மதுரையில் நடந்த சொதப்பலான வங்கி கொள்ளை திட்டம்

16-03-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கொள்ளையடிக்க திட்டம் போடுபவர்கள் என்னதான் பக்காவாக பிளான் செய்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் முட்டாள்தனம் செய்து கோட்டைவிட்டுவிடுவார்கள். இதை வைத்துதான் போலீஸும் அவர்களைப் பிடிக்கிறது. ஒரு சிறிய தவறுகூட இல்லாத திருட்டு எனில் போலீஸ் பாடு திண்டாட்டம்தான். இதில்தான் போலீஸார் போலி குற்றவாளிகளை கோர்ட்டில் நிறுத்தி கேஸை முடித்துவிடுவார்கள்.

எல்லாம் பக்காவாக செய்தும், ஒரேயொரு விஷயத்தில் முட்டாள்தனமாக இருந்ததால் தாமாக போலீஸிடம் மாட்டிய கொள்ளையர்கள் கதைதான் இது.



25 வருடங்களுக்கு முன்பு. மதுரையில்.. தற்போதைய உயர்நீதிமன்றக் கிளையின் அருகில் இருக்கும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில்.. ஒரு நாள் இரவில் திடீர் கொள்ளை. 300 பவுன் நகைகளும், சில லட்சம் ரூபாய்களும் அபேஸ். மதுரையே பரபரத்துவிட்டது.

நகைகளை அடகு வைத்திருந்தவர்களெல்லாம் வங்கி முன்னாடி வந்து நின்று கண்ணீரும், கபலையுமாய் பேட்டியெல்லாம் கொடுத்தார்கள். எப்படியும் மீட்டுவிடுவோம். பஸ் மறியலெல்லாம் வேண்டாம்..என்று அவர்களது காலில் விழுகாத குறையாக கெஞ்சி, வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் வங்கி அதிகாரிகள்.

வங்கியின் பின்புறக் கதவுகளை பெயர்த்தெடுத்து உள்ளே நுழைந்தவர்கள் மின் வயர்களையும் அறுத்துவிட்டதால் அபாய ஒலி ஒலிக்கவில்லை. வெல்டிங் கேஸை பயன்படுத்தி நகைப் பெட்டகத்தை உடைத்து நகைகளை எடுத்துவிட்டார்கள். கையோடு கொண்டு போயிருந்த கடப்பாரையை வைத்து பணப் பெட்டகங்களை உடைத்து லம்ப்பாக மொத்தப் பணத்தையும் அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள். எப்படியும் 8 அல்லது 9 பேராவது இதில் ஈடுபட்டிருப்பார்கள் என்று யூகித்தது போலீஸ்.

தேடுதல் வேட்டையை தொடங்கியது போலீஸ். மதுரையில் இருக்கும் நகைக் கடைகள் அனைத்திலும் புகுந்து சோதனை நடத்தியது போலீஸ். தடயம் எதுவும் சிக்கவில்லை. எடுத்த கைரேகைகள் எதுவும் பழைய குற்றவாளிகளுடன் ஒத்துப் போகவில்லை. நகைக் கடை பஜாரில் இருக்கும் அனைத்து கடைகளிலும் உளவுக்கு ஆட்களை நிறுத்தி வேவு பார்த்தது போலீஸ். யார் நகைகளை விற்க வந்தாலும் தங்களிடம் சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தது. ஒன்றும் பலனில்லை. கொள்ளையர்கள் புது ஆட்களாக இருக்கும் என்கிற முடிவுக்கு வந்தது காவல் துறை.

சில நாட்கள் கழித்து பாண்டியன் எக்ஸ்பிரஸில் மதுரையில் இருந்து சென்னைக்கு பயணப்படுகிறார்கள் கொள்ளையர் டீம். இவர்களுடன் ஒரு போலீஸ் ஏட்டுவும் அடக்கம். சென்னைல ஒரு சின்ன வேலை இருக்கு. நீங்ககூட வந்தீங்கன்னா ஈஸியா முடிச்சிரலாம்..என்று சொல்லியே அழைத்திருக்கிறார்கள். அழைத்தவர் பெரிய புள்ளிஎன்பதால் ஏட்டுவும் தயங்காமல் வந்திருக்கிறார்.

அவரிடத்தில் ஒரு பையை ஒப்படைத்து, “இதை உங்க பையோட சேர்த்தே கொண்டு வந்திருங்க..என்று சொல்லியிருக்கிறார்கள். அவரும் நம்ம பசங்களோடதுதானே என்றெண்ணி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். சென்னை வந்தவுடன் அந்த ஏட்டுவின் கையில் இருந்த பையை இவர்கள் எடுத்துக் கொண்டு தனியே சென்றிருக்கிறார்கள்.

எங்கோ சென்றுவிட்டு அன்று மதியம் லாட்ஜூக்கு திரும்பி வந்தவர்களிடம் ஏட்டு, “எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தீங்க.. என்ன வேலை..?” என்று கேட்க.. நம்மாளுதானே.. நம்ம பேச்சைக் கேட்பார் என்று நினைத்து, “யார்கிட்டேயும் சொல்லாதீங்கண்ணே. இதுதான் மேட்டர்.. துணைக்கு வந்ததுக்கு வைச்சுக்குங்க..என்று வங்கியில் கொள்ளையடித்த விஷயத்தைச் சொல்லி, 25,000 ரூபாயை கமிஷனாக அவரிடத்தில் திணித்திருக்கிறார்கள்.

ஏட்டு பரிதவித்துப் போனார். டிரெயின்ல போகும்போது திடீர்ன்னு போலீஸ் செக்கிங் வந்தாலும் வருவாங்க. நீங்க போலீஸ்ன்றதால யாரும் செக் பண்ண மாட்டாங்களேன்னுதான் கூட்டிட்டு வந்தோம்..என்று சல்ஜாப்பு சொல்லியிருக்கிறார்கள் கொள்ளையர்கள். பயம் ஏட்டுவின் முதுகைத் தண்டில் பாய்ந்திருந்தாலும், எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அன்றைய இரவில் அதே பாண்டியன் எக்ஸ்பிரஸில் மதுரை திரும்பியிருக்கிறார் ஏட்டு.

மறுநாள் காலை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டெண்ட்டிம் நேரில் சென்று நடந்ததை சொல்லி அவர் காலில் விழுந்து, “ஐயா.. என்னை காப்பாத்துங்க... சத்தியமா எனக்கு வேற ஒண்ணும் தெரியாது எசமான்..என்று கதறியேவிட்டார் ஏட்டு. அவர் கொடுத்த தகவலை உடனேயே சென்னைக்கு பாஸ் செய்தது மதுரை போலீஸ்.

எழும்பூர் நல்லமணி லாட்ஜில் கட்டிங் போட்டுவிட்டு குப்புறப்படுத்து தூங்கிக் கொண்டிருந்தவர்களை, அப்படியே தூக்கி, பத்திரமாக வைத்திருந்து சென்னைக்கு ஓடி வந்த மதுரை போலீஸிடம் ஒப்படைத்தார்கள் சென்னை காவல்துறையினர்.

பாவம்.. பிடிபட்டவர்களில் பலரும் தொழிலுக்கு புதுமுகங்க்ளாம். கூட்டத் தலைவரின் அடிவருடிகள். அவர் சொன்னதற்காக இந்த கொள்ளை வேலையைச் செய்து தங்களது உடம்பை புண்ணாக்கிக் கொண்டார்கள்.

விசாரணை செய்த மதுரை போலீஸார் தங்களுக்குத் தெரிந்த அத்தனை டிஸைன், டிஸைனான சித்ரவதைகளையும் இவர்களிடத்தில் காட்டிவிட்டார்கள்.

அதில் ஒருவர் தீப்பெட்டி கணேசன் சைஸுக்கு இருந்தாலும் செம வாயாம். அவருடைய பத்து விரல்களின் நகங்களுமே புடுங்கி எறியப்பட்டிருந்தது. முன் வரிசை பற்கள் உடைக்கப்பட்டன. அனைவருக்குமே ஊசியை நகக்கண்ணில் ஏற்றி, ஏற்றி.. அவர்களால் விரல்களை சேர்க்கவே முடியாமல் இருந்தது. அடித்த அடியில் அனைவருமே கால்களை நொண்டிக் கொண்டுதான் கோர்ட்டுக்கு வந்தார்கள். கை முட்டியெல்லாம் பலூன் சைஸுக்கு வீங்கியிருந்தது.

கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டபோது கொள்ளையர்கள் அனைவருமே தங்களது கைகளிலும், விரல்களிலும் படிந்திருந்த ரத்தக் காயங்களை காட்டி, போலீஸ் கஸ்டடியில் தாங்கள் தாக்கப்பட்டதாகச் சொல்லி செய்தியாளர்களிடத்தில் கதறினார்கள். ஆனால் பாவமாச்சே என்று சொல்லத்தான் ஆட்கள் இல்லை. இப்படி வெளியில் சொன்னதற்காக போலீஸ் கஸ்டடியில் இன்னொரு முறை பழி தீர்த்துக் கொண்டார்கள்போலீஸார். பாவம்தான்..!

இவர்களை மதிச்சியம் போலீஸ் ஸ்டேஷன் மாடியில் வைத்து போலீஸ் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது, தமிழ் தேசிய அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களை பார்க்க வந்தார். சந்திக்க அனுமதியில்லை என்று மறுத்தது போலீஸ். அவர்களை என்னிடத்தில் காட்டவில்லையெனில், கோர்ட்டுக்கு போவேன்..என்று மிரட்டினார் நெடுமாறன். ஆனாலும் போலீஸ் அவரை அனுமதிக்கவில்லை.

அப்போது 1991-ம் ஆண்டு. சுப்ரமணியசாமியால் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு அதிகாரிகளின் ராஜ்ஜியம் ஆரம்பித்திருந்த காலம். அவர்கள் வைத்ததுதானே சட்டம்..? அவர்களைப் பார்க்க முடியாததால் பத்திரிகையாளர்களிடத்தில் போலீஸாரை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டுப் போனார் நெடுமாறன்.

நெடுமாறன் வந்து பார்க்கும் அளவுக்கு அந்தத் திருடர்கள் முக்கியமானவர்களா என்று பார்த்தால், கூட்டத் தலைவர் மட்டும் மிக, மிக முக்கியமானவராக இருந்தார்.

மதுரையின் உண்மையான அஞ்சா நெஞ்சன், மதுரை மாநகரின் முதல் மேயரான மதுரை முத்துவின் மூத்த மகனான மு.நல்லதம்பிதான் இந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவர். இவருக்காகத்தான் நெடுமாறன் அங்கே சென்றிருக்கிறார்.

தொடர்ந்து இந்தக் கேஸின் விசாரணைக்காக கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காகவே இந்தக் கொள்ளையை தாங்கள் செய்ததாக பேட்டியும் கொடுத்தார் நல்லதம்பி. ஈழ ஆதரவு கோஷங்களையும் எழுப்பினார்கள் கொள்ளையர்கள். கூடவே தனித் தமிழ்நாடு கோஷமும் சேர்ந்துதான்..!

காட்டிக் கொடுத்த போலீஸ் ஏட்டுவின் குடும்பத்தினருக்கு தனது அரசியல் செல்வாக்கால் நிறைய உதவிகளைச் செய்து கொடுத்திருக்கிறார் நல்லதம்பி. அந்த விசுவாசத்தால் ஏட்டுவும் நிறைய பதில் உதவிகளை நல்லதம்பிக்கு செய்து அவரது குடும்பத்தில் ஒருவர்போல இருந்திருக்கிறார். இதனாலேயே அவரை முழுமையாக நம்பி விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அவரோ யூனிபார்மை கழட்டிருவாங்களே என்ற பயத்தில் போட்டுக் கொடுத்துவிட்டார்..!

கடைசியில், ஏதோ 10 வருஷம் தண்டனை கொடுத்தார்கள். இப்போது எல்லாம் முடிந்து வெளியில் வந்திருப்பார்கள். ஆனால், இந்த 10 வருஷமும்போய் கூடுதலாக 5 வருடமும் கழித்துதான் அந்த வங்கிக் கொள்ளையில் காணாமல் போன நகைகள் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கிடைத்தது என்பது இன்னொரு சோகமான விஷயம்.!


0 comments: