Showing posts with label கூடங்குளம். Show all posts
Showing posts with label கூடங்குளம். Show all posts

கூடங்குளம் மக்களின் சாபமாவது பலிக்கட்டும்..!

11-09-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மீண்டும் தனது அரசியல் சர்வாதிகாரத்தை லத்திகளின் துணையோடு செய்து காட்டியிருக்கிறார் தமிழகத்து புரட்சித் தலைவி..! இவருக்கும் ஜனநாயகத்திற்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என்பதை இவரது முதல் ஆட்சிக் காலத்தில் இருந்தே நாம் பார்த்துதான் வருகிறோம். ஆனாலும் கேவலங்கெட்ட இந்திய அரசியல் முறையினால் மிக மோசமான அரசியல்வியாதிகளில் ஒருவராக இருக்கும் இந்த தாய்தான் மீண்டும், மீண்டும் ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்..!

மீன் பிடிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியாத மீனவர்கள் தாங்கள் காலம், காலமாக வாழ்ந்து வரும் அதே இடத்தில்தான் தங்களது சந்ததிகளும் வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்..? நாளைய பொழுதுகளில் தங்களது பரம்பரையினருக்கு மீன் வலைகளையும், படகுகளை மட்டுமே சொத்தாக வைத்துவிட்டுப் போகவிருக்கும் இந்த குடும்பத் தலைவர்கள், தங்களுடைய நலனுக்கு குந்தகம் விளைவிப்பதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்..? அந்த வகையில்தான் என்றோ ஒரு நாள் அவர்களுடைய உயிரைக் கொள்ளையாக அடித்துப் போகக் காத்திருக்கும் அணு உலையை எதிர்த்து அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்..!


திருவள்ளுவருக்கு எந்த “ள்” போட வேண்டும் என்றுகூட தெரியாத கட்சி பிரமுகருக்காக பஸ் மீது கல்லெடுத்து அடிக்கும் கட்சிக்காரர்களை பார்த்திருக்கும் தமிழகத்து மக்கள் கடந்த சில ஆண்டுகளாக மெளனமாக, அற வழியில்.. உண்மையான சத்தியாக்கிரக முறையில் போராட்டம் நடத்தி வரும் இந்த கூடங்குளம் அணு மின் நிலைய திட்ட எதிர்ப்புகளை கவனித்தே வந்திருக்கிறார்கள்..!

ஊர்வலம் நடத்திக் காண்பித்தார்கள். ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் காட்டினார்கள்.. நீண்ட, நெடிய உண்ணாவிரத்த்தைக்கூட நடத்தினார்கள்.. ஆனாலும் கல்நெஞ்சக்காரர்களையே அரசியல்வியாதிகளாக நாம் பெற்றிருக்கும் காரணத்தினால் இன்றுவரையில் இந்த மக்களின் சக்தியை உடைக்கும் வேலையிலேயே ஈடுபடுகிறார்கள் இந்த ஈனப் பிறவிகள்..!

முறையாகத் தகவல் சொல்லிவிட்டு, ஊர்வலமாக வந்த மக்களிடத்தில் சமாதானம் பேசுவதற்கு ஒரு அமைச்சரைக்கூட அனுப்பத் தெரியாத முக்கா லூஸு முதலமைச்சரை வைத்துக் கொண்டு நாம் என்னதான் செய்வது..? மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடு இதுதான் என்று முன்பே சொல்லப்பட்டிருந்தாலும், இந்த ஆலையின் துவக்கமே சர்வாதிகாரத்தில்தானே துவங்கியிருக்கிறது..! எங்கோ டெல்லியில் உட்கார்ந்து கொண்டு அதை செய். இதைச் செய்.. அதை இங்கே வை.. இதை அங்கே வை என்று ஆணையிடுபவர்கள் இந்த ஆலையை டெல்லியிலேயே அமைத்திருக்கலாமே..? ஜனாதிபதி மாளிகையை இடித்துக்கூட கட்டியிருக்கலாமே..? இந்திய ஜனநாயகத்திற்கு பலிகடா அப்பாவி மக்கள்தானா..? அரசியல்வியாதிகளுக்கு இல்லையாமா..? 


சுற்றுப்புற மக்களிடம் கருத்து கேட்காமல், அவர்களுடைய ஆதரவைப் பெறாமல் அவர்களுக்கு அறிவுறுத்தாமலேயே அவர்களுடைய உயிருடன் விளையாடும் ஆபத்துக்குரிய அந்த ஆலையை அங்கே கொண்டு வந்து அமைத்ததே ஜனநாயகமானதல்ல..!  அந்த மக்களை முழுமையாக திருப்திப்படுத்த முடியவில்லையெனில் அப்படியொரு ஆலைதான் அங்கே எதற்கு..? கல்பாக்கத்தின் அருகே குடியிருக்கும் மக்களில் 100-ல் ஒருவர் ஏதோ ஒரு இனம் புரியாத நோயால் இன்னமும் பாதிக்கப்படுகிறார்..! அங்கே அணு மின் நிலையம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னமும்கூட சொன்னபடியாக செட்டில்மெண்ட்டும், வேலையும் தரப்படவில்லை. போபால் விஷ வாயு கசிவுக்கு பின்பு இப்போதுவரையிலும் எத்தனையோ குழந்தைகள் உடல் குறைபாட்டுடன் பிறந்து வருகின்றன.. இதையும் இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எந்த நாயும் கேட்டபாடில்லை.. இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய நிதியுதவியைக்கூட வாங்கித் தர வக்கில்லாத பரதேசிகள்தான் இப்போதும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்..! இப்படிப்பட்ட அரசியல் சூழலில், இந்த மக்களின் இந்தக் கோரிக்கை மிக, மிக நியாயமானதுதான்.. 

நேற்று ஊர்வலத்தில் வந்தவர்கள் எங்களுக்கு ஒரு இறுதி முடிவு தெரியும்வரையில் இடத்தைக் காலி செய்ய மாட்டோம் என்று சொல்லிவிட்டு இரவில் கடலோரத்தின் தாலாட்டலில் அங்கேயே உறங்கியிருக்கிறார்கள். அந்த மக்களின் ஒத்துழைப்பையும், பயத்தையும், போராட்ட உணர்வையும் புரிந்து கொள்ளாத இந்த ஜெயலலிதாவின் பாசிஸ அரசு.. விடிந்தபோது  தனது காவலாட் படைகளைக் கொண்டு நாயை விரட்டியடிப்பது போல சொந்த நாட்டு மக்களையே பந்தாடியிருப்பது கேவலமானது..!


இன்றைக்கு நடந்த இந்தக் கொடூரத்தின் மூலம் இந்த மக்களை ஒடுக்கிவிடலாம் என்று நினைத்தால் அது நிச்சயம் பலிக்காது..! தங்களுடைய எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது என்பதை அந்த மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.. எந்த சதிவேலையை செய்தும் அவர்களைப் பிரிக்க முடியாது என்பதை நேற்றைய அவர்களது போராட்டமும் வெளிப்படுத்திவிட்டது. தமிழகத்தின் எந்தப் பகுதி மக்களுக்கும் இல்லாத அளவுக்கான கூடங்குளம் மக்களின் போராட்ட வெறியும், நேர்மையான வழிமுறையைப் பின்பற்றிய அவர்களது குணமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.. அவர்களுக்கு எனது சல்யூட்..!

அதே சமயம் அதிகார வர்க்கம் தனது ஆக்டோபஸ் கரங்களால் ஊடகங்களையும் வளைத்துவிட்டது என்பதும் இன்றைக்கு வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது..! எல்லோருக்கும் நான் நட்ட நடுநிலையாளன் என்று தன்னைத் தானே புகழ்ந்து சொல்லிக் கொண்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி இன்று காலையில் இருந்து தனது ஒளிபரப்பில் சொல்லிக் கொண்டிருந்த கூடங்குளம் பற்றிய செய்திகளும், முறைகளும் அதன் உரிமையாளரின் குடுமி டெல்லிக்கும், சென்னைக்குமாக மாட்டியிருப்பதால் அரசுகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்த்துகிறது..! இந்தக் கேவலத்திற்கு இந்த்த் தொலைக்காட்சியைத் துவக்கிய காசில் மேலும் 2 கல்லூரிகளைத் துவங்கி அங்கேயாவது கொள்ளையடித்து மொத்தமாக பாவத்தில் மூழ்கியிருக்கலாம்..!

தமிழகத்தின் ஒரு மூலையில் ஒரு தி.மு.க. தொண்டன் போலீஸால் மிரட்டப்பட்டான் என்றாலே ஆண்டி போண்டியிலும், சிந்து, பொந்துவிலும் பஞ்ச் வசனம் பேசியும், முழுப் பக்கத்துக்கு ஒப்பாரியும் வைக்கும் மஞ்சத்துண்டு மைனர்.. இந்தக் கொடூரத்தை டிவியில் பார்த்து பேதி கண்டு வீட்டில் அமைதியாகப் படுத்திருக்கிறார்.. இதில் ஏதாவது வாயைக் கொடுத்து டெல்லியை பகைத்துக் கொண்டால், தனது அருமை மகளும், மகனும், பேரன்களும் தப்பிக்க முடியாதே என்று பச்சையான தனது சுயநல நோக்கத்தை வெளிக்காட்டிவிட்டார்..! 


இவரது குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களுக்கெல்லாம் தக்காளி சூஸ்தான் உடலில் இருக்கிறது என்பதை கண்டறிந்திருக்கும் இந்த முத்தமிழ் வித்தகர் தமிழர்களின் முதல் துரோகி பட்டியலில் இருந்து இறங்க மறுத்து அடம் பிடிப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை. ஆட்சிக் கட்டில் இருந்தபோதுதான் அப்படியென்றால், இப்போதும்கூடவா..? 

இவர்களுடைய கலைஞர் தொலைக்காட்சியிலும், சன் தொலைக்காட்சியிலும் சுப.உதயகுமார் தப்பி ஓட்டம் என்று பிளாஷ் நியூஸ் போட்டுத் தாளித்தார்கள். அட பக்கிகளா..? கிரானைட் ஊழல் வழக்கில் இவரது அருந்தவ புத்திரனின் மகன் தயாநிதி அழகிரி ஒரு மாதமாக தலைமறைவாகத்தானே இருக்கிறார்.. அதைப் பற்றி போட வக்கில்லாமல், உண்மையான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவரைப் பற்றி பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி அந்த மக்களின் உண்மையான உணர்வுகளை கேவலப்படுத்தும் இந்தப் பொழைப்பெல்லாம் தேவைதானா..?

ஆத்தாவுக்கு எப்போதுமே மக்கள் பிரச்சினைகள் என்றால் என்னவென்றே தெரியாது..? முன்பே தெரியாது.. இப்போது மட்டும் என்ன தெரிந்துவிடவா போகிறது..? எப்படியாவது பெங்களூர் வழக்கில் இருந்து தப்பித்தாக வேண்டும் என்கிற பயத்துடன் இருக்கும் அம்மையார், நேற்றைக்கு ஊருக்குள்கூட வராத ஒண்ணுமில்லாத மண்ணுமோகனசிங்கை விமான நிலையத்தில் பார்த்து வணக்கம் சொல்கிறார்.. தானும், தனது கட்சிக்காரர்களும் ஓட்டே போடாத ஜனாதிபதியை பார்த்து வணங்கியும் இருக்கிறார்.. கூடவே பாஜகவுடன் இணக்கமாகவும் இருக்கிறார். இத்தாலிய மம்மியை பற்றி கிண்டலடித்தவர் தற்போதெல்லாம் தி.மு.க.வை மட்டுமே தாக்கிவிட்டு மற்றவர்களை சைக்கிள்கேப்பில்கூட கண்டு கொள்வதில்லை..!

“நான் உன் ஊழலை கண்டு கொள்ள மாட்டேன்.. நீ என் ஊழலை கண்டு கொள்ளக் கூடாது..” என்ற ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்படி இனி காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணி ஓஹோவென வளரும் சாத்தியக்கூறுகள் உண்டு என்பதால் இந்தப் போராட்டத்தை எந்த வகையிலாவது ஒடுக்கி சுத்தமாக இல்லாமல் செய்தால் ஒருவேளை ஆத்தா ஜெயில் கம்பி எண்ண வேண்டிய சூழலில் இருந்து 2 பெரிய கட்சிகளும் சேர்ந்து காப்பாற்றலாம்... இந்த காரணத்துக்காகவே ஆத்தா பொதுமக்களுடன் இப்படி மல்லு கட்டிக் கொண்டிருக்கிறார்..! 

இவரே அடித்து கொலை செய்ய போலீஸை அனுப்புவாரம்.. யாராவது செத்து போனால் உடனேயே நம்முடைய பணத்தில் இருந்து 5 லட்சம் கொடுப்பாராம்.. இவரை யாராவது கொலை செய்துவிட்டு, இவருக்கே 5 லட்சம் கொடுத்தால் ஒருவேளை நரகத்தில் இருந்தபடியே ஏற்றுக் கொள்வாரோ..?

மண்ணை வாரி தூற்றி வீசியிருக்கும் அந்தச் சாபக் குரல்களுக்கு சக்தி இருக்கோ இல்லையோ.. அரசியல்வியாதிகள் கோவில், கோவிலாக சுத்தும் அந்த பக்திக்கு பலன் கிடைக்குமோ கிடைக்காதோ..? இந்தக் கேடு கெட்டவர்கள் விரைவில் மாண்டொழிந்தால்தான் இந்தப் பிரச்சினைக்கெல்லாம் விடிவு கிடைக்கும்.. இல்லாவிடில் அதுவரையில் இது போன்ற பலிகளில் நாம் நமது குடும்பத்தினரை இழந்துதான் ஆக வேண்டும்..!

இது நமக்குக் கிடைத்திருக்கும் சாபக்கேடு..!

கூடங்குளம்-அரசுகளின் அலட்சியத்திற்கு நாம் பலியாக வேண்டுமா..?

26-03-2012



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மக்களுக்காக ஆட்சியா அல்லது ஆட்சியினருக்காக மக்களா என்ற கேள்விக்கு தற்போது நம் கண் முன்னே ஒரு காட்சி நடந்து கொண்டிருக்கிறது..!

சட்டமன்றத்தில் 'மாண்புமிகு அம்மா புரட்சித் தலைவி' என்று 500 முறை ஒப்பாரி வைத்தபடியே மாநிலத்தின் பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் கொடுமை நடக்கும் அதே நேரம்.. 500 கி.மீ. தள்ளி.. தங்களது வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்ள பல மக்கள் கொடும் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பட்டினியை சட்டமன்றத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் உணரவில்லை என்று நினைக்க வேண்டாம். அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். எப்படியும் அந்த மக்களே தங்களுக்குத் தாங்களே ஒரு முடிவைத் தேடிக் கொள்ளட்டும் என்ற முடிவுக்கே அவர்கள் வந்துவிட்டார்கள்.

கிட்டத்தட்ட 200 நாட்களுக்கும் மேலாக அறப் போராட்டம் தொடர்கிறது.. ஒரு சைக்கிளின் கண்ணாடிகூட சிதறிவிடாமல் கவனத்துடன் தங்களது போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் அந்த மக்கள்..! 


தங்களது கிராமங்களுக்கு அருகில் இருக்கும் அணு உலையால் எதிர்காலத்தில் தங்களது வாரிசுகளுக்கோ தங்களுக்கோ எந்தவிதத்திலும் ஆபத்து நேரக் கூடாது என்ற உறுதிமொழியை அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த அரசுகளிடம் கேட்கிறார்கள்..!

அவர்களுடைய சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு ஐயம் திரிபுற பதிலளித்து அவர்களது கவலையைப் போக்க வேண்டியது அரசுகளின் கடமை.. உலகம் முழுவதுமே அணு உலைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளும் மூடி வரும் நேரத்தில், நமது நாட்டில் மட்டும்தான் ஆரத்தி எடுத்து வரவேற்று குடி வைத்திருக்கிறார்கள். இதோ இப்போது கடைசியாக ஜப்பானில் கடைசி அணு உலைகளையும் மூடப் போகிறார்கள்..! அவர்களுடைய அணு உலைகளில் லேசாக கசிந்த வாயுவினால் எழுந்த பூகம்பத்தையே அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மக்களா..? தொழில் நுட்பமா..? என்ற கேள்விக்கு அவர்கள் மக்கள்தான் என்பதைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

நம் நாட்டில் அப்படியே நேருக்கு மாறாக இருக்கிறது. ஏற்கெனவே கல்பாக்கத்தில் அமைந்திருக்கும் அணு உலையால் பாதிக்கப்பட்ட சுற்றுப்புற மக்களின் பரிதாப நிலைகள் பல குறும்படங்களாகவும், ஆவணப் படங்களாகவும் வெளிப்பட்டு அணுக் கதிர்வீச்சின் தீமையைச் சொல்லியிருக்கிறது. ஆனால் அவைகள் அத்தனையும் படிப்பறிவே இல்லாத, வெளியுலகம் அறியாத கிராமப்புற மக்களைத் தாக்கியிருப்பதால், இது சொந்த நாட்டு மக்களாலேயே அந்நியத்தனமாகப் பார்க்கப்படுகிறது..!

15000 கோடிகளைக் கொட்டியிருப்பதால் இதனை நடத்தியே தீருவோம் என்பதெல்லாம் சொத்தை வாதம்..! முதலிலேயே இந்த மக்களின் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து ஆதரவு கொடுத்து தடுத்திருந்தால் நிலைமை இந்த அளவுக்கு போயிருக்காது.. அப்போது ஒருங்கிணைப்பு செய்யவும் ஆட்கள் இல்லை.. அணு உலை பாதுகாப்பின்மை பற்றி அந்தப் பகுதி மக்களிடம் எடுத்துச் சொல்லவும் பொறுப்பானவர்கள் இல்லை..! 

இந்திய ஏகாதிபத்தியத்தில் டெல்லி சுல்தான்களாக அமர்ந்திருக்கும் மோடி மஸ்தான்கள் என்ன சொல்கிறார்களோ.. அதனை அப்படியே காலால் செய்து முடிக்கும் வெட்கம்கெட்ட மாநிலத்து அரசியல் நாய்கள், தங்களது அரசியல் பதவிக்காக, கட்சிப் பதவிக்காக, சொத்து, சுகத்திற்காக தன் சொந்த இனத்து மக்களையே புறக்கணிப்பது மகா கேவலம்..! 

இப்போது எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என இரண்டையுமே இணைத்துப் பிடித்து ஒரு வரிசையில் நிறுத்தியிருக்கிறது மத்திய கபோதி அரசு.. அவர்களுக்குத் தேவை வாங்கின கமிஷனுக்கு ஏற்றாற்போல் வேலை நடக்க வேண்டும்.. மாநில அரசுக்குத் தேவை.. தான் எதிர்காலத்தில் இருக்கப் போகும் அதியுயர் செல்லில் கொஞ்சம் காற்று வெளிப்பட வேண்டும்.. எதிர்க்கட்சிக்கு தங்களது பேரன்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்க வேண்டும்.. இந்த இரண்டு வெட்கங்கெட்ட அரசியல்வியாதிகள்தான் தமிழ் மண்ணின் மிகப் பெரிய சாபக்கேடு என்பதை நம் மக்கள் என்றைக்குத்தான் உணரப் போகிறார்கள்..?

சங்கரன்கோவில் இடைத்தேர்தலின் வாக்குப் பதிவுக்காகக் காத்திருந்து, அதன் பின்பு தனது முடிவைச் சொன்ன ஆத்தாவின் செயல் சத்தியமாக வேசித்தனம்தான்..! தனது பேரன்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிறகு, கட்சிக்கு இருக்கும் பெயரும் போய்விடக் கூடாது என்பதற்காக அணு உலையைத் திறக்க வேண்டும் என்று அறிக்கைவிட்ட உலக மகா யோக்கியர் மஞ்சத் துண்டு செய்ததும் பச்சை வேசித்தனம்தான்..! 

ஆனாலும் மக்களுக்கு புரிய வேண்டுமே..? தூத்துக்குடியில் இருந்து சங்கரன்கோவில் ஏதோ 1000 கிலோ மீட்டர் தள்ளியிருப்பது போல் நினைத்து வாங்கின காசுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்த இந்த மக்களையும் நினைத்தால் கோபம் வரத்தான் செய்கிறது..! தன் வீட்டு வாசலுக்கு தானே புயல் வந்தால்தான் தான் கதறி அழுவேன்.. பக்கத்து தெருவில் எவன், எப்படி செத்தாலும் எனக்கு கவலையில்லை என்பதும் நமது பண்பாடாகிவிட்டது..! சுயநலம் சார்ந்தே நாம், நமது குடும்பம், நம் பிள்ளைகள்.. நமக்காக என்று இதற்காகவே குடும்பத்தை வளர்த்தெடுக்கும் நமது வாரிசுகள் வேறு எப்படி இருப்பார்கள்..? 

மாவட்ட மக்கள் அங்கே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அதுவும் இன்றோடு சேர்த்து 8 நாட்கள் ஆயிற்று.. அந்த ஊரையே போலீஸ் படையை வைத்து முற்றுகையிட்டு சொந்த நாட்டு மக்களையே பட்டினி போட்டிருக்கிறோம் என்ற ஒரு சிறிய குற்றவுணர்ச்சியைக்கூட வெளிக்காட்டிக் கொள்ளாத இந்த அரசையும், அதற்குத் தலைமை தாங்குபவரையும் கண்டிக்கவோ, திட்டவோ வார்த்தைகளே கிட்டவில்லை..!


உதயகுமார் என்னும் தோழர், தனது குடும்பத்தையெல்லாம் மறந்துவிட்டு பொது நலத்துடன் அரை ஆண்டாக இடிந்தகரை மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து நடத்திவரும் இந்தப் போராட்டத்தை ஊடகங்களும், சக்தி பெற்ற ஸ்தாபனங்களும் முடிந்த அளவுக்கு திசை திருப்பி வந்தன.. இப்போதும் அதையேதான் செய்து வருகின்றன..! 

நிபுணர் குழு முன்பாக அமைதிக் குழு வைத்த கேள்விகளுக்கும், எழுப்பிய கோரிக்கைகளுக்கும் பதில் இல்லை..! அவர்கள் சொல்வது மின் தட்டுப்பாடு.. ஆகவே இது அவசியம் தேவை..! தேவைதான்.. வீட்டில் கரப்பான் பூச்சி அதிகம் இருந்தால், பூச்சி மருந்து அடிக்கத்தான் வேண்டும். ஆனால் எப்போது அடிப்பார்கள் தெரியுமா..? வீட்டில் யாரும் இல்லாத பொழுது.. அதுவும் குழந்தைகள் அந்த மருந்தை கொஞ்சம்கூட ஸ்மெல் செய்துவிட முடியாத நேரத்தில்.. அவர்கள் பள்ளிக்குச் சென்ற காலை நேரத்தில்.. வீட்டை பூட்டி விட்டுச் செல்லும் நேரத்தில்தான் மருந்தடிப்பது வழக்கம்.. 

டைனிங் டேபிளில் குடும்பத்தினர் சாப்பிட்டுக் கொண்டிருக்க.. வீட்டில் மருந்தடிக்கும் பைத்தியங்களை நீங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர்களா..? இங்கேதான்.. தமிழ்நாட்டில் இப்போது இதுதானே நடக்கிறது..? அது அதற்கு இடம், பொருள், ஏவல், வேலை, நேரம் பார்த்துச் செய்யப்பட வேண்டிய விஷயத்தை அவர்களுக்கு தோதான இடம் கிடைத்தவுடன் செய்திருக்கிறேன் என்கிறார்களே.. இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்..?

பக்கத்தில் கடல் இருக்க வேண்டுமா..? ஏன் கொச்சிக்கு போகலாமே..? மும்பையில்கூட இன்னொரு அணு உலையை அமைக்கலாமே..? ஆந்திராவின் நெல்லூர் பக்கத்தில் போய் வைக்கலாமே..?  வங்காளத்தின் கடற்கரைப் பகுதிக்கு போகலாமே.. ஆனால் எதற்கு தமிழகம்..? இங்கேதான் டெல்லி போடும் பிச்சைக் காசை பொறுக்கித் தின்னும் கேவலங்கெட்ட அரசியல் நாய்கள் நிறையவே இருக்கின்றன.. கையது, வாயது பொத்தி.. தனக்கும், தன் குடும்பத்திற்கும் தேவையானதை மட்டும் பெற்றுக் கொண்டு, இவர்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்து கொண்டு மக்களைத்தான் சுடுகாட்டில் வசிக்கச் சொல்கிறார்கள்..! உலகில் எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு மனித உரிமை மீறல்கள் இருந்திருக்காது..! 

8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் உதயகுமார் மற்றும் அவரது தோழர்களின் நிலைமை இப்போது கவலையாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.. அவர்களது உயிருக்கு இனி யார் பொறுப்பு..? எந்த அமைச்சராவது இதனைக் கண்டு கொண்டாரா..? அவர்களுக்கோ யார் மாண்புமிகு புரட்சித் தலைவி என்ற வார்த்தையை அதிகம் தடவை சொல்வது என்பதிலேயே கவனம் இருக்கிறது..! இந்தக் கேடு கெட்டவர்கள் முதலில் தங்களது குடும்பத்தினரை அந்த அணு உலையின் பக்கத்தில் கொண்டு போய் வைத்துக் காட்டட்டுமே..? மக்களே.. எமது குடும்பத்தினரும் இங்கேதான் குடியிருக்கப் போகிறார்கள். பயப்பட வேண்டாம் என்று.. முடியுமா அவர்களால்..?

ஒரு அமைச்சர் ஊதுகுழல் ஊதுகிறார். விமானத்திலேயே வந்து மோதினால்கூட அணு உலை உடையாது என்று.. “ஐயா அமைச்சரே.. நீரும் உம் பிரதம அமைச்சரும் அவர்தம் குடும்பத்தினரும் ஒரே விமானத்தில் வந்து மோதிக் காட்டுங்களேன்.. அதன் பின்பு இந்த போராட்டத்தை நாங்கள் கை விடுகிறோம்..” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தாகிவிட்டது.. சூடு, சொரணை என்றால் என்னவென்றே தெரியாத இந்த அரசியல் ஓநாய்களிடம் வேறு எந்த மொழியில் சொன்னால்தான் புரியும் என்றே தெரியவில்லை..!

20 ஆண்டுகளுக்கு முன்னால் தீபாவளிக்கு வாங்கிய வெடிகள் ஒரு மாதம் வரையிலும் வீட்டில் வைத்திருந்து வெடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. காலம் மாறி, சூழலும் மாறி, தட்பவெப்ப நிலையும் மாறி, சுற்றுப் புறச் சூழல் மாசுபடுகிறதே என்பதற்காக வெடி வெடிப்பதற்கும் ஒரு நேரத்தை ஒதுக்கி இந்த நேரத்தில் வெடித்துக் கொள்ளுங்கள் என்று அரசு சொன்னதற்கு யாராவது மறுப்புத் தெரிவித்தார்களா..? போராட்டம் நடத்தினார்களா..? இல்லையே..? வெடிகள் வாங்குவதையே கொஞ்சம், கொஞ்சமாக நிறுத்தி வருகிறார்கள் மக்கள். அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.. 2 நிமிட கொண்டாட்டத்திற்கு எதற்காக அழுக வேண்டும் என்று..! மக்கள் காலத்திற்கேற்றாற்போல் இது போன்று மாறவும் தயங்கவில்லை..!

ஆனால் இதே மக்கள்தான் நமது அரசுகளின் சர்வ அலட்சியத்தையும் மனதில் வைத்து அந்த அணு உலை தங்களுக்குத் தேவையில்லை என்கிறார்கள்.. இதனை ஏற்றுக் கொள்வதுதான் அரசுகளின் கடமை.. பொறுப்பு..! உலக அரசியல் அரங்கில் நடைபெறும் பனிப்போரில் தங்களது குடும்பத்தினரை பணயம் வைக்கவா தமிழகத்து மக்கள் பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள்..? அவர்கள்தான் சாக வேண்டுமா என்ன..? அரசியல்வியாதிகளின் பிள்ளைகளையும், அணு உலை வேண்டும் என்பவர்களின் பிள்ளைகளையும் அங்கே வேலைக்கு சேரச் சொல்லுங்களேன்.. பார்க்கலாம்..!?

அரசுகள் எந்த வழிகளில் நம்மை மடக்கப் பார்க்கிறார்களோ.. அதே வழியில் நாமும் அவர்களுடன் மோதுவோம்..! நாம் குனிந்தே இருந்தால் குட்டத்தான் செய்வார்கள்.. நிமிர்ந்தே நிற்போம்.. எப்போது குனிவோம் என்று அவர்கள் காத்திருக்கட்டும்..! ஆனால் நமது பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கும். அந்த எல்லையை அரசுகள் தொடும்வரையிலும் இந்த அறப் போராட்டம் நீடிக்க வாழ்த்துகிறேன்..! ஏதோ ஒரு முடிவுக்கு வராமல் இப்பிரச்சினைக்கு தீர்வு என்பது சாத்தியமில்லை..! அந்த முடிவு நாம் எடுத்ததாகவே இருக்க வேண்டும்..!

அதற்காகவே இந்த நேரத்தில் அண்ணன் உதயகுமாரிடம் நாம் வேண்டிக் கொள்கிறேன்.... இந்தச் சோற்றால் அடித்த பிண்டமாக சூடு, சொரணையில்லாத வெட்கங்கெட்ட அரசியல் ஜென்மங்களை நம்பி நமது உயிரைப் பணயமாக்குவது வீண் விரயம்.. அதுவும் உதயகுமார் போன்ற போராளிகள் நீண்ட பயணம் செய்ய வேண்டியுள்ளது. மக்கள் நலப் பணிகளில் அவர் ஆற்ற வேண்டிய செயல்கள் நிறையவே உண்டு. ஆகவே, அவரும் அவரது குழுவினரும் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு, அதற்கு ஈடாக அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தை வேறு வழிகளில் தொடர வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!