உரு - சினிமா விமர்சனம்

19-06-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை வையம் மீடியாஸ் பட நிறுவனத்தின் சார்பில் வி.பி.விஜி தயாரித்துள்ளார்.
இதில் கலையரசன் கதாநாயகனாவும், சாய் தன்க்ஷிகா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் மைம் கோபி, டேனியல் ஆனி, தமிழ்ச்செல்வி, கார்த்திகா உள்பட பலரும் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – வையம் மீடியாஸ், தயாரிப்பாளர் – V.P.விஜி, எழுத்து, இயக்கம் – விக்கி ஆனந்த், ஒளிப்பதிவு – பிரசன்னா S.குமார், இசை – ஜோஹன், படத் தொகுப்பு – சான் லோகேஷ், பாடல்கள் – மதன் கார்க்கி, தயாரிப்பு மேற்பார்வை – கார்த்திக் ஆனந்த கிருஷ்ணன், மக்கள் தொடர்பு – C.N.குமார்.

‘உரு’ என்றால் ‘பயம்’ என்று பொருள். பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை என்பதால் இப்படத்திற்கு ‘உரு’ என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாம்.
பேய்ப் படம்தான் என்றாலும் பேய் இல்லாத திகில் படம் இது. நாயகன் கலையரசன் நல்ல குடும்பக் கதைகளை எழுதி வரும் எழுத்தாளர். சில ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் பல ஆயிரம் காப்பிகள் விற்பனையான புத்தகங்களுக்குச் சொந்தக்காரர். ஆனால் இன்றைய மாறிவிட்ட சமூகச் சூழலில், இவரின் கதைகள் வரவேற்கப்படாமல் போக இவரது புத்தகங்களின் விற்பனை டல்லடிக்கிறது.
புத்தக வெளியீட்டாளர் தனது கோபத்தை எழுத்தாளர் கலையரசனிடம் காட்டுகிறார். அவருடைய கதைகள் அனைத்தும் அவுட் ஆஃப் ஆர்டர் என்பதால்  இன்றைய காலகட்டத்திற்கேற்ப ரசிகர்களை மிகவும் கவரும்படியான கதைகளை எழுதச் சொல்கிறார்.
இப்போது கலையரசனுக்கு பணம் ஒரு பெரிய பிரச்சினையாகி அவர் முன் நிற்க.. அவருடைய மனைவி தன்ஷிகாவோ இந்த எழுத்தாளன் பொழைப்பை தலைமுழுகிட்டு படித்த வேலைக்கு போய் சம்பாதிக்கும்படி சொல்கிறார். வீட்டில் மனைவியின் சம்பாத்தியத்தில் இதுவரையிலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கு, இப்போது இதுவொரு தன்மானப் பிரச்சினையாகிறது.
எப்போதுமே டிரெண்ட்டில் இருக்கும் ஒருயொரு கான்செப்ட் பயம்தான். திரில்லர் கலந்த கதைகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம் என்பதால் திரில்லர் கதையை எழுத முடிவெடுத்து யோசிக்கிறார் கலை. என்ன செய்யலாம் என்று யோசித்தவருக்கு ஒரு சப்ஜெக்ட் பிடிபடுகிறது.
பதிப்பாளரிடத்தில் கதைக் கருவைச் சொல்லி ஓகே வாங்கிக் கொண்டு கதையை எழுதத் துவங்குகிறார். ஆனால் சென்னை வீட்டில் இருந்தபடியே அவரால் ஒரு பக்கத்திற்கு மேல் எழுத முடியாமல் போகிறது. எனவே, அந்தக் கதையை எழுதுவதற்காகவே கொடைக்கானல் அருகேயிருக்கும் மேகமலைக்கு செல்ல முடிவெடுக்கிறார் கலையரசன்.
அங்கு சென்று தனிமையில் அமர்ந்து கதை எழுதத் தொடங்குகிறார் கலை. அப்போது கதையில் அவர் என்னவெல்லாம் எழுதுகிறாரோ, அதுவெல்லாம் அப்படியே நிஜத்தில் அப்போதே அவரருகே நிகழ்ந்து அவரை பயமுறுத்துகின்றன. அவரைச் சுற்றி பல அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
கதையில் அவர் தொடர்ந்து எழுதி வரும் உருவமில்லாத ஒரு உருவம், திடீரென்று கலையரசனின் முன்பாக வந்து அவரையே கொலை செய்ய முயல்கிறது. அதனிடத்தில் இருந்து அவர் தப்பிக்க நினைக்கிறார். அதே சமயம் கலையரசனை தேடி வரும் அவரது மனைவி தன்ஷிகாவும், அந்த உருவத்திடம் சிக்கிக் கொள்கிறார். இதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதுதான் இந்த பரபரப்பான திகில் படத்தின் கதை.
முதல் பாராட்டு இயக்குநருக்கு. இது சைக்காலஜிக்கல் திரில்லர் கதை. இதனையே கடைசிவரையிலும் சாமர்த்தியமாக மறைத்துக் கொணர்ந்து இறுதியில் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இருந்தாலும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் புரியும்வகையில் இன்னும் எளிமையாக படத்தின் முடிவையும், கதைச் சுருக்கத்தையும் கொடுத்திருக்கலாம். கிளைமாக்ஸ் எத்தனை பேருக்கு புரியுமென்று தெரியவில்லை என்பதுதான் இந்தப் படத்தின் ஒரேயொரு சின்ன பலவீனம்.
பல காட்சிகள், திரைக்கதை அமைப்பு, திரில்லருக்கான அமைக்கப்பட்ட சேஸிங் காட்சிகள்… அந்தக் கொடைக்கானல் வீட்டையே தலைகீழாக புரட்டிப் போடும் அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கும் விரட்டல் காட்சிகள்.. தன்ஷிகா, கலையரசனுக்கு இடையில் நடக்கும் சண்டை காட்சிகள்.. ஒவ்வொரு திரில்லிங்கிலும் ஒரு புது டிவிஸ்ட்டை கொடுத்து திசை திருப்புவது.. கிளைமாக்ஸில் பட்டென உடையும் புதுக் கதை.. அந்தப் புதுக் கதையிலும் பிறக்கும் கடைசி டிவிஸ்ட்டான கிளைமாக்ஸ் என்று படம் நெடுகிலும் வியாபித்திருக்கிறது இயக்குநரின் கதையாக்கத் திறமையும், இயக்கத் திறமையும். முதல் பட இயக்குநர் என்பதால் இயக்குநர் விக்கி ஆனந்துக்கு ஒரு மிகப் பெரிய சல்யூட்..!
அடுத்த பாராட்டு ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமாருக்கு. முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் கேமிராவின் சித்துவிளையாட்டில்தான் படத்தையே அதிக நேரம் ரசிக்க முடிந்திருக்கிறது. கொடைக்கானலின் இரவு நேர அழகை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார்.
அதே நேரம் தன்ஷிகா, கலையரசன், உருவம் சம்பந்தப்பட்ட காட்சிகளின் விரட்டுதலில் இருக்கும் ஒரு படபடப்பை, டென்ஷனை, திகிலை, திரில்லரை மிகச் சிறப்பான இயக்கத்தின் மூலமாக மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளரின் கேமிரா வித்தையாலும் சிறப்பு செய்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
கலையரசனைவிடவும் மிக அதிகமாக துன்பப்பட்டு நடித்திருப்பவர் தன்ஷிகாதான். இவர் அளவுக்கு எந்தவொரு நடிகையும் இத்தனை அடி, உதை வாங்கியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். பாராட்டுக்கள் தன்ஷிகா. தன்னுடைய எமோஷன்ஸ் மொத்தத்தையும் படம் முழுவதிலும் கொஞ்சமும் குறையாமல் வழங்கியிருக்கும் தன்ஷிகாவால்தான் படத்தை நகர்த்த முடிந்திருக்கிறது.
அந்த பயவுணர்வு, கோபம்.. பரிதவிப்பு.. படபடப்பு.. எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்கிற முனைப்பு.. கணவன் மீதான கோபம்.. ஆனால் கொலை செய்ய தயங்கும் பரிதாபம் என்று பலவற்றையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார் தன்ஷிகா. வெல்டன் மேடம்..!
கலையரசனுக்கும் இது புதுமையான வேடம்தான். தன்னுடைய பச்சாபத்த்தை தீர்த்துக் கொள்ள மனைவியைத் திட்டிவிட்டு சிகரெட்டுக்காகவே அலைவது.. எழுத்துக்களே நேரில் வந்து கதையை நடத்திக் காட்டுவதினால் ஏற்படும் பயம்.. அந்தப் பயத்தினால் அவருக்குள் ஏற்படும் மனச்சிதைவு மாற்றம்… அந்த உருவத்தில் இருந்து கொண்டு அவர் செய்யும் ஆக்சன் காட்சிகள்.. கடைசியாக இது எதுவுமே தான் செய்யவில்லை என்பதுபோல் மனோதத்துவவியல் வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது என்று தன்னுடைய கேரக்டரில் குறையில்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் கலையரசன்.
கூடவே மைம் கோபி, தமிழரசன், டேனியல், தன்ஷிகாவின் அண்ணனாக நடித்தவர் என்று பலரும் தங்களுக்கான கேரக்டர்களை புரிந்து செய்திருக்கிறார்கள்.
ஜோகனின் பின்னணி இசையும் இன்னொரு பலம். கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் கார்த்திகா திடீரென்று கதவில் வந்து மோதி நிற்கும் காட்சியில் பார்வையாளர்களுக்கு ஏற்பட்ட ‘திக்’ என்ற உணர்விற்கு இயக்குநரும், இசையமைப்பாளருமே காரணம். அத்தனை நடுக்கத்தைக் காட்டியிருக்கிறது அந்தக் காட்சி.
இதேபோல் பல சேஸிங் காட்சிகளில் பின்னணி இசைதான் நம்மையும் விடாமல் பார்க்க வைத்திருக்கிறது. திரில்லருக்கான பொருத்தமான இசையை வழங்கியிருக்கும் ஜோகனை மனதாரப் பாராட்டுகிறோம்.
சான் லோகேஷின் படத் தொகுப்பில் படத்தின் காட்சிகள் இடையே எந்தவித சிராய்ப்பும் இல்லாமல் கச்சிதமாக நறுக்கியிருப்பது தெரிகிறது. அடுத்தடுத்த காட்சிகளின் நகர்தல் புரிந்தாலும் அந்த திரில்லிங் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருந்தது.. இது மாதிரியான படங்களுக்கேற்ற படத் தொகுப்பை வழங்கியிருக்கிறார் சான் லோகேஷ். பாராட்டுக்கள் ஸார்..!
கொடைக்கானலில் 4 டிகிரி கடும் குளிரில் பல நாட்கள் கடும் சிரமத்திற்கிடையே இந்தப் படத்தை படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இந்தக் கடின உழைப்புக்கான பலன் திரையில் தெரிகிறது. இதற்காக படக் குழுவினருக்கு நமது சல்யூட்.
இந்த ‘உரு’ திரைப்படம் உங்களுக்கு நிச்சயமாக ஒரு திரில்லிங் அனுபவத்தைக் கொடுக்கும். அவசியம் படத்தை பாருங்கள்.. அனுபவியுங்கள்..!

0 comments: