இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-06-09-2010


06-09-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


தினத்தந்திக்கு நன்றி

நேற்று விடியற்காலை 10.15 மணிக்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை அருமைத் தம்பி அப்துல்லா போன் செய்து எழுப்பி, “என்னண்ணா தூங்கிட்டிருக்கீங்களா..?” என்று அக்கறையோடு விசாரித்தான். “முழிச்சுதான் இருக்கேன்..” என்று பொய்யாக சொல்லி வைத்தேன். என்னதான் இருந்தாலும் நம்ம மருவாதைய விட்டுறக் கூடாது பாருங்க.. அதுக்குத்தான்..!

அடுத்து தம்பி அப்துல்லா சொன்னது ஒரு சந்தோஷமான விஷயம். நேற்றைய 'தினத்தந்தி'யின் 'குடும்ப மலரில்'  எனது 'கணவர்களைத் திருடும் நடிகைகள் - பாலிவுட் சர்வே' என்னும் கட்டுரை எடுத்தாளப்பட்டிருப்பதாகச் சொன்னான். 

உடனேயே 'தினத்தந்தி'யை வாங்கிப் பார்த்தேன். எனது கட்டுரையில் இருந்து சிற்சிலவற்றை குறைத்து இரண்டு பக்க அளவில் மேட்டராக செய்திருக்கிறார்கள். வெளியிட்டமைக்கு 'தினத்தந்தி' ஆசிரியர் குழுவினருக்கு எனது நன்றிகள். கூடவே ஒரு ச்சின்ன நப்பாசை.. எனது பிளாக் முகவரியை போட்டிருக்கலாம்.. பரவாயில்லை..!



என்னிடம் சொல்லாமல் செய்துவிட்டார்கள் என்றோ.. எனது படைப்பைத் திருடிவிட்டார்கள் என்றோ என்னால் இந்த விஷயத்தில் சொல்ல முடியாது.. ஏனெனில் என்னுடைய சிந்தனையில் உருவான கதை, கவிதை, அல்லது  கட்டுரையாக இருப்பின் நான் இவ்வாறு சொல்லலாம்.

ஆனால் நான் இதனை உருவாக்கியதே பல்வேறு ஊடகங்களின் உதவியால்தான்.. அதிலும் பல விஷயங்கள் நான் முன்பே பல்வேறு பத்திரிகைகளில் படித்ததுதான். ஆகவே, 'தினத்தந்தி'யை நான் இந்த விஷயத்தில் குற்றம் சுமத்த முடியாது என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

அத்தோடு எனது வலைத்தளத்திற்காக பல செய்திகளை 'தினத்தந்தி'யிலிருந்து நான் எடுத்தாண்டிருக்கிறேன். அதற்காக அவர்களிடத்தில் ஒருபோதும் நான் அனுமதி கேட்டதில்லை. நன்றியைக்கூட சில இடங்களில் போட்டிருக்கிறேன். பல இடங்களில் போட்டதில்லை.

ஆகவே தோழர்களே.. பரஸ்பரம் நண்பர்களையும், மறைமுகமாக தோழமையுடன் உதவுபவர்களையும் மதிப்போம்.


ட்விட்டரால் விளைந்த விபரீதம்

தன்னுடைய ஒரு சாதாரண இரண்டு வரி ஆங்கிலச் செய்தி, கோடம்பாக்கத்தில் இத்தனை களேபரத்தை ஏற்படுத்தும் என்று நிகில் முருகனே நினைத்திருக்க மாட்டார்.

@onlynikil -- y poor opening for NMA ?..Reasons..??? 2:10 PM Aug 21st 

@onlynikil -- movie also got mixed reactions.. dnt know whom is correct..one said as good n other said as bad 2:31 PM Aug 21st 

நிகில் முருகன் தமிழ்ச் சினிமாவுலகின் டாப் பி.ஆர்.ஓ. கமல். ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் என்று உச்சங்களுக்கெல்லாம் இவர்தான் இடதும், வலதும். அதேபோல் சூர்யாவுக்கும்.. ஆனால் அவர் தம்பி கார்த்திக்கு பி.ஆர்.ஓ. ஜான்சன். 'நான் மகான் அல்ல' படத்திற்கும் பி.ஆர்.ஓ. ஜான்சன்தான்.

நிகில் முருகன் எழுதிய இந்த ட்விட்டைப் படித்துவிட்டு பலரும் கோடம்பாக்கத்துள்ளேயே பல கிசுகிசுக்களை பரப்பிவிட்டுக் கொண்டிருந்தது சூர்யா-கார்த்திக்கின் அப்பா சிவகுமாரின் காதுக்கும் எட்டிவிட்டது. நிகிலிடம் போனிலேயே இது பற்றிக் கேட்டிருக்கிறார் சிவக்குமார். "இது சாதாரணமானதுதான்.. என்னுடைய தனிப்பட்ட கருத்தைச் சொன்னேன் ஸார். அவ்ளோதான்" என்று நிகில் சொன்னாலும் சிவக்குமாருக்கு அது ஏற்புடையதாக இல்லை.

தொடர்ச்சியான போன் கால்களும், பேச்சுவார்த்தைக்களும் பின்பு தடித்துப் போகத் துவங்க.. கோபப்படும் அளவுக்கு இரு தரப்பினரும் பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு சூர்யா தன்னுடைய பி.ஆர்.ஓ. போஸ்ட்டில் இருந்து நிகிலை கழட்டிவிட்டு, ஜான்ஸனை புக் செய்துவிட்டு கூடவே இதனை அத்தனை பத்திரிகைகளுக்கும் செய்தியாகவும் கொடுத்துவிட்டார்.

வெறுத்துப் போன நிகில் தொடர்ச்சியாக ட்விட்டரில் தன் தரப்புச் செய்தியை சோகமாகவும், வருத்தமாகவும், வீரமாகவும், கவிதையாகவும், தத்துவமாகவும் எழுதித் தள்ளியதை ரூம் போடாத குறையாக ஒரு குரூப் விழுந்து, விழுந்து படித்துக் கொண்டிருந்தது கோடம்பாக்கத்து நியூஸ்.

அடுத்த நாளே ஸ்ருதி கமல்ஹாசன் தனக்கும் இனிமேல் பி.ஆர்.ஓ. ஜான்ஸன்தான் என்று சொல்லிவிட மீண்டும் ஒரு பரபரப்பு. கமல்ஹாசனுக்கு பி.ஆர்.ஓ. நிகில்தான். ஆனால் மகளிடம் இருந்து நீக்கமா என்று சந்தோஷக் கூச்சல் ஒரு பக்கமும், ஆச்சரியக்குறிகள் இன்னொரு பக்கமும் பட்டையைக் கிளப்ப.. நிகிலோ தான் ஒருபோதும் ஸ்ருதிக்கு பி.ஆர்.ஓ.வாக இருந்ததில்லை என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லியும் கேட்கத்தான் இங்கே ஆளில்லை.

எது எப்படியிருந்தாலும் நிகில் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. 'நான் மகான் அல்ல' என்ற ஒரு படத்திற்கு மட்டுமல்ல.. சென்ற வாரம்  வெளியான அத்தனை படங்களுக்குமே கூட்டம் இல்லை.. பரவாயில்லாமல் போகிறது என்று சொல்லும்படியாகத்தான் அந்தப் படத்தின் நிலைமை.. மற்ற படங்களெல்லாம் ஒரு வாரம்தான்.. தூக்கிவிட்டார்கள். திரையுலகத்தின் நிலைமை இப்படியிருக்க.. உண்மையைத்தான் வெளியில் சொல்லக் கூடாது போலிருக்கிறது.


ராஜபக்சேவின் ராஜதந்திரம்..!

இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்று குவித்துவிட்டு இனி தட்டிக் கேட்க ஆளில்லை என்கிற மமதையோடு, பெரும்பான்மையான சிங்கள இன மக்களின் செல்வாக்கோடு இறுமாப்பில் இருக்கும் ராஜபக்சே தான் உயிருடன் இருக்கின்றவரையிலும் தானே ஜனாதிபதியாக இருக்க வேண்டி நம் இந்திய அரசியல்வியாதிகளைப் போலவே தில்லாலங்கடி வேலைகளையெல்லாம் செய்து முடித்திருக்கிறார்.


இலங்கையில் தற்போதைய அரசியல் அமைப்புச் சட்டப்படி ஒருவரே இரண்டு முறைகளுக்கு மேல் ஜனாதிபதி பதவியில் அமர முடியாது. இந்தச் சட்டத்தைத் திருத்த வேண்டுமெனில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி வேண்டும். ராஜபக்சேவுக்கு அந்த அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் 'கொடுக்க' வேண்டியதைக் கொடுத்து கடைசியாக முஸ்லீம் லீக் கட்சியினரின் 12 உறுப்பினர்கள் ஓட்டுக்களை ஒட்டு மொத்தமாக அள்ளியதில் மெஜாரிட்டி கையில் சிக்கிவிட்டது.

உடனேயே தனது அடுத்தக் கட்ட சர்வாதிகாரத்தனத்தைக் காட்டத் துணிந்துவிட்டார். அரசமைப்புச் சட்டப்படி இப்போது ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகளவிலான அதிகாரத்தை இந்தியாவில் இருப்பதைப் போல பிரதமர் பதவிக்கு மாற்றும்படியான சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதாக ரணிலிடம் கூறி அவரது அனுசரணையைப் பெற்றிருந்த ராஜபக்சே இப்போது கிடைத்திருக்கும் மெஜாரிட்டியினால் அந்தத் திட்டத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு ஜனாதிபதிகள் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம் என்ற சட்டப் பிரேணணையை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் போகிறார். நிச்சயம் ஜெயிப்பார்.. பின்பு..?

தனி ஈழம் நிச்சயம் ஒரு கனவுதான்.. புலம்பெயர்ந்த ஈழ அரசு அமைத்திருப்பதையே பெரிய சாதனையாக நினைத்து நாமே திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.. அல்லது.. 'இவனை எப்போது கொள்ளை கொண்டு போகும்' என்று காத்திருக்க வேண்டியதுதான்.. வேறு வழியில்லை.

இலங்கை தேசம் இனிமேல், ராஜபக்சே பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்குச்  சொந்தமான ஒரு தனித் தீவு.. அவ்வளவுதான்.


ராஜபக்சேவின் குரு விளாடிமிர் புடின்..!


ராஜபக்சேவை சொல்லிவிட்டு விளாடிமிர் புடினைப் பற்றிச் சொல்லாமல் போனால் அது நன்றாக இருக்காது..


கிட்டத்தட்ட ராஜபக்சேவுக்கு வழிகாட்டியாகவும், குருவாகவும் இந்த விஷயத்தில் இருந்திருப்பது விளாடிமிர் புடின்தான். ரஷ்ய அரசியலமைப்புச் சட்டப்படியும் ஒருவரே இரண்டு முறைகளுக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க முடியாது. இதனால்தான் இரண்டு முறை அதிபர் பதவியை வகித்துவிட்ட புடின் தீவிர அரசியலில் இருந்து விலக முடியாத காரணத்தால், தான் பிரதமர் பதவிக்கு டிரான்ஸ்பராகிவிட்டு, தன்னுடைய தீவிர விசுவாசியான டிமிட்ரி மெட்வடேவ்வை அதிபராக்கினார்.

இதையடுத்து புடின், ரஷ்ய நாடாளுமன்றத்திலும் அரசமைப்புச் சட்டத்தை தனக்குச் சாதகமாக இருக்கும் வண்ணம் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதியாகலாம் என்று தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றி வைத்துவிட்டு காத்திருக்கிறார் அடுத்த அதிபர் தேர்தலுக்கு.

அடுத்த அதிபர் தேர்தலில் புடின் போட்டியிடுவது உறுதி.. மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியாவதும் உறுதி என்கிறார்கள். ராஜபக்சேவுக்கும் இவருக்கும் இதுதான் ஒற்றுமையா.. இல்லை இன்னொன்றும் இருக்கிறது..

ரஷ்ய எல்லையில் இருக்கும் செசன்யா என்றொரு மாகாணத்தில் தனி நாடு கேட்டு அம்மாநிலத்தில் பல குழுக்கள் போராடியபோது புடின் அவர்களை அடக்கி, ஒடுக்கியவிதம் அப்பட்டமாக ராஜபக்சேவுக்கு இணையானதுதான்..!

ஒரு சாம்பிள்.. புடினின் ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறி சர்வதேச மனித உரிமை ஆணையம் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை கூறியிருந்ததன் ஒரு பகுதியை தினமலர் வாரமலரில்  வெளியிட்டிருந்தார்கள்.

தங்களிடம் பிடிபட்ட செசன்யா ஆதரவாளர்களை 500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இரண்டு ஊர்களுக்கு இடையே வந்து செல்லும் ஒரு சரக்கு ரயில் வண்டியின் கேரேஜுக்குள் போட்டு அடைத்துவிட்டார்கள். சோறு, தண்ணி இல்லை. கேரேஜூம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. வண்டியும் இந்த ஸ்டேஷன், அந்த ஸ்டேஷன் என்று மாறி, மாறி ஓடிய பிறகு மிகச் சரியாக 28 நாட்கள் கழித்துத்தான் அந்த கேரேஜை திறந்தார்களாம்..

உள்ளே இருந்த மனிதர்கள் பசி தாங்காமல் தங்களுடன் இருந்த சக மனிதர்களையே கடித்துக் குதறி தின்று தங்களது பசியைத் தீர்த்திருக்கிறார்கள். பலம் வாய்ந்தவர்கள் மனிதக் கறியைச் சாப்பிட்டுவிட்டு உயிருடன் இருக்க.. பலம் குறைந்தவர்கள் பரலோகம் போயிருக்க.. மிச்சம், மீதியிருந்தவர்களையும் சுட்டுக் கொன்றுவிட்டதாம் சிங்கள ச்சீச்சீ.. ரஷ்ய ராணுவம்..

அனைத்து நாடுகளிலும் சர்வாதிகாரிகள் ஒன்று போலத்தான் இருக்கிறார்கள். அதில் மாற்றமே இல்லை.


64 வயதில் இப்படியொரு சாதனை..!

இளமை பூத்துக் குலுங்கும் வயதில் இதனைச் செய்யலாம்.. செய்வார்கள். வழக்கமானதுதான்.. ரசிகர்கள் பட்டாளம் பெருகும். பர்ஸும் கனக்கும். உலக அளவில் ஒரே நாளில் புகழ் பெறலாம் என்றுதான் நிர்வாண போஸ் கொடுப்பார்கள். இதையே 64 வயதில் கொடுத்தால்..?


அகாடமி அவார்டு வாங்கிய ஹெலன் மிர்ரன் என்ற அம்மணிதான் இந்தப் பரபரப்பை ஊட்டியிருப்பவர். இவர்தான் நியூயார்க் மேகஸினுக்காக தனது  நிர்வாண அழகைக் காட்டப் போகிறாராம். எந்த வயதில் இருந்தாலென்ன..? எப்போதும் நான் அழகுதான் என்கிறார் இந்த அம்மா ஸாரி பாட்டி..! கூடவே இவரைப் பற்றிய இன்னொரு விஷயமும் அசர வைக்கிறது..!

அம்மணியின் நடிப்பில் ஒரு ஆங்கிலத் திரைப்படம் இந்த மாதம் முதல் துவங்கப் போகிறது. படத்தின் பெயர் Love Ranch. இந்தப் படத்தில் ஹெலன் ஒரு விபச்சார விடுதியின் தலைவியாக நடிக்கப் போகிறாராம். அத்தோடு இவரைவிட மூன்று மடங்கு வயது குறைந்த அடல்ட்ரி பையனுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதைப் போன்றே கதை உள்ளதாம். ஆத்தாடி..? இதைவிட உச்சக்கட்ட அதிர்ச்சி.. இந்தப் படத்தை இயக்கப் போவது இந்த அம்மணியின் கணவர் Taylor Hackyord. புருஷன்னா இப்படில்ல இருக்கணும்..!


பாவம்யா நம்ம சூப்பர் ஸ்டார்..!

தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகி பரபரப்பை ஊட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு திருமணங்களில் ஒன்றாகிவிட்டது சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்தர்யாவின் திருமணம். முதல் கல்யாணமான வளர்ப்பு மகன் திருமணத்தின் ஒளிபரப்பு நோக்கம் வேறு மாதிரியாகப் போய்விட்டாலும், செளந்தர்யாவின் கல்யாண ஒளிபரப்பு தனது ரசிகர்களுக்காகவும், மீடியாக்களுக்காகவும் ரஜினியே காம்ப்ரமைஸ் செய்து கொண்டதுதான் என்கிறார்கள். இதற்காக எந்தப் பணமும் கை மாறவில்லை என்று சேனல் தரப்பில் உறுதியாகச் சொல்கிறார்கள். "எங்களுக்கு வியாபாரமும், ரஜினி தரப்புக்கு விளம்பரமும்தான் கிடைத்தது"  என்கிறார்கள். 


ரஜினி கடைசியில் என்ன நினைத்தாரோ அதுதான் அன்றைக்கும் நடந்தது. கல்யாணத்தன்று காலையில் பத்தரை மணிவரையிலும் கூட்டம் வந்து கொண்டேயிருந்தாலும் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் வந்துட்டுப் போயாச்சு என்றாலும் குடும்பத்தினரைப் பிரிய மனமில்லாமல் மேடையிலேயே இருந்தார். ஆனாலும் தெரியாத முகங்களெல்லாம் மேடைக்கு வரத் துவங்க.. சங்கடப்பட்டார். ரஜினி எஸ்.பி.முத்துராமனின் அறிவுரையின் பேரில் அரங்கத்தைவிட்டு வெளியேறினார். மீண்டும் மாலைதான் மண்டபத்திற்கு திரும்பினார்.

மாலை ரிசப்ஷனிலும் இதே கதைதான்.. இரவு 9.30 மணிவரையிலும் கூட்டம் கலையாமல் பின் வரிசைக்குப் போய் சேர் போட்டு உட்கார்ந்து கொள்ள.. முக்கியப் பிரமுகர்கள் உட்கார்வதற்குக்கூட சீட் இல்லாமல் பட்டென்று வெளியேறினார்கள். 

பொறுத்துப் பார்த்தும் முடியாமல் லதா ரஜினி மைக்கைப் பிடித்து, “வந்து வாழ்த்தியதற்கு அனைவருக்கும் மிக்க நன்றி...” என்று 'வெளியேறுங்கள்' என்பதை மறைமுகமாகச் சொல்லிப் பார்த்தார். ம்ஹூம்.. கூட்டம் நகரவில்லை. கடைசியாக ரஜினியே தலைக்கு மேல் இரு கை கூப்பி கெஞ்சிக் கேட்டு “வெளியே போங்கள்” என்று சைகையும் செய்து பார்த்தார். முடியவில்லை.. மீண்டும் மீண்டும் வந்தவர்களே மேடையேறி தன்னுடன் நின்று புகைப்படம் எடுப்பதைத்தான் அவரால் தடுக்க முடியவில்லை.

சட்டென்று தான் வெளியில் செல்வதாகச் சொல்லிவிட்டு ரசிகர்கள் முன்பாகவே அரங்கத்தைவிட்டு வெளியேறினார்.. தலைவர் கிளம்பிட்டாரே என்ற நினைப்பில் கூட்டமும் லேசுபாசாக கலையத் தொடங்கியது. அப்படியும் ச்சும்மா உட்கார்ந்திருந்தவர்களை "சாப்பிடப் போங்க" என்று சொல்லிக் கிளப்பிவிட்டார்கள். "சாப்பிட்டுவிட்டேன்" என்று சொன்னவர்களை "தாம்பூலம் போய் வாங்கிக்குங்க" என்று கையைப் பிடித்திழுத்து எழுப்பினார்கள். எழுந்து வந்து தாம்பூலம் வாங்கியவர்களை அப்படியே வாசலைக் கை காட்டி "போயிட்டு வாங்க" என்று இன்முகம் காட்டி அனுப்பினார்களாம்.

அடுத்த அரை மணி நேரம் கழித்து கிட்டத்தட்ட குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே மண்டபத்திற்குள் இருக்கும் நிலைமை ரஜினிக்குத் தெரியப்படுத்தப்பட அதுவரையிலும் ராஜரத்தினம் ஸ்டேடியத்தின் அருகில் காரில் காத்திருந்த ரஜினி, சடக்கென்று மின்னல் வேகத்தில் மீண்டும் மண்டபத்திற்கு வந்து ஆசுவாசப்பட்டாராம்.. பெற்ற மகள் கல்யாணத்திலேயே ஒரு அப்பன் சுதந்திரமா இருக்க முடியலை..? என்ன கொடுமை இது..?

இதில் இன்னொரு தமாஷ்.. அத்தனை பத்திரிகையாளர்களும் ரஜினியின் பேரனை புகைப்படமெடுக்க அலையாய் அலைந்திருக்கிறார்கள். ரஜினியின் குடும்பத்தினர் யாராவது ஒரு சின்னப் பையனைத் தூக்கி வைத்திருந்தால்கூட ச்சும்மா கிளிக் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையான பேரன் கடைசிவரையிலும் சிக்கவேயில்லையாம்.. பையனை பத்திரிகைகள் கண்ணில் சிக்காமல் வைத்திருக்க ரொம்பவே படாதபாடுபட்டிருக்கிறார்கள் ரஜினியின் குடும்பத்தினர். இதுதான் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இது போன்று குடும்பத்தில் ஒரு முறை நடக்கின்ற நல்ல காரியத்தில் தான் இடம் பெறாதது அந்தப் பையனுக்கே பின்னாளில் வருத்தத்தைத் தராதா..? ரஜினியின் குடும்பத்தினர்  ஏன் இதைப் புரிந்து கொள்ளவில்லை..?


சாவுச் செய்தி - தாமதமான மெஸேஜ்..!

எதுக்குப் போகலைன்னாலும் பரவாயில்லை.. சாவுக்கு மட்டும் போகாம இருக்கக் கூடாது என்பது நமது வழக்கம். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் தந்தை இறந்துவிட்டார் என்று ஒரு மதிய நேரத்தில் போனில் மெஸேஜ் வந்தது.  

பதற்றத்துடன் அவசரம், அவசரமாகக் கிளம்பி வீட்டைப் பூட்டிவிட்டு வண்டியுடன் வாசலுக்கு வந்தவன், எதுக்கும் நண்பரிடம் எப்படி..? எப்ப தூக்குறீங்கன்னு ஒரு வார்த்தை கேட்டுக்குவோம் என்று நினைத்து போன் போட்டா.. ?



நண்பர் அணுகுண்டைத் தூக்கிப் போடுகிறார். “சரவணன்.. அப்பா இறந்து மூணு நாளாச்சு.. உங்களை மாதிரியே நிறைய பேர் இன்னிக்கு மாறி, மாறி போன் போட்டுப் பேசிட்டாங்க.. நாலைஞ்சு பேரு கைல மாலையோட வீட்டுக்கு வந்துட்டாங்க.. ரொம்ப அசிங்கமாயிருச்சு..” என்று சொல்லி வருத்தப்பட்டார்.

“என்ன ஸார் ஆச்சு..?” என்று கேட்டால், நண்பர் ஒரு வழக்கறிஞர்.  செல்போனில் இருந்த சிம்கார்டை கழட்டி தன்னுடைய ஜூனியரிடம் கொடுத்து அவருடைய செல்போனில் இருந்து அனைவருக்கும் தொடர்ச்சியாக மெஸேஜ் கொடுக்கும்படி சொன்னாராம். அந்த ஜூனியரும் அதனைச் செய்துவிட்டாராம். 

ஆனால் ஜூனியர் வைத்திருந்த செல்போனில் மெஸேஜ் செட்டப்பில் மெஸேஜ்கள் அனைத்தும்  48 மணி நேரத்துக்கு அப்புறம் அனுப்பப்பட வேண்டும் என்ற ஆப்ஷன் டிக் செய்யப்பட்டிருந்ததாம். இதுதான் பிரச்சினை.. 48 மணி நேரம் கழித்து பக்கத்து தெருவில் இருந்தவருக்குக்கூட நியூஸ் போய் அவர் கையில் மாலையோடு வந்து நடுவீட்டில் நிற்க..

ஸ்ப்ப்பா... நண்பரின் சங்கடத்தைப் புரிந்து கொண்டு என்னால் பேசவே முடியவில்லை..

தோழர்கள்.. இந்த விஷயத்தை தெரிந்து கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்..


1980-ல் நடிகர்-நடிகைகள் கூட்டம் - கமல் புறக்கணிப்பு

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்களுக்கென்று சங்கம் வைத்திருப்பதுபோல் லீடிங்கில் இல்லை என்றாலும் நாங்களும் மீட்டிங் செய்வோம்ல என்று நமது 1980-களின் ஹீரோக்களும், ஹீரோயின்களும் சென்ற வருடம் நடிகை லிஸி பிரியதர்சனின் நுங்கம்பாக்கம் வீட்டில் ஒரு பார்ட்டி கொண்டாடினார்கள்.



அதில் இல்லாதவர்களையும் புதிதாகச் சேர்த்து சென்ற மாதம் மீண்டும் ஒரு மீட்டிங் நடத்தியிருக்கிறார்கள். விடிய விடிய ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் நடந்தேறிய இந்த சந்திப்பில் இம்முறையும் கமல்ஹாசன் கலந்து கொள்ளாதது வருத்தமே.. சென்ற வருடம் மும்பையில் ஒரு பாராட்டு விழா என்றாராம்.. இந்த முறை பிரான்சில் ஷூட்டிங் என்று சொல்லிவிட்டாராம்.. அவர் இல்லாமல் எப்படி..?

சரி.. அதுதான் போகுது.. போன வருஷம் மாதிரி அளப்பறை போட்டோக்களை அள்ளி விடுங்கப்பான்னு வலைவீசித் தேடினா கிடைச்சா போட்டுக்குங்கன்னு அத்தனை பேரும் ஒண்ணு போல சொல்றாங்க. போன தடவை மீட்டிங் புகைப்படங்களை நடிகர் பிரதாப்போத்தன் தனது பேஸ்புக்கில் தெரியாத்தனமாக போட்டுவிட.. உலகமே அதனை காப்பியெடுத்து பார்த்து புல்லரித்தது.

அதிலும் சூப்பர் ஸ்டார் கையில் கிளாஸூடன் நிற்பதைப் போன்ற ஒரு படம் உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களிடையே சர்ச்சையைக் கிளப்ப.. பல்வேறு போன் கால்கள்.. நானும் பிரதாப் போத்தனுக்கு அப்போதே போன் செய்து அதனைக் குறிப்பிட்டேன். முதலில் இல்லவே இல்லை.. அது வெறும் ஜூஸ்தான் என்று சொன்னவர்.. பின்பு "சரி.. நீக்கிடுறேன்" என்றார். ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது. பிரதாப்போத்தனை தமிழ் ரசிகர்கள் இதற்காக வாழ்த்தினாலும், கூட்டத்தை ஏற்பாடு செய்த இரண்டு நடிகைகள் வறுத்தெடுத்து விட்டார்களாம்.

இந்த மீட்டிங்கில் முன்பேயே அந்தக் கண்டிஷன் தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டதாம். புகைப்படங்கள் கிடைக்கும். ஆனால் வெளியிடவே கூடாது என்ற நிபந்தனையில்தான் அனைவருக்கும் அவர்கள் சம்பந்தப்பட்ட சொற்பமான திரைப்படங்கள் மட்டுமே கிடைத்திருக்கிறதாம்..

நான் ஒரு அட்டகாசமான ஸ்னாப்பிற்காகக் காத்திருக்கிறேன். யாரோ 'ஒரு தலை ராகம்' சங்கராம்.. வந்திருந்தாராம்.. யாரோ 'அம்பிகா'ன்னு ஒருத்தங்களும் வந்திருந்தாங்களாம்..  தனிப் புகைப்படம் கிடைத்தால் போடுகிறேன்..


ஈரானில் கல்லால் அடித்துக் கொல்லப்படும் பெண்கள்

மரண தண்டனை சரியானது. அப்போதுதான் குற்றங்கள் குறையும் என்பவர்கள் தயவு செய்து கூகிளாண்டவரிடம் கேட்டு ஈரானில் பெண்களை எப்படி கல்லால் அடித்துக் கொல்கிறார்கள் என்பதற்கான வீடியோவை பார்த்துத் தொலையுங்கள்.

இஸ்லாமிய அடிப்படையில் நெறி தவறாமல் ஆட்சி நடத்தப்படுகிறது என்று சொல்லப்படும் ஈரானில் மரண தண்டனைகள் எவ்வாறு நிகழ்த்தப்படுகின்ற என்பதை விளக்கி சென்ற வாரம் பல வீடியோக்கள் மெயிலில் வந்தன. பார்த்தவுடன் நெஞ்சில் கை வைக்க வேண்டியதாகிப் போனது. 

அடப்பாவிகளா.. இரக்கம் என்பதும், மன்னிப்பு என்பதும் மனிதர்களிடையே இருக்கும் உயரிய குணங்களடா..? இது இல்லாமல் விலங்குகள் போல வாழ்கிறீர்களே என்று கேட்கத்தான் தோன்றுகிறது.

கூடவே, நம்மூர் ஸ்கூலில் வாத்தியார்கள் பின்னியெடுப்பதைப் போல எதற்கெடுத்தாலும் 10, 20, 40, 99 சவுக்கடிகளை வழங்கி நீதி பரிபாலனம் செய்து வருகிறது ஈரானிய அரசு.

கல்லால் அடித்துக் கொள்ளப்படும் காட்சியைப் பார்த்தால் இரண்டு நாளைக்கு சோறு உள்ளே இறங்காது.. இப்படியா செய்வது..? இதற்குப் பதிலாகத் தூக்கிலாவது போடலாம். அது கொஞ்சமாவது நாகரிகமாக இருக்கும்.

ஆனாலும் நான் பார்த்தவரையிலும் ஈரானில் அதிகப்படியாக பெண்களைத்தான் கல்லால் அடித்துக் கொள்கிறார்கள். பெண்களுக்குத்தான் சவுக்கடியும் கொடுக்கிறார்கள். 

இதோ இப்போது சமீபத்தில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கு பெற்ற பெண்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்த ஒரு ஈரானிய பெண் ஒரு பொது இடத்தில் தனது அங்கியை சரியாக அணியவில்லை என்பதற்காக கைது செய்யப்பட்டு 99 சவுக்கடி தண்டனைக்கு உள்ளாகியுள்ளாராம்..

என்ன கொடுமைங்க இது..? ஏற்கெனவே எல்லாம் மூடித்தான் டிரெஸ் இருக்கு. கீழ கால் லேசா தெரிஞ்சிருச்சாம்.. அதுக்காக 99 சவுக்கடியாம்.. போங்கப்பா நீங்களும் உங்க மதமும், சட்டமும்..?


இந்தக் காந்தக் கண்ணழகி எங்கே..?

'ராகங்கள் பதினாறும் உருவான வரலாறு' பாடல் காட்சியை தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப பார்க்கும்போது சூப்பர்ஸ்டாரை விட இன்னொன்றுதான் என் மனதில் நிரம்பி வழிகிறது. அது உடன் நிற்கும் காந்தக் கண்ணழகி மாதவியின் கவர்ந்திழுக்கும் கண்கள்.


மிக மிகக் குறைவான படங்களில் மட்டுமே இவரது முக அழகு எஸ்டாபிளீஸ் செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் நிச்சயம் மலையாளத் திரைப்படங்களாகத்தான் இருக்கும். அங்குதான் இவரது நடிப்புக்குத் தீனியை சரியாகப் போட்டிருக்கிறார்கள்.

மாதவியைப் பற்றி நினைத்தவுடன் இவர் இப்போது என்னதான் செய்கிறார். பார்த்துவிடுவோம் என்று கூகிளாண்டவரிடம் கேட்டுத் துழாவியபோது நல்ல விஷயமாகத்தான் தெரிந்தது.

அமெரிக்காவில் இருக்கும் ஸ்வாமி ராமா என்னும் சாமியாரிடம் சீடராக இருந்த மாதவி, அந்த ஸ்வாமி ராமா அடையாளம் காட்டிய அவருடைய இன்னொரு சீடரான ரால்ப் ஷர்மா என்பவரையே திருமணம் செய்திருக்கிறார்.

இப்போது அமெரிக்காவில் பார்ம்சூட்டிக்கல் கம்பெனி நடத்தும் தனது கணவரின் வியாபாரத்தில் துணையாக இருக்கிறாராம் மாதவி. மூன்று பிள்ளைகள்.

மாதவியின் திருமணச் செய்தியைக் கேள்விப்பட்டு தமிழர் நடிகர் ஒருவர் ஒரு மாதம் முழுக்க தன் வீட்டின் ஒரு அறைக்குள்ளேயே முடங்கிக் கொண்டு பாட்டிலே கதி என்று கிடந்ததும், மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று சிகிச்சையளித்துக் கொண்டு வந்ததும் அப்போதைய கோடம்பாக்கத்து செய்தி.

மாதவியக்கா தன் பெயரில் தனி டாட்.காமும் வைத்திருக்கிறார். சென்று பாருங்கள்.. http://maadhavi.com


அருமைத் தம்பி அத்திரியின் தத்துவ பித்துக்கள்..!

இப்போதெல்லாம் என் அப்பன் முருகன் தினம்தோறும் சோதனைகளைக் கொடுக்கிறானோ இல்லையோ.. என் தம்பி அத்திரி மட்டும் சோதனையைக் கொடுக்கத் தவறுவதில்லை. ஒரு நாளைக்கு தன்னால் முடிந்த அளவுக்கு 5 அல்லது 6 எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி என்னைப் படுத்தியெடுத்துக் கொண்டிருக்கிறான்.

அப்படி வந்த மெஸேஜ்களில் எனக்குப் பிடித்தவை ஒன்று இங்கே :

தாகத்துக்கு தாமிரபரணி..
குளிப்பதற்கு குற்றாலம்..
டைகருக்கு முண்டந்துறை..
ஜெயிலுக்கு பாளையங்கோட்டை..
டேமுக்கு பாபநாசம்..
கரண்ட்டுக்கு கூடங்குளம்..
சிட்டிக்கு நெல்லை..
ஆளைப் புடிக்க அல்வா..
ஆளை முடிக்க அருவா..!

இப்படிக்கு
திருநெல்வேலி பாய்ஸ்..!


பார்த்ததில் பிடித்தது





44 comments:

R.Gopi said...

அசத்தல் கவரேஜ் நியூஸ் தல....

சிவராம்குமார் said...

பாவம் ரஜினி! பிரபலம் ஆனாலே இதுதான் நிலைமை!!! நல்ல வேளை நாமல்லாம் தப்பிச்சோம்... ஹி ஹி

Unknown said...

அண்ணே எல்லாம் நல்லா இருக்கு.தினத்தந்தில் மட்டுமா வந்திருக்கீங்க்க. இந்த மாச காலச்சுவடு
காலச்சுவடு(செப்டம்பர்) பக்கம் 60ல் நீங்கள் எழுதிய "பாணா காத்தாடி" சென்னைத் தமிழ்ப் பற்றி விமர்சனம் வந்திருக்கு. நன்றி.

Indian said...

ரஜினிக்குக் இடது பக்கம் இருக்கும் ஆசாமி யாருங்க?

Indian said...

மாதவி.... அந்தக் கண்கள்!

IKrishs said...

Phototola radhika,Sarathkumar,prathapbothan kooda irukkaraanga pola..

a said...

அண்ணே : புடின் , ராஜபக்சே ஒப்பீடு ......... மிக தெளிவாக / விவரமாக எழுதி இருக்கீங்க...

கண்ணா.. said...

//தாகத்துக்கு தாமிரபரணி..
குளிப்பதற்கு குற்றாலம்..
டைகருக்கு முண்டந்துறை..
ஜெயிலுக்கு பாளையங்கோட்டை..
டேமுக்கு பாபநாசம்..
கரண்ட்டுக்கு கூடங்குளம்..
சிட்டிக்கு நெல்லை..
ஆளைப் புடிக்க அல்வா..
ஆளை முடிக்க அருவா..!

இப்படிக்கு
திருநெல்வேலி பாய்ஸ்..!//

அடடே இது இப்பத்தான் உங்களுக்கு வருதா.... :)))))

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

மேப்படியான் வீட்டு விசேசத்துக்கு அம்மா ஏண்னே வரல. என்ன பிரச்சின?

Ganesan said...

அண்ணே,
மாதவி பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி, போன வாரம் கூட மாதவி எங்க இருக்காங்களோ? நினைத்தேன்.

இந்த fetna விழாவிற்கு அமெரிக்கா போன நம்ம பசங்களாவது மாதவிய பார்த்துட்டு வந்திருந்தால் சந்தோசமாயிருப்பேன்.

அப்படியே, சுமலதா, தீபா, தங்கை நடிகை இந்திரா, இளவரசி இவங்கலெல்லாம் எங்க இருக்காங்கன்னு கண்டுபிடிங்க..

PRINCENRSAMA said...

வணக்கம்.. நேற்று மாலை தான் பார்த்தேன்... சொல்லணும்னு நினைச்சு online வர முடியலை.... வேறென்ன வாழ்த்துகள் தான்... பெயர் வரலைங்கிறதை நானும் பார்த்தேன்.

Kumky said...

நிறைவான செய்தி தொகுப்பு...

நன்றி.

மாதவி ஒங்களுக்கு அக்காவா...?

சந்தேகம்ஸ்..

வடுவூர் குமார் said...

ஒரு வார‌ ப‌திவு ஒரே நாளில்!! ஜ‌மாய்ங்க‌.
நிகில் செய்த‌தில் என்ன‌ த‌வ‌று? புரிய‌வில்லையே.

பித்தன் said...

anne nikil mela enna thappu intha naatula unmaiya sonna thappa....

prabalammaanaale prichchanaithaan. aammaa neengalum ennaip polaththaan pola enakku 12 maniyellaam vidiya kaalamthaan

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...
அசத்தல் கவரேஜ் நியூஸ் தல....]]]

முதல் விரைவான பின்னூட்டத்திற்கு நன்றி கோபி..!

உண்மைத்தமிழன் said...

[[[சிவராம்குமார் said...
பாவம் ரஜினி! பிரபலம் ஆனாலே இதுதான் நிலைமை!!! நல்ல வேளை நாமல்லாம் தப்பிச்சோம்... ஹி ஹி]]]

நிச்சயம் நீங்கள் சொல்வது உண்மைதான் சிவராம்குமார்..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ரவிஷங்கர் said...

அண்ணே எல்லாம் நல்லா இருக்கு. தினத்தந்தில் மட்டுமா வந்திருக்கீங்க்க.

இந்த மாச காலச்சுவடு(செப்டம்பர்) பக்கம் 60ல் நீங்கள் எழுதிய "பாணா காத்தாடி" சென்னைத் தமிழ்ப் பற்றி விமர்சனம் வந்திருக்கு. நன்றி.]]]

ஆஹா.. புது செய்தியா இருக்கே.. தகவலுக்கு நன்றிண்ணே.. இன்னிக்கே பார்த்தர்றேண்..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...
ரஜினிக்குக் இடது பக்கம் இருக்கும் ஆசாமி யாருங்க?]]]

அவரோட மச்சினன் ரவிராகவேந்தர்.. இவரும் நடிகர்தான்..! பார்த்திருக்கீங்களா..?

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...
மாதவி.... அந்தக் கண்கள்!]]]

இதுதான்.. இதேதான்.. மறக்க முடியுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்குமார் said...
Phototola radhika, Sarathkumar, prathapbothan kooda irukkaraanga pola..]]]

ஏன் பிரபு, குஷ்புவே இருக்காங்களே..?

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
அண்ணே : புடின் , ராஜபக்சே ஒப்பீடு ......... மிக தெளிவாக / விவரமாக எழுதி இருக்கீங்க...]]]

உண்மையைத்தாண்ணே எழுதியிருக்கேன்..!

செசன்யாவில் தனி நாடு கேட்டவர்களை அழித்தொழித்துவிட்டார் புடின்..!

அழிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும் என்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[கண்ணா.. said...

//தாகத்துக்கு தாமிரபரணி..
குளிப்பதற்கு குற்றாலம்..
டைகருக்கு முண்டந்துறை..
ஜெயிலுக்கு பாளையங்கோட்டை..
டேமுக்கு பாபநாசம்..
கரண்ட்டுக்கு கூடங்குளம்..
சிட்டிக்கு நெல்லை..
ஆளைப் புடிக்க அல்வா..
ஆளை முடிக்க அருவா..!

இப்படிக்கு
திருநெல்வேலி பாய்ஸ்..!//

அடடே இது இப்பத்தான் உங்களுக்கு வருதா.... :)))))]]]

ஆமாண்ணே.. எனக்கு இது புதுசு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஒரிஜினல் "மனிதன்" said...
மேப்படியான் வீட்டு விசேசத்துக்கு அம்மா ஏண்னே வரல. என்ன பிரச்சின?]]]

நானும் விவரம் தேடிக்கிட்டிருக்கேன். கிடைக்கலை.. கிடைச்சா சொல்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[காவேரி கணேஷ் said...

அண்ணே, மாதவி பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி, போன வாரம் கூட மாதவி எங்க இருக்காங்களோ? நினைத்தேன்.

இந்த fetna விழாவிற்கு அமெரிக்கா போன நம்ம பசங்களாவது மாதவிய பார்த்துட்டு வந்திருந்தால் சந்தோசமாயிருப்பேன்.

அப்படியே, சுமலதா, தீபா, தங்கை நடிகை இந்திரா, இளவரசி இவங்கலெல்லாம் எங்க இருக்காங்கன்னு கண்டுபிடிங்க..]]]

சுமலதா பெங்களூரில் இருக்கிறார். இப்போதும் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். பேஸ்புக்கில் வலம் வருகிறாரே.. கவனிக்கவில்லையா..?

மற்றவர்களை இனி கவனிக்கிறேன்..

வருகைக்கு நன்றி காவேரி..!

உண்மைத்தமிழன் said...

[[[PRINCENRSAMA said...
வணக்கம்.. நேற்று மாலைதான் பார்த்தேன்... சொல்லணும்னு நினைச்சு online வர முடியலை.... வேறென்ன வாழ்த்துகள்தான்... பெயர் வரலைங்கிறதை நானும் பார்த்தேன்.]]]

ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு மிக்க நன்றி தம்பி..!

நம்ம மேட்டரை எடுத்துப் போடுறதே பெரிய விஷயம்.. என்ன சொல்ற..?

உண்மைத்தமிழன் said...

[[[கும்க்கி said...

நிறைவான செய்தி தொகுப்பு...

நன்றி.

மாதவி ஒங்களுக்கு அக்காவா...?

சந்தேகம்ஸ்..]]]

நன்றி கும்க்கி..

மாதவி எனக்கு அக்காதான். என்னைவிட 5 வயது மூத்தவர்..!

உண்மைத்தமிழன் said...

[[[வடுவூர் குமார் said...
ஒரு வார‌ ப‌திவு ஒரே நாளில்!! ஜ‌மாய்ங்க‌. நிகில் செய்த‌தில் என்ன‌ த‌வ‌று? புரிய‌வில்லையே.]]]

நன்றிண்ணே..!

ஒரு சினிமா பி.ஆர்.ஓ.வாக இருந்து கொண்டு திரைப்படத்தின் தன்மை பற்றியோ, வசூல் பற்றியோ, வெற்றி தோல்வி பற்றியோ குறைத்து மதிப்பிடுதல் கூடாது..! நிச்சயம் நிகில் செய்தது தவறுதான்..!

அவருக்குச் சொந்த விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இதனைப் பொதுவில் வைக்கக் கூடாது..!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
anne nikil mela enna thappu intha naatula unmaiya sonna thappa....
prabalammaanaale prichchanaithaan. aammaa neengalum ennaip polaththaan pola enakku 12 maniyellaam vidiya kaalamthaan.]]]

இரவில் வெகுநேரம் முழித்திருந்து வேலை பார்ப்பதால் காலையில் எழுந்திருக்க லேட்டாகிறது..!

உண்மைத்தமிழன் said...

டில்லிபாபு என்னும் சென்னை வாழ் நண்பர் ஒருவரும் போன் செய்து தினத்தந்தி மேட்டரைப் பற்றிச் சொன்னார்..

அவருக்கும் எனது நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

என்னப்பா இது..? 7 ஓட்டு வாங்கியாச்சு.. இன்னமும் பரிந்துரை லிஸ்ட்டல ஏற மாட்டேங்குது..!??

Indian said...

//[[[Indian said...
ரஜினிக்குக் இடது பக்கம் இருக்கும் ஆசாமி யாருங்க?]]]

அவரோட மச்சினன் ரவிராகவேந்தர்.. இவரும் நடிகர்தான்..! பார்த்திருக்கீங்களா..?
//

அவர தெரியுங்க. கருப்பு கலரு சிங்கிச்சான்னு ஒரு போட்டோ இருக்கே. அதுலதான் டவுட்.

Thomas Ruban said...

அருமை அண்ணே...எங்களுக்குக்காக நீங்கள் மெனக்கெட்டு இவ்வளவு விவரங்களை சேகரித்து, பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி அண்ணே...

ராம்ஜி_யாஹூ said...

நிறைய விபரங்கள்.
சினிமா எக்ஸ்பிரஸ் படித்த ஒரு நிறைவு.

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...

//[[[Indian said...
ரஜினிக்குக் இடது பக்கம் இருக்கும் ஆசாமி யாருங்க?]]]

அவரோட மச்சினன் ரவிராகவேந்தர்.. இவரும் நடிகர்தான்! பார்த்திருக்கீங்களா?//

அவர தெரியுங்க. கருப்பு கலரு சிங்கிச்சான்னு ஒரு போட்டோ இருக்கே. அதுலதான் டவுட்.]]]

ரஜினிக்குப் பின்னாடி தனுஷ்.. இடது பக்கத்துல ஐஸ்வர்யா..! இன்னொருத்தர் யாருன்னு தெரியலை..!

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...
அருமை அண்ணே. எங்களுக்குக்காக நீங்கள் மெனக்கெட்டு இவ்வளவு விவரங்களை சேகரித்து, பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி அண்ணே...]]]

நன்றி தாமஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...
நிறைய விபரங்கள். சினிமா எக்ஸ்பிரஸ் படித்த ஒரு நிறைவு.]]]

நன்றி ராம்ஜி ஸார்..!

சி.வேல் said...

"ஆகவே தோழர்களே.. பரஸ்பரம் நண்பர்களையும், மறைமுகமாக தோழமையுடன் உதவுபவர்களையும் மதிப்போம்"

Great

காலப் பறவை said...

கலக்கல்

R. Gopi said...

\\நேற்று விடியற்காலை 10.15 மணிக்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை அருமைத் தம்பி அப்துல்லா போன் செய்து எழுப்பி, “என்னண்ணா தூங்கிட்டிருக்கீங்களா..?” என்று அக்கறையோடு விசாரித்தான். “முழிச்சுதான் இருக்கேன்..” என்று பொய்யாக சொல்லி வைத்தேன்.\\

போன் பண்ணி ஒங்கள எழுப்பிட்டாரு. நீங்களும் பேசிட்டீங்க. அப்ப முளிச்சிடதாத் தானே அர்த்தம். இதுல எது பொய்?

அப்புறம் வேல மெனக்கட்டு போன் பண்ணித் தூங்கற உங்கள எழுப்புறாரு. நான் போன் பண்ணாக்கூட எடுக்க மாட்டேங்கறாரே. இத நீங்கதான் கேக்கணும்.

தினத் தந்தியில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!! காலச் சுவடுலயும் வந்திருக்கீங்க அண்ணே. அது எப்படி ஒரே நேரத்தில் சிற்றிதழ், நாளிதழ் எல்லா இடத்திலும் ஒங்களப் பத்தி எழுதி இருக்காங்க. எனக்கு மெட்ராஸ்ல ஒரு வேலை வாங்கிக் கொடுங்க. வாரக் கடசில ஒங்க கிட்ட வந்து பதிவு எப்படி எழுதுறதுன்னு கத்துக்கறேன்.

pichaikaaran said...

”எனது கட்டுரையில் இருந்து சிற்சிலவற்றை குறைத்து இரண்டு பக்க அளவில் மேட்டராக செய்திருக்கிறார்கள்”
அப்படி குறைக்கலைனா, தினதந்தி முழுக்க உங்க கட்டுரைதான் இருக்கும். பேசாம வாரம் ஒரு முறை உங்க கட்டுரைகளில் ஒன்றை இலவச இணைப்பா கொடுத்து விடலாம் என அவர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்

உண்மைத்தமிழன் said...

[[[சி.வேல் said...

"ஆகவே தோழர்களே.. பரஸ்பரம் நண்பர்களையும், மறைமுகமாக தோழமையுடன் உதவுபவர்களையும் மதிப்போம்"

Great]]]

உண்மைதான் வேல்.. பத்திரிகைகள் இல்லாது போனால் நாமெல்லாம் வலையுலகில் என்ன எழுதுவது..?

உண்மைத்தமிழன் said...

[[[காலப் பறவை said...
கலக்கல்]]]

நன்றி காலப்பறவை ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[இரா கோபி said...

\\நேற்று விடியற்காலை 10.15 மணிக்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை அருமைத் தம்பி அப்துல்லா போன் செய்து எழுப்பி, “என்னண்ணா தூங்கிட்டிருக்கீங்களா..?” என்று அக்கறையோடு விசாரித்தான். “முழிச்சுதான் இருக்கேன்..” என்று பொய்யாக சொல்லி வைத்தேன்.\\

போன் பண்ணி ஒங்கள எழுப்பிட்டாரு. நீங்களும் பேசிட்டீங்க. அப்ப முளிச்சிடதாத்தானே அர்த்தம். இதுல எது பொய்?

அப்புறம் வேல மெனக்கட்டு போன் பண்ணித் தூங்கற உங்கள எழுப்புறாரு. நான் போன் பண்ணாக்கூட எடுக்க மாட்டேங்கறாரே. இத நீங்கதான் கேக்கணும்.]]]

இது எப்பவும் நடக்கிறதுதான் வேல்.. சில சமயம் நான் போன் செஞ்சாலும் கிடைக்கவே மாட்டாரு..!

[[[தினத்தந்தியில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!! காலச்சுவடுலயும் வந்திருக்கீங்க அண்ணே. அது எப்படி ஒரே நேரத்தில் சிற்றிதழ், நாளிதழ் எல்லா இடத்திலும் ஒங்களப் பத்தி எழுதி இருக்காங்க. எனக்கு மெட்ராஸ்ல ஒரு வேலை வாங்கிக் கொடுங்க. வாரக் கடசில ஒங்ககிட்ட வந்து பதிவு எப்படி எழுதுறதுன்னு கத்துக்கறேன்.]]]

வாங்க.. தாராளமா வாங்க.. ஆனால் டெய்லி பீஸ் கொடுக்கணும்.. டீலுக்கு ஓகேவா..?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

”எனது கட்டுரையில் இருந்து சிற்சிலவற்றை குறைத்து இரண்டு பக்க அளவில் மேட்டராக செய்திருக்கிறார்கள்”

அப்படி குறைக்கலைனா, தினதந்தி முழுக்க உங்க கட்டுரைதான் இருக்கும். பேசாம வாரம் ஒரு முறை உங்க கட்டுரைகளில் ஒன்றை இலவச இணைப்பா கொடுத்து விடலாம் என அவர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.]]]

செஞ்சிருவோம்..! நல்ல ஐடியாதான்..!