என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இப்போதெல்லாம் பெரிய பட்ஜெட் படங்களைவிட சிறிய பட்ஜெட் படங்களில்தான் கொஞ்சமாவது கதை என்ற வஸ்து இருக்கிறது.. பெரிய பட்ஜெட் என்றால் அந்த ஹீரோவுக்கு ஏற்றாற்போல் மலைக்கள்ளன் டைப் கதையாக எடுத்து தியேட்டரில் நம்மைத் தாளிக்கிறார்கள். இல்லையெனில் டிவிடியில் இருந்து உருவியெடுத்து நம்மையும் தியேட்டரில் உருவியெடுக்கிறார்கள்.
சின்னத் தயாரிப்பு படங்கள் 5 வந்தால், அதில் 3 படங்களாவது கதையும், எடுத்த விதமும் கொஞ்சம் நல்லபடியாக, இயக்கம் என்று ஒத்துக் கொள்ளக்கூடிய வகையிலே அமைந்து விடுகின்றன. அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்று..
அரதப் பழசான அடியாள் கதைதான்.. ஆனால் சினிமா பாணியில் ட்ரீட்மெண்ட் குட் ஷேப்பிங்.
கடலூர் பகுதியை பார்ட் பார்ட்டாக பிரித்துவைத்துக் கொண்டு தனது அடியாட்களை வைத்து ராஜ்யம் நடத்தி வரும் சேலையப்பன் என்பவரிடம் கைத்தடிகளாகவும், அதே சமயம் வளர்ப்புத் தம்பிகளாகவும் இருந்து வருகிறார்கள் மதனும், நித்யாவும்..!
பகலில் அடிதடி, வெட்டுக் குத்து, ரகளை, ரத்தம் என்று பார்த்துவிட்டு இரவில் குஜிலிகளுடன் ஆட்டம் போடும் பக்கா அடியாளான ஹீரோ நித்யா, ஹீரோயின் மகாலட்சுமியிடம் ஒரு தடவை அடி வாங்கி விடுகிறான்.
இதனை தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதினாலும், அவனுக்குள் ஏதோ ஒன்று லாலாலாலா பாடி விடுகிறது. அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி மாதிரி.. அடைந்தால் மகாலட்சுமி இல்லையேல் மரணம்தான் என்ற நிலைமைக்கு வந்து அவளை விரட்டி விரட்டி பின் தொடர்ந்து சென்று அழுக வைக்கிறான்.
ஹீரோவின் உற்ற நண்பனான மதனின் முறைப் பெண்தான் இந்த மகா என்ற மகாலட்சுமி. இது ஹீரோவுக்குத் தெரியாது.. தான் கல்யாணம் செய்யப் போகும் பெண்ணைத்தான் தனது உயிர் நண்பன் விரும்புகிறான் என்பதை அறியாமல் அவர்களைச் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறான் மதன்.
மகாவுக்கும், மதனுக்கும் இடையில் நிச்சயத்தார்த்தமும் நடந்த நிலையில் மீண்டும் ஹீரோ மகாலட்சுமியைத் தூக்கிச் செல்ல.. விஷயம் தெரிந்து மதன், இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு முடிச்சர்றேன் என்று சொல்லி ஹீரோவுக்கே போன் போட்டு “என் லவ்வருக்கு ஒரு பிரச்சினை.. மேட்டரை முடிக்கணும் வா” என்று சொல்லி போன் அடித்து வரவழைக்க.. இப்போதுதான் மகா சொன்ன ஆள் யாரென்று மதனுக்குத் தெரிகிறது.
அடுத்த நொடியே நட்புக்கு குட்பை சொல்லிவிட்டு காதலுக்கும், கல்யாணத்திற்கும் முன்னுரிமை கொடுக்கிறான் மதன். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஹீரோ, மதனை போட்டுத் தள்ளிவிட்டு ஜெயிலுக்குப் போகிறான்.
ஹீரோ வெளியில் வரவும் அவனால் 6 ரீலுக்கு முன்னால் பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் அதே ஊருக்கு ஏ.எஸ்.பி.யாக வரவும் பொருத்தம் அமர்க்களமாக இருக்கிறது. தான் ரவுடியாக இருப்பதால்தானே மகா தன்னை விரும்ப மறுக்கிறாள் என்பதை உணர்ந்து தான் ரவுடித் தொழிலை கை விடுவதாக சேலையப்பனிடம் சொல்கிறான் ஹீரோ.
சீலையப்பனோ இப்போது தனது கிரவுண்ட்டிற்குள் நுழைந்து நொங்கெடுத்துக் கொண்டிருக்கும் ஏ.எஸ்.பி.யை போட்டுத் தள்ள ஹீரோவிடம் வேண்டுகிறான். ஹீரோ மறுக்க.. ஏ.எஸ்.பி. சேலையப்பனையும், ஹீரோவையும் நெருக்க.. இன்னொரு பக்கம் மகா, ஹீரோவை பார்க்கவே மறுப்புத் தெரிவிக்க.. முக்கோண வட்டத்தில் யார் கடைசியாக உயிருடன் இருப்பது என்பதுதான் கதை.
முதல் பாராட்டு வசனகர்த்தாவுக்கு.. மிக, மிக நல்ல உயிரோட்டமுள்ள வசனங்கள். திரைக்கதைக்கு பொருத்தமான இடங்களில் நச் என்று அமைந்திருக்கிறது.
ஹீரோவாக நடித்திருப்பவர் வினய் தத்தா. காதல் ஓவியம் கண்ணனை ஞாபகப்படுத்தியது போன்ற முகம். ஏதாவது தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டோ என்று சந்தேகமாக இருக்கிறது.. நிஜமாகவே அவரளவுக்கு நன்கு நடித்திருக்கிறார். தன்னை மகாலட்சுமி அடித்ததை நண்பர்களிடம் சொல்லி தன்னை அடிக்கும்படி சொல்லிக் கெஞ்சுகின்ற காட்சியில் அடியாள் வேடம் சுத்தமாக அவுட்.. நல்லதொரு இயக்கம் இந்தக் காட்சியில்.
இடைவேளைக்குப் பின்பு அடிதடியை விடுவதாக அறிவித்துவிட்டு மகாவைத் தேடியலைந்து ஹாஸ்டலில் வந்து பார்க்கும்போது, “பார்த்திட்டு போயிருவேன்” என்று வார்டனிடம் சொல்லிவிட்டு அதேபோல் காதலியைப் பார்த்தவுடன் ஒருவார்த்தைகூட பேசாமல் செல்கின்ற காட்சியில் இன்னொரு சபாஷ்.. இயக்குநருக்கும் சேர்த்துத்தான்.
கிளைமாக்ஸில் “நான் என்ன செஞ்சா.. நீ சந்தோஷமா இருப்ப..?” என்று கேள்வி கேட்கும் நேரத்தில் காதலனாகவே உருக வைத்திருக்கிறார்.
அனுமோல் என்னும் கேரள நங்கை புதுமுகமாக பரிமாணித்துள்ளார். ஆனாலும் இவரை வேறு ஏதோ ஒரு திரைப்படத்தில் பார்த்த ஞாபகம். எந்தப் படமென்று என் மூளையைக் கசக்கியும் ஞாபகத்திற்கு வரவில்லை. அனுமோலுக்கு மேக்கப்பே தேவையில்லை என்று இயக்குநர் சொல்லிவிட்டார் போலும். குளோஸப் காட்சிகளில் வியர்வைகூட பளிச்சென்று தெரிந்தது..
படம் முழுவதும் சோகத்தையே பிழிந்து கொண்டிருந்ததால் நடிப்பு பரவாயில்லைதான்.. நான் அதிகம் எதிர்பார்த்த இரண்டு நண்பர்களையும் ஒன்றாக பார்க்கின்ற காட்சியில் இயல்பாகவே நடித்திருக்கிறார். “இத்தனை நாளா நீ என்ன செஞ்சுக்கிட்டிருந்தன்னு, இவனைப் பார்த்தாலே தெரியுது” என்று கேட்கின்ற வசனமும், மகாவுக்கு மகா பொருத்தம்.
இப்போதெல்லாம் தமிழ்ச் சினிமாவில் கிளைமாக்ஸில் திடுக் திருப்பத்தை வைத்துத்தான் படத்தை முடிக்கிறார்கள்.. ஏன் என்றுதான் தெரியவில்லை.. 'பாணா காத்தாடி', 'காதல் சொல்ல வந்தேன்' வரிசையில் இந்தப் படமும் உட்கார்ந்துவிட்டது.
ஒளிப்பதிவு காசி வி.நாதன் என்ற புதுமுகமாம். கடலூரின் சுற்றுவட்டாரம் முழுவதையும் ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ஆதிராஜா கடலூரோ என்னவோ..? காட்சிக்கு காட்சி லொகேஷனை மாற்றிக் காண்பித்து அசத்தியிருக்கிறார்கள். நல்ல முறையில் கை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
அடுத்த ஆச்சரியம்.. பாடல்கள்.. தெளிவாக வந்து காதில் விழுந்தன வார்த்தைகள்.. மெர்வின் சில்வா என்பவர் இசையமைத்திருக்கிறார். அடி முதல் முறை என்ற பாடலும், வெண்ணிலா நில்லடி என்ற பாடலும் எடுக்கப்பட்ட விதமும், இசையும் மீண்டும் கேட்க வேண்டும்போல இருந்தது.
குத்துப் பாட்டு.. இறுகக் கட்டியணைக்கும் குஜிலிகள்.. ஹீரோயினின் மனதைப் பற்றி பிட்டு பிட்டு வைக்கும் ஒரு பாலியல் பெண்.. பாசத்தால் பிராக்கெட் போடப் பார்க்கும் அண்ணாத்தைகள்.. ஹீரோயினின் குடும்ப பேக்கிரவுண்ட்டில் ஒரு மெல்லிய சோகம்.. ஹீரோவின் முன் வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஸ்மால் ஸ்டோரி என்று அடியாள் கதைகளில் என்னென்ன இருக்குமோ அத்தனையும் இதில் இருக்கிறது.
இதனைவிட பெரிய, பெரிய லாஜிக் ஓட்டைகளும் இருக்கின்றன. இருந்தாலும் மன்னித்து ரசிக்கலாம்.. அதிலும் 'மாஸ்கோவின் காவிரி'க்கு இது பல மடங்கு பரவாயில்லை ரகம்.
ஆனாலும் புதுமுகங்கள்.. புதிய இயக்குநர்.. புது கம்பெனி என்று பல புதியதுகள் இப்படத்தை மூலைக்குத் தள்ளிவிட்டன. குறைந்தபட்ச தயாரிப்பில், போட்ட காசு வந்தால்போதும் என்கிற நிலைமைக்குள் இதனை எடுத்திருக்கிறார்கள்.
இந்தக் கதையை அட்லீஸ்ட் ஜீவா, பரத்தை வைத்தாவது எடுத்திருந்தால் ஓரளவுக்காவது நிச்சயம் பேசப்பட்டிருக்கும், பெரிய ஹீரோக்கள் இல்லாததாலேயே காலை காட்சியாக மட்டுமே பெரிய நகரங்களிலும், ஸ்மால் சிட்டிகளில் தியேட்டர் வாடகையை கலெக்ஷன் செய்யவுமே இதனை ஓட்டுவார்கள்.
தற்போதைய தமிழ்ச் சினிமாவுக்கு கதைக்கு அடுத்தபடியாக மிகத் தேவையான விளம்பரப்படுத்துதல் இப்படத்திற்கு சுத்தமாக இல்லையாததால் இயக்குநரின் திறமை முட்டுச்சந்துக்குள் நிற்கிறது.. அடுத்து யாராவது ஒருவர் வாழ்க்கை கொடுத்தால் மெழுகுவர்த்தி, சோடியம் லைட்டாக பிரகாசிக்கலாம்..
நேரமும், வாய்ப்பும் கிடைத்தால் அவசியம் பாருங்கள்.
படத்தின் டிரெயிலர் இது
|
Tweet |
