நதிகள் நனைவதில்லை - சினிமா விமர்சனம்

29-03-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வேலையில்லா பட்டதாரி இளைஞனின் வாழ்க்கையைச் சொல்ல வந்து, கடைசியில் தேசத்தைக் காக்கும் போராளியின் கதையாக உருமாறியிருக்கும் படம் இது.

வணிகவியலில் முதுகலைப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர் பிரணவ். இவருக்கு தோதான வேலை கிடைக்கவில்லை. செல்லுமிடங்களில் பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்ற நிலை.
வீட்டில் தண்டச் சோறு என்று திட்டும் அப்பா. ஒரு பெண் குழந்தையோடு வீட்டில் இருக்கும் விதவை அக்கா. கல்யாண வயதில் தங்கை.. இவர்களை வைத்துக் கொண்டு வேலைக்குப் போகாமல்.. நண்பர்களுடன் வெட்டிப் பேச்சு பேசி.. ஊர்த் திருவிழாவில் நாடகம் போட்டு.. கரகாட்டக்காரிகளுடன் நடனமாடி, விளையாடி ஊரைச் சுற்றி வருகிறார் ஹீரோ. இவரையும் ஒரு பெண் காதலிக்க முன் வருகிறாள். ஹீரோவின் ஏழ்மை நிலையையும் தாண்டி காதலித்து வருகிறார் ரிஷா.
இவரது பக்கத்து வீட்டுக்கு குடி வருகிறார் இன்னொரு ஹீரோயின் மோனிகா.  ஒரு நாள் மோனிகாவின் வீட்டில் திருடர்கள் நுழைய.. அவர்களை காப்பாற்றப் போய், திருடர்களை விரட்டியடிக்கும் சண்டையின்போது மாடியில் இருந்து கீழே விழுகும் ஹீரோ தனது ஒரு காலை இழக்கிறார். ஏற்கெனவே தண்டத்துக்கு இருக்கும் நிலையில் இப்போது அப்பாவின் தீவிர வெறுப்புக்கு ஆளாகிறார் ஹீரோ.
இந்த நிலையில் ஹீரோவின் தங்கைக்கு வரன் வருகிறது. வரதட்சணை, 100 பவுன் நகை என்றெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் கேட்க.. இதைப் புரட்டிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஹீரோ. ஆனால் அவரால் இப்போதும் முடியவில்லை.. கூடவே அவரது காதலியும் அவரை மறுத்துவிட்டுப் போகிறாள். வெறுத்துப் போகிறார் ஹீரோ.
மோனிகாவின் புண்ணியத்தால் செயற்கைக் கால் கிடைக்கிறது. இதனை வைத்து வேலைக்கு முயற்சி செய்யாமல், கிடைக்கிற வேலையை பார்ப்போம் என்று நினைத்து குப்பையள்ளும் வேலைக்குக்கூட செல்கிறார்.
இடையில் தன்னால்தானே ஹீரோவுக்கு இந்த நிலைமை என்று நினைத்த மோனிகா ஹீரோவை திருமணம் செய்து கொள்ள முன் வருகிறார். இது பிடிக்காத ஹீரோவின் அப்பா இனிமேலும் உன்னை வீட்டில் வைத்திருக்க முடியாது என்று சொல்லி ஹீரோவை விரட்டியடிக்கிறார்.
எங்காவது போய் தற்கொலை செய்து கொள்ள நினைத்து ஒரு அணைப்பகுதிக்கு வரும் ஹீரோ அணையை வெடி வைத்துத் தகர்க்க நினைக்கும் தீவிரவாதச் செயலை முறியடிக்கிறார்.
இப்போது ஹீரோவுக்குக் கிடைக்கும் பாராட்டையும், பணப் பரிசையும் நினைத்து அவரிடம் வந்து ஒட்டிக் கொள்கிறார் தந்தை. இனி ஹீரோ என் செய்கிறார் என்பதுதான் கடைசி ரீலின் கதை..!
ஹீரோ மிகவும் கஷ்டப்பட்டு வசனங்களை உச்சரிப்பதைப் பார்த்தால் அவருக்கு நடிப்பு டிரெயினிங் இன்னமும் தேவையாய் இருக்கிறது. ஹீரோயின்கள் இருவருமே நிறைய படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர்கள் என்பதால் இவர்களது நடிப்பிற்குக் குறைவில்லை.
ஹீரோவின் தங்கை கேரக்டரில் நடித்திருக்கும் கல்யாணி நாயர் புது வரவு. தந்தையால் அவமானப்படுத்தப்படும் அண்ணன் மேல் காட்டும் கரிசனமும், பாசமும் சீரியல்களையெல்லாம் தோற்கடித்த காட்சிகள் .
மோனிகா பாடல் காட்சிகளிலும், நடிப்பிலும் குறையே வைக்கவில்லை. அழுத்தமாக கிடைத்த வேடத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். அதற்குள் நடிப்புக்கு குட்பை சொன்னால் எப்படி..?
ஹீரோவின் நண்பர்களாக வருபவர்களின் சிறிது நேர அலப்பறையைக்கூட தாங்க முடியவில்லை. ஆனால் இவர்களிடையே இருக்கும் திருநங்கை கேரக்டர் ரசிக்க வைத்திருக்கிறார்.
சண்டை காட்சி மட்டும் ஓகே.. சண்டை பயிற்சியாளர் தவசிராஜ் உருண்டு, புரண்டு கடுமையாக உழைத்திருக்கிறார்.
செளந்தர்யனின் இசை குறிப்பிடத்தக்கது. ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, அனிருத் போன்ற கோடிகளில் சம்பளமாக வாங்குபவர்களின் இசையைவிடவும் செளந்தர்யனின் இசை மிகவும் சிறப்பானது.. அனைத்து பாடல்களுமே கேட்கும் ரகம்தான். தனியார் பண்பலை வானொலிகள் இது போன்ற நல்ல பாடல்களை தொடர்ந்து ஒளிபரப்பினால் பல இசை ரசிகர்களின் காதுகளையும் இந்தப் படத்தின் இனிமையான இசை சென்றடையும்.
தங்கப்பதக்கம் வென்ற ஒருவனுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதெல்லாம் நம்பும்படியாகவாக இருக்கிறது..? கதையின் அடிப்படையே கோளாறாக இருப்பதால் ஹீரோவின் வேலையில்லாத விரக்தியை உண்மையாக எடுத்துக் கொண்டு அவருக்காக பாவப்பட முடியவில்லை.
மிகவும் நல்ல கதைதான். ஆனால் இயக்கம்தான் பாடாய்படுத்துகிறது. இந்தப் படத்தின் இயக்குநர் இனிமேலும் நான்கைந்து படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் பெற்றுவிட்டு வந்து படங்களை இயக்கலாம். அந்த அளவுக்கு இயக்கம் மோசம். ஒரு ஹீரோயினை அறிமுகப்படுத்தும் காட்சி எப்படியிருக்க வேண்டும் என்பதுகூட தெரியாமல் இயக்கியிருந்தால் எப்படி..? திரைக்கதையும் மிக எளிதாக யூகிக்கக் கூடியதாகவே இருக்கிறது.
‘நதிகள் நனைவதில்லை‘ என்று கவித்துவம் வாய்ந்த தலைப்பை வைத்திருந்தாலும், படத்தில் இடம் பெறும் பல வசனங்களை கவித்துவமாக எழுதியிருந்தாலும்  படம் கவிதை வடிவுக்கு வரவில்லை என்பதுதான் உண்மை.!

0 comments: