கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..!

11-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பொன் விழா கண்ட தி.மு.க, எத்தனையோ முறை ஊழலை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கியது உண்டு. ஆனால், அதே தி.மு.க., இப்போது ஊழலில் கைதாகியிருக்கும் தங்களது கட்சியின் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஆதரவாகப் போர்க் கொடி தூக்கியதற்குப் பின்னணி ஏதும் உண்டா என்பதே டெல்லி வட்டாரங்களை இப்போது குடையும் கேள்வி!

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைதான முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஐந்து நாள் கஸ்டடியில் இருக்கிறார்! முறைகேட்டில் கைமாறிய பணம் எங்கெல்​லாம் போனது என்பதைப் பல்வேறு கேள்வி​களாக்கி, ஆ.ராசா மற்றும் அவரோடு கைதான இருவரையும் துளைத்துக் கொண்டிருக்கிறது சி.பி.ஐ.

வெளி​நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள், தூரத்து நாடு​களின் ரகசிய வங்கிக் கணக்குகள் இவற்றோடு... இந்தியாவுக்குள் தலையெடுத்த திடீர் புது நிறுவனங்கள், அவற்றின் குறுகிய கால அபார நிதி வளர்ச்சி ஆகியவை பற்றியும் சி.பி.ஐ. பல தகவல்களைத் திரட்டி வருகிறது. அம​லாக்கப் பிரிவு அதிகாரிகளும், சி.பி.ஐ.யுடன் இணைந்து ராசாவையும் மற்றவர்களும் விசாரித்து வருகிறார்கள்.

''மும்பையில் உள்ள ஒரு 'லிங்க்'குடன் சென்னை தி.மு.கழக வி.ஐ.பி-க்குத் தொடர்பு இருக்கிறது. யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு முறைகேடுகள் இதில் நடந்துள்ளன. அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். வெளிநாட்டுப் புரோக்கர்கள், அரசியல் பிரமுகர்கள் என்று பெரிய பட்டாளமே இந்த ஊழல் சுழலில் மாட்டி உள்ளனர். சென்னை தி.மு.கழக வி.ஐ.பி. சம்பந்தப்பட்ட ஆதாரத்தை தகுந்த நேரத்தில் கோர்ட்டில் சொல்வேன்''  என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே ஜூ.வி-யில் பேட்டி அளித்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. இந்நிலையில், டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் மீடியாக்கள் மூலமாகக் கசியவிட்டிருக்கும் புதிய தகவல்கள் மேலும் பல அரசியல் பரபரப்புகளுக்கு அடிபோடுகிறது!

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து கலைஞர் டிவிக்கு பணம் கை மாறியுள்ளது என்பதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்பதே அந்தச் செய்தி..!

இனி விரிவாகப் பார்ப்போம்.

2008-ல் ஆ.ராசா ஒதுக்கீடு செய்த 2-ஜி ஸ்பெக்ட்​ரம் உரிமங்களை சுமார் எட்டு நிறுவனங்கள்வரை வாங்கியிருந்தன.  அனைத்து உரிமங்களும் மிகக் குறை​வான விலைக்கு கொடுக்கப்பட்டதாலேயே, அரசாங்கத்துக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது என்பது​தான் கணக்குத் தணிக்கைக் குழுவின் குற்றச்சாட்டு. இதில் கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளானவை இரண்டு நிறுவனங்கள். ஒன்று - ஸ்வான் டெலிகாம்... மற்றொன்று - யுனிடெக் நிறுவனம். இதில் ஸ்வான் டெலிகாம் நிறுவனம்தான் கலைஞர் டிவியோடு பணத் தொடர்பு வைத்திருந்தது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மும்பையிலும், ஹரியானாவில் உள்ள குர்கானிலும் தன்னுடைய அலுவலகங்கள் இருப்பதாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை கேட்டு விண்ணப்பிக்கும்போது தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தது. தன்னுடைய லெட்டர் பேடுகளிலும் காண்பித்திருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட அந்த இடங்களில் அப்படியொரு நிறுவனம் செயல்பட்டதற்கான எந்தச் சுவடும் தற்போது இல்லை என்பதுதான் உண்மை. அதோடு, அந்த லெட்டர்பேடிலும், உரிமம் கோரிய விண்ணப்பத்திலும் கம்பெனியின் தொலைபேசி எண் கூட இல்லை என்று சி.பி.ஐ. சொல்கிறது..! இந்தக் கூத்தை எங்கே போய் சொல்வது..?


ஆனால், இந்த லெட்டர்பேடு அண்ட் மன்னார் அண்ட் மன்னார் கம்பெனி சுமார் 1,537 கோடி ரூபாய்க்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமத்தை எப்படி பெற்றது என்பதுதான் தற்போது  கேள்வி. தொலைத் தொடர்புத் துறையில் சக்திமிக்கவர்களாக இருந்தவர்களின் உதவியில்லாமல் இது நடந்திருக்கவே முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த அடிப்படையில்தான் ஆ.ராசா, பகுரா, சொந்தாலியா ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தீவிரமாகக் கிளறுவதே - டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்கா ஆகியோரின் பின்னணிகளைப் பற்றித்தான்.  ''மேலோட்டமாகப் பார்க்கும்போது, இவர்கள் சாதாரண  நபர்கள்தான். ஆனால், மகாராஷ்டிர அரசிய​லிலும் மத்திய அரசிலும் தொடர்ந்து 'பவர்' காட்டி வரும் சரத்பவார், இந்த பால்வா குரூப்புக்கு மிக நெருக்கமானவர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முடிந்தவுடனேயே உரிமம் கிடைக்காதவர்கள் இது பற்றிய முறைகேடுகளை வெளியில் சொல்லத் தொடங்கியபோது, ஸ்வான் நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்தால் அது அப்பட்டமாகத் தெரிந்துவிடும் என்று நினைத்து இந்த நிறுவனத்தின் பங்குகளையெல்லாம் வேறு கம்பெனிகளுக்கு மாற்றியிருக்கிறார்கள். 

இதற்காகவே சில பினாமி கம்பெனிகளையும் புதிதாக ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் பிரதான பினாமி நிறுவனமாக காட்டப்பட்டதுதான் டி.பி.ரியாலிட்டீஸ் என்கிற நிறுவனம்.

இந்த நிறுவனம், மும்பையில் இருக்கும் சாஹித் உஸ்மான் பல்வா (இவர் தனியாக டைமிக்ஸ் ரியாலிட்டி என்கிற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்) குடும்பத்தினரும், வினோத் கோயங்கோ குடும்பத்தினரும் சேர்ந்து ஆரம்பித்த நிறுவனமாகும்.

ரியல் எஸ்டேட், பைனான்ஸ், ஏற்றமதி, இறக்குமதி போன்ற பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்த இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்துதான் டைனமிக்ஸ் பல்வா ரியாலிட்டி என்ற பெயரில் நிறுவனத்தைத் துவக்கி அதன் பெயரைச் சுருக்கி டி.பி. ரியாலிட்டீஸ் என்று ஆக்கிவிட்டார்கள்.

சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் சாஹித் பல்வா இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இன்றுவரையிலும் தேடப்படும் சர்வதேச பயங்கரவாத குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அஷிஷ் பல்வா தலைமைச் செயல் அதிகாரி. இவர்களில் சாஹித் பல்வா 11 குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர். தாவூத் இப்ராஹிம் 14 குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி. ஆக, இவர்கள் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் நிறுவனத்தோடு நேரடியாக தொடர்பில் இருப்பது பற்றி அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் கேள்வியெழுப்பியதால், சம்பந்தப்பட்டவர்கள் இந்த நிறுவனத்தின் பங்குகளை வேறு சில நிறுவனங்களுக்கு விற்க தீர்மானித்துள்ளார்கள்.

இதற்காக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமையைக் கையில் வைத்திருந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 45.73 சதவீத பங்குகளை அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எடிசலாட் (இ.டி.ஏ. குழும நிறுவனத்தின் சலாஹூதீன், பி.எஸ்.ரஹ்மான், ஆகியோர்தான் எடிசலாட் நிறுவனத்தின் பங்குதாரர்கள்) என்கிற நிறுவனத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட எடிசலாட் டி.பி. டெலிகம்யூனிகேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்துக்கு சுமார் 4500 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறார்கள். மூன்று தவணைகளில் மொத்தப் பணமும் செட்டில் செய்யப்பட்டுவிட்டதாம்.

அன்னிய மூலதன வாரியத்தின் அனுமதியோடு வந்து சேர்ந்த இந்தப் பண பரிவர்த்தனைக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலும் பெறப்பட்டு இருக்கிறது. இந்த எடிசலாட் - டி.பி.டெலிகம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 45.73 சதவீத பங்குகளை மட்டுமே தங்களது வசம் வைத்திருந்தால், நிறுவனத்தில் பெரும்பான்மை இல்லாமல் போய், தாங்கள் நினைத்ததைச் சாதிக்க முடியாமல் போய்விடும் என்பதால், 51 சதவிகிதம் அளவுக்கு பங்குதாரர்களாக மாறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

இதற்காக சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஜெனிக்ஸ் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் (இதன் அலுவலகம் சிட்டி சென்டர் கட்டிடத்தில் உள்ளது) ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்கள். முகமது அசன் (இ.டி.ஏ. குழும பி.எஸ்.ரஹ்மானின் சகோதரியின் மகன்), அகமது சாஹிர் (இ.டி.ஏ. குழும சலாஹுதினின் மருமகளின் அண்ணன்) ஆகியோரை முக்கிய பங்குதாரர்களாகக் கொண்டுதான் இந்த நிறுவனமும் துவக்கப்பட்டுள்ளது. இந்த ஜெனிக்ஸ் எக்ஸிம் நிறுவனம், டி.பி. ரியாலிட்டீஸ் நிறுவனத்தில் இருந்து 5.27 சதவிகிதப் பங்குகளை வாங்குகிறது.

இந்த நிறுவனத்தை எடிசலாட் டி.பி.டெலிகம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைத்து மொத்தம் 51 சதவிகிதப் பங்கு உள்ள பங்குதாரர்களாக இவர்கள் உருவெடுத்துவிட்டார்கள். மீதமிருக்கும் 49 சதவிகிதப் பங்குகளை சீனாவின் உவேயி நிறுவனம் (மத்திய அமைச்சர் சரத்பவாரின் நண்பர் ஒருவருக்குச் சொந்தமானது) வாங்கிக் கொண்டது.

இந்தவரையில் சரி.. இதில் கலைஞர் தொலைக்காட்சியின் பெயர் எங்கே வந்தது என்றால் இனிமேல்தான் கதையே ஆரம்பம்.

“கலைஞர் தொலைக்காட்சி தொடங்​கப்பட்டதில் இருந்து இன்றுவரையில் கம்பெனி பதிவாளர் அலுவலகத்திடம் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம். சரத்குமார் ரெட்டி, அமிர்தம் பெரியநாயகம், தயாளு அம்மாள் கருணாநிதி மற்றும் கனிமொழி கருணாநிதி ஆகியோர் இந்த கம்பெனியின் இயக்குநர்களாக இருந்திருப்பதையும்... அவர்களின் பதவிகளில் இடையே மாற்றங்கள் நடந்திருப்பதையும்... அது தொடர்பான தேதிகளையும் கையில் எடுத்​திருக்கிறோம். இதோடு சேர்த்து, அந்த தொலைக்காட்சி சேனலுக்கு பணம் வந்து சேர்ந்த தேதிகளையும் கவனமாகப் பார்த்து வருகிறோம்!'' என்று கூறுகிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.

இதில் என்ன விசேஷம் எனில், 2007-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதியன்று கனிமொழி கருணாநிதியும், தயாளு அம்மாளும், சரத்குமார் ரெட்டியும் கலைஞர் டிவியின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அடுத்த ஆறு நாட்கள் கழித்து அதாவது ஜூன் 12-ம் தேதியன்று அமிர்தம் இயக்குநர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் மிகச் சரியாக இயக்குநர்களாக நியமிக்கப்பட்ட 14 நாட்கள் கழித்து ஜூன் 20-ம் தேதியன்று கனிமொழி கருணாநிதியும், தயாளு அம்மாளும் இயக்குநர்கள் பொறுப்பில் இருந்து விலகுகிறார்கள்.


இப்போது சரத்குமார் ரெட்டியும், அமிர்தமும் மட்டுமே இயக்குநராக தொடர்ந்திருந்த நிலையில், அடுத்த ஒரு மாதம் கழித்து ஜூலை 27-ம் தேதியன்று அமிர்தமும் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகுகிறார். இவர் விலகிய அதே தினத்தன்று மீண்டும் தயாளு அம்மாள் கலைஞர் டிவியின் இயக்குநர்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளார். ஆக மொத்தம் இப்போது கலைஞர் டிவியின் இயக்குநர்கள் லிஸ்ட்டில் இருப்பது தயாளு அம்மாளும், சரத்குமார் ரெட்டியும் மட்டும்தான்..!

இது எதற்காக என்ற குழப்பம் சி.பி.ஐ.யினருக்கு இருந்தாலும், கலைஞர் டிவிக்கு பணம் வந்து சேர்ந்த கதையோ நன்கு திட்டமிட்ட ஒரு சிறப்பான சினிமா திரைக்கதையை போல இருக்கிறது என்கிறது சி.பி.ஐ.

டி.பி. ரியாலிட்டீஸ் கம்பெனியின் பணம் நேரடி​யாக கலைஞர் டிவிக்கு வந்து சேர்ந்தால் குட்டு வெளிப்படும் என்பதற்காகவே, இரண்டு மூன்று கம்பெனிகளைத் தாண்டி இந்தப் பணம் வந்துள்ளது. 'இந்தப் பணத்தை நாங்கள் திரும்ப வாங்கிவிட்டோம்' என்றும், 'நாங்கள் கடனாக வாங்கியதைத் திரும்பக் கொடுத்துவிட்டோம்' என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சொன்னாலும்... கை மாறிய தொகை மற்றும் தேதிகளில் பல சேதிகள் ஒளிந்து கிடப்பதாகவே தெரிகிறது.

டைனமிக் ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ஆஷிப் பல்வா என்பவரும் டைனமிக்ஸ் பல்வா ரியாலிட்டி நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ராஜீவ் அகர்வால் என்பவரும் இணைந்து ஆளுக்கு 50 சதவிகிதப் பங்குகளோடு குசேகான் ரியாலிட்டி என்கிற நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்கள்.

டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம், குசேகான் நிறுவனத்தில் 2009-ம் ஆண்டு தொடக்கத்தில் 210 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. இதன் பிறகு குசேகான் நிறுவனம், சினியூக் என்ற சினிமா பைனான்ஸியல் கம்பெனிக்கு 221 கோடி ரூபாயை கடனாகக் கொடுத்திருக்கிறது. குசேகான் நிறுவனத்தின் 31.3.2010 தேதியிட்ட பேலன்ஸ் ஷீட்டில் 'லோன்ஸ் அண்டு அட்வான்ஸஸ்' என்ற பிரிவின் கீழ் இந்த 221 கோடி ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தப் பணப் பரிவர்த்தனையின் மூலம் சினியூக் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை குசேகான் நிறுவனம் பெற்றிருக்கிறது. மீதமுள்ள பங்குகளை கரீம் மொரானி என்ற சினிமா பைனான்ஸியர் வாங்கி விடுகிறார்.

'சினியுக்' நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டிலும் கிட்டத்தட்ட அதே தொகை வந்து சேர்ந்திருக்கிறது. தவிர, அதே பேலன்ஸ் ஷீட்டில் 214 கோடியே 86 லட்சத்து 54 ஆயிரத்து 109 ரூபாய், 'கலைஞர் டி.வி. பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்துக்கு 'அதர் அட்வான்ஸஸ்' என்ற தலைப்பில் அளிக்கப்பட்டு இருப்பதற்கான ஆதாரங்​களும்  உள்ளன.


கலைஞர் டிவியின் 27 சதவிகிதம் முதல் 34 சதவீத பங்குகள்வரையில் வாங்கிக் கொள்வதாக முதலில் ஒப்பந்தம் போட்ட சினியூக் நிறுவனம் பிற்பாடு இன்னொரு ஒப்பந்தம் மூலம் அதனை ரத்து செய்துள்ளது.

இருந்தாலும் இதன் பின்பு, தன்னுடைய நூறு சதவிகித பங்குகளை அடமானம் வைத்து 214.8 கோடி ரூபாய்களை சினியூக் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவி பெற்றதுபோல ஒப்பந்தம் திருத்தி அமைக்கப்படுகிறது.

ஒரே ஆண்டில் கலைஞர் டி.வி. நிர்வாகம் தான் வாங்கிய 214.8 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கூடவே வட்டியாக 35.2 கோடியையும் சினியூக் நிறுவனத்துக்குத் திருப்பி செலுத்தியது போலவும் ஆவணங்கள் சொல்கின்றன.  கலைஞர் டி.வி-யின் இதே காலகட்டத்துக்கான பேலன்ஸ் ஷீட்டிலும், இந்தத் தொகை பெறப்பட்டது குறிப்பிடப்பட்டு உள்ளது.


இந்த சினியுக் நிறுவனத்துக்கு இத்தனை பெரிய பண பலம் திடீரென்று வந்து இருப்பதற்கான நியாயமான பிசினஸ் அடிப்படைகள் எதுவும் இல்லை என்பது சி.பி.ஐ.யின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது!

''வாங்கிய கடனை தற்போது நடக்கும் 'ஃபைனான்ஷியல்' வருடத்தில் திருப்பிக் கொடுத்துவிட்டோம்!'' என்று கலைஞர் டி.வி.யின் இயக்குநர்களில் ஒருவரான சரத்குமார் ரெட்டி கூறியிருப்பதும் கவனத்துக்குரியது.

விளம்பர வருமானத்தைத் தவிர வேறு வருமானம் இல்லாத கலைஞர் டிவி, ஒரே வருடத்தில் 214.8 கோடி ரூபாயை வட்டியோடு திருப்பிச் செலுத்தியது எப்படி என்று எல்லோரும் புருவம் உயர்த்தியது போலவே, மத்திய உள்துறை வருவாய்ப் புலனாய்வுத் துறை போன்றவைகளுக்கும் சந்தேகம் எழ.. கடந்த 11.08.2010-ல் கலைஞர் டிவியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான தயாளு அம்மாள், கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.


கலைஞர் டிவியின் ஆரம்ப முதலீடே 15 கோடிகள்தான். இதில் 60 சதவிகிதப் பங்குகள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடமும், 20 சதவிகிதப் பங்குகள் மகள் கனிமொழியிடமும்... மீதம் உள்ள 20 சதவிகிதப் பங்குகள் சரத்குமார் ரெட்டியிடமும் இருக்​கின்றன. 

பங்குகளின் மதிப்பின்படி பார்த்தால் தயாளு அம்மாள் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 9 கோடி. கனிமொழியின் பங்குகளின் மதிப்பு 3 கோடி. சரத்குமார்ரெட்டியின் பங்குகளின் மதிப்பு 3 கோடி.


பணப் பரிவர்த்தனை தொடர்பான கேள்விகள் வரும்போது, தயாளு அம்மாளுக்கோ, கனிமொழிக்கோ, கம்பெனியின் இயக்குநராக இருந்த அமிர்தம் பெரியநாயகத்துக்கோ எதுவும் தெரியாது என்று சொல்லி சரத்குமார் ரெட்டி எல்லாப் பொறுப்பையும் தன் பக்கம் மட்டுமே ஈர்த்துவிட முடியாது. அப்படியொன்று நடந்தால், கம்பெனியின் போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் கூட்டங்களின் மினிட்ஸ் புத்தகங்களை சி.பி.ஐ. தோண்டியெடுக்கும் வாய்ப்பும் உள்ளது.

'டிபி ரியாலிட்டிக்கு சொந்தமானதுதான் டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம். இந்த டைனமிக்ஸ் நிறுவனத்திலும் குசேகான் நிறுவனத்திலும் இருப்பவர்கள் வேறு யாரும் இல்லை. பால்வா மற்றும் டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் பணிபுரியும் ராஜீவ் பாட்டே, கிருஷ்ண அகர்வால் ஆகியோர்தான். இவர்களுடைய பங்குகள் பற்றிய விவரங்களை நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.

இங்கே இருந்து பணம் மாற்றப்பட்ட சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் புரோமோட்டரான கரீம் குலாமலி மொரானியின் பின்னணி பற்றியும் சி.பி.ஐ. தீவிரமாகப் பல தகவல்களை சேகரித்து வருகிறதாம். “மொரானிக்கும் தனக்கும் பல வருடங்களாக இருந்த பழக்கத்தின் காரணமாகவே, கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடிக்கும் அதிகமான தொகையைக் கடனாக வாங்க முடிந்தது. இந்தப் பண டீலிங்கில் தயாளு அம்மாளுக்கும், கனிமொழிக்கும், கலைஞருக்கும் எந்தத் தொடர்புமில்லை..” என்று சரத்குமார் ரெட்டி தன்னிலைவிளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிதிப் பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கப் பிரிவில் கிடைத்த செய்திகள் அடிப்படை​யில் சில டெல்லிப் பத்திரிகையாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தொடர்புகொண்டு கேட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த நிறுவனத்தினர் சொல்லிய தகவல்களும் விறுவிறுப்பானவை.

சினியுக் நிறுவனத்தினர், ''நாங்கள் கலைஞர் டி.வி-யின் 27 சதவிகிதப் பங்குகளை வாங்குவதாக இருந்​தோம். ஆனால், பங்குகளின் மதிப்பு குறித்து எழுந்த வித்தியா​சங்கள் காரணமாகவே, அந்தப் பரிமாற்றம் நடக்கவில்லை. அளிக்கப்பட்ட பணம் கடனாகக் கருதப்பட்டது!'' என்று  மொரானி கூறியுள்ளார்.

ஆனால், பணத்தை கலைஞர் டி.வி. வட்டி​யுடன் திருப்பிக் கொடுத்துவிட்டதாகக் கூறினாலும், எப்போது, எப்படி திரும்ப ஒப்படைத்தது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இது, வரும் நிதியாண்டில் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்போதுதான் தெரிய வரும்!'' என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

“கலைஞர் டிவியின் பிரதான பங்குதாரராக நான் இருந்தாலும் நிர்வாகத்தைக் கவனிக்கும் நிர்வாக இயக்குநர் அமிர்தமும், செயல் இயக்குநராக இருக்கும் சரத்ரெட்டியும்தான் இந்தப் பணப் பரிவர்த்தனைகள் குறித்து பதிலளிக்க வேண்டும். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை” என்று சொல்லி பதில் அனுப்பிவிட்டாராம் தயாளு அம்மாள்.

அதேபோல கனிமொழியும் “மொத்த விவகாரங்களும் எனக்குத் தெரியாது. நான் அந்த டிவி அலுவலகம் இருக்கும் பக்கமே ஒரு வருடமாகப் போகவில்லை. மற்றபடி கலைஞர் டிவி நிர்வாகிகள்தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டார்.

கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநரான அமிர்தமோ, “ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டு தொடர்பாக தனியாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தலைவர் குடும்பத்தை வம்புக்கு இழுக்க வேண்டும் என்று சிலர் தொடர்ந்து முயற்சித்து, இப்படியெல்லாம் இல்லாததுகளையும், பொல்லாததுகளையும் கிளப்பி விடுகிறார்கள். கலைஞர் டிவிக்கு கடன் பெற்றது.. திருப்பிச் செலுத்தியது எல்லாமே சட்டத்திற்கு உட்பட்டதுதான். அதில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை. தேவையானால் உரிய நேரத்தில், உரிய இடத்தில் இதற்கான விளக்கங்களை சம்பந்தப்பட்டவர்கள் அளிப்பார்கள்..” என்கிறார்.

இதற்கிடையில் வருமான வரித்துறையிடம் கலைஞர் டிவிக்காக காட்டப்பட்ட கணக்கு வழக்குகளில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்களாம். இந்த முரண்பாடுகளையும் சி.பி.ஐ. தனது விசாரணையில் நோண்டி எடுத்திருக்கிறது. என்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விஷயத்தில் பலனடைந்தவர்கள் பல்வேறு துணை நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டிவிக்கு இப்படி பணம் கொடுத்தது போல கொடுத்து பணப் பரிவர்த்தனை செய்திருக்கிறார்கள். இதுதான் சுற்றி வளைத்து இப்போது தி.மு.க.வுக்கு வில்லங்கமாகியிருக்கிறது.

இதே நேரத்தில் நேற்றைய தினம்வரையிலான விசாரணக்குப் பின் இந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தின் பின்னணியில் சுமார் 3000 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சப் பணம் ஆ.ராசாவின் மூலமாக பல்வேறு தலைவர்களுக்கும், புள்ளிகளுக்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது என்ற தகவலை சி.பி.ஐ. கசிய விட்டிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடிக்காமல் இருந்திருந்தாலோ, அல்லது குற்றச்சாட்டுக்கள் ஏதும் சொல்லாமல் இருந்திருந்தாலோ கலைஞர் டிவியின் 27 முதல் 34 சதவித அளவிலான பங்குகள் 221 கோடிக்கு விற்கப்பட்டிருக்கும். ஆனால் டிவி ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள்ளாக 221 கோடி ரூபாய் அளவுக்கான மதிப்பை கலைஞர் டிவிக்கு எதை வைத்து முடிவு செய்தார்கள்..? யார் அதற்கான அளவீடுகளை செய்தது என்றெல்லாம் கணக்கிட்டால் பணம் கொடுத்தவர்கள் முட்டாள்கள் என்றுதான் தொழில் உலகத்தில் சொல்வார்கள்.

சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் சாஹித் பல்வாவிடம் கலைஞர் டிவிக்கு எதற்காகப் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டது என்கிற விவரத்தை அறிவதுதான் சி.பி.ஐ.யின் முதல் வேலையாக இருக்கும் என்கிறார்கள்.

சாஹித் பல்வா மூலம் ஸ்வான் நிறுவனத்தில் ஆரம்பித்து சினியூக் நிறுவனம்வரையில் பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மூலம் கிடைத்த பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் எங்கெல்லாம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது போன்ற விவரங்களை அறியவும்தான் சாஹித் பல்வாவை கஸ்டடிக்குள் கொண்டு வந்திருக்கிறது சி.பி.ஐ. அவரிடம் நடக்கும் விசாரணைக்குப் பிறகு அரசியல் தொடர்புடைய முக்கிய வி.ஐ.பி.க்கள் பலருக்கும் சிக்கல்கள் காத்திருக்கின்றனபோல் தெரிகிறது.

அது மட்டுமில்லாமல் இந்த விவகாரத்தின் பின்னணியில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கரங்களும், தீவிரவாதிகளின் மறைமுகச் செயல்பாடுகளும் இருப்பதாகவும் அறிகிறோம். இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்வகையில் பல்வேறு டீலிங்குகள் நடந்திருப்பதாகச் சொல்லப்படுவது குறித்த தகவல்களும் விசாரணைக்குப் பிறகு ஊர்ஜிதமாகலாம் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்கள் சி.பி.ஐ. வட்டாரத்தில்..!

இந்த வழக்கு இன்றைக்குவரைக்கும் சுப்ரீம் கோர்ட்டின் நேரடி பார்வையில் நடப்பதால்தான் இந்த அளவுக்கான திருட்டுகளும், கொள்ளைகளும் வெளிப்பட்டுள்ளன. இல்லையேல் இந்த விவகாரத்தையே குழி தோண்டி புதைத்திருப்பார்கள் நமது மதிப்பிற்குரிய கில்லாடி அயோக்கிய அரசியல்வியாதிகள்..!

இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டி சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவிற்காக  ஒரு பூச்செண்டை காணிக்கையாக்கி அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

[ இந்தக் கட்டுரையை ஜூனியர் விகடன், ஆனந்தவிகடன், சூரியக்கதிர், தமிழக அரசியல், தினமலர், தெஹல்கா.காம் ஆகியவற்றின் உதவியோடுதான் எழுதினேன். இதில் இருக்கும் ஆதாரங்கள் ஜூனியர்விகடனில் இருந்து கையாளப்பட்டது..!
- இவர்களுக்கு நமது நன்றிகள் உரித்தாகட்டும்..! ]

52 comments:

Speed Master said...

தெளிவான தகவல் நன்றி

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

நல்லா இருக்கு எப்புடியெல்லாம் பண்ணுறீங்க

மு.சரவணக்குமார் said...

நீங்கள் சவுக்கு குழுவில் ஒருவரா?, எழுத்து நடை, கருத்துக்களை அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து வைக்கும் பாங்கு எல்லாம் அச்சு அசலாய் அவர்கள் பதிவை படிப்பது போலவே இருக்கிறது.

வாழ்த்துகக்ள்.

Unknown said...

அருமை பாஸ் கலக்குங்க!! சிபிஐ யெல்லாம் வேஸ்ட்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தெளிவான தகவல் நன்றி

Anonymous said...

போட்டு தாக்கே !!!! அண்ணே இதையெல்லாம் படிக்கும் போது பதினைந்து ஆயிரம் சம்பளத்துக்கு நாயா அலையிற என்னக்கு எப்படி வருது தெரியுமா ..,முருகா நீ இருக்கீயா

jtparimalam said...

clean informations thank u

ஈ ரா said...

இஸ்ரோவின் கிரையோ ஜெனிக் பழுதுகள், சமீபத்தில் தோல்வியடைந்த சோதனை இவற்றால் ஏற்பட்ட நஷ்டங்களுக்கு பின்னால் கூட பல கதைகள் இருக்கும் போலும்..

இவற்றிற்கும் விசாரணை வைத்தால் நன்றாக இருக்கும்.. (கொஞ்ச நஞ்சமல்ல கிட்டத்தட்ட முன்னூறு கோடி நஷ்டம் டிசம்பர் இருபத்தைந்து அன்று )

ரங்குடு said...

அடப்பாவிகளா! ஒரே ஒரு ஊழல் மூலம் இவ்வளவு சம்பாதனயா? இத வச்சு தமிழகத்திற்கு இன்னும்
பல வருஷம் இலவசச் சப்பாடு போடலாமே. வயறு பத்தி எரியுதய்யா.

Ponchandar said...

கலக்கல் பாஸ் ! ! நீங்கள் வெளியிட்டு இருக்கும் அனைத்து விவரங்களும் நிறைய (இணையம் பயன்படுத்தாத)மக்களுக்கு போய் சேர என்ன செய்ய வேண்டும் ???....தினமணி இந்த விவரங்களை வெளியிடுமா ??

உண்மைத்தமிழன் said...

[[[Speed Master said...

தெளிவான தகவல் நன்றி.]]]

நன்றி அந்தப் பத்திரிகைகளுக்குத்தான் போய்ச் சேர வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[யாழ். நிதர்சனன் said...
நல்லா இருக்கு எப்புடியெல்லாம் பண்ணுறீங்க?]]]

படித்ததை, பார்த்ததை, அறிந்ததை தொகுத்துள்ளேன். அவ்வளவுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

நீங்கள் சவுக்கு குழுவில் ஒருவரா?, எழுத்து நடை, கருத்துக்களை அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து வைக்கும் பாங்கு எல்லாம் அச்சு அசலாய் அவர்கள் பதிவை படிப்பது போலவே இருக்கிறது. வாழ்த்துகக்ள்.]]]

இல்லை. ஆனால் சவுக்கு என்னுடைய சிறந்த நண்பர்களில் ஒருவர்..!

உண்மைத்தமிழன் said...

[[[நந்தா ஆண்டாள்மகன் said...
அருமை பாஸ் கலக்குங்க!! சிபிஐயெல்லாம் வேஸ்ட்..]]

இவைகள் அனைத்தையும் லீக் செய்திருப்பதே சி.பி.ஐ.தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தெளிவான தகவல் நன்றி.]]]

நன்றிகள் ரமேஷ் தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[தில்லு முல்லு said...
போட்டு தாக்கே!!!! அண்ணே இதையெல்லாம் படிக்கும் போது பதினைந்து ஆயிரம் சம்பளத்துக்கு நாயா அலையிற என்னக்கு எப்படி வருது தெரியுமா. முருகா நீ இருக்கீயா..?]]]

அவன் எங்க இருக்கான்.? இல்லாத மாதிரியே நடிக்கிறான்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[jetha said...

clean informations thank u.]]]

நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஈ ரா said...

இஸ்ரோவின் கிரையோஜெனிக் பழுதுகள், சமீபத்தில் தோல்வியடைந்த சோதனை இவற்றால் ஏற்பட்ட நஷ்டங்களுக்கு பின்னால்கூட பல கதைகள் இருக்கும் போலும். இவற்றிற்கும் விசாரணை வைத்தால் நன்றாக இருக்கும்.. (கொஞ்ச நஞ்சமல்ல கிட்டத்தட்ட முன்னூறு கோடி நஷ்டம் டிசம்பர் இருபத்தைந்து அன்று )]]]

வருத்தம்தான்.. ஆனால் எப்போதாவது இப்படியும் நடைபெறும்.. ஆராய்ச்சிகளில் தோல்விகள் சகஜம்தானே..!

உண்மைத்தமிழன் said...

[[[ரங்குடு said...

அடப்பாவிகளா! ஒரே ஒரு ஊழல் மூலம் இவ்வளவு சம்பாதனயா? இத வச்சு தமிழகத்திற்கு இன்னும்
பல வருஷம் இலவசச் சப்பாடு போடலாமே. வயறு பத்தி எரியுதய்யா.]]]

எனக்கும்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ponchandar said...

கலக்கல் பாஸ் ! ! நீங்கள் வெளியிட்டு இருக்கும் அனைத்து விவரங்களும் நிறைய (இணையம் பயன்படுத்தாத)மக்களுக்கு போய் சேர என்ன செய்ய வேண்டும்??? தினமணி இந்த விவரங்களை வெளியிடுமா ??]]]

இவை அனைத்தும் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் நியூஸ்தான்..!

செங்கோவி said...

அருமையாகத் தொகுத்துள்ளீர்கள்..அண்ணே, நீங்க ஏன் சி.பி.ஐ-ல சேரக்கூடாது?

Unknown said...

well done Boss.

puduvaisiva said...

அண்ணே வீட்டு பக்கம் ஆட்டோ வரபோகுது.

நீதிக்கு பின் பாசம் - தலைவர் படம்
ஊழலுக்கு பின் வேஷம் - ???

Unknown said...

I did only what my prdecesors did - A.Raja

Ha ha ha !!

சும்மா.. டைம் பாஸ் said...

Till now no news about the money gone to Raja. Most of the money gone to karuna's family including Kalaignar TV and voltas land. may be Raja would have thought if it goes to Kanimozhi which means that is still his money?

சும்மா.. டைம் பாஸ் said...

"I did a revolution in Telecom"- A. Raja. we do not know that but we know he did a revolution in corruption.

எல் கே said...

சொக்கா என்னாதான்யா நடக்குது ... உண்மைத் தமிழன் அண்ணே , முருகன்(சுப்பிரமணியம் ) எதாவது செய்வாரா ??

Sudhar said...

Thanks for the detail and excellent writeup

R.Gopi said...

தலைவா....

அட்டகாசம்... எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சுட்டீங்க...

“தல”க்கு இப்போ தான் லேட்டஸ்டா எங்கயோ சிறந்த வசனகர்த்தான்னு அவார்ட் கொடுக்கப்போறாங்கன்னு செய்தி படிச்சேன்...

இந்த மாதிரி “தல”யின் ஜெகஜ்ஜால வேலைகளையெல்லாம் பார்த்தா, ”தல”க்கு சிறந்த கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன்னு எல்லா அவார்டும் தரணும் போல இருக்கே...

இந்த முறை “தல” க்ரூப்பை காயடிக்கா விட்டால், தமிழ்நாட்டை எந்த ஆண்டவன் வந்தாலும் காப்பாத்த முடியாது என்பது தெளிவாக தெரிகிறது.

நம் வாக்காள பெருமக்கள் கைய நீட்டி துட்டு வாங்கினா கூட, இந்த களவாணி கூட்டத்துக்கு ஓட்டு போடாம இருக்கணும்...

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
அருமையாகத் தொகுத்துள்ளீர்கள். அண்ணே, நீங்க ஏன் சி.பி.ஐ-ல சேரக் கூடாது?]]]

வயசு போயிருச்சு தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[malgudi said...

well done Boss.]]]

மிக்க நன்றி பாஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[♠புதுவை சிவா♠ said...

அண்ணே வீட்டு பக்கம் ஆட்டோ வர போகுது.

நீதிக்கு பின் பாசம் - தலைவர் படம்
ஊழலுக்கு பின் வேஷம் - ???]]]

கருணாநிதியின் படம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sakthi said...

I did only what my prdecesors did - A.Raja

Ha ha ha !!]]]

அப்படீன்னா அடுத்து மன்னமோகனையும், கருணாநிதியையும் தூக்க வேண்டியதுதான்..!

eeasy baby said...

தலை சுற்றுகிறது

உண்மைத்தமிழன் said...

[[[சும்மா.. டைம் பாஸ் said...

Till now no news about the money gone to Raja. Most of the money gone to karuna's family including Kalaignar TV and voltas land. may be Raja would have thought if it goes to Kanimozhi which means that is still his money?]]]

அதுவும் கூடிய சீக்கிரம் வெளில வரும் நண்பரே..! இப்போது உரிமம் வாங்கிய சில நிறுவனங்களில் மறைமுக உரிமையாளர்களாக ராஜாவும், அவரது குடும்பத்தினரும்தான் இருக்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[சும்மா.. டைம் பாஸ் said...
"I did a revolution in Telecom"- A. Raja. we do not know that but we know he did a revolution in corruption.]]]

ஆமாம்.. இவ்ளோவ் பெரிய தொகைக்கு ஊழல் செய்ததினால் மிகப் பெரிய சாதனையை செய்திருக்கிறார் ராசா.. பாராட்ட வேண்டியதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[எல் கே said...

சொக்கா என்னாதான்யா நடக்குது. உண்மைத் தமிழன் அண்ணே, முருகன்(சுப்பிரமணியம் ) எதாவது செய்வாரா ??]]]

என்னத்த செய்வான்.. நல்லா ஆட விடுறான்.. கடைசி காலத்துல அவன் வேலையைக் காட்டுவான். அதுவரைக்கும் நாம காத்திருக்க வேண்டியதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sudhar said...
Thanks for the detail and excellent writeup.]]]

மிக்க நன்றி சுதர்..

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

தலைவா. அட்டகாசம். எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சுட்டீங்க.

“தல”க்கு இப்போதான் லேட்டஸ்டா எங்கயோ சிறந்த வசனகர்த்தான்னு அவார்ட் கொடுக்கப்போறாங்கன்னு செய்தி படிச்சேன்.]]]

நாக்பூர்ல திரைப்பட விழால கொடுக்குறாய்ங்களாம்..!

[[[இந்த மாதிரி “தல”யின் ஜெகஜ்ஜால வேலைகளையெல்லாம் பார்த்தா, ”தல”க்கு சிறந்த கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன்னு எல்லா அவார்டும் தரணும் போல இருக்கே.]]]

கண்டிப்பா தரணும்..!

[[[இந்த முறை “தல” க்ரூப்பை காயடிக்கா விட்டால், தமிழ்நாட்டை எந்த ஆண்டவன் வந்தாலும் காப்பாத்த முடியாது என்பது தெளிவாக தெரிகிறது.]]]

நிச்சயமாக..!

[[[நம் வாக்காள பெருமக்கள் கைய நீட்டி துட்டு வாங்கினா கூட, இந்த களவாணி கூட்டத்துக்கு ஓட்டு போடாம இருக்கணும்.]]]

இதுதான் எனது கோரிக்கையும்கூட..!

உண்மைத்தமிழன் said...

[[[eeasy baby said...

தலை சுற்றுகிறது.]]]

இன்னும் நிறைய இருக்கு.. இதுக்கே தலை சுத்துதுன்னா எப்படிங்கோ..?

சும்மா பேசலாம் said...

எப்படி எல்லாம் விஞ்சான முறையில் ஊழல் செய்கிறார்கள். இவர்கள் இந்த மூளையில் ஒரு சதவீதத்தை மக்களின் நலத்திட்டங்களுக்குகாக செலவிட்டால் இந்தியா எப்பொழுதோ வல்லரசாயிருக்கும்.

உண்மைத்தமிழன் said...

[[[சும்மா பேசலாம் said...
எப்படி எல்லாம் விஞ்சான முறையில் ஊழல் செய்கிறார்கள். இவர்கள் இந்த மூளையில் ஒரு சதவீதத்தை மக்களின் நலத் திட்டங்களுக்குகாக செலவிட்டால் இந்தியா எப்பொழுதோ வல்லரசாயிருக்கும்.]]

இதுக்காகவா அவங்க அரசியலுக்கு வர்றாங்க.. அதிகாரம், பணம் சம்பாதிப்பது இவை இரண்டும்தான் முக்கிய நோக்கம். மக்கள் நலன் கிடையவே கிடையாது..!

njsivakumar said...

ரொம்ப அருமைய சொன்னிங்க

உண்மைத்தமிழன் said...

[[[njsivakumar said...

ரொம்ப அருமைய சொன்னிங்க.]]]

மிக்க நன்றி சிவகுமார்..!

Suresh V Raghav said...

Dawood relations with Sharath powar is evident. They are arresting balwa for having contacts with D. How abt shrad pawar.
Does Marathis have no shame in electinga leader, who seems to be very close with D, who bombed Bombay??

உண்மைத்தமிழன் said...

[[[Suresh V Raghav said...
Dawood relations with Sharath powar is evident. They are arresting balwa for having contacts with D. How abt shrad pawar. Does Marathis have no shame in electinga leader, who seems to be very close with D, who bombed Bombay??]]]

பின்பு எப்படி சரத்பவார் ஜெயித்தார், ஜெயிக்கிறார்.? இது யாருடைய தவறு..? மக்கள்தானே..? அவர்கள்தான் திருந்த வேண்டும்..!

Vijayakumar Krishnan said...

Hi Sir,

Excellent info and i wish this should reach all Tamizhil people...I know that people are having very worst opinion on DMK Party and a revolution will come one more time to save Tamil Nadu...i pray GOD to give one more Anna, Kamarajar & MGR (wat a great leaders) to serve Tamizhil People.
Why our CM didn't order for CBI investigation when this issue was discussed widely across the nation?
His silent is to save Raja or his daughter (Kanimozhi)...?

Thamizhan said...

உண்மைத் தமிழனா இல்லை பார்ப்பனீயத்தின் கருவியாகப் பயன் படும் ஏமாளித் தமிழனா? அந்தக் கும்பலிடம் உள்ள சங்கர மடச் சுப்புணியின் 200க்கு மேற்பட்ட அறக்கட்டளைகளின் ரகசியங்களைக் கசிய விடச் சொல்லிக் கேட்டுப் பாருங்கள். இதை ஏன் கசிய விடுகிறார்கள் என்ற ரகசியமாவது புரிகிறதா? நீதி மன்றத்தில் நடக்க வேண்டியதைப் பொது மன்றத்தில் கசிய விடுவது ஏன் தெரிகிறதா? அவர்களுக்கு வேண்டியது ராசா அல்ல. ஆட்சி கவிழ வேண்டும், அது தான். ஆழ அலசிப் பார்க்கவும்.

Unknown said...

உண்மைத்தமிழனே! புதியக்கதைகள் சுவை என்றும் களைப்பாரு கூறி காலம் கழிக்க வேண்டாம். பழைய அமுக்கப்பட்ட உண்மைகள் 2 உண்டு அதை வெளிக்கொண்டு வந்து உண்மைத்தமிழனாக பெயர் எடு!

1. இரசீவ் என்ற காந்தியைக் கொன்றவர்கள் என்று அப்பாவிகள் பலரையும் அடைத்து வைத்திருக்கிறார்கள். பல சாட்சியங்கள் இருந்தும் உண்மை கொலைகாரன், திருடன் சுவாமி என்ற சுப்பிரமணி இன்னும் வெளியில்தான் உள்ளான். அதை அலசி அவனை உள்ளே அடைத்து தூக்கிலிட வழி காண்
2. கோபாலக்கிருட்டிணன் போன்ற பலரையும் ஆள் வைத்து கொன்றும், இன்றும் வெளியே காவியுடன் சுற்றி வரும் கொலைகாரன், பெண்லோலன், பொய் சாமியார் "சங்கர மட" திருடனை உள்ளே தள்ளி அவனை தூக்கிலிடும் வழியைத்தேடு.

இவையே உபயோகமாக இருக்கும். உண்மைத் தமிழன் செய்த பயனாகவும் இருக்கும். இனியும் புதிய கதைகள் தேவையில்லை

உண்மைத்தமிழன் said...

[[[Vijayakumar Krishnan said...

Hi Sir, Excellent info and i wish this should reach all Tamizhil people. I know that people are having very worst opinion on DMK Party and a revolution will come one more time to save Tamil Nadu. i pray GOD to give one more Anna, Kamarajar & MGR (wat a great leaders) to serve Tamizhil People.

Why our CM didn't order for CBI investigation when this issue was discussed widely across the nation?

His silent is to save Raja or his daughter (Kanimozhi)...?]]]

கொள்ளையடித்த அவரே தானே வலியப் போய் மாட்டிக் கொள்வாரா..? இதனை அவரிடம் எதிர்பார்ப்பதே நமது தவறு.. இந்தத் தேர்தலில் நாம் அவருக்கு தகுந்த பாடத்தைக் கொடுக்க வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Thamizhan said...

உண்மைத் தமிழனா இல்லை பார்ப்பனீயத்தின் கருவியாகப் பயன்படும் ஏமாளித் தமிழனா? அந்தக் கும்பலிடம் உள்ள சங்கர மடச் சுப்புணியின் 200க்கு மேற்பட்ட அறக்கட்டளைகளின் ரகசியங்களைக் கசிய விடச் சொல்லிக் கேட்டுப் பாருங்கள். இதை ஏன் கசிய விடுகிறார்கள் என்ற ரகசியமாவது புரிகிறதா? நீதிமன்றத்தில் நடக்க வேண்டியதைப் பொதுமன்றத்தில் கசிய விடுவது ஏன் தெரிகிறதா? அவர்களுக்கு வேண்டியது ராசா அல்ல. ஆட்சி கவிழ வேண்டும், அதுதான். ஆழ அலசிப் பார்க்கவும்.]]]

அதெல்லாம் சரி.. பதிவுல கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க ஸாரே..!? ச்சும்மா பார்ப்பனீயம்.. அந்த ஈயம்.. இந்த ஈயம்ன்னுட்டு..!

உண்மைத்தமிழன் said...

[[[nam said...

உண்மைத்தமிழனே! புதியக் கதைகள் சுவை என்றும் களைப்பாரு கூறி காலம் கழிக்க வேண்டாம். பழைய அமுக்கப்பட்ட உண்மைகள் 2 உண்டு அதை வெளிக்கொண்டு வந்து உண்மைத்தமிழனாக பெயர் எடு!

1. இரசீவ் என்ற காந்தியைக் கொன்றவர்கள் என்று அப்பாவிகள் பலரையும் அடைத்து வைத்திருக்கிறார்கள். பல சாட்சியங்கள் இருந்தும் உண்மை கொலைகாரன், திருடன் சுவாமி என்ற சுப்பிரமணி இன்னும் வெளியில்தான் உள்ளான். அதை அலசி அவனை உள்ளே அடைத்து தூக்கிலிட வழி காண்.

2. கோபாலக்கிருட்டிணன் போன்ற பலரையும் ஆள் வைத்து கொன்றும், இன்றும் வெளியே காவியுடன் சுற்றி வரும் கொலைகாரன், பெண்லோலன், பொய் சாமியார் "சங்கர மட" திருடனை உள்ளே தள்ளி அவனை தூக்கிலிடும் வழியைத் தேடு.

இவையே உபயோகமாக இருக்கும். உண்மைத் தமிழன் செய்த பயனாகவும் இருக்கும். இனியும் புதிய கதைகள் தேவையில்லை.]]]

இந்தக் கதையெல்லாம் இப்போ தேவையில்லை.. கண்ணுக்கு முன்னாடி கொள்ளையடித்த இந்தக் கும்பலை விரட்டணும்.. அதுதான் இப்போதைக்கு மி்க முக்கியம்..!