ரம் - சினிமா விமர்சனம்

19-02-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘ஆல் இன் பிச்சர்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
‘வி.ஐ.பி.’ படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்த ஹரிஷிகேஷ், சஞ்சிதா, மியா ஜார்ஜ், விவேக், நரேன், அம்ஜத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் சாய் பரத் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

நாயகன் ரிஷிகேஷ், அம்ஷத், அர்ஜுன் சிதம்பரம், சஞ்சிதா ஷெட்டி, இவர்களுடன் விவேக்கும் சேர்ந்து கொள்ள.. இந்த டீமே ஒரு ஸ்மால் கொள்ளையர் டீம். அவ்வப்போது ஏதாவது, எங்கேயாவது கொள்ளையடித்து வாழ்வாங்கு வாழ்வார்கள்.
இவர்களின் இந்த திருட்டு வேலைக்கு வேலூர் இன்ஸ்பெக்டரான நரேனும் உடந்தை. கிடைத்த பணத்தில் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக நரேனுக்கும் ஒரு பங்கினை கொடுத்துவிடுவது இவர்களது வாடிக்கை.
இந்த முறை ஒரு பெரிய தொகையை கொள்ளையடித்துவிட்டு இந்தப் பொது வாழ்வில் இருந்து வாலண்டரி ரிட்டையர்ட்மெண்ட் வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
பண்டைய வாழ்க்கைச் சூழலில், போர்க்களத்தில் மாண்டவர்களின் உடல் இருந்த இடத்தின் அருகே மெர்க்குரி ஸ்டோன் எனப்படும் கற்களையும் ஒரு எலுமிச்சம் பழத்தையும் புதைத்து வைப்பது பழக்கம் என்றும்.. இதனால் மாண்டவர்களின் ஆத்மா சாந்தியாகும் என்ற நம்பிக்கை இருந்த்தாம்.
அந்த மெர்க்குரி ஸ்டோன்ஸ் இப்போதைய உலகத்தில் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கிறது என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக இந்தக் குழுவினருக்குத் தெரிய வருகிறது. அந்தக் கற்கள் 3-னை போலீல் பாதுகாப்புடன் வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப் போகிறார்கள் என்பது இன்ஸ்பெக்டர் நரேன் உதவியுடன் தெரிந்து கொள்கிறது ஹரிஷிகேஷ் டீம்.
சொதப்பாமல் அந்தக் கற்களை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார்கள். அதன்படியே செயல்பட்டு கச்சிதமாக 3 கற்களையும் திருடிவிட்டு எஸ்கேப்பாகுகிறார்கள். வழக்கமாக நரேனை சந்தித்து பாகம் பிரிக்கும் வேலையைத் தொடங்குவதற்கு பதிலாக.. எத்தனை நாளைக்குத்தான் அவனுக்கு கமிஷன் கொடுப்பது.. இந்த முறை கொடுக்காமல் நழுவிவிடலாம் என்று நினைக்கிறான் ஹரிஷிகேஷ்.
இதற்காக குழுவில் இருக்கும் அர்ஜூன் சிதம்பரத்திற்கு தெரிந்த ஏலகிரி மலையில் இருக்கும் ஒரு பங்களாவிற்கு வந்து சேர்கிறார்கள்.
அந்த பங்களாவிலோ ஏற்கெனவே நரேனால் படுகொலை செய்யப்பட்ட அப்பா, மகள், மகன் என்று மூன்று பேய்கள் தங்களது ஆத்மா சாந்தியாகாமலும், நரேனை பழி வாங்கவும் துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில் நரேனுடன் தொடர்புடைய இந்த கொள்ளையர் கூட்டம் வீட்டுக்குள் வந்துவிட.. பேய்களுக்கும், இவர்களுக்குமான ஆட்டம் துவங்குகிறது. கடைசியில் பேயிடம் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படமே..!
நாயகன் ஹரிஷிகேஷ் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்தவர். இதில் தனி ஹீரோவாகும் ‘வெறி’யுடன் படத்தில் நடித்திருக்கிறார். எந்தக் காட்சியிலும் தப்பித் தவறிகூட நல்லா நடிச்சிருக்கார் என்று நாம் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பது மாதிரியேதான் நடித்திருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷனை வைத்துக் கொண்டு படத்தில் விவேக்கே கிண்டல் செய்வதை ஊர்ஜிதப்படுத்தும்விதமாக இருக்கிறது இவரது நடிப்பு. ‘இவன் வேற, எல்லாத்துக்கும் ஒரே எக்ஸ்பிரஷனைக் காட்டிக்கிட்டு!’’ என்று ஒரு காட்சியில் ஹரிஷிகேஷை கிண்டல் செய்வார் விவேக். உண்மையில் அது கிண்டல் இல்லை. யதார்த்தமான உண்மையே அதுதான்.
அம்ஷத், அர்ஜூன் சிதம்பரம், விவேக் ஆகியோரில் விவேக்கே மொத்தப் படத்தையும் தன் முதுகில் சுமந்திருக்கிறார். அவருடைய டைமிங் காமெடிக்கள் மட்டும் இல்லையெனில் இந்தப் படத்தில் முழுமையாக உட்கார்ந்திருக்கவே முடியாது. அப்படியொரு திரைக்கதை, இயக்கம். நல்லவேளையாக விவேக்குதான் ரசிகர்களை காப்பாற்றியிருக்கிறார்.
அதிலும் சரவெடியாக அவர் வெடிக்கும் சில வசனங்களே புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியைத் தருகிறது.
‘என்னடா விஜய் – அஜித் ஃபேன்ஸ் மாதிரி சண்டை போட்டுக்கிறீங்க, இது ரோடா இல்லை ஃபேஸ்புக்கா..?’
‘இவன் போலீஸா, பிரஸ்ஸா இல்ல… மீம்ஸ் போடுறவனானு தெரியலையே..!’
‘நல்லா எம்.சி.ஆர் வேட்டிய கட்டிக்கிட்டு மோகன்லால் மாதிரி ஒரு உருவம் வந்து துவம்சம் பண்ணிடுச்சுடா…’
‘650 ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியாடா… இந்த எலுமிச்சை பழத்தால ஓடப் போகுதுன்னு கேட்டவன்டா நானு. ஏதோ பேய் சீஸன்ல வந்து நானும் உங்ககிட்ட மாட்டிக்கிட்டு, இந்தக் கஷ்டத்தை எல்லாம் அனுபவிக்கிறேன்’ என்று இறுதியில் விவேக் சொல்லும் இந்த நச்சு டயலாக் படம் பார்க்க ரசிகனுக்கும் சேர்த்தே விவேக் சொன்னதாகவே எடுத்துக் கொள்ளலாம்..!
நரேன் முகமூடிக்கு பிறகு மீண்டும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பெரிய அளவில் நடிப்புக்கு ஸ்கோப் இல்லையென்பதால் வேறு எதுவும் சொல்வதற்கில்லை.
அர்ஜூன் சிதம்பரத்தைவிடவும் பேச இயலாதவராக வரும் அம்ஷத் கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார். நடிப்பில் கொஞ்சம் கவனிக்கவும் வைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் என்று இரு கதாநாயகிகள். படம் முழுக்க அரைக்கால் டவுசர் போட்டுக் கொண்டு அந்த இரவு வேளையில் கெட்ட ஆட்டம் போடுகிறார் சஞ்சிதா ஷெட்டி. மியா ஜார்ஜ் படத்தின் பிற்பாதியில் வெயிட்டான ரோலை செய்திருக்கிறார்.
விக்னேஷ் விசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. படத்தின் முக்கால் பாகம் இருட்டிலேயே நடைபெறுவதால் மிரட்டுவதற்கு கேமிரா மிகப் பெரிய பங்களிப்பை செய்திருக்கிறது. ஒளிப்பதிவில் குறைவில்லைதான். அதேபோல் படத் தொகுப்பாளரும் தனது வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார். பல இடங்களில் பயமுறுத்தியிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் படத் தொகுப்பாளர்தான். பாராட்டுக்கள்.
அனிருத்துக்கு இசையறிவு குறைஞ்சிருச்சு போலிருக்கு. இளையராஜாவின் புகழ் பெற்ற பாடலான ‘சங்கத்தில் பாடாத கவிதை’ பாடலின் இசையை படத்தின் முற்பாதியில் பல இடங்களில் பின்னணி இசையாக பயன்படுத்தியிருக்கிறார். இதுல இவர்தான் சிறந்த இசையமைப்பாளர்ன்னு அவரே சொல்லிக்கிறாரு.. பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நிறைவை கொடுத்திருக்கின்றன.
பார்த்து, பார்த்து சலித்துப் போன பேய் படங்களில் இதுவும் ஒன்றே..! பயமுறுத்தப்படும் ஒரு சில காட்சிகளைத் தவிர மற்றவைகளில் எந்த புதுமையும் இல்லை. டெம்ப்ளேட்டான திரைக்கதை என்பதால் அடுத்து என்ன நடக்கும் என்பதை நாமளே சொல்லிவிடலாம் போலிருக்கிறது.
நகைச்சுவையை இன்னமும் அதிகம் கலந்திருக்கலாம். திரில்லரையும் கூட்டியிருக்கலாம்.. இறந்து போன ஆத்மாக்களின் சாவுகளின்போது ரசிகனுக்குள் புகுந்திருக்க வேண்டிய அனுதாப உணர்வு இதில் மிஸ்ஸிங் என்பதால் பேய்கள் ரசிகர்களை அதிகம் கவரவில்லை என்பதுதான் உண்மை.
மொத்தத்தில் இந்த ‘ரம்’ பாதியளவுதான் ‘கிக்’கினை ஏற்றியிருக்கிறது. 

0 comments: