இவர்தான் பத்திரிகையாளர்..!

24-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சோதனை மேல் சோதனையாக வந்து கொண்டிருக்கிறது..! கனிமொழியின் கைதைத் தொடர்ந்து கலைஞருக்கு கிடைத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி அவருடைய உற்றத் தோழர் இரா.தியாகராஜன் என்ற சின்னக்குத்தூசியாரின் மரணம்தான்..!

பத்திரிகையுலகில் எத்தனை, எத்தனையோ பேர் இன்றைக்கு பெயர் சொல்லும் அளவுக்கு வளர்ந்திருந்தாலும், அத்தனை பேரும் தங்களது வாழ்க்கையில் ஒரு முறையாவது தவறாமல் கால் வைத்திருக்கும் இடம், சின்னக்குத்தூசியார் தங்கியிருந்த ஸ்டார் தியேட்டர் அருகில் இருந்த அவருடைய மேன்ஷன் அறைதான்..!

அவருடைய அபாரமான நினைவாற்றல் அவருடைய இறுதிக் காலம்வரையிலும் அவருக்கு உற்ற துணையாய் இருந்து அவரை எழுத வைத்திருக்கிறது எனில், இந்த நாத்திகனின் நாவில் சரஸ்வதி ஏன் குடியிருந்தாள் என்று நாமே யோசிக்கத்தான் வேண்டும்..!!!

அவருடைய வாழ்க்கை வரலாற்றை நக்கீரன் இணையத்தளத்தில் படித்தேன். அது  இங்கே உங்களுக்காக :

சின்னக்குத்தூசி என்றழைக்கப்படும் இரா.தியாகராஜன் அவர்கள் 15.06.1934ல் திருவாரூரில் பிறந்தார். தந்தை ராமநாதன். தாயார் கமலா அம்மையார். திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற சின்னக்குத்தூசி, பள்ளியில் படிக்கும்போதே திருவாரூர் நகர திராவிட இயக்க முன்னோடிகளான சிங்கராயர், முத்துக்கிருஷ்ணன், வி.எஸ்.பி. யாகூப், 'தண்டவாளம்' ரங்கராஜன் ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பால் திராவிட இயக்க கொள்கைகளின்பால் கவரப்பட்டார்.

பள்ளிப் படிப்பு முடிந்த பின், பயிற்சி பெறாத ஆசிரியராக பணியாற்றிய சின்னகுத்தூசி(எ)இரா.தியாகராஜன், ஆகிரியர் பயிற்சி பெறுவதற்காக, திருவாரூர் நகர மன்றத் தலைவராக இருந்த சாம்பசிவம் அவர்களிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று தந்தை பெரியாரை சந்தித்தார். பெரியாரின் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சிறப்பு அனுமதியின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு, ஆசிரியர் பயிற்சி பெற்றார். அதன் பின், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவற்றில் குறிப்பிடத்தக்கது, குன்றக்குடி அடிகளார் அவர்களின் நிர்வாகத்தில் செயல்பட்ட குன்றக்குடி உயர்நிலைப் பள்ளியாகும். இப்பள்ளியில் பணியாற்றும்போது, குன்றக்குடி அடிகளாரின் அன்பைப் பெற்று, அவரிடம் நெருக்கமாக செயலாற்றினார்.

குன்றக்குடியில் பணியாற்றிய காலத்தில், தமிழ்த் தேசியக் கட்சியின் நிறுவனர் ஈ.வி.கி.சம்பத் அவர்களின் அழைப்பை ஏற்று, ஆசிரியர் பணியைத் துறந்துவிட்டு சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்று  சிறை சென்றார்.

திருவாரூரிலிருந்து வெளியான ‘மாதவி’ வார இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய சின்னக்குத்தூசி, பின்னர் தமிழ்த் தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘தமிழ்ச் செய்தி’ வார இதழ், நாளிதழ் ஆகியவற்றின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார்.  தமிழ்த் தேசியக் கட்சி, காங்கிரசில் இணைந்த பிறகு, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நடத்திய 'நவசக்தி'யில் தலையங்க ஆசிரியராக சிறிது காலம் பொறுப்பேற்றிருந்தார்.

‘நாத்திகம்’, ‘அலைஓசை’, ‘எதிரொலி’, ‘முரசொலி’ உள்ளிட்ட நாளேடுகளிலும் ‘நக்கீரன்’, ‘ஜூனியர் விகடன்’ உள்ளிட்ட வாரமிருமுறை இதழ்களிலும் மற்றும் பல இதழ்கள், சிற்றிதழ்கள் ஆகியவற்றிலும் ஏராளமான அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதிக் குவித்துள்ளார்.
வலுவான வாதங்கள், அசைக்க முடியாத ஆதாரங்கள், மறுக்க இயலாத புள்ளிவிவரங்கள், வரலாற்று நிகழ்வுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் இவரது கட்டுரைகள் தமிழக அரசியல் களத்தில் பலரது கவனிப்பையும் பெற்று வருகின்றன.

இவரது கட்டுரைகள் 'புதையல்', 'கருவூலம்', 'களஞ்சியம்', 'சுரங்கம்', 'பெட்டகம்', 'எத்தனை மனிதர்கள்', 'சங்கொலி', 'முத்தாரம்' 'வைரமாலை' உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன. அமரர் ஜீவாவின் பொறுப்பில் வெளியான 'தாமரை' இதழிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. நாராண துரைக்கண்ணன் அவர்கள் நடத்திய ‘பிரசண்ட விகடன்’ இதழில் தொடர்கதை எழுதியுள்ளார். கலைஞர் அவர்களின் அன்பைப் பெற்ற சின்னக்குத்தூசி அவர்கள் ‘முரசொலி’யில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார்.

‘சின்னக்குத்தூசி’ என்ற புனைபெயரில் இவர் பரவலாக அறியப்பட்டாலும் ‘கொக்கிரகுளம் சுல்தான் முகமது’, ‘காமராஜ் நகர் ஜான் ஆசிர்வாதம்’, ‘தெரிந்தார்க்கினியன்’, ‘ஆர்.ஓ.மஜாட்டோ’, ‘திட்டக்குடி அனீஃப்’ ஆகிய புனைப் பெயரிகளிலும் பல அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நடமாடும் திராவிட இயக்க களஞ்சியம் எனும்படி தமிழகத்தின் 60 ஆண்டு கால அரசியல் விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் சின்னக்குத்தூசி அவர்கள் இந்திய அரசியல் குறித்தும் ஆழ்ந்த அறிவனுபவம்மிக்கவர். பொது வாழ்க்கை - எழுத்துப் பணி இவற்றிற்காக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த சின்னக்குத்தூசி அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி எண்.13 வல்லப அக்கிரஹாரம் தெருவில் தங்கியிருந்த சிறிய அறை, இன்றைய பத்திரிகையாளர்களின் வேடந்தாங்கலாக அமைந்திருந்தது. மனிதநேயம், பகத்தறிவு, சுயமரியாதை ஆகியவற்றை இலட்சியங்களாகக் கொண்டு திராவிட இயக்க நெறிகளின்படி வாழ்ந்து வந்தவர் திரு.சின்னக்குத்தூசி (எ) இரா.தியாகராஜன் அவர்கள்.

- 'முரசொலி'யில் அவர் பெயரில் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக வாசித்து வந்திருக்கிறேன்.. புள்ளி விவரங்களை அவர் அடுக்கி வைக்கும் லாவகமே தனி..! தி.மு.க.வுக்கு ஆதரவாக அவர் எழுதினாலும் அந்த சாய்வுத் தன்மையை இந்த புள்ளி விவரங்களையும், அவருடைய வார்த்தை ஜாலங்களையும் வைத்தே பூசி மெழுகிவிடுவார்..!

நான் ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் பணியாற்றியபோதுதான் ‘முரசொலி’யை ஒரு நாள்கூட விடாமல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘முரசொலி’யில் வரும் ஐயாவின் எழுத்துக்கு, மறுநாள் ‘நமது எம்.ஜி.ஆரி.ல்' பதில் வரும்.. அதற்கு அடுத்த பதில் ‘முரசொலி’யில் மறுநாளே வரும்.. இதையெல்லாம் தொடர்ந்து படித்து வந்தால் நமக்கு நிச்சயம் தலை சுற்றும். இரண்டு பக்கம் எழுதுபவர்களும் தங்களுக்குச் சாதகமான அரசியல் நிகழ்வுகளை தேதி, வருடம், மாதம், இடத்தையும் சொல்லி அசரடிப்பார்கள்..!

அதென்ன ‘சின்னக்குத்தூசி’ என்று இவரது பெயருக்கான விளக்கத்தைக் கேட்கப் போய், ‘பெரிய குத்தூசி’யாக இருந்த மறைந்த பெரியவர் ‘குத்தூசி குருசாமி’யின் வாழ்க்கை வரலாற்றையும் இவர் மூலமாகவே அறிந்து கொண்டேன்..!

என்னுடன் ‘தமிழன் எக்ஸ்பிரஸில்’ பணியாற்றி வந்த வேதராஜன் என்னும் தலைமை ஆர்ட்டிஸ்ட்டும், திருவாரூர் பாபு(‘கந்தா’ படத்தின் இயக்குநர்) என்னும் ரிப்போர்ட்டரும் திருவாரூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வாரத்திற்கு ஒரு நாள் சின்னக்குத்தூசியாரை நேரில் சென்று பார்த்து வருவார்கள்.. இவர்கள் அவரைப் பற்றிச் சொன்னதைக் கேட்டு ஒரு நாளாவது அவரை நேரில் சந்தித்துவிடலாம் என்ற ஆசையோடு இருந்தேன்.

‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் அப்போது கேள்வி-பதில் வெளியாகிக் கொண்டிருந்தது. அதில் அந்த வாரத்திய ‘முரசொலி’ இதழில் சின்னக்குத்தூசியார் எழுதியிருந்த ஒரு கட்டுரையைப் பாராட்டி சில வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. எங்களது பத்திரிகையின் வழக்கப்படி இது போன்ற நேரங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்த வார இதழை நேரடியாகவோ, அஞ்சலிலோ அனுப்பி வைப்பது எங்களது வழக்கம்..! அதன்படி ஒரு சனிக்கிழமையன்று என்னை சின்னக்குத்தூசியாரிடம் நேரில் சென்று அந்த வார 'தமிழன் எக்ஸ்பிரஸ்' இதழைக் கொடுத்துவிட்டு வரும்படி கூறினார் எனது உதவி ஆசிரியர் ஆர்.சிவகுமார்.

நானும் மிகுந்த ஆர்வத்துடன் சின்னக்குத்தூசியாரை நேரில் சென்று சந்தித்தேன்.. பெயர், ஊர், படிப்பு, குடும்பம் என்று எல்லாவற்றையும் கேட்டார்.  என்னுடைய பல நாள் ஆச்சரியமான அவருடைய நினைவாற்றல் பற்றி அவரிடத்திலேயே அப்போது கேட்டேன். மெல்ல சிரித்துக் கொண்டார்.

“அது தானா அமைஞ்சதுதான்.. நீங்களும் படிக்கும்போது உன்னிப்பா, கருத்தோட, ஆர்வத்தோட படிக்கணும்.. நிச்சயமா அது மனசுல நிக்கும்.. அத்தோட இங்க பாருங்க... (அருகில் குவிந்திருந்த காக்கி அட்டை போட்ட கவர்களைக் காட்டினார்) இதுல பல அரசியல் விஷயங்களை பிரிச்சுப் பிரிச்சு வைச்சிருக்கேன். ஏதாவது சந்தேகம்ன்னா அதுல இருந்து எடுத்துப் பார்த்துக்குவேன்.. அதுனால நான் என்னவோ ஸ்பெஷல்லாம் இல்லை.. அப்படி நினைச்சுக்காதீங்க..!” என்றார் தன்மையாக..!

அப்போது ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை கொஞ்சம் தி.மு.க. எதிர்ப்பாக போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் வாராவாரம் தி.மு.க. அமைச்சர்களின் பேட்டியையும் எடுத்துப் போட்டு ‘பேலன்ஸ்’ செய்து கொண்டிருந்தோம்.. இதையெல்லாம் குறிப்பி்ட்டுக் காட்டியவர், “என்னதான் நீங்க நடுநிலைமையா இருக்குற மாதிரி எழுதினாலும், அட்டைல போடுல நியூஸெல்லாம் எங்களுக்கு எதிராத்தான் இருக்கு..” என்று சொல்லிவிட்டு லேசாகச் சிரித்தார்.

“தி.மு.க.வின் வரலாறு பற்றி முழுமையாக நான் தெரிந்து கொள்ள வேண்டும். ஏதாவது புத்தகம் இருக்காங்களா ஐயா..?” என்றேன்..! அப்போது திருநாவுக்கரசு எழுதிய புத்தகம் வெளியாகவில்லை. கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி' மட்டுமே இருந்தது என்று நினைக்கிறேன்..!

“அதை யாரும் முழுசா அப்டேட்டா இதுவரைக்கும் எழுதலை.. கலைஞரோட 'நெஞ்சுக்கு நீதி' இருக்கே. அதைப் படிங்களேன்..” என்றார்.. நான் அதற்கு காட்டிய முக பாவனையை வைத்தே எனது எண்ணவோட்டத்தைக் கண்டறிந்தவர், பட்டென்று சிரித்தார்.. “ஓ.. நம்ப மாட்டீங்களா..? அப்போ பி.சி.கணேசன் ஒண்ணு எழுதியிருந்தார்..! ஆனா அதுவும் ஒரு பக்கச் சார்பாத்தான் இருக்கு. அவர் கொஞ்சம் காமராஜர் ஆளு. அதுனால அதுவும் முழுசா இருக்காது..!” என்றார்..! “அப்புறம் இன்னும் சின்னச் சின்னப் புத்தகங்களா நிறைய இருக்கு. நான் சில, சில சம்பவங்களைத் தொகுத்துதான் எழுதியிருக்கேன்..” என்றார்..!

அப்போது நான் தேடிக் கொண்டிருந்த வேறொரு புத்தகம் பற்றி அவரிடம் கேட்டேன்.. “கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனி்ன் வாழ்க்கை வரலாறு பற்றி வேலூரைச் சேர்ந்த ஒருத்தர் எழுதுன புத்தகத்தை மதுரை லைப்ரரில படிச்சேங்க ஐயா.. நல்லா இருந்தது.. பெரிய சைஸ் புத்தகம். அதை காசு கொடுத்து வாங்கலாம்னு பார்க்குறேன். கிடைக்க மாட்டேங்குது...” என்றேன்..!

“ஓ.. இருக்கு.. இருக்கு..” என்றவர் சின்னக் குழந்தைபோல் சந்தோஷத்துடன் தனது புத்தகப் புதையலைத் தேடித் துழாவி அந்தப் புத்தகத்தை எடுத்துக் காட்டினார். அவருடைய முகத்தில் தெரிந்த அந்த சந்தோஷத்தை இப்போதும் நான் உணர்கிறேன்..! ஆனால் எந்த வார்த்தைகளில் அதைச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. தேடிக் கொண்டிருந்த ஒரு புத்தகம் தன்னிடம் இருக்கிறது என்பதைச் சொல்லும்போது அந்த புத்தகப் பிரியனுக்குத்தான் எத்தனை சந்தோஷம்..!

நான் அதை ஆசையாக வாங்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு ஏக்கத்துடன் அவரைப் பார்த்தேன்.. என் கண்ணை வைத்தே கண்டுபிடித்தவர், “அது ஒரு காப்பிதாம்பா என்கிட்ட இருக்கு. நீயொரு ரெண்டு வாரம் கழிச்சு வா. நான் அது இப்ப எங்க கிடைக்குதுன்னு கேட்டு வைக்குறேன்..என்ன சரியா..?” என்றார்..!

நான் ஆசையோடு படிக்கத் துடித்துக் கொண்டிருந்த அந்தப் புத்தகத்தை பார்த்துவிட்ட திருப்தியோடு மட்டுமே அங்கிருந்து கிளம்பினேன்..! அதே சூட்டோடு 'தமிழன் எக்ஸ்பிரஸின்' அந்த வாரத்திய புத்தகத்தை தி.நகரில் துணை ஆசிரியர் சிவக்குமாரின் வீட்டிற்கு வந்து கொடுத்துவிட்டு அவரிடத்தில் நடந்ததைச் சொல்லி சந்தோஷப்பட்டது இப்போதும் நினைவுக்கு வந்து தொலைகிறது..!

இதோ இன்றைக்கு அந்த இருவருமே.. சின்னக்குத்தூசியாரும், அண்ணன் சிவக்குமாரும் ஒரே நாளில் மரணமடைந்திருக்கிறார்கள்.. இது என்னளவில் ஏதோவொரு ஒற்றுமை..! என்னவென்று சொல்வது..!?

இடையில் சின்னக்குத்தூசியார் கலைஞரோடு பிணக்குக் கொண்டு வெளியேறியபோது துக்கம் விசாரிப்பதுபோல் சாரை, சாரையாக அவரது அறைக்கு நண்பர்களும், பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்படியொரு சூழலில் இரண்டாவது முறையாகவும் ஒரு மாலை வேளையில்  அவரைச் சந்தித்தேன். ஆனால் அதிகமாக பேச முடியவில்லை..! அப்படியொரு கூட்டம். சுவரில் சாய்ந்தபடி நின்று கொண்டுதான் வேடிக்கை பார்த்தேன்..!

1996-ல் கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்பு, ஒரு பகல் பொழுதில் கலைஞர் ஆலிவர் ரோடு வீட்டில் இருந்து முரசொலி அலுவலகத்திற்கு போன் செய்து சின்னக்குத்தூசியாரிடம் பேசியிருக்கிறார். காங்கிரஸுக்கு ஆதரவாக சில கட்டுரைகளை முரசொலியில் எழுதும்படி கேட்டிருக்கிறார். குத்தூசியார் அதை மறுத்திருக்கிறார். கலைஞர் வற்புறுத்த.. குத்தூசியார் அதை மறுத்துப் பேச.. இப்படியே வாக்குவாதங்கள் தொடர்ந்திருக்கின்றன. ஒரு கட்டத்தில் “எனக்கும் எழுதத் தெரியும்.. தெரியும்ல..” என்று கலைஞர் சற்றுக் கோபமாகக் கேட்டுவிட.. குத்தூசியார் பதில் ஏதும் சொல்லாமல் போனை வைத்துவிட்டு “ரூமுக்கு போயிட்டு வர்றேன்..” என்று சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறிப் போயே போய்விட்டார்..! இதுதான் அப்போது நடந்த கதை என்று பத்திரிகையுலகில் சொல்கிறார்கள்..!

அவர் வெளியேறிவிட்டார் என்பதையறிந்து மறுநாள் முரசொலி அலுவலகம் வந்த கலைஞர் குத்தூசியாரின் ஜாதியைச் சொல்லி முதல் முறையாக ஒரு கமெண்ட் அடித்தாராம். அதுவும் குத்தூசியாரின் காதுக்கு வந்துவிட.. நோ சமரசம் என்று சொல்லி விடாப்பிடியாக நின்றுவிட்டார்..!

இடையில் ‘முரசொலி’ விருதுகள் வழங்கும் விழாவிலும், சில திருமண நிகழ்ச்சிகளிலும் சின்னக்குத்தூசியின் பெயரைச் சொல்லாமலேயே அவரைப் பற்றிப் பேசினார் கலைஞர்..! இந்தக் காலக்கட்டத்தில் சின்னக்குத்தூசியார் ‘நக்கீரனில்’ கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.. இந்தக் கட்டுரையில்கூட தி.மு.க.வைத் தாக்கியோ, கலைஞரைத் தாக்கியோ அவர் எழுதவில்லை.. தி.மு.க.வுக்கு அட்வைஸும், கலைஞருக்கு ஆதரவாகவும்தான் தொடர்ந்து எழுதிவந்தார்.

2001-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்பு கலைஞரை நட்ட நடு இரவில் கைது செய்தபோது அதைத் தொலைக்காட்சியில் பார்த்து பதறிப் போனவர், உடனேயே 'முரசொலி' செல்வத்திற்கு போன் செய்து தான் மீண்டும் 'முரசொலி'யில் எழுத விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார். இப்படித்தான் திரும்பவும் 'முரசொலி' காம்பவுண்ட்டுக்குள் ஐயா திரும்பி வந்திருக்கிறார்..!

மூன்றாவது முறையாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் அதே மேன்ஷன் அறையில் அவரைச் சந்தித்தேன். அப்போது பதிப்பகம் ஒன்றுக்காக தமிழக முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதலாம் என்று ஒரு ஐடியா தோன்றியிருந்தது.

அது தொடர்பாகத்தான் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். வாசலில் சேர் போட்டு உட்கார்ந்திருந்தார். அவரைத்தான் பார்க்க வந்தேன் என்றவுடன், என் கையைப் பிடித்தபடியே எழுந்து அறைக்குள் வந்தார். விஷயத்தைச் சொல்லி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன்  “உங்க மெஷினை பார்த்தவுடனேயே எனக்கு ஞாபகம் வந்திருச்சு.. இப்ப எங்க இருக்கீங்க? என்ன பண்றீங்க..?” என்றெல்லாம் விசாரித்தார்..! விஷயத்தைச் சொன்னேன்..!

“பக்தவச்சலம் பற்றி அதிகமாக யாரும் எழுதவில்லை. அவருடைய மகள் மட்டுமே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது அவர்களுடைய பார்வையில்தான் இருக்கும். நீங்கள் நடுநிலைமையோடு எழுதுவதாக இருந்தால் நிறைய உழைக்கணும். பெரியார் திடல் நூலகத்துக்கும், அண்ணா அறிவாலய நூலகத்துக்கும் டெய்லி போங்க.. அறிவாலயத்துல நான் அனுப்பினேன்னு சொல்லுங்க. உள்ள விடுவாங்க..! 30 வருட பேப்பர்களைப் புரட்டினால்தான் உங்களால ஒரு லெவலுக்கு வர முடியும். அதைவிட்டுட்டு தெரிஞ்சவங்ககிட்ட கேட்டு, கிடைச்ச புத்தகத்தை மட்டும் படிச்சு எழுதினீங்கன்னா அது சரியா வராது.. இது என்னோட கருத்து..” என்றார்..!

அவரிடத்தில் இருந்த புத்தகங்களை நூலகங்களுக்குக் கொடுத்துவிட்டதாகச் சொன்னார். கொஞ்சம் புத்தகங்களையும், தகவல்களையும் மட்டுமே தான் வைத்திருப்பதாகவும் சொன்னார். ஆனால் பக்தவச்சலம் பற்றி நிறையவே பேசினார். தி.மு.க.வின் எதிர்ப்புணர்வுக்கு தினமும் உரம் போட்டு ஊட்டி வளர்த்தது தி.மு.க. தலைமையினரின் பேச்சுத் திறமை மட்டும்தான் என்றில்லை. பக்தவச்சலமும் ஒரு காரணம். அவர்தான் தினம்தோறும் ஒரு பிரச்சினையைக் கிளப்பி, தி.மு.க. போராடுவதற்கு பிளாட்பார்ம் அமைத்துக் கொடுத்தார்..! அவர் மட்டும் காமராஜரை போல நடந்து கொண்டிருந்தால், தி.மு.க. இன்னும் கொஞ்சம் தாமதமாகத்தான் ஆட்சியைப் பிடித்திருக்கும்.. தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று பக்தவச்சலம் கடைசி காலத்தில்தான் உணர்ந்து கொண்டார்..” என்றார் குத்தூசியார்..!

பக்தவச்சலம் தனது இறுதிக் காலங்களில் கண் பார்வையை இழந்து மிகவும் கஷ்டப்பட்டதை ‘அச்சச்சோ’ உணர்வோடு சொன்னார் குத்தூசியார். “அப்படியிருந்தும் தன்னைப் பார்க்க வர்றவங்க.. உதவி கேட்டு வர்றவங்களுக்கு லெட்டர் கொடுத்துவிடுவார் தம்பி. பேப்பர்ல தடவித் தடவி எழுதுவாராம்.. கையெழுத்து போடும்போது மட்டும் ஒரு ஆள் கையைப் பிடிச்சுக்கிட்டு, ஒரு மாதிரி நீட்ட வாக்குல கையெழுத்துப் போட்டு அனுப்பி வைப்பாரு.. பாவம்...” என்றார்..!

இதைச் சின்னக்குத்தூசியார் சொல்லிவிட்டு சற்று நேரம் அமைதியாகிவிட்டார். அந்தச் சூழலை நானும் உடைக்க விரும்பாமல் அவரிடமிருந்து விடைபெற்றேன்..! இதுதான் அவருடனான எனது கடைசி சந்திப்பு..!

77 வயதான சின்னக்குத்தூசியார் இடையில் சில ஆண்டுகள் தவிர்த்து தனது இறுதி மூச்சுவரையிலும் கலைஞரின் புகழ் பாடியும், திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிடிப்பாகவும் வாழ்ந்து, மிக எளிமையான மனிதராக, இப்படியும் ஒரு மனிதர் பத்திரிகையாளராக இருந்திருக்கிறார் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்பதுதான் மிகப் பெரிய பெருமை..!

இத்தனைக்கும் அவரது பத்திரிகைத் தொழிலுக்கு ஆரம்பப் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்திருப்பது கலைஞரின் பரம எதிரியான ஈ.வி.கே.சம்பத்துதான். காங்கிரஸின் ‘நவசக்தி’ நாளிதழில் ஆசிரியராக இருந்தவர், அதன் பின்பு சுமார் 25 வருடங்கள் அதற்கு எதிரணியான ‘முரசொலி’யில் எழுதியிருக்கிறார் என்றால் நம்பத்தான் முடியவில்லை..!

கடைசியாக கடந்த ஒரு வருட காலமாக 'நக்கீரன்' ஆசிரியர் கோபாலின் அரவணைப்பில் பில்ராத் மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபடியே எழுதிக் கொண்டிருந்திருக்கிறார்..! அவரைச் சந்திக்கப் போகிறவர்களிடத்தில் எல்லாம் தன்னால் சரியாக எழுத முடியவில்லை என்பதை மட்டுமே வருத்தத்துடன் சொல்லி வந்திருக்கிறார்..! இந்த இறுதியான பத்தாண்டுகளில் 'நக்கீரன்' கோபால்தான் சின்னக்குத்தூசியாருக்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்து வந்திருக்கிறார்..! இறுதிக் காரியத்திலும் ஒரு மகனைப் போல அர்ப்பணிப்புடன் செயல்பட்டு அந்த மூத்தப் பத்திரிகையாளருக்கு, கோபால் அண்ணன் செய்த மரியாதைக்காக அவருக்கு எனது நன்றிகள்..!

சின்னக்குத்தூசியாரின் எழுத்தில் இருக்கும் ஒரு கவர்ச்சி.. முதல் வரியில் இருந்து இறுதிவரையில் அப்படியே விடாமல் தொடர்ந்து படிக்க வைக்கும் ஒரு ஈர்ப்புத் தன்மையுடையது. ஒரு சார்பானது என்று நினைத்துப் படிக்கத் துவங்கினாலும் தனது எழுத்தாற்றலால் அவரது பக்கமே நியாயம் இருப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்திவிடும் அவரது எழுத்து..! தன்னால் முடிந்தவரையிலும் எழுதுகோலை தனது உற்றத் துணைவனாக வைத்திருந்த அந்தப் பெரியவரின் மரணத்திற்குப் பின்பும், அவரது சட்டைப் பையில் அவரது பேனாவை சொருகி வைத்திருந்தது சாலப் பொருத்தம்..!

ஒரு சாதாரண கட்சி அபிமானியும், வட்டச் செயலாளருமே மிகக் குறுகியக் காலத்தில் கட்சியை வைத்து எப்படி, எப்படியோ வாழ்ந்துவிட்டபோதிலும் தான் வருந்தி, வருந்தி எழுதி, ஆதரவு சேர்த்த கட்சி ஆட்சிக்கு வந்தபோதும், கடைசிவரையில் தனக்காக எதையும் கேட்காமல், தன்னுடைய சொத்துக்களாக பல ஆயிரம் புத்தகங்களை ம்டடுமே விட்டுச் சென்றிருக்கும் சின்னக்குத்தூசியாரின் வாழ்க்கை பத்திரிகையாளர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..!

அவருடைய ஆன்மா சாந்தியாகட்டும்..!
 

34 comments:

செங்கோவி said...

நல்ல கொள்கைப் பிடிப்பு உள்ளவர்..அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

kanagu said...

அருமையான பதிவு அண்ணா... அவரை பற்றி தெரிந்து கொள்ள உதவியது... :)

தமிழகத்தில் உள்ள உங்களை கவர்ந்த பத்திரிக்கையாளர்களை பற்றி எழுதினால் நன்றாக இருக்கும்... :)

Anonymous said...

Wow. Thanks for sharing with us. Why do not you send a copy of this to Karunanidhi? he he.

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...

நல்ல கொள்கைப் பிடிப்பு உள்ளவர்.. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.]]]

கொள்கையில்லையெனில் இத்தனை நாட்களாக தி.மு.க.வில் ஒட்டிக் கொண்டிருக்க முடியுமா செங்கோவி..?

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

அருமையான பதிவு அண்ணா... அவரை பற்றி தெரிந்து கொள்ள உதவியது... :)

தமிழகத்தில் உள்ள உங்களை கவர்ந்த பத்திரிக்கையாளர்களை பற்றி எழுதினால் நன்றாக இருக்கும்... :)]]]

நன்றி கனகு.. அதுக்கெல்லாம் பல்லு போய் வீட்ல நடக்க முடியாம இருக்குற சூழல்லதான் எழுத வாய்ப்புண்டு.. இப்போது இல்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[அனாமிகா துவாரகன் said...

Wow. Thanks for sharing with us. Why do not you send a copy of this to Karunanidhi? he he.]]]

ஏன்.. ஏன்.. ஏன்ம்மா.. இந்தக் கொலை வெறி..? அவரே பாவம்.. புள்ளைய நினைச்சு பரிதவிச்சுப் போய் நிக்கிறாரு.. இந்த நேரத்துல இது வேறய்யா.. பாவம்.. விட்ருவோம்..!

சிவா said...

மிக அருமையான பதிவு


திரு. சின்னக்குதூசியை பற்றிய கட்டுரை மிகவும் அற்புதமாக இருக்கின்றது.

இவர் இத்தனை பெருமை வாய்ந்தவர் என்பது எனக்கு நிஜமாகவே தெரியாமல் இருந்தது.

இப்படி எத்தனை எத்தனை பத்திரிக்கை யாளர்கள் அடையாளம் காணப்படாமல் இருக்கிறார்கள் என்பது அவர்களின் மறைவிற்கு பின்தான் தெரிய வருமோ என்னவோ?

இருக்கும் போது யாரும் அவரை பற்றி பேசிக்கொள்ளவில்லை, ஆனால் மறைந்த பிறகு (நானும்) உட்பட அனைவருமே பேசிகொள்கின்றோம், இதுதான் இந்த சமுதாயம் என்றே நான் நினைக்கின்றேன்,.

உண்மைத்தமிழன் said...

[[[சிவா said...

மிக அருமையான பதிவு.
திரு. சின்னக்குதூசியை பற்றிய கட்டுரை மிகவும் அற்புதமாக இருக்கின்றது. இவர் இத்தனை பெருமை வாய்ந்தவர் என்பது எனக்கு நிஜமாகவே தெரியாமல் இருந்தது.
இப்படி எத்தனை எத்தனை பத்திரிகையாளர்கள் அடையாளம் காணப்படாமல் இருக்கிறார்கள் என்பது அவர்களின் மறைவிற்கு பின்தான் தெரிய வருமோ என்னவோ?
இருக்கும்போது யாரும் அவரை பற்றி பேசிக் கொள்ளவில்லை, ஆனால் மறைந்த பிறகு(நானும்) உட்பட அனைவருமே பேசி கொள்கின்றோம், இதுதான் இந்த சமுதாயம் என்றே நான் நினைக்கின்றேன்.]]]

சிவா.. அவரைச் சந்திக்காத, சந்திக்க விரும்பாத பத்திரிகையாளர்களே சென்னையில் இருக்க முடியாது..! புதிய செய்தியாளர்களாக இருந்தால்கூட அவரை ஒரு முறையாவது சந்தித்து ஆசி பெறுவதை ஒரு மரியாதையாகவே வைத்திருந்தார்கள்..! அவருடைய துரதிருஷ்டம் வழக்கம்போல கலைஞர் கருணாநிதியின் தவறுகளைக்கூட நியாயப்படுத்தும் அளவுக்கு உத்தம நண்பராக இருந்ததுதான்..!

சசிகுமார் said...

//முதல் வரியில் இருந்து இறுதிவரையில் அப்படியே விடாமல் தொடர்ந்து படிக்க வைக்கும்//

அண்ணே தங்களுக்கும் இது போன்ற திறமை உள்ளது. உங்கள் பதிவுகள் முதல் வரியில் இருந்து கடைசி வரி வரை அற்ப்புதமாக உள்ளது. மிக்க நன்றி சார்.

pichaikaaran said...

கொள்கை வேறுபாடுகள் கொண்டவர்களின் மரியாதை சம்பாதித்து வைத்து இருக்கிறார்.. இது மாபெரும் சாதனை...

அவர் மறைவு அவர் சார்ந்த கட்சிக்கு மட்டும் அல்ல... எழுத்தை நேசிக்கும் அனைவருக்கும் இழப்பு.

இது போன்ற பெரியவர்களின் ஆசியை , அன்பை பெற்ற உங்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது...

சந்திரபோஸ் உள்ளிட்டோர் உங்கள் பால் காட்டிய அன்பை , பரிவை மறக்காமல் பதிவு செய்வது , அந்த அன்புக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை உணர்த்துகிறது

உண்மைத்தமிழன் said...

[[[சசிகுமார் said...

//முதல் வரியில் இருந்து இறுதிவரையில் அப்படியே விடாமல் தொடர்ந்து படிக்க வைக்கும்//

அண்ணே தங்களுக்கும் இது போன்ற திறமை உள்ளது. உங்கள் பதிவுகள் முதல் வரியில் இருந்து கடைசி வரிவரை அற்புதமாக உள்ளது. மிக்க நன்றி சார்.]]]

நன்றி சசிகுமார்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

கொள்கை வேறுபாடுகள் கொண்டவர்களின் மரியாதை சம்பாதித்து வைத்து இருக்கிறார்.. இது மாபெரும் சாதனை...

அவர் மறைவு அவர் சார்ந்த கட்சிக்கு மட்டும் அல்ல... எழுத்தை நேசிக்கும் அனைவருக்கும் இழப்பு.

இது போன்ற பெரியவர்களின் ஆசியை, அன்பை பெற்ற உங்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது.

சந்திரபோஸ் உள்ளிட்டோர் உங்கள் பால் காட்டிய அன்பை, பரிவை மறக்காமல் பதிவு செய்வது, அந்த அன்புக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை உணர்த்துகிறது.]]]

நன்றி பார்வை.. அதனால்தான் அவரது இறுதி ஊர்வலத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வந்து கலந்து கொண்டார்கள்..!

இவர் பத்திரிகையாளர் என்ற உணர்வில்தான் அவர் பேசுவார். மாற்றுக் கட்சியினர் என்றோ, வேறொரு கருத்து கொண்டவர்கள் என்றோ அவர் பிரித்துப் பார்ப்பதில்லை. அதனால்தான் பத்திரிகையாளர்கள் தங்களது தந்தையை இழந்துவிட்டது போன்ற துயரத்தை அனுபவித்தார்கள்..!

ராஜ நடராஜன் said...

காலையில் பின்னூட்டம் போட நினைத்து இப்பொழுது நினைவிலிருந்து...

ஈ.வே.கி சம்பத் மூலமாக தி.மு.க சார்பாளராக குத்தூசியார் எனப்து தெரியாத செய்தி.

நண்பனே என்றாலும் தன் சுய நலத்திற்கு ஜாதி என்ற அசிங்கத்தை கையில் எடுக்க கருணாநிதி தயங்க மாட்டார் என்ற முழுக்க நனைந்த முக்காடு.

தி.மு.கவுக்கு ஜால்ரா தட்டினாலும் குத்தூசியாருக்கு உதவியென்பது நக்கீரன் கோபாலின் மறுபக்கத்தை காட்டுகிறது.

இந்த பதிவு குத்தூசியாருக்கு அர்ப்பணம் என்பதற்கு தகுதி வாய்ந்ததே.

ஜோதிஜி said...

முதலில் இந்த விளம்பரங்களை வேறுபக்கம் மாட்டித் தொலைங்க. எரிச்சலா வருது?

PARAYAN said...

//முரசொலி அலுவலகம் வந்த கலைஞர் குத்தூசியாரின் ஜாதியைச் சொல்லி//
திருந்தாத கள்ளன், அதாவது திருடன்னு சொன்னேன்

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

காலையில் பின்னூட்டம் போட நினைத்து இப்பொழுது நினைவிலிருந்து...

ஈ.வே.கி சம்பத் மூலமாக தி.மு.க சார்பாளராக குத்தூசியார் எனப்து தெரியாத செய்தி.

நண்பனே என்றாலும் தன் சுய நலத்திற்கு ஜாதி என்ற அசிங்கத்தை கையில் எடுக்க கருணாநிதி தயங்க மாட்டார் என்ற முழுக்க நனைந்த முக்காடு.

தி.மு.கவுக்கு ஜால்ரா தட்டினாலும் குத்தூசியாருக்கு உதவியென்பது நக்கீரன் கோபாலின் மறுபக்கத்தை காட்டுகிறது.

இந்த பதிவு குத்தூசியாருக்கு அர்ப்பணம் என்பதற்கு தகுதி வாய்ந்ததே.]]]

வருகைக்கு நன்றிகள் ஸார்..!

கலைஞர் பற்றி நமக்குத் தெரியாததா..? இதெல்லாம் புதுசில்லை..! விடுங்க..!

கோபால் செய்தது மிகப் பெரும் உதவி. இதன் புண்ணியம் நிச்சயம் அவரது குடும்பத்துக்குக் கிடைக்கும்!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...

முதலில் இந்த விளம்பரங்களை வேறு பக்கம் மாட்டித் தொலைங்க. எரிச்சலா வருது?]]]

கோச்சுக்காதண்ணே.. இணையத்திற்கு ஆகும் செலவைக் கொஞ்சம் தாங்கிப் பிடிக்க உதவுகிறது..! எனக்காகப் பொறுத்துக் கொள்ளுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[PARAYAN said...

//முரசொலி அலுவலகம் வந்த கலைஞர் குத்தூசியாரின் ஜாதியைச் சொல்லி//

திருந்தாத கள்ளன், அதாவது திருடன்னு சொன்னேன்.]]]

ஓகே.. நன்றிகள் ஸார்..!

a said...

//
தனக்காக எதையும் கேட்காமல், தன்னுடைய சொத்துக்களாக பல ஆயிரம் புத்தகங்களை ம்டடுமே விட்டுச் சென்றிருக்கும் சின்னக்குத்தூசியாரின் வாழ்க்கை பத்திரிகையாளர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..!
//
நெத்தியடி.................

poda said...

அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்

Kannan said...

என்னதான் கலைஞர் அபிமானியாக இருந்தாலும், திராவிட இயக்கத்தின் என்சைக்ளோபீடியாவாக இருந்தாலும், குடும்ப உறுப்பினராக இல்லாவிட்டால், அடுத்தவரை சார்ந்து தான் வாழவேண்டும் என்பதின் உதாரணமோ.

அகில் பூங்குன்றன் said...

oru nalla pathirikkaiyalarai patri therinthu konden.

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

//தனக்காக எதையும் கேட்காமல், தன்னுடைய சொத்துக்களாக பல ஆயிரம் புத்தகங்களை ம்டடுமே விட்டுச் சென்றிருக்கும் சின்னக்குத்தூசியாரின் வாழ்க்கை பத்திரிகையாளர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..!//

நெத்தியடி.]]]

இதற்கான உதாரணமும் அதே நக்கீரன் பத்திரிகையிலேயே உள்ளது காமராஜின் உருவத்தில்..!

உண்மைத்தமிழன் said...

[[[poda said...

அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.]]]

வருகைக்கு நன்றிகள் ஸார்..

உண்மைத்தமிழன் said...

[[[Kannan said...

என்னதான் கலைஞர் அபிமானியாக இருந்தாலும், திராவிட இயக்கத்தின் என்சைக்ளோபீடியாவாக இருந்தாலும், குடும்ப உறுப்பினராக இல்லாவிட்டால், அடுத்தவரை சார்ந்துதான் வாழ வேண்டும் என்பதின் உதாரணமோ.]]]

ஆமாம்.. முரசொலியில் வேலை பார்த்தாலும் இவரது பயணம் கடைசிவரையிலும் ஆட்டோதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...

oru nalla pathirikkaiyalarai patri therinthu konden.]]

-))))))))))

புதுகை.அப்துல்லா said...

அருமையான இடுகை. 1997 இல் நான் சென்னை திருவல்லிக்கேணியில் தங்கத் துவங்கியதும் நான் சென்ற முதல் இடம் அய்யாவின் அறை. அடுத்த தெருவிலேயே இருந்ததால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு. நமக்கென்று ஒரு கருத்து,கொள்கை இருந்தாலும் பிறரிடம் திணிக்காது பழகும் பாங்கை அய்யாவிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டாம்.

அதேபோல இந்த இடுகையில் ஒரு தகவல் பிழை உள்ளது. கலைஞர் ஜாதியைச் சொல்லித் திட்டியதாக எழுதி இருப்பது தவறான தகவல். இவரது இடத்தைப் பிடிக்க விரும்பிய முத்துகிருஷ்ணன் என்பவர் இப்படி ஒரு பொய்யான தகவலை அய்யாவிடம் சொல்லி இருக்கிறார். அதாவது மீண்டும் அய்யா சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக. பின்னர் கலைஞர் கைது நிகழ்ச்சிக்குப் பிறகு முரசொலியில் இணைந்த அய்யா தலைவரிடம் நேரில் கூறி தன் வருத்தத்தைத் தெரிவிக்கிறார். சூழ்ச்சியைப் புரிந்துகொண்ட கலைஞர் இட்டுக்கட்டிச் சொன்னவரை பணி நீக்கம் செய்தார். இந்த நிகழ்ச்சியை என் போன்றோரிடமோ அல்லது தற்போது முரசொலியில் பணிபுரிவோரிடமோக் கேட்டு தவிர்த்து இருந்தால் தகவல் பிழையற்ற மிகச் சிறப்பான இடுகை என்ற பெயர் கிடைத்து இருக்கும்.

உண்மைத்தமிழன் said...

அப்து..

உன் தரப்பு வாதத்தைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றிகள்..!

ஆனாலும் அவரவர் பார்வையில்தான் இதனைப் பார்க்க முடியும்..!
எனக்குத் தெரிந்தவரையில் நான் எழுதியிருப்பதை உண்மை என்று அறுதியிட்டு உணர்ந்ததால்தான் எழுதினேன்..!

Arun Ambie said...

சின்னக்குத்தூசி ஏதோ புரவலர்(!!)கருணாநிதியிடம் காசு வாங்கிக்கொண்டு எக்காலமும் திருக்குவளை முத்துவேல் கருணாநிதியை ஆதரித்து எழுதும் பலரில் ஒருவர் என்ற நினைப்பே எனக்கிருந்தது. அதை அசைத்தது பாராவின் கட்டுரை. உங்களின் இந்தப் பதிவு சின்னக்குத்தூசியின் எழுத்துக்களைப் படிக்கத் தூண்டுகோலாக இருக்கிறது. அவர் போலவே மறுக்க முடியாதபடி என் கருத்துக்களை எடுத்துரைக்க எண்ணம் கொள்கிறேன். மிக்க நன்றி!!

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...

சின்னக்குத்தூசி ஏதோ புரவலர்(!!)கருணாநிதியிடம் காசு வாங்கிக் கொண்டு எக்காலமும் திருக்குவளை முத்துவேல் கருணாநிதியை ஆதரித்து எழுதும் பலரில் ஒருவர் என்ற நினைப்பே எனக்கிருந்தது. அதை அசைத்தது பாராவின் கட்டுரை. உங்களின் இந்தப் பதிவு சின்னக்குத்தூசியின் எழுத்துக்களைப் படிக்கத் தூண்டுகோலாக இருக்கிறது. அவர் போலவே மறுக்க முடியாதபடி என் கருத்துக்களை எடுத்துரைக்க எண்ணம் கொள்கிறேன். மிக்க நன்றி!!]]]

சின்னக்குத்தூசி கடைசிவரையில் ஆட்டோவில்தான் பயணம் செய்தார். கார் வாங்கித் தருகிறேன் என்று கோபால் சொன்னபோது அதை நிறுத்த இடமில்லை. நான்தான் எங்கேயும் போறதில்லையே என்று சொல்லிவிட்டார். முரசொலியில் கிடைத்த சம்பளத்தை வைத்துதான் மேன்ஷன் வாடகை, சாப்பாடு வகைகளை சமாளித்தார்..! எளிய மனிதர்..!

abeer ahmed said...

See who owns websitesvalue.net or any other website:
http://whois.domaintasks.com/websitesvalue.net

abeer ahmed said...

See who owns friendster.com or any other website.

abeer ahmed said...

See DNS records for blogspot.com
http://dns.domaintasks.com/blogspot.com

abeer ahmed said...

See who owns blogspot.com 2784127209 or any other website.