சினிமா 360 டிகிரி..!

13-03-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அனைத்து சினிமா நிருபர்களையும் நேற்றைய மதிய நேரத்தில் அல்லலோகப்படுத்திவிட்டார்கள் 'அலெக்ஸ் பாண்டியன்' படக் குழுவினர். கிரீன் ஸ்டூடியோ சார்பில் தான் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங்கை நிறுத்த சதி நடக்கிறது என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பொங்கித் தீர்த்துவிட்டார்.

 

சென்ற வாரம்தான் அவருக்கும் அமீருக்கும் இடையில் 'பருத்தி வீரன்' தெலுங்கு டப்பிங் விஷயமாக மோதல் முட்டிக் கொண்டது.. டப்பிங் செய்வதற்காக கதை ஆசிரியருக்கு தரப்பட வேண்டிய பங்குத் தொகை தனக்குத் தரப்படவில்லை என்பதால் படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என்று அமீர் ஹைதராபாத்துக்கே சென்று அங்கேயுள்ள பெப்சி அமைப்பினரிடமும் பேசியும் பலனளிக்கவில்லை. படம் ரிலீஸாகிவிட்டதாம்..! 

அட்வான்ஸ் வாங்கிய தியேட்டர் உரிமையாளர்களிடம் பணத்தைத் திருப்பித் தர ஞானவேல்ராஜா மறுத்ததால், வேறு வழியில்லாமல் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டியிருந்ததாக தெலுங்குத் திரையுலகம் கைவிரித்துச் சொல்லிவிட்டது.. 'அரவான்' படத்திற்காக வசந்தபாலனுக்கு இருந்த 26 லட்சம் ரூபாய் சம்பளப் பாக்கியை ஒரே நாளில் பஞ்சாயத்து பேசி வாங்கிக் கொடுத்த எனக்கு, என் சம்பளத்தை வாங்க முடியவில்லையே என்று பெரிதும் வருத்தப்பட்டார் அமீர்.

இந்த நிலைமையில் 2 நாட்களுக்கு முன்பிருந்தே 'அலெக்ஸ்பாண்டியன்' படப்பிடிப்புத் தளத்தில் லைட்மேன்கள், கேமிரா அஸிஸ்டெண்ட்டுகள், கிரேன் ஆபரேட்டர்கள் மூவரணியாக சேர்ந்து சின்னச் சின்னப் பிரச்சினைகளைச் செய்து வந்திருக்கிறார்கள். நேற்று முதல் நாள் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறப்பு அனுமதி பெற்று ஷூட்டிங்கை வைத்திருந்தும், அரை மணி நேரம் கழித்துதான் ஸ்பாட்டுக்கே வந்திருக்கிறார்கள் தொழிலாளர்கள். நேற்றே பெப்சியுடன் பேசி பணி செய்ய வைத்திருக்கிறார்கள். நேற்று காலை 6 மணி ஷூட்டிங்கிற்கு 10 மணிக்கு பணிக்கு வந்தும், வேலை செய்யக் கூடாது என்று எங்களது சங்கத்தில் சொல்லிட்டாங்க ஸார் என்று தொழிலாளர்களே சொல்லிவிட்டு அமைதியாக ஓரம்கட்டி உட்கார்ந்துவிட மதிய நேரத்தில் கொளுத்தும் வெயிலில் விமான நிலையம் அருகேயுள்ள ஷூட்டிங் வீட்டில் பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டார் ஞானவேல்ராஜா.

 

இன்றைக்கு நடக்கின்ற பல ஷூட்டிங்குகள் மத்தியில் தனது படம் மட்டுமே நிறுத்தப்பட்டிருப்பதால் இதில் உள்குத்து வேலை நடந்திருக்கிறது என்கிறார் ஞானவேல்ராஜா. அமீரிடமும், பெப்சி செயலாளர் சிவாவிடமும் தயாரிப்பாளர்கள் தரப்பின் சார்பில் பேசியிருக்கிறார்கள். எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று அமீர் சொன்னாலும், அவர் மீது பாசப்பிணைப்பில் இருக்கும் தொழிலாளர் சங்கத்தினரே தன்னிச்சையாக செய்திருக்கும் வேலை இது என்கிறார்கள் சிலர்.. பெப்சியின் சார்பில் ஷூட்டிங் தொடரும் என்று வாக்குறுதி அளித்தாலும், இன்று மதியத்திற்கு மேல் நடக்கவில்லை. மட்டன் பிரியாணியோடு அனைவருக்கும் பிரியாவிடை கொடுத்துவிட்டார்கள்..!
வரும் புதன்கிழமை பெப்சி தொழிலாளர்களுடனான இறுதிக் கட்ட சம்பளப் பேச்சுவார்த்தைக்கு போக வேண்டிய சூழலில் இந்தப் பிரச்சினையும் புதிதாகக் கிளம்பியிருக்க, இது இப்போதை முடியாது போலிருக்கிறது...!

-----------------------------

'உடும்பன்' நல்ல கதை. திருடனும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருப்பது.. பள்ளிகளின் படிப்புக் கட்டணக் கொள்ளை.. என்று நல்ல பிளாட்பார்ம் இருந்தது. கருப்பசாமி பாடல் கலக்கலோ கலக்கல். எல்லாம் இருந்தும், எல்லாம் இருந்தும்.. இயக்கம் சரியில்லாமல் படமும் எடுபடாமல் போய்விட்டது.. 

 

இதே கதையை வேறு இயக்கம் தெரிந்த இயக்குநர்களிடம் கொடுத்து எடுக்கச் சொல்லியிருந்தால் நிச்சயம் பெயரும், புகழும் கிடைத்திருக்கும். தயாரிப்பாளர்களில் சிலர் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. “நானே இயக்கம் செய்யணும்னு நினைச்சேன்..” என்கிறார் இயக்குநர்.. நமக்குத்தான் மனசு கேக்க மாட்டேங்குது.. ஒரு நல்ல படத்திற்கான ஸ்கோப் போச்சே என்று..!!!

-----------------------------

'யாருக்கு தெரியும்' படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் ஹீரோயின் சஞ்சனா சிங் போட்டிருந்த காஸ்ட்யூம்ஸை பார்த்தவர்களெல்லாம் நெஞ்சடைத்து போனார்கள்.. கேமிராமேன்களுக்கு மட்டும் கொண்டாட்டமோ கொண்டாட்டம்..! கண்ணால் ஜொள்ளுவிட்டது, பலருக்கும் வாயில் வெளியே வந்தது.. ஆனாலும் அம்மணிக்கு எந்தக் கவலையும் இல்லையாம்.. இதனைவிட கம்மி டிரெஸ்ஸிலெல்லாம் படங்களில் நடித்திருக்கிறாராம்..! ம்.. கன்னடத்துக்காரங்க மச்சக்காரங்கதான்..! 

 

5 பேர் கொண்ட குழுவினர் ஒரு வீட்டுக்குள் சிக்கிக் கொள்கின்றனர். வெளியேற வாய்ப்பே இல்லை.. ஒரு நாள் தாமதமானாலும் உயிர் போகும் அபாயம். எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதையாம்.. ஏதாவது ஹாலிவுட் படம் நியாபகத்திற்கு வந்தால் அதற்கு கொம்பனி பொறுப்பல்ல..!

------------------------------

"செங்காத்து பூமியிலே" படத்தின் இயக்குநர் ரத்னகுமார். சினிமாவுலகில் பழுத்த அனுபவசாலி. பாரதிராஜாவின் கதாசிரியர்களில் ஒருவர். படத்தின் பிரமோஷன் செய்வதற்கு டிவிக்களுக்கு டிரெயிலர், பாடல்கள், படக் காட்சிகளை கொடுத்தால்தான் பேட்டியெடுத்து ஒளிபரப்ப முடியும் என்றதற்கு “அப்படியா..? எத்தனை கேஸட் வேணும்..? அதுல என்னென்ன இருக்கணும்..? எப்போ கொடுக்கணும்..?” என்றெல்லாம் கேட்டு பலருக்கும் பயத்தை வரவழைத்துவிட்டார்..! 

 

இத்தனை வருட அனுபவம் உள்ள இவருக்கே படத்தின் பிரமோஷன் பற்றி தெரியவில்லை என்றால், புதியவர்களைப் பற்றி என்ன சொல்ல..? இதுக்குத்தான் அடிக்கடி சினிமா நிகழ்ச்சிகளுக்கு வரணும்.. கலந்துக்கணும்ன்றது.. படம் ஒரு முறை பார்ப்பது போல் இருந்தும் பெயரெடுக்கவில்லையே என்பதில் அவரைவிட சினிமாவுலகத்தினருக்கே ரொம்பவே வருத்தம்..! 

-------------------------------

டிவிக்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. படங்களின் பிரஸ் மீட்டில் ஒரே விஷயத்தை 15 டிவிக்களின் முன்பும் சொல்ல வேண்டியிருக்கிறது. “அதான் மேடையில பேசுறோமே.. அதை யூஸ் பண்ணிக்குங்களேன்..” என்றெல்லாம் சொல்லிப் பார்க்கிறார்கள் நட்சத்திரங்கள். நோ யூஸ்.. சேனல்கள் கேட்டபாடில்லை. தனிப்பட்ட பேட்டிகள் இருந்தால்தான் மக்கள் மத்தியில் சேனல்களுக்கு மரியாதை இருக்கும் என்று இவர்கள் சொல்ல.. இவங்க போதைக்கு நாம ஊறுகாயா என்று தவிப்பில் இருக்கிறார்கள் பி.ஆர்.ஓ.க்கள்..!

 

இவர்களையும் தாண்டி பத்திரிகை நிருபர்கள், இணையத்தள பத்திரிகை நிருபர்கள், எஃப்.எம்.ரேடியோக்களின் நிருபர்கள் என்று கிட்டத்தட்ட 30 தடவைக்கும் மேல் சொல்லிச் சொல்லி வெறுப்பாகும் நிலைமைக்கு வந்துவிட்டார்கள். தற்போது இணையத்தளங்கள், எஃப்.எம்.களை பிரஸ் மீட்டுக்கு அழைக்காமல் விட்டுவிடலாமா என்று யோசித்து வருகிறார்களாம்..!

 

'தோனி' படத்தின் பிரஸ் மீட்டுக்கு வந்த இசைஞானி, கூட்டத்தை பார்த்ததும் ஐயோ சாமி.. ஆளை விடுங்கப்பா என்று அரங்கத்திற்குள் ஓடிவிட்டார். பின்பு அவர் காலில் விழுகாத குறையாக கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வந்தார்கள். 4 முறை கொஞ்சம் கொஞ்சமாக கேமிராக்களை உள்ளே அனுப்பி ஒரு வழியாக பேட்டியை நிறைவு செய்தார் இசைஞானி. “இசையமைக்கிறதுகூட கஷ்டமில்லப்பா.. உங்க எல்லார்கிட்டேயும் ஒரே விஷயத்தை திருப்பித் திருப்பிச் சொல்றது இருக்கே..” என்று வார்த்தையைக்கூட முடிக்காமல் தனது டிரேட் மார்க் சிரிப்போடு ஓடி தப்பித்தார் இசைஞானி..!

--------------------------

“நான் ஈ” இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியை அப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் சந்தித்தேன்.. “நான் ஈ” படத்தை பற்றி தனக்குத் தெரிந்த தமிழ் மற்றும் சரளமான ஆங்கிலத்தில் விளாசினார். படத்தில் “ஈ”-தான் ஹீரோவாம்.. முற்பிறவிக் கதையாம்..! “ஈ மேல உங்களுக்கு ஏன் ஸார் இவ்ளோ கோபம்?” என்று கிண்டலடித்தபோதும் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார். டென்ஷனாகாத அவருடைய பேச்சும், இயல்பும் பத்திரிகையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.. 

 

படத்தின் பட்ஜெட் 40 கோடி. அதில் 20 கோடியை கிராபிக்ஸுக்கே செலவழித்துள்ளார்கள். படத்தின் தயாரிப்பாளர்கள் பிவிபி கம்பெனி. விக்ரமின் ராஜபாட்டை படத்தைத் தயாரித்து ஓய்ந்தவர்கள். அடுத்து கமல்ஹாசனின் 'விஸ்வரூப'த்தைத் தயாரிக்கிறார்கள். செல்வராகவனின் 'இரண்டாம் உலகமும்' இவர்களது தயாரிப்புதான். பாலாவின் தற்போதைய படத்தையும் தயாரிப்பது இவர்களே.. மிகப் பெரிய துட்டு பார்ட்டி என்பதால் எதற்கும் கவலையில்லை. 

இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது.  சந்தானம், சமந்தா என்ற இரண்டு மார்க்கெட்டிங் ஸ்கில்லுகள் இருப்பதால் ஏக எதிர்பார்ப்பு.. இயக்குநரிடம் கிடைத்த சந்தர்ப்பத்தில் பேசும்போது “தமிழ் டெக்னீஷியன்களை அடிச்சுக்கவே முடியாது. ராத்திரி 3 மணிக்கு எழுப்பி ஷூட் என்று சொன்னாலும் சட்டுன்னு ரெடியாகுறாங்க.. இந்தியால எங்கேயும் இவர்களை மாதிரி பார்க்கவே முடியாது..” என்றார். 

 

என் மனதுக்குள் எப்போதுமே இருக்கும் அந்தக் கேள்வியைக் கேட்டேன். புருவத்தை உயர்த்தினார். உதட்டைப் பிதுக்கினார். “இந்த விஷயத்தையே இப்பத்தான் நான் கேள்விப்படுறேன்.. ஸாரி.. எனக்குத் தெரியலையே. நான் என்ன பதில் சொல்றது..?” என்றார். ம்.. என்னத்த சொல்றது..? 

-----------------------------

படம் ஷூட்டிங்கே ஆரம்பிக்கலை. 'காதல் தீவு' படத்தின் பெயர். அதுக்குள்ள படத்துல நடிச்சவங்களை மட்டும் அறிமுகப்படுத்தி வைக்க ஒரு விழாவையே ஏற்பாடு பண்ணிட்டாங்க. ஸ்லம்டாக் மில்லினியரில் சின்ன வயது ஹீரோயினாக(விபச்சார விடுதியில் நடனமாடும் பெண்) தான்வி லோன்கர் இதில் ஹீரோயினாக அறிமுகம். 14 வயசுதான் இருக்கும்னு நினைக்கிறேன்.. 

 

“கதைக்கு இவங்கதான் பொருத்தமா இருந்தாங்க..” என்றார் இயக்குநர். “திடீர்ன்னு ஒரு நாள் டிவி பார்க்கும்போது இந்தப் பொண்ணு நடிச்ச ஸ்லம்டாக் மில்லினியர் ஓடிக்கிட்டிருந்துச்சு. இப்போ இந்தப் பொண்ணு கொஞ்சம் வளர்ந்திருக்குமே.. நம்ம கேரக்டருக்கு பொருத்தமா இருக்கும்னு பாம்பேவரைக்கும் போய் பிடிச்சிட்டேன்..” என்றார் இயக்குநர். அந்தப் பொண்ணோ, “நான் நடிச்ச கன்னடப் படத்துக்கு இயக்குநர்தான் வசனம் எழுதினாரு. ஷூட்டிங் ஸ்பாட்ல என்னை பார்த்திருக்காரு. அந்தப் பழக்கத்துல அந்தப் பட ஷூட்டிங் சமயத்துலேயே, தமிழ்ல நான் எடுக்குற படத்துக்கு நீதான் ஹீரோயின்னு சொல்லி கூப்பிட்டுட்டு வந்துட்டாரு..” என்றார்..
ஒரு செலக்ஷனுக்கு எத்தனை கதைகளப்பா..???

----------------------------------

வில்லியம் ஷேக்ஸ்பியர்ன்னு ஒரு மெகா எழுத்தாளர் இங்கிலாந்துல இருந்தார்ன்னு உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும். அவர் எழுதுன மெக்பத் என்ற நாடகத்தின் பேரை மட்டும் சின்ன வயசுல இருந்து தெரிஞ்சு வைச்சிருப்பீங்க. அந்த மெக்பத் நாடகத்தை சமீபத்துல டிவி நடிகர்கள் மற்றும் சினிமா இயக்குநர்களை நடிக்க வைச்சு அதையும் ஷூட் செஞ்சிருக்காங்க..! 

 

போஸ் வெங்கட், மு.களஞ்சியம், நடிகர் ஆதி, மீரா கதிரவன் நடிச்சிருக்காங்க.. இந்தக் கதையின் நாயகியான லேடி மெக்பெத்தா ஆக்ட்டிங் கொடுத்திருக்கிறது தமிழச்சி தங்கபாண்டியன். அவங்களோட ஆதர்ச கேரக்டராம் இது.. அதுனால ஆர்வத்துடன் நடிச்சிருக்காங்க.. இந்த நாடகத்தோட டிரெயிலரை வெளியிட்டிருக்காங்க.. இதுவே 21 நிமிஷம் இருக்கு..! முழுசும் வரட்டும் பார்ப்போம்..!

-------------------------------------

'மாயவரம்' படத்தின் இயக்குநர் நேசம் முரளி மகா நம்பிக்கைக்காரர். ஒரு உதாரணம் சொல்லட்டுமா..? 

 

“இந்தப் படம் ரஜினி படத்துக்கு ஈக்குவலா வசூல் அள்ளும் ஸார்.. ஒரு ரஜினி படத்துல என்னென்ன இருக்குமோ அதெல்லாம் இந்தப் படத்துலேயும் இருக்கு. அந்த அளவுக்கு வசூலை அள்ளத்தான் போகுது.. ஏன்னா ரஜினி படத்தோட வசூல் சூட்சுமத்தை நான் கத்துக்கிட்டேன் ஸார்.. அதையேதான் இதுல ஒரு சதவிகிதம்கூட குறைவில்லாம செஞ்சிருக்கேன்..” என்றார்.. தன்னம்பிக்கை தேவைதான்.. ஆனா இந்த அளவுக்கா..?

இது ஒரு பக்கம் இருக்க.. படத்தின் ஹீரோவான இயக்குநர் ஸெல்வன், பாண்டிச்சேரி அருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி உயிர் போய் மீண்டிருக்கிறார். இன்னமும் பேச முடியவில்லையாம்.. பாவம்.. பொழைச்சு வரட்டும்..!

---------------------------------

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென் ஆற்காடு, வட ஆற்காடு, பாண்டிச்சேரி வட்டார சினிமா தியேட்டர் அதிபர்கள் ஒண்ணா கூடி புதுசா ஒரு சங்கத்தை ஆரம்பிச்சிருக்காங்க. ஜிம்கானா கிளப்பில் நடந்த இந்த விழாவைத் துவக்கி வைக்க வந்தாரு சிறுத்தை கார்த்தி. 

காரை விட்டு இறங்கினவரை பார்த்தவுடனேயே விழா ஏற்பாட்டாளர்களுக்கு பொசுக்குன்னு ஆயிப் போச்சு. காலர் வைக்காத டீ ஷர்ட் போட்டு வந்தவரை பார்த்தவுடனேயே ஒரு நிமிஷம் சொக்கிப் போன வரவேற்பாளர்கள், அந்த ஒரே நிமிஷத்துல சுதாரிச்சு, “ஸார்.. ஸார்..” என்று அருகில் ஓடிப் போய் விஷயத்தை உடைக்க.. கார்த்தியின் முகம் போன போக்கை பார்க்கணுமே..? தனது ரெடிமேட் சிரிப்பை உதிர்த்து.. “என்னாங்க இது.. நான் இதுவரைக்கும் கேள்விப்பட்டதே இல்லை..” என்றார். “இல்ல ஸார்.. டீ ஷர்ட், வேஷ்டி கட்டிக்கிட்டு இங்க யாரும் உள்ள வரக் கூடாது.. இது ரொம்ப வருஷமா இங்க இருக்குற ரூல்ஸ். உங்ககிட்ட சொல்ல மறந்திட்டோம்.. ஸாரி..” என்றார்கள். 

 

முன்னாடியே தெரிந்தும், கார்த்தியிடம் சொல்லாத விழா அமைப்பாளர்கள் சங்கடப்பட... கார்த்தியை அப்படியே வெளியே அழைத்து வந்து காரில் அமர வைத்துவிட்டு அவரது சட்டை அளவை குறித்துக் கொண்டு ஒரு டீம் வேறொரு காரில் வெளியில் பறந்தது. அரை மணி நேரத்தில் அவர்கள் கொண்டு வந்த சட்டை.யை அணிந்த பின்புதான் கிளப்புக்குள்ளேயே நுழைந்தார் கார்த்தி.

இந்தக் கதை இப்படியிருக்க.. விழா நடந்த இடத்திற்கு நேர் எதிரே இருந்த நீச்சல் குளத்தில் குட்டியூண்டாக மேலே ஒரு டிரெஸ், கீழே ஒரு டிரெஸ் போட்டுக் கொண்டு 3 குடும்பங்கள், மிதக்கும் தலையணைகளில் இருந்த ரெட் ஒயினை அருந்தியபடியே நீராடிக் கொண்டிருந்த கொடுமையையும் பார்க்க வேண்டியிருந்தது..! 

வாழ்க தமிழகம்..!

---------------------------

இடம். பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோ. அவர் பெரிய நடிகர். கையில் சிகரெட், இன்னொரு கையில் ஸ்கிரிப்ட்டுடன் நின்று கொண்டிருந்தார். தற்செயலாக குனிந்தவர் தனது காலில் ஏதோ ஒட்டியிருப்பதை கவனித்து சலனமடைந்தார். தூரத்தில் புரொடெக்ஷன் மேனேஜருடன் ஏதோ தீவிர டிஸ்கஷனில் இருந்த உதவி இயக்குநரை விசில் அடித்து அழைத்தார். பத்தடி தூரத்திலேயே அரக்கப் பரக்க ஓடி வந்தார் துணை. தனது காலை காண்பித்து “ஏதோ ஒட்டியிருக்குல்ல..” என்றார் நடிகர். துணை இயக்குநரும் பார்த்துவிட்டு “ஆமா ஸார்..” என்றார். “துடைச்சு விடு..” என்றார் நடிகர். கேட்ட மாத்திரத்தில் காருக்கு ஓடிய துணை இயக்குநர் காரில் இருந்து ஒரு துணியை எடுத்து வந்து நடிகரின் முன்னால் தரையில் அமர்ந்து அவர் காலில் ஒட்டியிருந்ததை துணியால் துடைத்துவிட்டு பவ்யமாக எழுந்து போனார். நடிகரும் அடுத்த சிகரெட்டை ஸ்டைலாக பற்ற வைத்தார். 

சினிமாவுலகம் எங்கயோ போகுது..!

இனி இந்த சினிமா 360 அடிக்கடி இங்கே வரும்..! 



31 comments:

முரளிகண்ணன் said...

அண்ணே அருமையா இருக்கு. எந்த சினிமாப் பத்திரிக்கைகளிலும் வராத தகவல்கள். நன்றி

தொடருங்கள். காத்திருக்கிறோம்

Paleo God said...

இனி இந்த சினிமா 360 அடிக்கடி இங்கே வரும்..!//
சைண்டீஸ் அண்ணே சொல்றமாதிரி தனித்தன்மையா இருக்குண்ணே. கலக்குங்க.

போகும்போது ஒரு போன் போட்டீங்கன்னா நானும் வருவேன்ல ஹி ஹி:))

ராஜ் said...

அண்ணே,
ரொம்ப நல்லா இருக்கு. படிக்க ரொம்ப சுவாரிசியமா இருக்கு. கிசுகிசு மாதிரி இல்லாம படிக்க ரொம்ப நல்லா இருக்கு.
என்ன வழக்கம் போல பதிவு கொஞ்சம் (ரொம்ப கொஞ்சம்) நீளம் :), ஆனா அது தான் உங்க டிரேட் மார்க். (Trade mark - வர்த்தகச்சின்னம்)
அடிக்கடி இது மாதிரி எழுதுங்க.

மணிஜி said...

super

Anonymous said...

ஷூ அழுக்கான அப்பாடக்கர் நடிகர் யாருன்னு தெரியல...ஆளுக்கு கொழுப்பு ஜாஸ்திதான்.

பித்தன் said...

//இனி இந்த சினிமா 360 அடிக்கடி இங்கே வரும்..! //

Varanum naangal ellaam waiting.

கிருஷ்ண மூர்த்தி S said...

360 டிகிரி காமிக்கறேன்னு, தமிழ்ப் படங்கள் மாதிரியே சொதப்பி விட்டீர்களே உத! ஷேக்ஸ்பியர் எங்க ஹோமர் இழியட்டுன்னு எழுதினார்! ஹோமர், கிரேக்கப் புராணிகர். இலியட் ஒடிசி என்பது அவர் எழுதிய காவியங்கள்!

தறுதலை said...

ஹிந்தியாவே முடிவு செய்.
தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)

இளம் பரிதி said...

nalla iruku....continue pannunga.....

உண்மைத்தமிழன் said...

[[[முரளிகண்ணன் said...

அண்ணே அருமையா இருக்கு. எந்த சினிமாப் பத்திரிக்கைகளிலும் வராத தகவல்கள். நன்றி. தொடருங்கள். காத்திருக்கிறோம்]]]

ஆஹா.. முதல் பின்னூட்டமே ஊக்குவிக்கிறதே.. அண்ணன் முரளிகண்ணனின் உற்சாகக் குரல் என்னை உசுப்பேற்றுகிறது.. நன்றிகள் அண்ணா..!

உண்மைத்தமிழன் said...

[[[【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

இனி இந்த சினிமா 360 அடிக்கடி இங்கே வரும்..!//

சைண்டீஸ் அண்ணே சொல்ற மாதிரி தனித்தன்மையா இருக்குண்ணே. கலக்குங்க. போகும்போது ஒரு போன் போட்டீங்கன்னா நானும் வருவேன்ல ஹி ஹி:))]]]

இனிமேல் கூப்பிடுறேன்..! வருகைக்கும், உற்சாகக் குரல் கொடுத்தமைக்கும் நன்றி பபாஷா...!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ் said...

அண்ணே, ரொம்ப நல்லா இருக்கு. படிக்க ரொம்ப சுவாரிசியமா இருக்கு. கிசுகிசு மாதிரி இல்லாம படிக்க ரொம்ப நல்லா இருக்கு. என்ன வழக்கம் போல பதிவு கொஞ்சம் (ரொம்ப கொஞ்சம்) நீளம் :), ஆனா அதுதான் உங்க டிரேட் மார்க். (Trade mark - வர்த்தகச் சின்னம்) அடிக்கடி இது மாதிரி எழுதுங்க.]]]

மிக்க நன்றிகள் ராஜ்..! மக்கள்ஸின் ஆதரவு கூடிக் கொண்டே செல்கிறதே..?

உண்மைத்தமிழன் said...

[[[மணிஜி...... said...

super]]]

நெசமாவா..? நன்றிண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

ஷூ அழுக்கான அப்பாடக்கர் நடிகர் யாருன்னு தெரியல... ஆளுக்கு கொழுப்பு ஜாஸ்திதான்.]]]

ம்.. அவருக்கே தெரியணும்.. இல்லைன்றப்போ காலம்தான் அவருக்கு உணர்த்தணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...

//இனி இந்த சினிமா 360 அடிக்கடி இங்கே வரும்..! //

Varanum naangal ellaam waiting.]]]

மிக்க நன்றி பித்தன்ஜி..! ஆதரவு குரல் ஆச்சரியமளிக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[Krishna Moorthy S said...

360 டிகிரி காமிக்கறேன்னு, தமிழ்ப் படங்கள் மாதிரியே சொதப்பி விட்டீர்களே உத! ஷேக்ஸ்பியர் எங்க ஹோமர் இழியட்டுன்னு எழுதினார்! ஹோமர், கிரேக்கப் புராணிகர். இலியட் ஒடிசி என்பது அவர் எழுதிய காவியங்கள்!]]]

தவறுக்கு மன்னிக்கவும் ஸார்.. திருத்திவிட்டேன்..! இதுக்குத்தான் ஒரு ஆசிரியர் வேணும்கிறது..!!!!!

உண்மைத்தமிழன் said...

[[[தறுதலை said...

ஹிந்தியாவே முடிவு செய்.
தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?]]]

அவங்க ஏற்கெனவே கிட்டத்தட்ட முடிவு செஞ்சுட்டாங்க ஸார்.. இத்தாலிதான் வேணும்ன்னு..!

உண்மைத்தமிழன் said...

[[[Elamparithi said...

nalla iruku. continue pannunga.]]]

மிக்க நன்றி இளம்பரிதி..!

Romeoboy said...

சூப்பர் அண்ணா..

உண்மைத்தமிழன் said...

[[[அருண்மொழித்தேவன் said...

சூப்பர் அண்ணா..]]]

மிக்க நன்றி தம்பி..!

kanagu said...

அருமையான தகவல் தொகுப்பு அண்ணா.. எங்கும் படித்த செய்திகளில்லாமல் இருந்தது சிறப்பு... தொடர்ந்து எழுதுங்கள் :) :)

ஸ்ரீகாந்த் said...

ஜாக்கியின் " சான்வேஜ் அண்ட் நான்வெஜ் " மற்றும் cablesankarin " கொத்து பரோட்டா " வை போல உங்கள் சினிமா 360 டிகிரி இருக்கிறது .....களம் தான் சினிமா .....நன்று தொடருங்கள் உங்கள் சினி நற்பணியை .....அப்புறம் ஒரு டவுட் ...நம்ம சினிமா நடிகர்கள் எல்லோருமே பெரிய நடிகர்கள் தான் ....நீங்க சொன்ன அந்த கடைசி செய்தி பெரிய நடிகர் யார்னு எனக்கு மட்டும் சொல்லுங்களேன் .....

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

அருமையான தகவல் தொகுப்பு அண்ணா.. எங்கும் படித்த செய்திகளில்லாமல் இருந்தது சிறப்பு... தொடர்ந்து எழுதுங்கள் :) :)]]]

நன்றி கனகு.. ரொம்ப நாளாச்சு பேசி.. போன் செய்யுப்பா..! என்கிட்ட நம்பர் இல்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீகாந்த் said...

ஜாக்கியின் "சான்வேஜ் அண்ட் நான்வெஜ்" மற்றும் cable sankarin "கொத்து பரோட்டா"வை போல உங்கள் சினிமா 360 டிகிரி இருக்கிறது. களம்தான் சினிமா. நன்று தொடருங்கள் உங்கள் சினி நற்பணியை. அப்புறம் ஒரு டவுட். நம்ம சினிமா நடிகர்கள் எல்லோருமே பெரிய நடிகர்கள்தான். நீங்க சொன்ன அந்த கடைசி செய்தி பெரிய நடிகர் யார்னு எனக்கு மட்டும் சொல்லுங்களேன்.]]]

நன்றி ஸ்ரீகாந்த். நேரில் சந்திக்கும்போது சொல்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீகாந்த் said...

ஜாக்கியின் "சான்வேஜ் அண்ட் நான்வெஜ்" மற்றும் cable sankarin "கொத்து பரோட்டா"வை போல உங்கள் சினிமா 360 டிகிரி இருக்கிறது. களம்தான் சினிமா. நன்று தொடருங்கள் உங்கள் சினி நற்பணியை. அப்புறம் ஒரு டவுட். நம்ம சினிமா நடிகர்கள் எல்லோருமே பெரிய நடிகர்கள்தான். நீங்க சொன்ன அந்த கடைசி செய்தி பெரிய நடிகர் யார்னு எனக்கு மட்டும் சொல்லுங்களேன்.]]]

நன்றி ஸ்ரீகாந்த். நேரில் சந்திக்கும்போது சொல்கிறேன்..!

kanagu said...

/*போன் செய்யுப்பா..! என்கிட்ட நம்பர் இல்லை..!*/

கண்டிப்பா பண்றேன் அண்ணா :)

அகில் பூங்குன்றன் said...

appo Idli vadai pongal sadni sambar - ????

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...

appo Idli vadai pongal sadni sambar - ????]]]

அதுல பாதியைத்தான் இப்படி போடப் போறனே..? அதுவும் வேணுமா..? முடியலப்பா..! ஓவர் வொர்க்கு..!

கோவை நேரம் said...

சும்மா...சுத்தி அடிக்குது 360....நன்றாய் இருக்கிறது.....

உண்மைத்தமிழன் said...

[[[Kovai Neram said...

சும்மா. சுத்தி அடிக்குது 360 நன்றாய் இருக்கிறது.]]]

விமர்சனத்திற்கு மிக்க நன்றிகள் ஸார்..!

Anonymous said...

சினிமா 360 டிகிரி செம கலக்கலான செய்திகளோடு இருந்தது.

யார் அந்த நடிகர்?

உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பகிர்வதன் மூலம் ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.