புத்தகக் கண்காட்சி-11-01-2009-அனுபவம்-1


12-01-09

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

நேற்று ஞாயிற்றுக்கிழமை. சோம்பலோடு கண் விழித்து இன்றைய பொழுதைக் கழிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது பதிவர் ஜாக்கிசேகர் போன் செய்து “இப்பத்தான்.. பத்தே முக்காலுக்கு எந்திரிச்சேன்.. எத்தனை மணிக்கு புத்தகக் கண்காட்சிக்கு போகலாம்..?” என்றார். நானும் பத்தரை மணிக்குத்தான் எழுந்தேன் என்பதைச் சொல்லாமல், “ஒரு பொறுப்பான இந்தியக் குடிமகன், இப்படி பத்தே முக்காலுக்கு எந்திரிச்சீன்னா.. நாடு எப்படிய்யா முன்னேறும்..?” என்று அக்கறையாகக் கண்டித்துவிட்டு, எனக்கிருந்த ஒரு அவசரமான பிச்சையெடுக்கும் வேலையைப் பற்றிச் சொல்லிவிட்டு அவரை மட்டும் போகச் சொன்னேன்.

ஆனால் சிறிது நேரத்தில் பிச்சை போடும் இடத்தில், “அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாம்..” என்று தகவல் கிடைக்க.. கை அனிச்சை செயலாக கணிணியை இயக்கித் தொலைத்துவிட்டது. ஜிமெயில் அண்ணன் கொட்டிய பின்னூட்டங்கள் கொடுத்த சூடு, நிவர்த்தி செய்ய முடியாததாக இருக்க.. கணிணியை மூடிவிட்டு ஓட வேண்டும்போல் இருந்தது.

நேரத்தைக் கடத்தியாக வேண்டும். ஆனால் வீட்டில் இருக்கக் கூடாது. அதே சமயம் இருக்குற காசும் காலியாகக் கூடாது என்கிற நினைப்பில் இருந்த எனக்கு, புத்தகக் கண்காட்சியைத் தவிர சரியான இடம் வேறேதுவும் இல்லை என்று தோன்றியது. கிளம்பினேன்.

4.30 மணிக்கு உள்ளே நுழைந்தபோது எதிரிலேயே வாய் கொள்ளாச் சிரிப்புடன் கைகூப்பி வரவேற்றார் காந்தி கண்ணதாசன். பரவாயில்லை.. இன்னமும் நம்மை மறக்காமல் இருக்கிறாரே என்று சந்தோஷப்பட்டேன். இரண்டு நிமிடங்கள் அவருடன் பேசுவதற்குள், மக்கள் தொலைக்காட்சியில் முகத்தைக் காட்டும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்க, “பேசிவிட்டு வருகிறேன்..” என்று சொல்லிவிட்டுப் போனார்.

சினிமா தியேட்டர் கியூவைப் போல் டிக்கெட் கவுண்ட்டரில் கூட்டம் நின்றிருந்ததை பார்த்து சந்தோஷம் பொங்கியது.. இந்தக் கூட்டம் சினிமா தியேட்டரையும் மிஞ்ச வேண்டும் என்ற மிதமிஞ்சிய ஆசையும் வரத்தான் செய்கிறது.

இந்த ஆண்டு பல்வேறு மாற்றங்களை செய்திருக்கிறார்கள் கண்காட்சி அமைப்பினர். சென்ற ஆண்டு இரண்டே இரண்டு வழிகளை வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு ஒரு நுழைவு வாயில் என்று அமைத்திருந்தார்கள். இப்போது நான்கு வாசல்களை வைத்து, நான்கு டிக்கெட் கவுண்ட்டர்களையும் அமைத்திருந்தார்கள். நன்றாக வசதியாகவே இருக்கிறது.

சென்ற ஆண்டு கண்காட்சியை திறந்து வைத்த கலைஞரின் மஞ்சள் துண்டில் கிழக்குப் பதிப்பகம் அல்லது விகடன் பிரசுரத்தின் ஸ்பான்ஸர் அட்டை இல்லை என்கிற குறைதான் இருந்தது. அந்த அளவுக்கு அந்த இரண்டு நிறுவனங்களின் விளம்பரங்களும் சென்ற ஆண்டு ஜொலித்துக் கொண்டிருந்தன. இந்தாண்டு நரேஷ்குப்தாவின் தம்பியோ.. யாரோ செய்த சதியால் விளம்பரங்களையெல்லாம் சுத்தமாக தடை செய்துவிட்டார்கள். போனால் போகிறது என்று “வெளியில் உங்களது கைவண்ணங்களை வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார்களாம். அரங்கத்திற்கு வெளியேதான் அரசியல்வியாதிகளை மிஞ்சிய சுவரொட்டிகளும், போஸ்டர்களும்..

சென்ற ஆண்டு ஒரு சில கடைகளை பார்த்தாலே அவர்களது பேலன்ஸ் ஷீட்டை நாமே சொல்லிவிடலாம் போல் இருந்தது. அந்த அளவுக்கு அவர்களது நிலைமையைத் தெளிவாக்கியிருந்தது கடை அமைப்பு. ஆனால் இந்த முறை அனைத்துக் கடைகளுக்கும் இரண்டு அறைகளுக்கு மேல் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் போலும். இரண்டு அறை கொண்ட கடைகள் அனைத்தும் ஒன்றுபோலவே இருந்தது. ஒரு அறை கொண்ட கடைகளும் குறைவாகவே இருந்தன.

ஆனாலும் உள்ளரங்க வேலைப்பாடுகளில் அவரவர் தங்களுக்குப் பிடித்தமான முறையில் அலங்காரங்களை செய்திருந்தார்கள். எனக்கு மிகவும் பிடித்தது எளிமையாக இருந்த ‘க்ரியா; பதிப்பகத்தின் ஸ்டால். அங்கேயே நான்கு தலகாணிகளை போட்டு, சினிமா டிஸ்கஷன் செய்யலாம் போல் இருந்தது அவர்களுடைய செட்டப். இரண்டாவது ;காலச்சுவடின்’ உள்ளரங்க அமைப்பு. மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டி உட்புறம் முழுவதும் கருப்பு வர்ணம் பூசியிருந்தார்கள். ஒருவேளை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் வருகையை எதிர்பார்த்து செய்திருப்பார்களோ.. என்னவோ?

சென்ற வருடம் அடுத்த வரிசைக்கு செல்ல வேண்டுமென்றால் பி.டி.உஷா வேகத்தில் கடைசிக்கு ஓடிச் சென்று மாற வேண்டும். இந்த முறை அதிலும் ஒரு பெரிய மாற்றம் செய்திருந்தார்கள். பெரிய இரண்டு அறைகள் கொண்ட கடைகளுக்கு இரண்டு பக்கமும் வாசல் கதவு இல்லாமல், திறந்து வைத்து உள்ளே புகுந்து அடுத்த வரிசைக்குத் தாவிவிட வழி செய்திருந்தார்கள். உண்மையாகவே இது நல்ல திட்டம்தான். நிறைய பேர் இப்படித்தான் வரிசை தாவிக் கொண்டிருந்தார்கள்.

பதிப்பகங்களின் எண்ணிக்கை வருடா வருடம் கூடிக் கொண்டே போவதால் கடைசியாக வரிசை திரும்புகின்ற இடங்களிலும், எதிர் சுவற்றின் அருகிலும்கூட கடைகள் இருந்தன. ஒவ்வொரு திருப்பத்திலும் காபி, டீ, பஜ்ஜி, பப்பாளி கடைகள் காசை அள்ளிக் கொண்டிருந்தன. இதில் பதிப்பகங்கள், புத்தகக் கடைகள் என்றில்லாமல் எல்.ஐ.சி., சர்க்கரை நோய் செக் செய்வது, பி.எஸ்.என்.எல்., டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்று சில அந்நியர்களையும் உள்ளே அனுமதித்திருந்தார்கள்.

இதிலும் ஒரு அந்நியன் கூட்டம், அநியாயத்திற்கு அலப்பரை செய்து கொண்டிருந்தது. ரேடியோ மிர்ச்சிக்காரர்கள்தான்.. தமிழை படுகொலை செய்து துப்பிக் கொண்டிருந்ததை, வேறு வழியில்லாமல் சகித்தபடியே கேட்டுக் கொண்டிருந்த பொறுமைசாலி பக்கத்துக் கடைக்காரர்கள் திராவிடர் கழக பதிப்பகத்தார். நல்லாத்தான்யா பிளான் பண்ணியிருக்காங்க.

இதே போன்ற கொடுமையை நமது “ஓ பக்கங்கள்” ஞாநியும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய “ஓ ஞாநி” கடைக்கு அருகில் “தாய்மடி தமிழ்ச் சங்கம்” என்கிற பேனர் பெயரில், ‘ஜோ மல்லுரி’ என்பவர் கவிதை பாடி அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.

ஞாநி என்னைப் பார்த்தவுடன், “வாய்யா உண்மைத் தமிழா.. நீ நிஜமாவே உண்மைத் தமிழனா..? இல்ல பொய்த் தமிழனா..?” என்று பாசத்தோடு வரவேற்றார். நேற்றைய பதிவுலக விஷயங்கள் வரைக்கும் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறார் ஞாநி. எப்படி இவருக்கு நேரம் கிடைக்குதுன்னு தெரியலப்பா..

ஞாநிக்கு தமிழகம் முழுவதுமே நல்ல அறிமுகமும், பெயரும் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு ஏன் பொறாமை..? உள்ளதைத்தான் சொல்கிறேன்.. கடந்த வருடம்வரையில் “நானும் உங்களை மாதிரி சாதாரணமானவன்தான். கையெழுத்தெல்லாம் நான் யாருக்குமே போடறதில்லை..” என்று சொல்லி அனைவரையும் திருப்பியடித்துக் கொண்டிருந்தவர், இந்த ஆண்டு கொஞ்சம் நல்ல பிள்ளையாகி வருபவர்களுக்கெல்லாம் கருப்பு கலர் குண்டு மை அச்சு பேனாவில் அமர்க்களமாக அவர்களது பெயரைக் கேட்டு கையெழுத்திட்டுக் கொடுக்கிறார். ‘காலம்’தான் எப்படியெல்லாம் ஒவ்வொருவரையும் மாற்றுகிறது பாருங்கள்.

அவரைப் போலவே அவருடைய கடையும் மிக, மிக எளிமையாக இருந்தது. அவருடைய “ஓ பக்கங்கள்” பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. கடையின் உள்ளே அவருடைய பேவரிட்டான வாக்கெடுப்பும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. பத்தாம் தேதியின் வாக்கெடுப்பு முடிவையும் எழுதி வைத்திருந்தார். பத்தாம் தேதியின் கேள்வி, “சாதியை ஒழிக்க வேண்டுமா?” என்பது. 90 சதவிகிதம் பேர் “ஆமாம்” என்றும், 10 சதவிகிதம் பேர் மட்டுமே “வேண்டாம்” என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.

நேற்றைய கேள்வி “கடவுளும், மதமும் தேவையா?” என்பதுதான்.. நான், “கடவுள் தேவை. ஆனால் மதம் தேவையில்லை” என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து நல்ல ஓட்டு போட்டுவிட்டு வந்தேன். இங்கே எத்தனை கள்ள ஓட்டு வேண்டுமானாலும் போடலாம் என்றாலும், கள்ள ஓட்டுப் போட்டால் காசு வாங்க வேண்டும் என்ற லாஜிக்கின்கீழ் இங்கே பச்சைத் தண்ணிகூட கிடைக்காது என்பதால் அதனைச் செய்யவில்லை.

ஞாநியிடம் விடைபெற்று நகர்வலத்தைத் தொடர்ந்தபோது எதிரில் பதிவர் ஜாக்கிசேகரும், அவருடைய துணைவியாரும் வந்தார்கள். ஜாக்கியை ஞாநியிடம் அழைத்துச் சென்றேன். ஜாக்கி முதலில் சங்கடப்பட்டார்.
”நான் அவரை கடுமையாக எதிர்த்து பதிவெல்லாம் போட்டிருக்கேன் ஸார்” என்றார். “சோனியாகாந்தியே அவரை எதிர்த்து பேசினாலும், அவர் காதுல வாங்க மாட்டார். அப்படி ஆளு அவரு.. வாங்க..” என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தேன்.

ஜாக்கி ஞாநியின் சிறந்த படைப்பான பாரதியாரின் ஓவிய சுவரொட்டியை வாங்கினார். வீட்டில் அதனை வைப்பதால் கிடைக்கும் அழகே தனி. என் வீட்டிலும் நான் அதனை சுவற்றில் ஒட்டி வைத்திருக்கிறேன். கம்பீரமாக இருக்கிறான் ஞாநியின் பாரதி.

புத்தகக் கடைகளும், பதிப்பகங்களும் மாறி, மாறி இருந்ததால் எந்த பதிப்பகத்தின் புத்தகங்களும் எந்த புத்தகக் கடைகளிலும் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. பதிப்பகங்களைவிடவும், ஒட்டு மொத்தப் புத்தகக் கடைகளில்தான் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கீழைக்காற்று, மித்ர, தமிழினி, அடையாளம், விடியல், வம்சி, அலைகள், என்ற பதிப்பகக் கடைகளில் லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் குவிந்து கிடந்தன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இன்றைய எழுத்தாள இளைஞர்களுக்கு அடையாளமாகத் திகழும் சேகுவேரா பற்றிய மொழி பெயர்ப்பு புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு பதிப்பகங்களில் விற்பனையாகிக் கொண்டிருந்தது.

தமிழினியில் வெங்கடேசன் எழுதிய “காவல்கோட்டம்” என்ற புத்தகத்தைப் பார்த்தேன். தலைக்கு வைச்சு தூங்குவதற்கு உதவுகின்ற சைஸில் இருந்த அந்தப் புத்தகத்தைப் பார்த்தால் படிக்கின்ற ஆர்வத்திற்குப் பதில் பயம்தான் வருகிறது. 3 பாகமாகவோ, அல்லது 5 பாகமாகவோ கொண்டு வந்திருக்கலாம். படிப்பவர்களுக்கு ஏதுவாக இருக்குமல்லவா?

கலாநிதி குணசிங்க என்பவர் எழுதிய “கி.மு.200 முதல் கி.பி.200வரை இலங்கை வரலாறு” என்கிற புத்தகத்தை பார்த்தேன். இப்போதெல்லாம் புத்தகத்தை புரட்டிப் பார்த்துவிட்டு அப்படியே போய்விடுகிறார்கள் என்று நினைத்து புத்தகங்களுக்கு அட்டை போட்டு பிரிக்க முடியாதபடிக்கு சில பதிப்பகங்கள் செய்திருக்கிறார்கள். இந்தப் புத்தகமும் அப்படியேதான் இருந்தது.

இதேபோல் ஈழத்தை பற்றி மேலும் இரண்டு புத்தகங்களை பார்த்தேன். ஓவியர் புகழேந்தி எழுதிய “தமிழீழம்” என்னும் புத்தகமும், “ஈழம்-முடிவில்லாத பயணத்தில் முடியாத வரலாறு” என்கிற தலைப்பில் S.M.கோபாலரத்தினம் என்பவர் எழுதிய புத்தகமும் வெளிவந்துள்ளது. இவற்றை வாங்கிப் படித்த பின்பு ஈழப் பிரச்சினையில் நான் இன்னும் கொஞ்சம் ‘தெளிவாகி’விடலாம் என்று நினைக்கிறேன்.

கண்ணதாசன் பதிப்பகத்தில் வழக்கம்போல் எனது மானசீகக் காதலனின் விலை மதிக்க முடியாத “அர்த்தமுள்ள இந்து மதம்” புத்தகம் பாக்கெட், பாக்கெட்டாக விலை போகிறது. இதே பதிப்பகத்தில் கிரண்பேடி எழுதிய “நான் துணிந்தவள்” என்கிற புத்தகத்தைப் பார்த்தேன். “வெரி இண்ட்ரஸ்ட்டிங்” என்று சொன்னபடியே ஒருவர் இரண்டு புத்தகத்தை எடுத்துக் கொண்டு போனார்.

“பீப்பிள்ஸ் வாட்ச்” என்கிற கடையில் மனித உரிமை மீறல் பற்றிய அனைத்து தகவல்களையும் புத்தகங்களாகத் தொகுத்து வைத்திருக்கிறார்கள். “நீங்கள் கைது செய்யப்பட்டால் செய்ய வேண்டியது என்ன?” என்கிற தலைப்பில்கூட புத்தகம் இருந்தது. சீக்கிரமாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இதே கடையில் தினமணியின் முன்னாள் ஆசிரியர் திரு.டி.எஸ்.சொக்கலிங்கம் எழுதிய “முதுகளத்தூர் கலவரம்” என்கிற புத்தகத்தையும் பார்த்தேன். இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் இன்றைக்குத்தான் கேள்விப்படுகிறேன். நிச்சயம் வாங்க வேண்டும் என்று நினைத்துள்ளேன். தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய முழு விபரங்கள் அடங்கிய புத்தகமும் என்னைக் கவர்ந்தது.

நமது சக வலைப்பதிவர் திரு.வினவு அவர்கள் தமது வலைத்தளத்தில் எழுதியவைகளை அதனதன் தலைப்புகளில் புத்தகமாக கொண்டு வந்துள்ளார். அனைத்திலும் நமது சக பதிவர்கள் இட்டுள்ள பின்னூட்டங்களையும் விட்டுவிடாமல் தொகுத்திருப்பது பாராட்டுக்குரியது. விலை ஒவ்வொன்றும் 25 ரூபாய்தான். வாங்கியே ஆக வேண்டும். இது “கீழைக்காற்று பதிப்பகத்தில்” கிடைக்கிறது.

‘காலச்சுவடு’ கடை மிகவும் பரபரப்பாகத்தான் இருந்தது. புதிய, புதிய புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கிறார்கள். எப்படி இதையெல்லாம் வாங்கிப் படித்து மண்டையில் ஏற்றிக் கொள்வது என்ற குழப்பம் வந்ததால் சும்மா, நான்கு முறை சுற்றிப் பார்த்துவிட்டு இந்த மாதத்திய ‘காலச்சுவடு’ புத்தகம் ஒன்றை மட்டும் வாங்கி, இந்த வருடக் கண்காட்சியில் ஒரு புத்தகம் வாங்கியாச்சு என்று திருப்திப்பட்டுக் கொண்டேன்.

எங்கே கண்ணன் என்னை அடையாளம் கண்டுவிடுவாரோ என்று பயந்தேன். நல்லவேளை யாருடனோ மும்முரமாக பேசிக் கொண்டிருந்தவர் திரும்பவில்லை. சென்ற ஆண்டு ஏதோ ஒரு கோபத்தில் அவரிடத்தில் சென்று, “என்ன ஸார் திரும்பத் திரும்ப சுந்தரராமசாமி.. சுந்தரராமசாமின்னே எழுதிக்கிட்டே இருக்கீங்க. அவரோட குழந்தைகள், ஆண்கள், பெண்கள் புத்தகத்துல பத்து பக்கத்துக்கு மேல என்னால படிக்க முடியல.. ஒண்ணுமே புரியல ஸார்..” என்று கேட்டுவிட.. மனிதர் அதிர்ச்சியாகி முழித்ததை நான் மறக்க முடியாது.

நியாயப்படி ‘உயிர்மை’யில் இருக்க வேண்டிய கவிஞர் சல்மா, இங்கே ‘காலச்சுவடு’ வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தார். கவிதாயினி பிரேமா ரேவதியை இங்கே சந்தித்தேன். அவருடைய நாகப்பட்டினம் குழந்தைகள் காப்பகம் நல்ல முறையில் நடந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். தான் மீண்டும் கவுதம்மேனனின் அடுத்த படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றப் போவதாகச் சொன்னார். வாழ்த்துத் தெரிவித்துவிட்டு நகர்ந்தேன்.

‘உயிர்மை’யிலும் கடை கொள்ளாத கூட்டம். ‘என் இனிய சுஜாதா’வின் ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’ செம சேல்ஸ். இப்போதும், எப்போதும் அவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லைதான்.. அடுத்து சாருநிவேதிதாவின் ‘கோணல் பக்கங்களும்’, எஸ்.ரா.வின் ‘சிறுகதை தொகுப்பும்’ அனைவரது கைகளாலும் புரப்பட்டப்பட்டுக் கொண்டிருந்தன. ஒரு எழுத்தாளரின் அனைத்துப் புத்தகங்களும் ஒரே பதிப்பகத்தின் மூலம் விற்பனையாவது அனைவருக்கும் சவுகரியமான விஷயம் என்பது ‘உயிர்மை’ பதிப்பகத்தில் கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து தெரிந்தது.

சுஜாதா, சாரு, எஸ்.ரா என்று மூன்று பேரின் மொத்தக் கதைகளும் இங்கே கிடைக்கிறது என்பதுதான் ‘உயிர்மை’யின் ஸ்பெஷலாட்டி. கூடுதலாக ஜெயமோகனும் இப்போது இங்கே ரேஸில் நிற்கிறார். வாசலில் மனுஷ்யபுத்திரன் மிக, மிக பிஸியாக பேசிக் கொண்டிருந்தார். முதலில் கல்லாப்பெட்டியில் இருந்த செல்வி மேடத்திற்கு ஒரு சலாம் வைத்துவிட்டு, பின்பு மனுஷ்யபுத்திரனிடம் வருகைப் பதிவேட்டை நிரப்பிவிட்டு கிளம்பினேன்.

டிக்கெட் வாங்க நின்ற கியூவைப் போல தண்ணீருக்கும் கியூ நின்றிருந்தது. கண்காட்சிக்கு வருபவர்கள் ஒரு பாட்டிலை கையோடு கொண்டு வருவது சாலச் சிறந்தது. தீர்ந்துவிட்டால் இங்கேயே பிடித்துக் கொள்ளலாம். ஆனால் டம்ளரை எதிர்பார்த்து நிற்பதற்கு, காவிரி நீர் தேடி கர்நாடகாவிற்கே ஓடிவிடலாம்.

“திருக்குடந்தை பதிப்பகம்” என்கிற பெயரில் ஒரு அறை கொண்ட கடையை திறந்து வைத்துக் கொண்டு, அதில் ஹாயாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் சினிமாவின் மூத்த பிரபலம் திரு.முக்தா சீனிவாசன். அவர் எழுதிய புத்தகங்களை அதில் வைத்துள்ளார். கூட்டம்தான் சுத்தமாக இல்லை. இது என்றில்லை.. பல கடைகளிலும் இதே நிலைமைதான்.

ஒரு முஸ்லீம் பதிப்பகத்தின் வாசலில் போர்டு வைத்து, அதில் “நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கிருஷ்ணன் பற்றி சொல்லியிருக்கும் புத்தகம் இங்கே கிடைக்கும்..” என்றும் எழுதி வைத்திருந்தார்கள். இது என்ன புது கரடி என்று தெரியவில்லை. தோண்டத் தோண்ட புதையலாக வருகிறதே..?

வயிற்றுக்கு கொஞ்சம் ஆக்ஸிஜனை ஏற்ற வேண்டி காபி குடித்துக் கொண்டிருக்கும்போது சாருநிவேதிதா எதிரில் வந்தார். அரசியல்வாதிகளை மிஞ்சும் தோரணையில், “செளக்கியமா..? வரேன்..” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

ஆழி பதிப்பகத்தில் கவிஞர் அய்யப்ப மாதவனைச் சந்தித்தேன். அங்கே ஒபாமா பற்றிய புத்தகம்தான் அதிகம் விற்பனையாவதாகத் தெரிகிறது. இரா.செழியன் எழுதிய புத்தகம் இப்போதுதான் அறிமுகம் என்பதால், அதிகம் கவன ஈர்ப்பு இல்லாமல் இருந்தது.

விகடன் பிரசுரத்தார் இப்போது கிழக்குப் பதிப்பகத்துடன் போட்டி போடுகிறார்கள் என்று நினைக்கிறேன். கிழக்கு போலவே விகடனிலும் பொது அறிவுக் களஞ்சியமாக பல்வேறு தலைப்புகளில் சிறிய ரக புத்தகங்களை நிறைய உற்பத்தி செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பத்தி எழுத்தாளர்களுக்கு பஞ்சமேயில்லை போலும். கொளுத்துகிறது இவர்கள் இருவரின் போட்டிகள். அதனால் என்ன எழுத்தாளர்களாவது வாழட்டுமே..! என்ன தப்புன்றேன்..?

Blaft Publication என்று போர்டு மாட்டி அதில் Tamil Pulp Fiction Stories என்று எழுதப்பட்ட புத்தகங்களை வைத்திருந்தார்கள். கூடவே வாசலில் அடியாட்கள் போன்ற திடகாத்திரமான இரண்டு பெண்கள் வருவோர், போவோரையெல்லாம் கையைப் பிடித்திழுக்காத குறையாக நிறுத்தி, கிராமர் ஆங்கிலத்தில் கடித்துக் குதறிக் கொண்டிருந்தார்கள். எச்சரிக்கையாக தூரத்தில் போய் நின்று வேடிக்கை பார்த்த என்னை நோக்கியும் ஒரு பெண் வர.. விட்டேன் ஜூட்.. தமிழ்ல பேசினாலே சமயத்துல நமக்கு விளங்க மாட்டேங்குது.. இதுல ஆங்கிலம் வேறயா..?

குழந்தைகளுக்கான புத்தகங்கள் இந்தாண்டு நிறையவே வந்துள்ளன. அதில் அறிவுப்பூர்வமாக, பாடம் சம்பந்தமான புத்தகங்கள் இருக்கும் கடைகளில் பொறுப்பான அம்மா, அப்பாக்களின் கூட்டம் முண்டியடித்தது. பொம்மை கடையாக இருந்தால் குழந்தைகள் முன்புறமாகவும், புத்தகக் கடையாக இருந்தால் அம்மாக்களின் பின்புறமாக ஒளிந்து நிற்கும் குழந்தைகளையும் பார்க்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

எத்தனைதான் புத்தகங்கள் புதுசு, புதுசாக வந்தாலும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு, தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு என்ற கிராமர் இங்கிலீபீசு புத்தகங்களும் நிறையவே விலை போகின்றன. அனைத்திலுமே “அம்மா இங்கே வா வா..” “அதோ ஆடு..” “இதோ இலை..” என்றுதான் தமிழில் ஆரம்பித்து ஆங்கிலத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். இப்படி படிக்கத் துவங்கினால் புத்தகத்தை வாங்கியவர் சுடுகாடு போய்ச் சேர்வதற்குள் பாடத்தில் தேறிடுவார் என்று நம்பலாம்.

திராவிடன் பதிப்பகத்தில் வி.ஐ.பி. பாஸ் வைத்திருந்த ஒருவர் மட்டுமே கருப்பு சட்டை போட்டிருந்தார். சென்ற ஆண்டு வாசலில் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் யூனிபார்மில் இருந்தார்கள். ஒருவேளை கருப்பு சட்டை சென்னையில் ஸ்டாக் இல்லையோ..? பெரியாரின் எழுத்துக்கள் தொகுதி, தொகுதியாக வெளியிடப்பட்டிருப்பதால் 10, 15 ரூபாய்களுக்கு புத்தகங்கள் கிடைக்கிறது. ஆனால் இங்கேயும் கூட்டம் குறைவுதான்.

தமிழ்வாணன் பதிப்பகத்தில் இருப்பவர்களுக்கு இப்போது ஒரு கவலை.. அடுத்து புதிதாக எழுதுவதற்கு தலைப்பு கிடைக்கவில்லையாம். எதைப் பற்றியும் எழுதும் ஆர்வமுள்ளவர்கள் உடனேயே ஓடலாம். என்னுடைய சிபாரிசு தலைப்பு, “பெண் பார்க்கச் செல்லும்போது செய்ய வேண்டியது..”

நக்கீரன் பதிப்பகத்தில் வாத்தியார் சுஜாதா எழுதிய சிறுகதைகளைப் பார்த்தேன். இதை எப்போது எழுதினார் என்று தெரியாமல் குழம்பிப் போனேன். வாத்தியார் இன்னும் எதை, எதையெல்லாம் செய்திருக்கிறார் என்றே தெரியவில்லை. ‘வீரப்பன் வேட்டை’ கடையில் நன்கு கல்லாவை நிரப்பிக் கொண்டிருந்தது. வாசலில் அமர்ந்திருந்த நக்கீரன் கோபால், பேவரிட் புன்னகையோடு கேட்பவர்களுக்கெல்லாம் ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருந்தார்.

அவரிடம், “நக்கீரன் சார்பில் புது பிளாக் துவக்குங்கள்” என்றேன். “அதில் நக்கீரன் வெளியீடுகளை மொத்தமாக போட்டு வையுங்கள். இப்போதெல்லாம் பல ஐ.டி. நிறுவனங்களில் டாட்.காம், டாட்.நெட் என்று முடியும் இணையத்தளங்களை தடை செய்துவிட்டார்கள். பலரும் அதனைத் திறக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். நீங்கள் பிளாக்கில் செய்தீர்கள் என்றால் இன்னும் நிறைய பார்வையாளர்கள் கிடைப்பார்கள்..” என்றேன். “நல்ல யோசனை. நிச்சயம் செய்கிறேன்..” என்றார். ஏதோ நம்மளால முடிஞ்ச பத்த வைப்பு..

நூற்றாண்டு கண்ட அல்லையன்ஸ் பதிப்பகத்தில் ஏற்கெனவே ‘சோ’ அவர்களின் சோகக் கதைகள் நிறைய குவிந்திருக்கின்றன. போதாதுக்கு இன்னொரு சோகமாக பெரிய ‘சோ’வான திரு.லால்கிஷன் அத்வானியின், ‘என் தேசம் என் வாழ்க்கை’ என்கிற கட்டைப் புத்தகம் நிமிர்ந்து நிற்கிறது. எப்படியும் புத்தகத்தில் பாதி பொய்யும், புரட்டுமாகத்தான் இருக்கும் என்பது தலைப்பிலேயே தெரிகிறது. ‘என் தேசம்’ என்று பெயர் வைத்து பாசத்தைக் கொட்டத் தெரிந்த இவர்தான், பிரச்சினை வருமே என்றெண்ணி பலரும் கதறியழுது சொல்லியும் கேளாமல், வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் ரத யாத்திரை போய் தேசத்தின் ஒரு பெரிய அழிவுக்கு அஸ்திவாரத்தைத் தோண்டினார். இதைப் பற்றி புத்தகத்தில் எவ்வளவு அழகாக பொய் சொல்லியிருக்கிறார் என்பது படித்தால்தான் தெரியும். அரசியல்வியாதிகளின் பொய்தான் இருப்பதிலேயே அழகான பொய்யாக இருக்குமென்று நினைக்கிறேன். இங்கே ‘சோ’வின் ‘இராமாயணத்தை’ குறி வைத்திருக்கிறேன். அடுத்த முறை வரும்போது வாங்கிவிட வேண்டும்.

கிழக்குப் பதிப்பகத்தைத் தேடிக் கண்டுபிடித்து பத்ரி ஸார் இருந்தால் ‘எதையாவது ஆட்டைய போடலாம்’ என்று நினைத்துப் போனேன். “பத்ரி இல்லை..” என்றார்கள். கிழக்குப் பதிப்பகம் நலம், வரம், prodigy, New horizon media என்ற பெயர்களில் 5 கடைகளை வைத்திருந்தார்கள். சிறிய ரக புத்தகங்கள் பலவும் அடுக்கப்பட்டிருக்க.. “இங்கே 25 ரூபாயில் தி.முக., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க.வின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம். வாருங்கள்” என்று அழைக்கிறார்கள். இதோடு கூடவே ஆடியோ புத்தகங்களுக்கு என்று தனியாக ஒரு கடையை அமைத்திருந்தார்கள். பதிப்புலகம் எங்கயோ போகுது..

கடையில் ஹரன் பிரசன்னாவைத் தேடினேன். ஆனால் வந்தது எழுத்தாளர் யுவகிருஷ்ணா. ஆள் இப்போது எழுத்தாளராகவும் ஆகிவிட்டபடியால் கொஞ்சம் கலராக மாறியிருக்கிறார். உடைகளும் மாறிவிட்டது. இப்போதெல்லாம் ஜிகினா சட்டைகளைத் தவிர வேறெதையும் உடுத்துவதில்லையாம். நேற்று மடிப்பு கலையாத வெள்ளை நிற பளபள சட்டையில் இருந்தார்.


நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ஹரன் வந்து சேர்ந்தார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும், இரண்டு நாட்களுக்கு முன் நான் அவருக்கு போன் செய்து கலாய்த்ததை நினைவுகூர்ந்தார். “என்னங்க இவர் பாட்டுக்கு எனக்கு போன் பண்ணி, இட்லிவடைக்கு ஒரு கமெண்ட் போட்டிருக்கேன். பப்ளிஷ் பண்ணுங்கன்றாரு..” என்று யுவகிருஷ்ணாவிடம் சொன்னார். “நீங்கதான ஸார் இட்லிவடை..” என்றேன். “நான் இல்லீங்க.. இவர்தான்..” என்று அருகில் அம்சமாக, அழகாக நின்று கொண்டிருந்த புதுமாப்பிள்ளை NHM நாகராஜை
அடையாளம் காட்டினார். நாகராஜ் இதை மறுக்கவில்லை. ஆகவே, கழகக் கண்மணிகளே, இப்போது உங்களது பார்வையை கொஞ்சம் இந்த நாகராஜ் மேலேயும் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை இட்லிவடை இவராகக் கூட இருக்கலாம்.

கிழக்குப் பதிப்பகத்தில் நான் பார்த்த ஒரு வித்தியாசமான தலைப்பு, “ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்”. உலகின் முதல் 25 பணக்காரர்களின் வாழ்க்கையைப் பற்றி சாமுவேல் எழுதியிருக்கும் புத்தகம் இது. கிழக்கில் புத்தகத்தின் டிஸைனில்தான் விளையாட்டு காட்டுகிறார்கள் என்றில்லை.. தலைப்பிலும் பிச்சு உதறுகிறார்கள். வாழ்க வளமுடன்.

எழுத்தாளர் யுவகிருஷ்ணா, நாகராஜுடன் நகர்வலம் சென்றபோது எஸ்.ராமகிருஷ்ணனை சந்தித்தேன். எழுத்தாளர் யுவகிருஷ்ணனையும், நாகராஜையும் எஸ்.ரா.விடம் அறிமுகப்படுத்தி வைத்தேன். தான் 15 காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கியதாகச் சொன்னார் எஸ்.ரா. உடனேயே நமது எழுத்தாளர் யுவகிருஷ்ணாவுக்கு மூக்கில் வியர்த்துவிட்டது. “எங்கே..? எங்கே..?” என்றார். எஸ்.ரா. எங்களை கையோடு ‘உயிர்மை’க்கு அழைத்து வந்து தான் வாங்கி வைத்திருந்த புத்தகங்களைத் தேடியெடுத்து புத்தகக் கடையின் பெயரைச் சொன்னார். அங்கே திடீர் சந்திப்பாக கவிஞரும், சக பதிவருமான தமிழ்நதி அவர்களைச் சந்தித்தோம்.

நாகராஜிடம் பா.ராகவனின்
போன் நம்பர் கேட்டேன். “என்னிடம் இல்லை. அவர் யாரிடமும் தரவில்லை..” என்றார். எழுத்தாளர் யுவகிருஷ்ணாவும் “என்னிடமும் இல்லை. புதுசா நம்பர் மாத்திட்டார் போலிருக்கு” என்றார். ஹரன் பிரசன்னா, “பா.ராகவனைத் தாராளமாகத் திட்டிக் கொள்ளுங்கள்” என்று அறிக்கையேவிட்டுவிட்டார். அவரிடமே பா.ரா.வின் நம்பர் கேட்டேன். “அவர் யாருக்கும் நம்பர் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டார்..” என்றார். போன் நம்பர் கிடைக்காமல் எப்படி திட்டுவது..? இந்த எழுத்தாளர்களே இப்படித்தான் வித்தியாசமான சிந்தனைகளை உடையவர்கள்..

எழுத்தாளர் யுவகிருஷ்ணாவுடன் காமிக்ஸ் புத்தகம் விற்ற அந்த கடைக்குச் சென்றேன். நிஜமாகவே பழைய காமிக்ஸ் புத்தகங்கள்தான் அவை. விலை 5 ரூபாய்தான். அனைத்தையும் வாங்கித் தூக்கிச் செல்வதென்றால் முடியாத காரியம் என்பதாலும், பர்ஸின் கனம் அப்போதைக்கு குறைவாக இருப்பதாலும் நமது எழுத்தாளர் யுவகிருஷ்ணா அவர்கள், “நாளைக்கு வந்து வாங்கிக்கலாம்..” என்றார்.

மறுபடியும் கிழக்குக் கடைக்கு வந்தோம். கடையில் ஜாக்கி சேகர் இருந்தார். எழுத்தாளர் யுவகிருஷ்ணாவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். நான் வாங்க வேண்டிய புத்தகம் ஒன்று அங்கே இருப்பதாகச் சொல்லி ‘திருமண கையேடு’ என்ற தலைப்பிலான புத்தகத்தைச் சுட்டிக் காட்டினார் எழுத்தாளர் யுவகிருஷ்ணா. “அதை வாங்கிப் படித்தாலும் என் கர்மம் தொலையாது..” என்றேன்.

நேற்று வரையிலும் 2000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியதாகவும், இன்று மேலும் 600 ரூபாய் ஆகிவிட்டதாகவும் சொல்லி வருத்தப்பட்டார் எழுத்தாளர் யுவகிருஷ்ணா. எழுத்தாளர் ஆன பின்னாடி இதுக்கெல்லாம் போய் வருத்தப்படலாமா..? இதையெல்லாம் முதலீடா நினைச்சு முன்னேற வேண்டியதுதான்.. என்ன நான் சொல்றது..?

ஹரன் ஸாரிடம் விடைபெற்று இருவரும் வெளியில் வந்தோம். அப்போது கேபிள் சங்கர் போன் செய்தார். எழுத்தாளர் யுவகிருஷ்ணாவிடமும் பேசினார். நானும் கேபிள் ஸாரும் முகம் பார்க்காமலேயே இதுவரையில் 100 முறையாவது பேசியிருப்போம். நேரில் சந்திப்பதற்கு நேரம் கிடைக்காமல் உள்ளது. போனிலேயே காதல்..

எழுத்தாளர் யுவகிருஷ்ணா, “நேரமாகிவிட்டது..” என்று சொல்லி விடைபெற.. அங்கே மேடையில் ‘தமிழ்க் கடல்’ திரு.நெல்லை கண்ணன் தமிழை அனைவருக்கும் வஞ்சகமில்லாமல் வாரி வழங்கிக் கொண்டிருந்ததால், “அதைக் கேட்டுவிட்டு பின்பு வருகிறேன்..” என்று சொல்லி நமது எழுத்தாளரை வழியனுப்பிவைத்துவிட்டு கூட்டத்திற்குள் புகுந்தேன்.

‘தமிழ்க்கடல்..’ வெறுமனே சொல்லவில்லை. உண்மையான கடல்தான்.. ‘தமிழால் வாழ்வோம்’ என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். துணைக்கு அவ்வையாரையும், திருக்குறளையும் அவ்வப்போது அழைத்துக் கொண்டார்.

அவருடைய பேச்சில் என் நினைவில் இருந்து சில பகுதிகள் :

“ரோட்டுல பாக்குறேன்.. ஒரு வண்டில, புருஷன், பொஞ்சாதி, முன்னாடி ஒரு பிள்ளை, அடுத்து ஒரு பிள்ளை, ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு பிள்ளை.. இது பத்தாதுன்னு பொஞ்சாதி மடியிலேயும் ஒரு பிள்ளை.. அது என்னடான்னா ‘ஸ்டெப்னி’ங்குறான்.. எவ்வளவோ முயற்சி செஞ்சும் தடுக்க முடியாம போய் பொறந்திருச்சாம். அதுனால அது ஸ்டெப்னியாம்..”

“கோவிலுக்கு போ.. சாமியைக் கும்பிடுன்னு எந்த தமிழும் நமக்குச் சொல்லித் தரலை.. சும்மா சும்மா கோவிலுக்குப் போய் சாமியை விரட்டாதீங்க.. மிரட்டாதீங்க.. ஒரே நாள்ல 10 லட்சம் பேர் போய் பெருமாள்கிட்ட வேண்டிக்கிறான்.. பெருமாள் ஒத்த மனுஷன்.. அவர் என்ன பண்ணுவார்..? எத்தனை பேர் குறையைத்தான் கேப்பாரு.. முடியற காரியமா அவரால..”

“எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் முப்பது வருஷமா திருப்பதிக்கு போயிட்டு வந்திட்டிருக்கார்.. ‘பெருமாள் எப்படிய்யா இருக்கார்..?’ன்னு கேட்டேன். ‘ரெண்டு பெரிய திண்டு. நடுவுல ஒரு துண்டு’ன்னார்.. ‘என்னய்யா..?’ன்னு கேட்டா சொல்றாரு.. “பக்கத்துல போனவுடனேயே ஜலகண்டி.. ஜலகண்டின்னு விரட்டிட்டே இருப்பான். நானும் அவசரமா பாத்ததுல இத்தனை வருஷமா கோவில் பட்டரோட பின்பக்கத்தைத்தான் சாமின்னு நினைச்சு கும்பிட்டிருக்கேன்’னாரு..”

“நம்மூர் பெருமாள் கோவில்ல அட்சதையும், புளியோதரையும் கொடுப்பாங்க. கூடவே இலவச இணைப்பா டி.கே.எஸ்.பட்டணம் பொடியும் கிடைக்கும்.. ஒரு பட்டர் விடாம அத்தனை பேரும் மூக்குப் பொடி போடுறாங்க.. நீங்களே பார்த்திருப்பீங்களே.. இதெல்லாம் நமக்குத் தேவையா.. சாமி எங்கேயும் போகலை.. நமக்குள்ளதான் இருக்கு. நம்ம வீட்லதான் இருக்கு. நம்ம அப்பன், ஆத்தாளை கும்பிடுங்க.. அவுங்கதான் சாமி.. அதுதான் பக்தி..”

“இந்த செல்போன் வந்ததுலேயிருந்து ஒரு பயலும் பேச மாட்டேங்குறான். வீட்ல யாருக்கும், யாருக்குமிடையில் பேச்சு இல்லாம போச்சு. ஆனா செல்போன்ல மட்டும்தான் மணிக்கணக்கா பேசுறான்.. ரோட்டுல வண்டியோட்டும்போது செல்போன்ல பேசாதன்னு சட்டம் போட்டாச்சு.. ஆனா ஒரு பயலும் கேக்கலை. டாக்டர்ன்னு ஸ்டிக்கரை ஒட்டிருக்கிறவனே செல்போன்ல பேசிட்டேதான் வண்டியை ஓட்டுறான்.. அவன் அடிபட்டா, அவனுக்கு அவனே வைத்தியம் பார்த்துக்குவானா..?”

“துறவிகள் பின்னாடி போகாதீங்க.. அவங்கதான் உங்க பின்னாடி வரணும்.. எனக்குத் தெரிஞ்ச ஒரு டாக்டர். அவரோட பொஞ்சாதி அவரை மதிக்கவே மாட்டாங்க. அந்தம்மா ஒரு சாமியாரோட தீவிர பக்தையா இருந்தாங்க. டாக்டரும் பொறுத்து பொறுத்து பார்த்தாரு. சாமியாருக்கு ஒரு நாள் நோய் முத்திப் போச்சு. நம்ம டாக்டர்தான் காப்பாத்துனாரு. பொழைச்சவுடனே சாமியாரு டாக்டரை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு, ‘நீங்கதாங்க கடவுள்’ன்னாரு.. அப்புறம்தான் அந்தம்மாவுக்கு தெரிஞ்சது நம்ம வீட்டுக்குள்ளே ஒரு தெய்வம் இருக்கு.. நாமதான் வெளில தேடிக்கிட்டிருக்கோம்னு..”

“துறவின்றவன் நம்ம கால்ல விழுகணும்.. நாம அவன் கால்ல விழுகக்கூடாது. ஏன்னா அவன்தான் பற்றற்றவன். நாம அவன் கால்ல விழுந்தா, அவனுக்குள்ள தான் ஒரு பெரியவன்ற அகந்தை இருக்கு. அப்போ அவனுக்கு பெருமைல பற்று இருக்குன்னு அர்த்தம்.. இப்ப அவன் துறவியில்ல.. இதைத்தான் பட்டினத்தார் சொல்லியிருக்காரு.. எல்லாத்தையும் விட்ரு.. பிச்சையெடு.. திருவோடுகூட உனக்குச் சொந்தமா இருக்கக்கூடாது. அவன்தான் துறவின்னாரு.. இப்ப எல்லாரும் அப்படியா இருக்கானுக..”

“குழந்தைகளிடம் அன்பா இருங்க.. நேசிங்க.. பாசமா பழகுங்க.. அதுதான் உங்க உலகம். கடன் வாங்காதீங்க.. அதுக்கு சும்மாவே இருக்கலாம். ஐயாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினீங்கன்னா நாலாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு செலவு பண்ணுங்க.. போதும்.. அதுலேயே சந்தோஷமா இருங்க.. கிடைச்சிருக்குற வாழ்க்கைய சந்தோஷமா அனுபவிங்க.. மகிழ்ச்சி உங்களுக்குள்ளதான் இருக்கு.. ஐயாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிட்டு பத்தாயிரம் ரூபாய்க்கு பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தாதீங்க..”

“ஆயிரம் ரூபா கொடுத்து வண்டியை எடுத்திட்டுப் போங்க’ன்றான்.. ‘அப்புறம் மாசா, மாசாம் பணத்தைக் கட்டுங்க.. கட்ட முடியலைன்னா நாங்களே தேடி வந்து வண்டியை எடுத்துக்குறோம்’ன்றான்.. எதுக்குன்றேன்.. தேவையில்லை.. கடன் உடன் இருந்தே கொல்லும் ஒரு வியாதி.. அது நமக்குத் தேவையில்லை..”

“ஆசைப்படுங்க.. அந்த ஆசை உங்க குழந்தைகளை நல்ல குணத்தோட வளர்க்கணும்ன்ற பேராசையா மட்டும்தான் இருக்கணும்..”

இப்படி சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைக்கிறது தமிழ்க்கடலின் சொற்பொழிவு. மடைதிறந்த வெள்ளம்போல் எப்படித்தான் இப்படி அநாயசமாக வார்த்தைகள் இவரிடமிருந்து வந்து விழுகின்றன என்று தெரியவில்லை. அற்புதமான பேச்சு. குடும்பத்தில் ஒருவர் போன்ற தோற்றமும், அவருடைய பேச்சும் கூட்டத்தினரை பெரிதும் கவர்ந்திருந்தது.

பேச்சை முடித்ததும் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க கியூவில் நின்றது கூட்டம். காங்கிரஸ் கட்சியிலேயே இப்படி பெருமைப்படத்தக்கவர் தமிழ்நாட்டிலேயே திரு.நெல்லைகண்ணன் மட்டும்தான் என்பது, அவருடைய தலைவி திருமதி.சோனியாகாந்திக்கு எப்போது தெரியப் போகிறது என்று தெரியவில்லை.

இப்படிப்பட்ட, கூட்டத்தினரை கட்டிப் போடத் தெரிந்த ஆளுமை படைத்த பேச்சாளரின் அருமை தெரியாமலும், அவரைப் பயன்படுத்தவும் தெரியாமலும்தான் இன்றைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி, தனது அடையாளத்தைத் தொலைத்து மாற்றுக் கட்சிகளின் கொல்லைப்புறத்தில் கால் கடுக்க நிற்கிறது.

நிகழ்ச்சி முடிந்தபோது சக பதிவர் வண்ணத்துப்பூச்சியாரை சந்தித்தேன். அவருடைய மகள், மற்றும் மகனுடன் வந்திருந்தார். அவரை வழியனுப்பிவிட்டு மேடைக்குச் சென்று காத்திருந்து திரு.நெல்லையார் அவர்களிடம் கைகுலுக்கி வாழ்த்திவிட்டு வந்தேன்.

கொண்டு வந்தது 50 ரூபாய். செலவழித்தது ஒரு காலச்சுவடு புத்தகம், ஒரு காபி, இரண்டு வடை என்று 35 ரூபாய்.. இன்றைய பொழுதில் நேரத்தையும் நல்ல முறையில் கடத்தியாகிவிட்டது. செலவையும் கட்டுப்படுத்தியாகிவிட்டது. மனமும் சந்தோஷமாக இருக்கிறது என்ற பூரிப்புடன் நடந்தேன்.

விடுவானா முருகன்..?

எல்லாஞ் சரி.. ஒரு 6 மணி நேரம் அவனை மறந்தாச்சே.. மறக்கலாமா? அது தப்பில்லையா..? தப்புதானே.. அதான் முருகன் தன் வேலையை காட்டிட்டான்.

எனது டூவிலரின் அருகில் வந்து Side Lock-ஐ திறக்க முயல்கிறேன்.. முயற்சி செய்கிறேன்.. முயற்சி செய்து கொண்டேயிருக்கிறேன். சாவி உள்ளே நுழையவேயில்லை. பல முறை செய்து பார்த்தும் முடியாமல் சோர்ந்து போய் பக்கத்தில் வண்டியை எடுக்க வந்தவர்களையும் அவர்களது ஹெல்மெட்டை கழட்ட வைத்து புகார் செய்து அவர்களின் ஜாதகமாவது நன்றாக இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தேன். ம்ஹ¤ம்.. ஒருத்தராலும் முடியவில்லை..

களைத்துப் போய் நின்றிருந்தபோது ஜாக்கிசேகர் போன் செய்தார். “எங்க தலைவா இருக்கீங்க..?” என்றார். நிலவரத்தை சொன்னேன். துணைவியாருடன் எனது இடத்திற்கே வந்தார். “கொடுங்க நான் முயற்சி பண்றேன்..” என்றார். அவரும் என்னென்னமோ செய்து பார்த்தார். முடியவில்லை. “முடியல தலைவா.. உடைக்கிறதுதான் ஒரே வழி..” என்றார். வேறு வழியில்லாததால் தலையாட்டினேன்.

‘உடைப்பது’ என்றால் எதையாவது வைத்து சாவி துவாரத்தில் அடித்து உடைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஜாக்கிசேகரோ வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு, ஸ்டியரிங்கை இப்படியும், அப்படியுமாக வேகமாக ரெண்டு திருப்பு, திருப்பினார். அடுத்த நொடி, Side Lock உடைந்து தொங்கியது. வேறென்ன செய்வது..? ஆறு மணி நேர சந்தோஷம் ஒரு நொடியில் உடைந்து போனது.

வழக்கமாக எனக்கு வரும் அன்றாட சோதனைகளில் இன்றைக்கு இது என்று நினைத்துக் கொண்டேன். முருகன் எப்பொழுது எனக்கு பிரச்சினையைக் கொடுத்தாலும், அதனைத் தீர்க்கவும் அவனே பின்னாலேயே வருவான். இது எனது பல வருட அனுபவம்.

அப்படி நேற்று வந்த முருகனின் பெயர் ‘தனசேகர்’ என்கிற ‘ஜாக்கிசேகர்’.

கந்தனுக்கு அரோகரா..

முருகனுக்கு அரோகா..

வேல்.. வேல்.. வெற்றிவேல்..

வேல்.. வேல்.. வெற்றிவேல்..

அரோகரா..

28 comments:

Anonymous said...

உண்மைத்தமிழனே..

நாங்கல்லாம் பாவமில்லையா..?

தேவன் மாயம் said...

பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே!!

தேவா

துளசி கோபால் said...

விலாவரியாச் சொன்னதுக்கு ரொம்பவே மகிழ்ச்சி.

வாழ்க்கையில் ஒரேஒருமுறை இந்தப் புத்தகத் திருவிழாவைப் பார்த்தேன், அது ஆச்சு ரெண்டு வருசம்.

ஆமாம், எதுக்கு அதிர்ஷ்டப்பார்வையை இந்த வாரு வாருறீங்க?

கிருஷ்ணார்ப்பணம்.

Anonymous said...

நீங்கள் பத்து வரிகளில் ஒரு பதிவு எழுதுங்கள். அடுத்த நிமிடம் உங்களைத் தொலைபேசியில் அழைத்து நானே பேசுகிறேன்.

anujanya said...

உங்களை 'நீண்ட' பதிவுகளுக்குச் சிலபேர் கலாய்ப்பது தெரிந்த விஷயம். ஆனால் எனக்கு உங்களுடைய இந்த பதிவு மிகப் பிடித்தது. ஒரு இரண்டு மணி நேரம் உங்களுடன் புத்தகக் கண்காட்சியில் சுற்றி வந்த உணர்வு வருகிறது.

அங்கங்கே நகைச்சுவைத் துணுக்குகள் -
// இது என்ன புது கரடி என்று தெரியவில்லை. தோண்டத் தோண்ட புதையலாக வருகிறதே..?//
//அடியாட்கள் போன்ற திடகாத்திரமான இரண்டு பெண்கள்//
//புத்தகத்தை வாங்கியவர் சுடுகாடு போய்ச் சேர்வதற்குள் பாடத்தில் தேறிடுவார் என்று நம்பலாம். //

எத்தனை பேரைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்!

பதிவு நன்றாக உள்ளது. மீண்டும் ஒரு முறை போனால் திரும்ப எழுதுங்கள்.

அனுஜன்யா

Ganesan said...

எப்பா சாமி முருகா,

எப்படிப்பா இந்த உ.த,இப்படி விடாம 10 டொ 15 பக்கம் எழுதுராரு , உன் கருணையே கருணையப்பா

Jackiesekar said...

தனசேகரன் என்றே என்னை விளிக்கவும் தனசேகர் என்று அழைக்கும் போது அந்த ரன் குறையும் போது ஏதோ சோதாவாக இருப்பது போல் ஒரு பிரம்மை அய்யா இல்லை என்றால் ஜாக்கிசேகர் என்று விளிக்கவும்.

Jackiesekar said...

எப்படிய்யா இப்படி எல்லாம் எழுத முடிகிறது அனுஜன்யா சொல்வது போல்நான் புத்தக கண்காட்சியை சுற்றி வந்தது போல் ஒரு பிரமையப்பா.

உங்களிடம் பிடித்ததே நீங்கள் எல்லோரிடமும் பழகும் பாங்கு.

உங்களுக்கு சோதனை கொடுக்கும் முருகன் நல்ல வாழ்க்கையை பிரச்சனையில்லாத வாழ்க்கையை அப்பன் முருகன் எப்படியும் கொடுப்பான்

Jackiesekar said...

எத்தனை பேரைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்!


அதானே....

Jackiesekar said...

நீங்கள் பத்து வரிகளில் ஒரு பதிவு எழுதுங்கள். அடுத்த நிமிடம் உங்களைத் தொலைபேசியில் அழைத்து நானே பேசுகிறேன்.//

அது இந்த ஜென்மத்துல நடக்காத காரியம்... மேல மேல

Arun Kumar said...

அண்ணா
பொங்கல் வாழ்த்துக்கள் :)

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
உண்மைத்தமிழனே.. நாங்கல்லாம் பாவமில்லையா..?//

அப்போ கை வலிக்க டைப் பண்ணிருக்கிறனே நான் பாவமில்லையா..))))))))))))))

உண்மைத்தமிழன் said...

//thevanmayam said...
பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே!!
தேவா//

நான் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் நண்பரே.

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
விலாவரியாச் சொன்னதுக்கு ரொம்பவே மகிழ்ச்சி.//

டீச்சர் மிக்க நன்றி.. எங்க ஆளையே காணோம்.. ரொம்ப நாளாச்சு என்னைப் பார்க்க வந்து..

//வாழ்க்கையில் ஒரே ஒருமுறை இந்தப் புத்தகத் திருவிழாவைப் பார்த்தேன், அது ஆச்சு ரெண்டு வருசம்.//

அப்போ ரெண்டு வருஷத்துக்கு முந்தி இங்க வந்திருக்கீங்க.. ஓகே..

//ஆமாம், எதுக்கு அதிர்ஷ்டப் பார்வையை இந்த வாரு வாருறீங்க?
கிருஷ்ணார்ப்பணம்.//

சும்மாதான்..

உண்மைத்தமிழன் said...

//பாரா said...
நீங்கள் பத்து வரிகளில் ஒரு பதிவு எழுதுங்கள். அடுத்த நிமிடம் உங்களைத் தொலைபேசியில் அழைத்து நானே பேசுகிறேன்.//

பாரா.. இதென்ன வித்தியாசமான பிளாக்மெயில்..

முழுசையும் படிச்சிருப்பீங்களே.. ஒரு அரை மணி நேரம் நல்லா பொழுது போயிருக்குமே.. இதுக்கு மேல வேறென்ன ஸார் வேணும்.

இதில் ஒவ்வொரு பத்தியிலும் ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறேன்.. இது தப்பா.. அப்புறம் எப்படி முழுசும் மக்களுக்குத் தெரியறது..?

இதை மூணா பிரிச்சு லக்கியை சந்தித்தது ஒரு பதிவு.. சுத்துனது ஒரு பதிவு.. ஞாநியை சந்தித்தது ஒரு பதிவு.. நெல்லை கண்ணன் பேச்சு ஒரு பதிவு..

பாரா.. நீங்களே நியாயமான்னு சொல்லுங்க.. ஒரே இடத்துல நடக்குறதை ஒரே மூச்சுல சொல்லி முடிச்சிட்டா எல்லாத்துக்கும் ஒரே இடத்துல பதில் சொல்லிரலாம்ல..

புரிஞ்சுக்க மாட்டேங்குறேங்களே சாமி..

போன் செய்வதற்கு முன் மெஸேஜ் கொடுங்கள்.. அப்போதுதான் உங்களை எப்படி திட்டலாம் என்று கொஞ்சம் தயார்படுத்திக் கொள்வேன்..

வருகைக்கு நன்றிங்கோ சாமியோவ்..

உண்மைத்தமிழன் said...

//அனுஜன்யா said...
உங்களை 'நீண்ட' பதிவுகளுக்குச் சில பேர் கலாய்ப்பது தெரிந்த விஷயம். ஆனால் எனக்கு உங்களுடைய இந்த பதிவு மிகப் பிடித்தது. ஒரு இரண்டு மணி நேரம் உங்களுடன் புத்தகக் கண்காட்சியில் சுற்றி வந்த உணர்வு வருகிறது.//

ஆஹா.. கவிஞரே.. எனக்கு ஆதரவா..? நன்றி.. நன்றி..

///அங்கங்கே நகைச்சுவைத் துணுக்குகள் -
// இது என்ன புது கரடி என்று தெரியவில்லை. தோண்டத் தோண்ட புதையலாக வருகிறதே..?//
//அடியாட்கள் போன்ற திடகாத்திரமான இரண்டு பெண்கள்//
//புத்தகத்தை வாங்கியவர் சுடுகாடு போய்ச் சேர்வதற்குள் பாடத்தில் தேறிடுவார் என்று நம்பலாம்.///

இவ்வளவு உன்னிப்பாகப் படித்திருக்கிறீர்களா..? மெய்சிலிர்க்கிறேன் கவிஞரே..

//எத்தனை பேரைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! பதிவு நன்றாக உள்ளது. மீண்டும் ஒரு முறை போனால் திரும்ப எழுதுங்கள்.
அனுஜன்யா//

நிச்சயமா.. நாளையோ அல்லது நாளை மறுநாளோ செல்வேன். மறுபடியும் உங்களுக்காவே எழுதுகிறேன்..

வாழ்க கவிஞர் அனுஜன்யா..

உண்மைத்தமிழன் said...

//KaveriGanesh said...
எப்பா சாமி முருகா, எப்படிப்பா இந்த உ.த,இப்படி விடாம 10 டொ 15 பக்கம் எழுதுராரு , உன் கருணையே கருணையப்பா..//

அவன் கருணைதான் கணேஷ்.. அவனின்றி ஓர் அணுவும் அசையாது..

உண்மைத்தமிழன் said...

//jackiesekar said...
தனசேகரன் என்றே என்னை விளிக்கவும் தனசேகர் என்று அழைக்கும் போது அந்த ரன் குறையும் போது ஏதோ சோதாவாக இருப்பது போல் ஒரு பிரம்மை அய்யா இல்லை என்றால் ஜாக்கிசேகர் என்று விளிக்கவும்.//

மன்னிக்கணும் ஜாக்கி.. முழுப் பெயர் தெரியாமல் எழுதிவிட்டேன். இனி தனசேகரன் என்றே அழைக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//jackiesekar said...
எப்படிய்யா இப்படி எல்லாம் எழுத முடிகிறது? அனுஜன்யா சொல்வது போல் நான் புத்தக கண்காட்சியை சுற்றி வந்தது போல் ஒரு பிரமையப்பா. உங்களிடம் பிடித்ததே நீங்கள் எல்லோரிடமும் பழகும் பாங்கு. உங்களுக்கு சோதனை கொடுக்கும் முருகன் நல்ல வாழ்க்கையை பிரச்சனையில்லாத வாழ்க்கையை அப்பன் முருகன் எப்படியும் கொடுப்பான்.//

அந்த நம்பிக்கையில்தான் காலம் ஓடுகிறது ஜாக்கி..

உண்மைத்தமிழன் said...

//jackiesekar said...
எத்தனை பேரைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! அதானே....//

மூணு பேரை மட்டும்தான சாமி பேசியிருக்கேன்.. மூணே மூணு பேர்.. அம்புட்டுத்தான்..

உண்மைத்தமிழன் said...

///jackiesekar said...
நீங்கள் பத்து வரிகளில் ஒரு பதிவு எழுதுங்கள். அடுத்த நிமிடம் உங்களைத் தொலைபேசியில் அழைத்து நானே பேசுகிறேன்.//
அது இந்த ஜென்மத்துல நடக்காத காரியம்... மேல மேல..///

ஏன் நடக்காது..?

அடுத்த பதிவைப் படிச்சிட்டு பாரா எந்திரிச்சு ஓடுறாரா, இல்லையான்னு பாருங்க..

உண்மைத்தமிழன் said...

//Arun Kumar said...
அண்ணா பொங்கல் வாழ்த்துக்கள்:)//

தம்பீ.. நல்லாயிருக்கியா..? பொங்கல் நல்வாழ்த்துக்களை நானும் தெரிவித்துக் கொள்கிறேன்..

வாழ்க வளமுடன்

Cable சங்கர் said...

பொங்கல் வாழ்த்துக்கள்.. நண்பரே..

துரியோதனன் said...

பொங்கள் வாழ்த்துக்கள் அண்னா!
இவ்வளவு பேரை தெரிஞ்சி வைத்திருக்கிங்களே . அடுத்த முறை உங்களோட சேர்ந்து கண்காட்சி செல்லனும்.

உண்மைத்தமிழன் said...

//Cable Sankar said...
பொங்கல் வாழ்த்துக்கள்.. நண்பரே..//

வாழ்த்து சொல்றதுக்கு இந்தப் பதிவுதான் கிடைத்ததா நண்பரே..

இம்மாம் பெரிய பதிவுக்கு, ஒரு வரி பின்னூட்டமா..?

வாழ்க உமது பின்னூட்டத்தனம்..

உண்மைத்தமிழன் said...

//துரியோதனன் said...
பொங்கள் வாழ்த்துக்கள் அண்னா!
இவ்வளவு பேரை தெரிஞ்சி வைத்திருக்கிங்களே . அடுத்த முறை உங்களோட சேர்ந்து கண்காட்சி செல்லனும்.//

போகலாம் தம்பி.. அதற்கு முன் ஒரு வேண்டுகோள்.. ஒரே நேரத்தில் நரியுடனும், மானுடனும் தோழமை கொள்ள முடியாது.. என்றாவது ஒரு நாள் அது அனர்த்தமாகிவிடும்.

ஒரு நண்பன் சகுனி என்றும், இன்னொரு நண்பன் கர்ணன் என்று சொல்லி நீங்கள் துரியோதனனாக இருக்க முயலாதீர்கள்.

இருவரில் ஒருவரை விடுங்கள்.. சகுனியை கை வீட்டீர்கள் ஆனால், கர்ணன் கை கொடுப்பான். நிச்சயம் போர் வராது..

கர்ணனை கை விட்டு சகுனியைக் கைப் பிடித்தீர்கள் என்றால், போர் வரும். ஆனால் கர்ணன் துணைக்கு வர மாட்டான். போர் மிக விரைவில் முடிவுக்கு வரும்.

இதில் எது நல்லது என்பதைத் தாங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஆனாலும் நான் பார்த்த மிக, மிக வித்தியாசமான Profile உங்களுடையதுதான்..

வாழ்க வளமுடன்

உண்மைத்தமிழன் said...

//Valaipookkal said...
Hi, We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here.
Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Thanks
Valaipookkal Team//

எனது வலைப்பதிவை இணைத்துவிட்டேன் நண்பர்களே..

வழிமுறைகள் சுலபமாக இருந்தன. நன்றிகள்..

abeer ahmed said...

See who owns jeffinvite.org or any other website:
http://whois.domaintasks.com/jeffinvite.org