மக்கள் நித்தியானந்தன்களைத் தேடி ஏன் ஓட வேண்டும்..?

24-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த மூன்று வாரங்களாக கோடி ரூபாய்கள் செலவிட்டிருந்தால்கூட நித்தியானந்தத்திற்கு இவ்வளவு விளம்பரம் கிடைத்திருக்காது.. அவ்வளவை அள்ளியிருக்கிறார் நித்தி. சில பரபரப்பு ஊடகங்கள் தங்களது தார்மீகத்தை துறந்து சிற்றின்பத்தைத் தூண்டிவிடும் விளையாட்டை பொதுமக்கள் மத்தியில் விளையாடி அதற்கும் ஒரு கட்டணத்தை சுளையாக சம்பாதித்துக் கொண்டு தங்களுக்கும் நித்தியானந்தத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை பறைசாற்றிவிட்டார்கள்.

நித்தியானந்தம் தினம்தோறும் ஒரு அறிக்கையையும், வீடியோவில் தோன்றி தான் இன்னமும் இளமைப் பொலிவுடன்தான் இருக்கிறேன் என்பதையும் காட்டிக் கொண்டார்.. ரஞ்சிதா போன இடமும், மறைவில் இருக்கும் இடமும் தெரியவில்லை. அவருடைய சீடர்கள் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகி தலைமறைவாகிவிட்டார்கள். நித்தம், நித்தம் நித்தி புராணங்களை பாடிய, ஓதியவர்களெல்லாம் இன்றைக்கு அதே வாயால் அவரை வைந்து.. கூடவே நித்தியிடம்விட்ட காசை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நித்தி இன்னமும் இறைவன்தான் என்று நம்புகிறவர்களில் சிலர் மட்டுமே அவரது ஆசிரமத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருப்பதாகத் தகவல்.

இந்தக் களேபரத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு தமிழக மக்களை மறக்கடிக்க செய்துவிட்டது.. வழக்கம்போல எருமை மாட்டின் மீது மழை விழுந்த கதையாக இதையும் ஜீரணித்துவிட்டு அடுத்த சாமியாரின் வீடியோவுக்காக காத்திருக்கிறது தமிழகம்.

அன்றைய இரவு எட்டு மணிக்கு முன்புவரையில் மகானாக கருதப்பட்ட நித்தி அடுத்த நொடியில் இருந்து கிரிமினலாக உருவகப்படுத்தப்பட்டார். அவரை தெய்வமாக கருதியவர்கள்தான் இன்றைக்கு துப்புகிறவர்கள் வரிசையில் முதலில் இருக்கிறார்கள். ஏன் இவர்களுக்கு இது முன்பே தெரியவில்லை.. நித்தியும் ஒரு சக மனிதர்தான் என்று..

நித்தியானந்தத்தின் வயது 32. இந்த வயதிற்குள் உலகம் முழுவதும் ஆசிரமங்களை அமைத்தாகிவிட்டது. நான்காயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு இருக்காது என்றாலும் நிச்சயம் கோடிகளில்தான் சொத்துக்கள் இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

எப்படி சேர்ந்தது இது..? யார் கொடுத்தது இது..?

தெருவோர காளியாத்தா, மாரியாத்தா கோவில்களின் உண்டியல்களில் போடப்படும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய்களா அங்கே கோடிகளாக உருவெடுத்தன.. இல்லையே..?

பல ஆயிரங்கள்.. பல லட்சங்கள்.. சில கோடிகள் என்று ஒரே செக்கில் கொண்டு வந்து கொட்டியிருக்கிறார்களே பணக்கார பெருமக்கள்.. அவர்களெல்லாம் யார்..? அவர்களுக்கெல்லாம் கல்வியறிவு இல்லையா..? மனிதனுக்கும், கடவுளுக்கும் பாகுபாடு பார்க்கத் தெரியாத முட்டாள்களா அவர்கள்..? அப்படியெனில் இவ்வளவு பணம் அவர்களிடம் எப்படி சேர்ந்தது..? சொல்ல முடியுமா..?

இந்த கோடீஸ்வரர்கள் எதற்கு நித்தியைத் தேடி ஓடினார்கள்.. நிம்மதி வேண்டி.. எதற்கு நிம்மதி வேண்டி இவரிடம் ஓட வேண்டும்..? அதுதான் போதுமென்கிற அளவுக்கு பணம் இருக்கிறதே.. அதனை வைத்து அந்த நிம்மதியைத் தேடிக் கொள்ளலாமே.. ஏன் இவர்கள் செய்யவில்லை.. பணம்தான் அளவற்று இருக்கிறதே.. அது இருந்தால் எதையும் செய்யலாமே..?

தீராத நோய் என்கிறார்கள். பணம் இருந்தால் சுவிட்சர்லாந்துவரையிலும் சென்று வைத்தியம் பார்க்கலாமே..? எதற்காக காவி உடையிடம் வந்து மருத்துவம் பார்க்கச் சொல்கிறீர்கள்..?

குடும்பத்தில் குழப்பம் என்கிறார்கள். பணத்தை விட்டொழித்துவிட்டு குழப்பத்தை நீக்கிவிட்டு சந்தோஷத்தைக் கொண்டாடலாமே.. ஏன் செய்யவில்லை..?

இந்தப் பணக்காரர்களுக்கு அப்படி என்னதான் கவலை..? பணம்.. பணம்.. பணம்.. வேறொன்றுமில்லை..

பணத்தை பத்திரப்படுத்த நினைக்கிறார்கள். இன்னமும் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள்.. தங்களது உடல் நலனில் தனி கவனம் செலுத்துகிறார்கள்.. தாங்கள் எப்படியும் நூறு வருடங்களைத் தாண்டி வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏனெனில் இவர்கள் பணக்காரர்கள்.. கோடீஸ்வரர்கள்.. அவர்கள் இப்போது அனுபவிக்கும் இன்பமயமான வாழ்க்கையை இப்படியே தொடர வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது எல்லாவற்றிற்குமான அடிப்படை காரணம் என்ன..?

பதில் ஒரே வார்த்தைதான்.. ஆசை..

வேறொன்றுமில்லை. இவர்களுடைய ஆசைக்காகத்தான் நித்தி முதற்கொண்டு அத்தனை மனிதர்களையும் தெய்வங்களாக்கி புனிதப் பசுவாக்குகிறார்கள்.

இதில் சிலர் தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதினாலும், மற்றவர்களின் சொல் வார்த்தையில் நம்பிக்கை வைத்து இவர்களை சேவிக்கிறார்கள். ஆனால் தொழிலிலும் கடுமையாக உழைக்கிறார்கள். அந்த உழைப்பு அவர்களுக்கு செல்வத்தை மென்மேலும் ஈட்டித் தருகிறது. ஆனால் அந்த மனிதரை சந்தித்துவிட்டு வந்த பின்புதான் தனக்கு செல்வம் கொட்டுகிறது என்று நினைத்து தன்னுடைய கடுமையான உழைப்பை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த மனிதரை முன்னுக்குத் தள்ளுகிறார்கள் இந்த பணக்காரர்கள்.

இதை பிரபலமான ஒருவர் செய்தால் என்னவாகும்..? அது கொசுவின் வளர்ச்சியைப் போல் பிரபலங்கள் வட்டாரத்தில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில்.. இந்த பிரபலங்கள் கொட்டாவி விடுவதைக்கூட ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அடுத்தக் கட்ட நிலையில் இருக்கும் மிடில் கிளாஸ் மாதவன்களுக்கும், மிடில் கிளாஸ் காமன்மேன்களுக்கும் அந்த மனிதனே இன்னொரு தெய்வமாகிறான்.

அடுத்த படை கிளம்புகிறது. இப்போது மிடில் கிளாஸ்காரர்கள். கையில் பணம் இல்லாமல் இருந்தாலும் கடன் வாங்கியாவது கொண்டு போய் பணத்தைக் கொட்டிவிட்டு வருகிறார்கள். இவர்களில் நூறில் ஒருவருக்கு ஒரு நல்லது நடந்தால்கூட அது மிச்சமிருக்கும் 99 பேருக்குள்ளும் சந்தேகத்தை கிளம்பி.. நாம்தான் சரியா விழுந்து கும்பிடாமல் வந்துவிட்டோமோ என்றெண்ணி மறுபடியும் கிளம்பி ஓடுகிறார்கள்.

இதுதான் இந்த ஆன்மீக உலகத்தில் அப்பாவி மக்களின் செயல்பாடுகளால் தெய்வங்களாக்கப்பட்ட மனிதர்கள் வளர்ந்த கதை..

கவியரசர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் நூலில் இடம் பெற்றிருக்கும் புகழ் பெற்ற பாடல் இது.

"ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோவ அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற
தள்ளவொணா விருந்து வர.. சர்ப்பந் தீண்ட
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே.."

வீட்டில் பசுமாடு கன்று ஈன்றிருக்கிறது..!

ஊரில் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது..

அந்த மழையினால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டது.

வீட்டில் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. படுத்த படுக்கையாக இருக்கிறாள்.

வீட்டு வேலைக்காரி இரண்டு நாட்களுக்கு முன் இறந்துபோயிருக்கிறாள்.

மழை கொட்டியதால் வயலில் ஈரம் இருக்கின்ற இந்த நேரத்திலேயே விதையை நட்டு வைத்துவிடலாம் என்றெண்ணி விதைகளை எடுத்துக் கொண்டு வயற்காட்டை நோக்கி ஓடுகிறான் அவன்.

அந்த விதைகள் வாங்க கடன் கொடுத்தவன் எதிரில் வந்து இவனது இடுப்பு வேட்டியை பிடித்திழுத்து முதலில் தனது கடனுக்கு பதில் சொல்லிவிட்டுப் போ என்கிறான்.

அவனிடம் ஒருவாறு வாய்தா வாங்கிவிட்டு மீண்டும் ஓடுகிறான் வயலுக்கு.

பக்கத்து ஊரில் இருந்து அவனது பங்காளியின் சாவு செய்தியை ஒருவன் எதிரில் வந்து சொல்கிறான்.

செய்தியை வாங்கி ஜீரணித்துவிட்டு மீண்டும் வயற்காட்டை நோக்கி ஓடுகிறான்..

அதே நேரம் அவனது வீட்டிற்கு அவனது சம்பந்தி விட்டார் மனைவியைப் பார்க்க வருகிறார்கள்.

இங்கே பங்காளியின் மரணத்தைப் பற்றி சிந்தித்தபடியே சென்றவன் வயலில் இருந்த பாம்பை மிதித்துவிட அது அவனைக் கொத்திவிடுகிறது.

அணிந்திருந்த வேஷ்டியை கிழித்து பாம்பு விஷத்தை உடலில் ஏற்றவிடாமல் தடுத்துவிட்டு எப்படியும் விதையை நட்டுவிட்டுத்தான் மறுவேலை என்பதைப் போல் தனது வயற்காட்டில் கால் வைக்கிறான்.

அங்கே அவனுக்கு முன்பாகவே அரசு அதிகாரிகள் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். விவசாய வரியை இதுவரையிலும் கட்டவில்லை.. எப்ப கட்டப் போறீங்க..? பதில் சொல்லுங்க என்று அவனை மறித்து நிற்கிறார்கள்.

அதே நேரம் ஊருக்கு பொதுவான கோவிலின் கொடையை அன்றைய தேதிக்கு அவர்களது குடும்பம்தான் தரவேண்டும் என்பதால் படி அரிசி கேட்டு வாசலில் வந்து நிற்கிறார் கோவில் குருக்கள்.

இவ்வளவு கஷ்டமும் ஒரு மனுஷனுக்கு, ஒரே நாள்ல அடுத்தடுத்து வந்தா அவன் என்ன ஆவான்..? செத்து சுண்ணாம்பாயிர மாட்டான்..? ஆனால் இதுவெல்லாம் வராது என்று நினைக்காதீர்கள். வரும்.. நிச்சயமாக வரும். இதுதான் மனித வாழ்க்கை..

கஷ்டங்களெல்லாம் சொல்லி வைத்தாற்போல் சேர்ந்துதான் வரும். நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இந்தக் கஷ்டங்கள் வருகிறது..? மனிதன் எதையோ செய்கிறான். ஏன் செய்கிறான்? அவனுக்கு அவன் செய்த செயல் தொடர்பாக ஒரு ஆசை. அந்த ஆசையினால் அந்தச் செயலை செய்யப் போய் சிக்கலில் மாட்டுகிறான். ஆக எல்லாவற்றிற்கும் அடிப்படை இந்த ஆசைதான்.

நியாயமான ஆசைகளாக இருந்தாலும் அதற்காக நாம் கஷ்டப்படத்தான் வேண்டும். இங்கே கஷ்டம் என்பது பெற்றோர்களின் கடமை, பிள்ளைகளை வளர்ப்பது, பிள்ளைகள் பெற்றோரை காப்பது.. இதற்காக அவர்கள் சில தியாகங்களைச் செய்வது போன்றவற்றிற்குள் அடங்கும்.

ஆனால் நியாயமில்லாத ஆசைகளினால் துன்பங்களை அனுபவித்தால் யார் அதற்கு பொறுப்பாவது..?

சுருக்கமாக ஒரு உதாரணத்தோடு சொல்கிறேன்.

ஒரு பையன். பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறான். 50 சதவிகித மதிப்பெண்கள்தான் எடுத்திருக்கிறான். ஆனால் அவனது பக்கத்து வீட்டுப் பையன் 90 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறான். இவனது அப்பா இவனை பொறியியல் படிக்க வைக்கிறார்.

இதேபோல் 50 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த பையனையும் அவனது தந்தை பொறியியல் படிக்க வைக்க முயல்கிறார். அரசுக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில்தான் கிடைக்கிறது. ஆனால் இதற்கு பணம் நிறைய செலவாகும். ஆனால் வேறு வழியில்லை. தன் பையனை பக்கத்து வீட்டுப் பையனைப் போல பொறியாளனாக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொள்கிறார்.

மனைவியிடம் இருந்த நகைகளை விற்றுக் காசாக்கி பையனை தனியார் கல்லூரியில் நுழைத்துவிடுகிறார். பையனும் பெயருக்கு கல்லூரிக்குப் போகிறான். படிப்பதைப் போல் ஏதோ செய்கிறான். அப்பா அடுத்த செமஸ்டருக்கு பீஸ் கட்ட பணமில்லாமல் கடன் வாங்குகிறார். பின்பு இந்தக் கடனை அடைக்க வேறொருவரிடம் பெரிய அளவிலான வட்டி விகிதத்தில் கடன் வாங்குகிறார்.

கடன் கழுத்தை நெரித்த வேளையில் தாங்க மாட்டாமல் இதனை அடைக்க வேண்டி தான் வேலை பார்க்கும் அரசு வேலையில் முறைகேடாக நடந்து கொள்ள முயல்கிறார். லஞ்சம் வாங்குகிறார். முதல் முயற்சி ஜெயிக்கிறது. தொடர்ந்து கொண்டே செல்கிறார். பையன் அரியர்ஸில் குளித்துக் கொண்டிருக்கும்போது இவர் லஞ்சத்தில் குளிக்கிறார்.

கடைசியாக ஒரு நாள் பிடிபடுகிறார். ஜெயிலுக்கு போகிறார். இப்போது இவரது மனம் சொல்கிறது நான் என் பையனுக்காகத்தான் செய்தேன் என்று.. பையன் சொல்கிறான் இது அப்பாவின் கடமைதானே என்று..

இது நியாயமில்லாத ஆசைதானே..? இந்தப் பையனுக்கு இருக்கின்ற அறிவை வைத்து, எடுத்திருக்கின்ற மதிப்பெண்களை வைத்து, அவனால் பொறியியல் படிப்பை படிக்க முடியுமா? முடியாதா? என்றல்லவா அந்தத் தகப்பன் சிந்தித்திருக்க வேண்டும்..?

பொறியியல் துறை இல்லையென்றால் பாலிடெக்னிக், கம்ப்யூட்டர், ஐ.டி.ஐ. என்று பல்வேறு பிரிவுகளில் திருப்பிவிடலாமே.. நிறைய வழிகள் இருக்கிறதே.. செய்யவில்லையே இந்தத் தந்தை..

அவரது இந்த அர்த்தமற்ற ஆசைக்கான விலையை அவர்தானே கொடுக்க வேண்டும். இத்தனையையும் வரிசையாக செய்துவிட்டு "எனக்கு ஏன் இப்படி சோதனையைக் கொடுக்கிறாய்..?" என்று முருகனின் கோவணத்தை இழுத்தால் என்ன நியாயம்..?

நான் இன்றைக்கும் நிரந்தரமான வேலை கிடைக்கவில்லையே என்று புலம்பிக் கொண்டிருப்பதற்கும் நானேதான் காரணம். எனக்கே நன்கு தெரிகிறது. சினிமா துறையில் இயக்குநர் ஆக வேண்டும் என்றால் இந்நேரம் நான் எத்தனை கஷ்டப்பட்டாலும் ஏதாவது ஒரு இயக்குநரிடம் ஒட்டியிருக்க வேண்டும். நான் செய்யவில்லை.

சீரியல்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் மட்டுமே எழுதுவேன் என்று நினைத்து முனைப்போடு போராட நினைத்திருந்தால் இந்த பிளாக்கையெல்லாம் இழுத்து மூடிவிட்டு அங்கே ஓடியிருக்க வேண்டும். அதையும் நான் செய்யவில்லை.

இங்கே பாதி கால்.. அங்கே பாதி கால் என்று வைத்து அலம்பிக் கொண்டிருப்பதினால்தான் எனது நிலைமை இப்போதுவரையிலும் திரிசங்கு சொர்க்கமாக இருக்கிறது. எனக்கே நன்கு தெரிகிறது.. தவறு என் மீதுதான் என்று.

"இது தொடர்பாக ஏதாவது ஒரு முயற்சியை நான் எடுக்கிறேன் முருகா.. அதற்கு ஏதேனும் ஒருவகையில் நீ எனக்குத் துணையிரு. அது போதும்.. வழியைக் காட்டு. நான் ஓடுகிறேன். ஆளைக் காட்டு. நான் பேசுகிறேன்.." என்று முருகனுடனான ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்தில்தான் எனது நம்பிக்கையான வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் எனது ஆசை சினிமா என்பதால் அதற்கு என்ன விலை கொடுத்தாக வேண்டுமோ அதனை நான் கொடுத்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

இந்நேரம் எனக்கு சாதாரணமாக ஐயாயிரம் ரூபாயில் டிடிபி வேலை கிடைத்தாலும் பரவாயில்லை. வாழ்க்கையில் செட்டிலானால் போதும் என்று நான் நினைத்திருந்தால் இந்தப் பிரச்சினைகளெல்லாம் எனக்கு வந்திருக்காதே.. ஆக.. இந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாவதே நமது ஆசைகளினால்தான்..

போதும் என்ற மனதோடு.. வாழ்க்கையை ஆண்டவனின் கைகளில் ஒப்படைத்துவிட்டு.. எப்போது வேண்டுமானாலும் இறப்பை எதிர்நோக்கி காத்திருப்பவனுக்கு எந்த ஒரு வழிபாடும் தேவையில்லை.

நானும் இப்படித்தான் காத்திருக்கிறேன். இது சுயபச்சாபதமில்லை! நிஜமாகவே.. இன்றைக்கு.. இந்த நேரத்திற்கு.. இந்த நிமிடத்தில்.. இந்த நொடியில்கூட நான் இறப்பதற்கு தயாராக இருக்கிறேன். முருகன்தான் கூப்பிட மறுக்கிறான்.

மனசு நிறைய கனவுகளோடு, நிறைய எதிர்பார்ப்புகளோடு உழைத்துக் கொண்டிருப்பவர்களை திடீரென்று அழைத்துக் கொள்கிறானே என்பதை நினைக்கின்றபோது அவனை திட்டுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.

நான் இப்போதே இறக்கத் தயார் என்று சொல்வதாலேயே உடனேயே எனக்கு இறப்பு வந்துவிடாது என்பது எனக்கும் தெரியும். ஆனால் இதில் இருக்கும் ஒரு கூடுதல் வசதி என்னவெனில், எதன் மீதும் அதிகம் நாட்டம் வராது.. இருப்பதே போதும் என்று ஆசையை அளவோடு வைத்துக் கொள்ளலாம்.

"நாம் உழைத்துக் கொண்டேயிருப்போம். இறப்பை பற்றிக் கவலைப்படாமல் உழைப்போம். முருகன் எப்ப கூப்பிடுறானோ அப்போ போய்க்குவோம்... எதுக்கு அதைப் பத்தி நினைக்கணும்"னு சொல்கிறவர்களும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த மாதிரி மனப்பான்மை உள்ளவர்கள்தான் ஒரு போதும் நித்தி மாதிரியான சாமியார்களிடம் போகவே மாட்டார்கள்.

வெற்றியும், தோல்வியும், இன்பமும், துன்பமும், லாபமும், நஷ்டமும் வாழ்க்கையில் சகஜம். அதற்காக துவண்டு போகக் கூடாது. அதைத் தூக்கிப் போட்டுட்டு மேலும், மேலும் உழைக்க வேண்டும்.. எல்லாமே கடந்து போகும் என்கிற மனநிலை நமக்குக் கிடைத்தால் நிச்சயம் இந்த மாதிரியான மனித போலிகளான சாமியார்களின் தயவு நமக்குத் தேவையிருக்காது.

நானும் இதுவரையில் இது மாதிரியான எந்த சாமியாரிடமும் போனதில்லை. ஆர்வமும் கொண்டதில்லை.. காரணம் எனக்கும், என் அப்பன் முருகனுக்கும் இடையில் எந்த புரோக்கரும் தேவையில்லை. எனக்கு அவன்.. அவனுக்கு நான்.. இதுவே எங்களுக்கு போதும்..

92 comments:

சி.வேல் said...

best of Luck

சி.வேல் said...

best of Luck

அமர பாரதி said...

அருமையான பதிவு உண்மைத்தமிழரே, தகுதிக்கு மீறி ஆசைப்படும் போது நமக்கு தேவைப் படுபவர்கள் "GOD MEN" என்பதை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இதையும் "ஞாலங் கருதினும் கை கூடும் காலங் கருதி இடத்தாற் செயின்" என்பதையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. எதுவாக இருந்தாலும் "முயற்சி திருவினையாக்கும்" என்பதை மறந்து விடக் கூடாது. அதனால் "தகுதிக்கு மீறி ஆசைப்படுவது" என்பது நேர்மையான வழியில் தேவையான காலம் எடுத்துக் கொண்டும் என்பதாக இருந்தால் தவறில்லை.

vasu balaji said...

அருமையாச் சொன்னீங்க சார். இவனுங்ககிட்ட இவ்வளவு காசக் கொட்டி புண்ணியம் தேடுறத விட யாரோ ஒரு வழியற்ற பிள்ளைக்கு படிப்போ, வயசானவங்களுக்கு ஆதரவோ கொடுத்தா பாவமா வந்து சேர்ந்துடும்? இவனுங்கள நம்பறதுக்கு இந்த மாதிரி பண்ணா புண்ணியம் சேராட்டியும் பாவம் கழியும்னு நம்பறது மூட நம்பிக்கைன்னே இருக்கட்டுமே! நம்பிட்டு போலாமே. வேற எதுவும் கிடைக்காட்டி போகட்டுமே. மனசார ஒரு புன்சிரிப்பு கிடைக்குமே.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே... என்னச் சொல்லுவது என்றுத் தெரியவில்லை. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்று கவியரசு வரிகள் தான் ஞாபகத்துக்கு வருதுங்க.

// நானும் இதுவரையில் இது மாதிரியான எந்த சாமியாரிடமும் போனதில்லை. ஆர்வமும் கொண்டதில்லை.. காரணம் எனக்கும், என் அப்பன் முருகனுக்கும் இடையில் எந்த புரோக்கரும் தேவையில்லை. எனக்கு அவன்.. அவனுக்கு நான்.. இதுவே எங்களுக்கு போதும்.. //

இது மாதிரி இருந்துவிட்டாலே சாமியார்களுக்கு வேலையில்லை அண்ணே.

அண்ணே பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை அண்ணே. அது வரும் போது வரட்டும். இனிமேல் அது பற்றி பேச வேண்டாமே..

Anonymous said...

" நானும் இதுவரையில் இது மாதிரியான எந்த சாமியாரிடமும் போனதில்லை. ஆர்வமும் கொண்டதில்லை.. காரணம் எனக்கும், என் அப்பன் முருகனுக்கும் இடையில் எந்த புரோக்கரும் தேவையில்லை. எனக்கு அவன்.. அவனுக்கு நான்.. இதுவே எங்களுக்கு போதும்.. //

உண்மையான வார்த்தை தம்பி. பாராட்டுகள். 40 வருடங்களுக்கு முன்பு என்னுடைய டீன் ஏஜில் நான் புரிந்து கொண்டு, கடைபிடிக்கும் விஷயம் இது. ஒரு வித்தியாசம். கடவுளை நான் நம்புகிறேன் . ஆனால் அவனுக்கு உருவம் கொடுத்து பார்ப்பதிலை. எனவே என் கடவுளுக்கு மதம் கிடையாது. தெளிவான உங்கள் சிந்தனைக்கு பாராட்டுக்கள்.

Raghu said...

//மத்திய அரசு கொண்டு வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு தமிழக மக்களை மறக்கடிக்க செய்துவிட்டது//

ச‌ர்வ‌தேச‌ ச‌ந்தையில் விலை உய‌ரும்போது ந‌ம் நாட்டிலும் க‌ண்டிப்பாக‌ விலை உய‌ர்த்த‌ப்ப‌ட்டே ஆக‌வேண்டும். இல்லாவிடில், அது வேறு ப‌ல‌ அத்தியாவ‌சிய‌ பொருள்க‌ளுக்கு வ‌ரியாக‌ (Tax) மாறி ம‌றுப‌டியும் ந‌ம் த‌லையில்தான் வ‌ந்து இற‌ங்கும்.

குடும்ப‌த்தின‌ருட‌ன் ம‌ன‌ம் விட்டு பேசினாலே ப‌ல‌ பிர‌ச்னைக‌ள் தீரும், அதை ப‌ல‌ரும் செய்வ‌தில்லை. சாமியார்க‌ளை தேடித்தான் ஓடுகிறார்க‌ள்.

உங்க‌ள் எழுத்தை தொட‌ர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன், நீங்க‌ள் நிச்ச‌ய‌ம் வெற்றி பெறுவீர்க‌ள், வாழ்த்துக்க‌ள் :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிகத் தெளிந்து விட்டீர்கள். முயற்சி பயன் தரும்.

நல்லதந்தி said...

//நானும் இதுவரையில் இது மாதிரியான எந்த சாமியாரிடமும் போனதில்லை. ஆர்வமும் கொண்டதில்லை.. காரணம் எனக்கும், என் அப்பன் முருகனுக்கும் இடையில் எந்த புரோக்கரும் தேவையில்லை. எனக்கு அவன்.. அவனுக்கு நான்.. இதுவே எங்களுக்கு போதும்..//

ஒரு எழுத்து மாறாமல் இதேதான் நம்மக் கொள்கையும், கடவுளைத்தவிர நடுவில் சாமியார் கும்பல்கள் எதற்கு?

இதைத் தனிக் கொள்கையா அறிவித்துவிட்டு கட்சி ஆரம்பிச்சிடலாமா? :)

பதி said...

அப்படியே இதையும் கொஞ்சம் பார்த்துடுங்க

சன் தொலைக்காட்சி நிஜம் தொடரில் ஒளிபரப்பான கல்கி ஆசிரமக் காட்சிகள்

http://www.youtube.com/watch?v=qpxPCtCoUVQ&feature=player_embedded

http://www.youtube.com/watch?v=UE8gvaCiOB4&feature=player_embedded

http://www.youtube.com/watch?v=iIgeyhtJeXg&feature=player_embedded

இதுவும் கடந்து போகும், இந்தியத் திருநாட்டில். இதற்கு காரணமானவர்களும் எந்த விதத்திலும் தண்டனைப் பெற போவது இல்லை. அது ஒன்று மட்டுமே நிச்சயம்.

RRSLM said...

//
பல ஆயிரங்கள்.. பல லட்சங்கள்.. சில கோடிகள் என்று ஒரே செக்கில் கொண்டு வந்து கொட்டியிருக்கிறார்களே பணக்கார பெருமக்கள்.. அவர்களெல்லாம் யார்..? அவர்களுக்கெல்லாம் கல்வியறிவு இல்லையா..? மனிதனுக்கும், கடவுளுக்கும் பாகுபாடு பார்க்கத் தெரியாத முட்டாள்களா அவர்கள்..?
//
கல்வியறிவு இல்லையா? நல்ல கேள்வி!
லட்சகணக்கான மக்கள் அன்றாடும் உனவுக்கே வழி இல்லாத இந்த நாட்டுலதான், 300 கோடி செலவு செய்து 1.5 டன் தங்கம் பயன்படுத்தி தனி ஒருவர், தான் ஒரு கடவுளின் புரோக்கர், என்று சொல்லி கொண்டு ஒரு கோயில் கட்ட முடிகிறது..............இதில் கடவுளின் புரோக்கர் அறிவுடையவர் என்றும் மற்றவரெல்லாம் முட்டாள்கள் என்று தான் கொள்ளவேண்டியுள்ளது!

பணக்காரர்கள் மட்டும் அல்ல, மிடில் கிளாஸ் மாதவன்களும் இதில் விதிவிலக்கு அல்ல.........கோயில் வாசல்ல இருக்கும் பிச்சைகாரருக்கு நாலு அனா போட மனசில்லாத பெருவாரியான மிடில் கிளாஸ் மாதவன்கள் தான், கடவுளுக்கு போய் சேருவதாக நினைத்து, பூஜை செய்பவரின் தட்டில் 50 ரூபாய விட்டேரிஞ்சிட்டு வருபவர்கள் (இதில் சில ஏழை கோயில்களில் பூஜை செய்பவர்களே வறுமை நிலையில் தான் இருப்பார்கள் அது வேறு விடயம், அவர்களுக்கு போய் சேர்ந்தால் கூட ஒரு புண்ணியம் உண்டு)

அது ஒரு கனாக் காலம் said...

ALL THE BEST

Simulation said...

"போலிச் சாமியாரும் வேண்டாம்; நல்ல சாமியாரும் வேண்டாம்"

http://simulationpadaippugal.blogspot.com/2010/03/blog-post_14.html

- சிமுலேஷன்

ஜோ/Joe said...

//என்று முருகனின் கோவணத்தை இழுத்தால் என்ன நியாயம்..?//
:))))

சுரேகா.. said...

அதே..! அதே!

பாலா said...

////////
சுருக்கமாக ஒரு உதாரணத்தோடு சொல்கிறேன்.////////

பின்னீட்டீங்கண்ணே.!!!!! :) :)

உண்மைத்தமிழன் said...

[[[சி.வேல் said...
best of Luck]]]

நன்றி வேல்ஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[அமர பாரதி said...
அருமையான பதிவு உண்மைத்தமிழரே, தகுதிக்கு மீறி ஆசைப்படும்போது நமக்கு தேவைப் படுபவர்கள் "GOD MEN" என்பதை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இதையும் "ஞாலங் கருதினும் கைகூடும் காலங் கருதி இடத்தாற் செயின்" என்பதையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. எதுவாக இருந்தாலும் "முயற்சி திருவினையாக்கும்" என்பதை மறந்துவிடக் கூடாது. அதனால் "தகுதிக்கு மீறி ஆசைப்படுவது" என்பது நேர்மையான வழியில் தேவையான காலம் எடுத்துக் கொண்டும் என்பதாக இருந்தால் தவறில்லை.]]]

உண்மைதான் அமரபாரதி ஸார்..!

ஆனால் அந்த உண்மையை உணரும் பக்குவம் அனைவருக்கும் இருக்க வேண்டுமே..?

உதாரணமாக அந்த பையன், தந்தை கதையில் தந்தையின் கஷ்டத்தைப் பார்த்து பையன் இப்போது முனைப்போடு படித்து தேர்ச்சி பெற்றால் சந்தோஷம்தான். இல்லையெனில்..?

உண்மைத்தமிழன் said...

[[[வானம்பாடிகள் said...
அருமையாச் சொன்னீங்க சார். இவனுங்ககிட்ட இவ்வளவு காசக் கொட்டி புண்ணியம் தேடுறதவிட யாரோ ஒரு வழியற்ற பிள்ளைக்கு படிப்போ, வயசானவங்களுக்கு ஆதரவோ கொடுத்தா பாவமா வந்து சேர்ந்துடும்? இவனுங்கள நம்பறதுக்கு இந்த மாதிரி பண்ணா புண்ணியம் சேராட்டியும் பாவம் கழியும்னு நம்பறது மூட நம்பிக்கைன்னே இருக்கட்டுமே! நம்பிட்டு போலாமே. வேற எதுவும் கிடைக்காட்டி போகட்டுமே. மனசார ஒரு புன்சிரிப்பு கிடைக்குமே.]]]

கரெக்ட்தான் ஸார்..!

தங்களது வருகைக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[இராகவன் நைஜிரியா said...

அண்ணே... என்னச் சொல்லுவது என்றுத் தெரியவில்லை. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்று கவியரசு வரிகள்தான் ஞாபகத்துக்கு வருதுங்க.]]]

நல்லாயிருக்கே கதை.. நான் உங்களுக்கு அண்ணனா..? அப்புறம் தாத்தான்னு கூப்பிடுவேன்..!

//நானும் இதுவரையில் இது மாதிரியான எந்த சாமியாரிடமும் போனதில்லை. ஆர்வமும் கொண்டதில்லை.. காரணம் எனக்கும், என் அப்பன் முருகனுக்கும் இடையில் எந்த புரோக்கரும் தேவையில்லை. எனக்கு அவன்.. அவனுக்கு நான்.. இதுவே எங்களுக்கு போதும்..//

இது மாதிரி இருந்துவிட்டாலே சாமியார்களுக்கு வேலையில்லை அண்ணே.]]]

அதைத்தான் சொல்ல வர்றேன்.. ஏன் இவங்களுக்குப் புரியவே மாட்டேங்குது..!

[[[அண்ணே பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை அண்ணே. அது வரும் போது வரட்டும். இனிமேல் அது பற்றி பேச வேண்டாமே..]]]

பேச விரும்பவில்லை. ஆனால் நித்தம்தோறும் நினைத்தபடியேதான் இருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[திரவிய நடராஜன் said...

"நானும் இதுவரையில் இது மாதிரியான எந்த சாமியாரிடமும் போனதில்லை. ஆர்வமும் கொண்டதில்லை.. காரணம் எனக்கும், என் அப்பன் முருகனுக்கும் இடையில் எந்த புரோக்கரும் தேவையில்லை. எனக்கு அவன்.. அவனுக்கு நான்.. இதுவே எங்களுக்கு போதும்.. //

உண்மையான வார்த்தை தம்பி. பாராட்டுகள். 40 வருடங்களுக்கு முன்பு என்னுடைய டீன்ஏஜில் நான் புரிந்து கொண்டு, கடைபிடிக்கும் விஷயம் இது. ஒரு வித்தியாசம். கடவுளை நான் நம்புகிறேன் . ஆனால் அவனுக்கு உருவம் கொடுத்து பார்ப்பதிலை. எனவே என் கடவுளுக்கு மதம் கிடையாது. தெளிவான உங்கள் சிந்தனைக்கு பாராட்டுக்கள்.]]]

மிக்க நன்றிகள் ஐயா..! ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் மனப்பக்குவம் வருவதற்கு இன்னும் கொஞ்சம் காலமாகும் என்று நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ர‌கு said...

//மத்திய அரசு கொண்டு வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு தமிழக மக்களை மறக்கடிக்க செய்துவிட்டது//

ச‌ர்வ‌தேச‌ ச‌ந்தையில் விலை உய‌ரும்போது ந‌ம் நாட்டிலும் க‌ண்டிப்பாக‌ விலை உய‌ர்த்த‌ப்ப‌ட்டே ஆக‌வேண்டும். இல்லாவிடில், அது வேறு ப‌ல‌ அத்தியாவ‌சிய‌ பொருள்க‌ளுக்கு வ‌ரியாக‌ (Tax) மாறி ம‌றுப‌டியும் ந‌ம் த‌லையில்தான் வ‌ந்து இற‌ங்கும்.]]]

சப்ஸ்டடி பணத்தில் கொஞ்சம் இறக்கிவிடலாமே.. அதனை சேர்த்து வைத்து என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்..?

[[[குடும்ப‌த்தின‌ருட‌ன் ம‌ன‌ம் விட்டு பேசினாலே ப‌ல‌ பிர‌ச்னைக‌ள் தீரும், அதை ப‌ல‌ரும் செய்வ‌தில்லை. சாமியார்க‌ளை தேடித்தான் ஓடுகிறார்க‌ள்.]]]

இதுதான் ஈகோ. குடும்பத்தினரைவிட அவர்களுக்கு சாமியார்கள் இங்கே முக்கியமாகிவிட்டார்கள்.

[[[உங்க‌ள் எழுத்தை தொட‌ர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன், நீங்க‌ள் நிச்ச‌ய‌ம் வெற்றி பெறுவீர்க‌ள், வாழ்த்துக்க‌ள் :)]]]

நன்றிகள் ரகு ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
மிகத் தெளிந்து விட்டீர்கள். முயற்சி பயன் தரும்.]]]

நன்றி யோகன்ஜி..!

திருவாரூர் சரவணா said...

சரவணன்னு பேர் இருந்தா இப்படித்தான் சிந்திக்கத் தோணுமா?

வீட்டுல கஷ்டம்.(வழக்கம்போல) பத்தாம் வகுப்போட படிப்பை நிறுத்தியாச்சு. மறுபடி கலெக்டர் ஆகணும்னு டிகிரி படிக்க நினைச்சேன். பிளஸ் டூ படிக்க பள்ளிக்கூடத்துக்கு போக முடியல . பிரைவேட்டா எழுத நினைச்சா காமர்ஸ் தான் சரியா வரும்னு சொன்னாங்க. இயல்பாவே எனக்கு கணக்குல ஆர்வம் அதிகம். பி.காம் முடிச்சு அப்புறம் பெருசா எதையும் படிக்கலன்னா கூட அக்கவுண்டன்ட்டா ஏதாவது ஒரு நிறுவனத்துல பிழைப்பை ஓட்டிடலாம்னு தோனுனுச்சு.

அரசுக்கல்லூரியில சேர்ந்து பி.காம் படிச்சு முடிச்சேன். இது வரை எல்லாம் சரிதான். ஆனா அப்புறம் குழப்பத்துலேயே இந்த நாள் வரை குழம்பிகிட்டு இருக்கேன். பொதிகை, உட்பட சில தொலைகாட்சிகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள்ல உதவி ஒளிப்பதிவாளர். குறும்படம் ஒண்ணுல உதவி இயக்குனர். எலக்ட்ரீஷியன், பிளம்பர், அக்கவுண்டன்ட், சிறுகதை, ஆலயங்கள் தல வரலாற்றுக் கட்டுரைகள் எழுத்தாளர் அப்படின்னு அங்க இங்க அடி பட்டு இப்ப ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்துல பார்ட் டைம் அக்கவுண்டண்டா போய் ஓட்டிகிட்டு இருக்கேன். அவ்வளவு சீக்கிரம் என்னைய திருத்த முடியும்னு நினைக்குறீங்க?

இவ்வளவு குழப்பம் போதாதுன்னு எங்க பகுதியில ஒரு பிள்ளையார் கோவிலை (இடிஞ்சு விழுற கண்டிஷன்ல இருந்ததை ) மறுபடி இடிச்சு கட்டுறோம். ஏழு லட்ச ரூபாய் எஸ்டிமேட். இது எங்க போய் நிக்கப் போகுதோன்னு தெரியல. இப்படி எல்லாம் கோவிலோட எனக்கு தொடர்பு இருந்தாலும் என்னுடைய இறை நம்பிக்கை எந்த அளவுன்னு இந்த இரண்டு பதிவுகள்ள தெரியும்.

நேரமிருந்தா போய் பாருங்க.

http://ilaiyabharatham.blogspot.com/2010/03/blog-post_10.html

http://ilaiyabharatham.blogspot.com/2010/03/blog-post_07.html

உண்மைத்தமிழன் said...

[[[நல்லதந்தி said...

//நானும் இதுவரையில் இது மாதிரியான எந்த சாமியாரிடமும் போனதில்லை. ஆர்வமும் கொண்டதில்லை.. காரணம் எனக்கும், என் அப்பன் முருகனுக்கும் இடையில் எந்த புரோக்கரும் தேவையில்லை. எனக்கு அவன்.. அவனுக்கு நான்.. இதுவே எங்களுக்கு போதும்..//

ஒரு எழுத்து மாறாமல் இதேதான் நம்மக் கொள்கையும், கடவுளைத் தவிர நடுவில் சாமியார் கும்பல்கள் எதற்கு? இதைத் தனிக் கொள்கையா அறிவித்துவிட்டு கட்சி ஆரம்பிச்சிடலாமா? :)]]]

ஹா.. ஹா.. அப்படியும்விடாம அரசியலுக்கு இழுக்குறீங்களேண்ணே..!

நமக்கு சேவல்கொடி போதும்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[பதி said...

அப்படியே இதையும் கொஞ்சம் பார்த்துடுங்க. சன் தொலைக்காட்சி நிஜம் தொடரில் ஒளிபரப்பான கல்கி ஆசிரமக் காட்சிகள்

http://www.youtube.com/watch?v=qpxPCtCoUVQ&feature=player_embedded

http://www.youtube.com/watch?v=UE8gvaCiOB4&feature=player_embedded

http://www.youtube.com/watch?v=iIgeyhtJeXg&feature=player_embedded

இதுவும் கடந்து போகும், இந்தியத் திருநாட்டில். இதற்கு காரணமானவர்களும் எந்தவிதத்திலும் தண்டனைப் பெற போவது இல்லை. அது ஒன்று மட்டுமே நிச்சயம்.]]]

இது அரசியல் அமைப்பு சிஸ்டத்தில் உள்ள கோளாறு..!

வீடியோக்களை நான் இன்னமும் பார்க்கவில்லை. லின்க் கொடுத்தமைக்கு நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[RR said...

//பல ஆயிரங்கள்.. பல லட்சங்கள்.. சில கோடிகள் என்று ஒரே செக்கில் கொண்டு வந்து கொட்டியிருக்கிறார்களே பணக்கார பெருமக்கள்.. அவர்களெல்லாம் யார்..? அவர்களுக்கெல்லாம் கல்வியறிவு இல்லையா..? மனிதனுக்கும், கடவுளுக்கும் பாகுபாடு பார்க்கத் தெரியாத முட்டாள்களா அவர்கள்..?//

கல்வியறிவு இல்லையா? நல்ல கேள்வி! லட்சகணக்கான மக்கள் அன்றாடும் உனவுக்கே வழி இல்லாத இந்த நாட்டுலதான், 300 கோடி செலவு செய்து 1.5 டன் தங்கம் பயன்படுத்தி தனி ஒருவர், தான் ஒரு கடவுளின் புரோக்கர், என்று சொல்லி கொண்டு ஒரு கோயில் கட்ட முடிகிறது. இதில் கடவுளின் புரோக்கர் அறிவுடையவர் என்றும் மற்றவரெல்லாம் முட்டாள்கள் என்றுதான் கொள்ளவேண்டியுள்ளது!
பணக்காரர்கள் மட்டும் அல்ல, மிடில் கிளாஸ் மாதவன்களும் இதில் விதிவிலக்கு அல்ல. கோயில் வாசல்ல இருக்கும் பிச்சைகாரருக்கு நாலு அனா போட மனசில்லாத பெருவாரியான மிடில் கிளாஸ் மாதவன்கள்தான், கடவுளுக்கு போய் சேருவதாக நினைத்து, பூஜை செய்பவரின் தட்டில் 50 ரூபாய விட்டேரிஞ்சிட்டு வருபவர்கள் (இதில் சில ஏழை கோயில்களில் பூஜை செய்பவர்களே வறுமை நிலையில்தான் இருப்பார்கள் அது வேறு விடயம், அவர்களுக்கு போய் சேர்ந்தால்கூட ஒரு புண்ணியம் உண்டு)]]]

கடவுள் மீது பயப்படுபவர்கள்.. சக மனிதனுக்கு உதவி செய்வதுகூட கடவுளை அடையும் வழிதான் என்பதை ஏனோ மறந்துபோய் விடுகிறார்கள்..!

தங்களுடைய முதல் வருகைக்கு நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[அது ஒரு கனாக் காலம் said...
ALL THE BEST]]]

தேங்க்ஸ் கனாக்காலம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Simulation said...
"போலிச் சாமியாரும் வேண்டாம்; நல்ல சாமியாரும் வேண்டாம்"
http://simulationpadaippugal.blogspot.com/2010/03/blog-post_14.html

- சிமுலேஷன்]]]

சிமுலேஷன் ஸார்..

படிக்கிறேன்.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோ/Joe said...

//என்று முருகனின் கோவணத்தை இழுத்தால் என்ன நியாயம்..?//

:))))]]]

ஜோ.. நியாயம்தானே..!

அவனே வெறும் கோவணத்தோடு இருக்கிறான். அவனிடம் போய் இருப்பதையும் கேட்டால் அவன் என்ன செய்வான்..?

உண்மைத்தமிழன் said...

[[[சுரேகா.. said...
அதே..! அதே!]]]

கவிஞரே.. மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...
/சுருக்கமாக ஒரு உதாரணத்தோடு சொல்கிறேன்.////////

பின்னீட்டீங்கண்ணே.!!!!! :) :)]]]

சுருக்கமாத்தான் சொல்லியிருக்கேன். அதுக்கே நக்கலா..?

தூரமா இருக்கிறதால தைரியமா பேசுறீரோ..?

உண்மைத்தமிழன் said...

[[[திருவாரூரிலிருந்து சரவணன் said...

சரவணன்னு பேர் இருந்தா இப்படித்தான் சிந்திக்கத் தோணுமா?
வீட்டுல கஷ்டம்.(வழக்கம்போல) பத்தாம் வகுப்போட படிப்பை நிறுத்தியாச்சு. மறுபடி கலெக்டர் ஆகணும்னு டிகிரி படிக்க நினைச்சேன். பிளஸ் டூ படிக்க பள்ளிக்கூடத்துக்கு போக முடியல . பிரைவேட்டா எழுத நினைச்சா காமர்ஸ்தான் சரியா வரும்னு சொன்னாங்க. இயல்பாவே எனக்கு கணக்குல ஆர்வம் அதிகம். பி.காம் முடிச்சு அப்புறம் பெருசா எதையும் படிக்கலன்னாகூட அக்கவுண்டன்ட்டா ஏதாவது ஒரு நிறுவனத்துல பிழைப்பை ஓட்டிடலாம்னு தோனுனுச்சு. அரசுக் கல்லூரியில சேர்ந்து பி.காம் படிச்சு முடிச்சேன். இதுவரை எல்லாம் சரிதான். ஆனா அப்புறம் குழப்பத்துலேயே இந்த நாள்வரை குழம்பிகிட்டு இருக்கேன். பொதிகை, உட்பட சில தொலைகாட்சிகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள்ல உதவி ஒளிப்பதிவாளர். குறும்படம் ஒண்ணுல உதவி இயக்குனர். எலக்ட்ரீஷியன், பிளம்பர், அக்கவுண்டன்ட், சிறுகதை, ஆலயங்கள் தல வரலாற்றுக் கட்டுரைகள் எழுத்தாளர் அப்படின்னு அங்க இங்க அடிபட்டு இப்ப ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்துல பார்ட் டைம் அக்கவுண்டண்டா போய் ஓட்டிகிட்டு இருக்கேன். அவ்வளவு சீக்கிரம் என்னைய திருத்த முடியும்னு நினைக்குறீங்க?

இவ்வளவு குழப்பம் போதாதுன்னு எங்க பகுதியில ஒரு பிள்ளையார் கோவிலை (இடிஞ்சு விழுற கண்டிஷன்ல இருந்ததை) மறுபடி இடிச்சு கட்டுறோம். ஏழு லட்ச ரூபாய் எஸ்டிமேட். இது எங்க போய் நிக்கப் போகுதோன்னு தெரியல. இப்படி எல்லாம் கோவிலோட எனக்கு தொடர்பு இருந்தாலும் என்னுடைய இறை நம்பிக்கை எந்த அளவுன்னு இந்த இரண்டு பதிவுகள்ள தெரியும்.

நேரமிருந்தா போய் பாருங்க.

http://ilaiyabharatham.blogspot.com/2010/03/blog-post_10.html

http://ilaiyabharatham.blogspot.com/2010/03/blog-post_07.html]]]

நீங்களுமா சரவணன்..?

வேற வழியில்லை.. இந்த கலைத்துறையில் காலை வைத்துவிட்டால் வெளியேறவும் முடியாது.. உள்ளே புழங்கவும் முடியாது. அப்படியொரு மாய உலகம்..!

நீங்கள் கலைத்துறையிலேயே மேலும், மேலும் முயன்றிருக்கலாம்..!

உங்களுடைய பதிவுகளைப் படிக்கிறேன்..!

தங்களது வருகைக்கு நன்றிங்கண்ணா..!

துளசி கோபால் said...

'பேராசை பெருநஷ்டம்' னு சொல்லிவச்சுருக்காங்க!

மரா said...

நல்லா எழுதி சிந்திக்க வெச்சுட்டீங்க...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசத்தல்

எட்வின் said...

//போதும் என்ற மனதோடு.. வாழ்க்கையை ஆண்டவனின் கைகளில் ஒப்படைத்துவிட்டு.. எப்போது வேண்டுமானாலும் இறப்பை எதிர்நோக்கி காத்திருப்பவனுக்கு எந்த ஒரு வழிபாடும் தேவையில்லை//


இது தான் நச்

கிருஷ்ண மூர்த்தி S said...

உண்மைத்தமிழன்,
போலிகளுக்குப் போலி சாமியார் தான் கிடைப்பார் என்று உங்களால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?

எத்தனையோ நல்ல சாமியார்கள், இந்த மாதிரி சித்து, சில்லறை விஷயங்களில் ஈடுபடாமல், தேடி வந்தவர்களுக்கு நல்ல வழி சொல்பவர்கள் இருக்கிறார்களே, அவர்களெல்லாம் ஏன் ஜனங்களுடைய கண்களில் படவில்லை?

நிஜப் பொன் என்று ஒன்று இருக்கும்போது, அதை மாதிரியே மினுமினுக்கும் காக்கைப் பொன்னும் இருக்கத் தான் செய்யும். எல்லாவற்றையும் அறுத்தெறிந்துவிட்டு நாத்திகம் பேசிக் கொண்டிருந்தவன் நான். எனக்குள்ளும், சில அற்புதமான விஷயங்களைப் பார்க்கச் சொல்லிக் கொடுத்த நல்ல சாமியார்களை நினைத்து வணங்கிக் கொண்டுதான், இதைச் சொல்கிறேன்!

நித்தி கோமணத்தோடு நில்லுங்க!அவன் கோமணத்தை இழுக்கும்போதுகூட, தன்னுடையது இருக்க வேண்டிய இடத்தில் இருக்கான்னு பாத்துட்டு அப்புறமா இழுங்க!

என்னப்பன் பழனியப்பன் கோவணத்தை இழுக்க வேண்டாம்!

:-))

எம்.எம்.அப்துல்லா said...

அட! அண்ணன் நட்சத்திரமா?? வாழ்த்துகள்.

இரண்டு நாட்களாக இணையத் தொடர்பில் இல்லை. தாமத வாழ்த்திற்கு மன்னிக்கவும்.

KATHIR = RAY said...

Idharku Peyar thaaan Vidhi enbadhu.
337 than anaivarukkum. Kadavul ungalukku anaithuvidathilum pakka palamaga iruppaar.

Problems face pandarathu face pannithan aaganum.athil thappikk vali kedayathu.

ipdi panni irunda apdi iruppa . apdi panni irunda ippadi iruppan enbathu karpanai matrum ungal manasuku neenga soldra aaruthal mattume.

muyarchi thodarattum.

சைவகொத்துப்பரோட்டா said...

நிம்மதி என்பது நம் மனதில்தான் இருக்கிறது, அதை தேடி அடுத்தவரிடம் ஓடினால்,
இன்னும் ஏகப்பட்ட நந்தாக்கள் முளைத்து கொண்டே இருப்பார்கள்.
நன்றி அண்ணே.

நாமக்கல் சிபி said...

வழக்கம் போல உண்மைத் தமிழன் டச் இருக்கு!

நல்ல பதிவு!

நாமக்கல் சிபி said...

//வழக்கம் போல உண்மைத் தமிழன் டச் இருக்கு!//

ஐ மீன் நீளத்தைச் சொன்னேன்!

நாமக்கல் சிபி said...

//சுருக்கமாக ஒரு உதாரணத்தோடு சொல்கிறேன்//

வாஸ்தவம்தான்!

சிநேகிதன் அக்பர் said...

சிறந்த இடுகை.

நீங்கள் நினைத்த மாதிரியே முயற்சி மேற்கொண்டு வாழ்வை அனுபவிக்க வாழ்த்துகள் அண்ணா.

கண்ணா.. said...

//நானும் இதுவரையில் இது மாதிரியான எந்த சாமியாரிடமும் போனதில்லை. ஆர்வமும் கொண்டதில்லை.. காரணம் எனக்கும், என் அப்பன் முருகனுக்கும் இடையில் எந்த புரோக்கரும் தேவையில்லை. எனக்கு அவன்.. அவனுக்கு நான்.. இதுவே எங்களுக்கு போதும்..//

நல்லா சொன்னீங்க..

எனக்கு இறைநம்பிக்கை உண்டு.. ஆனால் அதையெல்லாம் வைத்து பின்னபடும் மூடநம்பிக்கையில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை எத்தனை முறை எடுத்து சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார்களே...

Trails of a Traveler said...

நன்றாக சொன்னீர்கள்! நித்யானந்தம் போன்ற போலிகளைவிட நம்முல் இருக்கும் அளவில்லா ஆசைகளே ஆபத்தானது. கடுவுளை நம்பலாம் தவறில்லை, ஆனால் கடவுள் என்று தன்னை தானே விளம்பரப்படுதிக்கொள்பவர்களை நாம் தான் அடையாளம் காண வேண்டும்!

Ram

Unknown said...

//நானும் இதுவரையில் இது மாதிரியான எந்த சாமியாரிடமும் போனதில்லை. ஆர்வமும் கொண்டதில்லை.. காரணம் எனக்கும், என் அப்பன் முருகனுக்கும் இடையில் எந்த புரோக்கரும் தேவையில்லை. எனக்கு அவன்.. அவனுக்கு நான்.. இதுவே எங்களுக்கு போதும்.//

தாங்கள் வாழ்வியல் தத்துவங்களை முழுதும் உணர்ந்த ஞானி அண்ணன் உ.த. அவர்களே. மற்றவர்கள் அப்படியா. அபார ஞான சூன்யங்கள். அவர்கள் தங்கள் உபதேசத்தைக் கேட்டு திருந்த வேண்டும் என்று முருகனிடம் இதன் மூலம் ஒரு கோரிக்கை மனு வைக்கிறேன்.

puduvaisiva said...

"எனக்கும், என் அப்பன் முருகனுக்கும் இடையில் எந்த புரோக்கரும் தேவையில்லை. எனக்கு அவன்.. அவனுக்கு நான்.. இதுவே எங்களுக்கு போதும்"

ஒரு வாசகம் ஆனாலும் திருவாசகம் தமிழா !

Starjan (ஸ்டார்ஜன்) said...

///நானும் இதுவரையில் இது மாதிரியான எந்த சாமியாரிடமும் போனதில்லை. ஆர்வமும் கொண்டதில்லை.. காரணம் எனக்கும், என் அப்பன் முருகனுக்கும் இடையில் எந்த புரோக்கரும் தேவையில்லை. எனக்கு அவன்.. அவனுக்கு நான்.. இதுவே எங்களுக்கு போதும்..///

சரியாச் சொன்னீங்க.. இதுதான் உண்மையும்கூட.

Unknown said...

எல்லாமே நன்றாக இருக்கிறது. ஒன்றைத் தவிர

//நிஜமாகவே.. இன்றைக்கு.. இந்த நேரத்திற்கு.. இந்த நிமிடத்தில்.. இந்த நொடியில்கூட நான் இறப்பதற்கு தயாராக இருக்கிறேன். முருகன்தான் கூப்பிட மறுக்கிறான்.//

இது மட்டும் ஏற்கத் தக்கதல்ல. கொல்லைப்புறத்தில் கொடுவாளோடு ஒருவன் உயிர் பறிக்க வந்தால் நான் தயார் என்று எவரும் முன் வர மாட்டார்கள். அவர் எப்படிப் பட்ட முனிவராய் இருந்தாலும்.

என்ன! ஒரு சின்ன மாற்றம் செய்து கொள்ளுங்கள்!.

'நமக்கு எந்த நேரத்திலும் மரணம் நிகழலாம்' என்ற மரண சிந்தனை எப்போதும் மனதில் இருக்க வேண்டும்.

இப்போது மரணம் நிகழ்ந்தால் என் பின்னால் உள்ள மனிதர்கள் என்னை நல்லவன் என்று சொல்லுமளவுக்கு நான் வாழ்ந்திருக்கிறேனா? ஊருக்கும் உறவுகளுக்கும் என்னால் இயன்ற உதவிகள் செய்திருக்கிறேனா?

நாளை இறைவன் என்னிடம் நான் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி கேள்வி கேட்டால் சரியாக பதில் சொல்ல இயலுமா? நான் செய்த தவறுகளுக்கு அதற்குரியவர்களிடம் மன்னிப்பை இரந்தாகிலும் பெற்றேனா?

இந்த எண்ணத்தில் வாழும் மனிதனால் மட்டுமே தவறிழைக்காமல் நிம்மதியாக வாழ இயலும். அவனுக்கு எந்த ஆசாமியும் சாமியாய் வந்து குறுக்கு வழியில் நிம்மதி தேடிட வழி காட்ட அவசியமிருக்காது.

kanagu said...

ella prechanai kum aasai than karanam na... engayavathu pona ethavathu kedaikkatha nu neraya per suthitu irukkanga...

ivanga avara oru manushna paakama kaduvula paaka arambichitanga... illana ethukku ivlo prechana..

nalla pdhivu anna... naama edukkavathu aasapattom na adukaana murachikal la erangi than aaganum...

tamil said...

நிஜமாகவே.. இன்றைக்கு.. இந்த நேரத்திற்கு.. இந்த நிமிடத்தில்.. இந்த நொடியில்கூட நான் இறப்பதற்கு தயாராக இருக்கிறேன். முருகன்தான் கூப்பிட மறுக்கிறான்

Calling you for your final moment is the job of the department managed by Yama.Murugan wont call you.For tamil bloggers, that job has been outsourced to me, so be cool :)

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...
'பேராசை பெருநஷ்டம்'னு சொல்லி வச்சுருக்காங்க!]]]

அப்போ ஆசையைத் தூண்டுனது யாருங்கோ டீச்சர்..?

உண்மைத்தமிழன் said...

[[[மயில்ராவணன் said...
நல்லா எழுதி சிந்திக்க வெச்சுட்டீங்க.]]]

நல்லா எழுதி பின்னூட்டம் போட்டுட்டீங்க மயிலு..!

உண்மைத்தமிழன் said...

ராதாகிருஷ்ணன் ஸார்.. மிக்க நன்றி..!

எட்வின்.. உண்மையும் அதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்ணமூர்த்தி said...
உண்மைத்தமிழன், போலிகளுக்குப் போலி சாமியார்தான் கிடைப்பார் என்று உங்களால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?]]]

இதில் அப்பாவிகளும் மாட்டிக் கொள்கிறார்களே ஸார்..!

[[[எத்தனையோ நல்ல சாமியார்கள், இந்த மாதிரி சித்து, சில்லறை விஷயங்களில் ஈடுபடாமல், தேடி வந்தவர்களுக்கு நல்ல வழி சொல்பவர்கள் இருக்கிறார்களே, அவர்களெல்லாம் ஏன் ஜனங்களுடைய கண்களில்படவில்லை?]]]

அவங்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லையே.. அதனால்தான்..!

[[[நிஜப் பொன் என்று ஒன்று இருக்கும்போது, அதை மாதிரியே மினுமினுக்கும் காக்கைப் பொன்னும் இருக்கத்தான் செய்யும். எல்லாவற்றையும் அறுத்தெறிந்துவிட்டு நாத்திகம் பேசிக் கொண்டிருந்தவன் நான். எனக்குள்ளும், சில அற்புதமான விஷயங்களைப் பார்க்கச் சொல்லிக் கொடுத்த நல்ல சாமியார்களை நினைத்து வணங்கிக் கொண்டுதான், இதைச் சொல்கிறேன்!
நித்தி கோமணத்தோடு நில்லுங்க!அவன் கோமணத்தை இழுக்கும்போதுகூட, தன்னுடையது இருக்க வேண்டிய இடத்தில் இருக்கான்னு பாத்துட்டு அப்புறமா இழுங்க! என்னப்பன் பழனியப்பன் கோவணத்தை இழுக்க வேண்டாம்!:-))]]]

ஓ.. உங்களுக்கும் முருகன்தான் அப்பனா..?

முருகா.. முருகா.. முருகா..!

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...
அட! அண்ணன் நட்சத்திரமா?? வாழ்த்துகள். இரண்டு நாட்களாக இணையத் தொடர்பில் இல்லை. தாமத வாழ்த்திற்கு மன்னிக்கவும்.]]]

தம்பீ..! வருகைக்கும், ஞாபகம் வைத்திருப்பதற்கும் எனது நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[KATHIR = RAY said...

Idharku Peyar thaaan Vidhi enbadhu.
337than anaivarukkum. Kadavul ungalukku anaithuvidathilum pakka palamaga iruppaar. Problems face pandarathu face pannithan aaganum. athil thappikk vali kedayathu.
ipdi panni irunda apdi iruppa. apdi panni irunda ippadi iruppan enbathu karpanai matrum ungal manasuku neenga soldra aaruthal mattume. muyarchi thodarattum.]]]

அப்படிச் சொல்வது சமாளிப்புக்காகவோ, அல்லது தங்களது மனதை சமாதானப்படுத்திக் கொள்ளவோதான்..!

வருகைக்கு நன்றி கதிர்..

உண்மைத்தமிழன் said...

எறும்பு ஸார்.. நன்றிங்கோ..!

சைவகொத்துப்புரோட்டா.. உண்மையைத்தான் நீங்களும் சொல்றீங்கோ.. நன்றிங்கோ..

சிபி ராசா.. இப்படி எத்தனை தடவை பேர் மாத்தினாலும், பிளாக் மாத்தினாலும் உன் கொழுப்பும் அடங்காது.. நக்கலும் நிக்காது..! நல்லாயிரு..!

உண்மைத்தமிழன் said...

அக்பர்ஜி.. மிக்க நன்றிகள்..

கண்ணா.. இதுதான் பிரச்சினையே..? அனுவப்பட்டவர்கள் சொன்னா கேக்கணும். முடியாதுன்னா பட்டு அனுபவிக்க வேண்டியதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ram said...

நன்றாக சொன்னீர்கள்! நித்யானந்தம் போன்ற போலிகளைவிட நம்முல் இருக்கும் அளவில்லா ஆசைகளே ஆபத்தானது. கடுவுளை நம்பலாம் தவறில்லை, ஆனால் கடவுள் என்று தன்னைதானே விளம்பரப்படுதிக் கொள்பவர்களை நாம்தான் அடையாளம் காண வேண்டும்!

Ram]]]

ராம் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்..! நன்றி..!

தருமி said...

//நாம் உழைத்துக் கொண்டேயிருப்போம். ... இந்த மாதிரி மனப்பான்மை உள்ளவர்கள்தான் ஒரு போதும் நித்தி மாதிரியான சாமியார்களிடம் போகவே மாட்டார்கள்.

நல்ல கருத்து.

நித்தி பணக்காரர் எப்படி ஆனார் என்பதை யாராவது ந்ல்லா ஆராய்ச்சி பண்ணித்தான் சொல்லணும் ... பல விஷயம் இருக்கும்போலும். ஏதோ ஒரு வகை பினாமியோ என்னவோ?

உண்மைத்தமிழன் said...

[[[ananth said...

//நானும் இதுவரையில் இது மாதிரியான எந்த சாமியாரிடமும் போனதில்லை. ஆர்வமும் கொண்டதில்லை.. காரணம் எனக்கும், என் அப்பன் முருகனுக்கும் இடையில் எந்த புரோக்கரும் தேவையில்லை. எனக்கு அவன்.. அவனுக்கு நான்.. இதுவே எங்களுக்கு போதும்.//

தாங்கள் வாழ்வியல் தத்துவங்களை முழுதும் உணர்ந்த ஞானி அண்ணன் உ.த. அவர்களே. மற்றவர்கள் அப்படியா. அபார ஞான சூன்யங்கள். அவர்கள் தங்கள் உபதேசத்தைக் கேட்டு திருந்த வேண்டும் என்று முருகனிடம் இதன் மூலம் ஒரு கோரிக்கை மனு வைக்கிறேன்.]]]

முருகன் இதனை கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

புதுவை சிவா..

ஸ்டார்ஜன்..

நன்றியோ நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[சுல்தான் said...

எல்லாமே நன்றாக இருக்கிறது. ஒன்றைத் தவிர..

//நிஜமாகவே.. இன்றைக்கு.. இந்த நேரத்திற்கு.. இந்த நிமிடத்தில்.. இந்த நொடியில்கூட நான் இறப்பதற்கு தயாராக இருக்கிறேன். முருகன்தான் கூப்பிட மறுக்கிறான்.//

இது மட்டும் ஏற்கத்தக்கதல்ல. கொல்லைப்புறத்தில் கொடுவாளோடு ஒருவன் உயிர் பறிக்க வந்தால் நான் தயார் என்று எவரும் முன் வர மாட்டார்கள். அவர் எப்படிப்பட்ட முனிவராய் இருந்தாலும்?]]]

நீங்கள் சொல்வது வினையை.. நான் சொல்வது விதியை..!

[[[என்ன! ஒரு சின்ன மாற்றம் செய்து கொள்ளுங்கள்!. 'நமக்கு எந்த நேரத்திலும் மரணம் நிகழலாம்' என்ற மரண சிந்தனை எப்போதும் மனதில் இருக்க வேண்டும்.
இப்போது மரணம் நிகழ்ந்தால் என் பின்னால் உள்ள மனிதர்கள் என்னை நல்லவன் என்று சொல்லுமளவுக்கு நான் வாழ்ந்திருக்கிறேனா? ஊருக்கும் உறவுகளுக்கும் என்னால் இயன்ற உதவிகள் செய்திருக்கிறேனா?
நாளை இறைவன் என்னிடம் நான் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி கேள்வி கேட்டால் சரியாக பதில் சொல்ல இயலுமா? நான் செய்த தவறுகளுக்கு அதற்குரியவர்களிடம் மன்னிப்பை இரந்தாகிலும் பெற்றேனா?
இந்த எண்ணத்தில் வாழும் மனிதனால் மட்டுமே தவறிழைக்காமல் நிம்மதியாக வாழ இயலும். அவனுக்கு எந்த ஆசாமியும் சாமியாய் வந்து குறுக்கு வழியில் நிம்மதி தேடிட வழி காட்ட அவசியமிருக்காது.]]]

மிகச் சரியான வார்த்தைகள் ஸார்..! நன்றி.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

ella prechanaikum aasaithan karanamna engayavathu pona ethavathu kedaikkatha nu neraya per suthitu irukkanga...

ivanga avara oru manushna paakama kaduvula paaka arambichitanga... illana ethukku ivlo prechana..

nalla pdhivu anna... naama edukkavathu aasapattom na adukaana murachikal la erangi than aaganum.]]]

ம்ஹும்.. கனகு கோச்சுக்காதீங்க.. தயவு செஞ்சு சீக்கிரமா தமிழ் தட்டச்சு கத்துக்குங்க.. புண்ணியமாப் போவும்..!

உண்மைத்தமிழன் said...

[[[tamil said...

நிஜமாகவே.. இன்றைக்கு.. இந்த நேரத்திற்கு.. இந்த நிமிடத்தில்.. இந்த நொடியில்கூட நான் இறப்பதற்கு தயாராக இருக்கிறேன். முருகன்தான் கூப்பிட மறுக்கிறான்

Calling you for your final moment is the job of the department managed by Yama. Murugan wont call you. For tamil bloggers, that job has been outsourced to me, so be cool :)]]]

முருகா..!

suresh said...

நல்லா எழுதியிருகீங்க.

ஆனால் காவியுடை சாமியார் என்று பொதுவாக விமர்சனம் செய்ய வேண்டாமே. இதில் சிலர் நல்லவர்களும் இருக்கலாம் இல்லையா?

நல்லவர்களை பாராட்டுவோம், அல்லாதவர்களை புறக்கணிப்போம். எந்த துறையில் புல்லுறிவிகள் இல்லை?

உண்மைத்தமிழன் said...

[[[சுரேஷ் said...

நல்லா எழுதியிருகீங்க. ஆனால் காவியுடை சாமியார் என்று பொதுவாக விமர்சனம் செய்ய வேண்டாமே. இதில் சிலர் நல்லவர்களும் இருக்கலாம் இல்லையா? நல்லவர்களை பாராட்டுவோம், அல்லாதவர்களை புறக்கணிப்போம். எந்த துறையில் புல்லுறிவிகள் இல்லை?]]]

நல்லவர் என்று எந்த காவியுடையைச் சொல்கிறீர்கள்..!? என்னால் முடியவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[தருமி said...

//நாம் உழைத்துக் கொண்டேயிருப்போம். இந்த மாதிரி மனப்பான்மை உள்ளவர்கள்தான் ஒரு போதும் நித்தி மாதிரியான சாமியார்களிடம் போகவே மாட்டார்கள்.

நல்ல கருத்து. நித்தி பணக்காரர் எப்படி ஆனார் என்பதை யாராவது ந்ல்லா ஆராய்ச்சி பண்ணித்தான் சொல்லணும். பல விஷயம் இருக்கும்போலும். ஏதோ ஒரு வகை பினாமியோ என்னவோ?]]]

ஆஹா..

நம்ம தருமி ஐயாகிட்ட நல்ல பேர் எடுக்கிறது எவ்ளோ பெரிய விஷயம்..!

ரொம்ப சந்தோஷமா இருக்கு..!

நித்தி யாருக்கும் பினாமியெல்லாம் இல்ல ஸார்..!

அந்தப் பணம் முழுவதும் டொனேஷன்தான்.. பணத்தை வீசியெறியும் பணக்கார வர்க்கத்திடம் இருந்து அவர் சுரண்டியதுதான் இவ்வளவும்..!

புலவன் புலிகேசி said...

நான் நீங்கல்லாம் சொல்ர சாமிக்கிட்டயே போறதில்லை. அப்பறம் எங்க சாமியார் கிட்ட போறது..

SurveySan said...

good one. but bigggggg :)

butterfly Surya said...

அவங்களுக்கு கொடுதது வைக்கல.

அவ்ளோதான் சொல்ல முடியும்..

NO said...

அன்பான நண்பர் திரு உண்மை,

As usual to the point எழுதுவதில் தேர்ந்தவர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்! நீங்கள், நண்பர்கள் திரு வால், திரு நர்சிம், திரு சஞ்சய் போன்றவர்கள் எழுதுவதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துவிடுவேன் (Of course there are quite a few more bloggers that write pretty well) ! No doubt all of them are intelligent and interesting people!

நீங்கள் எழுதிய இந்த பதிவில் ஒரு முக்கியமான angle ஐ விட்டுவிட்டீர்கள் என்று தோன்றுகிறது!

வாழ்க்கையில் துன்பத்துக்கு ஆளானர்வர்கள் மட்டும்தான் சாமியார்களை தேடி போகிறார்கள் என்று எப்படி சொல்லுகிறீர்கள்? சுதந்திரமான, துன்பங்களுக்கு ஆளாகாத, சலனங்கள் இல்லாத, மனத்தேற்றல் தேவை இல்லாத பலரும்தான் இதை செய்கிறார்கள்! பல அறிவுமிக்க, (இந்த டுபாகூர் பகுத்தறிவு வகையற இல்லை) பலவற்றை நன்கு உணர்ந்த அறிவாளிகளும் அதை செய்கிறார்கள் என்றால் இதற்க்கு வேறு விளக்கங்கள் தேவை!

Religious need and affiliation is just not a question of people being afraid and trying to get a solace from above. Its also more than that and it can be traced back to evolution of brain and beleifs. Religion, faith in god (and gurus, priests, saints, pir's & prophets) and other religious attitudes cannot be simply dismissed as activities of ignorant people. It requires deeper understanding and it cannot be simply abolished. இது புரியவில்லை என்றால், அல்லது இதை புரியாமல் அணுகினால் அதற்க்கு தீர்வு சொல்லவே முடியாது! எதிர் விளைவுகளை தரும்!

மேலும் யோசித்துபாருங்கள், அதற்க்கு முன்னர், மனித மூளை மற்றும் அங்கங்களின் பரிணாமம் மற்றும் evolutionary psychology மற்றும் cognitive neuro science எனப்படும் மனித மூளையின் புரிதல் தன்மை போன்றவற்றைப்பற்றி அறிவியலில் latest ஆக நடந்த கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள் தெளிவு
கிடைக்கும்!

எனினும் நல்ல கட்டுரை! மேலும் எழுதுங்கள்!

நன்றி

NO said...

அன்பான நண்பர் திரு உண்மை,

As usual to the point எழுதுவதில் தேர்ந்தவர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்! நீங்கள், நண்பர்கள் திரு வால், திரு நர்சிம், திரு சஞ்சய் போன்றவர்கள் எழுதுவதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துவிடுவேன் (Of course there are quite a few more bloggers that write pretty well) ! No doubt all of them are intelligent and interesting people!

நீங்கள் எழுதிய இந்த பதிவில் ஒரு முக்கியமான angle ஐ விட்டுவிட்டீர்கள் என்று தோன்றுகிறது!

வாழ்க்கையில் துன்பத்துக்கு ஆளானர்வர்கள் மட்டும்தான் சாமியார்களை தேடி போகிறார்கள் என்று எப்படி சொல்லுகிறீர்கள்? சுதந்திரமான, துன்பங்களுக்கு ஆளாகாத, சலனங்கள் இல்லாத, மனத்தேற்றல் தேவை இல்லாத பலரும்தான் இதை செய்கிறார்கள்! பல அறிவுமிக்க, (இந்த டுபாகூர் பகுத்தறிவு வகையற இல்லை) பலவற்றை நன்கு உணர்ந்த அறிவாளிகளும் அதை செய்கிறார்கள் என்றால் இதற்க்கு வேறு விளக்கங்கள் தேவை!

Religious need and affiliation is just not a question of people being afraid and trying to get a solace from above. Its also more than that and it can be traced back to evolution of brain and beleifs. Religion, faith in god (and gurus, priests, saints, pir's & prophets) and other religious attitudes cannot be simply dismissed as activities of ignorant people. It requires deeper understanding and it cannot be simply abolished. இது புரியவில்லை என்றால், அல்லது இதை புரியாமல் அணுகினால் அதற்க்கு தீர்வு சொல்லவே முடியாது! எதிர் விளைவுகளை தரும்!

மேலும் யோசித்துபாருங்கள், அதற்க்கு முன்னர், மனித மூளை மற்றும் அங்கங்களின் பரிணாமம் மற்றும் evolutionary psychology மற்றும் cognitive neuro science எனப்படும் மனித மூளையின் புரிதல் தன்மை போன்றவற்றைப்பற்றி அறிவியலில் latest ஆக நடந்த கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள் தெளிவு
கிடைக்கும்!

எனினும் நல்ல கட்டுரை! மேலும் எழுதுங்கள்!

நன்றி

பனித்துளி சங்கர் said...

மிகவும் விழிப்புணர்வு மிக்க சிறந்த பதிவு .
பல நிகழ்வுகளை சிறந்த முறையில் ஆராய்ந்து எழுதி இருக்கீங்க .

பகிர்வுக்கு நன்றி !

வாழ்த்துக்கள் !

உண்மைத்தமிழன் said...

[[[புலவன் புலிகேசி said...
நான் நீங்கல்லாம் சொல்ர சாமிக்கிட்டயே போறதில்லை. அப்பறம் எங்க சாமியார்கிட்ட போறது..]]]

ரொம்பவும் சந்தோஷம்..!

இப்போதும் தங்களுக்கு நிம்மதி எனில் எனக்கும் நிம்மதியே..!

உண்மைத்தமிழன் said...

[[[SurveySan said...
good one. but bigggggg :)]]]

அட போங்க ஸார்..!

இதைவிடவும் சின்னதா எழுதினா வணக்கம், நன்றின்னு மட்டும்தான் எழுத முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...
அவங்களுக்கு கொடுதது வைக்கல.
அவ்ளோதான் சொல்ல முடியும்.]]]

யாருக்கு அண்ணாச்சி..!!!

உண்மைத்தமிழன் said...

[[[NO said...

அன்பான நண்பர் திரு உண்மை,
நீங்கள் எழுதிய இந்த பதிவில் ஒரு முக்கியமான angle ஐ விட்டுவிட்டீர்கள் என்று தோன்றுகிறது!
வாழ்க்கையில் துன்பத்துக்கு ஆளானர்வர்கள் மட்டும்தான் சாமியார்களை தேடி போகிறார்கள் என்று எப்படி சொல்லுகிறீர்கள்? சுதந்திரமான, துன்பங்களுக்கு ஆளாகாத, சலனங்கள் இல்லாத, மனத்தேற்றல் தேவை இல்லாத பலரும்தான் இதை செய்கிறார்கள்! பல அறிவுமிக்க, (இந்த டுபாகூர் பகுத்தறிவு வகையற இல்லை) பலவற்றை நன்கு உணர்ந்த அறிவாளிகளும் அதை செய்கிறார்கள் என்றால் இதற்க்கு வேறு விளக்கங்கள் தேவை!]]]

தேவையில்லையெனில் சாமியார்களை நாடி எதற்காக செல்கிறார்கள்? தேவையுள்ளவர்கள் மட்டுமே செல்கிறார்கள் என்பது தீர்க்கமான நம்பிக்கை. உங்களுடைய வாதம் எனக்கு ஏற்புடையதாக இல்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
மிகவும் விழிப்புணர்வு மிக்க சிறந்த பதிவு. பல நிகழ்வுகளை சிறந்த முறையில் ஆராய்ந்து எழுதி இருக்கீங்க.
பகிர்வுக்கு நன்றி !
வாழ்த்துக்கள்!]]]

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சங்கர் ஸார்..!

Radhakrishnan said...

இவ்வளவு தெளிவா இருந்தும் ஆசை உங்களை விடவில்லைப் பாருங்க சார். முருகனும் நீங்களும் பார்த்துக்கொள்ளுங்கள். மிகவும் ரசித்தேன், நன்றாக இருந்தது. பாடலைவிட விளக்கம் அதிகமாகவே வழக்கம் போல இருந்தது. ஆசை இல்லையெனில் வளர்ச்சி இல்லை எனும் தத்துவமும் உலகில் உண்டு, அது அந்த அப்பன் முருகனுக்கேத் தெரியும்.

Paleo God said...

முருகா சரணம்..!!

:))

வல்லிசிம்ஹன் said...

VAAZHTHUKAL UNMAITHTHAMIZHAN. MELUM SIRAKKA VAAZTHTHUKAL.

Anonymous said...

////போதும் என்ற மனதோடு.. வாழ்க்கையை ஆண்டவனின் கைகளில் ஒப்படைத்துவிட்டு.. எப்போது வேண்டுமானாலும் இறப்பை எதிர்நோக்கி காத்திருப்பவனுக்கு எந்த ஒரு வழிபாடும் தேவையில்லை.//

இதன் பெயர் நாத்திகம்.

ஒருவகைநாத்திகம் சொல்வது, இறைவன் இல்லை தேடல் தேவையிலலை.

இன்னொரு வகை நாத்திகம், மனிதனுக்கு இறைவன் தேவையில்லை அவனே அவன் காரியத்தை ஒழுங்காக்ச்செய்யின்.

நீங்கள் எழுதியது இரண்டாம் வகை நாத்திகம். உங்க்ள் முருகபக்தியைக் கேள்விக்குறியாக்குகிறது.

எல்லாரும் போதுமென்ற மனத்தை பெற்று, நிம்மதியாக இருந்துவிட்டால், உலகம் போரடிக்கும்.

எல்லாரும் ஆசைகளை மட்டுப்படுத்தி, அல்லது தனக்கு ஒத்துவரும் ஆசைகளோடு இருந்துவிட்டால், உலகம் போரடிக்கும்.


போலிச்சாமியார்கள் இருந்தால்தான் உண்மைச்சாமியார்கள் ஆரெனத் தெரியும்.

சாமியார்களே கூடாதெனபது, இந்துமதக்கருத்தொன்றை நிராக்கரிப்பதாகும். அது, குருவிடம் சேர்தல் என்பதாகும்.

உண்மைத்தமிழன் said...

[[[V.Radhakrishnan said...
இவ்வளவு தெளிவா இருந்தும் ஆசை உங்களை விடவில்லை பாருங்க சார். முருகனும் நீங்களும் பார்த்துக் கொள்ளுங்கள். மிகவும் ரசித்தேன், நன்றாக இருந்தது. பாடலைவிட விளக்கம் அதிகமாகவே வழக்கம் போல இருந்தது. ஆசை இல்லையெனில் வளர்ச்சி இல்லை எனும் தத்துவமும் உலகில் உண்டு, அது அந்த அப்பன் முருகனுக்கேத் தெரியும்.]]]

உண்மைதான் ஸார்..

வளர்ச்சி இல்லையேல் உலகம் இயங்காது என்பதும் தெரியும்..!

ஆனால் அந்த வளர்ச்சியினால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் அவரவர் பொறுப்பிற்கேற்றபடி அவரவர்தான் அனுபவிக்க வேண்டும்..!

இதைத்தான் நான் சொல்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[♫ஷங்கர்..】 ™║▌│█│║││█║▌║ said...

முருகா சரணம்..!!

:))]]]

சரணம் முருகா..!

உண்மைத்தமிழன் said...

[[[வல்லிசிம்ஹன் said...
VAAZHTHUKAL UNMAITHTHAMIZHAN. MELUM SIRAKKA VAAZTHTHUKAL.]]]

வல்லியம்மா..

வாழ்த்துக்கு நன்றிங்கம்மா..!

மணி said...

அண்ணா ரொம்ப வருத்தப்படாதீங்க, உண்மையான சாமியார்கள் இன்னும் இருக்கத்தான் செய்றாங்க, நீங்க பார்த்தது இல்ல,

உண்மைத்தமிழன் said...

[[[மணி said...
அண்ணா ரொம்ப வருத்தப்படாதீங்க, உண்மையான சாமியார்கள் இன்னும் இருக்கத்தான் செய்றாங்க, நீங்க பார்த்தது இல்ல]]]

சாமியார் என்பதற்கு என்ன அர்த்தமென்று முதலில் சொல்லுங்கள்.. பின்பு யார் உண்மையானவர்கள் என்பதை தேடிப் பிடித்துச் சொல்லலாம்..!

abeer ahmed said...

See who owns vincedelmontefitness.com or any other website:
http://whois.domaintasks.com/vincedelmontefitness.com