Showing posts with label மன்மோகன்சிங். Show all posts
Showing posts with label மன்மோகன்சிங். Show all posts

கிரிக்கெட்டிற்காக 40000 - நாட்டிற்காக 1000..! பெருமை கொள்வோம்!

08-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானமே, 'நாக்க முக்க' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ஆடிக் கொண்டிருக்க.. வந்திருக்கும் இந்திய ரசிகர்கள் அனைவரும் பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் ஆவலுடன் காத்திருக்கும் இதே நேரத்தில், இந்தியத் தலைநகர் டில்லியின் ஜந்தர்மந்திர் என்னுமிடத்தில் 72 வயதான ஒரு இந்தியரான முதியவர் அன்னா ஹசாரே.. ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கோரி இன்றோடு 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்..!



சென்னை சேப்பாக்கத்தில் தற்போது திரண்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 40000. ஆனால் டெல்லியில் ஹசாரேயைச் சுற்றிலும் வெறும் 1000 பேர் மட்டுமே இருக்கிறார்களாம். ஒரே நாடுதானாம்.. ஆனால் ஒருவரின் பிரச்சினை மற்றவருக்கு பிரச்சினையாக இல்லையாம்..! மற்றவரின் பிரச்சினை இன்னொருவருக்குத் தொல்லையாக இல்லையாம்..!

வருங்கால இளைஞர் சமுதாயம்தான் இந்த நாட்டை வழி நடத்தப் போகிறது என்று கஞ்சா விற்று அரசியல்வியாதியானவர் முதற்கொண்டு அப்துல்கலாம்வரையிலும் சொல்லிவிட்டார்கள். ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் இருக்கும் 40000 இளைஞர்களுக்கு இன்றைக்குக் கிடைக்கின்ற கிரிக்கெட் விருந்துதான் முக்கியமாக இருக்கிறது..!

இதே நேரத்தில் சன் தொலைக்காட்சியினர் தாங்கள் தயாரித்திருக்கும் மாப்பிள்ளை படத்தின் முதல் காட்சியில் திரைக்கு முன்னே இந்திய இளைஞர் சமுதாயம் குத்தாட்டம் போடுவதையும் காலையில் இருந்தே காட்டி வந்து தங்களது தேச பக்தியை பறை சாற்றி வருகின்றனர்..!

பொழுதுபோக்கு என்கின்ற வார்த்தையே இப்போது தொலைந்துபோய் அதுதான் வாழ்க்கை என்கிற அளவுக்கு ஊடகங்கள் நமது இளைஞர்களை மாயவலைக்குள் கொண்டுபோய் சிக்கவைத்துவிட்டார்கள்.

இது மறைமுகமாக நமது பிரச்சினைகளிலிருந்து நம்மை அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய் மறைத்துவைத்துவிட்டு, தெருவில் இருந்த பிரச்சினை நம் வீட்டிற்குள் வந்தவுடன் நம்மை அதேபோல் தூக்கிக் கொண்டு வந்து வீட்டுக்குள் விட்டுவிட்டு வெளிக் கதவைச் சாத்திச் செல்லும் தந்திரத்தை இந்திய அரசியல் வர்க்கமும், அதிகார வர்க்கமும், பணக்காரத் திமிர்த்தனமும் போட்டி போட்டுச் செய்து வருகிறார்கள்.

காலையில் கொல்கத்தாவில் இருந்து கிளம்பும்போது தான் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவளிப்பதாக பேட்டியளித்திருக்கும் ஷாரூக்கான், சாயந்தர வேளையில் இதே மைதானத்தில் ஷ்ரேயாவுடன் நாக்க முக்க.. நாக்க முக்க.. என்று குத்தாட்டம் போடுகிறார். ஆதரவுகளை வாயால் வழங்குவோம்..! அதே நேரத்தில் தாங்கள் சம்பாதிப்பதற்கு மட்டுமே உடல் உழைப்பை நீட்டுவோம் என்ற சுயநலத்திற்கு ஷாரூக்கான் மட்டும் விதிவிலக்கா என்ன..?

அன்ன ஹசாரே அப்படியென்னதான் சொல்கிறார்..? அரசியல்வியாதிகள்.. அதிலும் பிரதமர், ஜனாதிபதி என்று எவரையும் விட்டுவிடாமல் அனைவருமே ஊழல் வழக்குகளின் முன் நின்றால் விசாரிக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பது போன்ற உச்சபட்ச அதிகாரத்துடன் கூடிய லோக்பால் சட்ட மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்கிறார். இது நியாயம்தானே..?

ஆனால் அரசியல்வியாதிகளுக்கு இது எப்படி பிடிக்கும்..? அவர்களுடைய அடிமடியிலேயே கை வைத்து, அவர்களது பொழைப்பைக் கெடுக்கின்ற அளவுக்கு ஒரு சட்டத்தை அவர்களே கொண்டு வர வேண்டும் என்று கூறினால் இதனை ஏற்பதற்கு இவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது.

இந்த நாட்டில் இதுவரையிலும் எத்தனையோ லஞ்ச ஊழல் வழக்குகள் அரசியல்வியாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன. மக்கள் முன் ஆதாரங்கள் குவித்து வைக்கப்பட்டாலும், அரசியல்வியாதிகள் தப்பித்து அதிகாரிகளை மட்டும் பகடைக்காயாக்கிவிடுகிறார்கள்..!

எத்தனை எத்தனை ஊழல்கள்..? முந்த்ரா ஊழல் தொடங்கி தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழல்வரையிலும் அத்தனையிலும் அரசியல்வியாதிகளின் கை வண்ணம்தான்..!

1975-ம் ஆண்டு: லாட்டரி ஊழல்

1990-99-ம் ஆண்டு:போபர்ஸ் ஊழல்

1992-ம் ஆண்டு: ஹர்ஷத் மேத்தா ஊழல்

1993-ம் ஆண்டு: ஹவாலா ஊழல்

1996-ம் ஆண்டு: பீகார் கால்நடை தீவன ஊழல்.  முன்னாள் அமைச்சர் சுக்ராம் மீதான டெலிகாம் ஊழல் .

1999 முதல் 2001வரை பங்கு சந்தை புரோக்கர் கேதன் பரேக் செய்த பங்கு சந்தை ஊழல்

2001-ம் ஆண்டு: ராணுவத்துறையில் நடந்த ஆயுத பேர ஊழல்.

2003-ம் ஆண்டு: போலி முத்திரைத்தாள் ஊழல் (அப்துல் கரீம் தெல்கி)

2005-ம் ஆண்டு: உணவுக்காக எண்ணெய் தொடர்பான முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் சம்பந்தப்பட்ட ஊழல்.

2009ம் ஆண்டு: பல்வேறு இடங்களில் சொத்துக்களை குவித்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மீதான 4,000 கோடி ரூபாய் ஊழல்

2010-ம் ஆண்டு: "2-ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், கடைசியாக, காமன்வெல்த் விளையாட்டு ஊழல்.

இப்படி கணக்கு, வழக்கில்லாமல் ஊழல்களை செய்வதையே குறிக்கோளாகக் கொண்ட இந்தியத் திருநாட்டின் அரசியல்வியாதிகளை உண்மையாகவே தண்டித்து அரசியலில் இருந்து அவர்களை அப்புறப்படுத்த நினைத்துத்தான் இந்த லோக்பால் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.

உச்சநீதிமன்றம் சர்வவல்லமை படைத்ததாக இருந்தாலும், அது இன்னமும் தனது முழு அதிகாரத்தையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. கூடவே அந்த அமைப்பின் உறுப்பினர்கள்கூட அரசியல்வியாதிகளின் அல்லக்கைகளாக மாறிவிட்ட கொடூரமும் நிகழ்ந்துதான் வந்திருக்கிறது..!

அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பாகத்தான் லோக்பால் அமைப்பைக் குறிப்பிடுகிறார்கள்.

பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும். லோக்பால் உருவானால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்கிற அளவுக்கு அவற்றுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும்.

இப்படிப்பட்ட லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை  நிர்ணயிக்கும் சட்டம்தான் லோக்பால் சட்டம்.


ஏற்கெனவே இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் இந்தியத் தண்டனை சட்டம்-1860 மற்றும் ஊழல் தடுப்பு சட்டம்-1988 ஆகியவை, அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவற்றின்படி நடவடிக்கை எடுக்க, போலீசோ, வேறு புலனாய்வு துறையோ, மாநில, மத்திய அரசுகளிடமிருந்தோ அனுமதி பெற வேண்டும்.

இதன்படி பார்த்தால் கருணாநிதி மீது ஊழல் வழக்கை இப்போது தெரிவித்தால் அதற்குக் கவர்னர் அனுமதியளித்தால் மட்டுமே நாம் அவர் மீது தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடர முடியும். இல்லையெனில் முடியாது. இது இந்த அரசியல் ஓநாய்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தாங்களே போட்டுக் கொண்ட ஒரு விதிவிலக்கு..!

அரசில் நிர்வாக துறையை பொறுத்தவரை மத்திய புலனாய்வு துறை மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆகிய இரண்டு மட்டுமே, ஊழல் வழக்குகளை கையாள்வதில் பிரதானமாக செயல்படுகின்றன.

இது முறையாக நிறுவப்பட்டால், அரசின் சட்டத் துறை மற்றும் நிர்வாகத் துறையின் கலவையாக இருக்கும். புகார்களைப் பெற்று விசாரணை நடத்துவதில் நிர்வாகத் துறையைப் போன்றும், தண்டனை கொடுப்பதில் நீதித் துறையைப் போன்றும் செயல்படும். மக்களின் பிரச்னை, அலைக்கழிப்பு இல்லாமல் ஒரே இடத்தில் தீர்க்கப்படும்.

ஆந்திரா, அசாம், பீகார், சத்திஸ்கர், டில்லி, குஜராத், ஜார்க்கண்ட், அரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள், லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்கியுள்ளன.

இவை, மாநில அளவில் லோக்பாலின் வேலைகளை, குறுகிய அளவில், அதிகாரமற்ற நிலையில் செய்து வருகின்றன. இவற்றில் பிரபலமானது, கர்நாடகாவில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் இயங்கும் லோக் ஆயுக்தா. இந்த அமைப்பு சமீபத்தில் கர்நாடகாவில் அரசியல் பலம் படைத்த பெல்லாரி சகோதரர்களின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டியது.

கடந்த 1968-ம் ஆண்டு முதல், லோக்சபாவில் எட்டு முறை இந்த லோக்பால் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டும், தகுந்த காலவரைக்குள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

தற்போது நிலவும் தொடர் ஊழல் சூழலில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், ஊழலை தடுக்க நடவடிக்கைகள் பரிந்துரைக்க, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் லோக்பால் மசோதாவின் வடிவம் மற்றும் அதை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிந்துரைக்கப்பட்டது.

லோக்பால் மசோதாவின் வடிவம் குறித்து போராடி வரும் அன்னா ஹசாரே உட்பட அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொண்டால், இந்த ஆண்டே லோக்சபாவில் நிறைவேற வாய்ப்பு உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக இந்த மசோதாவுக்காகக் குரல் கொடுத்து வரும் அன்ன ஹாசரே ஒத்துக் கொள்ளாததற்குக் காரணம்,  தற்போது அரசு பரிந்துரைக்கும் லோக்பால் சட்டம் மிகவும் பலவீனமானது. அதன்படி உருவாக்கப்படும் அமைப்புக்கு, வெறுமனே பரிந்துரை செய்யும் அதிகாரங்கள் மட்டுமே இருக்கும்.

இதுவரை வெவ்வேறு அரசு ஆணையங்கள் லோக்பால் குறித்து செய்த பரிந்துரைகளை சேர்த்து, சட்டத்துக்கு வலிமையூட்டும் வகையில், அன்னா ஹசாரே தலைமையில், ஒரு சமூக ஆர்வலர் குழு, மாதிரி மசோதா தயார் செய்திருந்தது. அந்த மாதிரி மசோதாவின் அடிப்படையில் புதிய லோக்பால் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றுதான் அன்னா ஹசாரே கோரியிருக்கிறார்.

அன்னா ஹசாரே தனது பரிந்துரையில் சொல்லியிருப்பது இது :

* அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் மீதும் லஞ்சம் தொடர்பான நீதி விசாரணை நடத்த லோக்பால் கட்டுப்பட்டது. மத்திய ஊழல் கண்காணிப்பு கமிட்டி மற்றும் மத்திய அரசின் அனைத்து கண்காணிப்பு அமைப்புகளும், லோக்பால் அமைப்பிற்குள் கொண்டு  வரப்பட வேண்டும்.

* பொதுமக்களிடமிருந்து, புகார்களை நேரடியாகப் பெற்று, நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரிடமும் சரி பார்க்க வேண்டிய அவசியமோ, அனுமதி பெற வேண்டிய அவசியமோ கமிஷனுக்கு இருக்கக் கூடாது.

* புலனாய்வு முடிந்ததும், வழக்கு தொடரலாம்; ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் அல்லது இரண்டையும் மேற்கொள்ள வேண்டும்.

* லோக்பால் அமைப்புடன் சி.பி.ஐ. அமைப்பும் இணைக்கப்பட்டுவிட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் புலனாய்வு செய்தல், வழக்கு தொடர்தல் ஆகியவைகளை கமிஷன் மேற்கொள்ள முடியும்.

* லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர், 10 உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்களில் 4 பேர் மட்டுமே முன் அனுபவம் இல்லாத வக்கீல்களாக இருக்கலாம்.

* தேர்வு கமிட்டியில் சட்டம் தொடர்பான பின்னணி உடையவர்கள், தலைமை தேர்தல் கமிஷனர், மத்திய கணக்கு தணிக்கை அலுவலக தலைவர், ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்கள், லோக்பால் அமைப்பில் இருந்து வெளியேறும் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.

* லோக்பால் அமைப்பின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த எந்த தடையும் இருக்கக் கூடாது.

* ஓராண்டிற்குள் புலனாய்வை முடிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த ஓராண்டிற்குள் முடிக்க வேண்டும்.

* ஊழல் நிரூபிக்கப்பட்டால், ஊழலில் தொடர்புடைய அனைவரிடமிருந்தும் இழப்பீடு பெறப்பட்டு, அரசு இழப்பைச் சரிகட்ட வேண்டும்.

இப்படி ஆட்டமாய் ஆடுகின்ற அரசியல்வியாதிகளின் தலையைக் கொய்யும் அளவுக்கு நிபந்தனைகளை விதித்தால் அவர்களென்ன செய்வார்கள்..? இதற்காகவாக அவர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்..? ச்சும்மா விட்டு விடுவார்களா என்ன..?

அரசுத் தரப்போ தனது பரிந்துரையாக கமிஷனின் மசோதாவில் சேர்த்துள்ள வெளக்குமாத்துக் குச்சிகளைப் பாருங்கள்...

* இந்த லோக்பால் அமைப்பு நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது மட்டுமே லஞ்சம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தும் உரிமை கொண்டது.

* லஞ்சம் தொடர்பான விசாரணையை துவங்கவோ, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக புகார்களை பெறவோ இந்தக் கமிஷனுக்கு அதிகாரம் கொடுக்கப்படாது. புகார்களைப் பெறுவதற்கென நியமிக்கப்படும் எம்.பி.,க்கள் மூலமே, அவை பெறப்படலாம்.
(இங்கேயும் எம்.பி.க்களாம். அப்போதுதானே யார் மீது புகார் வந்திருக்கிறது என்று உடனேயே தெரிந்து கொண்டு தப்பிக்க வழி செய்யலாம்.)

* புகாரில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; அமைச்சர்கள் மீதான புகார் குறித்து பிரதமரிடமோ, பிரதமர், அமைச்சர்கள் மீதான புகார் குறித்து, புகார்களை பெற நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.,க்களிடமோ சிபாரிசு மட்டுமே செய்ய முடியும்.

* காவல் துறைக்கான அதிகாரம், லோக்பால் அமைப்புக்கு கொடுக்கப்படாது. எனவே, எந்த புகார் மீதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது.

* லோக்பால் அமைப்பில் தவறான புகார் தெரிவித்தது உறுதி செய்யப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்.
(இதை மட்டும் வக்கனையா எழுதிட்டானுகய்யா இந்த நாதாரிகள்)

* இந்த அமைப்பை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய கமிட்டி ஒன்று உருவாக்கப்படும்.

* இவர்கள் மூவரும் இணைந்து, லோக்பால் அமைப்புக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர். உறுப்பினர்கள் அனைவரும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக, குறிப்பாக ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பர்.
(முடிஞ்சது மேட்டர்.. இதுக்கு இப்ப இருக்குற மாதிரியே எதையுமே அமைக்காமல் கொள்ளையடிச்சிட்டுப் போயிரலாமே)

* நாட்டின் பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு தொடர்பாக, பிரதமருக்கு எதிராக புகார் வந்தால், அது குறித்து விசாரிக்க பரிந்துரை செய்ய, இந்த அமைப்புக்கு அதிகாரம் கிடையாது.

* புகாரின் அடிப்படையில் விசாரணையை ஆறு மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் துவக்க வேண்டும். ஆனால், எவ்வளவு மாதங்களில், ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை.
(போபர்ஸ் கேஸ் மாதிரி ஆட்சி மாறி வேற ஆட்சி வந்தாலும் வாய்தா போட்டு இழுத்தடிச்சு மறுபடியும் ஆட்சிக்கு வந்து கடைசீல சங்கு ஊதிரலாம்ல..)

* லஞ்ச அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்டவர், தவறான வழிகளில் ஈட்டிய சொத்துக்களை அனுபவிப்பதற்கு, இந்த அமைப்பின் மூலம் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

இப்படி இந்த அரசியல்வியாதிகள் கொண்டு வரப் போகும் கேவலமான மசோதாவை எதிர்த்துத்தான் இந்த முதியவர் காந்தியாரின் ஆயுதமான உண்ணாவிரதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.

இதிலென்ன பிளாக்மெயில் இருக்கிறது..? உண்மையாக பிளாக்மெயில் செய்திருப்பது இந்தக் கேடு கெட்ட, கேவலங்கெட்ட அரசியல்வியாதிகள்தான்..! எங்களை கேள்வி கேட்கவே எவனுக்கும் உரிமையில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்..! நாடு மக்களுக்காகவா அல்லது இந்த ஓநாய்களுக்காகவா..?

முறைப்படி அனைவருக்கும் முன்கூட்டியே தெரிவித்துவிட்டுத்தான் இந்தப் பெரியவர் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளார். முதல் நாள் அன்ன ஹாசரேவை தனது வீட்டுக்கு அழைத்துப் பேசியிருக்கும் மன்னமோகனசிங்கால் அவருக்கு உரிய பதிலையும், விளக்கத்தையும் அளிக்க முடியவில்லை. பாவம் அந்தாளு என்ன செய்வார்..? இத்தாலி அம்மாவின் பெர்மிஷன் இல்லாமல் தனது தலைப்பாகையைக்கூட அவரால் கழட்ட முடியாது..! அந்த லட்சணத்தில்தான் அவர் இருக்கிறார்.

ஒரு நாட்டின் பிரதமரே இந்த லட்சணத்தில் இருக்கும்போது இவரை நம்பி சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தால் என்னவாகும்..? அந்தக் கிழவருக்கு மன உறுதியும், நல்ல எண்ணமும் இருக்கிறது. இவரைவிட பத்து வயது அதிகமான நமது மாநிலத்தின் பெரிசும் ஏதோ ஒரு நாள் நல்ல ஹாயான சமாதியொன்றில் போய் அரைமணி நேரம் படுத்துறங்கிவிட்டு வெற்றிகரமான உண்ணாவிரதம் என்று சொல்லிவிட்டு வரத் தெரியாத நபர்தான் இந்தத் தாத்தா..

இதோ 4-வது நாளாக உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். அரசுகள் இப்போதும் சல்ஜாப்பு சொல்லி வருகின்றன. தேர்தல் பிரச்சார நேரத்தில் இப்படியொரு லொள்ளு தேவையா என்று மன்னமோகனசிங்குக்கு ஏக டோஸ் விழுந்திருக்கலாம்..!

விவசாயத் துறை அமைச்சராக இருப்பதாக தன்னைக் கொள்ளும் சரத்பவார் இவருடைய கடும் எதிர்ப்பினால் லோக்பாலின் அமைப்புக் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் தப்பித்துவிட்டார். தனது ஜென்ம விரோதியுடன் தேசிய அளவில் மோதி தனது பெயரை ரிப்பேராக்கிக் கொள்ள விரும்பாமல் ஒதுங்கிவிட்டார் சரத்பவார்.

இப்போது ஹசாரேவைச் சுற்றிலும் உள்ள அவரது இயக்கத் தொண்டர்களும், ஆர்வமுள்ள,  உண்மையான இந்தியர்களாக அவருக்குத் தோள் கொடுத்து உற்சாகமளித்து வருகிறார்கள்..!

நாமும், நம்மால் முடிந்த அளவுக்கு பெரியவர் அன்ன ஹசாரேவுக்கும் அவரது இயக்கத்திற்கும், அவரது போராட்டத்திற்கும் நமது ஆதரவை வழங்க வேண்டும் தோழர்களே..!

தமிழகத்தில் சென்னை மற்றும் ஈரோட்டில் இது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன என்பது பாராட்டுக்குரியது..!

சாதுவான முயலைக்கூட சீண்டிக் கொண்டேயிருந்தால்கூட லேசாக கடிக்கக்கூட செய்யும். ஆனால் நம்மை குழி தோண்டி புதைக்கும் அளவுக்கான பிரச்சினைகள் நம்மைச் சூழ்ந்திருக்கும் வேலையிலும், நமது தார்மீகமான எதிர்ப்பையும், ஒற்றுமையையும் இந்தக் களத்தில் நாம் காட்டவில்லையெனில் இதன் பாதிப்பு நமது வாரிசுகளுக்குத்தான்..!

கொண்டாட வேண்டியதை கொண்டாட்ட நேரத்தில் கொண்டாடுவோம் இந்தியர்களே..! கிரிக்கெட் எப்போதும் இங்கேதான் இருக்கும். எங்கேயும் ஓடிப் போகாது..!

இப்போது இந்தியன் என்பதை நாம் உணர்வில் காட்ட வேண்டிய நேரம். மாறாக அந்த உணர்வை உணவில் மட்டுமே காட்டி நாம் சோற்றால் அடித்த பிண்டங்களாகக் காட்டுவதில் அர்த்தமில்லை தோழர்களே..!

இந்தியனாக இரு.. இந்தியனாகவே வாழு.. இந்தியனாகவே சாகு என்பதெல்லாம் சரி.. அதற்கு முன்பாக ஒரு நாளாவது நாம் நல்ல மனிதனாக வாழ்ந்து காட்டுவோமே..!?

பதிவிற்கு உதவியவை : பல்வேறு செய்தித் தாள்கள், இணையத்தளங்கள்

2-ஜி நடந்து முடிந்த ஊழல்! 4-ஜி முற்றுப் பெறாத ஊழல்!!

13-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் நடைபெற்றுள்ள எஸ் பாண்ட் ஊழல் பற்றி இந்த வார ஜூனியர் விகடனில் வந்திருக்கும் கட்டுரை இது..!

ஒருவேளை, முதல் ஊழலை முடிந்த வரையில் அமுக்கிப் போடவே இரண்டாவது ஊழல் லீக்-அவுட் செய்யப்பட்டு உள்ளதோ... என்னவோ!    2-ஜி-யை 'ஜன்பத் ஆதரவு பெற்ற ஊழல்’ என்றால், 4-ஜி எஸ்-பாண்ட் ஊழலை 'ரேஸ்கோர்ஸ் ஆதரவு பெற்ற ஊழல்’ என்று சொல்லலாம். ஜன்பத் என்பது சோனியாவைக் குறிக்கும்; ரேஸ் கோர்ஸ் என்பது பிரதமர் மன்மோகன்சிங்கைக் குறிக்கும்!


இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு 150 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை கொடுக்கப்பட்டு இருந்தது. இதற்கு எஸ் பாண்ட் அலைக்கற்றை என்று பெயர். இந்த அலைக்கற்றையில்தான் முன்பு தூர்தர்ஷன் போன்ற சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. பின்னர், இந்த எஸ் பாண்ட்டில் இருந்து, க்யூ பாண்ட்டுக்கு மாறிக் கொண்டனர். இதில் இருந்துதான் இப்போது சன், டாடா, ஏர்டெல் என்று பல சேனல்கள் டி.டி.ஹெச். ஒளிபரப்பை நடத்துகின்றன. காலியாக இருந்த எஸ் பாண்ட்-ஐ வைத்து இஸ்ரோ வியாபாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டது. இதில்தான் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது.

தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியே இந்த முறைகேட்டின் மையப் புள்ளி. இஸ்ரோவைச் சேர்ந்த டாக்டர் எம்.ஜி.சந்திரசேகர் ஓய்வு பெற்றும், இன்னும் சிலர் கட்டாய ஓய்விலும் வெளியேறி இந்த நிறுவனத்தைத் தொடங்கினர்.  இவர்கள் இஸ்ரோ வசம் உள்ள அதிக சக்தி வாய்ந்த 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை தங்கள் வசம் கொண்டுவரும் முயற்சிக்கு வித்திட்டனர்.

12 வருடங்களுக்கு இவர்களுக்கு லைசென்ஸ் தரப்படுகிறது. இஸ்ரோ நிறுவனம் தன்னுடைய வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் மூலம் இந்த ஒப்பந்தத்தை செய்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, 12 வருட காலத்துக்குப் பின்னரும் இதைப் புதுப்பித்துக்கொள்ளலாம்.

2-ஜி விவகாரத்தில் நாடே கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் 4-ஜி விவகாரம் ஒப்பந்தமும் வெளியானதைக் கண்டு பிரதமர் அலுவலகத்துக்கு பயங்கர அதிர்ச்சி. 'இந்த விவகாரம் பிரதமருக்குத் தெரிந்து நடந்ததா? அல்லது பிரதமரை ஏமாற்றிவிட்டு அவரைச் சுற்றி இருக்கும் 'லாபி’ அலைக்கற்றையை முழுங்கியதா?’ என்று பத்திரிகைகளும், எதிர்க் கட்சிகளும் இப்போது பதிலைத் தேடுகின்றன. 

மத்திய அரசாங்கத்தின் 'சி.இ.ஓ.’ என்று அழைக்கப்படுகின்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் நிர்வாகத்தில், எந்த அளவுக்கு ஓட்டைகள் இருக்கின்றன என்பதற்கு இந்த விவகாரம் சரியான உதாரணம்.


இந்திய அரசிடம் இருக்கின்ற சென்சிட்டிவ்வான பல துறைகளில் அணுசக்தியை அடுத்து மிக முக்கிய விவகாரம் விண்வெளி. இந்த விண்வெளியில் என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் ஒரு பிரதமர் இருந்தால், அது நாட்டின் பாதுகாப்பு பற்றி அவருக்கு எந்த அக்கறையும் இல்லை என்றே அர்த்தம்.

இந்த அரசு ஆட்சிக்கு வந்து மன்மோகன்சிங் பிரதமரான பின்னர், இந்த தனியார் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கி 2005 ஜனவரி 28-ல் ஓர் ஒப்பந்தத்தைப் போட்டது. அந்த ஒப்பந்தம், பிரதமருக்கும், ஏன் மத்திய அமைச்சரவைக்கும் சரியாக விளக்கப்பட்டதா என்று தெரியவில்லை. இந்த ஒப்பந்தத்தின்படி இரண்டு செயற்கைக்​கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியாக வேண்டும். இதைத்தான் தெரியாது என்கிறது பிரதமரது அலுவலகம்.

சாதாரணமாக ஒரு செயற்கைக்கோள் தயாரிக்க நூற்றுக்கணக்கான கோடிகள் செலவாகும். சம்பந்தப்​பட்ட அமைச்சருக்கோ, பிரதமருக்கோ தெரியாமல் இந்த செயற்கைக்கோள் திட்டம் தொடங்கப்படாது. ஆனால், பிரதமருக்குத் தெரியாது என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் வெளிப்படையாகப் பத்திரிகையாளர்களிடம் ஒப்புக் கொண்டார். அப்படி​யானால், பிரதமருக்குத் தெரியாமல் மறைத்தவர்கள் யார்?


பிரதமருக்கும், அமைச்சரவைக்கும் சரியாகத் தெரிவிக்கப்படாத இந்த செயற்கைக்கோள்களுக்கு ஆகும் செலவு 2,000 கோடி. இந்த அமைச்சகத்தின் முக்கியத்துவம் கருதி இதற்குப் பிரதமர்தான் கேபினெட் அமைச்சர். அப்போது பிருதிவிராஜ் சௌகான் இணை அமைச்சராக இருந்தார்.

2-ஜி-யில் சிக்கிக் கொண்ட சில தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், கடந்த ஆண்டே இந்த விவகாரத்தை வெளியே லீக் செய்தார்கள். சட்ட அமைச்சகம், ''மற்ற போலீஸ் துறைக்கும் ராணுவத்துக்குமே ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பற்றாக்குறையாக உள்ள நிலையில், மல்டி மீடியாவுக்கு ஒதுக்கத் தேவையில்லை!'' என்று அறிவுரை கூறியது.

2005-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டு, எல்லா பணிகளும் முன்னோட்ட நடவடிக்கைகளும் முடிக்கப்பட்ட பின்னர், 2010 ஜூலை மாதம்தான் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரனின் பரிசீலனைக்கு இந்த ஃபைல் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

2005-ல் தேவாஸ் நிறுவனத்துக்காகத் தயாரிக்கப்பட இருந்த செயற்கைக்கோளுக்கு அனுமதி கேட்டு, கேபினெட்டுக்கு இஸ்ரோ ஃபைல் அனுப்பும்போது, சட்டப் பரிசீலனை செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை. பின்னர் தேவாஸுக்கு முன் கட்டணத்தைச் செலுத்தியபோது பரிசீலனை செய்யப்பட்டதா? அப்போதும் இல்லை.

இவர்களுக்குப் பயம் வந்ததே ஸ்பெக்ட்ரம் 2-ஜி விவகாரம் வெடித்து... சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்த பிறகுதான். அதன் பிறகும்கூட தடுப்பு நடவடிக்கையில் இறங்காமல், மறைக்கும் காரியங்களில்தான் இறங்கினர் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகள்.

கடந்த 7-ம் தேதி, பத்திரிகைகளில் செய்தி வெளிவந்ததுமே லைசென்ஸ் ரத்து என்று அறிவித்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்​பட்டார்கள்!
 
தவறு என்று தெரிந்தும், இதுநாள் வரை ஏன் ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை? காரணம், தேவாஸ் நிறுவனம் ஏற்கெனவே இந்த ஒப்பந்தத்தை வைத்து முதலீடுகளைப் பெற்றுள்ளதோடு இந்தியன் ரயில்வேக்கும், இன்டர்நெட் சேவைகளை வழங்க சில முன்னோட்டங்களையும் செய்து காட்டி வருகிறது. இதோடு, இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸுக்கும், தேவாஸுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்தால் அதற்குக் கோடிக்கான தொகையை ஆன்ட்ரிக்ஸ் கொடுக்க வேண்டியது வருமாம்.

முறைகேடான 2-ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களையே ரத்து செய்ய முடியாது என்று சொல்லி வருவது மாதிரி இதிலும் சிக்கல்கள் உண்டு. ஆக, ஆ.ராசாவுக்கு இணையான சிக்கல்களில் மன்மோகன்சிங் இப்போது மாட்டிக்கொண்டு இருக்கிறார்.


இரண்டு செயற்கைக் கோள்களையும், அதில் இருந்து அலைவரிசைகளை பகிர்ந்தளிக்கும் 10 டிரான்ஸ்​பாண்டர்களையும், தாரை வார்க்கும் விவகாரத்துக்கு இஸ்ரோவின் தலைவராக இருந்த மாதவன் நாயர், அப்போது பிரதமரின் முக்கியச் செயலாளராக இருந்த டி.கே.ஏ. நாயர் ஆகிய இருவர் மட்டுமே பொறுப்பா? அவர்களைப் பின்னால் இருந்து இயக்கிய மனிதர்கள் யார் யார்? இதெல்லாம் அடுத்த கட்ட விசாரணைகளில் தெரியவரும். பிரதமரின் இன்றைய செயலாளர் சந்திரசேகருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்காது என்கிறார்கள்.

தற்போது, 'பி.கே.சதுர்வேதி, ரோடாம் நரசிம்மா ஆகிய இரு அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று பிரதமர் உத்தரவிட்டு இருக்கிறார்.

இந்த தேசம் இன்னும் எதற்கெல்லாம் தலை குனிய வேண்டி இருக்கிறதோ..?

நன்றி : ஜூனியர் விகடன் - 16-02-2011

ஒண்ணே முக்கா லட்சம் கோடி.. 2 லட்சம் கோடி.. அடுத்ததென்ன..?

10-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஏற்கெனவே வெள்ளித்திரையில் ஓடிக் கொண்டிருக்கும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றியே இன்னமும் பேசி முடிக்கவில்லை. அதற்குள்ளாக அடுத்த ஊழல் லீலைகள் அம்பலமாகிவிட்டது..

இப்போதெல்லாம் இந்தியாவில் செய்யும் ஊழல்களின் மதிப்பு கோடி, ஆயிரக்கணக்கான கோடி, லட்சக்கணக்கான கோடி என்று சர்வசாதாரணமாகிவிட்டது. 2-ஜி-ஊழலை வெட்ட வெளிச்சமாக்கிய சி.ஏ.ஜி. என்றழைக்கப்படும் காம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட் ஜெனரல் ஆஃப் இந்தியா என்ற அமைப்புதான் இந்த ஊழலையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

ஆனால் இந்தப் புகார் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே ஒரு முறை எழுந்து அமுங்கிப் போய்க் கிடந்தது. இப்போது 2-ஜி-யில் தி.மு.க.வை இந்தியாவே வறுத்து எடுத்துக் கொண்டிருக்கும்போது பிரதமரையும், அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியையும் மட்டுமே குறிப்பெடுத்துத் தாக்குவதற்காக இந்த ஊழல் விஷயம் மீண்டும் விசுவரூபமெடுத்துள்ளது.

அதற்கேற்றாற்போல் 2-ஜி-யில் சற்று அடக்கி வாசித்து வரும் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவின் காம்பவுண்ட்டில் இருந்து வெளிவரும் பிஸினஸ்லைன் பத்திரிகைதான் இந்த ஊழல் பற்றிய செய்தியை இப்போது வெளிப்படையாக்கி இன்னொரு திசை திருப்பலை செய்திருக்கிறது. இந்த முறை மாட்டியிருப்பது சாட்சாத் அமைதியின் திருவுரும்.. நேர்மையின் சிகரம்.. நாணயத்தின் அடையாளமாகச் சொல்லப்படும் பிரதமர் மன்னமோகனசிங்குதான்.

அவருடைய நேரடி கண்காணிப்பின் கீழ் வரும் வி்ண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் நடந்திருக்கும் இந்த ஊழலையும் படித்துப் பார்த்தால் இந்தியாவில் ஊழலை வளர்த்துவிடுவதற்கு முழு காரணமும் அரசியல்வியாதிகள்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

தகவல் தொழில் நுட்பத் துறை இதுவரையில் 2-ஜி மற்றும் 3-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரங்களை மட்டுமே கையாண்டு வந்திருக்கிறது. பிரதமரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இந்திய விண்வெளித் துறையும் அதன் துணை அமைப்பான இந்திய விண்வெளித் துறை ஆய்வு மையம் ஆகியவையும் பொதுவாக கேபினட்டின் சக்திக்கு அப்பாற்பட்டு வெளியிலேயே செயல்படக் கூடியவையாக உள்ளன.

இந்த மெகா ஊழலில் என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால், முதல் பிள்ளையார் சுழி 2005-ம் ஆண்டு இந்திய விண்வெளித்துறையின் வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரக்ஸுக்கும் தேவாஸ் மல்ட்டி மீடியா என்கின்ற ஒரு தனியார் கம்பெனிக்கும் இடையே போடப்பட்ட ஒரு ஒப்பந்தம்தான்.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரோ, தேவ்ஸ் மல்ட்டி மீடியாக கம்பெனிக்காக ஜி-சாட்-6, ஜி-சாட்-6-ஏ ஆகிய இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த வேண்டும். இதில் ஒரு சாட்டிலைட்டுக்கு தலா 10 டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தி தேவாஸ் மல்ட்டி மீடியா பணம் சம்பாதித்துக் கொள்ளும். அத்துடன் 20 வருடங்களுக்கு எந்தவிதத் தடையுமில்லாமல் மிக விலையுயர்ந்த எஸ் பாண்ட்டின் 70 மெகா ஹெர்ட்ஸ் ஒளிக்கற்றை தேவாஸ் கம்பெனிக்கு இந்திய விண்வெளித் துறையால் தாரை வார்க்கப்படும்.

இந்த எஸ் பேண்ட்டை சர்வதேச தகவல் தொழில் நுட்பத் துறையில் 4-ஜி என அழைப்பார்கள். இதனைப் பயன்படுத்தி தொலைத்தொடர்புத் துறையின் நான்கு விதமான தளங்களிலும் இயங்க முடியுமாம்.

அதாவது லேண்ட்லைன் என அழைக்கப்படும் வீட்டில் உள்ள சாதாரண தொலைபேசி, 2-ஜி எனப்படும் செல்லூலர் தொலைபேசி, 3-ஜயில் வரக்கூடிய குரல் மற்றும் இண்டர்நெட் வசதி, நான்காவதாக செயற்கைக்கோள் மூலம் டவரே இல்லாமல் எல்லா இடத்திலும் பயன்படுத்தக் கூடிய வசதி. இதுதான் இந்த 4-ஜி என்கிறார்கள்.

இந்த ஒளிக்கற்றை இந்தியாவில் 190 மெகா ஹெர்ட்ஸாக இருக்கிறது. இந்த 190 மெகா ஹெர்ட்ஸில் 150 மெகா ஹெர்ட்ஸை விண்வெளி்த் துறையின் பயன்பாட்டில் செயற்கைக் கோள் வசதிக்காகவும், மொபைல் வசதிகளை உருவாக்குவதற்காகவும் மத்திய அரசு அளித்திருக்கிறது.

இதே பேண்ட்டில் உள்ள 20 மெகா ஹெர்ட்ஸை சென்ற ஆண்டு மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூபாய் 12847 கோடி ரூபாய்க்கு அளித்தது. ஆனால் இதே பேண்ட்டில் இருக்கும் 70 மெகா ஹெர்ட்ஸ் அளவுள்ள அலைக்கற்றையை வெறும் 1000 கோடி ரூபாய்க்கு தேவாஸ் நிறுவனத்திற்கு விண்வெளித்துறை அளித்துள்ளது.

சி.ஏ.ஜி.யின் கணக்குப்படி இதன் உண்மையான மார்க்கெட் விலை குறைந்தபட்சம் 2 லட்சம் கோடியாக இருக்கும் என்பதுதான் இதில் இருக்கும் முக்கியக் குற்றச்சாட்டு.

இந்தப் பேரத்திற்காக தகவல் தொழில் நுட்பத் துறை மூலமாக உள்ளே நுழையாமல் விண்வெளித்துறை வழியாக, பின் வழியாக நுழைந்து தனது வியாபாரத்தை முடித்திருக்கிறது தேவாஸ் நிறுவனம்.

இந்த தேவாஸ் கம்பெனியின் உரிமையாளர் பெயர் எம்.ஜி.சந்திரசேகர். இவர் இஸ்ரோவில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி. 2004-ல் இவர் ஓய்வு பெற்ற பின்புதான் இந்த நிறுவனத்தையே துவக்கியுள்ளார்.

இவருடைய கம்பெனியில் புகழ் பெற்ற ஜெர்மன் தொலைத் தொடர்பு நிறுவனமான டாயிஸ் டெலிகாம் 17 சதவிகித பங்குகளைப் பெற்றுள்ளது. அதுவும் இஸ்ரோவுக்கும், தேவாஸ் நிறுவனத்துக்குமான ஒப்பந்தம் நிறைவேறிய பின்புதான்..

இந்த இஸ்ரோவின் முன்னாள் அதிகாரியுடன் பணியாற்றிய இந்நாள் அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து சட்டத்திற்குப் புறம்பாக தொலைத் தொடர்புத் துறையில் தங்களுக்கான பெரிய இடத்தைப் பெறுவதற்காக இந்தக் கம்பெனியை உருவாக்கி, அதனுடன் இது போன்ற ஒப்பந்தத்தை(20 வருடங்களுக்கு 70 மெகா ஹெர்ட்ஸ் எஸ் பேண்ட், வெறும் 1000 கோடி ரூபாய்களுக்கு) செய்து கொண்டனர் என்பதும் சி.ஏ.ஜி.யின் மற்றொரு குற்றச்சாட்டு..

இதில் சி.ஏ.ஜி. சுத்தும் குற்றச்சாட்டுக்களைப் படித்துப் பார்த்தால் நமக்குத்தான் தலை சுற்றுகிறது.

1. எஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரம் தேவாஸூக்கு அளிக்கப்படுவதற்கு முன்பு ஒரு போட்டி ஏலதாரர்கூட அழைக்கப்படவில்லை..

இது எவ்வளவு பெரிய முறைகேடு..? சாலைகளில் ஜல்லி போட்டு சமன் செய்யும் சிறிய வேலைகளுக்குக்கூட ஏலம் முறையைப் பின்பற்ற வேண்டும் என்கிற விதிமுறைகள் இருக்கின்றபோது இவ்வளவு பெரிய வியாபாரத்தை செய்கின்றபோது ஏலத்திற்கே விடாமல் தாங்கள் விரும்பியவர்களுக்குக் கொடுத்தால் இதில் உள்ளடி அரசியலும், ஊழலும் இல்லாமலா இருக்கும்..?

2. குறித்த காலத்திற்குள் செயற்கைக் கோளை செலுத்தாவிட்டால் இந்திய விண்வெளித்துறை ஐரோப்பிய விண்வெளித் துறை மூலம் செயற்கைக் கோளை செலுத்தி தேவாஸுக்கு நஷ்டம் ஏற்பாடதவகையில் பார்த்துக் கொள்ளும் என்ற பெனால்டி விதிமுறையும் இதில் இருக்கிறது.

ஆஹா.. இந்த பாலிஸி நல்லாயிருக்கே. பொதுமக்கள் பணம்  நஷ்டமானாலும் பரவாயில்லை. நாமும், நமது குடும்பமும் கஷ்டப்படக் கூடாது என்கிற நமது சராசரி அரசியல்வியாதிகளின் புத்தி இந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் தொற்றிக் கொண்டுள்ளது என்பது நம்மை அதிர்ச்சியடைய வைத்திருக்கும் செய்தி..

3. ஜி-சாட்-6-ஐ இதுவரை ஏவ முடியாத இஸ்ரோ, ஏற்கெனவே ஏரியன்ஸ் ஸ்பேஸ் என்கிற ஐரோப்பிய விண்வெளி ஏவுவதற்குத் தயாராகி வருகிறது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இஸ்ரோவே செயற்கைக்கோளை ஏவினால் அதற்கு லாபம். இதை ஐரோப்பிய நிறுவனம் மூலம் ஏவினால் எடுத்தவுடனேயே 2400 கோடி ரூபாய் நட்டம் வந்துவிடுகிறது. தேவாஸுக்கு நட்டம் வர வேண்டாம் என்பதற்காகவே இஸ்ரோ நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை என்பதுபோல் இந்த ஒப்பந்தம் இருப்பதை சி.ஏ.ஜி. சுட்டிக் காட்டுகிறது.

ஆமாம். வேறு எதை இந்த நிபந்தனை காட்டுகிறது. ஒரு தனி நபருக்காக இஸ்ரோ என்னும் விண்வெளிக் கழகமே வளைந்து கொடுத்திருக்கிறது என்றால் பணம் எந்த அளவுக்கு பாய்ந்திருக்கிறது என்பதை யூகிக்க முடிகிறது..!

4. இஸ்ரோ அமைப்புக்குள் இருக்கக்கூடிய ஒப்பந்த முறைகள் எதுவும் தேவாஸூடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் பின்பற்றப்படவில்லை. பிரதமர், மத்திய அமைச்சரவை மற்றும் இந்திய விண்வெளி கமிஷன் ஆகிய மூவருக்கும் இந்த ஒப்பந்தத்தைப் பற்றி எவ்வித முறையான தாக்கீதுகளும் செல்லவில்லை.

சபாஷ்.. இதுவும் ஸ்பெக்ட்ரம் போலவேதான். பிரதமரின் டேபிளுக்கே போகவில்லை. எல்லாத்தையும் நாங்கதான் செஞ்சோம் என்று முதலிலும், மாட்டியவுடன் எல்லாத்தையும் அந்த சிங்குகிட்ட சொல்லிட்டு்ததான் செஞ்சேன் என்று மாற்றிப் பேசியும் கவிழ்த்ததைப் போல இதையும் இப்போது மாற்றித்தான் பேசப் போகிறார்கள்.

பிரதமருக்கே இது தெரியாது எனில் நமது அரசியல் நிர்வாக அமைப்பே கேவலமாக இருக்கிறது என்றுதான் பொருள். பின்பு எதற்கு இந்த மனிதர் பிரதமர் என்ற பதவியில் இன்னமும் வெட்கமில்லாமல் ஒட்டிக் கொண்டிருக்கிறாராம்..?

5. இதுவரை இந்திய விண்வெளித் துறை தயாரித்து வந்த அனைத்து செயற்கைக் கோள்களும் மல்ட்டி பர்போஸ் என்றழைக்கப்படும் பல்வேறு பயன்பாடுகளுக்கான செயற்கைக் கோள்கள்தான். ஆனால் தேவாஸுக்காக அவர்களது தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மட்டுமே 2 செயற்கைக் கோள்களை உருவாக்கியிருப்பது நடைமுறையில் இதுவரை இல்லாத நிகழ்வு என்பது மட்டுமில்லாமல், பொது பயன்பாட்டுக்கு உருவாகக் கூடிய ஒரு செயற்கைக் கோளை இந்திய மக்கள் இழந்துவிட்டனர்.

வெரிகுட்.. முழுக்க நனைஞ்சாச்சு.. முக்காடு எதுக்கு என்றுதான் இதற்கும் துணிந்திருக்கிறார்கள்..!

6. எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக இதுவரையில் தேவாஸ் மல்ட்டி மீடியா நிறுவனம் தகவல் தொடர்புத் துறையிடமிருந்து எந்தவிதமான லைசென்ஸையும் பெறவில்லை. லைசென்ஸ் பெறுவதற்கு முன்பு ஸ்பெக்ட்ரம் உறுதி செய்யப்பட்ட உலகத்தின் முதல் கம்பெனியாக தேவாஸ் கம்பெனி இருக்கிறது என்பதுதான் மிகப் பெரிய குற்றச்சாட்டு.

அப்பாடா.. ஊழலுக்கான ஊற்றுக் கண்ணே இங்கேதான் சிக்கியுள்ளது. இப்படி லைசென்ஸே கொடுக்கப்படாத ஒரு நிறுவனத்திற்கு நாட்டின் மிகப் பெரிய சொத்தையே தூக்கிக் கொடுக்கும் அளவுக்குத்தான் நமது மத்திய அரசின் நிர்வாகத் திறன் இருக்கிறது என்றால் இவர்களையெல்லாம் நாம் தலைமை தாங்க வைத்திருப்பதற்கு நாம்தான் வெட்கப்பட வேண்டு்ம். அவர்கள் ஒரு நாளும் வருத்தமோ வெட்கமோ படமாட்டார்கள்..

எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற அரசியல் வேலைப்பாடுகளுடனேயே ஒரு பிரதமர் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தால் நாடு எப்படி வெளங்கும்..? இப்படித்தான் இருக்கும்.

ஒப்பந்தம்தான் போடப்பட்டுள்ளது. இதுவரையில் ஒப்படைக்கப்படவில்லை. ஆகவே பயப்படாதீர்கள் என்கிறார்கள் இப்போது..! இதுவரையில் இது தொடர்பாக இஸ்ரோவில் தொடர்ந்து வந்திருக்கும் வேலைகளுக்கு செய்யப்பட்டிருக்கும் செலவுகளை யார் சுமப்பதாம்..? மன்னமோகனசிங்கின் மாமனாரா..?

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் அது வெறும் யூகமான ஊழல் என்றெல்லாம் கதை விட்டவர்கள்.. லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் தாங்கள் பங்கு விற்ற பணத்தினை லைசென்ஸ் கொடுத்தவர்களுக்கே திருப்பிவிட்டிருக்கும் கதையைப் படித்தவுடன் பதில் பேச தெரியாமல் இப்போது அமைதியாகிவிட்டார்கள்.

அதேபோலத்தான் தேவாஸ் நிறுவனத்தின் ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் மூலம் அந்நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் ஜெர்மனி கம்பெனியின் முதலீடும் ஒரு முறைகேடான பணம்தான். அதில் இருந்து பெருமளவு இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொடுத்தவர்களுக்கு போயிருக்கும் என்பதை இந்திய அரசியலை கூர்ந்து கவனித்து வரும் சாதா இந்தியர்களுக்கே கண்டிப்பாக புரிந்திருக்கும்..!

சி.ஏ.ஜி. சொல்லியிருப்பது, அந்த 4-ஜி அலைக்கற்றையின் இன்றைய மார்க்கெட் மதிப்பு 2 லட்சம் கோடிகளைத் தாண்டிவிடும். அதை பொதுச் சந்தையில் ஏல முறையில் விடுத்தால் இந்த அளவுக்கு பணம் இந்திய அரசுக்கும், மக்களுக்கும் கிடைக்குமே என்ற வகையில்தான் என்பது புரிகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்திருக்கும் பண ஆதாயத்தில் திளைத்துக் குளித்தது யார் என்பதை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் யாராவது மனு தொடுத்தால்தான் வெளிவரும்போல் தெரிகிறது.

ஏனெனில் இன்று நடந்திருக்கும் மத்திய மந்திரி சபை கூட்டத்தில் சில மந்திரிகள் இது தொடர்பாக எப்படி விற்பனை நடந்தது என்று கேட்டதற்கு பிரதமர் பதிலே பேசவில்லையாம்.. ஐயா எப்படி பேசுவார்..? அவரது நேர்மையின் சிகரம் என்ற பெயர்தான் இன்றைக்கு கோவணமாகக் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறதே. இவரது சீர்கெட்ட நிர்வாகத் திறனுக்கு இந்த 2 லட்சம் கோடி மதிப்பு வாய்ந்த மோசடியும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..!

அரசியல்வியாதிகளும், ரெளடிகளும், மாபியாக்காரர்களும், கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும்தான், மோசடியான பத்திரிகையாளர்களும், நேர்மையற்ற எழுத்தாளர்களும் இந்தியாவை அழிவுப் பாதைக்குக் கொண்டு போய் கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், நமது மதிப்பிற்குரிய விஞ்ஞானிகளும் இந்த லிஸ்ட்டில் இணைந்துவிட்டார்கள் என்பதை நினைத்தால்தான் இன்னமும் வேதனையாக இருக்கிறது.

இந்தியாவில் இனிமேல் காமன்மேனுக்கு பதில் ஆறுதலை இன்னொரு காமன்மேன்தான் சொல்ல வேண்டும் போலும்..!

உதவி : பல்வேறு பத்திரிகைகள், இணையத்தளங்கள்

மன்மோகன்சிங் மானமுள்ள மனிதரா..?

17-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ.யை தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டிய பொறுப்பை சுப்ரீம் கோர்ட் தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது..!

நீதியை பரிபாலனம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் உச்சநீதிமன்றம், இப்போது நீதி நிர்வாகத்தையே மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது நமது நாட்டைப் பிடித்த சோகம்தான்..!


"2-ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, சி.பி.ஐ.யும் அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். எந்த உயர் பதவியில் இருக்கும் தனி நபர் மற்றும் ஏஜென்சிகளின் நிர்பந்தங்களுக்கும் கட்டுப்படாமல், விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கடந்த 2001 முதல் 2008-ம் ஆண்டுவரை நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட தொலைத் தொடர்பு கொள்கை பற்றி விசாரிக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு எந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டது  என்பதற்கு, விசாரணையின்போது அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

இந்த விசாரணையின் நிலை அறிக்கையை, சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும், 2011, பிப்ரவரி 10-ம் தேதி, சீலிட்ட கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட் கண்காணிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்து விட்டதால், இந்த மோசடி பற்றி விசாரிக்க சிறப்புக் குழு எதையும் அமைக்க வேண்டிய தேவையில்லை.

ஏனெனில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் விரிவான விசாரணை மேற்கொள்வர் என, சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியமும், சி.பி.ஐ., சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் வேணுகோபாலும் உறுதி அளித்துள்ளதால், சிறப்புக் குழுவுக்கு அவசியம் இல்லை. 

தகுதியில்லாத நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஆடிட்டர் ஜெனரல் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதில், உண்மையிருப்பதாக தெரிகிறது' எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

2-ஜி ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் அளித்த கடன் குறித்த விவரங்கள் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த ஊழலில் வங்கிகளுக்குப் பங்கு உள்ளதா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.

- உரிம ஒப்பந்தத்தில், எந்தெந்த தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

- உரிமம் பெற தகுதியற்ற நிறுவனங்கள் மீது டிராய் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டறிய வேண்டும்.

- 2 ஜி உரிமம் வழங்கியதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று மனுதாரரான மூ்த்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களில் இந்த பெஞ்ச் திருப்தி அடைகிறது. குற்றம் நடந்ததற்கான பூர்வாங்கம் இருப்பதாகவும் உணர்கிறது.

- 2-ஜி ஏலம் தொடர்பான வழக்கு விசாரணையில் சிபிஐ பின் வாங்கியது, பதுங்கியது, தாமதம் செய்தது என்ற பூஷனின் குற்றச்சாட்டையும் இந்த கோர்ட் ஏற்கிறது.

- இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு விட வேண்டும் என்று கோரி மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்காமல் டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது, தவறாகும் என்று இந்த கோர்ட் கருதுகிறது.

- தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரின் அறிக்கை மற்றும் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஏலம் முற்றிலும முறைகேடாக நடந்திருப்பதையும் இந்த கோர்ட் உறுதிப்படுத்துகிறது.

- சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்தவுள்ள விசாரணையின்போது இந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு நடைமுறையால் நாட்டுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்பதையும் தெளிவாக கண்டுபிடிக்க வேண்டும்.

- நீரா ராடியா பேசிய பேச்சுக்கள் அடங்கிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் அனைத்தையும் வருமான வரித்துறை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.

இப்படி அடுக்கடுக்கான உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதில் இருந்து தெரிவது என்னவென்றால் ஒரு வழக்கு விசாரணையை எந்தத் திசையில் நகர்த்துவது, நடத்துவது என்றுகூட செய்யத் தெரியாமல் தேங்கி நிற்கும் அரசுதான் இன்றைக்கு நம்மை ஆண்டு வருகிறது என்பதுதான்..!

உச்சநீதிமன்றத்தின் விளாசலைப் பொறுக்க மாட்டாமல்தான் லண்டனில் பதுங்கியிருந்த நீரா ராடியாவை அவசரமாக வரவழைத்து நேரில் விசாரித்தார்கள்.

நாடு முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தினார்கள். ராசா மற்றும் அவரது கொள்ளைக் கூட்டத்தினரை மிரட்டுவதாக நமக்கு பாவ்லா காட்டி சோதனை நடத்தினார்கள். இப்படி முதல்வர் வீட்டு ஆடிட்டர்வரையில் தங்களது கைவரிசையைக் காட்டி ஷோ காட்டியிருக்கிறது சி.பி.ஐ.

ஆனால் என்ன எடுத்தார்கள்..? எதைக் கண்டுபிடித்தார்கள் என்பதை அவர்கள் இனி சொன்னாலும் ஒன்றுதான்.. சொல்லாமல் விட்டாலும் ஒன்றுதான்..!

இத்தனை பெரிய நீதித்துறை கட்டமைப்பையே ஏமாற்றத் துணிந்த கொள்ளைக் கூட்டம், இவ்வளவு காலமா ஆதாரங்களை  விட்டு வைத்திருக்கப் போகிறார்கள்..?


சரி.. சுப்ரீம் கோர்ட்டின் நேரடி டைரக்ஷனில் சிபிஐ இயங்கக் கூடிய நிலைமைக்குப் போய்விட்டதே என்று நமது பிரதமர் என்று சொல்லப்படும் மன்னமோகனசிங் கொஞ்சமாவது கவலைப்படுவார் என்று நினைத்தீர்களா..? நிச்சயமாக இருக்காது..

மானம், அவமானம் பற்றியெல்லாம் இனிமேலும் அவர் யோசித்துக் கொண்டிருந்தால் பிரதமர் பதவியில் அவர் நீடித்திருக்க முடியாது..  அதிகாரத்தைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, நீ எதற்கும் லாயக்கில்லை. வீட்ல சும்மா இரு என்று நீதிமன்றமே சொல்கின்றவரையில்தான் இவரது வேலை பார்க்கும் லட்சணம் இருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவருக்கு நரசிம்மராவே பரவாயி்ல்லை போலிருக்கிறது..!


இவ்வளவுக்குப் பிறகும் இவர் பிரதமர் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது அரசியல்வியாதிகளுக்கு உரித்தான குணம்தான்..! இப்போதெல்லாம் கோர்ட், கேஸ், புகார்கள் இவையெல்லாம் தினம்தினம் அரசியல்வியாதிகள் சந்திக்கின்ற விஷயங்களாகப் போய்விட்டதால் இதெல்லாம் இவர்களுக்கு மரத்துப் போயிருக்கும்..

இவர்தான் இப்படியென்றால் நமது கல்லுளிமங்கன், தமிழினத் தலைவன், ஊழல் தாத்தா கலைஞர் கருணாநிதி மன்னமோகனசிங்கையும் மிஞ்சிவிட்டார்.

போயஸ் ஆத்தா விடும் அறிக்கைக்கு உடனுக்குடன் பதில் அளித்து நோஸ் கட் அளிக்கும் பணியைச் செவ்வனே செய்து வரும் இவரும், இவரது குடும்ப உறுப்பினர்களும் நீரா ராடியா டேப்புகள் பற்றி மட்டும் இன்றுவரையிலும் வாய் திறக்காதது ஏன்..?

ஜெயலலிதாவின் ஒவ்வொரு அறிக்கையையும் கண் கொத்திப் பாம்பாக பார்த்து வந்து முதல் நாள் அறிக்கையின் முதல் பத்தி, இரண்டாவது நாள் அறிக்கையின் இரண்டாம் பத்தியாக வந்திருக்கிறதே என்று கேட்கின்ற அளவுக்கு புத்திக் கூர்மையுள்ள இந்த மனிதர் தனது மகளும், மனைவியும் ஒரு அரசியல் புரோக்கருடன் தனது கட்சியை விலை பேசும் உண்மை வெளிவந்து இத்தனை நாட்களாகியும் கள்ள மெளனம் சாதித்து வருகிறாரே இது ஏனாம்..?

நேற்றைய ரெய்டுகளுக்குப் பிறகு இவரது துணைவியார் வாய் திறந்து ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். வோல்டாஸ் நிறுவனம் மற்றும் டாடா நிறுவனத்திற்குமான பிரச்சினையில் தனக்குச் சம்பந்தமில்லையென்று சொல்லியிருக்கிறார்.

வோல்டாஸ் நிறுவனம் அமைந்திருக்கும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தின் பவர் ஆஃப் அட்டர்னி தன்னுடைய ராயல் பர்னிச்சர் கடையில் பர்னிச்சர்களைத் துடைக்கும் வேலை செய்து கொண்டிருந்த சரவணன் என்பவருக்குக் கிடைத்தது. அவருக்குத்தான் இதில் தொடர்பு என்று கூறியிருக்கிறார்.

இப்படி கடையில் தூசி தட்டியவருக்கு இத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்கும் அதிகாரத்தைக் கொடுப்பதற்கு டாடா நிறுவனத்தினர் என்ன முட்டாள்களா என்று நாம் திருப்பிக் கேட்கக் கூடாது.. ஏனெனில் இப்படி அறிக்கைவிட்டவர் தமிழினத்தின் தலைவரான கலைஞர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தியம்மாள். அவர் ஒன்று சொன்னால் ஒன்பது சொன்னதற்குச் சமம். கையது வாயது பொத்தி அமைதியாக இருங்கள் என்கிறார்கள்.

இவருடைய திருமகள் கனிமொழியும் நேற்றுதான் வாய் திறந்திருக்கிறார். இதுநாள்வரையிலும் தனது குடும்ப பிரச்சினைகளெல்லாம் வீதிதோறும், ஊர்தோறும், சேனல்கள்தோறும், பத்திரிகைகள்தோறும் நாறிய பின்பும் கண்டுகொள்ளாமல் பணம், அதிகாரம் இரண்டை மட்டுமே லட்சியமாகக் கொண்டு சிரிப்போடு வலம் வரும் இந்த அம்மணி தனக்கும், இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்.

ஆனால் நீரா ராடியாவுடனான பேச்சுக்கள் பற்றி கலைஞர், அவருடைய துணைவியார், மகள், மகன்களான மத்திய அமைச்சர்கள், டேப் பேச்சில் படிபட்ட அமைச்சர்கள், அடிப்பொடிகளான உடன்பிறப்புக்கள் என்று அனைவரும் பதில் சொல்லாமல் இருப்பதில் இருந்தே அவைகள் அனைத்தும் உண்மை என்பது தெளிவாகிறது..!

நேற்று அமைச்சர் பூங்கோதையிடம் இது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கும் அவர் பதில் சொல்லாமல் சென்றிருக்கிறார்.

நித்தியானந்தா ஜெயில் செல்லில் படுத்திருந்த விஷயத்தையே நான்கு தலைப்புகளில் வெளியிட்டு பிரத்யேகச் செய்தி என்று கொண்டாடிய நக்கீரன் தனது இணை ஆசிரியர் வீட்டில் நடந்த ரெய்டையும், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற கதையையும் சுத்தமாக மறைத்துவிட்டது. ஒரு சிறிய செய்திகூட அது பற்றி வெளியிடவில்லை.

இப்படியொரு இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளராக நக்கீரன் கோபால் இத்தனையாண்டு காலத்திற்குப் பிறகு உருவெடுத்திருப்பதற்கு அவருக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வோம்..!

ஆக மொத்தம், பொதுச் சொத்தைத் திருடிய கூட்டம் இன்றைக்கு தேள் கொட்டிய திருடனைப் போல் திருதிருவென முழிக்கிறது.

இந்தக் கள்ள நாடகத்தில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர்கள் இவர்கள்தான் என்பதால் இந்த நடிப்பு இவர்களுக்குக் கை வந்த கலை. திரை விழுகும்வரையில் நடிப்பைக் கொட்டிவிட்டுத்தான் போவார்கள்..!

அடுத்த முறை இவர்களை நாடக மேடையில் ஏற விடாமல் தடுக்கும் பணியை மட்டும் நாம் செய்தால், அது நமக்கும் நல்லது.. நமது வாரிசுகளுக்கும் நல்லது..!

வீணாப் போனாலும் பரவாயில்லை. மக்கள் பட்டினி கிடப்பதே மேல்..!

18-09-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சிறந்த பொருளாதார மேதைதான் நமது நாட்டின் பிரதமராக இருக்கிறார் என்று இந்தியர்களுக்கு இருந்த இறுமாப்பையும், பெருமையையும் மன்மோகன்சிங் தானே தன் வாயால் கெடுத்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.

ஜனநாயக நாட்டில் எல்லாம் மக்களுக்கே என்ற எண்ணம் நமக்கு இருந்தாலும், அதனை அரசியல்வாதிகளாக நாங்கள் பார்த்து கொடுத்தால்தான் உங்களுக்குத் தருவோம் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் நமது பிரதமர்.

மத்திய அரசுத் துறையான இந்திய உணவுக் கழகத்தின் உணவுக் கிடங்குகளில் முறையாக சேமித்து வைக்காமல் பாழாகும் உணவு‌ப் பொரு‌ட்களை, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைகளுக்கு இலவசமாக விநியோகிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் மனிதாபிமானத்துடன் பிறப்பித்த உத்தரவை, செயல்படுத்த முடியாது என்று மிக, மிக சாமர்த்தியமாக மறுத்துள்ளார் மன்மோகன் சிங்.


இதற்காக இவர் சொல்லியிருக்கும் விளக்கம்தான் இந்தியா முழுவதையும் கொஞ்சமல்ல நிறையவே பதற வைத்திருக்கிறது.

 “உச்ச நீதிமன்றத்தின் உணர்வை நான் மதிக்கிறேன், ஆனால் அது தெரிவித்துள்ள கருத்து நடைமுறையில் சாத்தியமற்றது. நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் 37 சதவிகிதத்தினர் உள்ளனர், அவர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவுப் பொருட்களை அளிப்பது எப்படி..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கூடவே அரசின் கொள்கை முடிவுகளில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என்று அட்வைஸ் வேறு..!

உண்மையில் நடந்தது என்ன..? இந்தியா முழுவதும் உள்ள உணவுப் பொருள் கிடங்குகளில் உணவுப் பொருட்கள் வீணாகிப் போய்க் கிடப்பதாகவும், அவற்றைத் தகுந்த முறையில் பரமாரிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மக்கள் சமூக உரிமைக் கழகம் என்ற தனி அமைப்பொன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

கடந்த மாதம் 12-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,  “இந்திய  உணவுத் தானியக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டு, வீணாகிக் கொண்டிருக்கும் உணவுப் பொருட்களை நாட்டில் வறுமையில் வாடும் ஏழைகளுக்கு ஏன் இலவசமாக  விநியோகம்  செய்யக்  கூடாது..?” என்று கேட்டது.

இதனைக் கேட்டவுடன் மத்திய அரசு பதறியடித்துக் கொண்டு மேல் நடவடிக்கை எடுக்கும் என்று நினைத்தால் நடந்தது என்னவோ மிகக் கேவலமானது. அமைச்சுப் பணியையே ஒரு சுமையாகக் கருதி வேலை செய்யும் மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத்பவார், உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணையை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.


“உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து உத்தரவு அல்ல.. வெறும்  ஆலோசனை மட்டுமே...” என்று கூறி தனது தரப்பு விளக்கத்தை முடித்துக் கொண்டார் சரத் பவார்.

அமைச்சர் சரத்பவாரின் இந்தக் கருத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள் சமூக உரிமைக் கழகம் (பியுசிஎல்) இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பார்வைக்கு கொண்டு சென்றது.

உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடந்த அடுத்தக் கட்ட விசாரணையில் இதற்கு விளக்கமளித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர், தாங்கள் கூறியது ஆலோசனை அல்ல.. உத்தரவுதான் என்றும், இதனை மத்திய உணவுத் துறை அமைச்சரிடம் தெரிவிக்குமாறு சொலிசிட்டர் ஜெனரலிடம் கேட்டுக்  கொண்டது.

கூடவே, ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ இந்த உணவுப் பொருட்களை அரசு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு  ஆலோசனை கூறியது.

இதுதான் இப்போது நமது பிரதமருக்கு கோபத்தைக் கிளப்பியிருக்கிறது. நாட்டுப் பிரச்சினையைச் சமாளிக்கத்தான் நாங்கள் இருக்கிறோம்.. உச்சநீதிமன்றத்திற்கு இதில் என்ன வேலை என்று நினைத்தாரோ என்னவோ? “மத்திய அரசின் கொள்கைப் பிரச்சினைகளில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது” என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார்.

எது கொள்கை பிரச்சினை..? நாட்டு மக்களில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளனர் என்பதை மறைத்து வைத்து, ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் இங்கே மக்கள் அல்லாட்டத்தில் இருப்பதை மறைத்து, நாடே சுபிட்சமாக இருப்பதாக செங்கோட்டையில் கொடி ஏற்றி வருடத்திற்கு ஒரு முறை கூவுவதுதான் அரசின் கொள்கையா..?


வீணாகிப் போய், மண்ணாகிப் போய், மண்ணில் புதைக்கப்படவிருக்கும் உணவுப் பண்டங்களை பசியால் வாடிப் போயிருக்கும் மக்களுக்கு வழங்க முன் வராத அரசுகளெல்லாம் இருந்தென்ன? இல்லாமல் இருந்தால்தான் என்ன..?

உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிடுவதற்கு முன்பேயே மத்திய அரசு தானே முன் வந்து இதனைச் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இவர்கள்தான் உண்மையான மக்களாட்சியைப் பின்பற்றும் அரசியல்வாதிகள் என்று சொல்லலாம்.

ஆனால் நாங்கள் உணவு கொடுக்கிறோமோ இல்லையோ.. அது எங்கள் வேலை.. நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு ச்சும்மாயிருங்கள் என்று உச்சநீதிமன்றத்தைப் பார்த்து சொல்கின்றவர்களைப் பார்த்தால் இப்படிப்பட்ட அரசியலும், அரசியல்வாதிகளும் நமக்குத் தேவையா என்று யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

அதிலும் இன்னுமொரு பெரிய கூத்துக்களும் இந்த விவகாரத்தில் எழுந்திருக்கின்றன.

வழக்குத் தொடர்ந்த அமைப்பு நாட்டின் பல்வேறு உணவுக் கிடங்குகளில் 50 ஆயிரம் டன்னிற்கு மேலாக உணவுப் பொருட்கள் வீணாகிக் கிடக்கின்றன  என்று கூறியுள்ளார்கள்..

ஆனால் உச்ச நீதிமன்றத்தின் ஆகஸ்ட் 1-ம் தேதி தீர்ப்பிற்குப் பிறகு பேசிய  மத்திய உணவுத் துறையின் துணை அமைச்சர் கே.வி.தாமஸ், “வீணாகிக் கொண்டிருக்கும் உணவுப் பொருட்களின் அளவு ஒரு இலட்சம் டன்னிற்கும்  குறைவானது”  என்று  கூறியுள்ளார்.

ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை வெறும் ஆலோசனைதான் எ‌ன்று கூறிய மத்திய அமைச்சர் சரத் பவார், “வெறும் 11,700 டன் உணவுப் பொருட்கள்தான் வீணாகியுள்ளது. அதன் மதிப்பு வெறும் ஆறே முக்கால் கோடி ரூபாய்தான். ஊடகங்கள்தான் இதனைப் பெரிதுபடுத்துகின்றன”  என்று பெரிய மனதுடன்  கூறுகிறார்.

இதில் யாருடைய கூற்று உண்மையாக இருக்கும்..? கேபினட் அமைச்சர் சொல்வதா..? அல்லது துணை அமைச்சர் சொல்வதா..? ஒரு அமைச்சரவையில் இருப்பவர்களிடத்திலேயே முழுமையான, உண்மையான தகவல்கள் இல்லையெனில் இந்த அரசின் லட்சணம்தான் என்ன..?

பிரதமர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாக நிராகரித்ததற்கு காரணம் பயனாளிகள் அதிகம் இருந்து, உணவுப் பண்டங்களின் அளவு குறைவாக இருப்பதும்தான் என்று அதிகாரிகள் தரப்பில் இப்போது சொல்லப்படுகிறது.

அப்படியிருந்தாலும் மாநிலங்களில் சர்வே எடுத்து மிகக் குறைவான வருவாய் உள்ளவர்களுக்கு இருக்கின்றவரையில் கொடுத்துவிடலாமே..? உணவுப் பண்டங்கள் நாள்தோறும் கெடும் சூழல் இருப்பதால் எவ்வளவு விரைவில் வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் கொடுப்பதுதானே சாலச் சிறந்தது.. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கொடுக்க முடியாது என்று ஒற்றை வரியில் சொல்வது ஜனநாயகத்தில் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் சொல்லக் கூடியதல்ல..!

பிரதமரின் கருத்துக்கு விளக்கம் சொல்லும்விதமாக இன்னொன்றையும் அரசுத் தரப்புச் சொல்கிறது..! உணவுப் பண்டங்கள் சேமிப்பில் வைத்திருப்பதால்தான் நாட்டில் விலைவாசியை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடிகிறது. இல்லையெனில் வியாபாரிகள் விலையை உயர்த்தத் தொடங்கிவிடுவார்கள். அது இன்னமும் ஆபத்தில் போய் முடியும் என்று..!

உச்சநீதிமன்றம் சொன்னது அழுகிப் போகும் நிலையில் இருக்கும் உணவுப் பொருட்களை மட்டும்தான். கிடங்குகளில் பாதுகாப்பாக இருக்கும் உணவுப் பொருட்களை அல்ல. கிடங்குகளில் வைக்க இடமில்லாமல் வெளியிடங்களிலும், திறந்த வெளியிடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களைத்தான் உச்சநீதிமன்றம் மக்களுக்கு வழங்கச் சொன்னது.. அதன் அளவைச் சொல்லாமல் அரசு ரகசியமாகக்கூட இதனை வழங்கலாமே.. மக்களுக்கு சேவை செய்ய மனமிருந்தால் எதனையும், எப்படியும் செய்யலாமே..? மத்திய அரசுக்கு ஏன் மனமில்லை..?

உச்சநீதிமன்றம் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறது. உணவுக் கிடங்குகளில் பாதுகாக்கப்பட்ட கொள்ளளவு வசதி எவ்வளவு உள்ளதோ அந்த அளவிற்கு மட்டுமே உணவுப் பண்டங்களை சேமித்து வைக்கும்படியும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உதவிகளை வழங்கச் சொல்லிய உத்தரவையே தூக்கி வீசும் மத்திய அரசு, இந்த அறிவுரையை எப்படிக் காதில் வாங்கிக் கொள்ளப் போகிறது..?

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று வாயார பாட மட்டுமே இந்த ஜெகத்தினில் கவிஞனுக்கு உரிமையுண்டு..! அதனை கற்பனை செய்து பார்க்க மட்டுமே நாட்டு மக்களுக்கு உரிமையுண்டு..! ஆனால் நிஜத்தில் இதனைச் செய்து முடிக்க அரசியல்வாதிகள் மனம் வைத்தால்தான் முடியும் என்பது மிஸ்டர் மன்மோகன்சிங் மூலமாக இப்போது நாட்டு மக்களுக்குத் தெரிந்துவிட்டது..!

இனி எல்லாமே அவர்கள் கையில்தான்..!

- சூரியக்கதிர் - செப்டம்பர் 1-15 - இதழ்
 

நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-8

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

ஆறாம் பாகம்

ஏழாம் பாகம்

படித்து விட்டீர்களா மக்களே..?

என்ன கொடுமை பாருங்கள்..!

தியாகிகளுக்கான பென்ஷன் தொகையைக் கூட்டிக் கொடுங்கள் என்று கேட்டால், அத்துறையில் அவ்வளவுதான் நிதி ஒதுக்கீடு என்று ரீல் விடுகிறார்கள்.

ரயில் பயணத்தில் ஊனமுற்றவர்களுக்கு பாஸ் கொடுங்கள் என்று கேட்டால் ரயில்வே நிர்வாகம் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது என்கிறார்கள்.

விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரம் கொடுங்கள் என்று கேட்டால் முடியாது. பட்ஜெட் கையைக் கடிக்குது என்கிறார்கள்.

பருத்திக்கு மான்ய விலை கொடுங்கள் என்றால் பட்ஜெட் காலைக் கடிக்குது என்கிறார்கள்.

கோதுமைக்கு நல்ல விலை கொடுங்கள் என்றால், துட்டு லேது என்கிறார்கள்.

ஆனால் நமது மாண்புமிகுக்கள் இப்படி நாடு, நாடாகப் பறந்து சொகுசு வாழ்க்கை வாழ்வதைப் பாருங்கள்.

இப்படி இவர்கள் பறப்பதற்காகவா நாம் இவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம்?

நாட்டு மக்களின் துயர் துடையுங்கள் என்று இவர்களைப் பணித்தால், இவர்கள் துயர் துடைக்க இவர்கள் பறப்பதைப் பார்க்கின்றபோது நமது ஜனநாயகத்தின் மீது கோபமான கோபம் வருகிறது.

இந்த மந்திரிகள் எந்த வேலைக்காகப் போயிருந்தாலும் சரி, செலவு என்னவோ நமது தலையில்தான். செலவுத் தொகையைக் காட்டிவிட்டு எப்படி செலவானது என்பதை மட்டும் சொல்ல மாட்டோம் என்பது எந்தவிதத்தில் நியாயம்..?

தெருமுனையில் கடை வைத்திருப்பவன் இதே போல் இன்கம்டாக்ஸ்காரர்களுக்கு தகவல் சொன்னால் சும்மா விடுவார்களா அவர்கள்..?

அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதி..? மக்களுக்கு ஒரு நீதியா..?

முடிவு செய்துவிட்டேன் மக்களே..

இனிமேல் இவர்களிடம் வேலை கேட்டு பிரயோசனமில்லை.. உதவித் தொகை கேட்டு பயனில்லை.. ஊக்கத் தொகை கேட்டு புண்ணியமில்லை.. கடன் உதவி கேட்டு மாள முடியவில்லை.. நேரடியாக அடிக்க வேண்டியதுதான்.. எனக்கு உடனே மந்திரி பதவி வேண்டும்.. என்ன செய்வீர்களோ.. ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது.. எனக்கு உடனே மந்திரி பதவி வேண்டும்... வேறெதுவும் சொல்வதற்கில்லை..

அப்புறம் கடைசியாக,

இந்த மெகா தொடரின் முதல் பகுதியின் முதல் பாராவையும், இந்த கடைசி பகுதியின் கடைசி பாராவையும் மட்டுமே படித்த கழகக் கண்மணிகளுக்கு அன்பு முத்தங்கள்.(வேறென்ன செய்றது..?)

படிக்காமலேயே சும்மா மவுஸை உருட்டிக்கிட்டே வந்துட்டு எஸ்கேப்பாகப் பாக்குற ரத்தத்தின் ரத்தத்தங்களின் காலில் விழுந்து வணங்கி நானும் எஸ்கேப்பாகுறேன்.

கடைசிவரையிலும் படித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டி அனைத்தையும் படித்து முடித்திருக்கும் அன்பு உடன்பிறப்புகளுக்கு எனது கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்.

நன்றி

உண்மைத்தமிழன்

நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-7

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

ஆறாம் பாகம்

பிரதமர்களின் பயணச் செலவுகள்

கடந்த 1996-ம் ஆண்டு முதல் இதுவரை, வெளிநாட்டுப் பயணங்களுக்காக நமது நான்கு பிரதமர்கள் 371 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த சேட்டன் சவுத்ரி என்பவர் நமது பிரதமர்கள் மேற்கொண்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணங்கள் குறித்தும், அதற்கான செலவுகள் குறித்தும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்டிருக்கிறார்.

முதலில் இத்தகவல்களைத் தர பிரதமர் அலுவலகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து சேட்டன் சவுத்ரி மேல்முறையிடு செய்துள்ளார்.

அந்த மனுவை விசாரித்த மேல் முறையீட்டு ஆணையம், சேட்டன் கேட்கும் தகவல்களைத் தரும்படி பிரதமர் அலுவலகத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய பொது தகவல் அதிகாரி இந்தத் தகவல்களை கொடுத்துள்ளார்.

அதிலும் 1996-ம் ஆண்டுக்கு முன் நமது பிரதமர்கள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அதற்கான செலவுகள் குறித்த விவரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டதாவும், 2000-ம் ஆண்டிற்குப் பின்பான தகவல்கள் மட்டுமே இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

1996-ம் ஆண்டு முதல் வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால், மன்மோகன்சிங் ஆகிய நான்கு பேரும் பிரதமர்களாக இருந்துள்ளனர். இவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மட்டும் 371 கோடியே 41 லட்சத்து 6538 ரூபாய் செலவாகியுள்ளது.

அதே நேரத்தில் 2000-ம் ஆண்டுக்குப் பின் பிரதமர்கள் மேற்கொண்ட உள்நாட்டுப் பயணங்களுக்கு 27 லட்சத்து 38 ஆயிரத்து 710 ரூபாய் செலவாகியுள்ளது. இது வாஜ்பாய் மற்றும் மன்மோகன்சிங் மேற்கொண்ட பயணங்களுக்கானது.

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், 1999 முதல் 2003-ம் ஆண்டுவரை வெளிநாட்டுப் பயணங்களுக்காக 185.6 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டில் மட்டும் பிரதமர் மன்மோகன்சிங்கின் வெளிநாட்டுப் பயணத்திற்காக ரூபாய் 67 கோடி செலவாகியுள்ளது.

நமது மனதிருப்திக்காக ஒரு ‘அக்கரை’ கதை

கடந்த ஜனவரி மாதம் பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார் பாகிஸ்தானின் முன்னால் ஜனாதிபதி ஜெனரல் முஷாரப்.

சுற்றுப்பயணத்தின் முடிவில் மூன்று நாட்கள் லண்டன், ஹைட்பார்க் பகுதியில் கட்டணம் அதிகம் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்திருக்கிறார் முஷாரப். மொத்த ஓட்டல் பில் மட்டும் ஜஸ்ட் 63 லட்சம் ரூபாய்.

(தொடரும்)

எட்டாம் பாகம்

நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-6

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

முடிவுரை

"தகவல் அறியும் உரிமைச் சட்டம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்தத் தகவல்களைப் பெற்றிருக்கவே முடியாது.

ஐக்கிய முன்னேற்ற கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து வெளிநாடு சென்று வந்த அமைச்சர்கள், அவர்கள் சென்ற நாடுகள், ஆன செலவு ஆகிய விவரங்களைக் கேட்டு ஒரு RDI மனுவை போன வருடம் செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளது இந்தியா டுடே பத்திரிகை.

செலவு பற்றிய விவரங்களைத் தவிர மற்ற எல்லாத் தகவல்களையும் கொடுத்தது பிரதமர் அலுவலகம். “வழங்கப்படும் தகவல்களில் பயணங்களின் செலவு விவரங்கள் இடம் பெறவில்லை. இந்த அலுவலகம் அந்த விவரங்களை வைத்துக் கொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்தும், அமைச்சகங்களிடமிருந்தும் அந்தத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்..” என்று பதில் அளித்திருந்தது பிரதமர் அலுவலகம்.

உடனடியாக ஒவ்வொரு அமைச்சகத்திடமும் அந்த அமைச்சகத்தின் கேபினட் அமைச்சர், இணை அமைச்சர்கள் சென்ற வெளிநாட்டுப் பயணத்தின் விவரங்களையும் உடன் சென்றவர்கள் பற்றிய விவரங்களையும் கேட்டு மனு செய்தது இந்தியா டுடே.

கபில்சிபலின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அமைச்சருக்கும் உடன் சென்ற அதிகாரிகளுக்கும் ஆன செலவுக் கணக்கைத் தந்தது. ஆனால் விமானக் கட்டணம் பற்றி குறிப்பிடவில்லை.

பல அமைச்சகங்கள் நழுவலாகவே பதிலளித்துள்ளன. “சம்பந்தப்பட்ட பொதுத்துறை அல்லது கேபினட் செயலகத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்றபடியே அமைச்சரின் விஜயத்திற்கான செலவுகள் அமைந்தன..” என்று குறிப்பிட்டிருந்தது எ·கு அமைச்சகம்.

“இங்கே குறிப்பிட்டிருக்கும் செலவு மின்சாரத் துறை அமைச்சரின் விமானக் கட்டணத்திற்கு மட்டுமானது. அமைச்சரின் தினப்படி, ஹோட்டல் செலவு, போக்குவரத்துச் செலவு ஆகியவை குறித்த விவரங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களே கவனித்துக் கொண்டன. பிறகு அது பற்றிய கணக்குள் செலவு மற்றும் கணக்கு அலுவலகத்திற்கும் கேபினட் செயலகத்திற்கும் அனுப்பப்பட்டன..” என மின்சாரத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் விரிவாகவே பதிலளித்திருந்தாலும், செலவு பற்றிய கேள்விக்கு, “இவர்களுக்கு செலவு பி.ஏ.ஓ, கேபினட் செயலகங்களின் பயணங்களுக்குப் பிறகு செலவு குறித்த விவரங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அங்கிருந்தே நீங்கள் அதனைப் பெற்றுக் கொள்ளலாம்..” என்று பதிலளித்திருக்கிறது.

அதே போல் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான அமைச்சகமும் செலவு தவிர்த்து பிற எல்லாத் தகவல்களையும் அளித்திருக்கிறது.

கடைசியாக அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த செலவு விவரங்களைக் கேட்டு கேபினட் செயலகத்தை அணுகியது இந்தியா டுடே.

“மத்திய கேபினட் அமைச்சர்களின் சம்பளங்கள், படிகள் உள்ளிட்ட செலவுகளைப் பற்றிய தகவல்களுக்கும் கேபினட் செயலகத்திற்கும் சம்பந்தமில்லை. இவையெல்லாம் பில்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகம், கேபினட் விவகாரங்களுக்கான பி.ஏ.ஓ. இடையில் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன..” என்று பதிலளித்துள்ளது கேபினட் செயலகம்.

ரயில்வே, தொழிலாளர், சுற்றுலா, வெளியுறவு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து, விவசாயம், நகர்ப்புற மேம்பாடு, நிதி, நீராதாரங்கள் போன்ற அமைச்சகங்கள் முழுத் தகவல்களையும் கொடுத்துள்ளன.

பல சிக்கலான நடைமுறைகளின் காரணமாக எவ்வளவு செலவாகிறது என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதாவது ஒரு அலுவல் ரீதியான பயணத்திற்கு எந்த அளவுக்குச் செலவாகிறது என்பது இன்னமும் மர்மமான விஷயம்தான்.

அதிகாரப்பூர்வமாக வெளிநாடு செல்ல பிரதமர் அலுவலகம் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நிலையிலும் அமைச்சர்கள் தங்கள் பயணத்தில் பொதுமக்களின் வரிப்பணத்தை இந்த அளவுக்கு செலவழிப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

பிரதமர் அலுவலகம் மட்டும் பல பயணங்களைத் தடுத்திருக்காவிட்டால், இந்தப் பட்டியல் இன்னும் பெரிதாகியிருக்கும். கூட்டணிக் கட்சிகளிலிருந்து வேண்டுகோள் வந்தால், பிரதமர் அலுவலகத்தால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. ஆனால் அதிகம் பறந்திருந்தது காங்கிரஸ் பெருந்தலைகள்தான்.

'முன்னகர்ந்து செல்லும் அரசு' என்ற வார்த்தைப் பிரயோகத்தைக் கண்டுபிடித்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. இப்போது அவர் உயிரோடு இருந்து ஐ.மு.கூட்டணி அரசு வெளிநாட்டுப் பயணங்களில் நகர்ந்து சென்றிருக்கும் தூரத்தைப் பார்த்திருந்தால் மயங்கியே விழுந்திருப்பார்."

நன்றி : இந்தியா டுடே, பிப்ரவரி 17, 2008

(தொடரும்)

ஏழாம் பாகம்

எட்டாம் பாகம்

நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-5

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

அமைச்சர்கள் அனுபவிக்கும் சலுகைகள்

விதிகள் என்ன?

கேபினட் அமைச்சர் வெளிநாடு செல்வதாக இருந்தால், அது சொந்தப் பயணமாக இருந்தாலும் சரி, அலுவலகப் பயணமாக இருந்தாலும் சரி.. வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்.

அங்கே ஒப்புதல் பெற்ற பின், பிரதமரின் அனுமதிக்காக கோப்பு அனுப்பப்படும். குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரின் பயணங்களுக்குத்தான் அனுமதி தேவையில்லை.

செலவு

அமைச்சர்கள் வெளிநாட்டிற்குச் செல்லும்போதும் அங்கிருக்கும் இந்தியத் தூதரகங்களே கட்டணங்களைச் செலுத்திவிட்டு பிறகு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிடமிருந்து தொகையைப் பெற்றுக் கொள்ளும்.

சலுகைகள்

ஒரு நாளைக்கு ரூ.80,000 முதல் 1 லட்சம் வாடகையுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் ஜூனியர் அல்லது எக்சிகியூட்டிவ் சூட்களில் தங்கலாம். நியூயார்க், பாரீஸ், லண்டன் ஆகிய நகங்களில் சுற்றுலா சீசன் உச்சத்தில் இருக்கும்போது சாதாரண சூட்களில்தான் தங்க வேண்டும். ஆனால் அமைச்சர்கள் சில சமயங்களில் ரூ.2,40,000 வாடகையுள்ள பிரசிடென்ஷியல் சூட்களில்கூட தங்குகிறார்கள்.

ஒரு வெளியுறவுத்துறை அமைச்சர் பாரீசிற்குச் சென்றால் அங்கிருக்கும் பொட்டிக் ஹோட்டல்களில்தான் தங்குவாராம். வேறு ஹோட்டலே கிடைக்கவில்லை என்று அங்கிருக்கும் இந்தியத் தூதரகம் இதைச் சமாளிக்கும். இங்கே ஒரு நாள் தங்குவதற்கு வாடகை ரூ.1,14,000.

ஒரு மத்திய அமைச்சர் லண்டனுக்குச் சென்றால் அங்கிருக்கும் தோர்செஸ்டர் ஹோட்டலில் லக்ஸ¥ரி சூட்டில்தான் தங்குவார். இங்கே ஒரு நாள் வாடகை 1,31,000. தனி சேகவர், டிப்ஸ் ஆகியவற்றுக்குத் தனியாக ரூ.15,500 வரை ஆகும்.

அமைச்சர்கள் வெளிநாடு சென்றால் தினப்படியாக ரூபாய் 3000 கிடைக்கும்.

போக்குவரத்திற்கு கார்களை அங்கிருக்கும் தூதரகமே வாடகைக்கு எடுத்துக் கொடுத்துவிடும். அல்லது அழைப்பு விடுத்திருக்கும் நாடே இந்த வசதியைச் செய்து கொடுக்கும்.

மெர்சிடிஸ் ஈ கிளாஸ் கார் எனில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,600-ம், மெர்சிடிஸ் எஸ் கிளாஸ் கார் எனில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.4000-ம் ஆகும்.

உணவு தூதரகத்தாலோ, அழைப்பு விடுத்தாவர்களாலோ அவை வழங்கப்படும்.

வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கிறோம் என்ற பெயரில்தான் அமைச்சர்கள் இந்த சொகுசுகளை அனுபவிக்கிறார்கள். இதில் செலவழிக்க உச்சபட்ச வரம்பு ஏதும் இல்லை.

ஆனால் இதற்காகும் செலவு சில சமயம் திகைக்க வைக்கிறது. அழைப்பு விடுக்கும் அரசாங்கங்களே பெரும்பாலும் தங்கள் அரசு விருந்தினர் விடுதிகளை வழங்கும் என்றாலும், நம் அமைச்சர்கள் இம்மாதிரி ஹோட்டல்களில் தங்குவதையே விரும்புகிறார்கள்.

(தொடரும்)


ஆறாம் பாகம்

ஏழாம் பாகம்

எட்டாம் பாகம்

நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-4

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

வயிறு எரிய வைக்கும் புள்ளி விவரங்கள்

E.அகமது (வெளியுறவுத் துறை இணை அமைசசர்

அமைச்சராக இருந்த நாட்கள் 1,287
மொத்தப் பயணங்கள் 79
அலுவலர் ரீதியானது 76
சொந்தப் பயணம் 3
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 232
அலுவல் ரீதியானது 220
சொந்தப் பயணம் 12
பயண தூரம் 6,13,277 கி.மீ.
அரசு செல்வு 1.37 கோடி

வயலார் ரவி (வெளிநாடு வாழ் இந்தியர்கள் துறை)

பயணங்கள் 18
பயண தூரம் 2,83,036 கி.மீ.
செலவு 1.14 கோடி

மணி ஷங்கர் அய்யர் (பஞ்சாயத்துராஜ் அமைச்சர்)

பயணங்கள் 17
பயண தூரம் 2,09,239 கி.மீ.
செலவு 40 லட்சம் (சில கணக்குகள் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை)

அ.ராசா (தொலைத்தொடர்பு, தொழில் நுட்பம்)

பயணங்கள் 12
பயண தூரம் 1,89,994 கி.மீ.
செலவு தகவல் இல்லை.

விலாஸ் முட்டெம்வர் (மரபுசாரா எரிசக்தி இணையமைச்சர்)

பயணங்கள் 9
பயண தூரம் 1,56,025 கி.மீ.
செலவு 87.4 லட்சம்

சைபுதீன் சோஸ் (நீர் ஆதாரங்கள் துறை அமைச்சர்)

பயணங்கள் 9
பயண தூரம் 65,704 கி.மீ.
செலவு 14.2 லட்சம்

பிருத்விராஜ் செளகான் (பிரதமர் அலுவலக இணையமைச்சர்)

பயணங்கள் 9
பயண தூரம் 92,400 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

பனபகா லட்சுமி (சுகாதாரத்துறை இணையமைச்சர்)

பயணங்கள் 8
பயண தூரம் 1,23,811 கி.மீ.
செலவு 28.6 லட்சம்

காந்திலால் புரியா (விவசாயம், நுகர்வோர் விவகார இணையமைச்சர்)

பயணங்கள் 8
பயண தூரம் 1,18,769 கி.மீ.
செலவு 80.8 லட்சம்

சந்தோஷம் மோகன்தேவ் (கனரக தொழில்கள் துறை)

பயணங்கள் 8
பயண தூரம் 1,03,645 கி.மீ.
செலவு 52 லட்சம்.

சங்கர்சிங் வகேலா (ஜவுளித்துறை)

பயணங்கள் 8
பயண தூரம் 1,37,494 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

பிரேம்சந்த் குப்தா (கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சர்)

பயணங்கள் 7
பயண தூரம் 57,388 கீ.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

அம்பிகா சோனி (சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை)

வெளிநாட்டில் இருந்த நாட்கள் 23
இதில் 11 நாட்கள் எங்கேயிருந்தார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

சரத்பவார் (விவசாயம், நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம்)

அமைச்சராக இருந்த நாட்கள் 1287
மொத்தப் பயணங்கள் 27
அலுவல் ரீதியானவை 7
கிரிக்கெட் வாரியத்திற்காக 17
சொந்தப் பயணம் 3
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 97
பயண தூரம் 2,62,592 கி.மீ.
செலவு 1.03 கோடி

காந்திசிங் (கனரக தொழில்துறை இணையமைச்சர்)

பயணங்கள் 6
பயண தூரம் 54,756 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

ராம்விலாஸ் பாஸ்வான் (ரசாயனம், உரங்கள்)

பயணங்கள் 5
பயண தூரம் 58,640 கி.மீ.
செலவு 25.3 லட்சம்.

முரளி தியோரா (பெட்ரோலியம், இயற்கை எரிவாயு)

பயணங்கள் 5
பயண தூரம் 41,242 கி.மீ.
செலவு 12.6 லட்சம்

பி.கே.ஹந்திக் (ரசாயனம், உரங்கள் இணையமைச்சர்)

பயணங்கள் 5
பயண தூரம் 51,819 கி.மீ.
செலவு 69,000

அகிலேஷ் பிரசாத் சிங் (விவசாயம், நுகர்வோர் இணையமைச்சர்)

பயணங்கள் 5
பயண தூரம் 79,663 கி.மீ.
செலவு 30.5 லட்சம்

பிரணாப் முகர்ஜி (வெளியுறவுத் துறை)

பயணங்கள் 33
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 115
பயண தூரம் 3,09,145 கி.மீ.
செலவு 86 லட்சம்

சூர்யகாந்தா பாட்டீல் (கிராமப்புற மேம்பாடு)

பயணங்கள் 3
பயண தூரம் 30,656 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

சிவ்ராஜ் பாட்டீல் (உள்துறை)

பயணங்கள் 4
பயண தூரம் 24,736 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

டி.ஆர்.பாலு (கப்பல், சாலை, போக்குவரத்துத் துறை)

பயணங்கள் 4
பயண தூரம் 73,429 கி.மீ.
செலவு 14.1 லட்சம்

மஹாவீர் பிரசாத் (சிறிய நடுத்தரத் தொழில் துறை)

பயணங்கள் 4
பயண தூரம் 60,706 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

ரகுவன்ஷ் பி.சிங் (கிராமப்புற மேம்பாட்டுத் துறை)

பயணங்கள் 4
பயண தூரம் 42,078 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

தின்ஷா ஜே.படேல் (பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு)

பயணங்கள் 4
பயண தூரம் 93,512 கி.மீ.
செலவு 15.7 லட்சம்

எஸ்.ஜெய்பால் ரெட்டி (நகர்ப்புற மேம்பாட்டுத் துறை)

பயணங்கள் 4
பயண தூரம் 59,180
செலவு 43 லட்சம்.

எம்.எம்.பல்லம் ராஜூ (பாதுகாப்புத் துறை இணையமைச்சர்)

பயணங்கள் 4
பயண தூரம் 58,630 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

எச்.ஆர்.பரத்வாஜ் (சட்டம், நீதித்துறை)

பயணங்கள் 3
பயண தூரம் 47,189
செலவு 20 லட்சம்.

சிஸ்ராம் ஓலா (சுரங்கத்துறை)

பயணங்கள் 3
பயண தூரம் 57,486 கி.மீ.
செலவு 1.17 கோடி

ஆர்.வேலு (ரயில்வே துறை இணையமைச்சர்)

பயணங்கள் 3
பயண தூரம் 54,529
செலவு 11.2 லட்சம்

ப.சிதம்பரம் (நிதித்துறை)

அமைச்சராக இருந்த நாட்கள் 1287
மொத்த பயணங்கள் 24
அலுவல் ரீதியாக 24
பயண தூரம் 2,60,860 கி.மீ.
செலவு 1.45 கோடி

அகிலேஷ்தாஸ் (எ·கு துறை இணையமைச்சர்)

பயணங்கள் 2
பயண தூரம் 31,266 கி.மீ.
செலவு இல்லை.

லாலு பிரசாத் யாதவ் (ரயில்வே துறை)

பயணங்கள் 1
பயண தூரம் 15,826 கி.மீ.
செலவு 40 லட்சம்

சந்திரசேகர் சாஹ (கிராமப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர்)

பயணங்கள் 1
பயண தூரம் 12,712 கி.மீ.
செலவு 1.18 கோடி

ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் (உள்துறை இணையமைச்சர்)

பயணங்கள் 3
பயண தூரம் 18,481 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

பவன்குமார் பன்சால் (சட்டம், நீதித்துறை)

பயணங்கள் 2
பயண தூரம் 25,528 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

தாசரி நாராயணராவ் (நிலக்கரித் துறை இணையமைச்சர்)

பயணங்கள் 2
பயண தூரம் 32,382 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

நரன்பாய் ரத்வா (ரயில்வே துறை இணையமைச்சர்)

பயணங்கள் 2
பயண தூரம் 36,955 கி.மீ.
செலவு 20.3 லட்சம்

ஏ.கே.ஆன்டனி (பாதுகாப்புத்துறை)

பயணங்கள் 2
பயண தூரம் 17,004 கி.மீ.

ஷகீல் அகமது (தொலைத் தொடர்பு)

பயணங்கள் 2
பயண தூரம் 15,388 கி.மீ.
செலவு 2.5 லட்சம்

மீராகுமார் (சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை)

பயணங்கள் 3
பயண தூரம் 32,296 கி.மீ.
செலவு 8.1 லட்சம்

ராவ்இந்தர்ஜித் சிங்

பயணங்கள் 26
அலுவல் ரீதியாக 23
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 130
பயண தூரம் 4,99,438 கி.மீ.
செலவு 33.3 லட்சம்

ரேணுகா சவுத்ரி (பெண்கள், குழந்தைகள், மேம்பாட்டுத் துறை)

மொத்த பயணங்கள் 25
அலுவல் ரீதியாக 22
சொந்தப் பயணம் 3
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 112
அலுவல் ரீதியாக 101
சொந்தப் பயணம் 11
பயண தூரம் 3,17,031 கி.மீ.
செலவு 56 லட்சம்.

எஸ்.ரகுபதி (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை)

பயணங்கள் 7
பயண தூரம் 70,416 கி.மீ.
செலவு 67,000 (ஒரு பயணத்துக்கு மட்டும்)

சுஷில்குமார் ஷிண்டே (மின்சாரத் துறை)

பயணங்கள் 6
பயண தூரம் 1,47,297 கி.மீ.
செலவு 29.2 லட்சம்

சுரேஷ் பசெளரி (தொழிலாளர் பொதுமக்கள் துறை இணையமைச்சர்)

பயணங்கள் 6
பயண தூரம் 85,932 கி.மீ.
செலவு 28.2 லட்சம்

ஆனந்த் ஷர்மா (வெளியுறவுத் துறை இணையமைச்சர்)

பயணங்கள் 30
பயண தூரம் 5,30,511 கி.மீ.
செலவு 1.33 கோடி

பிரபுல் பட்டேல் (விமானப் போக்குவரத்து)

மொத்த பயணங்கள் 41
அலுவல் ரீதியாக 16
சொந்தப் பயணம் 25
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 182
அலுவல் ரீதியாக 57
சொந்தப் பயணம் 125
பயண தூரம் 5,12,351 கி.மீ.
செலவு 66.5 லட்சம்

கபில்சிபல் (அறிவியல், தொழில் நுட்பம்)

அமைச்சராக இருந்த நாட்கள் 1,287
மொத்தப் பயணங்கள் 24
அலுவல் ரீதியானவை 23
சொந்தப் பயணம் 1
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 113
அலுவல் ரீதியானவை 106 நாட்கள்
சொந்தப் பயணம் 7 நாட்கள்
பயண தூரம் 3,97,813 கி.மீ.
செலவு 11.7 லட்சம்
அமெரிக்காவிற்கு மட்டும் 6 முறை சென்றிருக்கிறார்.
மலேசியா, சீன பயணத்தில் சீனாவில் மட்டும் 18 நாட்கள் குடியிருந்திருக்கிறார்.

பி.ஆர். கிந்தியா (பழங்குடியினர் விவகாரத் துறை)

பயணங்கள் 1
பயண தூரம் 11,846 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

கே.எச்.முனியப்பா (கப்பல், சாலை போக்குவரத்துத் துறை)

பயணங்கள் 1
பயண தூரம் 10,540 கி.மீ.
செலவு 1.4 லட்சம்

ஜி.கே.வாசன் (புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம்)

பயணங்கள் 1
பயண தூரம் 9,387 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

கே.வேங்கடபதி (சட்டம், நீதித்துறை இணையமைச்சர்)

பயணங்கள் 1
பயண தூரம் 11,572 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (நிதித்துறை இணையமைச்சர்)

பயணங்கள் 1
பயண தூரம் 1,370 கி.மீ.
செலவு 2.7 லட்சம்

பிரியரஞ்சன்தாஸ்முன்ஷி (தகவல் மற்றும் ஒளிபரப்பு)

அலுவல் விஷயமாக வெளிநாட்டில் இருந்தது 20 நாட்கள்
சொந்தப் பயணம் 38 நாட்கள்

இதுவரையிலும் வெளிநாட்டிற்குச் செல்லாத அமைச்சர்கள்

எச்.எம். அம்பரீஷ் (தகவல் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர்)
ஜே.பி.என். யாதவ் (நீராதாரங்கள் துறை இணையமைச்சர்)
எம்.வி.ராஜசேகரன் (திட்டத் துறை இணையமைச்சர்)
மாணிக்ராவ் கவிட் (உள்துறை இணையமைச்சர்)
சுப்புலட்சுமி ஜெகதீசன் (சமூக நீதி, மேம்பாடு)
தஸ்லீமுதீன் (விவசாயம், நுகர்வோர் விவகாரங்கள்)
வி.ராதிகா செல்வி (உள்துறை இணையமைச்சர்)

(தொடரும்)

ஐந்தாம் பாகம்

ஆறாம் பாகம்

ஏழாம் பாகம்

எட்டாம் பாகம்

நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-3

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

படையெடுத்த புத்திசாலி மந்திரிகள்

வெளிநாட்டிற்குச் செல்லும் சலுகையை அதிகம் பயன்படுத்தியவர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத்துதான்.. கிட்டத்தட்ட சாதனையே படைத்திருக்கிறார்.

72 முறை பயணம் மேற்கொண்டு 424 நாட்கள் வெளிநாட்டில் கழித்திருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 14 மாதங்கள்.. போன வருடம் நவம்பர் 30-ம் தேதிவரை சுமார் 10,08,162 கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார். இவரது பயணங்களுக்காக அரசு ரூபாய் 1.81 கோடியை செலவழித்திருக்கிறது.

வெளியுறவுத் துறை அமைச்சரைவிட இவரே மிகவும் பளிச்சென்று வெளியில் தெரியக்கூடிய நபராக இருக்கிறார். ப்ரஸ்ஸல்ஸ், பாரீஸ், நியூயார்க், பாங்காக், கோலாலாம்பூர், லண்டன் ஆகிய நகரங்களுக்குத்தான் இவர் அடிக்கடி சென்றிருக்கிறார்.

இவரோடு ஒப்பிட்டால் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மிகக் குறைவான நாட்களே வெளிநாட்டில் இருந்திருக்கிறார். அதாவது 118 நாட்கள் மட்டுமே. இவரது பயணத்திற்கு அரசு செலவழித்துள்ள தொகை ரூ.1.45 கோடி.

உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பிர·புல் பட்டேல் 41 முறை வெளிநாடு சென்றிருக்கிறார். அவற்றில் 16 தடவைகளே அதிகாரப்பூர்வமானவை. அமெரிக்காவுக்கு 6 முறையும், பிரிட்டனுக்கு 5 முறையும் சென்றிருக்கிறார்.

இவர் சொந்த விஷயமாக லண்டன், பாரீஸ், நியூயார்க், சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்காக், துபாய் போன்ற நகரங்களுக்குச் சென்றிருக்கிறார்.
அமைச்சராக வெளிநாடு சென்ற நாட்களைவிட, தன் சொந்த விஷயமாக வெளிநாடு சென்ற நாட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 57 நாட்கள் அமைச்சர் என்ற முறையிலும், 125 நாட்கள் சொந்த விஷயமாகவும் சென்று வந்துள்ளார் இவர்.

பத்மி அமைச்சர் என்கிற முறையில் 14 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். ஆனால் சொந்த விஷயமாக 181 நாட்கள் வெளிநாட்டில் சுற்றியிருக்கிறார். மொத்தமாக 2,36,005 கி.மீ. பயணம் செய்திருக்கிறார்.

பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி அமைச்சர் என்கின்ற முறையில் 20 நாட்களும், சொந்த விஷயமாக 38 நாட்களும் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். 1,59,676 கி.மீ. தூரம் பயணம் செய்திருக்கும் இவருடைய அலுவல் ரீதியான பயணங்களுக்கு அரசு 17 லட்சம் செலவழித்திருக்கிறது.

வெளியுறவுத் துறையின் இணையமைச்சர் ஈ.அகமது, தன் துறையின் கேபினட் அமைச்சரான பிரணாப் முகர்ஜியைவிட அதிக நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். மொத்தம் 232 நாட்கள். இவரது பயணத்திற்காக அரசு ரூ.1.37 கோடியைச் செலவழித்திருக்கிறதாம். 22 முறை ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றிருக்கும் அகமது, அங்கே 48 நாட்கள் தங்கியிருந்திருக்கிறார்.

அலுவல் ரீதியான பயணங்களைவிட சொந்த விஷயமாக அதிகம் பயணம் செய்தவர்களில் என்.டி.ராமராவின் மகள் புரந்தேஸ்வரியும் ஒருவர். மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சரான இவர், 670 நாட்கள் அமைச்சராக இருந்திருக்கிறார். இந்த நாட்களில் 8 முறை வெளிநாட்டிற்குச் சென்று வந்திருக்கிறார். மொத்தமாக 2 மாதங்கள் வெளிநாட்டில் கழித்திருக்கிறார் இவர்.

அந்தத் துறையின் கேபினட் அமைச்சரான அர்ஜூன்சிங் ஒன்பது வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார்.

சரத்பவார் 97 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். அவற்றில் 49 நாட்கள் BCCI வேலையாகவும், 37 நாட்கள் விவசாய அமைச்சகம் சார்பாகவும் வெளிநாட்டில் இருந்திருக்கிறார்.

வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஆனந்த் ஷர்மா 30 வெளிநாட்டுப் பயணங்களில் 114 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். இவருக்கான மொத்தச் செலவு ரூ.1.33 கோடி.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி தனது 18 வெளிநாட்டுப் பயணங்களில் 125 நாட்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார்.

சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகங்களின் சார்பில் 112 நாட்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார் ரேணுகா சவுத்ரி.

சுற்றுலா துறையிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு மாறிய பின் கம்போடியா, சிகாகோ, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சொந்தப் பயணமாகச் சென்று வந்திருக்கிறார் ரேணுகா.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் என்ற முறையில் ஆஸ்கர் பெர்னாண்டஸ் சுமார் 46 நாட்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார். இதற்கு 2.26 கோடி ரூபாயை அரசு செலவழித்திருக்கிறது.
புள்ளியியல் அமைச்சராகத்தான் ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜெனிவா என அதிக நாடுகளுக்குச் சென்றிருக்கிறார் ஆஸ்கர் ·பெர்னாண்டஸ்.

அமைச்சரான 2 மாதங்களில் பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், இத்தாலி, கனடா நாடுகள் உள்பட 13 முறை வெளிநாடுகளுக்குப் படையெடுத்திருக்கிறார் சுபோத்காந்த் சகாய்.

தாய்லாந்து, கோலாலாம்பூர், ஜெனீவா, செஷல்ஸ், சிங்கப்பூர் என 117 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார் அன்புமணி. மொத்தம் 254 லட்சம் கி.மீ. பறந்திருக்கிறார்.

சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையின் இணையமைச்சரான நமோநாராயண் மீனா கனடா, பிரேசில், அமெரிக்கா, லண்டன், செக் குடியரசு ஆகிய நாடுகளுக்குப் பறந்திருக்கிறார்.

18 அதிகாரப்பூர்வ பயணங்களில் 55 நாட்கள் வெளிநாட்டில் கழித்திருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உஸ்பெகிஸ்தானுக்கு 3 முறையும், பாங்காக்கிற்கு 2 முறையும் சென்றிருக்கிறார்.

670 நாட்கள் அமைச்சராக இருந்திருக்கும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சரான அஸ்வினிகுமார் கஜகிஸ்தான், எகிப்து, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 75 நாட்கள் செலவழித்திருக்கிறார்.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சரான ஜெய்ராம் ரமேஷ், பகு, டாக்கா, மணிலா போன்ற யாரும் அதிகம் செல்லாத இடங்களுக்குச் சென்றிருக்கிறார். அமைச்சராக இருந்த 670 நாட்களில் 4 முறை பயணம் செய்திருக்கிறார்.

வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு இணையமைச்சர் குமாரி செல்ஜா, அம்மான், கனடா, பிரான்ஸ், எகிப்து உள்பட 14 பயணங்களில் 66 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார்.

மொத்தத்தில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசின் அமைச்சர்கள் 78 பேரில் 71 பேர்கள்(பிரதமரைத் தவிர்த்து) 786 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார்கள். 1287 நாட்களில் 1.02 கோடி கி.மீ. தூரம் பறந்திருக்கிறார்கள்.

(தொடரும்)

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

ஆறாம் பாகம்

ஏழாம் பாகம்

எட்டாம் பாகம்

நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-2

முதல் பாகம்

இந்தியா டுடே, பிப்ரவரி 27, 2008

மத்திய அமைச்சர்களின் உள்நாட்டு, வெளிநாட்டு பயணங்களுக்கு நிதியமைச்சகம் நிதி ஒதுக்குகிறது. ஒதுக்கப்படும் நிதியைவிட ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மடங்கு செலவழித்து சாதனை நடத்தி வருகின்றனர் அமைச்சர்கள்.

சிதம்பரம் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் அமைச்சர்களின் பயணத்துக்காக ஒதுக்கீடு செய்தது 46 கோடி ரூபாய். ஆனால் செலவு செய்யப்பட்டதோ 80.2 கோடி.

கடந்த 2005-06ம் நிதியாண்டில் சிக்கன நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டன. அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணத்தை கட்டுப்படுத்தும் வகையில் 28 நிபந்தனைகளை மத்திய அரசு விதித்தது.

இருந்தாலும், அதற்கு முந்தைய ஆண்டைவிட சற்று கூடுதலாகவே அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பயணத்துக்கு 47.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார் சிதம்பரம்.

முந்தைய ஆண்டைவிட 2006-06ம் நிதியாண்டில் அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பயணச் செலவு குறைந்தாலும், ஒதுக்கீட்டைவிட அதிகரித்து ரூ.62.58 கோடி செலவு ஏற்பட்டது.

அதற்கு அடுத்தாண்டில் கட்டுப்பாடுகள் கட்டவிழ்ந்தன. சிதம்பரம் 45.18 கோடியை ஒதுக்கீடு செய்ய, செலவு ஏற்பட்டதோ ரூ.92.31 கோடி.

நிறைய செலவாகிறதே என்று 2007-08ம் நிதியாண்டில் தாராளமாக ரூ.75.5 கோடி ஒதுக்கீடு செய்தார் சிதம்பரம். இதனால் குஜாலான நமது அமைச்சர்கள் 150.43 கோடி செலவிட்டு அசத்திவிட்டனர்.

கடைசி நிதியாண்டில் தற்போதைய கூட்டணி அரசு இருக்கிறது. எனவே அமைச்சர்களின் எதிர்பார்ப்பை எல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் மட்டுமல்லாது, அவர்களே வாய் பிளக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் ரூ.160.76 கோடி ஒதுக்கி மனம் குளிர வைத்தள்ளார் சிதம்பரம்.

போன வருடம் நவம்பர் மாதம் 30-ம் தேதியோடு கணக்கிட்டால் 1,287 நாட்கள் ஆட்சியில் இருந்திருக்கிறது ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு. இந்த நாட்களில் இதன் அமைச்சர்கள் சுமார் 1 கோடி கிலோ மீட்டர்கள் பயணம் செய்திருக்கிறார்கள்.

சொந்தப் பயணங்களும் இதில் அடங்கும் என்றாலும் பெரும்பாலும் அதிகாரப்பூர்வ விஜயங்களும்தான். இவர்கள் பயணம் செய்த மொத்த தூரத்திற்கு பூமியையே 256 முறை சுற்றி வந்துவிடலாம்.

பதவியிலிருந்த போது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த அமைச்சர்களில் 47 அமைச்சர்கள் 27 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்கள்.

78 அமைச்சர்களில் 12 அமைச்சர்களாவது தலா இரண்டரை கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார்கள்.

அலுவலைவிட சொந்த விஷயமாக வெளிநாடுகளைச் சுற்றிய அமைச்சர்கள் பட்டியலும் அதிகமாகவே இருக்கிறது.

மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் எம்.ஏ.ஏ.·பத்மி, புரந்தேஸ்வரி, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ்முன்ஷி, சுரங்கத்துறை அமைச்சர் சிஸ்ராம் ஓலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் தின்ஷா ஜே.படேல், கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரேம்சந்த்குப்தா, எ·கு துறை இணையமைச்சர் அகிலேஷ்தாஸ் ஆகியோர்தான் சொந்த செலவில் அதிகம் தடவை நாடு சுற்றிய மகாதேவர்கள்.

ஆனால் பல சமயங்களில் அமைச்சகங்களுக்கும், அந்த அமைச்சர்கள் மேற்கொண்ட பயணங்களுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்து கொள்வது கடினமான காரியமாகவே இருக்கிறது.

வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கான இணையமைச்சர் ஏன் உஸ்பெகிஸ்தானுக்கு மூன்று முறை செல்ல வேண்டும்?

ஏன் அமைச்சர்கள் அடிக்கடி செர்பியா செல்கிறார்கள்?

அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்களில் செலவழிப்பதற்கென்று தனி விதிமுறைகள் இருந்தாலும் சிறந்த ஹோட்டல்களில் தங்கவும், விலையுயர்ந்த காரில் செல்லவும் விரும்புகிறார்கள். இதற்கு அங்கிருக்கும் தூதரகங்களை வற்புறுத்தவும் செய்கிறார்கள்.

பல அமைச்சர்கள் தங்கள் வேலைகளுக்குச் சம்பந்தமில்லாத இடங்களுக்கே செல்கிறார்கள். கிடைத்திருக்கும் தகவல்களின்படி 17 அமைச்சர்கள் தாய்லாந்திற்குச் சென்றிருக்கிறார்கள்.

14 அமைச்சர்கள் மலேசியாவிற்கு ஒரு முறையாவது சென்றிருக்கிறார்கள்.

தங்களுக்குப் போதுமான வேலை ஒதுக்கப்படவில்லை என்று மூக்கு சீந்திய இணையமைச்சர்கள்தான் அதிகம் வெளிநாடுகளில் டூர் அடித்திருக்கிறார்கள்.

மொத்தமுள்ள 40 இணையமைச்சர்களில் 33 பேர் 311 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களில் 7 பேர் வெளிநாட்டு மண்ணையே மிதிக்காத ஏமாளிகளாகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனியா காந்தி பிறந்த நாடான இத்தாலிக்கு ஏகப்பட்ட அமைச்சர்கள் சொந்த முறையிலும், அதிகாரப்பூர்வமாகவும் சென்று வந்திருக்கிறார்கள்.

ரவிசங்கர்பிரசாத், சுஷில்குமார்ஷிண்டே, கமல்நாத், காந்திலால்புரியா, ஆர்.வேலு, சந்தோஷ்மோகன்தேவ், அம்பிகா சோனி, சுபோத்காந்த்சகாய், சங்கர்சிங்வகேலா, விலாஸ் முட்டெம்வர், எஸ்.ஜெய்பால்ரெட்டி, ஆஸ்கர் ·பெர்னாண்டஸ், பி.ஆர்.சிந்தியா, அகிலேஷ் பிரஸாத்சிங், அஸ்வினிகுமார், பிரகாஷ்ஜெய்ஸ்வால், ரேணுகா சவுத்ரி ஆகிய அமைச்சர்கள் இதில் அடக்கம்.

பிரணாப் முகர்ஜி, ஆனந்த் ஷர்மா, சரத்பவார்(விவசாயத் துறை அமைச்சகம் சார்பாக பறந்ததைவிட பி.சி.சி.ஐ சார்பாக பறந்ததுதான் அதிகம்), அன்புமணி ராமதாஸ், ரேணுகா செளத்ரி, கபில்சிபல், வயலார் ரவி, இந்தர்ஜித் சிங், அஸ்வினி குமார் ஆகியோர் அதிகம் பறந்த சில அமைச்சர்கள்.

(தொடரும்)

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

ஆறாம் பாகம்

ஏழாம் பாகம்

எட்டாம் பாகம்