3 - சினிமா விமர்சனம்

04-04-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் திரைப்படங்கள் பலவும் புஸ்ஸாகிப் போவதுதான் தமிழ்ச் சினிமாவின் நடைமுறை. இந்த நடைமுறையையே இப்போது புஸ்ஸாக்கியிருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா..! தனது முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றுவிட்டார்..

சாதாரண சினிமா பாடல் ஒன்று 3 லட்சம் பேரால் பார்க்கப்படும் அளவுக்கு பேசப்படும் என்று அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் கிடைத்ததை சர்வ நிச்சயமாக பயன்படுத்திக் கொண்டது 3 டீம். அதற்காக அவர்களுக்கு பாராட்டுக்கள்..!

தனுஷ் நிச்சயமாக பள்ளி மாணவராக, கல்லூரி மாணவராக நடிப்பதை இந்தப் படத்தோடு நிறுத்திவிடுவதே இப்படத்திற்குக் கிடைக்கும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்..!


படத்தின் முதல் பாதியில் இருக்கும் கண்டவுடன் காதலும், அதைத் தொடர்ந்த காதல் தூது விடும் படலங்களும், எதிர்ப்புகளும், புறக்கணித்த திருமணக் கதைகளும் வாரவாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் படங்களில் இருக்கும் கதைதான். ஆனால் இதில் உண்மை இருக்கிறது.. உணர்ச்சி இருக்கிறது.. நடிப்பும், இயக்கமும் போட்டி போட்டிருக்கின்றன..!

தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாகப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.  பரவசப்படுத்தியிருக்கிறார்.. பள்ளி மாணவர் கெட்டப்பில் அவர் காட்டும் மேனரிசமும், நிமிடத்திற்கொரு முறை மாறும் நடிப்பும் அசத்தல்..! எந்த வகையிலும் தனுஷின் நடிப்பை குறை சொல்லவே முடியவில்லை..! சிவகார்த்திகேயனின் புலம்பலோடு, ஸ்ருதிக்காக காத்திருக்கும் தருணங்களில் அவர் காட்டும் ஆக்சன்கள் காதலிக்காதவர்களைக்கூட அது பற்றிய சிந்தனைக்குள் தள்ளி விடுகிறது..!

ஸ்ருதியை முதல் முறையாக பைக்கில் உட்கார வைத்து ஓட்டிக் காட்டும் காட்சியிலும், ஸ்ருதியின் வீட்டுக்குச் சென்று “இன்னிக்கு நாம சந்திக்கலாமா..?” என்று டென்ஷன்படுத்துவதும், இரவில் தனிமையில் ஸ்ருதியைச் சந்திக்கும் காட்சிகள்.. டியூஷன் சென்டரில் முதல் முறையாக ஸ்ருதி அவரைப் பார்த்து ஸ்மைல் செய்தவுடன் காட்டும் எக்ஸ்பிரஷனும் சொல்ல முடியாதது..! நடிப்பில் தனுஷ் ஒரு படி மேலே போயிருக்கிறார்..!  இதற்கு நேர்மாறாக இடைவேளைக்குப் பின்னான வேறொரு களத்தில் அவர் காட்டும் ஆக்ரோஷம், ஸ்ருதிக்கு தன்னைப் பற்றித் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தவிக்கும் பரிதவிப்பு.. ஸ்ருதியுடன் இயல்பாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு இரு மன இடைவெளியில் அவர் வாழும் வாழ்க்கையில் பொய் சொல்லாமல் வாழ்ந்திருக்கிறார் தனுஷ்..!

இதற்கு மிகச் சரியான நடிப்பை ஸ்ருதியிடம் இருந்து வாங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா. ஸ்ருதியின் டைட் குளோஸப் ஷாட்டுகளும், அவருக்கு டப்பிங் பேசியவரின் உணர்ச்சிப்பூர்வ நடிப்பும் சேர்ந்து ஸ்ருதியை நடிப்பு கேரியருக்குள் தள்ளியிருக்கிறது.. ஏ.ஆர்.முருகதாஸ் அவசியம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். இதே ஸ்ருதியை வைத்து தான் என்ன செய்தோம் என்பதை அவர் சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்தால் அவருக்கும் நல்லது.... அவரது அடுத்தடுத்த படங்களில் நடிக்கவிருக்கும் ஹீரோயின்களுக்கும் நல்லது..!

முதன்முதலாக தனுஷிடம் அமைதியாக, அடக்கமாக பேசி வீட்டுக்குத் தெரிஞ்சா பிரச்சினையாயிரும் என்று சொல்லும் ஸ்ருதியின் அந்தப் பேச்சு, டியூஷன் சென்டர்வரையிலான தொடர் பார்வையினால் சலனப்பட்டு ஓகே சொல்லும் அந்த ஒரு காட்சியே கவிதைதான்..! 

ச்சும்மா இருக்கும்போது அழகாக இருந்தால் அவர் நடிகையல்ல.. நடிக்கும்போது இன்னும் அழகாக இருந்தால் அவர்தான் நடிகை.. இதில் ஸ்ருதி சென்டமே அடித்திருக்கிறார்..! கோவில் வாசலில் “போடி. அமெரிக்காவுக்கே போயிரு” என்று தனுஷ் கோபப்படும் காட்சியில் கைகளை குறுக்கேக் கட்டிக் கொண்டு அழுதபடியே திரும்பிச் செல்கிறாரே, அந்த ஒரு காட்சிக்காகவே ஸ்ருதிக்கு ஒரு ஓ போடலாம்..! 
அதேசமயம் ஸ்ருதியின் நடிப்புத் திறமை இத்தனை இருக்கிறது என்பதற்காக இன்னும் அவருடைய மிச்ச, மீதி கேரியரில் அழுக வேண்டிய காட்சிகளுக்கு அனைத்தையும் சேர்த்து இந்த ஒரு படத்திலேயே அழுது தீர்த்திருக்கிறார் என்பதையும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது..!

இப்போதுதான் மயக்கம் என்ன படத்தில் இதே போன்ற ஒரு கதையைப் பார்த்து நொந்து போயிருக்கும் நிலையில் இதே பேட்டர்னில் மீண்டும் ஒரு கதையை செய்ய ஐஸ்வர்யாவுக்கு எப்படி தைரியம் வந்த்து என்று தெரியவில்லை. ஆனால் அந்தத் தைரியத்திற்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.  கதைக் களன் மட்டுமல்ல.. திரைக்கதையையும் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போல சென்னை போன்ற பெருநகரங்களில் பள்ளி மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகளை உரித்துக் காட்டினாற்போல் எடுத்திருக்கும் விதம் அசர வைக்கிறது..!

முதல் பாதிக்கு சிறிதுகூட சம்பந்தமே இல்லாத இரண்டாம் பகுதியில்தான் ஐஸ்வர்யா நிறையவே ஜெயித்திருக்கிறார். இதற்காக அவர் கொடுத்திருக்கும் ஓப்பனிங் லீடிங் எந்தவொரு இயக்குநருக்கும் வராத தைரியம்.. கணவர்தானே நடிகர் என்பதோடு சொந்தத் தயாரிப்பு என்பதாலும் துணிந்திருக்கிறார் ஐஸ்.. மானசீக நடிகர் பிணமாக இருக்கும் காட்சியோடு துவக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தினை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களா என்ற கேள்விக்குறியோடு வரும்கால இயக்குநர்கள் பாலோ அப் செய்தால் என்னவாக இருக்கும்..? யோசித்துப் பார்த்தால் வேறு எந்த இயக்குநருக்கும் இந்த அளவுக்கு நிச்சயமாக தைரியம் வராது..! வெல்டன் ஐஸ்..!

இயக்கத்தில் குறையே சொல்ல முடியாத அளவுக்கு கச்சிதமாக செய்திருக்கிறார். பிரபு-பானுபிரியாவின் கேரக்டர் ஸ்கெட்ச் எதிர்பாராதது..! எத்தனை பணக்கார வீடுகளில் இது போன்று பக்குவப்பட்டு போயிருக்கிறார்கள்..! இதற்கு நேரெதிராக ஸ்ருதியின் வீட்டைக் காட்டுகிறார் ஐஸ்வர்யா. ஸ்ருதியின் அப்பா தனுஷை பார்த்தவுடனேயே அறைகிறார். வீட்டிலும் கோபப்படுகிறார்.. அம்மா ரோகிணியும் ஆத்திரப்படுகிறார். வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள். ஒரு மிடில் கிளாஸ் பேமிலியர்கள் என்றாலே இப்படித்தானோ என்று பேச வைத்திருக்கிறார் ஐஸ். திருமணம் முடிந்து தனுஷ் ரோகிணி வீட்டிற்கு வந்து அழைக்கும்போது அவரது பேச்சில் மருமகனது உண்மைத்தனத்தை ரோகிணி மட்டுமே கண்டறிவதாக இயக்கம் செய்திருப்பது நன்று..! 

தனுஷ்-ஸ்ருதி முதல் இரவு காட்சி மிகவும் ரசனையானது..! உண்மையாகவே ஆண், பெண் அடிமைத்தனம், திருமண பந்தம் என்ற சங்காத்தமே இல்லாமல் துவங்கியிருக்கும் அந்தக் காதல் வாழ்க்கைக்கு முதல் காட்சியே அமர்க்களம்..! “என்ன பேண்ட் போட்டிருக்க..?” என்ற தனுஷின் கேள்விக்கு “நீயென்ன வேஷ்டியா கட்டிருக்குற..?” என்ற ஸ்ருதியின் பதில் ரசனையானது..!  பிரச்சினை இப்படித்தான் வேறு கோணத்தைத் தொடப் போகிறது என்றுதான் நினைத்தேன். ஆனால் இடைவேளைக்குப் பின்பு அது வேறொருவிதமாகப் போகும் என்று நினைக்கவேயில்லை..!

தனது இயக்கத் திறமைக்கு தீனி போடும்விதமான காட்சிகளைத்தான் வைத்திருக்கிறார் ஐஸ். தனுஷின் நண்பர் சுந்தரிடம் விசாரிக்கத் துவங்கி அவர் மூலமாக காட்சிகளை தொடர்ச்சியாக பின்ன வைத்து, இடையிடையே ஸ்ருதியின் கதறலோடு படத்தின் முழு பாரத்தையும் தனுஷின் மீது சுமத்தியிருக்கிறார் இயக்குநர். ஹோட்டல் கார் பார்க்கிங் ஏரியாவில் நடக்கும் சண்டை காட்சியில் தனுஷ் தனது உச்சக்கட்ட நடிப்பைக் காட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்..! 

நடிப்பு, இயக்கத்திற்கு தோதான வேல்ராஜின் கேமிராவும் அழகையே பதிவு செய்திருக்கிறது..! சென்னையின் எந்த ஏரியாவில் தனுஷ் சைட் அடிக்கும் அந்தப் பகுதியைப் படம் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. லாங் ஷாட்டில் பார்ப்பதற்கு ஸ்கிரீனெஸ் சூப்பர்ப்..! கிரேடிங்கை கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார்கள் என்பது பலவித காட்சிகளிலும் தெரிகிறது..! 

பல லட்சம் பேர் ஏற்கெனவே கேட்டு முடித்து ஆவலுடன் எதிர்பார்த்ததாலோ என்னவோ, கொலைவெறிடி பாடல் காட்சி மட்டும் சப்பென்றுதான் இருக்கிறது ரசிகர்களுக்கு.. எனக்கு ஓகேதான்.. வேறென்ன செய்ய முடியும்..? ஏர்செல்லின் 2 கோடி ரூபாய் ஸ்பான்ஸரில் இந்த ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்..! படத்தின் தரத்திற்கு இதுதான் சரி என்றே எனக்குத் தோன்றுகிறது..! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பின்பு ஒரே படம், ஒரே பாடலின் மூலமாக மிகப் பெரிய பெயர் கிடைத்திருப்பது அனிருத்திற்குத்தான்.. இதனை இவர் எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்று பார்ப்போம்..! படத்தின் மற்ற பாடல்கள் பரவாயில்லை ரகம்தான்.. ஒவ்வொரு ஷாட்டிலும் ஸ்ருதியும், தனுஷும் பின்னிப் பிணைந்து கொண்டிருக்க.. யார் பாடலைக் கேட்டிருப்பார்கள்..!

மனைவி என்றில்லை.. ஒரு தமிழ்ப் பெண் இயக்குநராக இருந்ததினால் கிஸ் சீன்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு, தனுஷிற்கு பெரும் ஏமாற்றமாகியிருக்கும் என்று நினைக்கிறேன். இதுவே ஹிந்தி, தெலுங்கு படமென்றால் ஸ்ருதியின் மூக்கிற்கு பதிலாக உதடுகள் புண்ணாகிப் போயிருக்கும்.. தப்பித்தார் ஸ்ருதி..!

தமிழகம் முழுவதும் படம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்க.. வழக்கம்போல படத்திற்கு எதிர்ப் பாட்டுக்களும் குறைவில்லாமல் வந்து கொண்டேயிருக்கின்றன..! காரணம் என்ன என்றுதான் தெரியவில்லை. கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம் என்ற வரிசையில் எந்தக் குறையும் சொல்ல முடியாத படம்தான் இது..!

மயக்கம் என்ன படத்திலேயே பார்த்துவிட்டோம் என்பதுதான் இவர்கள் சொல்லும் விளக்கமெனில் அதனைவிட அழகாக, அழுத்தமாக இப்படம் அந்த நோயின் கொடுமையை பதிவு செய்திருக்கிறது என்பதுதான் ஐஸ்வர்யா இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கும் செய்தி..! தமிழ்ச் சினிமாவிற்கு ஒரு மிகச் சிறந்த பெண் இயக்குநர் கிடைத்திருக்கிறார் என்பதுதான் இப்படத்தின் மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் செய்தி..

தமிழகம் முழுவதிலும் படத்திற்கு நல்ல வசூல் என்று விநியோகஸ்தர்கள் பாராட்டுகிறார்கள். போட்ட காசை முதல் வாரத்திலேயே கலெக்ட் செய்துவிடலாம் என்பது லேட்டஸ்ட் எதிர்பார்ப்பு. அதற்கடுத்து வருவதெல்லாம் லாபம்தானாம்..! முதல் மூன்று நாட்களிலேயே ஒன்றரை கோடியை சென்னையில் மட்டும் வசூல் செய்திருப்பது சாதனைதான்..! ஐஸ்வர்யா அவரது அப்பனுக்கும் சேர்த்தே கொஞ்சம் சவால் விட்டிருக்கிறார் போல் தெரிகிறது..! படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்..!

படத்தை இந்த அளவுக்கு பாராட்டுகிறானே என்ற உங்களது சந்தேகம் நியாயமானது. படம் எனக்கு பிடித்திருக்கிறது.. இதற்கும் காரணங்கள் இருக்கின்றன. இப்படத்தின் டியூஷன் காட்சிகளில் இருக்கும் காதல், சைட் அடிக்கும் விஷயங்கள் எனது பழைய கதையை திரும்பவும் பிளாஷ்பேக்காக கிளறிவிட்டது ஒன்று..

இன்னொன்று இதனைவிடவும் இப்படத்தின் இடைவேளைக்குப் பின்னான கதை. மயக்கம் என்ன படத்தைவிடவும் என் சோக வாழ்க்கையின் ஒரு பகுதியை நியாகப்படுத்திவிட்டது.. அனுபவித்தவர்களுத்தான் அதன் வலி புரியும் என்பார்கள். அந்த வகையில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது என் மனம் என் நிலையில் இல்லை..! அந்த அளவுக்கு மீண்டும் பழசை கிளறிவிட்டது..! அந்த எனது பழைய வாழ்க்கை நினைவுகளை இங்கே சென்று படித்துக் கொள்ளுங்கள்..!

கடைசிவரையிலும் தொடர்ந்தமைக்கு எனது நன்றிகள்..!

32 comments:

Jayadev Das said...

எனக்கே எனக்கா...... வடை எனக்கே எனக்கா....!! ததரினா......ஹயர ...ஹயர ஹயரப்பா..... ப..பா...பேன்....ப..பா...பேன்... .ப .பா....ப..ப...பேன். பாபா பேன்....

Jayadev Das said...

\\மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் திரைப்படங்கள் பலவும் புஸ்ஸாகிப் போவதுதான் தமிழ்ச் சினிமாவின் நடைமுறை. இந்த நடைமுறையையே இப்போது புஸ்ஸாக்கியிருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா..! தனது முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றுவிட்டார்.\\ உண்மைத் தமிழன் உண்மையைத்தான் எழுதுவார் என்ற எல்லோருடைய நினைப்பும் இத்தோட புஸ்... ஆயிடிச்சு!! ஹா...ஹா...ஹா... [அது சரி நீங்க ஒன்னும் காமடி கீமடி பண்ணலியே #டவுட்டு ஹி...ஹி...ஹி...]

Jayadev Das said...

\\சாதாரண சினிமா பாடல் ஒன்று 3 லட்சம் பேரால் பார்க்கப்படும் அளவுக்கு பேசப்படும் என்று அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் கிடைத்ததை சர்வ நிச்சயமாக பயன்படுத்திக் கொண்டது 3 டீம். அதற்காக அவர்களுக்கு பாராட்டுக்கள்..!\\ தெய்வமே உங்களுக்கு என்ன ஆச்சு... எனக்கு ஒன்னும் விளங்கலே.. யூ டியூபில் இந்தப் பாடலுக்கு கிடைத்த ஹிட்சுகளின் எண்ணிக்கை நாலு கோடிக்கும் மேல், எந்த கணக்கை வைத்து இந்த மூன்று லட்சம் என்ற எண்ணை derive பண்ணுனீங்கன்னு சொன்னா என்ன மாதிரி அப்பாவிகளுக்கு கொஞ்சமாவது விளங்கும்....

Jayadev Das said...

\\தனுஷ் நிச்சயமாக பள்ளி மாணவராக, கல்லூரி மாணவராக நடிப்பதை இந்தப் படத்தோடு நிறுத்திவிடுவதே இப்படத்திற்குக் கிடைக்கும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்..!\\ ஸ்... அப்பாட... அண்ணனுக்கு எதுவும் ஆகலே நல்லாத்தான் இருக்காருன்னு நிம்மதி இப்பத்தான் வருது.... :))

Jayadev Das said...

\\கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம் என்ற வரிசையில் எந்தக் குறையும் சொல்ல முடியாத படம்தான் இது..!\\ தேவுடா.. தேவுடா.. ஏழுமலை தேவுடா..... சூடுடா....சூடுடா.... இந்த அநியாயத்தை சூடுடா....

Jayadev Das said...

\\படத்தை இந்த அளவுக்கு பாராட்டுகிறானே என்ற உங்களது சந்தேகம் நியாயமானது.\\ உங்களுக்கே நல்லாத் தெரியுது, ஒரு ஓட்டை படத்துக்கு இல்லாத பில்டப் குடுக்குறோம்னு... அப்புறம் நான் என்னத்த சொல்ல......

Jayadev Das said...
This comment has been removed by the author.
Jayadev Das said...

நடு நிலையான விமர்சனமாக இல்லை, சாய்ந்ததற்க்கான காரணமும் விளங்கவில்லை...... ஏன்னு காரணம் தெரிஞ்சவங்க யாராச்சும் இதுக்கு விளக்கம் குடுங்கலேன்பா.....

Jayadev Das said...

டைம் கிடச்சா, உண்மை விமர்சனம் சூப்பரா ஒரு நண்பர் எழுதியிருக்காரு... முடிஞ்சா படிங்கண்ணே .... [பதிவர்கள் எல்லாருமே, உங்களைத் தவிர்த்து, கிட்டத் தட்ட இப்படித்தான் எழுதியுக்காங்க. ஹி...ஹி...ஹி...]

http://abimanyuonline.blogspot.in/2012/04/3.html

Anonymous said...

உண்மைத்தமிழன் ஏன் இந்தப்படத்துக்கு விமர்சனம் எழுதினார் என்பது அடுத்த பதிவைப் படித்தால்தான் தெரியும்.அவரால் இந்தப் படத்தை குறை சொல்லமுடியாது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது

அசோக் மூர்த்தி said...
This comment has been removed by the author.
scenecreator said...

படம் செம மொக்கை.
என்னுடைய வலையில் 3 பட விமர்சனம்
மொக்கை + ரம்பம்+ பிளேடு = 3 பட விமர்சனம்)
http://scenecreator.blogspot.in/2012/04/3.html

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

எனக்கே எனக்கா...... வடை எனக்கே எனக்கா....!! ததரினா......ஹயர ...ஹயர ஹயரப்பா..... ப..பா...பேன்....ப..பா...பேன்... .ப .பா....ப..ப...பேன். பாபா பேன்....]]]

எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்..? பரதேசம் போயிருந்தீங்களா ஸார்..?

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

\\மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் திரைப்படங்கள் பலவும் புஸ்ஸாகிப் போவதுதான் தமிழ்ச் சினிமாவின் நடைமுறை. இந்த நடைமுறையையே இப்போது புஸ்ஸாக்கியிருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா..! தனது முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றுவிட்டார்.\\

உண்மைத் தமிழன் உண்மையைத்தான் எழுதுவார் என்ற எல்லோருடைய நினைப்பும் இத்தோட புஸ்... ஆயிடிச்சு!! ஹா...ஹா...ஹா... [அது சரி நீங்க ஒன்னும் காமடி கீமடி பண்ணலியே #டவுட்டு ஹி...ஹி...ஹி...]]]]

நான் உண்மையைத்தானே சொல்லியிருக்கேன்..!? இதில் உமக்கென்ன சந்தேகம்..?

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

\\சாதாரண சினிமா பாடல் ஒன்று 3 லட்சம் பேரால் பார்க்கப்படும் அளவுக்கு பேசப்படும் என்று அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் கிடைத்ததை சர்வ நிச்சயமாக பயன்படுத்திக் கொண்டது 3 டீம். அதற்காக அவர்களுக்கு பாராட்டுக்கள்..!\\

தெய்வமே உங்களுக்கு என்ன ஆச்சு... எனக்கு ஒன்னும் விளங்கலே.. யூ டியூபில் இந்தப் பாடலுக்கு கிடைத்த ஹிட்சுகளின் எண்ணிக்கை நாலு கோடிக்கும் மேல், எந்த கணக்கை வைத்து இந்த மூன்று லட்சம் என்ற எண்ணை derive பண்ணுனீங்கன்னு சொன்னா என்ன மாதிரி அப்பாவிகளுக்கு கொஞ்சமாவது விளங்கும்.]]]

அப்படியா..? சந்தோஷம்.. திருத்திக் கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

\\தனுஷ் நிச்சயமாக பள்ளி மாணவராக, கல்லூரி மாணவராக நடிப்பதை இந்தப் படத்தோடு நிறுத்திவிடுவதே இப்படத்திற்குக் கிடைக்கும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்..!\\

ஸ்... அப்பாட... அண்ணனுக்கு எதுவும் ஆகலே நல்லாத்தான் இருக்காருன்னு நிம்மதி இப்பத்தான் வருது.... :))]]]

தனுஷ் மேல இம்புட்டு பாசமா..? ஆத்தாடி.. நாடு தாங்காதே..?

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

\\கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம் என்ற வரிசையில் எந்தக் குறையும் சொல்ல முடியாத படம்தான் இது..!\\

தேவுடா.. தேவுடா.. ஏழுமலை தேவுடா..... சூடுடா....சூடுடா.... இந்த அநியாயத்தை சூடுடா....]]]

ஐயையோ.. ஏழுமலையானை இதுக்கெல்லாமா கூப்பிடுவீங்க..? அவர் ரொம்ப பிஸிங்க..

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

\\படத்தை இந்த அளவுக்கு பாராட்டுகிறானே என்ற உங்களது சந்தேகம் நியாயமானது.\\

உங்களுக்கே நல்லாத் தெரியுது, ஒரு ஓட்டை படத்துக்கு இல்லாத பில்டப் குடுக்குறோம்னு... அப்புறம் நான் என்னத்த சொல்ல......]]]

எழுதியதில் குதர்க்கம் சொல்லாதீர்கள். நேரிடையாகவே கேளுங்கள். எனக்கு படம் பிடித்திருக்கிறது.. அவ்வளவே..!

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

நடு நிலையான விமர்சனமாக இல்லை, சாய்ந்ததற்க்கான காரணமும் விளங்கவில்லை...... ஏன்னு காரணம் தெரிஞ்சவங்க யாராச்சும் இதுக்கு விளக்கம் குடுங்கலேன்பா.]]]

எனக்குப் பிடிச்சிருக்கு.. இதுதான் காரணம்.. ஏன் பிடிச்சிருக்குன்றதுக்குத்தான் பதிவு எழுதியிருக்கேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

டைம் கிடச்சா, உண்மை விமர்சனம் சூப்பரா ஒரு நண்பர் எழுதியிருக்காரு... முடிஞ்சா படிங்கண்ணே ....

[பதிவர்கள் எல்லாருமே, உங்களைத் தவிர்த்து, கிட்டத்தட்ட இப்படித்தான் எழுதியுக்காங்க. ஹி...ஹி...ஹி...]]]]

எல்லாருடைய ரசனையும் வேறு, வேறுதானே..? விடுங்கப்பூ..!

உண்மைத்தமிழன் said...

[[[Chilled Beers said...

உண்மைத்தமிழன் ஏன் இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதினார் என்பது அடுத்த பதிவைப் படித்தால்தான் தெரியும். அவரால் இந்தப் படத்தை குறை சொல்ல முடியாது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.]]]

நன்றிண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[scenecreator said...
படம் செம மொக்கை.
என்னுடைய வலையில் 3 பட விமர்சனம்
மொக்கை + ரம்பம்+ பிளேடு = 3 பட விமர்சனம்)
http://scenecreator.blogspot.in/2012/04/3.html]]]

ஆளுக்கு ஆள் ரசனை மாறுபடும் பிரதர்..!

Muruganandam Ramasamy said...
This comment has been removed by the author.
anand said...

தனுஷ் சாகும் போது எல்லாரும் சிரிக்கிறாங்க ..... படம் செம மொக்கை ... விமர்சனம் ஆளுக்கு ஆள் ரசனை மாறுபடும் தான் .. ஆனா உங்க விமர்சம் எப்பவுமே
நடு நிலமையா இருக்கணும் ... நான் மூணு நு எதுக்கு படத்தோட பெயர் வச்சாங்கனு கண்டுபுடிச்சிட்டேன் . இது தனுஷ் நடிக்கும் மூணாவது சைகோ படம் .இன்னும் கொஞ்சம் நாள்ல தனுஷ் உண்மையாகவே லூசு ஆக போறான். இவனுடைய படம் எல்லாம் இப்படித்தான் இருக்கு. வெறும் 3-ன்னு வெக்குறதுக்கு பதிலா " 3 - லூசு " ன்னு படத்தோட பேர வச்சிருக்கலாம். அதான் பொருத்தமா இருந்திருக்கும்.

உண்மைத்தமிழன் said...

[[[anand said...

தனுஷ் சாகும்போது எல்லாரும் சிரிக்கிறாங்க. படம் செம மொக்கை. விமர்சனம் ஆளுக்கு ஆள் ரசனை மாறுபடும்தான். ஆனா உங்க விமர்சம் எப்பவுமே நடுநிலமையா இருக்கணும். நான் மூணுநு எதுக்கு படத்தோட பெயர் வச்சாங்கனு கண்டு புடிச்சிட்டேன். இது தனுஷ் நடிக்கும் மூணாவது சைகோ படம். இன்னும் கொஞ்சம் நாள்ல தனுஷ் உண்மையாகவே லூசு ஆக போறான். இவனுடைய படம் எல்லாம் இப்படித்தான் இருக்கு. வெறும் 3-ன்னு வெக்குறதுக்கு பதிலா "3-லூசு"ன்னு படத்தோட பேர வச்சிருக்கலாம். அதான் பொருத்தமா இருந்திருக்கும்.]]]

ஓவரான கிண்டல்.. பொருந்தாத விமர்சனம்.. நான் பார்த்த தியேட்டரில் தனுஷின் மரணக் காட்சியில் ஒரு சிறிய சப்தம்கூட எழவில்லை. நிசப்தமே சூழ்ந்திருந்தது..! விமர்சனம் இருக்கலாம்.. ஆனால் இந்த அளவுக்கு இருக்கக் கூடாது..!

Jayadev Das said...

\\விமர்சனம் இருக்கலாம்.. ஆனால் இந்த அளவுக்கு இருக்கக் கூடாது..!\\



ஆளுக்கு ஆள் ரசனை மாறுபடும் பிரதர்..!

Jayadev Das said...

\\ஓவரான கிண்டல்.. பொருந்தாத விமர்சனம்..\\

எல்லாருடைய ரசனையும் வேறு, வேறுதானே..? விடுங்கப்பூ..!

khaleel said...

Jayadev Das said...
\\விமர்சனம் இருக்கலாம்.. ஆனால் இந்த அளவுக்கு இருக்கக் கூடாது..!\\



ஆளுக்கு ஆள் ரசனை மாறுபடும் பிரதர்..!

இது ரசனை இல்லை. தனி மனித தாக்குதல். நானும் இந்த படம் பார்த்தேன். எனக்கும் சுத்தமாக புடிக்க வில்லை. அதற்காக தனுஷ் என்ற நடிகனை லூசு என்பது அனாவசிய பேச்சு. அதை தான் சரவணன் கொஞ்சம் ஓவரா இருக்கு சொல்றார்.

beaviscartmanstewie said...

உண்மைத்தமிழன்

i loved your review, that what i exactly felt when i watched that movie. the people didn't get it because expected a different movie like the first part.this movie cant be understand unless you have live throught that mindset every single day of live like that you wont get this movie.thank for your back story of your live and the autograph of your love

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

\\விமர்சனம் இருக்கலாம்.. ஆனால் இந்த அளவுக்கு இருக்கக் கூடாது..!\\

ஆளுக்கு ஆள் ரசனை மாறுபடும் பிரதர்..!]]]

மாறுபடட்டும். அது தனி மனித விரோதமாக இருக்கக் கூடாது..!

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

\\ஓவரான கிண்டல்.. பொருந்தாத விமர்சனம்..\\

எல்லாருடைய ரசனையும் வேறு, வேறுதானே..? விடுங்கப்பூ..!]]]

சரி.. விட்டுர்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[beaviscartmanstewie said...

உண்மைத்தமிழன்

i loved your review, that what i exactly felt when i watched that movie. the people didn't get it because expected a different movie like the first part. this movie cant be understand unless you have live throught that mindset every single day of live like that you wont get this movie. thank for your back story of your live and the autograph of your love]]]

மிக்க நன்றிகள் நண்பரே..! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்..!