பரம்மரம் - மோகன்லால் - பிளஸ்ஸி கூட்டணியின் அடுத்த வெற்றி படைப்பு..!

12-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மோகன்லால். இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் தலையானவர். இந்தக் கருத்தை சொல்வதற்கு சினிமா விமர்சகர்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது. நடிப்பை தனது உடல் மொழியாலேயே அசத்திக் காட்டும் அகாசயசூரர் மோகன்லால்.

இந்த முறை அவருடன் கை கோர்த்திருப்பது இயக்குநர் பிளெஸ்ஸி. ஏற்கெனவே பிளெஸ்ஸி எடுத்திருந்த 'தன்மந்திரா' மலையாளத் திரைப்பட உலகத்திற்கும், மோகன்லாலிற்கும் மிகப் பெரும் புகழையும், பாராட்டையும் பெற்றுத் தந்திருந்தது. இந்தக் கூட்டணியின் அடுத்த திரைப்படம்தான் இந்த 'பரம்மரம்'.

பிளெஸ்ஸியின் திரைப்படங்கள் பொதுவாகவே குழந்தைகள் மூலமாகச் சொல்லப்படுகின்ற கதைகளாகத்தான் இருக்கின்றன. அவருக்கு அதுதான் பிடிக்கிறது போலும்.

அவருடைய முந்தைய படங்களான 'காழ்ச்ச', 'தன்மந்திரா', 'பளுங்கு', என்று மூன்றிலுமே குழந்தைகளின் உலகத்திற்குள் நுழைந்து, அதன் புற வழியாகத்தான் கதையைச் செலுத்தி வந்தார். இதோ இப்போதும் அதேதான்.

கதைகள் என்பது எங்கோ, கண்காணாத இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு கதாசிரியரால் தேடி எடுத்துக் கொடுக்கப்படுவது என்கிற மாயைதான் திரைப்பட உலகில் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கிறது.

ஆனால் மக்களுடன் நெருக்கமான கதை மாந்தர்கள் அதை பொய் என்று நிரூபிக்கிறார்கள். இந்தக் கதையும் அப்படித்தான். நம்மில் இருந்துதான் கதை எடுக்கப்பட்டுள்ளது. நாம் பால்ய வயதில் சந்தித்து இப்போது மறந்து தொலைத்திருக்கும் ஒரு நிகழ்வைத்தான் கை தேர்ந்த சிற்பியைப் போல் கையாண்டு வெளிக்கொணர்ந்திருக்கிறார் பிளெஸ்ஸி.

சிவன்குட்டியும், உன்னியும், ஈழனும் ஏழாம் வகுப்பில் ஒரு பிரிவில் படிக்கிறார்கள். உடன் ஒரு சிறுமியும்.. அந்த வயதில் ஏற்படுகின்ற பொறாமையின் நிழல் உன்னியிடமும், ஈழனிடமும் விழுகிறது. அவர்கள் பொறாமைப்படுவது சக தோழி, சிவன்குட்டியிடம் மட்டும் நெருக்கமாகப் பழகுவது.

அவர்களது பொறாமைக்கு நெய் வார்த்து தீயை ஊதிவிடுவதுபோல சிவன்குட்டிக்கும் சிறுமிக்கும் இடையிலான நட்பு தொடர்கிறது. நெருடுகிறது எதிரணி சிறுவர்களுக்கு. பள்ளியின் தலைமையாசிரியர் மேசை டிராயரை உடைத்து அதில் இருக்கும் பணத்தைத் திருடுகிறான் ஈழன். அவனும், உன்னியும் அந்தப் பணத்தை குளக்கரை அருகில் வைத்து எண்ணிப் பார்க்கின்றபோது சிறுமி பார்த்துவிடுகிறாள்.

கணப்பொழுதில் அவர்களுக்குள் எழும் அந்த மிருகம் அவர்களை நிலைகுலைய வைக்கிறது. நீந்தத் தெரியாத சிறுமியை குளத்தில் தள்ளி மூழ்கடிக்கிறார்கள். சத்தம் கேட்டு ஓடி வரும் சிவன்குட்டி சிறுமியைக் காப்பாற்றப் போராடுகிறான். ஆனால் அவனால் அவளது உயிரற்ற உடலைத்தான் மீட்க முடிகிறது.

தொடர்கிறது உன்னி, ஈழனின் நீசத்தனம். "என்ட மோளே" என்று தன் மடியில் போட்டுக் கதறிக் கொண்டிருக்கும் சிறுமியின் தாயிடம் சிவன்குட்டிதான் அவளை குளத்தில் தள்ளி கொலை செய்ததாக ஒரே குரலில் ஓங்கிச் சொல்கிறார்கள் உன்னியும், ஈழனும். அந்தச் சூழலில் ஒட்டு மொத்தக் கூட்டமும் அதை நம்பிவிட.. சிவன்குட்டி செய்யாத அந்த தவறுக்காக ஏழு ஆண்டு காலம் சிறுவர் இல்லத்தில் இருந்துவிட்டு பின்பு விடுதலையாகியிருக்கிறான்.

இது முன்னர் நடந்த கதை.

இப்போது சிவன்குட்டிக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை, அம்மா, மனைவி என்று அமைதியாக கரும்புத் தோட்டத்தையும், ஒரு ஜீப்பையும் வைத்து வாழ்ந்து வருகிறான். நேற்று நடந்தது அத்தனையையும் அவன் நினைவில் இருந்து தொலைத்துவிட்டான். இப்போது அவனது உலகமே அவனது குழந்தையும் மனைவியும்தான்.


அவனது சனி திசை அவனுடைய அக்கா மகள் திருமணத்தில் தொடங்குகிறது. அத்திருமணத்திற்கு வந்திருந்த இறந்து போன சிறுமியின் அம்மா சிவன்குட்டியின் தாயாரைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்கிறாள். சிவன்குட்டி மனைவி, மகள் என்று சந்தோஷமாக இருப்பதை உணர்பவள் நொடியில் வெறி பிடித்தவள் போலாகிறாள். "என் மகனை கொன்னுபோட்ட குடும்பத்துலயா இந்தக் கல்யாணம் நடக்குது..?" என்று கத்தித் தீர்க்கிறாள். அப்போதுதான் சிவன்குட்டியின் மனைவிக்கே கணவனின் சிறுவயது கதை தெரிய வருகிறது.

அவளுக்குள் தாங்க முடியாத ஏமாற்றம். அதுவரையில் அப்பா தோளில் சாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அப்போதிலிருந்து அப்பா தன்னை கொலை செய்ய வருவதாகச் சொல்லிச் சொல்லி அழுகிறது. அந்த அழுகை காய்ச்சலாக உருவெடுக்க.. வீடு இரண்டாகிறது. சிவன்குட்டி சுவாசித்து வந்த பதினைந்து வருட நிம்மதி ஒரே நிமிடத்தில் பறிபோகிறது.


தான் அந்தக் கொலையைச் செய்யவில்லை என்று எவ்வளவோ சொல்லியும் மனைவியும், குழந்தையும் ஏற்க மறுக்கிறார்கள். இப்போது சிவன்குட்டிக்கு வேறு வழியில்லை. உண்மையாக கொலை செய்தவர்களைத் தேடிப் பிடித்து அழைத்து வருவதுதான் ஒரே வழி. கிளம்புகிறான்.

அவனுடைய பால்ய வயது நண்பர்களான உன்னியையும், ஈழனையும் அழைத்து வந்து தான் கொலைகாரன் இல்லை என்று சொல்ல வைக்க எண்ணி அவர்களைத் தேடி வருகிறான்.

திரைப்படம் இங்கிருந்துதான் துவங்குகிறது. உன்னி இப்போது வசிப்பது கோவையில். ஷேர் மார்க்கெட் புரோக்கர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஈழன் ஒரு டாக்டர். அவனும் கோவையில்தான். நகரில் முதல் அமைச்சர் கலந்து கொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில் வெடிகுண்டு வெடிக்கும் அன்றையப் பொழுதின் காலையில்தான் சிவன்குட்டி தனது பங்காளிகளைத் தேடி கோவையில் கால் வைக்கிறான்.

உன்னி அலுவலகத்தில் இருக்க அவனது வீட்டிற்கு வரும் சிவன்குட்டி தனது பெயரை மாற்றிச் சொல்கிறான். உன்னியின் மனைவி அவனை வீட்டுக்குள் அனுமதித்துவிட்டு வெளியேற்றவும் முடியாமல், அவனை இருக்கவும் சொல்ல முடியாமல் தவியாய் தவிக்கிறாள். இந்த முதல் ரீலிலேயே பிளஸ்ஸியின் இயக்குதல் இறுக்கமாக்கிவிடுகிறது.

உன்னியின் மகளுக்காக சிவன்குட்டி பாடுகின்ற அந்த "அன்னாரக்கண்ணா" என்கிற பாடல் காதிற்கு இனிமை சேர்க்கிறது. தான் சிறு வயதில் தன் வயதையொத்த நண்பர்களுடன் பாடிக் களித்த இந்தப் பாடல்தான் பிற்பாடு உன்னி, சிவன்குட்டி, ஈழன் இடையே ஒரு நெருக்கத்தையும் ஏற்படுத்துகிறது.


இரவில் வீடு திரும்பும் உன்னியிடம் சிவன்குட்டி தன்னை "தாஸ்" என்று அறிமுகப்படுத்திக் கொள்ள உன்னிக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. ஆனால் சிவன்குட்டி அந்த எட்டாம் வகுப்பில் நடந்த சில விஷயங்களைச் சொன்னவுடன் உன்னியால் அவனை ஒதுக்கவும் முடியவில்லை.

அன்றைய இரவில் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால் அப்போதைக்கு சிவன்குட்டியை இழுத்துக் கொண்டு வெளியேறுகிறான். ஆனால் நகரம் இப்போது முழுக்க, முழுக்க போலீஸாரின் வசம் இருப்பதால் இருக்கின்ற பதட்டத்தில்தான் கதையும் நகர்கிறது.

இந்த இடத்தில் மேல்தட்டு வர்க்கக் கும்பலிடம் காக்கிச் சட்டையினர் பேசுகின்ற பேச்சும், சாதாரணமான குடியானவர்களிடம் பேசுகின்ற பேச்சுக்கும் இடையில் இருக்கின்ற வித்தியாசத்தை நச்சென்று காட்டியிருக்கிறார் பிளெஸ்ஸி.

ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட செய்தியறிந்து மீண்டும் வீடு நோக்கி திரும்புகிறார்கள் சிவன்குட்டியும், உன்னியும்.. வழியிலேயே டாஸ்மாக்கில் சரக்கை ஏற்றிக் கொண்டு தங்களது பள்ளிக்கால சாகசங்களை சொல்லியபிடியே திரும்புகின்ற போதைக் காட்சிகளே, பழைய கால மோகன்லாலின் திரைப்படங்களை கொஞ்சம் அசைபோட வைக்கிறது.

ஷாட் பை ஷாட் ஏதோ ஒன்று மோகன்லாலிடம் மர்மமாக இருப்பதை உணர்த்திக் கொண்டேயிருக்கிறார் இயக்குநர். விடியற்காலையில் மகளுடன் மோகன்லால் காணாமல் போயிருப்பதை தொடர்ந்து பிளாட் முழுவதும் பதற்றம் தொனிக்க.. மொட்டை மாடியில் சின்னப் பிள்ளைகளுக்காக சிரசாசனம் செய்து காண்பித்துக் கொண்டிருக்கிறான் சிவன்குட்டி.

அன்று அலுவலகத்திற்கு போயே தீர வேண்டிய நிலையில் இருக்கும் உன்னிக்கு சிவன்குட்டியை வீட்டில் இருந்து கிளப்ப முடியவில்லை. அலுவலகத்திற்குப் போன கையோடு ஈழனுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்ல, அவன்தான் அந்த பள்ளிக் காலக் கொடூரத்தை ஞாபகப்படுத்துகிறான்.

அவனாக இருக்குமோ, இருக்காதோ என்ற நினைப்பில் வீடு திரும்பும் உன்னியை நல்ல கொழுத்த கோழியை உரித்து குழம்பு வைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் சிவன்குட்டி கத்தியும், கையுமாக வரவேற்கிறான். அவனால் பாதிக்கப்பட்ட சிவன்குட்டி நான்தான் என்று சொல்லிவிடுகிறான்.

தன்னுடைய தற்போதைய நிலைமையைச் சொல்லி அவன் கட்டாயமாக அவனுடன் கிராமத்துக்கு வந்து அவனது மனைவி, மகளிடம் தான் அந்தக் கொலையைச் செய்யவில்லை என்கிற உண்மையைச் சொல்ல வேண்டும் என்கிறான் சிவன்குட்டி. உன்னி முதலில் மறுக்க.. உன்னியின் குழந்தை பாசத்தை வைத்தே அவனை மடக்குகிறான் சிவன்குட்டி.


உன்னியின் மகளை பள்ளியில் இருந்து கூட்டிச் சென்று தன்னுடன் வைத்துக் கொண்டு பிளாக்மெயில் செய்கிறான் சிவன்குட்டி. ஈழனிடம் அட்வைஸ் கேட்டுக் கொண்டு உடன் வருவதற்கு உன்னி ஒத்துக் கொள்ள.. இவர்களது பயணம் தொடங்குகிறது.


வீடு முழுக்க ஏஸி.. ஏறினால் கார்.. இறங்கினால் கார் என்று மேல்தட்டு வாழ்க்கையை அனுதினமும் ருசித்துக் கொண்டிருந்த உன்னிக்கு, இந்தப் பயணம்தான் சாதாரண சராசரி மனிதர்களின் வாழ்க்கையை பிட்டு பிட்டாக படம் போட்டுக் காட்டுகிறது.

வழியில் ஈழனும் சேர்ந்து கொள்கிறான். முதலில் அவனை யாரென்று தெரியாதவன் போல் காட்டிக் கொள்ளும் சிவன்குட்டி, பின்பு அவனாகவே தெரிந்து கொண்டதைச் சொல்கிறான். செல்கின்ற வழியில் ஈழனும், உன்னியும் சேர்ந்து சிவன்குட்டியை கொலை செய்யும் அளவுக்குக் கூட இறங்குகிறார்கள்.


ஆனால் அதில் அவர்கள் தோற்றுப் போனவுடன் சிவன்குட்டிக்கு உதவுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமல் இருக்கிறது. சிவன்குட்டி தனது வாழ்க்கை இனிமேல் பழையபடி மாறப் போகிறது.. தனது மனைவி தன்னை ஏற்கப் போகிறாள்.. தான் தனது குழந்தையுடன் குழந்தையாக விளையாடப் போவதையெல்லாம் எண்ணி பேசிக் கொண்டே வருகிறான்.


ஆனால் அவனது வீட்டுக்கு வந்தவுடன்தான் கதையில் முக்கியத் திருப்பமே ஏற்படுகிறது.

சிவன்குட்டியின் குழந்தை அதீத காய்ச்சலால் இறந்துபோயிருக்க, அவனது மனைவியும் ஏற்கெனவே பைத்தியமாகி இறந்து போயிருப்பதும் தெரிய வருகிறது.

அது மட்டுமா..? சிவன்குட்டியின் தற்போதைய நிலைமையே இரண்டும்கெட்டானாகத்தான் இருக்கிறது. அவனுடைய மனைவி, மகளின் இறப்பு சிவன்குட்டியின் மனதை லேசாக பிறழச் செய்திருக்கிறது. அவனது மனைவியும், மகளும் இறந்த பின்புதான் அவன் உன்னியைத் தேடி கிளம்பியிருப்பதும் அப்போதுதான் தெரிய வருகிறது. இப்போது சிவன்குட்டி ஒரு மனநோயாளி என்கிறார்கள் அவனுடைய குடும்பத்தினர்.

(இந்த இடத்தில் பேசப்பட்ட வசனங்கள் எனக்குச் சரிவர புரியாததால் முதல் முறை எழுதப்பட்டதில் தவறு நேர்ந்துவிட்டது என்பதை உணர்கிறேன். வாசகர்களும், நண்பர்களும், பதிவர்களும் மன்னிக்கவும்)

சிவன்குட்டியின் கதறலும், அலறலும்தான் கண் கலங்க வைக்கின்றன. இத்தனை தூரம் தான் கஷ்டப்பட்டு இவர்களை அழைத்து வந்தும் தன்னால் நிரூபிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தை மனநிலை பிறழ்ந்த நிலையில் வெளிப்படுத்தும்விதத்தில் மோகன்லாலின் நடிப்பு தத்ரூபம்.

உடன் அழைத்து வந்தவர்கள்தான் கொலை செய்தவர்கள் என்பதை வீட்டில் இருந்த சொந்தக்காரர்கள் தெரிந்து கொண்டாலும், இன்னும் சில நிமிடங்கள் நின்றால் அங்கு என்ன நடக்கும் என்பது தெரியாததால் அவர்களை போகச் சொல்கிறாள் சிவன்குட்டியின் தாய்.

அவர்களை உறவினர் ஒருவர் அழைத்துச் செல்ல.. கடைசி நிமிடத்தில் அதைப் பார்த்துவிடும் சிவன்குட்டி தனது ஜீப்பில் பின்னாலேயே துரத்திச் சென்று அவர்களை மடக்குகிறான்.

தன் மனதில் இருந்த அத்தனை கோபத்தையும் வார்த்தைகளால் கொட்டித் தீர்த்துவிட்டு, "இன்னும் ஒரு நிமிஷம் நீங்க முன்னாடி நின்னா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.. போய்க்கோ. போய்க்கோ" என்று சொல்கின்ற சிவன்குட்டியின் ருத்ரத்தை பார்க்க முடியவில்லை. சட்டென்று தலை தானாகவே குனிந்தது.. படத்தின் இறுதிக் காட்சியான இந்த நிகழ்வுதான் திரைப்படத்தின் அடிநாதமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

அவன் மறுபடியும் கொலை செய்ய முனையவில்லை. ஆனால் இழந்ததை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறான். மறுபடியும் உங்கள் முகத்தில் முழிக்கவே மாட்டேன் என்பதே அந்த நேரத்திலும் இனியும் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று நினைத்து வந்த அவர்களுக்கு தண்டனையாக விதிக்கப்படுகிறது.

பிளெஸ்ஸியின் கதையாடல் முழுக்க, முழுக்க குழந்தைகளுக்காகவே, குழந்தையாகவே பேசப்படும் பேச்சாக இருக்கிறது. உன்னிக்குத் தன் குழந்தை மீது இருக்கின்ற பாசம்தான் அவனை சிவன்குட்டியுடன் வரவைக்கிறது. சிவன்குட்டி தனது குழந்தையே தன் அருகில் வராமல் இருப்பதைத்தான் தாங்க முடியாமல்தான் ஆள் கடத்தல் வேலைக்கே தயாராகிறான்.

அற்புதமான இயக்கம். நடிகர்களின் அழகான, யதார்த்தமான நடிப்பும் திரைப்படத்திற்கு மிகப் பெரிய பலம்.


மோகன்லால் விளையாடித் தீர்த்திருக்கிறார். முதல் காட்சியிலேயே ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டு அப்பாவியாக கையில் அட்ரஸை எழுதி வைத்துக் கொண்டு வீடு தேடி அலையும் காட்சியே அவர் யார் எனக் காட்டிவிடுகிறது. அவருடைய அப்பாவித்தனத்திற்குப் பின்னால் இருக்கும் ஒரு விஷயத்தை அவ்வப்போது மர்மப் புன்னகையோடு சொல்ல வந்த இயக்குநருக்கு மோகன்லாலில் நடிப்பு பெரும் உதவி செய்திருக்கிறது.

கையில் கத்தியுடன் உன்னியைப் பிடித்துக் கொண்டு தான்தான் சிவன்குட்டி என்று கர்ண கொடூரத்தில் சொல்லிவிட்டு, நொடியில் உன்னியின் மனைவி பார்க்கும்போது உன்னியைக் கொஞ்சுகின்ற அந்தக் காட்சி இன்னுமொரு உதாரணம்.

பயணத்தின்போது வழி நெடுக அவர் செய்கின்ற அலப்பறையில் கொஞ்சம் அடக்கம் காட்டியிருக்கிறார் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். சிரிப்பை மூடி வைத்துவிட்டு விரக்தியான செயல்பாடுகளுடன் கூடிய ஆக்ஷன்களை கதையோட்டத்திற்காக காட்டியிருக்கிறார் மோகன்லால்.

சரக்கடித்துக் கொண்டே ஜீப்பை ஓட்டுகின்ற அந்த சாகசம்.. லாரியை அரைத் தூக்கத்தில் ஓட்டிச் செல்கின்ற அந்த வெறியில் உன்னியைவிட நமக்குத்தான் அதிக பயம் வருகிறது.

உன்னியின் மகளுடன் மோகன்லால் ஏற்படுத்திக் கொள்ளும் நெருக்கமே படத்தின் ஒரு திருப்பு முனையாக இருக்கிறது. பள்ளிக்குச் செல்லும் சிறுமி மோகன்லால் அழைத்துவுடன் உடன் வெளியில் வந்து அவருடனேயே செல்கின்ற அளவுக்கான நேசத்தையும், பாசத்தையும் 'அன்னாரக்கண்ணா' பாடல் காட்சியில் தெளிவாக்குகிறார் இயக்குநர்.

இறுதிக் காட்சியில் சான்ஸே இல்லை. அடித்துச் சொல்லலாம் இது லால் சேட்டனால்தான் முடியும் என்று.. சத்தியமாக நான் நினைக்கவேயில்லை. ஊகிக்கவும் முடியவில்லை. மோகன்லாலுக்கு மனநிலை பிறழ்ந்த நிலை என்று.. அதைக் கொஞ்சமும் காட்டாமல், வெளிப்படுத்தாமல் சாதாரணமான சிவன்குட்டியாக நடித்துக் காட்டியிருக்கிறார். அழகு.. அற்புதம்..

உன்னியின் மனைவியாக லட்சுமி கோபால்சுவாமி நடித்திருக்கிறார். உன்னியாக நடித்தவர் குறுந்தாடியுடன் இன்றைய நிலைமைக்கு ஒரு ஹை கிளாஸ் ஹஸ்பெண்ட்டாக இயல்பாக இருக்கிறார். இவரை இந்தப் படத்தில்தான் நான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.


உன்னியின் வீட்டுக்கு எதிர் பிளாட்டில் வசிக்கும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராக மதன்பாப்பும், அவருடைய மனைவியாக கே.எஸ்.ஜெயலட்சுமியும் நடித்திருக்கிறார்கள். படத்தின் நகைச்சுவை என்பதே இவர்களை வைத்துத்தான். அதுவும் படத்தின் ஆரம்பத்தில் முப்பது நிமிடத்தில் இவர்கள் கதை முடிந்துவிடுகிறது.


சி.எம்.மின் நிகழ்ச்சியில் தான் பாதுகாப்புக்கு செல்லப் போவதால் குண்டு வெடிக்கவே கூடாது என்று முருகனிடம் வேண்டிக் கொண்டு செல்லும் புத்திசாலி இன்ஸ்பெக்டர் வேடம் மதன்பாப்பிற்கு. அன்றைய இரவில் குண்டு வெடித்த செய்தி கேட்டவுடன் மதன்பாப்பின் மனைவி பதறியபடியே இருக்க அவர்களது பையன் ஆர்வமாக, "சி.எம்.முக்கு என்னாச்சு..? யாரும் சாகலையா..? அப்போ எங்களுக்கு நாளைக்கு லீவு இல்லையா..?" என்று விசாரிப்பதை பார்த்தால் என் பள்ளிக் காலத்து நினைவுகள் சுழன்று வருகின்றன.

மோகன்லாலில் மனைவியாக பூமிகா. யோகா மாஸ்டரை கவ்விக் கொண்டு தூர மாநிலத்தில் செட்டிலான பூமிகா இதில் நடிக்க ஒப்புக் கொண்டதில் எனக்கு கொஞ்சம் ஆச்சரியம்தான். ஆச்சரியத்துக்கான காரணத்தை புகைப்படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதுக்கெல்லாம் ஒரு தகரியம் வேணுமாக்கும்..


குழந்தைக்காகத்தான் இந்தப் போராட்டம் என்பதை முன்பே முடிவு செய்துவிட்டதால் பிளெஸ்ஸிக்கு எல்லாமே எளிதாகப் போய்விட்டது. முதல் ரீலில் இருந்து இறுதிவரையிலும் குழந்தைகள் சம்பந்தப்பட்டவைகள்தான் அதிகம் பேசப்படுகின்றன.

நடுவில் கிராமத்துக் காட்டான் என்பதை எப்படிக் காட்ட வேண்டும் என்பதை மோகன்லால் ஒரு ரோட்டோரக் கடையில் நடத்தும் காட்டடி சண்டைக் காட்சியில் காண்பிக்கிறார். திணிக்கப்பட்ட சண்டைக் காட்சி என்பது தெரிகிறது என்றாலும் கதையோட்டத்தில் சிவன்குட்டி எதையும் செய்வான் என்பதை தெரிந்து உன்னிக்குள் ஒரு பயத்தை உண்டாக்கவும் பிளெஸ்ஸிக்கு உதவியிருக்கிறது.

படத்தின் துவக்கக் காட்சிக்கும், இறுதிக் காட்சிக்கும் இருக்கும் தொடர்பை யோசித்துப் பார்த்தால், இயக்குநரின் வன்மையான திரைக்கதை ஆக்கம் புரிகிறது.

பிளெஸ்ஸியின் இயக்குதலில் ஒரு தவறும் இல்லை. மிகச் சிறப்பானதுதான் இத்திரைப்படம். "மலையாளக் கரையோரம் இப்படம் அவ்வளவாக ஓடவில்லை.." என்கிறார்கள். காரணம் "மோகன்லாலை வைத்துக் கொண்டு ஒரு காமெடிகூட இல்லையென்றால் எப்படி..?" என்கிறார்கள்.. இன்னொன்று, முதல் ரீலில் இருந்து கடைசி ரீல் வரையிலும் இருக்கும் இந்த இறுக்கத்தை, இதுவரையில் முந்தின தலைமுறையைச் சேர்ந்தவர்கள் சிபிமலையில் திரைப்படங்களில்தான் பார்த்து வந்திருக்கிறார்கள்.

தற்போதைய தலைமுறைகள் இதனை விரும்பவில்லை என்பதை இத்திரைப்படத்தின் வசூல் கணக்குக் காட்டுவதாக மலையாள பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன.

வசூல் கணக்குகளையெல்லாம் தூரத் தூக்கிப் போட்டுவிட்டால் லால் சேட்டனின் இன்னுமொரு சாதனை இத்திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல் பிளெஸ்ஸி 'கல்கத்தா நியூஸில்' சறுக்கியதை இத்திரைப்படம் சற்றே தூக்கி நிமிர்த்தியிருக்கிறது என்றே நான் சொல்வேன்.

கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய மோகன்லால்-பிளெஸ்ஸி கூட்டணித் திரைப்படம் இது..

பார்க்கத் தவறாதீர்கள்..!

37 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

படத்தை பார்த்துட வேண்டியதுதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

me the 1st and 2nd

Thamiz Priyan said...

கதையைப் படிக்கவில்லை. முதல் மற்றும் கடைசி பாரா மட்டும் தான் படித்தேன்.
நெட்டில் பதிவிறக்கி வைத்திருக்கிறேன். ஆனால் ஏனோ பார்க்க மனது வரவில்லை. அடுத்த மாதம் இந்தியா வரும் போது தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று வைத்துள்ளேன். 1998 க்குப் பிறகு தியேட்டரில் சென்று பார்க்கும் படமாக இது அமையலாம்.

முரளிகண்ணன் said...

முழுப்படம் பார்த்த திருப்தி

பதி said...

நல்ல அலசல்... பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் இணைத்துவிட்டேன் !!!!!

அண்ணே, படத்தின் திரைக்கதை இதைவிட இரண்டு வரி அதிகமாக இருக்குமா??? அடுத்த முறை அதையும் சேர்த்துவிடுங்கள் !!!!!!!!!

:)))))

பித்தன் said...

let me try to get the DVD

நித்யன் said...

படம் குறித்த தகவல்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா...

அன்பு நித்யன்

அப்பாவி முரு said...

உங்களோட பதிவில் என்னோட முதல் கமெண்ட்.,

அரசியல், சமூக சூழலைப் பற்றி எழுதியபோதெல்லாம் போடாத கமெண்டை, இந்த அழகான விமர்சனத்திற்கு போடவைத்து விட்டீர்.

தரவிறக்கிவிட வேண்டியதுதான்.

உண்மைத்தமிழன் said...

///T.V.Radhakrishnan said...
படத்தை பார்த்துட வேண்டியதுதான்///

உங்க கமெண்ட்டை எதிர்பார்த்தேன். ஆனால் இவ்ளோ சீக்கிரமாக வரும் என்று எதிர்பார்க்கவில்லை ஸார்..

மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[T.V.Radhakrishnan said...

me the 1st and 2nd]]]

நீங்களுமா ஸார்..?

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ் பிரியன் said...

கதையைப் படிக்கவில்லை. முதல் மற்றும் கடைசி பாரா மட்டும் தான் படித்தேன்.

நெட்டில் பதிவிறக்கி வைத்திருக்கிறேன். ஆனால் ஏனோ பார்க்க மனது வரவில்லை. அடுத்த மாதம் இந்தியா வரும் போது தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று வைத்துள்ளேன். 1998 க்குப் பிறகு தியேட்டரில் சென்று பார்க்கும் படமாக இது அமையலாம்.]]]

நீங்கள் வரும்வரையில் தியேட்டரில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கும் என்பது உறுதியில்லை..

அதனால் இப்பொழுதே பார்த்துவிடுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[முரளிகண்ணன் said...
முழுப் படம் பார்த்த திருப்தி]]]

அப்பாடா.. முரளி ஸார் நம்மள மறக்கமாத்தான் இருக்காரு..!

உண்மைத்தமிழன் said...

[[[பதி said...

நல்ல அலசல்... பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் இணைத்துவிட்டேன் !!!!!

அண்ணே, படத்தின் திரைக்கதை இதைவிட இரண்டு வரி அதிகமாக இருக்குமா??? அடுத்த முறை அதையும் சேர்த்துவிடுங்கள் !!!!!!!!!

:)))))]]]

பதி ஸார்..

படம் பாருங்க.. அப்புறமா கிண்டல் செய்யுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
let me try to get the DVD]]]

பாருங்க.. பார்த்திட்டு தயவு செய்து விமர்சனம் எழுதுங்க பித்தன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[நித்யகுமாரன் said...
படம் குறித்த தகவல்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா...
அன்பு நித்யன்]]]

முடிந்தால் டிவிடி எடுத்துப் பாரு தம்பீ..!

உண்மைத்தமிழன் said...

[[[அப்பாவி முரு said...
உங்களோட பதிவில் என்னோட முதல் கமெண்ட்., அரசியல், சமூக சூழலைப் பற்றி எழுதியபோதெல்லாம் போடாத கமெண்டை, இந்த அழகான விமர்சனத்திற்கு போடவைத்து விட்டீர். தரவிறக்கிவிட வேண்டியதுதான்.]]]

தங்களுடைய முதல் வருகைக்கு எனது நன்றிகள் ஸார்..!

எனது மற்றப் பதிவுகளுக்கு வரலாமே.. விமர்சனங்கள் முழு மனதோடு வரவேற்கப்படுகின்றன..

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

சேட்டா ஈ படத்தினே கண்டிட்டு தன்னே அடுத்த பணி

பதி said...

//படம் பாருங்க.. அப்புறமா கிண்டல் செய்யுங்க..! //

ஆஹா.. நான் படத்தையோ, உங்க விமர்சனத்தையோ கிண்டல் பண்ணவில்லை அண்ணே.. விமர்சனத்தின் நீளத்தை மட்டுமே சொன்னேன் !!!!!

:))))))

அத்திரி said...

அண்ணே இந்த படம் சென்னையில் ஓடுதா.எங்க பாத்தீங்க...............டிவிடி கிடைக்குமா

உண்மைத்தமிழன் said...

///கிறுக்கல் கிறுக்கன் said...
சேட்டா ஈ படத்தினே கண்டிட்டு தன்னே அடுத்த பணி///

நல்லது கிறுக்கன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[பதி said...

//படம் பாருங்க.. அப்புறமா கிண்டல் செய்யுங்க..! //

ஆஹா.. நான் படத்தையோ, உங்க விமர்சனத்தையோ கிண்டல் பண்ணவில்லை அண்ணே.. விமர்சனத்தின் நீளத்தை மட்டுமே சொன்னேன் !!!!!

:))))))]]]

ஓகே.. ஓகே.. நானும் சும்மா கிண்டலுக்குத்தான் சொன்னேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[அத்திரி said...
அண்ணே இந்த படம் சென்னையில் ஓடுதா. எங்க பாத்தீங்க. டிவிடி கிடைக்குமா?]]]

ஓடி முடிஞ்சு ஊரை விட்டே போயிருச்சு..!

டிவிடிலதான் பார்க்கோணும்..!

ஜெட்லி... said...

நீங்களும் பல மொழி வித்தகன் அப்படின்னு நிருபிச்சிடிங்க.,,,
படம் பார்க்க ட்ரை பண்றேன் அண்ணே...

உண்மைத்தமிழன் said...

///ஜெட்லி said...
நீங்களும் பல மொழி வித்தகன் அப்படின்னு நிருபிச்சிடிங்க. படம் பார்க்க ட்ரை பண்றேன் அண்ணே...///

ட்ரையா..?

இப்படி சொல்லாதீங்க ஜெட்லீ..

பார்த்தே தீருவேன்னு சொல்லுங்க..!

manasu said...

படம் 12 ரீல் பதிவு 18 ரீலா?

Toto said...

Thanks for the movie introduction. Except the story telling part [ that too complete ! ].

-Film4thwall.blogspot.com

Anonymous said...

சொதப்பல் விமர்சனம் :-(
பளிச்ன்னு சொல்ல வேண்டியதை விட்டுட்டு வழக்கம்போல என்னென்னமோ வளவளன்னு சொல்லியிருக்கீங்க. காட்சி 1 காட்சி 2 ன்னு போட்டு ம்ட்டும்தான் எழுலை. எங்க மேலதான் கருணை இல்லை. அந்தத் தட்டச்சுப் ப்லகை மேலயாவது கொஞ்சம் கருணை காட்டலாம்ல?? :-)

ப்ளெஸ்ஸியின் படங்களில் குழந்தைகள் மூலமாகக் குடும்பமென்ற கட்டமைப்பத்தான் முன்னிறுத்துவார். க்லக்த்தா நியூசில் ஏதய்யா குழந்தைகள்??

அது தன்மந்திரா இல்லை. 'தன்மாத்ரா'

சீக்கிரமே நானும் எழுதுறேன் விமர்சனம்.

அது சரி(18185106603874041862) said...

//
கணப்பொழுதில் அவர்களுக்குள் எழும் அந்த மிருகம் அவர்களை நிலைகுலைய வைக்கிறது. நீந்தத் தெரியாத சிறுமியை குளத்தில் தள்ளி மூழ்கடிக்கிறார்கள்.
//

//
அவனுடைய மனைவி தங்களது மகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து மரித்துவிட்டாள். அவர்களது உடல்கள் வீட்டின் ஒரு மூலையில் புதைக்கப்பட்டு புதைகுழிகள் அடையாளமாகக் காத்திருக்க.
//

என்னக் கொடுமை சார் இது?????

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்க...ஒரு மனுஷன் எதுக்கு தியேட்டருக்கு போறான்??

அவனவன் நொந்து நூலாயிட்டு, ஏதோ ஒரு மூணு மணி நேரம் எல்லாக் கருமத்தையும் மறந்துட்டு சந்தோஷமா இல்ல, துக்கமா இருக்க வேண்டாம்னு தான் தியேட்டருக்கு போறான்....

சேல கிழிஞ்சிருச்சின்னு சின்னம்மா வீட்டுக்கு போனா அவ ஓலைப் பாயை சுத்திக்கிட்டு முன்னாடி வந்தாளாம்....அந்த கதையா தியேட்டருக்குப் போனா அங்க ஒரு சின்ன பொண்ண தண்ணில தள்ளிவிட்டு சாகடிக்கிறது...பொண்டாட்டி மகளைக் கொன்னுட்டு தற்கொலை பண்ணிக்கிறது....இப்பிடி படம் காட்டுனா அதை எதுக்கு பார்க்க???

சரி, எனக்கு அறிவில்ல...கலாரசனையும் இல்ல ஒரு கருமமும் இல்லன்னே வச்சிக்குவோம்....பொண்டாட்டி, புள்ளைங்க ஏத்துக்கலன்னு விரக்தில சிவன்குட்டி தற்கொலை பண்ணிக்கிட்டா அதுல ஒரு லாஜிக் இருக்கு....ஆனா, பொண்டாட்டி மகளை கொன்னுட்டு தற்கொலை பண்றதுல என்ன லாஜிக்??? இதுல எதுனா எதார்த்தமா இருக்கா??? இல்ல அந்த லேடிக்கு மனநோயா??

அவனவன் ஏகப்பட்ட பிரச்சினைல இருக்கான்....இதுல இந்த மாதிரி வர்றவனை துக்கப்படுத்தி, துயரப்படுத்தி படம் எடுத்தா படம் ஓடாது....வேணும்னா சீக்கிரமா சூப்பர் பவரா ஆகப் போறதா ரொம்ப வருஷமா சொல்லிக்கிட்டு இருக்க இந்தியப் பேரரசோட மாண்புமிகு ஜனாதிபதி அம்பேத்தேழு ரூவா இருவத்தஞ்சி காசு செலவு பண்ணி ஒரு தாமிர பட்டயம் தருவாங்க....அதை அடகு வச்சி படத்துக்கு டீ செலவு காசை ரெக்கவர் பண்ணலாம்....


ஆமா, பரம்மரம்னா என்ன அர்த்தம்???

அது சரி(18185106603874041862) said...

இந்த போஸ்ட்டுக்கு ஓட்டுப் போட்டா இந்த படத்துக்கு ஓட்டு போட்ட மாதிரி ஆயிடும்...அதனால ஓட்டு இல்ல...நீங்க என்ன யூத்து இல்ல, பாழாப் போன பழைய பிஎஸ் எனெல் பூத்துன்னு சொன்னாலும் சரி!

உண்மைத்தமிழன் said...

[[[manasu said...
படம் 12 ரீல் பதிவு 18 ரீலா?]]]

இல்ல மனசு..

படம் 14 ரீல்.. நானும் 14 ரீல்..!

உண்மைத்தமிழன் said...

[[[Toto said...
Thanks for the movie introduction. Except the story telling part [ that too complete ! ].
-Film4thwall.blogspot.com]]]

முடியலையே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஆசிப் மீரான் said...

சொதப்பல் விமர்சனம் :-(
பளிச்ன்னு சொல்ல வேண்டியதை விட்டுட்டு வழக்கம்போல என்னென்னமோ வளவளன்னு சொல்லியிருக்கீங்க. காட்சி 1 காட்சி 2 ன்னு போட்டு ம்ட்டும்தான் எழுலை. எங்க மேலதான் கருணை இல்லை. அந்தத் தட்டச்சுப் ப்லகை மேலயாவது கொஞ்சம் கருணை காட்டலாம்ல?? :-)]]]

அண்ணாச்சி.. உங்களை மாதிரி முடியுங்களா..? எனக்கு வர்றதுதான வரும்..

சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிட்டனே அண்ணாச்சி.. இன்னும் என்ன சொல்லலை..?!!!

[[[ப்ளெஸ்ஸியின் படங்களில் குழந்தைகள் மூலமாகக் குடும்பமென்ற கட்டமைப்பத்தான் முன்னிறுத்துவார். க்லக்த்தா நியூசில் ஏதய்யா குழந்தைகள்??]]]

வரிசையா எழுதி வைக்கும்போது வந்திருச்சுங்க அண்ணாச்சி..!

[[அது தன்மந்திரா இல்லை. 'தன்மாத்ரா']]

சரி.. தெரிஞ்சுக்கிட்டேன்.. இப்படியேதான் ரெண்டு வருஷமா எழுதியிருக்கேன். அப்பவே வந்து சொல்லிருக்கலாம்ல..!

[[சீக்கிரமே நானும் எழுதுறேன் விமர்சனம்.]]]

அப்பாடா.. அண்ணாச்சியை ஒரு பதிவு போட வைச்சிருக்கேனாக்கும்..!

பதிவுல எனக்கு நன்றி சொல்வீங்கள்லே..!

உண்மைத்தமிழன் said...

[[[அது சரி said...

[[பொண்டாட்டி, புள்ளைங்க ஏத்துக்கலன்னு விரக்தில சிவன்குட்டி தற்கொலை பண்ணிக்கிட்டா அதுல ஒரு லாஜிக் இருக்கு.... ஆனா, பொண்டாட்டி மகளை கொன்னுட்டு தற்கொலை பண்றதுல என்ன லாஜிக்??? இதுல எதுனா எதார்த்தமா இருக்கா??? இல்ல அந்த லேடிக்கு மனநோயா??]]

இல்லை.. கொலைகாரனின் மனைவி என்கிற பட்டத்தை அந்தப் பெண்ணால் ஏற்க முடியவில்லை. அதுதான் காரணம்..

[[அவனவன் ஏகப்பட்ட பிரச்சினைல இருக்கான்.... இதுல இந்த மாதிரி வர்றவனை துக்கப்படுத்தி, துயரப்படுத்தி படம் எடுத்தா படம் ஓடாது....]]

இது புரியணும்னா உங்களுக்குக் கொஞ்சம் கலாரசனை கண்டிப்பா வேணும் ஸார்..!

[[வேணும்னா சீக்கிரமா சூப்பர் பவரா ஆகப் போறதா ரொம்ப வருஷமா சொல்லிக்கிட்டு இருக்க இந்தியப் பேரரசோட மாண்புமிகு ஜனாதிபதி அம்பேத்தேழு ரூவா இருவத்தஞ்சி காசு செலவு பண்ணி ஒரு தாமிர பட்டயம் தருவாங்க.... அதை அடகு வச்சி படத்துக்கு டீ செலவு காசை ரெக்கவர் பண்ணலாம்....]]

இப்படியெல்லாம் நல்ல கலைஞர்களை கேலி செய்து அவர்கள் மனதை புண்ணாக்காதீர்கள். இது கலை சம்பந்தப்பட்டது..!

[[ஆமா, பரம்மரம்னா என்ன அர்த்தம்???]]]

இது ஒரு சமஸ்கிருத வார்த்தை என்கிறார்கள்.

தமிழில் "அபாரம்" "அற்புதம்", "பிரமிக்க வைப்பது" என்று அர்த்தம் வருமாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[அது சரி said...
இந்த போஸ்ட்டுக்கு ஓட்டுப் போட்டா இந்த படத்துக்கு ஓட்டு போட்ட மாதிரி ஆயிடும்... அதனால ஓட்டு இல்ல... நீங்க என்ன யூத்து இல்ல, பாழாப் போன பழைய பிஎஸ் எனெல் பூத்துன்னு சொன்னாலும் சரி!]]]

ஓகே ஸார்..!

துளசி கோபால் said...

இந்த இடுகையைச் சும்மா மேலோட்டமாப் பார்த்தேன். படத்தைப் பார்க்கும்போது எந்த விதமான முன்முடிவும் இல்லாமப் பார்க்கணும். அப்பத்தான் ரசிக்கமுடியும் எபதே காரணம்.

முதலில் தலைப்பு.........

அது 'ப்ரமரம்'ன்னு இருக்கணும்.

வண்டு சிறகடிக்கும்போது ஒரு ரீங்காரம் வரும்பாருங்க. அந்த ஓசையைக் குறிக்கும் சொல் இது.

உண்மைத்தமிழன் said...

///துளசி கோபால் said...
இந்த இடுகையைச் சும்மா மேலோட்டமாப் பார்த்தேன். படத்தைப் பார்க்கும்போது எந்த விதமான முன்முடிவும் இல்லாமப் பார்க்கணும். அப்பத்தான் ரசிக்கமுடியும் எபதே காரணம்.

முதலில் தலைப்பு.........

அது 'ப்ரமரம்'ன்னு இருக்கணும்.

வண்டு சிறகடிக்கும்போது ஒரு ரீங்காரம் வரும்பாருங்க. அந்த ஓசையைக் குறிக்கும் சொல் இது.///

டீச்சர் சொன்னா சரிதான்.. ஏத்துக்கணும்..

ஒரு மலையாள இயக்குநரிடம்தான் அர்த்தம் கேட்டேன். அவர்தான் அப்படி சொன்னார்.. ஏன் சொன்னாருன்னு தெரியலை டீச்சர்..

நீங்க சொல்றதுக்கும், அவர் சொன்னதுக்கும் நிறைய வித்தியாசம்..!

"ரீங்காரம்" தலைப்பு பொறுத்தமாத்தான் இருக்கு..!

அது சரி(18185106603874041862) said...

//

//
[[பொண்டாட்டி, புள்ளைங்க ஏத்துக்கலன்னு விரக்தில சிவன்குட்டி தற்கொலை பண்ணிக்கிட்டா அதுல ஒரு லாஜிக் இருக்கு.... ஆனா, பொண்டாட்டி மகளை கொன்னுட்டு தற்கொலை பண்றதுல என்ன லாஜிக்??? இதுல எதுனா எதார்த்தமா இருக்கா??? இல்ல அந்த லேடிக்கு மனநோயா??]]

இல்லை.. கொலைகாரனின் மனைவி என்கிற பட்டத்தை அந்தப் பெண்ணால் ஏற்க முடியவில்லை. அதுதான் காரணம்..

//

இது எந்த் ஆளவு இயல்பான விஷயம் என்று எனக்கு புரியவில்லை....படம் பார்ப்பவர்களுக்கு திருப்புமுனையை தரவேண்டும் என்று வலிய திணிக்கப்பட்ட "எதார்த்தம்" என்றே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது!

//
[[அவனவன் ஏகப்பட்ட பிரச்சினைல இருக்கான்.... இதுல இந்த மாதிரி வர்றவனை துக்கப்படுத்தி, துயரப்படுத்தி படம் எடுத்தா படம் ஓடாது....]]

இது புரியணும்னா உங்களுக்குக் கொஞ்சம் கலாரசனை கண்டிப்பா வேணும் ஸார்..!
//

எனக்கு கலாரசனை இல்லங்கிறது எனக்கு நல்லாத் தெரியும்...இப்ப உங்களுக்கும் தெரிஞ்சி போச்சி :0)))

ஆனா, பிரச்சினை நான் மட்டும் இல்லியே?? படம் பார்க்க வரும் பலருக்கும் இந்த பிரச்சினை இருக்கக் கூடும்...(இல்ல, ஒலகத்திலேயே நான் ஒருத்தன் தான் கலாரசனையே கொஞ்சம் கூட இல்லாம இருக்கிறேனோ?? அப்படியும் இருக்கலாம்...)

//
[[வேணும்னா சீக்கிரமா சூப்பர் பவரா ஆகப் போறதா ரொம்ப வருஷமா சொல்லிக்கிட்டு இருக்க இந்தியப் பேரரசோட மாண்புமிகு ஜனாதிபதி அம்பேத்தேழு ரூவா இருவத்தஞ்சி காசு செலவு பண்ணி ஒரு தாமிர பட்டயம் தருவாங்க.... அதை அடகு வச்சி படத்துக்கு டீ செலவு காசை ரெக்கவர் பண்ணலாம்....]]

இப்படியெல்லாம் நல்ல கலைஞர்களை கேலி செய்து அவர்கள் மனதை புண்ணாக்காதீர்கள். இது கலை சம்பந்தப்பட்டது..!
//

நான் கலைஞர்களை குறித்தோ அவர்கள் திறமை குறித்தோ எதுவும் சொல்லவில்லை...அவர்களை கேலி செய்யும் நோக்கமும் இல்லை...ஆனால், அதே சமயம் உண்மை நிலை குறித்தும் பேசியே ஆகவேண்டும்.....மிகுந்த கலாரசனையுடன் எடுக்கும் பல படங்கள் வியாபார ரீதியாக தோல்வியையே தழுவி இருக்கின்றன....இது உண்மையா இல்லையா?? இதை சொன்னால் இது கலை சம்பந்தப்பட்டது, கேலி செய்யாதீர்கள் என்று சொன்னால், என்ன செய்வது???

இந்த "மனம் புண்படும்" என்ற விஷயமே ஒரு பெரிய விவாதத்திற்கு உரியது....ஆனால், அதை விவாதிக்க இது இடம் இல்லை என்பதால் கையது கொண்டு மெய்யது பொத்தி அமைதியாக வெளியேறுகிறேன்....நன்றி!


//