நான் பட்ட மரண அவஸ்தை..!

11-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இது போன்ற ஒரு அனுபவத்தை உங்களில் எத்தனை பேர் பெற்றிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் இப்படியொரு கொடுமையை அனுபவித்தது இதுவே முதல் முறை..!

மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார்கள் என்ற சொலவடை பேச்சை நானும் கேட்டதுண்டு. எனது எழுத்துக்களில் பயன்படுத்தியதும் உண்டு. ஆனால் அதனை இன்று விடியற்காலையில் நிஜமாகவே  அனுபவித்தேன்.

நல்ல உறக்கத்தில் இருந்த நிலையில் திடீரென்று எனது இடது காதுக்குள் ஏதோ குறுகுறுப்பு. சட்டென்று முழிப்பு வந்துவிட்டது. மணி அப்போது காலை 4.30. காதுக்குள் ஏதோ ஓடுவது போல் தோன்றியது. கையை வைத்துத் தட்டிப் பார்த்தேன். மீண்டும் அதேதான்.. தூக்க மயக்கத்திலிருந்து விடுபட்டு சுயநிலைக்கு வந்த ஒரு நிமிடத்தில் ஏதோ ஒரு உயிரினம் அழையா விருந்தாளியாக எனது இடது காதுக்குள் நுழைந்திருப்பதாக எனது மூளைக்குள்  உறைத்தது..!

தொடங்கியது அனர்த்தம்..! ஓடுகிறது.. ஓடுகிறது.. ஓடுகிறது..  அதனால் எனக்குள் ஏற்பட்ட குறுகுறுப்பு உணர்ச்சியை அடக்க முடியவில்லை. விரல்களை வைத்து நோண்டிப் பார்த்தேன். எட்டவில்லை. அவசரம், அவசரமாக பேனாவைத் தேடியெடுத்து அதனை காதுக்குள் வைத்துத் தேடிப் பார்த்தும் எட்டவில்லை. ஆனாலும் அந்தப் பூச்சி ஓடிய ஓட்டத்தின் குறுகுறுப்பு  மேலும், மேலும் அதிகரிக்க தவித்துப் போனேன்..!

வீட்டை விட்டு வெளியில் வந்து வாசலில் நின்றிருந்த வாகனங்களி்ன் மீது ஒன் சைடாக படுத்துக் கொண்டு காதருகே கையை வைத்துத் தட்டிப் பார்த்தேன். ம்ஹூம்.. வரவேயில்லை..! மாறாக இன்னும் கொஞ்சம் கூடியது. முடியாத காரணத்தினால் கோபமும், எரிச்சலும்தான் அதிகரித்தது.

வேறு நேரமாக இருந்தாலும் யாரிடமாவது ஆலோசனை கேட்டிருக்கலாம். அந்த அதிகாலை நேரத்தில் யாரிடம் போய்க் கேட்பது..? 100 மீட்டர் தூரம் ஓடுவதைப் போல அந்தப் பூச்சி ஓடத் துவங்க.. நானும் என்ன செய்வது என்றே தெரியாமல் தெருவில் வெறியுடன் அலைய ஆரம்பித்தேன்.. தெரு ஓரமாகச் சிதறியிருந்த மர இலைகளைப் பார்த்தவுடன் ஒரு எண்ணம் தோன்ற.. அந்த இலைகளை நீட்டவாக்கில் சுருட்டி அதனை காதுக்குள் செலுத்தி, சுரண்டிப் பார்த்தேன். சில நொடிகள் அமைதி இருந்தது. ஆனால் இலையை வெளியில் எடுத்தபோது விருந்தாளி உடன் வரவில்லை.

மீண்டும் குறுகுறுப்பு.. மீண்டும் இலைகளை காதில் வைத்துக் குடைந்து கொண்டேயிருந்தேன். உள்ளே மயான அமைதி. இலைகளை வெளியில் எடுத்துவிட்டால் மீண்டும் ஓடத் துவங்கிவிடுகிறார் திருவாளர் பூச்சி..!

காதுக்குள் அந்த இடம் சிறியது என்பதால் இலைகள் பூச்சியை ஓட விடாமல் தடுக்கிறது என்பது மட்டும் எனது சிறிய அறிவுக்கு உரைத்தது. அப்படியே இலையை காதில் வைத்தபடியே தெருவில் உலா வந்தேன். வீட்டு வாசலில் உலா வந்தேன்.. வீட்டுக்குள் நடந்தேன்.. இப்போது, அடுத்து என்ன செய்வது..? எதை வைத்து அந்த வேண்டாத விருந்தாளியை வெளியே தள்ளுவது..?

மீண்டும் யோசித்து, யோசித்து வெறுப்பாகிவிட்டேன்..! அந்தச் சிறியப் பூச்சி உடம்பில் ஊர்ந்திருந்தாலே அந்தத் தூக்கத்தில் நமக்கு உணராது. இதுவோ நேரடியாக காது எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொண்டே உள்ளே போயிருக்கிறது..!

இலையே லேசாக விலக்கிப் பார்த்தேன்.. மீண்டும் தனது துள்ளலை ஆரம்பித்தது..! மறுபடியும் இலையை உள்ளே தள்ளினேன். இப்போது தள்ளும்போது அதன் முனை மடங்கிவிட்டது போலும்.. ஓடத் துவங்கினான் அந்த ராட்சஸன்..!

இப்போது மீண்டும் தெருவுக்கு ஓடி மேலும் சில இலைகளைப் பொறுக்கியெடுத்து அவற்றை சுருட்டி காதில் வைத்து ஓட்டத்தை நிறுத்தியபோதுதான் எனக்கு உயிரே வந்தது. அப்படியொரு அவஸ்தை இது..!

இப்படியே இருந்தால் இது சாத்தியமாகாது என்று நினைத்து முகத்தையாவது கழுவலாம் என்று தண்ணீரைத் தொட்டதும்தான் இன்னுமொரு எண்ணம் தோன்றியது.. காதுக்குள் தண்ணீரைவிட்டுக் கழுவலாமே என்ற எண்ணத்தில் ஒரு பக்கமாக சாய்ந்து நின்று கொண்டு தண்ணீரை உள்ளேவிட்டு அடுத்த நொடியே  காது கீழ்ப்பக்கம் வருவதுபோல் சாய்ந்து நின்று பார்த்தேன். தண்ணீர் கொட்டியதே தவிர பூச்சி ஸார் வரவில்லை..!

மீண்டும், மீண்டும் தண்ணியை காதில் ஊற்றியதுதான் மிச்சம் அண்ணன் எஸ்கேப்பு..! மெதுவாக ஊற்றுவதால்தான் வர மறுக்கிறாரோ என்றெண்ணி வேறொரு உடனடி எண்ணமும் தோன்ற பாத்ரூமுக்கு ஓடினேன்..!

குழாயைத் திறந்து தண்ணீர் கொட்டுவதுபோல் வைத்துக் கொண்டு அந்த நேரத்தில் காதை குழாயின் கீழே காட்டினேன்.. காதில் உட்புகுந்த தண்ணீர் என் உடலில் எங்கெல்லாம் பரவியது என்பது எனக்குத் தெரியவில்லை. சட்டென்று காதுகளை திருப்பி தண்ணீரைக் கொட்டிவிட்டு சற்று ஆசுவாசப்பட்டேன்..!

2 நிமிடங்கள்தான்.. ஹி.. ஹி.. இதுக்கெல்லாம் நாங்க அசர மாட்டோம்ல என்பதைப் போல மீண்டும் காதுக்குள் ஓடத் துவங்கினார் திருவாளர் பூச்சி..! இதை ஒரு வழி பண்ணிட்டுத்தான் மறுவேலை என்பதை போல் மனம் அரக்கத்தனமாக செயல்பட்டது..!

மறுபடியும் இலைகளை வைத்து பேயாய் சுரண்டினேன்.. ஏற்கெனவே நமக்கும் காதுக்கும் ஏழாப் பொருத்தம். உள்ளேயிருக்குற நரம்பு வீக்கா இருக்கு. முக்கால் செவிடாயிருச்சு. இதுல இவ்வளவு தண்ணியை ஊத்தினால் என்னாகுமோன்னு நினைச்சு பயம் வேற..!

இப்போது இலைக்கும் பயப்படாமல் தண்ணி காட்டத் துவங்கினார் பூச்சியார்..! அது ஓடுகின்ற ஓட்டத்தைத் தாங்க முடியாமல் என்ன செய்வது என்பதுதான் எனது தவிப்பு. ஒரு இடத்திலும் நிற்க முடியவில்லை. இலைகள் மடங்கிப் போனவுடன் மறுபடியும் வேறொரு இலைகளை எடுத்து தேடிக் கொண்டே சமாளித்து, சமாளித்து கலங்கிப் போனேன்..!

கடைசி முயற்சியாக மீண்டும் ஒரு முறை தண்ணீரை வைத்து விளையாடிப் பார்ப்போம் என்று முடிவெடுத்தேன். இம்முறை பாத்ரூமின் தரைக்கும், குழாய்க்கும் இடையில் தொலைதூரத்தில் காதை வைத்துக் கொண்டு தண்ணீரைத் திறந்துவிட்டேன். அசுர வேகத்தில் பாய்ந்த தண்ணீரைத் தாங்கிக் கொண்டு ஒரு நிமிடம் அப்படியே இருந்துவிட்டு மீண்டும் அதே வேகத்தில் தலையைத் திருப்பி காதிலிருந்த தண்ணீரைக் கொட்டினேன்..!

தண்ணீர் வழிந்தோட காது அமைதியாக இருந்தது.. ஒரு நிமிடம் பொறுத்திருந்துவிட்டு மீண்டும் அதேபோல் தண்ணீரைப் பிடித்து செய்து பார்த்தேன்.. இப்போதும் காது அமைதி..!

ஒரு வேளை நிஜமாகவே பூச்சியார் வெளியில் ஓடிவிட்டாரோ என்று நினைத்து பாத்ரூமின் தரையில் அமர்ந்து தேடியபோது கருப்பு நிறத்தில் மினுமினுப்புடன்கூடிய ஆமை போன்ற வடிவத்தில் இருந்த திருவாளர் பூச்சியார் தென்பட்டார்..!

யானையின் காதுக்குள் புகுந்த எறும்பு நீர்தானா என்ற கோபத்தில் அதனைக் கையில் எடுத்துப் பார்த்தபோது அவர் பாட்டுக்கு எனது விரல்களின் மீது தாவி, தாவி சென்று கொண்டிருந்தார்..!

கோபத்தில் இருந்த அப்போதைய என் மனம் இதனை நசுக்கிக் கொன்றுவிட்டு மறுவேலையைச் செய் என்றது..! ஆனால் வழக்கமான எனது அப்பன் முருகன் மேலிருந்த பாசம் அதைச் செய்யவிடாமல் தடுத்தது.

“முந்தைய 24 மணி நேரத்தில், யாரையோ இதேபோல் அவஸ்தைக்குள்ளாக்கியிருக்கிறேன் போலிருக்கிறது. அதற்குப் பதிலடிதான் முருகனின் இந்தத் தண்டனை..” என்று நினைத்து பூச்சியாரை மரியாதையுடன் தரையில் இறக்கிவிட்டு விட்டு ஆசுவாசத்துடன் எழுந்து வந்தேன்..!

விரல் நகம் அளவுக்குக்கூட நீளமில்லாத சாதாரண பூச்சி, ஒரு மணி நேரம் ஒரு மனிதனை இப்படி அலைக்கழிக்க வைத்ததை நினைத்துப் பார்த்தால், நம்மால் முடியாதது எதுவுமில்லை என்ற ஆறு அறிவுள்ள மனிதனின் திமிர்த்தனம் போலியானது என்பதை உணர முடிகிறது..!

வாழ்க முருகன்..!

வளர்க அவனது திருவிளையாடல்கள்..!

56 comments:

அகமது சுபைர் said...

இப்ப எழுதி இருக்குறதுக்கு உம்ம காதுல டைனோசரே போகும்... :))

(சும்மா ஜோக்குக்குத் தான் ;-))

அபி அப்பா said...

காதுல வெதுவெதுன்னு தண்ணில லைட்டா உப்பு போட்டு கரைச்சு காதிலே ஊத்தி தலை கீழா சாய்ச்சுட்டா பூச்சி செத்துடும். வெளியே வந்துடும். பெட்டர் காதிலே பஞ்சு வைத்து படுப்பது தான்!

பிரபாகர் said...

படிக்கவே பயங்கரமா இருக்கண்ணா!... அனுபவிச்ச உங்களுக்கு சொன்னார்போல் மரண வேதனைதான்...!

இதையும் முருகனின் திருவிளையாடல் என எடுத்துக்கொள்ளும் உங்களின் மனப்பக்குவம் வியப்பைத் தருகிறது...

பிரபாகர்...

DR said...

மூக்க நல்ல மூடிக்கிட்டு வலது காதை ஒரு விரலாலா அடைச்சிக்கிட்டு, இடது காது வழியா பலமா காத்து விட்டீங்கன்னா அது தானாவே வெளியில வந்திட போகுது...

DR said...

மூக்க நல்ல மூடிக்கிட்டு வலது காதை ஒரு விரலாலா அடைச்சிக்கிட்டு, இடது காது வழியா பலமா காத்து விட்டீங்கன்னா அது தானாவே வெளியில வந்திட போகுது...

ஷர்புதீன் said...

// “முந்தைய 24 மணி நேரத்தில், யாரையோ இதேபோல் அவஸ்தைக்குள்ளாக்கியிருக்கிறேன் போலிருக்கிறது. அதற்குப் பதிலடிதான் முருகனின் இந்தத் தண்டனை..”//

ஆக மத விவாதத்திற்கு நீங்க ரெடி.,

Anonymous said...

அண்ணே காதுக்குள் உப்புத்தண்ணி விட்டு வெளியேற்றினால் உடனே பூச்சியாரும் வெளியே வந்துடுவார். எமது ஊர்களில் இவ்வாறு தான் செய்வார்கள்...

மாதேவி said...

அய்யோ பாவம் பூச்சியார். :))

காதைக் குடைவது கூடாது. உப்புத் தண்ணிவிட்டுக் கழுவுவதுதான் நல்லது.

ராஜ நடராஜன் said...

பட்ட காதுலயே படும்ங்கிற புதுமொழி கண்டு புடிச்சதே நீங்கதான் போல இருக்குதே!

பூச்சிக்கும்,அதுவும் தன்னை குறுகுறுக்க வைத்து மரணவேதனை தந்த பூச்சிக்கும் இரங்கும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்.

Peter John said...

I also had the same problem. but the inscet was equal to my ear hole size. this happened at night 12.30, we were bachelors at the time in coimbatore. I started shouting and the sound made by the bee was very high. it started scratching ear drums. my friends tried to take out the same by some pin and put water the scene was worse and it went more deep. so one gut take my bike and i was siting in the billion and i was almost in a fainting stage. but when we come out of home the cool air made the insect to come out and I got relieved. when we met the doctor we found my ears are bleeding due to heavy damage. then doctor told you should show some light , or candle light near ear the insect will get attracted to it and come out. But i never tried the same.

ஸ்ரீராம். said...

பதினைந்து வருடத்துக்கு முன்னாள் நடு இரவில் இதே அவஸ்தை பட்டிருக்கிறேன். ஆக்ஷன் ரீப்ளே போல இருந்தது! எதிரில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனை வள்ளலும் தெரிந்தது.

தினேஷ்குமார் said...

சார் கொஞ்சம் உப்பு தண்ணிய காதுல ஊத்தி ஒரு ரெண்டு நிமிடம் கழித்து தலைய சாச்சிங்கன்ன உடனே பூச்சியார் வெளியே வந்திருப்பார் அல்லவா ....

Unknown said...

இனியொரு தரம் இந்த முட்டாள்தனத்தைப் பண்ணாதீங்க அண்ணே. குழாய் தண்ணி வற்ற வேகத்த காதுக்குள்ள இருக்குற மென்மையான பாகங்களால தாங்கிக்க முடியுமா? [எங்க அப்பாவுக்கும் இடது பக்கக் காது ரொம்ப வீக்.]

உண்மைத்தமிழன் said...

[[[அகமது சுபைர் said...

இப்ப எழுதி இருக்குறதுக்கு உம்ம காதுல டைனோசரே போகும்... :))

(சும்மா ஜோக்குக்குத் தான் ;-))]]]

ஹி.. ஹி.. இனிமேலெல்லாம் என்னை ஏமாத்த முடியாது. உள்ள போனா உசிரோட யாரும் வெளில வர முடியாது..!

உண்மைத்தமிழன் said...

[[[அபி அப்பா said...

காதுல வெதுவெதுன்னு தண்ணில லைட்டா உப்பு போட்டு கரைச்சு காதிலே ஊத்தி தலை கீழா சாய்ச்சுட்டா பூச்சி செத்துடும். வெளியே வந்துடும். பெட்டர் காதிலே பஞ்சு வைத்து படுப்பதுதான்!]]

இப்பத்தான் இதுக்கான தீர்வாக இந்த விஷயத்தைக் கேள்விப்படுகிறேன். நன்றி அபிஅப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரபாகர் said...

படிக்கவே பயங்கரமா இருக்கண்ணா! அனுபவிச்ச உங்களுக்கு சொன்னார்போல் மரண வேதனைதான்!

இதையும் முருகனின் திருவிளையாடல் என எடுத்துக் கொள்ளும் உங்களின் மனப்பக்குவம் வியப்பைத் தருகிறது.

பிரபாகர்...]]]

வாழ்க்கை அனுபவம் கொடுத்த பாடம் இது பிரபாகர்..!

உண்மைத்தமிழன் said...

[[[Din Bab said...

மூக்க நல்ல மூடிக்கிட்டு வலது காதை ஒரு விரலாலா அடைச்சிக்கிட்டு, இடது காது வழியா பலமா காத்து விட்டீங்கன்னா அது தானாவே வெளியில வந்திட போகுது...]]]

இப்படியும் ஒரு வழியிருக்கா..? ஓகே.. அடுத்த முறை செயல்படுத்திப் பார்க்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஷர்புதீன் said...

// “முந்தைய 24 மணி நேரத்தில், யாரையோ இதேபோல் அவஸ்தைக்குள்ளாக்கியிருக்கிறேன் போலிருக்கிறது. அதற்குப் பதிலடிதான் முருகனின் இந்தத் தண்டனை..”//

ஆக மத விவாதத்திற்கு நீங்க ரெடி.]]]

நோ.. நோ.. நோ..!

உண்மைத்தமிழன் said...

[[[கந்தசாமி. said...

அண்ணே காதுக்குள் உப்புத் தண்ணி விட்டு வெளியேற்றினால் உடனே பூச்சியாரும் வெளியே வந்துடுவார். எமது ஊர்களில் இவ்வாறுதான் செய்வார்கள்.]]]

நன்றி கந்தசாமி ஸார்..! இனிமேல் இதனைப் பயன்படுத்துகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[மாதேவி said...

அய்யோ பாவம் பூச்சியார்:)) காதைக் குடைவது கூடாது. உப்புத் தண்ணிவிட்டுக் கழுவுவதுதான் நல்லது.]]]

அறிவுரைக்கு மிக்க நன்றி மாதேவி..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

பட்ட காதுலயே படும்ங்கிற புதுமொழி கண்டு புடிச்சதே நீங்கதான் போல இருக்குதே! பூச்சிக்கும், அதுவும் தன்னை குறுகுறுக்க வைத்து மரண வேதனை தந்த பூச்சிக்கும் இரங்கும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்.]]]

இதுக்கு பூச்சி என்ன ஸார் செய்யும்..? நேரம் அப்படி.. அவ்ளோதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Peter John said...

I also had the same problem. but the inscet was equal to my ear hole size. this happened at night 12.30, we were bachelors at the time in coimbatore. I started shouting and the sound made by the bee was very high. it started scratching ear drums. my friends tried to take out the same by some pin and put water the scene was worse and it went more deep. so one gut take my bike and i was siting in the billion and i was almost in a fainting stage. but when we come out of home the cool air made the insect to come out and I got relieved. when we met the doctor we found my ears are bleeding due to heavy damage. then doctor told you should show some light, or candle light near ear the insect will get attracted to it and come out. But i never tried the same.]]]

மி்க்க நன்றிகள் ஸார்.. இதையும் பதிவர்கள் கவனத்தில் கொள்வார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...

பதினைந்து வருடத்துக்கு முன்னாள் நடு இரவில் இதே அவஸ்தையை பட்டிருக்கிறேன். ஆக்ஷன் ரீப்ளே போல இருந்தது! எதிரில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனை வள்ளலும் தெரிந்தது.]]]

ஹா.. ஹா.. பிடுங்கிட்டானுகளா..? நல்ல வேளை.. எனக்கு அந்த ஐடியா தோணலை.. தப்பிச்சேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[தினேஷ்குமார் said...

சார் கொஞ்சம் உப்பு தண்ணிய காதுல ஊத்தி ஒரு ரெண்டு நிமிடம் கழித்து தலைய சாச்சிங்கன்ன உடனே பூச்சியார் வெளியே வந்திருப்பார் அல்லவா.]]]

இது எனக்குத் தெரியாதே தினேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[விஜய்கோபால்சாமி said...

இனியொரு தரம் இந்த முட்டாள்தனத்தைப் பண்ணாதீங்க அண்ணே. குழாய் தண்ணி வற்ற வேகத்த காதுக்குள்ள இருக்குற மென்மையான பாகங்களால தாங்கிக்க முடியுமா? [எங்க அப்பாவுக்கும் இடது பக்கக் காது ரொம்ப வீக்.]]]]

அந்த நேரத்துல அதையெல்லாம் யோசிக்க முடியல விஜய்.. எப்படியாச்சும் அதை வெளில எடு்க்கணும்னுதான் தோணுச்சு..!

Anonymous said...

அடடா... படிக்கும்போதே இந்த அவஸ்தயின் வலியை உணரமுடிகிறது.

காதுக்குள்ள போய் ஏதோ இரகசியம் சொல்ல நினைச்சிருக்கு போல....

இனிமேல் பஞ்சு வச்சிகிட்டுதான் படுக்கனும் போல...

ConverZ stupidity said...

பாவம்யா நீ. ஒன்னு செய்ங்க உங்க ரூமை கிளீன் செஞ்சிட்டு, எதாவது inscticide அடிச்சி விடுங்க.

Anonymous said...

//இப்ப எழுதி இருக்குறதுக்கு உம்ம காதுல டைனோசரே போகும்... :)//

ஹி ஹி.

படிச்ச போதே ரொம்ப அவஸ்தையாக இருந்துச்சு.

Anonymous said...

யோவ் அங்கிள், லூசா நீங்க. அதை கொன்னு போடலேன்னா திருப்ப காதில புகுந்திட சந்தர்ப்பம் இருக்கு. இதுக்கெல்லாம் கூட முருகன் செயல் என்று சொல்லுவீங்களா.

வன்னியில் சக்கரைப்பாண்டி என்று ஒன்று இருக்கிறது. கருப்பு மற்றும் பச்சை நிறங்களில். அது கிட்ட வந்தாலே நாத்தம் அடிக்கும். அதுக்கு காதில புகுவது என்றால் கொள்ளை பிரியம். ரிவேஸ் கியர் இல்லாதது. அதனால் தான் பஞ்சு அடைச்சுக் கொண்டு தூங்குவோம். அதோட சீசன் முடிஞ்சாலும் பஞ்சை எடுப்பதில்லை. பிறகு பஞ்சை விட இயர் ப்ளக் (பாட்டு கேக்கறது அல்ல) போட்டுட்டு தூங்குவோம். இரண்டு காதின் இயர் ப்ளக்குகளையும் தடித்த மென்மையான நூலினால் இணைத்து இருப்பவை நல்லது. தொலைந்து போகாது.

அப்புறம் டார்ச் லைட் அடிச்சால் வெளிச்சத்தை நோக்கி பூச்சு வரும் என்று சொல்லுவார்கள். தண்ணீர் போடுவதோ உப்புத் தண்ணீர் போடுவதோ கூடாது என்று ஆங்கில மருத்துவர்கள் சொன்னாலும், பாட்டி வைத்தியத்தை நம்பி செய்யலாம்.

இவ்வளவு தூரத்தில இருந்து காதில் தண்ணீர் பாஞ்சுதுன்னா செவிப்பறை கிழிஞ்சாலும் கிழிஞ்சுடும். நீங்களாக இலையை காதில சொருவுறது தண்ணி அடிக்கறதுன்னு பண்ணாம, யாரையாவது எழுப்பி, டோர்ச் அடிச்சு பார்த்திருக்கணும்.

வர வர உங்களுக்கு எதைப்பத்தியும் அக்கறை இல்லாமல் இருக்கிறது போல இருக்கு. முதல்ல ஹெல்மெட் போட மாட்டேன். இப்ப பூச்சி போனாலும் யாரையும் எழுப்பாமல் நானே எடுத்துடுவேன்னு நடக்கறீங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்

யாராவது இவருக்கு நாலு சாத்து வைச்சு புரிய வையுங்கப்பு.

நாப்பது வயசுக்கு மேல அரள பெயர்ந்திடும்னு சொல்றது உண்மை தான் போல.

Ganpat said...

மிக அருமையான நடையில்,பூச்சியின் மிக அருமையான ஓட்டத்தை விவரித்துள்ளீர்!
நீங்கள் செய்த செயல் அனைத்தும் சூரபத்மன் செயல்கள் (இலையை விட்டு குடைவது;குழாயில் காதை நேராக காண்பிப்பது போன்றவை)நல்ல வேளையாக முருகன் உங்களை காப்பாற்றினார்.
மனைவி பேசும்போதும்,
இரவில் படுக்கும்போதும் காதில் பஞ்சு வைத்துக்கொள்வது நல்ல பழக்கம்.

Admin said...

நானும் இதே அவஸ்தை பட்டிருக்கிறேன். எறும்பு மச்சான் என் காதுக்குள் புகுந்த வரலாறும் உண்டு.

நீங்கள் பட்ட அவஸ்தையை எழுதி இருக்கிங்க... பூச்சியார் தான் பட்ட அவஸ்தையை எழுதினால் எப்படி இருக்கும்...

sundari said...

Dear sir,
Take care ur ear sir,

இராஜராஜேஸ்வரி said...

நம்மால் முடியாதது எதுவுமில்லை என்ற ஆறு அறிவுள்ள மனிதனின் திமிர்த்தனம் போலியானது என்பதை உணர முடிகிறது..!

வாழ்க முருகன்..!

வலிப்போக்கன் said...

உங்க அப்பா பேரு முருகனா!அப்போ உங்களுக்கு ரெண்டு அம்மாவா? காதுக்குள்ள எறும்பு போயிருந்தப்ப,உங்க
அம்மையும் அப்பனும் என்ன பன்னிக்கிட்டு இருந்தாங்கோ? எனக்கு உன்மை தெரிஞசாகனும்

Ponchandar said...

காது உள்ளார போகிறவரை நல்லாவே தூங்கியிருக்கிறீர்கள் ! ! !

உப்புகரைசல்தான் பெஸ்ட். காதுக்குள்ள விட்ட சிலநிமிடங்களில் வெளியேறிவிடும்..

உண்மைத்தமிழன் said...

[[[She-nisi said...

அடடா... படிக்கும்போதே இந்த அவஸ்தயின் வலியை உணர முடிகிறது. காதுக்குள்ள போய் ஏதோ இரகசியம் சொல்ல நினைச்சிருக்கு போல. இனிமேல் பஞ்சு வச்சிகிட்டுதான் படுக்கனும் போல.]]]

தினமும் இதுக்காக பஞ்சு வைச்சுக்கிட்டு தூங்க முடியுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[ConverZ stupidity said...

பாவம்யா நீ. ஒன்னு செய்ங்க உங்க ரூமை கிளீன் செஞ்சிட்டு, எதாவது inscticide அடிச்சி விடுங்க.]]]

நல்ல ஐடியா.. செஞ்சு பார்க்குறேன் நண்பரே..!

விஜி said...

சித்தப்பூ, ஒரு சொட்டு தண்ணி விட்டிருந்தா ஓடி வெளியில் வந்திருக்கும் :))))

உண்மைத்தமிழன் said...

[[[அனாமிகா துவாரகன் said...

யோவ் அங்கிள், லூசா நீங்க. அதை கொன்னு போடலேன்னா திருப்ப காதில புகுந்திட சந்தர்ப்பம் இருக்கு. இதுக்கெல்லாம்கூட முருகன் செயல் என்று சொல்லுவீங்களா..?]]]

ஆம்.. வேறென்ன சொல்வது..? ஊர்ல எத்தனையோ பேர் இருக்க என் காதுல எதுக்காக புகுரணும்..?

[[[வன்னியில் சக்கரைப்பாண்டி என்று ஒன்று இருக்கிறது. கருப்பு மற்றும் பச்சை நிறங்களில். அது கிட்ட வந்தாலே நாத்தம் அடிக்கும். அதுக்கு காதில புகுவது என்றால் கொள்ளை பிரியம். ரிவேஸ் கியர் இல்லாதது. அதனால்தான் பஞ்சு அடைச்சுக் கொண்டு தூங்குவோம். அதோட சீசன் முடிஞ்சாலும் பஞ்சை எடுப்பதில்லை. பிறகு பஞ்சைவிட இயர் ப்ளக் (பாட்டு கேக்கறது அல்ல) போட்டுட்டு தூங்குவோம். இரண்டு காதின் இயர் ப்ளக்குகளையும் தடித்த மென்மையான நூலினால் இணைத்து இருப்பவை நல்லது. தொலைந்து போகாது.]]]

ம்.. கதை நல்லாயிருக்கு..!

[[[அப்புறம் டார்ச் லைட் அடிச்சால் வெளிச்சத்தை நோக்கி பூச்சு வரும் என்று சொல்லுவார்கள். தண்ணீர் போடுவதோ உப்புத் தண்ணீர் போடுவதோ கூடாது என்று ஆங்கில மருத்துவர்கள் சொன்னாலும், பாட்டி வைத்தியத்தை நம்பி செய்யலாம்.]]]

இனிமேல் இதையே பாலோ செய்கிறேன்..!

[[[இவ்வளவு தூரத்தில இருந்து காதில் தண்ணீர் பாஞ்சுதுன்னா செவிப்பறை கிழிஞ்சாலும் கிழிஞ்சுடும். நீங்களாக இலையை காதில சொருவுறது தண்ணி அடிக்கறதுன்னு பண்ணாம, யாரையாவது எழுப்பி, டோர்ச் அடிச்சு பார்த்திருக்கணும்.]]]

வீட்ல யாருமில்லை. நான் மட்டும்தான் தனியா இருந்தேன்..!

[[[வர வர உங்களுக்கு எதைப் பத்தியும் அக்கறை இல்லாமல் இருக்கிறது போல இருக்கு. முதல்ல ஹெல்மெட் போட மாட்டேன். இப்ப பூச்சி போனாலும் யாரையும் எழுப்பாமல் நானே எடுத்துடுவேன்னு நடக்கறீங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்]]]

ஆமாம்.. பிளாக் மேல அக்கறையே இல்லாமல்தான் இருக்கிறேன்..!

[[[யாராவது இவருக்கு நாலு சாத்து வைச்சு புரிய வையுங்கப்பு.
நாப்பது வயசுக்கு மேல அரள பெயர்ந்திடும்னு சொல்றது உண்மைதான் போல.]]]

போச்சுடா.. கடைசீல லூஸுன்னு வேற சொல்லிட்டியா..? வீட்டு அட்ரஸை கொடு.. மான நஷ்ட கேஸ் போடணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...

மிக அருமையான நடையில், பூச்சியின் மிக அருமையான ஓட்டத்தை விவரித்துள்ளீர்! நீங்கள் செய்த செயல் அனைத்தும் சூரபத்மன் செயல்கள் (இலையை விட்டு குடைவது; குழாயில் காதை நேராக காண்பிப்பது போன்றவை) நல்ல வேளையாக முருகன் உங்களை காப்பாற்றினார். மனைவி பேசும்போதும், இரவில் படுக்கும்போதும் காதில் பஞ்சு வைத்துக் கொள்வது நல்ல பழக்கம்.]]]

கண்பத்து.. சோகத்துல பங்கெடுத்ததுக்கு நன்னி..!

உண்மைத்தமிழன் said...

[[[சந்ரு said...

நானும் இதே அவஸ்தைபட்டிருக்கிறேன். எறும்பு மச்சான் என் காதுக்குள் புகுந்த வரலாறும் உண்டு.

நீங்கள் பட்ட அவஸ்தையை எழுதி இருக்கிங்க. பூச்சியார் தான் பட்ட அவஸ்தையை எழுதினால் எப்படி இருக்கும்.]]]

நல்லாத்தான் இருக்கும்.. எழுதச் சொல்லுங்களேன்.. பார்ப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[sundari said...

Dear sir, Take care ur ear sir.]]]

மிக்க நன்றி சுந்தரி மேடம்..!

உண்மைத்தமிழன் said...

[[[இராஜராஜேஸ்வரி said...

நம்மால் முடியாதது எதுவுமில்லை என்ற ஆறு அறிவுள்ள மனிதனின் திமிர்த்தனம் போலியானது என்பதை உணர முடிகிறது..!

வாழ்க முருகன்..!]]]

உண்மைதானே..! ஒரு மணி நேரம் சுத்தவிட்டிருச்சே அந்த ச்சின்ன உயிரினம்..!

உண்மைத்தமிழன் said...

[[[வலிபோக்கன் said...

உங்க அப்பா பேரு முருகனா! அப்போ உங்களுக்கு ரெண்டு அம்மாவா? காதுக்குள்ள எறும்பு போயிருந்தப்ப, உங்க அம்மையும் அப்பனும் என்ன பன்னிக்கிட்டு இருந்தாங்கோ? எனக்கு உன்மை தெரிஞசாகனும்]]]

சுவரோரமா தலைகீழா நின்னு இதையெல்லாம் யோசிங்க.. புரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ponchandar said...

காது உள்ளார போகிறவரை நல்லாவே தூங்கியிருக்கிறீர்கள்! உப்பு கரைசல்தான் பெஸ்ட். காதுக்குள்ள விட்ட சில நிமிடங்களில் வெளியேறிவிடும்.]]]

அப்பாடா.. எப்படியோ நான் பட்ட கஷ்டத்துனால எல்லாருக்குமே இதுக்கான தீர்வு தெரிஞ்சு போச்சு. இனிமேல் யாராச்சும் இதைப் பயன்படுத்திப் பொழைச்சுக்குவாங்களே. அது போதும் எனக்கு..!

Ashok D said...

வண்ணத்துபூச்சியாருக்கும் இதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?

பூச்சியை கொல்லாமல் விட்டதற்கு வாழ்த்துகள் :)

காதுல பூச்சின்னு தலைப்பு வெச்சியிருக்கலாம்

உண்மைத்தமிழன் said...

[[[d said...

if u like to read only world cinema in google reader. see tis in my test blog

http://mdumreader.blogspot.com/2011/06/add-jackie-sekars-cinema-category-feed.html]]]

மிக்க நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[D.R.Ashok said...

வண்ணத்துபூச்சியாருக்கும் இதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?]]]

ஒருவேளை பூச்சியை அனுப்பினதே அவரா இருக்குமோ..?

[[[பூச்சியை கொல்லாமல் விட்டதற்கு வாழ்த்துகள் :) காதுல பூச்சின்னு தலைப்பு வெச்சியிருக்கலாம்.]]]

வைச்சிருக்கலாம். ஆனால் அதைவிட டெர்ரரா வைக்கணும்ன்னு யோசிச்சேன். அதான் இப்படி வைச்சிட்டேன்..!

மாயவரத்தான் said...

யோவ் அபி அப்பா... அடுத்தாப்புல மூக்குலே ஓட்டை இருக்குன்னு அங்க பூச்சி புகுந்திச்சின்னு எழுதுவாரு. பஞ்சு வெச்சுக்க சொல்வீரா?!

உண்மைத்தமிழன் said...

[[[மாயவரத்தான்.... said...

யோவ் அபி அப்பா... அடுத்தாப்புல மூக்குலே ஓட்டை இருக்குன்னு அங்க பூச்சி புகுந்திச்சின்னு எழுதுவாரு. பஞ்சு வெச்சுக்க சொல்வீரா?!]]]

எப்படி? பூச்சி உள்ள போனதுக்கப்புறமா பஞ்சு வைச்சுக்கணுமா? இல்லை.. அதுக்கு முன்னாடியேவா..?

CS. Mohan Kumar said...

நீங்கள் இதை பகிர்ந்ததால் பலரும் உப்பு தண்ணீர் முறையை சொல்லி, அதன் மூலம் இதற்கு இது தான் சரியான தீர்வு என புரிந்தது. நன்றி

உண்மைத்தமிழன் said...

[[[மோகன் குமார் said...

நீங்கள் இதை பகிர்ந்ததால் பலரும் உப்பு தண்ணீர் முறையை சொல்லி, அதன் மூலம் இதற்கு இதுதான் சரியான தீர்வு என புரிந்தது. நன்றி.]]]

மிக்க நன்றி மோகன்குமார்.. ஏதோ என்னால் முடிந்த உதவி..!

துளசி கோபால் said...

அட ராமா..... இப்பதான் இந்த பதிவைப் பார்த்தேன்.

நல்லவேளை காது தப்பியது.

ஆமாம் ஒரு சின்ன சந்தேகம்..... மரணமடைஞ்சவங்களுக்கு எதுக்கு மூக்கில் பஞ்சு வைக்கிறாங்க?

பழைய காலத்தில் பூச்சி உள்ளே போகாமல் இருக்கன்னு நினைச்சாலும் இப்போ ஃப்ரீஸர் பாக்ஸ் லே வைக்கும்போது கூட பஞ்சு எதுக்கு?

ஒருவேளை இதுவும் சம்பிரதாயங்களில் ஒன்னா ஆகிப்போச்சோ?

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...

அட ராமா..... இப்பதான் இந்த பதிவைப் பார்த்தேன். நல்லவேளை காது தப்பியது.]]]

ஓஹோ.. அப்போ நீங்க என் பிளாக்கை தொடர்ந்து படிக்கிறதில்லைன்றது இதுல இருந்து ஊர்ஜிதமாகிவிட்டது. வன்மையாகக் கண்டிக்கிறேன்..!

[[[ஆமாம் ஒரு சின்ன சந்தேகம்..... மரணமடைஞ்சவங்களுக்கு எதுக்கு மூக்கில் பஞ்சு வைக்கிறாங்க? பழைய காலத்தில் பூச்சி உள்ளே போகாமல் இருக்கன்னு நினைச்சாலும் இப்போ ஃப்ரீஸர் பாக்ஸ் லே வைக்கும்போது கூட பஞ்சு எதுக்கு? ஒருவேளை இதுவும் சம்பிரதாயங்களில் ஒன்னா ஆகிப் போச்சோ?]]]

பூச்சின்னு இல்ல.. காத்து போகக் கூடாதுன்னு சொல்வாங்க..! ரொம்ப நேரம் கழிச்சு தூக்க வேண்டியிருந்தா காத்து உள்ள போய் உடம்பு ஊத ஆரம்பிச்சிருமேன்னுதான் செய்வாங்க.. ப்ரீசர்ல வைச்ச பின்னாடியும் ஏன்னு எனக்குத் தெரியலை..!

துளசி கோபால் said...

//
ஓஹோ.. அப்போ நீங்க என் பிளாக்கை தொடர்ந்து படிக்கிறதில்லைன்றது இதுல இருந்து ஊர்ஜிதமாகிவிட்டது.//

ஒரேடியா அப்படிச் சொல்ல முடியாது.
பயணத்தில் இருக்கும்போது சில பதிவுகள் மிஸ் ஆகிருது:(

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...

//ஓஹோ.. அப்போ நீங்க என் பிளாக்கை தொடர்ந்து படிக்கிறதில்லைன்றது இதுல இருந்து ஊர்ஜிதமாகிவிட்டது.//

ஒரேடியா அப்படிச் சொல்ல முடியாது.
பயணத்தில் இருக்கும்போது சில பதிவுகள் மிஸ் ஆகிருது:(]]]

அச்சச்சோ..