அவன்-இவன் - சினிமா விமர்சனம்

18-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ரஜினியின் ‘எந்திரன்’ திரைப்படத்திற்குப் பின்பு தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு இத்திரைப்படத்திற்குத்தான். சென்னையில் முதல் மூன்று நாட்களுக்கான முன் பதிவு முழுமையாக நிரம்பியுள்ளதாக திரையரங்க வட்டாரங்கள் மகி்ழ்ச்சியில் திளைக்கின்றன.

தமிழ்ச் சினிமா காட்ட மறுத்த, மறுக்கும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களை படம் பிடித்துக் காட்டுவதே பாலாவின் தனித்துவம்..! அந்த வகையில் இதுவும் ஒரு தனித்துவமான படம்தான்..!

விசுவாசம்.. இதுதான் பாலா இதுவரையிலும் எடுத்த நான்கு திரைப்படங்களில் கடைசி மூன்று படங்களின் முடிச்சு. இந்த ஐந்தாவது படத்திலும் இதுதான் மூக்கணாங்கயிறு..!


மணப்பாறை ராம்ஜி நகரை போன்று, ஊரே திருடர்களாக இருக்கும் ஒரு குக்கிராமம். இக்கிராமத்தை உள்ளடக்கிய கமுதிக்குப்பத்தின் தற்போதைய ஜமீன்தாரர் ஜி.எம்.குமார் என்றும் ஹைனஸ். தனது அரண்மனையையும், இம்பாலா காரையும் வைத்தே ஜமீன் அந்தஸ்தை ஓட்டி வரும் இவரின் செல்லப் பிள்ளைகள் அண்ணன், தம்பிகளான விஷாலும், ஆர்யாவும்..

இறைச்சிக்காக மாடுகளை கேரளாவுக்குக் கடத்தும் வில்லனை ஜமீன், தனது செல்வாக்கை வைத்து போலீஸில் காட்டிக் கொடுக்க.. அந்த வில்லன் பதிலுக்கு ஜமீனை மிகக் கொடுமையான முறையில் கொலை செய்ய.. வழக்கமான பாலாவின் ஹீரோயிக்கள் விசுவாசம் என்னும் கேடயத்தைத் தூக்க.. அவன்-இவன்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் இறுதிக் காட்சி..!

இப்படத்தில் கதை என்பதே இல்லை என்பதுதான் இப்படத்தின் சிறப்பு..! சில சம்பவங்களின் தொகுப்புதான் இத்திரைப்படம்..!

திருடர்கள் பரம்பரையில் வந்த இவர்களின் தந்தையின் இரு தார சக்களத்தி சண்டையில் சிக்கியிருக்கும் விஷால், ஆர்யாவின் சமூகத்தைக் காட்டுகின்ற நோக்கில், இங்கே நாம் அதிகம் கண்டு கொள்ளாத நமது சக மக்கள் இன்னமும் நிறைய பேர் உள்ளார்கள் என்பதையும் பாலா சுட்டிக் காட்டுகிறார்.

ஆனால் இதுபோல் ஜமீன் குடும்பம் தற்போது எங்கே உள்ளது என்று தேடித்தான் பார்க்க வேண்டும். ஒரு வேளை இல்லாத ஒன்றை பாலா இருப்பதுபோல் வலுக்கட்டாயமாக சுவையுடன் நமக்குள் திணிக்கிறாரோ என்றும் தோன்றுகிறது..!

எந்த ஊரில் இதுபோல் ஜமீன்தாரை தேரில் உட்கார வைத்து ஊர் மக்கள் இழுத்து வருகிறார்கள்..? ஒரு காலத்தில் என்றால்கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால் இப்போதைய நிலைமையில் எடுத்துக் காட்டுவது கொஞ்சம் அதிகப்படியான உருவாக்கமாகத்தான் தெரிகிறது.. இதனை ஜமீனாக எடுத்துக் கொள்ளாமல் தாதாயிஸமாக காட்டியிருந்தால்கூட கொஞ்சம் ஏற்றுக் கொண்டிருக்கலாம்..!

வழக்கமான பாலாவின் கதாநாயகர்களைப் போல விஷாலும், ஆர்யாவும் எதையும் செய்வார்கள் என்கிற பாணியிலேயே நம்மைத் துவக்கத்திலேயே பழக்கப்படுத்துகிறார்கள்..! ஆனால் விஷாலின் கேரக்டர் ஸ்கெர்ச் மிகவும் கவனத்துடன் கையாளப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது..!

விஷாலுக்கு நிச்சயமாக இதுதான் முதல் திரைப்படம். அவர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.. கிட்டத்தட்ட அரவாணியைப் போன்ற அவருடைய நடை, உடை, பாவனைகளுக்குப் பதிலாக, அவர் நாடகத்தில் ஸ்திரீ பார்ட் ஏற்பவராக இருப்பதால் அது போன்றே இருக்கப் பழகுகிறார் என்பதெல்லாம் நம்மை நம்ப வைக்க செய்திருப்பதாகவே தோன்றுகிறது..!

படத்தின் பல குறியீடூகளுக்கு விஷால்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்..! ஆர்யாவால் பல முறை அவமானப்படுத்தப்பட்டும், எதுக்கும் லாயக்கில்லை என்றெல்லாம் குத்திக் காட்டப்பட்டும் குலத் தொழில் செய்ய துணிவில்லையென்றும் சொல்லப்படும் விஷால்தான், ஆர்யாவை வனத்துறை காவலர்களிடமிருந்து காப்பாற்றுகிறார்..!

காட்டாற்றின் கீழே அவ்வளவு பெரிய மரத்தில் அம்மணமாகத் தொங்கும் ஜமீனின் உடலைப் பார்த்து மயங்கி விழுவது ஆண் மகன் ஆர்யாவாகவும், கதறலுடன் அந்த மரத்தின் மீதேறி ஜமீனின் உடலை நீரில் விழுக வைத்து பின்னர் தண்ணீரிலிருந்து தூக்குவது ஸ்திரீ பார்ட் விஷாலாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது  குறியீடாக இல்லாமல் வேறென்ன..?

காலம் முழுக்க திருடனாக இருந்தவன்  வில்லனிடம் அடிபட்டு விழுக.. மேக்கப் போடும் கலைஞனாக அதுவும் பெண்ணாக உணரப்பட்டவன்தான், தனது விசுவாசத்தைக் காட்டும்விதமாக பகைவனைப் பழி தீர்க்கிறான்.. உச்சபட்ச குறியீடு இதுதான்..!

பெண் போல் இருக்கிறானே என்றெல்லாம் நம்மிடையே ஒரு எண்ணத்தை விதைத்துவிட்டு போலீஸ்காரியுடன் அவரது காதலைத் துவக்கி வைத்த சிறிது நேரத்திலேயே, அந்த கேரக்டர் மீதான நமது பரிதாப உணர்வு காணாமல் போய்விடுகிறது.. ஜமீன் சொல்வதைப் போல விஷால் இதற்குப் பின்பு நல்ல கலைஞனாகவே உணரப்படுகிறார். இது சூர்யா முன்னிலையில் அவர் காட்டும் நவரச நடிப்புணர்ச்சியின் மூலமாக உணர்த்தப்படுகிறது..!

முதல் குத்துப் பாடலில் ஆடுகின்ற விஷாலின் நடனம் நிச்சயமாக இந்தாண்டு முழுவதும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் முதலிடத்தில் இடம் பிடிக்கப் போகிறது..! அசத்தல் நடனம்..! அரவாணிகளுடன் இணைந்து ஆடிய ஆட்டம் என்றாலும் பாலாவின் தனித்துவம் வாய்ந்த நடனக் காட்சியில் இதுவும் ஒன்று. இதுவே வேறொரு இயக்குநராக இருந்தால் குளோஸப் வைத்தே கொன்றொழித்திருப்பார்கள்..! மிகச் சிறந்த நடன இயக்கம்..!

விஷாலின் மொன்னை நடிப்பை ‘சிவப்பதிகாரம்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பார்த்து நொந்து போயிருந்த என்னைப் போன்ற தமிழ் ரசிகர்கள், நிச்சயம் இந்தப் படத்திற்காக அவரை உச்சத்தில் வைத்துக் கொண்டாடலாம்..!

காவல்துறையினர் கொடுக்கும் விருந்திற்காக ராமராஜன் உடையில் ஸ்டைலாக வந்திறங்கும் விஷால், தனது காதலியின் பின்னால் ஒய்யாரமாக நடந்து செல்வாரே.. அந்த ஒரு ஷாட்டே டாப் கிளாஸ்..! இந்தக் கல்யாண மண்டபத்தில் தண்ணியடித்துவிட்டு அவர் செய்கிற அலப்பறைகள் எதுவும் வீணாகவில்லை. விஷாலா இப்படி என்று நிறையவே யோசிக்க வைத்திருக்கிறார் பாலா.

போலீஸ்காரியின் வீட்டில் திருட  வந்து மாட்டியவுடன் தனது குரலை டக்கென மாற்றிக் கொண்டு உதார் விடுவது.. சித்தியும், ஆர்யாவும் தன்னைத் தி்ட்டித் தீர்க்கும் காட்சியில் முகத்தாலேயே முறைப்பை உணர்த்துவது என்று விஷாலை பாராட்ட வேண்டிய காட்சிகள் நிறையவே..!

இந்தப் படத்தில் ஒவ்வாமையாக எனக்குத் தோன்றுவது ஆர்யாவின் காதல் காட்சிகள்தான்..! பெண்ணியவாதிகள் இப்படத்தைப் பார்த்து இனி என்ன கருத்து சொல்வார்களோ தெரியவில்லை.. அந்த அளவுக்கு எதனால் காதல் வருகிறது என்பதே தெரியாமல் ஆர்யாவின் ஆண்மைத்தனமான காதல் காட்சிகள் கதையோடு கொஞ்சமும் ஒட்டவில்லை..! அதிலும் தனது காதலியை குட்டிக்கரணம் போடச் சொல்லும் காட்சிகள் ரொம்பவே ஓவர்..!

இதற்குப் பதிலாக டூயட் காட்சியில் ஆர்யாவும் பதில் குட்டிக் கரணம் போட்டாலும் இதை காதலியை மகிழ்விப்பதற்காகவே என்று சொல்லி பாலா ஒரு ஆணாதிக்கவாதி என்று குற்றம்சாட்டுபவர்களுக்கு தானே வலிந்து ஒரு வாய்ப்பைக் கொடுத்துவிட்டார்.

கதை இப்படித்தான் என்றெல்லாம் சொல்லப்படாமல் அவர்களின் சமீபத்திய நடவடிக்கைகளையே திரைக்கதையாக்கி அதையே இடைவேளை வரையிலும் கொண்டு சென்றிருப்பதுதான் ஆச்சரியம்..! ஆனாலும் இடைவேளைக்குப் பின்பு கதைக்குள் நம்மையும் இழுத்துக் கொண்டு ஜீவித்திருக்கிறார் பாலா..!

இப்படி கதை எதை நோக்கிப் போகிறது என்கிற விஷயமே இல்லாமல் நகர்த்தியிருப்பதற்கு மிக உதவியாக இருப்பது திரைக்கதையும், வசனங்களும்தான்..! 2 நிமிடங்களுக்கொரு முறை வசனங்களால் தியேட்டர் அதிர்கிறது..!

அதிலும் இதில் இருக்கின்ற வசனங்களையெல்லாம் கேட்டால் படம் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் தூங்கிவிட்டார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது..! இரட்டை அர்த்த வசனங்கள் என்றால்கூட கள்ளச் சிரிப்பு சிரித்துவிட்டுப் போகலாம். ஆனால் இதில் நேரடியான வசனங்களே இப்படித்தான் இருக்கின்றன. அந்தக் கிராமத்து மக்களின் இயல்பான வசனங்களைத்தான் எழுதியிருக்கிறேன் என்று எஸ்.ரா. சொன்னாலும், அனைத்தையும் வெளிப்படையாக்குதல் என்றால் சென்சார்ஷிப் எதற்கு என்ற கேள்வி எழுகிறதே..?

அதிலும் அம்பிகா பேசும் சில வசனங்கள் அதீத ஆபாசத்தன்மை கொண்டவை.. ‘குஞ்சாமணி’, ‘மாவு மாவா போகுது’, ‘நட்டுக்கிட்டு நிக்குது’, ஆர்யா ஜமீனிடம் தண்ணியடித்துவிட்டு பேசும் அந்த ‘ஏ’ ரக வசனங்கள், பெண் போலீஸிடம் பேண்ட்ல ஜிப் இருக்கா...? என்று கேட்பது.. ஆர்யா தனது பின்புறத்தைப் பற்றிப் பேசுவது  என்று பலவும் விசனப்பட வைக்கின்றன.. இந்தப் படத்திற்கு இதெல்லாம் தேவையா என்று..?

இந்தக் குறிப்பிட்ட சமூகம்தான் என்றில்லை.. தரமணி ஏ.சி. அறையில் பொட்டி தட்டுபவன்கூட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக இப்படி பேசுவான்.. கோபம் வந்தால் எந்தத் தமிழனிடமும் ஆர்யா ஜமீனிடம் உதிர்க்கும் அந்த வசனம்தான், முதல் வார்த்தையாக வெளிவரும். இதில் எந்த ஜாதிக்கார தமிழர்களும் விதிவிலக்கில்லை..! பின்பு எதற்கு இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்று சுட்டிக் காட்டி அவர்கள் மீது அசூயையை வரவழைக்க வேண்டும்..? இயல்பை காட்டுவதிலும் இயக்குநர்களிடம் ஒரு அளவுகோல் தேவை.

எஸ்.ரா.தான் இந்த வசனங்களை எழுதினாரா என்று எனக்கு இப்போது சந்தேகமாகவும் இருக்கிறது. பாலாவின் கைவண்ணம் இதில் இருந்திருக்காதா என்றும் யோசனை வருகிறது. இது பாலாவின் மீதிருக்கும் ஒட்டு மொத்தத் திறமை மீதான அபிமானம்.

அதே சமயம் இத்தனை ஆண்டுகளாக எஸ்.ரா.வின் எழுத்தை வாசித்து வரும் ஒரு ரசிகன், இப்படிப்பட்ட வசனங்களின் ஒரு சிறிய முன்னுரையைக்கூட அவரது எழுத்துக்களில் இதுவரையில் வாசித்ததில்லை என்பதால் சட்டென்று ஏற்க முடியாமல் கொஞ்சம் திணறுகிறான்..!

பாத்திரப் படைப்புகளில் காவல் துறையினரை கேலிக்கூத்தாக்கியிருப்பது இத்திரைப்படத்தில் மட்டும்தானா..? நீதிபதியின் வீட்டுக்கு திருடனை அழைத்துச் சென்று பூட்டை உடைக்கச் சொல்லுவது.. ஊரில் திருட்டுக்களே நடக்கக் கூடாது என்றெண்ணி பூஜை செய்வது.. திருடர்களிடமே வந்து கெஞ்சி கூத்தாடுவது என்பதெல்லாம் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடப்பதுதான். போலீஸ் ஸ்டேஷனிலேயே பூஜை நடத்துவது இங்கே சர்வசாதாரணம்..! ஆக, அப்படிப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டரும், போலீஸாரும் இருக்கின்ற சூழலில் நடந்த கதையாகவே இதனை நாம் எடுத்துக் கொள்வோம்..!

பாலாவின் பெர்பெக்ஷன் என்பதே அவருடைய இயக்குதல் மற்றும் படைப்புத் திறனிலும் மேலோங்கியிருக்கும். இதிலும் அவ்வாறே.. அத்தனை நடிகர்களையும் ஒருசேர நடிக்க வைத்திருக்கிறார். உதாரணமாக முதல் குத்துப் பாடல் முடிந்ததும் விஷால் படியேறி ஜமீனிடம் தப்பியோடும்போது படிக்கட்டுகளில் நின்று கூச்சல் போடும் ஆட்டக்காரிகளின் நடிப்பை மீண்டும் ஒரு முறை பாருங்கள்.. எந்த வித்தியாசத்தையும் உணர முடியாது..!

ஒட்டு மீசையுடன் ஜமீனாக நடித்திருக்கும் ஜி.எம்.குமார் முதல் காட்சியிலேயே விஷாலின் ஆட்டத்தைத் தாங்க முடியாத சிரிப்போடு சிம்மாசனத்தின் குறுக்கே படுத்து சிரிப்பதோடு தன்னை வித்தியாசப்படுத்தியிருக்கிறார்..! இதே ஜமீன்தான் அம்மணமாக வில்லனின் முன்பாக கூனிக் குறுகி நடுங்கிய தோரணையில் நிற்பதை பார்க்கின்றபோது அதற்குள் இத்தனையும் நடந்து முடிந்துவி்ட்டதா என்று சட்டென்று யோசிக்க வைக்கிறது திரைக்கதை..! ஜமீனின்  புறாக்களுடனான புலம்பல் தனிமை ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம்..!

ஆர்யாவின் அம்மாவாக வரும் பிரபா தனது மகனுக்காக அம்பிகாவுடன் வரிந்து கட்டிக் கொண்டு வந்து பேசுவதும், செயற்கரிய செயலைச் செய்து, சுழல் விளக்கு வைத்த காரில் வந்திறங்கிய மகனை ஆட்டம், பாட்டத்தோடு வரவேற்கும் அந்தக் காட்சியும் ரசனைக்குரியது. அந்தம்மா இதைவிட கெட்ட ஆட்டத்தையெல்லாம் தெலுங்கில் நிறையவே ஆடியிருக்கிறார் என்பதை தமிழ் ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..!

இரண்டு ஹீரோயின்களில் மதுஷாலினிக்கு அதிகம் வேலையில்லை. ஆனால் போலீஸ்கார ஜனனி ஐயரின் பேச்சைவிட அவரது கண்கள் நிறையவே பேசுகிறது. விஷாலை நடுரோட்டில் வழிமறித்து பேசுவதாகட்டும்.. வாக்கிடாக்கி கேட்டு வீடு தேடி வந்து கெஞ்சுவதாகட்டும் இந்தப் பொண்ணையும் இயல்பாக நடிக்க வைத்திருக்கிறார் பாலா..!

அம்பிகா பீடி குடிப்பது, சின்னப் பையன் ஜமீனை யோவ் பெரிசு என்று அழைப்பது.. பெண் போலீஸ் கான்ஸ்டபிள்கள் இன்ஸ்பெக்டரை அண்ணன் என்று அழைப்பது.. நீதிபதி இன்ஸ்பெக்டரை மிரட்டுவது.. அம்பிகாவும், பிரபாவும் குடும்பத்திற்கென்ற சூழல் வந்தவுடன் இணைந்து பேசுவது என்று பல கலவைகள் பாலாவால் கலக்கப்பட்டிருக்கிறது..

“எனக்கொரு ஆசை சார்.. இந்த லைட் வைச்ச கார்ல ஒரு தடவையாச்சும்..” என்ற வார்த்தையோடு முடித்துவிட்டு அடுத்தக் காட்சியில் அந்தக் காரில் ஆர்யா பயணிப்பது.. ஜமீனின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின் இடையிடையே பழி வாங்கும் படலத்தைக் காட்டி மிரட்டியிருப்பது, இறுதியில் தேரோடு வில்லனையும் சேர்த்து சொக்கப் பானை கொளுத்துவது என்று எதிர்பாராத சில தருணங்கள் திரைப்படத்திற்கு சுவை கூட்டியிருப்பது உண்மை.

படத்தில் எந்தக் காட்சியாலாவது இயக்கம், நடிப்பு சொதப்பல் என்று சொல்லவே முடியாத அளவுக்கு பாலாவின் மிகத் திறமையான இயக்குதல் தொடர்ந்திருக்கிறது..!

ஒரேயொரு நெருடல்.. கோவிலுக்கே சாமியாய் அமர்ந்து அருள் பாலிக்கும் அந்த ஜமீன் இறந்தவுடன் ஆர்யா, விஷால் தவிர சுற்றி நிற்கும் மற்ற மக்களுக்கு அந்த எண்ணம் வராதது ஏன் என்றுதான் தெரியவில்லை..

ஜமீனுக்கு அடங்கிய ஊர் மக்கள்.. தெய்வமாக வழிபடும் தன்மை.. தேரில் அமர வைத்து இழுத்து வருவது.. இதெல்லாம் ஆண்டான், அடிமையை, சாதிப் பாகுபாட்டை மீண்டும் எதிரொலிக்கிறது என்றெல்லாம் பல்வேறுவிதமான சர்ச்சைகள்..!

குற்றம், குறை சொல்பவர்கள் சொல்லிக் கொள்ளலாம்.. நாம் மறக்க நினைக்கும், இந்தியச் சாதியத்தின் படிமங்களை மீண்டும், மீண்டும் இது பறை சாற்றுகிறது.. இந்துத்துவாவுக்கு மீண்டும், மீண்டும் வால் பிடிக்கிறார் என்றெல்லாம் பாலாவை நோக்கி குற்றச்சாட்டுக்கள் வந்தாலும், இப்படித்தான் இருக்கும் என்று நினைத்து அவரும் மறைமுகமாக இதற்கு படத்திலேயே பதில் சொல்லியிருக்கிறார்..!

“கும்பிடறேன் சாமி” என்று ஆர்யாவுக்கு வைத்திருக்கும் பெயர்க் குறிப்பு எவனா இருந்தாலும் இனிமேல் எங்களை சாமி என்றுதான் பேச்சுக்காகவாவது அழைக்க வேண்டும் என்கிற அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் எண்ணத்தையே பிரதிபலிக்கிறது..!

சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் இந்துத்துவா என்று அலறித் துடிக்கும் தத்துவ மேதைகளுக்கு உதவியாக, பாலா தான் நம்பும் நாத்திகவாதத்தையும் ஒரு காட்சியில் வெளிப்படுத்தியிருக்கிறார். “பக்தனுக்கு என்ன வேண்டும் என்று தெரியாத நீயெல்லாம் ஒரு கடவுளா..?” என்று ஆர்யா மூலமாகக் கேட்கிறார் பாலா.

மாடுகளை இறைச்சிக்காக கடத்துவதைத் தடுக்கும் ஜமீனிடம் வில்லன் கேட்கும் கேள்வி நியாயமானதுதான்.. “குர்பானிக்காக மாட்டை வெட்டித் திங்குறாங்களே.. அவங்களை போய் கேள்வி கேட்டியா நீயி..” என்ற இந்தக் கேள்விக்குள் உணர்த்துகின்ற, உணர்த்தப்படுகின்ற விஷயங்கள் நிறையவே உள்ளன.

நமது பல்வேறு மதங்கள், சமயங்கள், சாதிகள் பின்னிப் பிணைந்திருக்கும் இந்தச் சூழலில் இது போன்ற எதார்த்தவாத கேள்விகளுக்குப் பதில் கிடைப்பது கஷ்டம்தான்..! ஒருவருக்கு புனிதமானது மற்றொருவருக்கு பிடிக்காததாக இருக்கிறது..! ஆனால் இவை இரண்டுமே சமூகம் சார்ந்த பழக்கமாக இருப்பதால் இரண்டையுமே நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இப்படியொரு சூழல் இருக்கிறது என்பதைச் சொல்லிக் காட்டுவதாலேயே அவர் அதற்கு ஆதரவானவர் என்று சொல்லி முத்திரை குத்திவிடக் கூடாது..! 

சமூகத்தின் கடைக்கோடியில், பிணியில் சிக்கி, கவனிப்பாறின்றி வாழும் மனிதக் கூட்டங்களின் வாழ்க்கையின் ஒரு சில பகுதிகளை மட்டும் இத்திரைப்படத்தில் பிய்த்து, பிய்த்து கொடுத்திருக்கிறார் பாலா. இதில் விபூதியும், சந்தனமும், குங்குமமும் தெளிப்பதோடு கூடவே, மனிதர்களுக்கு பொதுவான ரத்தமும் சிந்தப்படுகிறது என்பதுதான் உண்மை..!

பாலாவின் முந்தைய படங்களைப் போல இப்படமும் அவருடைய சிறந்த இயக்கத்திற்காகவும், பங்களித்த கலைஞர்களின் உயர்ந்த நடிப்பிற்காகவும் நிச்சயமாகப் பேசப்படும்..!

அவன்-இவன் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்..!

58 comments:

PremaVenus said...

Yov Bala umakku eththanai petti koduthirukaar.......

Padam paarththu Raththa kalariyil vantha koottaththil adiyenum oruvan
ayya.......

Sethuvai thavira matra ella bala padamum Total waste!

Unknown said...

உங்க விமர்சனத்தைப் படிக்கைலயே தெரியுது நீங்க கேபிளண்ணே விமர்சனத்தைப் படிக்கலைன்னு. உங்க கருத்தை சுயமா சொல்லிருக்கீங்க.

இங்க உள்ள தெலுங்கு மக்கள் தமிழ்நாட்டில் என்ன ரிவ்யூ சொல்றாங்கன்னு கேக்குறாங்க. நீங்க சொல்றத சொல்றதா, கேபிளண்ணன் சொல்றத சொல்றதா? ஒன்னுமே புரியலை. படம் பாக்குற மாதிரி இருக்கும்னு மட்டும் நல்லா புரியுது.

iniyavan said...

மொத்தத்துல என்ன சொல்ல வறீங்க? படம் நல்லா இருக்கா? இல்லையா?

iniyavan said...

குறியீடு குறியீடு அப்படின்னா என்னா?

RAJA RAJENDRAN said...

மிகவும் ஆச்சர்யம் இது.......நீங்கள், இந்த படத்தை நேர்மையாக பாராட்டியுள்ளீர்கள் !

கோவை நேரம் said...

அருமையா சொல்லி இருக்கீங்க .இன்னிக்கு தான் உங்க பேவரிட் தியேட்டர்ல படம் பார்த்தேன் .தேவி கருமாரி அம்மன், விருகம் பாக்கம்.எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு.ஆனா கேபிள் சங்கர் அண்ணனுக்கு பிடிக்கல போலிருக்கு .

ராஜரத்தினம் said...

நல்ல விமர்சனம் என்று நினைக்கிறேன். ஏன் கேபிளார் (அவர் என்ன நாஞ்சிலாரா) என்கிற சங்கர நாராயணனின் விமர்சனத்தை ஏன் yardstick ஆக வைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. அவர் அவ்ளோ நல்ல விமர்சனம் பண்ணுவாரா? இப்படி எல்லாரையும் குத்தி கிழித்துவிட்டு நாளை இயக்குனரானால் (?) அவர் எப்படி மற்றவரோடு சகஜமாக பழக முடியும் என்று எனக்கு தெரியவில்லை. அது தொலைகிறது. நான் பாலாவின் ரசிகன்.ஆனால் அவரின் எந்த படத்தையும் தியேட்டரில் பார்த்ததில்லை. அவரை பாராட்டி எழுதியிருப்பது எனக்கு மன நிறைவாக இருக்கு.

Admin said...

//பாலாவின் முந்தைய படங்களைப் போல இப்படமும் அவருடைய சிறந்த இயக்கத்திற்காகவும், பங்களித்த கலைஞர்களின் உயர்ந்த நடிப்பிற்காகவும் நிச்சயமாகப் பேசப்படும்..!//

உங்கள் விமர்சனத்தை பார்த்ததும் படத்தை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது.

Anonymous said...

//தரமணி ஏ.சி. அறையில் பொட்டி தட்டுபவன்கூட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக இப்படி பேசுவான்//

என்ன சார் இது? டிபார்ட்மன்ட் ஸ்டோரில் வேலை செய்பவர் முதல் ராக்கெட் விடும் விஞ்ஞானி வரை கம்ப்யூட்டர் பெட்டி தட்டாமல் வேலை நடக்காது. அது என்ன குறிப்பாக சாப்ட்வேர் துறை ஆட்களை நக்கல் செய்கிறீர்கள். நீங்கள் இப்பதிவை எழுத பெட்டி தட்டாமல் மயில் இறகால் மை தொட்டா எழுதுகிறீர்கள்? உங்கள் ப்ளாக், கூகிள் பஸ், மெயில் என சகலமும்...நீங்கள் சொல்லும் "பெட்டி தட்டும்" வல்லுனர்கள் இல்லாமல் இயங்குமா? பாலாவின் படத்தில் இருக்கும் வசனங்களை விட, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தங்கள் மேல் மதிப்பும், உரிமையும் வைத்து இதை சொல்கிறேன். தங்கள் நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறேன்.

Anonymous said...

/“எனக்கொரு ஆசை சார்.. இந்த லைட் வைச்ச கார்ல ஒரு தடவையாச்சும்..” என்ற வார்த்தையோடு முடித்துவிட்டு அடுத்தக் காட்சியில் அந்தக் காரில் ஆர்யா பயணிப்பது//

இந்தக்காட்சி சுவை கூட்டி உள்ளதா? எந்த ஜட்ஜ் சார் தன் சைரன் வைத்த வண்டிய திருடனுக்கு குடுப்பார்???

//பாலாவின் முந்தைய படங்களைப் போல இப்படமும் அவருடைய சிறந்த இயக்கத்திற்காகவும், பங்களித்த கலைஞர்களின் உயர்ந்த நடிப்பிற்காகவும் நிச்சயமாகப் பேசப்படும்..!

அவன்-இவன் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்..!//

எந்த திரைப்படமாக இருந்தாலும் இருவேறு கருத்துக்களை முன் வைக்கும் பதிவுலகம் இம்முறைதான் ஒட்டு மொத்தமாக அவன் - இவனை பிடிக்கவில்லை என்று கூறுகிறது. ஆனால் நீங்கள் ஓவராக பாலா பக்கம் சாய்கிறீர்கள். Extremely sorry..Saran sir.

pichaikaaran said...

உங்கள் விமர்சன திறன் மீதான மரியாதை , ஆயிரம் மடங்கு அதிகரித்து விட்டது . சிறப்பான பார்வை

Anonymous said...

super

maithriim said...

I have not read a better review in recent times. You have given attention to every detail and you have done a very fair judgement and assessment of the whole movie in an objective manner. Requires great talent to review well . Having seen the movie I concur with most of what you have said.
amas32

naren said...

ப்ளாக் விமரசனஙகளைப் படித்து படம் பார்க்க வேண்டுமா இல்லையா என்று ஒரெ குழப்பமாக இருந்தது. உங்கள் விமரசனத்தைப் படித்தப்பின் படம் பார்க்கலாம் என்ற எண்ணம் ஏற்ப்பட்டுள்ளது. நன்றி

kanagu said...

இந்த படத்தை இன்று நானும் பார்த்தேன் அண்ணா... ஆனால் உண்மையில் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை...

அம்பிகா அவர்கள் பேசுவது எல்லோரும் சில சமயங்களில் பேசுவது தான்... ஆனால் அதையெல்லாம் காட்ட வேண்டுமா??? இதை திரையில் பதிவு செய்வதால் யாருக்கென்ன பயன்?

திரைப்படத்தில் ஒன்று வலுவான கதை இருக்க வேண்டும்... இல்லை ஒரு காட்சியிலிருந்து அடுத்த காட்சிக்கு இட்டு செல்லும் திரைக்கதை இருக்க வேண்டும்... இரண்டுமே இந்த படத்தில் இல்லை.

அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள்... இல்லையென சொல்லவில்லை. ஆனால் கதையென ஒன்றில்லாமல் நடித்தென்ன பயன்? அனைத்தும் ஒட்டாமலே இருக்கின்றது!!!

அதே போல் படம் முழுக்க இயல்பை மீறிய நிகழ்வுகள்... படத்தை முடிக்க திணிக்கப்பட்ட ஒரு வில்லன்...

என்னை பொருத்தவரை திரைப்படமாக எனக்கு எவ்வித உணர்வையும் ஏற்படுத்தவில்லை.. ஏன் பார்த்தோம் என்ற உணர்வை தவிர...

ஆனாலும் காட்சிக்கு காட்சி நீங்கள் செய்துள்ள விமர்சனம் சிறப்பு அண்ணா!!! ஆனால் உங்களின் பல கருத்துக்களோடு என்னால் ஒத்து போக முடியவில்லை....

உண்மைத்தமிழன் said...

[[[PremaVenus said...

Yov Bala umakku eththanai petti koduthirukaar.......

Padam paarththu Raththa kalariyil vantha koottaththil adiyenum oruvan
ayya.......

Sethuvai thavira matra ella bala padamum Total waste!]]]

தங்களுடைய விமர்சனத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா..!

உண்மைத்தமிழன் said...

[[[விஜய்கோபால்சாமி said...

உங்க விமர்சனத்தைப் படிக்கைலயே தெரியுது நீங்க கேபிளண்ணே விமர்சனத்தைப் படிக்கலைன்னு. உங்க கருத்தை சுயமா சொல்லிருக்கீங்க. இங்க உள்ள தெலுங்கு மக்கள் தமிழ்நாட்டில் என்ன ரிவ்யூ சொல்றாங்கன்னு கேக்குறாங்க. நீங்க சொல்றத சொல்றதா, கேபிளண்ணன் சொல்றத சொல்றதா? ஒன்னுமே புரியலை. படம் பாக்குற மாதிரி இருக்கும்னு மட்டும் நல்லா புரியுது.]]]

ஒரு தடவை பார்க்கலாம். தப்பே இல்லை. அவசியம் பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[என். உலகநாதன் said...
மொத்தத்துல என்ன சொல்ல வறீங்க? படம் நல்லா இருக்கா? இல்லையா?]]]

கடைசி வரிகளைப் படிக்கவே இல்லியா..?

உண்மைத்தமிழன் said...

[[[என். உலகநாதன் said...

குறியீடு குறியீடு அப்படின்னா என்னா?]]]

காட்சிகளுக்கும், கதாபாத்திரத் தன்மைகளுக்கும் இடையே உள்ள சம்பந்தம்..!

உண்மைத்தமிழன் said...

[[[RAJENDRAN RAJA said...

மிகவும் ஆச்சர்யம் இது. நீங்கள், இந்த படத்தை நேர்மையாக பாராட்டியுள்ளீர்கள் !]]]

நான் எப்பவுமே இப்படி்ததானே ராஜா..!

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

அருமையா சொல்லி இருக்கீங்க. இன்னிக்குத்தான் உங்க பேவரிட் தியேட்டர்ல படம் பார்த்தேன். தேவி கருமாரி அம்மன், விருகம்பாக்கம். எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா கேபிள் சங்கர் அண்ணனுக்கு பிடிக்கல போலிருக்கு.]]]

இதுதான் உலகம். ஒருத்தருக்குப் பிடிக்கும். இன்னொருத்தருக்குப் பிடிக்காது..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...

நல்ல விமர்சனம் என்று நினைக்கிறேன். ஏன் கேபிளார் (அவர் என்ன நாஞ்சிலாரா) என்கிற சங்கர நாராயணனின் விமர்சனத்தை ஏன் yardstick ஆக வைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. அவர் அவ்ளோ நல்ல விமர்சனம் பண்ணுவாரா? இப்படி எல்லாரையும் குத்தி கிழித்துவிட்டு நாளை இயக்குனரானால்(?) அவர் எப்படி மற்றவரோடு சகஜமாக பழக முடியும் என்று எனக்கு தெரியவில்லை.]]]

அது அவர் பிரச்சினை ராஜரத்தினம்.. நீங்க விடுங்க..!

[[[அது தொலைகிறது. நான் பாலாவின் ரசிகன். ஆனால் அவரின் எந்த படத்தையும் தியேட்டரில் பார்த்ததில்லை. அவரை பாராட்டி எழுதியிருப்பது எனக்கு மன நிறைவாக இருக்கு.]]]

படம் எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால் பாராட்டி எழுதியுள்ளேன். அவ்வளவுதான்..

உண்மைத்தமிழன் said...

[[[சந்ரு said...

//பாலாவின் முந்தைய படங்களைப் போல இப்படமும் அவருடைய சிறந்த இயக்கத்திற்காகவும், பங்களித்த கலைஞர்களின் உயர்ந்த நடிப்பிற்காகவும் நிச்சயமாகப் பேசப்படும்..!//

உங்கள் விமர்சனத்தை பார்த்ததும் படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது.]]]

அவசியம் பாருங்கள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

//தரமணி ஏ.சி. அறையில் பொட்டி தட்டுபவன்கூட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக இப்படி பேசுவான்//

என்ன சார் இது? டிபார்ட்மன்ட் ஸ்டோரில் வேலை செய்பவர் முதல் ராக்கெட் விடும் விஞ்ஞானிவரை கம்ப்யூட்டர் பெட்டி தட்டாமல் வேலை நடக்காது. அது என்ன குறிப்பாக சாப்ட்வேர் துறை ஆட்களை நக்கல் செய்கிறீர்கள். நீங்கள் இப்பதிவை எழுத பெட்டி தட்டாமல் மயில் இறகால் மை தொட்டா எழுதுகிறீர்கள்? உங்கள் ப்ளாக், கூகிள் பஸ், மெயில் என சகலமும். நீங்கள் சொல்லும் "பெட்டி தட்டும்" வல்லுனர்கள் இல்லாமல் இயங்குமா? பாலாவின் படத்தில் இருக்கும் வசனங்களைவிட, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தங்கள் மேல் மதிப்பும், உரிமையும் வைத்து இதை சொல்கிறேன். தங்கள் நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறேன்.]]]

நான் எங்களையெல்லாம் சொல்லாமல் விட்டதினால் நாங்களெல்லாம் பேச மாட்டோம் என்றில்லை.. அவர்களும் என்றால் சாப்ட்வேர் மற்றும் மற்ற உயர்தர பதவிகளில் வசிப்பவர்கள் என்று அர்த்தத்துடன் சொன்னேன். ஒண்ணும் தப்பில்லை சிவா..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

/“எனக்கொரு ஆசை சார்.. இந்த லைட் வைச்ச கார்ல ஒரு தடவையாச்சும்..” என்ற வார்த்தையோடு முடித்துவிட்டு அடுத்தக் காட்சியில் அந்தக் காரில் ஆர்யா பயணிப்பது//

இந்தக் காட்சி சுவை கூட்டி உள்ளதா? எந்த ஜட்ஜ் சார் தன் சைரன் வைத்த வண்டிய திருடனுக்கு குடுப்பார்???]]]

எந்த ஊர்ல ஸார் லவ்வர்ஸ் இந்தப் படத்துல இருக்குற மாதிரி ஆடுறாங்க.. இதையேன் நீங்க யோசிக்கலை. இதுக்கென்ன பதிலோ அதுதான் நீங்க கேட்டதுக்கும் என் பதில்..!

[[[//பாலாவின் முந்தைய படங்களைப் போல இப்படமும் அவருடைய சிறந்த இயக்கத்திற்காகவும், பங்களித்த கலைஞர்களின் உயர்ந்த நடிப்பிற்காகவும் நிச்சயமாகப் பேசப்படும்..! அவன்-இவன் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்..!//

எந்த திரைப்படமாக இருந்தாலும் இருவேறு கருத்துக்களை முன் வைக்கும் பதிவுலகம் இம்முறைதான் ஒட்டு மொத்தமாக அவன் - இவனை பிடிக்கவில்லை என்று கூறுகிறது. ஆனால் நீங்கள் ஓவராக பாலா பக்கம் சாய்கிறீர்கள். Extremely sorry..Saran sir.]]]

எனக்குப் படம் பிடித்திருக்கிறது. அவ்வளவுதான். அதனால் பாராட்டியிருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

உங்கள் விமர்சனத் திறன் மீதான மரியாதை, ஆயிரம் மடங்கு அதிகரித்து விட்டது. சிறப்பான பார்வை.]]]

நன்றி பார்வை.. எங்க ரொம்ப நாளா போன்ல கூட பிடிக்க முடியலை.. போன் பண்ணுங்க சாமி..!

உண்மைத்தமிழன் said...

[[[நண்பேன்டா... said...

super]]]

மிக்க நன்றி ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[amas said...

I have not read a better review in recent times. You have given attention to every detail and you have done a very fair judgement and assessment of the whole movie in an objective manner. Requires great talent to review well . Having seen the movie I concur with most of what you have said.

amas32]]]

எனக்கும், உங்களுக்கும் ஒருமித்தக் கருத்துக்கள் மிக்க மகிழ்ச்சி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[naren said...

ப்ளாக் விமரசனஙகளைப் படித்து படம் பார்க்க வேண்டுமா இல்லையா என்று ஒரெ குழப்பமாக இருந்தது. உங்கள் விமரசனத்தைப் படித்த பின் படம் பார்க்கலாம் என்ற எண்ணம் ஏற்ப்பட்டுள்ளது. நன்றி.]]]

அவசியம் பாருங்கள் நரேன்..!

உண்மைத்தமிழன் said...

kanagu said...

[[[ஆனாலும் காட்சிக்கு காட்சி நீங்கள் செய்துள்ள விமர்சனம் சிறப்பு அண்ணா!!! ஆனால் உங்களின் பல கருத்துக்களோடு என்னால் ஒத்து போக முடியவில்லை.]]]

நேர்மையான உமது கருத்துக்கு நன்றி கனகு..!

ஸ்ரீநாராயணன் said...

Ponne,

12 X 2 = 24 dollar punna pochu...

I expected some quality in Bala film ..Pch..waste padam ne.

Anonymous said...

பதிவில் "தரமணி ஏ.சி. அறையில் பொட்டி தட்டுபவன்கூட" என்ற வார்த்தையை குறிப்பிட்டு சொல்லி உள்ளீர்கள். ஆனால் எனக்கு தந்த பதிலில் வேறு மாதிரி கூறி உள்ளீர்கள். முருகனே சாட்சி!!

Anonymous said...

//எந்த ஊர்ல ஸார் லவ்வர்ஸ் இந்தப் படத்துல இருக்குற மாதிரி ஆடுறாங்க.. இதையேன் நீங்க யோசிக்கலை. இதுக்கென்ன பதிலோ அதுதான் நீங்க கேட்டதுக்கும் என் பதில்..!//

ஹா. ஹா.. உங்கள் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் இடத்தில நீங்கள் சிலாகித்த "ஜட்ஜ் கார்" வரிக்கு மட்டும் என் கேள்வியை கேட்டேன். அதற்கு நேரடி பதில் இன்றி வேறு பதில் தருகிறீர்கள். என்ன சார் இது நியாயம்?

Jayadev Das said...

\\விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களை\\ ஐயா, இந்த விளிம்பு நிலையில் உள்ள மனிதர்கள் என்ற வார்த்தையை தமிழ் மொழியில் எந்த வருஷம் கண்டு புடிச்சாங்க? நான் வாழ்க்கையிலேயே முதல் தடைவையாய் படிக்கிறேன், மேலும் இந்தப் படத்தை விமர்சனம் செய்துள்ள ஒருத்தர் விடாம இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்காங்க, இது எப்படி சாத்தியமாச்சு? மேலும், இந்தப் படத்துக்கு "நல்ல பிள்ளை" என்ற சர்டிபிகேட் கொடுத்த ஒரே பதிவர் நீங்கதான்னு நினைக்கிறேன், யாரும் இதை நல்லாயிருக்குன்னு சொல்லவேயில்லை!!

rajamelaiyur said...

Very deep analysis. . . I like it

manjoorraja said...

அன்பு சரவணா, ஒரு சொதப்பல் படத்தை போய் இவ்வளவு பாராட்டியிருக்கிறீர்களே, என்னே உங்க ரசனை!.... விமர்சனம் என்னும் பெயரில் நீங்கள் செய்யும் அழிச்சாட்டியம் தாங்க முடியலெ..... படத்தின் கதை முழுவதையும் சொல்வதற்கு பெயர் விமர்சனம் அல்ல நண்பரே... புரிதலுக்கு நன்றி.

ஸ்ரீகாந்த் said...

கேபிள் சங்கர் ஒன்றும் பிதாமகன் அல்ல ....அவரும் நம்மை போன்ற ஒரு சினிமா ரசிகரே ......என்ன நாம் ரசிப்பதோடு நிறுத்தி கொள்கிறோம் ....அவர் அதை எழுத்தாக எழுதிகிறார்....மற்ற படி அவருக்கு பிடிக்கவில்லை என்பதை பலர் இங்கு ஒரு முக்கிய விஷயமாக சொல்லி உள்ளனர் ........அவன் இவன் உண்மை தமிழனின் விமரிசனபடி இது ஒரு வித்தியாசமான தமிழ் திரைப்படமே

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீநாராயணன் said...

Ponne, 12 X 2 = 24 dollar punna pochu... I expected some quality in Bala film ..Pch..waste padam ne.]]]

உங்களது ரசனை இப்படியோ..? வருந்துகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

பதிவில் "தரமணி ஏ.சி. அறையில் பொட்டி தட்டுபவன்கூட" என்ற வார்த்தையை குறிப்பிட்டு சொல்லி உள்ளீர்கள். ஆனால் எனக்கு தந்த பதிலில் வேறு மாதிரி கூறி உள்ளீர்கள். முருகனே சாட்சி!!]]]

தரமணி பகுதியில் சாப்ட்வேர கமபெனி மட்டுமா உள்ளது..? எத்தனையோ பல்வேறு வகையான நிறுவனங்கள் உண்டுதானே.. அவர்களில் ஒருவர் என்று நினைத்துக் கொள்ளுங்களேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

//எந்த ஊர்ல ஸார் லவ்வர்ஸ் இந்தப் படத்துல இருக்குற மாதிரி ஆடுறாங்க.. இதையேன் நீங்க யோசிக்கலை. இதுக்கென்ன பதிலோ அதுதான் நீங்க கேட்டதுக்கும் என் பதில்..!//

ஹா. ஹா.. உங்கள் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் இடத்தில நீங்கள் சிலாகித்த "ஜட்ஜ் கார்" வரிக்கு மட்டும் என் கேள்வியை கேட்டேன். அதற்கு நேரடி பதில் இன்றி வேறு பதில் தருகிறீர்கள். என்ன சார் இது நியாயம்?]]]

சினிமா இதுதானே ஸார்..! கற்பனையை நிஜம்போல் நம்ப வைப்பதுதானே..! எந்த ஊரில் இப்படி ஜமீனை தேரில் அமர வைத்து ஊர் மக்கள் இழுத்துச செல்கிறார்கள் என்று இதே பதிவில் நான் குறிப்பிட்டுள்ளேன்.. படித்தீர்கள்தானே..? சினிமாவுக்காக செய்யப்பட்ட கதைகளில் ஒன்றுதான் இந்த கார் மேட்டர்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

\\விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களை\\

ஐயா, இந்த விளிம்பு நிலையில் உள்ள மனிதர்கள் என்ற வார்த்தையை தமிழ் மொழியில் எந்த வருஷம் கண்டு புடிச்சாங்க? நான் வாழ்க்கையிலேயே முதல் தடைவையாய் படிக்கிறேன், மேலும் இந்தப் படத்தை விமர்சனம் செய்துள்ள ஒருத்தர் விடாம இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்காங்க, இது எப்படி சாத்தியமாச்சு? மேலும், இந்தப் படத்துக்கு "நல்ல பிள்ளை" என்ற சர்டிபிகேட் கொடுத்த ஒரே பதிவர் நீங்கதான்னு நினைக்கிறேன், யாரும் இதை நல்லாயிருக்குன்னு சொல்லவேயில்லை!!]]]

என்ன செய்யறது.. என் ஒருத்தனுக்குத்தான இந்தப் படம் பிடிச்சிருக்கு. பிடிச்சிருக்கு என்பதற்கு மற்ற படங்களைவிட பரவாயில்லை. இயக்கம் நல்லாயிருக்கு. நடிகர்கள் நன்றாக நடித்துள்ளார்கள்.. இப்படி ஏதாவது ஒரு வகையை காரணமாக எடுத்துக் கொள்ளுங்களேன்..!

உண்மைத்தமிழன் said...

[[["என் ராஜபாட்டை"- ராஜா said...

Very deep analysis... I like it.]]]

மிக்க நன்றி ராஜா..!

உண்மைத்தமிழன் said...

[[[manjoorraja said...

அன்பு சரவணா, ஒரு சொதப்பல் படத்தை போய் இவ்வளவு பாராட்டியிருக்கிறீர்களே, என்னே உங்க ரசனை!.]]]

என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க. மத்த விமர்சனத்தையெல்லாம் படிச்சிட்டு நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு இதை மட்டும் இப்படி சொல்றீங்களே..? எனக்கு வருத்தமா இருக்கு..!

[[[விமர்சனம் என்னும் பெயரில் நீங்கள் செய்யும் அழிச்சாட்டியம் தாங்க முடியலெ. படத்தின் கதை முழுவதையும் சொல்வதற்கு பெயர் விமர்சனம் அல்ல நண்பரே. புரிதலுக்கு நன்றி.]]]

இதுதாண்ணே என்னோட ஸ்டைலு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீகாந்த் said...

கேபிள் சங்கர் ஒன்றும் பிதாமகன் அல்ல. அவரும் நம்மை போன்ற ஒரு சினிமா ரசிகரே. என்ன நாம் ரசிப்பதோடு நிறுத்தி கொள்கிறோம். அவர் அதை எழுத்தாக எழுதிகிறார். மற்றபடி அவருக்கு பிடிக்கவில்லை என்பதை பலர் இங்கு ஒரு முக்கிய விஷயமாக சொல்லி உள்ளனர். அவன் இவன் உண்மை தமிழனின் விமரிசனபடி இது ஒரு வித்தியாசமான தமிழ் திரைப்படமே.]]]

மிக்க நன்றி நண்பரே..!

Romeoboy said...

ஊரே ஒரு கோடுல போனாலும் அண்ணாச்சி நீங்க மட்டும் தனியா ஒரு ரோடு போட்டுட்டு போவீங்க ... ஒரு வேண்டுகோள் சாந்தி அப்பறம் நித்யா என்கிற படத்தின் விமர்சனத்தை உங்கள் ரசிகர் கண்மணிகள் ஆகிய நாங்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறோம் என்பதை தெரியபடுத்துகிறேன்..

உண்மைத்தமிழன் said...

[[[அருண்மொழித்தேவன் said...

ஊரே ஒரு கோடுல போனாலும் அண்ணாச்சி நீங்க மட்டும் தனியா ஒரு ரோடு போட்டுட்டு போவீங்க.]]]

இந்த ஒரு தடவைதான் இந்த மாதிரி ஆயிப் போச்சு நண்பரே.!

[[[ஒரு வேண்டுகோள் சாந்தி அப்பறம் நித்யா என்கிற படத்தின் விமர்சனத்தை உங்கள் ரசிகர் கண்மணிகள் ஆகிய நாங்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறோம் என்பதை தெரியபடுத்துகிறேன்.]]]

ஐயையோ.. ஆளை விடுங்கப்பா..! கஷ்டப்பட்டு படம் பார்த்து, கஷ்டப்பட்டு டைப் பண்ணி விமர்சனத்தை போட்டா பிட்டு படம் பார்க்குறாருன்னு எங்கயாச்சும் கொளுத்திப் போடுறீங்க..! இனிமே உங்களோட நோ பேச்சு..! நீங்களே தியேட்டருக்கு போய் பார்த்துக்குங்க..!

RAJESH said...

I saw the movie yesterday. Worthwhile watching. As you have told in the review - "Sakkalathi sandai" and other were really taken very well. Good review.

சேக்காளி said...

//கும்பிடறேன் சாமி” என்று ஆர்யாவுக்கு வைத்திருக்கும் பெயர்க் குறிப்பு எவனா இருந்தாலும் இனிமேல் எங்களை சாமி என்றுதான் பேச்சுக்காகவாவது அழைக்க வேண்டும் என்கிற அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் எண்ணத்தையே பிரதிபலிக்கிறது//.
ஆனால் குப்புசாமி தான் குப்பன் என்றும்,சுப்பையா தான் சுப்பன் என்றும் அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜ நடராஜன் said...

இப்பத்தான் இந்தப் படம் பற்றிய விமர்சனம் போட்டேன்.உடனே நீங்க விமர்சனம் செய்தீர்களா என்று பார்க்க வந்தேன்.

இரண்டாவது காந்தி மண்டேலாவா?ராஜபக்சேவா வசனத்தை நீங்களும் கோட்டை விட்டு விட்டீர்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[RAJESH said...

I saw the movie yesterday. Worthwhile watching. As you have told in the review - "Sakkalathi sandai" and other were really taken very well. Good review.]]]

நன்றி ராஜேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[சேக்காளி said...

//கும்பிடறேன் சாமி” என்று ஆர்யாவுக்கு வைத்திருக்கும் பெயர்க் குறிப்பு எவனா இருந்தாலும் இனிமேல் எங்களை சாமி என்றுதான் பேச்சுக்காகவாவது அழைக்க வேண்டும் என்கிற அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் எண்ணத்தையே பிரதிபலிக்கிறது//.

ஆனால் குப்புசாமிதான் குப்பன் என்றும், சுப்பையாதான் சுப்பன் என்றும் அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.]]]

குப்பனும், சுப்பனும் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

இப்பத்தான் இந்தப் படம் பற்றிய விமர்சனம் போட்டேன். உடனே நீங்க விமர்சனம் செய்தீர்களா என்று பார்க்க வந்தேன்.

இரண்டாவது காந்தி மண்டேலாவா? ராஜபக்சேவா வசனத்தை நீங்களும் கோட்டை விட்டு விட்டீர்கள்.]]]

ம்.. மறந்துவிட்டேன் ஸார்..! மன்னிக்கணும்..!

Aarthy said...

ஜாதி வெறிக்கு ஹிந்துத்துவா என்று சொல்லுவது சுத்த அயோக்கியத்தனம் , ஹிந்துத்துவ என்பதே ஜாதி மறுப்பு தான் , ஹிந்து ஒற்றுமை என்பதே ஜாதி இல்லாமை தான் , ஜாதி வெறியோடு எப்படி ஹிந்து ஒற்றுமை வேண்டும் என்றும் சொல்லும் ஹிந்துத்துவா வர முடியும் !! இங்கு ஜாதி அரசியல் நடத்தும் அல்லது ஜாதி சங்கம் நடத்தும் யாராவது ஹிந்துத்துவா பேசி இருகிறார்களா , அவர்கள் ஹிந்துத்துவாவை மிக கடுமையாக எதிர்பார்கள் , ஏன் என்றால் அவர்கள்களுக்கு ஹிந்து ஒற்றுமை என்பதே ஜாதி அழிப்பு என்று நன்றாக தெரியும் !!

நீங்களும் ஜாதி வெறியர்கள் சொல்லும் ஜாதியை காண்பித்தால் அது ஹிந்துத்துவா என்று சொல்லுவது நுனி புள் மேய்வதே . ஹிந்துத்துவா வை பற்றி ஒன்றுமே தெரியாமல் பேசுவது , எழுதுவதே ஆகும் !! வழக்கமாக இடது சாரி சிந்தனைகள் கொண்ட கூட்டம் பறப்ப ஆசைபடும் கருத்தே இந்த ஹிந்துத்துவா ஜாதியை ஆதரிக்கிறது என்பது !!

ஜே ஜே said...

இது உண்மையாகவே சிறந்த படம் தான்

abeer ahmed said...

See DNS records for google.com
http://dns.domaintasks.com/google.com

abeer ahmed said...

See who owns gongchang.com or any other website.

abeer ahmed said...

See DNS records for blogspot.com
http://dns.domaintasks.com/blogspot.com

abeer ahmed said...

See who owns blogspot.com 2000267280 or any other website.