வனமகன் - சினிமா விமர்சனம்

26-06-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாகவும், பழம்பெரும் பாலிவுட் நடிகரான திலீப்குமாரின் பேத்தியான சாயீஷா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். சாயீஷாவுக்கு இதுதான் தமிழில் முதல் படம்.
மேலும், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, சண்முகராஜ், வருண், தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி,  ரம்யா, அர்ஜூன், சாம்பால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ஸ்டில்ஸ் – ராமசுப்பு, கன்சல்டன்ட் புரொடியூஸர் – ஜி.தனஞ்செயன், ஒலிப்பதிவு – எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன், ஆடை வடிவமைப்பு – பிரியங்கா ஜாவேரி, ஷாஹின் அஹ்மத், ஒப்பனை – பட்டினம் ரஷீத், நடனம் – பிருந்தா, பிரசன்னா, காயத்ரி ரகுராம், பாடல்கள் – மதன் கார்க்கி, கலை இயக்கம் – ஜெய லட்சுமிநாராயணன், சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா, படத் தொகுப்பு – ஆண்டனி, இசை – ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு – எஸ்.திருநாவுக்கரசு, எழுத்து, இயக்கம் – விஜய்.

ஹீரோயின் சாயீஷா மிகப் பெரிய கோடீஸ்வரப் பெண். பெற்றோரை இழந்து அப்பாவின் நண்பரான பிரகாஷ்ராஜின் பராமரிப்பில் இருப்பவர். தனது நண்பிகளுடன் அந்தமானுக்கு சுற்றுலா செல்கிறார். சென்ற இடத்தில் அவருடைய காரில் மோதி காயமடைகிறார் ஆதிவாசி மனிதரான ஜெயம் ரவி.
ஜெயம் ரவி மயக்கமடையவே.. அவரை அங்கேயே விட்டுவிடாமல் லோக்கல் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்க்கிறார்கள் சாயிஷா அண்ட் டீம். அந்த மருத்துவமனையில் மேல் சிகிச்சைகளுக்கு வழியில்லை என்பதால் சென்னைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்துகிறார்கள்.
இதனால் சென்னைக்கு தங்களுடனேயே ஜெயம் ரவியையும் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்க்கிறார் சாயிஷா. சிகிச்சைக்குப் பின்னர் ஜெயம் ரவி சாயிஷாவின் வீட்டுக்கே வந்துவிடுகிறார்.
ஆனால் வந்த பின்புதான் தெரிகிறது ஜெயம் ரவி சாதாரணமான நம்மைப் போன்ற மனிதரல்ல என்று..! ஆதிவாசி மனிதராகவும், மொழி தெரியாதவராகவும், பேசத் தெரியாதவராகவும், நகர வாழ்க்கையின் நாகரிகம் தெரியாதவராகவும் இருக்கிறார் ஜெயம் ரவி.
முதலில் அவர் செய்யும் அட்ராசிட்டியால் அலறும் சாயிஷா பின்பு இவர் போன்ற மனிதர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை பற்றி இணையம் மூலமாக படித்துத் தெரிந்து கொண்டு அதன்படியே ஜெயம் ரவியிடம் பழகுகிறார். அன்பாகப் பேசுகிறார். இது பலனளிக்க.. இதன் பின்பு சாயிஷா என்ன சொன்னாலும் ஜெயம் ரவி கேட்கத் துவங்குகிறார்.
பிரகாஷ்ராஜின் மகனான வருண், சாயிஷாவை கல்யாணம் செய்ய தயாராக இருக்கிறார். ஆனால் சாயிஷா இதற்கு மறுப்புத் தெரிவிக்க இந்தச் சண்டையில் இடையில் புகும் ஜெயம் ரவி, வருண் சாயிஷாவை தாக்க முற்படுவதாக நினைத்து வருணை போட்டு புரட்டியெடுக்கிறார்.
இப்போதுதான் ஜெயம் ரவி என்றொரு ஆதிவாசி மனிதர் சாயிஷாவின் வீட்டில் அவருடனேயே வாழ்ந்து வருவது சாயிஷாவின் நண்பர்கள் அனைவருக்குமே தெரிய வருகிறது. இந்த நேரத்தில் இதுவரையிலும் ஜெயம் ரவியை தேடி வந்த அந்தமான் போலீஸ் ஜெயம் ரவியை உண்மையாகவே வலையை வீசித்தான் பிடித்துத் தூக்கிச் செல்கிறது.
அதிர்ச்சியடையும் சாயிஷாவும் அவருடைய மேனேஜர் தம்பி ராமையாவும் ஜெயம் ரவியை மீட்பதற்காக அந்தமான் செல்கிறார்கள். இதே நேரம் சாயிஷாவை மீட்பதற்காக பிரகாஷ்ராஜூம் ஒரு பெரிய போலீஸ் படையுடன் அந்தமானுக்குள் புகுகிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை..!
உண்மையில் இப்படியொரு படத்தை தனது சொந்தத் தயாரிப்பில் எடுக்கத் துணிந்த இயக்குநர் விஜய்க்கு மிகப் பெரிய சல்யூட். 2010-ம் ஆண்டில் இருந்தே இதனை பல்வேறு தயாரிப்பாளர்களிடத்தில் சொல்லியும் அவர்கள் யாரும் தயாரிக்க முன் வரவில்லை என்றார் விஜய். அதுவும் உண்மைதான். நிச்சயம் யாரும் வர மாட்டார்கள். அவர்களிருக்கும் பயமும் நியாயமானதுதான்.
படத்தின் ஹீரோ ஒரு வசனம்கூட பேச மாட்டார். டூயட்டுகளும் இருக்க முடியாது. சீரியஸ் கதை என்பதால் நிச்சயம் ரிஸ்க்குதான் என்று பலரும் மறுதலித்த இந்தக் கதையை தானே சொந்தமாக தயாரித்து வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் விஜய்.
பல்வேறு ஆங்கிலப் படங்களில் பார்த்த கதைதான். டார்ஜான் சீரியஸ் படங்களின் கதைதான் இந்தப் படத்தின் அடிப்படை கதையாக இருந்தாலும் தமிழுக்காக சிலவைகளை புதியதாக செய்திருக்கிறார் இயக்குநர் விஜய்.
ஜெயம் ரவியின் உடல் வாகு ஆதிவாசி மனிதனின் தோற்றத்திற்கு மிகப் பெரிய உதவியாக இருந்திருக்கிறது. மேக்கப் போடாத முகம், நடிப்பைக் காட்டாத முகம்.. முரட்டுத்தனத்துடன் இருக்கும் முகம் என்று எப்போதும் காணாத ஒரு ஜெயம் ரவியை இந்தப் படத்தில் காணலாம்.
சுவரை இடித்துக் கொண்டு உள்ளே வந்து நிற்பது.. எதுவுமே நடக்காதது போல திரும்பிச் செல்வது.. ஏசி காற்றைவிடவும் இயற்கையான காற்றை நேசிக்கும் அதே குணம்.. மரத்தின் மீது தாவியேறும் அந்தப் பழக்கம்.. மரத்தை கட்டியணைத்து தூங்கும்விதம்.. என்று அனைத்திலும் படம் பார்க்கும் அத்தனை போலியான நாகரிக மனிதர்களையும், ஆதிவாசி வாழ்க்கைக்கு ஏங்க வைத்துவிட்டார் ஜெயம் ரவி.
இன்னொரு சிம்ரன் என்று உறுதியாச் சொல்லலாம் ஹீரோயின் சாயிஷாவை. அப்படியே மெழுகு பொம்மை போல் இருந்தாலும், நடிப்பில் மிகப் பெரிய ஸ்கோர் செய்திருக்கிறார் என்று உறுதியாய் சொல்லலாம். பணக்காரத் திமிர். இள வயதுக்கே உரித்தான பயம். இதுவரையில் சந்தித்திராத ஒரு புதுமையான ஆணை பார்த்தவுடன் அவன் மீது கொள்ளும் பரிதாபம்.. காதலே இல்லாமல் ஜெயம் ரவி மீது ஏற்படும் பரிவு.. அந்தப் பாசத்தை வெளிப்படுத்தும்விதம் என்று சாயிஷாவின் நடிப்புக்கு ஸ்கோப் உள்ள இடங்கள் நிறைய. அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார் சாயிஷா.
அதிலும் ஜெயம் ரவி, புலியை காப்பாற்றும் காட்சியில் 2 நிமிட தனி மோனோ ஆக்டிங் காட்சியில் அசத்தியிருக்கிறார் சாயிஷா. இதுதான் போதாதென்று நடனத்தில் சின்ன பிரபுதேவா என்று சொல்லும் அளவுக்கு ஸ்பிரிங்காய் வளைந்து கொடுத்திருக்கிறார். நடனத்தை அமைத்ததே பிரபுதேவாதானாம். அத்தனை அழகாய், ஓயிலாய் நடனடமாயிருக்கிறார் சாயிஷா. வெல்கம் தேவதையே..!!!
மேனேஜராக நடித்திருக்கும் தம்பி ராமையா பல இடங்களில் ரசிகர்களைக் காப்பாற்றியிருக்கிறார். ஹீரோ வசனமே பேசவில்லை. ஹீரோயினும் நடித்துக் கொண்டேயிருக்கிறார். எங்கள் சார்பாக யாருமே பேச மாட்டீர்களா என்ற தியேட்டர் ரசிகர்களின் கேள்விக்கு தம்பி ராமையாதான் பல இடங்களில் பதில் சொல்லியிருக்கிறார்.
இதேபோல் பிரகாஷ்ராஜ். வழக்கமான வில்லன் வேடத்தில் கடைசிவரையிலும் தனது வில்லத்தனத்தைக் காட்டிக் கொள்ளாத குணச்சித்திர வேடத்தை அணிந்திருக்கிறார். இவருடைய மகனாக வருண்.. கொஞ்ச நேரமே ஆனாலும் கடைசியில் பரிதாபமான முடிவு. ஜெயம் ரவியிடம் இத்தனை அடி வாங்கி நடிக்க இவருக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை. தைரியமான முடிவுதான்..!
காடும், காடு சார்ந்த இடமும் என்று சொல்லி இயற்கை அன்னையை ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு. அடிக்கடி காட்டும் ஏர் வியூ காட்சியை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. அந்தமானின் அழகை இத்தனை அழகாய் இதுவரையிலும் எந்தப் படத்திலும் பார்த்ததில்லை.
பாடல் காட்சிகளிலும் இதுவரையிலும் படம் பிடிக்காத இடங்களை பிரயத்தனப்பட்டு காட்டியிருக்கிறார்கள். ஹீரோ, ஹீரோயினின் உடைகள், இயற்கையின் தோற்றம்.. கேமிராவின் அழகு எல்லாமுமாய் சேர்ந்து பாடல் காட்சிகளை பெரிதும் ரசிக்க வைத்திருக்கின்றன.
படத் தொகுப்பாளர் ஆண்டனியின் கச்சிதமான கத்திரி பணியும் படத்தை தொய்வில்லாமல் கொண்டு போக உதவியிருக்கிறது. சண்டை பயிற்சியால் ஸ்டண்ட் சில்வாவின் அதிரடி பாணி சண்டை காட்சிகளும் படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ‘யேய் அழகம்மா’ பாடல் ‘சங்கத்தில் பாடாத கவிதை’ மெட்டில் அசத்தலாய் ஒலிக்கிறது.. ‘டேம் டேம்’ பாடலில் சாயாஷாவின் சுறுசுறுப்புக்காகவும், அழகுக்காகவே பார்க்க வைக்கிறது. பின்னணி இசையில் அதிகம் இசைக்காமல் பார்த்துக் கொண்டமைக்காக மட்டுமே ஹாரிஸுக்கு நமது நன்றிகள்.
ஜெயம் ரவி தன் கண் பார்வையில் படும் பழங்களை அதீத பசியால் அபேஸாக்கும் காட்சியில் ‘ச்சீ’ என்று நம்மை பேச வைத்துவிட்டு பின்பு இன்னொரு காட்சியில் அதே பசியுணர்வோடு சாயிஷாவும், தம்பி ராமையாவும் அதே பழங்களை தின்னும் காட்சியில் பாசத்தோடு பார்க்கும் ஜெயம் ரவியின் முகத்தை பதிவு செய்திருக்கும்விதமே, இயக்குநர் விஜய்யின் இயக்கத்திற்கு இதுவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..!
லோக்கல் இன்ஸ்பெக்டர் சண்முகராஜாவின் குழந்தை காணாமல் போய் ஜெயம் ரவியின் கூட்டத்தாரிம் சிக்கி பின்பு ஒரு நாள் அவரிடத்திலேயே வந்து சேரும் அந்தக் காட்சியும் படத்தில் ரசனையான திரைக்கதை.
இயற்கை வளங்கள் நமக்காக வழங்கப்பட்டவை என்றாலும் காடுகளே உலகம் என்று வாழும் ஆதிவாசி மக்களையும் நாம் வாழ விட வேண்டும். காடுதான் அவர்களது பூமி. அவர்களது சொத்தை நாம் அனுபவிக்க நினைப்பது சட்ட விரோதம் என்கிற கருத்தையும் கொஞ்சம் அழுத்தமாக கிளைமாக்ஸ் காட்சியில் வைத்திருக்கிறார் இயக்குநர். இதற்காக இயக்குநர் விஜய்க்கு ஒரு பாராட்டு..!
நாட்டுக்குள் இருக்கும் வீட்டுக்கு மருமகளாக இருப்பதைவிடவும், காட்டுக்குள் இருக்கும் நாட்டுக்குள் மருமகளாகச் செல்வதே மேல் என்று கடைசியில் முடிவெடுக்கும் நாயகி சாயிஷாவின் அந்த செயல் பெருமைக்குரியதே..!
இத்தனை பெரிய கோடீஸ்வரப் பெண்.. சட்டென்று நடக்கும் ஒரு விபத்துக்கு பயப்படுவது.. அதுவும் போலீஸுக்கு பயந்து ஜெயம் ரவியை மருத்துவமனைக்குக் கொண்டு போக நினைப்பது.. அப்படியே அசால்ட்டாக ஜெயம் ரவியை சென்னைக்கு விமானத்தில் கொண்டு வருவது.. தன் வீட்டில் தங்க வைப்பது என்று நம் இயல்புத் தன்மைக்கு மாறான சில விஷயங்களை படத்தில் செய்திருந்தாலும், இது இயக்குநரின் வசதிக்காக அமைக்கப்பட்ட திரைக்கதை என்று மட்டுமே எடுத்துக் கொள்வோம்..!
காடுகளை அழித்துவிட்டு நாட்டு மக்களைக் காப்பாற்றுவதைவிட்டுவிட்டு காடுகளை வளர்த்தெடுத்து அதன் மூலமாக நாட்டு மக்களைக் காப்பாற்றுவதுதான் நல்ல அரசுகளுக்குரிய செயல் என்பதையும் இயக்குநர் விஜய் இந்தப் படம் மூலமாகச் சொல்லியிருக்கிறார்.
அதே நேரம், இன்றைக்கும் அந்தமானில் இருக்கும் பூர்வகுடி மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், அவர்களை ஏதோ விலங்குகளை பார்வையிடச் செல்லும் டூரிஸ்ட்டுகளை போல சென்று பார்த்துவரும் நம்முடைய இனத்தவர்களை கடுமையாக கண்டிக்கத்தான் வேண்டும்.
அந்த ஆதிவாசி மக்களின் வாழ்க்கையில் நாட்டு மக்கள் குறுக்கிடாதவகையிலும், அவர்களது எண்ணிக்கை கூடவும், அவர்களது வாழ்க்கைத் தரம் உயரவும், அவர்கள் பேசும் மொழி பரவலாக இருக்கும்வகையிலும் அந்தமான் அரசும், இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..!
‘வனமகன்’ நமக்கு பெருமை சேர்க்கும் தலைமகனாக திகழ்கிறான்.. அவசியம் பாருங்கள்..!

0 comments: