CSK - ஷபிக் சார்லஸ் கார்த்திகா - சினிமா விமர்சனம்

29-03-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

விட்டால் பேய்ப் படம். அடித்தால் காமெடி படம்.. இதுவும் இல்லையா.. இருக்கவே இருக்கிறது சஸ்பென்ஸ்-திரில்லர் படம். இந்த மூன்றும்தான் இப்போதைக்கு தமிழ்ச் சினிமாவின் டிரெண்ட்.
இதில் சஸ்பென்ஸ்-திரில்லர் டைப்பில் வெளிவந்திருக்கும் இன்னொரு திரைப்படம்தான் இது. சார்லஸ், ஷபிக், மற்றும் கார்த்திகா என்னும் மூன்று கேரக்டர்களின் வாழ்க்கையில் ஓரிரு நாட்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இந்தப் படத்தின் கதைக்கரு.

ஷபீக் தூத்துக்குடியில் தனது தாய், தந்தை மற்றும் இரண்டு தங்கைகளுடன் வசிப்பவன். வேலை எதுவும் நிரந்தரமில்லை. கிடைத்த வேலையைச் செய்து வந்தாலும் தனது தங்கைகளை கரை சேர்க்க முடியாமல் தவிக்கிறான். இதோடு இவனுக்கும் ஒரு காதல் உண்டு.
கார்த்திகாவின் சொந்த ஊரும் தூத்துக்குடிதான். ஷபீக்கின் குடும்பத்துடன் நெருங்கிய நட்பு கொண்டவள்.  ஆனால் வேலை பார்ப்பது சென்னையில். வைர பிஸினஸ் செய்யும் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில்..
சார்லஸ் கார்த்திகாவின் காதலன். காதலுக்காக நிறைய பொய்களைச் சொல்லி சமாளித்து வருபவன். இதுதான் இவர்களது கேரக்டர் ஸ்கெட்ச்.
தன்னுடைய தங்கையின் திருமணத்திற்காக பணத்தேவையுடன் அலைந்து கொண்டிருக்கிறான் ஷபிக். தனது நண்பன் கள்ளக்கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கிறான் என்பது தெரிந்தும் அவனிடத்திலேயே வேலை கேட்கிறான். அவன் வைரக்கடத்தல் வேலையைச் செய்யும் பவ்சான் பாயிடம் ஷபிக்கை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துகிறான்.
ஏற்கெனவே இந்தக் கடத்தல் தொழிலில் இருப்பவர்களையெல்லாம் அடையாளம் கண்டு கொண்டிருக்கும் போலீஸிடமிருந்து தப்பிக்க நினைத்து தனது அடுத்த கடத்தலுக்கு புதிய ஆளை அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறான் பவ்சான் பாய். அந்த நேரத்தில் ஷபிக் வசமாக மாட்டிக் கொள்ள.. முன் பணத்தைக் கொடுத்து அவனது வாழ்க்கையை புக் செய்துவிடுகிறான் பவ்சான் பாய்.
8 கோடி ரூபாய் பணத்தை ரொக்கமாக கொடுத்து வைரங்களை வாங்கி வரச் சொல்கிறான் பவ்சான். ஷபிக்கும் அவன் சொன்னபடியே வைரங்களை வாங்கும்போது போலீஸ் பார்த்து ஷபிக்கை துரத்துகிறது. ஷபிக் அவர்களிடமிருந்து தப்பித்துச் செல்லும்போது அவசரத்தில் பேருந்து நிலையத்திற்குள்ளேயே வந்துவிடுகிறான்.
அதில் ஒரு பேருந்தில் கார்த்திகா சென்னைக்கு போக தயாராக இருப்பது தெரிந்தும் அவளிடம் அந்த வைரங்கள் அடங்கிய சின்ன பெட்டியைக் கொடுத்துவிட்டு தான் மட்டும் தனியே சென்று தப்பிக்க நினைக்கிறான்.
ஆனால் போலீஸ் சந்தேக்க் கேஸில் ஷபிக்கை ஸ்டேஷனில் காவல் காக்க வைக்கிறது. மறுநாள் காலையில் இன்ஸ்பெக்டர் வந்த்தும் கையெழுத்து வாங்கிவிட்டு அவனை வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.
அதற்குள்ளாக வைரங்கள் கைக்கு வராத கோபத்தில் பவ்சான் பாய், ஷபிக்கின் அப்பாவைக் கடத்திக் கொண்டு போகிறான். ஷபிக் பவ்சான் பாயிடம் சென்று உண்மையைச் சொல்லி அழுக.. சென்னைக்கு தனது கூட்டாளிகளுடன் சென்று கார்த்திகாவிடம் இருக்கும் வைரங்களை வாங்கி வரச் சொல்கிறான் பவ்சான். அதுவரையிலும் ஷபிக்கின் அப்பா பிணைக்கைதியாக தன்னிடம்தான் இருப்பார் என்றும் சொல்கிறான்.
ஷபிக் பவ்சான் பாயின் கூட்டாளிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருக்க.. அதே நேரம் காதலன் சார்லஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவனது காதலுக்கு குட்பை சொல்லும் கார்த்திகா தொடர்ந்து வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு போக நினைக்கிறாள்.
கார்த்திகா வேலை பார்த்த நிறுவனத்தின் உயரதிகாரிகளான சஞ்சய், சந்துரு இருவரும் தங்களது நிறுவனத்தின் பணத்தைக் கையாடல் செய்து அதனை பவ்சான் பாயிடம் கொடுத்து ரகசியமாக வைரங்களை வாங்கி விற்று பிசினஸ் செய்து வருகிறார்கள். இவர்கள் கொடுத்த 8 கோடி ரூபாய் பணத்தைதான் ஷபீக் கொடுத்துவிட்டு வைரங்களை வாங்கினான்.
இப்போது இந்த நிறுவனத்தில் வேலையைவிட்டுச் செல்லும் சிஇஓ கம்பெனி பணத்தில் கையாடல் நடந்திருப்பது தெரிந்து இதனை பாஸிடம் சொல்லப் போவதாக மிரட்ட.. சிஇஓ-வை சந்துருவும், சஞ்சயும் சேர்ந்து கொலை செய்கிறார்கள்.  இதனைப் பார்த்துவிடும் கார்த்திகாவையும் கொலை செய்ய அவர்கள் துடிக்க.. அதற்குள் இரவாகி கட்டிடம் சீல் வைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.
ஒரு பக்கம் பூட்டப்பட்ட கட்டிடத்திற்குள் உயிருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கிறாள் கார்த்திகா. செல்போன் செத்துப் போய்விட்டதால் கார்த்திகாவைத் தொடர்பு கொள்ள முடியாத தவித்த நிலையில் சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் ஷபிக்.. இன்னொரு பக்கம் கார்த்திகாவிடம் மன்னிப்பு கேட்டு தனது காதலை மீண்டும் வாழ வைக்க அதே பில்டிங்கின் வாசலில் காத்திருக்கும் சார்லஸ்.. இந்த மூவரின் கதி கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் இந்தப் படம் சொல்லும் சுவாரஸ்யமான திரைக்கதை.
நடிகர்களின் நடிப்பை தன்னுடைய இயக்கத் திறமையால் அழகாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் இயக்குநர் சத்தியமூர்த்தி சரவணன். இவரது அழகான, திறமையான இயக்கத்தினால் படமே ஒரு நீட்டான ஓவியம் போல வந்திருக்கிறது..!
ஷபிக்காக நடித்த மிஷால் நசிர் அனைவரைவிடவும் கொஞ்சம் அதிகமான ஸ்கோர் செய்திருக்கிறார். இயலாமைத்தன்மையுடனும், எதையாவது செய்து காசு சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆதங்கத்துடன் சோகமான முகத்துடன் கடைசிவரையிலும் இயல்பாகவே நடித்திருக்கிறார்.
சார்லஸாக நடித்திருக்கும் சரண்குமார்.. ஏற்கெனவே இனிது இனிது படத்தில் நடித்தவர்தான். தாயிடம் ஒரு மாதிரியும், காதலியிடம் ஒரு மாதிரியும் பேசி நடித்து தனது காதலை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவரது தவிப்பு ஒரு அறுசுவை. கட்டிடத்தின் வாசலில் நின்று கொண்டு கார்த்திகாவை பார்க்க ஒவ்வொரு முறையும் முயலும்போதும் நம்மையும் சேர்த்தே பதட்டப்பட வைத்திருக்கிறார்.
கார்த்திகாவான ஜெய்குஹேனி. போட்டோஜெனிக் முகம்.. படத்தின் பிற்பாதி முழுக்க ஓடிக் கொண்டேயிருக்கிறார். காதலன் சார்லஸின் அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டதும் உறுதியான குரலில் காதலை அந்த இடத்திலேயே கட் செய்துவிட்டு போகின்ற காட்சியில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இவரை பாடாய்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குநர். கை, கால்களைக் கட்டிப் போட்டு பேரலுக்குள் போட்டு தண்ணீரில் மூழ்கடித்து கொல்லப் பார்ப்பது. கிடைத்த நேரங்களில் அடி, உதையை வாங்கிக் கொள்வது.. வில்லன்கள் இவரை துவைத்து எடுப்பது என்று வேறெந்த ஹீரோயினும் இந்தளவுக்கு தனது உடலை புட்பாலாக்கிக் கொள்ள சம்மதித்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.. இதற்காகவே இவருக்கு ஒரு பூச்செண்டை பார்சல் செய்ய வேண்டும். பாடல் காட்சிகளில் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மிக அழகாக தென்படுகிறார். இவருக்கு இன்னமும் நிறைய நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் நமக்கு நல்லதுதான்..!
வில்லன்களாக நடித்திருக்கும் சஞ்சய், சந்துரு அதிகம் மிரட்டவில்லை என்றாலும், கவனிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு சில காட்சிகள் என்றாலும் ஷபிக்கின் தந்தையாக நடித்தவரின் அந்த வாட்டமான வட்ட முகம் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. வசனமே இல்லாமல் தனது மகனை பார்த்து இயலாமைத்தன்மையுடன் ‘எப்போ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போற?’ என்பது போல பார்க்கின்ற காட்சியில் கொஞ்சம் உச்சுக் கொட்டத்தான் வைத்திருக்கிறார்.
சித்தார்த்த மோகனின் இசையில் பாடல்கள் பரவாயில்லைதான். இந்த மாதிரியான சஸ்பென்ஸ், திரில்லர் படங்களுக்கு மிகப் பெரிய எதிரியே பாடல் காட்சிகள்தான். இதில் முழுமையாக நீக்கியிருக்கலாம். அதிசயமாக இரண்டு ஒளிப்பதிவாளர்கள் சரவணன், ஜி.மனோகரன் பணியாற்றியிருக்கிறார்கள். பில்டிங்கில் நடக்கும் சேஸிங் காட்சிகளை பரபரப்புடன் படமாக்கியிருக்கிறார்கள்.
அதிகமான வசனங்களையெல்லாம் கொட்டாமல் காட்சிக்குத் தேவையான வசனங்களை மட்டுமே வைத்திருப்பதால் படத்தின் அதிகக் காட்சிகளை ரசிக்க முடிந்திருக்கிறது. வசனம் எழுதிய அண்ணன் கோவி.லெனினுக்கு வாழ்த்துகள்.
முதற்பாதியிலேயே படம் மெதுவாக நகரத் தொடங்கி இண்ட்டர்வெல் பிளாக்கில்தான் வேகமெடுக்கிறது.. இடைவேளைக்கு பின்பு அது பரபரதான்.  சின்னச் சின்ன சீரியல் டைப் திரைக்கதை காட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் படம் ஒரு நல்ல சஸ்பென்ஸ்-திரில்லர் கலந்த போரடிக்காமல் செல்லும் பொழுதுபோக்கு படம்தான்..!

0 comments: