பாக்கணும் போல இருக்கு - சினிமா விமர்சனம்

27-07-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘வீரசேகரன்’, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’. ‘தொட்டால் தொடரும்’ ஆகிய படங்களை தயாரித்த எப்.சி.எஸ். கிரியேஷன்ஸின் தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர்தான் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ஹீரோவாக பரதன் நடிக்க, ஹீரோயினாக ஹன்சிபா நடிக்கிறார். இவர் ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘பரஞ்சோதி’, மலையாளப் படமான ‘திரிஷ்யம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  இவர்களுடன் சூரி, கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி, முத்துக்காளை, சிங்கப்பூர் துரைராஜ், மெய்ராஜன், ஜானகி ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ், சண்டை பயிற்சி – நாக் அவுட் நந்தா, நடனம் – பாபி ஆண்டனி, ஈஸ்வர் பாபு, கலை – எஸ்.எஸ்.மூர்த்தி, ஒளிப்பதிவு – ஜி.ரமேஷ், இசை – அருள்தேவ், படத் தொகுப்பு – சுதா, தயாரிப்பு – துவார் ஜி.சந்திரசேகர், எழுத்து, இயக்கம் – எஸ்.பி.ராஜ்குமார்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ள எஸ்.பி.ராஜ்குமார், ‘பொன்மனம்’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, விஜய் நடித்த ‘சுறா’, சமீபத்தில் வெளியான ‘பட்டைய கிளப்பணும் பாண்டியா’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

வெகு நாட்களுக்கு பிறகு கிராமிய பின்னணியில் ஒரு நகைச்சுவை திரைப்படத்தை பார்த்த திருப்தியை இந்தப் படம் கொடுத்திருக்கிறது.
ஹீரோவான பரதன் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர். இவருடைய நெருங்கிய நண்பர் சூரி. காலையிலேயே சரக்கில் திளைக்கும் அளவுக்கு குடி மன்னர். இன்னொரு நண்பன் பிளாக் பாண்டி. இவர்கள் மூவரும் சந்திக்கும் பிக்னிக் ஸ்பாட் கஞ்சா கருப்பு நடத்தும் டெய்லர் கடை.
அங்கே அமர்ந்து கொண்டு கஞ்சா கருப்புவின் தொழிலையும் நாசமாக்குகிறார்கள். கஞ்சா கருப்பு புது மிஷின் வாங்குவதற்காக கடன் வாங்கி வைத்திருக்கும் 2000 ரூபாயையும் குடிக்க வைத்தே அழிக்கும் அளவுக்கு ரொம்ப நல்லவர்கள் இந்த நண்பர்கள்.
அதே ஊருக்கு ரொம்ப வருடங்கள் கழித்து குடி வருகிறது தாசில்தார் லிவிங்ஸ்டனின் குடும்பம். லிவிங்ஸ்டனுக்கு இரண்டு பெண்கள். மூத்தவர் ஜானகி. இளையவர்தான் ஹீரோயின் அன்ஸிபா ஹாசன்.
ஏற்கெனவே லிவிங்ஸ்டன் அதே ஊரில் இருக்கும்போது அன்ஸிபா ஹாசனுடன் சிறு வயதில் நட்பாக இருந்திருக்கிறார் ஹீரோ பரதன். ஊர் ஆற்றங்கரையோரம் ஒரு கல்லைத் தூக்கி வைத்து இதுதான் பிள்ளையார் என்று சாமியும் கும்பிட்டிருக்கிறார்கள். அன்ஸிபா நினைவாக அந்த இடத்தில் நிஜமாகவே ஒரு பிள்ளையார் சிலையை வைத்து இத்தனை நாளும் கும்பிட்டு வருகிறார் பரதன்.
இப்போது அந்த இடத்தைத் தேடிப் பிடித்து பார்க்க வரும் ஹீரோயின், பரதன் இன்னமும் அந்த இடத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது அறிந்து அவர் மீது காதல் கொள்கிறார். ஹீரோவுக்கும் காதல் பற்றிக் கொள்கிறது.
ஒரு நாள் இளம் காதல் ஜோடிகள் சினிமாவுக்கு செல்கிறது. படம் முடிந்து வெளியில் வரும்போது படம் பற்றிய கருத்து கேட்கும் லோக்கல் டிவி சேனலின் கேமிராவில் மாட்டிக் கொள்கிறார்கள். இதைப் பார்க்கும் லிவிங்ஸ்டன் பதறுகிறார். வருத்தப்படுகிறார். அதே நேரம் பரதனின் தந்தை ஜெயப்பிரகாஷும் இதைப் பார்த்துவிட்டு லிவிங்ஸ்டன் வீட்டுக்கு வந்து பேசுகிறார்.
காதலர்களை பிரிக்க நினைத்தால் அவர்கள் ஒட்டத்தான் நினைப்பார்கள். பேசாமல் நாமளே இவர்களுக்கு கல்யாணத்தை செய்து வைத்துவிடலாம் என்று முடிவெடுக்கிறார்கள் இரு தரப்பு பெற்றோர்களும்.
நிச்சயத்தார்த்த நாளன்று தற்செயலாக கல்யாண மண்டபத்தில் ஹீரோயினின் அக்கா ஜானகியும், ஹீரோ பரதனின் அண்ணனும் சந்தித்துக் கொள்கிறார்கள். பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்குள் காதல் பற்றிக் கொள்ள இதுவும் எதிர்பாராதவிதமாக திருமண நிகழ்வை படமாக்கிக் கொண்டிருக்கும் கேமிராவில் பதிவாகி மண்டபம் முழுக்க ஒளிபரப்பாகிறது.
இதையடுத்து மீண்டும் ஒரு சலசலப்பு எழ.. அதே முகூர்த்தத்தில் ஜானகிக்கும், பரதனின் அண்ணனுக்கும் திருமணம் நடந்தேறுகிறது. திருமணம் முடிந்த கையோடு பரதனின் வீட்டில் அவனது அம்மா சமையல்கட்டில் பேசும் பேச்சு, கல்யாணம், பவுன் நகை பற்றியிருக்க தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்களோ என்று ஜானகிக்கு பயம் ஏற்படுகிறது.
இதேபோல் பரதனின் பாட்டியும் “கூடுதலாக நகை செய்து தரும்படி உன் அப்பாவிடம் போய் கேட்டு வாங்கிட்டு வா…” என்று ஜானகியிடம் சொல்ல.. ஜானகி அழுகிறார்.
தன் வீட்டுக்கு போய் அம்மா, அப்பாவிடம் இதைச் சொல்ல லிவிங்ஸ்டன் உண்மை தெரியாமல் கொதிக்கிறார். அன்றைய இரவில் எதிர்பாராமல் நடைபெறும் தீ விபத்தில் ஜானகி சிக்கிக் கொள்ள.. பரதன் குடும்பத்தினர்தான் திட்டமிட்டு தங்களது மகளை தீக்கிரையாக்கியதாக தவறாக நினைத்துக் கொள்கிறார் லிவிங்ஸ்டன்.
உடனேயே போலீஸ் பரதனின் அப்பா, அம்மா, அண்ணன் மூவரையும் ஜெயிலில் தள்ளுகிறது. இந்த நேரம் ஹீரோயின் அன்ஸிபாவோடு கொடைக்கானலுக்கு சென்றிருந்த ஹீரோ விஷயம் தெரிந்து அங்கே ஓடி வர.. அதற்குள்ளாக விவகாரம் பெரிதாகியிருக்கிறது.
ஹீரோவுக்கும் லிவிங்ஸ்டனுக்கும் இடையில் சண்டை நடக்க லிவிங்ஸ்டனை அடித்துவிடுகிறார் ஹீரோ. இதைப் பார்க்கும் ஹீரோயின் ஹீரோவை அடித்துவிரட்டிவிட்டு அவருடனான காதலையும் தூக்கியெறிகிறார்.
இனிமேல் என்ன நடந்தது என்பதை தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளலாமே..?
இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் மிக அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அதிகப்பட்சம் காமெடியின் மூலமாகவே படத்தை நகர்த்தியிருக்கிறார்.
அறிமுக நடிகர் பரதன் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார். அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திருக்கிறார். பரதன், சூரியுடன் இணைந்து செய்யும் காமெடியும், துணைக்கு கஞ்சா கருப்புவும் சேர்ந்து கொள்ளும் காமெடிகளும் அதகளம். அதிலும் கஞ்சா கருப்பு ஹோட்டலில் பேண்ட் ஜிப்பை பயன்படுத்தும் காட்சியில் விலா நோக சிரிப்பு.. ரொம்ப நாட்களுக்கு பிறகு தொலைக்காட்சிகளுக்கு தேவையான காமெடி காட்சிகள் இந்தப் படத்தில் இருக்கின்றன. எந்தத் தொலைக்காட்சி படத்தை வாங்குகிறதோ அதற்கு ஜாக்பாட்டுதான்..!
அன்ஸிபா ஹாஸன் கேரளத்து அழகி. அமைதியாகவும், ஆர்ப்பாட்டமாகவும் நடித்திருக்கிறார். தனது அப்பாவுக்கு நேர்ந்த கொடுமைக்காக காதலன் என்றும் பாராமல் ஹீரோவை அடித்துவிரட்டிவிட்டு பின்பு வருத்தப்பட்டு நிற்கும் காட்சியில் அச்சச்சோ என்று சொல்லவும் வைத்திருக்கிறார்.
ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன் இருவரும் குணச்சித்திரத்தில் பாசமான அப்பாக்களாக போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். நல்லதுதான்.
பாடல் காட்சிகளில் காட்சிகளை இன்னும் கொஞ்சம் அழகாக காட்டியிருக்கலாம். ஒளிப்பதிவாளர் ஜி.ரமேஷின் கேமிரா அனுபவம் ஏன் கோட்டைவிட்டது என்று தெரியவில்லை.
அருள்தேவ் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் ரசிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். ‘உன் ரெட்ட சட கூப்பிடுதே முத்தம்மா’ பாடல் ஆட வைக்கிறது. மெலடிக்கு ‘மஞ்சப் பூவே மஞ்சப் பூவே’, ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல்களும் லயிக்க வைத்திருக்கின்றன. சின்ன பட்ஜெட் படங்களில் இசை சிறப்பாக இருக்கும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு சான்று.
ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே தயாரான படம். ஏதோவொரு காரணத்தால் நின்று, நின்று இப்போதுதான் வெளியாகியிருக்கிறது. அப்போதே வெளியாகியிருந்தால் நிச்சயமாக ஒரு பெரும் ஹிட்டடித்திருக்கும்.
இன்றைக்கு பெரிய படங்களின் ஆதிக்கத்திற்கிடையில் கிடைத்த தியேட்டர்களில் படம் ரிலீஸாகியிருப்பதால் படத்தின் கதியை தயாரிப்பாளர் தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டதை போல வைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தை இனி வரும் காலங்களில் தொலைக்காட்சிகளில் பார்க்கும் வாய்ப்புள்ளவர்கள் நிச்சயமாக பாராட்டுவார்கள்.. மெச்சுவார்கள்..!

0 comments: