காதல் கண் கட்டுதே - சினிமா விமர்சனம்

19-02-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

Montage Media Production நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்தப் படத்தில் சிவா ஹீரோவாகவும், அதுல்யா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் சிவராஜ் ஹீரோவின் நண்பனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இசை – பவன், ஒளி கலவை – ராஜ் மோகன், பாடல்கள் – மோகன் ராஜா, ஒளிப்பதிவு, எழுத்து, படத் தொகுப்பு, இயக்கம் – சிவராஜ். தயாரிப்பு – தேவா, சிவராஜ்.

ஹீரோ சிவா படித்து முடித்துவிட்டு வேலை தேடி வரும் வாலிபர். ஹீரோயின் அதுல்யா ‘தினக்கதிர்’ என்ற பத்திரிகையில் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பணிமாற்றலாகி வருகிறார்.
இருவரும் முதலில் நண்பர்களாக சந்தித்து பேசி, பழகி இப்போது ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் தவிக்கும் அளவுக்கு வந்த பின்பு, தாங்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறோம் என்பதை புரிந்து கொள்கிறார்கள்.
ஹீரோவுக்கு வேலையில்லாமல் இருப்பது ஒரு பெரும் குறையாக இருக்கிறது. செலவுக்கு காதலியிடமே பணம் கேட்கும் லெவலில் இருக்கிறார். இதனால் ஹீரோவின் நண்பரான சிவராஜ், தான் வேலை பார்க்கும் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் ஹீரோவை வேலைக்கு சேர்த்துவிடுகிறார்.
இந்த நேரத்தில் பத்திரிகை அலுவலகத்தில் ஹீரோயினுடன் வேலை செய்யும் சக பத்திரிகையாளர் அதுல்யாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளலாமா என்றும் கேட்க அதுல்யா அதிர்ச்சியாகிறாள். ஆனால் அவள் அதை நிராகரித்துவிட்டு இந்தச் சம்பவத்தை ஹீரோவிடம் சொல்லியும் விடுகிறாள்.
ஊடலும், கூடலுமாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் நிரந்தரமாக பிரியும் சூழலுக்கு காதலர்கள் வருகிறார்கள். ஹீரோயின் தன்னிடம் பொய் சொல்லிவிட்டு அதே பத்திரிகையாளருடன் பைக்கில் செல்வதை பார்க்கும் ஹீரோ சிவா கோபப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட.. இருவருக்குள்ளும் ரசாபாசமாகி மோதல் வெடித்து தற்காலிகமாக காதலுக்கு குட்பை சொல்கிறார்கள்.
இனி அந்தக் காதல் என்ன ஆனது..? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பது இளைஞர்களை கவரும்வகையில் அமைக்கப்பட்டிருக்கும் படத்தின் திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கும் கதையாகும்.
படத்தின் இயக்குநர் குறும்பட இயக்குநர் போலிருக்கிறது. அதன் தன்மை மாறாமல் ஆனால் சிறப்பான இயக்கத்தில்… மிகக் குறைந்த பட்ஜெட்டில்… அழகாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
முற்றிலும் புதுமுகங்களுடன் இப்படியொரு படத்தை இயக்கிக் கொடுத்திருக்கும் அவரை நிச்சயமாக நாம் பாராட்டியே ஆக வேண்டும். முதல் காட்சியிலேயே ‘நீ வாயை மூடு.. நீ மூடு’ என்று மகள்கள் இருவரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருக்க அப்போது அங்கே வரும் அம்மா ‘மொதல்ல ரெண்டு பேரும் மூடுங்கடி’ என்று சொல்ல.. தியேட்டரே அதிர்கிறது. இந்த ஒரு காட்சியே போதும் இயக்குநரின் இயக்கத் திறமைக்கு..!
காதலை மையப்படுத்திய கதை என்பதால் கொஞ்சம், கொஞ்சம் காதலர்களுக்கு பிடித்தமான வகையில் திரைக்கதை அமைத்து, வசனங்களையும் எழுதி கவர்ந்திழுத்திருக்கிறார் இயக்குநர் சிவராஜ்.
அம்மாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்திருக்கும் நிலைமையிலும் நண்பி அழைத்தவுடன் ஓடி வருவதும்.. இன்றைக்குச் சொல்லியே விடலாம் என்கிற நினைப்பில் ஒற்றை ரோஜாவை வைத்துக் கொண்டு காதலைச் சொல்வதும்.. அதற்கு காதலியின் ரிப்ளையும் செம க்யூட்.. காதலை கொண்டாடாதவர்களுக்குக்கூட அந்த சிச்சுவேஷன் நிச்சயமாக பிடிக்கும்.
ஹீரோயினின் அப்பா பாசம்.. அப்பாவின் பைக் மீதிருக்கும் இனம் புரியாத நேசத்தில் அந்த பைக்கை கற்றுக் கொண்டு அலுவலகத்திற்கு அதிலேயே வருவது.. என்று ஒரு சின்ன சோகத்தைக்கூட இயல்பாக திரையில் காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
காதலியிடமே காசு வாங்க ரோஷம் பார்த்துவிட்டு பின்பு வாங்கிக் கொள்வது.. காதலினால் விளைந்த பொஸிஸ்னெவ்ஸை வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல் தவிப்பது.. காதலைச் சொன்ன அதே டிரஸ்ஸை டிஸ்ஸால்வ் செய்த அன்றும் அணிந்திருக்க… இதனை காதலி சுட்டிக் காட்டும் இடம்.. கடைசியில் எத்தனை மறைத்தாலும் காதலை மறைக்க முடியாமல் இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலேயே அவரவர் வீடுகளின் வாசலில் வந்து நிற்கின்ற அந்த அழகு..! ஸோ ஸ்வீட் என்று கொண்டாட தோன்றுகிறது இயக்குநரை..!
ஹீரோ சிவா தமிழ்த் திரையுலகத்திற்குக் கிடைத்திருக்கும் இன்னுமொரு ரோமியோ என்று உறுதியாகச் சொல்லலாம். அத்தனை அழகாகவும், இயல்பாகவும் நடித்திருக்கிறார். ஹீரோயினும் அழகில் குறைவில்லை. அவருடைய கண்களும் சில காட்சிகளில் நடித்திருக்கின்றன. சில, பல குளோஸப் காட்சிகள் ஹீரோயினுக்காகவே வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.
இவர்களைவிடவும் ஹீரோவுக்கு நண்பனாக நடித்திருக்கும் சிவராஜும், இன்னொரு ஊமை நண்பனாக நடித்திருப்பவரும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். சில இடங்களில் வசனங்களே பெரும் சிரிப்பை வரவழைக்கின்றன. தண்ணியடித்துக் கொண்டே.. சிக்கன் சாப்பிட்டுக் கொண்டே… தன் அம்மாவிடம் ‘அதையெல்லாம் செய்ய மாட்டேன்’ என்று சத்தியம் செய்து சொல்லும் இயக்குநர் சிவராஜின் நடிப்புக்கு ஒரு ஷொட்டு..! அதேபோல் ஹீரோயினின் அம்மாவும்.. சினிமாட்டிக் முகம் என்று அவரைச் சொல்லலாம்.
சிவராஜின் ஒளிப்பதிவு துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் படத்தை கலர்புல்லாக காட்டியிருக்கிறது.  ஹீரோயினின் அழகை இன்னும் மெருகேற்றி காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். பவனின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும் அது ஒரு முறைதான் என்பதில் மட்டுமே வருத்தம் மேலிடுகிறது.
ஆனால் பாடல் காட்சிகளின் அனைத்து மாண்டேஜ் ஷாட்டுகளும் அழகானவை. ரம்மியமானவை. பின்னணி இசையை உறுத்தாத அளவுக்கு கொண்டு வந்து இயக்குநருக்கு கை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.
இக்கால இளைஞர்களின் வாழ்க்கையை ரொம்பவுமே யதார்த்தமாகவே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அனைத்து கதாபாத்திரங்களுமே புதுமுகங்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
காலம் காலமாகச் சொல்லப்படும் காதல் கதைதான்.. காதலர்களின் ஊடல், மோதல், கூடலைத்தான் இந்தப் படம் சொல்கிறது என்றாலும்… ஒரு நிமிடம்கூட சொல்ல வந்த விஷயத்தில் இருந்து பிறழாமல் திரைக்கதையை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.
தன்னுடைய அழுத்தமான இயக்கத்தினால் ‘படத்துல ஏதோ சொல்லியிருக்காங்கப்பா’ என்று சாதாரணமாக படம் பார்க்க வந்தவர்களைக்கூட சொல்ல வைத்திருக்கிறார் இயக்குநர்.
இதுவே இயக்குநருக்குக் கிடைத்த வெற்றி..! காதலர்களுக்கும் கிடைத்த வெற்றிதான்..!

0 comments: