நவாஸ் ஷெரீப்பின் ஒரு நாள் நாடகம் முடிவு

பரபரப்பாக பாகிஸ்தான் திரும்பிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தான் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க விரும்பியதால் அந்நாட்டிலிருந்து மீண்டும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஒரு நாள் இரவோடு இரவாக ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு சிறைவாசத்தையும் அனுபவித்து சவூதி அரேபிய அரச குடும்பத்தினர் உதவியால் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானிலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேறினார்.

முதலில் சவூதி அரேபியாவில் ஐந்தாண்டுகள் கழித்த அவர் இரண்டாண்டுகளுக்கு முன்பாக லண்டனுக்கு குடியேறினார். முஷாரப்பை வீழ்த்துவதற்காக தனது பரம எதிரி பெனாசிர் பூட்டோவுடன் நல்லுறவு ஒப்பந்தமும் செய்து கொண்டார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான இப்திகார் சவுத்ரியை பதவி நீக்கம் செய்து அதனால் நாடு முழுவதும் மக்களின் எதிர்ப்பலையை சந்தித்த முஷாரப் தன் நிலை ஆட்டம் கண்டு போயுள்ளதை தற்போது உணர்ந்துள்ளார்.

முஷாரப்பை வீழ்த்துவதற்கு இதைவிட வேறு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து கொண்ட நவாஸ் ஷெரீப் இங்கிலாந்து, சவூதி அரேபியா நாடுகளின் நல்லெண்ண கோரிக்கைகளைக் கூட புறக்கணித்து தாய் நாடு திரும்ப முடிவெடுத்தார்.

இதற்கு ஏதுவாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றமும் நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவதில் எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பளிக்க பாகிஸ்தான் அரசியலே சூடுபிடித்துவிட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு லண்டனில் இருந்து பாகிஸ்தான் கிளம்பினார் நவாஸ். கூடவே இங்கிலாந்தின் மீடியா குழுமத்தையும் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு விமானமேறினார்.

முன்னதாக விமானத்திலேயே பேட்டியளித்தபோது "எது நடந்தாலும் நான் இனி பயப்படப் போவதில்லை.." என்று உறுதியாகவே சொன்னார்.

நவாஸ் ஷெரீப்பின் வருகையை முஷாரப்பின் அரசும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாது. ஷெரீப் வந்தால் அவரைக் கைது செய்து சிறையில் வைக்கவும் தயாராக இருந்தது. சிறைச்சாலை முன்னாள் பிரதமருக்குரிய வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

இஸ்லாமாபாத் விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு ராணுவமும், போலீஸ¤ம் முற்றுகையிட்டிருந்தன. நவாஸ் ஷெரீப்பின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் நாஸ¤க்கு ஆதரவாக ஆர்ப்பாட்டமும், கிளர்ச்சியும் செய்தார்கள். கண்ணீர்புகை குண்டு, தடியடி என்று அனைத்துவித போராட்டக் குணங்களும் வெளிப்பட்டன.

இஸ்லாமாபாத் விமான நிலையத்தைச் சுற்றிலும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்போன் வசதியை தடை செய்திருந்தது அரசு. விமான நிலையத்திலும் தொலைபேசி வசதியை நிறுத்தி வைத்திருந்தது உள்துறை அமைச்சகம்.

இவ்வளவு முன்னேற்பாட்டுக்களுக்கிடையே இன்று காலை இந்திய நேரப்படி 9.15 மணிக்கு நவாஸ் ஷெரீப் வந்த விமானம் இஸ்லாமாபாத் விமான நிலையம் வந்தடைந்தது.

ஆனாலும் விமானத்தில் இருந்த பயணிகள் யாரும் இறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்குப் பிறகு நவாஸ் ஷெரீப் தவிர மற்றப் பயணிகளை தரையிறங்க விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.

நிலைமை சர்வதேச மீடியாவின் கவனத்தில் இருந்ததால் சவூதி அரேபிய அரச குடும்பம் தொடர்ந்து முஷாரப்பிடம் பேசியதைத் தொடர்ந்து ஒன்றரை மணி நேர காத்திருத்தலுக்குப் பிறகு நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் மண்ணில் கால் வைக்க அனுமதிக்கப்பட்டார்.

விமான நிலைய விஐபி லவுன்ச்சில் அமர வைக்கப்பட்டார். அங்கு மீடியா குழுவினருக்கு பேட்டியளித்த நவாஸ் "முஷாரப் தவறு மேல் தவறு செய்கிறார். இது அவரது கடைசி யுத்தம்.. அவர் இந்த யுத்தத்தில் தோல்வியடைவது உறுதி. முஷராப்பின் ஈகோதான் எல்லாவற்றுக்கும் காரணம்.." என்றெல்லாம் பேட்டியளித்துள்ளார்.

தொடர்ந்து 2 மணி நேரம் கடந்த பின்பு மேலிட உத்தரவுப்படி பஞ்சாப் மாகாணத்தில் முன்பு நடந்த ஒரு படுகொலையில் நவாஸ¤க்கு சம்பந்தம் இருப்பதால் அவரை அந்த வழக்கின் அடிப்படையில் கைது செய்வதாக ராணுவ உயரதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இப்போதே அவர் மனம் மாறி திரும்பிச் செல்ல விரும்பினால் அவர் அப்படிச் செல்லவும் அனுமதிக்கப்படுவார் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் நவாஸ் ஷெரீப் அதற்கு ஒத்துக் கொள்ளாமல் தான் கைது செய்யப்பட்டாலும் கவலையில்லை. நாட்டிற்குள் செல்வேன் என்று கிளம்பியதைத் தொடர்ந்து மீடியா நெரிசலுக்கிடையில் அவர் கைது செய்யப்படுவதாக அறிவித்து தயாராக காத்திருந்த பஞ்சாப் மாகாண போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பஞ்சாப் போலீஸ் வசம் சென்ற சில நிமிடங்களில் நவாஸ் ஷெரீப்பை பஞ்சாப் மாகாணத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தபோது என்ன பேரம் நடந்ததோ தெரியவில்லை. நவாஸ் ஷெரீப் வெளிநாட்டிற்குச் செல்ல ஒப்புதல் அளிக்க ஹெலிகாப்டர் இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்குத் திரும்வும் கொண்டு வரப்பட்டு, அங்கு தயாராக இருந்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் விமானத்தில் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வகையில் ஒரு நாள் உலக மீடியாக்களை பரபரப்புக்குள்ளாக்கிய நவாஸ் ஷெரீப்பின் கவர்ச்சி நாடகம் முடிவுக்கு வந்துள்ளது.

இதற்கிடையில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் நவாஸ் ஷெரீப்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி சொல்லியிருக்கிறதாம்..

இப்போதைக்கு இந்த மட்டோடு முஷாரப் திருப்தி பட்டிருப்பார். இனிமேல்தான் நிஜ சோதனையே அவருக்குக் காத்திருக்கிறது.

அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக புதிய ஜனாதிபதி தேர்தலை அவர் சந்தித்தாக வேண்டும். கூடவே நவாஸ் ஷெரீப்பின் இந்த வீரச் செயலால் பாகிஸ்தான் முழுவதும் நவாஸ் ஷெரீப்பின் எண்ண அலைகள் அடிப்பதை பெனாசிர் பூட்டோ புரிந்து வைத்திருப்பார். அடுத்த டர்ன் அவருடையதுதான்..

அவரும் அநேகமாக இந்த மாதக் கடைசியில் நாடு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இன்னொரு நாடகமும் நடந்தேறும்.

முஷாரப்புக்கு பாகிஸ்தான் மக்களிடமும், வெளிநாடுகளிடமும் ஆதரவு குறைந்துவிட்டது என்பதால்தான் முஷாரப்பால் ஜியாவுல்ஹக்கை போல் துணிச்சலான ஒரு முடிவை இந்த இரண்டு முன்னாள் பிரதமர்கள் விஷயத்தில் எடுக்க முடியவில்லை என்று பாகிஸ்தான் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

3 comments:

மாசிலா said...

வழக்கம்போல் சுவைபட விறுவிறுப்பாக எழுதியிருக்கிறீர்கள் உண்மைத் தமிழன்.

அண்டை நாடான பாக்கிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டியது இந்தியாவிற்கு அவசியமான விடயமும் கூட.

அனைத்தும் விரைவில் நல்ல முடிவுக்கு வரும் என நம்புவோம்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

உண்மைத்தமிழன் said...

//மாசிலா said...
வழக்கம்போல் சுவைபட விறுவிறுப்பாக எழுதியிருக்கிறீர்கள் உண்மைத் தமிழன். அண்டை நாடான பாக்கிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டியது இந்தியாவிற்கு அவசியமான விடயமும் கூட. அனைத்தும் விரைவில் நல்ல முடிவுக்கு வரும் என நம்புவோம். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.//

நன்றி மாசிலா.. அவ்வளவு சீக்கிரம் பாகிஸ்தானில் அமைதி திரும்பாது என்றே நான் நினைக்கிறேன். முஷாரப் தன் எதிர்காலத்தை எண்ணி கலங்கிப் போயிருக்கிறார்.

ந்தவொரு சர்வாதிகாரியும் நிம்மதியாகச் செத்ததாக சரித்திரமே இல்லையே மாசிலா.. அதுதான் காரணம்..

abeer ahmed said...

See who owns my-www.ru or any other website:
http://whois.domaintasks.com/my-www.ru