வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க - சினிமா விமர்சனம்

14-08-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆர்யாவின் 25-வது படம். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமன்னா ஹீரோயினாக நடித்திருக்கும் தமிழ்ப் படம். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வின் சுமாரான வெற்றியை மறக்கடிக்கும்வகையில் இயக்குநர் எம்.ராஜேஷுக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய படம்.. இப்படி பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் தன்னுடைய டிரேட் மார்க் கதையோடு, அதே பாணியிலான திரைக்கதையோடு மறுபடியும் சிரிக்க வைக்க வந்திருக்கிறார் இயக்குநர் எம்.ராஜேஷ்.

சரவணன் என்கிற ஆர்யாவும், வாசு என்கிற சந்தானமும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள். ஆர்யாவின் அப்பா காலமான சூழலில் ஆர்யாவை சந்தானத்தின் வீட்டில் விட்டுவிட்டுத்தான் அவரது அம்மா வேலைக்குச் செல்வாராம். அப்படியொரு சூழலில் டிரவுசர் போட்ட காலத்தில் இருந்தே ரெண்டு பேரும் ஒண்ணுமண்ணா வளர்ந்திருக்காங்க. இன்றுவரையிலும் அப்படியேதான் இருக்கிறார்கள். ஒரு மொபைல் கடை நடத்துகிறார்கள்.  ராத்திரில வழக்கம்போல சேர்ந்தே சரக்கடிக்கிறார்கள்.
ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள அவரது அம்மா ரேணுகா வற்புறுத்துகிறார். ஆர்யா விளையாட்டுத்தனமான பிள்ளையாகவே இருப்பதால் அதனை ஏற்க மறுக்கிறார். ஆனால் சந்தானம் புத்திசாலி. ‘தாமிரபரணி’ பானுவை பார்த்தவுடன் காதல் கொண்டு கல்யாணம்வரைக்கும் கொண்டு போய் குடும்பஸ்தராகிவிடுகிறார்.
ஆனால் சந்தானத்திற்கு ஆர்யாவுடனான நெருக்கம் பானுவுக்கு பிடிக்கவில்லை. ஆர்யா செய்த சிறுபிள்ளைத்தனமான சேட்டையால் அவர்களுடைய முதலிரவு கட்டில் உடைந்து பத்து நாள் ஆஸ்பத்திரியில் படுக்கிறார் சந்தானம். ஏற்கெனவே தன்னை இண்டர்வியூ என்ற பெயரில் ராகிங் செய்த ஆர்யா மீது கடுப்பில் இருந்த பானு, இப்போது ஆர்யாவுடனான நட்பைத் துண்டித்தால்தான் தாம்பத்தியம். இல்லையேல் இப்படியே கிடக்க வேண்டியதுதான் என்று உத்தரவு போடுகிறார்.
நட்பை கத்தரிக்க முடியாது. பதிலுக்கு ஆர்யாவுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டால் நம் பிரச்சனை தீருமே என்றெண்ணி ஆர்யாவுக்கு பெண் பார்க்க மேட்ரிமோனியல் டாட் காம் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கிறார் சந்தானம். அங்கே மெழுகு பொம்மையாக வந்து நிற்கும் கஸ்டமர் கேர் ஆபீஸர் தமன்னாவை பார்த்தவுடன் ஐஸ்கிரீமாக உருகுகிறார் ஆர்யா. காதலித்தால் இவளைத்தான்..  கட்டினாலும் இவளைத்தான்.. என்று சொல்லி தமன்னா மீது காதல் கொண்டு அலைகிறார்.
இந்தக் காதலுக்காக பல ரீல்களில் தொடர்ந்து சந்தானம் திட்டம் போட்டுக் கொடுத்துக் கொண்டேயிருக்க அது படு சொதப்பலாகி முடிந்து கொண்டேயிருக்கிறது. கடைசியில் காதல் ஓகேயாகும் சூழலில் நட்புக்கு வேட்டு வைக்கிறார் தமன்னா. சந்தானத்துடனான நட்பைத் துண்டித்தால்தான் நமக்கு கல்யாணம் என்று ஆர்யாவிடம் கண்டிஷன் போடுகிறார்.
இதற்கு மேல் என்ன நடக்கும் என்பது கொஞ்சம் சஸ்பென்ஸ். எல்லாரும் நினைக்கும் அதே சுப முடிவுதான். ஆனால் அது எப்படி முடிகிறது என்பதை படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இயக்குநர் எம்.ராஜேஷ் ஒளிப்பதிவாளரையோ, நடிகர், நடிகைகளையோ மாற்றினாலும் சரி தன்னுடைய ஸ்டைல் கதையையும், திரைக்கதையையும் மாற்ற மாட்டார் போலிருக்கிறது. முதல் படத்தில் இருந்த்து போன்ற அதே டைப்பான காதல், காதல் விரட்டு, நட்பு, நண்பனை விட்டுக் கொடுக்காமல் இருப்பது.. டாஸ்மாக் பானங்கள், சைடிஷ் என்று அனைத்துமே இந்தப் படத்திலும் இருக்கின்றன.
கூடவே சந்தானத்தின் வித்தியாசமான பஞ்ச் டயலாக்குகள். இவைகளை எங்கேயிருந்து தேடிப் பிடிக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நன்றாகவே இருக்கும். வரிக்கு வரி பதில் சொல்வதுபோல அடுக்கு மொழியிலும், எதுகை மோனையிலும் பஞ்ச் வசனங்களை பேசுவது சில நேரங்களில் நம்ம காதுக்கே பஞ்சராகிறது.
இந்த பஞ்ச் வசனங்களை பற்றி கிண்டல் செய்பவர்களுக்கும் சந்தானம் படத்திலேயே பதில் சொல்லியிருக்கிறார். பஞ்ச் டயலாக்குகளுக்கு எத்தனை, எத்தனை மெனக்கெடல்கள் செய்ய வேண்டும் தெரியுமா..? என்றெல்லாம் கேள்விகள் கேட்டிருக்கிறார். எல்லாஞ்சரிதான் சாமி.. எல்லா டயலாக்குகளுமே ‘ஒரேயொரு பிரெண்டை வைச்சுக்கிட்டு நான் படுற பாடு இருக்கே’ன்ற மாதிரியிருந்துட்டா இந்தப் பிரச்சினையெல்லாம் வராதேண்ணே..?!
படத்தில் சுவையானதே திரைக்கதைதான். இடைவேளைக்கு பின்பு வரும் பல காமெடி டிவிஸ்ட்டுகள்தான் படத்தினை இறுதிவரையிலும் ரசிக்க வைக்கின்றன. இப்படித்தான் முடியப் போகிறதோ என்று நினைக்கும் வேளையில் புதிய பிரச்சனைகள் வந்து சந்தானத்தின் கற்புக்கு சோதனை வைப்பதெல்லாம் நினைத்தாலே சிரிப்பு வரும் திரைக்கதை.
ஒவ்வொரு பாடல் காட்சியையும் வித்தியாசமாக படமாக்கப்பட வேண்டும் என்று நினைத்து அதற்காக மெனக்கெட்டு பிரயத்தனம் செய்திருக்கிறார் இயக்குநர். இதற்காகவே இவருக்கொரு பாராட்டு. ‘சோனா சோனா’ பாடல் காட்சியும் ‘நா ரொம்ப பிஸி’ பாடல் காட்சியும் கண்ணுக்கு அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றன.
ஆர்யாவுக்கு அதே கேரக்டர். ஒரு மாற்றமுமில்லை. ஸ்பாட்டுக்கு எப்படி வந்திறங்கியிருப்பாரோ, அது போலவேதான் கேமிரா முன்பாகவும் நின்றிருக்கிறார். ஒரு அழுகை, ஒரு சோகம் என்று எதுவுமில்லாமல் எல்லாவற்றையும் ஜாலியாகவே எடுத்துக் கொள்ளும் ஒரு காதலராகவும், மகனாகவும், நண்பனாகவும் காட்.சியளிக்கிறார்.
படத்தில் அப்பாவியாய் சில கேள்விகளை கேட்கும்போதுதான் ஆர்யாவை நடிகைகளுக்கு ஏன் அதிகம் பிடிக்கிறது என்பதற்கான காரணமும் தெரிகிறது. நடிப்பென்று பார்த்தால் தமன்னாவிடம் நட்பை விட்டுக் கொடுக்க முடியாது என்று சொல்லும்போதுகூட ஒரு வித்தியாசத்தையும் காட்டாமல் பேசும் ஆர்யாவிடம் ஏதோ ஸ்பெஷல் இருக்கிறது. இல்லாவிடில் இதெல்லாம் ஒரு நடிப்பாடா என்று நாலு பேர் கேட்டுவிடுவார்கள். அப்படி கேட்கவிடாமல் செய்கிறது அவரது இயல்பான அந்த நடிப்பு.
சந்தானம் வழக்கம்போல அதே கலகலப்பு, நக்கல், கேலி, கிண்டல், நையாண்டி என்று அனைத்தையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார். முன்பே சொன்னதுபோல பஞ்ச் வசனங்களை கொஞ்சம் குறைத்துக் கொண்டு இயல்பான வசனத்திலேயே பதில் சொல்ல முனைந்தால் இன்னும் நன்றாக இருக்கும். தன்னுடைய கற்புக்கு வந்த சோதனைக்காக அவர் படும்பாடும், ‘செல்லம்மா..’ ‘செல்லம்மா’ என்று தன் மனைவியை கொஞ்சிக் கொண்டே பின்னாலேயே அலைவதும் பார்க்க ரசிப்பாகத்தான் இருக்கிறது..
வெள்ளைக்கட்டி, மெழுகு பொம்மை, ஐஸ்கிரீம் என்று ஆர்யாவால் வர்ணிக்கப்படும் தமன்னாவுக்கு இது  நிச்சயம் ஸ்பெஷல் படம்தான். அதிகமான குளோஸப் காட்சிகளில்  இவரது நடிப்பை வெளிப்படுத்தும் வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்டு பெயர் வாங்கியள்ளார் தமன்னா.
மியூஸியத்திற்கு அழைத்துச் சென்று டைனோசர்போல் நிற்க வைத்துவிட்டு எஸ்கேப்பாகும்போதும், ஓடும் டிரெயினில் பொருத்தமான இடம் பார்த்து சாகச் சொல்லும் காட்சியிலும், பீர் அடித்துவிட்டு சுவாமிநாதனின் வீட்டிற்கு அர்த்தராத்திரியில் சென்று அரை ரவுசு விடும் காட்சியிலும் ரசிக்கத்தான் வைக்கிறது தமன்னாவின் நடிப்பு. பாடல் காட்சிகளில் காட்டியிருக்கும் அழகையும், ஸ்டெப்ஸையும் பார்த்தால், அம்மணி நினைத்தால் தமிழ்த் திரையுலகில் ஒரு வலுவான இடத்தைப் பட்டா போட்டு வைக்கலாம்போலத்தான் தெரிகிறது.
ஹீரோயினுக்கு துணை என்றாலும் வித்யுராமன் கலக்கியிருக்கிறார். இவரைப் போன்ற டயலாக் டெலிவரியை நொடி தாமதிக்காமல் செய்யும் காமெடி நடிகைகளெல்லாம் இப்போது இங்கே அதிகமில்லை என்பது உண்மை. ஆர்யா தன்னைக் காதலிக்க தயார் என்று தெரிந்த கணத்தில் இருந்து இவருடைய அட்டகாசங்கள் பரபர.. தன் உருவத்தை வைத்து சந்தானம் பேசும் காமெடி டயலாக்குகளையெல்லாம் எப்படி இவர் ஒத்துக் கொண்டார் என்றே தெரியவில்லை. முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டிய விஷயம்.
‘கலாய்ச்சுட்டாராம்’ என்ற வார்த்தையே வைத்தே படத்தில் பல இடங்களில் நம்மை கலாய்த்திருக்கிறார்கள். சில கவுண்ட்டர் டயலாக்குகளுக்கு இது ஓகேதான். மற்றபடி கடுப்புதான் வருது..!
கிளைமாக்ஸ் உண்ணாவிரதப் போராட்டம். இதற்கு ஆதரவு தெரிவிக்க நேரில் வரும் தங்கத் தலைவி ஷகிலா.. அதைத் தொடர்ந்து அஸிஸ்டெண்ட் கமிஷனர் என்ற சிறப்புத் தோற்றத்தில் வரும் விஷால். அவருக்கான பில்ட்அப்.. மனைவிகளுக்கு பயப்படும் கணவன்களின் கூட்டணி என்று கடைசிக் கட்டத்திலும் டிவிஸ்ட்டுகளை கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் இயக்குநர். அதேபோல் பாட்டில்களையும் கண்ணில் காட்டிக் கொண்டேயிருக்கிறார்.
‘லட்சுமி’ என்ற பெயரை வைத்து விஷாலை வாரியிருக்கும் ஆர்யா கூட்டணியின் பாச உணர்வு பாராட்டுக்குரியது. அதே ஒரிஜினல் வரலட்சுமியின் முகத்தைக் காட்டாமல் அவரது ஒரிஜினல் குரலையே பயன்படுத்தி தனது படத்தில் இடம் கொடுத்து அவர்களது காதலுக்கு உதவியிருக்கும் ஆர்யாவுக்கு பதில் உதவியைச் செய்திருக்கிறார் விஷால். வாழ்க நண்பர்கள் கூட்டணி..!
தன்னுடைய 25-வது படம் என்பதால் சிறந்த படமாகவும், ஹிட்டாகவும் அமைய வேண்டும் என்பதால் தானே சொந்த்த் தயாரிப்பில் இறங்கியிருக்கும் நடிகர் ஆர்யாவை பாராட்டுகிறோம்.
இயக்குநர் ராஜேஷுக்கு ஒரு கோரிக்கை. உங்களுடைய இயக்கத்தில் எங்களுக்கு மாறுபட்ட கருத்தில்லை. மிகச் சிறப்பாக நடிகர்களை இயக்கி நடிக்க வைக்கிறீர்கள். திரைக்கதையை சுவாரஸ்யமாகவே எழுதுகிறீர்கள். ஆனால் இன்னமும் ஏன் இப்படி டாஸ்மாக்கையே கட்டி அழுகுறீர்கள் என்று தெரியவில்லை. இந்தப் படத்தில் கடைசியாக மப்டியில் வரும் அஸிஸ்டெண்ட் கமிஷனர் விஷாலையும் தண்ணியடிப்பதுபோல காட்டியிருப்பதை பார்த்தால் உங்களுக்குள் ஏதோ ஒருவித டாஸ்மாக் பிரியம் இருப்பது போல தெரிகிறது.
எந்தவொரு கெட்ட செயலும் வலிந்து திணிக்கப்படுதல் கூடாது என்பதே நாம் இங்கே சொல்ல விரும்புவது. இதற்கு பதிலாக குடித்துவிட்டு பேசுவதுபோலகூட காட்டிவிடலாம். ஆனால் படம் முழுவதும் குடித்துக் கொண்டேயிருப்பதுபோல என்றால் எப்படி..? கொஞ்சம் யோசியுங்கள் பிரதர்..!
பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தருகிறார்கள் இந்த வாசுவும், சரவணனும்..!

1 comments:

Seshadri said...

Tamil Cinema industry it self in trouble makers surrounding.

this film very good print - un censored version somebody hosted already in the following link...saravanna...

http://www.rajtamil.com/2015/08/watch-vasuvum-saravananum-onna-padichavanga-movie-online/