என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானமே, 'நாக்க முக்க' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ஆடிக் கொண்டிருக்க.. வந்திருக்கும் இந்திய ரசிகர்கள் அனைவரும் பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் ஆவலுடன் காத்திருக்கும் இதே நேரத்தில், இந்தியத் தலைநகர் டில்லியின் ஜந்தர்மந்திர் என்னுமிடத்தில் 72 வயதான ஒரு இந்தியரான முதியவர் அன்னா ஹசாரே.. ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கோரி இன்றோடு 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்..!
சென்னை சேப்பாக்கத்தில் தற்போது திரண்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 40000. ஆனால் டெல்லியில் ஹசாரேயைச் சுற்றிலும் வெறும் 1000 பேர் மட்டுமே இருக்கிறார்களாம். ஒரே நாடுதானாம்.. ஆனால் ஒருவரின் பிரச்சினை மற்றவருக்கு பிரச்சினையாக இல்லையாம்..! மற்றவரின் பிரச்சினை இன்னொருவருக்குத் தொல்லையாக இல்லையாம்..!
வருங்கால இளைஞர் சமுதாயம்தான் இந்த நாட்டை வழி நடத்தப் போகிறது என்று கஞ்சா விற்று அரசியல்வியாதியானவர் முதற்கொண்டு அப்துல்கலாம்வரையிலும் சொல்லிவிட்டார்கள். ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் இருக்கும் 40000 இளைஞர்களுக்கு இன்றைக்குக் கிடைக்கின்ற கிரிக்கெட் விருந்துதான் முக்கியமாக இருக்கிறது..!
இதே நேரத்தில் சன் தொலைக்காட்சியினர் தாங்கள் தயாரித்திருக்கும் மாப்பிள்ளை படத்தின் முதல் காட்சியில் திரைக்கு முன்னே இந்திய இளைஞர் சமுதாயம் குத்தாட்டம் போடுவதையும் காலையில் இருந்தே காட்டி வந்து தங்களது தேச பக்தியை பறை சாற்றி வருகின்றனர்..!
பொழுதுபோக்கு என்கின்ற வார்த்தையே இப்போது தொலைந்துபோய் அதுதான் வாழ்க்கை என்கிற அளவுக்கு ஊடகங்கள் நமது இளைஞர்களை மாயவலைக்குள் கொண்டுபோய் சிக்கவைத்துவிட்டார்கள்.
இது மறைமுகமாக நமது பிரச்சினைகளிலிருந்து நம்மை அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய் மறைத்துவைத்துவிட்டு, தெருவில் இருந்த பிரச்சினை நம் வீட்டிற்குள் வந்தவுடன் நம்மை அதேபோல் தூக்கிக் கொண்டு வந்து வீட்டுக்குள் விட்டுவிட்டு வெளிக் கதவைச் சாத்திச் செல்லும் தந்திரத்தை இந்திய அரசியல் வர்க்கமும், அதிகார வர்க்கமும், பணக்காரத் திமிர்த்தனமும் போட்டி போட்டுச் செய்து வருகிறார்கள்.
காலையில் கொல்கத்தாவில் இருந்து கிளம்பும்போது தான் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவளிப்பதாக பேட்டியளித்திருக்கும் ஷாரூக்கான், சாயந்தர வேளையில் இதே மைதானத்தில் ஷ்ரேயாவுடன் நாக்க முக்க.. நாக்க முக்க.. என்று குத்தாட்டம் போடுகிறார். ஆதரவுகளை வாயால் வழங்குவோம்..! அதே நேரத்தில் தாங்கள் சம்பாதிப்பதற்கு மட்டுமே உடல் உழைப்பை நீட்டுவோம் என்ற சுயநலத்திற்கு ஷாரூக்கான் மட்டும் விதிவிலக்கா என்ன..?
அன்ன ஹசாரே அப்படியென்னதான் சொல்கிறார்..? அரசியல்வியாதிகள்.. அதிலும் பிரதமர், ஜனாதிபதி என்று எவரையும் விட்டுவிடாமல் அனைவருமே ஊழல் வழக்குகளின் முன் நின்றால் விசாரிக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பது போன்ற உச்சபட்ச அதிகாரத்துடன் கூடிய லோக்பால் சட்ட மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்கிறார். இது நியாயம்தானே..?
ஆனால் அரசியல்வியாதிகளுக்கு இது எப்படி பிடிக்கும்..? அவர்களுடைய அடிமடியிலேயே கை வைத்து, அவர்களது பொழைப்பைக் கெடுக்கின்ற அளவுக்கு ஒரு சட்டத்தை அவர்களே கொண்டு வர வேண்டும் என்று கூறினால் இதனை ஏற்பதற்கு இவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது.
இந்த நாட்டில் இதுவரையிலும் எத்தனையோ லஞ்ச ஊழல் வழக்குகள் அரசியல்வியாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன. மக்கள் முன் ஆதாரங்கள் குவித்து வைக்கப்பட்டாலும், அரசியல்வியாதிகள் தப்பித்து அதிகாரிகளை மட்டும் பகடைக்காயாக்கிவிடுகிறார்கள்..!
எத்தனை எத்தனை ஊழல்கள்..? முந்த்ரா ஊழல் தொடங்கி தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழல்வரையிலும் அத்தனையிலும் அரசியல்வியாதிகளின் கை வண்ணம்தான்..!
1975-ம் ஆண்டு: லாட்டரி ஊழல்
1990-99-ம் ஆண்டு:போபர்ஸ் ஊழல்
1992-ம் ஆண்டு: ஹர்ஷத் மேத்தா ஊழல்
1993-ம் ஆண்டு: ஹவாலா ஊழல்
1996-ம் ஆண்டு: பீகார் கால்நடை தீவன ஊழல். முன்னாள் அமைச்சர் சுக்ராம் மீதான டெலிகாம் ஊழல் .
1999 முதல் 2001வரை பங்கு சந்தை புரோக்கர் கேதன் பரேக் செய்த பங்கு சந்தை ஊழல்
2001-ம் ஆண்டு: ராணுவத்துறையில் நடந்த ஆயுத பேர ஊழல்.
2003-ம் ஆண்டு: போலி முத்திரைத்தாள் ஊழல் (அப்துல் கரீம் தெல்கி)
2005-ம் ஆண்டு: உணவுக்காக எண்ணெய் தொடர்பான முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் சம்பந்தப்பட்ட ஊழல்.
2009ம் ஆண்டு: பல்வேறு இடங்களில் சொத்துக்களை குவித்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மீதான 4,000 கோடி ரூபாய் ஊழல்
2010-ம் ஆண்டு: "2-ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், கடைசியாக, காமன்வெல்த் விளையாட்டு ஊழல்.
இப்படி கணக்கு, வழக்கில்லாமல் ஊழல்களை செய்வதையே குறிக்கோளாகக் கொண்ட இந்தியத் திருநாட்டின் அரசியல்வியாதிகளை உண்மையாகவே தண்டித்து அரசியலில் இருந்து அவர்களை அப்புறப்படுத்த நினைத்துத்தான் இந்த லோக்பால் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.
உச்சநீதிமன்றம் சர்வவல்லமை படைத்ததாக இருந்தாலும், அது இன்னமும் தனது முழு அதிகாரத்தையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. கூடவே அந்த அமைப்பின் உறுப்பினர்கள்கூட அரசியல்வியாதிகளின் அல்லக்கைகளாக மாறிவிட்ட கொடூரமும் நிகழ்ந்துதான் வந்திருக்கிறது..!
அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பாகத்தான் லோக்பால் அமைப்பைக் குறிப்பிடுகிறார்கள்.
பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும். லோக்பால் உருவானால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்கிற அளவுக்கு அவற்றுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும்.
இப்படிப்பட்ட லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம்தான் லோக்பால் சட்டம்.
ஏற்கெனவே இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் இந்தியத் தண்டனை சட்டம்-1860 மற்றும் ஊழல் தடுப்பு சட்டம்-1988 ஆகியவை, அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவற்றின்படி நடவடிக்கை எடுக்க, போலீசோ, வேறு புலனாய்வு துறையோ, மாநில, மத்திய அரசுகளிடமிருந்தோ அனுமதி பெற வேண்டும்.
இதன்படி பார்த்தால் கருணாநிதி மீது ஊழல் வழக்கை இப்போது தெரிவித்தால் அதற்குக் கவர்னர் அனுமதியளித்தால் மட்டுமே நாம் அவர் மீது தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடர முடியும். இல்லையெனில் முடியாது. இது இந்த அரசியல் ஓநாய்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தாங்களே போட்டுக் கொண்ட ஒரு விதிவிலக்கு..!
அரசில் நிர்வாக துறையை பொறுத்தவரை மத்திய புலனாய்வு துறை மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆகிய இரண்டு மட்டுமே, ஊழல் வழக்குகளை கையாள்வதில் பிரதானமாக செயல்படுகின்றன.
இது முறையாக நிறுவப்பட்டால், அரசின் சட்டத் துறை மற்றும் நிர்வாகத் துறையின் கலவையாக இருக்கும். புகார்களைப் பெற்று விசாரணை நடத்துவதில் நிர்வாகத் துறையைப் போன்றும், தண்டனை கொடுப்பதில் நீதித் துறையைப் போன்றும் செயல்படும். மக்களின் பிரச்னை, அலைக்கழிப்பு இல்லாமல் ஒரே இடத்தில் தீர்க்கப்படும்.
ஆந்திரா, அசாம், பீகார், சத்திஸ்கர், டில்லி, குஜராத், ஜார்க்கண்ட், அரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள், லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்கியுள்ளன.
இவை, மாநில அளவில் லோக்பாலின் வேலைகளை, குறுகிய அளவில், அதிகாரமற்ற நிலையில் செய்து வருகின்றன. இவற்றில் பிரபலமானது, கர்நாடகாவில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் இயங்கும் லோக் ஆயுக்தா. இந்த அமைப்பு சமீபத்தில் கர்நாடகாவில் அரசியல் பலம் படைத்த பெல்லாரி சகோதரர்களின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டியது.
கடந்த 1968-ம் ஆண்டு முதல், லோக்சபாவில் எட்டு முறை இந்த லோக்பால் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டும், தகுந்த காலவரைக்குள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
தற்போது நிலவும் தொடர் ஊழல் சூழலில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், ஊழலை தடுக்க நடவடிக்கைகள் பரிந்துரைக்க, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் லோக்பால் மசோதாவின் வடிவம் மற்றும் அதை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிந்துரைக்கப்பட்டது.
லோக்பால் மசோதாவின் வடிவம் குறித்து போராடி வரும் அன்னா ஹசாரே உட்பட அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொண்டால், இந்த ஆண்டே லோக்சபாவில் நிறைவேற வாய்ப்பு உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக இந்த மசோதாவுக்காகக் குரல் கொடுத்து வரும் அன்ன ஹாசரே ஒத்துக் கொள்ளாததற்குக் காரணம், தற்போது அரசு பரிந்துரைக்கும் லோக்பால் சட்டம் மிகவும் பலவீனமானது. அதன்படி உருவாக்கப்படும் அமைப்புக்கு, வெறுமனே பரிந்துரை செய்யும் அதிகாரங்கள் மட்டுமே இருக்கும்.
இதுவரை வெவ்வேறு அரசு ஆணையங்கள் லோக்பால் குறித்து செய்த பரிந்துரைகளை சேர்த்து, சட்டத்துக்கு வலிமையூட்டும் வகையில், அன்னா ஹசாரே தலைமையில், ஒரு சமூக ஆர்வலர் குழு, மாதிரி மசோதா தயார் செய்திருந்தது. அந்த மாதிரி மசோதாவின் அடிப்படையில் புதிய லோக்பால் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றுதான் அன்னா ஹசாரே கோரியிருக்கிறார்.
அன்னா ஹசாரே தனது பரிந்துரையில் சொல்லியிருப்பது இது :
* அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் மீதும் லஞ்சம் தொடர்பான நீதி விசாரணை நடத்த லோக்பால் கட்டுப்பட்டது. மத்திய ஊழல் கண்காணிப்பு கமிட்டி மற்றும் மத்திய அரசின் அனைத்து கண்காணிப்பு அமைப்புகளும், லோக்பால் அமைப்பிற்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
* பொதுமக்களிடமிருந்து, புகார்களை நேரடியாகப் பெற்று, நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரிடமும் சரி பார்க்க வேண்டிய அவசியமோ, அனுமதி பெற வேண்டிய அவசியமோ கமிஷனுக்கு இருக்கக் கூடாது.
* புலனாய்வு முடிந்ததும், வழக்கு தொடரலாம்; ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் அல்லது இரண்டையும் மேற்கொள்ள வேண்டும்.
* லோக்பால் அமைப்புடன் சி.பி.ஐ. அமைப்பும் இணைக்கப்பட்டுவிட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் புலனாய்வு செய்தல், வழக்கு தொடர்தல் ஆகியவைகளை கமிஷன் மேற்கொள்ள முடியும்.
* லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர், 10 உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்களில் 4 பேர் மட்டுமே முன் அனுபவம் இல்லாத வக்கீல்களாக இருக்கலாம்.
* தேர்வு கமிட்டியில் சட்டம் தொடர்பான பின்னணி உடையவர்கள், தலைமை தேர்தல் கமிஷனர், மத்திய கணக்கு தணிக்கை அலுவலக தலைவர், ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்கள், லோக்பால் அமைப்பில் இருந்து வெளியேறும் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.
* லோக்பால் அமைப்பின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த எந்த தடையும் இருக்கக் கூடாது.
* ஓராண்டிற்குள் புலனாய்வை முடிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த ஓராண்டிற்குள் முடிக்க வேண்டும்.
* ஊழல் நிரூபிக்கப்பட்டால், ஊழலில் தொடர்புடைய அனைவரிடமிருந்தும் இழப்பீடு பெறப்பட்டு, அரசு இழப்பைச் சரிகட்ட வேண்டும்.
இப்படி ஆட்டமாய் ஆடுகின்ற அரசியல்வியாதிகளின் தலையைக் கொய்யும் அளவுக்கு நிபந்தனைகளை விதித்தால் அவர்களென்ன செய்வார்கள்..? இதற்காகவாக அவர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்..? ச்சும்மா விட்டு விடுவார்களா என்ன..?
அரசுத் தரப்போ தனது பரிந்துரையாக கமிஷனின் மசோதாவில் சேர்த்துள்ள வெளக்குமாத்துக் குச்சிகளைப் பாருங்கள்...
* இந்த லோக்பால் அமைப்பு நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது மட்டுமே லஞ்சம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தும் உரிமை கொண்டது.
* லஞ்சம் தொடர்பான விசாரணையை துவங்கவோ, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக புகார்களை பெறவோ இந்தக் கமிஷனுக்கு அதிகாரம் கொடுக்கப்படாது. புகார்களைப் பெறுவதற்கென நியமிக்கப்படும் எம்.பி.,க்கள் மூலமே, அவை பெறப்படலாம்.
(இங்கேயும் எம்.பி.க்களாம். அப்போதுதானே யார் மீது புகார் வந்திருக்கிறது என்று உடனேயே தெரிந்து கொண்டு தப்பிக்க வழி செய்யலாம்.)
* புகாரில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; அமைச்சர்கள் மீதான புகார் குறித்து பிரதமரிடமோ, பிரதமர், அமைச்சர்கள் மீதான புகார் குறித்து, புகார்களை பெற நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.,க்களிடமோ சிபாரிசு மட்டுமே செய்ய முடியும்.
* காவல் துறைக்கான அதிகாரம், லோக்பால் அமைப்புக்கு கொடுக்கப்படாது. எனவே, எந்த புகார் மீதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது.
* லோக்பால் அமைப்பில் தவறான புகார் தெரிவித்தது உறுதி செய்யப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்.
(இதை மட்டும் வக்கனையா எழுதிட்டானுகய்யா இந்த நாதாரிகள்)
* இந்த அமைப்பை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய கமிட்டி ஒன்று உருவாக்கப்படும்.
* இவர்கள் மூவரும் இணைந்து, லோக்பால் அமைப்புக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர். உறுப்பினர்கள் அனைவரும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக, குறிப்பாக ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பர்.
(முடிஞ்சது மேட்டர்.. இதுக்கு இப்ப இருக்குற மாதிரியே எதையுமே அமைக்காமல் கொள்ளையடிச்சிட்டுப் போயிரலாமே)
* நாட்டின் பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு தொடர்பாக, பிரதமருக்கு எதிராக புகார் வந்தால், அது குறித்து விசாரிக்க பரிந்துரை செய்ய, இந்த அமைப்புக்கு அதிகாரம் கிடையாது.
* புகாரின் அடிப்படையில் விசாரணையை ஆறு மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் துவக்க வேண்டும். ஆனால், எவ்வளவு மாதங்களில், ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை.
(போபர்ஸ் கேஸ் மாதிரி ஆட்சி மாறி வேற ஆட்சி வந்தாலும் வாய்தா போட்டு இழுத்தடிச்சு மறுபடியும் ஆட்சிக்கு வந்து கடைசீல சங்கு ஊதிரலாம்ல..)
* லஞ்ச அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்டவர், தவறான வழிகளில் ஈட்டிய சொத்துக்களை அனுபவிப்பதற்கு, இந்த அமைப்பின் மூலம் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
இப்படி இந்த அரசியல்வியாதிகள் கொண்டு வரப் போகும் கேவலமான மசோதாவை எதிர்த்துத்தான் இந்த முதியவர் காந்தியாரின் ஆயுதமான உண்ணாவிரதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.
இதிலென்ன பிளாக்மெயில் இருக்கிறது..? உண்மையாக பிளாக்மெயில் செய்திருப்பது இந்தக் கேடு கெட்ட, கேவலங்கெட்ட அரசியல்வியாதிகள்தான்..! எங்களை கேள்வி கேட்கவே எவனுக்கும் உரிமையில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்..! நாடு மக்களுக்காகவா அல்லது இந்த ஓநாய்களுக்காகவா..?
முறைப்படி அனைவருக்கும் முன்கூட்டியே தெரிவித்துவிட்டுத்தான் இந்தப் பெரியவர் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளார். முதல் நாள் அன்ன ஹாசரேவை தனது வீட்டுக்கு அழைத்துப் பேசியிருக்கும் மன்னமோகனசிங்கால் அவருக்கு உரிய பதிலையும், விளக்கத்தையும் அளிக்க முடியவில்லை. பாவம் அந்தாளு என்ன செய்வார்..? இத்தாலி அம்மாவின் பெர்மிஷன் இல்லாமல் தனது தலைப்பாகையைக்கூட அவரால் கழட்ட முடியாது..! அந்த லட்சணத்தில்தான் அவர் இருக்கிறார்.
ஒரு நாட்டின் பிரதமரே இந்த லட்சணத்தில் இருக்கும்போது இவரை நம்பி சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தால் என்னவாகும்..? அந்தக் கிழவருக்கு மன உறுதியும், நல்ல எண்ணமும் இருக்கிறது. இவரைவிட பத்து வயது அதிகமான நமது மாநிலத்தின் பெரிசும் ஏதோ ஒரு நாள் நல்ல ஹாயான சமாதியொன்றில் போய் அரைமணி நேரம் படுத்துறங்கிவிட்டு வெற்றிகரமான உண்ணாவிரதம் என்று சொல்லிவிட்டு வரத் தெரியாத நபர்தான் இந்தத் தாத்தா..
இதோ 4-வது நாளாக உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். அரசுகள் இப்போதும் சல்ஜாப்பு சொல்லி வருகின்றன. தேர்தல் பிரச்சார நேரத்தில் இப்படியொரு லொள்ளு தேவையா என்று மன்னமோகனசிங்குக்கு ஏக டோஸ் விழுந்திருக்கலாம்..!
விவசாயத் துறை அமைச்சராக இருப்பதாக தன்னைக் கொள்ளும் சரத்பவார் இவருடைய கடும் எதிர்ப்பினால் லோக்பாலின் அமைப்புக் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் தப்பித்துவிட்டார். தனது ஜென்ம விரோதியுடன் தேசிய அளவில் மோதி தனது பெயரை ரிப்பேராக்கிக் கொள்ள விரும்பாமல் ஒதுங்கிவிட்டார் சரத்பவார்.
இப்போது ஹசாரேவைச் சுற்றிலும் உள்ள அவரது இயக்கத் தொண்டர்களும், ஆர்வமுள்ள, உண்மையான இந்தியர்களாக அவருக்குத் தோள் கொடுத்து உற்சாகமளித்து வருகிறார்கள்..!
நாமும், நம்மால் முடிந்த அளவுக்கு பெரியவர் அன்ன ஹசாரேவுக்கும் அவரது இயக்கத்திற்கும், அவரது போராட்டத்திற்கும் நமது ஆதரவை வழங்க வேண்டும் தோழர்களே..!
தமிழகத்தில் சென்னை மற்றும் ஈரோட்டில் இது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன என்பது பாராட்டுக்குரியது..!
சாதுவான முயலைக்கூட சீண்டிக் கொண்டேயிருந்தால்கூட லேசாக கடிக்கக்கூட செய்யும். ஆனால் நம்மை குழி தோண்டி புதைக்கும் அளவுக்கான பிரச்சினைகள் நம்மைச் சூழ்ந்திருக்கும் வேலையிலும், நமது தார்மீகமான எதிர்ப்பையும், ஒற்றுமையையும் இந்தக் களத்தில் நாம் காட்டவில்லையெனில் இதன் பாதிப்பு நமது வாரிசுகளுக்குத்தான்..!
கொண்டாட வேண்டியதை கொண்டாட்ட நேரத்தில் கொண்டாடுவோம் இந்தியர்களே..! கிரிக்கெட் எப்போதும் இங்கேதான் இருக்கும். எங்கேயும் ஓடிப் போகாது..!
இப்போது இந்தியன் என்பதை நாம் உணர்வில் காட்ட வேண்டிய நேரம். மாறாக அந்த உணர்வை உணவில் மட்டுமே காட்டி நாம் சோற்றால் அடித்த பிண்டங்களாகக் காட்டுவதில் அர்த்தமில்லை தோழர்களே..!
இந்தியனாக இரு.. இந்தியனாகவே வாழு.. இந்தியனாகவே சாகு என்பதெல்லாம் சரி.. அதற்கு முன்பாக ஒரு நாளாவது நாம் நல்ல மனிதனாக வாழ்ந்து காட்டுவோமே..!?
|
|
Tweet |









