக்கு இந்நோய் குறித்தான விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என்பதைத் தான் ஜேட் கூடியின் மரணமும் வலியுறுத்துகிறது.

அவரது ஆன்மா சாந்தி அடைய என் கண்ணீர் அஞ்சலிகள்.

Prabhu said...

ஆமாம், சாவப் பத்தி பல விதமா பேசினவங்க, அத லைவா காட்டனும்னு ஆச பட்டவங்க, தூக்கத்திலேயே உயிர் துறந்தது, ஒரு மாதிரிதான் இருந்தது. நீங்களும் அந்த உணர்வ எழுத்தில கொண்டு வந்திருக்கீங்க!

benza said...

இன்று காலை BBC World Today ல் Jade Goody யின் இறுதி வாழ்கையை ''உண்மை தமிழன்'' அண்ணா போன்று மனமுருக தரப்பட்டது ---

Jade Goody பிற நாட்டில் இருந்து வந்து ஒரு போட்டியில்
பங்குபற்றிய இன்னோர் பெண்ணை பதிரங்கமாகா அவமானப்படுத்தி கண்ணீர் சிந்தி அழ செய்தாளே
அன்றொருநாள் ---

அந்த இந்திய பெண்ணை பார்த்து இவள் அன்று சொன்னாள்
"I've seen how she goes in and out of people's arseholes"

இதற்காக இவள் அந்த ஷோ வில் இருந்து நீக்கப்பட்டார் ---

யார் எவருடன் எப்படி படுத்து எழும்பினார்கள் என்பது தனிபட்ட பிரத்தியேக பெட்ரூம் சமாசாரம் --- நாகரிகம் தெரிந்தோர் கவலைப்படாத விஷயம் ---

ஷில்பா ஷெட்டி '' Jade Goody'' யை மன்னித்ததாக பல தடைவைகள் கூறிய போதிலும் இவள் மன்னிப்பை ஒரு தடவை தன்னும் ஏற்றுகொண்டதாக காட்டவில்லை ---

தன்னிலும் பார்க்க அழகானவள் பிறத்தி நாட்டுக்காரி தன்னிலும் பார்க்க தனது தாய் பாஷையை நளினத்துடன் கவர்ச்சியாக கையாளுகின்றாள் என்ற எரிச்சலில் கீழ் தரமாக நடந்தவள் இந்த ஒழுக்கம் கெட்ட Jade Goody ---

ஷில்பா ஷெட்டி யை பகிரங்கமாக அவமானபடுத்தியது Jade Goody மட்டும் அல்ல என்பதும் உண்மை ---

[[[ அவருடைய முன்னாள் காதலரான Jeff Brazier மூலம் பிறந்த தனது 2 பையன்களுக்கும் இந்த மாதம் 7-ம் தேதிதான் கிறிஸ்துவ தேவாலயத்தில் பாப்டிஸம் செய்துவைத்துள்ளார். தாய்க்குரிய தனது கடமைகளை செவ்வனே செய்தே தீர வேண்டும் என்கிற அவரது கடமையுணர்ச்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும் ]]]

முப்பதாம் நாள் செய்ய வேண்டிய சடங்கை அறுபது மாதங்கள் கழித்து செய்யபட்டதை புகழும் உங்கள் மனம் --- கடவுள் தன்மை கொண்டது ---

[[[ இவருடைய வாழ்க்கைப் பாதையில் நிறைய கெட்ட சம்பவங்கள் நடந்திருக்கலாம்.. நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்கள் இருந்திருக்கலாம்.. அதெல்லாம் இனிமேல் ஒருபோதும் நமக்குத் தேவையில்லை ]]]

இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ---

[[[ நமது சக வலைப்பதிவரான அனுராதா அம்மா எத்தனை துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, தான் பட்டத் துன்பங்களை பிறரும்படக்கூடாது என்பதற்காக, அதனை வெளிச்சம் போட்டுக் காட்டி எத்தனை, எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் தனது துன்பங்களை பதிவு செய்து வைத்தாரே.. மறக்க முடியுமா..? ]]]

இப் பதிவுகளை படிக்கச் சரியான ஆவலாயுள்ளேன் தயை செய்து உதவுங்கள் ---

[[[ “பாதிதான் சரவணா படிச்சேன்.. படிக்க முடியல சரவணா..” என்று சில அக்காமார்கள் சொன்ன போது நெகிழ்ந்து போனேன் ]]]

உங்களது எழுத்து வன்மையின் திறமை அன்றி Jade மனுஷியின் மீது நேரடி அனுதாபம் அல்ல ---

[[[ எனது தாய் அதே கர்ப்பப் பை புற்றுநோயால்தான் துடிதுடித்து இறந்து போனார் ]]]

எனது தாயாரும் டைபெடேஸ் நோயினால் பாதிகபட்டு இறந்தார் என் இளம் வயதில் --- அருகில் இருந்து மேலதிக நேரம் சேவகம்
செய்யவில்லையே என தனிமையில்
இன்று உருகுகின்றேன் ---

என் அனுதாபங்கள் உங்களுக்கு !.

[[[ அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் ]]]

ஆமென் !

benza said...

[[[ எல்லோர் ஆத்மாவும் சாந்தி அடைய பிராத்திக்கிறேன் ]]]
Blogger லேகா பக்க்ஷே அம்மா வருக வருக --- கன காலத்தின் பின்னர் --- எனது வாயை அடக்கிய அம்மணி ---
அனுராதா என்பவர் புகழடைந்த எழுத்தாளரா ?

உண்மைத்தமிழன் said...

//அபி அப்பா said...
என்னத்த சொல்வது சரவணா! நான் ஜேட்கூடி மரணத்துகாக ஒரு கண்ணீர் விட்டது மதியும், நம் அம்மா உன் அம்மா மறைவுக்காக விட்டது அதை விட அதிகம்:-((//

பாதிக்கப்பட்டவர்களுக்குத்தானே அதன் முழு வீச்சும் தெரியும். அதுதான் என்னை எழுத வைத்தது அபிப்பா..!

உண்மைத்தமிழன் said...

//♥ தூயா ♥ Thooya ♥ said...
:(//

நன்றி தூயா..

உண்மைத்தமிழன் said...

//லேகா பக்க்ஷே said...

கடந்த சில நாட்களாக ஜெட்கூடி பற்றிய செய்தி எனது அன்றாட செய்திகளில் ஒன்று.
எமது குடும்ப நண்பனின் தாயாரும் இதே போல் நோயால் தாக்கப் பட்டு, "இரண்டு கிழமைகள்" என்று குறிக்கப்பட்ட பின், பாசமான மகனின் கவனிப்பிலும், கொடுங்கோல் மருமகளின் சதிகளிலும் நான்கு (4) வருடங்கள் போராடியே உயிர் பிரிந்தது.
எல்லோர் ஆத்மாவும் சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.//

உடனேயே இறந்துவிட்டால்கூட வருத்தம் சில நாட்கள்தான். ஆனால் வருடக்கணக்கில் நீளும் துன்பங்களை அனுபவித்த பின் இறப்பது அதன் இரண்டு தலைமுறையையும் நிச்சயம் பாதிக்கும் செயல்..

அதன் தாக்கம் பல்லாண்டுகள் நீடிக்கும்..

வருகைக்கு நன்றி லேகா..!

உண்மைத்தமிழன் said...

//திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...

காலம் சென்று கொண்டே இருக்கிறது.
காலன் கொன்று கொண்டே இருக்கிறான்.
இடையில் தவிக்கும் மாந்தர் நாம்
என் செய்வோம் இறைவா.

மக்களுக்கு இந்நோய் குறித்தான விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என்பதைத்தான் ஜேட்கூடியின் மரணமும் வலியுறுத்துகிறது.

அவரது ஆன்மா சாந்தி அடைய என் கண்ணீர் அஞ்சலிகள்.//

நன்றி சர்தார் ஸார்..

உடலும், மனமும் நலம்தானா..? இரண்டையும் சரிவரப் பார்த்துக் கொள்ளுங்கள்..

உண்மைத்தமிழன் said...

//pappu said...
ஆமாம், சாவப் பத்தி பல விதமா பேசினவங்க, அத லைவா காட்டனும்னு ஆசபட்டவங்க, தூக்கத்திலேயே உயிர் துறந்தது, ஒரு மாதிரிதான் இருந்தது. நீங்களும் அந்த உணர்வ எழுத்தில கொண்டு வந்திருக்கீங்க!//

பாப்பு..

அதுவே எவ்வளவு பெரிய கொடுமை.. அதை அவ்வளவு ஆசையாக வரவேற்றதுதான் எனக்கு அவர்களிடத்தில் பிடித்த விஷயமாகப் போய்விட்டது..

உண்மைத்தமிழன் said...

[[[ நமது சக வலைப்பதிவரான அனுராதா அம்மா எத்தனை துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, தான் பட்டத் துன்பங்களை பிறரும்படக்கூடாது என்பதற்காக, அதனை வெளிச்சம் போட்டுக் காட்டி எத்தனை, எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் தனது துன்பங்களை பதிவு செய்து வைத்தாரே.. மறக்க முடியுமா..? ]]]

இப்பதிவுகளை படிக்கச் சரியான ஆவலாயுள்ளேன். தயை செய்து உதவுங்கள் ---///

பென்ஸ் ஸார்..

www.anuratha.blogspot.com இந்தத தளத்திற்குச் சென்று படித்துப் பாருங்கள்.. புரியும்..!

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...

[[[எல்லோர் ஆத்மாவும் சாந்தி அடைய பிராத்திக்கிறேன் ]]]
Bogger லேகா பக்க்ஷே அம்மா வருக வருக --- கன காலத்தின் பின்னர் --- எனது வாயை அடக்கிய அம்மணி ---///

ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்காங்க.. அவங்களையும் விரட்டாதீங்க ஸார்....!

ஷண்முகப்ரியன் said...

பிறர் மரணத்தை கண்டு அழும் போதெல்லாம் நம் மரணத்தையும் நினைத்தே அழுகிறோம்.
மரணத்தை விட மனிதர்களை நிஜ மனிதர்களாக மாற்றும் சக்தி எதற்கும் இல்லை.
மரணம் நமக்குத் தரும் ஒரே பரிசு அதுதான்.
உங்கள் தாயைப் பற்றிய வேதனையான நினைவுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

மாண்புமிகு பொதுஜனம் said...

...//நான் ஏன் இதை உருகி, உருகி எழுதுகிறேன் என்றால் இந்தக் கொடுமையை என் கண்ணார நேரில் கண்டவன் நான். எனது தாய் ஜேட்கூடிக்கு வந்த அதே கர்ப்பப் பை புற்றுநோயால்தான் துடிதுடித்து இறந்து போனார்.//

என் கண்ணீர் அஞ்சலிகள்!!!

AKISAMY said...

romba arumaiyan pathuvu.anaivurmkkum oru viziponarvu.

Anonymous said...

அண்ணே.. நம் அதிகம் பாசம் வைத்தவர்கள் நோயால் அவதி படுவதை பார்க்க நேர்வது அந்த நோயை விட கொடுமை..

நீங்கள் சொல்லுவதுபோல் விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புவோம்!!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

அவரது ஆன்மா சாந்தி அடைய என் கண்ணீர் அஞ்சலிகள்.

Suresh said...

konjam kashtama irunthathu, ungal pathivu padithu irutha ithayathudan .. irukiran.. shanthi adayatum ungalathu thaiin anmavum JD in anmavum

நையாண்டி நைனா said...

ஆழ்ந்த அனுதாபம் மற்றும் வருத்தத்துடன், கண்ணீர் அஞ்சலிகள்.

உண்மைத்தமிழன் said...

//ஷண்முகப்ரியன் said...
பிறர் மரணத்தை கண்டு அழும் போதெல்லாம் நம் மரணத்தையும் நினைத்தே அழுகிறோம்.
மரணத்தைவிட மனிதர்களை நிஜ மனிதர்களாக மாற்றும் சக்தி எதற்கும் இல்லை. மரணம் நமக்குத் தரும் ஒரே பரிசு அதுதான்.//

மிக அருமையான அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் ஸார்..!

நிஜம்தான்.. மரணத்திலும் நமக்கு ஒரு செய்தி உண்டு. அது உணர்த்தும் நீதி நிச்சயம் நியாயமாகத்தான் இருக்கும். இதனை எனது வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறேன்.

கருத்துக்கு நன்றி ஸார்..

உண்மைத்தமிழன் said...

///மாண்புமிகு பொதுஜனம் said...

/நான் ஏன் இதை உருகி, உருகி எழுதுகிறேன் என்றால் இந்தக் கொடுமையை என் கண்ணார நேரில் கண்டவன் நான். எனது தாய் ஜேட்கூடிக்கு வந்த அதே கர்ப்பப் பை புற்றுநோயால்தான் துடிதுடித்து இறந்து போனார்./

என் கண்ணீர் அஞ்சலிகள்!!!///

நன்றி பொதுஜனம் ஸார்..! உங்கள் வீட்டில் உள்ள பெண்களிடமும் சொல்லி முறையான பரிசோதனை செய்யச் சொல்லுங்கள்.. அனைவருக்கும் நல்லது..!

உண்மைத்தமிழன் said...

//akisamy said...
romba arumaiyan pathuvu. anaivurmkkum oru viziponarvu.//

விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் அவரும் தன்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.. இதுவே மிகப் பெரிய விஷயம்..!

உண்மைத்தமிழன் said...

//Bhuvanesh said...
அண்ணே.. நம் அதிகம் பாசம் வைத்தவர்கள் நோயால் அவதிபடுவதை பார்க்க நேர்வது அந்த நோயை விட கொடுமை..

நீங்கள் சொல்லுவதுபோல் விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புவோம்!!//

தம்பி புவனேஷ்.. அந்தக் கொடுமையை நிச்சயம் வேறு யாரும் அனுபவிக்கக் கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன்.. வேண்டிக் கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

//அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
அவரது ஆன்மா சாந்தி அடைய என் கண்ணீர் அஞ்சலிகள்.//

பாஸ்கர்ஜி.. தங்களால் முயன்ற விழிப்புணர்வையும் சுற்றத்தாரிடம் ஏற்படுத்துங்கள்..!

உண்மைத்தமிழன் said...

//Suresh said...
konjam kashtama irunthathu, ungal pathivu padithu irutha ithayathudan .. irukiran.. shanthi adayatum ungalathu thaiin anmavum JD in anmavum//

நன்றி சுரேஷ்.. அனுதாபத்தை பெறுவதற்காக நிச்சயம் நான் இதனை எழுதவில்லை..

ஒரு இரண்டு பேராவது இதைப் படித்துவிட்டு சுதாரிப்படையட்டும் என்றுதான்..!

உண்மைத்தமிழன் said...

//நையாண்டி நைனா said...
ஆழ்ந்த அனுதாபம் மற்றும் வருத்தத்துடன், கண்ணீர் அஞ்சலிகள்.//

நன்றிகள் நைனா..!

FunScribbler said...

சாதாரணமான செய்தியாக இருக்கும் என்று படிக்க ஆரம்பித்தேன் இப்பதிவை. படிக்க, படிக்க கஷ்டமா போச்சு. அழுகை வந்துவிட்டது.

வாழ்ந்த தெய்வங்கள் அவர்கள் இருவரும்!:(

உண்மைத்தமிழன் said...

//Thamizhmaangani said...
சாதாரணமான செய்தியாக இருக்கும் என்று படிக்க ஆரம்பித்தேன் இப்பதிவை. படிக்க, படிக்க கஷ்டமா போச்சு. அழுகை வந்துவிட்டது.

வாழ்ந்த தெய்வங்கள் அவர்கள் இருவரும்!:(//

அதனை உணர்ந்ததால்தான் இதனை எழுதினேன் தமிழ்..!

மணிஜி said...

இறந்த பின்னும் இ மெயில் அனுப்பலாம் என்று ஒரு வலை தள சேவையை பற்றி காலையில் படித்தேன்...அது போல் இறந்த பின்னும் பதிவு போட முடியுமா என்று தெரியவில்லை.. ஆழ்ந்த அனுதாபங்கள்..சரவணன்...

மணிஜி said...

இறந்த பின்னும் இ மெயில் அனுப்பலாம் என்று ஒரு வலை தள சேவையை பற்றி காலையில் படித்தேன்...அது போல் இறந்த பின்னும் பதிவு போட முடியுமா என்று தெரியவில்லை.. ஆழ்ந்த அனுதாபங்கள்..சரவணன்...

Anonymous said...

எப்பேர்பட்ட கொடியவராக இருந்தாலும், மரணம் அருகில்தான் என்று தெரிந்து வாழ்வது மிகக் கடினம்.

ஜேட் கூடியின் ஆத்மா சாந்தியடைவதாகுக!

நல்லதந்தி said...

வருத்தமாக இருக்கிறது! :(

தமிழர் நேசன் said...

தாங்கள் வெகு நாட்களாக ஈழ மக்கள் கவலைகளை பற்றி பேசாமல் இருக்கிறீர்களே?!! பொதுவாகவே நான் படித்த பல வலை பதிவர்கள் இப்போது ஈழ மக்களை பற்றி பேசுவதை விட்டு விட்டது மன வருத்தத்தை தருகிறது!!
தேர்தல் சர்க்கஸ் எல்லாவற்றையும் மறக்க செய்துவிடும் என்பது உண்மை போலத்தான் தெரிகிறது!!
:-(

உண்மைத்தமிழன் said...

//தண்டோரா said...
இறந்த பின்னும் இ- மெயில் அனுப்பலாம் என்று ஒரு வலை தள சேவையை பற்றி காலையில் படித்தேன்... அது போல் இறந்த பின்னும் பதிவு போட முடியுமா என்று தெரியவில்லை.. ஆழ்ந்த அனுதாபங்கள்.. சரவணன்...//

மரணத்தை அவர் எதிர்கொண்ட விதத்தினால்தான் அவருடைய நோய் பற்றிய செய்தி நமக்கு பெரியதாக தெரிகிறது..

இதைத்தான் அவரும் எதிர்பார்த்தார். நானும் எதிர்பார்க்கிறேன்..!

நன்றி தண்டோரா ஸார்..!

உண்மைத்தமிழன் said...

//சத்தியமூர்த்தி said...
எப்பேர்பட்ட கொடியவராக இருந்தாலும், மரணம் அருகில்தான் என்று தெரிந்து வாழ்வது மிகக் கடினம்.
ஜேட் கூடியின் ஆத்மா சாந்தியடைவதாகுக!//

தங்களுடைய ஆதரவிற்கு நன்றி ஸார்..!

உண்மைத்தமிழன் said...

//நல்லதந்தி said...
வருத்தமாக இருக்கிறது! :(//

வருகைக்கு நன்றி தந்தியாரே..!

உண்மைத்தமிழன் said...

//தமிழர் நேசன் said...
தாங்கள் வெகு நாட்களாக ஈழ மக்கள் கவலைகளை பற்றி பேசாமல் இருக்கிறீர்களே?!! பொதுவாகவே நான் படித்த பல வலை பதிவர்கள் இப்போது ஈழ மக்களை பற்றி பேசுவதை விட்டு விட்டது மன வருத்தத்தை தருகிறது!!
தேர்தல் சர்க்கஸ் எல்லாவற்றையும் மறக்க செய்துவிடும் என்பது உண்மை போலத்தான் தெரிகிறது!!:-(//

அதுதான் உண்மை..

என்னதான் செய்தாலும், எழுதினாலும், கத்தினாலும் எமது அரசியல்வியாதிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதினால் அதிகாரமில்லாத எங்களால் என்ன ெசய்ய முடியும் நேசன் ஸார்..?

எவ்வளவோ கத்திப் பார்த்துவிட்டோம்.. கோபப்பட்டுவிட்டோம்.. பேசிப் பார்த்துவிட்டோம்..

பிரச்சினையைத் தீர்ப்பதைத் தவிர, வேறு திசையில் பிரச்சினையைத் திசை திருப்பியதுதான் இந்த அரசுகளின் சாதனை.

வேறு வழியில்லை.. நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையைத் தவிர வேறு எதையும் எங்களால் நினைக்க முடியவில்லை..

மன்னிக்கவும்..!

4Tamilmedia said...

*****பிரசுரத்துக்கல்ல******
உங்களுடைய இந்த இடுகையை எங்கள் தளத்தில் பிரசுரிக்க விரும்புகின்றோம் தங்கள் அனுமதி கிடைக்குமா?. அறியத் தரவும்.
4tamilmedia@gmail.com

-நன்றி
- 4tamilmedia TEam

anujanya said...

நல்ல பதிவு. நீங்கள் சொல்வது போல் இந்த மரணத்தின் பாடத்தை நாம் உணர வேண்டும். அனுராதாவின் பதிவுகளும் முக்கியமானவை. எல்லோர் ஆன்மாக்களும் அமைதியுரட்டும்.

அனுஜன்யா

உண்மைத்தமிழன் said...

//4தமிழ்மீடியா said...
*****பிரசுரத்துக்கல்ல******
உங்களுடைய இந்த இடுகையை எங்கள் தளத்தில் பிரசுரிக்க விரும்புகின்றோம் தங்கள் அனுமதி கிடைக்குமா?. அறியத் தரவும்.
4tamilmedia@gmail.com
-நன்றி
- 4tamilmedia TEam//

தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்..

ஈ-மெயில் அனுப்ப வசதியில்லாததால் அனுமதித்துவிட்டேன்..

மன்னிக்கவும்..

உண்மைத்தமிழன் said...

//அனுஜன்யா said...
நல்ல பதிவு. நீங்கள் சொல்வது போல் இந்த மரணத்தின் பாடத்தை நாம் உணர வேண்டும். அனுராதாவின் பதிவுகளும் முக்கியமானவை. எல்லோர் ஆன்மாக்களும் அமைதியுரட்டும்.
அனுஜன்யா//

ஒருமித்தக் கருத்துக்கும், ஆதரவிற்கும் நன்றி கவிஞரே..

நாமக்கல் சிபி said...

:(

ARV Loshan said...

ஒவ்வொரு வாழ்க்கையும்,ஒவ்வொரு மரணமுமே பாடங்கள் தான்..
அதிலும் தேதி குறிக்கப்பட்ட,தேதி அறிந்த மரணங்கள் பரிதாபகரமானவை..

உண்மைத் தமிழனின் மெல்லிய மனமும்,உங்கள் மென்மையான பார்வையும் ஒவ்வொரு வரிகளிலும் புரிகிறது..

ஒரு மரணத்தின் பின் எவ்வித சர்ச்சையும் வேண்டாமே..

sankarkumar said...

sir
ur blogger is very good.
i am a new commer of blog

http://sankarkumarpakkam.blogspot.com/

உண்மைத்தமிழன் said...

//நாமக்கல் சிபி said...

:(//

:))))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

//LOSHAN said...

ஒவ்வொரு வாழ்க்கையும், ஒவ்வொரு மரணமுமே பாடங்கள்தான்..

அதிலும் தேதி குறிக்கப்பட்ட, தேதி அறிந்த மரணங்கள் பரிதாபகரமானவை..

உண்மைத் தமிழனின் மெல்லிய மனமும், உங்கள் மென்மையான பார்வையும் ஒவ்வொரு வரிகளிலும் புரிகிறது..

ஒரு மரணத்தின் பின் எவ்வித சர்ச்சையும் வேண்டாமே..//

அதனை நானும் நன்கு உணர்ந்துதான் எழுதியிருக்கிறேன் லோஷன்..

மரணம் மாதிரி உற்றத் தோழன் யாருமில்லை என்று சொல்வார்கள்.

புரிந்து கொண்டு பயனடைந்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். இதனைத்தான் நான் இதில் சொல்லியிருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

///sankarfilms said...
sir ur blogger is very good.
i am a new commer of blog
http://sankarkumarpakkam.blogspot.com///

வருக.. வருக.. ஷங்கர்..

நல்வரவாகட்டும்..!

நிறைய எழுதுங்கள்.. அதற்கு முன் ஒரு வாரத்திற்கு திரட்டிகள் மூலமாக அனைத்துப் பதிவுகளையும் பார்வையிடுங்கள்...

ஒவ்வொருவரும் எந்தெந்த ஸ்டைலில் எழுதுகிறார்கள்.. எதன் எதன் ஆதரவாளர்கள் யார், யார் என்பதனை அவதானித்துக் கொள்ளுங்கள்.. பின்பு உங்களுக்குப் பிடித்த, ஒத்தக் கருத்துடையவர்களுக்கு முதலில் பின்னூட்டமிடுங்கள்.

உங்களுடைய பின்னூட்டங்களே உங்களை இங்கே அறிமுகப்படுத்தும்.

வாழ்க வளமுடன்..

லேகா பக்க்ஷே said...

BENZALOY,நீர் சொன்ன எல்லாம், எங்களுக்கும் தெரியும். சில விசயங்களை பட்டும் படாமலும் தவிர்க்கலாம். நீரும் அதையே கடைபிடிக்க பழகும்.

ஒரு இளம் தாய் தன் மரணத்தை நாட்கணக்கில் எண்ணிக் கொண்ண்டு இருக்கும் போது, இயன்ற அளவு தன் கடமையை செய்ய முற்பட்டார் - செய்தார்.
இது மிகவும் உணர்ச்சிகரமான சம்பவம். இதை நான் மெச்சுகிறேன்.

ஆனால், தன் இளம் வயதில் (21++) வழக்கம் போல் வெள்ளை இனத்தவர் வாழ்வது போல் தான் அவரும் வாழ்ந்தார். குறிப்பாக இவரின் இளம் பிராயம் தாய் தந்தையரின் கவனிப்பு அற்றவராகவே இருந்திருக்கிறார். அதன் பிரதி பலிப்பு தான் நாம் Big Bros மூலம் கண்டது.
என்ன இருந்தாலும், உலகத்துக்கு ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்தி உள்ளார்.
மெச்சுவோம்.-பிராத்திப்போம்.

நீரும் அதையே செய்யும். சும்மா பந்தி கணக்கில் கமெண்ட் எழுதினால் போல உம்மட கதை எடுபடும் எண்டு நினையாதையும்.


//benzaloy said...
[[[ எல்லோர் ஆத்மாவும் சாந்தி அடைய பிராத்திக்கிறேன் ]]]
Blogger லேகா பக்க்ஷே அம்மா வருக வருக --- கன காலத்தின் பின்னர் --- எனது வாயை அடக்கிய அம்மணி --- //

இதோஇந்த முறையும் உமது வாய்க்கு ஒரு பூட்டு.


//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
///benzaloy said...

[[[எல்லோர் ஆத்மாவும் சாந்தி அடைய பிராத்திக்கிறேன் ]]]
Bogger லேகா பக்க்ஷே அம்மா வருக வருக --- கன காலத்தின் பின்னர் --- எனது வாயை அடக்கிய அம்மணி ---///

ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்காங்க.. அவங்களையும் விரட்டாதீங்க ஸார்....! //

நான் கடவுள் மாதிரி, எப்பப்ப தோணுதோ அப்பப்ப எல்லாம் வந்து போவன்.
(மன்னிக்கவும், கமென்ட் கொஞ்சம் பெருத்து விட்டது.)

உண்மைத்தமிழன் said...

///லேகா பக்க்ஷே said...

BENZALOY, நீர் சொன்ன எல்லாம், எங்களுக்கும் தெரியும். சில விசயங்களை பட்டும் படாமலும் தவிர்க்கலாம். நீரும் அதையே கடைபிடிக்க பழகும். ஒரு இளம் தாய் தன் மரணத்தை நாட்கணக்கில் எண்ணிக் கொண்ண்டு இருக்கும்போது, இயன்ற அளவு தன் கடமையை செய்ய முற்பட்டார் - செய்தார். இது மிகவும் உணர்ச்சிகரமான சம்பவம். இதை நான் மெச்சுகிறேன். ஆனால், தன் இளம் வயதில் (21++) வழக்கம் போல் வெள்ளை இனத்தவர் வாழ்வது போல்தான் அவரும் வாழ்ந்தார். குறிப்பாக இவரின் இளம் பிராயம் தாய் தந்தையரின் கவனிப்பு அற்றவராகவே இருந்திருக்கிறார். அதன் பிரதிபலிப்புதான் நாம் Big Bros மூலம் கண்டது. என்ன இருந்தாலும், உலகத்துக்கு ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்தி உள்ளார். மெச்சுவோம். - பிராத்திப்போம். நீரும் அதையே செய்யும். சும்மா பந்தி கணக்கில் கமெண்ட் எழுதினால் போல உம்மட கதை எடுபடும் எண்டு நினையாதையும்.

//benzaloy said...
[[[எல்லோர் ஆத்மாவும் சாந்தி அடைய பிராத்திக்கிறேன்]]]
Blogger லேகா பக்க்ஷே அம்மா வருக வருக --- கன காலத்தின் பின்னர் --- எனது வாயை அடக்கிய அம்மணி --- //
இதோ இந்த முறையும் உமது வாய்க்கு ஒரு பூட்டு.

//உண்மைத்தமிழன்(15270788164745573644) said...
///benzaloy said...
[[[எல்லோர் ஆத்மாவும் சாந்தி அடைய பிராத்திக்கிறேன் ]]]
Bogger லேகா பக்க்ஷே அம்மா வருக வருக --- கன காலத்தின் பின்னர் --- எனது வாயை அடக்கிய அம்மணி ---///
ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்காங்க.. அவங்களையும் விரட்டாதீங்க ஸார்....! //

நான் கடவுள் மாதிரி, எப்பப்ப தோணுதோ அப்பப்ப எல்லாம் வந்து போவன். (மன்னிக்கவும், கமென்ட் கொஞ்சம் பெருத்து விட்டது.)///

அம்மணி..

பென்ஸ் ஸார் சார்பா நான் தங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்..

அவரும் ஏதோ உரிமையான கிண்டலாகத்தான் இதனைச் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்..

தாங்களும் அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்..

நம் மூவருக்குமே நமது தேசம் பற்றிய ஒரு எதிர்பார்ப்பு உண்டு. அதை எதிர்நோக்கியிருக்கும் ஒத்த நாட்டவராகவே கடைசிவரையிலும் இருப்போம்..

நமக்குள் வருகின்ற பேதங்களை பெரிதாக்கிக் கொண்டு நம்மைப் பிரித்தாளும் உணர்ச்சிக்கு ஆளாக வேண்டாம்..

வருகைக்கு நன்றி லேகா..!

குடுகுடுப்பை said...

:(

உண்மைத்தமிழன் said...

//குடுகுடுப்பை said...

:(//

நன்றி குடுகுடுப்பையாரே..!

மோகன் காந்தி said...

புற்று நோயால் அவதிப்பட்டு வந்த - பிக் பிரதர்- புகழ் ஜேட் கூடி மரணம்

லேகா பக்க்ஷே said...

உண்மை தமிழன் ஸார்,
நானும் சும்மா தமாசுக்கு தான் பேசுறன்.
பென்ஸ் ஸார் மற்றும் நீங்கள் கோவிச்சுக்க மாட்டிங்கனு எனக்கும் தெரியும்.
கலக்கம் வேணாம் சாமியோவ்.

உண்மைத்தமிழன் said...

//மோகன் காந்தி said...

புற்று நோயால் அவதிப்பட்டு வந்த - பிக் பிரதர்- புகழ் ஜேட் கூடி மரணம்//

மோகன்காந்தி ஸார்..

தங்களுடைய கார்ட்டூன் வாசகங்கள் சிரிக்க வைக்கிறது. நல்ல ஹியூமர்சென்ஸ்..

திரட்டிகளில் இணைந்து பயன் பெறுங்கள்.. நிறைய பார்வையாளர்கள் கிடைப்பார்கள்.

வருகைக்கு நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

//லேகா பக்க்ஷே said...
உண்மை தமிழன் ஸார், நானும் சும்மா தமாசுக்கு தான் பேசுறன். பென்ஸ் ஸார் மற்றும் நீங்கள் கோவிச்சுக்க மாட்டிங்கனு எனக்கும் தெரியும். கலக்கம் வேணாம் சாமியோவ்.//

ஆத்தா.. இப்படியெல்லாம் வயித்துல புளியைக் கரைக்காதம்மா..!

நாமெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு.. அப்படித்தான் இருக்கோணம்..!

Bhuvanesh said...

//அதற்கு முன் ஒரு வாரத்திற்கு திரட்டிகள் மூலமாக அனைத்துப் பதிவுகளையும் பார்வையிடுங்கள்...

ஒவ்வொருவரும் எந்தெந்த ஸ்டைலில் எழுதுகிறார்கள்.. எதன் எதன் ஆதரவாளர்கள் யார், யார் என்பதனை அவதானித்துக் கொள்ளுங்கள்.. பின்பு உங்களுக்குப் பிடித்த, ஒத்தக் கருத்துடையவர்களுக்கு முதலில் பின்னூட்டமிடுங்கள்.

உங்களுடைய பின்னூட்டங்களே உங்களை இங்கே அறிமுகப்படுத்தும்.
//

என்னை போல் புது வரவுகளுக்கு நல்ல அறிவுரை அண்ணே..

ஆனா பின்னூட்டம் போடறது அறிமுகத்துக்குகாக எல்லாம் இல்லை..

ஒன்று - பிடித்த எழுத்துக்கள்
ரெண்டு - பிடித்த எழுத்தாளர்கள்
மூணு - ஒத்த கருத்துடையவர்கள்
நாலாவது - முற்றிலும் மாறுபட்ட கருத்து - ஆனா கவர்ந்த எழுத்து !!

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...
//அதற்கு முன் ஒரு வாரத்திற்கு திரட்டிகள் மூலமாக அனைத்துப் பதிவுகளையும் பார்வையிடுங்கள்...
ஒவ்வொருவரும் எந்தெந்த ஸ்டைலில் எழுதுகிறார்கள்.. எதன் எதன் ஆதரவாளர்கள் யார், யார் என்பதனை அவதானித்துக் கொள்ளுங்கள்.. பின்பு உங்களுக்குப் பிடித்த, ஒத்தக் கருத்துடையவர்களுக்கு முதலில் பின்னூட்டமிடுங்கள்.
உங்களுடைய பின்னூட்டங்களே உங்களை இங்கே அறிமுகப்படுத்தும்.//

என்னை போல் புது வரவுகளுக்கு நல்ல அறிவுரை அண்ணே.. ஆனா பின்னூட்டம் போடறது அறிமுகத்துக்குகாக எல்லாம் இல்லை..
ஒன்று - பிடித்த எழுத்துக்கள்
ரெண்டு - பிடித்த எழுத்தாளர்கள்
மூணு - ஒத்த கருத்துடையவர்கள்
நாலாவது - முற்றிலும் மாறுபட்ட கருத்து - ஆனா கவர்ந்த எழுத்து!!///

ஆஹா.. இப்படியொரு கோணம் இருக்கிறதா..? வாழ்க புவனேஷ்.. நன்று.. நன்று..

தொடருங்கள்..

benza said...

LOSHAN said...

[[[ ஒரு மரணத்தின் பின் எவ்வித சர்ச்சையும் வேண்டாமே ]]]

அன்பரே இது விவேக விவாத களம் என நினைக்கிறேன் ---
மரணம் சகலருக்கும் சம்பவிக்கும் என்பது யதார்த்தம் ---
அன்மையில் மரணம் சம்பவிக்கும் என்று ஒரு சிலருக்கு முன் கூட்டியே
தெரிந்துள்ளது --- நீதி மன்றின் நீதிபதி அல்லது மேலே உள்ளவன் மருத்துவர் மூலமாக தந்த தீர்ப்பை --- ஏற்றுத்தான் ஆக வேண்டும் ---

முன்னாள் Russia KGB அதிகாரி லண்டனில் Plutoniam நஞ்சு - இந்நாள் Russia Prime Minister Viladimir Putin கட்டளையினால் - ஊட்டபட்டு தலை முடி முற்றாக இழந்து சிறுக சிறுக உள் உறுப்புகள் அனைத்தும் ஒவொன்றாக நாளாந்தம் இயங்காது நிற்க இறந்தாரே ---

தமிழ் ஈழத்துக்காக பகிரங்க மேடையில் உண்ணாவிரதம்
இருந்து இருவர் இறந்தனரே ---

அயர்லாந்து போராடத்திட்காக உண்ணாவிரதம் இருந்து குறிபிட்ட பதினாறாம் நாள் மடிந்தாரே Bobby Sands ---

காதலுக்காக - ரோசத்துகாக - உயிர் நீத்த 1000s இருக்கையில் ஆராய்ந்து அலச வேண்டும் தானே லோஷன் சார் ? !

benza said...

லேகா பக்க்ஷே said...

[[[ ''BENZALOY, நீர் சொன்ன எல்லாம், எங்களுக்கும் தெரியும் '' ]]]

இதில் இரு விஷயங்கள் --- எனக்கு ஏன் அம்மா ''கபிடல்'' ?
நான் தான் முதல் இல்லாத ''எம்ப்டி பாகெட்'' ஆச்சே !

''எங்களுக்கும்'' என்றால் உம்முடன் வேறு யார் யார் ?

பொது தளங்களில் அவரவர் தனது கருத்துகளை ஒருமையில் சொன்னால் என்னை போன்ற ''மொக்கை'' களுக்கு இலகுவாக புரியும் ---

அல்லது அம்மா நீங்கள் பத்திரிகை எழுத்தார்கள் (Fourth Estate) உரிமையுடன் அரச வம்சம் பாவிக்கும் ''பன்மையில்'' எழுதுவதானால் சகல பதிவுகளிலும் பன்மையையே பாவியுங்கள் --- ஏன் என புரியுது என நம்புகின்றேன் !

[[[ சில விசயங்களை பட்டும் படாமலும் தவிர்க்கலாம். நீரும் அதையே கடைபிடிக்க பழகும் ]]]

அதென்ன விஷயங்கள் என்று லிஸ்ட் ஒன்று தந்தால் - - -

[[[ வழக்கம் போல் வெள்ளை இனத்தவர் வாழ்வது போல்தான் அவரும் வாழ்ந்தார். குறிப்பாக இவரின் இளம் பிராயம் தாய் தந்தையரின் கவனிப்பு அற்றவராகவே இருந்திருக்கிறார் ]]]

ஒரு இனத்தை ஒரு சம்பவத்தை வைத்து ஒரேயடியாக மட்டப்பலகை பிடித்து தரபடுத்துவது யதார்த்தம் அல்ல அம்மணி ---

பிரான்ஸ் நாட்டு முன்னாள் ஜனாதிபதி மிற்றோன் (பெயர் திருத்தவும்) அவர்களிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டார் ''உங்களுக்கு வேறொரு பெண் மூலம் பிறந்து வயதடைந்த மகள் உள்ளாராமே ?'' எனக் கேட்டதும் --- ''அதற்கென்ன இப்போது ?'' என்று பதில் சுடச்சுட கொடுத்தாராம் ---

அதே நாட்டு இன்றைய ஜனாதிபதி இன்னொருவரது காதலியை மணந்து --- பின்னர் டிவோர்சில் பிரிந்து இன்னோர் அழகியை திருமணம் செய்து வாழ்பவரிடம் ''அமெரிக்க பில் கிளிண்டன் - மோனிக்கா விவகாரத்தின் கருத்தென்ன ?'' எனக் கேட்டதும் ''செக்ஸ் அண்ட் பொலிடிக்ஸ் டூ நாட் மிக்ஸ் வெல்'' என்று சுருக்கமாக பதில் தந்தார் ---

இரு ஜனாதிபதிகளும் குடும்ப செக்ஸ் சம்பந்தமாக இவ்வாறு லூஸ் கருத்துகள் கொண்டோர் என்ற படியால் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சகலரும் செக்ஸ் விஷயத்தில் லூஸ் மொரல்ஸ் கொண்டவர்கள் என நான் மதிக்கமாட்டேன் ---

வெள்ளையர்களும் எம்மை போல ''கற்பு'' கருத்துடையவர்கள் தான் ---

சகல வெள்ளையர்களும் பரவலாக கண்டவருடன் ''இவளை'' போல படுத் தெளும்புவது கிடையாது அம்மா !

உண்மை தமிழன் சொன்னார் [[[ ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்காங்க.. அவங்களையும் விரட்டாதீங்க ஸார் ]]]

அதன்ன சார், ''அவுங்களையும்'' ? வேறு யாரையாவது விரட்டினேனா ?
அப்பிடினா மன்னிச்சுடுங்க சர் !

[[[ பென்ஸ் ஸார் சார்பா நான் தங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் ]]]

ச்சா அப்பீடில்ல இருக்கனும் ஒற்றுமை --- ''We are Boys'' என்று நெடூக சொல்ல்வேனே !

[[[ நமக்குள் வருகின்ற பேதங்களை பெரிதாக்கிக் கொண்டு நம்மைப் பிரித்தாளும் உணர்ச்சிக்கு ஆளாக வேண்டாம் ]]]

பிரித்தாள ''பிரித்தானியா'' விடம் தான் கேக்கணும் ---

நன்றி லேகா உம்முடன் கொழுவுவது எனது மனதை பட்டை தீட்டவே யன்றி வேறொன்றுமல்ல ---
உமது எழுத்தில் அதிகார தொனி தோய்ந்துள்ளது --- சற்று அலசி வெயிலில் காயவிட்டால் போதும் ---
எழுத்தை அல்ல உமது தலையை !

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...
LOSHAN said...

[[[ஒரு மரணத்தின் பின் எவ்வித சர்ச்சையும் வேண்டாமே]]]

அன்பரே இது விவேக விவாத களம் என நினைக்கிறேன் ---
மரணம் சகலருக்கும் சம்பவிக்கும் என்பது யதார்த்தம் ---
அன்மையில் மரணம் சம்பவிக்கும் என்று ஒரு சிலருக்கு முன் கூட்டியே
தெரிந்துள்ளது --- நீதிமன்றின் நீதிபதி அல்லது மேலே உள்ளவன் மருத்துவர் மூலமாக தந்த தீர்ப்பை --- ஏற்றுத்தான் ஆக வேண்டும் ---
முன்னாள் Russia KGB அதிகாரி லண்டனில் Plutoniam நஞ்சு - இந்நாள் Russia Prime Minister Viladimir Putin கட்டளையினால் - ஊட்டபட்டு தலை முடி முற்றாக இழந்து சிறுக சிறுக உள் உறுப்புகள் அனைத்தும் ஒவொன்றாக நாளாந்தம் இயங்காது நிற்க இறந்தாரே ---
தமிழ் ஈழத்துக்காக பகிரங்க மேடையில் உண்ணாவிரதம் இருந்து இருவர் இறந்தனரே ---
அயர்லாந்து போராடத்திட்காக உண்ணாவிரதம் இருந்து குறிபிட்ட பதினாறாம் நாள் மடிந்தாரே Bobby Sands ---
காதலுக்காக - ரோசத்துகாக - உயிர் நீத்த 1000s இருக்கையில் ஆராய்ந்து அலச வேண்டும்தானே லோஷன்
சார்?!///

பென்ஸ் ஸார்..

ஜேட்கூடியின் மரணத்தின் மூலம் பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் விழிப்புணர்ச்சியின் பலம்தான் இங்கே முக்கியமே தவிர, ஜேட்கூடியின் தனிப்பட்ட வாழ்க்கை இங்கே நமக்குத் தேவையில்லாதது..

இரங்கற்பா நிகழ்ச்சியில் அவருடைய பிளஸ்களைப் பற்றித்தான் பேச வேண்டுமே தவிர, மற்றவைகளை அல்ல..!

விட்டுவிடுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...
லேகா பக்க்ஷே said...
[[[''BENZALOY, நீர் சொன்ன எல்லாம், எங்களுக்கும் தெரியும்'']]]

இதில் இரு விஷயங்கள் --- எனக்கு ஏன் அம்மா ''கபிடல்''?
நான்தான் முதல் இல்லாத ''எம்ப்டி பாகெட்'' ஆச்சே!
''எங்களுக்கும்'' என்றால் உம்முடன் வேறு யார் யார்?
பொது தளங்களில் அவரவர் தனது கருத்துகளை ஒருமையில் சொன்னால் என்னை போன்ற ''மொக்கை'' களுக்கு இலகுவாக புரியும் ---
அல்லது அம்மா நீங்கள் பத்திரிகை எழுத்தார்கள் (Fourth Estate) உரிமையுடன் அரச வம்சம் பாவிக்கும் ''பன்மையில்'' எழுதுவதானால் சகல பதிவுகளிலும் பன்மையையே பாவியுங்கள் --- ஏன் என புரியுது என நம்புகின்றேன் !
[[[சில விசயங்களை பட்டும் படாமலும் தவிர்க்கலாம். நீரும் அதையே கடைபிடிக்க பழகும்]]]
அதென்ன விஷயங்கள் என்று லிஸ்ட் ஒன்று தந்தால் - - -
[[[வழக்கம் போல் வெள்ளை இனத்தவர் வாழ்வது போல்தான் அவரும் வாழ்ந்தார். குறிப்பாக இவரின் இளம் பிராயம் தாய் தந்தையரின் கவனிப்பு அற்றவராகவே இருந்திருக்கிறார்]]]
ஒரு இனத்தை ஒரு சம்பவத்தை வைத்து ஒரேயடியாக மட்டப்பலகை பிடித்து தரபடுத்துவது யதார்த்தம் அல்ல அம்மணி ---//

ஐய்யே.. பென்ஸ் ஸாரே.. அதான் லேகா சொல்றாங்களே.. சும்மா தமாஷுக்குத்தான் எழுதினேன்னு.. படிச்சிட்டு சிரிச்சிட்டு போயிரலாமே.. எதுக்கு இப்படி பத்தி, பத்தியா..? ஸாரி.. விட்ருங்க ஸார்..

//பிரான்ஸ் நாட்டு முன்னாள் ஜனாதிபதி மிற்றோன் (பெயர் திருத்தவும்) அவர்களிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டார் ''உங்களுக்கு வேறொரு பெண் மூலம் பிறந்து வயதடைந்த மகள் உள்ளாராமே ?'' எனக் கேட்டதும் --- ''அதற்கென்ன இப்போது ?'' என்று பதில் சுடச்சுட கொடுத்தாராம் ---//

அதே நாட்டு இன்றைய ஜனாதிபதி இன்னொருவரது காதலியை மணந்து --- பின்னர் டிவோர்சில் பிரிந்து இன்னோர் அழகியை திருமணம் செய்து வாழ்பவரிடம் ''அமெரிக்க பில் கிளிண்டன் - மோனிக்கா விவகாரத்தின் கருத்தென்ன ?'' எனக் கேட்டதும் ''செக்ஸ் அண்ட் பொலிடிக்ஸ் டூ நாட் மிக்ஸ் வெல்'' என்று சுருக்கமாக பதில் தந்தார் ---//

சர்கோஸி பற்றியும் மித்தரண்ட் பற்றியும் நான் முன்பு எழுதிய பதிவு இது. படித்துப் பாருங்கள்..
http://truetamilans.blogspot.com/2008/06/blog-post_13.html

//உண்மை தமிழன் சொன்னார் [[[ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்காங்க.. அவங்களையும் விரட்டாதீங்க ஸார்]]]

அதன்ன சார், ''அவுங்களையும்''? வேறு யாரையாவது விரட்டினேனா?
அப்பிடினா மன்னிச்சுடுங்க சர்!//

ஐயா எழுதும்போது தெரியாத்தனமான பேச்சுவாக்குல வந்திருச்சுங்கய்யா.. மன்னிச்சிருங்க.. வேண்ணா ரெண்டு தோப்புக்கரணம் போட்டுக்குறேன்..

//[[[ பென்ஸ் ஸார் சார்பா நான் தங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்]]]

ச்சா அப்பீடில்ல இருக்கனும் ஒற்றுமை --- ''We are Boys'' என்று நெடூக சொல்ல்வேனே!//

ஹி..ஹி..ஹி.. இதுதானே நமக்குள்ல இருக்கணும்.. அதான் பாசம் பொங்கி வருது..!

வால்பையன் said...

//லண்டனில் இருக்கின்ற இளம் வயதுப் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜேட்கூடிக்கு வந்திருந்த கர்ப்ப் பை புற்றுநோய்க்கான ஆரம்பக் கட்ட சோதனைகளை தங்களுக்குச் செய்து கொண்டார்களாம்.. இவர்களுடைய இந்த விழிப்புணர்வுக்குக் காரணம் ஜேட்கூடிதான்.. //

பத்திரிக்கைகாரர்களின் ஒரு மட்டமான விளம்பர நோக்கம் ஒரு நல்ல காரியத்துக்கு பயன்பட்டது மகிழ்ச்சி!
ஜேட்கூடி தனது உடலை சோதனை கருவியாக்கி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியுள்ளார்.

உண்மைத்தமிழன் said...

///வால்பையன் said...

//லண்டனில் இருக்கின்ற இளம் வயதுப் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜேட்கூடிக்கு வந்திருந்த கர்ப்ப் பை புற்றுநோய்க்கான ஆரம்பக் கட்ட சோதனைகளை தங்களுக்குச் செய்து கொண்டார்களாம்.. இவர்களுடைய இந்த விழிப்புணர்வுக்குக் காரணம் ஜேட்கூடிதான்.. //

பத்திரிக்கைகாரர்களின் ஒரு மட்டமான விளம்பர நோக்கம் ஒரு நல்ல காரியத்துக்கு பயன்பட்டது மகிழ்ச்சி! ஜேட்கூடி தனது உடலை சோதனை கருவியாக்கி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியுள்ளார்.///

இந்த ஒரு காரணத்திற்காகத்தான் இங்கிலாந்தே இன்றைக்கு அவரது இறப்புக்கு வருத்தம் தெரிவித்து வருகிறது.

இங்கிலாந்து பிரதமரும், அரண்மனையும் துக்கம் விசாரித்துள்ளன.

நாட்டில் தினமும் நடக்கும் புற்றுநோய் சாவுகளில் இதுவும் ஒன்று என்று அவர்களால் சும்மா இருக்க முடியவில்லை.. மக்களின் பார்வை ஜேட்கூடி விஷயத்தில் அவ்வளவு தூரம் உள்ளதாம்..

மீடியாக்கள் செய்த உருப்படியான விஷயங்களில் இதுவும் ஒன்று எனலாம்..!

butterfly Surya said...

Information: இந்த பதிவு விகடன்.காம் வலையில் வந்துள்ளது.

benza said...

[[[ இந்த ஒரு காரணத்திற்காகத்தான் இங்கிலாந்தே இன்றைக்கு அவரது இறப்புக்கு வருத்தம் தெரிவித்து வருகிறது.

இங்கிலாந்து பிரதமரும், அரண்மனையும் துக்கம் விசாரித்துள்ளன.

நாட்டில் தினமும் நடக்கும் புற்றுநோய் சாவுகளில் இதுவும் ஒன்று என்று அவர்களால் சும்மா இருக்க முடியவில்லை.. மக்களின் பார்வை ஜேட்கூடி விஷயத்தில் அவ்வளவு தூரம் உள்ளதாம்..

மீடியாக்கள் செய்த உருப்படியான விஷயங்களில் இதுவும் ஒன்று எனலாம்..! ]]]

மெய் தான் அய்யா ... மீடியாகள் பொதுவாக நன்மையே செய்கின்றன ... மனிதனது படைப்புகளில் பிழைகள் நிகள்வது வழமை ... சமயம் போன்று ... மீடியாக்களது மௌனத்தால் அநீதி விளைவதைப் பற்றி அலசினால் நன்றாக இருக்குமே !

benza said...

[[[ Blogger லேகா பக்க்ஷே said...
எமது குடும்ப நண்பனின் தாயாரும் இதே போல் நோயால் தாக்கப் பட்டு ... பாசமான மகனின் கவனிப்பிலும், கொடுங்கோல் மருமகளின் சதிகளிலும் நான்கு (4) வருடங்கள் போராடியே உயிர் பிரிந்தது ]]]

இளம் பிராயம் தொடக்கம் மனதில் ஒரு புதிர் ---
பெண் அன்பானவள் - மெதுமையானவள் - சென்சிடிவ்
அதனால் பொசசெசிவ் ---
[[[ பல தடைகள் தாண்டிய நண்பன் சொல்வான் :
''எங்களுக்கு ஐம்புலன்கள் தான் இருக்கு மச்சான் -
பெண்களுக்கு உடம்பு பூரா அண்டனா --- அதான் ஒரு
சின்ன பொய் சொன்னாகூட பிடிச்சுடுவாடா'' ]]]
இதை கேட்டபோது அவனுக்காக என் கண் சிந்தியது ---

இவ்வாறானவள் எவ்வாறு இன்னொரு பெண்பிள்ளையை
கொடுமைபடுத்துவாள் ?---
அதேன் இந்த மாமியார்-மருமகள் விவகாரத்தில் மாமனார் ஒன்றில் ஒதுங்கி விடுவார் அல்லது மனைவியை கை விட்டு மருமகள் பக்கம் சார்ந்து விடுவார் ?

இதை விளக்க சற்று சைகொலோஜி தேவை போல தோன்றுது ---
யாராவது இரக்கம் காட்டி விளக்கம் தாங்கையா ப்ளீஸ்

உண்மைத்தமிழன் said...

//வண்ணத்துபூச்சியார் said...
Information: இந்த பதிவு விகடன்.காம் வலையில் வந்துள்ளது.//

நன்றி பூச்சியாரே..

எனக்கும் அபிஅப்பா சொல்லித்தான் தெரியும்..

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...

[[[ இந்த ஒரு காரணத்திற்காகத்தான் இங்கிலாந்தே இன்றைக்கு அவரது இறப்புக்கு வருத்தம் தெரிவித்து வருகிறது.

இங்கிலாந்து பிரதமரும், அரண்மனையும் துக்கம் விசாரித்துள்ளன.

நாட்டில் தினமும் நடக்கும் புற்றுநோய் சாவுகளில் இதுவும் ஒன்று என்று அவர்களால் சும்மா இருக்க முடியவில்லை.. மக்களின் பார்வை ஜேட்கூடி விஷயத்தில் அவ்வளவு தூரம் உள்ளதாம்..

மீடியாக்கள் செய்த உருப்படியான விஷயங்களில் இதுவும் ஒன்று எனலாம்..! ]]]

மெய்தான் அய்யா ... மீடியாகள் பொதுவாக நன்மையே செய்கின்றன. மனிதனது படைப்புகளில் பிழைகள் நிகள்வது வழமை. சமயம் போன்று. மீடியாக்களது மௌனத்தால் அநீதி விளைவதைப் பற்றி அலசினால் நன்றாக இருக்குமே!///

பென்ஸ் ஸார்..

அதற்கேற்ற சூழல் வரும்போது நிச்சயம் அது பற்றி நாம் விவாதிக்கலாம்.

நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது.. இல்லாமல் இல்லை..!

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...

[[[Blogger லேகா பக்க்ஷே said...
எமது குடும்ப நண்பனின் தாயாரும் இதே போல் நோயால் தாக்கப்பட்டு ... பாசமான மகனின் கவனிப்பிலும், கொடுங்கோல் மருமகளின் சதிகளிலும் நான்கு (4) வருடங்கள் போராடியே உயிர் பிரிந்தது ]]]

இளம் பிராயம் தொடக்கம் மனதில் ஒரு புதிர் --- பெண் அன்பானவள் - மெதுமையானவள் - சென்சிடிவ்
அதனால் பொசசெசிவ் ---
[[[பல தடைகள் தாண்டிய நண்பன் சொல்வான் :
''எங்களுக்கு ஐம்புலன்கள்தான் இருக்கு மச்சான் - பெண்களுக்கு உடம்பு பூரா அண்டனா --- அதான் ஒரு சின்ன பொய் சொன்னாகூட பிடிச்சுடுவாடா'']]]
இதை கேட்டபோது அவனுக்காக என் கண் சிந்தியது --- இவ்வாறானவள் எவ்வாறு இன்னொரு பெண் பிள்ளையை கொடுமைபடுத்துவாள்? அதேன் இந்த மாமியார்-மருமகள் விவகாரத்தில் மாமனார் ஒன்றில் ஒதுங்கி விடுவார் அல்லது மனைவியை கை விட்டு மருமகள் பக்கம் சார்ந்து விடுவார் ?
இதை விளக்க சற்று சைகொலோஜி தேவை போல தோன்றுது --- யாராவது இரக்கம் காட்டி விளக்கம் தாங்கையா ப்ளீஸ்.///

இதுக்கெல்லாம் விளக்கம் சொன்னா பக்கம் போதாது பென்ஸ் ஸார்..

தங்களுக்கு நேரமிருந்தால் தமிழகத் தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களை இமை கொட்டாமல், தினம் தவறாமல் பார்க்கவும்..

நிச்சயம் புரிந்துவிடும்..!

benza said...

[[[ Blogger 4தமிழ்மீடியா said...

*****பிரசுரத்துக்கல்ல******
உங்களுடைய இந்த இடுகையை எங்கள் தளத்தில் பிரசுரிக்க விரும்புகின்றோம் தங்கள் அனுமதி கிடைக்குமா?. அறியத் தரவும்.
4tamilmedia@gmail.com ]]]

இவர்களை நான் முழு மனதுடன் மதிக்கிறேன் ---
ஏனைய தளங்களில் இருந்து பிறின்பாக பண்பினால் பிரிந்து நின்று ஜோலிகின்றனர் ---

சொற்ப காலத்தில் இவர்கள் முதன்மை இடத்தை வகிப்பார்கள்

benza said...

[[[ தங்களுக்கு நேரமிருந்தால் தமிழகத் தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களை இமை கொட்டாமல், தினம் தவறாமல் பார்க்கவும்..

நிச்சயம் புரிந்துவிடும்..!]]]

நேரம் இருக்கு --- சனல் தான் இங்கு இல்லை --- விட்ருவோம்

benza said...

[[[ சர்கோஸி பற்றியும் மித்தரண்ட் பற்றியும் நான் முன்பு எழுதிய பதிவு இது. படித்துப் பாருங்கள்..
http://truetamilans.blogspot.com/2008/06/blog-post_13.html ]]]

பார்த்தேன் --- மிதராந்து அவர்கள் இவ்வாறு ஒபெனாக பல பெண்களுடன் தனிமையில் பழகியும் பிரான்ஸ் இல் அவரது அரசியல் நிலை தளரவில்லையே ?

The Da Vinci Code எனும் புத்தகத்தில் இவரை உலகில் உதித்த விவேக புத்திரர்களில் ஒருவராக டா விஞ்சி உடன் சேர்த்து காட்டி உள்ளார் ஆசிரியர் Dan Brown.

Paris நகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற Louvre Museum முன்பாக 644 slabs வைத்து கட்டியிருக்கும் முக்கோண வடிவம் மித்ரன் அவர்களின் கட்டளைப்படியே
ஏற்பட்டதாம்

உங்களது பதிவு வழமைக்கு மாறாக ஆழம் இல்லாதுள்ளது .

benza said...

[[[ www.anuratha.blogspot.com இந்தத தளத்திற்குச் சென்று படித்துப் பாருங்கள்.. புரியும்..! ]]]

அனுராத படித்தேன் --- கணவனின் உருக்கம் தாங்க முடியவில்லை --- கலங்கி போனேன் அய்யா ---

இவ்வளவு அன்பிருந்து கண் முன்னே மறைவது கொடுமை --- எனக்கு நடந்திருந்தால் அதை தாங்க எனக்கு மன வல்லமை இருந்திருக்காது ---

எண்டா கேட்டேன் என்றிருந்துச்சு ---

என் முதல் எண்ணம் எழுத்தாளர் ''அனுராதா'' என்று !

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...
[[[ Blogger 4தமிழ்மீடியா said...
*****பிரசுரத்துக்கல்ல******
உங்களுடைய இந்த இடுகையை எங்கள் தளத்தில் பிரசுரிக்க விரும்புகின்றோம் தங்கள் அனுமதி கிடைக்குமா?. அறியத் தரவும்.
4tamilmedia@gmail.com ]]]

இவர்களை நான் முழு மனதுடன் மதிக்கிறேன் --- ஏனைய தளங்களில் இருந்து பிறின்பாக பண்பினால் பிரிந்து நின்று ஜோலிகின்றனர் --- சொற்ப காலத்தில் இவர்கள் முதன்மை இடத்தை வகிப்பார்கள்//

நல்லவைகளை வாழ்த்துவோம் பென்ஸ் ஐயா..

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...
[[[ தங்களுக்கு நேரமிருந்தால் தமிழகத் தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களை இமை கொட்டாமல், தினம் தவறாமல் பார்க்கவும்..

நிச்சயம் புரிந்துவிடும்..!]]]

நேரம் இருக்கு --- சனல் தான் இங்கு இல்லை --- விட்ருவோம்///

அப்ப தப்பிச்சீங்கன்னு சொல்லுங்க..

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...
[[[ சர்கோஸி பற்றியும் மித்தரண்ட் பற்றியும் நான் முன்பு எழுதிய பதிவு இது. படித்துப் பாருங்கள்..
http://truetamilans.blogspot.com/2008/06/blog-post_13.html ]]]

பார்த்தேன் --- மிதராந்து அவர்கள் இவ்வாறு ஒபெனாக பல பெண்களுடன் தனிமையில் பழகியும் பிரான்ஸ் இல் அவரது அரசியல் நிலை தளரவில்லையே?///

அவர் இறந்த பின்புதான் அவரது மனைவி இந்த விஷயங்களை வெளியில் சொன்னார்.

//The Da Vinci Code எனும் புத்தகத்தில் இவரை உலகில் உதித்த விவேக புத்திரர்களில் ஒருவராக டா விஞ்சி உடன் சேர்த்து காட்டி உள்ளார் ஆசிரியர் Dan Brown. Paris நகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற Louvre Museum முன்பாக 644 slabs வைத்து கட்டியிருக்கும் முக்கோண வடிவம் மித்ரன் அவர்களின் கட்டளைப்படியே ஏற்பட்டதாம். உங்களது பதிவு வழமைக்கு மாறாக ஆழம் இல்லாதுள்ளது...//

எனக்குப் புதிய தகவல்களைக் கொடுத்துள்ளீர்கள் பென்ஸ் ஐயா.. மிக்க நன்றி..

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...
[[[ www.anuratha.blogspot.com இந்தத தளத்திற்குச் சென்று படித்துப் பாருங்கள்.. புரியும்..! ]]]

அனுராத படித்தேன் --- கணவனின் உருக்கம் தாங்க முடியவில்லை --- கலங்கி போனேன் அய்யா ---

இவ்வளவு அன்பிருந்து கண் முன்னே மறைவது கொடுமை --- எனக்கு நடந்திருந்தால் அதை தாங்க எனக்கு மன வல்லமை இருந்திருக்காது ---

எண்டா கேட்டேன் என்றிருந்துச்சு ---

என் முதல் எண்ணம் எழுத்தாளர் ''அனுராதா'' என்று !///

அப்படியும் தாங்கிக் கொண்டு இப்பவும் தெய்வத்தை வணங்க கோவில், கோவிலாகச் சென்று கொண்டிருக்கிறார் அந்த உத்தமபுருஷன்.. என்ன செய்யச் சொல்கிறீர்கள் பென்ஸ் ஐயா..

பாவம்.. பணம் இருந்தென்ன. பொருள் இருந்தென்ன..? இல்லாளும், வாழ்க்கையும் இல்லாத உலகத்தில் நிம்மதியேது..?

abeer ahmed said...

See who owns cliving.org or any other website:
http://whois.domaintasks.com/cliving.org