என் இனிய சுஜாதா

02-03-2008

அன்புள்ள சுஜாதா ஸாருக்கு.. நலமா..?

தாங்கள் இப்போது ‘எங்கே’ இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது என்றாலும், தங்களின் விருப்பப்படியே ‘நரகம்’ என்றழைக்கப்படும் சுவாரசியத்தின் பிறப்பிடத்தில் வாசம் செய்பவராக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் நீங்கள் சொர்க்கத்தைவிட நரகத்தையே அதிகம் விரும்புவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அப்படி அங்கேயே போய்ச் சேர்ந்திருந்தால், உங்களைவிட நானும் சந்தோஷப்படுவேன். ஏனெனில் உங்களின் சந்தோஷமே எனது சந்தோஷம்.


இங்கிருந்ததைவிட ‘அங்கு’ நன்றாகவே இருப்பீர்கள் என்றும் நினைக்கிறேன். ‘புதிய இடம்’ என்பதால் முதலில் கொஞ்சம் குழப்பமாகவே  இருக்கும். மனம் ஒருநிலைப்படாது..!

மனைவி, மக்கள், பேரப் பிள்ளைகள், உடன்பிறந்தார், நண்பர்கள், பகைவர்கள் என்று அனைவரையும் தேடும். ஆனால் புறப்பட்ட இடம் அதுதான் என்பது, தாங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும். ‘வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் இடம் ஏது?’ என்ற கவியரசின் கருத்துக்கேற்ப, கொடுத்தவனே தங்களை எடுத்துக் கொண்டான்..! அரங்கனடி இணைந்துவிட்டீர்கள். சந்தோஷம்..!

உங்களுக்கும், எனக்கும் என்ன ஸார் சம்பந்தம்? நான் யார்? நீங்கள் யார்..? நான் ஏன் நீங்கள் மறுவீடு அடைந்ததற்கு வருந்த வேண்டும்? யோசித்துப் பார்க்கிறேன்..!

சுடுகாடுவரையிலும் வந்து உங்களை வழியனுப்பிவிட்டு, வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு, மீண்டும் வேலைக்காக கிளம்பும்போது தெருவே அல்லோலகப்பட்டுக் கொண்டிருந்தது.

எனது தெருவில் மரத்தோடு மரமாய் தானாகவே வளர்ந்திருந்த ஒரு பெண் நாய், நாலு குட்டிகளை பெத்துப் போட்டுவிட்டு செத்துப் போய்விட்டது அனாதையாக..

தெருவில் இருக்கும் குழந்தைகள் ஆளுக்கொரு குட்டியைக் கையில் தூக்கிக் கொண்டு தங்களது வீடுகளுக்குச் சென்றார்கள். ஒவ்வொருவரின் வீட்டு வாசலிலும் பெற்றோர்களுடன் தர்க்கம்..

சின்னப் பிள்ளைகள் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ‘இங்கதான் இருக்கும்..’ ‘நான்தான் வைச்சிருப்பேன்’ என்று அழுத்தமான குரல்.. ஒரு பெற்றோராலும் ஜீரணிக்கவே முடியவில்லை.. இது என்ன வகையான நட்பு?  என்ன வகையான பாசம் என்று..?

குழந்தைகளின் உலகமே தனிதானே ஸார்.. ஒரு நிமிடம் நின்று அந்த பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமான உறவுச் சண்டையை நேரில் பார்த்தபோது சட்டென்று எனக்கு உங்கள் ஞாபகம்தான் வந்தது..

எழுத்தாளனுக்கும், வாசகனுக்குமான உறவு இது போன்றதுதானே.. அதில் ஒரு உறவுதான் உங்களுக்கும், எனக்குமான உறவு..

நான் பிறந்து வளர்ந்தது முதலே என் வீட்ல புத்தக மூட்டைகள் நிறையே கிடந்தது ஸார்.. அதுல முதல் ஆளா நிக்குறது கல்கி தாத்தாதான் ஸார். அவரோட ‘பொன்னியின் செல்வனையும்’, ‘சிவகாமியின் சபதத்தையும்’ எங்கப்பா கட் பண்ணி பைண்ட் பண்ணி வைச்சிருந்தார். அப்புறம் ஜெயகாந்தன், இந்த ரெண்டே பேர் புஸ்தகம்தான் வீட்ல இருந்தது.. மத்தபடி மாசாமாசாம் எங்கப்பா தவறாம வாங்கின புத்தகம் ‘துக்ளக்’.. நான் பொறந்ததுலேர்ந்து கூடவே வாசிச்சிட்டு வந்திருக்கிற புத்தகம் ‘துக்ளக்’.. அது கிடக்கு விடுங்க..

கொஞ்சம் வயசு ஏற.. ஏற.. கிடைக்கின்ற அனைத்து புத்தகத்தையும் வாசிக்க ஆரம்பிச்சேன்.. அப்போ அதிகமா வீட்டுக்கு வீடு கிடைக்கிற புத்தகம் 'ராணிமுத்து’தான் ஸார்.. அதுல லஷ்மியம்மா, சிவசங்கரி, அனுராதா ரமணன், வாஸந்தி அப்படின்னு ஒரே லேடீஸ் கூட்டமா இருந்தது..

அப்புறம் பக்கத்து வீட்டு ரஞ்சி மதினி வீட்லருந்துதான் ஒரு புத்தகம் கைக்கு கிடைச்சது.. பேரெல்லாம் மறந்து போச்சு ஸார்.. ஆனா எழுதினவரோட பேர் மட்டும் கரெக்ட்டா ஞாபகம் இருக்கு.. ‘சுஜாதா’தான்னு.. நான் நிஜமாவே 'சுஜாதா’ன்னா யாரோ ஒரு பொம்பளைன்னுதான் ரொம்ப நாளா நினைச்சிட்டிருந்தேன். ஆனா நீங்க ஒரு ஆம்பளைன்னு எங்கக்காதான் சொன்னாங்க.. 

அப்ப எனக்கு மீசை முளைச்சு, ‘லுக்’ விட அலைஞ்சிட்டிருந்த வயசு.. அப்பத்தான் ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார் இவுக ரெண்டு பேரையும் ‘சதக்..’ ‘சதக்..’ கொலைகளுக்காக விழுந்து, விழுந்து படிச்சிட்டிருந்தேன்.. அப்புறம்தான் உங்களோட கணேஷ், வசந்த், மதுமிதா மூணு பேரும் எனக்கு கனவுலேயே வர  ஆரம்பிச்சாங்க..

எப்பவும் ஒரு வாக்கியம் எப்படி இருக்கும் என்று நாங்கள் பள்ளிப் பருவத்திலிருந்து கட்டியிருந்த ஒரு மனக்கோட்டையைத் தகர்த்தெறிவது போல நீங்கள் எழுதியிருந்த, ‘கடைசியிலிருந்து முதலிடத்திற்கு’ என்பது பாணியிலான எழுத்துக்கள் என்னைக் கட்டிப் போட்டுச்சு ஸார்..!

அதென்ன ஸார் உங்களுடைய எழுத்து நடை..? கவர்ச்சியான எழுத்து ஸார்.. முதல் வரியிலிருந்து கடைசிவரை படித்தே தீர வேண்டும் என்பது போல் படிக்க வைத்தது உங்களது பாணி.

ஒரு 15 வயது பையனை இப்படியொரு மர்மம் நிறைந்த கதைகளைப் படிக்க வைப்பதில் வெற்றி பெற்ற உங்களது எழுத்துப் பாணியை என்னவென்று சொல்வது..?

யார்   வேண்டுமானாலும்   எழுதலாம்?  ஆனால்  யார்   அதைப்      படிப்பது..?
எழுத்து என்பது வாசகனுக்கும், ஆசிரியனுக்கும் இடையில் உள்ள உறவுப் பாலம்.. அதன் வழியேதான் அவன் மதிப்பிடப்படுகிறான் வாசகனால். அந்த வாசகன்தான் அவனுக்கு முதலாளி.. அப்படித்தான் நீங்கள் எங்களை நினைத்துக் கொண்டீர்கள்.. முதலாளிகளுக்கு என்ன புடிக்குமோ, எதை பிடிக்குமோ அதைக் கொடுப்போம். அவர்கள் நமக்கு என்றைக்குமே முதலாளிகளாகவே இருப்பார்கள் என்பதை சாகின்றவரையிலும் நீங்கள் கடைபிடித்தது உங்களது தனித்தன்மை.

சத்தியமாக எனக்கு ஆண்டாழ், ஆழ்வார் பாசுரங்கள் என்றால் என்ன என்றோ.. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்றால் என்ன என்றோ? ஸ்ரீரங்கம் எங்கேஇருக்கிறது என்றோ தெரியவே தெரியாது..

ஏறினால் மலைக்கோட்டை, இறங்கினால் மணிக்கூண்டு, இல்லாவிடில் NVGB, சோலைஹால் தியேட்டர் என்றிருந்த எனக்கு திருவில்லிப்புத்தூரில் ஆண்டாள் என்கின்ற சாமி இருக்கிறது. அந்தச் சாமிக்கு பெருமாள் மீது லவ்வு.. அந்த லவ்வுல பாடின பாட்டுதான் அந்த ஆண்டாள் பாசுரங்கள்ன்றது நிசமா தெரியாது ஸார்..

நீங்கதான் அதை முதல்ல என் கண்ல காட்டினீங்க.. கொலை நாவலாக இருந்தாலும் சரி.. செய்திக் கட்டுரையாக இருந்தாலும் சரி.. ஆண்டாளையும், ஆழ்வார்களையும் அடிக்கடி நீங்கள் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியவிதம்தான் என்னைப் போன்ற அநேக இளைஞர்கள் இவற்றைப் பற்றி அறிய முடிந்தது. ஸோ.. நீங்க எனக்கு வாத்தியார்தான்.. இந்த இடத்திலிருந்து ‘வாத்தியார்’னே உங்களைக் கூப்பிடுறேன்..

அப்பத்தான் வாத்தியாரே திடீர்ன்னு ஒரு சினிமா வந்துச்சு.. ‘விக்ரம்’னு பேரு.. அதுல ஒரு காட்சி.. கமலும், சாருஹாசனும் பேசிக்கிட்டிருப்பாங்க.. அப்போது T.S.ராகவேந்தர் ஒரு டிரேயில் காபி கொண்டு வருவார். “ஸார் காபி..” என்று சொல்வார். கமல் “யெஸ்..” என்று சொல்லிவிட்டு சாருஹாசனுடன் பேச்சைத் தொடர்வார். தொடர்ந்து ராகவேந்தர், “ஸார் சுகர்..” என்பார். கமல் பேச்சை நிறுத்திவிட்டு, “two spoons” என்பார். உடனே ராகவேந்தர் ஜீனியை, இரண்டு ஸ்பூன் எடுத்து காபியில் கலக்குவார். இந்தக் காட்சி என்ன காரணத்தாலோ என் மனதில் வருடக் கணக்காக பதிஞ்சிருச்சு வாத்தியாரே.. என்னன்னே தெரியல..

படம் பார்த்து முடிஞ்சப்புறம் வீட்டுக்குப் போயி இன்னிக்கோ, நாளைக்கோ என்ற நிலையில் இருந்த எனது அப்பாவிடம் இதைப் பற்றிச் சொன்னேன்.. அவர்தான் சொன்னார் “சர்க்கரை வியாதின்னு ஒரு வியாதி இருக்கு. அது இருக்கறவங்க சர்க்கரை அதிகம் சாப்பிடக்கூடாது. அதுனால காபில சர்க்கரையை கொஞ்சமா போட்டு சாப்பிடுவாங்க.. அதுக்காக கேட்டிருப்பாங்க..” என்று மூச்சு இழுத்துப் பிடித்துச் சொன்னவர், அப்புறம் கேட்டார்.. “இதையெல்லாமா சினிமால சொல்லித் தர்றாங்க..?” என்றார்.

உண்மைதான் வாத்தியாரே.. அம்பிகாவுடனான பாடல் காட்சிகள், படுக்கையறைக் காட்சிகள், டிம்பிள் கபாடியாவின் அழகு காட்சிகள்.. இனிமையான பாடல்கள், சூப்பரான திரைக்கதை.. இதையெல்லாம் தாண்டி அந்த ஒரு ஷாட் மட்டும் எதுக்கு என் மனசுக்குள்ள வந்து உக்காந்ததுன்னே தெரியல வாத்தியாரே..! ஆனா அதுக்கப்புறம்தான் எனக்கு உன்னை ரொம்பவே புடிச்சுப் போச்சு..!

விரட்டி விரட்டிப் படிச்சேன் உன்னோட எழுத்துக்களை.. ஒரு புத்தகத்தை கைல எடுத்தா கீழ வைக்க முடியல.. படிச்சு முடிச்சிட்டுத்தான் மறு வேலைன்னு சின்ன வயசுல பஞ்சு மிட்டாயை சாப்பிட்டே ஆகணும்னு வெறி வரும் பாரு.. அப்படியொரு உத்வேகத்தையும், உற்சாகத்தையும், வெறியையும் கொடுத்தது உன் எழுத்துதான் வாத்தியாரே.

கதை எங்கே ஆரம்பிச்சு எங்க போய்க்கிட்டிருந்தாலும் இடைல, இடைல தமிழ் இலக்கியங்களையும் கொஞ்சம், கொஞ்சம் எடுத்து விடுவ பாரு. அங்கனதான் இன்னிக்கு உனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட்ட தம்பிகள் எல்லாம் உன்னை நினைச்சுப் பாக்குறாங்க..

நம் மனதுக்குள் ஆழமாக நேசிக்கும் ஒருவரை நேரில் பார்க்கும்போது கிடைக்கும் பிரமிப்பு இருக்கிறதே, அது உன்னை நேரில் பார்த்தபோது எனக்கு மறக்காமல் கிடைத்தது வாத்தியாரே...

நான் ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் வேலை பார்த்துக்கிட்டிருக்கும்போது ஸ்பெஷல் இஷ்யூவுக்காக உன்கிட்ட மேட்டர் கேட்டிருந்திருக்காங்க.. நேர்ல வந்து வாங்கிக்கச் சொல்லிட்ட.. எங்க ஆபீஸ்ல என்னை போகச் சொன்னாங்க.. அப்போ நீ ஆழ்வார்பேட்டைல குடியிருந்த வாத்தியாரே.

ஒரு காலை நேரம்.. 11 மணி இருக்கும்.. வீட்டுக்கு வந்தேன்.. அங்கேதான் முதன் முதலா வாத்தியாரான உன்னை பார்த்தேன்.. என் தோற்றம் எலும்புருக்கி நோய் வந்தவனைப் போல் அப்போது எனக்கே தெரிந்தது. ஆனால் நீ என்ன நினைச்சன்னு எனக்குத் தெரியாது.. ஆனா பார்த்தவுடனே, “வாங்க..” என்றாய்.. அதுதான் வாத்தியாரே மரியாதை.. நான் நினைக்கலியே.. இப்படியொரு மரியாதை கொடுப்பன்னு.. திகைச்சுப் போய் நின்னேன்..

பள்ளி முடிந்து வாசலுக்கு வரும் குழந்தை தினம் தினம் பார்க்கும் அதே அம்மாவை பார்த்தவுடன் திடீர் குதூகுலத்துடன் ஓடி வருமே.. அப்படியொரு சந்தோஷம் எனக்கு.. மேற்கொண்டு ஒரு பேச்சும் இல்லாம நம்ம சந்திப்பு முடிஞ்சது அன்னிக்கு..

மறுநாள் திரும்பவும் டைப் பண்ணினதை எடிட் பண்ணி வாங்குறதுக்காக வந்தேன்.. நியூட்டனின் நான்காவது விதியை நானே கண்டுபிடிச்ச மாதிரி ஒரு சந்தோஷத்துல உன்கிட்ட சொன்னேன்.. “நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஸார்..” என்றேன்.. கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருந்த நீ நிமிர்ந்து பார்த்து சிரிச்ச.. உன் வீட்டுக்காரம்மாவும் சிரிச்சாங்க..

“இப்பத்தான் இந்த கீ போர்ட்ல டைப் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். ஸ்பீடா அடிக்கிறேன்.. தப்பு வரத்தான் செய்யும். திருத்தம் செய்ய எனக்கு நேரமில்ல. அதான் ப்ரூப் ரீடர் இருக்காங்கள்ல..” என்றாய்.. “அதுவும் நான்தான் ஸார்..” என்றேன்.. “அப்ப உனக்கு வேலை கொடுக்கணும்ல்ல..” என்று இருபொருள்பட சொன்ன வாத்தியாரே.. ஆனா நான்தான் டியூப் லைட்டாச்சே.. புரியல.. சிரித்துக் கொண்டேன்..

எடிட் செய்து கொடுத்துவிட்டு, “பக்கம் பத்தலைன்னா சுதாங்கனையே குறைச்சுக்கச் சொல்லுங்க.. நோ பிராப்ளம்..” என்று சிம்பிளாகச் சொன்னாய்.. முதல் சந்திப்பைவிட இரண்டாவது சந்திப்பு எனக்கு மிக ருசிகரமாக இருந்தது. கள்ளமில்லா சிரிப்புய்யா உமக்கு..

இந்த சந்திப்புக்கு பிறகு அந்த ஸ்பெஷல் எடிஷனை கொடுப்பதற்காக மூன்றாவது முறையாக வீட்டுக்கு வந்தேன். “சரவண..ன்..” என்று அழுத்தம் கொடுத்து கூப்பிட்டாய்.. மேற்கொண்டு என்ன பேசுவது என்பது தெரியாமல் நின்றேன்.. புத்தகத்தை வாங்கிக் கொண்டு “தேங்க்ஸ்..” என்று சொல்லி சிரித்தாய்.. எவ்வளவு நேரம் அப்படியே நிற்பது..? ‘சரி’ என்று தலையாட்டிவிட்டு அப்படியே திரும்பினேன்.. அப்பொழுது தெரியவில்லை.. மீண்டும் உன்னைச் சந்திக்க வருடங்களாகும் என்று..

காலத்தின் போக்கில் நான் அடிபட ஆரம்பித்த முதல் வருடம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஈகா தியேட்டரில் ‘STEP MOM’ படம் பார்க்க ஒரு ஈவினிங் ஷோவிற்கு வந்தேன்.. நீ, சுஜாதா அம்மாவோடு வந்திருந்தாய்.. அப்போதுதான் நீ நடந்து பார்த்து எனக்குள் லேசான அதிர்ச்சி வந்திருந்தது.. முதுகில் லேசான கூன் விழுந்ததைப் போல் குனிந்து நடந்து வந்திருந்தாய். உன் மீது முதல் வருத்தம் எனக்குள் ஏற்பட்டது அங்குதான்.

நான்காவது முறையாக சந்திப்பு அங்கே.. தமிழ் டைப்பிங் பற்றி எனது சந்தேகத்தை கேட்டேன்.. “INSCRIPT Method-லாம் ரொம்ப நாளைக்கு இருக்காது.. நீ பேசாம டைப்ரட்டிங் மெத்தேடுக்கு மாறிக்க.. இல்லேன்னே பின்னாடி ரொம்ப பிரச்சினையாகும்.” என்று அன்பான அறிவுரை கொடுத்த வாத்தியாரே.. கூடவே ‘நீ..’ ‘வா..’ என்று ஒருமையில் அழைத்தாயே.. அப்போதைக்கு படம் பார்த்த திருப்தி தியேட்டர் வாசலிலேயே எனக்குக் கிடைத்தது.

சில மாதங்கள் கழித்து திரைப்பட இயக்குநர் ஒருவர், பெண்டசாப்ட் நிறுவனத்திற்காக ஒரு கதையைக் கொடுக்க வேண்டி என்னிடம் டைப்பிங் செய்ய வந்தார். நானும் டைப்பிங் செய்து கொடுத்தேன். ஆனால் அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்ததால் பெண்டசாப்ட் நிறுவனத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.

அங்கே நமது ஐந்தாவது சந்திப்பு. எனது எழுத்துரு Fonts Directory-யில் Copy ஆகவேயில்லை.. கடும் போராட்டம். சலித்துப் போய் உனது அலுவலக ஊழியர் உன்னிடம் வந்து சொன்ன பிறகு எழுந்து வெளியே வந்தாய். அப்போதுதான் என்னைப் பார்த்து ஆச்சரியத்துடன், “சரவண..ன்...” என்று அழுத்திச் சொன்னாய்.. உன்னை நினைக்கும் போதெல்லாம் அந்த உச்சரிப்பு இன்னமும் என் காதில் ஒலிக்கிறதய்யா..!

“அதே inscript-ஆ.? இன்னும் மாத்தலையா நீ..?” என்று அக்கறையாக விசாரித்துவிட்டு “சரவணன் அடிச்சதுல நான் திருத்தம் பண்ண முடியாது.. வேண்ணா வேற font செலக்ட் பண்ணித்தான் அடிக்கணும்.. விட்ரு.. நான் பாத்துக்குறேன்..” என்று சொல்லி என்னைக் காப்பாத்தின வாத்தியாரே..! அடிச்சுக் கொடுத்த காசு கைல வருமா என்ற குழப்பத்துல இருந்தேன்.. நீயும் எனக்குத் தெரிஞ்சவன்றது தெரிஞ்சு, கீழ இறங்கும்போது லிப்ட்லேயே முழு பணமும் என் கைல கிடைச்சிருச்சு சாமி.. தேங்க்ஸ்..

அப்புறமும் விடாம என் வாழ்க்கைல நடந்த ‘பரமபத’ விளையாட்டுல மேலபோயி, கீழ இறங்கி ஓடிக்கிட்டிருக்கும்போது எங்காவது பங்ஷன்ல பார்க்கும்போதெல்லாம் கை குலுக்கி “சரவண..ன்..” அப்படீன்னு உச்சரிச்சுட்டுப் போவ பாரு..! அந்த ஒரு வார்த்தையே போதும்டா சாமின்னுதான் இருந்தேன்..

‘கலைஞர் அரங்கத்துல’ நடந்த ஒரு நூல் வெளியிட்டு விழால சந்திச்சேன்..

“இப்ப என்ன பண்றே?”ன்னு கேட்ட வாத்தியாரே.. “வீட்டுக்கு வீடு லூட்டி’ எழுதிக்கிட்டிருக்கேன் ஸார்”ன்னேன்.. “மூணு பேர்ல எழுதறாங்க..?” என்றாய். “ஆமா ஸார்"ன்னேன். என்னை முழுசா பார்த்து சிரிச்சிட்டு, “வயசானவங்கதான் எழுதறாங்கன்னு நினைச்சேன்”னு சொல்லி, இன்னொரு தடவையும் சிரிச்ச.. அப்புறம் கையை அழுத்திவிட்டுப் போன ஆளு, கொஞ்சம் நின்னு, “அந்த ஐயர் பேமிலி யார் எழுதுறா..?”ன்னு கேட்ட.. “நான்தான் ஸார்ன்னு..” சந்தோஷமா சொன்னேன்.. அதுக்கும் ஒரு சிரிப்பு சிரிச்ச பாரு.. அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு அப்பத் தெரியல வாத்தியாரே.. “கற்றதும் பெற்றதும் படிக்கிறியா...?”ன்னு கேட்டப்ப எனக்கு எதுக்கு கேக்குறன்னு தெரியாம போயிருச்சு.. “படிச்சிட்டுத்தான் ஸார் இருக்கேன்னேன்..” “குட்..”னு தட்டிக் கொடுத்திட்டு போயிட்ட..

ஒரே பிரமிப்பா இருந்துச்சு வாத்தியாரே.. ஏன்னா, சுத்தி நிக்குற அத்தனை பேரும் என்னையவே பார்க்கும்போது எம்புட்டு பெருமையா இருந்தது தெரியுமா? ஆனா நீ எதுக்கு, “கற்றதும் பெற்றதும் படிக்கிறியா?”ன்னு கேட்டன்றது மறுநாள் ஆபீஸ் போனப்புறம்தான் தெரிஞ்சது.. ‘கற்றதும் பெற்றதும்’ல ‘வீட்டுக்கு வீடு லூட்டி’யை பத்தி எழுதியிருக்குற.. அதை எங்க ஆபீஸ் நோட்டீஸ் போர்டுல ஒட்டி வைச்சிருந்தாங்க.. அதைப் பார்த்த பின்னாடிதான் தெரிஞ்சது “ஆஹா வாத்தியாரு.. குறிப்பாத்தான் சொல்லிருக்காருன்னு..”

கடைசியா போன வருஷம் சில முறைகள் உன்னை, புக்பாயிண்ட் புத்தகக் கடை, புத்தகக் கண்காட்சி, பிலிம் சேம்பர் தியேட்டர்ன்னு சந்திச்சாலும் வெறுமனே கை குலுக்கிட்டு போயிட்ட.. ரொம்ப வருத்தமா இருந்துச்சு.. ஒரு வேளை மறந்து போச்சோன்னு நினைச்சு நானே தேத்திக்கிட்டேன்..

இப்ப பிளாக்ல எழுதறதையாவது உன்கிட்ட சொல்லி ஆசிர்வாதம் வாங்கலாம்  நினைச்சப்போ, பிளாக் பத்தி நீ கொடுத்த பேட்டி ஒண்ணு என் கண்ணுல பட்டுச்சு.. “பிளாக் ரொம்ப போர்.. வளவளன்னு எழுதுறாங்க..” அப்படீன்னு உன் கமெண்ட்டை பார்த்தவுடனேயே எனக்குத் திக்குன்னு ஆயிருச்சு..

எங்க, என்னோட பதிவைப் படிச்சிட்டுத்தான் உனக்கு அப்படியொரு எண்ணம் வந்துச்சோன்னு எனக்குத் திகிலாயிருச்சு.. அப்படியே ஒதுங்கிட்டேன்..

இடையில நான் எடுத்த ‘புனிதப்போர்’ என்ற குறும்படத்தை உனக்கு போஸ்ட்ல அனுப்பி வைச்சேன். கிடைச்சுச்சா, இல்லையான்னு எனக்குத் தெரியல.. ஆனா அதுக்குள்ள உனக்கு உடல்நிலை சரியில்லைன்னு கேள்விப்பட்டு மனசு ரொம்ப வருத்தமாயிருச்சு.. ‘சிவாஜி’ பட பங்ஷன்ல உன்னை டிவில பார்த்தேன்.. அதான் கடைசியா பார்த்தது.!

பிளாக்ல உன்னோட வளர்ப்புப் பிள்ளை தேசிகன், “ஸாருக்கு உடல்நிலை சரியில்லாமப் போய் இப்ப வீட்டுக்கு வந்துட்டாரு”ன்னு ஒரு பிட் போட்டாரா..? அதைப் படிச்சிட்டு மனசே கேக்கலை.. “சரி போய்தான் பார்ப்போம்”னுட்டு ஒரு நாள் சாயந்தரம் 5 மணி வாக்குல உன் வீட்டுக்கு வந்தேன்.

ஆனா உன் வீட்ல நிறைய கெஸ்ட் இருந்தாங்க.. “ஸார்.. ரெஸ்ட்ல இருக்காருப்பா.. இப்ப வேணாமேன்னு..” ஒரு அம்மா வந்து சொன்னாங்க.. எனக்கும் உன்னை கஷ்டப்படுத்த இஷ்டமில்லை.. அப்படியே திரும்பிட்டேன் வாத்தியாரே..!

2008, பிப்ரவரி 27.  தி.நகர் ரெஸிடென்ஸி ஹோட்டல். இரவு 10 மணி. பிரமிட் சாய்மீராவின் சிம்ரனின் சின்னத் திரை சீரியலின் துவக்க விழா. முதல் சீரியலே உன்னுடைய கதைதான்.. வண்ணத்துப் பூச்சி என்ற உனது சிறுகதையைத்தான் உன் ஒப்புதலுடன் சீரியலுக்காக மாற்றியிருந்தார்கள். இந்த நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில்தான் நீ மிகவும் விரும்பிய ‘அரங்கநாதன் காலடியைச் சரணடைந்துவிட்டாய்’னு நியூஸ் எனக்குக் கிடைச்சது. என்ன பொருத்தம் பார்த்தியா வாத்தியாரே..? இந்தக் கொடுப்பினை வேற யாருக்குக் கிடைக்கும்..?

நியூஸ் கேள்விப்பட்டு ஒரு செகண்ட் ஆடிட்டேன் வாத்தியாரே.. அப்ப எனக்கு மட்டுமில்ல.. அங்க இருந்த அத்தனை பேருக்குமே நீ வயசானவன்ற உணர்வே முதல்ல வரலே..! அப்புறம்தான் உனக்கு 73 வயசாச்சே அப்படீன்ற யோசனையே வந்துச்சு.. இங்கதான் வாத்தியாரே நீ ஜெயிச்சிட்டே.

நீ சாகின்றவரையிலும் நீயொரு வயதானவன் என்ற எண்ணம்கூட வராத அளவுக்கு, நீ எங்களை வளர்த்து வைச்சிருந்திருக்க..! இதுதான் உன் எழுத்தினால் உனக்குக் கிடைத்த மிகப் பெரிய விருது வாத்தியாரே.

கழுத்தில் ஒரேயொரு மாலையோடு கண்ணாடிப் பெட்டிக்குள் சலனமின்றி படுத்துறங்கிக் கொண்டிருந்த, நீ இறந்து போய்விட்டதாக அனைவருமே சொன்னார்கள்.

வாழ்நாளெல்லாம் தனது பெயரை உனக்களித்து ஓருடலாக வாழ்ந்த சுஜாதாம்மா, அவ்வப்போது வருகின்ற உறவினர்களுடன் கை குலுக்கி குலுங்கிய போதுதான் அது மரணம் நிகழ்ந்த வீடு என்பதாகத் தெரிந்தது.

நீ விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக் கொண்ட சினிமாத் துறையினரும், உன்னுடைய தாய் வீடான எழுத்துத் துறையினரும் திரண்டு வந்திருந்தார்கள்.

கலைஞர், வைரமுத்து, கனிமொழியோடு வந்து அஞ்சலி செலுத்தினார். அடுத்து உமது செல்ல மருமகன் கமல்ஹாசன் வந்தார். அஞ்சலி செலுத்திய கையோடு திகைத்துப் போய் நின்றார். அநேகமாக உன்னைப் பார்க்க வந்து பேச முடியாமல் போனது அவருக்கு அதுதான் முதல் முறை என்பதால் கொஞ்சம்  திணறித்தான் போனார்.

‘இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்!’ என்ற கவியரசர் கண்ணதாசனின் வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிக்கும் செயலில் நீ கடைசிக் காலத்தில் ஈடுபட்டாய் என்பதைத்தான் கமலஹாசன் தனது அஞ்சலியில் குறிப்பிட்டார்.

இயக்குநர் வஸந்த் நீ மருத்துவனையில் இருந்த நாளிலிருந்து உன் குடும்பத்திற்கு தேவையான உதவிகளைச் செய்து வந்திருக்கிறார்.. பிரபலங்கள் அனைவரும் அவரிடம்தான் உன் கடைசிக் கால நினைவுகளை கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

உனது செல்லப் பிள்ளையாக இருந்த எங்களது வலையுலக நண்பர் தேசிகன்.. பாவம்.. அழுது, அழுது பேசக்கூட முடியாத நிலையில் இருந்தார்.

உன் பிள்ளைகளில் இரண்டாவது பையன் ரங்கபிரசாத்துதான் தாங்க முடியாமல் அரற்றிக் கொண்டிருந்தார். ‘எப்போதும் கடைசி பிள்ளைதான் பெற்றோரோடு ஒட்டுதலாக இருக்கும்’ என்று நீதானே எழுதியிருந்தாய்..!

நடக்க முடியாத நிலையில் இருந்த உன்னுடைய தம்பி ராஜகோபாலை ‘ஒருவாய் பாலாவாது குடியுங்கள்’ என்று அவரது குடும்பத்தினர் வற்புறுத்திக் கொண்டிருந்தனர். அவ்வளவு சோர்ந்து போயிருந்தார்.

நீ வளர்த்து ஆளாக்கிய கவிஞர் மனுஷ்யபுத்திரன், இடிந்து போய்விட்ட நிலையில் காணப்பட்டார். உனது நாடகத் துறை நண்பர், பூர்ணம் விசுவநாதன் நடக்க முடியாத நிலையிலும் வந்து அஞ்சலி செலுத்தினார்.

என்னுடைய இன்னொரு ‘பால பாட’ வாத்தியார் பாலகுமாரன், தனது மனைவியுடன் வந்திருந்து கடைசி வரையிலும் இருந்தார் வாத்தியாரே..!

ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் வாத்தியாரே. அனந்து ஸார் இறந்தப்ப, அவர்வீட்டில் உனக்கு ஒரு அனுபவம் கிடைத்ததே.. ஞாபகம் இருக்கிறதா..? அதேதான் உன் வீட்லேயும் அன்னிக்கு நடந்தது.

மதன், சாருநிவேதிதா, ராவ்.. என்று உன்னுடைய தோஸ்துகளுடன் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருக்க.. பாதிக் கூட்டம் அவர்களையே மொய்த்தது. ‘தொல்லையடா சாமி’ என்று கமல் உடனேயே கிளம்பிச் சென்றுவிட்டார்.

உன் மனைவிக்குப் பிறகு சாருஹாசனின் மனைவிதான் நான் பார்த்து பெரிதும்  அழுது கலவரப்பட்டார்.

மணிரத்னம், “நீயும் கஷ்டப்படாம, அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்தாம நீ சீக்கிரமா மேல போனது சந்தோஷம்” என்பது போல் சிரித்தபடியே உனக்கு அஞ்சலி செலுத்தினார். சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்தது எனக்குத் தெரிந்து வாஜ்பாய்க்கு பிறகு இவர்தான் வாத்தியாரே.. ஆனாலும் மரணத்தை அவரும் அருகில் பார்த்தவர்தான். டேக் இட் ஈஸி பாலிஸிக்காரர்தானே..!

இயக்குநர் பாலுமகேந்திரா உன்னைப் பார்த்ததுமே கதறி அழுதாரே பார்க்கணும்.. நிஜமாகவே அவர் உணர்ச்சிமயமானவர் என்பது அன்றைக்குத்தான் எனக்குத் தெரிந்தது.

சிவகுமார் மகன் கார்த்தியுடன் வந்திருந்தார். தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், இயக்குநர் சித்ரா லஷ்மணன், ராஜீவ்மேனன், கவிஞர் மு.மேத்தா, அஜயன்பாலா என்று எனக்குத் தெரிந்தவர்கள் வந்திருந்தார்கள்.

இந்த நேரத்திலும் உன் வீட்டில் ஒரு காமெடி நடந்தது வாத்தியாரே.. ‘கஜினி’ படத்தின் இயக்குநர் முருகதாஸ் உனக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். வந்த வேகத்தில் அவரைச் சூழ்ந்து கொண்ட சில மப்டி போலீஸார், அவரை வலுக்கட்டாயமாக தங்களது காருக்குள் திணிக்கப் போக.. மனிதர்  பெரும்பாடுபட்டு கூச்சல் போட ஆரம்பித்தார். ஆனாலும் கார் கிளம்பிச்சென்றுவிட்டது.

பரபரப்பு கூடி.. வந்தவர்கள் சேலத்திலிருந்து வந்திருந்த போலீஸார் என்பது தெரிந்து டென்ஷனானார்கள் லோக்கல் போலீஸார்.. அதே நேரம் வாசலில் நின்றிருந்த திரைப்படத் துறையின் இரண்டு ‘கிரகங்கள்’, கொதித்துப் போய் போன்களை சுழற்ற.. சென்னையைக் கடப்பதற்குள் முருகதாஸ் விடுவிக்கப்பட்டு பின்னர், மீண்டும் கடைசி நேரத்தில் உனக்கு அஞ்சலி செலுத்த வந்தார். செத்தும் ஒருத்தருக்கு உதவி பண்ணியிருக்கிற வாத்தியாரே.!

திருமாவளவன் திடீரென்று வந்து பரபரப்பைக் கூட்டினார் வாத்தியாரே. ஒண்ணும் புரியல.. அதன் பின்னர் வைகோவும், கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் வந்து சென்றார்கள்.

தன் மனைவியுடன் வந்திருந்த இயக்குநர் ஷங்கர், உன் மகன்களுடன் நீண்ட நேரம் பேசி ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘நக்கீரன்’ கோபால் வந்திருந்து நீண்ட நேரம் இருந்து, “இவரை மாதிரி யார் ஸார் இனிமே இருக்கா..? அவ்வளவுதான் போச்சு. போச்சு..” என்று பாலகுமாரனிடம் கண் கலங்கிச் சொல்லிவிட்டுப் போனார்.

ஸ்டெர்லிங் சிவசங்கரன், பெண்டசாப்ட், ப.சிதம்பரம் என்று பெயர் போட்ட மலர் வளையங்களை உன் கண்ணாடிப் பேழையின் அடியில் பார்த்தேன்.

‘ஆனந்த விகடன்’ எஸ்.பாலசுப்பிரமணியன், நீண்ட நேரம் உன் சடலத்தின் அருகே நின்று உன் மனைவிக்கு ஆறுதல் சொல்லி விட்டுப் போனார்.

பார்த்திபன் ஒரேயொரு ரோஜாப்பூவை வைத்து வணங்கினார். அதோடு கடைசிவரையிலும் உன்னோடு இருந்தார் வாத்தியாரே..!

ரஜினி மின்னல் வேகத்தில் வந்தார்.. பார்த்தார். கை கூப்பினார்.. வணங்கினார்.. ஆறுதல் சொன்னார்.. பின் அதே வேகத்தில் வெளியேறினார்.. டிவிக்காரர்கள் விழுந்தடித்துக் கொண்டு அவர் பின்னால் ஓடி கிட்டத்தட்ட சட்டையைப் பிடிக்காத குறையாக நிறுத்திதான் பேட்டியெடுத்தார்கள்.

ஆனாலும் பார் வாத்தியாரே.. எந்தச் சேனலும் உன் சாவைக் கண்டுக்கவே இல்லை.. ஏதோ போனா போகுதேன்னு 1 நிமிஷம் ஓட்டுனாங்க.. என்னன்னே தெரியலே..

பேட்டி எடுக்கும்போதும் நிறைய காமெடிகள் நடந்தது.. மணிரத்னத்திடம் பேட்டி எடுக்க அவரைச் சுற்றி சுற்றி வந்தார்கள். ம்ஹூம்.. மனைவியின் பக்கத்தில்போய் லேசாக கண் ஜாடைகாட்டிவிட்டு எஸ்கேப்பாகிவிட்டார் மனிதர்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் பேட்டி எடுத்த டிவிக்காரர்கள், அதன் பின்பு வந்த பழம் பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசனை நிற்க வைத்துவிட்டு, பின்பு ஏனோ கண்டுகொள்ளாமல்.. கிட்டத்தட்ட அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்கள். மனிதர் இனி எந்த டிவிக்கும் பேட்டி கொடுக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

கடைசி நேரத்தில்தான் பாரதிராஜா வந்தார். கவிஞர் தாமரை தன் கணவர், பையனோடு வந்து அஞ்சலி செலுத்தினார். எழுத்தாளர் இந்திரன், திருப்பூர் கிருஷ்ணன், வெங்கடேஷ் சக்கவர்த்தி, கவிஞர் ரவிசுப்பிரமணியம் ஆகியோரை பார்த்தேன். நடிகர் விவேக் வந்திருந்து, காத்திருந்து உன்னைப் பார்த்துவிட்டுப் போனார்.

ஒரு சின்னப் பிரச்சினை காரணமாக மூன்றாண்டுகளாக பேசிக் கொள்ளாமலேயே இருந்த இயக்குநர் வசந்தும், பார்த்திபனும் இன்றைக்குத்தான் உன்னை வைத்து, உனக்காகவே பேசிக் கொண்டார்கள். இந்தமட்டுக்கும் உனக்கு இன்னொரு தேங்க்ஸ் வாத்தியாரே..

ஏதோ சடங்கு செய்யணும்னு சொல்லி மேல் மாடில இருந்த உன் வீட்டுக்கு உன்னைத் தூக்கிட்டுப் போனாங்க வாத்தியாரே.. இங்க கீழ அத்தனை பேரும் உனக்காகக் காத்திட்டிருக்கும்போது, திருப்பூர் கிருஷ்ணன் உன்னைப் பத்தின பல சுவாரசியமான விஷயத்தையெல்லாம் பக்கத்துல இருந்தவங்ககிட்ட சொல்லிக்கிட்டிருந்தார்.. அதைக் கேட்கவே ஒரு கூட்டம் கூடிருச்சு வாத்தியாரே.

ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு புரோகிதர் கைல சட்டியோட இறங்கி வரும்போது, "குரு பிரம்மா.. குரு விஷ்ணு.. குரு தேவா.. மஹேஸ்வரஹா.. குரு ஷாட்சாத.. பரப் பிரம்மா.. தஷ்மைஸ்ரீ.. குருவே நமஹ" அப்படின்னு சத்தமா சொல்ல.. அதை அங்கேயிருந்த உன் குடும்பத்துச் சொந்தங்களும் கூடவே சொன்னாங்க.

நானும் சுத்திமுத்தி பார்த்தேன் வாத்தியாரே.. எனக்கு ஒண்ணும் புரியலே.. நம்ம பாலகுரு பாலகுமாரனும், மதன் ஸாரும் சேர்ந்தே இதனை சொன்னப்ப எனக்குத்தான் சட்டுன்னு ஒரு குழப்பம்.

ஏன்னா இந்தப் பாட்ட நான் 'வேதம்புதிது' படத்துல வர்ற 'கண்ணுக்குள் நூறு நிலவா'ன்ற பாட்டுக்கு நடுவுல வர்ற மந்திரமாத்தான் கேட்டிருக்கேன்.. இங்க என்னடான்னா சாவு காரியத்துல பாடுறாங்களேன்னு ஒரே டவுட்டா போச்சு.

நமக்கு என்னிக்குமே டவுட்டை கிளியர் பண்றதே நீதான வாத்தியாரே..? இப்ப நீயும் போய்ச் சேர்ந்துட்ட.. உன் சாவுலேயே இப்படி பாடினா நான் யார்கிட்ட போய் டவுட்டை கேக்குறது வாத்தியாரே..?

பின்னாடி நாலைஞ்சு பேர்கிட்ட கேட்டப்ப எல்லாரும் சொன்னாங்க.. "இது பெரிய படிப்பாளிங்க.. குரு ஸ்தானத்துல இருந்தவங்க இறந்துட்டாங்கன்னா அவங்க ஈமக்கிரியைல மட்டும் இதைப் பாடுவாங்க.. இது குருவுக்கு மரியாதை செலுத்துற ஒரு பாட்டு"ன்னு சொன்னாங்க..

இதுநாள்வரைக்கும் "இதுல ஏதோ ஒரு காதல் சூத்திரம் இருக்கு. அதான் அமலாவை நினைச்சு பாரதிராஜா பாட வைச்சிருக்காருன்னு"தான் இத்தனை நாளா நினைச்சிட்டிருந்தேன். ஆனா, இப்பத்தான் உண்மை தெரிஞ்சது..

உன் சாவுலகூட ஒரு விஷயத்தை எனக்குச் சொல்லிக் கொடுத்திட்ட பாரு.. நீ நிஜமாவே எனக்கு குருதான் வாத்தியாரே.. அதனால நானும் ஒரு தடவை எனக்காக அதை இங்க சொல்லிக்கிறேன்.. என்னோட இந்த குருதட்சணையையும் தயவு செஞ்சு ஏத்துக்க குருவே..!

"குரு பிரம்மா.. குரு விஷ்ணு.. குரு தேவா.. மஹேஸ்வரஹா.. குரு ஷாட்சாத.. பரப் பிரம்மா.. தஷ்மைஸ்ரீ.. குருவே நமஹ"

உன்னால் வளர்க்கப்பட்ட பிள்ளைகளான பத்திரிகையாளர்கள் பெருமளவில் கூடியிருந்து வழியனுப்ப.. உனது ஊர்வலம் துவங்கியது வாத்தியாரே.. இந்த நேரத்தில் உன் குடும்பத்தினரோடு, சேர்ந்து பெரும் குரலெடுத்து கதறி அழுதார்  உன் விகடன் தோஸ்த்து மதன்.

கனிமொழி காலையில் வந்ததிலிருந்து உன்னைத் தூக்குகின்றவரையிலும் அங்கேயேதான் இருந்தார். அவர் இருந்ததாலோ என்னவோ உனக்கு கொஞ்சம் ராஜமரியாதையும் கிடைத்தது வாத்தியாரே.. என்ன போலீஸ் மரியாதை அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லையே தவிர.. உன்னைத் தூக்கிக் கொண்டு  சுடுகாட்டுக்குச் சென்றபோது, உனக்கு முன்னாலும், பின்னாலும் போலீஸ் கார் அணிவகுப்புடன் வழியில் ஒரு தடங்கலும் இல்லாமல் இடுகாட்டிற்கு சென்றடைந்தாய்.. இதற்காக கனிமொழிக்கு உன் சார்பாக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சுடுகாட்டிற்கு பாரதியைத் தூக்கிச் சென்றபோது எண்ணி 8 பேர் வந்தார்கள் என்று கணக்குப் போட்டுச் சொன்னார்கள். உனக்கு எத்தனை பேர் என்று எண்ணிப் பார்த்தேன்.. சுமாராக 50 பேராவது இருக்கும்.. இதுவரைக்கும் சந்தோஷம்தான் வாத்தியாரே..!

சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் நடராஜனும், எஸ்.வி.சேகரும் அங்கே திடீரென்று பிரசன்னமானார்கள்.

இடுகாட்டில் மேடையில் உன்னைக் கிடத்தி உனது குடும்ப ஆச்சாரமான சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு, “இப்ப யார் வேண்ணாலும் வந்து வாய்க்கரிசி போடலாம்”னு சொன்னதை, நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலே வாத்தியாரே..!

இங்கேயும் உன்னோட தோஸ்த்து பாலகுமாரன், ‘வாய்க்கரிசி போடுவதற்கும் ஒரு முறை இருக்கிறது’ என்று செய்து காட்டினார். அவரும் அவரது மனைவியும் அவ்வாறு செய்து, பின் வந்தவர்கள் அனைவரும் அதே போல் செய்தார்கள்.

என்னோட அப்பா, அம்மா, அக்கா.. இவுக மூணு பேரைத் தவிர நாலாவதா உனக்குத்தான் வாத்தியாரே வாய்க்கரிசி போட்டிருக்கேன்.. உனக்கு இப்படியொரு பதில் மரியாதை செய்ய வாய்ப்புக் கிடைக்கும்னு நான் கனவுலகூட நினைக்கலே வாத்தியாரே.. அந்த அரங்கனுக்கும், என் அப்பன் முருகனுக்கும் ஒரு நன்றி சொல்லிக்கிறேன்..

உன்னைச் சுத்தி வரும்போதுதான் கவனிச்சேன்.. எத்தனையோ பேருக்கு அறிவூட்டிய, தமிழுக்குப் பெருமை சேர்த்த அந்தக் கைல, குளுக்கோஸ் ஏத்த பல இடத்துல ஊசியால குத்தி, குத்தி... இடது கையோட மணிக்கட்டுப் பகுதி முழுக்க வீங்கிப் போய் ரணகளமா இருந்ததைப் பார்த்து, அந்த ஒரு செகண்ட்லதான் வாத்தியாரே, என் கண்ணுல தண்ணி பொங்கிருச்சு..!

என்ன இருந்தாலும் உனக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது வாத்தியாரே.. எவ்வளவு முறை வாயார வாழ்த்திருப்ப அந்த அரங்கநாதனை..? எத்தனை தடவை புகழ்ந்து எழுதியிருப்ப அவனைப் பத்தி..? இந்தத் தள்ளாத வயசுலேயும் ஸ்ரீரங்கம் போய் பார்த்துட்டு வந்தியே..? அரங்கநாதன், ஏன் உனக்கு இப்படியொரு இம்சையைக் கொடுத்தான்னு தெரியல சாமி..

இந்த மட்டுக்கும் நீ ‘கிளம்பினது’கூட சரிதான்னு எனக்குத் தோணுச்சு.. தப்பா நினைச்சுக்காத வாத்தியாரே..!

உன் நெஞ்சில் எருவாட்டி வைத்து அதன் மேல் கற்பூரத்தை கிடத்தி, நெய் ஊற்றி உனது வாரிசு வைத்த நெருப்போடு உன்னைத் தூக்கித் தகன மேடைக்கு கொண்டு வந்து கிடத்தி.. உனது பிதாவான ‘கோவிந்தா.. கோவிந்தா’ என்ற கூப்பாடோடு ‘சாவிற்கும் நவீனம்’ என்று ஒரு காலத்தில் எழுதினாயே, அதே தகன இயந்திரம், இரு புறமும் தகதகவென எரிந்து கொண்டிருந்த கிட்டங்கிக்குள் உன்னைத் தனக்குள் அழைத்துக் கொண்டது வாத்தியாரே..!

வந்த கடமை முடிந்து நீ கிளம்பிவிட்டாய்.. கொண்டு வந்த கடமை முடிந்தது என்று நாங்களும் கனத்த மனதோடு அங்கிருந்து கிளம்பினோம்..

ஆனால் ஒன்று உண்மை வாத்தியாரே.. ‘நீ யாரை விரும்புறியோ.. யாரைப் பார்க்கணும்னு நினைக்கிறியோ.. யார் மாதிரி வரணும்னு நினைக்கிறியோ.. அதை நினைச்சுக்கிட்டே இரு.. நிச்சயம் வந்தே தீருவ..! பார்த்தே தீருவ..! அடைஞ்சே தீருவ..’ன்னு யாரோ ஒருத்தர் சொன்னதா, எதுலயோ படிச்சேன் வாத்தியாரே.. அதை அன்னிக்கு நிசமாவே உணர்ந்தேன் வாத்தியாரே.

உன்னை மாதிரி தமிழ்ல யார் எழுதியிருக்கா வாத்தியாரே..? நீயே சொல்லு..

ஆழ்வார் பாசுரத்தையும் எழுதுன..! அண்டவெளியையும் எழுதுன..! ஆண்டாள் பத்தியும் எழுதுன..! அலெக்ஸாண்டரையும் எழுதுன..! காஸ்மிக் கதிர் பத்தியும் எழுதுன..! கேலக்ஸியை பத்தியும் எழுதின..! குவாண்ட்டம் தியரியையும் எழுதுன..! நாலாயிர திவ்விய பிரபந்தத்தை பத்தியும் எழுதுன..! திருக்குறளுக்கு உரை எழுதுன..! புறநானூற்றுக்கு உரை எழுதுன.! கொக்கோகத்தையும் அறிமுகப்படுத்துன..! குற்றாலக் குறவஞ்சியையும் எடுத்துச் சொன்ன..! கம்ப்யூட்டர் பத்தி எளிய தமிழ்ல அறிமுகம் செஞ்ச..! ஹைக்கூ கவிதையை அறிமுகப்படுத்துன..! லேட்டஸ்ட்டா ‘சொடுக்கு’ன்ற குறுக்கெழுத்துப் போட்டியை பத்திக்கூட எழுதுன..! சினிமா எழுதுன..! அதுல வேகாத சினிமா எது? வெந்த சினிமா எதுன்னு எங்களுக்குப் புரிய வைச்ச..? நீ எதைப் பத்திதான் எழுதல வாத்தியாரே.. நீ தொட்ட சப்ஜெக்ட்களையெல்லாம் தமிழ் எழுத்துலகத்துல வேற யாரு முழுசா தொட்டிருக்கா சொல்லு..?

உன்னோட ‘ஏன் எதற்கு எப்படி?’ ‘தலைமைச் செயலகம்’, கம்ப்யூட்டர் பத்தின புத்தகங்கள்.. இவை எல்லாமே தமிழ் பேசக் கூடிய அத்தனை பேர் வீட்லேயும் வருங்காலத்துல நிச்சயமா இருக்கும் வாத்தியாரே..!

எந்தக் கொம்பனோ, வம்பனோ.. உன்னைப் புறக்கணிச்சுட்டு அவனோட பேரப் புள்ளைகளுக்கு தமிழ்ல எந்த பொது அறிவையும் சொல்லிக் கொடுத்திர முடியாது வாத்தியாரே..!

நீ தமிழுக்கு தவிர்க்க முடியாத தரு..! நவீன தமிழின் முதல் அடையாளமே நீதான்..! நீதான் இன்றைய இளைஞர்கள் அத்தனை பேருக்கும் ஆசானா, தூண்டுகோலா இருந்திருக்குற..!

இன்றைய இளைஞர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு என்ன பண்ணணுமோ, எப்படிச் செய்யணுமோ.. அதைச் செய்து உனக்கு தங்களோட நன்றிக் கடனைச் செலுத்திட்டாங்க வாத்தியாரே..!

அதுதான் இந்த வலையுலகத்திலேயே கணக்கு, வழக்கில்லாமல் பலரும் உனக்கு நினைவஞ்சலி செலுத்திருக்காங்க.. எல்லாரும் பலவிதமா சொல்லியிருந்தாலும், அத்தனை பேரின் அஞ்சலியிலும் ஒரே ஒரு வாக்கியம் அட்சரப் பிசகாமல் ஒண்ணுபோல் வந்திருக்கு வாத்தியாரே..

அது, “எனக்குள் படிக்கின்ற ஆர்வத்தை ஏற்படுத்தி, பின் அதனை அதிகப்படுத்தி, புத்தகங்களின் மீதான தாக்கத்தையும் ஏற்படுத்தி, பின் அதுபோல எழுதத் தூண்டியது சுஜாதாவின் எழுத்துக்கள்” என்பதுதான்..

இதுதான் வாத்தியாரே நீ..!

மேலுலகம் உன்னால் இப்போதும், எப்போதும் பெருமைப்படட்டும்..!

போயிட்டு வா வாத்தியாரே..!

நன்றி : திரு.அண்ணாகண்ணன் (படம் உதவி)

135 comments:

இரண்டாம் சொக்கன்...! said...

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்...

சுஜாதாவை ரொம்பவே அன்னியோன்யமாக உணரவைத்த பதிவு.....

ஏதோ உங்களுடன் கூடவே இருந்ததை போல உணரவைத்து விட்டீர்கள்...

வருத்தங்களையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறேன்....

Arun Kumar said...

i m unable to control my tears :(
எந்த வித பொது அறிவும் இல்லாமல் திரிந்து கொண்டு இருந்த நான் இன்று மனநிறைவோடு வாழ்க்கை வாழ சுஜாதவே காரணம். ஏதோ வேண்டா வெறுப்பாக எந்த வித இலக்கும் இல்லாமல் பொறியியல் தொடங்கிய நான் எனது இரணடாம் வருட கல்லூரி வாழ்க்கையில் சுஜ்தாவை தரிசித்தேன்.

எனது கல்லூரியில் அவர் ஆற்றிய ஒரு மணி நேர உரை என் வாழ்வை தூக்கி பிரட்டி போட்டது. எது படிக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று அவர் சொல்லிய உரை என்னுள் பல மாற்றங்களை உருவாக்கியது.

ஜாவாவிற்க்கு spelling என்னவென்று தெரியாத நான் அவர் சொன்ன ஜாவாவின் பின் தொடர்ந்தேன். அவர் காட்டிய வழி இன்று வரை என் வாழ்க்கைக்கு விளக்கு ஏற்ற்குகிறது.

சென்று வா சுஜாதா நீ ஒரு சகாப்தம் .
எனக்கு உன் தமிழ் இலக்கியிங்கள் பரிச்சியம் இல்லை. நான் படித்ததும் இல்லை..உனக்காக நீ எழுதிவாய் என்ற ஒரே காரணத்துக்காக நான் வாங்கிய விகடன் online subscription
இனி தேவை அற்று போக போகிறது.

நீ இன்னமும் சாகவில்லையா என்று கேட்ட ஞானி போன்ற இரண்டு கால் உள்ள மறை கழண்ட ஜந்துகளயும் நீ படு இய்ல்பாக மன்னித்தாய் . உன் எழுத்துகளை உன் கடைசி காலத்தில் புறக்கணித்த விகடனை இனி என் வாழ்நாள் முடியும் வரை படிக்க மாட்டேன். உன்னால் வாழ்ந்த அந்த இதழ் உன் கடைசி காலத்தில் சேர்வோர் சரியில்லாம உன் மனத்தை துண்புறித்தியை நான் அறிவேன். அம்பலத்தில் நீ சொன்னது தான் அது..

போய் வா சுஜாதா.. மீண்டும் தமிழ் மண்ணில் பிறந்து மீண்டும் பல சாதனைகள் புறிவாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இது நீ உறங்கும் நேரம். நீ விழித்து வேறு ஒரு பெயரில் வருவாய் என்ற நம்பிக்கையுடன்

சின்னப் பையன் said...

மீண்டும் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள்....:-((((

Anonymous said...

Very touching sir.My condolance to sujatha's family. all your words are very true and touched my heart.
MAHESH

கோவி.கண்ணன் said...

உண்மை தமிழன் ஐயா,

அவர் சிரித்துக் கொண்டு இருக்கும் படம் உங்களுக்கு கிடைக்கவில்லையா ?

படத்தைப் பார்த்தால் சுஜாதா மரணித்துவிட்டது போல் தெரிகிறதே. கண்ணதாசன், சுஜாதா போன்றோருக்கு மரணமில்லை !!!

முடிந்தால் படத்தை மாற்றுங்கள். அந்த படங்களை ஏற்கனவே அண்ணான் கண்ணன் அவர்கள் போட்டு இருந்தார்கள். அங்கு பார்த்ததே போதும்

Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன் said...

தமிழகத்தில் மட்டுமல்ல, புலம் பெயர்ந்தவர்களுக்கும் அவர் எழுத்துலகில் பல்துறை வித்தகர்.

Anonymous said...

who is this bull shit govi kannan

his recent comments in ur blog is

கோவி.கண்ணன் said...

உண்மை தமிழன் ஐயா,

அவர் சிரித்துக் கொண்டு இருக்கும் படம் உங்களுக்கு கிடைக்கவில்லையா ?

படத்தைப் பார்த்தால் சுஜாதா மரணித்துவிட்டது போல் தெரிகிறதே. கண்ணதாசன், சுஜாதா போன்றோருக்கு மரணமில்லை !!!

முடிந்தால் படத்தை மாற்றுங்கள். அந்த படங்களை ஏற்கனவே அண்ணான் கண்ணன் அவர்கள் போட்


his last comments in other blog is
கோவி.கண்ணன் said...

இங்கே சதாம் உசேன் தான் நினைவுக்கு வருகிறார். சதாம் உசேன் மரணம் விழாவாகவும் துக்கமாகவும் கொண்டாடப்பட்டது, ஒளிபரப்பவும் பட்டது. எந்த ஒரு மனிதனாலும் பாதிப்படைந்தவர்களும், அவமானப்படுத்தப்பட்டவர்களும் அவர்களுக்காக போராடுபவர்களும் கொண்டாடவே செய்வார்கள்.

டிபிசிடிக்கும் சுஜாதாவுக்கும் நேரிடையான பகைகிடையாது. வசந்தம் ரவி புரிந்து கொள்வாரா ?


how kind of worst cruel guys this kannan?

i dont wanted to disturb this thread but at the same time i wanted to keep away the guys like kannan double voice and spearing venom against sujatha..

வல்லிசிம்ஹன் said...

உண்மைத்தமிழன் இப்போழுதுதான் அஞ்சலிக் கூட்டட்திலிருந்து வந்தேன்.
மீண்டும் சாரோட பேசுகிற உணர்வு உங்கள் பதிவிலிருந்து கிடைத்தது. மிக்க அருமையான பதிவு. நீங்கள் மனதளவில் அவரை மிக நெருங்கி விட்டீர்கள். அஞ்சலியில் நீங்களும் வந்தீர்களோ தெரியாது.

இதை நான் மற்றுமொரு இதய அஞ்சலியாகவே பார்க்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

வாயடைத்துப் போய் இருக்கேன்! என்னமோ நானே சுஜாதாவோட அவ்வளவு பழகின ஒரு உணர்வு.

Ayyanar Viswanath said...

மிக நெகிழ்ச்சியான பதிவு உண்மைத் தமிழன்...
மீண்டுமொருமுறை அஞ்சலிகள்..

செல்வம் said...

//நியூஸ் கேள்விப்பட்ட அத்தனை பேருக்குமே நீ வயசானவன்ற உணர்வே முதல்ல வரலே.. அப்புறம்தான் 73 வயசாச்சே அப்படீன்ற யோசனையே வந்துச்சு.. இங்கதான் வாத்தியாரே நீ ஜெயிச்சிட்டே.

நீ வயதானவன் என்ற எண்ணம்கூட வராமல் தடுக்கும் அளவுக்கு, நீ எங்களை வளர்த்து வைச்சிருந்திருக்க.. இதுதான் உன் எழுத்தினால் உனக்குக் கிடைத்த மிகப் பெரிய விருது வாத்தியாரே.//

முற்றிலும் உண்மை...உண்மைத்தமிழன்.

நன்றி....

வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

Anonymous said...

Highly touching. My respects to our dear "Sujatha Sir".

// உன் எழுத்துகளை உன் கடைசி காலத்தில் புறக்கணித்த விகடனை
இனி என் வாழ்நாள் முடியும் வரை படிக்க மாட்டேன். உன்னால் வாழ்ந்த அந்த இதழ் உன் கடைசி காலத்தில் சேர்வோர் சரியில்லாம உன் மனத்தை துண்புறித்தியை நான் அறிவேன்.//

Arun kumar: can't believe Vikatan ignored Sujatha. as a matter of fact the ONLY reason I used to read was for him. Do you have a story to share with us in this regards?

துளசி கோபால் said...

படிக்கும்போதே கண்ணுலே குளம் கட்டிக்கிச்சுப்பா.

வாத்தியாரைப்பத்தி ரொம்ப நல்லாச் சொன்னீங்க. மனசுக்கு அருகில் வந்து நின்னாப்லே இருக்கு.

யார் என்ன சொன்னாலும், அவரோட எழுத்துக்கள் ஒரு தாக்கம் ஏற்படுத்தி இருக்குன்றதை மறுக்க முடியாதுல்லே?

கோவி.கண்ணன் said...

//how kind of worst cruel guys this kannan?

i dont wanted to disturb this thread but at the same time i wanted to keep away the guys like kannan double voice and spearing venom against sujatha..//

அனானி,

சுஜாதா பற்றிய என் கருத்தை நான் என் பதிவில் சொல்லிவிட்டேன். அது டிபிசிடிக்கு எதிர்கருத்து போட்டவர்களுக்காக போட்ட பின்னூட்டம். அதுவும் இதுவும் ஒன்றா ?. எதிர்கருத்து இருக்கவே செய்யும் என்று சொல்லி இருப்பதை வசதியாக திரிக்கும் உம் செயலைவிட நான் தாழ்வாக எதையும் செய்யவில்லை.

உண்மைத்தமிழன் said...

//இரண்டாம் சொக்கன்...! said...
உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்... சுஜாதாவை ரொம்பவே அன்னியோன்யமாக உணரவைத்த பதிவு..... ஏதோ உங்களுடன் கூடவே இருந்ததை போல உணரவைத்து விட்டீர்கள்... வருத்தங்களையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறேன்....//

சுஜாதா என்பவர் நமக்கு மிகவும் அன்னியோன்யமானவர்.. நம்முடைய எழுத்திலும், பேச்சிலும் எப்போதும் அவர் இருக்கிறார். நம்மை அறியாமலேயே நாம் அவரைப் பயன்படுத்தி வருகிறோம் என்பது உண்மை. யோசிச்சுப் பார்த்தீர்களானால் உங்களுடைய எழுத்திலும் ஏதோ ஓரிடத்தில் அவர் நிச்சயம் ஒளிந்திருப்பார்..

உண்மைத்தமிழன் said...

//Arun Kumar said...
போய் வா சுஜாதா.. மீண்டும் தமிழ் மண்ணில் பிறந்து மீண்டும் பல சாதனைகள் புறிவாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இது நீ உறங்கும் நேரம். நீ விழித்து வேறு ஒரு பெயரில் வருவாய் என்ற நம்பிக்கையுடன்.//

தம்பி அருண், என்னைவிட உணர்ச்சிவசப்பட்டுள்ளாய் என்பது தெரிகிறது.. மனிதர்களின் உடல் மறைந்தாலும் அவர்களின் ஆன்மாவுக்கு அழிவில்லை என்பார்கள். அடியார்க்கு அடியானாக, ஆண்டாளின் பக்தனாக மீண்டும் ஒரு முறை அவர் வருவார் என்றே நான் நினைக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//ச்சின்னப் பையன் said...
மீண்டும் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள்....:-((((//

யோசித்துப் பாருங்கள் ச்சின்னப் பையன்..

இந்த மனிதர், எத்தனை நாட்கள், எத்தனை மணிகள், எத்தனை நிமிடங்கள், எத்தனை நொடிகள்.. நம் மனதுக்கு அமைதியை கொடுத்திருப்பார்..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Very touching sir.My condolance to sujatha's family. all your words are very true and touched my heart. MAHESH//

உங்களது இதயத்திலும் வாத்தியார் இருக்கிறார் என்றால் எனக்கும் மகிழ்ச்சிதான்.. வாத்தியாரை என்றைக்கும் மறந்துவிடாதீர்கள். குறிப்பாக உங்களது பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்த மறந்துவிடாதீர்கள்..

உண்மைத்தமிழன் said...

//கோவி.கண்ணன் said...
உண்மை தமிழன் ஐயா, அவர் சிரித்துக் கொண்டு இருக்கும் படம் உங்களுக்கு கிடைக்கவில்லையா? படத்தைப் பார்த்தால் சுஜாதா மரணித்துவிட்டது போல் தெரிகிறதே. கண்ணதாசன், சுஜாதா போன்றோருக்கு மரணமில்லை !!!
முடிந்தால் படத்தை மாற்றுங்கள். அந்த படங்களை ஏற்கனவே அண்ணான் கண்ணன் அவர்கள் போட்டு இருந்தார்கள். அங்கு பார்த்ததே போதும்.//

கோவி ஸார்.. இது மரண நிகழ்ச்சியின் பதிவு. இப்படித்தான் இருக்க வேண்டும். ஏற்கெனவே அண்ணாகண்ணன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டேன்.. அதில் ஒன்றும் தவறில்லை.

உண்மைத்தமிழன் said...

//வாசுதேவன் இலட்சுமணன். said...
தமிழகத்தில் மட்டுமல்ல, புலம் பெயர்ந்தவர்களுக்கும் அவர் எழுத்துலகில் பல்துறை வித்தகர்.//

உண்மைதான் வாசுதேவன் ஸார்.. தமிழ் மொழியில் அவர் ஒரு ஜீனியஸ் என்பது நிச்சயமான வரலாறு.

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
who is this bull shit govi kannan. his recent comments in ur blog is. how kind of worst cruel guys this kannan? i dont wanted to disturb this thread but at the same time i wanted to keep away the guys like kannan double voice and spearing venom against sujatha..//

அனானி கோபம் வேண்டாம். மனிதர்கள் பலவிதம். அதில் இது ஒருவிதம்.. எல்லா நாணயத்திற்கும் இன்னொரு பக்கமும் இருக்கும்.. அதையும் நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.. இது தவிர்க்க முடியாதது..

உண்மைத்தமிழன் said...

//வல்லிசிம்ஹன் said...
உண்மைத்தமிழன் இப்போழுதுதான் அஞ்சலிக் கூட்டட்திலிருந்து வந்தேன். மீண்டும் சாரோட பேசுகிற உணர்வு உங்கள் பதிவிலிருந்து கிடைத்தது. மிக்க அருமையான பதிவு. நீங்கள் மனதளவில் அவரை மிக நெருங்கி விட்டீர்கள். அஞ்சலியில் நீங்களும் வந்தீர்களோ தெரியாது. இதை நான் மற்றுமொரு இதய அஞ்சலியாகவே பார்க்கிறேன்.//

வல்லியம்மா.. அஞ்சலிக் கூட்டத்திற்கு என்னால் வர முடியாமல் போய்விட்டது. வருந்துகிறேன். நிச்சயம் வந்திருக்க வேண்டும்.. ஆனால் இந்தப் பதிவை டைப் செய்து கொண்டிருந்ததால் நேற்றைக்கே வெளியிட வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால்தான் முடியாமல் போய்விட்டது. நமது இதய அஞ்சலி என்றென்றைக்கும் அவரது குடும்பத்தினருக்கு உண்டு..

உண்மைத்தமிழன் said...

//இலவசக்கொத்தனார் said...
வாயடைத்துப் போய் இருக்கேன்! என்னமோ நானே சுஜாதாவோட அவ்வளவு பழகின ஒரு உணர்வு.//

கொத்ஸ்.. அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத்தான் தெரியும் அவருடைய ஆளுமை.. நம் மீதும் படிந்து விடக்கூடிய அளவுக்கு வசீகரமானவர் அவருடைய எழுத்தைப் போலவே..

தங்களுடைய இரங்கலுக்கும் எனது நன்றி..

உண்மைத்தமிழன் said...

//அய்யனார் said...
மிக நெகிழ்ச்சியான பதிவு உண்மைத் தமிழன்... மீண்டுமொருமுறை அஞ்சலிகள்..//

அய்யனார்.. எத்தனை முறை எழுதினாலும் மறுபடியும், மறுபடியும் எழுதத் தூண்டுகிறது அவருடைய பன்முகத்தன்மை கொண்ட படைப்புகள்.. படித்ததினால்தானே நான் இன்றைக்கு இப்படி எழுதிக் கொண்டிருக்கிறேன்.. நன்றியுணர்வு வேண்டாமா..?

உண்மைத்தமிழன் said...

///செல்வம் said...
//நியூஸ் கேள்விப்பட்ட அத்தனை பேருக்குமே நீ வயசானவன்ற உணர்வே முதல்ல வரலே.. அப்புறம்தான் 73 வயசாச்சே அப்படீன்ற யோசனையே வந்துச்சு.. இங்கதான் வாத்தியாரே நீ ஜெயிச்சிட்டே.
நீ வயதானவன் என்ற எண்ணம்கூட வராமல் தடுக்கும் அளவுக்கு, நீ எங்களை வளர்த்து வைச்சிருந்திருக்க.. இதுதான் உன் எழுத்தினால் உனக்குக் கிடைத்த மிகப் பெரிய விருது வாத்தியாரே.//
முற்றிலும் உண்மை...உண்மைத்தமிழன். நன்றி.... வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.///

என்னிடமும் சொல்வதற்கு வேறெதுவும் இல்லை செல்வம்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Highly touching. My respects to our dear "Sujatha Sir".
// உன் எழுத்துகளை உன் கடைசி காலத்தில் புறக்கணித்த விகடனை
இனி என் வாழ்நாள் முடியும் வரை படிக்க மாட்டேன். உன்னால் வாழ்ந்த அந்த இதழ் உன் கடைசி காலத்தில் சேர்வோர் சரியில்லாம உன் மனத்தை துண்புறித்தியை நான் அறிவேன்.//
Arun kumar: can't believe Vikatan ignored Sujatha. as a matter of fact the ONLY reason I used to read was for him. Do you have a story to share with us in this regards?//

'கற்றதும், பெற்றதும்' தொடர் நிறுத்தப்பட்டதில் விகடன் நிர்வாகத்தினர் மீது சுஜாதா ஸாருக்கு கொஞ்சம் மனத்தாங்கல் இருந்தது உண்மை. முழு விபரங்கள் தெரியவில்லை அனானி.

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
படிக்கும்போதே கண்ணுலே குளம் கட்டிக்கிச்சுப்பா. வாத்தியாரைப் பத்தி ரொம்ப நல்லாச் சொன்னீங்க. மனசுக்கு அருகில் வந்து நின்னாப்லே இருக்கு. யார் என்ன சொன்னாலும், அவரோட எழுத்துக்கள் ஒரு தாக்கம் ஏற்படுத்தி இருக்குன்றதை மறுக்க முடியாதுல்லே?//

உண்மைதான் டீச்சர்.. அவருடைய எழுத்தின் தாக்கம் இல்லாத புதிய எழுத்தாள இளைஞர்கள் யாரும் இருக்கவே முடியாது..

உண்மைத்தமிழன் said...

//அனானி,
சுஜாதா பற்றிய என் கருத்தை நான் என் பதிவில் சொல்லிவிட்டேன். அது டிபிசிடிக்கு எதிர்கருத்து போட்டவர்களுக்காக போட்ட பின்னூட்டம். அதுவும் இதுவும் ஒன்றா ?. எதிர்கருத்து இருக்கவே செய்யும் என்று சொல்லி இருப்பதை வசதியாக திரிக்கும் உம் செயலைவிட நான் தாழ்வாக எதையும் செய்யவில்லை.//

கோவி ஸார்.. அந்த அனானிக்கு நானே பதில் சொல்லிவிட்டேன். விட்டுவிடுங்கள்..

Sivakumar said...

பாதிக்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை தமிழா! மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏன் சுஜாதா இப்படி பண்ணிட்டார். அவருக்கு என்ன அவரசம் நம்மை விட்டு பிரிய. நானும் வெள்ளிக்கிழமை அங்கு தான் இருந்தேன். முழுநாளும் இருக்கமுடியவில்லை. அலுவலகத்தொல்லை. பேசாமல் நானும் இறந்து விட்டேன்ன்னு சொல்லி லீவு போட்டிருக்கணும் போல....

Anonymous said...

கரகரன்னு கண்ணீர்.... வாசிக்கவே முடியலை.

துட்டு கிட்டு சேர்த்திருக்கிறாரோ என்னமோ தெரியலை.... ஆனால், வாத்தியார், நிறைய மனிதர்களைச் சம்பாதித்திருக்கிறார்.

பக்கத்தில் இருந்து வழியனுப்பி வைக்க வாய்ப்பு கிடைத்த பாக்கியவான் நீங்க...வாழ்க..

சிவபார்கவி said...

சுஜாதாவின் பக்கங்களுக்காகவே நான் விகடனை வாங்கிவந்திருக்கிறேன். அவரை சில நாட்களாக விகடனில் காணமால் போனதற்கு என்ன காரணம் என்பதை அவருடைய மறைவிற்கு பின்னரே தெரிகிறது. நல்ல மனிதர் இவ்வுலகிற்கு தமிழை பரப்பியதில் தற்காலத்தில் அவருடைய பங்கை ஏற்க வேறுஎவரும் தென்படவில்லை. வாழ்க சுஜாதா புகழ்.

உண்மைத்தமிழன் said...

//அப்பு சிவா said...
பாதிக்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை தமிழா! மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏன் சுஜாதா இப்படி பண்ணிட்டார். அவருக்கு என்ன அவரசம் நம்மை விட்டு பிரிய. நானும் வெள்ளிக்கிழமை அங்குதான் இருந்தேன். முழுநாளும் இருக்க முடியவில்லை. அலுவலகத் தொல்லை. பேசாமல் நானும் இறந்து விட்டேன்ன்னு சொல்லி லீவு போட்டிருக்கணும் போல....//

என்னைவிட மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருப்பீர்கள் போலிருக்கிறது.. இங்குதான் சுஜாதா என்கின்ற எழுத்தாளன் ஜெயித்திருக்கிறார்.. வாழ்நாள் முழுவதும் தான் படித்ததை தான் மட்டும் வைத்துக் கொள்ளாமல் பொதுவில் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் செயல்படுத்தினாரே.. அந்த மகத்தான காரியத்திற்காக ஒரு நாள் விடுப்பு எடுப்பதில் தவறில்லைதான்.. எடுத்திருக்கலாம்..

உண்மைத்தமிழன் said...

//icarusprakash said...
கரகரன்னு கண்ணீர்.... வாசிக்கவே முடியலை. துட்டு கிட்டு சேர்த்திருக்கிறாரோ என்னமோ தெரியலை.... ஆனால், வாத்தியார், நிறைய மனிதர்களைச் சம்பாதித்திருக்கிறார். பக்கத்தில் இருந்து வழியனுப்பி வைக்க வாய்ப்பு கிடைத்த பாக்கியவான் நீங்க...வாழ்க..//

வாங்க பிரகாஷ் ஸார்..

வாத்தியார் எக்கச்சக்கமான மாணவர்களைக் கொடுத்திட்டுப் போயிருக்கார்.. பணத்தைவிட எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு புகழை சேர்த்துட்டுப் போயிருக்காரு.. வருங்காலம் நிச்சயம் இதைச் சொல்லும்..

உண்மைத்தமிழன் said...

//Durai Thiyagaraj said...
சுஜாதாவின் பக்கங்களுக்காகவே நான் விகடனை வாங்கிவந்திருக்கிறேன். அவரை சில நாட்களாக விகடனில் காணமால் போனதற்கு என்ன காரணம் என்பதை அவருடைய மறைவிற்கு பின்னரே தெரிகிறது. நல்ல மனிதர் இவ்வுலகிற்கு தமிழை பரப்பியதில் தற்காலத்தில் அவருடைய பங்கை ஏற்க வேறு எவரும் தென்படவில்லை. வாழ்க சுஜாதா புகழ்.//

நன்றி துரை ஸார்.. விகடன் செய்தது பெருந்தவறு.. எப்படி அவர்கள் அதை ஈடு கட்டப் போகிறார்கள் என்பது தெரியவில்லை..

தற்காலத்திய இளைஞர்களுக்கு தமிழ் மொழியை அறிமுகப்படுத்தியதில் முதல் வாத்தியார் இவர்தான்.. இவருக்குப் பின்தான் மற்றவர்கள்..

Sivakumar said...

சென்னையில் எங்கு வசிக்கிறீர்கள்?

பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள உண்மைத் தமிழன்,

உங்களின் பதிவு one of the best என்பேன். மிகுந்த யதார்த்தமாக நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

Muruganandan M.K. said...

மிக விபரமாக செய்யப்பட்ட சிறந்த பதிவு. நன்றி. அவரது பத்தி எழுத்துக்களையே நான் மிக ஆர்வத்துடன் படிப்பதுண்டு. கரையெல்லாம் செண்பகப்பூ மிகவும் பிடித்த படைப்பு.

Radha Sriram said...

இப்படி அழ வச்சிட்டீங்களே உண்மை தமிழன்?? நன்றாக இன்னொரு தடவை அழுது என் துயரத்தை வெளிபடுத்திக் கொண்டேன்..... ஆழமான உணர்ச்சிகர பதிவு...உங்கள் பதிவ படிச்சப்ரம் அவராட இன்னும் நெருக்கமா உணர்ரேன்...அவரோட எழுத்துக்களின்
தாக்கத்தை யாராலும் மறுக்க முடியாது.

தென்றல் said...

நெகிழ்ச்சியான பதிவு!

நன்றி!!

Anonymous said...

மனதை உலுக்கி விட்டீர்கள், சரவணன்!

சுஜாதா பாணியில் அங்கதத்துடன் ஆரம்பித்து போகப்போக மேல் மனதும் அதன் செம்மொழியும் விடை பெற்று ஆழ மனதின் புலம்பல் ஒருமையும் கிராமத்து மொழியுமாய் வருகையில் என் கண்களிலும் கண்ணீர்.

இருந்தும் உணர்வை பின்தள்ளி ஒருவித காமெரா கண்ணுடன் இறுதி நிகழ்வை விவரிக்கையில் அவரிடம் கற்ற witnessing eye அவர் எங்கும் போய்விடவில்லை என்று தெரிகிறது. நீங்கள் மென்மேலும் ஒளிர வாழ்த்துக்கள் நண்பரே!

நாட்டைத் திருத்தக் கதை எழுத வந்தவர் எல்லாம் பத்து பதினைந்து வருடத்தில் மூலையில் சுருங்கிவிட சந்தோசமே மையமாக்கி தன்னையும் படிப்போரையும் மகிழ்விக்கும் எழுத்தை மட்டுமே பெரும்பாலும் எழுதினாலும் அவர்கள் சாதிக்காத மனப்புரட்சியையும் அறிவும் அன்பும் இரண்டு கண்கள் என்று ஒரு தலைமுறையை வளர்த்தவர். Life-affirming. Genius is Simplicity. இவர் வெற்றி ஒரு பெரும் உண்மை உணர்த்துகிறது - நல்லவற்றை மட்டும் சிந்தித்து நல்லவற்றை மட்டுமே பேசு. உனக்கு பிடிக்காததை கண்டால் நகைச்சுவையாக சொல்லிப்பார்.

பெரும் புகழ் வாய்த்தும் பலர் அதை பணமாக்க முயல்வர். அதைச செய்யாமல் இன்னும் இன்னும் எழுதிக்கொண்டே இருந்தார்.

நீங்கள் சொல்வது போல் அவருக்கு தன் பெயரை கொடுத்த சுஜாதா அம்மாவின் தினசரி தியாகங்கள் கொஞ்ச நஞ்சமா? அவருக்கு எல்லா நன்றியும்.

இவர் மறைவு ரொம்பவும் உலுக்கிவிட்டது.

ஒருமுறை இவர் தந்தையிடம் கேட்டாராம் - நீங்கள் செய்ததுக்கு எப்படி திருப்பி செய்யபோகிறேன்? என்று.

அவர் சொன்னாராம் - எனக்கு ஒன்றும் செய்ய வேண்டாம். நான் உனக்கு செய்ததை உன் பிள்ளைகளுக்கு திருப்பி செய் என்று.

இவர் நமக்கு செய்தது போல் நாம் பிறருக்கு என்ன செய்யமுடியும்?

நிறைய படிக்க வேண்டும். நிறைய எழுத வேண்டும். கொம்பில் ஏறி உட்காராமல் அடுத்த தலைமுறை இளைஞர்களை உற்சாகப்படுத்த வேண்டும். வீடு தேடி வந்தவரை வாங்க என்று மரியாதையுடன் அழைக்கவேண்டும். அறிஞனைப் போல் சிந்தித்து பாமரநைப்போல் பேசவேண்டும். எவரையும் காரணமிருந்தும் திட்டக்கூடாது. காரணமின்றி நம்மை யாரும் தூற்றினாலும் கண்டு கொள்ளாமல் விடவேண்டும். அன்பே இயல்பாய் அறிவே குறியாய் வாழ்ந்தால் இவர் போலத்தான் - மரணமில்லை.

ரவி அண்ணாசாமி

உண்மைத்தமிழன் said...

//அப்பு சிவா said...
சென்னையில் எங்கு வசிக்கிறீர்கள்?//

வருகைக்கு நன்றி அப்பு சிவா.. தொலைபேசி எண்ணை முகப்பில் கொடுத்திருக்கிறேனே.. தொடர்பு கொள்ளலாமே..

உண்மைத்தமிழன் said...

//சுரேஷ் கண்ணன் said...
அன்புள்ள உண்மைத் தமிழன், உங்களின் பதிவு one of the best என்பேன். மிகுந்த யதார்த்தமாக நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.//

நல்லபடியாக எழுதுவதற்கு கிடைக்கின்ற வாய்ப்பு இப்படித்தான் கிடைக்குமா என்ற கோபமும் எனக்குள் உண்டு சுரேஷ்.. வருகைக்கும், அஞ்சலிக்கும் எனது நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
மிக விபரமாக செய்யப்பட்ட சிறந்த பதிவு. நன்றி. அவரது பத்தி எழுத்துக்களையே நான் மிக ஆர்வத்துடன் படிப்பதுண்டு. கரையெல்லாம் செண்பகப்பூ மிகவும் பிடித்த படைப்பு.//

நன்றி டாக்டர் ஸார்.. பத்தி எழுத்துக்களில்தான் சுஜாதாவே உயிர் வாழ்ந்தார். அதுதான் அவருடைய பெயரை அனைவரின் மனதிலும் நிலை நாட்டியது. அந்த நிலைநாட்டலுக்குப் பின்தான் பலரும் அவரைத் தேடித் தேடிப் படித்தார்கள்..

உண்மைத்தமிழன் said...

//Radha Sriram said...
இப்படி அழ வச்சிட்டீங்களே உண்மை தமிழன்?? நன்றாக இன்னொரு தடவை அழுது என் துயரத்தை வெளிபடுத்திக் கொண்டேன்..... ஆழமான உணர்ச்சிகர பதிவு...உங்கள் பதிவ படிச்சப்ரம் அவராட இன்னும் நெருக்கமா உணர்ரேன்...அவரோட எழுத்துக்களின் தாக்கத்தை யாராலும் மறுக்க முடியாது.//

வருஷக் கணக்கா வாத்தியார் நெஞ்சுக்குள்ளேயே இருந்ததால எழுத்துக்களும் அந்த எண்ணப்படியே வந்துவிட்டன மேடம்.. நாம் சாகின்றவரையிலும் நம் எழுத்துக்களில் ஏதேனும் ஒரு மூலையில் அவர் உயிருடன் இருப்பார்.. இதுவே அவருடைய வெற்றிதான்..

உண்மைத்தமிழன் said...

//தென்றல் said...
நெகிழ்ச்சியான பதிவு! நன்றி!!//

நன்றி தென்றல்.. மரண அஞ்சலி செலுத்துபவர்களுக்கு நன்றி செலுத்துவது நல்ல மரபு அல்ல.. ஆனாலும் ஆசிரியர்களை மறவாமல் இருப்பதற்கு நமக்குள் நாமே நன்றி தெரிவித்துக் கொள்வோம்..

உண்மைத்தமிழன் said...

//நிறைய படிக்க வேண்டும். நிறைய எழுத வேண்டும். கொம்பில் ஏறி உட்காராமல் அடுத்த தலைமுறை இளைஞர்களை உற்சாகப்படுத்த வேண்டும். வீடு தேடி வந்தவரை வாங்க என்று மரியாதையுடன் அழைக்கவேண்டும். அறிஞனைப் போல் சிந்தித்து பாமரநைப்போல் பேசவேண்டும். எவரையும் காரணமிருந்தும் திட்டக்கூடாது. காரணமின்றி நம்மை யாரும் தூற்றினாலும் கண்டு கொள்ளாமல் விடவேண்டும். அன்பே இயல்பாய் அறிவே குறியாய் வாழ்ந்தால் இவர் போலத்தான் - மரணமில்லை.
- ரவி அண்ணாசாமி//

மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரவி ஸார்.. உண்மை.. அடுத்தத் தலைமுறை இளைஞர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதைத்தான் நம்ம வாத்தியார் நமக்குச் சொல்லிட்டுப் போயிருக்கிறார்.. அதை நாம் முறையாகச் செயல்படுத்தினாலே வாத்தியாரின் ஆன்மா சாந்தியாகும் என்று நான் நினைக்கிறேன்..

வாத்தியாருக்கு எப்போதும் மரணமில்லை ஸார்.. தமிழ் மொழி உள்ளவரையில் நம்முடைய பேரப் பிள்ளைகளும் இவரைத்தான் படிக்கப் போகிறார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.

Unknown said...

I read this blog and broke into tears.

Anonymous said...

Dear Sir,

I'm unable to control my tears after reading your post..!!

Sujatha sir-n iruthi payanthil paynathithu pol irunthathu....Thukkam thondaiyai adaikkirathu sir.

Anbudan,
Ungal Vaasagan.

Ram said...

Dear Unmai thamilan,

I have seen your blog.

I unable to fully read sujatha's anjali pages.

Its really bad time for sujatha book readers.

I can't say more

Regards
Ramasamy.G

Anonymous said...

73 லாம் சாக கோடிய வயசா சார். சுஜாதா சொன்ன மாதிரி "அமெரிக்க சட்டமெல்லாம் மனுஷனை வாழு வாழுன்னு சொல்லுது". அங்க 72 வயசுல ஜனாதிபதி தேர்தல்ல போட்டி போடுராங்க. I never thought I had this much love, respect and affection for Sujatha until he passed away. Been in tears for a week now, wherever I read a blog for him my eyes are filled with tears.(கண்கள் குலமாயின). Forgive me Sujatha for using the cliche.

Anonymous said...

திருமாவளவன் திடீரென்று வந்து பரபரப்பைக் கூட்டினார் வாத்தியாரே. ஒண்ணும் புரியல.. அதன் பின்னர் வைகோவும்,கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் வந்து சென்றார்கள்

இதுல என்னங்க பரபரப்பு இருக்கு? கொஞ்சம் சொல்லுங்களேன்.

Hariharan # 03985177737685368452 said...

உண்மைத்தமிழன்,

பள்ளி, கல்லூரிக்கால ஆசிரியர்களுடன் அனைவருக்கும் சில காலம் மட்டுமே பழக்கம் இருக்கும்.

சுஜாதா மட்டுமே நீண்ட நெடுங்காலத்திற்கு பல தலைமுறையினருக்கு வாத்தியாராய் இருந்திருக்கிறார்.

புரியும் படி சொல்லிக்கொடுக்கும் வாத்தியாரை மதித்து நட்புறவு கொண்டாடுவது இயல்பானதுதானே.
சுஜாதா வாத்தியார் சொல்லித்தந்தது விஷயங்கள் எத்தனை எத்தனை?

பள்ளி, கல்லூரியில் மக்குத்தனமா இருந்திருந்த பலரையும் உசுப்பி உருப்பட வைத்த உன்னத வாத்தியார் சுஜாதா!

எங்க தாத்தா பாட்டின்னு எனக்கு நெருங்கின உறவினர் மறைந்த போது ஏற்பட்ட துக்க உணர்வு அவர்கள் காட்டிய அன்பின் காரணமாக்...

சுஜாதாவின் மறைவுச்செய்தி ஒருவாரமாக மனதைப் பிசைகிறது. சுஜாதா நினைவுகளுடன் தனியாக கார் ஓட்டும்போது ரோடு திடீர்னு மங்கலாகிவிடுகிறது கண்ணில் நீர் கோர்த்துக்கொள்வதால்!

தமிழ் என்பது அரிசியானால் சுஜாதா அதை வைத்து விதம் விதமாக பதார்த்தங்கள் செய்து வழங்கி படிப்பவன் திருப்தியடைந்து திக்குமுக்காட வைத்தார்!

எனது ஐம்புலன்களின் சூழல் அவதானிப்பை அதிகரிக்கச் செய்ததில் ஜீன் - ஜெனடிக்ஸ் தாண்டி சுஜாதாவின் எழுத்தின் பங்களிப்பு அதிகம்!

சுஜாதா எவ்வளவு அறிவு தந்து உதவியிருக்கிறார் தனித்து இவ்வளவுக்கு இழப்பாக உணர்வதற்கு!


இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய வாத்தியார் சுஜாதா ஒரு மெய்யான பேராசிரியர்!

உண்மைத்தமிழன் said...

//Gayathri said...
I read this blog and broke into tears.//

Thanks and regards gayathri..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Dear Sir, I'm unable to control my tears after reading your post..!! Sujatha sir-n iruthi payanthil paynathithu pol irunthathu....Thukkam thondaiyai adaikkirathu sir. Anbudan, Ungal Vaasagan.//

உங்கள் வாசகன் ஸாருக்கு நன்றி..

உண்மைத்தமிழன் said...

Ram said...
Dear Unmai thamilan, I have seen your blog. I unable to fully read sujatha's anjali pages. Its really bad time for sujatha book readers. I can't say more..
Regards..
Ramasamy.G//

Thanks Ram sir..

உண்மைத்தமிழன் said...

//Saravanan said...
73 லாம் சாக கோடிய வயசா சார். சுஜாதா சொன்ன மாதிரி "அமெரிக்க சட்டமெல்லாம் மனுஷனை வாழு வாழுன்னு சொல்லுது". அங்க 72 வயசுல ஜனாதிபதி தேர்தல்ல போட்டி போடுராங்க. I never thought I had this much love, respect and affection for Sujatha until he passed away. Been in tears for a week now, wherever I read a blog for him my eyes are filled with tears.(கண்கள் குலமாயின). Forgive me Sujatha for using the cliche.//

இதுதான் சுஜாதா.. தன் எழுத்தை படித்த மட்டுமே தன்னையறிந்திருந்த வாசகர்களை எந்த அளவுக்குப் பாதித்திருந்திருக்கிறார் என்பது சமீப நாட்களாக அனைத்துத் துறையினரும் அறிந்தே வருகிறார்கள். இந்தக் காலன் என்றைக்குத்தான் காணாமல் போவானோ.. தெரியவில்லை..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
திருமாவளவன் திடீரென்று வந்து பரபரப்பைக் கூட்டினார் வாத்தியாரே. ஒண்ணும் புரியல.. அதன் பின்னர் வைகோவும்,கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் வந்து சென்றார்கள் இதுல என்னங்க பரபரப்பு இருக்கு? கொஞ்சம் சொல்லுங்களேன்.//

திருமாவளவன் வருகையை அங்கிருந்தோர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. காரணம் உங்களுக்கே தெரியும்.

ஆனாலும் மனித நேயம் கருதி வந்ததும், இரங்கல் தெரிவித்துப் பேசிவிட்டும் சென்றார். அதைத்தான் குறிப்பிட்டேன்..

மற்றபடி 'வரக்கூடாதவர்கள்' என்ற அர்த்தத்தில் சொல்லப்படவில்லை..

உண்மைத்தமிழன் said...

//Hariharan # 03985177737685368452 said...
உண்மைத்தமிழன்,
பள்ளி, கல்லூரிக்கால ஆசிரியர்களுடன் அனைவருக்கும் சில காலம் மட்டுமே பழக்கம் இருக்கும்.
சுஜாதா மட்டுமே நீண்ட நெடுங்காலத்திற்கு பல தலைமுறையினருக்கு வாத்தியாராய் இருந்திருக்கிறார்.
புரியும் படி சொல்லிக்கொடுக்கும் வாத்தியாரை மதித்து நட்புறவு கொண்டாடுவது இயல்பானதுதானே.
சுஜாதா வாத்தியார் சொல்லித்தந்தது விஷயங்கள் எத்தனை எத்தனை?
பள்ளி, கல்லூரியில் மக்குத்தனமா இருந்திருந்த பலரையும் உசுப்பி உருப்பட வைத்த உன்னத வாத்தியார் சுஜாதா!
எங்க தாத்தா பாட்டின்னு எனக்கு நெருங்கின உறவினர் மறைந்த போது ஏற்பட்ட துக்க உணர்வு அவர்கள் காட்டிய அன்பின் காரணமாக்...
சுஜாதாவின் மறைவுச்செய்தி ஒருவாரமாக மனதைப் பிசைகிறது. சுஜாதா நினைவுகளுடன் தனியாக கார் ஓட்டும்போது ரோடு திடீர்னு மங்கலாகிவிடுகிறது கண்ணில் நீர் கோர்த்துக்கொள்வதால்!
தமிழ் என்பது அரிசியானால் சுஜாதா அதை வைத்து விதம் விதமாக பதார்த்தங்கள் செய்து வழங்கி படிப்பவன் திருப்தியடைந்து திக்குமுக்காட வைத்தார்!
எனது ஐம்புலன்களின் சூழல் அவதானிப்பை அதிகரிக்கச் செய்ததில் ஜீன் - ஜெனடிக்ஸ் தாண்டி சுஜாதாவின் எழுத்தின் பங்களிப்பு அதிகம்!
சுஜாதா எவ்வளவு அறிவு தந்து உதவியிருக்கிறார் தனித்து இவ்வளவுக்கு இழப்பாக உணர்வதற்கு!
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய வாத்தியார் சுஜாதா ஒரு மெய்யான பேராசிரியர்!//

உண்மைதான் ஹரிஹரன் ஸார்..

நிறைய படிக்காதவர்கள்கூட தமிழின் அருமை, பெருமைகளைத் தெரிந்து கொள்ள வைத்தவர் சுஜாதாதான்.

தமிழ் இலக்கணம் என்ற சூட்சுமத்தை அவருடைய ஒவ்வொரு கதையிலும் நுணுக்கமாகச் சொல்லிக் கொண்டே வந்தார். அதுதான் கடைசியில் நச்சென்று ஒரு வரியில் முடிப்பாரே.. அதேபோல்..

இந்த அளவுக்காச்சும் இன்றைய இளைஞர்கள் புத்தக வாசிப்பிலும், படிப்பிலும் அக்கறை காட்டுவதற்கு ஊன்று கோலாகவும், மறைமுகத் தூண்டுகோலாகவும் இருந்தவர் அமரர் சுஜாதாதான்..

இன்னும்கூட எனக்கு கை வர மறுக்கிறது இந்த 'அமரர்' என்கிற வார்த்தையை டைப் செய்வதற்கு..

இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியல ஸார்..

Anonymous said...

Oh what a man Mr.Sujatha was, certainly he played a huge role to create a interest in the reading habits, and passed the knowledge through his writtings, his comment about NRI's or Engr/doc/MBA's leaving India and serving abroad was very open, ( inspite of it people like me continued to work abroad )... he was too good, ...and your article on him brought tears. It has brought a some kind of reslove that I should teach how to read tamil to my daughter and show her Sujatha's writtings. ..

Sundar - Dubai ( Camp Mallorca)

இரா. வசந்த குமார். said...

படிக்கப் படிக்கவே கண்களில் கண்ணீர் முட்டுகிறது. பிரெளசிங் சென்டரில் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். அதனால் என்ன? என் கால் வயதில் என் கைப் பிடித்து நடத்தி வந்த ஆசானுக்கு என்னால் இது தானே செய்ய முடிந்தது...?

ஹரிஹரன் அவர்கள் சொன்னது போல், திடீரென்று நடந்து செல்கையில், கண்கள் திரையிட்டுக் கொள்கின்றன...

உண்மைத்தமிழன் said...

//Oh what a man Mr.Sujatha was, certainly he played a huge role to create a interest in the reading habits, and passed the knowledge through his writtings, his comment about NRI's or Engr/doc/MBA's leaving India and serving abroad was very open, ( inspite of it people like me continued to work abroad )... he was too good, ...and your article on him brought tears. It has brought a some kind of reslove that I should teach how to read tamil to my daughter and show her Sujatha's writtings. ..
Sundar - Dubai ( Camp Mallorca)//

நன்றி சுந்தர்..

வாத்தியாரின் மாணவர்களாகிய நாம், நம்முடைய வாரிசுகளிடம் அவரை அறிமுகப்படுத்துவதுதான் அவருக்குச் செய்யும் தலைசிறந்த நன்றியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

தங்களுடைய எண்ணத்தை பதிவு செய்தமைக்கு எனது நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

//இரா. வசந்த குமார். said...
படிக்கப் படிக்கவே கண்களில் கண்ணீர் முட்டுகிறது. பிரெளசிங் சென்டரில் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். அதனால் என்ன? என் கால் வயதில் என் கைபபிடித்து நடத்தி வந்த ஆசானுக்கு என்னால் இதுதானே செய்ய முடிந்தது...? ஹரிஹரன் அவர்கள் சொன்னது போல், திடீரென்று நடந்து செல்கையில், கண்கள் திரையிட்டுக் கொள்கின்றன...//

உண்மைதான் வசந்தகுமார்.. வருகின்ற பின்னூட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும்போதும், பதிலளிக்கும் தருணங்களிலும் கண்களில் கண்ணீர் பொங்கி நிற்கிறது.

வாத்தியாரை நாம் இவ்வளவு நாளும் நம் நெஞ்சுக்குள் நம்மையறியாமலேயே வைத்திருக்கிறோம்..

இதுதான் உண்மை..

நித்யன் said...

உண்மைத்தமிழன்...

தொடர்ந்து வாசிக்க இயலவில்லை சார். கண்ணீர் முட்டித்தள்ளுகிறது. உங்கள் கூடவே இருந்த பார்த்ததைப் போல ஓர் அனுபவம்.

மிக்க நன்றி.

நித்யகுமாரன்

உண்மைத்தமிழன் said...

//நித்யகுமாரன் said...
தொடர்ந்து வாசிக்க இயலவில்லை சார். கண்ணீர் முட்டித்தள்ளுகிறது. உங்கள் கூடவே இருந்த பார்த்ததைப் போல ஓர் அனுபவம்.
மிக்க நன்றி.
நித்யகுமாரன்//

நான்தான் நன்றி சொல்ல வேண்டும் நித்யா.. வாத்தியாரின் பாதிப்பு இல்லாத வலையுலக இளைஞர்கள் யாருமில்லை.. நீங்களும், நானும் நமக்கு அடுத்தத் தலைமுறைக்கு நமது வாத்தியாரை அறிமுகப்படுத்துவதுதான் அவருக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்..

Thirumalai said...

Dear Unmai Thamizhan,

After reading ur blog,I even couldnt believe Sir is no more..Tears coming out of my eyes.
Great loss ...

உண்மைத்தமிழன் said...

//Thirumalai said...
Dear Unmai Thamizhan, After reading ur blog,I even couldnt believe Sir is no more..Tears coming out of my eyes.
Great loss...//

மிக்க நன்றி திருமலை ஸார்.. இந்த வாத்தியார், நமக்கெல்லாம் முறைப்படி வகுப்பெடுக்காத ஆசான்.. இந்த உண்மையை வருங்கால இளைய சமுதாயமும் கண்டிப்பாக ஒத்துக் கொள்ளும்.

Vino said...

Those who read Sujatha very closely int the last 10 years..He'd mentioned many times reading obituary columns from The Hindu was one of his favorite pass time. I bet had he given chance to read this post he must have liked this.

கானகம் said...

உண்மைத்தமிழன்..

சுஜாதா மூலமாய் உங்கள் பதிவுக்கு வந்திருக்கிறேன். இவ்வளவு உணர்வுபூர்வமாய் எழுதும் அளவு பாதித்த உங்கள் மற்றும் எனது அதாவது நம்ம சுஜாதா சார் ஸ்ரீரங்கனினிடம் சேர்ந்திருப்பார்..அவருக்கு அஞ்சலி செலுத்துவது நமது ஆற்றாமையையும் அவர்மீது நாம் கொண்டிருக்கும் அன்பை தெரிவிக்கும் வாய்ப்பு. அவ்வளவே.. என்ன சொல்றதுன்னு தெரியல.. போய்ட்டு வா ராசா ன்னுதான் சொல்லமுடியும்..அவ்வளவுதான்...

Anonymous said...

Hi Bala,

How was the memorial arranged for the great writer Sujatha in Bangalore?

Deikan has written about it in his site Bangalore Memorial for Sujatha . It tells us about the politics in Tamil that do not recognize a stalwart like Sujatha.

உண்மைத்தமிழன் said...

//Vino said...
Those who read Sujatha very closely int the last 10 years..He'd mentioned many times reading obituary columns from The Hindu was one of his favorite pass time. I bet had he given chance to read this post he must have liked this.//

நன்றி வினோ. நானும் அந்தக் கட்டுரையைப் படித்திருக்கிறேன்.. சிறுகதையைப் போல சுவாரஸ்யமானவையாக இருப்பவை இரங்கல் செய்திகள்தான் என்றார் நம் வாத்தியார்.

அது போலவே தமிழ் வலைத்தளத்திலும், தமிழ் ஊடகங்களிலும் வாத்தியார் பற்றிய அனைத்து இரங்கல் பதிவுகளுமே மிக, மிக சுவாரஸ்யமாகவே இருந்தன. அவர் எதிர்பார்த்தது போலவே.. அவருடைய மாணவர்கள் அவருடைய கடைசி கால ரசிப்பை, அவருக்கு ஆத்மார்த்தமாக அஞ்சலியிலும் செலுத்தியிருக்கிறார்கள்.

மீண்டும் ஒரு நன்றி வினோ..

உண்மைத்தமிழன் said...

//கானகம் said...
உண்மைத்தமிழன்.. சுஜாதா மூலமாய் உங்கள் பதிவுக்கு வந்திருக்கிறேன். இவ்வளவு உணர்வுபூர்வமாய் எழுதும் அளவு பாதித்த உங்கள் மற்றும் எனது அதாவது நம்ம சுஜாதா சார் ஸ்ரீரங்கனினிடம் சேர்ந்திருப்பார்..அவருக்கு அஞ்சலி செலுத்துவது நமது ஆற்றாமையையும் அவர்மீது நாம் கொண்டிருக்கும் அன்பை தெரிவிக்கும் வாய்ப்பு. அவ்வளவே.. என்ன சொல்றதுன்னு தெரியல.. போய்ட்டு வா ராசா ன்னுதான் சொல்லமுடியும்..அவ்வளவுதான்...//

நன்றி கானகம்.. வாத்தியாரின் மறைவு அவ்வளவு எளிதில் ஈடு செய்யக்கூடியதல்ல.. நம் அனைவரையும் பொதுவில் இணைத்தது அவருடைய எழுத்துதான் என்பதில் சந்தேகமில்லை..

Vetirmagal said...

sir,
I stumbled upon your write up after viewing the topic. I live outside tamilnadu and was away at USA. I did not have much information about Sujatha's demise. I too was sad that we lost a star writer.I rated him the best of Tamil writers of his time and did not miss anything he wrote if I could help .

Your blog has touched me in many ways. I felt I have learnt so much about him through your feelings. After reading your write up, I am feeling more sad that we lost a great writer and a person.

Thanks for sharing your feeling with all the bloggers.

திண்டுக்கல்க்காரன் said...

சுஜாதா.... சுஜாதா என்று மனம் இன்றும் அலைகிறது. நான் சென்னையில் வசிக்கிற போதும் கூட அவரை சந்திக்க முயலவில்லை. எழுத்தாளரை சந்திக்கிற போது அவரைப் பற்றிய நம் அபிமானமும் சுவாரஸ்யமும் கெட்டுப் போய் விடும் என்ற அவரின் எழுத்தை மதித்து நம் சக காலத்தில் வாழ்ந்த எழுத்தவதாரம் எடுத்துவந்த இறைவனைக் காணும் சந்திக்கும் பாக்கியம் இழந்தேன். இரண்டு முறை எதேச்சையாய் பார்த்திருக்கிறேன். முதல் முறை ஒரு கல்யாண மண்டபத்தில். இரண்டாவது சென்னை புத்தகச் சந்தையில் 1995(அ) 96-ல். அவருடைய திருக்குறள் உரை ஒன்று வாங்கி என் மூன்று வயது மகளை அனுப்பி கையெழுத்துக் கேட்டபோது, அவர் அவளின் பெயரைக் கேட்டு, "வைஷாலி, தமிழ் படி" என்று எழுதிக் கையெழுத்திட்டார். நமஸ்காரம் செய்யச் சொன்னோம். செய்தவளை ஆசீர்வாதம் செய்தார். இப்போது பத்தாம் வகுப்பில் தமிழ் படிக்கிறாள்; ஆர்வமாய் படிக்கிறாள். நிச்சயம் நன்றாகப் படிப்பாள்.
சுஜாதா மறைவுக்குப் பின் எங்களிடம், அவரின் ஆசியும் கையெழுத்தும் இன்னும் இருக்கிறது.
-வீராசாமி ராஜேந்திரன்

உண்மைத்தமிழன் said...

//Vetrimagal said...
sir, I stumbled upon your write up after viewing the topic. I live outside tamilnadu and was away at USA. I did not have much information about Sujatha's demise. I too was sad that we lost a star writer.I rated him the best of Tamil writers of his time and did not miss anything he wrote if I could help .
Your blog has touched me in many ways. I felt I have learnt so much about him through your feelings. After reading your write up, I am feeling more sad that we lost a great writer and a person.
Thanks for sharing your feeling with all the bloggers.//

எவ்ளவுதான் முகத்தைத் திரை போட்டு மறைத்தாலும் உள்ளத்தில் எழுகின்ற உணர்ச்சிகளை ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியாது. அந்த அளவில் நம்மை ஊடுறுவியர் நமது வாத்தியார் சுஜாதாதான்..

உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு எனது நன்றிகள் மேடம்..

உண்மைத்தமிழன் said...

//திண்டுக்கல்க்காரன் said...
சுஜாதா.... சுஜாதா என்று மனம் இன்றும் அலைகிறது.

நான் சென்னையில் வசிக்கிற போதும் கூட அவரை சந்திக்க முயலவில்லை. எழுத்தாளரை சந்திக்கிற போது அவரைப் பற்றிய நம் அபிமானமும் சுவாரஸ்யமும் கெட்டுப் போய் விடும் என்ற அவரின் எழுத்தை மதித்து நம் சக காலத்தில் வாழ்ந்த எழுத்தவதாரம் எடுத்துவந்த இறைவனைக் காணும் சந்திக்கும் பாக்கியம் இழந்தேன். இரண்டு முறை எதேச்சையாய் பார்த்திருக்கிறேன்.

முதல் முறை ஒரு கல்யாண மண்டபத்தில். இரண்டாவது சென்னை புத்தகச் சந்தையில் 1995(அ) 96-ல். அவருடைய திருக்குறள் உரை ஒன்று வாங்கி என் மூன்று வயது மகளை அனுப்பி கையெழுத்துக் கேட்டபோது, அவர் அவளின் பெயரைக் கேட்டு, "வைஷாலி, தமிழ் படி" என்று எழுதிக் கையெழுத்திட்டார். நமஸ்காரம் செய்யச் சொன்னோம். செய்தவளை ஆசீர்வாதம் செய்தார். இப்போது பத்தாம் வகுப்பில் தமிழ் படிக்கிறாள்; ஆர்வமாய் படிக்கிறாள். நிச்சயம் நன்றாகப் படிப்பாள்.

சுஜாதா மறைவுக்குப் பின் எங்களிடம், அவரின் ஆசியும் கையெழுத்தும் இன்னும் இருக்கிறது.
-வீராசாமி ராஜேந்திரன்//

நன்றிகள் ராஜேந்திரன் ஸார்.. பெரியவர்களை வணங்குதலும், தெய்வத்தை தொழுதும் ஒன்றுதான்.. தங்கள் குழந்தைக்கு வாத்தியாரின் ஆசிகள் கிட்டியிருக்கிறதே.. பெரும் பாக்கியம்..

எல்லா வளமும் பெற்று வாழ்வீர்கள் நீங்கள்..

உங்கள் தலைமுறையின் அனைவரின் வீட்டிலும் அடுத்தத் தலைமுறையினருக்கு வாத்தியாரின் அறிமுகம் நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும்.

செய்யுங்கள் நண்பரே..

சைதை முரளி said...

அன்பு நண்பருக்கு...
செய்தித் தாள்களில் படித்திருந்தால்கூட இவ்வளவு விவரமாகப் படித்திருக்க இயலாது. அவரது மீண்டும் ஜீனோ, சிறுகதை எழுதுவது எப்படி?, மதயமர் சிறுகதைகள் - இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அவர் எழுத்தால் கவரப்பட்ட விவரங்களை! இறுதி அஞ்சலியில் நேரில் கலந்துகொள்ள முடியாத துக்கத்தை வெளிக்கொண்டுவந்தது உங்கள் பதிவு. ஒரு சொட்டு கண்ணீர்த்துளியாவது வரும் உங்கள் பதிவைப் படிப்பவர்களுக்கு. கண்ணில் வராதவர்களுக்கு நெஞ்சிலாவது ஈரம் துளிர்க்கும்.
இந்தப் பதிவையே ராமானுஜர்தான் பார்ககவைத்தார் என்றால் உங்களுக்கு இன்னும் வியப்புமிகும். கத்யத்ரயம் என்ற தேடலைத் தேடியதில் பாலாஜி தன் பதிவில் உங்கள் லிங்கைத் தந்திருந்தார். இதனால் ராமானுஜருக்கும் என் சரணாகதி சென்று சேரட்டும்.
இ(எ)ன்றும் அன்புடன்
சைதை முரளி

உண்மைத்தமிழன் said...

//சைதை முரளி said...
அன்பு நண்பருக்கு... செய்தித் தாள்களில் படித்திருந்தால்கூட இவ்வளவு விவரமாகப் படித்திருக்க இயலாது. அவரது மீண்டும் ஜீனோ, சிறுகதை எழுதுவது எப்படி?, மதயமர் சிறுகதைகள் - இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அவர் எழுத்தால் கவரப்பட்ட விவரங்களை! இறுதி அஞ்சலியில் நேரில் கலந்துகொள்ள முடியாத துக்கத்தை வெளிக்கொண்டு வந்தது உங்கள் பதிவு. ஒரு சொட்டு கண்ணீர்த் துளியாவது வரும் உங்கள் பதிவைப் படிப்பவர்களுக்கு. கண்ணில் வராதவர்களுக்கு நெஞ்சிலாவது ஈரம் துளிர்க்கும். இந்தப் பதிவையே ராமானுஜர்தான் பார்கக வைத்தார் என்றால் உங்களுக்கு இன்னும் வியப்பு மிகும். கத்யத்ரயம் என்ற தேடலைத் தேடியதில் பாலாஜி தன் பதிவில் உங்கள் லிங்கைத் தந்திருந்தார். இதனால் ராமானுஜருக்கும் என் சரணாகதி சென்று சேரட்டும்.
இ(எ)ன்றும் அன்புடன்
சைதை முரளி//

நன்றி முரளி ஸார்.. அந்த அரங்கநாதன் திருவடியைச் சரணடைந்திருக்கும் நமது வாத்தியாருக்கு நமது அஞ்சலி எட்டட்டும்..

Anonymous said...

இன்றுதான் இந்தப் பதிவைப் படித்தேன். மீண்டும் ஒருமுறை அழுதேன். மறக்கமுடியவில்லை சுஜாதாவை. இத்தனைக்கும் அவரை நேரில் நான் சந்தித்தது கூட இல்லை. என்னைப் பொறுத்தவரை அவர் எஔத்துக்களின் வடிவில்தான் அறிமுகம் , பழக்கம். அது இன்றும் நீடிக்கிறது!

உண்மைத்தமிழன் said...

//Bhuvana said...
இன்றுதான் இந்தப் பதிவைப் படித்தேன். மீண்டும் ஒருமுறை அழுதேன். மறக்கமுடியவில்லை சுஜாதாவை. இத்தனைக்கும் அவரை நேரில் நான் சந்தித்தது கூட இல்லை. என்னைப் பொறுத்தவரை அவர் எஔத்துக்களின் வடிவில்தான் அறிமுகம் , பழக்கம். அது இன்றும் நீடிக்கிறது!//

இறந்தும், இறவாத நிலையில் இருப்பவர் நமது வாத்தியார் சுஜாதாதான்.. நாட்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், தின வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நிகழ்வில் அவருடைய ஞாபகம் நமக்கு வந்து கொண்டேயிருக்கிறது.. தவிர்க்க முடியவில்லை.. அவருடைய நினைவுகள் நமது நெஞ்சுக் குமிழ்களை சூழ்கின்றன.. அப்புறப்படுத்த முடியாத திசு அவர்..

நெல்லை சிவா said...

ரொம்ப வருத்தமாய் இருந்தது, சுஜாதாவின் அந்திம நிகழ்வுகளை எந்தப் பத்திரிக்கையிலும் படிக்கமுடியவில்லையே என்று. அருமையான பதிவு. அவரோடு அருகிலிருந்து பழகியது, உங்களின் கொடுப்பினை. நன்றி..

கிரி said...

இன்று தான் இந்த பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையாக எழுதி இருக்கிறீர்கள் உண்மை தமிழன். சுஜாதா பற்றி பல விமர்சனங்கள், யார் தான் விமர்சனத்திற்கு உள்ளாகவில்லை. தவறை மட்டுமே பூத கண்ணாடி வைத்து பார்ப்பவர்களுக்கு பதில் சொல்வது அவசியம் இல்லாதது.

அவரை பற்றி அழகாக கூறி இருக்கிறீர்கள், என்னை போன்றவர்களுக்கு அறிவியலை எளிமையான முறையில் கூறியது, சாதாரண விசயத்தில் கூட அவர் காட்டும் ஆர்வம் என்று அவர் எப்போதும் எனக்கு ஆச்சர்யம் தான். அவருக்கு தெரியாத விசயங்களே இல்லையா என்று நான் ஆச்சர்ய பட்டது பல நேரங்களில். அப்படிப்பட்டவரின் இழப்பு ஜீரனிக்கமுடியாததுதான்.

உங்களுடைய நீண்ட பதிவும் மனதை தொட்டது. தாமத பின்னூட்டமாக இருந்தாலும், என் மனதில் இருந்ததை கூற வேண்டும் என்று தோன்றியதால் கூறினேன். வெளியிடுவது, வெளியிடாததும் உங்கள் விருப்பம்.

அன்புடன்
கிரி

உண்மைத்தமிழன் said...

//நெல்லை சிவா said...
ரொம்ப வருத்தமாய் இருந்தது, சுஜாதாவின் அந்திம நிகழ்வுகளை எந்தப் பத்திரிக்கையிலும் படிக்க முடியவில்லையே என்று. அருமையான பதிவு. அவரோடு அருகிலிருந்து பழகியது, உங்களின் கொடுப்பினை. நன்றி..//

நன்றி சிவா.. எத்தனையோ பத்திரிகைகளின் விற்பனைக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார் வாத்தியார். அந்தப் பத்திரிகைகள் அனைத்தும் அவருடைய இறப்புச் செய்தியை பக்கத்தை நிரப்பும் செய்தியாக பாவித்தது மனவருத்தம் தந்த விஷயம்..

உண்மைத்தமிழன் said...

//கிரி said...

நன்றி கிரி.. வாத்தியாரைப் பற்றி எப்போது படித்தாலும் அது உள்ளத்தைத் தொடத்தான் செய்யும். அவர் எப்போதும் நாம் எழுதும் எழுத்தில் இருக்கிறார் என்பதை நம்மால் மறக்க முடியாது.. அதனை நிரூபித்துவிட்டீர்கள்..//

Good citizen said...

படிக்கும் அனைவரையும் அழவைத்து விட்டீர்கள்,நிங்கள் சொன்னது போல் நானும் க்ரைம் நாவல் ராஜேஷ்குமார் ராஜேந்திரகுமார் என்று அரம்பித்து பின் சுஜாதாவைத் தொட்டவன் நான்.ஆணால் இன்றுவரை என்னால் ஜிரனிக்கமுடியாத வறுத்தம் என்னவென்றால் வசதி வாய்ப்புகள் இல்லாதபோது அவருடைய கதைகளை விழுந்து விழுந்து படித்த நான்,பிரான்சுக்கு வந்து கம்பியுட்டர்
வசதிகளெல்லாம் பெற்ற பின்னும்
ஒருமுரை கூட ஆன்லைனில் அவருடன் பேசவொ கேள்விகள் கேட்கவொ வாய்ப்புகள் அமையாமல் போனது சத்தியமாய் என் துரதிஷ்டம்தான். ஒரு எழுத்தாளனாய் தலைவன் பட்டம் பெற்றது நீ ஒருவந்தான் தலைவா..
தமிழ் எழுத்துகள் வாழும்வரை நீ எங்களின் உள்ளங்களில் வாழ்வாய் தலைவா;;;;;;;;;;

உண்மைத்தமிழன் said...

//moulefrite said...
படிக்கும் அனைவரையும் அழ வைத்து விட்டீர்கள்,நிங்கள் சொன்னது போல் நானும் க்ரைம் நாவல் ராஜேஷ்குமார் ராஜேந்திரகுமார் என்று அரம்பித்து பின் சுஜாதாவைத் தொட்டவன் நான்.ஆணால் இன்றுவரை என்னால் ஜிரனிக்க முடியாத வறுத்தம் என்னவென்றால் வசதி வாய்ப்புகள் இல்லாதபோது அவருடைய கதைகளை விழுந்து விழுந்து படித்த நான், பிரான்சுக்கு வந்து கம்பியுட்டர்
வசதிகளெல்லாம் பெற்ற பின்னும்
ஒருமுரை கூட ஆன்லைனில் அவருடன் பேசவொ கேள்விகள் கேட்கவொ வாய்ப்புகள் அமையாமல் போனது சத்தியமாய் என் துரதிஷ்டம்தான். ஒரு எழுத்தாளனாய் தலைவன் பட்டம் பெற்றது நீ ஒருவந்தான் தலைவா.. தமிழ் எழுத்துகள் வாழும்வரை நீ எங்களின் உள்ளங்களில் வாழ்வாய் தலைவா;;;;;;;;;;//

நன்றி ஸார்..

நானும்தான் சென்னையில் இருந்தும் நேரில்தான் பேசினேனே ஒழிய, ஒரு முறைகூட சாட்டில் போய் பேசவில்லை. பேசியிருக்க வேண்டும் என்று இப்போது நினைக்கிறேன்..

சிங். செயகுமார். said...

மிக நெகிழ்ச்சியான பதிவு உண்மைத் தமிழன்...
மீண்டுமொருமுறை அஞ்சலிகள்..

Anonymous said...

Well written, may be you could have avoided the frequent use of "Vathiyarae". As reader, the word seems to be a hurdle in hundred meter race. I just said, what I felt. You have the freedom to disagree. -Krishnamoorthy

உண்மைத்தமிழன் said...

//சிங். செயகுமார். said...
மிக நெகிழ்ச்சியான பதிவு உண்மைத்தமிழன்... மீண்டுமொருமுறை அஞ்சலிகள்..//

நன்றி சிங்.செயகுமார் அவர்களே..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Well written, may be you could have avoided the frequent use of "Vathiyarae". As reader, the word seems to be a hurdle in hundred meter race. I just said, what I felt. You have the freedom to disagree. -Krishnamoorthy.//

நன்றி கிருஷ்ணமூர்த்தி ஸார்..

வாத்தியாரே என்பது ஊனிலும், உடலிலும், இரண்டறக் கலந்துவிட்டது. அதுதான் இப்படி வெளிப்பட்டது..

ப்ரியா கதிரவன் said...

உண்மைத் தமிழன்,
படித்து முடிக்கும் போது ஏகத்துக்கு கண்ணீர் வரவழைத்து viteerkal.
உங்களுடன் நானும் இருந்து எல்லாவற்றையும் பார்த்த மாதிரி உணர்கிறேன்.

ஸ்ரீ.... said...

திரு உண்மைத்தமிழன் அவர்களுக்கு,

தங்கள் பதிவு, அம்மாமனிதனுக்கான நிறைவான அஞ்சலி. மிகவும் நன்றி.

ஸ்ரீ....

hari raj said...

நெகிழ்ச்சியான பதிவு உண்மைத்தமிழன்.

malar said...

சுஜாதவை பற்றி எல்லோரும் பின்னுட்டத்தில் எழுதிவிட்டார்கள் .என்னுடைய மனதில்

அவர் பிரிவை எண்ணி வருந்தும் அவர் மனைவியை எண்ணி தான் மனம் கனத்தது .

malar said...

////ஆனால் ஒன்று உண்மை வாத்தியாரே.. ‘நீ யாரை விரும்புறியோ.. யாரை பார்க்கணும்னு நினைக்கிறியோ.. யார் மாதிரி வரணும்னு நினைக்கிறியோ.. அதை நினைச்சுக்கிட்டே இரு.. நிச்சயம் வந்தே தீருவ.. பார்த்தே தீருவ.. அடைஞ்சே தீருவ..’////////

இது முற்றிலும் உண்மை .முயற்சி செய்தால் அடையலாம் .

பாலா said...

எங்க பதிவு முடிஞ்சிடுமோன்னு பயந்து பயந்து அடுத்த பாராவை படிக்க ஆரம்பிச்சி, கண்ணுல தண்ணி வர வர.. சீக்கிரம் முடிஞ்சிட்டா வைஃப் வர்றதுகுள்ள அழுது முடிச்சிடலாம்னு தோண ஆரம்பிச்சிடுச்சி.

வேணாங்க. இன்னும் கொஞ்சம் டைப் பண்ணினா... கோ...ன்னு அழுதுடுவேன்.

Radha Sriram said...

ஒரு நண்பர் நேற்று சுஜாத்தாவை பற்றி நியாபகபடுத்த.......தேடி பிடிச்சு இன்று மறுபடியும் படித்தேன் உங்க பதிவை! மனச பிசைஞ்சுடுச்சு..:(

உண்மைத்தமிழன் said...

//ப்ரியா said...
உண்மைத் தமிழன், படித்து முடிக்கும் போது ஏகத்துக்கு கண்ணீர் வரவழைத்து viteerkal. உங்களுடன் நானும் இருந்து எல்லாவற்றையும் பார்த்த மாதிரி உணர்கிறேன்.//

நன்றி ப்ரியா அவர்களே..

இத்தனை நாட்கள் கழித்தென்றாலும் பின்னூட்டம் போட்டமைக்கு நன்றி..

உண்மைத்தமிழன் said...

//ஸ்ரீ..... said...
திரு உண்மைத்தமிழன் அவர்களுக்கு,
தங்கள் பதிவு, அம்மாமனிதனுக்கான நிறைவான அஞ்சலி. மிகவும் நன்றி.
ஸ்ரீ....//

நன்றி.. நன்றி.. நன்றி..

உண்மைத்தமிழன் said...

//hari raj said...
நெகிழ்ச்சியான பதிவு உண்மைத்தமிழன்.//

நன்றி ஹரிராஜ்.. வாத்தியார் என்றைக்கும் நமக்குள்ள இருக்காரு..

உண்மைத்தமிழன் said...

//malar said...
சுஜாதவை பற்றி எல்லோரும் பின்னுட்டத்தில் எழுதிவிட்டார்கள்.
என்னுடைய மனதில் அவர் பிரிவை எண்ணி வருந்தும் அவர் மனைவியை எண்ணிதான் மனம் கனத்தது.//

என்ன செய்வது.? நமக்கே இப்படியிருக்கே.. அவுங்களுக்கு எப்படியிருந்திருக்கும்.. கஷ்டம்தான்.. ஆண்டவன் கொடுத்ததை அவனே எடுத்துக்கிட்டான்னு திருப்திப்பட வேண்டியதுதான்..

உண்மைத்தமிழன் said...

//malar said...
/ஆனால் ஒன்று உண்மை வாத்தியாரே.. ‘நீ யாரை விரும்புறியோ.. யாரை பார்க்கணும்னு நினைக்கிறியோ.. யார் மாதிரி வரணும்னு நினைக்கிறியோ.. அதை நினைச்சுக்கிட்டே இரு.. நிச்சயம் வந்தே தீருவ.. பார்த்தே தீருவ.. அடைஞ்சே தீருவ..’/

இது முற்றிலும் உண்மை. முயற்சி செய்தால் அடையலாம்.//

இது எனது வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடம் மலர்..

அதனால்தான் சொன்னேன்..

உண்மைத்தமிழன் said...

//ஹாலிவுட் பாலா said...
எங்க பதிவு முடிஞ்சிடுமோன்னு பயந்து பயந்து அடுத்த பாராவை படிக்க ஆரம்பிச்சி, கண்ணுல தண்ணி வர வர.. சீக்கிரம் முடிஞ்சிட்டா வைஃப் வர்றதுகுள்ள அழுது முடிச்சிடலாம்னு தோண ஆரம்பிச்சிடுச்சி. வேணாங்க. இன்னும் கொஞ்சம் டைப் பண்ணினா... கோ...ன்னு அழுதுடுவேன்.//

பாலா ஸார்.. நானும்தான்.. எனக்கும் அப்படித்தான் இருக்கு.. உங்க பின்னூட்டத்தைப் படிச்சவுடனே..

வாத்தியார் வாத்தியார்தான்..

உண்மைத்தமிழன் said...

//Radha Sriram said...
ஒரு நண்பர் நேற்று சுஜாதாவை பற்றி நியாபகபடுத்த, தேடி பிடிச்சு இன்று மறுபடியும் படித்தேன் உங்க பதிவை! மனச பிசைஞ்சுடுச்சு..:(//

எனக்கும்தான்.

வருடம் கடந்தும் வாத்தியாரின் நினைவலைகள் தினந்தோறும் வந்து அலைமோதுகின்றன..

Anonymous said...

அப்போ நான் துபாய்ல வேலையா இருந்துட்டேன். கிட்டத்தட்ட ஒரு அப்பாவப் போல நினைச்சுகிட்டு இருக்கிற பல இளம் இதயங்களில் நானும் ஒருவன்.

மற்றவர்கள் தெரிவித்தது போல அந்த இடத்துல இல்லாம போனாலும், இப்ப படிக்கிறப்ப நான் அங்க இருந்து ஐயா அவர்களின் கடைசி பயனத்தை பார்த்த உணர்வ ஏற்படுத்தி இருக்கீங்க. என் கண்களின் கண்ணீர் நின்று இரு ஐந்து நிமிடங்கள் ஆச்சுன்னு நினைக்கிறேன்..ஆனா இன்னும் மனசுக்குள்ள அந்த ஈரம் காயலயே.

அரங்கன் மேல கோவம் கோவமா வருது. அந்தக் கால முனிவரா இருந்தா அவருக்கு சாகா வரம் கொடுத்திருப்பேன். இருந்தாலும், அரங்கன் அவருக்கு கொடுத்தது பல பாசமிகு பிள்ளைகளை.

ஒரு பாரதியோ, அவரின் தாசனோ, கலைஞரோ செய்யாதத சைலண்டா செஞ்சுட்டு மனுஷன் போயிட்டார்.

இத்தோட என் பின்னூட்டத்த முடிச்சுக்காலம்னு நினைக்கிறேன்...மனசு விடமாட்டேங்குது...இருந்தாலும் நிறுத்தியாகணுமே...

Unknown said...

இன்றோடு ஓராண்டு முடிந்துவிட்டது, ஆனாலும் மனதிற்கு அதிர்வை ஏற்படுத்தும் பதிவு.

உண்மைத்தமிழன் said...

///உண்மைத்தமிழன்(15270788164745573644) said...
//Radha Sriram said...
ஒரு நண்பர் நேற்று சுஜாதாவை பற்றி நியாபகபடுத்த, தேடி பிடிச்சு இன்று மறுபடியும் படித்தேன் உங்க பதிவை! மனச பிசைஞ்சுடுச்சு..:(//

எனக்கும்தான். வருடம் கடந்தும் வாத்தியாரின் நினைவலைகள் தினந்தோறும் வந்து அலைமோதுகின்றன..///

எனக்கு தினந்தோறும், ஒவ்வொரு முறை எழுதும்போதும் அவரது நினைப்பு வராமல் இல்லை..

அந்த அளவுக்கு ஆத்மார்த்தமாக நாம் அவரை விரும்பியிருக்கிறோம்..

நன்றி..

உண்மைத்தமிழன் said...

//விஜயசாரதி said...
அப்போ நான் துபாய்ல வேலையா இருந்துட்டேன். கிட்டத்தட்ட ஒரு அப்பாவப் போல நினைச்சுகிட்டு இருக்கிற பல இளம் இதயங்களில் நானும் ஒருவன். மற்றவர்கள் தெரிவித்தது போல அந்த இடத்துல இல்லாம போனாலும், இப்ப படிக்கிறப்ப நான் அங்க இருந்து ஐயா அவர்களின் கடைசி பயனத்தை பார்த்த உணர்வ ஏற்படுத்தி இருக்கீங்க. என் கண்களின் கண்ணீர் நின்று இரு ஐந்து நிமிடங்கள் ஆச்சுன்னு நினைக்கிறேன்..ஆனா இன்னும் மனசுக்குள்ள அந்த ஈரம் காயலயே. அரங்கன் மேல கோவம் கோவமா வருது. அந்தக் கால முனிவரா இருந்தா அவருக்கு சாகா வரம் கொடுத்திருப்பேன். இருந்தாலும், அரங்கன் அவருக்கு கொடுத்தது பல பாசமிகு பிள்ளைகளை. ஒரு பாரதியோ, அவரின் தாசனோ, கலைஞரோ செய்யாதத சைலண்டா செஞ்சுட்டு மனுஷன் போயிட்டார். இத்தோட என் பின்னூட்டத்த முடிச்சுக்காலம்னு நினைக்கிறேன்... மனசு விடமாட்டேங்குது... இருந்தாலும் நிறுத்தியாகணுமே...//

நன்றி விஜயசாரதி..

நமக்கும், அவருக்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லாமல் இருந்தாலும், அவர்தான் நமக்கு எழுத்துலக குரு என்பது நமக்குள்ளேயே இருக்கின்ற ஒன்று..

அதனை என்றாவது ஒரு நாள் நாம் வெளிப்படுத்தித்தான் ஆக வேண்டும். அந்த நேரம் இதுவாகத்தான் இருக்க வேண்டுமா..? கொடுமை..

உண்மைத்தமிழன் said...

//KVR said...
இன்றோடு ஓராண்டு முடிந்துவிட்டது, ஆனாலும் மனதிற்கு அதிர்வை ஏற்படுத்தும் பதிவு.//

நன்றி கே.வி.ஆர்.

அவருடைய நினைவே நமக்கு ஒரு அதிர்வைத்தான் ஏற்படுத்துகிறது..

Senthil said...

Very touching tribute Bala.
Missing you a lot Sujatha sir..

உண்மைத்தமிழன் said...

//Sen said...
Very touching tribute Bala. Missing you a lot Sujatha sir..//

நன்றி சென்.. வாத்தியாரின் மறைவு தமிழ் எழுத்துலகை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பது வரும் காலங்களில் நிச்சயம் தெரியும்..!

*இயற்கை ராஜி* said...

மிக நெகிழ்ச்சியான பதிவு :-(

உண்மைத்தமிழன் said...

//Iyarkai said...
மிக நெகிழ்ச்சியான பதிவு :-(//

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி இயற்கை..!

SuryaRaj said...

சுஜாதா அவர்கள் என்றைக்குமே எனக்கு வேறு ஒரு மனிதராகத் தெரிந்ததில்லை. ஏதோ என் குடும்பத்தில் அனைத்தும் தெரிந்த ஒருவராகத் தான் நினைத்து கொண்டு இருந்தேன். உங்கள் பதிவைப் படிக்கும் போதே வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்னால். ஆனால் அந்த கண்ணீரைக் கட்டுப் படுத்தவும் நான் விரும்பவில்லை. எனக்கு எவ்வளவோ அறிவூட்டிய சுஜாதாவிற்கு என் சில சொட்டு கண்ணீரால் மட்டுமே நன்றி கூற முடிந்தது என்னால்....

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் உங்கள் பதிவைப் படிக்கப் படிக்க உங்கள் மேல் பொறாமை தான் வந்தது எனக்கு. நீங்கள் கொடுத்து வைத்தவர் ஐய்யா!!! உங்களால் அவரைப் பல முறை சந்திக்க முடிந்தது. வாழ்க்கையில் ஒரு முறையாவது அவரைச் சந்திக்க வேண்டும் ஏனென்றால் "ஐ லவ் ஹிம்" என்று பல முறை பலரிடம் சின்ன வயதிலிருந்து சொல்லி இருக்கிறேன். என்னைப் போன்று பலரும் அவர் எழுத்தக்களைப் படித்து வளர்ந்திருப்பார்கள். ஆனால் அவரை சந்திக்கும் கொடுப்பினை மட்டும் ஏனோ கிடைத்ததில்லை..அப்படிப் பட்டவர்களுக்கு எல்லாம் இந்த பதிவு ஒரு ஆறுதல்..கற்பனையில் அவர் உங்களிடம் எப்படிப் பேசி இருப்பார் என்று உணர முடிந்தது. "ஐய்யோ! அப்படி ஒரு வாய்ப்பை ஏன் ஏற்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டோம் என்று என்னை நானே கடிந்து கொண்டேன் பல முறை.

அவரைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கலாம் என் வாழ் நாள் முடியும் வரை..

உண்மைத்தமிழன் said...

///SuryaRaj said...

சுஜாதா அவர்கள் என்றைக்குமே எனக்கு வேறு ஒரு மனிதராகத் தெரிந்ததில்லை. ஏதோ என் குடும்பத்தில் அனைத்தும் தெரிந்த ஒருவராகத்தான் நினைத்து கொண்டு இருந்தேன். உங்கள் பதிவைப் படிக்கும்போதே வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்னால். ஆனால் அந்த கண்ணீரைக் கட்டுப்படுத்தவும் நான் விரும்பவில்லை. எனக்கு எவ்வளவோ அறிவூட்டிய சுஜாதாவிற்கு என் சில சொட்டு கண்ணீரால் மட்டுமே நன்றி கூற முடிந்தது என்னால்....

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் உங்கள் பதிவைப் படிக்கப் படிக்க உங்கள் மேல் பொறாமைதான் வந்தது எனக்கு. நீங்கள் கொடுத்து வைத்தவர் ஐய்யா!!! உங்களால் அவரைப் பல முறை சந்திக்க முடிந்தது. வாழ்க்கையில் ஒரு முறையாவது அவரைச் சந்திக்க வேண்டும் ஏனென்றால் "ஐ லவ் ஹிம்" என்று பல முறை பலரிடம் சின்ன வயதிலிருந்து சொல்லி இருக்கிறேன். என்னைப் போன்று பலரும் அவர் எழுத்தக்களைப் படித்து வளர்ந்திருப்பார்கள். ஆனால் அவரை சந்திக்கும் கொடுப்பினை மட்டும் ஏனோ கிடைத்ததில்லை.. அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் இந்த பதிவு ஒரு ஆறுதல்.. கற்பனையில் அவர் உங்களிடம் எப்படிப் பேசி இருப்பார் என்று உணர முடிந்தது. "ஐய்யோ! அப்படி ஒரு வாய்ப்பை ஏன் ஏற்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டோம் என்று என்னை நானே கடிந்து கொண்டேன் பல முறை. அவரைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கலாம் என் வாழ் நாள் முடியும்வரை..///

நன்றிகள் கோடி மேடம்..

சுஜாதாவின் பாதிப்பு இல்லாத இளைய தலைமுறையை என்னால் காணவே முடியாது..

உங்களைப் போலவே எத்தனையோ தமிழர்களின் நெஞ்சங்களில் அவர் என்றென்றைக்கும் வீற்றிருப்பார்..

வாழ்க வாத்தியாரின் புகழ்..!

Balaji said...

Dear Saravanan,

I got chance to read your blog very lately,but you have reflected feelings of all the fans/followers/admirers of our Thalaivar.He is a legend and cannot be replaced by anybody.

Pallandu Pallandu Pallairathuandu avar pugal vaZha perumalai sevikiren.

பத்மநாபன் said...

அன்பு உண்மைத்தமிழன் ....
இன்று தாங்கள் 2 வருடம் முன்பு போட்ட ''வாத்தியார்'' பதிவிற்கு இப்போது பின்னூட்டம் ... பதிவுக்கு மட்டும் அல்ல பின்னுட்டங்களுக்கும் சேர்த்து .. முதலில் பதிவை படித்தவுடன் ஒரு யோசனை ....2 வருடங்களுக்கு பின்னர் பின்னூட்டம் இடுவது சரியா என்று ? வரிசையாக சென்ற ஜூலை மாதம் வரை நண்பர்கள் பின்னூட்டம் இட்டுள்ளார்கள்...இன்னமும் தொடரும் என்றே நினைக்கிறேன் .. அந்த அளவிற்கு ஒவ்வொரு வாசகனின் உள்ளத்திலும் உள்ள ஏக்கத்தின் பாசத்தின் வெளிப்பாடாக அமைந்தது ... அதிலும் அந்த வீட்டில் இருந்து கொண்டு
வந்த ஒவ்வொருவரையும் குறிப்பிட்டது உண்மைலேயே உச்சம் ....'' பாருங்க மக்களே , உலகத்தோரே .. தமிழ்கூறும் நல்லுலகமே,
எங்க வாத்தியாரை யாராரெல்லாம் வந்து பார்க்கிறார்கள் .. பன்முக அஞ்சலியை பாருங்கள் ''' என்று சொன்னது போல் இருந்தது ..
நான் வலைக்கு வந்தவுடன் வாத்தியாருக்கு சமர்ப்பணம் என்று முதல் பதிவை இட்டு விட்டு , நான் மட்டும் அப்படி செய்ததாக நினைத்து கொண்டிருந்தேன்... பின் பார்த்தால் ஒரு நூறு பேராவது அப்படி தொடங்கி இருக்கிறார்கள் என்றும் , ஆயிரம் பேராவது சிலாகித்து பதிவுகளை போட்டு வருகிறார்கள் என்று உணர்ந்தேன்.. தற்செயலாக சுஜாதாதேசிகனை படிக்க ஆரம்பித்து வந்த நாளில் , எதேச்சையாக
ஒருநாள் '' சேட்டிங்'' வந்திருந்தார் ..அவருடன் தட்டெழுத ..எழுத அடக்க முடியாத கண்ணீர் .... என்ன இந்த வயதில் என்று அவ்வப்பொழுது
நினைப்பேன் . தங்கள் பதிவையும் , பின்னூட்டங்களையும் பார்த்த பிறகு , எவ்வளவு நண்பர்கள் கண்ணீர் காணிக்கை செலுத்துகிறார்கள் .. '' தமிழை, அறிவை , அறிவியலை , ரசனையை , சுவாரஸ்யத்தை கற்று கொடுத்த அந்த எழுத்தாளனுக்கு நன்றியாக தானாக வரும் நன்றி காணிக்கை என்பதை உணர்ந்து கொண்டேன் ... உங்களுடைய பதிவும் சரி ..பின்னூட்டங்களும் சரி ... பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்
அன்புடன் சகரசிகன்..
பத்மநாபன்

R. Gopi said...

சூப்பர் தலைவரே. இது போல ஒரு பதிவு இதுவரை நான் படிக்கலை

உண்மைத்தமிழன் said...

[[[Balaji said...

Dear Saravanan,

I got chance to read your blog very lately, but you have reflected feelings of all the fans/followers/admirers of our Thalaivar. He is a legend and cannot be replaced by anybody.

Pallandu Pallandu Pallairathuandu avar pugal vaZha perumalai sevikiren.]]]

உண்மை பாலாஜி.. யாராலும் நிரப்பப்பட முடியாதது அவருடைய இடம். அதுவொரு தனித்தன்மை வாய்ந்தது..

எழுதுபவர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நமது வாத்தியார் போல் மக்கள் மனதில் இடம் பிடிப்பது இனிமேல் எவருக்கும் கஷ்டம்தான்..!

உண்மைத்தமிழன் said...

பத்மநாபன்..

உங்களுடைய மிக நீண்ட பின்னூட்டத்திற்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

நமது வாத்தியாரை என்றைக்கு வேண்டுமானாலும் நாம் நினைவு கூரலாம். இதற்கு காலக்கெடு எதுவும் கிடையாது..!

என் வாத்தியாருக்கு என்னால் செய்ய முடிந்தது இதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Gopi Ramamoorthy said...
சூப்பர் தலைவரே. இது போல ஒரு பதிவு இதுவரை நான் படிக்கலை..]]]

இவரைப் போல ஒரு வாத்தியாரை நாம் இதுவரையில் பார்த்ததில்லை கோபி ஸார்..!

வாத்தியாரைப் பிடிப்பதால்தான் அவர் தொடர்பான அனைத்தும் நமக்குப் பிடிக்கிறது..!

என்றைக்கு வேண்டுமானாலும் திருப்பித் திருப்பி இவரைப் புரட்டுவோம். நமக்குக் கிடைத்திருக்கும் கலைக் களஞ்சியம் அல்லவா இவர்..?

varagan said...

//சுடுகாட்டிற்கு பாரதியைத் தூக்கிச் சென்றபோது எண்ணி 8 பேர் வந்தார்கள் என்று கணக்குப் போட்டுச் சொன்னார்கள். உனக்கு எத்தனை பேர் என்று பார்த்தேன்.. சுமாராக 50 பேராவது இருக்கும்.. இதுவரைக்கும் சந்தோஷம்தான் வாத்தியாரே..//

கண்ணில் கண்ணீர் வர வைத்த விட்டது.

உங்களின் வரிகள்.

உங்களின் கனத்த இதயமே எங்களுக்கம்

நன்றி

வராகன்.

சாமக்கோடங்கி said...

சிறு வயதில் "என் இனிய இயந்திரா" தொடரைப் பார்த்து மிரண்டு போய் இருக்கிறேன்...

சுஜாதா புகழ் வானுள்ளவரை வாழும்..

தாராபுரத்தான் said...

சார் அவர்களை மீண்டும் பிறக்க வைத்து விட்டீர்கள்.

Anonymous said...

முழுவதும் படிப்பதற்குள் கண்கள் குழமாகிவிட்டது.
“எனக்குள் படிக்கின்ற ஆர்வத்தை ஏற்படுத்தி, பின் அதனை அதிகப்படுத்தி, புத்தகங்களின் மீதான தாக்கத்தையும் ஏற்படுத்தி, பின் அதுபோல எழுதத் தூண்டியது சுஜாதாவின் எழுத்துக்கள்”
சத்தியமான எழுத்துக்கள் !

Sekar said...

Anbudan saravanan,
Azha vaiththa tharunam un padhivu.
Ezhudha aasaigalai thoondiya en GURU sujathavitkku un ezhuththu moolam
anjali. Ennaiyum unnodu avarin irudhi oorvalaththitkku azhaiththu senraai. Nanri Saravanan.

Ennai azha vaiththu vitteergal. Adhatkkum SUJATHAvukku Nanri Solliyaaga vendum
Anbudan
Major Dr N Sekar

Sundar said...

துக்கம் தொண்டையை அடைக்க படித்தேன். நீங்கள் எழுதிய அனைத்தும் நானும் அவர் கதைகளை படிக்கும்போது உணர்ந்திருக்கிறேன். நம்முடைய பொது அறிவு விரிவடைந்து வருவதை நம்மால் உணர முடியும். “சுவற்றில் வான் பாஸ்டன் படம் மாட்டி இருந்தது”. ”உங்கள் மனைவியை ஆடாப்ஸிக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்” என்றெல்லாம் எழுதி நம்முடைய தேடலை, இந்த வார்த்தை புரியும் வரை விட மாட்டேன் என்கிற தீவிர மனோ நிலைக்கு கொண்டு சென்றவர். Hats off to him!

உண்மைத்தமிழன் said...

[[[varagan said...

//சுடுகாட்டிற்கு பாரதியைத் தூக்கிச் சென்றபோது எண்ணி 8 பேர் வந்தார்கள் என்று கணக்குப் போட்டுச் சொன்னார்கள். உனக்கு எத்தனை பேர் என்று பார்த்தேன்.. சுமாராக 50 பேராவது இருக்கும்.. இதுவரைக்கும் சந்தோஷம்தான் வாத்தியாரே..//

கண்ணில் கண்ணீர் வர வைத்த விட்டது. உங்களின் வரிகள்.
உங்களின் கனத்த இதயமே எங்களுக்கம்.

நன்றி

வராகன்.]]]

இந்த அளவுக்காச்சும் வந்தார்களே என்று சந்தோஷப்பட்டேன் வராகன் ஸார்..

உண்மைத்தமிழன் said...

[[[சாமக்கோடங்கி said...
சிறு வயதில் "என் இனிய இயந்திரா" தொடரைப் பார்த்து மிரண்டு போய் இருக்கிறேன்... சுஜாதா புகழ் வானுள்ளவரை வாழும்..]]]

நிச்சயம் ஸார்.. அதில் சந்தேகமில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[தாராபுரத்தான் said...
சார் அவர்களை மீண்டும் பிறக்க வைத்துவிட்டீர்கள்.]]]

அவர் எப்போதும் நம்முடனேயே இருக்கிறார் தாராபுரத்தான்..! நம் ஒவ்வொருவரின் எழுத்திலும் அவர் தெரிகிறார்..!

உண்மைத்தமிழன் said...

[[[musictoday said...

முழுவதும் படிப்பதற்குள் கண்கள் குழமாகிவிட்டது.

“எனக்குள் படிக்கின்ற ஆர்வத்தை ஏற்படுத்தி, பின் அதனை அதிகப்படுத்தி, புத்தகங்களின் மீதான தாக்கத்தையும் ஏற்படுத்தி, பின் அதுபோல எழுதத் தூண்டியது சுஜாதாவின் எழுத்துக்கள்”

சத்தியமான எழுத்துக்கள் !]]]

இதைவிட வேறென்ன எழுத முடியும்..? உண்மைதானே..?

உண்மைத்தமிழன் said...

[[[Sekar said...

Anbudan saravanan, Azha vaiththa tharunam un padhivu.

Ezhudha aasaigalai thoondiya en GURU sujathavitkku un ezhuththu moolam anjali. Ennaiyum unnodu avarin irudhi oorvalaththitkku azhaiththu senraai. Nanri Saravanan.

Ennai azha vaiththu vitteergal. Adhatkkum SUJATHAvukku Nanri Solliyaaga vendum
Anbudan
Major Dr N Sekar]]]

பின்னூட்ட அஞ்சலிக்கு நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

துக்கம் தொண்டையை அடைக்க படித்தேன். நீங்கள் எழுதிய அனைத்தும் நானும் அவர் கதைகளை படிக்கும்போது உணர்ந்திருக்கிறேன். நம்முடைய பொது அறிவு விரிவடைந்து வருவதை நம்மால் உணர முடியும். “சுவற்றில் வான் பாஸ்டன் படம் மாட்டி இருந்தது”. ”உங்கள் மனைவியை ஆடாப்ஸிக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்” என்றெல்லாம் எழுதி நம்முடைய தேடலை, இந்த வார்த்தை புரியும்வரை விட மாட்டேன் என்கிற தீவிர மனோ நிலைக்கு கொண்டு சென்றவர். Hats off to him!]]]

வருகைக்கு நன்றிகள் ஸார்..

ஸ்ரீராம். said...

இன்று படிக்கும்போதும் கண்களில் நீரை வரவழைத்து விட்டீர்கள்.

சீனு said...

சரி! எந்திரன் படத்தில் அவர் பேரை முதலில் போடுவாங்கன்னு எதிர்பார்த்தேன். இல்லவே இல்லை. மாறன் பிரதர்ஸுக்கு ஏதாவது கான்டா வாத்தியார் மேல?

Jackiesekar said...

வேலை பளு காரணமா தலைவருக்கு தாமதமாதான் அஞ்சலி செலுத்தறேன்... நீ எழுதிய பதிவுகளில் இந்த பதிவு தி பெஸ்ட்.. ரொம்ப டச்சிங்கான ரைட்டிங்...இந்தளவுக்கு நுட்பமா எழுத கத்துக்கொடுத்தும் அவரேதான்...ஒருவரலாற்று பதிவு போல இது என்பது உண்மை... அரங்கன் பக்கத்தில் அமர்ந்து வாத்தியார் இதை வாசிக்கவும் வாய்ப்பு அதிகமே....


அஞ்சலிகள்