சண்டி வீரன் - சினிமா விமர்சனம்

12-08-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



சிங்கப்பூரில் விசா மோசடியில் சிக்கி ‘ரோத்தர்’ எனப்படும் குண்டியில் அடி வாங்கி கெத்தாக சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் நெடுங்காடுக்குத் திரும்பி வருகிறார் ஹீரோ அதர்வா. வரும்போதே அவருக்குள் ஒரு கனவு. தனது பால்ய காலத்து நண்பி கயல் ஆன்ந்தியை பார்க்க வேண்டும் என்பது..!
சென்னையிலேயே தங்கியிருந்து மொட்டையடித்த தலையில் கொஞ்சம் முடி வளர்ந்த பின்பு சென்னை பர்மா பஜாரில் சிங்கப்பூர் பொருட்களை வாங்கிக் கொண்டு வெற்றிகரமாக ஊர் திரும்புகிறார். தனது ரகசிய சிநேகிதியை காண்கிறார். காதல் கொள்கிறார். மோதலும், ஊடலுமாக காதலும் வளர்கிறது.
அதே நேரம் பக்கத்து ஊரான வயல்பாடி தண்ணீர் பிரச்சினையில் சிக்கி சீரழிவது அதர்வாவின் கண்ணுக்குத் தெரிகிறது. நெடுங்காடுக்கும், வயல்பாடிக்கும் நடுவில் இருக்கும் ஒரு குளத்து தண்ணீரை வயல்பாடி மக்களுக்குத் தர மாட்டேன் என்று சொல்லி அடம் பிடிக்கிறார் ஊர் முக்கியஸ்தரான மில்லுகாரர் லால். இவரது மகள்தான் ஹீரோயின் ஆனந்தி என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா..?
ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பாக இரு ஊர்களுக்கும் தண்ணீர் பிரச்சினைக்காக நடந்த மோதலில்தான் ஹீரோ அதர்வாவின் தந்தை கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது மனைவி ராஜஸ்ரீயும் சிறிது மனநலம் குன்றிதான் இருக்கிறார். இவைகளும் சேர்ந்து அதர்வாவுக்குள் ஏதோ செய்கின்றன.
தனது மகளுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பியதற்காக அந்தப் பையனை பள்ளிக்கே சென்று அடித்துவிட்டு மகளின் டிசியை வாங்கிக் கொண்டு வந்து மகளின் படிப்பை பாதியில் நிறுத்திய புண்ணியவான் லால். மகளின் காதல் தெரிந்தால் சும்மா இருப்பாரா..? அதுவும் அவரது மில்லில் வேலை செய்யும் ஒரு பெண்ணின் மகன்தான் காதலன் என்றால் அவரது புஜங்கள் துடிக்காதா..? துடித்துவிட்டது.. அதர்வாவை கீழ்த்தரமாகத் திட்ட.. அவர் பதிலுக்கு லாலின் சட்டையைப் பிடிக்கிறார்.
இந்தக் கோபத்தில் இருக்கும் அதர்வாவுக்குள் வயல்பாடியில் இருக்கும் நண்பனின் வீட்டிற்குச் சென்று வந்தவுடன் ஒரு மாற்றம். அந்த ஊர் மக்களுக்கு ஏதாச்சும் செய்து உதவியாக வேண்டுமே என்று துடிக்கிறார். குளத்தை ஏலத்தில் எடுக்க லாலுக்கு எதிராக இவரும் களத்தில் குதிக்கிறார். ஏலத்தொகைதான் அதிகமானதே தவிர அதர்வாவால் முடியவில்லை.
அதே ஏல தினத்தில் அதர்வாவின் ஏற்பாட்டின்படி வயல்பாடி கிராமத்துக்காரர்கள் சிலர் அங்கே வந்து தங்களது கிராமத்தின் தேவைக்காக குளத்தை விட்டுக்கொடுக்கும்படி கேட்க.. அவர்களை அடித்து, அவ்மானப்படுத்தி அனுப்புகிறார்கள் லாலின் அடியாட்கள்.
இதற்கு பழிக்குப் பழி வாங்க வயல்பாடி மக்கள் துடிக்க.. அதே நேரம் தனது மகளின் காதலையும் ஒழித்துக் கட்ட திட்டம் தீட்டுகிறார் அப்பா லால். இது முடிந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
‘சண்டியருக்கெல்லாம் சண்டியர்’ என்ற பொருள்படிந்த தலைப்புக்கு அதர்வா பொறுத்தமா இருப்பாரா என்றெல்லாம் யோசித்திருக்கலாம். தலைப்பு வேறாக வைத்திருக்கலாம். தண்ணீர் பிரச்சினைதான் படத்தின் மையக் கருத்து என்பதால் அதையொட்டி இருந்திருந்தால் சாலப் பொருத்தமாக இருந்திருக்கும்.
சிங்கப்பூர் கதை படத்துடன் ஒட்டவில்லை. ஏன் வைத்தார்கள் என்றும் தெரியவில்லை. ‘ரோத்தர்’ என்று பெயரை அடிக்கடி பயன்படுத்தியதால் சிங்கப்பூரிலும் படம் ரிலீஸாக முடியாமல் போய்விட்டது.
அதர்வாவின் கெட்டப்பையே மாற்றாமல் சண்டியராக காட்ட முனைந்திருக்கிறார்கள். கோபத்தில்தான் ஹீரோவின் அழகே தெரியும். இது அதர்வா போன்ற பால் வடியும் முகங்களுக்கு ஒத்து வருமா என்று தெரியவில்லை. சில காட்சிகளில் தனது உடல் மொழியால் சிரிக்க வைத்திருக்கிறார்.  இதையே தொடரலாமே..? எதுக்கு ஆக்சன் கிங் வேஷமெல்லாம்..?
சின்ன சிரிப்பழகியாக தெரிகிறது ஆனந்தியின் முகம். பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவில் கூடுதல் அழகு மிளிர வருகிறார். ஆனாலும் சின்னப் புள்ளை மாதிரியே இருப்பதால் கொஞ்சம் சதை பிடித்தால் ரசிகர்களுக்கும் பிடிக்கும்மா..! லால் தன் அட்டகாசத்தில் கொஞ்சம்தான் இதில் காட்டியிருக்கிறார். அதுவும் கிளைமாக்ஸில் மட்டும்..
அதர்வா-ஆனந்தி காதல் மேட்டர் பல இடங்களில் ஜிலுஜிலுப்பாக பயணம் செய்து ரசிக்க வைக்கிறது. “எத்தனை ரோத்தர் வாங்கின..?” என்று ஆனந்தி ரகளை செய்யும் காட்சியில் இருந்து அவரை காதலிப்பதுபோல் நடிப்பதுவரையிலும் எல்லாம் ஓகேதான்..
காதலர்கள் தப்பிப் போக நினைக்கும் அதே நாளில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க லால் திட்டமிடுவதும் சரியான திரைக்கதைதான். அந்த கடைசி அரை மணி நேர தவிப்புதான் படத்தை எப்படி முடிக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டது. கடைசியில் ‘இதற்குத்தானா இப்படி..?’ என்கிற ஆயாசமும் வந்துவிட்டது..
திரைக்கதையில் இன்னமும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம். தண்ணீர் பிரச்சினை என்பதால் தமிழ்நாடு, இந்தியா என்று பேசியிருந்தாலே நம்பத் தகுந்தவிதமாக இருந்திருக்கும். அதுவும் அது ஊர்ப் பஞ்சாயத்துக்கான பொதுக் குளமாகத்தான் இருக்க முடியும். அதில் மீன் வளர்ப்பது என்பது பற்றியெல்லாம் சிந்திக்கவே முடியாது. மீன் வளர்க்கத்தான் குளம் எனில் வயல்பாடி மக்களுக்கு இப்போதைய மாநில அரசு ஏன் உதவி செய்யவில்லை என்கிற பிர்சிசனையும் எழுகிறது.
இது போன்ற சென்ஸிட்டிவ் அரசியல் கலந்த பிர்சிசனைகள் என்பதால்  அரசு நிர்வாகம், போலீஸ் இரண்டையும் சரியானவிதத்தில் பயன்படுத்திருக்கலாம். வெறும் கர்நாடகாவை மட்டும் சுட்டிக் காட்டி பேசிவிட்டால் இது நியாயமாகிவிடுமா..?
அதுவரையில் கொலை வெறியோடு வந்திருக்கும் ஆட்கள் திடீரென்று அதர்வாவின் வாய்ஸை கேட்டவுடன் மனம் மாறுவது திடீர் திருப்பமாக இருக்கிறது. அதேபோல் ஊர் பஞ்சாயத்து தலைவர் விபத்தில் சிக்கியவுடன் தண்ணீருக்கு தவித்த தருணத்தில் தானே மனம் மாறுவதை சபாஷ் என்று சொன்னாலும் அழுத்தமில்லாமல் இருந்த்து. குளத்து நீரில் கரண்ட் கம்பி இருப்பதால் அனைவரையும் முந்திக் கொண்டு தான் சென்று அவர்களைத் தப்பிக்க நினைத்தது ஓகேதான். ஆனால் இதை அவரே சொல்லியிருந்தால் அந்தக் கேரக்டருக்கு இன்னமும் உயர்வாக இருந்திருக்கம்.
‘களவாணி’ போலவே பக்கா கிராமத்து டிராமாவோடு படத்தை முடித்திருக்கிறார். எதிர்பாராத்து. ரத்தக் களறியை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தக்காளி சட்னியை நசுக்கிக் காட்டியிருக்கிறார். ஆனாலும் சுவைதான். லாலின் நடிப்பினால் அதையும் ரசிக்கத்தான் முடிந்தது..! இத்தனை சீக்கிரமாக ஒரு வில்லன் நல்ல மாமனாராக உருமாறுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதையும் சொல்லித்தான் தீர வேண்டும்.
படம் முழுவதுமே பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவில் சிலிர்ப்பாகவே இருக்கிறது. ‘அலுங்குற குலுங்குற’ பாடல் காட்சியில் ஒளிப்பதிவை பாராட்டுவதா..? இசையை பாராட்டுவதா..? என்று தெரியவில்லை. அசத்தல் பாடல்.. ‘தாய்ப்பாலும் தண்ணீரும்’ பாடல் மனதைப் பிசைகிறது. ‘மண்ணைப் போல தண்ணீருக்கும் எல்லக்கோட்டை போடுற.. வறுமைக்கோட்ட வளக்குற.. இயற்கையைத்தான் பூட்டி வச்சு பொம்மையாக்க பாக்குற..’ என்ற பாடல்  வரிகள் இப்போதைய தமிழகத்தின் யதார்த்த நிலைமையைச் சொல்கிறது.  பாடல் வரிகளும், குரலும் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இசையமைப்பாளர் அருணகிரிக்கு பாராட்டுக்கள்.
படத்தில் சின்னச் சின்ன கேரக்டர்களில் மிக, மிக யதார்த்தமான கிராமியத்தனம் வாய்ந்த மக்களையே அதிகம்  நடிக்க வைத்திருக்கிறார். ஆனந்தி பம்ப் செட்டுக்கு குளிக்க வரும்போது உடன் வரும் அக்கா.. சைக்கிள் ஓட்டும் போட்டியில் இரண்டாவதாக்கிய அக்கா.. அதர்வாவின் வயதைத் தாண்டிய அவரது நண்பன்.. கிளைமாக்ஸில் அதர்வாவுக்காக பரிந்து பேசுபவர்கள் என்று பலரும் திரையுலகம் அதிகம் பார்த்திராத முகங்கள்.. மிக இயல்பான நடிப்பைத் தொட்டிருக்கிறார்கள். இவர்களால் ஒரு கிராமிய படத்தை பார்க்கின்றோம் என்ற உணர்வும் நமக்கு வருகிறது. இயக்குநர் சற்குணத்திற்கு ஒரு ஷொட்டு..!
தண்ணீர் பிரச்சினைக்காக தமிழ்ச் சினிமாவில் இடம் பிடித்த படங்களின் பட்டியலில் இந்தப் படமும் இடம் பிடித்துவிட்டது..! 

1 comments:

Unknown said...

அருமையான அலசல்