27-06-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இந்த அளவுக்கு உணர்வாளர்கள் திரண்டு வருவார்கள் என்று இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்களே நினைக்கவில்லை.. இத்தனை நாட்களாக இவர்களெல்லாம் எங்கேயிருந்தார்கள் என்றும் யோசிக்க வைத்துவிட்டார்கள் நேற்று மெரீனா கடற்கரையில் ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழர்கள்..!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ம் தேதியை சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐ.நா. கடைப்பிடித்து வருகிறது.
இந்த ஆண்டு அதே தினத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும்வகையில் தாய்த் தமிழகத்தின் தலைநகரில் நமது தொப்புள்கொடி உறவுகள் ஈழத்தில் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஒரு நிகழ்ச்சியை மே 17 என்ற இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

தமிழினப் படுகொலைக்கு நினைவேந்தல்-2011 என்ற தலைப்பில் இந்த இயக்கம் வெளியிட்ட படுகொலை புகைப்படங்களுடன் இருந்த செய்தித் தொகுப்பு மனதை உருக வைப்பதாக இருந்தது.
1,40,000 தமிழீழத் தமிழர்கள் என்ன காரணத்திற்காய் படுகொலை செய்யப்பட்டார்கள்? விடுதலை கேட்பது ஒரு பாவமா?
2500 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திரமாய் தான் ஆண்டு வந்த தமிழர்களின் நாடான தமிழீழத்தின் விடுதலையைக் கேட்டு கடந்த 60 ஆண்டுகளாக போராடி வந்தது குற்றமா..?
சொந்த நாட்டிற்கு விடுதலை கேட்பதற்கு இதுதான் தண்டனையா..?
கூட்டம், கூட்டமாய் சாவுகள்.. அடுக்கடுக்காய் பாலியல் சித்திரவதைகள்..
தமிழீழத் தமிழர்கள் மட்டுமல்ல.. 543 தமிழக மீனவர்களும் சித்திரவதைச் செய்யப்பட்டு சிங்களவனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு சித்திரவதைச் செய்து படுகொலை செய்யப்பட்டவர்களுக்காய் என்ன செய்தோம்..?
அடுத்தவர்களுக்குத் தெரியாமல் அழுதிருக்கிறோம்..!
கதை, கதையாய்ப் பேசி கவலைப்பட்டிருக்கிறோம்..
ஒன்று கூடி ஒரு நாளாவது ஒப்பாரி வைத்திருக்கிறோமா..?
கடந்த 2009-ம் ஆண்டு நம் கண் முன்னே லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள்
இறந்தோரின் நினைவுகளை நெஞ்சில் நிறைக்க நடுக்கல்லாய் குல சாமியாய், காவல் தெய்வமாய் வழிபட்ட மரபில் வந்தவர்கள் நாம்..
பாடப் புத்தகம் சுமக்க வேண்டிய வயதில் தம் பெற்றோரின் பாடைகளை சுமந்தன.
தமிழீழக் குழந்தைகள், பால் சுரக்கும் மார்பகத்தை அறுத்து வீசிய பாவிகள், பச்சிளம் குழந்தைகளையும் படுகொலை செய்கின்றனர்.
ஆதரித்து பேசத்தான் அனுமதி கேட்க வேண்டும். அழுவதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்..?
அன்றே நாம் சாலைக்கு வந்திருந்தால் 1,40,000 பேரின் சாவையாவது தடுத்திருக்கலாம்..
தமிழினம் தேய்வது தெளிவாய்த் தெரிகிறது. மிச்சத்தையாவது மீட்போம் வாருங்கள்..
களம் இறங்காமல் கனவு ஜெயிக்காது.. வீதிக்கு வராமல் விடுதலை கிடைக்காது..
இனப் படுகொலைக்கு தீர்வு இன விடுதலையே..!
தமிழீழத்தின் விடுதலையே தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு.!!!
இந்தப் படுகொலைகளை, பஞ்சமாபாதகங்களை பார்த்த பிறகும் இவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒரு மணி நேரம் செலவிட மனம் வராதா நமக்கு..
அஞ்சலி செலுத்த அணி திரள்வோம்...
சிந்துவதற்கு கண்ணீரையும், செலவிட கொஞ்சம் நேரத்தையும் கொண்டு வாருங்கள்..
மெழுகுவர்த்திகளும், தீக்குச்சிகளும் கடற்கரையில் காத்திருக்கின்றன.
நீங்கள் தாழ்த்திப் பிடிக்கும் ஒவ்வொரு மெழுகுவர்த்தியும், சித்திரவதைகளால் சிதைக்கப்பட்டவர்களுக்கான அஞ்சலி மட்டுமல்ல..
அவர்கள் கேட்ட தமிழீழ விடுதலையை உயர்த்திப் பிடிக்கும் ஒரு அகிம்சை ஆயுதமும்கூட..
ஒரு மணி நேரம் மெழுகுவர்த்தியேற்றி நம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வாருங்கள்..
இவ்வாறு அரசியல் சார்பற்று, மே 17 அமைப்பு வெளியிட்டிருந்த அறிவிப்புக்கு எழுந்த பெரும் ஆதரவு, தமிழகத்தின் பிற இயக்கங்கள், கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்தது.
இதன் விளைவாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி இன்னும் பிற கட்சிகள், இயக்கங்கள் அனைத்தும் இந்த நிகழ்ச்சிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்திருக்க.. வந்த கூட்டம்தான் அனைவரையும் திகைக்க வைத்தது.
முன்பே திட்டமிட்டபடி மெரீனா பீச்சின் புல்வெளியிலேயே இந்த நிகழ்ச்சியை நடத்திவிடலாம் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால் மக்கள் கூட்டம் சாரை, சாரையாக வந்து குவிந்துவிட கடற்கரை மணல் பகுதிக்குள் நிகழ்ச்சியை நடத்த வேண்டிய கட்டாயமாகிவிட்டது.
அப்போதும் கண்காணிப்புக்கும், பாதுகாப்புக்கும் வந்த காவல்துறையினர் அவர்களுக்கு இருக்கும் சிரமங்களையும், சட்டத்தையும் எடுத்துக் கூறி, சொன்னது சொன்னபடி நிகழ்ச்சியை நடத்தி முடித்துக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
மைக் பயன்படுத்தக் கூடாது.. யாரும் பேசக் கூடாது.. மெழுகுவர்த்தியை கொளுத்திவிட்டு பின்பு மவுன அஞ்சலியைச் செலுத்திவிட்டு அதற்கான இடத்தில் மெழுகுவர்த்திகளை வைத்துவிட்டு அனைவரும் மெளனமாகக் கலைய வேண்டும். இதுதான் காவல்துறையின் மென்மையான வேண்டுகோள்.
இதற்கு ஒப்புக் கொண்டுதான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக அமைப்பினர் கூறுகிறார்கள். ஆனால் கூட்டம் குவியத் தொடங்கியதால் அனைவரையும் ஒழுங்குபடுத்த வேண்டி ஒலிபெருக்கியையும், மைக்கையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் வந்தது.
நிகழ்ச்சிக்கு முக்கியப் பிரமுகர்களும் வருவார்கள் என்பது இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு தெரிந்தபோது எதிர்பார்ப்பு கூடியிருந்தது. இதனால்தான் காவல்துறையின் கண்டிப்பான உத்தரவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் கொஞ்சம் உஷாரான இயக்கத்தினர் யாரையும் தாக்கிப் பேசவோ, கோஷமிடவோ வேண்டாம் என்பதை பேனரிலேயே எழுதி வைத்து நிகழ்ச்சிக்கு வரும் அனைவரின் பார்வைக்கும் படும்வகையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக பிடித்தபடியே நின்று கொண்டிருந்தார்கள்.
கருணாநிதியைத் தாக்கிப் பேசி ஜெயலலிதாவை விட்டுவிட்டால், தி.மு.க.வினர் கோபிப்பார்கள். இருவரையும் சேர்ந்து தாக்கினால் இரண்டு கட்சியினரும் கோபிப்பார்கள். போதாக்குறைக்கு திருமாவும் அழுவார்.. எதற்கு வம்பு..? இந்தப் பிரச்சினையையே எழுப்ப வேண்டாம் என்று இயக்கத்தினர் கேட்டுக் கொண்டதால் தமிழகத்து தலைவர்களை விட்டுவிட்டவர்கள், மஹிந்த ராஜபக்சேவை மட்டும் வறுத்தெடுத்துவிட்டார்கள்..!
காவல்துறையினர் ஆலோசனையும், அறிவுரையும் வழங்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில் கடற்கரை மணலில் ஸ்தூபியை போன்ற நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு அந்த இடம் அழகுப்படுத்தப்பட்டது..!

அணி, அணியாக வந்த பல்வேறு இயக்கத்தினரும் காந்தி சிலையின் பின்புறமுள்ள சர்வீஸ் ரோட்டில் இருந்து உழைப்பாளர் சிலையின் பின்புறம்வரையிலும் ஊர்வலமாக கோஷமிட்டபடியே வந்து சேர்ந்தனர்.
ஓவியர் வீர.சந்தானம் ஈழப் போர் பற்றிய தனது ஓவியங்களை பார்வைக்கு வைத்திருந்தார். பல்வேறு இயக்கங்களும் ஈழத்து மக்களின் கொடுஞ்சாவுகளுக்கு சாட்சியமான புகைப்படங்களை வைத்து விதம், விதமாக தட்டிகளைத் தயார் செய்து வைத்திருந்தது.. லிபியாவுக்கு ஒரு நீதி..? இலங்கைக்கு ஒரு நீதியா..? என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் கைகளிலும் இருந்தது..!
மணலில் அமைக்கப்பட்டிருந்த ஸ்தூபியின் முன்புறமாக அனைத்து இயக்கத்தினரும் வரிசையாக அமர்ந்தாலும், அவரவர் முறை வைத்து கோஷங்களை எழுப்பியபடியே இருந்தனர். ஒரு இயக்கத்தினர் களைப்பில் முடித்தவுடன், அடுத்த தரப்பினர் கோஷத்தை எழுப்ப.. நேற்றைய கடற்கரை முழுவதிலும் மஹிந்த ராஜபக்சே ஒழிக என்ற வார்த்தை நிச்சயமாக லட்சம் முறை எழுப்பப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்..! இடையிடையே பிரபாகரன் வாழ்க என்ற கோஷங்களும் விண்ணைப் பிளந்தன.
எழுப்ப வேண்டிய கோஷங்களைக்கூட எழுதி, ஜெராக்ஸ் எடுத்து அனைத்துத் தரப்பினருக்கும் கொடுத்திருந்தார்கள்.
மறக்க மாட்டோம், மறக்க மாட்டோம்
இனப்படுகொலையை மறக்க மாட்டோம்.
சொந்தங்களே, சொந்தங்களே..
தோள் கொடுப்போம் சொந்தங்களே..!
ஒன்றுபடுவோம், ஒன்றுபடுவோம்..
இனத்திற்காக ஒன்றுபடுவோம்..
ஓங்கட்டும்.. ஓங்கட்டும்..
தமிழர் ஒற்றுமை ஓங்கட்டும்..!
வெல்லட்டும், வெல்லட்டும்..
தமிழீழம் வெல்லட்டும்..
உறுதியேற்போம்.. உறுதியேற்போம்..
ஈழ விடுதலைக்கு உறுதியேற்போம்..
சாதி மறப்போம்.. கட்சி மறப்போம்..
இனத்திற்காக ஒன்றுபடுவோம்..
உரிமை கேட்போம்.. உரிமை கேட்போம்..
மீனவரின் பாரம்பரியா உரிமை கேட்போம்..
ஓங்கட்டும்.. ஓங்கட்டும்..
தமிழர் ஒற்றுமை ஓங்கட்டும்..
வெல்லட்டும்.. வெல்லட்டும்..
தமிழீழம் வெல்லட்டும்..
ஐ.நா. சபையே.. ஐ.நா. சபையே..
தடுத்து நிறுத்து.. தடுத்து நிறுத்து..
சித்திரவதைகளை தடுத்து நிறுத்து..
நீதி வழங்கு.. நீதி வழங்கு..
ஈழத் தமிழனுக்கு நீதி வழங்கு..
மீட்டெடுப்போம்.. மீட்டெடு்ப்போம்..
ஈழத்தை மீட்டெடுப்போம்..
ஓங்கட்டும்.. ஓங்கட்டும்..
தமிழர் ஒற்றுமை ஓங்கட்டும்..
வெல்லட்டும்.. வெல்லட்டும்..
தமிழீழலம் வெல்லட்டும்..
இவையல்லாமல்
"வாழ்க வாழ்க
பிரபாகரன்
வாழ்க வாழ்கவே..!"
என்ற கோஷம் மட்டும் தனித்துவம் பெற்று ஒலித்துக் கொண்டிருந்தது. இந்தக் கோஷங்களெல்லாம் கிட்டத்தட்ட 2 மணி நேரங்கள் அன்றைய மெரீனா கடற்கரையில் ஒலித்தது நிச்சயமாக ஒரு சாதனைதான்..!
பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் என்று சில பிரபலங்களும் வந்து அமர்ந்திருக்க.. கடற்கரையின் முன் பாதி முழுக்கவும் மனிதத் தலைகள்தான் தென்பட்டன..!
பல்வேறு இயக்கங்கள் வந்தவண்ணம் இருந்தபோது அழைக்காமலேயே வந்தார் வருண பகவான். ஆனாலும் கூட்டம் எழுந்திரிக்காமல் அமைதி காக்க.. வந்த வேகத்தில் 5 நிமிடங்களில் தனது வருகையை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு வெளியேறினார் வருணன்..!
ஆனாலும் கூட்டம் கலையாமல் அதே இடத்தில் அமர்ந்த நிலையில், அந்த மழையிலும் கோஷங்களை எழுப்பியபடியே இருந்ததை நினைவு கூற வேண்டும்..!
அத்தனை பேரையும் கவர் செய்யும் அளவுக்கு மைக் வசதியும் இல்லாததால், பகுதி, பகுதியாக அவரவர்கள் மாலை மங்கியவுடன் தாங்களே மெழுகு திரியை கொளுத்தி கைகளில் வைத்திருந்தனர்.

ஆங்காங்கே பல்வேறு நபர்கள் முறை வைத்து கோஷங்களை எழுப்பியபடியே இருக்க.. அமர்ந்திருந்த கூட்டமும் தங்கள் கைகளில் வைத்திருந்த மெழுகுவர்த்தியை ஒரு சேர உயர்த்திக் காட்டியபோது காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் அனைத்துமே நின்று நிதானித்துதான் பயணித்தன.

தலைவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் விளக்கேற்றிய பின்பு மனதார தங்களது அஞ்சலியை செலுத்திய பொதுமக்கள் கடற்கரை மணலில் பல்வேறு இடங்களில் மெழுகுவர்த்திகளை வட்டமாக நிறுத்தி வைத்து தங்களது அஞ்சலியை முடித்துக் கொண்டனர்..!
ஸ்தூபி அருகே இருந்த மக்களிடையே பழ.நெடுமாறன் மட்டுமே சில நிமிடங்கள் பேசினார். ஈழத்து துயரம் பற்றி நாடகம் ஒன்றும் நடந்ததாகச் சொன்னார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் என்னால் பார்க்க முடியவில்லை..!
வந்திருந்த கூட்டத்தில் இந்த இயக்கத்தினர் என்றெல்லாம் அடையாளம் காண முடியாமல் கடற்கரைக்கு அன்றைக்கு வந்தவர்கள், இந்த நிகழ்ச்சிக்காக வந்தவர்கள் என்று பொதுமக்கள்தான் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள். அவர்களின் முகத்தில் எல்லையில்லா வருத்தமும், கோபமும் தெரித்திருந்தன..
ஈழப் பிரச்சினை தமிழகத்து மக்களைத் தாக்கவே தாக்காது.. எந்த நிலையிலும் அதற்குச் சாதகமான ஒன்றை கட்சியினர் சாராத மக்கள் வெளிக்காட்ட மாட்டார்கள் என்று பல காலமாக சொல்லி வந்தவர்களின் வாக்கு நேற்றைக்கு தோற்றுப் போனதாகவே சொல்ல வேண்டும்..!
மிகச் சமீபத்தில் உலகம் முழுவதும் பார்க்கும்வகையில் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட அந்தக் கொடூரங்களை இணையம் மூலமாகப் பார்த்தவர்களின் அதிர்ச்சி நேற்றைய கடற்கரைக் கூட்டத்தில் வெளிப்பட்டுத்தான் இருந்தது.
கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்திருந்தவர்களெல்லாம் இந்தச் செய்தித் தொகுப்பை வாங்கிப் புரட்டிவிட்டு ஒரு கணம் அதிர்ச்சியும், திகைப்புமாக சிலையாய் நின்றதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவர்கள்தான் தங்களது குழந்தைகளுக்காகவும் ஒரு மெழுகுவர்த்தியை வாங்கி தங்களது அஞ்சலியை செலுத்திக் கொண்டார்கள்..!
இந்த அளவுக்கு அவர்களைத் தாக்கும்வகையிலான அளவு செய்தித் தொகுப்பை வடிவமைத்த தோழர்களுக்கு எனது நன்றி..!

மேலும், இந்த நிகழ்ச்சிக்காக கடந்த ஒரு மாத காலமாக ஓய்வில்லாமல் உழைத்திருக்கும் ஒப்பற்ற தோழர்களுக்கும், நண்பர்களுக்கும், அன்றைக்கு தங்கள் இயக்கத்தினரை அழைத்து வந்து கட்சி மாநாடுபோல் நடத்திக் கொடுத்த பல்வேறு இயக்கத் தோழர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி..!
வெறும் 10,000 பேரின் எழுச்சி யாரை, என்ன செய்துவிட முடியும் என்று நினைக்க வேண்டாம்..! தமிழகம் முழுவதுமே பல்வேறு நகரங்களில் இது போன்ற மெழுகு திரி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. மிக்க மகிழ்ச்சி. இந்தச் சிறு துளி வரும் காலத்தில் பெரும் துளியாக மாறி வரக்கூடிய காலங்களில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் சக்தியா உருவெடுக்கலாம்.. அப்படியொரு சூழலை, இக்கட்டை பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய அரசியல்வியாதிகளுக்கு நெருக்கடியை கொடுக்க இந்தச் சிறு பொறியே கூட பின்னாளில் உதவக் கூடும் என்று நான் திடமாக நம்புகிறேன்..!
நம்மால் முடிந்தது நடந்த படுகொலையை பகிரங்கப்படுத்தியிருக்கிறோம். நமது சக தோழர்களிடம், சகோதரர்களிடத்தில் இந்த விஷயத்தைக் கொண்டு போய் சேர்த்திருக்கிறோம். கடந்த சட்டமன்றத் தேர்தலை போல அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டுக்கு ஒருவராவது யோசித்து வாக்களித்தால் ஒருவேளை நாம் அடைய வேண்டிய இலக்கைத் தொட ஒரு வாய்ப்பாவது கிடைக்கும்..!
இதனை முன் வைத்து இனிமேல் அடிமேல் அடி வைத்து நடப்போம் தோழர்களே..!
உலகில் எந்த சர்வாதிகாரியும் நிம்மதியாக இறந்ததாக சரித்திரம் இல்லை. அதேபோல் சிந்திய ரத்தத்திற்கு பதில் சொல்லாமல் எந்த சரித்திரமும் முடிவுற்றுதும் இல்லை.. காத்திருப்போம்.. அதுவரையில் போராடுவோம்..!
டெயில் பீஸ் :
நேற்றைய நிகழ்ச்சியில் மைக் பயன்படுத்தியது.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு மாறாக கடற்கரை மணலில் நிகழ்ச்சி நடத்தியது.. கூட்டத்தில் நிபந்தனையை மீறி பேசியது ஆகிய மூன்று விஷயங்களுக்காக காவல்துறை மே 17 இயக்கத்தின் தலைமையாளர் திரு.திருமுருகன் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.
இதனை அவர்களும் எதிர்பார்த்ததுதான். ஏனெனில் நேற்று மாலை கடற்கரை மணலில் தோழர்கள் கால் வைத்தவுடனேயே காவல்துறையினர் இதைத்தான் அவர்களுக்குத் தெரிவித்தார்கள். எங்கள் கடமையை நாங்கள் செய்வோம். நீங்கதான் கோர்ட்ல பார்த்துக்கணும் என்றார்கள்.
இதில் ஒன்றும் தவறில்லையே..! அத்தனை ஜனத்திரளைக் கட்டுப்படுத்த மைக் வசதிகூட இல்லையேல் எப்படி பேசுவது..?
புல் தரையிலேயே பத்தாயிரம் மக்களையும் அமர வைக்க முடியுமா? அப்படி அமர வைத்தால் கூட்டம் பெசண்ட் நகர் சர்ச் வரையிலும் போய் நிற்கும்.. அந்த அளவுக்கெல்லாம் செய்ய முடியாது என்பதால்தான் கடற்கரை மணலில் செய்ய முடிவெடுத்தார்கள்..!
பேசக் கூடாது என்பது இரு தரப்பும் முன்பே செய்து கொண்ட ஒப்பந்தம்தான். ஆனால் ஒரு நிகழ்ச்சியென்றால் வந்திருந்த உணர்ச்சிவசப்பட்ட கூட்டத்தினருக்கு ஆறுதலாக ஒரு சில வார்த்தைகளாவது பேசவில்லையெனில் எப்படி என்று இறுதிக்கட்டத்தில் பலரும் கருதியதால் பழ.நெடுமாறன் மட்டும் பேசலாம் என்று முடிவெடுத்து பேசியதாகச் சொல்கிறார்கள்..!
இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் லட்சக்கணக்கான வழக்குகளில் இதுவும் ஒன்றாக இருக்கப் போகிறது. போகட்டும். வழக்கைச் சந்திக்கும் துணிவும், நியாயமும், நேர்மையும் மே 17 இயக்கத் தோழர்களிடம் இருக்கிறது. அவர்களுக்கு நாம் என்றும் துணை நிற்போம்..