அன்பாவன் அடங்காதவன் அசராதவன் - சினிமா விமர்சனம்

28-06-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘தென்மேற்குப் பருவக் காற்று’, ‘ஈட்டி’, ‘மிருதன்’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் ஸ்ரேயா, தமன்னா, ஒய்.ஜி.மகேந்திரன், வி.டி.வி.கணேஷ், அர்ஜூன், விஜயகுமார், கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கிருஷ்ணன் வசந்த், இசை – யுவன் சங்கர் ராஜா, படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – பால்ராஜ், உமேஷ் ஜெ.குமார், சண்டை பயிற்சி –  ராஜசேகர், உடை வடிவமைப்பு – என்.ஜெ.சத்யா, நடன இயக்கம் – ராபர்ட், சதீஷ், ஒப்பனை – குப்புசாமி, உடைகள் – கணேஷ், தயாரிப்பு – செராபின் ராய சேவியர், எழுத்து, இயக்கம் – ஆதிக் ரவிச்சந்திரன்.

படம் எடுக்கும் தயாரிப்பாளரை மட்டுமல்லாது படம் பார்க்க வரும் ரசிகர்களையும் டார்ச்சர் செய்யும் பழக்கமுள்ள சின்னத் தம்பி சிம்புவின் அக்மார்க் படம் இது. கூடவே த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற காம காவியத்தைக் கண்டெடுத்த தமிழ்த் திரையுலகச் சிற்பி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்திருக்கிறார் என்றால் கேட்கவா வேண்டும்..? நல்லா வைச்சு செஞ்சிருக்காங்க..!
மதுரை பகுதியில் அடியாள் தொழில் செய்து வரும் மதுரை மைக்கேலுக்கு ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான ஸ்ரேயாவின் மீது ஒரு கண். அந்தப் பாப்பாவுக்கும் மைக்கேல் மீது ஒரு இதுவாக காதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சந்தர்ப்ப சூழலால் பதிவாளர் அலுவலகத்தில் அவர் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி அரசுப் பூர்வமாக திருமணமும் செய்து கொள்கிறார்கள்.
இதே ஊரில் இருந்தால் இதேபோல் அடிதடி, வெட்டுக் குத்து, கொலை என்றாகி வாழ்க்கையே கெட்டுவிடும். எல்லாத்தையும்விட்டுவிட்டு என்னுடன் வா. எங்காவது போய் நல்லபடியா வாழலாம் என்று அழைக்கிறார் ஸ்ரேயா. துபாய்க்கு போக முடிவெடுக்கிறார்கள்.
அதற்குள்ளாக பழைய பாஸ் ஒரேயொரு சம்பவத்தை மட்டும் செஞ்சுட்டு போயிருப்பா என்று கெஞ்ச.. சரி.. என்று அந்தச் சம்பவத்தைச் செய்யப் போகிறார். அந்தச் சம்பவத்தில் தெரியாத்தனமாக மாமனார் ஒய்.ஜி.மகேந்திரனே சிக்கிக் கொள்கிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்த பொழுதில் போலீஸும் வந்து மைக்கேலை கைது செய்ய வெற்றிகரமாக சிறை புகுகிறார் மைக்கேல்.
ஒரு நல்ல நாளில் சிறையில் இருந்து தப்பித்து ஊருக்கு வர அங்கே ஸ்ரேயாவுக்குக் கல்யாணம். இனிமேல் குறுக்கே புகுந்து கெடுக்காமல் ஒதுங்குவோம் என்று சொல்லி துபாய்க்கு பறந்தோடுகிறார் மைக்கேல்.
துபாயில் அஸ்வின் தாத்தா என்கிற பெயரில் மிகப் பெரிய இண்டர்நேஷனல் தாதாவாக உருமாறியிருக்கிறார். இப்போது அவரை இண்டர்போல் போலீஸே வலைவீசி தேடி வருகிறார். அப்பேர்ப்பட்ட அப்பாடக்கர் தாதா மறுபடியும் இந்த வயதில் தாயகம் திரும்பி அஸ்வின் தாத்தாவாகவே வாழ்கிறார்.
இப்போதும் இவருக்கு திடீரென்று ஒரு காதல் வருகிறது. கோவை சரளாவுக்கு துணைய்ய் வரும் தமன்னாவை பார்த்தவுடன் லவ்வாகிறார் அஸ்வின் தாத்தா. ஆனால் தமன்னாவுக்கு தாத்தா மீது காதல் இல்லாமல் போக.. தாத்தா இந்தக் காதல் நிறைவேற துடிக்கிறார். அவருடைய ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் கதையாம்..!
சிம்புவின் முந்தைய படங்களிலெல்லாம் அவர் என்னென்ன பேசினாரோ அதையெல்லாம் இந்தப் படத்திலும் ரிப்பீட் செய்திருக்கிறார். காதலைப் பற்றி அவர் பேசியிருக்கும் அத்தனை வெண்ணை பேச்சுக்களையும் தொகுத்து புத்தகமாக போட்டால்கூட ஒரு நாயும் சீண்டாது. அப்படியொரு சுய புராணம்.
இவர் காதலித்தார்.. கல்யாணம் செய்ய முடியவில்லை. இதையே இன்னும் எத்தனை நாளைக்கு.. எத்தனை படங்களில்தான் சொல்லி நம்ம தாலியை அறுப்பாரோ தெரியவில்லை..
“காதலியைக்கூட விட்டுக் கொடுப்பேன். ஆனால் நண்பனை விட்டுத் தரவே மாட்டேன்…” என்கிறார் ஒரு காட்சியில். தனுஷ் பாவம்.. இதையெல்லாம் கேட்டு என்ன காண்டாகப் போகிறாரோ..?!
“நான் மோசமானவன்தான். ஆனால் கெட்டவனில்லை” என்கிறார் இன்னொரு காட்சியில். இந்த ‘மோசமானவன்’, ‘கெட்டவன்’ – இது இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. சிம்புவிடம்தான் கேட்க வேண்டும்.
காதலிகள் காதலர்களை கழட்டிவிடுவதுதான் இப்போதைய தமிழ்நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை என்பது போல திரைக்கதை அமைத்து ஜவ்வாய் இழுத்திருக்கிறார்கள். அதிலும் வண்டி, வண்டியாக சிம்பு பேசும் காதலிகளை திட்டும் வசனங்களையெல்லாம் கேட்கும்போது பதிலுக்கு நமக்கும் சிம்புவை வண்டை, வண்டையாய் திட்டத்தான் தோன்றுகிறது..!
படத்தில் எங்கெங்கு பார்த்தாலும் டபுள் மீனிங் டயலாக்குகள்.. அதிலும் பட்டவர்த்தனமாய் ஒலிப்பதுதான் கொடூரம். சிம்பு மட்டுமில்லை.. படத்தில் இடம் பெற்ற அனைவருமே இதைப் பேசியிருப்பதுதான் மகா கொடூரம்.
மாமனாராக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு இது தேவைதானா..? அவர் ஏன் இப்படிப்பட்ட கேரக்டரில் நடித்தார் என்று தெரியவில்லை. அக்கிரமம், ஆபாசம்.. ஒய்.ஜி.மகேந்திரன் எந்த சுவிட்ச்சை போட்டாலும் அவருக்கு ஷாக் அடிக்குமாம். உடனேயே யாராவது அவருடைய வாயில் வாய் வைத்து காற்றை ஊதி காப்பாற்றுவார்களாம்..!
அவருடைய மனைவிக்கு ‘இதை செய்து’ அலுத்துவிட்டதாம். அடுத்து ஊரில் பலரும் இதனைச் செய்திருக்கிறார். சிம்புவும் இதனை மூன்று இடங்களில் செய்து தனது ஹீரோத்தனத்தைக் காட்டுகிறார். நல்லா எழுதியிருக்காங்கப்பா திரைக்கதையை.. ஒய்.ஜி.மகேந்திரனின் நடிப்பு கேரியரில் ‘புகழ்’ பெற்ற படமாகிவிட்டது இந்தப் படம். நல்லாயிருக்கட்டும் அவர்.
இதேபோல் ரேஷன் கடை வாசலில் கியூவில் நிற்கும்போது காதலர் கொட்டாவி விடுவாராம். அதைப் பார்த்து காதலியும் கொட்டாவிவிட்டால் காதல் இருக்கும் என்று அர்த்தமாம். இதற்காக எடுக்கப்பட்டிருக்கும் காட்சியைப் பார்க்கும்போது இயக்குநரை விரட்டி விரட்டி அடிக்க வேண்டும் போலத்தான் தோன்றுகிறது.
விஜயகுமாரை வைத்து ஒரு காட்சி. அவருக்கு இளமையான மனைவி கிடைக்கிறார். இப்போவெல்லாம் இளைஞர்களை விரும்புவதைவிடவும் பெரிசுகளைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள் என்று ஒரு டயலாக்கு.. கோவை சரளா அஸ்வின் தாத்தாவை லவ்வுகிறார். கதைப்படி அவர் வயதானவர்தானே என்பதால் கண்டு கொள்ளக் கூடாதாம்..! ஆனாலும் அவரும் தனது மகள் வயதான தமன்னாவுடன் லவ்வுக்காக போட்டி போடுகிறார்..! கொடுமையான காட்சிகளப்பா..!
இந்த லட்சணத்தில் ‘இன்னிக்கு ராத்திரிக்கு மட்டும் லவ் பண்ணு’ன்னு ஒரு மாதிரியான பாடல் வேறு.. இசையமைத்த யுவனுக்கு அதிகமான வேலைகளே இல்லை. சிம்புவுக்கான தீம் மியூஸிக்கையே படம் முழுக்க நிரவிவிட்டிருக்கிறார்.  ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்துதான் பாவம். எப்படித்தான் இத்தனை காட்சிகளை கஷ்டப்பட்டு படமாக்கினாரோ..? ஸ்கிரீனில் பார்க்கும் நமக்கே இத்தனை கோபம் வருகிறதே..? நேரில் பார்த்திருக்கும் அவருக்கு..? உங்களது பொறுமைக்கு எங்களது பாராட்டுக்கள் ஸார்..!
படத்தின் முதல் காட்சியே ஒரு முழம் பூவை எடுத்து நம் தோளில் மீது ஏறி அமர்ந்து காதில் பூ சுற்றியது போலிருக்கிறது. மதுரை சிறையிலிருந்து மைக்கேல் தப்பிக்கும் காட்சியை அந்த அளவுக்கு நம்பகத் தன்மையுடன் காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
துவக்கத்தில் முன்னாள் நாயகி கஸ்தூரி தனது கவர்ச்சியான உடலைக் காட்டி ஒருவனை மயக்கி அழைத்து வந்து படுக்கையில் கட்டிப் போட்டுவிட்டு “என்னையவா கூப்பிடுற.. நான் தமிழச்சிடா…” என்று வீர ஆவேசம் பேசுகிறார். கேட்டால் இவர்தான் உச்ச போலீஸ் அதிகாரியாம்.
பாரில் அமர்ந்து இப்படி சைடாக லுக்விட்டு உதட்டைச் சுழித்து கூப்பிட்டால் எந்த நாட்டு ஆணாக இருந்தாலும் வரத்தான் போகிறான். “நான் சுத்த தமிழச்சின்னு சொல்லிப்புட்டு நீ ஏம்மா அங்க போய் உக்காந்து வாடா மாமான்னு கூப்பிட்ட..?”ன்னு கேக்கணும்..! ஆனால் யார்கிட்டன்னுதான் தெரியலை..!
மிகப் பெரிய டானான மைக்கேலை தேடு தேடு என்று தேடுகிறார் கஸ்தூரி. ஆனால் டான் எப்படி துபாயில் டான் ஆனார் என்பது பற்றி ஒரு சின்ன காட்சிகூட இல்லை. கஸ்தூரியின் லோ கட் ஸ்லீவ்லெஸ் பனியனை பார்த்த திருப்தி மட்டுமே..! இப்படியுமா துபாயில் போலீஸ்காரங்க இருக்காங்கோ..? இயக்குநர் ரொம்பத்தான் தின்க் பண்ணியிருக்காரு..! இப்படி எத்தனை, எத்தனை லாஜிக் ஓட்டைகள் என்றெல்லாம் கணக்குப் பார்க்கவே முடியாது. படம் முழுக்கவே ஓட்டைகள்தான்.
பின்னந்தலை முடியை சிலுப்பிவிட்டு “சிறப்பு” என்று சொல்லும் மேனரிசத்துடன் வலம் வருகிறார் மதுரை மைக்கேல் என்னும் சிம்பு. இது அக்மார்க் அப்படியே டி.ராஜேந்தர்தான். வேறெந்த நடிப்பும் இல்லை. ஏதோ மேம்போக்காக சைடில் நின்றபடி இணை இயக்குநர் வசனத்தை எடுத்துக் கொடுக்க அதனை அப்படியே ஒப்பித்துவிட்டு போயிருக்கிறார் சிம்பு.
அஸ்வின் தாத்தா இதற்கும் மேல.. தலை முடியையும், மீசை முடியையும் டை அடித்துவிட்டால் அவர் தாத்தாவாம். இவர் தமன்னா மீது காதல் கொள்ளும் கதையையும் ஏற்க முடியவில்லை. இள வயதில்தான் பிடிக்காமல் பிரிந்து போன காதலி மீது கோபம் வரும். ஆத்திரம் வரும்.. ஆனால் இந்த வயதிலும் அஸ்வின் தாத்தாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வர.. அடுத்த பாகத்தில் தமன்னாவை என்ன கிழி, கிழிக்கப் போறேன் பாருங்க என்று சொல்லி முடித்திருக்கிறார்.
இதில் மூன்றாவது கேரக்டராக திக்கு சிவாவாகவும் அறிமுகமாகிறார் சிம்பு. இது அப்படியே அவரது தம்பி குறளரசன் தோற்றம். அவராவது உருப்படியாய் இருப்பாரா என்பதை அடுத்த பாகம் வரும்வரையிலும் நாம் உயிருடன் இருந்தால் பார்ப்போம்.
முதல் பாகமாவது ஒரு அளவுக்கு உட்கார வைத்து பார்க்க வைத்திருக்கிறார்கள். ஆனால் இரண்டாம் பாகத்தில் எப்படியாவது தப்பிச்சுப் போகணுமேன்னு நினைக்க வைத்திருக்கிறார்கள். இதில் இன்னொரு பாகமும் வரப் போகுதாம்.. தமிழ் சினிமா ரசிகனை காப்பாற்ற வழியே இல்லையா..?

0 comments: