பொம்மலாட்டம் - என்னவென்று சொல்வது..?

10-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..


முதலில் தாமதமான விமர்சனத்திற்காக கழகக் கண்மணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாகவே எனது திரைப்பட விமர்சனங்களில் முழுக் கதையையும் சொல்லிவிடுவது எனது வழக்கம் என்பதால் அதன்படி இத்திரைப்படத்தின் கதையை முன்பே சொல்லித் தொலைத்து, அதனால் படம் பார்க்கவிருக்கும் பதிவர்கள், ஆரம்பக் கட்டத்திலேயே ஒரு சுவாரஸ்யத்தை இழந்துவிடும் அபாயம் உண்டு என்பதால்தான் வேண்டுமென்றே இத்தனை தாமதப்படுத்தினேன்.

என் இனிய சுஜாதா தனது கலையுலக வாழ்க்கையில் இறுதியாகப் பணியாற்றியது இத்திரைப்படத்தில்தான் என்பதால், இத்திரைப்படம் ஒரு இலக்கியச் சிற்பியின் வரலாறோடு இணைந்து நிற்கிறது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

மிகச் சமீபத்தில் சென்னையில் நடந்த இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளின் அறிமுக விழாவில் பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா, “என்னுடைய வயது 66. ஆனால் நான் போட்டிருக்கும் டீஷர்ட்டும், ஜீன்ஸ் பேண்ட்டும்தான் என் வயதைக் குறைத்து என்னை ஒரு இளைஞனாகக் காட்டுகிறது..” என்று பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் சொன்னார்.

இயக்குநர் இமயம் தன்னை ஒரு இளைஞனாக காட்டிக் கொள்வதாக எந்தவிதத்தில் சொன்னார் என்பதனை அவரவர் கருத்தில் எடுத்துக் கொண்டு நோக்கினாலும், இளைஞன் என்கிற வார்த்தையை இந்தப் படைப்பின் மூலமும் நிரூபித்திருக்கிறார்.

ஸ்டூடியோக்களின் இருட்டுக்களில் செயற்கை வெளிச்சத்தில் உமிழ்ந்து கொண்டிருந்த தமிழ் சினிமாக்களை இங்கிருந்து புரட்டியெடுத்துச் சென்று கிராமத்து வாய்க்கால் கரையோரத்திலும், புழுதி பறக்கும் செம்மண்ணிலும் பதிவு செய்யத் துவங்கிய பாரதிராஜா, ‘16 வயதினிலே’ மற்றும் ‘சிகப்பு ரோஜாக்களுக்குப்’ பின்பு மூன்றாவதாக தனது சொந்தக் கதையை வைத்துப் படமாக்கியிருக்கிறார் ‘பொம்மலாட்டமாக’..

‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘டிக், டிக்.. டிக்’..., ‘ஒரு கைதியின் டைரி’, ‘கேப்டன் மகள்’, ‘கண்களால் கைது செய்’ என்று தனது திரையுலக வாழ்க்கையில் மிகக் குறைவாகவே சஸ்பென்ஸ், திரில்லர் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியிருக்கும் இந்தச் சிற்பியின் ஆறாவது திரில்லர் படைப்பு இது.

வழக்கமான களத்துமேட்டு கிராமத்துக் கதைகளை, மண்வாசனைக் களங்களை ரத்தமும், சதையுமாக பாரதிராஜாவால் சொல்லப்பட்ட வரலாறு தமிழ்ச் சினிமாவின் பொற்காலமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், அவர் படைத்துள்ள முற்றிலும் மாறுபட்ட இந்தத் திரைப்படம் தமிழ்த் திரையுலகத்திற்கு நிச்சயம் ஒரு புதுமைதான்.

ராணா என்கிற அந்த இயக்குநருக்கு திரையுலக வாழ்க்கையில் கிடைத்த வெற்றி, அவரது சொந்த வாழ்க்கையில் கிடைக்கவில்லை. மனைவியின்பால் அவருக்கு இருந்த வெறுப்பும், இயல்பாகவே தனக்குள் ஊறிப் போயிருந்த இறுக்கமும் சேர்ந்து அவரை ஒரு புரிந்து கொள்ள முடியாத மனிதராக மாற்றியிருக்கிறது.

வெளியாகவிருக்கும் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிற்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்க ஹோட்டல் அறையிலிருந்து பத்திரிகையாளர்கள் கண்ணில்படாமல் கதாநாயகியைக் காப்பாற்றி காரில் அழைத்து வரும் இயக்குநர் ராணா, பார்வையாளர்களுக்கு தெரிந்தே கதாநாயகியை காரோடு மலையுச்சியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்கிறார்.

இதில் ஆரம்பிக்கின்ற இயக்குநரின் பரமபத விளையாட்டு, இறுதியில் அவரிடமே வந்து முடிகிறது.

தொடர்ச்சியான சில கொலைகளும் இதற்கு முன் நடந்துள்ளது என்பதனை சொல்லாமல் அடுத்தடுத்து வருகின்ற காட்சிகளில் விசாரணைப் படலத்தின் இடை, இடையே காட்டியுள்ள புது யுக்தி, திரைக்கதையின்பால் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தியது.

தான் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்த கதாநாயகியை பொத்திப் பொத்திப் பாதுகாத்து வரும் இயக்குநரின் மீது, சந்தேகக் கனல் இறுதிவரையிலும் கனன்று கொண்டேயிருப்பது திரைக்கதையின் ஒரு பலம்.

விசாரணையின் ஆரம்பக் கட்டத்தில் இறுக்கமான முகத்தோடும், ஒரு வித அகம்பாவத்தோடும் பதிலளிக்கும் இயக்குநர் ராணா, சிபிஐ அதிகாரியின் தொடர் விசாரணையில் இதயம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இங்கேயும் அவருடைய உடல் நலனில் சந்தேகப்பட்டு விடாமல் அங்கேயும் விசாரணை தொடர்கிறது.

இயக்குநர் இதுவரையிலும் வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்திராத கதாநாயகியைப் பற்றி முழுவதையும் அறியத் துடிக்கும் அதிகாரி, இயக்குநருக்கு நடந்த நிகழ்வுகளை ஞாபகப்படுத்த.. கதை விரிகிறது.

ஒரு குக்கிராமத்தில் ஊர் முழுவதையும் சொந்தமாக்கி வைத்திருக்கும் ஊர்த் தலைவரின் அலம்பல்களைத் தாங்கிக் கொண்டு படப்பிடிப்பை நடத்தினாலும் வரம்பு மீறி போகும்போது பொறுமையிழந்த சூழலில் அந்த ஊராட்சித் தலைவர் கொல்லப்பட அதுதான் இயக்குநர் செய்த முதல் கொலை என்கிறார் ‘கதை’ சொல்லும் சிபிஐ அதிகாரி.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்கும் மலேசியாவில் படத்தின் மறைமுக தயாரிப்பாளரான, பைனான்ஸியரின் மகனும், படத்தின் ஹீரோவுமான ஒருவன், கதாநாயகியை நெருங்கி, நெருங்கிப் போக.. கண்டிக்கவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் தடுமாறிப் போகிறார் இயக்குநர்.

ஆனாலும் வரம்பு மீறல் அதிகமாக அவனும் பரிதாபமாக உயிரை விடுகிறான். இது அவர் செய்த இரண்டாவது கொலை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

இடையில் போட்டுக் கொடுத்தே பேர் வாங்கும் பட்டியலில் இருக்கும் ஒரு உதவி இயக்குனன், இயக்குநரின் கதாநாயகி மீதான பாசத்தை அவருடைய மனைவிக்குப் போட்டுக் கொடுக்க படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து பேயாட்டம் ஆடிவிட்டுப் போகிறாள் இயக்குநரின் மனைவி.

வழக்கை விசாரிக்கும் அதிகாரியின் காதலி அனிதா, இயக்குநரின் தீவிர ரசிகையாக இருக்க.. அவளும் இந்த திரைப்படத்தின் படப்பதிவுகளின்போது உடனிருக்க வேண்டி வருகிறது. தனது இதயம் தொட்ட இயக்குநர், கத்தியைத் தொட்டிருக்க மாட்டார் என்பதில் உறுதியாக இருக்கிறாள் அதிகாரியின் காதலி. ஆனால் அதிகாரியோ தெளிவாகவே இருக்கிறார். இதில் ஒரு மர்மம் இருக்கிறது. அதுதான் என்ன..?

அதுவரையிலும் தள்ளி நின்று பிரமிப்பாயும், பயமாயும் பார்த்த இயக்குநரின் பராக்கிரமத்தை காவல்துறையிடம் சொல்லிக் கொடுத்து ஒதுங்குகிறார்கள் இயக்குநரின் உதவியாளர்களும், வீட்டு வேலையாட்களும். முடிச்சுகள் அனைத்தும் இயக்குநரின் கழுத்தைக் குறி வைத்தே வர.. அவர் கைது செய்யப்படுகிறார். ஆனால் கோர்ட் விசாரணையில் அவர் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு சொல்லப்பட விடுதலையாகிறார்.

விடுதலையாகி மலைப்பிரதேசத்தில் தனது ரசிகையுடன் ஓய்வில் இருக்கும் இயக்குநரைத் தேடி வரும் அந்த அதிகாரி தான் கையோடு அழைத்து வந்திருக்கும் ஒரு பையனைக் காட்டிய பின்புதான் திரைக்கதையின் மிக சுவாரஸ்யமான முடிச்சு அவிழ்கிறது. அதுவரையில் பார்வையாளர்கள் ரசித்து வந்த அந்த கதாநாயகி ஒரு பெண்ணே அல்ல ஆண் என்று சொல்லப்படுகின்றபோது ஏற்பட்டது நிச்சயம் அதிர்ச்சி அலைதான்.

அந்த சிறுவனை இயக்குநர் ஏன் பெண் வேடமிட்டு கதாநாயகியாக சித்தரிக்க முன் வந்தார் என்பதில், அச்சிறுவனின் பாவப்பட்ட முன் ஜென்ம வாழ்க்கையை உதவிக்கு அழைக்கிறார் இயக்குநர்.

தாசி குலத்தில் பிறந்த அம்மாவின் வழியில் நடனத்தின் மீதான ஆர்வம் பெற்றெடுத்த பையன்களுக்கு இருந்தாலும், காலம் மாறிய வேகத்தில் நடனத்திற்கு வேலையில்லாமல் உடற்பசியைத் தீர்க்கும் புராதனத் தொழிலில் மூழ்குகிறாள் அம்மா. அதுவும் ஒரு நாளில் ஓய்ந்துபோய்விட.. நடனத்தில் இருந்த ஆர்வம் திரிஷ்னா என்கிற அந்தப் பையன் வேடமிட்டு நடனமாட வேண்டிய சூழல் வருகிறது.

இந்த இடத்தில்தான் கேமிராவும் கையுமாக உலா வரும் இயக்குநரின் கண்ணில் படுகிறான் திரிஷ்னா. பெண்களுக்கே சவால் விடும் வகையில் அவன் ஆடுகின்ற ஆட்டமும், காட்டுகின்ற நளினமும் இயக்குநருக்குள் எதையோ செய்கிறது. ஏற்கெனவே தான் நடிக்க வைத்த நடிகைகள் செய்த அலம்பல்களும், டார்ச்சர்களும் அவரது சிந்தனையைத் தூண்டுகின்றன.

இதுவரையிலும் இல்லாத ஒரு புதுமையை திரையில் செய்து காண்பிக்கத் துடிக்கிறது அவரது மனம். பெண்ணாக நடிப்பதற்கு பெண்ணாகவே இருக்க வேண்டுமா என்ன..? ஒரு ஆணையே பெண்ணாக நடிக்க வைத்துக் காண்பித்தால்தான் என்ன என்று மனக்கணக்குப் போடுகிறார். தனது கனவு கதாநாயகி இவனே என்று அப்போதே முடிவு செய்கிறார். திருஷ்னாவின் அண்ணனிடம் பேசி அவனை பெண் வேடமிட்ட கதாநாயகியாக்கப் போவதாக உறுதியுடன் சொல்கிறார்.

அப்படி கதாநாயகியாக்கப்பட்ட திரிஷ்னாதான் மேற்சொன்ன ஊராட்சித் தலைவரையும், ஹீரோவையும் படுகொலை செய்தான் என்பதுதான் சோகமான, சினிமாத்தனமில்லாத அழகான கிளைமாக்ஸ்.

பார்க்கும்போதெல்லாம் கதாநாயகியாக்கப்பட்டவனின் உடலை காமத்துடன் நோக்கியபடியே இருக்கும் ஊராட்சித் தலைவர் கேரவன் வேனுக்குள் போய் ஒளிந்திருக்க.. ஓய்வெடுக்க வரும் கேரவனுக்குள் வரும் திரிஷ்னாவின் பெண் வேடம் கலைக்கப்பட்டு அவன் தனது சொந்த உடலில் குடிபுகுந்திருக்கும் நேரத்தில் தலையை நீட்டும் ஊராட்சித் தலைவருக்கு தான் அதுவரையில் மோகித்திருந்த கதாநாயகி உண்மையில் நாயகி அல்ல நாயகன் என்பதும் தெரிகிறது.

ஆனாலும் அவருக்குள் இருந்த மோகம் இப்போது மோகினி மீது கொண்ட அசுரர்களின் ‘மோகமுள்’ளாக மாறிவிட “திரிஷ்னாவுடன் சுகிப்பதும் தனக்கு விருப்பமே” என்கிறார். வெறி பிடித்த வேங்கையாய் சுற்றிச் சுற்றி வரும் ஊராட்சித் தலைவரின் விருப்பத்தை நிறைவேற்ற அன்றிரவே அவரது வீட்டிற்கு வந்து ‘தர்மதரிசனம்’ தருவதாகச் சொல்கிறான் திரிஷ்னா.

‘தரிசனத்தை’ வீட்டில் வைத்துக் கொள்ள பயப்படும் ஊராட்சித் தலைவர் தனக்கு இறுதி நாள் அதுதான் என்பதையறியாமல் தனது கல்குவாரிக்கு வரச் சொல்கிறான். அங்கேதான் திரிஷ்னா தனது கோபத்தையெல்லாம் தான் கற்றறிருந்திருக்கும் நாட்டியத்தின் மீது காண்பித்து அதன் மூலம் விசுவரூபமெடுத்து ஊராட்சித் தலைவரை கொலை செய்கிறான்.

மலேசியாவில் தன்னை சந்திப்பதற்கு முன்பாகவே “ரேப் செய்யப் போறேன்.. கட்டிப் பிடிக்கப் போறேன்.. முத்தம் கொடுக்கப் போகிறேன்..” என்றெல்லாம் போனில் பூச்சாண்டி காட்டிய ஹீரோவை.. கற்பழிக்க முயல்வது போன்ற காட்சியில் நிஜமாகவே கற்பழிக்க ஆசைப்படும் ஹீரோவை.. தனியே அழைத்து விண்ணுலகுக்கு அனுப்பி வைக்கிறான் திரிஷ்னா.

இந்த இரண்டு குற்றங்களையும் திரிஷ்னா இயக்குநரிடம் சொல்லுகின்ற இடம்தான் படத்தின் முடிச்சு அவிழத் தொடங்கிய இடம். அது புதிய படத்தின் அறிமுக விழா. அன்றைக்குத்தான் அந்தப் படுகொலைகளை செய்தது தனது மானசீக கதாநாயகியாக்கப்பட்ட திரிஷ்னா என்பது இயக்குநருக்குத் தெரிய வர.. நிமிடத்தில் பரபரவென பரபரப்பாகிறார் ராணா.

பத்திரிகையாளர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு கை தேர்ந்த பார்முலா ரேஸ் கார் ஓட்டுநரைப் போல் தனது கதாநாயகியைக் கடத்திக் கொண்டு போகிறார். வழியில் அவருடைய ஏற்பாட்டின் பேரில் அதே போன்றதொரு காரில் வரும் திரிஷ்னாவின் அண்ணன் தனது தம்பியை அழைத்துக் கொண்டு போக.. திரிஷ்னா அணிந்திருந்த சேலையை மட்டும் தனது முன் சீட்டில் ஒரு பொம்மைக்கு அணிவித்து காரோடு சேர்த்து சொக்கப்பானை கொழுத்தியிருக்கிறார் இயக்குநர்.

இந்த படுகொலை நியாயமா? நியாயமில்லையா..? என்கிற கேள்விக்குள் இயக்குநர் செல்லவேயில்லை. முடிந்தது. எல்லாமே தற்காப்புக்காகத்தான்.. இயக்குநரின் தவறு கொலையையும், கொலையாளியையும் மறைத்தது.. திசை திருப்பியது.. ஆனால் இயக்குநரின் திரைப்பட ஆர்வம்.. கலையார்வம்.. இதுவரையில் யாரும் செய்ய விரும்பாத ஒரு ஆணை பெண்ணாக காட்டத் துடித்த சாகசம்..?

இதுவரையில் தானும் ரகசியமாக நேசித்த ஒரு இயக்குநர்.. தனது அதிகார வாழ்க்கையில் தான் சந்தித்த முதல் வித்தியாசமான மனிதர் என்ற பற்பல விசித்திரங்களை கண்டறிந்த திருப்தியே போதுமென்ற அசைவில் அதிகாரி “வழக்கு முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும்..” என்று சொல்லிவிட்டுப் போக..

தனது நடனத்திற்கு இனி கவலையில்லை என்ற சந்தோஷக் கூச்சலில் திரிஷ்னா நடனத்துடன் செல்கின்ற அந்த கவிதை காட்சியோடு தமிழ்ச் சினிமா வரலாற்றில் அடுத்தக் கட்ட நகர்தலை சப்தமில்லாம் செய்து காட்டியிருக்கும் இத்திரைப்படம் நிறைவு பெறுகிறது.

முதல் வணக்கம் இயக்குநருக்கு..

கலை என்பதும் நடிப்பு என்பதும் எப்படி ஒரு மொழியோ அதேபோல் இயக்குதலும் ஒரு மொழி. இதனை இயக்குநர் இமயத்திற்கு சொல்லித் தர வேண்டியதில்லை. போட்டி போடுவது என்று முடிவு செய்தாகிவிட்டது. பின்பு ஏன் ஒரு பக்கம் மட்டுமான மாற்றம் என்று நினைத்து செல்லூலாய்டின் அனைத்து பிரேம்களிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார் இயக்குநர் இமயம்.

இப்படியெல்லாம்கூட ஷாட்டுகள் வைக்க முடியுமா என்பதை இப்போதைய இளம் இயக்குநர்களுக்குச் சொல்லிக் காட்டியிருக்கிறார் இமயம். ஆடு, மாடு, கோழி, மலை, ஆறு, குளம் என்று திரைப்படத்தில் இடம் பெறும் அனைத்து அ•றிணைகளையும், ஊர்வன, பறப்பவனையையும் குளோஸப்பில் காட்டாமல் விட்டதில்லை. குளோஸப் காட்சிகள்தான் இயக்குநர் இமயத்திற்கு மிக, மிக பிடித்தமான ஷாட். அதை அவரே இருபது வருடத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறார்.

இத்திரைப்படத்தின் காட்சிகளை அப்படியே கண் முன்னே வரிசைப்படுத்திப் பாருங்கள். எத்தனை, எத்தனை குளோஸப் காட்சிகள் என்று தெரியுமா? உங்கள் மனக்கண்ணில் முதலில் வருவது அக்காட்சிகள்தான். அவைகளே கதைகளை விரிக்கின்றன நம் முன்னே..



தட்டில் சப்பாத்தியை வைத்துக் கொண்டு காஜல் அகர்வால், நானா படேகரிடம் நீட்டுகின்ற காட்சியிலும், தொடர்ந்து பேசுகின்ற அக்காட்சியின் போது காட்டியிருக்கும் குளோஸப் அமைப்புகள் கொள்ளை அழகு. இந்தக் கோணத்தில்கூட ஒரு நடிகையை அழகாகக் காட்ட முடியுமா என்று ஒரு நிமிட சிந்தனைக்குள் ஆழ்த்திவிட்டது அக்காட்சி.

டிராபிக் சிக்னலில் நொடியில் பார்த்த மாத்திரத்தில் பைக்கிலிருந்து தாவி ராணவின் காரில் செல்லும் கஜாலா தனது மானசீக இயக்குநரிடம் பேசுகின்ற பேச்சும், ஆட்டோகிராப் வாங்குவதும் குழந்தைத்தனமான கொஞ்சல்.

ரஞ்சிதாவின் அறிமுகக் காட்சி யாருமே செய்யத் துணியாத செயல். அது ரஞ்சிதாதான் என்று கண்டுபிடிப்பதற்குள், காட்சிகள் தாவிவிட்டாலும் அக்காட்சியில் பேசப்பட்ட வசனங்களும், ரஞ்சிதாவின் தோற்றமும் கோணங்கித்தனம் என்றாலும் இதுதான் ரசிக்க வைக்கும் தன்மை.

ஒரு நல்ல இயக்குநர் களிமண்ணையும் நடிக்க வைத்துவிடுவார் என்று புகழாரம் சூட்டினாலும் அந்தக் களிமண்ணும் நல்ல மண்ணாகவே இருக்க வேண்டும். ஆனால், இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாமல் வாய்த்திருக்கிறார் நானாபடேகர்.



இந்தித் திரையுலகில் எந்தவொரு வேடமாக இருந்தாலும் அலட்சியமாக செய்து முடித்துவிட்டுப் போகும் நானா, இயக்குநர் ராணாவாகவே இப்படத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். சில நாள் தாடியுடன் படம் முழுக்கவே ஒரு வெறுப்படைந்த மனிதராக காட்சியளிக்கிறார் நானா.

கால் நனைந்து நடிக்க வேண்டிய காட்சியில் மினரல் வாட்டரை காலில் கொட்டிவிட்டு இயக்குநருக்கே அட்வைஸ் செய்கின்ற அந்த நடிகையை “இந்த மேனாமினுக்கியை அனுப்பிரலாமா..?” என்று தன் கட்டைவிரல் நண்பனிடம் கேட்டு விரட்டியடிக்கிற கோபத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது இவரது அமர்க்களம்.

மணிவண்ணன், விவேக்கின் அலம்பல் தாங்காமல், சகிக்கவும் முடியாமல் பொறுப்பான இயக்குநராக தயாரிப்பாளரை விரட்டிவிடும் காட்சி..

படப்பிடிப்புத் தளத்திற்கே வந்த மனைவி டச்சப் பெண்ணை புரட்டியெடுத்துவிட்டுப் போக.. அதனை ஏற்றுக் கொள்ள முடியாமலும், எதிர்க்க முடியாமலும் கையறு நிலையில் நிற்கும் முக பாவனை.. அபாரம்..

அதற்கு சற்றுமுன் அவர் சொல்லிக் கொடுத்த காதல் காட்சியினை இந்த கொடூரத் தாக்கத்தை மனதில் ஏற்றிக் கொண்டு, மீண்டும் சொல்லிக் கொடுக்கும்போது காட்டுகின்ற நடிப்பு ஒப்பனையில்லாதது.

அவ்வப்போது கண்ணீரோடு தன்னருகே வந்து நிற்கும் திரிஷ்னாவை வாஞ்சையோடு அணைத்து ஆறுதல் சொல்லும் உன்மத்த நடிப்பு..

“செலவு பிடிக்குமே ஸார்..” என்று சொல்லும் தயாரிப்பாளரிடம், “என்னைவிட இளிச்சவாயன் எவனும் கிடைக்க மாட்டான்..” என்று சட்டென்று சீறுகின்ற சீற்றம்..

ஹீரோவின் டார்ச்சர் தாங்காவில்லை என்று தன்னிடம் புகார் சொல்ல வரும் தயாரிப்பாளரை பார்த்து ஸ்னூக்கர் டேபிளில் இருந்து நிமிர்ந்து ஒரு வார்த்தைகூட பேசாமல் கூர்ந்து பார்க்கும் அந்த ஒரு பார்வை போதும்.. ராணாவாகவே வாழ்ந்திருக்கிறார் நானா படேகர்.

உடல் மொழியைப் பயன்படுத்தி நடிப்பை வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தவர்கள் இந்தியாவிலேயே சொற்பத்தினர்தான். நடுவீட்டில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ளிவீசி “என் தலைல கொண்டு வந்து கொட்டுங்க..” என்று பொருமுகிறார் பாருங்கள். மனிதருக்கு இத்திரைப்படத்தின் மூலம் தேசிய விருது நிச்சயம் உண்டு எனலாம்.

நானாவின் முகமும், உடலும் காட்டிய நடிப்பிற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது நிழல்கள் ரவியின் டப்பிங் குரல். கிட்டத்தட்ட மணிரத்னம் ஸ்டைலில் இதுவரையில் இல்லாத புதுமையாக பாரதிராஜாவின் இத்திரைப்படத்தில் ஒலிச் சேர்ப்பும், ஒலி வடிவமும் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.

காலம் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் இயக்குநர்களின் தனிப்பாங்கு மட்டும் மாறக்கூடாது என்பதனால் ஆர் வரிசையில் ருக்மணியை அறிமுகப்படுத்தியிருக்கிறார் இமயம்.

திரிஷ்னாவாக வலம் வருகிறார் ருக்மணி. முதல் திரைப்படம் போலவே தெரியவில்லை. அனுபவம் வாய்ந்தவர்களின் கலை படைப்புகள் சோடை போகாது என்பதுபோல இவரது நடிப்பாற்றலும் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. நடனத்தில் தேர்ந்தவர்தான் இந்த வேடத்துக்கு வேண்டும் என்று மிகத் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கிடைத்தவர் இந்த ருக்மணி.


சின்னச் சின்ன முகச்சுழிப்புகளுக்குக்கூட அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை குளோஸப் காட்சிகளில் பார்க்க முடிகிறது. மணிவண்ணனையும், விவேக்கையும் சமாளிக்க முடியாமல் சொட்டு கண்ணீரோடு இயக்குநரின் முன்னால் போய் நிற்கும் காட்சியும், இரண்டு கொலைகளையும் நான்தான் செய்தேன் என்று ஹோட்டல் அறையில் சொல்லும்போதும் இமயத்தின் நடிக்க வைக்கும் திறமை பளீச்..

இந்தத் திரைப்படம் சொன்னதுபோலவே இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே வெளியாகியிருந்தால் காஜல் அகர்வால் என்கிற பெண்ணிற்கு மிகச் சிறந்த அறிமுகமாக இருந்திருக்கும். சற்றுத் தாமதமாகிவிட அந்தப் பெருமை இப்படத்திற்குக் கிடைக்காமல் போயிருக்கிறது.

மிக அழகு. இந்த அழகின் ஓவியத்தை முழுக்க, முழுக்க காட்டிவிட்டார் இயக்குநர். காஜல் இப்படத்திற்குப் பின்பு நடித்தத் திரைப்படங்களில்கூட அவரை இந்த அளவுக்கு அழகாக நடிக்க வைத்தோ, தென்பட வைத்தோ காட்டியிருக்க மாட்டார்கள் என்று உறுதியுடன் சொல்லலாம்.

“அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும்?” என்பதைப் போல் புருஷன் எப்போது இறப்பான் என்று தெரிந்தால் சொத்து விவகாரத்தில் கையெழுத்து வாங்கலாம் என்கிற அளவுக்கு ‘பாசமான’ மனைவி கேரக்டரில் ரஞ்சிதா.

“எவகூட படுத்திருக்க..? நான் ஒருத்தி இங்க இருக்கேன். அங்க எவ, எவளோ கேக்குதா உனக்கு..?” என்று போனில் புருஷனிடம் பொறுமுகிற பொறுமல் அட்சரச் சுத்தம் நடிப்பு.

அர்ஜூன் தன் காலைத் தூக்காமல் நடந்தே நடித்து முடித்திருக்கும் ஒரே திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். ஆனாலும் பொருத்தமான தேர்வுதான். நானா படேகர் இப்படித்தான் நடிப்பார் என்பதனை யூகித்து அவருக்கேற்றாற்போல் இருக்க வேண்டி, அர்ஜூன் இப்படத்திற்குத் தேவைப்பட்டிருக்கிறார் என்று உணர்கிறேன்.

மணிவண்ணனும், அவர் மைத்துனர் விவேக்கும் வழக்கம்போல செய்ய வேண்டியதை செய்திருக்கிறார்கள். சொல்லிக் கொடுத்ததை பேசியிருக்கிறார்கள். ஆனாலும் மணிவண்ணனுக்கு ஒரு நன்றி. “பெண் என்ற திரிஷ்னாவைவிட ஆணாக இருக்கும் திருஷ்னாவை மோகிப்பது அம்சமாக இருக்கும்” என்பது போன்ற வசனத்தை பேசும் கேரக்டரை ஏற்று நடித்துள்ள தைரியத்தை பாராட்டியே தீர வேண்டும். விவேக் இத்திரைப்படத்திற்குத் தேவைப்படாத ஒரு கேரக்டர். ஆனால் படத்தின் வியாபாரத்திற்காக இடைச்செருகல் செய்யப்பட்டிருக்கிறார் என்பது படத்தினை பார்க்கும்போதே தெரிந்தது.

சின்னச் சின்ன வசனங்கள், வெற்று காட்சிகளில் கதையை நகர்த்துதல், குறிப்பால் உணர்த்துதல் என்று பாரதிராஜாவின் டச்சப் நிறையவே இருந்தும் படத்தின் துவக்கத்தில் காட்சிகள் ஜெட்வேகத்தில் பறப்பது யாருடைய ஸ்டைல் என்று புரியவில்லை. கொஞ்சம் நிறுத்தி, நிதானமாகத் துவக்கியிருக்கலாம். காட்சிகளில் வேகத்தைக் கூட்டுவது மாசலா படத்திற்கு மட்டுமே தேவையானது. இங்கே எதற்கு..?

வழக்கமாக பாரதிராஜா என்றாலே வெள்ளை உடை தேவதைகள் கனவில் வருவார்களே என்ற கவலையுடன் உட்கார்ந்திருந்தவர்களையும், எதிர்பார்த்து வந்தவர்களையும் நல்லவேளையாகக் காப்பாற்றிவிட்டார் இயக்குநர். ஒரு பாடல் காட்சியில் கண்ணை உறுத்தாத வகையில் வெள்ளை உடையில் பெண்களை வரவழைத்துவிட்டார் இயக்குநர். அதிலும் காஜல் ராணாவுடன் எதிரெதிராக அமர்ந்து பேசுகின்ற காட்சியில் வெள்ளை உடையில் நிஜமாகவே தேவதை போல் தெரிந்தது அழகு.

படத்தின் துவக்கத்தில் மோதிரம் அணிந்த அந்த முத்திரைக் கைகளை கூப்பி படத்தினைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக வார்த்தைகளில் சிலம்பாட்டம் ஆடும் பாரதிராஜா, இந்த முறை இரண்டு காட்சிகளில்கூட தென்பட்டிருப்பது ஆபத்தான விஷயத்திற்கு அடிகோலுகிறது.

விவேக் அறிமுகமாகும் காட்சியில் நானா படேகருடன் டிராலியில் கேமிராவைப் பிடித்தபடி செல்பவர் பாரதிராஜா. பின்பு நானா விடுதலை செய்யப்பட்ட பத்திரிகை செய்தியைக் காட்டும் காட்சியிலும் மின்னல் வேகத்தில் கடையில் இருந்து பத்திரிகை வாங்கிவிட்டுச் செல்கிறார் இயக்குநர்.

ஒரு வித்தியாசமான, முன் மாதிரியான திரைப்படங்களில் இது மாதிரியான கண்காட்சி வித்தைகளை காட்டவே கூடாது. அது திரைப்படத்தின் போக்கினையும், திரைப்படத்தின் பெருமையையும் மட்டுப்படுத்திவிடும்.

நானா படேகரை மனதில் வைத்து ஹிந்தியிலும் இப்படம் வெளியாகும் சூழலால் திரைப்படத்தில் பல வடக்கத்திய முகங்கள் தென்படுகின்றன. திரைப்படம் கீழ்த்தட்டு, பாரதிராஜாவின் ரசிகர்கள் என்றில்லாமல் மேல்தட்டு மக்களையும் கவரத்தான் வேண்டும் என்பதால்(கதை அப்படிப்பட்டது) ஆங்கில வசனங்கள் அத்துமீறி எட்டிப் பார்த்துள்ளன.

பாரதிராஜாவின் கண்ணுக்குக் கண்ணனான ஒளிப்பதிவாளர் B.கண்ணனின் ஒளிப்பதிவும் சொல்லக் கூடியதாகத்தான் இருக்கிறது. இதுவரை தேனி மாவட்ட கிராமத் தெருக்களையே சுற்றி சுற்றி வந்த கண்ணனின் கேமிரா, இதில் புதிய ஒளிப்பதிவு இயக்குநர்களுக்கு சவால் விடுவதைப் போல் காட்சியளிக்கிறது.

காதில் கேட்ட பாடல்கள், திரையரங்கைவிட்டு வெளியில் வந்தவுடனேயே காணாமல் போய்விட்டது ஒரு மிகப் பெரிய குறை. ஏன் இப்போதெல்லாம் அனைத்து இயக்குநர்களுமே பாடல்களிலும், இசையிலும் கவனம் செலுத்த மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இப்போதைய நிலவரப்படி ஆடியோ பிஸினஸில் நிறையவே பணம் பண்ண வாய்ப்பிருக்கிறது.

திரைக்கதையில் ஆங்காங்கே சிற்சில குறைபாடுகள் என் கண்களுக்குத் தென்பட்டாலும் பலராலும் குறிப்பாகச் சொல்லப்பட்ட எடுத்த எடுப்பிலேயே சிபிஐ விசாரணையா என்கிற கேள்விக்கு பிற்பாடு அர்ஜூன் பதில் சொல்வது போல் எடுக்கப்பட்டிருந்த சில காட்சிகள் கத்திரிக்கோலில் அடிபட்டு போனதால் புரியாமலேயே போய்விட்டது.

“அந்த இருவரையும் நான்தான் கொலை செய்தேன்” என்று திரிஷ்னா ஹோட்டல் அறையில் சொன்னவுடன் நொடியில் யூகித்து அடுத்தடுத்த திகில் காரியங்களைச் செய்யும் ராணா திரிஷ்னாவின் சகோதர்களை அழைத்தது எப்படி? போக்குவரத்திலேயே சுற்றி சுற்றி வந்தவரின் கையில், வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் ஏர்பாட்டுடன் ரிமோட் வந்தது எப்படி என்பது போன்ற சிற்சில திரைக்கதை குழப்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

தமிழ்த் திரைப்படங்களின் வியாபாரத்திற்கு உறுதுணை செய்யும் பாடல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் வைக்க வேண்டிய கட்டாயம் இப்படத்திற்கும் இருந்து தொலைத்ததால், அக்காட்சிகளை விலக்கிவிட்டுப் பார்த்தால் இத்திரைப்படம் நிச்சயம் உலகத் தரமானதுதான். இதில் எனக்கு சந்தேகமில்லை.

ஆனால் உலகத் தரத்தில், சிறப்பு வாய்ந்த திரைப்படங்களை வழங்கினால் ஆதரவுக் கரம் நீட்டி, கை கொடுக்க வேண்டியது யார்..? ரசிகர்கள்தான். இத்திரைப்படத்திற்கு அது கிடைத்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

2 வருடங்களாக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை நம்பி மொத்தமாக வாங்கிவிடுவார்கள் என்று உட்கார்ந்திருந்து, கடைசியில் வேறு வழியில்லாமல் தனது 40 வருட சினிமா அனுபவத்தில் முதல் கசப்பான அனுபவத்தோடு படத்தினை சொந்தமாக வெளியிட்டுள்ளார் பாரதிராஜா.

ஆனால் முதல் 20 நாட்களிலேயே சென்னை போன்ற பெருநகரங்களில் திரைப்படத்தை தூக்கிவிட்டார்கள் தியேட்டர்காரர்கள். சிறிய நகரங்களில் 10 நாட்கள்தான் தாக்குப் பிடித்ததாகச் சொல்கிறார்கள். தரமான திரைப்படம்தான் என்றாலும் அதிகப்படியான ஒலிப்பதிவு டெக்னிக், ஆங்கில வசனங்கள், இறுக்கமான திரைக்கதை என்று வெகுஜன மக்களால் சட்டென்று பாரதிராஜாவின் திரைப்படமாக ஜீரணிக்க முடியாமல் போனது வருத்தமாக உள்ளது.

தரம் உயர்ந்தது என்றால் மக்கள் ஆதரவு குறைவாக உள்ளது. மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது என்றால் தரம் குறைவாக உள்ளது.. உங்களுக்கு எது வேண்டும்..? மக்களுக்கு எது வேண்டும்? கலைஞர்களுக்கு எது வேண்டும்?

களிப்பாட்டத்தைத் தேடியலைந்த ரசிகர்களுக்காகத்தான் விவேக்கின் காமெடியை வலுக்கட்டாயமாக நுழைத்திருக்கிறார்கள். அதிலும் அரைகுறை நம்பிக்கையுடனேயே விவேக்கின் காமெடி தேவைப்பட்டிருப்பதால் அதுவும் பலனைத் தரவில்லை.

இத்திரைப்படத்தில் இருக்கின்ற தரத்தைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நமது ரசிகர்களுக்கு பக்குவம் இல்லையா..? அல்லது நமது ரசிகர்களைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இயக்குநர்களுக்கு இல்லையா என்பது பேசப்பட வேண்டிய விஷயம். ‘அஞ்சாதே’யில் இருந்த திரைக்கதை பலம் இதில் இல்லாமல் இருப்பதுதான் தோல்விக்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

எப்படியிருந்தாலும், சினிமாவில் ஒரு பாடமாக வைக்க வேண்டிய அளவுக்கு நல்லதொரு திரைப்படத்தினை திரையுலகத்திற்கு படைத்திருக்கும் இயக்குநர் இமயத்திற்கு எனது சல்யூட்..

நன்றி..

54 comments:

கிரி said...

இன்னும் படம் பார்க்கவில்லை பார்த்துவிட்டு படிக்கிறேன்

நித்யன் said...

///
முதலில் தாமதமான விமர்சனத்திற்காக கழகக் கண்மணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
///

தாமதமாக நான் இடப்ோகும் மறுொழிக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் ொள்கிறேன்.

தம்பி நித்யன்

அபி அப்பா said...

## கிரி said...
இன்னும் படம் பார்க்கவில்லை பார்த்துவிட்டு படிக்கிறேன்

##

கிரி இனி நீங்க படம் பார்க்க்க தேவையில்லை. இனி பார்த்தும் பிரயோசனம் இல்லை. நான் இந்த படம் ரிலீஸ் அன்றைக்கே மயிலாடுதுறையில் பார்த்தேன். ஆனால் விமர்சனம் ஆசை இருந்தும் அதிலே எங்கயாவது படத்தை நாம் பாரதிராஜா கஷ்டப்பட்டு காப்பாற்றிய விஷயத்தை நாம் உளறி விடுவோமோ என நினைத்தே விமர்சனம் எழுதுவதை தவிர்த்தேன்.

ஆனா உண்மைதமிழன் அய்யா தனக்கு விமர்சனம் எழுதும் போது க்கதை சொல்லிடும் கெட்ட பழக்கம் இருக்கும் என தெரிந்தும் போட்டு தாக்கிட்டார்.

ஒன்னும் பிரச்சனை இல்லை! அதான் படம் ஓடிடுச்சே, இத்தனை நாள்!

உண்மைத்தமிழன் said...

//கிரி said...
இன்னும் படம் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு படிக்கிறேன்.//

கிரி ஸார்.. நல்ல பிள்ளை நீங்கதான்..

முதல் பத்தியை படித்தவுடனேயே நிறுத்திக் கொண்டு கமெண்டு போட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..

இந்த அளவுக்கு சூதானமா இருந்தாத்தான் பொழைக்க முடியுமாக்கும்..

வாழ்க வளமுடன்

உண்மைத்தமிழன் said...

//நித்யகுமாரன் said...
/முதலில் தாமதமான விமர்சனத்திற்காக கழகக் கண்மணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்./
தாமதமாக நான் இடப்ோகும் மறுொழிக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் ொள்கிறேன்.
தம்பி நித்யன்//

இதெல்லாம் நல்லாயில்ல தம்பி.. மொதல்ல பதிவு முழுசையும் படிச்சு முடிச்சி்ட்டு, கமெண்ட்டு போட்டுட்டு அப்புறமா வேற ஜோலியைப் பாரு..

Anonymous said...

sothap vimarsanam

உண்மைத்தமிழன் said...

///அபி அப்பா said...
##கிரி said...
இன்னும் படம் பார்க்கவில்லை பார்த்துவிட்டு படிக்கிறேன்.##
கிரி இனி நீங்க படம் பார்க்க்க தேவையில்லை. இனி பார்த்தும் பிரயோசனம் இல்லை. நான் இந்த படம் ரிலீஸ் அன்றைக்கே மயிலாடுதுறையில் பார்த்தேன். ஆனால் விமர்சனம் ஆசை இருந்தும் அதிலே எங்கயாவது படத்தை நாம் பாரதிராஜா கஷ்டப்பட்டு காப்பாற்றிய விஷயத்தை நாம் உளறி விடுவோமோ என நினைத்தே விமர்சனம் எழுதுவதை தவிர்த்தேன்.
ஆனா உண்மைதமிழன் அய்யா தனக்கு விமர்சனம் எழுதும் போது கதை சொல்லிடும் கெட்ட பழக்கம் இருக்கும் என தெரிந்தும் போட்டு தாக்கிட்டார். ஒன்னும் பிரச்சனை இல்லை! அதான் படம் ஓடிடுச்சே, இத்தனை நாள்!///

ஆஹா அபிஅப்பா..

தெய்வமே.. நன்றி..

கடைசிவரையிலும் படித்து முடித்த பொறுமைசாலி தங்கமே நீர் வாழ்க..

அபி அப்பா said...

##ஆஹா அபிஅப்பா..

தெய்வமே.. நன்றி..

கடைசிவரையிலும் படித்து முடித்த பொறுமைசாலி தங்கமே நீர் வாழ்க..
##

அட நீங்க பெருசா எழுதறீங்கன்னு தான் சொல்றோமே தவிர சுவாரஸ்யமாஅ எழுதலைன்னா சொல்றோம்.உங்க எழுத்து பிடிச்சுதொலைக்குதுய்யா உண்மைதமிழரே!

என்ன! இப்ப நானும் உங்க மாதிரி ஆஞ்சநேயர் வால் மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டேன்!

பினாத்தல் சுரேஷ் said...

உங்க கொள்கையை சஸ்பென்ஸ் படத்துக்காவது தளர்த்தி இருக்கலாம்!

Jackiesekar said...

அட நீங்க பெருசா எழுதறீங்கன்னு தான் சொல்றோமே தவிர சுவாரஸ்யமாஅ எழுதலைன்னா சொல்றோம்.உங்க எழுத்து பிடிச்சுதொலைக்குதுய்யா உண்மைதமிழரே!

Jackiesekar said...

அட நீங்க பெருசா எழுதறீங்கன்னு தான் சொல்றோமே தவிர சுவாரஸ்யமாஅ எழுதலைன்னா சொல்றோம்.உங்க எழுத்து பிடிச்சுதொலைக்குதுய்யா உண்மைதமிழரே!


யோவ் நல்லாதான் எழுதுற ஆனா இவ்வளவு பெருச நம்ம மக்கள் படிக்கமாட்டாங்க.18 ரீல் 20 ரீல்ல படம் காட்டனவங்க நாம இப்ப 14 ரீல்ல வந்து நின்னு இருக்கோம் புரிஞ்சிக்கோ தலை.

எதுவும் தெகட்ட கூடாது உன் எழுத்தும் இன்னும் பல பேரிடம் படிக்க வேண்டும் என்பதே என் ஆசை நண்பா..............

அன்புடன் ஜாக்கிசேகர்

ALIF AHAMED said...

திரிஷ்னா அணிந்திருந்த சேலையை மட்டும் தனது முன் சீட்டில் ஒரு பொம்மைக்கு அணிவித்து காரோடு சேர்த்து சொக்கப்பானை கொழுத்தியிருக்கிறார் இயக்குநர்.
//

ஒரு அனாதை பொணத்தை வாங்கி...!!!

இதுக்குதான் டவுன்லோடு பண்ணி பாக்கனும் :)

Anonymous said...

I think this film is a crude adaptation of the English film "Simone". Bharathi Raaja has scaled down the trick from CG heroine to a boy acting like a girl. Plus the unwanted murders and investigation. A VERY CRUDE work is my opinion.

puduvaisiva said...

'எதுவும் தெகட்ட கூடாது உன் எழுத்தும் இன்னும் பல பேரிடம் படிக்க வேண்டும் என்பதே என் ஆசை நண்பா..............

அன்புடன் ஜாக்கிசேகர்"

Thz Jakki the same feeling I have many time True Tamilan.. blog..

True Tamillaa after read your the film preview :-))

drink I sprit sodaa

நன்றி

உண்மைதமிழன் (எ) ஜவ்வுதமிழன்

Puduvai siva.

Nilofer Anbarasu said...

//படத்தினை சொந்தமாக வெளியிட்டுள்ளார் பாரதிராஜா.//
கடைசியாக படத்தை வெளியிட்டவர் பாரதிராஜா அல்ல, நாக் ரவி.

Anonymous said...

பாரதிராஜா இந்த படத்தை வெளியிட முடியாமல் தவித்த போது LTTE அமைப்பினர் தான் பாரதிராஜாவிற்க்கு பணம் கொடுத்து உதவினார்களாமே? அந்த நன்றி கடனாகதான் பாரதிராஜா புலி வேசம் கட்டி ஆடுகிறாரா?

தருமி said...

ஏற்கெனவே படம் பார்த்துவிட்டதால் முழு பதிவையும் படித்தேன். நீங்கள் வெறுத்த முதல் பத்து நிமிடப் படம் மட்டும் எனக்குப் பிடித்தது. அம்புட்டுதன் ..

நீங்க சொல்ற அளவு படத்தில ஒண்ணுமில்லை. கொஞ்சம் தலைசுத்த வைக்கிற திரைக்கதை.நானாவும் ஏதோ செஞ்சிருக்கார்.

ரொம்பத்தான் இமயத்தை தூக்கியிருக்கீங்க. இமயத்தின் த்ரில் படங்கள் எல்லாமே இப்படித்தான். தேவையில்லா முயற்சிகள்.

உண்மைத்தமிழன் said...

//அபி அப்பா said...
##ஆஹா அபிஅப்பா..
தெய்வமே.. நன்றி.. கடைசிவரையிலும் படித்து முடித்த பொறுமைசாலி தங்கமே நீர் வாழ்க.. ##
அட நீங்க பெருசா எழுதறீங்கன்னுதான் சொல்றோமே தவிர சுவாரஸ்யமாஅ எழுதலைன்னா சொல்றோம்.உங்க எழுத்து பிடிச்சு தொலைக்குதுய்யா உண்மைதமிழரே!
என்ன! இப்ப நானும் உங்க மாதிரி ஆஞ்சநேயர் வால் மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டேன்!//

ஆஹா அபிப்பா.. இப்படி வர்றீங்களா..? சந்தோஷம்..

ஆஞ்சநேயர் வால் மாதிரின்னா அது ஆஞ்சநேயர்கிட்டதான்ன இருக்கும். அப்போ அபிப்பா யாரு..?

உண்மைத்தமிழன் said...

//பினாத்தல் சுரேஷ் said...
உங்க கொள்கையை சஸ்பென்ஸ் படத்துக்காவது தளர்த்தி இருக்கலாம்!//

முடியலையே பெனாத்தலு.. என்னால முடிஞ்சது 30 நாள் பதிவெழுதாம தள்ளிப் போட்டதுதான்..

உண்மைத்தமிழன் said...

//jackiesekar said...
அட நீங்க பெருசா எழுதறீங்கன்னு தான் சொல்றோமே தவிர சுவாரஸ்யமாஅ எழுதலைன்னா சொல்றோம்.உங்க எழுத்து பிடிச்சுதொலைக்குதுய்யா உண்மைதமிழரே!//

உங்க பதிலைச் சொல்றதுக்குள்ள அவ்வளவு அவசரமா என்னாத்துக்கு கிளிக்..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
sothap vimarsanam//

யாருய்யா இந்த அனானி.. இருக்கிறதே ரெண்டு வார்த்தை.. அதையாச்சும் முழுசா சொல்லித் தொலைக்கலாம்ல..

சொதப்பல் விமர்சனத்திற்கு எனது நன்றி..

உண்மைத்தமிழன் said...

///jackiesekar said...
அட நீங்க பெருசா எழுதறீங்கன்னு தான் சொல்றோமே தவிர சுவாரஸ்யமாஅ எழுதலைன்னா சொல்றோம்.உங்க எழுத்து பிடிச்சுதொலைக்குதுய்யா உண்மைதமிழரே!//
யோவ் நல்லாதான் எழுதுற.. ஆனா இவ்வளவு பெருச நம்ம மக்கள் படிக்கமாட்டாங்க.18 ரீல் 20 ரீல்ல படம் காட்டனவங்க, நாம இப்ப 14 ரீல்ல வந்து நின்னு இருக்கோம். புரிஞ்சிக்கோ தலை. எதுவும் தெகட்ட கூடாது. உன் எழுத்தும் இன்னும் பல பேரிடம் படிக்க வேண்டும் என்பதே என் ஆசை நண்பா.
அன்புடன் ஜாக்கிசேகர்//

))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

//மின்னுது மின்னல் said...
திரிஷ்னா அணிந்திருந்த சேலையை மட்டும் தனது முன் சீட்டில் ஒரு பொம்மைக்கு அணிவித்து காரோடு சேர்த்து சொக்கப்பானை கொழுத்தியிருக்கிறார் இயக்குநர்.//
ஒரு அனாதை பொணத்தை வாங்கி...!!!
இதுக்குதான் டவுன்லோடு பண்ணி பாக்கனும்:)///

மி.மின்னல் ஸார்.. ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி..

ஆனா பாருங்க.. கிட்டத்தட்ட 25 முறை பிளாக்கர் டெக்ஸ்ட் பாக்ஸில் திருத்தம் செய்து பார்த்துவிட்டேன். சிஸ்டம் ஹேங் ஆகிறதே ஒழிய சேவ் ஆகவில்லை.. என்ன செய்வது சொல்லுங்கள்..?

உண்மைத்தமிழனின் 'ஜாதகம்' பற்றித்தான் உங்களுக்குத் தெரிந்திருக்குமே.. இப்போதாவது நம்புங்கள்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
I think this film is a crude adaptation of the English film "Simone". Bharathi Raaja has scaled down the trick from CG heroine to a boy acting like a girl. Plus the unwanted murders and investigation. A VERY CRUDE work is my opinion.//

அனானியாரே..

இது போன்ற கதையம்சத்துடன் நான் எந்த வெளிநாட்டுப் படத்தையும் இதுவரையில் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதுமில்லை..

இப்போது நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். நிச்சயம் பார்க்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//புதுவை சிவா :-) said...
'எதுவும் தெகட்ட கூடாது உன் எழுத்தும் இன்னும் பல பேரிடம் படிக்க வேண்டும் என்பதே என் ஆசை நண்பா..............
அன்புடன் ஜாக்கிசேகர்"
Thz Jakki the same feeling I have many time True Tamilan.. blog..
True Tamillaa after read your the film preview :-))
drink I sprit sodaa
நன்றி
உண்மைதமிழன் (எ) ஜவ்வுதமிழன்
Puduvai siva.///

)))))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

///Nilofer Anbarasu said...
//படத்தினை சொந்தமாக வெளியிட்டுள்ளார் பாரதிராஜா.//
கடைசியாக படத்தை வெளியிட்டவர் பாரதிராஜா அல்ல, நாக் ரவி.///

நிலோபர் ஸார்.. தகவலுக்கு நன்றி.. இப்போதுதான் விசாரித்தேன். நீங்கள் சொன்னது உண்மைதான்..

இது கடைசி நேரத்தில் எடுத்த முடிவு என்கிறார்கள். எனக்குத் தெரியாமல் போய்விட்டது.. மன்னிக்கவும்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
பாரதிராஜா இந்த படத்தை வெளியிட முடியாமல் தவித்த போது LTTE அமைப்பினர்தான் பாரதிராஜாவிற்க்கு பணம் கொடுத்து உதவினார்களாமே? அந்த நன்றி கடனாகதான் பாரதிராஜா புலி வேசம் கட்டி ஆடுகிறாரா?//

முட்டாள்தனமான குற்றச்சாட்டு.. இதில் ஒரு துளியளவும் உண்மை இல்லை.

படத்தினை மொத்தமாக விலைக்கு கொடுக்கத்தான் அவர் இத்தனை நாட்களும் காத்திருந்தார். படத்தினை வெளியிடுவதற்கு எதற்கு பணம்..?

உண்மைத்தமிழன் said...

//தருமி said...
ஏற்கெனவே படம் பார்த்துவிட்டதால் முழு பதிவையும் படித்தேன். நீங்கள் வெறுத்த முதல் பத்து நிமிடப் படம் மட்டும் எனக்குப் பிடித்தது. அம்புட்டுதன்..//

ஐயோ.. ஐயோ.. ஐயையோ..

//நீங்க சொல்ற அளவு படத்தில ஒண்ணுமில்லை. கொஞ்சம் தலைசுத்த வைக்கிற திரைக்கதை.நானாவும் ஏதோ செஞ்சிருக்கார்.//

கொடுமை.. கொடுமை.. கொடுமை..

//ரொம்பத்தான் இமயத்தை தூக்கியிருக்கீங்க. இமயத்தின் த்ரில் படங்கள் எல்லாமே இப்படித்தான். தேவையில்லா முயற்சிகள்.//

தருமி ஐயா.. தங்களுக்கும், எனக்குமான கலை ரசனையின் வித்தியாசம் அரசியல்வாதிகளுக்கும், நேர்மைக்குமான தொடர்பு போல் மிக நீண்ட இடைவெளி கொண்டதாக எனக்குத் தெரிகிறது.. புரிகிறது..

சிகப்பு ரோஜாக்கள் பிடிக்கவில்லையா.. கமலின் ஜொள்ளு, தேவியின் அழகு.. இளையராஜாவின் இசை..

"டிக்.. டிக்.. டிக்..." உங்களைப் போன்றவர்களுக்காகத்தானே, உங்களுடைய வாலிப வயசுக்காக மாதவி, ராதா, ஸ்வப்னா என்று மூன்று தேவியரையும் வளைத்து, வளைத்து படம் பிடித்துக் காட்டினார். அப்ப முதல் ஷோலேயே பார்த்துட்டு இப்ப பிடிக்கலையா..?

"ஒரு கைதியின் டைரி" ஒரு நல்லதொரு மசாலா படத்திற்கு உதாரணமாக காக்கிசட்டைக்கு முன்னோடியாக இருந்ததே.. இதில் கிளாமாக்ஸ்தான் ஐயா படமே.. இந்தியில் படம் சக்கைப் போடு போட்டுச்சு.. தெரியுங்களா..?

"கேப்டன் மகள்" - அப்போதைய நம்பர் ஒன் நடிகையான குஷ்பூவின் தாக்கத்தில் பாரதிராஜாவும் தவிர்க்க முடியாமல் நமக்காகத்தானே எடுத்துக் கொடுத்தார்.. இப்ப நல்லாயில்லைங்குறீங்களே..

"கண்களால் கைது செய்" - முத்தழகியை அறிமுகப்படுத்திய படம் ஸார்.. என்ன கடற்கரை பாட்டு சீன்.. அது இதுன்னு படம் கொஞ்சம் ஒரே ஓட்டமா ஓடிருச்சு.. அதுனால என்ன.. ரசிக்குறாப்புலதான இருந்தது..

வர, வர இந்த பெருசுக தொல்லை தாங்கலப்பா..

இப்படியே விட்டா "மணாளனே மங்கையின் பாக்கியம்" படம்தான்யா திரில்லர் படம்னு சொல்வாங்க போலிருக்கு..)))))))))))))))))

M.Rishan Shareef said...

அன்பின் உண்மைத்தமிழன்,

நல்லதொரு விமர்சனம். ஒவ்வொரு காட்சியையும் ரசித்திருக்கிறீர்கள்.

இப்பதிவில் சில குறைகளைத் தவிர்த்திருக்கலாம்.

ருக்மணியின் கதாபாத்திரப் பெயர் திரிஷ்ணா அல்ல..கிருஷ்ணா..!

//இடையில் போட்டுக் கொடுத்தே பேர் வாங்கும் பட்டியலில் இருக்கும் ஒரு உதவி இயக்குனன், இயக்குநரின் கதாநாயகி மீதான பாசத்தை அவருடைய மனைவிக்குப் போட்டுக் கொடுக்க படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து பேயாட்டம் ஆடிவிட்டுப் போகிறாள் இயக்குநரின் மனைவி.//

இங்கு போட்டுக்கொடுக்கப்படுவது கதாநாயகி மீதான பாசமல்ல. கதாநாயகியின் சிகையலங்கார நிபுணரான பெண்ணுக்குத் தனது அறையில் அடைக்கலம் கொடுத்த இயக்குனர் பற்றியே போட்டுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை விசாரிக்கவென வரும் அவரது மனைவியின் முன்னால் நடிப்பு ஒத்திகைக்காக கதாநாயகிக்கிடப்படும் முத்தம் அம் மனைவியின் கோபம் எல்லை மீறச் செய்திருக்கிறது.

//வழக்கை விசாரிக்கும் அதிகாரியின் காதலி அனிதா, இயக்குநரின் தீவிர ரசிகையாக இருக்க.. அவளும் இந்த திரைப்படத்தின் படப்பதிவுகளின்போது உடனிருக்க வேண்டி வருகிறது. தனது இதயம் தொட்ட இயக்குநர், கத்தியைத் தொட்டிருக்க மாட்டார் என்பதில் உறுதியாக இருக்கிறாள் அதிகாரியின் காதலி. ஆனால் அதிகாரியோ தெளிவாகவே இருக்கிறார். இதில் ஒரு மர்மம் இருக்கிறது. அதுதான் என்ன..?//

காஜல் அகர்வாலுக்கு, கிருஷ்ணா ஒரு ஆண் என முன்பே தெரியும். அதனாலேயே விசாரணைகளின் போதும், கிருஷ்ணாவுடன் சேர்த்து இயக்குனர் கிசுகிசுக்கப்படும்போதும் பரிதவிக்கிறார். இறுதிக் காட்சியில் ஒரு புன்னகையுடன் விடையளிக்கிறார்.

சில காட்சிகளில் logic இடிக்கிறது. அதைத் தவிர்த்துப் பார்த்தால் படம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

விமர்சனத்துக்கு நன்றி நண்பரே !

தருமி said...

//திரைப்பட விமர்சனங்களில் முழுக் கதையையும் சொல்லிவிடுவது எனது வழக்கம்//

தானா தெரியணும்; இல்லைன்னா சொன்னாலாவது புரிஞ்சிக்கணும்னு பெரியவங்க சொல்லுவாங்க. சரி போகட்டும்.

//தேவியின் அழகு..
மாதவி, ராதா, ஸ்வப்னா என்று மூன்று தேவியரையும் வளைத்து, வளைத்து படம் பிடித்துக் காட்டினார்...
நம்பர் ஒன் நடிகையான குஷ்பூவின் தாக்கத்தில் பாரதிராஜாவும் தவிர்க்க முடியாமல் நமக்காகத்தானே எடுத்துக் கொடுத்தார்... முத்தழகியை அறிமுகப்படுத்திய படம் ஸார்.. என்ன கடற்கரை பாட்டு சீன்.. அது இதுன்னு..//

ஆஹா உங்க டேஸ்ட் இப்ப புரியுது. அந்த வயசில நான் மாதவி, ராதா, ஸ்வப்னா பாத்து உடாத ஜொள்ளை நீங்க உட்டா நான் என்ன பண்றது. நீங்க சொல்றது மாதிரி //தங்களுக்கும், எனக்குமான கலை ரசனையின் வித்தியாசம் அரசியல்வாதிகளுக்கும், நேர்மைக்குமான தொடர்பு போல் மிக நீண்ட இடைவெளி கொண்டதாக எனக்குத் தெரிகிறது.. // என்பது மிகச் சரி. அதிலும் யார் அரசியல்வாதி மாதிரி என்பதும் தெளிவாகுது.

//ஐயோ.. ஐயோ.. ஐயையோ..
கொடுமை.. கொடுமை.. கொடுமை..//
இதுக்கு ஏங்க இப்படி வாயில வயித்தில அடிச்சிக்கிறீங்க?

சிகப்பு ரோஜா சரிங்க...டிக்..டிக்..டிக் என்னென்ன முட்டாத்தனம்னு மறந்து போச்சு.. கைதியின் டைரியில் முதல் கொலை எங்கேயோ காப்பி அடிச்சதாகச் சொன்னாங்க...ஆனா நல்லா இருந்தது. அடுத்த ரெண்டு கொலை..கிறுக்குத்தனமா இருந்திச்சி. அதுவும் அந்த மூணாவது கொலை...சிலையா பெயிண்ட் அடிச்சிக்கிட்டு மணிக்கணக்கா இருக்கிற சீன் .. ஆஹாஹா... !!

கேப்டன் மகள்...இன்னும் 'மறக்க முடியாத' சீன் புகைக்கூண்டு சீன்... அடுத்த ஆஹாஹா தான்.

இதையெல்லாம் பார்த்த பிறகு கண்களால் கைது செய் பார்க்க தைரியம் வரவேயில்லை...

பாரதிராசாவின் கிராமியப் படங்கள் இமயம் என்று சொல்லுங்கள்; ஒப்புக் கொள்கிறேன். அதற்காக அவருக்கு வராத த்ரில் படங்களுக்கும் சேர்த்து அவரைப் புகழ்ந்தால் ... சொல்றதுக்கு ஒண்ணுமில்லைங்க.

தருமி said...

இன்னொரு விஷயம். ஒரு உதவி செய்யணும். இந்தப் படத்துக்கு ரொம்ப நாள் கழிச்சி விமர்சனம் எழுதியதுக்கு நன்றி.
நான் கடவுள் படத்துக்கும் இதே கொள்கையைக் கடைப்பிடிக்க, இன்னும் கூட டைம் எடுத்துக் கொள்ள மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். (எழுதாமலே விட்டாலும் ரொம்ப சரி!)

உண்மைத்தமிழன் said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
அன்பின் உண்மைத்தமிழன், நல்லதொரு விமர்சனம். ஒவ்வொரு காட்சியையும் ரசித்திருக்கிறீர்கள்.
இப்பதிவில் சில குறைகளைத் தவிர்த்திருக்கலாம்.//

இருக்கலாம்தான்..

//ருக்மணியின் கதாபாத்திரப் பெயர் திரிஷ்ணா அல்ல..கிருஷ்ணா..!//

நிறையவே யோசித்தேன் ஸார்.. ஒலியமைப்பு அது போன்றே அமைந்துவிட்டது எனக்கு நேர்ந்த கொடுமை..

///இடையில் போட்டுக் கொடுத்தே பேர் வாங்கும் பட்டியலில் இருக்கும் ஒரு உதவி இயக்குனன், இயக்குநரின் கதாநாயகி மீதான பாசத்தை அவருடைய மனைவிக்குப் போட்டுக் கொடுக்க படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து பேயாட்டம் ஆடிவிட்டுப் போகிறாள் இயக்குநரின் மனைவி.//
இங்கு போட்டுக் கொடுக்கப்படுவது கதாநாயகி மீதான பாசமல்ல. கதாநாயகியின் சிகையலங்கார நிபுணரான பெண்ணுக்குத் தனது அறையில் அடைக்கலம் கொடுத்த இயக்குனர் பற்றியே போட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை விசாரிக்கவென வரும் அவரது மனைவியின் முன்னால் நடிப்பு ஒத்திகைக்காக கதாநாயகிக்கிடப்படும் முத்தம் அம் மனைவியின் கோபம் எல்லை மீறச் செய்திருக்கிறது.///

உண்மைதான்.. தகவலுக்கு நன்றி..

//வழக்கை விசாரிக்கும் அதிகாரியின் காதலி அனிதா, இயக்குநரின் தீவிர ரசிகையாக இருக்க.. அவளும் இந்த திரைப்படத்தின் படப்பதிவுகளின்போது உடனிருக்க வேண்டி வருகிறது. தனது இதயம் தொட்ட இயக்குநர், கத்தியைத் தொட்டிருக்க மாட்டார் என்பதில் உறுதியாக இருக்கிறாள் அதிகாரியின் காதலி. ஆனால் அதிகாரியோ தெளிவாகவே இருக்கிறார். இதில் ஒரு மர்மம் இருக்கிறது. அதுதான் என்ன..?//
காஜல் அகர்வாலுக்கு, கிருஷ்ணா ஒரு ஆண் என முன்பே தெரியும். அதனாலேயே விசாரணைகளின் போதும், கிருஷ்ணாவுடன் சேர்த்து இயக்குனர் கிசுகிசுக்கப்படும்போதும் பரிதவிக்கிறார். இறுதிக் காட்சியில் ஒரு புன்னகையுடன் விடையளிக்கிறார்.///

இல்லை ஸார்.. இதில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. அனிதாவிடம் வழக்கிலிருந்து விடுதலை பெற்ற பின்பு அவர் சொல்லியிருக்கலாம்.. அல்லது சொல்லாமலும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். இயக்குநர் இந்த இடத்தில் அனிதாவை தள்ளியே வைத்திருக்கிறார்.

//சில காட்சிகளில் logic இடிக்கிறது. அதைத் தவிர்த்துப் பார்த்தால் படம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.
விமர்சனத்துக்கு நன்றி நண்பரே!//

பிழை திருத்தத் தகவல்களுக்கும், அறிவுரைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி தோழரே..

உண்மைத்தமிழன் said...

///தருமி said...
//திரைப்பட விமர்சனங்களில் முழுக் கதையையும் சொல்லிவிடுவது எனது வழக்கம்//
தானா தெரியணும்; இல்லைன்னா சொன்னாலாவது புரிஞ்சிக்கணும்னு பெரியவங்க சொல்லுவாங்க. சரி போகட்டும்.//

ஸார் சொன்னா கேளுங்க ஸார். நாளைக்குப் பின்ன இதோட கதை என்ன.. திரைக்கதை என்னன்னு தெரிஞ்சுக்கணும்னா என்னங்க ஸார் பண்றது..? அதான்..

///தேவியின் அழகு.. மாதவி, ராதா, ஸ்வப்னா என்று மூன்று தேவியரையும் வளைத்து, வளைத்து படம் பிடித்துக் காட்டினார்... நம்பர் ஒன் நடிகையான குஷ்பூவின் தாக்கத்தில் பாரதிராஜாவும் தவிர்க்க முடியாமல் நமக்காகத்தானே எடுத்துக் கொடுத்தார்... முத்தழகியை அறிமுகப்படுத்திய படம் ஸார்.. என்ன கடற்கரை பாட்டு சீன்.. அது இதுன்னு..//
ஆஹா உங்க டேஸ்ட் இப்ப புரியுது. அந்த வயசில நான் மாதவி, ராதா, ஸ்வப்னா பாத்து உடாத ஜொள்ளை நீங்க உட்டா நான் என்ன பண்றது.///

ஐயா.. நீங்க எவ்ளோ நல்லவர் சாமி.. எனக்குப் புரியாம போச்சே..

///நீங்க சொல்றது மாதிரி //தங்களுக்கும், எனக்குமான கலை ரசனையின் வித்தியாசம் அரசியல்வாதிகளுக்கும், நேர்மைக்குமான தொடர்பு போல் மிக நீண்ட இடைவெளி கொண்டதாக எனக்குத் தெரிகிறது// என்பது மிகச் சரி. அதிலும் யார் அரசியல்வாதி மாதிரி என்பதும் தெளிவாகுது.///

அப்பாடா.. இதையாவது ஒத்துக்கிட்டீங்களே.. அது போதும்.. அரசியல்வாதி நான் இல்லையே..

///ஐயோ.. ஐயோ.. ஐயையோ..
கொடுமை.. கொடுமை.. கொடுமை..//
இதுக்கு ஏங்க இப்படி வாயில வயித்தில அடிச்சிக்கிறீங்க?///

பி்ன்ன ஆதரவுக் கரம் நீட்ட வேண்டிய நேரத்துல காலை வாரி விட்டீங்கன்னா வயித்துல அடிச்சுக்காம எங்கிட்டுப் போய் அடிச்சுக்குறது..?

//சிகப்பு ரோஜா சரிங்க... டிக்..டிக்..டிக் என்னென்ன முட்டாத்தனம்னு மறந்து போச்சு..//

இப்படியெல்லாம் பார்த்தீங்கன்னா ஒரு சினிமாகூட தேறாது வாத்தியாரே..

//கைதியின் டைரியில் முதல் கொலை எங்கேயோ காப்பி அடிச்சதாகச் சொன்னாங்க... ஆனா நல்லா இருந்தது. அடுத்த ரெண்டு கொலை.. கிறுக்குத்தனமா இருந்திச்சி. அதுவும் அந்த மூணாவது கொலை...சிலையா பெயிண்ட் அடிச்சிக்கிட்டு மணிக்கணக்கா இருக்கிற சீன் .. ஆஹாஹா...!!//

இது என்ன பாராட்டா? திட்டா..? புரியலையே..

//கேப்டன் மகள்...இன்னும் 'மறக்க முடியாத' சீன் புகைக்கூண்டு சீன்... அடுத்த ஆஹாஹாதான்.//

நினைச்சேன்.. இதைத்தான் சொல்லுவீங்கன்னு நினைச்சேன். சொல்லிட்டீங்க..

//இதையெல்லாம் பார்த்த பிறகு கண்களால் கைது செய் பார்க்க தைரியம் வரவேயில்லை...//

அச்சச்சோ.. நான் வேண்ணா டிவிடி வாங்கி அனுப்பி வைக்கட்டுங்களா..?

//பாரதிராசாவின் கிராமியப் படங்கள் இமயம் என்று சொல்லுங்கள்; ஒப்புக் கொள்கிறேன்.//

இந்த மட்டுக்கும் ரொம்ப சந்தோஷம் பேராசிரியரே..

//அதற்காக அவருக்கு வராத த்ரில் படங்களுக்கும் சேர்த்து அவரைப் புகழ்ந்தால், சொல்றதுக்கு ஒண்ணுமில்லைங்க.//

)))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

//தருமி said...
இன்னொரு விஷயம். ஒரு உதவி செய்யணும். இந்தப் படத்துக்கு ரொம்ப நாள் கழிச்சி விமர்சனம் எழுதியதுக்கு நன்றி. நான் கடவுள் படத்துக்கும் இதே கொள்கையைக் கடைப்பிடிக்க, இன்னும் கூட டைம் எடுத்துக் கொள்ள மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். (எழுதாமலே விட்டாலும் ரொம்ப சரி!)//

ஸார்.. விழுந்து, விழுந்து சிரித்தேன்.. காமெடிகளில் இளசுகளுடன் போட்டி போடுவது நீங்கதான் ஸார்..

நான் கடவுள் படத்தினைப் பற்றி நிறைய கலர், கலர் கனவுகளுடன் இருக்கிறேன்.. இப்படி ஒரேயடியா போடாதன்னு சொன்னா எப்படிங்க ஐயா..

வேண்ணா ஒண்ணு பண்றேன்.. ஜனவரி 29-ம் தேதி ராத்திரி 10 மணிக்கு சின்னதா 20 வரில முன்னூட்ட விமர்சனத்தைப் போட்டுடறேன்.. அப்புறமா ஒரு மாசம் கழிச்சு பிப்ரவரி 31-ம் தேதி விரிவா போட்டுடறேன்..

சரிங்களா..?

benza said...

பொம்மலாட்டம் விமர்சனம் எனக்கு
Digital படம் பார்த்தது போன்றிருந்தது.
பழய 8, 16, 35, 70 mm படங்கள் பார்த்துப் பழகிய கிளட்டு கண்களுக்கு Digital எடுபடாதே.
எனது அபிமான எழுதுனர் சுஐாதா வைக் கண்டதும் சற்று உசாராகி வாசித்தேன்.
தங்களது எழுத்தும் வேறொரு விதத்தில் கவர்ச்சியாக உள்ளது.
விஷயத்துக்கு செல்வோம் ...
\\ஒரு நல்ல இயக்குநர் களிமண்ணையும் நடிக்க வைத்துவிடுவார் என்று புகழாரம்
சூட்டினாலும் அந்தக் களிமண்ணும் நல்ல மண்ணாகவே இருக்க வேண்டும்.
ஆனால், இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாமல் வாய்த்திருக்கிறார் நானாபடேகர்//

இந்த வசனத்தைக் கண்டதும் விழுந்த மனம் ...

இதனில் உண்மையை ஆமோதித்தது ...
\\உடல் மொழியைப் பயன்படுத்தி நடிப்பை வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தவர்கள் இந்தியாவிலேயே சொற்பத்தினர்தான்//

இதனில் மீண்டும் உயர ஏறிக் கொண்டது ...
\\ மனிதருக்கு இத்திரைப்படத்தின் மூலம் தேசிய விருது நிச்சயம் உண்டு எனலாம் //.

ஏன் இந்தக் குளப்பம் எனக்கு?

\\வாய்ப்பே இல்லாமல் வாய்த்திருக்கிறார்//

என்னும் வசனமாக இருக்குமோ !

ரவி said...

மூனுநாலு படங்களின் விமர்சனத்தை ஒரே நேரத்தில் படிச்சமாதிரி ஒரு பிரமை...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

benza said...

\\யோவ் நல்லாதான் எழுதுற ஆனா இவ்வளவு பெருச நம்ம மக்கள் படிக்கமாட்டாங்க.18 ரீல் 20 ரீல்ல படம் காட்டனவங்க நாம இப்ப 14 ரீல்ல வந்து நின்னு இருக்கோம் புரிஞ்சிக்கோ தலை.//

யோவ் அல்லது டாய், எது வேணுமோ,
பொருத்தம்னு தோணுதோ எடுத்துக்கோ...
அவரு நிறய எழுதினாகா படிக்க
நாம இருக்கோமே...
நீ என்னாவே சொல்றா? !

கிரி said...

//அபி அப்பா said...
கிரி இனி நீங்க படம் பார்க்க்க தேவையில்லை. இனி பார்த்தும் பிரயோசனம் இல்லை. நான் இந்த படம் ரிலீஸ் அன்றைக்கே மயிலாடுதுறையில் பார்த்தேன். ஆனால் விமர்சனம் ஆசை இருந்தும் அதிலே எங்கயாவது படத்தை நாம் பாரதிராஜா கஷ்டப்பட்டு காப்பாற்றிய விஷயத்தை நாம் உளறி விடுவோமோ என நினைத்தே விமர்சனம் எழுதுவதை தவிர்த்தேன்//

ஹா ஹா ஹா

அந்த அளவிற்கு நல்லா இருக்காங்க ...கண்டிப்பா பார்த்துட வேண்டியது தான்

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
முதல் பத்தியை படித்தவுடனேயே நிறுத்திக் கொண்டு கமெண்டு போட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..//

:-)))) உண்மை தான் உண்மை தமிழன். சும்மா கீழே வரைக்கும் இழுத்து பார்த்தேன், அது பாட்டுக்கு பக்கம் பக்கமா போச்சு சரி நீங்க அக்கு வேறா ஆணி வேறா பிரித்து கதை வசனமே எழுதி இருப்பீங்க போலன்னு படிக்கவில்லை. படம் பார்த்து விட்டு படிக்கிறேன் எப்படி இருக்கு உங்க விமர்சனம் என்று,

//அபி அப்பா said...
அட நீங்க பெருசா எழுதறீங்கன்னு தான் சொல்றோமே தவிர சுவாரஸ்யமாஅ எழுதலைன்னா சொல்றோம்.//

வழிமொழிகிறேன்

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
பொம்மலாட்டம் விமர்சனம் எனக்கு
Digital படம் பார்த்தது போன்றிருந்தது.
பழய 8, 16, 35, 70 mm படங்கள் பார்த்துப் பழகிய கிளட்டு கண்களுக்கு Digital எடுபடாதே.
எனது அபிமான எழுதுனர் சுஐாதாவைக் கண்டதும் சற்று உசாராகி வாசித்தேன்.
தங்களது எழுத்தும் வேறொரு விதத்தில் கவர்ச்சியாக உள்ளது.
விஷயத்துக்கு செல்வோம்...
\\ஒரு நல்ல இயக்குநர் களிமண்ணையும் நடிக்க வைத்துவிடுவார் என்று புகழாரம்
சூட்டினாலும் அந்தக் களிமண்ணும் நல்ல மண்ணாகவே இருக்க வேண்டும். ஆனால், இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாமல் வாய்த்திருக்கிறார் நானாபடேகர்//
இந்த வசனத்தைக் கண்டதும் விழுந்த மனம்... இதனில் உண்மையை ஆமோதித்தது ...
\\உடல் மொழியைப் பயன்படுத்தி நடிப்பை வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தவர்கள் இந்தியாவிலேயே சொற்பத்தினர்தான்//
இதனில் மீண்டும் உயர ஏறிக் கொண்டது ...
\\ மனிதருக்கு இத்திரைப்படத்தின் மூலம் தேசிய விருது நிச்சயம் உண்டு எனலாம் //.
ஏன் இந்தக் குளப்பம் எனக்கு?
\\வாய்ப்பே இல்லாமல் வாய்த்திருக்கிறார்//
என்னும் வசனமாக இருக்குமோ!///

பென்ஸ் ஸார் எங்க கொஞ்ச நாளா காணோம்..?

களிமண்ணாக கிடைக்கவில்லை. கலை வடிவம் மிக்க கற்சிலயாகவே கிடைத்திருக்கிறார் நானாபடேகர் என்பதைத்தான் அவ்வளவு கஷ்டப்படத் தேவையில்லாமல் சிக்கிட்டார் என்று எழுதினேன். அவ்வளவுதான்..

குழப்பமே வேண்டாம் ஸார்.

உண்மைத்தமிழன் said...

//செந்தழல் ரவி said...
மூனு நாலு படங்களின் விமர்சனத்தை ஒரே நேரத்தில் படிச்சமாதிரி ஒரு பிரமை... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......//

பரவாயில்லையே.. அப்ப படத்துல எத்தனை படத்தோட கதை இருக்குன்னு கரீக்ட்டா சொல்லிரு பார்ப்போம்..

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...
\\யோவ் நல்லாதான் எழுதுற ஆனா இவ்வளவு பெருச நம்ம மக்கள் படிக்கமாட்டாங்க.18 ரீல் 20 ரீல்ல படம் காட்டனவங்க நாம இப்ப 14 ரீல்ல வந்து நின்னு இருக்கோம் புரிஞ்சிக்கோ தலை.//
யோவ் அல்லது டாய், எது வேணுமோ, பொருத்தம்னு தோணுதோ எடுத்துக்கோ... அவரு நிறய எழுதினாகா படிக்க
நாம இருக்கோமே... நீ என்னாவே சொல்றா?!///

பென்ஸ் ஸார்.. ஜாக்கிசேகரும் நமது நெருங்கிய நண்பர்தான். உரிமையோடு கண்டிக்கும் உரிமையுள்ளவர்.. யோவ்.. நீ.. என்று எழுதவதெல்லாம் நெருக்கத்தின் காரணமாக.

நீங்க டென்ஷன் ஆகீக்காதீங்க...

உண்மைத்தமிழன் said...

///கிரி said...
//அபி அப்பா said...
கிரி இனி நீங்க படம் பார்க்க்க தேவையில்லை. இனி பார்த்தும் பிரயோசனம் இல்லை. நான் இந்த படம் ரிலீஸ் அன்றைக்கே மயிலாடுதுறையில் பார்த்தேன். ஆனால் விமர்சனம் ஆசை இருந்தும் அதிலே எங்கயாவது படத்தை நாம் பாரதிராஜா கஷ்டப்பட்டு காப்பாற்றிய விஷயத்தை நாம் உளறி விடுவோமோ என நினைத்தே விமர்சனம் எழுதுவதை தவிர்த்தேன்//
ஹா ஹா ஹா.. அந்த அளவிற்கு நல்லா இருக்காங்க. கண்டிப்பா பார்த்துட வேண்டியதுதான்.///

பாருங்க சாமி.. கண்டிப்பா பாருங்க..

//உண்மைத்தமிழன்(15270788164745573644) said...
முதல் பத்தியை படித்தவுடனேயே நிறுத்திக் கொண்டு கமெண்டு போட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..//
:-))))உண்மைதான் உண்மைதமிழன். சும்மா கீழே வரைக்கும் இழுத்து பார்த்தேன், அது பாட்டுக்கு பக்கம், பக்கமா போச்சு. சரி, நீங்க அக்கு வேறா ஆணி வேறா பிரித்து கதை வசனமே எழுதி இருப்பீங்க போலன்னு படிக்கவில்லை. படம் பார்த்து விட்டு படிக்கிறேன் எப்படி இருக்கு உங்க விமர்சனம் என்று..?///

நன்றி கிரி. நானும் ஆவலோடு காத்திருக்கிறேன் உமது விமர்சனத்தை எதிர்பார்த்து..

benza said...

சற்று அவசரப்பட்டுடேன்யா, ஜாக்கிசேகர் அவர்களிடம் எனது மன
நோவை, நோயை அல்ல, தயை செய்து
கூறி விடுங்கள் பிளீஸ் ...
அந்த இடுகையை தவிர்த்திருக்கலாமே அய்யா !

benza said...

அனொன் அய்யா, அந்த ''Simone'' படத்தினது மேலதிக விபரத்தை தந்துதவினீர்களானால் Time, Newsweek போன்ற சஞ்சிகைகளில் விமர்சனம் தேடிப் படித்தறிய உதவியாக இருக்கும் ... நன்றி.
அத்துடன் பாரதிராஜாக்கு தமிழ்புலிகள்
பணம் கொடுத்திருந்தாலும், அதனைத்
தங்களிடம் ஆதாரமில்லாது வெளியிட்டது தங்களது தரமற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.
சார் மனிதத் தன்மை இல்லாது போனாலும், சற்று பத்திரிகை நியதியை கடைப்பிடியுங்களேன் ... நன்றி, மேலும் நான் தமிழ்புலி வால் அல்ல அய்யா.

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
சற்று அவசரப்பட்டுடேன்யா, ஜாக்கிசேகர் அவர்களிடம் எனது மன
நோவை, நோயை அல்ல, தயை செய்து
கூறி விடுங்கள் பிளீஸ். அந்த இடுகையை தவிர்த்திருக்கலாமே அய்யா//

பரவாயில்லை பென்ஸ் ஸார்.. அவரும் உங்களைப் போன்ற எனது அன்பர்தான்.. இதையெல்லாம் ஜாலியாக எடுத்துக் கொள்வார்.. விட்டுவிடுங்கள்..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
அனொன் அய்யா, அந்த ''Simone'' படத்தினது மேலதிக விபரத்தை தந்துதவினீர்களானால் Time, Newsweek போன்ற சஞ்சிகைகளில் விமர்சனம் தேடிப் படித்தறிய உதவியாக இருக்கும். நன்றி.
அத்துடன் பாரதிராஜாக்கு தமிழ் புலிகள்
பணம் கொடுத்திருந்தாலும், அதனைத்
தங்களிடம் ஆதாரமில்லாது வெளியிட்டது தங்களது தரமற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.
சார் மனிதத் தன்மை இல்லாது போனாலும், சற்று பத்திரிகை நியதியை கடைப்பிடியுங்களேன் ... நன்றி, மேலும் நான் தமிழ் புலி வால் அல்ல அய்யா.//

விடுங்க பென்ஸ் ஸார்.. இப்ப வந்த பின்னூட்டத்தை நான் வெளியிடாமல் வைத்திருந்தால் தனிப்பதிவு போட்டு பொய்யை மேடை போட்டு புழுகியிருப்பார்கள். சொல்பவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும்..

அந்தப் படத்தினை நானும் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. அந்த அனானி தருவாரா என்று பார்ப்போம்..

Anonymous said...

u need a good editor, to edit your posts :)

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
u need a good editor, to edit your posts:)//

Sorry Anony..

Already am i good editor.

Please read carefully my posts and comments in another time.

Thanks..

benza said...

உண்மைத் தமிழன் எடிரர் ஸார்,
இதென்ன இந்த அனொன் மனிஷன்
சம்பந்தா சம்பந்தமில்லாமல் றீல் விடுறார் ... தங்களது விமர்சனக் கருவை Smione எனும் ஆங்கில படத்தினது கொப்பி என்றார் ... விபரம் கேட்டதுக்கு பதில் தர துணிவில்லாத வெத்து வேட்டு இப்படி ஓர் சமாளிப்பிகேஷன் தருகுதைய்யா ... u need a good editor, to edit your posts:) ... அதுகும் ஓர் ஸ்மைல் இணைத்து ...

சரி, தமிழ்புலிகள் படம் வெளியிடுவதறகென பண உதவி புரிந்தார்கள் என ஓர் அண்டப்புழுகு அள்ளி வீசி விட்டார் ... இதனை புலிவால் அல்லாதோர் மறுத்தும் பதில் தர வக்கில்லாத நான்கு காலில் வாலாட்டும் மிருகத்திலும் கேவலமான ஜடம் எமது நேரத்தை விரயமாக்கின்றதால் இவரது இடுகளை நான் எவ்வாறு புறக்கணிக்கலாம் ? ...
வந்து வாய்ச்சுதே நரகம் !
பிறந்த போதே ரோச நரம்பைக் கிள்ளி எறிந்து விட்டார்கள் இவரது தாயார் ! ... என்ன அநியாயம் !!...
உயிரை விட்டுவிட்டார்களே !!!

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
உண்மைத் தமிழன் எடிரர் ஸார், இதென்ன இந்த அனொன் மனிஷன்
சம்பந்தா சம்பந்தமில்லாமல் றீல் விடுறார்? தங்களது விமர்சனக் கருவை Smione எனும் ஆங்கில படத்தினது கொப்பி என்றார் ... விபரம் கேட்டதுக்கு பதில் தர துணிவில்லாத வெத்து வேட்டு இப்படி ஓர் சமாளிப்பிகேஷன் தருகுதைய்யா ... u need a good editor, to edit your posts:) ... அதுகும் ஓர் ஸ்மைல் இணைத்து. சரி, தமிழ் புலிகள் படம் வெளியிடுவதறகென பண உதவி புரிந்தார்கள் என ஓர் அண்டப்புழுகு அள்ளி வீசி விட்டார். இதனை புலிவால் அல்லாதோர் மறுத்தும் பதில் தர வக்கில்லாத நான்கு காலில் வாலாட்டும் மிருகத்திலும் கேவலமான ஜடம் எமது நேரத்தை விரயமாக்கின்றதால் இவரது இடுகளை நான் எவ்வாறு புறக்கணிக்கலாம்?
வந்து வாய்ச்சுதே நரகம்! பிறந்த போதே ரோச நரம்பைக் கிள்ளி எறிந்து விட்டார்கள் இவரது தாயார்! என்ன அநியாயம்!!...//

பென்ஸ் ஸார்..

இதெல்லாம் வலையுலகத்தில் சகஜமான ஒன்று.. நீங்க வீணா டென்ஷன் ஆகிக்காதீங்க..

பதிவுல பின்னூட்டம் போட்ட அனானிகள் அனைவருமே வேறு வேறு ஆட்களாகவும் இருக்கலாம். அல்லது 2 அல்லது 3 பேராகவும் இருக்கலாம். ஒருத்தரே 5 பின்னூட்டங்கள்கூட போட்டிருக்கலாம்.. கண்டுபிடிப்பது கடினம். அதுனால கண்டுக்காம விட்ருங்க.. பேரோட வந்து பேசினா நாம பேசுவோம்.. இல்லாட்டி பதில் சொல்லணும்னு அவசியமே இல்லை.. விட்ருங்க..

benza said...

மெய் தான், அவர் எதற்காக நல்ல எடிற்ரர் றெக்கமண்ட் செய்தார் ...
இந்த தளத்தை பாருங்கள் எத்தகை
ஓழுங்காக அமைத்துள்ளார்கள் ... தினமும் பல மணி நேரம் உலாவுவேன்

http://citizensbriefingbook.change.gov/

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
மெய்தான், அவர் எதற்காக நல்ல எடிற்ரர் றெக்கமண்ட் செய்தார் ...
இந்த தளத்தை பாருங்கள் எத்தகை
ஓழுங்காக அமைத்துள்ளார்கள் ... தினமும் பல மணி நேரம் உலாவுவேன்
http://citizensbriefingbook.change.gov///

பார்த்தேன் ஸார்.. இந்த அளவுக்கான ஜனநாயகமெல்லாம் இந்தியாவில் கிடையாது.. இங்கே ஆண்டான் அடிமை சாசனம்தான்.. இதை மீறி அரசியல்வியாதிகள் எதுவும் செய்ய மாட்டார்கள்..

benza said...

வாழ்க்கையில் வாழ்வதைத் தவிர வேறெதுவுமே ... செய்யாத நான் ...
என்ன தான் செய்யலாம் இந்த மந்த
நிலையை எமது சகோதர சகோதரிகளிடமிருந்து அகற்ற ...
உங்களது ஆதரவும் அறிவுரையும்
இல்லாது போனால் இப் பகுதிக்கே வரேனையா...
நன்றி

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
வாழ்க்கையில் வாழ்வதைத் தவிர வேறெதுவுமே. செய்யாத நான்.
என்னதான் செய்யலாம் இந்த மந்த
நிலையை எமது சகோதர சகோதரிகளிடமிருந்து அகற்ற.
உங்களது ஆதரவும் அறிவுரையும்
இல்லாது போனால் இப்பகுதிக்கே வரேனையா...
நன்றி//

அது வாழ்வில் ஏற்பட்ட கசப்புணர்வால் எழுதப்பட்ட வாசகம்.

அது போகவேண்டுமெனில் அந்த கசப்புணர்வு அடி மனதில் இருந்து ஒழிய வேண்டும்.

அதுவரையில் இது கண்ணுக்குத் தெரிந்தால்தான் ஒரு எச்சரிக்கை உணர்வு எப்போதும் என்னிடத்தில் இருக்கும். அதற்காககத்தான் பென்ஸ் ஸார்..

தங்களுடைய பேராதரவுக்கு எனது இனிய நன்றிகள்..