பகடி ஆட்டம் - சினிமா விமர்சனம்

19-02-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை மரம் மூவீஸ் மற்றும் பரணி மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் டி.எஸ்.குமார் மற்றும் கே.ராமராஜ் தயாரித்துள்ளனர்.
இதில் ரகுமான், அகில்,  கவுரி நந்தா, சுரேந்தர், மோனிகா, ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். ராம் கே.சந்திரன் எழுதி இயக்கியிருக்கிறார். 

செல்லமாக கஷ்டம் தெரியாமல் வளர்க்கப்படும் பையன்கள்.. எப்படியெல்லாம் கெட்டு சீரழிகிறார்கள் என்பதை இப்போதைய செய்தித் தாள்களை புரட்டிப் பார்த்தே தெரிகிறது. பல பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் வசதி, வாய்ப்புகள் கைகளில் இருப்பதாலேயே உலகத்தையே தங்கள் காலடியில் போட்டு வைத்திருப்பதுபோலவே நடந்து கொள்வார்கள்.
காதல் என்கிற பெயரில் பெண்களுடன் பழகுவது.. உறவு கொள்வது.. பின்பு கழட்டிவிடுவது என்பதையெல்லாம் இப்போது மிக எளிதாக, இதுதான் இப்போதைய டிரெண்ட்  என்பதுபோல செய்கிறார்கள். இவர்களது இந்த வெளிப்படையான கற்பழிப்பினால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் வாழ்க்கைக் கதைதான் இந்த பகடி ஆட்டம்.
நாயகன் சுரேந்தர் பணக்கார அப்பாவான நிழல்கள் ரவி, சுதாவின் ஒரே மகன். கல்லூரியில் படிக்கிறான். ஆனாலும் பெண்கள் விஷயத்தில் மிகத் தீவிரமானவன். யாரையாவது பிடித்துவிட்டால் அந்தப் பெண்ணை ஏமாற்றி அடைய வேண்டும் என்று நினைக்கும் கொடூரமானவன். தான் செய்வதை தவறு என்றே உணராத அளவுக்கு இருக்கிறான்.
பல பெண்களுடன் பழகி வருவதால் அவர்களது பெயர்களை தனது செல்போனில் ஐஸ்கிரீம், சாக்லேட், அம்மா, அப்பா, பாப்கார்ன் என்று விதம்விதமான பெயர்களில் பதிவு செய்து வைத்து தனது அம்மா, அப்பாவை ஏமாற்றியும் வருகிறான்.
சுரேந்தர் ஒரு நாள் தனது காதலியைப் பார்க்க அவசரமாக செல்லும்போது வழியில் யாரோ முகம் தெரியாத சிலரால் கடத்தப்படுகிறான். சில மணி நேரங்கள் கழித்து அவன் முழித்துப் பார்க்கும்போது ஒரு மரப் பெட்டிக்குள் அவன் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
அந்த பெட்டிக்குள் ஒரு சிறிய பழைய மாடல் செல்போனும், லைட்டரும் மட்டுமே இருக்கிறது. செல்போனில் அவுட் கோயிங் தடையாகியிருக்கிறது. இன்கமிங் மட்டுமே.. அந்த செல்போனில் லைனுக்கு வரும் ஒரு ஆள் அவனது ஆண் உறுப்பை அவனே அறுத்துக் கொடுத்தால் அவனை அந்தப் பெட்டியில் இருந்து விடுவிப்பதாகச் சொல்கிறான்.
இப்போதுதான் தன்னால் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு பெண்தான் தன்னை இந்தக் கதிக்கு ஆளாக்கியிருப்பதாக உணர்கிறான் சுரேந்தர். அந்தப் பெண் கெளசல்யா என்னும் மோனிகா.
அரசுப் பள்ளியில் ப்ளஸ் டூ வகுப்பில் 1100 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக வரும் மோனிகாவுக்கு அம்மா, அக்கா, அண்ணன், அண்ணி உள்ளனர். அவளது அக்காவான கவுரி ந்ந்தா ஆட்டோ ஓட்டி குடும்பத்தை சமாளிக்கிறார். அண்ணன் செல்போன் ரிப்பேர் கடை வைத்திருக்கிறார்.
மோனிகா நன்றாக படிப்பதால் இவரையாவது படிக்க வைப்போம் என்று நினைத்து கல்லூரியில் சேர்த்துவிடுகிறார்கள். அங்கேதான் தனது நண்பியால் சுரேந்தருக்கு அறிமுகமாகி பின்பு அவனுடன் காதலாகிவிடுகிறாள் மோனிகா.
இதையறியும் கவுரி தனது தங்கையை கண்டிக்கிறாள். சற்று முழித்துக் கொள்ளும் மோனிகா.. காதலை தியாகம் செய்ய முனையும்போது வழக்கமான தீவிரமான காதலன்போல் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி அவளுடன் பழகுகிறான் சுரேந்தர்.
ஒரு நாள் அவனது அப்பா, அம்மா வீட்டில் இல்லாத நேரத்தில் மோனிகாவை வீட்டுக்கு வரவழைத்து தனது தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறான். இந்த வேட்டையை செல்போனில் படமும் பிடித்து வைத்துக் கொள்கிறான். இதையறியும் மோனிகா அந்த படத்தை அழிக்கும்படி நேரில் வந்து அழுது, கெஞ்சி கேட்கிறாள். சுரேந்தர் மறுக்கிறான். இதனால் கவலையடையும் மோனிகா அவசரப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
இந்த மோனிகாவால்தான் தான் இந்த நிலைமைக்கு வந்திருப்பதாக நினைக்கிறான் சுரேந்தர். அதே நேரம் சுரேந்தர் காணாமல் போய்விட்டதாக போலீஸுக்கு தகவல் வர.. துணை கமிஷனரான ரகுமான் களத்தில் இறங்குகிறார்.
அவர் விசாரிக்க.. விசாரிக்க.. சுரேந்தர் பற்றிய ஏடாகூடா தகவல்கள் அனைத்தும் அவருக்குத் தெரிய வருகிறது. முடிவு என்ன..? பெட்டியில் இருந்து சுரேந்தர் மீட்கப்பட்டானா..? யார் அவனை கடத்தி வைத்திருந்தது..? என்பதையெல்லாம் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்களேன்..!
ஸ்பெயின் நாட்டு படமான Buried என்கிற திரைப்படத்தின் தழுவல்தான் இது. இந்தப் படத்தின் கதைக் கருவைக் கையாண்டு ஏற்கெனவே இரண்டு தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் இந்தப் படத்தில்தான் முறைப்படி டைட்டிலில் பெயர் போடப்பட்டு நன்றி சொல்லியுள்ளார்கள். அந்த வகையில் நேர்மையாக ஒத்துக் கொண்டமைக்காக இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நமது நன்றிகள்.
சுரேந்தர் புதுமுகம். தன்னுடைய வயதுக்கேற்ற கேரக்டர் என்பதால் அதனை உணர்ந்து, அனுபவித்து நடித்திருக்கிறார். இவரை வில்லனாக பாவிக்க ஒரேயொரு காட்சி மட்டுமே உண்டு என்பதால் அத்தனை ரணமாக நம் மனதில் பதியாமல் போய்விட்டார்.
ஹீரோயினான மோகினி நல்ல அழகி. கண்களே பேசுகின்றன. இவரும் அதே வயதில்.. அந்த வயதுக்கேற்ற கேரக்டர் ஸ்கெட்ச்சுடன் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். இவரைவிடவும் இவரது அக்காவாக ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடித்திருக்கும் கவுரி நந்தாவுக்கு மிகப் பெரிய பொக்கே ஒன்றை கொடுக்கலாம். அழுத்தமான வேடம்.
தங்கையிடம் காண்டம் பாக்கெட்டை கொடுக்கும் காட்சியிலும், அடுத்து அவர் பேசும் வசனங்களும் உறுதியானவை. கிளைமாக்ஸில் ரகுமானிடம் முடிஞ்சா கண்டுபிடிச்சுக்குங்க என்று சவால் விட்டு தைரியமாக நிற்கும் காட்சியில் சபாஷ் போட வைத்திருக்கிறார்.
டிபிக்கல் அம்மாவாக ராஜஸ்ரீ, நிழல்கள் ரவி, சுதா என்று தங்களது கேரக்டர்களை உணர்ந்து நடித்தருந்தாலும் துணை கமிஷனரான ரகுமான் இன்னொரு பக்கம்.. இடைவேளைக்கு பின்னான கதையை நன்கு நகர்த்த உதவியிருக்கிறார்.
வீட்டில் அம்மா, அப்பா எத்தனை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். இதனை உணராமல் அவர்களை ஏமாற்றி ஊரைச் சுற்றி வருகிறார்களே என்று ரகுமான் பேசும் பல வசனங்கள் சாட்டையடி..
”எதுக்கும் தயாரான பொண்ணுகளை என்ன வேண்ணாலும் பண்ணித் தொலைங்கடா. படிக்க வர்ற பொண்ணுங்களையாச்சும் படிக்க விடுங்கடா…” என்ற வசனம் மிக இயல்பானது.
கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் படம் மிளிர்கிறது. குறையில்லாத ஒலிப்பதிவும், இசையும்கூட.. கார்த்திக் ராஜாவின் இசையில் இசைஞானி இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் அந்த சோகப் பாடல் நிச்சயமாக கவனிக்கத்தக்க பாடல்களில் ஒன்றுதான். கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.
'இளமை என்னும் பூங்காற்று' பாடலே 3 நிமிடங்கள் தொடர்வதெல்லாம் கார்த்திக் ராஜா இருப்பதால் சாத்தியமாயிற்றா என்று தெரியவில்லை. ஆனால் கார்த்திக் ராஜாவால்கூட ஏன் புதிய நல்ல இசையைக் கொடுக்க முடியவில்லை என்றுதான் தெரியவில்லை.
இடைவேளைக்கு பின்பு ரகுமான் வந்த பிறகு.. விசாரணையின் வேகத்தின் காரணமாய் படம் மிக வேகமாய் நகர்கிறது. முடிவில் யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்டை துணை கமிஷனரான ரகுமான் சொல்லும்போது யாரோ ஓரிருவராவது தியேட்டரில் நிச்சயமாக கை தட்டுவார்கள். அப்படியொரு வலுவான வசனம் அது..!
சுரேந்தர் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட பிறகே மோனிகாவின் கதை திறக்கப்படுவதால் அந்த இடத்தில் இருந்தே சஸ்பென்ஸ் கூடிக் கொண்டே போகிறது.. இறுதியில் இதனைச் செய்வது யாராக இருக்கும் என்பதை சில, சில குளோஸப் காட்சிகளே காட்டிக் கொடுத்து விடுகிறது என்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறை.
காதல் என்ற போர்வையில் பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் இளைஞர்களுக்கு இறுதியில் கிடைக்கும் தண்டனை என்ன என்பதை நயமாக இதில் சொல்லியிருக்கிறார்கள். ஐயோ பாவம் என்ற பச்சாபாதம் ரசிகனுக்குள் வராத அளவுக்கு திரைக்கதையை எழுதியருக்கிறார் இயக்குநர் ராம்.கே.சந்திரன். வெல்டன் ஸார்..
இந்தப் படத்தைப் பார்க்கும் இளைஞர்களும், இளைஞிகளும் ஒரு நிமிடமாவது தங்களை சுய பரிசோதனை செய்து கொள்வது நலம் எனலாம்.

0 comments: