சாய்பாபாவிற்கு எனது அஞ்சலிகள்..!

25-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சாய்பாபா என்றொரு மனிதர் இறந்துவிட்டார் என்று சொல்லத்தான் மனம் விரும்புகிறது..! ஆனால் பொது அறிவு "அப்படியானால் இத்தனை பேர் அவரை விரும்பியிருக்கிறார்களே..? எப்படி..? எதற்கு..? ஏன் அந்தப் பெருமையை நீ அவருக்குக் கொடுக்கக் கூடாது..?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறது..!


உலகத்தில் இருக்கும் மதங்களில் மிகச் சிக்கலானது இந்து மதம்தான்.. சாதி அடுக்குகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைத்து அதன் மேல் கட்டி வைக்கப்பட்ட மேடைதான் இந்து மதம் என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்..! எல்லாவிதமான உலகப் பார்வைகளுக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்து மதம்தான். அதனால்தான் அதனுள் இத்தனை வலிந்து திணிக்கப்பட்ட கதைகள் உள்ளன என்கிறார்கள் ஆதரவாளர்கள்..!

இந்த இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலை சாதாரண பொது ஜனங்களுக்கு இல்லை..! தங்களுக்குத் தோல்வி என்றவுடன் கடவுளைத் தேடி ஓடுவதும், தோல்வியைத் தோற்கடித்தவுடன் மீண்டும் பழையபடி கடவுளை மறந்து தொலைத்துவிட்டு ஆடிப் பாடுவதும் இவர்களது வாடிக்கையாகிவிட்டது..!

சாய்பாபா என்னும் இந்த மனிதர் இத்தனை அற்புதங்கள் செய்தார் என்று வருடக்கணக்காகக் கேட்டு கேட்டு சலித்துப் போயிருந்த நிலையில், புதிய தொழில் நுட்பங்களின் கண்களுக்கு அவரது ஏமாற்று வேலைகள் கண்கூடாகத் தெரிந்து பரபரப்பாகிவிட்டது. இன்றளவும் இதைப் பற்றி மகான் சாய்பாபா எந்தவிதக் கருத்தையும் கூறாமலேயே போய்ச் சேர்ந்துவிட்டார்..!

உதவியாளர் கொடுக்கும் செயினை வாங்கி "ஜீ பூம் பா.. எல்லாரும் பார்த்துக்குங்க.. செயின் வர வைக்கிறேன் பாருங்க.." என்று சொல்லாமல் சொல்லி செயினை வரவழைத்து மோடி மஸ்தான் வேலையைக் காட்டிய சாய்பாபா எப்போது கடவுளின் அவதாரமானார் என்று தோண்டித் துருவித்தான் படிக்க வேண்டியுள்ளது..

இதேபோல் விரல் இடுக்கில் மாத்திரை வடிவத்தில் விபூதியை வைத்துக் கொண்டு கணப்பொழுதில் அதனை நசுக்கு தூளாக்கி கைகளை பரப்பி கீழேயும், மேலேயுமாக அசைத்து விபூதியை கொடுத்துதான் இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவையும் இவர் ஏமாற்றியிருக்கிறார் என்பதை இன்றைக்கு நினைக்கும்போது வருத்தமாகத்தான் உள்ளது. நல்லவேளை எம்.எஸ். அம்மா.. இதையெல்லாம் பார்ப்பதற்கு முன்பாகவே போய்ச் சேர்ந்துவிட்டார்..!



வாயில் இருந்து லிங்கம் எடுப்பது என்பது மனித வடிவில் இருப்பவரால் முடியாத விஷயம் என்று ஐ.ஏ.எஸ்., மருத்துவம், பொறியியல் படித்த மாமனிதர்களுக்குத் தெரியாததல்ல.. புரியாததல்ல.. ஆனாலும் எப்படி இதனை நம்பினார்கள்..? ஆச்சரியமாக இருக்கிறது..!


வாய்க்குள் லிங்கத்தை வைத்துக் கொண்டு ஏதோ திடீரென்று வயிற்றின் உள்ளேயிருந்து லிங்கம் வெளி வருவதைப் போல் ஆக்ஷன் காட்டி எடுத்துக் காட்டி புளகாங்கிதமடையும் மகான் சாய்பாபாவின் அந்த ஆக்ஷனை பார்த்தபோது சிரிப்புதான் வந்தது..!

கூடவே இன்னொரு முறை, கையில் வைத்திருந்த துண்டில் மறைத்து வைத்திருந்த லிங்கத்தை தன் வாயில் இருந்து விழுந்ததைப் போல பாவ்லா காட்டி கூட்டத்தினரை வசியப்படுத்துகிறார்.. கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள் பக்தர்கள்..!

இந்த லீலைகளை எல்லாம் கடந்த சில வருடங்களாகவே பாபா நிறுத்திக் கொண்டார் என்று அவருடைய பக்தர்கள் சொல்கிறார்கள். அதாவது இந்த பிராடுத்தனத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டிய பின்பு..!

ஆனாலும் ஏன் அவரைத் தேடி இவ்வளவு கூட்டம்..? என்ன காரணம்..? கும்பகோணத்தில் ஏதுமறியாத அப்பாவி குழந்தைகளை சாவுக்குக் கொடுத்துவிட்டபோதும் அந்த மக்கள் ஒன்றுமறியாமல் அதே ஊரில் குத்துக்கல்லாட்டம் அமர்ந்திருக்கும் பல சாமிகளைத் தேடி இப்போதும் சென்று வருகிறார்களே.. அதுவேதான் இதற்கும் காரணம்..!

நம்பிக்கை.. இந்த அசாத்திய நம்பிக்கையை நன்றியுணர்வு என்கிற ஒரு வார்த்தையையும் சேர்த்தே சொல்லலாம்..!

சாய்பாபாவை சந்தித்தவுடன், தான் அங்கு போய் வந்தவுடன் தனது பிரச்சினை தீர்ந்ததாக ஒருவர் சொன்னாலே போதாதா..? ஒரு தெருவே கிளம்பிவிட்டது.. இப்படி ஒருவருக்கொருவர் தங்களது சுய துக்கங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டபடியேதான் சாய்பாபாவை தரிசிக்கச் சென்றார்கள். பலருக்கும் பிரச்சினைகள் ஏதோ ஒரு வழியில் முடிந்திருக்கிறது.. சிலருக்கு முடியவில்லை..! முடிந்தவர்கள் தங்களது நன்றியை கரன்சியாக்கிக் கொட்டியிருக்கிறார்கள். முடியாதவர்கள் சாமி தங்களிடம் இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறதோ என்று நினைத்து வந்து கொட்டியிருக்கிறார்கள்..!

ஒரு நிழல் அரசாங்கத்தையே புட்டபர்த்தியில் நடத்தி வந்திருக்கிறார் சாய்பாபா. கி்ட்டத்தட்ட வாடிகனை போல..! ஆனாலும் அந்த ஊர் மக்களுக்கு வேண்டியதைச் செய்திருக்கிறார். அவர்களிடமிருந்து அவர் எதையும் பறிக்கவில்லை. தன்னிடம் சேர்ந்ததை பிரித்துக் கொடுத்திருக்கிறார்..!

அவரை நாடி வந்து கொடுத்தவர்களெல்லாம் திருடர்களோ, கொள்ளைக்காரர்களோ இல்லை.. அப்பாவிகள்தான்.. பணமிருந்தும் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாத மனிதர்கள்தான்.. அவர்களுக்கு நல் வழி காட்டுகிறேன் என்று சொல்லித்தான் இந்த மோடி மஸ்தான் வேலையை சாய்பாபா செய்து வந்திருக்கிறார்..!

ஆக.. வந்திருக்கும், சேர்ந்திருக்கும் பணமெல்லாம் சட்டப்பூர்வமான பணம்தான்.. கொள்ளையடித்த பணமல்ல.. கொட்டு வந்து கொட்டியவர்களின் சாபம் பாபாவையோ, அவரால் அந்தப் பணத்தின் மூலம் பலன் பெற்றவர்களையோ சாராது..!

ஓஷோவை போல தனது ஆசிரமத்தை களியாட்டத்திற்கு உட்படுத்தாமல் இருந்தவகையிலும், நித்யானந்தா மற்றும் ஜெயேந்திரர், பிரேமானந்தா அளவுக்கு தரம் தாழ்ந்து போகாமலும் தனது எல்லைகளைச் சுருக்கிக் கொண்டு ஆன்மிகம் என்னும் ஒரு ஆயுதத்தை மக்களிடத்தில் ஆழமாக விதைத்துவிட்டுச் சென்ற ஒரு காரணத்திற்காக இவரை பாராட்டத்தான வேண்டும்..!

மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி.. பிரதமர்களோ, ஜனாதிபதிகளோ, துணை ஜனாதிபதிகளோ இங்கு வராதவர்களே இல்லை..! இவரை வணங்காதவர்களே இல்லை என்கிற அளவுக்கு அரசியல் பின்புலமும் அபரிமிதமாக இவரை வளர்த்து வைத்திருக்கிறது..!

தீவிரமான ஆத்திகக் கொள்கைகளை கொள்கையாக கொண்டிருக்கும் வீடுகளின் இல்லத்தரசிகள்கூட பாபாவின் அடிபணிந்த பக்தைகளாக மாறியதற்கு என்ன காரணம் என்று எதைத்தான் சொல்வீர்கள்..? இவர்களிடத்தில் இல்லாத பணமா? அதிகாரமா..? இவை இரண்டும் இருந்தாலே போதும்.. இதையும் தாண்டி இவர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள். புரியவில்லை..!

இவரை நாடிச் சென்றவர்கள் சொல்லும் குறைகள் உடனுக்குடன் தீர்ந்தன என்றுதான் முதலில் சொன்னார்கள். எனக்குத் தெரிந்து அப்படி சொன்னவர்களில் பி.சுசீலாவும் ஒருவர்.  கடைசியாகச் சொன்னவரும் பாடகிதான். அவர் சித்ரா..!

ஒரு சமயத்தில் சுசீலாம்மாவின் குரலில் ஏற்பட்ட தடுமாற்றத்தை பாபாதான் தீர்த்து வைத்ததாக சுசீலாம்மா பேட்டியளித்திருந்தார். பாபாவின் முன்னிலையில் ஒரு கச்சேரியில் தான் பாடத் துவங்கியபோதே தனது பழைய குரல் மீண்டும் கிடைத்துவிட்டதாக புளகாங்கிதப்பட்டிருந்தார்..!

நிறுவனமயமாக்கப்பட்ட ஆன்மிகத் தலங்களில் புட்டபர்த்தி பிரகாசமானதற்கு ஒருவகையில் சுசீலாம்மா, எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்களும் காரணம்..!

புட்டபர்த்தியில் சாய்பாபா முன்பு பாடாத கர்நாடக இசைப் பாடகிகளும், பாடகர்களும், வாத்தியக் கருவியை இசைக்கும் இசைக் கலைஞர்களும் யாருமில்லை என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அனைவரையும் முறை வைத்து அழைத்துச் சென்று பாட வைத்தார்கள் ஆசிரமத்தினர்.

தாங்கள் விரும்பியவர்களே தெய்வமாக வணங்குகிறார்களே என்ற ஆர்வத்தில் மேலும், மேலும் சாய்பாபா தெய்வமாகிக் கொண்டே போனது இதனால்தான்..! அத்தனை பேருக்கும் சாய்பாபாவின் கருணை கிடைத்துவிடவில்லை..! ஆனால் நேரில் பார்க்க வேண்டிய கட்டாயத்தை ஊடகங்களும், அதில் தெரிந்த பி.ஆர்.ஓ. பிரபலங்களும் உண்டாக்கினார்கள்..!

வருடாவருடம் கொடைக்கானலுக்கு பாபா வரும்போது அங்கு செல்லும் கூட்டத்தை பார்க்க வேண்டுமே..! 4 நாட்கள் தொடர்ந்து நான் அங்கே இருந்தபோது பார்த்தேன்.. ஒரு சப்தம்.. ஒரு கூச்சல்.. இல்லை. அனைவரும் அமைதி காக்கிறார்கள். அவர் வருகிறார். பார்க்கிறார். நடக்கிறார். திரும்புகிறார். அனைவரும் கை கூப்புகிறார்கள். சிலரின் தலையில் கை வைக்கிறார். மீண்டும் வந்த வழியே திரும்புகிறார். மேடையில் இருக்கும் அரியாசனத்தில் அமர்கிறார். லேசாக திரும்பிப் பார்த்தவுடன் பஜனை கோஷ்டி தனது கோஷ்டி கானத்தை ஆரம்பித்தது.. அவ்வளவுதான்.. அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பாபா புராணம்தான்..!

இரண்டாவது நாளே எனக்கு போரடித்துவிட்டது..! என்னதான் செய்கிறார் இந்த சாமி என்கிற ஆர்வத்தில் உள்ளூர்காரர்களும் ஒட்டிக் கொண்டு எட்டி எட்டிப் பார்க்கிறார்கள். சுற்றுலா பயணிகளாக வந்தவர்களும் விழுந்தடித்துக் கொண்டு வந்து பார்க்கிறார்கள்.. அனைவரையும் முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டாத நிலையிலேயே பார்க்கிறார்..! அட.. சிறு குழந்தைகள் டாட்டா காட்டியும், அவரை நோக்கி பிஞ்சு கைகளைக் குவித்து வணக்கம் சொல்வதைக்கூட சாதாரணமாக எடுத்துக் கொண்டதை நினைத்து ரொம்பவே ஆச்சரியப்பட்டேன்..! மனுஷன் என்னமா இறுக்கமா இருக்காருய்யா என்று..!

மனிதன் தெய்வமாகலாம் என்பதை அவனுடைய குணத்தை வைத்துச் சொல்கிறார்கள். ஈகை, மன்னிப்பு, இரக்கம், அன்பு, பாசம், வருமுன் உரைப்பது... இவற்றையெல்லாம் செய்யும் மனிதர்களே தெய்வங்கள் என்கிறார்கள். ஏனெனில் இவைகளையெல்லாம் மனிதர்களிடத்தில் நீங்கள் காண முடியாது. ஆகவே இவர்கள் தெய்வங்கள் என்பார்கள்..!

இப்படித்தான் மனிதர்களை தெய்வங்களாக்கிய கதையில் ஷீரடி சாய்பாபா, காஞ்சி பெரியவர், பங்காரு அடிகளார், பகவான் ரமணர், அரவிந்தர், அன்னை, வள்ளலார் என்று நீண்ட பட்டியலில் பல கோடி மக்கள் பின்னிப் பிணைந்திருக்கிறார்கள்..!

இவர்களது நம்பிக்கையை நாம் குலைப்பதென்பது சாமான்யமானதல்ல..! அது முடியவும் முடியாது..! இவ்வளவு நடந்த பின்பும் நித்யானந்தாவைத் தேடியும் ஒரு கூட்டம் போகின்றது என்றால் மனிதர்களின் குணத்தை எத்தனை, எத்தனை விதமாக படைத்திருக்கிறார் இறைவன் என்று யோசிக்கத்தான் வேண்டியுள்ளது..!


1912-ல் சித்தியடைந்த ஷீரடி சாய்பாபாவின் வாரிசு நான்தான் என்று கூறித்தான் இந்த சாய்பாபா தனது ஆன்மிகத்தை துவக்கினார்.. இப்போது தனக்குப் பின்பு கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பிரேம்சாய் என்ற பெயரில் நானே அவதாரமெடுப்பேன் என்றும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் இந்த இரண்டாவது சாய்பாபா..! மூன்றாவது சாய்பாபாவின் வருகைக்காக நாமும் காத்திருப்போம்..

இவருடைய மரணத்தினால் அவரது பக்த கோடிகள் தங்களது ஒரேயொரு நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள்..! அவரது அறக்கட்டளையின் உதவியினால் வாழ்க்கை நலம் பெற்ற மக்கள் இப்போது கண்ணீர் விடுகிறார்கள்..! அவருடைய ஆசியினால் நல்வாழ்வு பெற்றவர்கள் இப்போது கதறுகிறார்கள்..! அனைத்துமே நம்பிக்கை மற்றும் அனுபவத்தினால் விளைந்தது..!

மனிதனாக பிறந்த அனைவருக்கும் மரணமுண்டு என்பதை உணர்ந்தால் இதுவும் புட்டபர்த்தியில் நேற்று நடந்த ஒரு மரணத்தில் ஒன்று என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்..! இதுவரையில் கடவுளாகவே கருதப்பட்டவர் இந்த நிமிடத்தில் இருந்து மனிதனாக்கப்பட்டு ப்ரீஸருக்குள் அடக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது சட்டென்று பல பக்தர்களால் ஏற்க முடியாமல்தான் உள்ளது..!

இது அத்தனையையும் ஒரே வார்த்தையில்.. முட்டாள்தனம் என்று சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. இவர்கள் யாரும் நம்மூர் முனியாண்டியையும், அய்யனாரையும் கும்பிடும் சாமான்யர்கள் இல்லை.. மெத்தப் படித்த மேதாவிகள்தான்..! சிந்தை கலங்கும் அளவுக்கு ஆன்மிகத்தை தமது மனதில் நிறுத்தி வைத்திருக்கும் இவர்களுக்கு, இவர்கள் விரும்பிய சாய்பாபாவின் அருள் என்றென்றும்  நிலைத்திருக்கட்டும்..!

சாய்பாபா விட்டுச் சென்ற ஆன்மிக, சமூகப் பணிகளை அவரது அறக்கட்டளையினர் தொடர்ந்து செய்து வந்தார்களேயானால் அதுவே அவருக்கு பெருமை..!

சாய்பாபாவின் கோடிக்கணக்கான பக்த கோடிகளின் துக்கத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்..!

அவருடைய ஆன்மா சாந்தியாகட்டும்..!

60 comments:

Unknown said...

Each and every word is true.

Sundar said...

தற்போது, மத்திய அரசாங்கம், இவரின் 40,000 (மற்றும் அதற்க்கும் மேலே) கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்...

மனிதன் said...

//ஓஷோவை போல தனது ஆசிரமத்தை களியாட்டத்திற்கு உட்படுத்தாமல் இருந்தவகையிலும், நித்யானந்தா மற்றும் ஜெயேந்திரர், பிரேமானந்தா அளவுக்கு தரம் தாழ்ந்து போகாமலும்//
இங்கே போய் பாருங்க ............
http://www.youtube.com/watch?v=3TmQGaN6-Ho&feature=related

http://www.saibaba-x.org.uk/8/Sathya_Sai_Baba_bedroom_murders.htm

http://www.saibaba-x.org.uk/6/index.html

Anonymous said...

நித்யானந்தா, ஜெயேந்திரர், பிரேமானந்தா பெண் மோகக் காரன், சத்ய சாய் பாபா இளம் ஆண் மோகக் காரன் ........ போங்க பாஸ் !!! இவர்கள் மீது கொஞ்சமும் அனுதாபம் வரமாட்டேங்குது.. கோபம் தான் வருது.

sowri said...

Well written from a common view point.

ConverZ stupidity said...

ஆகா மொத்ததுல நீங்க குழப்பத்துல இருக்கீங்க உ.த

பூவண்ணன் said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி
அவரு சொத்து 50000 கோடின்னு (குறைந்த பட்சம்)சொல்றாங்க.
சாமி எவளோ tax கட்டியிருக்குன்னு சொல்ல முடியுங்களா
அவரு மாதிரியே இன்னொரு ராஜு சத்யம் ராஜு .அவரு தான் 108 ஆம்புலன்ஸ் சர்வீசுக்கு பண உதவி செஞ்சாரு
அவரு செ......ஞ்ச நன்மைய நெனைக்காம ஏன் உள்ள புடிச்சி போட்டிருன்கீங்க
வாங்கற /வந்து குவியுற துட்டுல 1 % ஒ 1.5 %ஒ தானம் தர்மம் செஞ்சிட்டு என்ன வேணா செய்யலாமா
இன்னம் ஏன் ஆந்திரால இருந்து வண்டி வண்டியா ஜனங்க திருட்டு ரயில் ஏறி சென்னை GH வந்து குவியுதுங்க .மொத்த இந்தியா அரசாங்க health budget விட அதிக சொத்து பாபா கிட்ட இருக்கும் போது.
திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்தினர் 9 பேர் தற்கொலை செய்து கொண்டார்களே .ஞாபகம் வருகிறதா.சாய் பக்தர்களான அந்த குடும்பம் அற்புதங்கள் நடத்தும் பாபா மூளை புற்று நோய் வந்த தங்கள் குழந்தையை பாபா காப்பாற்றுவார் என்று நம்பிக்கையோடு இருந்தனர்.குழந்தை இறந்ததும் பகவான் பாபா காப்பாற்றாததர்க்கு தங்கள் மேல் உள்ள கோபம்/பாபமே காரணம் என்று எண்ணி பிராயச்சித்தமாக அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர்.செய்வதற்கு முன் சொத்தை பாபாவுக்கு எழுதி வைத்து விட்டனர்.

இவர் சித்துக்களை fraaud என்று ஆதாரபூர்வமாக பலர் எடுத்துக்காடியதால் தான் இது போன்ற நிகழ்வுகள் குறைந்தன.
ஒரே நாளில் அவர் ஆஸ்ரமத்தில் ஆறு பேர் சுட்டு /குத்தி கொல்ல பட்டார்களே அவருடைய மெய்காப்பாளர் உட்பட அதை சொல்லவே இல்லையே அண்ணா

Jegan said...

But I dont agree that u r using the name OSHO. He is different. He would never told himself as a GOD.

Unknown said...

அண்ணா, மொதமா படிச்சாலும் கொஞ்சமா படிச்சாலும் முட்டாள்தனம் செய்தால் முட்டாள்தான். தன்னை போல் பசித்தால் உண்பவணும், செறித்த பின் கழிபவணும் தனக்கு அற்புதம் செய்வான் என்று போகும் இவர்கள் நீங்கள் குறிப்பிட்ட சாமான்யர்களை விடவும் மோசமான மடையர்கள். பின் ஏன் அங்கே போகிறார்கள் ஒருவேளை குற்ற உணர்வாக கூட இருக்கலாம் செய்த பாவத்திற்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்டால் இறைவன் மன்னித்தானா இல்லையா என்று தெரியாது அதனால் இதுபோன்ற பிராடுகள் தலையில் கைவைத்தால் தன் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக ஏற்படும் உணர்வு ஆக இங்கு ஏமாற்றபட தகுதி உள்ளவனே ஏமாற்றப் பட்டிருகிறான். அருகதையற்றவர்களுக்கு அனுதாபம் தேவையில்லை.

சீனு said...

அருமையான பதிவு.

//மனிதன் தெய்வமாகலாம் என்பதை அவனுடைய குணத்தை வைத்துச் சொல்கிறார்கள். ஈகை, மன்னிப்பு, இரக்கம், அன்பு, பாசம், வருமுன் உரைப்பது... இவற்றையெல்லாம் செய்யும் மனிதர்களே தெய்வங்கள் என்கிறார்கள். ஏனெனில் இவைகளையெல்லாம் மனிதர்களிடத்தில் நீங்கள் காண முடியாது. ஆகவே இவர்கள் தெய்வங்கள் என்பார்கள்..!//

இது தான் நம் கலாச்சாரத்தின் ஊற்று. ரமணா படத்தில் சொல்வதை போல், "இந்த மக்கள் sentimental idiots தான். ஆனால், அவர்கள் ஒருத்தர் மேல் வைத்த அன்பு மட்டும் மாறுவதில்லை. அந்த அன்பை தவறாக உபயோகபடுத்திக் கொண்ட தலைவர்கள் உண்டு. ஆனால், அந்த தலைவன் மேல் வைத்த அன்பு மட்டும் மாறுவதில்லை"

//சாய்பாபாவின் கோடிக்கணக்கான பக்த கோடிகளின் துக்கத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்..!//

சாய்பாபாவை நான் நம்பாத போதும், அவரை வணங்காத போதும், அவர்களின் பக்தர்களின் துக்கத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

பொது புத்திக்கு எதிராக எழுதினால் தாங்கள் அறிவுஜீவியாக 'வாய்ப்பு' உண்டு என்ற எண்ணத்தில் விகாரமாக யோசிக்கும் மனிதர்களை என்னவென்று சொல்வது? சாய்பாபாவை தேடி திரும்ப திரும்ப செல்லுபவர்கள் தங்களை இன்னும் அறிந்து கொள்ளாத சாமானியர்களே. (தற்போதைய) கல்வி அந்த பக்குவத்தை அளிக்காது. இது வியாபார கல்வி. மனிதன் தனக்கு வேண்டிய அறிவை தானே தேடிச்செல்லவேண்டும். ஆனால், தேடிச்செல்லவேண்டும் என்ற தெளிவாவது வேண்டும். அது இப்போதைக்கு இல்லை என்றே சொல்லவேண்டும்.

இப்படிப்பட்ட அறியாமையில் உழலும் மக்களை (முட்டாள் என்று சொல்வது தவறானது என்பது என் கருத்து) குறை சொல்வது பன்பானவர்கள்/பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தான் என்பது வேதனையானது.

//தற்போது, மத்திய அரசாங்கம், இவரின் 40,000 (மற்றும் அதற்க்கும் மேலே) கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்...//

இந்த சொத்துக்களை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் என்னவாகும்? திருப்பதி இன்னும் தேவஸ்தான கட்டுப்பாட்டில் இருப்பதனால் தான் இன்னும் ஜீவித்திருக்க முடிகிறது? இல்லாவிட்டால் என்றைக்கோ ஆட்டையை போட்டிருப்பார்கள் அரசியல்வாதிகளும் (போலி) மதசார்பின்மைவாதிகளும்.

Jegan,

//But I dont agree that u r using the name OSHO. He is different. He would never told himself as a GOD.//

தற்போதைய கடவுள்கள்/கடவுள்களின் தூதுவர்கள்/கடவுள்களின் பிள்ளைகள் எல்லோருமே ஒரு காலத்தில் மனிதர்களாக வளைய வந்தவர்கள் தான். ரொம்ப காலத்திற்கு முந்தையர்கள் என்பதால் அவர்களை ஏற்றுக் கொள்வீர்களா? இங்கு பிரச்சினையே 'சாய்பாபா' தன்னை கடவுளாக அறிவித்துக் கொண்டது தான். கடவுள் என்று சொல்லிக்கொள்ள தகுதி இல்லாத ஒருத்தர் தன்னை கடவுளாக அறிவித்துக் கொண்டது தான் பிரச்சினையே.

Gopi said...

One who would have thought that people are fools only will do such cheating acts like taking out lingam and Viboothi. And that too with prominent personalities like MS. Will you sympathize A.Rasa & Co. if they also do some welfare activities?

அருள் said...

மிகச்சரியாக எழுதியுள்ளீர்கள். நன்றி.

கடவுள் நம்பிக்கை என்று வந்துவிட்டால், எல்லாவிதமான கடவுள் நம்பிக்கைகளையும் மூடநம்பிக்கையாகவே பட்டியலிட முடியும். மூடநம்பிக்கை இல்லாத ஒரு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? என்பது கேள்விக்குறியே! அதே நேரத்தில் உலகின் மிகப்பெரும்பான்மை மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

எனவே, கடவுள் நம்பிக்கை சரியா? தவறா? என்றால் "சரிதான்" என்று எடுத்துக்கொள்ளவே வேண்டும். சரி எனும்போது என்னுடையது கடவுள் நம்பிக்கை சரி, உன்னுடைய கடவுள் நம்பிக்கை தவறு என்று கூறுவது எப்படி நியாயமாகும்?

""சாய் பாபா - ஒரு மாறுபட்ட அனுபவம்""

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_25.html

ரிஷி said...

அனைத்தும் உணர்ந்தவன் அமைதியாக இருப்பான்!
ஒன்றுமே புரியாதவனும் அமைதியாக இருப்பான்!

ஏதாவது புரிகிறதா??

Thirumalai Kandasami said...

சாய் பாபா - இவர் கடவுள் கிடையாது .ஒரு போலி கடவுள் என்பது எனது கருத்து..வெளிநாடு நாடுகளில் இருந்து குவிந்த பணத்தில் நமது மக்களுக்கு உதவி செய்துள்ளார்.ஒரு வகையில் பார்த்தால்,நமது சமுதாயத்துக்கு இவரால் லாபம் தான்.

ஆன்மிகத்தை வியாபாரம் ஆக்கி,,பொறியியல் கல்லூரி ,மருத்துவ கல்லூரி மூலம் அதிக பணம் வாங்கி, மக்கள் பணத்தை சுரண்டாமல்,,,அனைத்தையும் இலவசமாக செய்தது மிக பெரிய தொண்டு.

San said...

Dear TT,
My regards to Sathya Sai grew due to my maid servant.Her husband was a heart patient and he had to undergo bypass surgery,somebody in their neighborhood suggested her to take him to Sathya sai hospital whitefield,bangalore in Dec'2009 as he was chronic patient hospital suggested him to do surgery immdly and he was operated on 1st of january free of cost and both husband and wife were given free food till they were discharged.Even though they are christians they have become devotees of him.
I think the service he has done to humanity is great.

jayaramprakash said...

இப்படித்தான் மனிதர்களை தெய்வங்களாக்கிய கதையில் ஷீரடி சாய்பாபா, காஞ்சி பெரியவர், பங்காரு அடிகளார்????????????, பகவான் ரமணர், அரவிந்தர், அன்னை, வள்ளலார் என்று நீண்ட பட்டியலில் பல கோடி மக்கள் பின்னிப் பிணைந்திருக்கிறார்கள்..!

IKrishs said...

இது போன்ற நம்பிக்கைகள் ஏற்படுத்தும் பாசிடிவ் energy சிலருக்கு
ஆறுதலாக இருக்கும் போல!
திருச்சி யை சேர்ந்த
Furniture கடை அதிபர் நோயுற்ற தன் மகளை காப்பாற்ற புட்டபர்த்தி சென்று,தன் மகள் நலம் பெற முடியாத நிலையில்,குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார்.. தற்கொலை கடிதத்திலும் பாபா மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி இருந்தார்! ..இதுவும் நினைவுக்கு வந்தது!

SURESH said...

/மனிதன் தெய்வமாகலாம் என்பதை அவனுடைய குணத்தை வைத்துச் சொல்கிறார்கள். ஈகை, மன்னிப்பு, இரக்கம், அன்பு, பாசம், வருமுன் உரைப்பது... இவற்றையெல்லாம் செய்யும் மனிதர்களே தெய்வங்கள் என்கிறார்கள். ஏனெனில் இவைகளையெல்லாம் மனிதர்களிடத்தில் நீங்கள் காண முடியாது. ஆகவே இவர்கள் தெய்வங்கள் என்பார்கள்

puduvaisiva said...

"ஓஷோவை போல தனது ஆசிரமத்தை களியாட்டத்திற்கு உட்படுத்தாமல் இருந்தவகையிலும், நித்யானந்தா மற்றும் ஜெயேந்திரர், பிரேமானந்தா அளவுக்கு தரம் தாழ்ந்து போகாமலும் தனது எல்லைகளைச் சுருக்கிக் கொண்டு ஆன்மிகம் என்னும் ஒரு ஆயுதத்தை மக்களிடத்தில் ஆழமாக விதைத்துவிட்டுச் சென்ற ஒரு காரணத்திற்காக இவரை பாராட்டத்தான வேண்டும்"

ஓஷோ
1. தன்னை கடவுள் என்றோ அல்லது அவரின் அடுத்த பிறவி என்ற டாகல்டி வேலை செய்த்து இல்லை.
2. மனிதனால் உருவாக்கிய எந்த மதத்தையும் அதன் முட நம்பிக்கையையும் மீக கடுமையாக சாடினார்.

3. தந்தரா என்பது ஒரு கலை அது களியாட்டம் இல்லை.(தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் - ஓஷோ)

geethappriyan said...

ஓஷோவைப்பற்றி படித்துவிட்டு அவரைப்பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொண்டு பேசுங்கள்,முதலில் தம்மபதத்தில் இருந்து துவங்குங்கள் சரியாக இருக்கும்.

sundar said...

I do not agree about your comment about Jayendra ranking him with Nithyanandha.Till date there is no proof.Even during his bail application was disposed by Supreme court,they condemned Tamilnadu Government and castigated them stating there was not even an iota of evidence.We need to be unbiassed and not show our hatred towards a community.Even to this date a lot of non brahmins seek his darshan

வலிப்போக்கன் said...

உங்களுடைய துக்கமும் சாந்தியடையட்டும். ஆமென்.

உண்மைத்தமிழன் said...

[[[stanley said...

Each and every word is true.]]]

மிக்க நன்றி ஸ்டான்லி..!

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

தற்போது, மத்திய அரசாங்கம் இவரின் 40,000 (மற்றும் அதற்க்கும் மேலே) கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.]]]

அறக்கட்டளை நல்லவிதமாகச் செயலாற்றினால் அது தேவையில்லை சுந்தர்..!

உண்மைத்தமிழன் said...

[[[மனிதன் said...

//ஓஷோவை போல தனது ஆசிரமத்தை களியாட்டத்திற்கு உட்படுத்தாமல் இருந்தவகையிலும், நித்யானந்தா மற்றும் ஜெயேந்திரர், பிரேமானந்தா அளவுக்கு தரம் தாழ்ந்து போகாமலும்//

இங்கே போய் பாருங்க ............

http://www.youtube.com/watch?v=3TmQGaN6-Ho&feature=related

http://www.saibaba-x.org.uk/8/Sathya_Sai_Baba_bedroom_murders.htm

http://www.saibaba-x.org.uk/6/index.html]]]

படித்தேன். தகவல்களுக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[இக்பால் செல்வன் said...

நித்யானந்தா, ஜெயேந்திரர், பிரேமானந்தா பெண் மோகக்காரன், சத்யசாய்பாபா இளம் ஆண் மோகக்காரன். போங்க பாஸ் !!! இவர்கள் மீது கொஞ்சமும் அனுதாபம் வர மாட்டேங்குது. கோபம்தான் வருது.]]]

ம்.. எனனவென்று சொல்வது..? யாரும் இங்கே முழுமையான, நேர்மையான மனிதராக இருக்க முடியாது(நான் உட்பட) என்பது இறைவினின் ஆணை..

உண்மைத்தமிழன் said...

[[[sowri said...

Well written from a common view point.]]]

மிக்க நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ConverZ stupidity said...

ஆகா மொத்ததுல நீங்க குழப்பத்துல இருக்கீங்க உ.த.]]]

தங்களது வாழ்க்கையில் தவறே செய்யாத, குற்றஞ்சாட்டவே முடியாத மனிதர்களைத் தேடித் தேடிப் பார்க்கிறேன். யாரும் கிடைக்கவில்லை.. அந்தக் குழப்பம்தான் இதுவும்..!

உண்மைத்தமிழன் said...

[[[poovannan said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி. அவரு சொத்து 50000 கோடின்னு (குறைந்தபட்சம்)சொல்றாங்க.
சாமி எவளோ tax கட்டியிருக்குன்னு சொல்ல முடியுங்களா...?]]]

வரியை வாங்க வேண்டிய அதிகாரிகளே அவருடைய சீடர்களாகத்தான் இருந்தார்கள்..! புரிந்து கொள்ளுங்கள்..!

திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்தினர் 9 பேர் தற்கொலை செய்து கொண்டார்களே. ஞாபகம் வருகிறதா. சாய் பக்தர்களான அந்த குடும்பம் அற்புதங்கள் நடத்தும் பாபா மூளை புற்று நோய் வந்த தங்கள் குழந்தையை பாபா காப்பாற்றுவார் என்று நம்பிக்கையோடு இருந்தனர். குழந்தை இறந்ததும் பகவான் பாபா காப்பாற்றாததர்க்கு தங்கள் மேல் உள்ள கோபம்/பாபமே காரணம் என்று எண்ணி பிராயச்சித்தமாக அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர்.செய்வதற்கு முன் சொத்தை பாபாவுக்கு எழுதி வைத்து விட்டனர்.]]]

ஆமாம்.. ரமேஷ் என்பது அவரது பெயர்..!

[[[இவர் சித்துக்களை fraaud என்று ஆதாரபூர்வமாக பலர் எடுத்துக்காட்டியதால்தான் இது போன்ற நிகழ்வுகள் குறைந்தன.]]]

மறுக்க முடியாத உண்மை..!

[[[ஒரே நாளில் அவர் ஆஸ்ரமத்தில் ஆறு பேர் சுட்டு /குத்தி கொல்லபட்டார்களே அவருடைய மெய்காப்பாளர் உட்பட அதை சொல்லவே இல்லையே அண்ணா.]]]

நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதுதான் முழுமையான தகவல்களைப் படித்தேன்.

உண்மைத்தமிழன் said...

[[[Jegan said...

But I dont agree that u r using the name OSHO. He is different. He would never told himself as a GOD.]]]

ஆனால் கடவுளை அடைய வழி காட்டுகிறேன் என்றாரே..! முடியற காரியமா..?

உண்மைத்தமிழன் said...

[[[uaetamilan said...

அண்ணா, மொதமா படிச்சாலும் கொஞ்சமா படிச்சாலும் முட்டாள்தனம் செய்தால் முட்டாள்தான். தன்னை போல் பசித்தால் உண்பவணும், செறித்த பின் கழிபவணும் தனக்கு அற்புதம் செய்வான் என்று போகும் இவர்கள் நீங்கள் குறிப்பிட்ட சாமான்யர்களை விடவும் மோசமான மடையர்கள். பின் ஏன் அங்கே போகிறார்கள் ஒருவேளை குற்ற உணர்வாக கூட இருக்கலாம் செய்த பாவத்திற்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்டால் இறைவன் மன்னித்தானா இல்லையா என்று தெரியாது அதனால் இது போன்ற பிராடுகள் தலையில் கை வைத்தால் தன் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக ஏற்படும் உணர்வு ஆக இங்கு ஏமாற்றபட தகுதி உள்ளவனே ஏமாற்றப்பட்டிருகிறான். அருகதையற்றவர்களுக்கு அனுதாபம் தேவையில்லை.]]]

உங்களைப் போன்ற மனநிலை அவர்களுக்கு இருந்திருந்தால் அவர்கள் ஏன் பாபாவைத் தேடி போயிருக்கப் போகிறார்கள் தமிழா..!

உண்மைத்தமிழன் said...

சீனு said...

அருமையான பதிவு.

அறியாமையில் உழலும் மக்களை(முட்டாள் என்று சொல்வது தவறானது என்பது என் கருத்து) குறை சொல்வது பன்பானவர்கள் / பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் என்பது வேதனையானது.]]]

அவர்கள் மெத்தப் படித்த அறிவாளிகளாக தங்களை நினைத்துக் கொள்வதால்தான் இந்த நிலைமை.

தற்போதைய கடவுள்கள் / கடவுள்களின் தூதுவர்கள் / கடவுள்களின் பிள்ளைகள் எல்லோருமே ஒரு காலத்தில் மனிதர்களாக வளைய வந்தவர்கள்தான். ரொம்ப காலத்திற்கு முந்தையர்கள் என்பதால் அவர்களை ஏற்றுக் கொள்வீர்களா? இங்கு பிரச்சினையே 'சாய்பாபா' தன்னை கடவுளாக அறிவித்துக் கொண்டதுதான். கடவுள் என்று சொல்லிக் கொள்ள தகுதி இல்லாத ஒருத்தர் தன்னை கடவுளாக அறிவித்துக் கொண்டதுதான் பிரச்சினையே.]]]

உண்மைதான்.. அடுத்து வருபவரும் அதையேதான் சொல்லப் போகிறார்..!? நமது மக்களும் ஏமாறத்தான் போகிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Gopi said...

One who would have thought that people are fools only will do such cheating acts like taking out lingam and Viboothi. And that too with prominent personalities like MS. Will you sympathize A.Rasa & Co. if they also do some welfare activities?]]]

இருவருக்கும் வித்தியாசம் இல்லைதான். ஒத்துக் கொள்கிறேன் கோபி..!

உண்மைத்தமிழன் said...

[[[அருள் said...

மிகச் சரியாக எழுதியுள்ளீர்கள். நன்றி.

கடவுள் நம்பிக்கை என்று வந்துவிட்டால், எல்லாவிதமான கடவுள் நம்பிக்கைகளையும் மூடநம்பிக்கையாகவே பட்டியலிட முடியும். மூடநம்பிக்கை இல்லாத ஒரு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? என்பது கேள்விக் குறியே! அதே நேரத்தில் உலகின் மிகப் பெரும்பான்மை மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். எனவே, கடவுள் நம்பிக்கை சரியா? தவறா? என்றால் "சரிதான்" என்று எடுத்துக் கொள்ளவே வேண்டும். சரி எனும்போது என்னுடையது கடவுள் நம்பிக்கை சரி, உன்னுடைய கடவுள் நம்பிக்கை தவறு என்று கூறுவது எப்படி நியாயமாகும்?

""சாய் பாபா - ஒரு மாறுபட்ட அனுபவம்""

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_25.html]]]

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி அருள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

அனைத்தும் உணர்ந்தவன் அமைதியாக இருப்பான்! ஒன்றுமே புரியாதவனும் அமைதியாக இருப்பான்!

ஏதாவது புரிகிறதா??]]]

புரியுதுங்கண்ணா..!

உண்மைத்தமிழன் said...

[[[Thirumalai Kandasami said...

சாய் பாபா - இவர் கடவுள் கிடையாது. ஒரு போலி கடவுள் என்பது எனது கருத்து. வெளிநாடு நாடுகளில் இருந்து குவிந்த பணத்தில் நமது மக்களுக்கு உதவி செய்துள்ளார். ஒரு வகையில் பார்த்தால், நமது சமுதாயத்துக்கு இவரால் லாபம்தான். ஆன்மிகத்தை வியாபாரம் ஆக்கி பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி மூலம் அதிக பணம் வாங்கி, மக்கள் பணத்தை சுரண்டாமல் அனைத்தையும் இலவசமாக செய்தது மிக பெரிய தொண்டு.]]]

இந்தவரையிலும் இவருக்கு நமது வணக்கங்கள்..! நிம்மதியாக போய்ச் சேரட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[San said...

Dear TT,
My regards to Sathya Sai grew due to my maid servant. Her husband was a heart patient and he had to undergo bypass surgery, somebody in their neighborhood suggested her to take him to Sathya sai hospital whitefield,bangalore in Dec'2009 as he was chronic patient hospital suggested him to do surgery immdly and he was operated on 1st of january free of cost and both husband and wife were given free food till they were discharged. Even though they are christians they have become devotees of him. I think the service he has done to humanity is great.]]]

ம்.. இப்படித்தான் பலருக்கும் நடந்திருக்கிறது.. அதனால்தான் இவரை இந்தக் காலத்திலும் நம்பியவர்கள் மற்றும் நம்புபவர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருந்தது..!

உண்மைத்தமிழன் said...

[[[jayaramprakash said...

இப்படித்தான் மனிதர்களை தெய்வங்களாக்கிய கதையில் ஷீரடி சாய்பாபா, காஞ்சி பெரியவர், பங்காரு அடிகளார்????????????, பகவான் ரமணர், அரவிந்தர், அன்னை, வள்ளலார் என்று நீண்ட பட்டியலில் பல கோடி மக்கள் பின்னிப் பிணைந்திருக்கிறார்கள்..!]]]

ஏன்..? பங்காரு அடிகளார் "அம்மா"வாக இப்போது அருள் பாலிக்கவில்லையா..?

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்குமார் said...

இது போன்ற நம்பிக்கைகள் ஏற்படுத்தும் பாசிடிவ் energy சிலருக்கு
ஆறுதலாக இருக்கும் போல!
திருச்சியை சேர்ந்த
Furniture கடை அதிபர் நோயுற்ற தன் மகளை காப்பாற்ற புட்டபர்த்தி சென்று, தன் மகள் நலம் பெற முடியாத நிலையில், குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை கடிதத்திலும் பாபா மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி இருந்தார்! இதுவும் நினைவுக்கு வந்தது!]]]

ஆமாம்.. ரமேஷ் என்பது அவரது பெயர்.. நினைவில் இருக்கிறது.. என்ன செய்ய..? அப்போதும் அவரது பாபா பாசம் போகவில்லை பார்த்தீர்களா..?

உண்மைத்தமிழன் said...

[[[♠புதுவை சிவா♠ said...

ஓஷோ

1. தன்னை கடவுள் என்றோ அல்லது அவரின் அடுத்த பிறவி என்ற டாகல்டி வேலை செய்த்து இல்லை.

2. மனிதனால் உருவாக்கிய எந்த மதத்தையும் அதன் முட நம்பிக்கையையும் மீக கடுமையாக சாடினார்.

3. தந்தரா என்பது ஒரு கலை அது களியாட்டம் இல்லை.

(தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் - ஓஷோ)]]]

காமத்தில் இருந்து கடவுளுக்கு எங்கே போனது சிவா..?

உண்மைத்தமிழன் said...

[[[|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

ஓஷோவைப் பற்றி படித்துவிட்டு அவரைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொண்டு பேசுங்கள், முதலில் தம்மபதத்தில் இருந்து துவங்குங்கள் சரியாக இருக்கும்.]]]

சரி.. அப்படியே ஆகட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[sundar said...

I do not agree about your comment about Jayendra ranking him with Nithyanandha. Till date there is no proof. Even during his bail application was disposed by Supreme court, they condemned Tamilnadu Government and castigated them stating there was not even an iota of evidence. We need to be unbiassed and not show our hatred towards a community. Even to this date a lot of non brahmins seek his darshan.]]]

ஓகே.. கோபப்படாதீர்கள்..! உண்மை ஒரு நாள் நிச்சயம் வெளியாகும். அப்போது பார்த்துக் கொள்வோம்..!

ஆனாலும் ஒரு ஆசிரமத்தின் தலைமை துறவியாக இருப்பவர் தினம் விடியற்காலையில் ஒரு குறிப்பிட்ட பெண்ணிடம் மட்டும் 1 மணி நேரம் போதனைகள் வழங்குவது சரியானதுதானா..? யோசியுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[வலிபோக்கன் said...

உங்களுடைய துக்கமும் சாந்தியடையட்டும். ஆமென்.]]]

மிக்க நன்றி..!

Muthukumara Rajan said...

ஒரு முழுமையான பகுத்தறிவு என்பது ஒரு மாயை . முழுமையான பகுத்தறிவு என்பதே கிடையாது .

அவரவர் தன் நிலைக்கு ஏற்ப பகுத்தறிவு மாறும்

நம்பிக்கை என வந்தபின் எல்லாமே மடத்தனம் தான்.

பெரியாரை நம்புவதும் மடமையே பாபாவை நம்புவதும் மடமையே .

பாபாவை சிலருக்கு பிடித்து இருந்தால் அவரை பின்பற்றட்டும் . ஜாக்கி வாசுதேவ்வை சிலருக்கு பிடித்து இருந்தால் அவரை பின்பற்றட்டும் . பெரியாரை சிலருக்கு பிடித்து இருந்தால் அவரை பின்பற்றட்டும்.

ஒரென்றே ஒன்று ஒரு மதத்தை குறி வைத்து இது போன்ற பரச்சரங்கள் அதிகம் வருகிறது

சில கேள்விகள்
--------------------------------------------
பகுத்தறிவு என்றால் என்ன ?

யாரவது வாழும் ஒரு பகுத்தறிவாளைரை காட்ட முடியுமா ?

பாபாவை பற்றி , ஹிந்து மதத்தை பற்றி பேசும் தலைவர்கள் ஏன் பிற மதங்களை பற்றி பேசுவது இல்லை . ?

தமிழ் திரைப்படங்களில் பல சாமியரிகளை பற்றி வந்து உள்ளது . எதாவது ஒரு படத்தில் நாத்திகவாதியை பற்றி அவர்களின் உண்மையை பற்றி சொல்லியது உண்டா . ?

சமீப கால படங்களில் சாமியார்கள் யார் பற்றியாவது நல்ல வந்து உள்ளதா ( முக்கியமாக ஹிந்து மதம )?

தமிழ் படங்கள் என்ன சொல்ல வருகிறது . நாத்திகவாதிகள் எல்லாம் நலவர்கள் . சாமியார்கள் எல்லாம் மோசம் ஆனவர்கள் ?

கோ படம் வரை ஹிந்து மத பத்தி பாடல்களை கேலி செய்யும் இவர்கள் ஏன் பிற மதங்களை பற்றி பேசுவது இல்லை .?

( நான் எந்த சாமியார்களையும் பின்பற்றுபவன் இல்லை . பல மக்களை போல நான் கடவுளை நம்பி கடமையை செய்பவன். )

குழப்பத்துடன்
முத்துக்குமார்

sanrajesh said...

மிக அருமையான பதிவு.

நவன் said...

//இது அத்தனையையும் ஒரே வார்த்தையில்.. முட்டாள்தனம் என்று சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. இவர்கள் யாரும் நம்மூர் முனியாண்டியையும், அய்யனாரையும் கும்பிடும் சாமான்யர்கள் இல்லை.. மெத்தப் படித்த மேதாவிகள்தான்..!//

அப்போ முனியாண்டியையும், அய்யனாரையும் கும்பிட்டா முட்டாப்பயன்னு சட்டம் வச்சிருக்கீங்க?

seethag said...

உ,த. மிகவும் அழகானா பதிவு. மெத்த படித்த மேதாவிகளலெல்லாம் ஆ,ஊ என்று மக்களை திட்டி எழுதும்போது ரொம்பவும் அழகாக அன்பை மட்டுமே உபயோகித்து பார்த்து எழுதுகிறீர்கள்.உண்மை என்னவென்றால், சாய்பாபாவை வணங்கும் மக்களின் சோகம் தான்.ி

இதர்க்குதான் சும்மா பெருய படிப்பை மட்டும் வைத்து மனிதர்களைப்பார்க்க கூடாது...

pichaikaaran said...

இதுவரையில் கடவுளாகவே கருதப்பட்டவர் இந்த நிமிடத்தில் இருந்து மனிதனாக்கப்பட்டு ப்ரீஸருக்குள் அடக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது சட்டென்று பல பக்தர்களால் ஏற்க முடியாமல்தான் உள்ளது..!"

உடல் நிலை அல்ல என்பதுதான் சாயி பாபா உள்ளிட்ட ஆன்மீகவாதிகளின் செய்தி... சாய் பாபாவின் உடல் அழிந்து விட்டது என்பதை மட்டும் வைத்து கடவுள் அழிந்து விட்டார் என அவர் பக்தர்கள் நினைக்கவில்லை...

முன்பு அவரை தூற்றிய்வர்கள் இன்றும் தூற்றிகிறார்கள்.. போற்றியவ்ரகள் இன்றும் போற்றுகிறார்கள்...

உங்கள் கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது..ஆனால் பக்தர்கள் இப்படி நினைக்கிரார்கள் என நீங்களே ஒரு கருத்தை சொலவ்து , நீங்கள் கடை பிடித்து வரும் தார்மீக நெறிகளுக்கு உட்பட்டதா? நீங்கள் வணங்கும் முருகன் இதை ஏற்பானா என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...

Sailash said...

இப்படித்தான் மனிதர்களை தெய்வங்களாக்கிய கதையில் ஷீரடி சாய்பாபா, காஞ்சி பெரியவர், பங்காரு அடிகளார், பகவான் ரமணர், அரவிந்தர், அன்னை, வள்ளலார் என்று நீண்ட பட்டியலில் பல கோடி மக்கள் பின்னிப் பிணைந்திருக்கிறார்கள்..!
*******************************

ஏன் இந்த லிஸ்டுல இயேசுவை விட்டு விடீர்கள் , ஏன் அவர் மனிதராக வர இல்லையா ?? , ஏன் முகம்மது கூட இஸ்லாமில் கடவுளை விட அதிகமாக மதிக்க படுகிறார் , கடவுளை கேலி செய்தால் கூட விட்டு விடுவார்கள் , அனால் முகமதை கேலி செய்தால் அவளவு தான் , அல்லவை வெறும் அல்லா என்றே குறிபிடுவார்கள் , முகம்மது என்று சொல்லும் போது பயங்கர மரியாதை இருக்கும் !! எல்லா மதங்களும் அப்படி தான் பாஸ்.

ஹிந்து மதமே குரு பரம்பரியம் கொண்டது , இது போன்ற குருக்களினால் தான் இஸ்லாமின் கத்தி முனை மதமாற்றத்தையும் , கிறித்துவத்தின் லஞ்சம் (காசு ) கொடுத்து மதம் மாற்றும் முயற்சியையும் தாண்டி , ஹிந்து மதம் நிலைத்து நிற்கிறது !! ஹிந்து மதத்தை ஆபிரகாமிக் மதங்களை கொண்டே பார்பதால் வரும் குழப்பம் இது. ஹிந்து மதத்தில் எல்லோரும் கடவுளே , இங்கு முனியாண்டி , பேச்சி , கருபசாமி எல்லோரும் கடவுளே , அதில் பாபவும் இருபது ஒன்றும் தவறு இல்லை !! பாபா மட்டும் அல்ல , நீங்களும் கடவுளே. இது தான் ஹிந்து மதம் . உண்மையான ஆன்மிகத்தை புரிந்து கொண்டால் இதை ஏற்பீர்கள் . ஆபிரகாமிக் மதங்களை பின்பற்றுபவர்களால் இதை புரிந்து கொள்ள முடியாது , முருக பக்தரான நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறன் .

நாம் கடவுளின் தூதர்களுக்கு குடும்ப கட்டுப்பாடும் பண்ணவில்லை , பேயாகவும் அலையை விட வில்லை , இங்கு கடவுளின் தூதுவர்களும் வருவார்கள் , கடவுளும் வருவார்கள்.,

உண்மைத்தமிழன் said...

[[[muthukumar said...
பகுத்தறிவு என்றால் என்ன ?
யாரவது வாழும் ஒரு பகுத்தறிவாளைரை காட்ட முடியுமா?]]]

பகுத்தறிவு என்றால் என்ன என்பதற்கு முதலில் விடை கிடைத்தால் மட்டுமே இதற்கு பதில் சொல்ல முடியும்..!

[[[பாபாவை பற்றி, ஹிந்து மதத்தை பற்றி பேசும் தலைவர்கள் ஏன் பிற மதங்களை பற்றி பேசுவது இல்லை?]
]]

இளிச்சவாயர்கள் இந்துக்கள்தான்..! என்ன அடி கொடுத்தாலும் தாங்குவார்களே..?

[[[தமிழ் திரைப்படங்களில் பல சாமியரிகளை பற்றி வந்து உள்ளது . எதாவது ஒரு படத்தில் நாத்திகவாதியை பற்றி அவர்களின் உண்மையை பற்றி சொல்லியது உண்டா?]]]

நாத்திகவாதியை மையமாக வைத்து படத்தை எடுத்தால் யார் படம் பார்ப்பது..?

[[[தமிழ் படங்கள் என்ன சொல்ல வருகிறது. நாத்திகவாதிகள் எல்லாம் நலவர்கள். சாமியார்கள் எல்லாம் மோசம் ஆனவர்கள்?]]]

ஆத்திகத்தை பிஸினஸுக்காக பயன்படுத்துகிறார்கள்.. நாத்திகத்தை போலி பிரச்சாரமாக பயன்படுத்துகிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[sanrajesh said...

மிக அருமையான பதிவு.]

மிக்க நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[நவன் said...

//இது அத்தனையையும் ஒரே வார்த்தையில்.. முட்டாள்தனம் என்று சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. இவர்கள் யாரும் நம்மூர் முனியாண்டியையும், அய்யனாரையும் கும்பிடும் சாமான்யர்கள் இல்லை.. மெத்தப் படித்த மேதாவிகள்தான்..!//

அப்போ முனியாண்டியையும், அய்யனாரையும் கும்பிட்டா முட்டாப் பயன்னு சட்டம் வச்சிருக்கீங்க?]]]

அப்படியல்ல.. சாமிகளில் பேதம் பார்க்கத் தெரியாத அப்பாவிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[thiru said...

உ,த. மிகவும் அழகானா பதிவு. மெத்த படித்த மேதாவிகளலெல்லாம் ஆ, ஊ என்று மக்களை திட்டி எழுதும்போது ரொம்பவும் அழகாக அன்பை மட்டுமே உபயோகித்து பார்த்து எழுதுகிறீர்கள். உண்மை என்னவென்றால், சாய்பாபாவை வணங்கும் மக்களின் சோகம்தான்.
இதர்க்குதான் சும்மா பெருய படிப்பை மட்டும் வைத்து மனிதர்களைப் பார்க்க கூடாது.]]]

நன்றி திரு..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

இதுவரையில் கடவுளாகவே கருதப்பட்டவர் இந்த நிமிடத்தில் இருந்து மனிதனாக்கப்பட்டு ப்ரீஸருக்குள் அடக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது சட்டென்று பல பக்தர்களால் ஏற்க முடியாமல்தான் உள்ளது..!

உடல் நிலை அல்ல என்பதுதான் சாயி பாபா உள்ளிட்ட ஆன்மீகவாதிகளின் செய்தி. சாய் பாபாவின் உடல் அழிந்து விட்டது என்பதை மட்டும் வைத்து கடவுள் அழிந்து விட்டார் என அவர் பக்தர்கள் நினைக்கவில்லை.

முன்பு அவரை தூற்றிய்வர்கள் இன்றும் தூற்றிகிறார்கள்.. போற்றியவ்ரகள் இன்றும் போற்றுகிறார்கள்.

உங்கள் கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் பக்தர்கள் இப்படி நினைக்கிரார்கள் என நீங்களே ஒரு கருத்தை சொலவ்து, நீங்கள் கடை பிடித்து வரும் தார்மீக நெறிகளுக்கு உட்பட்டதா? நீங்கள் வணங்கும் முருகன் இதை ஏற்பானா என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.]]]

பார்வை.. கோபம் வேண்டாம்.. அது எனது பார்வைதான்..!

அவருக்காக பக்தர்களிடமிருந்து பிரார்த்தனைகளும், கோரிக்கைகளும் எழுப்பப்பட்டபோது நாம் இப்படித்தானே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[Sailash said...

ஏன் இந்த லிஸ்டுல இயேசுவை விட்டு விடீர்கள்... ஏன் அவர் மனிதராக வர இல்லையா? ஏன் முகம்மது கூட இஸ்லாமில் கடவுளைவிட அதிகமாக மதிக்கபடுகிறார். கடவுளை கேலி செய்தால்கூட விட்டு விடுவார்கள். அனால் முகமதை கேலி செய்தால் அவளவுதான். அல்லவை வெறும் அல்லா என்றே குறிபிடுவார்கள் , முகம்மது என்று சொல்லும்போது பயங்கர மரியாதை இருக்கும்!!]]

இவர்கள் இருவரையும் வைத்துதானே அந்த மதங்களே துவங்கின.. பின்பு இவர்களை எப்படி பாபா போன்ற சாதாரண மனிதர்கள் லிஸ்ட்டில் சேர்க்க முடியும்..?

இயேசுவும், முகமதுவும் கடவுள்கள் அல்ல என்றாலும் இறை தூதுவர்கள் என்ற வகையிலாவது ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே..!

Jegan said...

I agree with புதுவை சிவா & கீதாப்ரியன்.

Dear உண்மைத்தமிழன், உண்மையில் கடவுள் என்பது உணரப்படுவது.ஓஷோ கடவுளை ஏற்றுக்கொள்ளாதவர். அவர் சொல்வது கடவுள் தன்மை என்பதைத்தான். அவர் புத்தகங்களை முழுமையாக படித்தால் புரிந்துக்கொள்வீர்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[Jegan said...

I agree with புதுவை சிவா & கீதாப்ரியன்.

Dear உண்மைத்தமிழன், உண்மையில் கடவுள் என்பது உணரப்படுவது. ஓஷோ கடவுளை ஏற்றுக் கொள்ளாதவர். அவர் சொல்வது கடவுள் தன்மை என்பதைத்தான். அவர் புத்தகங்களை முழுமையாக படித்தால் புரிந்து கொள்வீர்கள்.]]]

டியர் ஸார்..

அனுபவமே இறைவன் என்பது இந்து மதமும் சொல்லித்தான் வருகிறது..! அனைத்தையும் புரிந்து படித்தால் வரும். ஓஷோ செய்தது அந்த அனுபவத்தையும் காமத்தோடு இணைத்துப் பேசியதும், எழுதியதும்தான்..!

abeer ahmed said...

See who owns beritabola.in or any other website:
http://whois.domaintasks.com/beritabola.in

abeer ahmed said...

See who owns multiply.com or any other website.

abeer ahmed said...

See DNS records for blogspot.com
http://dns.domaintasks.com/blogspot.com