வந்தா மல - சினிமா விமர்சனம்

12-08-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இயக்குநர் இகோருக்கு இருக்கும் தைரியத்தை நினைத்தால் ஆச்சரியமாக்த்தான் இருக்கிறது. ‘பாபநாசம்’ படத்தில் பேசப்பட்ட அந்த நெல்லை தமிழை தமிழகத்து மக்கள் புரிந்து கொள்வார்களா என்று கமல்ஹாசனையும் தாண்டி பல முறை யோசித்துதான் முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால் இகோரோ ஒரே முடிவோடு சென்னை தமிழ் பாஷையை படம் முழுவதிலும் வைத்து ஒரு திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.
அதிலும் இந்தப் படம் முழுக்க முழுக்க மேல்தட்டு மக்களை கவருகிறதோ இல்லையோ.. பி அண்ட் சி மக்களை நிச்சயம் கவரும். அவர்கள் பேசும் பாஷை, பேச்சு, உடல் மொழி, கலாச்சாரம்.. பழக்க வழக்கம் என்று அனைத்தையும் இதில் கொணர்ந்திருக்கிறார்.

நான்கு செயின் திருடர்களைப் பற்றிய கதைதான் இது.  வாசலில் கோலம் போடும் பெண்களிலிருந்து ரோட்டில் நடந்து செல்லும் பெண்களின் கழுத்திலிருக்கும் செயினை நொடியில் அத்துக் கொண்டு செல்லும் இந்த வாலிபர்களுக்கு அதைப் பற்றிய குற்றவுணர்ச்சி கடைசிவரையிலும் இல்லை. ஆனால் இதையே கொண்டாடுகிறார்கள். அதுதான் வாழ்க்கை என்கிறார்கள்.
இவர்களில் ஒருவருக்கு ஹீரோயின் வசந்தா மீது காதல். அரவை மில்லில் வேலை செய்யும் அவளுக்கும் இவன் மீது கொள்ளை காதல். பார்த்தவுடன் கிஸ்ஸடிக்கத் துடிக்கும் அளவுக்கு வெளிப்படையான பெண். பேச்சு லொடலொட.. ஆனால் நேர்மை வேண்டும் என்கிறாள். காதலனை திருடப் போகாதே என்று தடுக்கிறாள். ஆனால் முடியவில்லை.
இவர்கள் கடைசியாக திருடிய செயினை வசந்தாவிடம் தனது காதல் பரிசாக்க் கொடுக்கிறான் காதலன். அவள் அதை ஏற்க மறுத்து தூக்கியெறிகிறாள். அந்த வட்ட வடிவ பெரிய டாலர் செயினுக்குள் இருக்கும் ஒரு துண்டு பேப்பரில் எழுதப்பட்டிருக்கும் செய்திதான் இடைவேளைக்கு பின்பான கதையை நகர்த்துகிறது.
தன்னைக் காப்பாற்றினால் 2 கோடி கிடைக்கும் என்று எழுதப்பட்டிருப்பதை பார்த்து காசுக்கு ஆசைப்படுகிறார்கள் நண்பர்கள் நால்வரும். இதனை வைத்து அந்த கோடிகளை சம்பாதிக்க நினைக்கிறார்கள். முடிந்ததா இல்லையா என்பதுதான் மீதமான கதை.
படம் முழுவதிலும் இருக்கும் சென்னை பாஷையே படத்திற்கு பலமாகவும் இருக்கிறது. இன்னொரு பக்கம் பயமாகவும் இருக்கிறது. சில நேரங்களில் உற்று கவனிக்கவில்லையெனில் வசனம் புரியாமல் போகும் அபாயமும் இருக்கிறது.
படத்தில் அனைவரையும்விடவும் அதிகமாக ஸ்கோர் செய்திருப்பது ஹீரோயின் பிரியங்காதான். பக்கா தமிழச்சியான இவர் இதுவரையிலும் சில பி அண்ட் சி படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் ‘கங்காரு’ படம் மட்டுமே இதுவரையிலும் குறிப்பிட்டுச் சொல்லும் படமாக இருந்தது. இப்போது இந்தப் படத்தைச் உறுதியுடன் சொல்லிவிடலாம்.
காதலனுக்கு முத்தம் கொடுப்பதற்காக அத்தனை நீள வசனத்தையும் அந்த அழகு கொஞ்சல், வழிசலுடன் பேசி முடித்திருக்கும் அந்த நீளமான காட்சியை வடிவமைத்ததற்காக இயக்குநருக்கு ஒரு ஷொட்டு. இதில் ஒரு சிறிய தவறுகூட இல்லாமல் நடித்திருக்கும் அந்த்த் திரைக் காதலர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.
அதேபோல் திருட்டு செயினை வாங்கி தன் கழுத்தில் போட்டுவிட்ட குற்றத்திற்காக காதலனை விரட்டிவிரட்டி அடித்துவிட்டு “என் உண்மையான காதலை புரிஞ்சுக்க மாட்டேங்கிறியேடா..?” என்று புலம்பும்போது நிஜமாகவே உச்சுக் கொட்ட வைக்கிறார் ஹீரோயின்.
நடுஇரவில் காதலனை தனியே அழைத்துச் சென்று “டிவில மிட் நைட் மசாலான்னு பாட்டெல்லாம் போட்டு கொல்றாங்கடா.. என்னை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ…” என்று கொஞ்சலுடன் கெஞ்சுகின்ற காட்சிகளெல்லாம் ரசிக்க வைக்கிறது. எம்புட்டு தைரியமான பொண்ணு என்பதைவிடவும் எத்தனை தைரியமான திரைக்கதை என்று பாராட்டவும் சொல்கிறது. காதலனுக்காக தன் உடலில் டாட்டூவை குக்கித் கொண்டு ஹீரோயின் அதைக் காட்டும் அழகும் காதலுக்கு சுவையூட்டுகிறது.
இந்த நால்வரின் காட்பாதர் தாத்தாவான பழைய தாதா கேரக்டரில் பழம்பெரும் கதாசிரியர் வியட்நாம் வீடு சுந்தரம். இதில் நடித்து இறந்தும் போகிறார். இவர் சொல்லும் உதயராஜின் பிளாஷ்பேக் கதை, மெயின் கதைக்கு உடன்படாததால் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனாலும் சிரிப்பலை தியேட்டரில் கிடைக்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் மகாநதி சங்கரின் கேரக்டர் ஸ்கெட்ச் நகைச்சுவை கலந்த கேரக்டராக போய்விட்டதால் படத்தின் சீரியஸ்னெஸ்ஸே இல்லாமல் முற்றிலும் காமெடி படமாகிவிட்டது. இப்படியொரு ஏரியாவுக்கு ஒரு இன்ஸ்பெக்டர் வந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் டிஜிபியாக இகோர் மாதிரியானவர்கள் இருக்க வேண்டுமே..?
படத்தில் பல சுவாரஸ்ய திரைக்கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளால்தான் படத்தை இறுதிவரையிலும் பார்க்க முடிந்தது. திருடர்கள் நால்வருக்கும் போலீஸுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள்.. இன்ஸ்பெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ. என்று அனைவரையும் இழுத்து வைத்து போஸ்டர் அடித்து ஒட்டுவது.. தாத்தா சாவின்போது பெண்களே குத்தாட்டம் போடுவது.. அதைச் சாக்காக வைத்து ஹீரோ ஹீரோயினிடம் ‘பழம்’விட பார்ப்பது.. செயினை திருடிய பெண்ணைப் பிடிக்க வேண்டி தங்களது பழைய நண்பன் பிரகாஷை தேடிப் போய் கடைசியில் அவர் லலிதாவாக மாறியிருப்பது. இதைத் தொடர்ந்து இந்த லலிதா துணையுடன் கிளைமாக்ஸ்வரையிலும் தாக்குப் பிடித்துச் செல்வது. கடைசியில் பிரச்சனைக்கை இழுத்த ராணியே டபுள் ஆக்ட்டில் இருப்பது… என்றெல்லாம் சில, பல சுவாரஸ்யங்களே படத்தை இழுத்துச் செல்கின்றன.
கிளைமாக்ஸில் வரும் அந்த தேச துரோகச் செயல் கொஞ்சம் குறைவான தயாரிப்பில் படம் பிடிக்கப்பட்டிருப்பதால் மனதில் நிற்கவில்லை. எப்படியிருந்தாலும் அந்தத் திருட்டுப் பணம் இந்தத் திருடர்களிடமே கடைசியில் போய்ச் சேர்ந்திருப்பதும், கடைசிவரையிலும் அவர்கள் திருந்தியபாடில்லை என்பதும் நெருடலான ஒரு விஷயம்தான்.
மாரியின் ஒளிப்பதிவில் குறைவில்லை. பாடல் காட்சிகளில் ரம்மியமாக சுழன்றிருக்கிறது கேமிரா. ‘உன்னாண்ட காதல்னா’ பாடலும், பாடலை படமாக்கியவிதமும் அருமை. அற்புதம் என்றே சொல்ல வேண்டும். அந்த லோக்கல் பாஷையை பயன்படுத்தி பாடலை எழுதிய இயக்குநர் இகோரே பாடியிருப்பதும் பாராட்டுக்குரியது. இசையமைப்பாளர் தேவாவின் குரலில் ‘ஆன்னா ஆவண்ணா’ பாடலும் இன்னொரு பளிச் ரகம்.  இசையமைப்பாளர் சாம்ராஜுக்கு நமது வாழ்த்துகள்.
அதிகப்படியான காட்சிகளும், மெயின் கதையைவிட்டு விலகிப் போகும் சில காட்சிகளும்.. அடுக்கடுக்கான தொடர்ச்சியான வசனங்களும் படத்திற்கு சற்று வேகத்தடையைக் கொடுத்தாலும் பிற்பாதியில் படம் ஓடும் ஓட்டத்தில் அதுவும் காணாமல் போகிறது..!
‘வந்தா மல’ என்று சொல்லித்தான் இழுத்திருக்கிறார். ‘மல’ கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறோம்..!

0 comments: