தனி ஒருவன் - சினிமா விமர்சனம்

29-08-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இயக்குநர் ஜெயம் ராஜாவுக்குக் கிடைத்திருக்கும் உண்மையான முதல் வெற்றி இதுதான்.  ‘நிமிர்ந்து நில்’ படத்தின் மூலம் நினைக்க வைத்த ஜெயம் ரவி அடுத்து வந்த ‘ரோமியோ ஜூலியட்’டிலும் அந்தப் பெயரை தக்க வைத்தார். அடுத்து வந்த ‘அப்பாடக்கர் சகலகலாவல்லவன்’ லேசாக அவருடைய பெயரை டேமேஜ் செய்து வைத்தாலும், இந்தப் படம் ஜெயம் ரவியின் கேரியரிலும் தனித்து நிற்கும்.

ஐ.பி.எஸ். பணியின் பயிற்சிக் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் ஜெயம் ரவிக்கு அங்கே ஒரு பாண்டவர் டீமே துணைக்கு இருக்கிறது. இன்னமும் பயிற்சி முடியாத இந்த நேரத்திலும் இரவு நேரத்தில் ரவுண்ட்ஸ் செல்கிறார்கள். குற்றங்களை நேரில் பார்க்கும்போதெல்லாம் அதைக் கண்டறிந்து களத்தில் குதித்து குற்றவாளிகளைப் பிடித்து வைத்துவிட்டு இவர்கள் எஸ்கேப்பாகுகிறார்கள். இதையே ஒரு சவாலாகவும், பயிற்சியில் ஒரு பங்காகவும் செய்து வருகிறார்கள்.
32 குற்றங்களில் குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுத்தவர்கள் அதிர்ச்சியாகும்வண்ணம் குற்றவாளிகள் அனைவருமே சில நாட்களில் வெளியில் வந்துவிட.. இவர்களின் ஆதிமூலத்தைக் கண்டறியத் துடிக்கிறார் பாண்டவர் டீம் கேப்டன் ஜெயம் ரவி.
எதிரி நம் அருகில்வரும்வரையில் நாம் ஏன் காத்திருக்க வேண்டும்..? நாமே அவனை தேடிச் சென்று அட்டாக் செய்வோம் என்று நினைத்து இந்தக் குற்றவாளிகளின் காட்பாதரை தேட.. கடைசியில் மருத்துவ விஞ்ஞானியான சித்தார்த் என்கிற அரவிந்த்சாமி சிக்குகிறார்.
இவர்தான் நமது எதிரி என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு அவரது சாம்ராஜ்யத்தில் குண்டு வைக்க முயல்கிறது ஜெயம் ரவியின் டீம். இதை சுலபத்தில் அறிந்து கொண்ட அரவிந்த்சாமி பதிலுக்கு தன் வித்தையைக் காட்ட இரு தரப்பினருக்கும் இடையே பரபர, விறுவிறு சேஸிங்குகளும், பறத்தல்களும், சண்டைகளும் நடக்கின்றன. இறுதியில் நீதி வென்றதா..? அநீதி வென்றதா என்பதே கதை..!
வில்லனான அரவிந்த்சாமிதான் படத்தின் ஹீரோ என்று உறுதியாகச் சொல்லலாம். படத்தின் கதை முழுவதையும் தன் மீது சுமந்து கொண்டு அத்தனை அனாயசமாக நடித்திருக்கிறார்.  இவருக்கு இருக்கும் பிளாஷ்பேக் காட்சிகளும், இவரது தந்தை தம்பி ராமையா, முதலமைச்சர் நாசர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் மிக யதார்த்தம்..! தம்பி ராமையாவின் கேரக்டர் ஸ்கெட்ச் படத்தின் பிற்பாதியில் சிரிக்கவும் வைத்து கடைசியாக உச்சுக் கொட்டவும் வைத்திருக்கிறது..!
ஜெயம் ரவியின் பாடி லாங்குவேஜுக்கு ஏற்ற வேடம். மிக வேகமாக நகரும் திரைக்கதையில் நடிப்பென்று தனியாக சொல்ல வைக்காமல் கேரக்டருடனேயே வாழ்ந்ததுபோலவே தெரிகிறது இவரது நடிப்பு. தன்னுடைய செயல்களெல்லாம் எப்படி அரவிந்த்சாமிக்கு தெரிகிறது என்பதை ஊகித்துத் தெரிந்து கொண்டு, அதன் பின்னான நயன்தாராவுடனான மெளன ரொமான்ஸில் நச்சென்று மனதில் பதிகிறார்.
ஒரேயொரு டூயட்டுக்காக நயன்தாரா வேஸ்ட் என்றாலும், கேரக்டர் படம் முழுக்கவே வருவது போல இருப்பதால் பார்க்கவும் முடிகிறது. ரசிக்கவும் முடிந்தது. எடுத்த எடுப்பிலேயே ஜெயம் ரவியை ‘வாடா’, ‘போடா’ என்றெல்லாம் அழைத்தபடியே வந்து போவதால் அந்த அன்னியோன்யத்தை மீறி அவர்களை பார்க்க முடிவதில்லை. ஏஞ்சலீனாவுக்கு பதிலாக தன்னை போகச் சொல்லும் ஜெயம் ரவியிடம் நயன்தாரா சொல்லும் வசனமும், அதை வெளிப்படுத்தியவிதத்திலும் தியேட்டரில் கைதட்டல்கள் உறுதி..!
இதேபோல் தம்பி ராமையாவும், அரவிந்த்சாமியும் பேசுகின்ற காட்சிகளெல்லாம் தியேட்டரில் கலகலப்புதான். அந்தக் குரங்கு கதையைச் சொல்லி முடித்தவுடன் தம்பி ராமையா அப்பாவீயாய் கேட்கும் ‘அப்போ அது செத்திருக்குமே’ என்ற ஆக்ஷன் ஓஹோதான்..!
நட்புக்காக கணேஷ் வெங்கட்ராமன், நாசர் என்று குலக் கொழுந்துகள் இருந்தாலும் அவரவர் வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். இயக்கம் சிறப்பாகவே இருப்பதால் இவர்களையும் ரசிக்க முடிந்தது. அரவிந்த்சாமியிடம் கால் மேல் கால் போட்டு கெத்தாக பேசும் முதலமைச்சர் நாசர், அடுத்த சில வினாடிகளில் அரவிந்த்சாமி உட்கார தான் பவ்யமாக குனிந்து பேசும் காட்சியெல்லாம் ரசனைக்குரியவை. கிளைமாக்ஸ் எதிர்பாராதது..!
“எதிரியும் வாழணும்.. நாமளும் வாழணும்.. அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டணும். அதுதான் வீரம்..” என்ற நயன்தாராவின் பொன்மொழிதான் படத்தின் டர்னிங் பாயிண்ட். இந்த வசனத்தை யூகித்து சொன்னவருக்கு ஒரு பூங்கொத்தினை பரிசாக தரலாம்..!
ராம்ஜியின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் பளபளக்கின்றன. காட்சிகளை ஊடறுக்காமலும், பாடல் காட்சிகளில் அழகுடனும் படமாக்கியிருக்கிறார். இது போன்ற படங்களுக்கு மிகப் பெரிய துணையே எடிட்டர்தான். எடிட்டர் கோபி கிருஷ்ணாவின் கத்தரி வேலை நச்சென்று இருக்கிறது. படத்தில் பல இடங்களில் இடம் பெறும் இண்ட்டர்கட் காட்சிகளின் ஜம்ப்பிங் மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருப்பதால் கொஞ்சமும் ஸ்லிப் ஆகவில்லை. திறமையான படத்தொகுப்பும் இந்தப் படத்தின் விறுவிறுப்புக்கு ஒரு முக்கியக் காரணம்..!
ஸ்டண்ட் சில்வா மற்றும் திலீப் சுப்பராயனின் சண்டை காட்சிகள் நிகழ்த்திக் காண்பிக்கப்படாமல் நடந்ததாகவே எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கலவரமாகவே முடிந்திருப்பதுதான் கொஞ்சம் கவலையளிக்கிறது. ஜெயம்ரவியின் நண்பனின் கொலையை இத்தனை கொடூரமாகக் காட்டியிருக்க வேண்டாம். தியேட்டருக்கு வரும் பச்சைப் புள்ளைக பயந்திரும்..
உடலில் மைக்ரோபோனை பொருத்துவது என்கிற ஒரேயொரு கான்செப்ட் பல ஹாலிவுட், பாலிவுட் படங்களில் ஏற்கெனவே பார்த்ததுதான் என்றாலும் அது ஒன்றை மையப்புள்ளியாக வைத்து இப்படத்திற்கு கோலம் போட்டிருக்கும் சுபா இரட்டையர்களுக்கு ஒரு பாராட்டு..!
முதற்பாதியில் வரும் 32 களப் பணிகளில் ஈடுபட்டும் லோக்கல் போலீஸில் சிக்காமல் தப்பிப்பது.. நயன்தாராவின் தொல்லை தாங்காமல் முசெளரியில் இருந்து வேறு பயிற்சிக் கல்லூரிக்கு மாறி வந்ததாக ஜெயம் ரவி சொல்வது. எடுத்த எடுப்பிலேயே போலீஸ் கண்காணிப்பாளராக வேலை கிடைத்திருப்பதாகச் சொல்வது.. போஸ்ட்டிங் கிடைத்தவர்கள் யார், யார் எந்தெந்த போஸ்ட்டிங்கில் இருக்கிறார்கள் என்பதையே தெளிவாகச் சொல்லாதது.. கடைசிவரையிலும் நயன்தாராவை போலீஸ் டிரெஸ்ஸில் காட்டாதது. டிரைவர் வைத்துக் கொள்ளாமல் அரவிந்த்சாமி எப்போதும் எல்லா இடங்களுக்கும் தானே சர்ரென்று வந்து இறங்குவது.. அவருடைய அப்பாவை இவ்வளவு இளிச்சவாயனாக காட்டுவது.. ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களை மீறி செய்யப்படும் ஒப்பந்த விவகாரம்.. இதில் கையெழுத்திட வருபவரை படுகொலை செய்யும் சின்ன சம்பவம்.. அரவிந்த்சாமி வாயைத் திறந்தால் தன் பதவியும் பறிபோகும் என்ற நினைப்பிலும் நாசர் கிளைமாக்ஸில் பல்டியடிப்பது.. – இப்படி படம் பற்றிய விமர்சனங்களை சொல்லிக் கொண்டே போகலாம்தான்.
ஆனால் இது அத்தனையையும் தாண்டி ஒரு நிமிடம்கூட செல்போனை பார்க்க வைக்காமல், போரடிக்காமல், சொல்ல வந்த விஷயத்தை ஒரே நேர்க்கோட்டில், சுவாரஸ்யமாக சொல்லிய விதத்தில் இயக்குநர் ராஜாவின் இயக்கத் திறமையை நாம் பாராட்டியே ஆக வேண்டும். வெல்டன் ராஜா ஸார்..  கீப் இட் அப்..!
தனி ஒருவன் – சினிமா ரசிகர்கள் மிஸ் பண்ணக் கூடாத திரைப்படம்..! 

2 comments:

Ramesh said...
This comment has been removed by the author.
Unknown said...

இயக்குநர் ஜெயம் ராஜாவுக்குக் கிடைத்திருக்கும் உண்மையான முதல் வெற்றி இதுதான். ‘நிமிர்ந்து நில்’ படத்தின் மூலம் நினைக்க வைத்த ஜெயம் ராஜா அடுத்து வந்த ‘ரோமியோ ஜூலியட்’டிலும் அந்தப் பெயரை தக்க வைத்தார். அடுத்து வந்த ‘அப்பாடக்கர் சகலகலாவல்லவன்’ லேசாக அவருடைய பெயரை டேமேஜ் செய்து வைத்தாலும், இந்தப் படம் ஜெயம் ரவியின் கேரியரிலும் தனித்து நிற்கும்




இயக்குனர் ராஜாவுக்கு இந்த படங்களுக்கு எந்த சம்மதமும் இல்லை. climax இனிமேலும் எழுதினால், நானே அந்த பட இயக்குனர் தயாரிப்பாளர்களிடம் உங்களை பத்தி போட்டுக் கொடுத்திடுவேன். விமர்சனம் என்கிற பெயரில் என்ன கூத்து இது.